Blog

  • இருவேறு பார்வைகள்

     

    கே.எஸ்.சுதாகர்

     

    இன்று காலை 11 மணிக்கு எனக்கொரு ஹொஸ்பிட்டல் அப்பொயின்மன்ற் இருந்தது. தேநீர் குடித்துவிட்டு அவசர அவசரமாகப் புறப்படுகின்றேன். இந்தத்தடவை இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்காமல் ஹொஸ்பிட்டலைவிட்டு நான் திரும்பப் போவதில்லை.

    மூன்றாவது தடவை ஒப்பரேஷன்.

    முதன்முதலில் இந்த வைத்தியசாலைக்கு வந்தபோது, ‘Fistula’ என்று அந்த இளம் டாக்டர் சொன்னதும் நான் சிரித்துவிட்டேன். பென்குவின் போன்ற உதடுகளைக் கொண்ட அந்த பிலிப்பீன்ஸ் நாட்டுப்பெண், ஏதோ தனது பாஷையில் சொல்கின்றாளாக்கும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் சிரிப்பதற்கு இதில் எதுவும் இல்லை என்று பின்னர் புரியலாயிற்று. பயந்து விடாதீர்கள். ‘பிஸ்ரியூலா’ என்பது ஒரு வருத்தத்தின் பெயர். இந்தமாதிரி ஒரு வருத்தம் எமது நாடுகளில் வந்திருந்தால், அதைக் குணப்படுத்த எடுக்கும் செலவை ஈடு செய்ய வாழ்நாள் முழுக்க உழைக்க வேண்டியிருந்திருக்கும். இங்கு அவுஸ்திரேலியாவில் எல்லாமே இலவசம். வருத்தங்களும் இலவசம். அது எனக்கு எப்படி வந்தது என்பதை உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அது ஒரு சிறு சரித்திரம்.

    ஒருமுறை எனது ஆசனவாயிலுக்கு அண்மையாக ஒரு கட்டி வந்தது. சாதாரணமாகத் தோன்றி மறையும் கட்டி போலத்தான் ஆரம்பத்தில் அது இருந்தது. நாளடைவில் அது பெருத்து ஒரு குண்டுமணி போலாகிவிடது. நாட்டுமருந்தான ‘கறுப்புக்கழியை’த் தேடி கடை கடையாக அலைந்தேன். வெள்ளைக்காரன்ரை கடையிலை அது கிடைக்காது என அறிந்ததும், வியட்நாம் ‘சைனீஸ்’ கடைகளை நோக்கி நடையைத் திருப்பினேன். தென்படும் குட்டிப்போத்தல்கள் ரின்களை ஆராய்ச்சி செய்து மருந்து ஒன்றைப் பெற்றுக் கொண்டேன். பூசி சிலநாட்களில் கட்டி உடைந்தது. மாறி வருவது போன்று மாயை காட்டி, பின்னர் மீண்டும் உருக் கொண்டது. நாளாக அது ‘நாட்பட்ட புண்’ என்று பெயர் எடுத்துகொண்டது. வெட்கத்தில் டாக்டருக்குக் காட்டாமல் இருந்தது பெரியதொரு சங்கடத்தை உருவாக்கிவிட்டது. இப்போது திறந்தே கிடக்கும் புத்தகம் போலாகிவிட்டேன்.

    புலம்பெயர்ந்து வந்த காலம். அப்பொழுதெல்லாம் வேலைக்கு மனுப் போட்டால் நேர்முகப் பரீட்சைக்குக் கூப்பிடுவதில்லை. அதற்கான பதிலும் கிடைப்பதில்லை. ரெலிபோன் செய்து விசாரித்த போது சில விஷயங்கள் புரிந்தன.

    “நீங்கள் அவுஸ்திரேலியாவிற்கு வந்து சிறிது காலம் வேலை செய்திருக்கவேண்டும். உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் வேலை செய்த முன் அனுபவம் இருக்க வேண்டும்”

    “முன் அனுபவம் என்பது ஏதாவது ஒரு வேலை சம்பந்தமானது. அது சுப்பர்மார்க்கெட்டாகவோ அல்லது ஏதாவதொரு தொழிற்சாலையாகவோ இருக்கலாம். நீங்கள் உங்களது சொந்தநாட்டில் செய்த வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதன் பிறகுதான் உங்களை நேர்முகத் தேர்வுக்குக் கூப்பிடுவோம்” என்று விளக்கம் தந்தார்கள்

    முதலில் ஒரு சுப்பர்மார்க்கெட் சென்று விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் சொன்ன பதில் எனக்கு மேலும் வியப்பைத் தந்தது.

    “உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் ஏதாவது வேலை செய்த முன் அனுபவம் உண்டா? சுப்பர்மார்க்கெட் என்று இல்லை. ஏதாவது … யோசித்துப் பாருங்கள்” அதே உரையாடலைத் திருப்பிப் போட்டார்கள். அவர்கள் உரையாடுவதில் கில்லாடிகள். சொன்னதையே நோகாமல் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகள். எங்கு சென்றாலும், “அவுஸ்திரேலியாவில் …” என்று ஆரம்பித்து விடுவார்கள்.

    யார் அந்த அனுபவத்தை எனக்குத் தந்து என்னை அசர வைக்கப் போகின்றார்கள்?

    ஒரு வேலையைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் அத்தனையையும் செயற்படுத்தினேன். விடாமுயற்சி. தன்னம்பிக்கை. தீவிர தேடுதல். Yellow Pagesஐப் பார்த்து எண்ணற்ற இடங்களுக்கு Resumeயுடன் Covering letterஐயும் இணைத்து அனுப்பினேன். கடித உறையின் மூலையில் சந்தணம் குங்குமமும் பூசத் தவறவில்லை.

    கை மேல் பலன் கிட்டியது. சண்சைன் என்ற இடத்திலிருந்த ‘டயமண்ட் பிறஸ்’ என்னை வரவேற்றது. பாருங்கள் பெயர்களை – சண்சைன்(Sunshine), டயமண்ட் பிறஸ்(Diamond Press). ஆரம்பமே அசத்தலாக இருந்தது. வேலை! – free wayஇல் வாகனங்கள் விரைந்து செல்லும் வேகம். ‘அந்த’ வேகத்தில் சீனத்துப்பெண்கள், வியட்நாமியப்பெண்கள் எல்லாம் என்னமாய் வேலை செய்கின்றார்கள்! ஒருவேளை அவர்கள் தாய்நாட்டில் இருந்த போது இதைவிட இன்னமும் கடினமாக உழைத்திருப்பார்களோ?

    அங்குதான் எனக்கு இந்த வியாதி ஆரம்பமாகியிருக்க வேண்டும். எந்தவொரு சரீரத் தொழில்களும் செய்து பழக்கப்படாத எனக்கு தொடர்ச்சியாக உடம்பை வருத்தியதில் உருவாகியிருக்கலாம். ஆபரேஷன் செய்யப் போனபோது பெரியதொரு விளக்கம் காத்திருந்தது. Anal Glands எனப்படும் சுரப்பிகள் அடைபடும்போது, அதிலிருந்து வெளிப்படும் வழவழப்பான நீர் வெளிப்படாமல் கிருமிகள் பாதிப்பதால் இந்த சீழ்க்கட்டிகள் ஏற்படுகின்றன. அந்தக் கட்டிகள் வெடித்த உடனே பெளத்திரமாக (Fistula) மாறிவிடும். அந்த வெடிப்பு உட்புறமாக வெடித்தால் complicated Fistula என்றும் வெளிப்புறமாக வெடித்தால் Low Fistula என்றும் சொன்னார்கள். நல்லவேளை எனக்கு வெளிப்புறமாக வெடிப்பு நிகழ்ந்திருந்தது. சத்திரசிகிச்சை மிகவும் எளிமையானது என்று வெளிநோயாளர் பிரிவு டாக்டர் சொல்லியிருந்தார். வெளிநோயாளர் பிரிவில் இருக்கும் டாக்டர்கள் சர்ஜரி (surgery) செய்வதில்லை. அவர்கள் consultation செய்யும் டாக்டர்கள். வெளிநோயாளர் பிரிவில் இருந்த டாக்டரை இரண்டு தடவைகள் சந்தித்து ஆலோசனைகள் பெற்றிருந்தேன். இருந்தும் எனக்கு ஆபரேஷன் செய்யவிருக்கும் டாக்டரைச் சந்திக்க முடியவில்லை. அவர் ஹொஸ்பிற்றலில் மிகவும் பிரபலம் ஆனவர். ஓய்வின்றி வேலை செய்பவர். 65 வயதைத் தாண்டிய அனுபவசாலி. அவர் செய்த ஆபரேஷன்களில் தொண்ணூறு வீதத்திற்கும் மேல் சக்ஸஸ் என்றார்கள்.

    எனக்கு ஒரு புதன்கிழமை சத்திரசிகிச்சை. ஏழு மணிக்கு வைத்தியசாலையில் நிற்க வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்டோம். உச்சக்கட்ட குளிர்காலம். தெருக்கள் எல்லாம் பனிப்புகாரில் மூழ்கியிருந்தன.

    படிவங்களைப் பூர்த்தி செய்தோம். ‘இரவு 12 மணிக்குப் பிறகு எதுவுமே சாப்பிடவோ குடிக்கவோ இல்லை’ என்பதை உறுதி செய்து கொண்டார்கள். என்னதான் ஏழுமணிக்கு வரச் சொன்னாலும் எல்லாமே ஒன்பது மணிக்குப் பிறகுதான் ஆரம்பமாகியது. என்னைப்போல சிலர் முன்பே வந்திருந்தாலும், பலர் அனுபவப்பட்டவர்களாகவே இருந்தார்கள். மனைவி கவுண்டரில் இருந்த பெண்ணிடம் டாக்டரின் திறமை பற்றி மீண்டும் விசாரித்தாள். அவள் தன் பெருவிரலை உயர்த்திக் காட்டி ‘சுப்பர்’ என்றாள். பின்னர் நானும் மனைவியும் கதிரைகளில் அமர்ந்து ரெலிவிஷன் பார்க்கத் தொடங்கினோம். ரெலிவிஷனில் குழந்தைகளின் கார்ட்டூன் போய்க்கொண்டிருந்தது

    தீய சக்திகள் எம்மை நெருங்காமல் இருக்க, மந்திரம் ஓதி நூல் கட்டுவது போல – என் பெயர், பிறந்த திகதி, பதிவு எண் எல்லாம் கொண்ட ஒரு பட்டி என் மணிக்கட்டில் கட்டப்பட்டது. காதிற்குள் வெப்பமானி புகுந்து உடலின் உஷ்ணத்தைக் காட்டியது. எடை பார்த்து, எனிமா தந்தார்கள். ஆடை களைந்து அவர்கள் தந்த வெள்ளை ஆடைக்குள் புகுந்து கொண்டேன். நான் பயந்தது எல்லாம் அனித்தீசியாவுக்குத்தான். அனித்தீசியாவிற்குப் பிறகு எனக்கு இந்த வெள்ளை ஆடைக்கும் பயம்.

    “மனைவிக்கு கை காட்டிவிட்டு, யம் பண்ணி பெட்டில் ஏறிக் கொள்ளுங்கள்” என்றார் ஸ்ரெச்சரை உருட்டி வந்தவர்.

    அனித்தீசியா தரும் மனிதரின் முகம் எந்த நேரமும் சிரித்தபடி இருந்தது. அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் தனது பெயரை வாயிற்குள் முணுமுணுத்தபோது ‘சித்ர புத்ர’ என்று எனக்குக் கேட்டது. சேர்ஜரி டாக்டர் யமனாக இருக்கும்பட்சத்தில் அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும். Dr. Death (Jayant Patel) என்றொருவர் குவீன்ஸ்லண்டைக் கலக்கிவிட்டுப் போன பின்னர், எந்த சேர்ஜரி டாக்டரைப் பார்த்தாலும் ஒரு பயம் வரத்தான் செய்கிறது. Dr. Death ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏராளமான நோயாளிகளை வெட்டிக்கொத்தி மேலுலகம் அனுப்பியவர். குவீனஸ் புத்தகத்தில் அவர் பெயர் வந்ததா என்று தெரியவில்லை. சித்ரபுத்ர, எனது பூர்வீகம் இன்ன பிற அவுஸ்திரேலிய நடப்புக்களை விசாரித்தவாறே தனது காரியத்தைத் தொடங்கினார். அவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது நேரம் பத்துமணியைத் தாண்டியிருந்தது. மீண்டும் விழித்துக் கொண்டபோது மணி பிற்பகல் ஒன்றரை. “Can you hear me? Can you hear me? What is your name?” என்று ஒருவர் என்னைத் தட்டி சளைக்காமல் கேட்டபடி இருந்தார். அனித்தீசியா மயக்கத்தை அவர் சோதிக்கின்றார். சோதனைக்கு ஒரு அளவு வேண்டாம்…! என்னுடைய பெயர் தெரியாமலா இவ்வளவு நேரமும் எனக்கு ஒப்பரேஷன் செய்தார்கள்?

    வைத்தியசாலையில் இருந்த நாள் முழுவதும் அங்கிருந்த அழகிய •பிஷியோதிரபிஸ்ட் பெண்கள் அனைவரும் முரட்டுப்பெண்கள் போல நடந்து கொண்டார்கள்.

    வீட்டிற்கு வந்த இரண்டாவது நாள், பார்பரா கிறகாம் (Barbara Graham) என்ற டிஸ்றிக் நேர்ஸ் (district nurse) ஒரு தூக்குப்பெட்டியுடன் வீட்டிற்கு வந்தார். அவரைப்பற்றி ஒரு ‘வைர’ வரியில் சொல்வதென்றால், ‘அவர் ஒரு புளோரிங் நைட்டிங்கேல்.’ தன்னுடைய பரம்பரை மருத்துவத்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று பெருமையாகச் சொல்லுவார். மிகவும் அழகானவர். அவளின் மூக்கு சற்றுத் தூக்கலாக இருக்கும். நோயாளிகளைக் கண்ட மாத்திரத்தில் அவரின் மேலுதடு தானாக எழுந்து மூக்கின் துவாரங்களை மூடிக்கொள்ளும். ஆதியில் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு கழுத்து நீண்டதற்கு கூர்ப்புதான் காரணம் என்றால், பார்பராவின் மூக்கு மேல் நோக்கிச் சரிந்து கொண்டு செல்வதற்கும் கூர்ப்புதான் காரணம் என்பேன்.

    பார்பராவிற்கு ஈடாக என் மனைவியையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. தினமும் அவர் வருவதற்கு முன்னர் salt bath எடுக்க வேண்டும். இருந்தும் இருவரது பணிவிடைகளும் பலன் தரவில்லை. மூன்றாவது வாரம் அடைகாத்திருக்கும் முட்டை ஓட்டை, முட்டி மோதும் குஞ்சு போல வெளித் தள்ளியது பெளத்திரம்.

    முதாவது ஒப்பரேஷன் முடிந்து, லீவில் மூன்று வாரங்கள் வெற்றிகரமாக நின்றுவிட்டு மீண்டும் வேலைக்குப் போனேன். மேலுக்கு வரும்படி மனேஜர் சைகை செய்தார். அவரது அறை இரண்டாவது மாடியின் தொங்கலில் இருந்தது. நடப்பதற்குக் கஸ்டப்பட்டு மேலேறுவதைக் கண்ட டேவிட் “நில்லும்… நில்லும்” என்று  சத்தமிட்டபடி கீழிறங்கி வந்தார். வந்தவர் என்னுடைய வருத்தத்தைப் பற்றிக் கேட்கவில்லை; சுகத்தை விசாரிக்கவில்லை.

    “நீர் இலங்கையில் இருந்த போது என்ன வேலை செய்தீர்?” என்றார். மூன்றுவாரங்களாக அவர் இந்தக் கேள்வியை மனதில் தேக்கி வைத்திருக்க வேண்டும். கேள்வியின் தொனி அப்படியிருந்தது.

    “ஆர்கிடெக்ட் (Architect) ஆக இருந்தேன்” என்றேன் நான்.

    “அப்ப இங்கு என்ன செய்கின்றீர்?”

    “அவுஸ்திரேலியா அனுபவம் தேடுகின்றேன்.”

    “நான் உமக்கு reference letter தருகின்றேன். பொருத்தமான வேலைக்கு அப்ளை பண்ணும்.”

    அடுத்தநாள் வேலைக்குப் போன எனக்கு அதிசயம். Reference letter உடன் வேலையிலும் சிறு மாற்றம் காத்திருந்தது. கணக்கியல் பிரிவில் ஒரு புது வேலை

    இரண்டுமாத காலங்களின் பின்பு மீண்டும் வைத்தியசாலை. மீண்டும் வெள்ளை ஆடை. அதே டாக்டர்கள், நேர்ஸ்மார். இப்பொழுதெல்லாம் இரத்தம் குத்தி எடுக்கும்போது பயம் வருவதில்லை. இறைக்கின்ற கிணறுதானே ஊறும். என்னதான் மனதளவில் தைரியம் இருந்தாலும் உடல் வலுவிழந்துவிட்டது. காலை பத்து மணிக்கு ‘ஜம்’ பண்ணி ஸ்ரெச்சரில் ஏறிய நான் கண் விழிக்கும் போது மாலை ஐந்து மணியாகி விட்டது.

     

    மறுபடியும் பார்பரா வரத் தொடங்கினார். இந்தப்புனிதமான தொழிலுக்கு முகம் சுழிக்காத புன்னகை கொண்ட பார்பரா மிகவும் பொருத்தமானவர். வந்த முதல்நாள் றெஸ்ஸிங் செய்யும் போது கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். “இதென்ன இது? ஒரு வால் ஒன்று நீண்டு கொண்டு நிற்கின்றது? இத்தனைகால சர்வீசில் இப்படி ஒரு வால் முளைத்து நான் பார்த்ததில்லை” என்றார் பார்பரா. அன்று முழுவதும் அவர் சிரிப்பு அடங்கவில்லை. தடவிப் பார்த்ததில் பிளாஸ்ரிக் போன்றதொரு நாடா உடம்பிற்குள்ளிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. “மறந்து போய் விட்டு விட்டார்களோ?” என்ற மனைவியின் கேள்விக்கு, “எனக்கும் தெரியவில்லை!” என்று சொல்லிக் கொண்டே வைத்தியசாலைக்கு ரெலிபோன் செய்தார் பார்பரா.

    “அது Penrose drain tube. அதை நாங்கள்தான் வைத்தோம். காயமுள்ள இடத்திலுள்ள தேவையற்ற நீரை அகற்றுவதற்கும், அதன் தடத்தின் வழியே சென்று சரியான இடத்தைக் கண்டு பிடித்து ஒப்பரேஷன் செய்வதற்குமாக அதை வைத்திருக்கின்றோம்” என்று வைத்தியசாலையிலிருந்து பதில் தந்தார்கள். இங்கே கேட்டதற்கு மாத்திரம்தான் பதில் சொல்வார்கள். தேவையில்லாமல் ஒரு அங்குலம்தன்னும் கூட்டிச் சொல்லமாட்டார்கள்.

    “இன்னுமொரு ஒப்பரேஷனா?” அதிர்ந்துவிட்டேன்.

    “அந்த வாலை வைப்பதற்காகவா ஆறுமணி நேரம் ஒப்பரேஷன் செய்தார்கள்” மனைவி வியந்தாள். அந்த வாலின் நீளம் கூடியும் இடம் மாறியும் இருந்திருந்தால் பரிணாமத்தின் உச்சத்தைத் தொட்டிருப்பேன்.

    ஒவ்வொருதடவை ஒப்பரேஷன் செய்த போதும் மூன்று கிழமைகள்தான் வேலையிலிருந்து விடுப்புத் தந்திருந்தார்கள். இந்தத் தொழிலும், தொழில் சாராததுமான ஆறுமாத அவுஸ்திரேலிய அனுபவத்தோடு, வேலைகளுக்கு மனுப் போடத் தொடங்கினேன்.

    இப்பொழுதெல்லாம் இல்லாத பொல்லாததெல்லாம் எழுதி, ஒரு புளுகுமூட்டையை வேலைக்கு மனுப்போடும்போது அனுப்பி வைப்பேன். அந்தக் கவரிங் லெட்டர் என்னைக் ‘கவர்’ பண்ணக்கூடியமாதிரி இருக்கும். ஆர்கிடெக்ட் தொடர்பான நேர்முகப் பரீட்சை வந்தது. கதவைத் திறந்து நீங்களாகவே உள்ளே செல்லுங்கள் என்றார்கள். அதில் ஏதோ சூட்சுமம் இருந்திருக்க வேண்டும். கதவைத் திறக்க முடியாமல் இருந்தது. அத்தகைய கனம் கொண்ட கதவை திறந்து இழுக்க, விட்ட இடத்திலிருந்து என்னையும் இழுத்துக் கொண்டு சென்றது கதவு. கதவுடன் தொங்கியபடியே சென்றேன். பலசாலியாகவே உள்ளே சென்ற நான் மிகவும் நன்றாக இன்ரர்வியூ அற்றெண்ட் பண்ணியிருந்தேன். வெளியே வரும்போது மேலும் இருவர் கதவை இழுக்கக் காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் 5 வருடங்களும் மற்றவர் 12 வருடங்களும் அவுஸ்திரேலியாவில் ஆர்கிடெக்ட்டாக வேலை செய்திருந்தார்கள். என்ன எக்ஸ்பீரியன்ஸ்? அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதற்கு ‘வாய்ச்சொல்’ ஒன்றே மூலதனம் என்பார்கள்.

    மூன்றாவது தடவையாக ஒப்பரேஷனிற்கு நாள் குறித்துவிட்டார்கள். அதற்கு முன்னோடியாக வெளிநோயாளர் பிரிவிற்கு வந்து சந்திக்கும்படி கடிதம் போட்டிருந்தார்கள். அதற்காகத்தான் இப்பொழுது வந்து கொண்டிருக்கின்றேன்

    காலை 11 மணியிலிருந்து காத்திருக்கின்றேன். இந்தத்தடவை எனக்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரைச் சந்திக்காமல் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். எனக்கு ஒப்பரேஷன் செய்தவரை சந்திப்பது மிகவும் கடினம் என்றார்கள். ஒவ்வொரு வார்ட்டிற்கும் அவர் சென்றுவர பிற்பகல் 3 மணியாகும் என்று சொன்னார்கள். பரவாயில்லை, காத்திருக்கின்றேன் என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டேன். காத்திருப்பு வீண் போகவில்லை. 4 மணியளவில் டாக்டர் வந்தார். மிகவும் குண்டாகவும் வாட்ட சாட்டமாகவும் 40- 45 வயதிற்குள் மதிக்கக்கூடியவராகவும் இருந்தார்.

    “என்னுடைய டாக்டர் வயது முதிர்ந்தவர். நான் அவரைத்தான் சந்திக்க வேண்டும். அவர் மிஸ்டர் பரகர்” என்றேன். வந்தவர் என்னைப்பார்த்து ஆச்சரியப்பட்டார்.

    “இல்லை… இல்லை. நான் தான் உமக்கு ஒப்பரேஷன் செய்தேன். என்னுடைய பெயர் சாகிடி. நீங்கள் குறிப்பிடும் டாக்டர் என்னுடைய பொஸ்.”

    “ஐயா… டாக்டர் ஐயா… இந்தமுறை எனக்கு மூன்றாவது தடவை ஒப்பரேஷன். தொடர்ந்தும் இப்படி இருந்தால் பவுல் கான்சர் (Bowel Cancer) வரும் என்று சொல்கின்றார்கள்” பயந்தபடியே நான் சொல்ல, டாக்டர் சாகிடி அங்குமிங்கும் பார்த்தார். பின்னர் எழுந்து நின்று தனது கதிரையை எனக்கு அண்மையாக நகர்த்திவிட்டு அதில் அமர்ந்தார்.

    “இந்த ஒப்பரேஷனை மிகவும் அவதானமாகச் செய்ய வேண்டும். ஏதாவது சிறுபிழை நேர்ந்தால்கூட தொடர்ச்சியாக மலம் சலம் கழிக்க நேரிடலாம். நீங்கள் பிறைவேற் ஹெல்த் இன்சூரன்ஸ் (Private Heath Insurance) வைத்திருக்கின்றீர்களா? அப்படியாயின், நீங்கள் டாக்டர் பரகருக்கு வெளியே சனல் பண்ணிக் காட்டிவிட்டு, இங்கேயே ஹொஸ்பிட்டலில் தங்கி நின்று சர்ஜரி செய்து கொள்ளலாம். அப்படித்தான் வசதி படைத்தவர்கள் எல்லாரும் செய்கின்றார்கள்” காதிற்குள் கிசுகிசுத்தார்

    “நான் அவுஸ்திரேலியா வந்து ஆறுமாதங்கள்தான் ஆகின்றது. என்னிடம் லைவ் இன்சூரன்ஸ்கூட இல்லையே!” என்றேன் ஏக்கத்துடன்.

    என்னைப் பொறுமையாக இருக்குப்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சற்று நேரத்தில் ஒரு வயது முதிர்ந்த டாக்டருடன் வந்தார்.

    “I am Faragher” என்றபடியே அந்த ஒடிசலான எனது டாக்டர் வந்தார். என்னைக் கதிரையில் அமரும்படி சொன்னார். மூச்சை இழுத்து விட்டார். “நடந்தவற்றைக் கூறுகின்றேன்” என்றார். அவர் குரல் இனிமையான சங்கீதம் போல இருந்தது

    “உங்களுக்கு இரண்டு தடவைகளும் இவர்தான் ஒப்பரேஷன் செய்தார். இவர் மிஸ்டர் சாகிடி (Zahedi). எனது அஷிஸ்டென்ற்” பரகர் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே சாகிடி எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்

    “தயவுசெய்து இந்தத்தடவை நீங்கள்தான் எனக்கு ஒப்பரேஷன் செய்ய வேண்டும்! நீங்கள் அனுபவம் மிகுந்தவர்!!”

    “முதன்முறையாக அந்த ஒப்பரேஷனை சாகிடி சுயமாகச் செய்தார். இரண்டாவது தடவை என்னுடைய மேற்பார்வையின் கீழ் செய்தார். பாருங்கள் எனக்கு இப்போது 65 வயதாகின்றது. நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் இந்த ஒப்பரேஷனைச் செய்வதற்கு இந்த ஹொஸ்பிட்டலில் யார் இருக்கின்றார்கள்? எல்லாருக்கும் அனுபவம் வாய்ந்த டாக்டர்தான் ஒப்பரேஷன் செய்ய வேண்டுமென்றால், இவர்களைப் போன்ற டாக்டர்மார் எப்போது ஒப்பரேஷன் செய்து பழகுவது? ஒரு டாக்டர் படித்து முடித்து வர குறைந்தது பத்து வருடங்கள் ஆகின்றது. டாக்டர் சாகிடிக்கு 45 வயதாகின்றது. அவரைப் போல இன்னும் இரண்டு டாக்டர்கள் என்னுடன் வேலை செய்கின்றார்கள்” அவர் சொல்வதை நான் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

    “சற்று நேரம் அமர்ந்து கொள்ளுங்கள். சீக்கிரம் வந்துவிடுவேன்” சொல்லிவிட்டு உள்ளே சென்றார் டாக்டர் பரகர்.

    “உவன் சாகிடி என்னை சாகடிச்சுப்போட்டான். என்ரை உடம்பைக்கீறி விளையாடி இருக்கிறான்.”

    சக டாக்டர்களுடன் உரையாடிவிட்டு சிரித்த முகத்துடன் திரும்பினார் டாக்டர் பரகர்.

    “உங்களுக்கு ஒரு குட் நியூஸ். இந்தத்தடவை உங்களுக்கு நான்தான் ஒப்பரேஷன் செய்யப் போகின்றேன். திருப்திதானே!” என் கையை இறுகப்பற்றிக் குலுக்கினார். அவரது அனுபவம் எனக்கு நம்பிக்கையைத் தந்தது. நம்பிக்கைதானே வாழ்க்கை!

    இரண்டொரு இளம் டாகடர்களுக்கு, என்னுடைய உடலை அனுபவமாக கற்றுக்கொள்வதற்குக் கொடுத்திருக்கின்றேன் என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்து வெளியேறுகின்றேன். அப்படியே என்னுடைய தொழில் சார்ந்த அனுபவத்தைப் பயிற்சி செய்ய எனக்கும் யாராவது வேலை தரக்கூடும்.

    ஹொஸ்பிட்டலைவிட்டு வெளியேறும்போது என் கைத்தொலைபேசி கிணுகிணுத்தது. கடைசியாகப் போயிருந்த நேர்முகப்பரீட்சை சம்பந்தமான தொலைபேசி அழைப்பு அது.

    “நீங்கள் இந்தத்தடவை நேர்முகப்பரீட்சையில் வெற்றி பெறவில்லை. நீங்களும் நன்றாகச் செய்துள்ளீர்கள். ஆனால் உங்களைவிட அனுபவம் வாய்ந்த ஒருவரைத் தெரிவுசெய்துள்ளோம். தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.”

     

    Share
  • குப்பை

     

    தமிழ்முகில்

     

                                         அதிகாலையில் எழுந்து, கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, அவசர அவசரமாய் குளித்து விட்டு வந்த ராமாயி, அடுப்பு மேட்டில் இருந்த முந்தின நாள் சாதத்தில், சிறிது மோர் கலந்து அவசர அவசரமாய் குடித்து விட்டு, ஒரு  கலயத்தில், தன் மகனுக்கும் எடுத்து வைத்தாள். சுவற்றோரமாய், குளிருக்கு இதமாய், போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்தான், அவளது பத்து வயது மகன், மணிமாறன். அவனிடம்,                   “ அப்பா, மணிமாறா, நான் வேலைக்கு கிளம்பறேன். உனக்கு கலையத்துல பழையது எடுத்து வெச்சிருக்கேன், சாப்டுட்டு, பள்ளிக்கோடத்துக்கு கிளம்பு.” என்றாள். அவள் குரலைக் கேட்டதும், கண் திறந்து பார்த்த மணிமாறன், “அம்மா, எனக்கு புது நோட்டும், பென்சிலும் வேணும்மா. நான் பேப்பர்ல எழுதி, நோட்ல ஒட்டி வெச்சிருந்தத டீச்சர் பாத்துட்டாங்க, திங்கட்கிழமை வரும் போது, புது நோட்டோட வரணும், இல்லைன்னா கிளாஸ்க்குள்ள விடமாட்டேன்னு சொல்லிட்டாங்கம்மா” என்றான். “சரிப்பா, வாங்கித் தர்ரேன்.” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். இன்று முதலாளி அம்மாவிடம், சிறிது பணம் கேட்டு வாங்க வேண்டும் என்றெண்ணியவாறு வேகமாக நடந்தாள்.  

                         அந்த பங்களாவின் கேட்டினைத் திறந்து கொண்டு, வீட்டின் பின்கட்டு வழியாக சமையற்கட்டினை அடைந்தவளை, கோபத்துடன் எதிர்கொண்டாள் எஜமானி அம்மாள் சுகன்யா. “ வங்கம்மா, வாங்க. இப்பத்தான் வர்றீங்களா? காபி குடிங்க” என்று நக்கலாய், அவள் வேலைக்குத் தாமதமாய் வந்ததை இடித்துரைத்தாள். “இல்லீங்கம்மா……..” என்று ஆரம்பித்த ராமாயியை,              “ வேலைக்கு   வர்ற நேரத்தைப் பாரு. ஆறு மணிக்கு வரணும்னு சொல்லி இருக்கேண்ல, இப்ப மணி ஆறரை ஆகப் போகுது. இனிமேல் வேலையை ஆரம்பிச்சு, எப்ப முடிக்கறது??? சீக்கிரம் ஆரம்பி “ என்று சிடுசிடுத்து விட்டுச் சென்றாள்.

                                                 பரபரவென்று அங்கு குவிந்திருந்த வேலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் செய்ய ஆரம்பித்தாள் ராமாயி. பாத்திரங்கள் துலக்கி, வீடு முழுவதும் பெருக்கி துடைத்து விட்டு, கொல்லைப் புறத்தில் மலையென குவித்து வைக்கப் பட்டிருந்த துணிகளை எல்லாம் துவைத்து காயப் போட்டுவிட்டு நிமிர்ந்தாள். நான்கு மணிநேர ஓய்வில்லா வேலைகட்குப் பின், அப்பாடா என்று அயர்ந்து ஓரமாய் அமர்ந்தவளை, சுகன்யாவின் அதட்டும் குரல் விரட்டியது. ”வேலை எல்லாம் முடிஞ்சதா?? மாடியில சின்னையா ரூம் ரொம்ப தூசியா இருக்கு, அதைப் பார்த்து பெருக்கி சுத்தம் பண்ணி வை. வேண்டாதது எல்லாம் ரூம் வாசல் கிட்ட இருக்கற ஷெல்ஃப்ல இருக்கு. ரூமை கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணிட்டு, தேவை இல்லாததுன்னு ஷெல்ஃப்ல இருக்கறதெல்லாம் கொண்டு போய் தெருவோர குப்பைத் தொட்டில போட்டுடு” என்று கட்டளையிட்டாள்.

                                    எஜமானி அம்மாள் ஏவலிட்ட பணிகளை செய்ய எத்தனித்தாள். அவளால் செய்ய இயலவில்லை. ஓய்வின்றி வேலை செய்தவளுக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. ”அம்மா, பசியாயிருக்குங்க. பழையது இருந்தா சாப்டுட்டு செய்யட்டுங்களா ??” என்றாள் ராமாயி. “சரி…சரி.. அந்த அடுப்பு மேடைக்கு கீழ இருக்கற பழைய சாதத்த சாப்டுட்டு வேலைய பாரு” என்று கூறி விட்டுச் சென்றாள். சாதத்தினை எடுத்து வந்து, ஓர் ஓரமாய் அமர்ந்து உண்டு விட்டு, பாத்திரங்களை துலக்கி வைத்துவிட்டு, அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பினாள்.

                                  மாடிப்படி ஏறி, அந்த அறையைத் திறந்தவளுக்கு மலைப்பாக இருந்தது. ஆம்….. அறை முழுவதும், புத்தகங்களும், பேப்பரும், பேனாக்களுமாய் இறைந்து கிடந்தன. சாப்பிட்ட தட்டுகளும்,காபி தம்ளர்களும் டேபிளின் மீது அப்படியே கிடந்தன. ஒவ்வொன்றாக எடுத்து சீர்படுத்திவிட்டு, அறையினை சுத்தம் செய்தாள். பின், இறுதியாக, எஜமானி அம்மாள் சொன்ன வேண்டாதவற்றை எடுத்துப் பார்த்தாள். அது முழுவதும், சில பக்கங்களே எழுதிய நோட்டுக்களும், எழுதாத முழு நீள தாட்களும், பேனாக்களும், பென்சில்களுமாய் நிறைந்திருந்தது. “ இவ்வளவு இருக்கு. இது எல்லாமே  வேண்டாததா என்ன?“ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், அவற்றை எடுத்து, குப்பைக் கூடையில்  போட எத்தனித்தாள். அப்போது தான் அவள் அதை கவனித்தாள், அதில் நிறைய நோட்டுகள் சில பக்கங்கள் மட்டுமே பயன் படுத்தப்பட்டு இருந்தன. மற்ற பக்கங்கள் எல்லாம் ஏதும் எழுதா வெள்ளைத் தாட்களாகவே இருந்தன. “ இவ்வளவு பக்கங்கள் இருக்கே, இதைப் போயி குப்பைல போடச் சொல்றாங்களே. நம்ம பிள்ளைக்கு வேணும்னா கேட்டு எடுத்துட்டு போகலாமா “ என்றெண்ணியவள், அவற்றை அள்ளிக் கொண்டு கீழே வந்தாள்.

                                “அம்மா, இதிலே எழுதாத நோட்டுகள், கொஞ்ச பக்கம் மட்டும் எழுதுன நோட்டுகள் எல்லாம் நிறைய இருக்கும்மா” என்றவளை ஓர் அலட்சியப் பார்வை பார்த்தாள் சுகன்யா. “ அதான், எல்லாம் வேண்டாம்னு தான எடுத்து வெச்சிருக்கு. குப்பைல எடுத்து போட வேண்டியது தானே, அதை விட்டுட்டு என்ன பேசிட்டு இருக்க?? ” என்றதட்டினாள் சுகன்யா. “சரிங்கம்மா” என்று கூறிவிட்டு, ஏதோ கேட்க எத்தனித்தவள், ஏதாவது கேட்டால், மீண்டும் திட்ட ஆரம்பித்து விடுவாளோ என்றெண்ணி மவுனம் ஆனாள்.

                                       குப்பைகள் என்று அவர்கள் ஒதுக்கியவற்றை எடுத்துக் கொண்டு வந்தவள், “ அவங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்கள்ல, நாம இதுல இருக்கற நல்ல நோட்டுப் புத்தகங்கள நம்ம பிள்ளைக்கு எடுத்துகிட்டா என்ன….இவங்களும் நான் நோட்டு வாங்க பணம் கேட்டா, இன்னைக்கு குடுக்கப் போறதில்ல” என்றெண்ணியவள் கேட்டின் அருகில் அமர்ந்து, தன் மகனுக்கு பயன்படும் என்று தோணிய நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தாள். இதனை தற்செயலாக கவனித்துவிட்ட சுகன்யா, விறுவிறுவென்று ராமாயியிடம் வந்தாள். “என்ன பண்ற இங்க?” என்று கேட்டுவிட்டு, ராமாயியின் பதிலுக்குக்கூட காத்திராமல்,                          “ வீட்டிலிருந்து  என்ன திருடிட்டு போகப் பாக்கற? ” என்று காரசாரமாய் கத்தத் துவங்கி விட்டாள். அவ்வளவு நேரம் அவளிட்ட ஏவல்கட்கும், அதட்டல்கள் எதற்கும் பேசாது, வேலைகளை கவனித்து வந்த ராமாயி, “அம்மா, கொஞ்சம் பொறுமையா பேசுங்க. நீங்க சுத்தப் படுத்த சொன்னீங்க, நான் செஞ்சேன். அங்க, உபயோகமான பொருட்கள் நிறைய குப்பைல கிடந்தது. உங்க கிட்ட சொன்னதுக்கு, அதெல்லாம் குப்பைல போடச் சொல்லீட்டிங்க. நான், அதில என் பிள்ளைக்கு பயன்படலாமேனு தோணுன பொருட்கள குப்பைல இருந்து எடுத்தேன். எதையும் சந்தேகத்தோடயும், அதிகாரச் செருக்கோடயும் பாக்கற நீங்க, முதல்ல உங்க மனச சுத்தப் படுத்திக்கோங்க. உங்க கிட்ட இனி நான் வேலை பாக்கறதா இல்ல. நான் வரேன்” என்று கூறி விடுவிடுவென்று வெளியேறினாள் ராமாயி.

     

    Share
  • வாதாபி பூத நாதம் தேவார வைப்புத்தலம்

     


    நமசிவாய

    18 திருமுறை பாடல்களில் பெயர்வழி குறிக்கப் பெற்ற   ‘பூத நாத-வாதாபி’ ஓர் தேவார வைப்புத்தலம்

     

    நூ.த.லோகசுந்தரமுதலி

    மயிலை

     

    பாதாமி=வாதாபி, வடகருநாடகம், ஆதி  பூதநாதர்

     

                                                    பூத நாதனைப் பூம்புக லூரனைத்

                                                    தாதுஎனத் தவழும் மதி சூடியை

                                                    நாதனை நல்ல நான்மறை ஓதியை

                                                    வேதனை நெருநல் கண்டது வெண்ணியே

                                                                திருநாவுக்கரசர் – குறுந்தொகை 5.17.6

     

              புகுமுன்

    தமிழக சித்தாந்த சைவநெறியின் மறைகளாம் தேவாரம் திருவாசகம் எனும் தொடக்கத்தின வான நூற்களின் 18000+ பாடல்களில் பதிகம் ஏதும் பெறாமல் சிவபெருமான் உறையும் திருஊர்களாக குறிக்கப்பட்ட பெருமை மட்டும் உடைய சிவத்தலங்கள் ‘வைப்புத் தலங்கள் என வழங்கப்படும் மரபினை சிலரே அறிவர்.

     

              சிவபெருமான் பல்பெயர்த்தவன்

    சிவபெருமான் சீர்மை பாடும் இத்திருமுறைப் பதிகப் பாடல்கள் தன் தலைவரின் பண்பு களை பற்பல பெயர் கொண்டு ஒவியப்படுத்தியுள்ளன. ஆலநீழலான், பசுபதி, பாசுபதன், பிறைசூடி, நெய்யாடி, பிஞ்ஞகன், ஆதி, அவிநாசி, மணாளன், மாதொருபாகன், மணவா ளன், விகிர்தன், கபாலி, தாயுமானவன், கோளிலி, பிறப்பிலி, சடைமுடியன், காரோணன், ஆனேறி எனப் பல்வேறு  பெயர்களால் வழங்கி போற்றப் பெற்றமை காணலாம்.

     

              சிவபெருமான் பூத நாதன்

    அவ்வழி பூதநாதன் என்பது சிவபெருமானுக்கு வழங்கும் நூற்றுக்கணக்கான பெயர்களில் ஒன்று. நிலம், நீர், தீ, காற்று, வானம் எனும் ஐம்பெரும் பூதங்களை அடக்கி  பேணும் ‘நாதனாக விளங்குவதாலாகும்.  ஐந்துபூதங்களின்-நாதன் எனக்காட்டும் சிறப்பு வழிபாட்டிற்கென தனித்தனியே திருஆரூர், திருஆனைக்கா, திரு அண்ணாமலை, காளத்தி, தில்லை என 5 பூதத்தலங்களை அமைத்து போற்றுகிறோம். பூத நாதன் என பெயர் விளி காணும் 18 பாடல்களுடைய ‘பெயர்வழித் திருமுறை’ தொகுப்பு உள்ளது.

     

              பூத நாதன் பரந்தவன்

    இந்தியாவில் பூதநாதன் என மூர்த்திப் பெயர்கொண்ட தலங்கள் நூற்றுக்கும் மேலுள்ளதாக அறிகிறோம் காசி இராமேச்சுரம், கயிலாயம் எனும் புகழ்பெற்றவை தன் பெருமையால் பற்பல இடங்களில் விசுவநாதர், இராம நாதர், கயிலாய நாதர் என தல இறைவன் பெயரிட்டு வழிபட வழி கோலியது போல்

    பூத் நாத்’ மந்திர்கள் (பூத நாதர் கோயில்கள்) வடக்கே பாட் டியாலா முதல் கிழக்கே அசாம், மேற்கே ஜுனாகாட், தெற்கே காஞ்சி வரை உள்ளமை இணையதள பதிவுகள்வழி அறியமுடிகின்றது. எனவே பூத நாதம் எனும் ஆதியும் மூலமும் ஆன தொன்மைத்தலம் ஒன்று பழங்காலத்தில் புகழுடன் விளங்கியுள்ளமை வரலாறாகின்றது.

     

              பூத நாதன் திருவூர்கள்

    குனுபூர் (ஒரிசா); மண்டி (இ.பி); கானாபூர், வாதாபி, தோர்கல் கோட்டை (கருநாடகம்); பகாடி, பூர்ணியா (பீகார்); மகுவா, மந்துவா (ம.பி); லக்மண்கர், பிகானீர், ஜோத்பூர், ஜுனாகாட், பிலானி, அபு (இராஜஸ்தான்); பகாரா, பல்பிபூர், சோர்வட், பரூஷ், படகளா, நவசாரி, போர்பந்தர், பவநகர் (குஜராத்); கோனால், சந்திரேஷ்வர் (கோவா); நவாடி(ஜார்கண்ட்) கோலாகோகர்நாத், ரிஷ்கேஷ், (உ.பி.); சிந்துதுர்க், நேரூர், (மகாராஷ்டிரா); பொகரோ (சத்தீஷ்கர்); ஜிண்டு(அரியாணா); பர்துவான் (மே.வ) பாடியாலா, அமிர்தசரஸ் (பஞ்சாப்); முதலிய பற்பல ஊர்களில் பூத் நாத் கோயில்கள் பரந்து காணப்படுகின்றன.

     

    வளர்ந்த பூத நாதர் பெருமையால் பம்பாய், டில்லி, கல்கத்தா, லக்னோ, சிம்லா போன்ற மக்கள் பெருகி இடம் பெயர்ந்து வாழும் பெருநகரங்களிலும் புதிது புதிதாக பூத் நாத் என பெயர் தாங்கிய சிவபெருமான் கோயில்கள் பல தோன்றியுள்ளன. மேலும் பற்பல தலங்கள் (108) நிறுவப்பெற்ற காசி, பர்டுவான் புவனேசுவர் காஞ்சிபாலி  போன்ற புண்ணிய தலங்களிலும் ஓர் பூத் நாத் கோயிலைக் காணலாம். ஈங்கு சிவராத்திரி’விழா மிகச்சிறப்பாக நடைபெறுவதாகவும் இமாசலப்பிரதேச மண்டி’யிலும் கொங்கண  கோவா வில் மலைமீதமைந்த பூதநாதர் கோயிலும் அக்கம்பக்கத்து மக்களால் பெரிதும் போற்றப்படு கின்றதாம். மகாதேவ் எனும் பெயர் சிவனைக் குறிப்பதுபோல் பலஇடங்களில் பூத் நாத் என்பதே பொதுநிலையில் சிவபெருமான் என பொருள் படவே பயன்படுகின்றமையும் காணப்படுகின்றது.

     

               வாதாபி ஆதிமூல பூத நாதம்

    பழங்காலத்து கருநாடகத்தில் சீரும்சிறப்பும் பெற்றிருந்து இந்நாள் ஓர் சிற்றூராகும் பாதாமி யில் அதாவது முன்னாள் வடுகநாட்டு வாதாபி யில் எழில்மிகு அகத்தியர்’ ஏரிக்கரையில் அமைக்கபட்டுள்ள பூத நாதர்’ கோயிலே மிக்கபழமை உடையதாகத் தெரிகின்றது. சம்பந்தர் அப்பரடிகளின் காலம் 7ஆம் நூற்றாண்டில் சிறப்புற்றிருந்துள்ளது. இங்குகாணும் பலஅடுக்கு களில் அமைந்த குடைவரைக் கோயில்கள் இந்நாள் சீர்குலைந்து வழிபாடின்றி புராதன சின்னங்களாக நிற்கின்றன. தொல்லியல் துறையினர் ஆய்ந்த ஏழாம் நூற்றண்டு கல்வெட்டு களாலும் அடுத்தடுத்த குகைகளில் சிவபெருமானுடையதைத் தவிர அருகு திருமா லுக்கும் ஜைன தீர்தங்காரருக்கும் அமைந்த தனித்தனி குகைக் கோயில்கள் பழமைக்குச் சான்று பகர்கின்றன.

     

    ‘வாதாபியே மிகப்பழமையான பூதூர் எனவும், அதன் நடுநாயகமான பூத நாதர் கோயிலும் ஐயமின்றி சால பழமை உடையது. இக்குடைவரைக் கோயில்கள் மகேந்திரவர்ம பல்லவன் காலத்து சாளுக்கிய மன்னன் புலிகேசியின் ஆணைவழி ஏழாம்நூற்றாண்டில் கட்டப் பட்டவைகள் என ஆய்வாவணங்கள் உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணக் கருத்துவழி சிறுத்தொண்டர் பல்லவப் போர்த் தலைமை ஏற்று வடுகநாட்டுப் போரில் வென்று திரும்பிய பழமைஉடைய வாதாபி இதுவே. இணையவழி கண்ட மற்ற கோயில்கள் எவற்றிற்கும் அவற்றின் தோற்றம், கிட்டிய ஆவணம்வழி இவ்வகை பழமை காணப்படவில்லை. பற்பல மிகமிக பிற்காலத்தவை. ஓருசில சென்ற நூற்றாண்டில் தொடரும் பழங்கீர்த்தியில் கிளைத்தவை ஆகும்

     

              வாதாபி வைப்புத்தலம்

    தேவாரம் குறித்த ஓங்காரம், திரியம்பகம், சோமேச்சுரம், நாகேச்சுரம், மாகாளேச்சுரம்என்பன ஓர்வகையில் நிரல்பட்டு போற்றப் பெறும் அம் ஈற்று வடநாட்டுத் தலங்கள் போன்று பூத நாதன் என ஓர் தல இறைவன் 18 பாடல்களில் போற்றப்பெற்ற பெயர்வழி பெறப்படும் தலம் ‘பூநாம்‘. வாதாபியில் உள்ள ஆதி பூத நாதர் கோயிலே என அதனை ஓர் தேவார வைப்புத்தலம் எனக் கொள்ளலாம்.

     

                பூத நாயகன், பூ தேச்சுரம்

    தேவார திருமுறைகளில் பூத நாதன் போன்று பூத நாயகன்‘ எனஓர் பெயரும் மேலும் 10 பாடல்களில் காணப்படுகின்றது. வடநாட்டிலும் பூத் நாத் உடன் ‘பூ தேஷ்வர்’ என பெயர் வழங்கும் ‘மந்திர்கள் நூற்றுக்கும் மேலுள்ளன. நுணிகிய நிலையில் இவ்விரு சொற்களுக்கு இடையுள்ள ஒற்றுமையும் வேற்றுமை, பூதம் எனும் சொல்லின் மாற்றுப் பொருள்கள், பூதகண-பதி’ வழிபாடு, அதன் வாதாபித் தொடர்பு முதலியன அடுத்து தொடரும் ஓர் கருத்துரையில் காண்போம்.

     

    கீழ்காணும் படங்களின் தொகுப்பினில், இந்தியாவில் பரந்துள்ளசில பூத் நாத் மந்திர் களைக் காண்க. இவற்றில் மிகச்சிலவே பழமையான. பற்பல மிகமிகப் புதியன. 

     

     

    திருச்சிற்றம்பலம்

    <><><><><>

     

     

    3 attachments — Download all attachments   View all images  
      endimage.jpg
    214K   View   Download  
      imageatstart.jpg
    110K   View   Download  
    Share
  • திருமண வாழ்க்கை ஆண்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்குமா?

     

    தேமொழி

     

    திருமணம் செய்து கொண்ட ஆண்கள் நீண்ட ஆயுளை உடையவர்களாகவும், ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு ஆதாரமாகப் பல புள்ளிவிவரங்களும்(data) கொடுக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சி முடிவினைக் கேட்ட சிலர், “என்ன செய்வது? என் வாழ்க்கைத் துணையுடன் ஒரு நாளைக் கழிப்பதே ஒரு மாமாங்கம் போலத் தோன்றுகிறது. இது போன்ற எண்ணம் உள்ள மணமானவர்கள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்று இருப்பார்கள் போலிருக்கிறது”, என்று கேலி செய்து வேடிக்கை பேச்சும் பேசுவது உண்டு. 

     

     

    தற்கால உலகில், திருமண வாழ்க்கைக்கு மதிப்பு குறைந்து வரும் கால கட்டத்தில், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறையினை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை ஆதாரமாகக் காட்டி, இளைஞர்களுக்கு திருமண வாழ்க்கையின் மேன்மையை எடுத்துச் சொல்லி போதிக்க முற்படுவார்கள்.

    ஆனால், இந்த ஆராய்ச்சியின் முடிவு சரியா? இதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் புள்ளிவிவரங்களை அலசி சரியான முடிவை எடுத்தார்களா? என்ற சந்தேகக் கேள்விகள் பொதுவாக ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்களுக்கு எழும். ஏனெனில், சற்று கவனம் இல்லாமல் ஆராய்ந்தால் புள்ளிவிவரங்களைக் கொண்டு தவறான முடிவுகளையும் எடுக்க வாய்ப்புள்ளது.  

    அதற்கு  புள்ளியியல்(statistics) பயில்பவர்களுக்கு உதாரணப் பாடமாக சொல்லிக்கொடுக்கப் படுவதை முதலில் பார்ப்போம். இந்த உதாரணம் மிகவும் பிரபலமான ஒன்று. ஐஸ்க்ரீம் விற்பனை அதிகரிக்கும் நாட்களில் மக்கள் பலர் நீரில் மூழ்கி மரணமடைகிறார்கள் என்பதனைக் குறிக்கும் புள்ளிவிவரங்கள் உள்ளன. இதனை மேலோட்டமாகப்  பார்த்து “அதிக ஐஸ்க்ரீம் சாப்பிடுவது நீரில் மூழ்கி மரணமடைவதற்கு காரணமாகிறது” என்ற கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டு முடிவெடுப்பது தவறு.

    இதனை ஆராய்ச்சியாளர்கள் கூறும் மொழியினை உபயோகித்திச் சொல்வோமானால், “ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கும் நீரில் முழுவதற்கும் இடையே தொடர்பு/’இடைத்தொடர்பு’ (correlation) உள்ளது. இதனால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதுதான் நீரில் மூழ்கி மரணமடைவதற்கு காரணம் என்ற ‘காரண காரியத் தொர்பினை’ (causality) முடிவாகக்  கொள்ளுவது அபத்தமாக முடியும்.”

    இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும்; அதாவது ஐஸ்க்ரீம் விற்பனை மற்றும் நீரில் மூழ்குதல், இவற்றிக்கு வேறு ஒரு ‘பொதுவான காரணம்’ (underlying factor)  உள்ளது.  இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் உள்ள பொதுவான காரணம்; நல்ல தட்பவெட்ப நிலை உள்ள கோடை காலம்.  மாணவர்கள் விடுமுறையில் கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று உல்லாசமாக நீந்தி விளையாடுவது கோடை காலத்தில்தான். அதுபோன்றே, இந்த இடங்களில் கூடும் கூட்டத்தினரின் தேவைக்கேற்ப வெயில் காலத்தில் ஐஸ்க்ரீம்  விற்பனையும் அதிகரிக்கும். இது இயல்பான ஒன்று.  இந்நாட்களில் அதிக மக்கள் நீரில் விளையாடுவதால் நீரில் மூழ்கி மரணமடையும் நிகழ்வுகளும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப்  பொதுவான காரணத்தைக் கருத்தில் கொள்ளாமல் முடிவுக்கு வருவது தவறாக அமையும்.

    இரண்டு நிகழ்வுகளுக்கிடையில் தொடர்பு இருப்பதாகத் தெரிந்தால், இது நிகழ இதுதான் காரணம் என்று உடனே அவசர முடிவுக்கு வருவது, ஆராயாமல் கொள்ளும் தவறான முடிவாகும். 

     

    ப்பொழுது நாம் அறிந்து கொள்ள விரும்பும், திருமணத்திற்கும் ஆண்களின்  நீண்ட ஆரோக்கிய வாழ்க்கைக்கும் உள்ளத் தொடர்பைக்  கண்டறிந்த ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி மேலும் விளக்கமாக அறிந்து கொள்வோம்.  

    உண்மையில் என்ன நிகழ்கிறது என்றால், நல்ல கல்வியும் உடல் ஆரோக்கியமும் உள்ள செல்வந்தர்களால் அதிக நாள் வாழ முடிகிறது.  அவர்களுக்கு வாழ்க்கைத்துணை கிடைப்பதும் இக்காரணங்களால் சுலபமாகிவிடுகிறது. ஆண்களுக்கு மட்டுமின்றி, இதே காரணங்கள் பெண்களுக்குத் திருமண வாழ்க்கை அமைவதிலும் உதவி புரிகின்றன என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

    இதற்கு மாறாக கல்வித் தகுதி குறைவாகவோ, அதனால் வருமானம் குறைவாகவோ இருப்பவர்களுக்கு இதே காரணங்களால் திருமணம் தள்ளிப் போகிறது.  அத்துடன் நோய் ஏற்படும்பொழுது அதற்கு மருத்துவம் பார்ப்பதோ,ஆரோக்கிய உணவு, வாழ்க்கைமுறைகளைக் கடைபிடித்து உடலைப் பேணிக் காப்பதோ இயலாது போகிறது. இக்காரணங்களினால் அதிக நாட்கள் அவர்களால் உயிர் வாழ முடிவதில்லை. 

    நீண்ட ஆயுளைப் பெறும் வாய்ப்புள்ள சமூக சூழ்நிலை உள்ளவர்களுக்கு விரைவில் திருமண வாழ்க்கை அமைவதும், அத்தகுதி அற்றவர்களுக்கு திருமணம் நிகழ தடைகள் ஏற்படுவதுமே சரியான காரணம் என்று பின்னாளில் மேலும் பல ஆராய்ச்சி முடிவுகள் உணர்த்தின. அதனால் மணவாழ்க்கை நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்பது சரியல்ல.  நிம்மதியற்ற திருமண வாழ்க்கை நேர் மாறான விளைவைத் தருவதையும் நாம் அறிவோம்.  

     

    correlation

     

    து போன்று மேலோட்டமாக உள்ள தொடர்புகளை மட்டும் கவனித்துவிட்டு, முற்றிலும் தவறாக வெளியிடப்படும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு உதாரணமாக புள்ளியியல் துறையில் இருந்து பல ஆதாரங்களைக் கொடுக்க இயலும்.   சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் வெளியான ஒரு ஆராய்ச்சியானது தன்னம்பிக்கை உள்ள பிள்ளைகளுக்கும் அவர்கள் பள்ளியில் நன்கு பயின்று நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கும் உள்ள தொடர்பினைக் கண்டறிந்தது.  அதனால் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகள் வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கையை  ஊட்டி வளர்க்க அறிவுரைக் கூறப்பட்டது.

    தொடர்ந்து பின்நாளில் நிகழ்த்தப் பட்ட ஆராய்ச்சி, இது தவறு, உண்மையில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் தங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள்.  நல்ல மதிப்பெண்கள் பெறுவதே தன்னம்பிக்கைக்யை அதிகரித்து தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறக் காரணமாகிறது.  நல்ல மதிப்பெண்கள்தான் தன்னம்பிக்கையைத் தருகிறது, மாறாக தன்னம்பிக்கை நல்ல மதிப்பெண்களைப் பெற வழி செய்வதில்லை என்று கண்டறிந்தார்கள்.

     

    கவே, நிகழ்வுகளுக்கு இடையில் தொடர்பு உள்ளது என்று புள்ளி விபரங்கள் குறிப்பிட்டாலும், அந்த தொடர்புக்கு இதுதான் காரணமா என்ற நாம் கவனமாக ஆராய வேண்டும். இது நிகழ்ந்தால் நிச்சயம் இதுவும் நிகழ்ந்தே தீரும், ஆகவே இது நிகழ இதுவே காரணம் என அவசரப்பட்டு எந்த முடிவெடுக்கக் கூடாது.  காரணம் எதுவாகவும் இருக்க வாய்ப்புள்ளது,

    எனவே, இடையே உள்ளத் தொடர்பு மட்டும் எதனையும் ஆணித்தரமாக சொல்ல உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேண்டுமானால் அத்தொடர்புகள் சிற்சில குறிப்புகளைக் கொடுத்து யூகிக்க வாய்ப்பளிக்கலாம். அதனை அடிப்படையாகக் கொண்டு இது ஏன் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? என்ன காரணம்? என்று ஆராய வேண்டியது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி.  சந்தேகம் வரும் சமயங்களில் ‘ஐஸ்க்ரீம் விற்பனை ஆராய்ச்சி’ உதாரணத்தையும் நினைவு படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

     

     

    நன்றி: TED X – The danger of mixing up causality and correlation
    படம் உதவி: http://lh5.ggpht.com/_hEtlcZt0xFs/S9Ytx3wPSpI/AAAAAAAAD5Y/P7fE1IYDG54/bengali%20wedding%20doll%5B7%5D.jpg

     

     

    Share
  • உதிர்வது….

     

       

      செண்பக ஜெகதீசன்

    கல்யாணச் சந்தையில்

    கரும்பு தின்னக்

    கூலி உயர்வு காரணமாக,

    கண்ணீர் உரத்தில் வளர்ந்த

    வாழ்க்கைச் செடியில் பூக்கும்

    கன்னி மலர்களெல்லாம்

    கருகி உதிர்கின்றன-

    முதிர்கன்னிகளாய்…!

     

    படத்துக்கு நன்றி

      http://www.pseewald.com/2009/05/too-much-rain.html      

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (34)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    ஆணும், பெண்ணும் உலகில் சமநிலை கொண்டவர்கள் எனும் கருத்தை நிலைநாட்டுவதற்காக சிவன் அர்த்தநாரீசுவரராக தன்னைக் காட்டியதாகப் புராணங்களில் அறிகிறோம்.

    வாழ்வும் சமயமும் பிணைந்து இருப்பது உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதா? இல்லையா என்னும் விவாதம் பல்வேறு நாட்டவர்களிடமும், பல்வேறு வகைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    அதே சமயம் விடை தெரியா வினாக்கள் , விளக்கமில்லா நிகழ்வுகள் இப்பிரபஞ்சத்தில் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.

    உள்ளத்தூய்மை, உள்ள ஒழுக்கம் என்பனவற்றின் முக்கியம் உலக சமுதாயத்தின் அமைதியான வாழ்க்கைக்கு எத்துணை இன்றியமையாதது என்பது பல வழிகளில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    நாகரீக வளர்ச்சி எனும் பெயரால் கலாச்சார விழுமியங்கள் தமது இருப்பினை இழந்து கொண்டிருக்கின்றன.

    கலாச்சார பாரம்பரியம், சமுதாயக் கோட்பாட்டினைக் கட்டிக் காக்கும் வரம்பு என்பனவற்றின் எல்லை என்ன என்று நிர்ணயிக்க முடியாமல் நவீன கால மாற்றங்கள் தத்தளித்துக் கொண்டிருப்பது போலத் தென்படுகிறது.

    மதங்களைத் ஸ்தாபித்தவர்களின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களால் மதம் போதிக்கப்படும் போது அங்கே மதங்களின் பெயரால் அநியாயமாக மனித உயிர்கள் காவு கொள்ளப்படுக்கின்றன.

    மதத்தைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவர்கள் சமுதாயத்தில் முன்னணி நிலைகளை எடுப்பதைக் காட்டிலும் மதங்களைப் பற்றிய உண்மையான புரிந்துணர்வு கொண்டவர்கள் சமுதாயத்தின் முன்னோடிகளாக இளைய சமுதாயத்தை வழி நடத்துவது ஒன்றே இன்றைய அவசர உலகில் அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதுவே யதார்த்தமாகும்.

    என்ன இது ?  எதற்காக இந்த தத்துவ விளக்கம் இப்போது எனும் கேள்வி உங்கள் மனங்களிலே விளைவது தவிர்க்க முடியாதது.

    சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்திலே “சர்ச் ஆப் இங்கிலாந்து ( Church of England) எனும் அமைப்பிலே எழுந்த சர்ச்சைகளும், விவாதங்களும் அதைத் தொடர்ந்த வாக்கெடுப்பின் முடிவுகள் கொடுத்த சமுதாய அதிர்வுகளைப் பற்றிய அலசலுக்காகவே மேற்கூறிய கருத்துக்கள்.

    கடந்த 12 வருடங்களாக இங்கிலாந்து சர்ச்க்குள் நடந்த விவாதங்களும் அதன் பயனாக ஏற்பட்ட விழிப்புணர்வுகளும் திரும்பவும் பழைய குருடி கதவைத் திறவடி எனும் நிலைக்குத் தள்ள‌ப்பட்டு விட்டது.

    என்ன விஷயம் இது ? என்று அங்கலாய்ப்பது போலத் தெரிகிறது.

    ஆண்டவனின் தேவாலயத்தில் ஆணும் பெண்ணும் சமனாகக் கருதப்படுகிறார்களா ? என்று தேவாலய நிர்வாகத்தினரின் முன்னால் வைக்கப்பட்ட கேள்வியின் மீதான விவாதங்களே அவை.

    சாதாரண் மதகுரு எனும் ஸ்தானத்திற்கு பெண்களும் வரலாம் எனும் நிலையிலிருந்து பெண் “பிஷப்(Bishop)”  எனும் பதவிக்கு பெண்கள் தகுதியானவர்களா ? அவர்கள் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? எனும் விவாதம் பல வருடங்களாக நடைபெற்று வந்தது.

    அவ்விவாதங்கள் முதிர்வடைந்த நிலையிலும், பெண்கள் பிஷப்பாக வரவேண்டும் அதுவே சமுதாயத்தில் பெண்கள் சம உரிமையுடன் கணிக்கப்படுவதை ஊர்ஜிதப்படுத்தும் செயல் எனும் அரசியல்வாதிகளும், பெண்ணுரிமையை முன்னெடுப்பவர்களும் ஆதரித்துக் கோஷமெழுப்பியதாலும் தேவாலய திருச்சபையின் நிர்வாகக் குழுக்களின் முன்னால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆறு வாக்குகளினால் இப்பேரரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து பல அரசியல், சமூக விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.

    சரி இதன் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போமா?

    இந்த சர்ச் ஆப் இங்கிலாந்து எனும் இங்கிலாந்து மக்களுக்கான தனியான தேவாலய மத அமைப்பு இங்கிலாந்தின் மன்னனான  8வது ஹென்றி என்பவரால் 1534ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தனக்கு ஆண் வாரிசைக் கொடுக்காத காரணத்தால் தனது மனைவியான “கத்தரின் ஆப் அராகன் (Catherine of Aragon)” அவர்களை விவாகரத்துச் செய்து விட்டு தனது காதலியான “ஆன் பேலின்(Anne Boleyn.) என்பவரை மணமுடிக்க எண்ணியபோது அதற்கு அப்போதைய கத்தோலிக்கப் பெரியவரான போப் அனுமதி கொடுக்காத காரணத்தினால் இங்கிலாந்து நாட்டிற்கான தனியான தேவாலய அமைப்பை இம்மன்னன் உருவாக்கினார்.

    இத்தகைய பின்னணியைக் கொண்ட இவ்வமைப்பு தேவாலயத்தில் பெண்கள் கர்த்தரை நோக்கிய வழிபாட்டில் ஒரு பகுதியை வாசிக்கும் தகுதியை 1861ம் ஆண்டு பெற்றார்கள். முதலாவது உலக மகாயுத்தத்தின் போது சில பெண்கள் “பிஷப்பின் தூதர்களாக”  நியமிக்கப்பட்டார்கள்.

    அதைத்தொடர்ந்து பெண்களுக்கான நியமனம் எதுவும் 1969ம் ஆண்டு வரை நடைபெறவில்லை. பெண்கள் சமய சம்பந்தமான சேவைகளுக்காக தெரிவு செய்யப்படலாம் எனும் சட்டம் 1986ல் இயற்ற‌ப்பட்டது. இதன் பிரகாரம் முதன் முறையாக 1987ம் ஆண்டு பெண்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

    இங்கிலாந்தின் சர்ச் அமைப்பை நிர்வகிக்கும் சர்ச் அசெம்பிளி எனும்  1850களில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பை “ஜெனரல் சினோட்(General Synod) எனும் அமைப்பு 1970ம் ஆண்டு இடம் பெயர்த்தது. இவ்வமைப்பு பெண்கள் தேவாலய நிர்வாகங்களிலும் மற்றைய மதகுருமாருக்கு உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்குமான அதிகாரத்தை 1994ம் ஆண்டே வழங்கியது.

    2005ம் ஆண்டு யூலை மாதம் சர்ச் ஆப் இங்கிலாந்து பெண்கள் “பிஷப்” எனும் பதவியை வகிப்பதற்கான அதிகாரத்தை வழங்குவது பற்றி ஆலோசிக்கத் தொடங்கியது. 2006ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் அதே அமைப்பு பெண் பிஷப் கீழ் வழிபட விரும்பாத பக்தர்களுக்காக மாறுபட்ட வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும் எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

    2008ம் ஆண்டு யூலை மாதம் 8ம் திகதி அதே அமைப்பு பெண்களை “பிஷப்” பதவிக்கு அமர்த்தலாம் என்றும், அதை விரும்பாதவர்களுக்கு மாறுபட்ட வழிகளைக் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் பெரும்பான்மையாக வாக்களித்தது.

    ஆனால் அதைத் தொடர்ந்து பல இழுபறிகள் இது சம்பந்தமான அதிகார நிறைவேற்றலில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஏறத்தாழ 6 வாக்குகளினால் பெண்களுக்கு “பிஷப்” அதிகாரம் வழங்கும் பிரேரணை தோல்வியுற்றது.

    இது பல முன்ன்ணி அமைப்புகளுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்தில் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது எனும் நிலை இருக்கையில் எப்படி கிறீஸ்தவ தேவாலயம் இங்கிலாந்து நாட்டில் இத்தகைய வேறுபடுத்தலைக் கடைப்பிடிக்கலாம் எனும் கேள்வி பலமுனைகளில் இருந்து எழுந்துள்ளது.

    அனைத்து மக்களும் வேறுபாடின்றி நடத்தப்ப்பட வேண்டும் எனும் நிலையை உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லும் பிரித்தானிய நாட்டில் இத்தகைய ஒரு நிலை இருப்பது உலக அரங்கில் எமது நாட்டைப் பற்றிய மதிப்பீட்டைக் குறைத்து விடாதா என அரசியல் தலைவர்கள் கட்சிப் பாகுபாடின்றி விமர்சிக்கிறார்கள்.

    இங்கிலாந்தின் பிரபுக்கள் சபையில் இங்கிலாந்து கிறீஸ்துவ அங்கத்துவம் பேணப்படும் நிலையில் ஏன் அரசாங்கம் கிறீஸ்தவ நிர்வாகத்தினரிடம் இவ்வேற்றுமை களையப்படக்கூடாது எனும் அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியாது எனும் கோஷமும் எழுந்துள்ளது.

    அதே சமயம் மத சம்பந்தமான விடயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது, தனி மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் இங்கிலாந்து நாட்டில் பெண் “பிஷப்” ஜ ஏற்றுக் கொள்ளாத கருத்து கொண்டவர்களின் உரிமையை எபவ்வாறு உதாசீனம் செய்யலாம் என்று மற்றொரு பக்கத்தில் வாதம் எழுகிறது.

    இறைவனின் கண்களில் ஆணும், பெண்ணும் சம உரிமை கொண்டவர்களாகவே கருதப்படுகிறார்கள். தேவாலயத்தில் இறை சம்பந்தமான வகையில் சேவைபுரிய விரும்பும் பெண்களைத் தடை செய்வது என்பது நியாயமற்ற செய்கையாகவே தெரிகிறது.

    அதே சமயம் கால மாற்ற‌த்துக்கு உட்படுத்தப்படமுடியாத பல நடைமுறைகள் மத சம்பந்தமான விடயங்களில் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியே இருக்கிறது.

    இவ்விரண்டையும் அனுசரித்துக் கொண்டு போகக்கூடிய ஒரு சமநிலையான வழிமுறையை ஏற்படுத்த மதத் தலைவர்கள் முனைவதற்கு அரசியல் தலைவர்களின் அழுத்தம் தேவைப்படுகிறது போலவே தெரிகிறது.

    இந்த விடயத்தில் 2013 கொண்டு வரப்போகும் மாற்றத்தை இங்கிலாந்து முழுவதும் மிக ஆவலாக எதிர்பார்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

    விடை காலத்தின் கையில்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
     
     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • அகத்தின் ஐந்திணை புறத்தே அரங்கில்..

     

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    நாட்டிய நிகழச்சிக்கு வருமாறு திரு. முரளி மற்றும் திருமதி பிரியா முரளி அழைத்தார்கள். சென்னை, நாரத கான சபாவில் முன்வரிசைகளுள் முக்கியமானவருக்கான இருக்கை ஒன்றை எனக்குத் தந்தார்கள்.

    25.11.2012 மாலை 1645க்கே இருக்கையில் அமர்க, 1700 மணிக்கு நிகழ்ச்சி. இடைவேளை இல்லா இரண்டரை மணிநேரம்.

    1630 மணிக்கே ஆள்வார்பேட்டை, நாரத கான சபா சென்றேன். வண்டி நிறுத்திடம் நிரம்பியிருந்தது. அரங்கமும் நிறைந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ 2000 பேர் வரை கூடினர். அவர்களுள் பாதிக்குமேல் கலை வல்லுநர்கள்.

    இக்காலத் தொழினுட்பக் கருவிகள் ஆங்காங்கே. அரங்கின் இரு மருங்கும் இரு திரைகளுக்கு இரு ஒளிப்படக்காட்டிகள். வண்ணங்களைச் சிதற, பாய்ச்ச, சுழற்ற எனக் கருவிகள் அரங்கை வளைத்தன. பல்வேறு சூழல்களைக் காட்சியாக்கி அரங்கில் வியப்பு நிறைக்கும் முயற்சி எனத் தோன்றியது.

    இரசோகம் www.rasoham.in வழங்கிய நாட்டிய நாடகம். தலைப்பு ஐந்திணை.

    சங்கத் தமிழ் தந்த சொல், தந்த பொருள், அகத்தின் ஐந்திணை, அன்பின் ஐந்திணை. புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகிய உரிப்பொருள் காட்டும் ஐந்திணை.

    சங்கத் தமிழ்ச் சொல்லைப் பலமுறை கட்டியமாகக் கூறித் தேன் தமிழுக்குத் தெவிட்டாத சுவையுண்டு எனப் பாடிய நரசிமாமாச்சாரியாரின் கணீர் குரலிசைக்குப் பிரியா முரளியும் மற்றும் நால்வரும் அறிமுக வரவேற்பு நடனத்தில் பரதத்தின் அடவுகள், காத்திரம் மிகாமல் சிறுமருவும் மாத்திரையும் காட்டியன நெகிழாத நெஞ்சையும் நெகிழ்வித்துத் தமிழைப் புகழாதை நாவையும் புகழ்விப்பன.

    செவ்வியல் குன்றாச் செழுமைப் பரத நடன அசைவுகளுள்ளும் குச்சுப்பிடிப் பாங்குடனும் இவ் ஐந்திணைக் கூறுகளைத் தந்தனர் இரசோசம் அமைப்பினர்.

    நறிய நல்லோன் மேனி முறியினும் வாயது முயங்குதற்கும் இனிதே எனப் புணர்தல் (குறுந்தொகை, 62) சேயோன் மேய மைவரை உலகமாகிய மலையும் மலை சார்ந்த குறிஞ்சிக்கு உரிப்பொருள்.

    குறிஞ்சி நில விலங்கு யானையின் பிளிறலைப் பின்னணி இசை தர, பரதத்துள் வெளிக்காட்டிய உடலசைவுகளாயினென், பறவையாகிய மயிலாய் வந்த ஒயிலாளின் அடவுகளாயிலென், குறிஞ்சிக் கடவுள் முருகனாய், அவன் புகழ் பாடும் குன்றுவரான குறவரின் கூத்தாயினென், கண்ணொடு கண் நோக்கிக் காதலுற்ற காளையும் கன்னியுமாயினென், திருச்செங்கோட்டுக் குறவஞ்சியில் குறத்தியாக வந்து அசத்திய ரோஜா கண்ணன் இங்கும் குறத்தியாக வந்து குறிசொன்னவாறெனின், திருமண நிகழ்வின் மதுசூதனின் தவிலாகிலென், புணர்தலைப் பூடகமாகக் காட்டிய பெற்றியாயினென், நாட்டிய வண்ணம் தந்த நவையறு காட்சிகள் நயந்து நயந்து இன்புறுமாறமைந்தன.

    வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் (அகநானூறு, 53) கூறும் பிரிதலை உரிப்பொருளாகக் கொண்ட மாயோன் மேய காடுறை உலகமே, காடும் காடு சார்ந்த முல்லை.

    முல்லை நில விலங்கு ஆநிரை. பசுக் கூட்டம் நிரையாக, ஓட்டும் கோவலர் தொகையாக, கவின்மிகு கன்னடத்து வரிகள் துணையாக, காதலியிடம் பிரியாது பிரிந்து விடைபெற நீளும் காதலின் காட்சிகளாக, கோபியரும் கண்ணனும் இடையர் ஆடலாக, நடனத்துடன் பிணைத்து நம்மைக் காட்சிகளுடன் அழைத்து, நம் கண்களை அரங்கோடு கட்டி, உள்ளத்தை ஒடுக்கிப் பிழியுமாறமைந்தன.

    கடற்சிறு காக்கை காமர் பெடையொடு கோடிடுமீன் வழங்கும் (அகநானூறு, 170) ஏங்கி இரங்கலை உரிப்பொருளாக்கிய கடலும் கடல் சார்ந்த மணல்பரப்புமே வருணன் மேய பெருமணலுமாகிய நெய்தல்.

     கடல் அலைகள் பின்னணியாக, பாதங்கள் படகுகளாக, ஏலேலோப் பாடல் இசையாக, மீனவராய், மீன்பிடித்தும், காற்றலையில் தத்தளித்தும் கரைவலை இழுத்தும், நுளைத்தியர் மீன் விற்றும் வரத் தலைவியை நெஞ்சில் நிறைத்த தலைவன் இரங்குமாறு நவில்தொறும் நயக்கும் மென் மலையாளத்தில் மொழிந்து, வண்ண உடலசைவுகளின் செவ்வியல் போக்கும், செம்மாந்த அரங்கமைப்பும் நினைவலைகளில் நினைந்து நினைந்து மீட்டுமாறமைந்தன.

    பனிபடுநாளே பிரிந்தனர் பிரியுநாளும் பலவாகவ்வே (குறுந்தொகை, 104) எனப் பிரிவாற்றமையால் இருத்தலையும் திணை மயங்கலையும் உரிப்பொருளாகக் கொண்ட முறைமையிற் திரிந்து நல்லியல்பு அழிந்தது பாலை.

    சிந்துபைரவியில் தொடங்கித் தேஷ் பண்ணுள் புகுந்து சந்ததமாய் இந்தியினைப் பரதத்துக்கு மொழியாக்கிய பாங்கு, காளிக்கு விழாவெடுத்த காட்சியுடன் மீராவின் மீட்டுவிரல்களைக் காட்டிய பாங்கு, காட்டுக்குள் குதிரை வண்டியாகி, வழிப்பறிக் கயவரின் கம்பத்தின் கொடுமை போக்கி, விரலசைவுகளின் விரைவும் கால்களின் அடிகள் அசைந்த அழகும் தந்த பாங்கு, பார்வையாளர் பலர் எழுந்து நின்று ஆரவாரித்துக் கைதட்டிப் பாராட்டிய பாங்கு யாவும் உள்ளத்தை வயப்படுத்திய உவகைப் பெருக்கெடுப்பில் உடலெங்கும் சிலிர்ப்புற அமைந்தன.

    கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் தொண்ணுன்முகனே (குறுந்தொகை, 167) என ஊடல் போக்கிய கூடலைக் கருப்பொருளாக்கிய வேந்தனாகிய இந்திரன் மேய தீம்புனல் உலகமே மருதம்.

    ஊடலுடன் காட்சி தொடங்கி, வேளாண் மக்களின் வாழ்வியல் கூறுகளை அரங்கேற்றி, உழவு, விதைப்பு, நீர்ப்பாசனம், அறுவடை, பொலிகாணல், முறங்களால் புடைத்தெடுத்தல் யாவையும் உரிய இசைப் பின்னணியில் சுந்தரத் தெலுங்குப் பண் தொகுப்பில் பிண்டியும் பிணையலுமகிய கை முத்திரைகள் வழி கண் செல்ல, கண்கள் செல்லும் வழி மனம் செல்ல, மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும் குச்சுப்பிடி உடலசைவுகளையும் காட்டித் தலைவனும் தலைவியும் கூடும் நிலைக்கு அழைத்துச் சென்று இன்பியல் முடிவுடன் ஆடல் அரங்கத்தை நிறைவு செய்தனர்.

    காதல், வீரம், அருள், வியப்பு, சிரிப்பு, அச்சம், வெறுப்பு, சினம், அமைதி ஆகிய ஒண்பான் சுவைகளை வெளிக்கொணருமாறு, சிலப்பதிகாரம் கூறிய நாட்டிய நன்னூல் கற்றனரோ, அரங்க அமைப்பைக் கற்றனரோ, கணிணிக் கால அரங்க நுணுக்கம் கற்றனரோ எனுமாறு பல நூற்றாண்டு கால மரபுகளை, நாட்டிய மரபுகளை, செவ்வியல் தன்மைகளை, இசைப் பராம்பரியத்தை, அரங்க அமைப்புகளை இக்காலத்துடன் இசைத்துத் தந்தனரே இரசோகம் நிறுவனத்தார்.

    ஏறத்தாழ 100 கலைஞர்கள் மேடைக்கு வந்து சென்றனர், இரண்டரை மணி நேர இடைவெளிக்குள். குரு நிலைப் பிரியா முரளி தொடக்கம் அரங்கை ஆட்கொண்ட மதுசூதனன் ஊடாக, தொடக்க நிலைச் சிறார்கள் வரை, அத்தனை கலைஞர்களையும் ஒருங்கிணைத்துச் செய்தி சொல்லும் இடையீடற்ற உடல் அசைவுகளளை மேடையாக்கியவர் கலாச்சேத்திரா தந்த கலைப்பேராசான் நரசிம்மாச்சாரியார், அவர் துணைவியார் வசந்தலட்சுமியார்.  இந்தக் கலை இணையரின் கலைமக்கள் இலாவண்யா, இலசியா. நால்வரையும் சுவைஞர்கள் பாராட்டுவர், வாழ்த்துவர், வணங்குவர்.

    தமிழ் தந்த திணைகள், எல்லைகள் தாண்டி, ஏனைய மொழிகளையும் தமதாக்கி, மனிதத்துக்கு மாண்பமைக்க, பல்மொழிப் பேராசிரியர்கள் கவிஞர்கள் துணைநின்றுளர். அவர்கள் இந்தியா பெற்றெடுத்த பெருமக்கள்.

    ஐந்து அன்பின் திணைகளையும் அள்ளித் தந்தவர்கள் ஐந்து கலை இணையர். வாழ்வில் தம்பதியரான அவர்கள் மேடையிலும் உணர்வுகளின் சங்கமமாயினர்.

    பாட்டிசை, குழல் இசை, யாழ் இசை, மத்தள இசை, கைத்தாள இசையுடன் இக்கால மின்னிசைக் கருவிகளும் கலந்து கொளிக்க, தவில், நாகசுரம் உள்ளிட்டவை காதுகளுக்கு விருந்தாக்கத் துணைநின்றோர் பட்டியலில் இக்கால வல்லுநர் பலர் உளர்.

    ஆண்கள் இத்தனை பேர் பரதம் கற்று வருகிறார்களா என மூக்கின் மேல் விரலை வைத்து வியக்குமாறு இருபதுக்கும் கூடுதலான ஆண்கள் பரதமும் குச்சுப்பிடியும் கைவரலாயினர், சுவைப்போரைத் திகைப்பில் ஆழ்த்தித் திகட்டினர்.

    கைவலோர் என்பார் சேக்கிழார். நூற்றுக்கும் கூடுதலான கலைஞர்களின் முகங்கள் பளிச்சிடக் கைவலோர், உடைகள் பொருந்திடத் தையலோர் என முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்புப் போன்ற பல்வேறு துறைகளிலும் நூற்றுக்கும் கூடுதலான கைவினைஞர், பொறிஞர், ஒலி ஒளி நுட்பினர், படப்பிடிப்பாளர் பணியாற்றி ஐந்திணையை அரங்கேற்றினர்.

    இந்தியாவுக்கு நவீன முகம் கொடுக்கும் ஐந்திணை. உலகெங்கும் இந்திய அரசு எடுத்துச் சென்று இதுவே இந்தியக் கலைமுகம் என்னுமாறு காட்டும் வகையது ஐந்திணை.

    செந்தமிழ்த் தேனைச் சொரிந்து, கவின் கன்னடத் தீம்பாலை ஊற்றி, கங்கைப்புலத்தின் குங்குமப்பூப் பிசைந்து, களி தெலுங்கின் கன்னலைக் கலக்கி, மலையாளத்தின் நேந்திரம் பழத்தைக் குழைத்துத் தந்தால் வரும் சுவையோ! குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் எனப் புணர்தல், பிரிதல், இரங்கல், இருத்தல், ஊடல் திணைகளை ஆடலாகத் தொகுத்தோர் தந்த சுவையோ!

    இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்த முரளி இணையருக்கு நன்றி கூறுகிறேன்.  

    Share
  • செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா ?

     

                 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    அமெரிக்க அணு மின்னிலையம்

    மனிதத் தவறால் விபத்துக் குள்ளாகி,

    திரிமைல் தீவில்

    எரிக்கோல்கள் உருகின!

    ரஷ்யாவின் அணு மின்னிலையம்

    மர்மச் சோதனை மூலம் வெடித்து,

    செர்நோபில் அருகிலே

    நிர்மூல மானது!

    பாரத அணுமின் னுலைகளில்

    பாதுகாப்புகள் மிகுதி! யந்திரச் சாதனம்

    முறிந்து போவதும், பணியாளர்

    நெறிதவறி யியக்குவதும்,

    கட்டுப்பாடுகள்

    தட்டுத் தடுமாறுவதும்

    அபாய வேளையில் ஆற்றல் குறையாமல்

    விருவிருவென ஏறுவதும்

    ஒருபோதும் நேராத

    அபூர்வ நிகழ்ச்சிகள் !

     

    +++++++++++

     

    மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு திட்டம் இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்.

    தாமஸ் ஹார்டி [Thomas Hardy (1840-1928)]

     

     

     

    “மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

    “செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வெதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

    ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]


     

    முன்னுரை: 1986 ஏப்ரல் 25 தேதி ஷிஃப்டு இயக்குநரும், அதிபரும் பொறுப்பற்ற முறையில் அணுவியல் இயக்கப் பாதுகாப்பு நெறிகளை அறிந்தோ, அறியாமலோ பன்முறை முறித்தனர் [Breaches of Nuclear Safety Regulations] என்பது மன்னிக்க முடியாத இமாலயத் தவறுகள்! 1000 MWe பேராற்றல் கொண்ட செர்நோபில் விபத்துக்கு மூல காரணம் பல்வேறு டிசைன் தவறுகளாயினும், ஒழுங்காக இயங்கி வந்த அணுமின் நிலையம் 1986 ஏப்ரலில் திட்டமிட்ட சோதனையை தொடங்கா திருந்தால் அந்தக் கோர விபத்து நேர்ந்திருக்காது! அனுமதிக்கப்பட்ட முதலில் திட்டப்படிப் பின்பற்றி மாறுதல் எதுமின்றி வெற்றியாகாத சோதனையைப் பாதியிலே நிறுத்தி யிருந்தால், அந்தப் பயங்கர விபத்து நேர்ந்திருக்காது! விபத்து நிகழ்ந்ததற்கு முக்கிய காரணங்கள்:

    1.  சோதனையின் முழு விளக்கங்களை சோதனைத் தலைவர் அணு உலை இயக்கப் பணியாளருடனும், பாதுகாப்பு நெறியாளருடனும் பங்கிட்டுக் கொள்ள வில்லை!

    2.  திட்டமிட்டபடி சோதனை செய்ய முடியாத போது, திடீர் மாற்றங்களை அனுமதியின்றிச் செய்து, டெலிஃபோன் மூலமாகப் பணியாளருக்கு ஆணையிட்டது!

    3.  பாதுகாப்பு அதிபர் அனுமதியின்றி, அணு உலைப் பாதுகாப்புச் சாதனங்களையும், அபாயத் தடுப்பு ஏற்பாடுகளையும் பணியாளர் முடமாக்கியது. அதாவது மாபெரும் மனிதத் தவறால்தான், செர்நோபில் கோர விபத்து நேர்ந்தது! குறை பாடுகள் மிக்க செர்நோபில் அணுமின் உலை கூட, மனிதத் தவறுகளுக்கு உட்படாதிருந்தால், கடந்த 25 ஆண்டுகளும் ஓடி பல்லாயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் பரிமாறி யிருக்கும்! அத்துடன் உயிரிழந்த மாந்தரும், வீடிழந்த மக்களும், நோயுற்ற சேய்களும் பூரிப்போடு நடமாடி இன்றும் வாழ்ந்து வந்திருப்பார்!


     

     

    பாரதத்தின் பாதுகாப்பான அணுமின்சக்தி நிலையங்கள்

    இந்தியாவில் மூன்று தரப்பட்ட அணுமின் உலைகள் உள்ளன. 1960 ஆண்டுகளில் நிறுவப்பட்ட முதல் மாடல், கொதிநீர் அணுமின் நிலையம் [Boiling Water Reactor (BWR)] எனப்படுவது. அடுத்து நிறுவப்பட்ட இரண்டாவது மாடல் அழுத்தக் கனநீர் அணுசக்தி நிலையம் [Pressuized Heavy Water Reactor (PHWR)] எனப்படுவது! மூன்றாவது கட்டப்படும் மாடல் அழுத்தநீர் அணுமிசக்தி நிலையம் [Pressurized Light Water Reactor (PWR)] எனப்படுவது. தாராப்பூரில் (மகாராஷ்டிரா) உள்ள இரட்டைக் கொதிநீர் அணுமின்சக்தி நிலையத்தை அமெரிக்காவின் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி முதன்முதலில் நிறுவியது. அடுத்த மாடலான அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங் களின் முதலிரண்டு யூனிட்டுகள் கனடாவின் உதவியால் ராஜஸ்தான் ராவட் பாட்டாவில் கட்டப்பட்டன. பிறகு அவற்றைப் போல பல இரட்டை அணுமின் நிலையங்கள் தமிழ்நாட்டில் கல்பாக்கம், டெல்லிக் கருகில் நரோரா, கர்நாடகாவில் கைகா, குஜராத்தில் கக்ரபார், ராஜஸ்தான் ராவட்பாட்டாவில் மேலும் இரட்டை யூனிட்கள் கட்டப்பட்டன. அவை அனைத்தும் 220 MWe மின்சார ஆற்றல் கொண்டவை.

    பிறகு அதே கனநீர் அணுமின் உலைத் தத்துவத்தி லியங்கும் ஆற்றல் மிக்க 540 MWe இரட்டை யூனிட்டுகள் தாராபூரில் புதிதாகச் சமீபத்தில் நிறுவப்பட்டுச் சிறப்பாக இயங்கி வருகின்றன. புதிதாக ராஜஸ்தான் ராவட் பாட்டாவில் அடுத்து இரட்டை யூனிட்டுகளும், கர்நாடகா கைகாவில் மேலும் இரட்டை யூனிட்டுகளும் கட்டப்பட்டு வருகின்றன. பாரத நாட்டின் அணுவியற் துறையகம் 220 MWe, 540 MWe இரட்டைக் கனநீர் அணுசக்தி நிலையங்களை நிறுவி வெற்றிகரமாக இயக்கிவரும் சமயத்தில் தற்போது ரஷ்ய டிசைன் PWR மாடலான இரட்டை அணுமின் நிலையம்: VVER-1000 தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் உள்ள கூடங்குளத்தில் நிறுவக மாகி இயங்கப் போகிறது. கூடங்குளத்தில் நிறுவகமாகி வரும் முற்போக்கான ரஷ்ய அணுமின்னுலை: VVER-1000, உலக மனைத்தும் இகழும் பிற்போக்கான செர்நோபில் அணுமின்னுலையைப் போன்றதில்லை!

     

     

     

    தாராப்பூர் கொதிநீர் அணுமின்னுலை, செர்நோபில் அணுமின்னுலை வேறுபாடுகள்

    தாராப்பூர் கொதிநீர் அணுமின்னுலை 1960 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி டிசைன் செய்த முதற்பிறப்பு மாடல் வகுப்பைச் [First Generation BWR Model] சேர்ந்தது. அதன் அணு உலை அழுத்தக்கலம் [Reactor Pressure Vessel] உருக்கு உலோகத்தாலானது. எரிக்கோல்கள் சிறிது செறிவான யுரேனியம் டையாக்ஸைடு வில்லைகளைப் [2%-3% Enriched Uranium Dioxide Pellets] பெற்றவை. உலைக்கலம் மற்றும் அதைச் சார்ந்த முக்கிய வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் யாவும், ஓர் மூடிய கோள அரணுக்குள் [Dry Well Containment] அமைக்கப் பட்டுள்ளன. நியூட்ரான் மிதவாக்கியாக சாதா நீரும், வெப்பக் கடத்தியாக அதே சாதா நீரும் பயன்படுகின்றன. நீராவி அணு உலைக் கொதிகலத்திலே நேரடியாக உற்பத்தியாகிப் பிறகு டர்பைன் ஜெனனியை ஓட்ட அனுப்பப் படுகிறது. நியூட்ரான் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைக்கவும், அணு உலையை நிறுத்தவும் போரான் கார்பைடு விழுங்கிகள் பயன்படுகின்றன. தாராப்பூர் கொதிநீர் அணு உலை செர்நோபில் போன்று நேரடியாகக் கொதி கலத்தில் நீராவி உண்டாக்கும் மாடல். மேலும் செர்நோபில் அணு உலையில் எரிக்கோலாகப் பயன்படுவதும் 2%-3% செறிவு யுரேனியம் டையாக்ஸைடு வில்லைகளைக் கொண்டவை.

     

     

     

    செர்நோபில் அணு உலைக்கும் தாராப்பூர் அணு உலைக்கும் இருபெரும் முக்கிய டிசைன் வேறுபாடுகள் உள்ளன:

    1.  அணு உலைக்கலம் தாராப்பூரில் ஒரு பிரதமக் கோட்டைக் குமிழிக்குள் [Dry Well-Primary Containment] பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. வெடித்துப் போன செர்நோபில் அணு உலைக்குப் பாதுகாப்பாகப் பிரதமக் கோட்டை அரண் எதுவும் அமைக்கப் படாததால், யுரேனிய எரிக்கோல்களின் கதிரியக்கப் பொழிவுகள் வெளியேறி உலகெங்கும் பரவின!

    2.  தாராப்பூர் கொதிநீர் அணு உலையில், வெப்பக்கடத்தி நீர் வற்றிப் போனால், நியூட்ரான் பெருக்கம் தானாகக் குறைந்து வெப்பசக்தி ஆற்றல் விரைவாகத் தணிகிறது [Negative Void Coefficient]. தாராப்பூர் அணு உலை நியூட்ரான்களை மிதமாக்கி யுரேனியத்தைப் பிளக்கும் மிதிவாக்கித் திரவமும் [Moderator] சாதா நீரே. அதாவது மிதவாக்கி நீரும், வெப்பக் கடத்தி நீரும் ஒரே சாதா நீராக இருப்பதால், அணு உலைக்குள் நீர் மட்டம் குறையும் போது, நியூட்ரான் எண்ணிக்கைத் தானாகக் குன்றி வெப்பசக்தியும் குறைகிறது. ஆனால் செர்நோபில் அணு உலையில் மிதவாக்கியாகப் பயன்படுவது 1700 டன் கரித்திரட்டு எனப்படும் கிராஃபைட் [Graphite] கட்டிகள்.  செர்நோபில் உலைக்கலத்தில் நீர் மட்டம் தணியும் போது கிராஃபைட்டால் மிதமாக்கப்படும் நியூட்ரான் எண்ணிக்கை மிகையாகி, வெப்பசக்தி ஆற்றல் விரைவில் மீறிப் பன்மடங்கு [Positive Void Coefficient] ஏறுகிறது! ஆனால் தாராப்பூர் கொதிநீர் உலை மாடலில் அவ்விதப் பயங்கர வெப்ப எழுச்சி எப்போதும் நேர்வ தில்லை!

     

     

     

    அழுத்தக் கனநீர் அணுமின்னுலை, செர்நோபில் அணுமின்னுலை வேறுபாடுகள்

    கனடாவின் டிசைனான காண்டு மாடல் [CANDU (Canada Deuterium, Uranium)] எனப்படும் கனநீர் அணுமின் நிலையங்கள் மொத்தம் 20 [2010 வரை] பாரத நாட்டில் நிறுவப்பட்டு, அவற்றில் 20 நிலையங்கள் தற்போது அணுசக்தியைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. டியூடிரியம் (Deuterium) எனப்படும் கன ஹைடிரஜன் சாதா ஹைடிரஜனை விடச் சற்று கனமானது. டியூடிரிய [D2 Molecule] அணுக்கருவில் ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும் உள்ளன. சாதா ஹைடிரஜன் [H2 Molecule] அணுக்கருவில் ஒரு புரோட்டான் மட்டுமே உள்ளது. அதாவது ஒரு நீர் மூலக்கூறின் அணுநிறை [Atomic Mass of H2O (2+16)] 18 என்று கணிக்கும் போது கனநீர் மூலக்கூறின் அணுநிறை [Atomic Mass of D2O (4+16)] 20. இயற்கை நீரிலும், கடல் நீரிலும் கனநீர் 6400 இல் 1 பாகமாகக் கலந்துள்ளது. பேரளவு திரண்டுள்ள கனநீர்த் திரவம் மனித உடலுக்கு நச்சுத் திரவமாகக் [Toxic Liquid in Higher Concentration] கருதப்படுகிறது!

     

     

     

    கனநீர் அணுமின் உலைகளின் எரிக்கோல்களில் செறிவாக்கப் படாத இயற்கையான யுரேனிய டையாக்ஸைடு வில்லைகள் [Natural Uranium Dioxide Pellets] பயன்படுகின்றன. நியூட்ரான் மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியகவும் இரண்டு தனித்தனிச் சுற்றுகளில் கனநீர் பயன்படுகிறது. நீராவி அணு உலைக்கலத்தில் உண்டா காது, நீராவி ஜெனனியில் [Steam Generator] உற்பத்தியாகி டர்பைன் ஜெனனியை ஓட்டுகிறது. நியூட்ரான் விழுங்கி யாகவும், அணு உலையை நிறுத்தவும் போரான் கலவைகள் அல்லது காட்மியம் கோல்கள் [Boron Carbide or Cadmium Rods] பயன்படுகின்றன. கனநீர் அணுமின்னுலைகளில் வெப்பக் கடத்தி நீரிழப்பால், வெப்பசக்தி மீறும் குறை யிருப்பதால் [Positive Void Coefficient] கடோலினியக் கலவைத் திரவம் [Gadolinium Compound] நியூட்ரான் விரைவு விழுங்கிகளாக மிதவாக்கிக் கனநீரில் செலுத்தப் படுகின்றது.

     

     

     

    செர்நோபில் அணுமின் நிலையம் போலின்றிப் பாரதத்தின் கனநீர் அணுமின் உலைகள் அனைத்தும் ஒரு பெரும் காங்கிரீட் கோட்டை அரணுக்குள்ளே அமைக்கப் பட்டுள்ளன. அவற்றிலும் பெரும்பான்மையான கனநீர் அணு உலைகள் இரட்டைக் கோட்டை அரணில் அடக்கப் பட்டுள்ளன. அணுமின் நிலையங்களை நெறிகளைப் பின்பற்றிச் செம்மையாக இயக்கவும், கண்காணிக்கவும் பொறியாளரும், பணியாளரும் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறார். அவருக்கு மெய்யான பயிற்சிகள் தருவதற்குப் போலி அணுமின் நிலைய ஆட்சி அரங்கம் [Reactor Operation Similator Panels] பயிற்சிப் பள்ளித் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. செர்நோபில் அணுமின் உலை இயக்குநர் போன்று, அரைகுறை அறிவுடன் நெறிகள் பலவற்றை முறித்த, போதுமான பயிற்சி யில்லாத பணியாளரைப் பாரத அணுமின் நிலையங்களில் காண்பது வெகு அபூர்வம்.

     

     

     

     

    [தொடரும்]

     

    தகவல்:

    1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

    2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

    3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

    4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From: [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org]

    5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

    6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

    7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

    8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

    9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

    10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Report By: Associated Press [Apr 18, 2006]

    11 The Truth About Chernobyl By: Grigori Medvedev [1991]

    12 The Aftermath of Chernobyl By Grigori Medvedev [1993]

    13 How Safe? Three Mile Island, Chernobyl & Beyond By: James Megaw [1987]

    14 Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Assessment of Radiological & Health Impact [2002 Update]

    15 Nuclear Safety & The G7 Summit Reports (1991-2000) -A Contradiction in Terms? [http://archive.greenpeace.org/~comms/nukes/chernob/rep01.html (Nov 5, 2003)]

    16. Safety Benefits of Risk Assessment at the U.S. Nuclear Power Plants [http://www.nei.org/ (March 2002)]

    17. Nuclear Power, From Physics to Politics By: Laurence Pringle [1979]

    18. Chernobyl: The True Scale of Accident, Joint News Release By: WHO/IAEA/UNDP -20 Years Later a UN Report Provides Definite Answers & Ways to Repair Lives [2005] [www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/print.html]

    19. Energy Bill Speeds up Nuclear Proliferation, Stifles Competition from Renewable Energy

    [www.world-wire.com/news]

    20. Chernobyl’s Legacy: Health, Environmental & Socio-Economic Impacts By: Chernobyl Forum [WHO, IAEA, UNDP, FAO, NNEP, UN-OCHA, UNSCEAR, World Bank, Govts of Belarus, Russia, Ukraine (2003-2005)] Second Revised Edition. – Later Enlarged 600 Page Report (Sep 5, 2005).

    21. Chernobyl’s Legacy: Health Impacts By K.S. Parthasarathy, Former AREB Secretary [www.thehindu.com/] Sep 15, 2005.

    22. BBC News, Chernobyl’s Legacy Still Undecided By Mark Kinver BBC Science Reporter [Apr 24, 2006]

    23. Chernobyl Reactor Accident 1986 By: Robert Johnson [May 11, 2005]

    24. The Nuclear History Site/Historical Safety Record Vi Lenin – Chernobyl

    25. Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Accident Sequence, The RBMK Reactor, Events Leading to the Accident, The Graphite Fire [2002 Update]

    26  RBMK Reactors – Nuclear Issues Briefing Paper # 64A [Feb 2002]

    27.  http://www.theatlantic.com/infocus/2011/03/the-chernobyl-disaster-25-years-ago/100033/  (Mar 23, 2011)

    28. Development of Improved Safety with the Russian VVER-1000 Reactor Plant [Kudungalam Model] Following Three Mile Island & Chernobyl Reactor Accidents By: Valery P. Novak, Alexander K. Podshibyakin & Mikhail P. Rogov.

     

    ******************

    jayabarat@tnt21.com [November 28, 2012] (R-1)

     

    Share
  • போதுமடா சாமி

     

    விசாலம்

    ‘அம்மா  அம்மா  இத பாரு என் பிரண்டு ஜோதி    நியூயார்க்  டைம்ஸ்ல  கவர் பேஜ்ல வந்திருக்கா ..எவ்வளவு  அடக்கமாக நிக்கிறா பாரேன்” என்றபடி  அனு  தன் அம்மா  ஜானகியிடம் புத்தகத்தைக்கொடுத்தாள். அதை வாங்கியபடியே  ஜானகி “இவள் போட்டோ இங்க ஏன் வந்திருக்கு “?  என்று கேட்க

    “அதுவா  அவள் கேலக்ஸியில்  எதோ பல புது கண்டுப்பிடிப்பு  செய்து  ஸீனியர் ஸைன்டிஸ்ட் ஆகி புகழ் உச்சிக்குப்போயிட்டா . கூடிய சீக்கிரம்  நோபல் பிரைஸுக்கும் அவள் பெயரைத் தேர்ந்த்டுக்கலாம் அம்மா,”

    “அப்படியா  ….ரொம்ப  சந்தோஷமா இருக்கே  தில்லியிலேயே அவ  காலேஜ்ல அவதான் முதல் இடம்ன்னு நீ சொல்லியிருக்கே “

    “ஆமாம்மா  இங்க அமெரிக்காவிலே  எல்லா மேகசின்னிலும்   டிவியிலும்  இவள பத்தி   வந்துடுத்து .ஒரே புகழாரம் தான்  ஒரு தமிழ்நாட்டுப்பெண் இந்தியாவுக்கு   அதுவும் தமிழ் நாட்டுக்கு  எத்தனைப்பெருமை வாங்கித்தந்திருக்கா  பார்த்தயா ?”

    “ஆமாம் அனு  ..ஆனா நான்  இங்க  வந்து ஒரு மாசம் தானே ஆச்சு .இதுக்கு முன்னாடி சென்னைல ஒரு பத்திரிக்கைலேயும் நான் இவள  பத்தி படிக்கவே  இல்லையே .நான் எல்லா முக்கிய பத்திரிக்கையும் வாங்கறேனே “

    ஆமா     நீயே ஒரு எழுத்தாளர். ஏம்மா நீ இவள  பத்தி எழுதேம்மா..தமிழ் நாட்டுக்கு பெருமை தானே “

    “நான் நினைச்சேன்   நீ சொல்லிட்ட  ..இன்னும் இரண்டு மாசம் கழிச்சு சென்னைப்போய்  நான் செய்யற  முதல் வேலை இதான்  “

    அனு தன் அம்மாவின் முதுகை செல்லமாகத்தட்டிவிட்டு  மொபைலை காதில் வைத்தபடி தன் அறை   சென்றாள்.

    ஜானகி நியூஜெர்ஸிக்கு வந்து ஒரு மாதம்  தான் ஆகிறது ஆனாலும் சென்னையில் மனம் ஈடுபட்டதுப்போல் இங்கு என்னவோ
    ஈடபடவில்லை  .எல்லா இந்தியப்பொருளும் இங்கு கிடைக்கிறது  வசதியான வாழ்க்கை  ஒரு பிரச்சனையும் வந்ததில்லை . பெண்ணும் மாப்பிள்ளையும் அன்பைப்பொழிகிறார்கள்  ஆனாலும் எதோ ஒரு வெறுமை .அது என்னவென்று சொல்லமுடியவில்லை . இந்திய கலாச்சாரத்திற்கு ஒவ்வாத சூழ்நிலையா ? ஊஹூம்   இருக்கமுடியாது ஏனென்றால் தற்போது சென்னை   அமெரிக்காவையும்
    தூக்கிச்சாப்பிட்டு விடுவது போல் ஒரு மாற்றம் .அப்படி ஒரு ஜெனரேஷன் கேப் {gap} …பின் என்ன!  ஹோம் ஈஸ் ஹோம்  எ ஸ்வீட்
    ஹோம்  இல்லையா ? ஆறுமாதம் இருக்க வந்தவள் இரண்டு மாதத்திற்குள்ளேயே  சென்னைக்கு
    மூட்டைக்கட்டிவிட்டாள்

    சென்னை வந்ததும் முதல் வேலையாக  வெளிநாட்டில் கொடிக்கட்டிப்பறக்கும் ஜோதியைப்பற்றி எழுதியாகிவிட்டது . இதை தகுந்த பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டும்  ,முதலில் அவள் கண்முன்னால் வந்தது  “ஆனந்த மஞ்சரி ” உடனே

    டெலிபோன் முன்   அமர்ந்தாள் ஜானகி

    “ஹலோ ஹலோ     வணக்கம் ஆனந்த மஞ்சரி  ஆசிரியர்  இருக்காறா?”

    “கொஞ்சம் லைன்ல் இருங்கம்மா  .”என்ற குரல் கேட்டு காதில் ரிசீவரைப்பிடித்தபடி இருக்க  “குறையொன்றுமில்லை மறைமூர்த்திக்கண்ணா” என்ற பாடல் ஓடிக்கொண்டேஇருந்தது,  ஒருவரும் வரவில்லை  .சிறிது நேரம் காத்திருந்து பின் சலிப்புத்தட்டி ரிசீவரை  டங்கென்று கீழே வைத்தாள். இன்னிக்கு அஷ்டமியோ அதான் இப்படி என்றபடி மனம் சமாதானமடைந்தது .
     ,,

    இருநாள் கழித்து  இதே பல்லவி   …. “ஹலோ ஹலோ  வணக்கம்  யார் பேசறீங்க “

    ”   வணக்கம் ஆனந்த மஞ்சரி ஆபீஸ் “

    ” சார்  எனக்கு ஆசிரியருடன் பேசவேண்டும்”

    ” லைன்ல இருங்கம்மா   ”   உடனே அதே பாடல் அதே குரல்      .குறையொன்றுமில்லை ……..

    “அப்பா வெங்கடேசா  … இதாம்ப்பா எனக்கு குறை  ..போன்ல இப்படி பாட்டப்போட்டுட்டு  எங்கேப்பா எல்லாரும் போய்டறா…….

    என்று எண்ணிய எனக்கு வெங்கடேசன் அருள் புரிந்தான்.

    ”  வணக்கம்  நான் ஆசிரியர்  சோமு பேசறேன்   என்னம்மா  வேணும் ?”

    “சார்  நான் ஒரு விக்ஞானியைப்பற்றி   எழுதியிருக்கேன்  யூ எஸ் ஏ ல அவளுக்கு ரொம்ப  பேரு  ……அத உங்க பத்திரிக்கைக்கு
    அனுப்பட்டுமா ? ஈமெயில் ல அனுப்பறேன்  “

    “சரிம்மா  அனுப்பி வையுங்கோ .படிச்சுப்பாத்து பிரசுரிக்கிறோம் ‘

    ” ரொம்ப நன்றி  சார் ”     அவள் சார் என்று முடிப்பதற்குள்  மறுபக்கம் துண்டிக்கப்பட்டது …அத்தனை பிசி போல  ………

    ஒரு வாரம் சென்றது  .அங்கிருந்து பதில் மடல் ஒன்றும் வரவில்லை  .போடவும் மாட்டார்கள் .நாம் தான் பின்னால் அலையணும் .

    திரும்பவும்  ஜானகி  ஆனந்த மஞ்சரி ஆபீஸுடன்  தொடர்ப்பு கொண்டாள் ” ஹலோ  நான்  ஜானகி பேசறேன்  வணக்கம்    நான் அனுப்பிச்ச”  பெண்விக்ஞானி ” வந்து சேர்ந்ததா? ஆசிரியர் பார்த்தாரா ?

    “மேடம்   கொஞ்சம் ஹோல்ட் பண்ணுங்க   அவர் ஸீட்ல வந்துட்டாரான்னு பாத்து சொல்றேன் ”

    ஐந்து நிமிடம் கழிந்தது  ,,பின் அதேகுரல் வந்தது     ” மேடம்   அவர் இன்னும் வரலை   . எப்ப வருவார்ன்னு தெரிலை  நாளைக்கு

    இந்த நேரத்தில போன் பண்னி கேட்டுங்க  ”       டக்    ……..பேச்சு துண்டிக்கப்பட்டது

    ஐயோ இது என்ன ?அனுப்பறதே இத்தனை சிரமமான காரியமாயிருக்கே  எதாவது சிவாரிசு பிடிக்கணுமோ ! என்று   மனம்  குழம்பிப்போனது

    இதேபோல் அனுபவம்   ஒன்றல்ல இரண்டல்ல…..மல்லிகைச்செண்டு  .மஞ்சள்குங்குமம்   .குமுதமலர்   என்ற பல  புகழ்ப்பெற்ற பத்திரிக்கை
    ஆசிரியர்களிடம் பேசி  அவர்களும் அனுப்பச்சொல்லி அது அப்படியே விழலுகிறைத்த் நீர் போல் வீணானது  .எல்லோருக்கும் வாய்ப்பு வர வரத்தானே  ஒரு சுஜாதா அல்லது சிவசங்கரி யாக ஆகமுடியும்   இது ஏன் இவர்களுக்குப்புரியவில்லை

    ஒரு வாரம் சென்றது   ” ஆனந்த மஞ்சரி  வேண்டாம் ராசியில்லை .  ” மங்கை உலகம் ”     பத்திரிக்கையில் நிச்சியம் எடுப்பார்கள்

    அங்கு போடுகிறேன் ” என்று தனக்குத்தானே பேசியபடியே ஜானகி அந்தப்பத்திரிக்கை ஆசிரியரை  அழைத்தாள்.

    இங்கு ரிங்க் டோனில் கோவிந்தா வரவில்லை  ஆனால்  கந்தசஷ்டிக்கவசமாக முருகன் வந்தான் .

    “ஹல்லோ   மங்கை உலகம்  ஆசிரியர்   ஹேமா   ….. வணக்கம்

    “வணக்கம்   “என்றபடி எல்லா இராமயணமும்  சொன்னாள் ஜானகி

    “”ரொம்ப மகிழ்ச்சி  அவசியம் அனுப்புங்கள் போடுகிறோம்   அப்படியே அவளது படமும் அனுப்புங்கள் .மகளிர்தினம் அன்று அட்டையில் அவள் புகைப்படத்தைப்போட்டு  ஜமாய்த்துவிடலாம்  ‘

    “அப்பாடி இன்றுதான்  என் டென்சன் நீங்கியது மிக்க நன்றி  :”

    அடுத்த போன்  அனுவுக்கு …………..

    “டிரிங்க டிரிங்க      ,,,ஹலோ அனுவா      ,,,,,,எப்படி   இருக்கே    நான் எதுக்கு இந்த நேரத்ல போன் செஞ்சேன் தெரிமா  ?  எனக்கு உடனே

    ஜோதியோட போட்டோ ஒண்ணு  ஈமெயில்ல அனுப்பு   “மங்கை உலகத்ல   “அவளப்பத்தி நான் எழுதியதை பிரசுரிக்கறேன்னு சொல்லியிருக்கா  .  அப்பாடி நான் எழுதி ஆறுமாசம் ஆயிடுத்து …..’

    “சரிம்மா  உடனே அனுப்பறேன்  பெஸ்ட் ஆப் லக்  நாளைக்கு ஸ்கைப்ல  வரேன்  “

    “சரி உடம்ப பாத்துக்கோ  பாத்து டிரைவ் பண்ணு  ஒகே  பை பை ‘

    “அப்பா எல்லாம்  ஒருவிதமாய்  முடிந்தது  இந்த மாதம்   ஜோதி அட்டையில் மின்னுவாள்  .தமிழ்நாட்டுப்பெண்ணின் புகழ் எல்லா இடத்திலும்  பரவும் .அப்போ பாயசம் வைச்சுக்கொண்டாடுவேன் ” என்று யோசித்தபடி  ஜானகி படுக்கச்சென்றாள்.

    ஒவ்வொரு நாளாய் எண்ணி    ..கடைசியில் அந்த ஒன்றாம் தேதியும் வந்தது போஸ்டில் தனக்கு இலவச காப்பி ஒன்று கிடைக்குமே
    என்று போஸ்டை எதிர்ப்பார்க்க  ஒன்றும் வரவில்லை  அனுப்ப விட்டுப்போச்சோ என்ற நினைவில் கடையில் மங்கை உலகம்   வாங்கப்போனாள் . புத்தகம் இப்போது அவள் கையில்  …அட்டையில்  அங்கு ஜோதி இல்லை  ஒரு வளரும் சினி  நடிகை
    மாடல் கவர்ச்சி ஆடையுடன் போஸ் கொடுத்தாள் ..

    ஜானகிக்கு ஒரே ஷாக் ..கோபம் வர  அழுகையும் வர   நேரே வீடு வந்தாள் நேரே டெலிபோனை எடுத்தாள்,

    ‘ஹலோ  “

    “ஹலோ   மங்கை உலகம்   நான் மீனா  பேசுகிறேன் “

    ” எங்கே உங்க ஆசியரைக்கூப்பிடுங்க “

    ” சாரி மேடம்    நீங்க தானே ஜானகி மேடம்  ஆசிரியர்  ..உங்களுக்கு ஒரு மெசேஜ்  கொடுக்கச்சொன்னா  ‘ எதோ மேலிடுத்து பிரஷராம்
    அதனாலே  ……..”

    “அதனாலே…..சரி பிரஷர்  யார் கொடுத்தா ?எனக்குத்தான் இப்ப  பிளட் பிரஷர் வந்துடுத்து “

    “இல்ல மேடம்   வந்து  . இந்த வளரும் மாடலைப்பேட்டி எடுத்து போட்டோவும் போடச்சொல்லி  ஒரு பெரிய பிரமுகர்  பெரிய தொகையை கொடுத்துட்டார்  அதனாலே எங்க மேடத்துக்குத் தட்டமுடிலை  சாரி மேடம் :

    டக்கென்று   டெலிபோன் துண்டிக்கப்பட்டது .

    Share
  • புத்தரும் ஆதிசங்கரரும்

     

    விசாலம்

    கிமு ஆறாம் நூற்றாண்டில்  புத்தர் அவதரித்ததும் புத்தமதம் ஸ்தாபனம் ஆனதும் நம் எல்லோருக்கும் தெரியும்.,     பின் ஹிந்து மதத்தில் இருந்த பல கட்டுப்பாடுகளும் .நியமங்கள் ஹோமங்கள் யாகங்கள் .போன்றவைகளாலும் மக்களின் மனம் புத்த ,சமண மதத்தில் நுழைய விரும்பியது .தவிர சம்ஸ்கிருத மொழியில் பூஜை .புனஸ்காரங்கள் எல்லாமே இருந்ததால் புரியாத மொழியிலிருந்து கொஞ்சம் மாற்றம் தேவைப்பட்டது இப்படி  ஹிந்து மதமும் புத்த மதமும் பல வித்தியாசங்கள் கொண்டிருந்தாலும்  முடிவில் அணுக வேண்டிய இடம் ஒன்றாகத்தான் இருந்தது . பகவான் புத்தரின் காலத்திற்குப்பிறகு தோன்றிய  ஆதி சங்கரர்  .பெரிய வேதந்தவாதியாகி ,அத்வைத சித்தாந்தத்தில் கரை கண்டு சம்ஸ்கிருத மொழியில் மிகச்சரளமாகப்பேசி  பாரத தேசத்தையே தன் திருப் பாதங்களினால் வலம் வந்து ஹிந்துமதத்தைத் திரும்பவும் தூக்கி நிறுத்தினார்  நான் புத்தரின் சரித்திரமும்  , .ஸ்ரீஆதிசங்கரரின் பஜகோவிந்தமும் பல விஷயங்களில் ஒத்துப்போவதைக்கண்டேன்

     கௌதம புத்தருக்கும்  ஶ்ரீ ஆதிசங்கரருக்கும் பல  ஒற்றுமைகளை நான்   பார்க்கிறேன் . சித்தார்த்தர் பிறப்பதற்கு முன் அவரது தாயார் மஹாமாயாவுக்கு ஒரு கனவு வந்ததாம் அதில் ஒரு குட்டியானை  அவளையும் குழந்தையையும்  வாழ்த்திவிட்டுச் சென்றதாம் யானை என்றால்  கணபதியின் ஸ்வரூபம் என எடுத்துக்கொள்ளலாம்

    அதேபோல்  பலவருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமல்  சிவகுரு .ஆர்யாம்பாள் தம்பதிகள் சிவபூஜை செய்ய  சிவனும் அவர்களுக்கு தரிசனம் தந்தப்பின்னர் தானே அவர்களுக்கு வந்து பிறப்பதாக அனுக்கிரஹம் செய்தார் ,அதேபோல் சிவனே ஆதிசங்கரராக அவதாரம் செய்தார் .சிறுபிராயத்திலேயே வேதம் உபநிஷத், மஹாபாரதம் ,இராமாயணம் போன்றவைகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுவிட்டு  .தனது ஐந்தாவது வயதிலேயே பூணலும் போட்டுக்கொண்டார் .இவர் தனது தந்தையை மிகச்சிறிய வயதிலேயே இழக்க நேர்ந்தது

    .இதேபோல் சித்தார்த்தருக்கும்  தன் தாயாரை பிறந்த ஒரு வாரத்திலேயே இழக்க நேர்ந்தது சித்தார்த்தர் பிறந்தவுடன்  ஒரு பெரிய  ஜோசியர் இவர் பெரிய சன்யாசியாகவோ அல்லது பெரிய சைன்ய தலைவனாகவோ வருவான் என தெரிவிக்க   அவரது தந்தை தனது மகனுக்கு அரசகுமாரனுக்குத் தேவையான அத்தனை விதப் பயிற்சிகளையும்  கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார் .ஆனால் சித்தார்த்தரின்  மனம் இதில் நாடவில்லை எப்போதும் தனிமையே நாடினார் .சுகபோகங்களை வெறுத்தார் மனைவி குடும்பம் என்பதையும் வெறுத்தார் .இதனால் பயந்துப்போன அரசர் சுத்தோதனர் அவருக்கு திருமனம் செய்வித்தால் மனம மாறலாம் என நினைத்து யசோதராவை மணம் செய்வித்தார் .ஆனாலும் சித்தார்த்தரின்  மனம்  மகிழ்ச்சியடையாமல் ஒரு தேடலநோக்கிப் போய்க்கொண்டிருந்தது    அவர்  பதினாறு வயதில் திருமணம் செய்துகொண்ட போது யசோதராவுக்கும் வயது பதினாறு ..

    சாதரணமாக அந்த வயதில் ஆண்பிள்ளைகள் சிருங்கார ரசத்தில் பல புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவார்கள். ஆனால் சித்தார்த்தரோ முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார் .  திருமணமாகி பதிமூன்று வருடங்கள் கழித்து ராஹுல் பிறந்தான் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது வயது 29. . எப்போதும் சித்தார்த்தர் எதையோ நினைத்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததால் அவரை அந்த  யசோதரா கவரவில்லை .காமத்தை அவர் நாடவில்லை.  இதை  ஹிந்தியில் வடநாட்டுக்கவி   ஸ்ரீமைத்லி சரண்குப்தாஜி  தன்னுடைய  யசோதராவின் காவ்யத்தில்  அந்தப்பெண்மணியின் நிலைமையை மிகவும் ஆழமாகச் சித்தரித்திரிக்கிறார்  பதிமூன்று ஆண்டின் பின் குழந்தைப்பிறந்த அன்றே  அவர் இரவில் வீட்டைவிட்டுச்சென்று விட்டார், எங்கே  பந்த பாசக்கயிறில் சிக்கிக்கொண்டுவிடுவோமா? என்ற பயம் தோன்றிருக்கலாம் .அல்லது    ஜகத்தில்  மதகுருவாக   ஆக  எல்லா கலைகளும் தெரியவேண்டும் என்று மதன் மிஸ்ராவின மனைவி    பாரதி சொன்னாளே அதுபோலவா இது என்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது

    இதை ஆதிசங்கரர் வாழ்க்கையிலும் காணமுடிகிறது, மீமாம்சு தத்வஞானி குமாரிலபட்டரின் சிஷ்யரான மண்டன மிஸ்ராவுடன் ஒரு சமயம் சங்கரருக்கு மோதும் வாய்ப்பு வந்தது அந்தப்பட்டி மன்ற நீதிபதியாக  மிஸ்ராவின் மனைவி பாரதி இருந்தாள். இரண்டு வாரங்கள் தர்க்கம் நடந்தது எங்கே தன் கணவர் தோற்றுவிடுவாரோ என நினைத்து அவள் சங்கரருக்கு ஒரு கேள்வி கேட்டாள்

    “காதலுக்கும் காமத்திற்கும் என்ன  வேறுபாடு ” ?

     அதன் பதிலை மறு நாள் சொல்வதாகக்  கூறிவிட்டுச்சென்றார் .    ஞான திருஷ்டியிலும் விடை விளங்காமல் பாம்பு கடித்து இறந்த மன்னன் உடலில் கூடு விட்டுக்கூடு பாய்ந்து அரசனாகிறார் .பின் அந்த ஒரு நாள் அரண்மணையில் அரசியுடன் இருந்துவிட்டு வருகிறார். மறுநாள் அதனின் விடையை சரியாக   அளித்தார் சங்கரர்  .    போட்டியில் தோற்றவர் துறவரம் மேற்கொண்டு சங்கரர் வழியை பின்பற்றினார்.  இந்த பாரதி சாட்சாத் சரஸ்வதியே என்றும் சிருங்கேரியில் இருக்கும் சாரதாம்பாளும் இவளே என்று ஒரு சிருங்கேரி பக்தர் என்னிடம் கூறினார்

    சங்கரரும் உலகத்தை உய்விக்க வந்த ஒருஜகத் குருவாக ஆவார் என்று ஜோசியம் கூறியது  அதேபோல ஒரு நாள்  அவர் நதியில் குளிக்கபோக ஒரு முதலை அவர் காலை கவ்வி உடும்பு பிடியாகப் பிடித்துக்கொண்டது  இல்லற பந்தங்களை விட்டு சன்யாசியாக மாற  அவர் ஒப்பத்துக்கொண்டால் அந்த முதலை தன் பிடியிலிருந்து விட்டுவிடும்  எனச்சொல்லவும் செய்தது.     .தன் தாயாரை ரொம்பவும் தேற்றிவிட்டு இவரும் சன்யாசி ஆகிவிட்டார்.

    சித்தார்த்தரும் முதலில் ஒரு தொண்டு கிழவர்  ஒருவர் தள்ளாடித்தள்ளாடிபோனதைக்கண்டு  “வாழ்க்கை இதுதானா ? இதிலிருந்து விடுதலை கிடைக்க வழியில்லையா ?”என்று யோசிக்க ஆரம்பித்தார் .அதன் பின் ஒரு சவ ஊர்வலம்,  .ஒரு நோயாளி என்றும் பார்த்ததை நாம் அறிவோம் .

    இதேபோல் ஆதிசங்கரருக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது.   இந்த அனுபவத்தால்தான் நமக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்துள்ளது
    அதுவே மோஹமுத்கரம் .அதாவது மோஹத்தை உடைத்தெறியும் சம்மட்டி  .மோஹமுத்கரத்தின் முதல் பாடல் தான் நம்மில் பலருக்கும் தெரிந்த “பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே  “{இந்தப்பாடலை நினைத்தவுடனேயே என் கண்முன் வருவது  திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்கள் தான் .

    பஜகோவிந்தம்  உருவான இடம் காசி மாநகரம்.   நதிகளிலேயே மிகச்சிறப்பு பெற்ற புனித கங்கை நதி தீரத்தில் தனது புனித பாதங்களை  பதித்தபடி  ஞானப்பழமாக கங்கைப்பிரவாகம் போல் .ஞானப்பிரவாகமாக நடந்து வருகிறார்  ஸ்ரீஆதிசங்கரர்  .தனது  முப்பதிரண்டாவது  வயதிலேயே  ஒரு தத்துவ ஞானியாக அத்வைத்த  தத்துவத்தை  ஸ்தாபித்து  பாரதம் முழுவதும்  தனது திருப்பாதங்களால் புனிதப்படுத்திய அவதார புருஷர்  கங்கைத்தீரத்தில் சிவப்பழமாக நடந்து வருகிறார் ,கூடவே நான்கு சீடர்களும் தொடருகின்றனர் .

    ஜயஜய சங்கரா ஹரஹர சங்கரா என்ற கோஷமும் கிளம்பி  பின்   மெள்ள தென்றலில் மிதந்து கங்கை நதியில்  கலக்கிறது.

    அந்த கங்கை பளிங்குப்போல் சலசலவென ஒட சூரியோதயம் போல் அங்கு சங்கரர் வருகிறார் . அந்த நேரம் ஒரு பண்டித  கிழவர் கையில் கோலுடன் தள்ளாடித்தள்ளாடி வருகிறார் .அவர் கையில் ஒரு சுவடி. அதைப்பார்த்துப்பார்த்து  எதையோ மனப்பாடம் செய்ய அது மனதில் ஏறாமல்  கிழவர் தவிக்கிறார்.அவர் சுவடியில் படித்ததோ  சிலஇலக்கண நியமங்கள்   .இதைப் பார்த்து ஜகத்குரு அவர்  அருகில் செல்கிறார் இன்றோ நாளையோ என்பது போன்ற உடல் ….காலன் எந்தநேரமும் வரலாம் .இந்த நேரத்தில் இலக்கண சூத்திரம், படித்து மண்டையை உடைத்துக் கொள்கிறானே.! ஒரு நிமிடம் யோசனையில் ஆழ்கிறார்.

     .” என்ன உலகம் இது? ஒரு இடம் பொன் மேல் மோகம் .ஒரு இடம் வெறும் சதையும் எலும்பும் ஆன உடலின் மோகம்  ,பெண் மேல் காமம் , மனைவி ,மக்கள் என்ற. பந்தவலையில் விழுந்து  நான் , எனது என்ற அஹங்காரத்துடன் அந்த இறைவனை நினைக்காமல்  காலத்தை வீண் செய்கிறதே!”

    அவரது  எண்ணங்களின்  ஓட்டம்  “பஜகோவிந்தமாகப் பிறக்கிறது

    கோவிந்தனை  பஜிப்பாய்   ,,கோவிந்தனை   பஜிப்பாய்
    ஏ மூடமனமே
    நீ    மாயுங்காலம் அந்தகோவிந்தனன்றி வேறு  யார் ரட்சிப்பார் ‘ என்ற
    பொருளில்   ஆரம்பித்து  மேலே பல மலர்கள் உதிர்ந்து  பூமாலையாகிறது .

    வாழ்க்கை நிலையற்றது ,ஆடி ஒடி பணம் ஈட்டும் நேரம் தான் நம்முடன்  உற்றார் உறவினர்கள், ஜனனம் மரணம்  தொடர்தல் ,

    பிரும்மத்தை அறிய நேரமினமை  .இளமங்கை  சதை பிண்டம் மேல் மோகம் என்று  பல பூக்கள் அந்த மாலையில் தொடுக்கப்பட்டிருக்கிறது

    புத்தரது  எட்டு வழிகளான   நல்ல பார்வை,    நல்லெண்ணம்  இனிய பேச்சு நற்செய்கை    நல்ல வாழ்க்கை நன்முயற்சி ,நல்ல மனசாட்சி நல்ல தியானம் {  right view ,right intention ,rt speech ,rt பல action rt lively hood     rt effort  rt mindfulness  rt  concentration }
    இவைகள்   இந்து மதத்தில் தொன்றுதொட்டு இருந்து வர சங்கரரும் இதை  பல இடங்களில் கூறியிருக்கிறார் .

    பிரும்மம் உணர ஆசையான  மண்ணாசை ,பொன்னாசை ,பெண்ணாசை மூன்றையும் அறவே துறக்கவேண்டும் என்று   இருவருமே சொல்லியிருக்கின்றனர் .இன்பம் துன்பம் இரண்டையுமே சமமாக எடுத்துக்கொண்டால் தான் நிம்மதி பெறமுடியும்  என்றும்  இருவருமே சொல்கின்றனர்

    இருவருமே துறவறத்தை  ஆதரித்து  பிரும்மனைக் காண்கின்றனர்

    இதேபோல்  பல ஒற்றுமைகளை  புத்தர் ,சங்கரர் இருவரிடத்திலும் என்னால் காணமுடிந்தது  .

    ஒம் ஜயஜய சங்கர  ஹரஹரசங்கர   ,,,,,,,புத்தம் சரணம்  கச்சாமி  ….

    படத்திற்கு நன்றி :

    http://pinterest.com/pin/112519690661213331/

     

    Share
  • வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்

    டாக்டர் நா. கணேசன் (naa.ganesan@gmail.com)

    தாலமி குறிப்பிடும் சாலியூர் (மருங்கூர்ப் பட்டினம்):

    காவிரி ஆறு கடலில் புகும் பூம்புகாரைக் காவேரிப் பூம்பட்டினம் என்கிறோம். பட்டினம் என்றால் கடற்கரையில் அமைந்த ஊர். கொங்குநாட்டில் மாளிகையின் புகுமுகம் (Portico) பூமுகம் ஆவதுபோலே, ஆறு கடலில் புகும் பட்டினம் பூம்பட்டினம். வையைப் பூம்பட்டினம் பாண்டிநாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஆனால் அது ராமேசுவரம் அருகே பெரிய ஊராகவோ, துறைமுகமாகவோ இன்றில்லை. வையை கடலில் புகும் பட்டினத்தின் சங்ககாலப் பெயர் மருங்கூர்ப் பட்டினம். மருங்கை என்றும் அழைத்தனர். தமிழரின் கடலாடு வணிகத்தைக் காட்டும் தொல்லியல் சான்றுகள் பல கிடைக்கும் ஊர் மருங்கூர்ப் பட்டினம். ஆனால், இன்று அழகன்குளம் என்று அழைக்கப்படுகிறது. கடல் சற்றே உள்வாங்கிவிட்டது; நதியும் வறண்டுபோய்க் கடலில் கலப்பதில்லை. ஆனால் சங்ககாலத்தில் ஏராளமான நீர்வரத்து வையைப் பூம்பட்டினத்தில் (= மருங்கூர்ப் பட்டினம்) இருந்ததென அறிகிறோம். இயற்கையைப் பேணாவிட்டால் இந்தியாவே வறண்ட பூமி ஆகிவிடும் என்பதற்கு மருங்கையின் வரலாறே சாட்சி.

    ஏராளமான தொல்லியல் சான்றுகள் அழகன்குளத்தில் கிடைப்பதால், வையை ஆறு கடலில் சங்க காலத்தில் சங்கமித்த இடமாக இவ்வூர்ப்பகுதி இருக்கவேண்டும். மருங்கூர்ப் பட்டினத்துக்கு ரோமானியக் கப்பல்கள் முதல் நூற்றாண்டில் வந்ததைத் தமிழ் ஓவியர் ஒருவர் பானை ஓட்டில் வரைந்துள்ளார் [1]. இதனைச் சங்க இலக்கியமும் பாடுவதைப் பார்ப்போம்.

     

    படம் 1: அழகன்குளம் – ரோமானியக் கப்பல் (கி.பி. முதல் நூற்றாண்டு)

    ”பச்சிறாக் கவர்ந்த பசுங்கட்காக்கை

    தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேர்க்கும்,

    மருங்கூர்ப்பட்டினத்து அன்ன,”  – நற்றிணை 258

    “பசும்பூண் வழுதி மருங்கை யன்ன, என்

    அரும் பெறல் ஆய் கவின் தொலைய,

    பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே” – நற்றிணை 358

    “கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்

    விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்,

    இருங்கழிப் படப்பை மருங்கூர்ப்பட்டினத்து,

    எல் உமிழ் ஆவணத்து அன்ன,” – அகம் 227

    காவிரிப் பூம்பட்டினம் எவ்வாறு பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என விளங்கியதோ அதுபோன்றே இந்த வையைப் பூம்பட்டினமும் ஊணூர், மருங்கூர்ப் பட்டினமென இரு பகுதிகளாக விளங்கின. இந்த மருங்கூர்ப் பட்டினம் தோட்டங்களையும், காயல்களையும், செல்வம் கொழிக்கும் கடைத்தெருக்களையும் கொண்டு விளங்கியதை நக்கீரர் பாடியுள்ளார். காவிரிப்பூம்பட்டினத்தைப் போல் ஊணூரும் மதிலையும் அகழியையும் கொண்டு விளங்கியது (அகம் 227). மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘பழங்காலத் தமிழர் வணிகம்’ (பக். 95-96) நூலில் மருங்கை என வழங்கப்பெற்ற மருங்கூர்ப் பட்டினம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஊணூரைச் சூழ்ந்து வயல்கள் இருந்ததை ‘முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும் நெல்லின் ஊணூர்’ என்று மருதன் இளநாகனார் அகம் 220-ல் குறிப்பிடுகிறார். “ஆடியற் பெரு நாவாய் மழை முற்றிய மலை புரையத் துறை முற்றிய துளங்கு இருக்கைத் தெண் கடற் குண்டகழிச் சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ! ” பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நெல்லின் ஊரை வென்றான் என்கிறது மதுரைக்காஞ்சி. மேலும், நச்சினார்க்கினியர் மதுரைக் காஞ்சி குறிப்பிடும் நெல்லின் ஊரின் பெயர் சாலியூர் என்கிறார்.       தாலமி குறிப்பிடும் சாலூர் (Salour) என்பது இந்தச் சாலியூரான ஊணூர் என்று முதலில் அறிவித்த வி. கனகசபையைத் தொடர்ந்து மயிலையார் குறிப்பிடுகிறார் [2].

    மருங்கூர்ப் பட்டினம்தமிழ் எண்கணிதத்தின் கலங்கரை விளக்கு:

    புகாரின் கீர்த்தி பாடும் சங்கத்தமிழ்ப் பட்டினப்பாலைக்குப் பின்னர் சமண சமயஞ் சார்ந்த கோவலன் கதையாகத் தமிழின் முதல் நாவல் பூம்புகார்ப் பட்டினத்தில் தொடங்குகிறது.  முத்தமிழ்த் தேசியக் காப்பியம் படைத்த இளங்கோ அடிகள் காவேரிப் பட்டினத்துக்கு  தன் நாவலால் அழியாப் புகழ் ஈந்தார். கோவலன் குடும்பம் போன்ற வணிகக் குடியினர்க்கு எண்கணிதம் முக்கியம் அல்லவா?

    சிரமண சமயத்தவர் எழுத்து மாத்திரம் இல்லாமல், எண்ணையும் இந்தியர்க்குக் கற்பித்தார்கள். அதனால் தான் வள்ளுவர் ”எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என்றும் ஔவை ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்றும் பகுத்தனர். இன்றும் 4-9 தமிழெண்களின் வடிவங்களில் வடமொழி எண்ணுப்பெயர்களின் முதல் அட்சரங்கள் இருப்பதைக் காண்கிறோம்.  இம் மரபு வடநாட்டுக் குகைக் கல்வெட்டுக்களில் உள்ள எண்களைச் சிரமண சமயத்தவர் மருங்கூர்ப் பட்டினம் போன்ற நகரங்களில் கொணர்ந்து தமிழர்க்குத் தந்ததைத் தொல்லியல் ஆய்வுகள் காட்டி நிற்கின்றன. தமிழரின் எண்கணித வரலாற்றுக்கு முக்கியச் சாட்சியாக வையைப் பூம்பட்டினமான இராமேசுவரம் அருகில் உள்ள அழகன்குளம் (சங்ககால மருங்கை)பானை ஓடு சான்றாக விளங்குகிறது.

     

    படம் 2: எஸ். ராமானுஜன் (பால் க்ரான்லண்ட் வடித்தது, 1984)

    எண்கணிதத் தேற்றத்தில் (Number Theory) உலகத்தில் வியப்பான முடிபுகளை அளித்தவர் ஈரோட்டில் அவதரித்த கணிதமேதை ராமானுஜன். அவர் நினைவாகச் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரையில் மருங்கூர்ப் பட்டினம் (இன்றைய அழகன்குளம்) பானை ஓட்டில் உள்ள பெரிய எண்ணை  விளக்கியுள்ளார் ஐராவதம் மகாதேவன் அவர்கள்:

    http://www.thehindu.com/arts/history-and-culture/article2755518.ece

     

    படம் 3: அழகன்குளம் (மருங்கூர்ப் பட்டினம்) பானை ஓட்டில் 804 எனும் எண்

    (ஒப்பீடு: 128 எண் உள்ள இலங்கை பிராமி (படம் 4) )

    மருங்கூர்ப் பட்டினத்துப் பானை ஓட்டில் உள்ளது 804 எண் ஆகும். ஐராவதம் மகாதேவனார் குறிப்பிட்டது போல இந்த எண் 408 அன்று. மருங்கை ஓட்டில் எண்சின்னங்களில் உள்ள ஹிந்து-அராபிக் எண் 804 எனத் தெரிந்துகொள்ள இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் எண் சின்னங்கள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்று பார்ப்போம். வட இந்தியாவின் பிராமி கல்வெட்டுகள் யாவும், தமிழ்நாட்டின் சங்கத் தமிழ்க் கல்வெட்டுகளும்  இடமிருந்து வலமாக எழுதப்பெற்றவை. இதற்கு மாறுபாடாக, இலங்கையில் உள்ள பல பிராமிக் கல்வெட்டுகள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளன. இது ஏன்? எழுதுவது என்னும் எண்ணம் செமிட்டிக் நாடுகளில் இருந்து வணிகத்தால் வந்தது என்ப. 1901-ல் ராயல் ஆசியாட்டிக் சொசைட்டி ஜர்னலில் விக்கிரமசிங்கே என்னும் அறிஞர் மத்திய கிழக்கு நாடுகளின் செமிட்டிக் மொழி எழுத்துக்கும், பிராமிக்கும் உள்ள பழந்தொடர்பு காரணம் என்று கருதுகிறார் [3]. விக்ரமசிங்கே ’செமிட்டிக் முறையில் எழுத்து வாசகங்கள் இலங்கை பிராமியில் வலமிருந்து இடமாக எழுதத் தொடங்கியதை இந்தியா ஏதோ காரணத்தால் இடமிருந்து வலமாக மாற்றிக் கொண்டாலும் கூட, எண்களை எழுதும்போது ‘செமிட்டிக்’ (Semitic) வலமிருந்து இடமாகத் தான் எழுதப்படுகின்றன. அந்த மிகப் பழைய மரபு இந்திய லிபிகளில் மத்யகிழக்கின் ஒரு தொடர்புக்குச் சான்று’ என்கிறார்: 128 என்ற எண்ணை எழுதும்போது வலக்கோடியில் சிறிய எண்ணான 8, அந்த 8-ன் இடப்புறம் 20 (விம்சதி), 20-ன் இடப்புறம் 100 (ஸதம்) என்று எழுதப்படுகிறது. பிராமி லிபியின் காலத்தில் தசம கணிதமுறை பிறக்கவில்லை என்பதையும் நினைவில் கொண்டால் இவ்வெண்களை வாசிப்பது எளிது.

        

    படம் 4: இலங்கை பிராமியில் 128 எனும் எண். வாமகதி முறையில் வலமிருந்து இடமாக                          

    அஷ்ட-விம்சதி-சதம். (ஒப்பீடு: படம் 3-ல் மருங்கையின் 804).

    சமணர்களின் மணிப்பிரவாள நூல் ஆகிய ஸ்ரீபுராணம் (சென்னைப் பல்கலைக்கழகம்) கல்வியின் தோற்றம் பற்றிய கதையொன்றைத் தருகிறது. ரிஷபநாத தீர்த்தங்கரர் இரு சிறுமியரை மாணவியராக ஏற்று எழுத்தையும், எண்ணையும் கற்பித்தார். அதில் பிராமி என்ற மாணவிக்கு வலக்கையில் எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்ததால் இடமிருந்து வலமாக பிராமி எழுத்துக்கள் வளர்ந்தன. ஆனால், சுந்தரி என்னும் பெண்ணுக்கு இடக்கையில் எண்களைத் தீர்த்தங்கரசாமி கற்பித்தார். எனவேதான் எண்களை விவரிக்கும்போது வலமிருந்து இடமாக வளர்வதை இந்தியாவில் காண்கிறோம். தொல்லியல், இலக்கியம், கல்வெட்டு மூலமாக ஆய்வுலகம் காட்டும் இந்திய எண்களின் வளர்ச்சியைத் தான் ஸ்ரீபுராணக் கதையும் சொல்லிச்செல்கிறது. சமணர்களின் ஸ்ரீபுராணம்-ஆதி பர்வம் தரும் எழுத்து, எண் கல்வியின் தோற்றம்:

    “பகவான் இவ்வாறு சொல்லி அவர்களை ஆசிர்வாத வசனங்களால் வாழ்த்தித் தமது ஹிருதய கமலத்தெழுந்தருளியிருந்த ஸ்ருததேவியினை ஸ்வர்ணபட்டகத்தின் மிசை பூஜாபுரஸ்ஸரம் அதிவசிப்பித்து, ஸ்ரீஅஸ்தமிரண்டுனாலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.

    அங்ஙனம் காட்டி அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், அகராதி ஹகாராந்தமாகிய ஸ்வரம் வியஞ்சனமென்னும் இரண்டு பேதத்தினை உடைத்தாகியதும், அயோகவாகங்கள் இரண்டாகவுடையதுமாகிய அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.

    சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணிதஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடச பரிகர்மங்களையும் உபதேசித்தருளினார். இங்ஙனம் ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. சகல சாஸ்திரங்களும் அக்ஷரங்களின்றி நிகழாவாதலின் பிரஜாபதி முந்துற அக்ஷரங்களை உபதேசித்தருளிப் பின்னும் இருவருக்கும் வியாகரணமும், சந்தோவிஸ்சித்தியும், அலங்காரமுமாகிய ஸ்பத சாஸ்திரங்களையும் உபதேசித்தருளினர். அவ்விருவரும் பிரக்ஞாபலத்தால் (புத்தி விசேஷத்தால்) பகவானால் உபதேசிக்கப்பட்ட சகலவித்தைகளையும் உணர்ந்தனர்.” [4]

    ஆக, சங்ககால மருங்கையின் பானை ஓட்டு எண்ணை வார்த்தைகளால் வர்ணிக்கும்போது ‘நான்கு தலையிட்ட எட்டின் நூறு’ என்பது பாரத எண் கணிதத்தின் வாமகதி மரபு. ஹிந்து-அரபி எண்ணாகப் பார்த்தால்,  மருங்கூர்ப் பட்டினப் பானை ஓட்டின் எண்ணின் மதிப்பு 804 தான், 408 இல்லை.  இதனைப் பரவலாக, பிராமிக் கல்வெட்டுகளில் இந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலும் (படம் 4) ஒப்பிடுதலின் வாயிலாகக் கண்டோம்.

    வலமிருந்து இடமாகப் பேரெண்களை வர்ணித்தல் (வாமகதி முறை):

    ஸ்ரீபுராணத்தில் வலப்பக்கத்தில் இருந்து எண்கள் வளர்ந்தன எனப்படும் கதையை பிராமிக் கல்வெட்டுக்கள், தமிழின் 2000 ஆண்டு இலக்கியங்கள் வழியாகப் பார்க்கலாம். பிராமியில் எண்களை எழுத வாமகதித் தத்துவம், அதாவது வலப்புறம் சிற்றெண்ணில் தொடங்கி பேரெண்களை ஒன்றன் பின் ஒன்றாக இடப்புறமாக எழுதிச் செல்லும் வழிமுறை பயன்படுகிறது. இப் பண்டைய வாமகதி முறையை “அங்காநாம் வாமதோ கதி” என்று சிற்றெண்ணை முதலில் வலப்புறம் எழுதி இடப்புறத்தில் அடுத்தடுத்த பெரிய எண்களை எழுதுதலை வடமொழி கணித சாஸ்திரங்களில் குறிப்பிடுகின்றனர். இந்த வாமகதி முறையைத்தான் ஸ்ரீபுராணத்தில் அழகான கதையாகச் சொல்லியுள்ளனர்.

    புள்ளி உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவங்களின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடும் தொல்காப்பியர் தன் காலத்தில் புழங்கிய பேரெண்களை வாசிக்கும் வாமகதி முறையைப் பல சூத்திரங்களில் தந்துள்ளார்.  உதாரணமாக, தொல்காப்பியம் (புணரியல்) முதல் நூற்பா:

    ”மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்

     இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது

    அறுநான்கு ஈற்றொடு நெறி நின்று இயலும்”

    தொல்காப்பியர் காலத்தில் பூஜ்யம் இல்லை. தசமகணித முறையும் கண்டுபிடிக்கப் படாத காலம். ஆனால், 10, 100, 1000 இவற்றுக்குத் தனிச் சின்னங்கள் இருந்தன. 3 (10) 3 = 33. சிறிய எண் 3ஐ வலப்புறம் அமைத்து (மூன்று தலையிடுதல்), அதற்கு இடமாக 3(10) எழுதுதலைச் சுட்டுகிறார். அதுபோலவே,  2 (10) 2 = 22 என்பதையும் வாமகதி முறையில் தொல்காப்பியர் எழுதிக் காட்டியுள்ளார். தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் நூற்பா ஒன்று பேரெண் 13699-ஐ வாமகதி முறையில் தருகிறது. வாமகதி முறையை அறிந்துகொள்ளாமல் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பிழைபட எண்களைத் தம் உரைகளில் தருகின்றனர். ஆனால் தொல்காப்பிய முதல் உரைகாரர் இளம்பூரண அடிகளும் யாப்பருங்கல விருத்தியிலும் சமணர்கள் வாமகதி முறையைப் பயன்படுத்திக் காப்பியரின் 13699 எண்ணைச் சரியாக விளக்கியிருப்பது அறிந்து இன்புறத்தக்கது. யாப்பருங்கல விருத்தியின் மேற்கோள் வெண்பா (மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ள பதிப்பு) இதுதான்:

               ஆறிரண்டோ டைந்தடியை ஐந்நான் கிருதொடையான்
               மாறி நிலமைம்பத் தொன்றகற்றத் – தேறும்
               ஒருபதின்மூ வாயிரத்தோடொன்றூன மாகி
               வருமெழுநூ றென்னும் வகை.

    சீவக சிந்தாமணி, புறப்பொருள் வெண்பாமாலை, இலக்கணவிளக்கம் போன்ற பிற்கால நூல்களிலும் இந்த வாமகதி முறை உள்ளது. ’ஓரேழ் தலையிட்ட இருபான் மைந்தர் ’ – குசேலர் மைந்தர் 27  பேர் என 19-ஆம் நூற்றாண்டில் கூடக் குசேலோபாக்கியானம் குறிப்பிடுகிறது.  ”ஆறு தலையிட்ட அந்நாலைந்தும்” (= 26, தொல். செய்யுளியல், 310), “நாலைந்தும் மூன்று தலையிட்ட” (=23, தொல். சொல். 210)  – இவை போல வாமகதியில் எழுதும் பானையோடு கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து அழகன்குளம் என்ற கடற்கரைப் பட்டினத்தில் கிடைத்துள்ளது அருமை.  ஐராவதம் மகாதேவன் மருங்கூர்ப்பட்டினம் (அழகன்குளம்) அளித்த சங்ககாலப் பானையோட்டை இந்து நாளிதழில் 29.12.2011-ல் வெளியிட்டுள்ளார். அந்த ஓட்டில் (படம் 3), 804 என்ற எண் தான் எழுதப்பட்டுள்ளது என இலங்கை பிராமிக் கல்வெட்டு எண் மதிப்பை (படம் 4) வைத்துத் தெளிந்தோம்.  தொல்காப்பியம் அதன் பின்னர் எல்லா நூற்றாண்டுக் கல்வெட்டுகள், இலக்கியங்கள் தரும் எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால், மருங்கூர்ப் பட்டினப் பானையோட்டுப் பேரெண்ணை “நான்கு தலையிட்ட எட்டின் நூறு”(=804) என்று வாசிக்கவேண்டும். வலப்புறத்தில் நான்கு எனும் எண்ணை எழுதி அதற்கு இடப்புறமாக 8 (100) எழுதப்பட்டுள்ளது. 100 என்பதன் சின்னமாக ஸ (=ஸதம்) உள்ளது. ஐராவதம் வாமகதி முறையை விளக்கியுள்ளார். ஆனால், எண்ணின் மதிப்பு என்று பார்த்தால் 804 தான், 408 அன்று. இதற்கு ஆதாரம். தொல்காப்பியத்தின் நான்கு எடுத்துக்காட்டுகளும், படம் 4-ம் (விக்கிரமசிங்கே, 1901, JRAS). 1996-ல் ஐராவதம் அவர்கள் அரிகமேடு அகழாய்வில் பெரிய எண்களுடன் கிடைத்த பானை ஓடுகளை வெளியிட்டார்.  அருகமேட்டுப் பானையோட்டில் 855 = = ௮௱ ௫௰ ௫ என்ற எண் உள்ளது. அதை “ஐந்து தலையிட்ட ஐம்பதிற்று எண்ணூறு” என்று வாமகதி முறையில் எழுதி வாசிக்கவேண்டும்.

    வாமகதி முறையின் பிற்கால வளர்ச்சி:

    தென்னிந்தியாவில் கி.பி. 600-ல் இருந்து கி.பி. 1300 வரை செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலும் எண்கள் ஒவ்வொன்றுக்கும் பல பெயர்கள் அளிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,  0=சூன்யம், 1=ஆதி, 2=லோசனம், 3=திரிகுணம், …. இந்த எண்சமானப் பெயர்களை வைத்து ஆண்டுகள் சுலோகங்களாக எழுதப்படுகின்றன. இயற்கைப் பொருள்களின் பெயர்களால் எண்களைக் குறிக்க வைக்கும் இம்முறையை பூதசங்கை (Word-numerals) என அழைத்தனர். வேத-அங்க-அப்தி-இந்து என்றால் 4-9-4-1. தற்கால நடைமுறை ஹிந்து-அரபி எண்ணாக அறிய வேண்டுமெனில் சக 1494-ஆம் ஆண்டு என்று திருப்பிப் படிக்க வேண்டும்.  ஸ்ரீபுராணம் சொல்லும் வழியில் வலமிருந்து இடமாக பெரிய எண்ணை வார்த்தைகளால் வர்ணிக்கும் இம்முறை பாரதநாடு முழுதும் 2000 ஆண்டுகளாக இருந்தது. எண்களுக்குத் தனித்தனி வார்த்தைகள் கொடுக்கும்  இந்தப் பூதசங்கை முறையில் யாப்புடன் பாடல்கள் எழுதுவது கடினம். எனவே, சம்ஸ்க்ருத நெடுங்கணக்கில் ஒவ்வோர் எழுத்துக்கும் ஓர் எண் என்றளிக்கும் கணித முறை தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டில் பிறக்கிறது. இக் கடபயாதி முறையிலே ஓர் எண்ணுக்குக் குறியீடாக பல எழுத்துக்கள் நெடுங்கணக்கில் இருக்கின்றன. எனவே நினைவில் கொள்ளும் வகையில் வாக்கியங்கள் அமைப்பதும், யாப்புடன் ஶுலோகங்கள் பாடுவதும் எளிதாகிவிடுகின்றன. சங்ககாலத் தமிழெண்கள், பூத சங்கை கடபயாதி சங்கை – என்ற இந்த மும்முறைகளிலும் பேரெண்களை வார்த்தைகளால் வர்ணிக்கும் போது  வலமிருந்து இடமாய்ச் சொல்வது பிராமி எழுத்துமுறைக்கும் மத்யகிழக்கின் ’செமிட்டிக்’ எழுத்துக்களுக்கும் உள்ள ஓர் தொடர்பு என்று கருதலாம். இன்றும் அரபியும், இஸ்ரேலில் ஹீப்ரு மொழியும் வலமிருந்து இடமாக எழுதுகிறார்கள் அன்றோ? ஸ்ரீரங்கத்தில் சதாசிவராயர் காலக் கல்வெட்டில் “சேதுவந்த்யம்” என்றுள்ளதற்கு ஸ=7, த=6, வ=4, ய=1. அதாவது சகவருஷம் 1467-ஆம் ஆண்டு. குருவாயூர் உண்ணிகிருஷ்ணன் பேரில் தமிழர் யாத்த பாகவத புராணத்தைச் சுருக்கி எழுதிய மேல்புத்தூர் பட்டதிரி நூல் எழுதி முடித்த நவம்பர் 27, 1587-ஐக் கடபயாதி சங்கையாய் ‘ஆயுராரோக்கிய சௌக்கியம்’ என்கிறார். திருக்கண்டியூரில் கோதைவர்மன் காலக் கல்வெட்டு கலியுக நாள் என்று 1-5-1-1-5-6-4 என கடபயாதிச் சொற்களாய் அளிக்கிறது.  அதாவது, எழுத்திலிருந்து ஹிந்து-அரபி எண்ணாக்கும்போது  கலிதினம் 465,115,1 என்றெடுத்து சக வருஷம் கணிக்க வேண்டும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இந்த வாமகதி முறை பழக்கத்தில் இருந்தது. தொல்காப்பியரும், அவர் பின்வந்தோரும் தமிழிலும் சிறிய எண்ணை முதலில் எழுதி, மேற்கொண்டு பேரெண்களை விரிப்பதை முன்னரே பல உதாரணங்களால் கண்டோம். அதை ஒத்ததே, (i) பூதசங்கை,      (ii) கடபயாதி சங்கை இரண்டிலும் வார்த்தைகளாக வரும் எண்களைத்  திருப்பிப்போட்டு ஹிந்து-அரபி எண்களைக் கண்டறிந்து வாசிக்க வேண்டும். 804 என்ற ஹிந்து-அரபி எண் மதிப்புடன் விளங்கும் அழகன்குளம் பானை ஓட்டுப் பேரெண்ணை “நான்கு தலையிட்ட எட்டின் நூறு” என வலமிருந்து இடமாக அக்கால முறையில் படிக்கலாம்.  தற்காலத்தில் கர்நாடக சங்கீதத்தின் 72 மேளகர்த்தா ராகப் பெயர்களும் கடபயாதி முறையில் அமைந்துள்ளன. ராகப் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்கள் அதற்கான இடத்தைக் காட்டிவிடும். கடபயாதி முறை கணினியியலின் இன்றைய ஹேஷிங் அல்காரிதத்துடன் உறவுடையது, நெடுங்காலமாகத் தமிழிலும், மற்ற இந்திய மாநிலங்களிலும் இருந்த எண்கணிதத்தின் (arithmetic) வாமகதி முறை அழிந்து இப்பொழுது தசம கணித முறை வேரூன்றி விட்டது. பேரெண்ணில் தொடங்கிக் கடைசியில் சிற்றெண்ணை நோக்கி இடமிருந்து வலமாக வாசிக்கும் முறைக்குத் தமிழ்க் கணிதம் பூஜ்யச் சின்னத்துடன் ஆங்கிலேயர் ஆட்சியில் சுமார் 200 ஆண்டு முன்னர் மாறிவிட்டது. கணினியும், இணையமும், அச்சுத் தொழிலும் நவீனமாக இயங்க இந்தியாவின் கணித வளர்ச்சிக்கும் முக்கியப் பங்குண்டு.

    ஆய்வுத்துணை:

    [1] Casson, L., 1992, ‘Ancient Naval Technology and the  Route to India’ in Rome and India: The ancient sea trade, ed. Vimala Begley and R. De Puma, N. Delhi, OUP, pp. 8-11.

    [2] V. Kanakasabai,  1904, “The chief town on this coast was “the far-famed port of Saaliyur, ever crowded with ships, which have crossed the perilous dark ocean, and from which costly articles of merchandise are landed, while flags wave on their mast-tops, and drums resound on the shore” (Madurai-k-kaanji), pg. 23, Tamils 1800 years ago.

    [3] De Zilva Wickremasinghe, Don M.,  1901 The Semitic Origin of the Indian Alphabet, The Journal of the Royal Asiatic Society, p. 301-305.

    [4]  I thank Sri. R. Banukumar, Tamil Jain scholar, for providing the Sripuranam textual material on how the Theerthankarar taught the science of letters and arithmetic to the girls, Brahmi and Sundari respectively.

    Share
  • எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

     

                                               எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?


                                                                          மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்
                                                                       தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



    சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை பற்றி நமக்கு கிடைத்த தகவலும் அத்தகவல் தரப்பட்ட விதமும்தான். அப்படி என்னை கவர்ந்த சில புத்தகங்களில் ‘What I have Lived For (Bertrand Russell)’ என்ற புத்தகமும் ஒன்று. இப்புத்தகத்தை நான் இன்னும் வாங்கவுமில்லை படிக்கவுமில்லை. ஆனால் இது எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களின் பட்டியலில் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் திரு.ஜெயபாரதன் எழுதிய ஒரு கட்டுரைதான். அக்கட்டுரை உங்கள் பார்வைக்கும்.

    – நதியலை [ஆசிரியர்]

    http://nathiyalai.wordpress.com/2006/12/12/what-i-have-lived-for/

    முன்னுரை :

    பிரிட்டீஷ் மேதை பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் [Bertrand Russel (1872-1970)] எழுதிய சுய சரிதையிலிருந்து இக்கட்டுரை எடுக்கப் பட்டது. அவர் ஈடுபட்ட துறைகள் கணிதம், வேதாந்தம், விஞ்ஞானம், மதம், அரசியல், சமூகவியல், கல்வி, வரலாறு, தர்க்கம் ஆகியவை. அவர் போர் எதிர்ப்பாளி. சமூக நியாயக்காப்பாளி. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அணு ஆயுத ஒழிப்புக்கு மக்களைச் சத்தியாகிரகம் செய்யத் தூண்டினார். அணு ஆயுதச் சோதனை, அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பாளி. 1960 ஆண்டுகளில் வியட்நாம் போரில் பல்லாண்டுகள் ஈடுபட்ட அமெரிக்காவை எதிர்த்துப் பேசிவந்தார். 1963 இல் பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் அமைதி நிறுவனத்தை ஏற்படுத்தி உலக சமாதானத்துக்குப் பாடுபட்டார். 1950 இல் இலக்கிய நோபெல் பரிசு ரஸ்ஸலுக்கு அளிக்கப் பட்டது.

    ****************

    எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?


    மூன்று இச்சைகள் என் வாழ்வை ஆட்கொண்டு என்னை வழிநடத்திச் சென்றன: அவை எளியவை. ஆனால் தீவிரமாய்ப் பொங்கி எழுந்தவை. அன்புக்கு ஏங்கும் பிணைப்பு உணர்ச்சி, மெய்யறிவை தேடும் தாக உணர்ச்சி, இடர்ப்படும் மாந்தர் மீது அடங்காத இரக்க உணர்ச்சி. சூறாவளிப் புயல் போன்று, இந்த மூன்றும் என்னை இங்குமங்கும் அலைத்து ஆழ்ந்த மனக்கசப்புத் துயர்க்கடலின் எல்லையைத் தொடும்படி தள்ளி விட்டன!

    காதலை முதலில் தேடிச் சென்றதின் காரணம், மெய்மறந்த இன்பத்தை எனக்கு அது அளித்தது! பேருவகையில் விளைந்த அச்சிறு நேர இன்பத்திற்காக வாழ்வின் மற்றைய காலத்தை எல்லாம் தியாகம் செய்யத் துணிந்தேன். பயங்கரத் தனிமைத் தவிப்பிலிருந்து காதற் பிணைப்பு என்னை விடுவித்தது! நடுங்கும் மனித உணர்ச்சி உலகின் விளிம்பிலிருந்து ஆழங் காண முடியாத, உயிரற்ற பாதாளத்தை நோக்கும் தனிமையிலிருந்து விடுவிப்புக் கிடைத்தது. முடிவாக அதைத் தேடி அடைந்தேன். கருதொருமித்த காதல் இணைப்பில் சித்தர்களும், கவிஞர்களும் மாயச் சிற்றுலகில் சொர்க்கத்தைக் கற்பனித்த காட்சியைக் கண்டேன்! அதைத்தான் தேடினேன்! மனித இனத்திற்கு கிட்டிய பெரும் பேறாகத் தோன்றிய அதனை, இறுதியில் நான் தேடி அடைய முடிந்தது.

    முதல் இச்சைக்குச் சமமான வெறியில் அடுத்து மெய்ஞானத்தையும் தேடிச் சென்றேன். மனிதர் இதயத்தைப் புரிந்து கொள்ள விரும்பினேன். அண்டவெளியில் விண்மீன்கள் ஏன் ஒளிவீசுகின்றன வென்று அறிய விழைந்தேன். எண்களின் ஆட்டம் கணிதத் திணிவுக்கு (Numbers holds sway above the flux) மீறிய தென்னும் பித்தகோரஸின் ஆற்றலைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். எல்லாம் சொற்பந்தான், பெருகிய அளவில் அதைப் பெற்றுக் கொள்ள வில்லை.

    காதற் பிணைப்பு, மெய்யறிவு இரண்டும் பெற்றுக் கொள்ள முடிந்தவை. அவை என்னைச் சொர்க்கத்துக்கு ஏற்றிச் சென்றன. ஆனால் மனித இரக்கம் என்னை மீண்டும் பூமிக்கு இழுத்து வந்தது. மனிதர் படும் இடர்ப்பாடுக் கூக்குரல்களின் எதிரொலிகள் நெஞ்சில் அலைமோதி என்னைத் துடிக்க வைத்தன! பஞ்சத்தில் நோகும் பச்சிளம் குழந்தைகள், கொடுமை வர்க்கத்துக்குப் பலியாகும் வலுவற்ற எளிய மக்கள், புத்திரருக்குப் பாரமாகப் போன வயோதிகப் பெற்றோர், தனிமையில் நோகும் ஏழ்மை உலக நாடுகள், வறுமை, வேதனை ஆகியவை எல்லாம் மானிட வாழ்க்கையை ஏளனம் செய்கின்றன! அந்தச் சீர்கேடுகளை நீக்க எனக்குப் பேராவல் உள்ளது. ஆனால் முடிய வில்லையே என்னால்! மனத்துயரில் அதனால் நானும் தவிக்கிறேன்.

    இதுவே என் வாழ்க்கை. இந்த வாழ்க்கை வாழத் தகுதியானது எனக் கண்டேன். எனக்கொரு வாய்ப்பு இன்னும் கிடைக்குமாயின், அவ்வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சியோடு பங்கெடுக்க விருப்பம் உள்ளது.

     

    ++++++++++++++++++++++

    தகவல்:

    “What I have Lived For” By Bertrand Russell [From His Autobiography]

    S. Jayabarathan  (jayabarat@tnt21.com)  October 2, 2009

    Share
  • சாது மிரண்டால்…

     

    இன்னம்பூரான்

    சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். மக்களின் திரண்ட சக்தி கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்திய ஃபிரெஞ்சுப்புரட்சி இன்றளவும் உலகில் மறக்கப்படவில்லை ~ ‘விடுதலை, நேயம், சமத்துவம்.’ ஒரு தாரகமந்திரம். மக்கள் கொதித்தெழுந்து முசோலினியை தூக்கிலிட்டனர். காந்தி மஹான் அடங்கிக்கிடந்த இந்தியாவை தட்டி எழுப்பி, ஆங்கில சாம்ராஜ்யத்தை ஒடுக்கினார். ரோஸா பார்க்ஸ் அமெரிக்காவில் இனவெறியை ஒழிப்பதற்கு வித்திட்டார். இன்றைய அதிபர் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கன். 

    இன்று எகிப்திலும், பிரேசிலிலும் மக்கள் சக்தியை சித்திர ரூபத்தில் பாருங்கள். 

    எகிப்து: டஹ்ரீர் சதுக்கம்.

    Inline image 2

    ரியோ மக்கள் எழுச்சி.

    எகிப்தில் புரட்சியின் விளைவாக பதவியேற்ற அதிபர் மோர்சி யதேச்சதிகாரம் நாடுகிறார். அரசியல் சாஸனத்தை வரையும் கமிட்டியிலிருந்து லிபரல் சிந்தனையாளர்கள் விலக நேரிட்டது. அதனால் அந்த கமிட்டியின் ஆளுமையை கைப்பற்றியவர்களை வலுவிழக்கும் வகையில் நீதிபதிகள் சுதந்திரமாக இயங்குவதற்கு தடை விதிக்கத்தான் இந்த யதேச்சதிகாரம் நாடுதல். அதை மக்கள் எதிர்க்கிறார்கள்.

    பிரேசிலில், மத்திய அரசு ரியோ மாநாட்டின் எண்ணை வளத்தை மற்ற மாநாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. ரியோ மக்கள் எதிர்க்கிறார்கள். 3 பிலியன் டாலர் சொத்தை இழக்க யார் தான் ஒத்துக்கொள்வார்கள்? இங்கு பிரதிநிதிகளுடன், மாநில மக்களின் போராட்டம்.

    இதற்கு மேல், நுணுக்கமாக ‘சாது மிரண்டதின்’ பின்னணியை நான் அலசவில்லை. அதனால் கருத்துக்கூறவில்லை. நான் சொல்ல வருவது மக்கள் திரண்டு வந்தால், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஓரளவுக்கு மேல் ஈடு கொடுக்க முடியாது என்பதே. அதற்கு காலம் பிடிக்கலாம். விலை அதிகமாக இருக்கலாம். உயிர்ச்சேதம் அதிகரிக்கலாம். ஆனால், வெற்றி, மிரண்ட சாதுவுக்கே. இந்தியாவுக்கு இதில் பாடங்கள் நிறைய இருக்கின்றன. சர்வதேச அமைப்புகள், இராஜ்ய பரிபாலனம், சமூகம், சமுதாயம், சட்டசபை, பஞ்சாயத்து, குழாம், சுற்றம் யாதாக இருப்பினும், அநீதி நிலைத்து நிற்காது. சாது மிரளும். வாகை சூடும்.

    தர்மம் சர.

    இன்னம்பூரான்

    27 11 2012

    சித்திரங்களுக்கு நன்றி:

    http://images.fastcompany.com/upload/tahrirsquare.jpg

    http://www.france24.com/en/files/imagecache/aef_ct_wire_image_lightbox/images/afp/photo_1353968672537-1-0.jpg?1353972506

           
    Share
  • இஸ்ரேல் பயணம்-1

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

    விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன்.  அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும் பொழுதெல்லாம் என் மகள், ‘இஸ்ரேலுக்கா, இப்போதைக்கு நாம் அங்கு போக முடியாது’ என்று வீட்டோ செய்துவிடுவாள்.  அவள் சொல்வது சரிதான் என்று எனக்கும் தோன்றும்.  அதனால் இஸ்ரேல் போகும் ஆசையை அப்போதைக்கு விட்டுவிடுவேன்.

    என் கணவரோடு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்த துணைப் பேராசிரியர்  ஒருவர் யூத இனத்தைச் சேர்ந்தவர்.  இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்.  ஆறு வருடங்கள் சிகாகோவில் வேலை பார்த்துவிட்டு ஒராண்டு  ஆய்விற்காக இஸ்ரேலின் நகரங்களுள் ஒன்றான ஜெருசலேம் நகரில் இருக்கும் ஹீப்ரூ பல்கலைக் கழகத்திற்குச் சென்றார்.  அங்கிருக்கும் போது ஒரு முறை அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு வந்தவர் சிகாகோவிற்கும் வந்திருந்தார்.

    சிகாகோவில் அவரைச் சந்தித்துப் பேசிய போது இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்ற என்னுடைய நெடுநாளைய  ஆசையை சும்மா கேஷுவலாகக் கூறினேன்.  அவர், ‘நீங்கள் இஸ்ரேலுக்குப் போவதற்கு இது நல்ல தருணம்’ என்றார்’  ‘ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?  இப்போது அங்கு அமைதி நிலவுகிறதா?’ என்றேன்.  ‘நான் இப்போது அங்கு இருக்கிறேன்.  அதனால்தான் இது நல்ல சமயம் என்றேன்’ என்றார்.

    அப்போதே என் கணவரிடம் இஸ்ரேல் போவது பற்றிப்  பேச ஆரம்பித்தேன்.  அவருக்கும் என்னுடைய வெகுநாளைய ஆசையை நிறைவேற்றுவதற்கு இது சரியான சமயமாகத் தெரிந்தது.  அடுத்ததாக எப்போது போவது என்று எண்ண ஆரம்பித்தோம்.  நண்பர் ஜூனில் வந்தால் தனக்கும் சற்று ஓய்வு இருக்கும் என்றும் மேலும் அப்போது பல்கலைக் கழகத்தில் என் கணவருக்கு ஒரு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்வதற்குத் தகுந்த நேரம் என்றும் கூறினார்.  வருடா வருடம் ஜூனில் இந்தியாவிற்கு வருவோம்.  இந்த முறை அப்படிச் செல்லும்போது வழியில் இஸ்ரேலில் ஒரு வாரம் கழிக்கலாம் என்று முடிவு செய்தோம்.  தற்செயலாக இன்னொரு அமெரிக்க நணபர் ஒருவர் – இவரும் யூதர் – நாங்கள் போவதாகத் திட்டமிட்ட தினங்களில் அங்கு இருப்பதாகக் கூறியதும் இப்படி எல்லாம் கனிந்து வந்ததில் எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்.  (போன வாரம் நடந்தது போல் காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏவுகணைத் தாக்குதல் அப்போது நடந்திருந்தால் போயிருப்போமா என்பது சந்தேகமே.  நல்ல வேளையாக அப்போது எதுவும் நடக்கவில்லை.)

    பல நூற்றாண்டுகளுக்கு  முன்பே அமெரிக்காவில் குடியேறி அங்கு செட்டிலாகிவிட்ட  அமெரிக்க யூதர்கள் பலர் இஸ்ரேல் என்ற நாடு 1948-இல் உருவாக்கப்பட்ட பிறகு அந்த நாட்டிற்குச் சென்று அங்கு சில நாட்களாவது தங்கி வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  யூதர்களுக்காக உருவாக்கப்பட்ட நாட்டில் யூதர்களாகிய தாங்கள் பங்குகொள்ள வேண்டும் என்று பிரியப்படுகிறார்கள்.  மேலே கூறிய நண்பரும் இந்த வகையைச் சேர்ந்தவர்.

    இஸ்ரேலில் உதவுவதற்கு இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி  கொடுத்த தெம்பில் மளமளவென்று என் மகள் டிக்கெட் வாங்குவது, ஜெருசலேமில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வது என்று எல்லாக் காரியங்களையும் செய்ய ஆரம்பித்தாள்.

    அமெரிக்காவும் இஸ்ரேலும்  நண்பர்கள் ஆதலால் இஸ்ரேலுக்குப்  போவதற்கு அமெரிக்கக் குடிமக்களும் குடியுரிமை பெற்றவர்களும்  விசா எதுவும் இல்லாமல் போகலாம்.  இந்தியர்கள் என்றால் விசா வாங்க வேண்டும்.  அன்கு போவதற்கு ஒரு மாதமாவது இருக்கும் போதுதான் விசா கொடுக்கிறார்கள்.  இஸ்ரேலுக்குப் போய் வந்தவர்களை பல அரபு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை ஆதலால் இஸ்ரேல் விசாவை ஒரு தனித் தாளில் பெற்று இஸ்ரேலுக்குப் போய்வந்த பிறகு அதைப் பாஸ்போர்ட்டிலிருந்து பிரித்து எடுத்துவிடலாம் என்று ஒரு நண்பர் யோசனை கூறினார்.  அதனால் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இஸ்ரேல் தூதரகத்திடம் அந்த வேண்டுகோளைக் கூறுங்கள் என்றார்கள்.  ஆனால் அதை அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை.  பாஸ்போர்ட்டிலேயே குத்திக் கொடுத்துவிடுகிறார்கள்.

    இஸ்ரேலின் தலைநகரமான டெல் அவிவ் ஒரு மாடர்ன் நகரம்.  அங்கு எங்களைப் போன்றோர்களுக்குப் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.  எங்களுடைய விருப்பம் எல்லாம் பழமை வாய்ந்த ஜெருசலேம் நகரையும் அதைச் சுற்றியிருக்கும் மற்ற பழைய நகரங்களையும் பார்க்க வேண்டும் என்பதுதான். ஜெருசலேமில் விமான நிலையம் இல்லையாதலால் டெல் அவிவிற்குச் சென்று அங்கிருந்து சாலை வழியாக ஜெருசலேம் செல்ல வேண்டும்.  நாங்கள் சிகாகோவிலிருந்து கனடா நாட்டிலுள்ள டொரொண்டோ விமான நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து டெல் அவிவிற்குச் செல்லத் திட்டமிட்டோம்.

    சிகாகோவிலிருந்து  டோரண்டோ செல்ல ஒன்றரை மணி  நேரம்தான்.  அதற்குப் பிறகு  டெல் அவிவ் செல்லும் விமானம்  கிளம்ப ஐந்து மணி நேரத்திற்கு மேல் இருந்தது.  இத்தனை மணி நேர இடைவெளி இருந்ததால் டெல் அவிவ் செல்லும் விமானம் கிளம்பும் இடத்திற்கு அப்போது எங்களைச் செல்ல அனுமதிக்கவில்லை.  விமான நிலையத்தில் வேலை பார்த்த பல தமிழர்கள் – டோரண்டோவில் இலங்கையிலிருந்து குடியேறிய பல தமிழர்கள் இருக்கிறார்கள் – நாங்கள் தமிழர்கள் என்று தெரிந்துகொண்டு நன்றாக உதவினர்.

    டோரண்டோ-டெல் அவிவ்  விமானப் பயணம் பன்னிரெண்டு  மணி நேரம் எடுத்தது.  வழியில் மூன்று தடவை உணவு கொடுத்தார்கள்.  நாங்கள்  எப்போதும் விமானப் பயணத்தின்  போது சைவ, ஆசிய உணவையே கொடுக்குமாறு விமானக் கம்பெனியிடம் கேட்பதுண்டு.  இங்கும் அம்மாதிரிக் கேட்டிருந்தும் மூன்று முறையில் இரண்டு முறை பாலஸ்தீன உணவைக் கொடுத்தார்கள்.  பாலஸ்தீனத்திற்குப் போகும் முன்பே எங்களுக்குப் பாலஸ்தீன உணவு கிடைத்தாலும் விமான உணவு பாலஸ்தீனத்தில் கிடைத்த உணவு போல் இல்லை.  எல்லா விமான உணவுகளைப் பொறுத்த வரையிலும் இப்படித்தான்.  நம் இந்திய உணவு இந்திய உணவு போல் இருக்காது.

    இஸ்ரேலுக்குப் போவதாக நண்பர்களிடம் கூறியதுமே  அங்கு மிகவும் கெடுபிடியாக  இருக்கும், விமான நிலையத்தில் உங்களிடம் பல கேள்விகள் கேட்பார்கள் என்று பலர் எச்சரித்திருந்தனர்.  அதிலும் அந்த நாட்டை விட்டு வெளியேறும் போது இன்னும் அதிகக் கேள்விகள் கேட்பார்கள் என்று கூறியிருந்தனர்.  ஆனால் அப்படி ஒன்றும் இல்லை.  விமான நிலைய அனுபவத்தைப் பொறுத்த வரை குறிப்பிடத் தகுத்தாற் போல் எதுவும் நடக்கவில்லை.  எங்களில் யாரும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையென்பதும் மிகக் குறைந்த வயது இளைஞர் இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.  குடிபுகல் பகுதியில் இருந்த ஊழியர்கள் எல்லா நாட்டிலும் போல் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டிருந்தார்கள்.  குடிபுகல் பகுதியில் வேலை பார்க்கும் எல்லா ஊழியர்களுக்கும் எல்லா நாடுகளிலும் மறந்தும் சிரித்துவிடாதீர்கள் என்று பயிற்சியின் போது அறிவுரை கூறியிருப்பார்கள் போலும் என்று நான் நினைத்துக்கொள்வேன்.

    டெல் அவிவ் விமான  நிலையம் டெல் அவிவ் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில்  இருக்கிறது.  ஜெருசலேம்  நகரம் டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.  விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் விமான நிலையத்திற்கு வெளியே நின்ற டாக்சி ஒன்றில் ஜெருசலேம் நோக்கிக் கிளம்பினோம்.  டாக்சி டிரைவர் ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் பேசினார்.  ஜெருசலேமிலும் டாக்சி டிரைவர்கள் ஏமாற்றுவார்கள் என்று நண்பர்கள் எச்சரித்திருந்ததால் விமான நிலையத்திலிருந்து ஜெருசலேமில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் செல்ல சுமாராக எவ்வளவு ஆகும் என்று நண்பர்களிடம் கேட்டு வைத்திருந்தோம். மேலும் விமான நிலையத்திற்கு வெளியே சில ஊர்களுக்குச் செல்வதற்குரிய கட்டண அறிவிப்புப் பலகை இருந்தது.  டாக்சி டிரைவர் கேட்ட தொகை அதை அடுத்து இருந்ததால் அதற்கு ஒத்துக்கொண்டு அவர் காரில் ஏறினோம்.

    மைசூரில் ஆட்டோக்காரர்கள்  பக்கத்து இடத்திற்கு வருவதற்குத்  தயங்குவார்கள்; அல்லது குறைந்த கட்டணமான இருபது ரூபாயை விட அதிகம் கேட்பார்கள்.  ஜெருசலேமில் டாக்சி டிரைவர்களைப் பொறுத்தவரை இதே கதைதான்.  ஜெருசலேம் தெருக்கள் மேடும் பள்ளமுமாக இருந்ததாலும் சில இடங்களில் படிகளோடு இருந்ததாலும் என்னால் நடக்க முடியவில்லை.  போனில் டாக்சியைக் கூப்பிட்டு நாங்கள் தங்கியிருந்த இடத்தைக் குறிப்பிட்டு போக வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டால் வர முடியாது என்று கூறிவிடுவார்கள்.  அதனால் கூடியவரை போகும் இடத்தைக் கூறுவதை முடிந்தால் தவிர்த்துவிடுவோம்.  சில சமயங்களில் எங்களால் முடியாவிட்டால் நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரரிடம் உதவி கேட்டால் அவர் தவறாமல் டாக்சியை வரவழைத்துவிடுவார்.  அவர்கள் மொழியில் அவர் பேசியது ஓரளவிற்கு உதவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

    நாங்கள் ஜெருசலேம்  சென்ற அன்று நல்ல வெயில் அடித்தது.  பகலில் அங்கு ஜூனில் நல்ல வெயில் அடிக்கிறது.  பொழுது சாயும் போது வெப்பம் குறைந்து கொஞ்சம் குளிர ஆரம்பித்துவிடுகிறது.  நாங்கள் விருந்திற்குப் போன இரண்டு நண்பர்கள் வீட்டிலும் இரவு உணவைத் தோட்டத்தில் மேஜை, நாற்காலி போட்டுப் பரிமாறினார்கள்.  வெளியில் உணவருந்துவது இஸ்ரேல் நாட்டவர்களுக்குப் பிடித்தமான விஷயம் போல் தெரிகிறது.

    ஜெருசலேமில் ஓட்டல்களிலும்  தங்கலாம்.  நாங்கள் அபார்ட்மெண்ட்டில்  தங்குவது என்று முடிவு செய்தோம்.  வீட்டின் ஒரு பகுதியை சில  வீட்டுச் சொந்தக்காரர்கள்  சுற்றுலாப் பயணிகளுக்காக வாடகைக்கு விடுகிறார்கள்.  இவற்றில் ஓட்டல்களில் இல்லாத சமைக்கும் வசதி உண்டு.  எங்கள் அபார்ட்மெண்ட்டில் நிறையச் சமையல் சாமான்கள் இருந்தன.  ஒரு மின்சார அடுப்பும் இருந்தது.  சிறிய சமையலறை இருந்தது.  ஒரு குளிர்சாதனப் பெட்டியும் இருந்தது.  பால், ரொட்டி, சீஸ், பழங்கள் என்று வாங்கிவைத்துக்கொண்டு காலை உணவை நாங்களே தயாரித்துக்கொண்டோம். ஒட்டலில் இல்லாத இன்னொரு வசதி துணிகளைத் துவைத்துக் காயப் போட அபார்ட்மெண்ட்டிற்கு வெளியே கொடி இருந்தது.  மூன்று நாட்களுக்கு ஒரு முறை அபார்ட்மெண்டைச் சுத்தம் செய்து கொடுப்பதற்கு ஒரு பெண் வந்தார்
     

    நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர் எங்கள் அபார்ட்மெண்டிற்கு  மேலே உள்ள பகுதியில் குடியிருந்தார்.  அபார்ட்மெண்ட்டிற்குப் போவதற்கு இருநூறு அடிகள் இருக்கும்போதே படிகள் இருந்ததால் டாக்சியால் அதற்கு மேல் போக முடியவில்லை.  அங்கிருந்து மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு அபார்ட்மெண்ட்டிற்கு நடந்தோம்.  அபார்ட்மெண்ட் சொந்தக்காரரைச் சந்தித்துச் சாவியைப் பெற்றுக்கொண்டோம்.  ‘உங்களைப் பார்க்க நண்பர் ஒருவர் ஏற்கனவே வந்திருந்தார்.  இந்தப் பழங்களையும் இனிப்புகளையும் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்’ என்று கூறி அவர் கொடுத்துவிட்டுப் போயிருந்த பொருள்களை எங்களிடம் கொடுத்தார்.

    எங்களோடு எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வந்து எப்படி அதைத் திறப்பது என்று காட்டிவிட்டு, என்ன உதவி வேண்டுமானாலும் அவரிடம் கேட்கலாம் என்றும் எப்போதும் அவராவது அல்லது அவருடைய மனைவியாவது வீட்டில் இருப்பதாகவும் கூறிவிட்டுச் சென்றார்.  எங்கள் அபார்ட்மெண்ட் அவர் அபார்ட்மெண்ட்டிற்குக் கீழேதான் என்றாலும் எங்கள் அபார்ட்மெண்ட் வாசல் கிழக்குப் பார்த்தும் அவருடைய பகுதியின் வாசல் மேற்குப் பார்த்தும் இருந்ததாலும் பல வீடுகளைக் கடந்து சுற்றிக்கொண்டுதான் எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வர வேண்டியிருந்தது.  எங்கள் அபார்ட்மெண்ட் ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருந்தது.  இதை old city என்கிறார்கள்.  இது ஒரு பழைய கோட்டைச் சுவருக்குள் இருக்கிறது.  இதில் பல பகுதிகள் இருக்கின்றன.  இங்குதான் யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று மதத்தினரும் தங்கள் இடம்தான் என்று தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் பல இடங்கள் இருக்கின்றன.  அங்குள்ள ஒரு மசூதியின் கூண்டு எங்கள் அபார்ட்மெண்ட்டிலிருந்தே தெரிந்தது.  எங்களை எங்கள் அபார்ட்மெண்ட்டிற்குக் கூட்டி வந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர் ‘இதோ தெரிகிறதே, இதற்குத்தான் மூன்று மதத்தினரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்’ என்று கூறினார்.  இவர் பெயர் யோசி (Yossi).  இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர்.

    (தொடரும்)

    படத்திற்கு நன்றி :

    http://www.jewishvirtuallibrary.org/jsource/vie/Telaviv.html

     

     

    Share