வரலாறு படைக்கும் உச்சம்!

1

பவள சங்கரி

தலையங்கம்

 

உரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. தினம் தினம் உச்சத்தைத் தொடும் உரூபாயின் மதிப்பிழப்பால் உயர்மட்ட வருவாய் பெறக்கூடியவர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏதுமிருக்காது. காரணம் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை பெரும்பாலும் டாலரிலேயே செய்துகொண்டு போய்விடுவார்கள். கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு இதைப்பற்றி அதிகம் தெரியாது அல்லது பாதிப்பு அதிகம் இருக்காது. அரசுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பஞ்சப்படியாக வாரி வழங்கப்படுவதால் அவர்கள் சமாளிக்கலாம். ஆனால் நமது மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கக்கூடிய மத்தியதர வகுப்பினரையே இது பெரிதும் பாதிக்கும். சமீப நாட்கள் வரை 100 உரூபாய்க்கு 1.35 லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கொண்டிருந்த நம்மால் இன்று அதே விலைக்கு 1.1 லிட்டர்தான் வாங்க முடிகிறது. இன்னும் சில நாட்களில் அது 1 லிட்டராகக் குறைந்துவிடக்கூடும். ஆனால் இப்பொழுதுதான் நமது வர்த்தகத் துறை அமைச்சருக்கு இது பற்றிய தெளிவு ஏற்பட்டு இதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகத் துறைகளுக்கான அழைப்பை விடுத்திருக்கிறார். ஆனால் மேலும் வீழ்ச்சியின் உச்சம் அதிகரித்தவாறே உள்ளன.

இந்திய உரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் நேற்று மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் 1550 கோடிகளைத் திரும்பப் பெற்றதால் நமது மும்பை வர்த்தகம் 550 புள்ளிகள் சரிவைக்கண்டது. இதனால் நமது இந்திய முதலீட்டாளர்கள் 1.17 இலட்சம் கோடி உரூபாய்கள் இழப்பைச் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இழப்பு தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் வேதனை. டாலருக்கு நிகரான மதிப்பை நமது உரூபாய் மென்மேலும் இழந்து வருவதும் மற்ற நாடுகளில் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததும் நம்மை சிந்திக்க வைக்கிறது. முக்கியமான பத்து நாடுகளின், எட்டு நாடுகளுக்கான டாலரின் நிகரான அந்த நாட்டின் உரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. இரண்டு நாடுகளில் மட்டும் மிகக்குறைவாக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதில் சில நாடுகளின் வளர்ச்சிகளும் கூட உயர்ந்து கொண்டிருப்பதும் கண்கூடு. சீனா ஏற்றுமதியாளர்களுக்காக தமது நாணயத்தின் மதிப்பைக் குறைப்பதாக இருந்தவர்கள் கூட தற்போது அதைக் குறைக்கமாட்டோம் என்று அறிவித்துவிட்டனர். ஆனால் நமது உரூபாயின் மதிப்பானது எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வீழ்ச்சியடைந்த வண்ணமே உள்ளது பெரும் வேதனையளிக்கிறது. நமது மத்திய அரசும் இதைச் சீர் செய்யாமல் அமைதி காத்து வருகின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியிலும், அதன் பயன்பாட்டிலும் ஏன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அரசின் வருமானத்தை மட்டும் கணக்கில்கொண்டு திட்டங்கள் தீட்டப்படுவது மக்களுக்கு மென்மேலும் சுமையைக் கூட்டுகிறது. நமது நாட்டில் கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை கட்டாயப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதையாவது நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இதில் நமது நாடு பொருளாதார வல்லரசாகும் என்ற கனவு என்று நினைவாகப் போகிறதோ?

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வரலாறு படைக்கும் உச்சம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *