மக்களுக்காக, மக்களின் கேள்வி (10)
பவள சங்கரி
தலையங்கம்
மரியாதைக்குரிய இந்திய தேசத்தின் மக்களே,
பல தன்னலமற்ற தலைவர்களால், குண்டடிபட்டு, தடியடிபட்டு இரத்தம் சிந்தி பல போராட்டங்களுக்குப் பிறகு நமக்குக் கிடைத்ததே இந்த சுதந்திரம். நம்மை நாமே ஆள்வதற்குக் கிடைத்த ஒரு அத்தாட்சி. மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்கள் ஆளும் ஆட்சி. மிகப் பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள் கூட அரசியல் ஆதாயங்களுக்காகவும், அதிகாரத்தின் மேல் உள்ள ஆசையாலும், தாங்கள் இருந்த உயரிய நிலையை மறந்து இன்று தேர்தலில் நின்றுள்ளார்கள். இந்தப் பதவி தரக்கூடிய சுகத்திற்காக ஆங்கிலேயர் போல மக்களைப் பிரித்தாவது தங்கள் வாக்குகளை சேகரித்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முனைகின்றனர். தனி மனித ஒழுக்கம், சேவை மனப்பான்மை, உயரிய இலட்சியங்கள் போன்ற அனைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன. ’வெற்றி வெற்றி’ என்ற ஒன்றுதான் அரசியல்வாதிகளின் தாரக மந்திரங்களாக இருக்கின்றது. அந்த வெற்றியை அறுவடை செய்வது ஒன்றையே தங்கள் இலட்சியமாக வைத்துக்கொண்டு செயல்படுபவர்களும் இருக்கிறார்கள். வாக்குகள் வாங்கப்படுகின்றன.. விற்கப்படுகின்றன. இந்தச் சந்தையில் காந்தி கண்ட ராமராஜ்ஜியம் கிடைக்குமா? சுயராஜ்ஜியம் நிர்ணயிக்கப்படுமா. சிந்தித்து செயல்படுவோம்.. நமக்கானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வல்லமை நம் கைகளில்தான் இருக்கிறது.
நேர்மையானவர்களையேத் தேர்ந்தெடுப்போம்
திறமையானவர்களை அங்கீகரிப்போம்
நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்பவர்களுக்கு ஆதரவளிப்போம்
வாக்களிப்பது நமது கடமை
தவறாமல் வாக்களிப்போம்
ஜெய்ஹிந்த்