http://www.metawallpapers.com/lovers-on-the-grass-desktop-wallpaper/
Blog
-
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…103
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
கனிவான வணக்கங்கள்
இங்கிலாந்திலே நடக்கவிருக்கும் ஜரோப்பிய தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஓ , சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்றதும் ஏதோ பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்று எண்ணி விடாதீர்கள்.
சூடு அரசியல்வாதிகள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் தான் படுவேகமாக முக்கியத்துவம் பெற்று வருகிறது.
பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் தேர்தல்கள் அனைவற்றிலும் மக்களின் ஆர்வம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. காரணம் அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியே காரணம்.
அரசியல் என்பது மக்களின் நலத்திற்காக மக்கள் நலன் விரும்பிகளினால் தன்னல நோக்கமின்றி இடம்பெறும் ஒரு நடைமுறை என்பது மாறி அரசியல்வாதிகள் இதன்மூலம் தாங்கள் தமக்கு அனுகூலங்களை பெருக்கிக் கொள்ள பயன்படுத்தும் ஒரு ஆயுதமாக்கிக் கொண்டார்கள் என்பது மக்களின் பொதுவான அபிப்பிராயமாகி விட்டது போலவே தென்படுகிறது..
ஆமாம் சில வருடங்களுக்கு முன்னால் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்ட பராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராளுமன்றச் செலவீனத்தை அரசாங்கத்திடமிருந்து கோரும் வழிமுறைகளில் இருந்த தில்லுமுல்லுகளே மக்களின் இத்தகைய ஒரு அபிப்பிராய வளர்ச்சிக்கு காரணமானது.
இனி இந்த ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தலுக்கு வருவோம். இந்த ஜாரோப்பிய யூனியனும் அதனுடனான ஜக்கிய இராச்சியத்தின் உறவும் தற்போது இங்கிலாந்தில் மிகவும் அதிக அளவில் பேசப்பட்டு வரும் ஒரு விடயமாகும்.
இதற்குக் காரணங்கள் பலவுண்டு அவற்றில் முக்கியமானவை,
ஜரோப்பிய நாடுகள் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடு ஒன்றில் வதிவுரிமை பெற்றவர்கள் எதுவிதக் கட்டுப்பாடுமின்றி மற்றைய ஜரோப்பிய நாடுகளில் வசிக்கலாம் எனும் விதியும் அவ்விதியின் துணையோடு இங்கிலாந்துக்குள் நுழைந்து வேலயற்றோர் பட்டியலில் தம்மை இணைத்துக் கொண்டு அரசாங்க உதவிப்பணத்தைப் பெற்று வாழும் ஜரோப்பிய மக்களின் அதுவும் குறிப்பாக கிழக்கு ஜரோப்பிய நாடுகளின் எண்னிக்கைப் பெருக்கமும்.
இங்கிலாந்து நாட்டுச் சட்ட திட்டங்களின் மீது ஜரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டு விதிகள் இங்கிலாந்தின் இறைமைக்கு விடுக்கப்படும் சவால் என பல மக்களின் மனதில் ஒரு பொது அபிப்பிராயம் ஏற்பட்டிருப்பது.வும்
இவற்றில் நான் முதலாவதாக குறிப்பிட்டிருந்த பிரச்சனையின் அழுத்தமே தற்போது மக்கள் மனங்களில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஜரோப்பிய ஒன்றியத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்ட ரொமேனியா, பல்கேரியா போன்ற முந்தைய ரஷ்ய ஆதிக்கத்திலிருந்த நாடுகள் ஜரோப்பிய யூனியனில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இணைந்ததன் பலனாக இவ்வாண்டு ஜனவரி மாதம் அமுலுக்கு வந்த ஜரோப்பிய சட்டத்தின் பிரகாரம் அந்நாட்டுப் பிரஜைகள் எதுவித கட்டுப்பாடுகள் இன்றி இங்கிலாந்துக்குள் நுழையும் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் விக்டோரியா பேரூந்து நிறுத்தத்தில் பல பேரூந்துகளில் இவ்விரண்டு நாட்டைச் சேர்ந்த பலர் இங்கிலாந்துக்கு வந்த வண்ணம் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டு இருப்பதுவும், பொருளாதாரச் சீர்படுத்தலுக்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் கடுமையான பொருளாதாரக் கொள்கைக் கட்டுப்பாட்டின் விளைவாக மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் வாழ்க்கைப் பிரச்சனைகளும் இம்மேலதிக மக்களின் வருகையால் மேலும் அதிகரிப்பதான எண்ணம் அனைத்து மக்கள் மனங்களையும் ஆட்டிப் படைக்கின்றது.
இதுவே தற்போதைய இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா? அன்றி வெளியேறுவதா? எனும் ஒரு விவாதத்தைப் பல அரசியல் கட்சிகள் மத்தியில் ஆரம்பித்து வைத்துள்ளது.
இங்கிலாந்திலேயே முதல் தடவையாக் இரு கட்சித் தலைவர்களிடையே பகிரங்க விவாதம் இவ்விவகாரத்தில் சமீபத்தில் நடைபெற்றிருக்கிறது,
இதுவரை நடந்த கருத்துக் கணிப்புகளின்படி ஜரோப்பிய ஒன்றியத்திற்கெதிரான வாதத்திற்கே மக்களின் ஆதரவு அதிக அளவில் இருப்பதாகத் தென்படுகிறது.
ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து அங்கம் வகிப்பதன் அவசியத்தை வலியுறுத்துவோர் இவ்வொன்றியத்திலிருந்து வெளியேறுவது பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை மிகப்பெரிய அள்வில் பாதிக்கும் எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள்.
ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதன் மூலம் ஜக்கிய இராச்சியத்தின் ஏற்றுமதி வியாபாரத்தில் நேரடியாகவும், மறைமுகவும் எத்தனையோ ஆயிரம் ஜக்கிய இராச்சிய மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளது என்கிறார்கள்.
தற்போதைய பிரதமர் தமது கட்சி பெரும்பான்மை பலத்துடன் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆட்சி அமைக்குமானல் 2017ம் ஆண்டு ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்தின் உள் இருக்க வேண்டுமா இல்லையா என்று பொது மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவேன் என்று உறுதியளித்திருக்கிறார்.
இருப்பினும் தனது கருத்தாக தான் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை விரும்பவில்லை என்றும் தற்போது இருக்கும் உடன்படிக்கைய மாற்றியமைத்து ஜரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்பையும் விதிகளையும் மீள்பரிசோதனை செய்வதே தனது நோக்கம் என்றும் டேவிட் கமரன் அவர்கள் கூறுகிறார்.
எதிர்க்கட்சித் தலைவரும் ஏறக்குறைய இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளார். அவரது கொள்கையின் படி தமது கட்சி ஜரோப்பிய ஒன்றியத்தில் சில நடைமுறை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதோடு இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் சட்டங்கள் ஏதாவது ஜரோப்பிய ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனும் பட்சத்தில் அதை ஒரு பொது கருத்து வாகெடுப்பின் முடிவின்படியே அமுல் படுத்தாலாம் எனும் சட்டத்தைக் கொண்டு வருவது என்கிறார்.
கூட்டரசாங்கத்தின் மற்றைய பங்காளிக் கட்சியான லிபரல் கட்சியோ முழுவதுமாக தன்னை ஜரோப்பிய ஒன்றியத்துள் புதைத்துக் கொண்டுள்ளது. எனலாம்.
ஆனால் இன்றைய மக்களின் மனவோட்டத்தைப் பிரதிபலிப்பவராக கோலோச்சும் தலைவர் ” ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி” இன் தலைவர் நைஜல் வெராக் என்பரே !
இவரோ இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே வருவது ஒன்றுதான் இங்கிலாந்தின் மீட்சிக்கு வழி என்கிறார்.
புதிதாக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்துக்குள் நுழையும் உரிமை அவர்களுக்கு இருக்கும் வரை இங்கிலாந்தின் வெளிநாட்டுக்காரரின் குடியேற்றக் கட்டுப்பாட்டை அமுலாக்க முடியாது என்கிறார்.
அதுமட்டுமல்ல அவரது மற்றுமொரு வாதம் சிந்திக்க வைக்கிறது.
ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருவோர் எத்துறையிலும் திறமை மிக்கவர்களாக இருக்க வேண்டியதில்லை ஆனால் ஜரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி வெளிநாட்டவரின் வருகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயுள்ள அதாவது கிழக்காசிய நாடுகளில் உள்ள திறமை மிக்கவர்கள் இந்நாட்டிற்கு வருவதன் மூலம் இந்நாடு வளமிக்கதாக முடியும் என்கிறார்.
இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள படித்த , திறமை மிக்கவர்களை உள்ளே அனுமதிக்காமல், ஜரோப்பாவில் உள்ள கல்வியறிவில்லாதவர்களை வரவிடுவதில் என்ன இலாபம் என்கிறார்.
ஆனால் இவரது கட்சி ஏனைய விடயங்களில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது பலருக்கு புரியாமல் இருப்பதே இவருக்கும் இவரது கட்சிக்கும் உள்ள ஒரு பின்னடைவு.
அத்தோடு வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு வருவோரைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் இவரது ஆக்ரோஷமான் வாதம் இவரது கட்சிக்குள் பல இனத்துவேஷிகளை உள்ளடங்கியுள்ளார்கள் போலவும் தெரிகிறது.
எது எப்படி இருப்பினும் இன்றைய இங்கிலாந்து ஒரு புதுச் சந்திப்பில் நிற்கிறது இதன் பயணம் எந்தத் திசையை எடுக்கப் போகிறது என்பதே எம்முன்னே தொங்கும் கேள்விக்குறி !
இதற்கான விடை காலதேவனின் கரங்களிலோ ?
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
-
வாழ்க்கை நலம் – 55
குன்றக்குடி அடிகள்
55. நாள் எனும் வாள்!
ஒன்றின் தொகுதி தரும் உணர்வினை, படிப்பினைப் பகுதி தருவதில்லை. பகுதிகள் அற்பமாகக் கருதப் பெறுவது இயல்பாக இருக்கிறது. பல பகுதிகள் தொகுதியாகிறது என்ற உண்மையையும், பகுதி தொகுதியிலிருந்து பிரிக்கப்படாதது என்பதையும் நம்மனோர் உணர்வதில்லை. ஏன் தொகுதிகளுக்கு மதிப்புயர்கிறது?
கடற்பரப்பின் தண்ணீர் கணக்கற்ற தண்ணீர்த் திவலைகளின் தொகுப்பேயாகும். அக்கடற் பரப்பிலிருந்து ஒரு திவலை பிரியுமானால் அந்தத் திவலை தன் வடிவத்தை – தன்னை இழந்து விடுகிறது. அதுபோலத்தான் பகுதிகளுக்கு மதிப்பீடும் மிக மிகக்க குறைவு! ஆயுளும் அற்பமே!
மானுடத்தின் விலை மதிக்க முடியாத தொகுதி வாழ்க்கை. வாழ்க்கை காலத்தினால் ஆயது. வாழ்க்கையென்பது நூறாண்டாகவும் அமையலாம். கூடுதல் குறைவாகவும் அமையலாம். வயது என்பதும் நம் மீது திணிக்கப்படுகிறது. நாம் விரும்பினாலும் சரி, விரும்பாது போனாலும் சரி வயதுகள் வருதலும் வளர்தலும் தவிர்க்க இயலாதது. ஆனால், வாழ்க்கை என்ற தொகுதிக்குரிய விபத்தாகிய மரணம் வரும்போது எல்லாரும் பயப்படுகின்றனர்; அழுகின்றனர்; புலம்புகின்றனர். சாவிலிருந்து தப்பிக்க முயல்கின்றனர்.
ஆனால், இந்த வாழ்க்கை என்ற தொகுதியின் பகுதியாகிய ஒரு வினாடி கடந்து செல்லும் போது யாரும் துணுக்குறுவதில்லை. கவலைப்படுவதில்லை. ஏன்? சாவு என்பது ஒருநாளில் வருவதில்லை. நாள்தோறும் சாவு வருகிறது. நொடி தோறும் சாவு வருகிறது. சாவை நோக்கி மெல்ல மெல்ல நகர்கின்றோம்.
ஆனால், இந்த உணர்வு சாகின்றவர்களுக்கும் வருவதில்லை. சுற்றிலும் இருப்போருக்கும் வருவதில்லை. ஒரு மரம் வாளால் அறுக்கப்படுகிறது. நூல் நூலாகத்தான் அறுக்கப்படுகிறது. அதுபோலத்தான் வாழ்நாளும்! இன்று, நாளை என்று நாள்கள் ஓடுகின்றன. நொடிதோறும் வாழும் பொழுது வாழ்நாள் சுருங்குகிறது. ஆக மொத்தத்தில் சாவு வந்துவிடுகிறது.
ஆனால், வாழ்க்கைப் பயணத்தில் நொடிப் பொழுதுகள் எல்லாம் வாழ்க்கைக்குரியவை. ஒவ்வொரு நொடியும் வாழ்வே! ஒவ்வொரு நொடியிலும் சாகின்றோம் என்று உணர்ந்தால் வாழ்நாள் வீணாகாது. வாழ்நாள் முழுமையும் பயன்படுத்தலாம். புகழ்பட வாழலாம். ஆனால் உளவியல் நொடிதோறும் சாகும் சாவிற்குக் கவலைப்படுவதில்லை. இஃது ஒரு வினோதமான உளப்போக்கு!
“நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்” (திருக்குறள் – 334)
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்மின்பதிப்பாக்க உதவி: தேமொழி
-
சீதாயணம் நாடகப் படக்கதை – 28
[சென்ற வாரத் தொடர்ச்சி]
சீதாயணம் படக்கதை -28
நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா
வடிவமைப்பு : வையவன்
ஓவியம் : ஓவித்தமிழ்தகவல் :
1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]
2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and
Picture Credit to Kishan Lal Verma
3. Mahabharatha By: Rosetta William [2000]
4. The Wonder that was India By: A.L. Basham [1959]
5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]
6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]
7. http://jayabarathan.
wordpress.com/seethayanam/ [ந ெஞ்சின் அலைகள்] 8. http://www.vallamai.com/?p=
21424 [வல்லமை வலைப் பக்கம்] **************
S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]
http://jayabarathan.wordpress.
com/ -
திருமால் திருப்புகழ் (51)
கிரேசி மோகன்
‘’நாதவிந்து கலாதீ நமோ நம’’ சந்தத்தில்….———————————————————————————————–
“ஏழு கொண்டல வாடா நமோ நம
ஏளும் நஞ்சணை சேடா நமோ நம
ஏறும் அன்பர்கள் தோழா நமோ நம -குருபீஷ்மர்
ஆயி ரம்புகழ் நாமா நமோ நம
தேச மெங்கிலும் ஆழ்வார் கள்பாடிய
ஆயி ரம்தொழு மாலே நமோ நம -கலிலேறிவாழும் பண்டரி நாதா நமோ நம
ஏழை சங்கட தீர்வே நமோ நம
ஏழ்சு ரங்களின் ராகா நமோ -மஹனீயர்
ராயர் கும்பிடு மூலா நமோ நம
வாயு அஞ்சனை சேயார் சிநேகித
ராம சந்திர ராஜா நமோ நம -கலிதோறும்
ஊழில் உண்டுமிழ் சேயே நமோ நம
ஆதி யந்தமி லாதோய் நமோ நம
கேர ளம்குரு வாயூர் துலாபளு -சமனாகி
தீர அன்பர்கள் பாடா னபாடது
ஏறும் அம்பல கோபா லகோகுல
கேளி சம்பவ லீலா நமோ நம -இரணீயன்வீழ கம்பமு லாநா ரகேசரி
மீன மந்தர மாமே ருகூர்மவ
ராக அந்தண மூணா னராமமு -ரளியூதி
பூமி மங்கையின் தாளா தபாரமும்
பாத கம்புரி கீழோர் கள்மேலுற
நேமி சங்குவில் வாளோ டுகோலணி -பெருமாளே”
—————————————————————————————–படங்களுக்கு நன்றி
-
மக்களுக்காக, மக்களின் கேள்வி (10)
பவள சங்கரி
தலையங்கம்
மரியாதைக்குரிய இந்திய தேசத்தின் மக்களே,
பல தன்னலமற்ற தலைவர்களால், குண்டடிபட்டு, தடியடிபட்டு இரத்தம் சிந்தி பல போராட்டங்களுக்குப் பிறகு நமக்குக் கிடைத்ததே இந்த சுதந்திரம். நம்மை நாமே ஆள்வதற்குக் கிடைத்த ஒரு அத்தாட்சி. மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்கள் ஆளும் ஆட்சி. மிகப் பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள் கூட அரசியல் ஆதாயங்களுக்காகவும், அதிகாரத்தின் மேல் உள்ள ஆசையாலும், தாங்கள் இருந்த உயரிய நிலையை மறந்து இன்று தேர்தலில் நின்றுள்ளார்கள். இந்தப் பதவி தரக்கூடிய சுகத்திற்காக ஆங்கிலேயர் போல மக்களைப் பிரித்தாவது தங்கள் வாக்குகளை சேகரித்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முனைகின்றனர். தனி மனித ஒழுக்கம், சேவை மனப்பான்மை, உயரிய இலட்சியங்கள் போன்ற அனைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன. ’வெற்றி வெற்றி’ என்ற ஒன்றுதான் அரசியல்வாதிகளின் தாரக மந்திரங்களாக இருக்கின்றது. அந்த வெற்றியை அறுவடை செய்வது ஒன்றையே தங்கள் இலட்சியமாக வைத்துக்கொண்டு செயல்படுபவர்களும் இருக்கிறார்கள். வாக்குகள் வாங்கப்படுகின்றன.. விற்கப்படுகின்றன. இந்தச் சந்தையில் காந்தி கண்ட ராமராஜ்ஜியம் கிடைக்குமா? சுயராஜ்ஜியம் நிர்ணயிக்கப்படுமா. சிந்தித்து செயல்படுவோம்.. நமக்கானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வல்லமை நம் கைகளில்தான் இருக்கிறது.
நேர்மையானவர்களையேத் தேர்ந்தெடுப்போம்
திறமையானவர்களை அங்கீகரிப்போம்
நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்பவர்களுக்கு ஆதரவளிப்போம்வாக்களிப்பது நமது கடமை
தவறாமல் வாக்களிப்போம்ஜெய்ஹிந்த்
-
திருமால் திருப்புகழ் (50)
கிரேசி மோகன்

தனத்த தனத்தன தனத்த தனத்தன
தனத்த தனத்தன -தனதான….———————————————————————————————————————-
“வனத்தில் குறத்தியை துரத்தும் விருத்தனின்
கருத்த நிறத்தொளிர் -முறைமாம,
வலத்தில் சுடர்ப்பொறி, இடத்தில் உரத்தொலி
எழுப்பு வலச்சுழி -கடலாழி,
வனத்து தளத்தினை பருத்த புயத்தினில்
பரத்தி, இலக்குமி -மணிமார்பில்
இருத்தி, பறப்பன விரட்டி முகட்டினில்
உதித்து, வரத்தினை -உனைநாடும்
மனத்து குணத்தவர் துதிக்க இறைத்திட,
இமைக்கும் கணத்தினில்-வருவோயே
கடித்த பழத்தினை கொடுத்த கிழத்தினை
பரத்தில் இணைத்திடும் -ரகுநாத
சினத்தில் ,இருப்பினை பழித்த அரக்கனை
இடுப்பு இருப்பினில் -இரையாக
கிடத்தி நகத்தினை புதைத்(து)உ திரத்தினை
குடிக்க குதித்திடும் -பெருமாளே”
—————————————————————————————————படத்திற்கு நன்றி
http://images.fineartamerica.com/images-medium-large/lord-venkateswara-sunil-kumar-lakkakula.jpg
-
மக்கள் கேட்கும் கேள்விகள் (9)
பவள சங்கரி
தலையங்கம்
உயர்திரு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் / பிரதம வேட்பாளர் திரு மோதி அவர்களே,
இதுநாள் வரை தங்கள் தேர்தல் அறிக்கை வரவில்லையே என்று காத்திருந்தோம். அறிக்கையுடன் சேர்ந்து குழப்பமும் வந்துள்ளது. நிறம் மாறிவிடுவீர்களோ என்ற அச்சமும் வந்துள்ளது. தெளிவற்ற பொருளாதாரச் சிந்தனையே வெளிப்படுகிறது. உங்களிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது முன்னாள் பிரதமர் மேதகு வாஜ்பாய் அவர்களின் அணுகுமுறையை ஒட்டி உங்கள் ஆட்சி முறை இருக்குமா என்பதுதான். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தலைவர் அவர். பொருளாதாரம் மற்றும் சமூகவியல்களிலும் உங்களுடைய செயல்பாடுகள் அவரையொட்டியதாக அமையுமா? அமைதியான ஆட்சியை தங்களிடமிருந்து எதிர்பார்க்க இயலுமா?
அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும்,
’காந்தியவாதியாக நடப்பேன்’ என்று கூறிக்கொண்டிருக்கிற ஒரு தலைவர் இந்த ஒரு மாதத்தில் ஐந்து முறை தாக்கப்பட்டுள்ளார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? அவருடைய வளர்ச்சிக்குக் கிடைத்த பரிசா? அல்லது அவருடைய தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளபடி, தான் ஊழலை 100 சதவிகிதம் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதற்கான பரிசா?
வாக்களிப்போம்!
ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!
விலை போகாமல் வாக்களிப்போம்!!!
-
இணைய இதழாளர் நடையேடு
முனைவர் அண்ணாகண்ணன்
(annakannan@gmail.com | 9841120975)
தமிழில் பல்லாயிரம் வலைத்தளங்களும் வலைப்பதிவுகளும் தோன்றியுள்ளன. இலட்சக்கணக்கான தமிழ்ப் பக்கங்கள் கிடைக்கின்றன. சமூக ஊடகங்களில் துடிப்பாக இயங்கும் தமிழர்கள், பல இலட்சம் பேர் உள்ளனர். தமிழ்த் தரவுகள் பெருகி வரும் நிலையில், அவற்றில் பிழைகளும் குறைகளும் மலிந்துள்ளன. இந்நிலையில் இணைய இதழாளர்களுக்குச் சில அடிப்படைக் குறிப்புகளை அளித்தல், உதவிகரமாக இருக்கும்.
இணையத்தில் எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் தனித் தனி நடை இருக்கலாம். ஆனால் இங்கு, செய்திகளையும் தரவுகளையும் எவ்வாறு பதியலாம் எனப் பொதுவான குறிப்புகளை அனுபவத்தின் அடிப்படையில் அளித்துள்ளேன். அவரவர் விருப்பத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்ப, இந்த நடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்வோம்.
அச்சிதழில் எழுதுவதற்கும் இணையத்தில் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்.
காலக் குறிப்புகள்
இணையத்தில் காலத்தைக் குறிப்பிடும்போது கூடுதல் கவனம் தேவை. நாளிதழில் ‘இன்று’ எனக் குறிப்பிட்டு எழுதும்போது, அதைப் பெரும்பாலும் அந்த நாளில் மட்டுமே படிக்கிறார்கள். அடுத்த நாள் அது, பழைய ஏடாகி, பொட்டலம் மடிக்கவும் இன்னபிற பயன்பாடுகளுக்கும் சென்றுவிடுகிறது.
ஆனால், இணையத்தின் இயல்பின்படி எந்த ஒரு தரவும் எந்த நேரத்திலும் எந்தக் காலத்திலும் படிக்கப்படலாம். இந்தச் செய்தியை அடுத்த ஆண்டோ, பத்து ஆண்டுகள் கழித்தோ ஒருவர் படிக்கும்போது அது எந்த நாள் என்ற குழப்பம் ஏற்படும். என்னதான் தானாகவே அந்தச் செய்தியுடன் நாள் விவரம் தெரிந்தாலும், கூடுதல் விவரத்திற்காக அந்த நாளை முழுவதுமாகக் குறிப்பிடுங்கள்.
இணையத்தில் சம்பவங்களைக் குறித்து எழுதும்போது, ‘இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின’ என எழுதுவது சரியில்லை. ‘2009 மே 23ஆம் தேதி, பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாயின’ என்பது போல் எழுதுவது நல்லது. ‘இன்று கைது ஆனார்’, ‘நாளை விடுதலை ஆவார்’ என்றெல்லாம் எழுதாமல் நாள் குறிப்பிடுங்கள். ‘நேற்று முன்தினம்’, ‘நாளை மறுநாள்’ என எழுதுவதும் சரியில்லை. துல்லியமாக நாளைக் குறிப்பிட வேண்டும்.
இதே போன்று கடந்த வாரம் என்பதும் மயக்கம் மிகுந்த சொல்லாட்சி. இறந்த காலத்தில் உள்ள எல்லா வாரங்களுமே கடந்த வாரம்தான். வரும் வாரத்தில் என எழுதுவதிலும் இதே சிக்கல் உண்டு. வரப்போகின்ற எல்லா வாரங்களுமே வரும் வாரம்தான். இதனை 2009 அக்டோபர் முதல் வாரத்தில், மூன்றாவது வாரத்தில் என எழுதுவது நல்லது. இது கடந்த மாதத்தில், கடந்த ஆண்டில்… என வரும் எல்லா வாக்கியங்களுக்கும் பொருந்தும்.
இன்னும் கேட்டால் கி.பி. (கிறித்துவிற்குப் பிறகு), தி.பி. (திருவள்ளுவருக்குப் பிறகு) என எந்த ஆண்டு வரிசையினைக் குறிப்பிடுகிறோம் என்றும் குறிப்பிடுவது நல்லது. கிறித்து ஆண்டு முறை, பெருவழக்காக இருப்பதால், 2009 என்று குறிப்பிட்டாலே அது கிறித்து ஆண்டுதான் என நாம் எடுத்துக்கொள்கிறோம். திருவள்ளுவர் ஆண்டினைத்தான் தனியே குறிப்பிட வேண்டி இருக்கிறது. இப்பொழுது கிறித்து ஆண்டினைப் பொது ஆண்டு (CE – Common Era)1 எனக் குறிப்பிடுகிறோம்.
காலத்தினைக் குறிப்பிடுவதில் இன்னும் ஒரு சிக்கலும் உண்டு. உலகம் முழுவதும் பொதுவான கால வரிசைகள் இல்லை. நீங்கள் இந்தியாவில் இருந்து எழுதும் போது, இன்று காலையில் என்று எழுதுவீர்கள். ஆனால், அமெரிக்காவில் அதைப் படிப்பவரும் இன்று காலையில் என்றுதான் படிப்பார். ஆனால், இருவரின் காலைகளும் வெவ்வேறானவை. இதைத் தவிர்க்க, 2009 மே 23ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு என எழுதுதல் வேண்டும். அதே போன்று அமெரிக்காவிலிருந்து எழுதுவோர், அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு என எழுதுவது நல்லது.
இடக் குறிப்புகள்
இடத்தினைக் குறிப்பிடும்போதும் கூடுதல் கவனம் தேவை. ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஊர்ப் பெயர்கள் வரக்கூடும். Quanzhou, Guangzhou என இரண்டு இடங்கள் உள்ளன. Quanzhou2 என்பது சீனாவின் ஃபுஜியான் (Fujian) மாகாணத்தில் உள்ளது. Guangzhou3 என்பது சீனாவின் குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில், ஹாங்காங்கின் வடமேற்காக 120 கி.மீ. தொலைவில் கேண்டன் (Canton) பகுதியில் உள்ளது. குவான்சோ, குவாங்சோ என இவற்றைத் தமிழில் எழுதினால் போதாது. அடைப்புக் குறிக்குள் அந்த ஊரின் பெயரை ஆங்கிலத்திலும் கொடுப்பது நல்லது.
மதுரை – மதுரா, கடலூர் – கூடலூர் போன்றவையும் எழுத்தளவில் நெருங்கிய தொடர்பு கொண்டவை. வெளிநாட்டுப் பெயர்களில் பல, இவ்வித தோற்ற மயக்கங்கள் கொண்டவை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் காட்டூர், கருப்பூர், புதூர்….. போன்ற ஏராளமான ஊர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ளன. இத்தகைய ஊர்களைக் குறிப்பிடும்போது, நமக்குத் தெரிந்த வரையில் துணை விவரங்களையும் அளிக்கலாம். திருவாரூருக்கு அருகில் உள்ள காட்டூரில் என எழுதலாம். நன்றாகத் தெரியுமானால் திருவாரூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள காட்டூரில் என எழுதலாம்.
அடைமொழிகள்
நபர் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது, ஒரே வகையான தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும். நிறைய மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது, ஒவ்வொருவருக்கும் திரு. என அடைமொழிகள் அளிக்க வேண்டியது இல்லை. திருவாளர்கள் என எல்லாப் பெயர்களையும் வரிசையாக அளித்து விடலாம். ஒருவருக்குத் திரு என அடைமொழி அளித்துவிட்டு, இன்னொருவருக்கு அளிக்காமல் விடுவது சரியாய் இருக்காது. மேலும், செல்வி, திருமதி ஆகிய சொற்களை அடுத்துப் புள்ளிகள் வைப்பதைப் பல இடங்களிலும் பார்க்கிறேன். முழுச் சொற்களாக எழுதிய இடங்களில் எல்லாம், புள்ளி வைக்கக் கூடாது. திருவாளர் என்ற முழுச் சொல்லைச் சுருக்குவதால் தான் திருவுக்குப் பக்கத்தில் புள்ளி வைக்கிறோம்.
அவசியம் இல்லாவிடில், திருவாளர், செல்வி, திருமதி ஆகிய அடைமொழிகளைப் பெரும்பாலும் தவிர்க்கலாம். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் ஆனவரா, இல்லையா என்பதைக் காட்டவே இந்தச் செல்வி, திருமதி ஆகியவை பயன்படுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டுப் பெயர்கள் பல, ஆண் பெயரா – பெண் பெயரா எனக் குழப்பும் வகையில் உள்ளன. நமக்கு உறுதியாகத் தெரியுமானால், ‘யாங் என்ற பெண்’ எனக் குறிப்பிடலாம்.
இது போன்றே பட்டப் பெயர்களிலும் கவனமாக இருக்க வேண்டும். கலைஞர் மு.கருணாநிதி எனக் குறிப்பிடுவதாக இருந்தால், புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா எனக் குறிப்பிட வேண்டியிருக்கும். இப்படியாக ஒவ்வொருவருக்கும் உள்ள பட்டப் பெயர்களைக் குறிப்பிடுவது எவ்வளவு பெரிய வேலையாக மாறுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள். நடுநிலையாளர்கள், முதல்வர் மு.கருணாநிதி, எதிர்க் கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதா எனக் குறிப்பிடுவதே நல்லது.
முனைவர் பட்டம் பெற்றவர்களை டாக்டர் என அழைப்பதை விடவும் முனைவர் என்றே அழைக்க வேண்டும். எழுதுகின்ற மூன்றாவது நபருக்கு, அவர் என்ன டாக்டர் என ஒருவேளை தெரியாவிட்டால் டாக்டர் என்று குறிப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தச் சிக்கலை உணர்ந்து, இனி தமிழில் எழுதுகின்ற முனைவர்கள், தங்களை முனைவர் என்ற அடைமொழியுடன் குறிப்பிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதும்போது பின்னொட்டாக, பிஎச்.டி. எனக் குறிப்பிடலாம். தமிழில் அது குறைவாக இருப்பதால், அவரவரே தங்களை அடையாளம் காட்டுவது நல்லது.
பின்னொட்டு என்றதும் ‘அவர்கள்’ நினைவுக்கு வருகிறார்கள். பெயர்களுக்குப் பிறகு ‘அவர்கள்’, ‘அவர்கள்’ என வரிசையாக எழுதுவது தேவையற்றது. பெயரைக் குறிப்பிட்டால் போதுமானது. குடியாட்சியில் அனைவரும் மதிப்பிற்கு உரியவர்களே. ஒருவரை ‘அவர்கள்’ என விளித்து, இதர பெயர்களை அவ்வாறு குறிப்பிடாவிடில் பேதம் மிகும். எனவே, மிகவும் முக்கியம் என்றால் தவிர, அவர்களைப் பயன்படுத்த வேண்டாம். இன்னும் சிலர் பட்டங்கள், திரு, டாக்டர் ஆகிய அனைத்தோடும் கல்வித் தகுதிகளையும் அவர்களையும் பின்னால் இணைத்து அழைத்து, மூச்சு வாங்க வைப்பார்கள். இவை போலித்தனமானவை. இதனைப் படிப்பவர்கள் உடனடியாக உணருவார்கள். எனவே, இத்தகைய வழக்கத்திலும் மாற்றம் வேண்டும்.
பாலினம்
இதே போன்று தலைவர் என்பது பொதுச்சொல். பெண்பாலுக்கு வருகையில் தலைவி என எழுதினால், ஆண்பாலுக்குத் தலைவன் என எழுத வேண்டியிருக்கும். எனவே இரு பாலருக்கும் பொதுவான சொற்களைப் பயன்படுத்துவது நல்லது. ஒரே தொடரில் ஒருவரைத் தோழர் என்றும் இன்னொருவரைத் தோழி எனவும் எழுதுவது சரியில்லை. இதனால்தான் ஆங்கிலத்தில் Chairman என்பதை விடுத்து, Chair Person4 என எழுதுகிறார்கள்.
அலகுகள்
வெவ்வேறு நாடுகளிலிருந்து, வெவ்வேறு துறைகளைச் சார்ந்த தரவுகளைப் பயன்படுத்தும்போது, பல்வேறு கூறுகளை நினைவில் கொள்ள வேண்டும். அந்தக் குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ, அப்படி அந்தத் தரவுகளை அளிக்க வேண்டும். அவர்களிடம் பெருமளவு புழக்கத்தில் உள்ள அலகுகளையே அதற்குப் பயன்படுத்த வேண்டும்.
அமெரிக்க டாலர், யூரோ, பவுண்டு, யென் என வேறு நாட்டு நாணயங்களை இந்திய ரூபாய்க்கு மாற்றி உரைக்க வேண்டும். இப்படியே மைல் என்பதைக் கிலோ மீட்டராகவும் காலன் என்பதை லிட்டராகவும் இது போன்றே இதர அலகுகளையும் மாற்ற வேண்டும். இதற்கு இலவச அலகு மதிப்பு மாற்றிகள், இணையத்தில் உண்டு.
ஒருமையும் மதிப்புப் பன்மையும்
சிறுவர்களை ஒருமையில் அழைப்பதையும் தவிர்க்கலாம். ‘ஏழாம் வகுப்பு மாணவன் குமார், பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்றான்’ என எழுதும் வழக்கம் உள்ளது. ‘மாணவர் குமார், முதல் பரிசு வென்றார்’ என எழுதுவது, உயர்வானது. மிகவும் உரிமையும் நெருக்கமும் உள்ளவரை மட்டும் சில நேரங்களில் ஒருமையில் அழைக்கலாம்.
‘திருடன் பிடிபட்டான்’, ‘விபசாரி பிடிபட்டாள்’ எனப் பாலினம் தெரியுமாறு ஒருமையில் எழுதுவதையும் தவிர்க்கலாம். சமூகத்தின் மனநிலையைக் காட்டுவதால், இது, பெரும் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ‘திருட்டு வழக்கில் ஒருவர் கைது’, ‘பாலியல் வழக்கில் பெண் கைது’ என எழுதுவது நல்லது. இன்னும் சொல்லப் போனால், கைது செய்யப்பெற்றவர் – குற்றம் சாற்றப்பெற்றவர், உண்மையான குற்றவாளியா என உறுதியாக நமக்குத் தெரியாது. அவர் நீதிமன்றத்தில் விடுதலை பெறலாம். கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றாலும் மேல் நீதிமன்றத்தில் விடுதலை பெறலாம். எனவே, அவசரப்பட்டு அவரது தன்மானத்திற்கு ஊறு விளைவிக்குமாறு எழுதுவது கூடாது.
காவல் துறையினர் ஐயத்தின் பேரில்தான் பலரைக் கைது செய்கிறார்கள். சாட்சிகளின் பேரில்தான் வழக்குத் தொடுக்கிறார்கள். எனவே, குற்றம் சாற்றப்பெற்றவரைச் செய்திகளில் குறிப்பிடும்பொழுது மிகுந்த கவனம் தேவை.
பெயர்கள்
பெயர்களைக் குறிப்பிடும்பொழுது, அவரவர் தம் பெயர்களை எவ்வாறு எழுதுகிறார்களோ அவ்வாறே நாமும் எழுதுவது நல்லது. அண்ணன் – தம்பிகளான எஸ்.பி.முத்துராமன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் தம் முதலெழுத்துகளை எவ்வாறு எழுதுகிறார்கள் எனப் பாருங்கள். இதனை நாமும் அவ்வாறே எழுதுவது நல்லது. இங்கு சுப.முத்துராமன், எஸ்.பி.வீரபாண்டியன் என எழுதுவது அவர்களைக் குறிப்பிடாமல் போகலாம். இங்கு இன்னொரு முக்கிய குறிப்பு. S.P. முத்துராமன் என எழுதும் முறையை நாம் ஆதரிக்கக் கூடாது. எழுதுபவர், ஆங்கில எழுத்திலேயே எழுதினாலும் நாம் தமிழில் எஸ்.பி.முத்துராமன் என்றுதான் எழுத வேண்டும். அத்தகைய போக்கினை நாம் முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் கூடியமட்டிலும் இந்த வகையிலாவது முயல வேண்டும்.
ஒரு பகுதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவரை முதன்முதலாகக் குறிப்பிடும்போது, அவரை ஓரளவு முழுமையாக அறிமுகப்படுத்த வேண்டும். எழுதுபவருக்குத் தெரிந்த அனைத்தும் படிப்பவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கக் கூடாது.
யாருக்காக எழுதுகிறோம்?
இன்று வாசகர்கள் பல்வகையினர்; பல்வேறு பின்புலங்களைக் கொண்டோர். எனவே ஒரு செய்தியை எழுதுபோது, மாணவர்கள் / சிறுவர்கள், நகரவாசிகள் / கிராமவாசிகள், பெண்கள், மூத்தோர்… எனப் பல கூறுகளாய் உள்ள வாசகர்களுள் எவரை முன்னிறுத்தி எழுதுகிறோம் என முடிவு செய்வது, ஒருவரின் எழுத்து நடையை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது, அந்தந்தப் பிரிவு மக்களுக்கு ஏற்ற சொற்களைப் பயன்படுத்தவும் எடுத்துக் காட்டுகளைத் தரவும் உதவும்.
இங்கு நாம் ஒரு செய்தியினை எழுதுகையில் நேரம், காலம், இடம், பாலினம், ஒருமை, பன்மை, சிறுவர் – பெரியவர், குற்றம் சாற்றப்பெற்றவர், முன்னொட்டு, பின்னொட்டு எனச் சிலவற்றை எவ்வாறு கையாளுவது எனக் கண்டோம். இவையெல்லாம் செய்திகளுக்கும் செய்திக் கட்டுரைகளுக்கும் மட்டுமே. கதை, கவிதை ஆகிய படைப்பிலக்கியங்களுக்குப் பொருந்தா.
தரவு மூல நம்பகத்தன்மை & இணைப்பேற்றம்
இணையத்தில் எழுதுவோர், ஒரு செய்தியை அல்லது தகவலை மேற்கோள் காட்டும்போது, அதற்கான சான்றினை அளிக்க வேண்டும். அந்தச் செய்தி, எந்தப் பக்கத்தில் / அச்சிதழில் / நூலில் வெளிவந்துள்ளது என்பதைச் சொல்ல வேண்டும். அந்தப் பக்கத்தின் சுட்டியை இணைப்பேற்றமாகவும் (Hyperlink) அளித்தல் வேண்டும். இந்த வசதி, அச்சிதழில் இல்லை; இணையத்தில் மட்டுமே சாத்தியமாக உள்ளது.
அத்துடன் ஒரு தரவு, மூலத் தரவா? இரண்டாம் நிலை / மூன்றாம் நிலைத் தரவா என்பதையும் சொல்ல வேண்டும். மூலத் தரவு எனில், அது எந்த நாளில் / நேரத்தில் எங்கே நடந்தது; அதற்கு வேறு சாட்சிகள் இருக்கிறார்களா? எனச் சொல்வது நல்லது.
கல்வெட்டு, ஓலைச் சுவடி, பட்டயம் போன்றவற்றை மேற்கோள் காட்டுவோர், அந்தக் கல்வெட்டு எங்கே உள்ளது என்பதுடன், அதனைப் படித்துப் பொருள் கூறியவர் யார் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்; ஏனெனில் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு பொருள்களைக் கூறும் வாய்ப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மொழிபெயர்ப்புத் தரவு எனில், மூல ஆசிரியரின் பெயருடன், மொழிபெயர்த்தவரின் பெயரையும் சுட்ட வேண்டும்.
இவை ஒரு தரவின் உண்மைத் தன்மையை உணர்த்தப் பெரிதும் உதவும்.
படங்களும் தொடர்புடைய செய்திகளும்
ஒரு செய்தியை எழுதும்போது, அதற்குப் பொருத்தமான படங்களையும் தொடர்புடைய செய்திகளையும் இணைக்க வேண்டும். இந்தப் படங்கள், நிழற்படங்களாகவும் விழியங்களாகவும் இருக்கலாம். இதே செய்திக்குத் தொடர்புடையவாறு உள்ள முந்தைய செய்திகளின் இணைப்புகளைத் தொகுத்து அளிப்பது, படிப்பவருக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இது, செய்தியை வெளியிடும் தளத்திற்கும் அதிகப் பக்கப் பார்வைகளைப் (Page views) பெற்றுத் தரும்.
சிரிப்புருக்களும் உணர்நிலை அறிவிப்புகளும்
இணையத்திலும் செல்பேசியிலும் ஒருவரின் உணர்வை வெளிப்படுத்த, சிரிப்புருக்கள் (smilies) பயன்படுகின்றன. மகிழ்ச்சியைத் தெரிவிக்க, கேலி செய்ய, இப்படியுமா என வியக்க, இன்னும் பற்பல செயல்களில் ஈடுபடுவதைத் தெரிவிக்க… எனப் பல வகைச் சிரிப்புருக்கள் உண்டு. இவற்றை இடத்துக்கேற்ப பயன்படுத்தினால், மிகச் சுருக்கமான எழுத்துகளில் அல்லது எழுத்தே இல்லாமல் கருத்துகளையும் உணர்வுகளையும் நம் நடவடிக்கைகளையும் பகிர முடியும்.
அத்துடன் ஒருவர் தம் மனநிலையை ஒரே சொல்லால் அறிவிக்கலாம். முகநூலில் இந்த வசதி உள்ளது. எவ்வாறு உணர்கிறீர்கள் எனக் கேட்டு, மகிழ்ச்சியாக, கவலையாக, களைப்பாக, சிறப்பாக, அதிசயமாக, வெறுப்பாக, பயமாக, ஸ்பெஷலாக, செக்ஸியாக… என்றெல்லாம் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளித்துள்ளது. பல சொற்களையும் தமிழாக்கிய முகநூல் குழுவினர், ஸ்பெஷல், செக்ஸி ஆகியவற்றை அப்படியே கொடுத்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ள நிலையில், இது, இணையத்தில் எழுதுபவரின் அப்போதைய மனநிலையை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவுகிறது. இன்னொரு கோணத்தில் சொல்வதானால், எழுதுபவரின் மனநிலையைத் தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைக் குறைக்கிறது.
தலைப்பும் குறிச்சொற்களும்
இணையத் தேடுபொறிகளில் ஒரு செய்தியைத் தேடும்போது, அது, அந்தக் குறிச்சொல் (Keyword) எந்தப் பக்கத்தில், எவ்வாறு அமைந்துள்ளது என்பதைப் பொறுத்து, தேடல் முடிவுகளைத் தருகிறது. முக்கியமாக, அக்குறிச்சொல், தலைப்பில் அமைந்துள்ளதா? செய்தியின் உடற்பகுதியில் அதிக முறைகள் இடம்பெற்றுள்ளதா என்றும் தேடுபொறி ஆராய்கிறது. தேடுபொறி உகப்பாக்கம்5 என்பது (Search Engine Optimization – SEO), மிகப் பெரிய துறையாக வளர்ந்துள்ளது.
எனவே செய்தியை எழுதுபவர், தகுந்த தலைப்பினையும் குறிச்சொற்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இது, அதன் பரவலுக்கும் வீச்சுக்கும் அச்செய்தியை எளிதில் கண்டறியவும் பெரிதும் உதவும்.
எழுத்தைச் செம்மையாக்கல்
கணினியில் எழுதி, இணையத்தில் வெளியிடுவோருக்குப் பற்பல வசதிகள் உள்ளன. எழுதியதைப் பிழை திருத்தல், எத்தனை சொற்கள் / பக்கங்கள் உள்ளன, ஒரே சொல் எத்தனை முறைகள் கையாளப்பெற்றுள்ளது… எனப் பலவற்றைக் காணலாம். இவற்றின் மூலம், பிழைகள் இருந்தால் அவற்றைத் திருத்திக்கொள்ள முடியும். ஒரே சொல், பல முறைகள் வந்தால், மாற்றிக்கொள்ள முடியும். படைப்பின் சில பகுதிகளை வெட்டி ஒட்டல், முன்பின் மாற்றல் எனப் பல வகை வசதிகளை மின்னணுக் கருவிகள் தருகின்றன.
பல கருவிகளில் சொற்களை எழுதுகையில் இயன்முற்று (Auto completion) வசதி உள்ளது. இதில் சில சிக்கல்கள் இருப்பினும் கவனமாகப் பயன்படுத்தினால், இதன் மூலம் நேரத்தைச் சேமிக்க முடியும். அகராதி வசதி இருப்பதால், தமிழ்ச் சொல்லுக்கு வேற்று மொழிச் சொல்லையும் வேற்று மொழிச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லையும் எளிதில் காணலாம். இவற்றின் மூலம் சரியான சொற்களை, சரியான அளவில், சரியான நேரத்தில், உரிய பயனர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இதற்கு இணையமும் கணினி நுட்பங்களும் பேரளவில் துணை புரிகின்றன.
(இந்தக் கட்டுரை, 2009 அக்டோபர் 5ஆம் தேதி அண்ணாகண்ணன் வெளி6 என்ற வலைப்பதிவில் வெளியான ஆக்கத்தின் விரிவாக்கம்)
அடிக்குறிப்புகள்:
1. http://en.wikipedia.org/wiki/Common_Era
2. http://en.wikipedia.org/wiki/Quanzhou
3. http://en.wikipedia.org/wiki/Guangzhou
4. http://en.wiktionary.org/wiki/chairperson
5. http://www.vallamai.com/?p=3767
6. http://annakannan.blogspot.in/2009/10/blog-post_5644.html
(திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்க் கணினி & இணையப் பயன்பாடுகள் என்ற கருப்பொருளில் 28.03.2014 அன்று நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பெற்றது)
-
தன்முன்னேற்றப் பயிலரங்கம் – அருணா மேல்நிலைப் பள்ளி – திருமாறான்பாடி என்ற இறையூர்.
சொ.வினைதீர்த்தான்
வணக்கம்.
24.1.2014 அன்று பெண்ணாடத்திற்கு அருகிலுள்ள திருமாறன்பாடி என்ற இறையூரிலுள்ள அருணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 170 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பு அமைந்தது.
திருமாறன்பாடி சைவத்தில் ஒரு முக்கியமான தலம். இங்கு தாகம் தீர்த்தபுரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள ஆழ்குழாய் கிணறு சுற்றியுள்ள ஐந்து கிராமங்களுக்கு இன்றும் குடிநீர் வழங்கி வருவது அதிசயம்.பல தலங்களில் பதிகம் இசைத்து வழிபட்டுப் பின்னர் கால் நடையாகவே இவ்விடம் வந்த பாலகனான திருஞானசம்பந்தர் நான்கு கல் தொலைவிலுள்ள பாடல் பெற்ற தலமான திருநெல்வாயில் அரத்துறை செல்வதற்காகத் தந்தையார், துணைவர்களுடன் இரவு இங்கு தங்கியிருந்தார். மறுநாள் காலை எழுந்தபோது சிவன் அருளால் திருஞான சம்பந்தருக்கு முத்துச் சிவிகை, மணிக்குடை, பொற்சின்னம் ஆகியவை தந்தருளப்பட்டுக் காத்திருந்தன.
பயிலரங்கில் முதற் செய்தியாகத் தல வரலாறைப் பகிர்ந்துகொண்டு முயற்சியும் ஆர்வமும் இருந்தால் என்ன நிகழும் என்பதற்கு இத்தலமே ஒரு காட்டு என்று சுட்டினேன். முத்துச்சிவிகை என்பது என்ன? அது குறிக்கோளை எளிதல் அடைய உதவும் ஒரு சாதனம். அந்த ஊர்தி நமக்குத் தருவது குறிக்கோளை நோக்கியான வேகமான நகர்வு. குடையும், பொற்சின்னமும் குறிப்பது ஒரு உயரிய, கௌரவ, சமுதாய அடையாளம். முயற்சியும், பயிற்சியும், கொண்ட குறிக்கோளில் தணியாத ஆர்வமும் மாணவர்களிடமிருந்தால் அவர்களுக்குச் சமுதாயத்தில் ஏற்றமும், கௌரவமும், வாழ்வில் உயர்வும் ஏற்படுமென்பதற்குத் திருஞான சம்பந்தர் வாழ்க்கை நிகழ்வை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டுமென்றேன்.
அடுத்து அந்தக் குறிக்கோளின் வரையறையை S M A R T வழியில் விளக்கிக் குறிக்கோளை நிர்ணயித்தலை
எடுத்துக்கொண்டேன். 4 “M” Goals – Micro, Mini, Middle, Mega goals – 1.ஒவ்வொரு நாளுக்கான செயல்பாடுகள் 2. பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் எடுத்தல் 3. அடுத்துப் பட்டப் படிப்பு வாய்ப்புக்கள், படிப்பினைத் தெரிவு செய்தல், பட்டம் பெறல் 4. அடுத்த நீண்ட காலக் குறிக்கோளான தொழிலும் வாழ்வும் சமுதாயப் பணிகளும் என்ற நோக்கில் பயிற்சி அமைந்தது.S W O T – பலம், பலவீனம், வாய்ப்புக்கள், தடங்கல்கள் என்ற வகையில் மாணவச் செல்வங்களை எண்ணிப் பார்க்கச் செய்தேன். அவர்களைத் தன் திறமைகளையும், துணையாக அமையக் கூடியவர்கள் உதவக் கூடிய வழிகளையும் பட்டியிலிட வைத்தேன். பலவீனங்களையும் பட்டியலிட்டார்கள். பலத்தைப் பெருக்கும் வழிகளும் பலவீனத்தைத் தவிர்க்கவுமான வழிகளும் அவர்களே கூற ஆராயப்பட்டன. பலம் பெருகும்போது சந்தர்ப்பங்கள் “மடி தற்றித் தான் முந்துறும்” என்பது போல வந்தெய்துகின்றன என்பதை உணர்த்தினேன்.
நான் அண்மையில் பயிலரங்கு நடத்திய பள்ளிகளில் மிகச் சிறப்பான மாணவச் செல்வங்களைக் கொண்ட பள்ளி அருணா மேல்நிலைப் பள்ளியாகும். முன்பு அருணா சுகர்ஸ் நிர்வாகத்திலும் தற்போது ஒரு குழு நிர்வாகத்திலும் இயங்கும் அரசு சார்ந்த பள்ளி இதுவாகும். பிள்ளைகள் பயிற்சியைப் பற்றியும், குறிக்கோள் பற்றியும், பெற்ற தாய்க்கும் பிறந்த பொன்னாட்டிற்கும் ஆற்ற விரும்பும் பணி பற்றியும் தங்கள் கருத்துக்களாக (Feed back) எழுதித் தந்தவற்றைப் படித்தபோது சிலிர்த்துப் போனேன். மன நிறைவடைந்தேன்.
-
மேலோங்கி நிற்கிறது
எம்.ஜெயராமசர்மா …. மெல்பேண்
விஞ்ஞான வளர்ச்சியினால் விந்தை பல வந்தனவே
எஞ்ஞான்றும் பார்த்து நிற்க எத்தனையோ வருகிறதே
நல்ஞானம் என்றெண்ணி நயந்தேற்று நிற்கின்றோம்
விஞ்ஞானம் தானிப்போ மேல் ஓங்கி நிற்கிறதேவிளையாத நிலமெல்லாம் விளைந்தோடி நிற்கிறது
விதையெல்லாம் விரைவாக வேர்விட்டு எழுகிறது
தரையுள்ளே பலபாதை தலை நிமிர்ந்து நிற்கிறது
விரைவாகப் பயணிக்க விமானம் பல வந்தாச்சுவிண்ணோக்கிக் கட்டிடங்கள் விரைந்தோங்கி நிற்கிறது
மண்ணுள்ளோர் விண்செல்ல வாய்ப்புமே இருக்கிறது
எண்ணிவிடும் எண்ணமெலாம் எல்லோர்க்கும் சொல்லிவிட
கண்முன்னே வந்துள்ளார் கணினி எனும் காப்பாளர்கணினி யிப்போ உலகெங்கும் களிப்புடனே வருகிறது
கணினியெனும் கருவியிப்போ காலத்தின் தேவையது
கணினியின்றி கல்விக்கூடம் காணுவதும் அரிதிப்போ
கற்கின்றார் கைகளெல்லாம் கணினி தான் இருக்கிறதுமடிக்கணினி வந்தாச்சு மனமெல்லாம் நிறைந்தாச்சு
படிக்கின்ற மாணவரின் பார்வையெல்லாம் அங்கேதான்
அடுக்கடுக்காய் பலவேலை அதனூடே பார்க்கின்றார்
தடுக்கிநாம் விழுந்திடுனும் தரையெங்கும் கணினிமயம்தொலைக்காட்சி கூடயிப்போ கணினியுடன் தொடர்பாச்சு
தொழில் துறைகள் கணினியுடன் சொந்தமாய்ப் போச்சுயதிப்போ
கணினியில்லாத் துறையை நாம் காணவேமுடியாது
கணினியிப்போ நம்வாழ்வில் கச்சிதமாய் இணைந்தாச்சுகாதலரின் தூதுவனாய் கணினிதான் இருக்கிறது
காவல்துறை ஊழியனாய் கணினியே அமைஞ்சாச்சு
மருத்துவத்தில் நுழைந்திப்போ மகத்தான இடம்பிடித்து
இருக்கையிலே இருக்கிறது எல்லாமே கணினியன்றோவானவூர்தி போவதற்கு வழிசமைத்து நிற்கிறது
வானிலையைக் கணிப்பதற்கு வலக்கரமாய் இருக்கிறது
கானமெலாம் கேட்பதற்கு கைகொடுத்து நிற்கிறது
கணினியெனும் கருவியிப்போ கண்போல இருக்கிறதுபழந்தமிழ் நூலையெல்லாம் பத்திரமாய் வைப்பதற்கும்
பக்திப் பனுவல்களை பலபேரும் படிப்பதற்கும்
சுத்தியுள்ள கோவில்பற்றி சுகமாக அறிவதற்கும்
சக்திமிக்க ஒன்றாகிச் சபைநடுவே நிற்கிறதுஓங்கி உலகளந்தான் புகழ்கேட்டு மகிழ்வதற்கும்
உமையோடு இணைந்தானின் உயர்பற்றி அறிவதற்கும்
பாங்காகத் தத்துவங்கள் பலபார்த்து விளங்குதற்கும்
வாங்கிநாம் மகிழ்ந்திடுவோம் வகைவகையாய் கணினிகளை !படத்திற்கு நன்றி:
http://www.shutterbug.com/content/computer-digital-photography
-
இடையனின் மிகுதி மொழி
கோ. நாதன்பனிப் புல்லின் நுனியிலிருந்து இறங்குவதற்காகக்
காத்திருக்கும் இடையன்
சூரிய ஒளி எழும்புகின்ற தருணம்
ஒற்றைக்காலைத் தூக்கி
கரங்களை மேலெழுப்பியபடி நமஸ்காரத்துக்குப்
பின்னர்
சேகுவரா வடிவமான தொப்பியூடே நகந்தார்.மௌனமாய்ப் பொழுதினை அசை போட்ட ஆடுகளும்
இடையனின் ஒரு வார்த்தை ஓசை விழுந்ததும்
எல்லாம் எழுந்து ஒரே குரலில் கத்தியது.
கொட்டில் கதவு திறப்புக்காய் நீளுகையில்
மோதுண்டு
அவரின் வழி நடத்தலில் முன் செல்கின்றது.ஆடுகளை மேய்ச்சலுக்காய் காடுகளும்,நதிகளும்
அழைத்துத் திரிகின்ற போது
காடுகளை வேவு பார்க்கும் ஒற்றனென
அவரது அமைதி வாழ்வில் வதை நீடிக்கின்றன.
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளும் படை
சந்தேகத்தில் ஆண் ஆடுகள்
வாகனத்தில் ஏற்றிக் கடத்தப்பட்டதுசெருப்புகளற்ற பாத நடையில்
தூரத்துப் பார்வைக்கான கண்ணாடி அணிந்து
அருகினில் கண்ணாடி கழற்றிய வயோதிக இடையன்
ஒவ்வொரு முள்ளின் வலியும்
இரத்தமும் ,வியர்வையும் கிழிந்த உடலினூடே
உயிர் சிதைக்கும் எலும்புத் தேய்வின் வாழ்வு.ஆளரவமற்ற வயல்வெளியின் வரப்புகளூடாக
சூட்டிப்பின் வைக்கோல் கத்தைகளுள்
உள்நுழைந்துப் போயிருந்த மிருகங்களிடையே
அவரது மிகுதி மொழி அச்சப்படுத்தியும் ,கத்தியும்
கட்டுப்பாட்டுக்குள் ஒடுங்கி அடங்குகின்றது
காலவெளி மழை,வெயில் பொழுதுகளைஅடித்துக் கொல்லப்பட்ட இடையனின்
இரத்தம் தோய்ந்திருந்த பிணம்
சிறுநீரும்,பிழுக்கையும் துவைத்திருந்தது
மரண வாக்கு மொத்த ஆடுகளும் சப்பித்தீர்மானிக்கின்றது.
இறைச்சிக்காக அறுபட்டுக் கொண்டிருக்கின்ற
ஆடுகளோடு இடையனின் இறைச்சியும் பொதியாகியது.படத்திற்கு நன்றி
http://spanishnewstoday.com/guadalajara-grazing-goats-creating-natural-forest-fire-protection_19157-a.html
-
பச்சிளம் சேயின் பாடல் !
மூலம் : ஃபிரான்ச்செஸ் கார்ன்ஃபோர்டு
(1886 – 1960)
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்
பிறந்தென் நீளம் ஒன்றரை அடியான போது,
கருங்குயில் கீதம் என் காதில் விழாது !
காலைப் பொழுதின் வானக் கதிரொளி,
கண்களை உறுத்திடும் கடுமை யாகவே !
கனிவுப் பார்வை, கொஞ்சும் மொழிக்கும் நான்
கவனம் செலுத்தேன் புள்ளினம், பரிதிக்கும் மேலாய் !
ஆயின் தாயின் முலையைக் கடிக்க முடிந்தால்,
மேவி நிறைவு பெறும் மற்றவை யெல்லாம் !
+++++++++++
The New-born Baby’s Song
Frances Cornford [1923]
When I was twenty inches long
I could not hear the thrush’s song;
The radiance of morning skies
Was most displeasing to my eyes.
For loving looks, caressing words,
I cared no more than sun or birds,
But I could bite my mother’s breast,And that made up for all the rest.
“Mother & Child” Paintings By: Pablo Picasso
-
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்!
கவிஞர் காவிரி மைந்தன்
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் – ரோஜாவின் ராஜா – கவியரசர் கண்ணதாசன் – டி.எம்.எஸ்
.- பி.சுசீலா – எம்.எஸ்.வி ஸ்வநாதன் – சிவாஜி, வாணிஸ்ரீ இன்பலஹரியில் நம் இதயம்தொடும் இன்னொரு காதல் பாடலிது! கவியரசர் கண்ணதாசனின் கற்பனைக் களஞ்சியத்தில் பூத்த பூவிது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விரல்களில் வருடப்பட்ட திரையிசைப் பொக்கிஷமிது! ரோஜாவின் ராஜா என்கிற திரைப்படத்தில்.. டி.எம்.எஸ். பி.சுசீலா பாடிய பாடலுக்கு நடிகர்திலகம் சிவாஜிகணேசன் வாணிஸ்ரீ நடிப்பில்..
மங்கல வார்த்தைகளை மழைபோல பொழிந்திருக்கும் கவிஞர், இயற்கையின்மடியில் வைத்து இதயங்களைத் தாலாட்டுகிறார்.
பொட்டோடு பூக்கண்ட பன்னீர் மரம்
பொன் மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும்
நீரோடு விளையாடிப் போகின்ற தென்றல்
நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்பொற்காலப்பாடல்கள் என்று போற்றும் தமிழ்த்திரைக்குத் தன் முத்தான தமிழால் மோகனப் பண் பாடிவைத்திருக்கிறார்.
உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளவோ
இல்லாயின் இல்லென்று நான் செல்லவோ
எங்கேனும் பூப்பந்தல் மேளங்களோடு
கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்இலக்கியத்தமிழையும் திரைத்தமிழாக்கித் தந்து கல்யாணத் தமிழ்ப்பாடல் பாடுகின்றார்! எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடலாய் அது இன்னுமின்னும் காதினில் .. காதலைச்சொல்கிறது கேளுங்கள்!
தன் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்
அழகான மலர் மாலை நாம் வாங்குவோம்
தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி
திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்ஆன்மீகத்தின் அடிநாதம் தன் மனதில் எப்போதும் அலங்காரம் செய்வதனால்.. தேன்சிந்தும் காதல்பாடலிலும் தெள்ளுத்தமிழில் ஆண்டாள் வருகிறாள் பாருங்கள்..
கண்ணதாசனின் கவிதைக்கரும்பில் எந்தப்பக்கமும் இனிக்கவே செய்கிறது அதிலும் காதலைப்பிழியும்போது இதயத்தின் மென்மையும் அ்னுபவங்களின் அடர்த்தியும் சங்கமம் ஆகிறது.
பலர் கவிதை எழுதுகிறார்கள் சிலர் கவிதையாய் வாழ்கிறார்கள். வாழ்வையே கவிதையாக்கும் நோக்கம் கவிஞரின் வெற்றி!
எழுதும் எல்லாக் கவிதையும் இணையற்றவைகளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை
ஏதேனும் ஒன்று நம்மை உரசிச் சென்று இதயத்தில் தீப்பிடிக்கச்செய்தால் போதும்.
கண்ணதாசனின் கவிதைகளோ அனைத்துமே இதயத்தைப் பற்றிக்கொள்கிறது!
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலேபொட்டோடு பூக்கண்ட பன்னீர் மரம்
பொன் மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும்
நீரோடு விளையாடிப் போகின்ற தென்றல்
நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்
நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலேஉண்டாயின் உண்டென்று மணம் கொள்ளவோ
இல்லாயின் இல்லென்று நான் செல்லவோ
எங்கேனும் பூப்பந்தல் மேளங்களோடு
கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்
கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலேதன் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்
அழகான மலர் மாலை நாம் வாங்குவோம்
தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி
திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்
திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலேபடம் : ரோஜாவின் ராஜா
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, வாணிஸ்ரீhttp://www.inbaminge.com/t/r/Rojavin%20Raja/Alangaram%20Kalaiyana.eng.html










