மக்கள் கேட்கும் கேள்விகள் (9)
பவள சங்கரி
தலையங்கம்
உயர்திரு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் / பிரதம வேட்பாளர் திரு மோதி அவர்களே,
இதுநாள் வரை தங்கள் தேர்தல் அறிக்கை வரவில்லையே என்று காத்திருந்தோம். அறிக்கையுடன் சேர்ந்து குழப்பமும் வந்துள்ளது. நிறம் மாறிவிடுவீர்களோ என்ற அச்சமும் வந்துள்ளது. தெளிவற்ற பொருளாதாரச் சிந்தனையே வெளிப்படுகிறது. உங்களிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது முன்னாள் பிரதமர் மேதகு வாஜ்பாய் அவர்களின் அணுகுமுறையை ஒட்டி உங்கள் ஆட்சி முறை இருக்குமா என்பதுதான். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தலைவர் அவர். பொருளாதாரம் மற்றும் சமூகவியல்களிலும் உங்களுடைய செயல்பாடுகள் அவரையொட்டியதாக அமையுமா? அமைதியான ஆட்சியை தங்களிடமிருந்து எதிர்பார்க்க இயலுமா?
அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும்,
’காந்தியவாதியாக நடப்பேன்’ என்று கூறிக்கொண்டிருக்கிற ஒரு தலைவர் இந்த ஒரு மாதத்தில் ஐந்து முறை தாக்கப்பட்டுள்ளார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? அவருடைய வளர்ச்சிக்குக் கிடைத்த பரிசா? அல்லது அவருடைய தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளபடி, தான் ஊழலை 100 சதவிகிதம் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதற்கான பரிசா?
வாக்களிப்போம்!
ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!
விலை போகாமல் வாக்களிப்போம்!!!