Blog

  • நாசா விண்ணுளவி காணாமல் போன பூர்வ பூமியின் இரண்டாம் நிலவைப் பற்றித் தெளிவாய் வெளிப்படுத்தும்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    (NASA’s GRAIL Space Mission may reveal a Long-vanished companion Moon)

    (September 18, 2013)

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PODCa9sA34A

    (Moon Images from NASA’s GRAIL Space Probes Mission)

     

    நாமிருக்கும்
    பூமிக்கு ஒரு நிலவு என்றுதான்
    நாம் இதுவரை அறிந்தது !
    கவிஞர் புகழ்ந்தது ஒன்றைத்தான்.
    கலிலியோவின் கண்
    கூர்ந்து தொலை நோக்கியில்
    ஆராய்ந்தது  ஒரு நிலவைத் தான்!
    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில்
    சிறு கோள் பூமிக்கு
    இரு நிலவுகள் இருந்ததாய்க்
    ஒரு கருத்து  யூகிப்பு !
    இரண்டாம் நிலவு மோதிப்
    பெருநிலவில் ஒட்டிக் கொண்டதாம் !
    பின்புறம் மறைவாகி
    முன்புறம் பொன்னொளி வீசும் !
    போதிய விண்ணுளவி
    ஆதாரம்  உள்ளது அதற்கு !
    புவிக் கோளுக்கு
    இரு நிலவுகள் என்பது
    நவயுகக் கணினியில் வடித்த
    பூத மோதல் ஒத்திகையின்
    போலி மாடல் !
    புனை கதை ஒன்றும் இல்லை !
    நாசா விண்ணுளவி கூறும்
    மெய் வாசகம் !

    +++++++++++++++++++

    Grail Mission -1

    [NASA’s Twin Space Probes Launch on September 10, 2011 ]

    “பூர்வீக மனிதன் வானத்தை நோக்கியது முதலாக, வெண்ணிலவு மீது மோக வியப்பு இருந்துள்ளது.   நாசாவின் கிரெயில் இரட்டை விண்ணுளவிகள் [GRAIL Twin Space Probes]  நிலவின் உட்தளத்தை ஆழ்ந்து உளவு செய்ய ஒரு புதிய மேம்பாட்டைக் கொண்டுள்ளது.   அந்த விஞ்ஞானத் தகவல், நிலவு எப்படி உருவானது, எவ்விதம் விருத்தியானது என்றொரு முற்பட்ட விஞ்ஞானப் புரிதலை எங்களுக்குத் தரும்.”

    மரியா ஸூபெர் [GRAIL Spacecraft Principal Investigator, M.I.T. , Cambridge, USA]

    “[பூமிக்கு இரு நிலவுகள் இருப்ப தென்பது] ஓர் உட்கிளர்ச்சிக் கருத்து.  அது மிகவும் சிக்கலான, திகைப்பூட்டும் ஓர் மகத்துவப்  பூமி-நிலவு அமைப்பு ஏற்பாடை விளக்கும்.  ஒரு முறைப்பாடு.    விந்தையாகச் சந்திரக் கோளின் வடிவமைப்பு  இயற்கையில் “சமச்சீர்மை அற்றது”  [Asymmetrical Nature].   முன்புறக் கோளமும், பின்புறக் கோளமும் திணிவு  அடர்த்தியில்  வேறு பட்டவை.”

    டேவிட் ஸ்மித் [கிரெயில் துணை ஆய்வுப் பிரதம விஞ்ஞானி, M.I.T.]

    Grail Mission Details -3

    “இப்போது எங்களுக்குத் தெரிந்தது :  நிலவில் காணப்படும் பெருங்கறைகள் மிகவும் பெரியவை;  எரிமலைக் குழம்பால் நிரம்பவை;  நான்கு பில்லியன் ஆண்டுகட்கு முன்பு முரண்கற்கள் [Asteroids] தாக்கிக் குழிந்தவை;    கிரெயில் விண்ணுளவிகள் அனுப்பும் தகவல், தெரியும் முன் முகமும், தெரியா பின் முகமும் அவ்விதமே விண்வெளிப் பெருங்கற்கலால் தாக்கப்பட்டுக் குழிந்தவையே.   ஆனால் அவ்விரு முன்-பின் பாதிக் கோளங்கள் வெவ்வேறு விதத்தில் தாக்குதலை எதிர்கொண்டன.”

    மரியா ஸூபெர்   [GRAIL Spacecraft Principal Investigator, M.I.T. , Cambridge, USA]

    “பொதுவாக அத்தகைய இரட்டை நிலவுகள் தோன்றியவுடனே மெதுவாய்ச் சிறு நிலவு  விழுந்து, பெருநிலவுடன் சேர்ந்து படிந்து கொள்ளும்.    ஆனால் இப்போது புதிய நியதிப்படி இரண்டாம் நிலவு, புவி-நிலவு ஏற்பாட்டின்படி”அடைப்புப் புள்ளிகள்”  அரங்கில்  [Lagrange Points of Earth-Moon System]  சிக்கிக் கொள்ளும் .”

    டேவிட் ஸ்மித்  [கிரெயில் துணைப் பிரதம ஆய்வாளர்]

    நாசாவின் இரட்டை விண்ணுளவிகள் முதன்முதல் நமது நிலவின் உட்புற அமைப்பை அனுப்பின 

    2011 செப்டம்பர் 10 இல் சந்திரனை நோக்கி ஏவப்பட்ட கிரெயில் இரட்டை விண்ணுளவிகள் [GRAIL Twin Space Probes] முதன் முதல் நிலவின் மர்மமாய்ப் புதைந்துள்ள  உட்புற அமைப்புத் தகவலைப் பூமிக்கு அனுப்பின.   மேலும் பூமியின் தற்போதைய நிலவின் மறைந்து போனத் துணையான இரண்டாம் நிலவின் இருப்பையும் மறைமுகமாகக் காட்டியுள்ளது.    நவீன விஞ்ஞானக் கருத்து யூகத்தின்படி பூமிக்கு ஆரம்ப காலத்தில் இரு நிலவுகள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.  இக்கருத்து கணனிப் போலி மாடல் [Computer Simulation Model] மூலமும்  மெய்ப்படுத்தப் பட்டுள்ளது.

    Grail Mission Details -2

    பூமிக்கு இரு நிலவுகள் இருந்திருக்க வேண்டும் என்னும் கோட்பாடை முதன்முதல் அறிவித்தவர் இருவர்:  மார்டின் ஜுட்ஸி & எரிக் ஆஸ்ஃபாக் [Martin Jutzi & Erik Asphag].  அவர்கள் இருவரும் காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர். பூமிக்குக் காட்டும் நிலவின் முன்புற முகப்பு  பூர்வீக எரிமலைக் குழம்பு கடினமாய்ப் படிந்து, வழ வழப்பான குழித் தளக் கோளம்.  அதே சமயத்தில் பின்புறக் கோள முகப்பு கரடு முரடான குன்றுப் பிரதேசப் பீடங்கள்.  விஞ்ஞான ஆய்வாளர் இவ்வித வேறுபாடு எவ்விதம் நேர்ந்தது என்று அறிய முடியாமல் திக்குமுக்காடி வந்துள்ளார்.

    4 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு நமது பூமியில் செவ்வாய்க் கோள் அளவு அண்டம் ஒன்று மோதி விழுந்தது.   அது சிதறிய துண்டுத் துணுக்குகள் சேர்ந்துதான் ஓரிரு நிலவாக வடிவானது.   மார்டின் ஜுட்ஸியும், எரிக் ஆஸ்ஃபாகும்  பூர்வீகத்தில் மெய்யாக இரு நிலவுகள் உருவாயின என்று ஊகிக்கிறார்.   இரண்டாவது நிலவு முதல் நிலவை விடச் சிறியது என்றும், அதுவும் பெரு நிலவோடு இணைந்து பூமியைச் சுற்றி வந்தது என்றும் கருதப் படுகிறது.

    பொதுவாக அத்தகைய இரட்டை நிலவுகள் தோன்றியவுடனே ஒன்றாய்ப் பிணைந்து ஒட்டிக் கொள்ளும் என்று கிரெயில் துணைப் பிரதம ஆய்வாளர்,  டேவிட் ஸ்மித் கூறுகிறார்.  ஆனால் இப்போது புதிய நியதிப்படி இரண்டாம் நிலவு, புவி-நிலவி ஏற்பாட்டில் “அடைப்புப் புள்ளிகள்”  அரங்கில்  [Lagrange Points of Earth-Moon System (Lagrange Points : Five locations in Space where gravitational & Centrifugal Forces  of two bodies neutralize each other;  A third less massive body, located by any one of these points, will be held in equilibrium with respect to the other two.]  சிக்கிக் கொள்ளும் என்று ஸ்மித் கூறுகிறார்.   “அடைப்புப் புள்ளிகள்”  [Lagrange Points]  என்பவை ஒருவகை “ஈர்ப்பியல் வீச்சு அரண்கள்”  [Gravitational Fly Traps] என்று கருதப்படும்.  அந்த அரண்கள் ஓர் அண்டத்தை,  நீண்ட காலம் பிடித்து வைத்திருக்கலாம்;  ஆனால் நிரந்தரமாய் வைத்துக் கொள்ளாது.   அந்த ஏற்பாட்டில் அடைபட்ட இரண்டாம் நிலவு காலம் கடந்த பின் அரணிலிருந்து விடுபட்டு, அருகில் உள்ள பெரிய நிலவால் ஈர்க்கப்பட்டு முடிவில் மோதி இரண்டறக் கலந்து விட்டது என்பதே புதிய கோட்பாடு.  அவ்வித மோதல் மெது வேகத்தில் நிகழ்ந்ததால் சந்திரனில்  எந்தப் பெருங்குழியும் [Crater] உண்டாக வில்லை.  அதற்குப் பதிலாக சிறு நிலவு பெரு நிலவு  ஈர்ப்பால் மெதுவாக இழுக்கப்பட்டு, அதில் படிந்து கொள்கிறது.   அதாவது பெரு நிலவில் படிந்து மறைந்து போன மிச்சங்களே மேடு பள்ளக் குன்றுகளாய்ப் பின்புற நிலவில் காட்சி தருகின்றன.

    Grail Mission Details

    “நாங்கள் தயாரித்த புதிய இரு நிலவுப் போலிக் கணினி மாடல் (Simulated Computer Model) பூத மோதலில் நிலவு உருவான பழைய மாடலோடு செம்மையாய் இணைந்து செயல்படுகிறது.  அதனால் ஏராளமான மோதல் சிதறல்கள் பெரு நிலவோடு சேர்ந்து பூமியைச் சுற்றி வந்திருக்க வேண்டும்.  மேலும் அம்மாதிரி ஏற்பாட்டின் இயக்கச் சீர் நிலைப்புக்கும் (Dynamical Stability of a System), சேய் நிலவு குளிர்நிலை அடைந்ததற்கும், நிலவுப் பாறைகளின் வயதுக் கணிப்புக்கும் ஒத்து வருகிறது.”

    எரிக் ஆஸ்ஃபாக் (Professor Eric Ashphaug, Planetary Science, University of California)

    “அண்டவெளி யுகத்தின் புலர்ச்சிக் காலத்திலிருந்தே ஏன் நிலவின் முன்புறக் கோள்முகம், பின் புறத்தை விட வேறாக இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிராகவே இருந்து வந்தது.  இரு நிலவுகள் மோதிச் சேர்ந்ததால் நேரிடாது, மோதல் அலை அதிர்வுகளால் அவ்விதம் இரு முகப் பகுதிகள் வெவ்வேறாய் மாறி விட்டன”

    பிரான்சிஸ் நிம்மோ (Professor Earth & Planetary Science, University of California)

    தோற்றக் காலத்தில் பூமிக்கு இரு நிலவுகள் இருந்திருக்கலாம்

    4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே பரிதி மண்டலம் தோன்றிய பிறகு பூமிக்கு இரண்டு நிலவுகள் இருந்திருக்கக் கூடும் என்று இப்போது புதிதாக அண்டக் கோள் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  ஒரு நிலவு சிறிய நிலவை விட மூன்றரை மடங்கு அகலத்தில் பெரிதாக இருந்துள்ளது.  குட்டி நிலவு பெரு நிலவைச் சுற்றிக் கொண்டு ஒரே வட்டப் பாதையில் இரண்டும் புவியையும் வலம் வந்திருப்பதாக கருதப்படுகிறது.  நாளடைவில் குட்டி நிலவு பெரு நிலவோடு மோதியதால் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று ஒட்டிக் கொண்டு ஒற்றைப் பெரிய நிலவாய் உருவாகி விட்டது.  இரண்டு நிலவுகளின் மோதலே பெரு நிலவின் இருவித முக மாறுபாட்டுக்குக் காரணம் என்று அறியப் படுகிறது.  நாம் காணும் நிலவின் முகப்பாடுக்கும், நாம் காண முடியாத மறைவு முகப்பாடுக்கும் வேறுபாடுகள் தெரிகின்றன.  இரண்டு நிலவுகளும் புவியைச் சுற்றி வரும் போது இரு நிலவுக்கும் இடையே ‘மெது நகர்ச்சி மோதல்’ (Slow-Motion Collision) நேர்ந்து தற்போதையப் பெரு நிலவு உருவாகி யுள்ளது.  குட்டி நிலவு பெரு நிலவுக்கு 30 இல் ஒரு பாக நிறை.  குட்டி நிலவின் அகலம் 600 மைல்.  பெரு நிலவின் தற்போதைய விட்டம் : 2160 மைல்.

    புவிக்கு இரு நிலவுகள் இருந்திருக்கலாம் என்னும் புதிய கருத்தை முதல்முதல் வெளியிட்டவர் எரிக் ஆஸ்ஃபாக் & மார்டின் ஜுட்ஸி (Eric Asphaug & Martin Jutzi) என்னும் இரு பேராசியர்கள்.  எரிக் ஆஸ்ஃபாக் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் விண்கோள் விஞ்ஞானி (Planetary Scientist). மார்டின் ஜுட்ஸி பெர்ன் பல்கலைக் கழகத்தைச் (University of Berne) சேர்ந்தவர்.  இருவரும் புவியின் இரட்டை நிலவுக்களைப் பற்றி முதன்முதல் ஆகஸ்டு 3, 2011 தேதி ‘இயற்கை’ விஞ்ஞான இதழில் (Nature Journal) அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    பல்லாண்டுகளாக வானியல் விஞ்ஞானிகள் பூமிக்குத் தெரியும் நிலவின் ஒருபுற முகத்தில் மித ஆழ்குழிகள் தட்டையாகவும், மறைந்துள்ள மறுபக்கத்தில் நீண்ட ஆழ்குழிகள் நிரம்பவும் கொண்ட பெரும் மேடு பள்ளங்களாகவும் ஏன் உள்ளன என்பதற்குக் காரணம் அறிய முடியாமல் இருந்தனர்.  நிலவின் மறைந்துள்ள முகப் பகுதியில் 3000 மீடர் (10,000 அடி) உயரத்துக்கு அதிகமான மலைப் பீடங்கள் பல இருப்பதாக அறியப்படு கின்றன.  மலை மடிப்புகள் முன் பகுதியை விட மறைவுப் பகுதியில் 50 கி.மீ (30 மைல்) தடிமனாக உள்ளன.  பெரு நிலவு குட்டி நிலவைப் போல் மூன்றரை மடங்கு அகலமும், 25 மடங்கு ஈர்ப்பு விசையும் கொண்டது.

    எரிக் ஆஸ்·பாக் இரு நிலவுகளின் இந்த மோதலை “பெரும் மோதல்” (Big Impact) என்றும் ‘மித வேக மோதல்’ (Low-Velocity Collision) என்றும் குறிப்பிடுகிறார்.  அந்த மோதலால் சிதறிய தட்டாகிப் பெரு நிலவு ஒருபுறத்தில் சப்பையாகப் போனது (Caking the Big Moon) என்றும் கூறுகிறார்.  இந்த இரட்டை நிலவுகள் தோற்ற சமயத்தில் 100 மில்லியன் ஆண்டுகள் கூடி இருந்தன வென்றும், மோதும் போது குட்டி நிலவின் வேகம் மணிக்கு 5000 மைல் இருந்திருக்க வேண்டும் என்றும் கணினி மாடல் படைத்துக் கணக்கிட்டிருக்கிறார்.

    மோதிய பிறகு குட்டி நிலவின் சிதறிய பாறைகள் பெரு நிலவில் படிந்து கொள்ள பல மணி நேரங்கள் எடுத்திருக்கும் என்று பேராசிரியர் ஆஸ்·பாக் விளக்குகிறார்.  இந்த அதிசய மோதல் பூமிக்கு 80,000 மைல் தூரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

    வானியல் கோட்பாடின்படி மோதல் எனப்படுவது நிலவின் ஒரு புறத்தில்தான் நிகழ்ந்துள்ளது.  அப்போது ‘மோதல் வெப்ப சக்தியால்’ பாறைகள் உருகிப் போகாதது வரை நிலவின் கூட்டுச் சேர்க்கையில் ‘செஞ்சீர்மை இழப்பு’ (Asymmetry) நேர்கிறது.  பெரு நிலவின் செஞ்சீர்மை இழப்புக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஒன்றும் உறுதியாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை.  நாசா விஞ்ஞான இணை ஆணையாளர் அலன் ஸ்டெர்ன் “இரு நிலவு மோதல் கோட்பாடு உண்மை என்று நிரூபிக்க முடியாத ஒரு சிறந்த புதிய கருந்து என்று கூறியிருக்கிறார்.  நாசா எரிக் ஆஸ்·பாக் & மார்டின் ஜுட்ஸி கோட்பாடை ஏற்றுக்  கொண்டுள்ளது.

    செவ்வாய் அளவு சிறிய கோள் பூமியோடு மோதிய போது

    பூமியின் பிள்ளைப் பருவத்தில் செவ்வாய் அளவு சிறிய கோள் ஒன்று மோதிய சமயத்தில் அந்தப் பெரும் மோதலில் ஒரு நிலவன்று இரு நிலவுகள் தோன்றின என்றுதான் புதிய விஞ்ஞானக் கோட்பாடு கூறுகிறது.  உருவான குட்டி நிலவு பெரு நிலவைச் சுற்றிக் கொண்டு இரண்டும் பூமியை ஒரே வட்டப் பாதையில் வலம் வந்துள்ளன.  பிறகு குட்டி நிலவு பெரு நிலவில் விழுந்து ஒரு முகத்தில் மலை அடுக்குத் தொடர் ஒன்றை ஆயிரக்கணக்கான கி.மீ. உயரம்வரை அப்பியது என்பதே புதிய கோட்பாடு.  அதுவே நிலவின் ‘செம்மை நிலைப்பாடு வடிவத்தைப்’ (Symmetric Shape) பாதித்தது என்றும் அறியப் படுகிறது.

    “நாங்கள் தயாரித்த புதிய இரு நிலவுப் போலிக் கணினி மாடல் (Simulated Computer Model) பூத மோதலில் நிலவு உருவான பழைய மாடலோடு செம்மையாய் இணைந்து செயல்படுகிறது.  அதனால் ஏராளமான மோதல் சிதறல்கள் பெரு நிலவோடு சேர்ந்து பூமியைச் சுற்றி வந்திருக்க வேண்டும்.  மேலும் அம்மாதிரி ஏற்பாட்டின் இயக்கச் சீர் நிலைப்புக்கும் (Dynamical Stability of a System), சேய் நிலவு குளிர்நிலை அடைந்ததற்கும், நிலவுப் பாறைகளின் வயதுக் கணிப்புக்கும் ஒத்து வருகிறது.” என்று விஞ்ஞானி எரிக் ஆஸ்·பாக் கூறுகிறார்.

    புதிய ஆய்வுக் கோட்பாடில் எரிக் ஆஸ்·பாக்கும் அவரது கூட்டாளி மார்டின் ஜுட்ஸியும் சேர்ந்து அமைத்த போலிக் கணினி மாடல்களில் (Computer Simulations) குட்டி நிலவுக்கும், பெரு நிலவுக்கும் இடையே நிகழ்ந்த மோதல் விளைவுகளை ஆராய முயன்றனர்.  அந்த முறையில் நிலவின் பரிணாம வளர்ச்சியும் (Evolution of the Moon), உண்டான நிலவுத் தாதுக் கனிமங்களின் அடுக்குப் படிவுகள் பற்றியும் (Distribution of Lunar Materials) ஆய்வு செய்ய முடிகிறது.

    பிள்ளைப் பிராயத்தில் இரு நிலவுகள் மோதலின் விளைவுகள்

    இரு நிலவுகளின் இந்த ஊகிப்பு மோதல் மெது வேகத்தில்தான் (Low-Velocity Collision) நேர்ந்திருக்க முடியும் என்று எரிக் ஆஸ்·பாக்கும், மார்டின் ஜுட்ஸியும் கூறுகிறார்.  இவ்வித மோதல் நிலவில் பெருங்குழிகளை (Craters) உண்டாக்க முடியாது.  மோதிய தளத்தில் கனிமங்கள் வெப்பம் மிகையாகிப் உருகிப் போகா.  அவ்வாறின்றி மோதல் பாறைகள் விழுந்த கோளப் பகுதியில் அடுக்கடுக்காய்ப் படிந்து மேடுகளாய் அப்பிக் கொள்கின்றன.

    அத்துடன் நிலவில் அப்பிய கோளப் பகுதி உயர்ந்த மேடு பள்ளங்களுடன் புவிக்கு எதிர்ப்புறமாய் திருப்பம் அடைந்தது.  நேர்புறத்தில் தெரியும் பொன் முகத்தை விட நிலவின் பின்புறப் புண் முகம் மாபெரும் மலைப் பிரதேச மாய் மாறிக் கண்ணுக்குப் புலப் படாமல் மறைந்து கொண்டது.

    “அண்டவெளி யுகத்தின் புலர்ச்சிக் காலத்திலிருந்து ஏன் நிலவின் முன்புறக் கோள்முகம், பின் புறத்தை விட வேறுபாடாக இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிராகவே இருந்து வ்ந்துள்ளது,” என்று பிரான்சிஸ் நிம்மோ (Professor Earth & Planetary Science, University of California) கூறுகிறார்.  இயான் காரிக்-பெத்தல் & பிரான்சிஸ் நிம்மோ இருவரும் எரிக் ஆஸ்·பாக் & மார்டின் ஜுட்ஸி ஆகியோர் காலத்தில் தனியாக ஆய்வுகள் செய்து நிலவின் வேறு பட்ட கோளப் பகுதிகளைப் பற்றிப் புதுக் கருத்துக்களை வெளியிட்டவர்.  அவர் வெளியிட்ட அறிக்கைப்படி  “இரு நிலவுகள் மோதிச் சேர்ந்ததால் நேரிடாது, மோதல் அலை அதிர்வுகளால் அவ்விதம் இரு முகப் பகுதிகள் வெவ்வேறாய் மாறி விட்டன” என்று நிம்மா தன் தனிப்பட்ட அறிக்கையில் கூறுகிறார்.

    எரிக் ஆஸ்ஃபாக்கின் அரிய வெளியீடு இரு புதிர்க் கோட்பாடுகளைச் சீராய் இணைக்கிறது.

    1.  செவ்வாய்க் கோள் போன்ற சிறிய முரண் கோள் பூமியைத் தாக்கிப் பூத மோதலில் தற்போதைய நிலவு உருவானது.

    2.  அந்த மோதலில் தெறித்த ஒரு குட்டி நிலவு பெரு நிலவோடு மோதி ஒரு முகம் தணிந்த தழும்புகள் கொண்டு பொன் முகமாகவும் மறு புறம் மலை மேடுகள் நிரம்பிய புண் முகமாகவும் மாறி விட்டன.

    உறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி

    1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள். பூமி மீது மோதிய செவ்வாய் அளவு சிறிய கோள் ஒன்று முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது. அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான துவக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப் படுகிறது. அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது. ஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக் கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.

    50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூத மோதல் நிகழ்ந்திருக்க முடியுமென்று நம்ப இடமிருக்கிறது ! அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி•போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்ஃபாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.

    ************************
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world (1998)

    8. Physics for Poets By : Robert March (1983)

    9. Atlas of the Skies (2005)

    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    11 Wikipedia – Inner Structure of the Moon (January 31, 2008)

    12. The Associated Press : Earth Once Had Two Moons, Astronomers Theorize (August 3, 2011)

    13 Earth May Have Had Two Moons By : Steuart Gary ABC Science Online (Aug 4, 2011)

    14. Space Daily – Astrobiology Magazine – The Odds for Life on a Moonless Earth By Nola TaylorRedd (August 5, 2011)

    15. Daily Galaxy : Moon’s Mountainous Far Side – Created By a Collision with a Smaller Companion Moon (August 5, 2011)

    16.  http://www.nasa.gov/mission_pages/grail/main/index.html  [May 30, 2013]

    17.  http://moon.mit.edu/   [NASA Repot on GRAIL Twin Space Probes]

    18.  http://www.jpl.nasa.gov/news/news.php?release=2013-322  [Noember 7, 2013]

    19.  http://en.wikipedia.org/wiki/Gravity_Recovery_and_Interior_Laboratory  [November 9, 2013]

    20.  http://www.space.com/topics/latest-news-grail-moon-gravity-mission/  [November 19, 2013]

    21.  http://www.nasa.gov/mission_pages/grail/main/index.html

    22.  http://solarsystem.nasa.gov/grail/themoon.cfm

    23.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/09/earths-lost-moon-nasas-grail-mission-may-reveal-a-long-vanished-companion-todays-most-popular.html  [September 18, 2013]

    ++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (November 23, 2013)
    http://jayabarathan.wordpress.com/

    YouTube – Videos from this email
    Share
  • புத்தக மதிப்புரைப் போட்டி – மறு அறிவிப்பு

    பவள சங்கரி

    வாசிப்பினை நேசிப்போம்!
    வாசிப்பினை சுவாசிப்போம்!

    நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது! நம் பொழுதை வெட்டியாகக் கழிக்காமல் வெல்லக்கட்டியாகச் சுவைக்கச் செய்யும் வல்லமை வாசிப்பிற்கு மட்டுமே உண்டு. வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.

    எழுத்தாளர்களையும், பதிப்பகத்தார்களையும், நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்து மதிப்புரை வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாகவே இப்போட்டி நடத்தப்படுகிறது. அனைவரும் கலந்துகொண்டு இப்போட்டியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.  தமிழ் எழுத்துலகை அரை நூற்றாண்டுக் காலமாகக் கவனித்து எழுதி வரும் மூத்த விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார். அவருக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    இந்தப் போட்டிக்கு நாம் எதிர்பார்த்த அளவு மதிப்புரைகள் வரவில்லை என்பதால் ஆண்டு முழுவதும் இந்தப் போட்டியை நடத்துவது கடினம்; எனவே, இதனை மறுசீரமைக்கிறோம்.

    பரிசுத் தொகைகளையும் சற்றே உயர்த்தியுள்ளோம். வருடம் முழுவதும் என்று அறிவித்திருந்ததை ஒரே போட்டியாக மாற்றியமைத்திருக்கிறோம். சென்னையில் ஜனவரி 10ம் தேதி தொடங்கி, ஜனவரி 22 (2014) வரை நடக்கவிருக்கிற புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, இப்போட்டிக்கான இறுதி நாளை ஜனவரி 30 என்று அறிவிக்கிறோம். (2014) ஜனவரி 30ம் தேதி வரை வருகிற படைப்புகள் அனைத்தும் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். அன்பர்களின் உற்சாகமான பங்கேற்பை வரவேற்கிறோம்.

    முதல் பரிசு ரூ.1000
    இரண்டாம் பரிசு ரூ.750
    மூன்றாம் பரிசு ரூ.500

    மேலும் 3 பேருக்குச் சிறப்புப் பரிசாகத் தலா ரூ.200

    போட்டிக்கான விதி முறைகள்:

    ஒருவர் எத்தனை மதிப்புரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

    போட்டிக்கு அனுப்பும் மதிப்புரைகள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.

    மதிப்புரைக்குத் தேர்ந்தெடுத்த நூலின் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு, நூல் வெளியான ஆண்டு, பக்க எண்ணிக்கை, விலை, பதிப்பக முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். நூலின் அட்டைப்படத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்புதல் நலம்.

    மதிப்புரைகளுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.

    பரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.

    மூல நூல் எந்த மொழியில் இருந்தாலும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம். மதிப்புரையும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.

    மதிப்புரைகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம்.

    திரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே!

    உங்கள் படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    Share
  • எண்ணை வயலில் எண்ணப் பூக்கள்

    பத்மநாபபுரம் அரவிந்தன்

    Oil_platform_P-51_(Brazil)

    பாற்கடலைக் கடைந்து

    அமுதெடுத்தப் புராணக்கதை படித்ததுண்டு

    ஆழ்கடலைக் குடைந்து

    எண்ணை எடுக்கும் வேலை எமக்கின்று…

    எங்களுக்கு இரு குடும்பங்கள்

    ஒன்று கடலோடு.. மற்றொன்று கரையோடு..

     

    இரண்டுக்கும் எம் வாழ்வில் சரிபங்குண்டு…

    வருடத்தில் சரிபாதிக் கடலோடும்

    மீதத்தைக் கரையோடும் களிக்கும்

    நாங்கள் கரையில் பிறந்தவரா

    இல்லை கடலின் புத்திரரா?

     

    பணி முடித்து ‘உலங்கு வானூர்தியில்*’

    கடல்மீது பறக்கும் போது மனது

    களிக்கப் போகும் விடுமுறை நாட்களை

    கனாக் கண்டு கண் மூடும்…

     

    இருபத்தெட்டு நாட்களுக்குப் பிற்பாடு

    கரை தொட்ட மகிழ்சியில் மனம் கூத்தாடும்..

    விடுப்பின் நாட்கள்

    நொடிகளாய்க் கடந்து மீண்டும்

    கடல் நோக்கி அமையும் எமது பயணம்…

     

    முதல் சில நாட்கள்

    கரையின் மணமே மனதுள் கமழும்

    மெல்ல, மெல்ல கடலோடிணையும்…

    எண்ணையூற்றின் கண்களைத் துளைத்து

    திளைத்தெழும் எண்ணையில்

    ஒளிவிட்டெரிகிறது எங்கள் வாழ்வு..

     

    பாற்கடல் கடைந்து அமுதெடுத்து

    சாகாவரம் பெற்றனர் அவர்கள்..

    ஆழ்கடல் குடைகையில் தவறேதும் நிகழ்ந்தால்

    சாகும் வரம் பெற்றிடுவோம் நாங்கள்…

     

    மனதும், உடலும், உணர்வும்

    ஒன்றிச் செய்யும் இவ்வேலை

    காமத்தையொத்தது… ஓய்வு நேரத்தில்

    மனவோரம் மறைந்திருக்கும்

    குழந்தைகளின் முகமும்

    மனைவியின் சுகமும் படர்ந்தெழும் எம்முள்..

     

    தொலைபேசியும், மின்னஞ்சலும்,

    முகநூலும் குடும்பத்தோடு இணைக்கும்..

    இவை கிடைக்காத போது

    அந்நாட்கள் வதைக்கும்..

    நாங்கள் கடலில் உழைப்பது – எம் குடும்பம்

    கரையில் திளைக்கவே..

     

    ஒன்றினை இழந்தால் தான்

    மற்றொன்றைப் பெறமுடியும்

    என்ற சித்தாந்தம் – மற்றவர்களை விட

    எங்களுக்கு சற்று அதிகமாய்ப் பொருந்தும்…

     

     * உலங்கு வானூர்தி – HELICOPTER

    (பி.கு – இக் கவிதைக்கு தலைப்பிட்டவர் எங்கள் Rig Manager – சேலம் ஸ்ரீதர்)

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 16ம் பகுதி

    தஞ்​சை ​வெ.​ கோபாலன்

    இனி சில தலங்களில் பாடிய தனிப் பாடல்கள்:

    1. திருச்செங்கோடு:

    நெருப்பான மேனியர் செங்காட்டிலாத்தி நிழலருகே
    இருப்பார் திருவுளம் எப்படியோ இன்னம் என்னை அன்னை
    கருப்பாசயக் குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய
    திருப்பாதமே தருமோ தெரியாது சிவன் செயலே.

    செக்கச் செவேலென்று சிவந்த வானத்தைப் போன்ற திருமேனியை உடையவரும், அத்திமர நிழலில் வீற்றிருப்பவருமான பரமேஸ்வரனது கருணை உள்ளம் என்ன நினைக்கின்றதோ? அடியவனான என்னை மீண்டும் தாயின் கர்ப்பத்தில் வாசம் செய்யப் பணிக்கின்றாரோ; அப்படியின்றி அந்த மகாவிஷ்ணுவாலும் அடிமுடி காணமுடியாத அத்தனின் திருப்பாதங்களை அளித்து முக்தி தருமோ யார் கண்டார். எல்லாம் அந்த சிவபெருமான் செயல்.

    2. திருவொற்றியூர்.

    ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து
    மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன் யான்
    செய்யும் திருவொற்றியூருடையீர் திருநீறும் இட்டுக்
    கையும் தொழப் பண்ணி ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே.

    திருவொற்றியூர் தலமேவும் சிவபெருமானே! நெஞ்சில் (‘ஐயும்’ என்பதில் ‘ஐ’ எனும் எழுத்துக்கு கபம் அதாவது bronchial congestion என்பார்கள்) சளி கபம் அடைத்துக் கொண்டு, விழிகள் மேல்புறமாய்ச் செருகிக் கொண்டு, உணர்வுகள் அடங்கிப் போய், இதுகாறும் ஓடியாடிக் கொண்டிருந்த இந்த பூதவுடலானது ஜீவன் இழந்து பிணமாகி இனி இது இல்லையெனும் நிலைமைக்கு வரும்போது இறைவா, நான் உன்னிடம் ஒரு வரம் கேட்பேன். அதனைக் கேட்டு நீயும் அங்ஙனே ஆகுக என வரமளித்திடுவாய் ஐயனே! எனக்கு நீ அருளும் வரம் என்னவென்றால், நான் நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொண்டு, இரு கரங்களாலும் உன்னைத் தொழுது கொண்டு உன் ஐந்தெழுத்தான ‘நமசிவாய’ எனும் மந்திரத்தை ஓதவும் அருள் புரிய வேண்டும் என்பதே.

    3. சுடப்படுவார் அறியார் புரம் மூன்றையும் சுட்டபிரான்
    திடப்படு மாமதில் தென்னொற்றியூரன் தெருப்பரப்பின்
    நடப்பவர் பொற்பதம் நம் தலைமேல் பட நன்கு உருண்டு
    கிடப்பது காண் மனமே விதி ஏட்டைக் கிழிப்பதுவே.

    ஏ மனமே! நன்கு உணர்ந்து கொள்வாயாக. திரிபுரங்களைப் பெம்மான் சிவபெருமான் சுட்டெரிக்கும் தருணத்தில் சுடப்படுபவர்களான ஜீவன்கள் அறிந்து கொள்ளாத செய்தியொன்று உண்டு. வானுயர்ந்த நெடு மதில்கள் சூழ் எழில்வாய்ந்த திருவொற்றியூர் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பவனான தியாகராஜப் பெருமானுக்குரிய திருவீதிகளில் நடந்து செல்லும் மெய்யடியார்களின் திருவடிகள் நம் தலையில் படும்படி வீழ்ந்து கிடந்தால் மட்டுமே பிரம்ம தேவன் நமக்காக எழுதிய விதி எனும் ஏட்டைக் கிழித்தெறிய முடியும். இதனை அறிவீனர்கள் உணர்வதில்லையே.

    4. திருவிடைமருதூர்.

    காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி
    ஓடே எடுத்தென்ன உள்ளன்பு இலாதவரோங்கி விண்ணோர்
    நாடே இடைமருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
    வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே.

    உள்ளத்தில் இறைவன் பால் உண்மையான அன்பு இல்லாதவர்கள் காட்டில் தனித்து இருந்தால்தான் என்ன? உணவை நீக்கி காற்றை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களாக இருந்தால்தான் என்ன? கந்தலாடை அணிந்து கொண்டு கையில் பிட்சாபாத்திரம் ஏந்திக் கொண்டு யாசகம் பெற்று வாழ்ந்தால் என்ன? இவற்றால் எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் ஏதும் இல்லை. விண்ணோர் வாழும் தேவலோகமெனப் போற்றப்படும் திருவிடைமருதூர் ஈசர்பால் மெய்யன்பு பூண்டவர்கள் மேற்சொன்னவர்களைப் போல தவம் செய்வதாகச் சொல்லிக் கொண்டு உள்ளன்பு இல்லாமல் இருப்பதைக் காட்டிலும், இல்லறத்தில் ஈடுபட்டுத் தங்கள் மனைவி மக்களோடு இருப்பார் நிச்சயம் வீடுபேறு பெற்று மோட்சம் பெறுவர். (திருமூலரும் “வேடநெறி நில்லார் வேடம் பூண்டென்பயன், வேட நெறி நின்றார் வேடமெய் வேடமே” என்கிறார்.)

    5. தாயும் பகை கொண்ட பெண்டீரும் பகை தன்னுடைய
    சேயும் பகை உறவோரும் பகை இச்செகமும் பகை
    ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில் இங்கு ஆதலினால்
    தோயும் நெஞ்சே மருதீசர் பொற்பாதம் சுதந்திரமே.

    இவ்வுலக வாழ்வை நன்றாக ஆராய்ந்து பார்க்கின்றபோதில், நமக்குரிய செல்வங்கள் எல்லாம் நம் கையைவிட்டுப் போய் வறியவனாக ஆனபோழ்தில், நமக்குப் பெற்ற தாயோ, மனைவி மக்கள் சுற்றமோ எவரும் உறவாக இருக்கப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த ஊரும் உலகமும் நமக்குப் பகைதான். ஆகையால் என் நெஞ்சே திருவிடைமருதூரில் வதியும் பரமேசர் திருப்பாதங்களே நமக்கு அடைக்கலமே.

    6. திருக்கழுக்குன்றம்:
    காடோ செடியோ கடற்புறமோ கனமே மிகுந்த
    நாடோ நகரோ நகர் நடுவோ நலமே மிகுந்த
    வீடோ புறந்திண்ணையோ தமியேன் உடல் வீழுமிடம்
    நீடோய் கழுக்குன்றில் ஈசா உயிர்த்துணை நின்பதமே.

    திருக்கழுக்குன்றத்தில் வானுயர நீண்ட மலையுச்சியில் அமர்ந்துள்ள எம்பிரானே! தனித்திருக்கும் அடியேனின் உடல் உயிரிழந்து வீழுகின்ற இடம் காடோ, மரத்தடியோ, கடற்கரையிலோ, வளம் கொழிக்கும் நாடோ, நகரமோ, நகரத்தின் நடுவிலோ, எல்லா நலன்களும் நிறைந்த வீடோ, வீட்டின் திண்ணையோ எதுவாகினும் அடியேனுக்கு நினது திருவடிகளே துணை.

    7. திருக்காளத்தி:
    பத்துப் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி
    முத்தும் பவளமும் பூண்டு ஓடியாடி முடிந்த பின்பு
    செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்
    கத்தும் கணக்கென்ன காண் கயிலாபுரிக் காளத்தியே.

    தென்கயிலை எனப்பெயர் பெற்ற திருக்காளத்தியில் எழுந்தருளியுள்ள சிவனே! அன்னையின் கர்ப்பத்தில் பத்துமாதங்கள் சிறையிருந்து, பின்னே இம்மண்ணில் வந்து பிறந்து, வளர்ந்து பட்டாடைகளை உடலில் அணிந்து கொண்டு, முத்திலும் பவளத்திலும் ஆன மணிகளை அணிந்து அழகுபடுத்திக் கொண்டு, ஓடி ஆடி விளையாடி முடித்தபின்பு, உலக இன்பங்களையெல்லாம் அனுபவித்து ஓய்ந்த பின்பு உயிர் பிரிந்தபின் பிணமென்று பெயர் சூட்டிப் படுக்க வைத்து, அந்தப் பிணத்தைச் சுற்றி அமர்ந்து இனிச் சாகப்போகும் பிணங்கள் ஓசையிட்டு அழுவதும் ஏனோ ஐயனே!

    8. பொன்னால் பிரயோசனம் பொன் படைத்தார்க்குண்டு, பொன்படைத்தோன்
    தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு ஏது உண்டு, அத்தன்மையைப்போல்
    உன்னாற் பிரயோசனம் வேணதெல்லா முண்டு உனைப்பணியும்
    என்னாற் பிரயோசனம் மேதுண்டு? காளத்தி ஈசுரனே.

    திருக்காளத்தி வாழ் பரமேச்வரனே! பொன்னும் செல்வமும் படைத்தவர்களுக்கு அந்த பொன்னால் பயன் உண்டு, ஆனால் பொன் படைத்தவனால் அந்தப் பொன்னுக்கு ஏதும் பயன் உண்டோ? அதைப்போலத்தான் உன்னால் எமக்குப் பயன் வேண்டிய மட்டும் உண்டு, ஆனால் உன் திருவடிகளே கதி என்று பணிந்து தினந்தினம் போற்றுகின்ற எம்மால் உமக்கு ஏது பிரயோசனம், சொல்.

    9. வாளான் மகவு அரிந்து ஊட்டவல்லேன் அல்லன், மாது சொன்ன
    சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன், தொண்டு செய்து
    நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் நான் இனிச் சென்று
    ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே.

    சிவனடியாராக வந்து நீ கேட்டதற்காகச் சிறுத்தொண்டரைப் போல வாளால் தன் சொந்த மகவையே அரிந்து கறிசமைத்து உனக்கு ஊட்டும் வல்லமை சிறிதும் இல்லாதவன் நான்; ‘திருநீலகண்டத்தின் மீது ஆணை என்னை இனி தீண்டலாகாது’ என சூள் உரைத்த மாதின் சொல்லை ஏற்றுத் திருநீலகண்ட நாயனார் தன் மனைவியைத் தொடாமலே இளமைக் காலத்தைக் கடந்தாரே அதைப் போல தியாகம் செய்ய வல்லவன் அல்ல நான்; ஆறே நாட்கள் காளத்தியப்பனைக் காட்டில் கண்டு பக்திகொண்டு ஆறாம் நாள் அவர் கண்களில் உதிரம் கசியக் கண்டு தன் கண்ணை எடுத்து அவருக்கு அப்பிய அந்த நெஞ்சுரம் கொண்ட கண்ணப்பனைப் போல மனோதிடம் கொண்டவன் அல்லன்; அப்படிப்பட்ட நான் காளத்தி அப்பரே நான் உன்னை அடைக்கலமென்று அடைவதுதான் எப்படியோ?

    10. முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால்
    செப்போதிள முலையாருடன் சேரவும் சீவன் விடும்
    அப்போது கண்கலக்கப் படவும் அமைத்தாய் ஐயனே
    எப்போது காணவல்லேன் திருக்காளத்தி ஈசுரனே.

    திருக்காளத்தி ஈஸ்வரா! ஒவ்வொரு நாளும் மூன்று போழ்திலும் சோற்றைப் புசிக்கவும், பின்பு நன்கு உறங்கவும், மோகங்கொண்டு செம்புக் கிண்ணம் போன்ற இளம் தனங்களைக் கொண்ட மாதருடன் உறவாடவும், இவ்வுயிர் உடல்விட்டுப் போகுங்காலை மனம் வருந்தி கண்கலங்கி அழவும் வைத்தாயே ஐயனே! உன்னை எப்போதுதான் நான் காண்பேன்.

    (தலவரிசைப் பாடல்கள் இன்னும் உண்டு)

    Share
  • நெடுஞ்சாலையில் ஒரு பயணம்

    நிர்மலா ராகவன்

    ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் ​தெரியுதா?

    கண்ணுக்கு எட்டியவரை நீல வானும், நீலக் கடலுமாக அழகு கொப்பளித்தது அந்த இடத்தில். அந்த இனிமையைக் குலைப்பதுபோல், அபஸ்வரமாக ஒலித்தது விசாலியின் கட்டைக் குரல்.

    தன்னைத் தாக்கிய மனைவியின் குரல் காதில் விழுந்தும், தற்காலிகமாகச் செவிடாகி விட்டதுபோல் வாளாவிருந்தார் பராங்குசம். எல்லாம் முப்பது வருட இல்லற வாழ்வில் பெற்ற விவேகம்தான்.

    ஆரம்பத்தில், `ஏன் ​தெரியாது? ஒன்னைக் கல்யாணம் பண்ணிக்கலே?` என்று வீராவேசமாகக் கேட்டுவிட்டு, அந்த வார்த்தைகளால் தோன்றிய பூரிப்பை மறைக்க முயன்றபடி, `போதும். ரொம்பத்தான் வழியாதீங்க!` என்று அவள் கடிந்துகொண்டது மறக்கக் கூடியதா!

    அது ஏன், தான் எது செய்தாலும் இவளுக்கு மாற்றுக் குறைவாகவே படுகிறது என்று யோசித்து யோசித்து, அவர் முடியெல்லாம் உதிர்ந்ததுதான் கண்ட பலன். அவரால் விசாலியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

    தன்னால் அவளுக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு மிக, அவள் தன்னைக் குறைத்து மதிப்பிடும்போது அசட்டுச் சிரிப்பு சிரித்துவிடுவது, இல்லை ஊமையாகிவிடுவது என்று புத்திசாலித்தனமாக முடிவெடுத்திருந்தார்.

    இதனால், மனைவியிடம் பராங்குசத்துக்கு அன்பு இல்லை என்று எண்ணிவிடக் கூடாது.

    இல்லாவிட்டால், அவள் தற்செயலாகச் சொல்வதுபோல், “என் சிநேகிதி புவனா இருக்காளே, மாசாமாசம் மாரிப், போர்ட் டிக்ஸன் (PORT DICKSON), பங்கோர்னு (PANGKOR) ஏதாவது பீச்சுக்குப் போறாளாம். அவ மகனுக்கு ஆடிசம்னு ஏதோ வியாதியாம். தானே பேசிக்குவான். அப்படியே பேசினாலும், ரோபாட் பேசறமாதிரி, உணர்ச்சியில்லாமதான். யார்கிட்ட என்ன பேசறதுன்னு ​தெரியாது. டாக்டர் சொன்னாராம், அடிக்கடி கடல்ல குளிச்சா, நல்ல உடற்பயிற்சி, அதனால அவனும் கட்டுக்கடங்கி இருப்பான்னு!” என்று, விசாலி ஏக்கத்துடன் விவரித்தபோது, அவளைக் கேட்காமலேயே தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த செராட்டிங் (CHERATING) கடற்கரைக்கு அவளை அழைத்துப் போக திட்டமிட்டிருப்பாரா!

    அவள் தோழி போகாத இடம் என்பதால், விசாலி அவளிடம் பெருமையாகப் பேசிக் கொள்ளவும் முடியும் என்று கணக்குப் போட்டிருந்தார்.

    “இப்ப எதுக்கு கடலும், மண்ணாங்கட்டியும்?” என்று முதலில் பிகு செய்துகொண்டவள், கோலாலும்பூர் புடு (PUDU) பகுதியிலுள்ள வெளியூர் பஸ் நிறுத்தத்துக்கு வந்ததும் கலகலப்பானாள்.

    `ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் ​தெரியுதா?` என்று அன்று பூராவும் அவள் கேட்காததுபற்றி பராங்குசத்துக்கு ரொம்ப மகிழ்ச்சி. பேருந்தின் முன்னிருக்கையில் விரல்களால் தாளம் போடலானார்.

    சும்மாவா நாட்டுக்கு `மலாயா` என்று பெயர் வைத்திருந்தார்கள்! மலைப் பாதையில் சுற்றிச் சுற்றிப் போனபோது, விசாலிக்குத் தலைசுற்றல் வந்தது. நல்லவேளை, அவர் தாராளமாக பன்னிரண்டு வெள்ளி கொடுத்து, ஒரு கிலோ திராட்சைப் பழத்தை வாங்கி வந்திருந்தார். மனைவி ஒரு விரலால் நெற்றியைச் சுட்டி, சுழற்றும் போதெல்லாம், ஒரு பழத்தை அவள் வாய்க்குள் போட்டார்.

    பஸ்ஸிலிருந்து இறங்கியவுடனேயே விசாலிக்குத் தெம்பு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், “ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் ​தெரியுதா? கடற்கரைக்குப் போக ஆசையா இருக்குன்னு ஒங்ககிட்ட வந்து நான் கேட்டேனா? வயத்தைப் புரட்டுது. டிவி தொடர்வேற விட்டுப் போயிடும்,” என்று பாய்ந்திருப்பாளா?

    அவள் பழையபடி ஆனதில் அவருக்குத் திருப்தியாக இருந்தது.

    `நான் என்னம்மா கண்டேன், இந்த பஸ்காரன் டோலுக்குப் பயந்து, இப்படி சுத்திச் சுத்தி வருவான்னு!` என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டார். உரக்கச் சொல்லி, அதற்கு வேறு அவள் ஏதாவது பதிலடி கொடுத்து வைத்தால்?

    `மௌனம் தங்கத்திற்குச் சமானம்,` என்று ஆங்கிலத்தில் சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்!

    கடற்கரையிலேயே அமைந்திருந்த சிறு சிறு மர வீடுகளுள் ஒன்றில் நுழைந்தார்கள். மலாய் கம்பத்து (கிராமிய) பாணியிலான குடில். தரையிலிருந்து மூன்றடி மேலே இருந்தது. எல்லாம், வருடம் முழுவதும் கொட்டும் மழைக்கான எச்சரிக்கைதான். வீட்டைத் தாங்க, நான்கு மூலைகளிலும் மரத்தூண்கள். அதன் அடியில், தாய்க்கோழியின் பின்னால், ஆசிரியரைப் பின்தொடரும் சிறு பிள்ளைகள்போல், கோழிக்குஞ்சுகள் அணிவகுத்துச் சென்றன.

    அந்தப் புதுமாதிரியான சூழ்நிலையில், விசாலி குதூகலித்தாள். “தேவலியே! ஒங்களுக்குக்கூட உருப்படியா ஒரு காரியம் பண்ணத் ​தெரியுதே! எப்படி இந்த இடத்தைப் பிடிச்சீங்க?” என்று அவள் பாராட்டியபோது, சொர்க்கமே ​தெரிந்தது பராங்குசத்திற்கு.

    காலையிலும், மாலையிலும் சமுத்திர ஸ்நானம், இடையில் சாப்பாடு, தூக்கம் என்று பொழுதை உல்லாசமாகக் கழித்தார்கள். இந்திய உணவு கிடைக்காததை விசாலி ​பெரிது பண்ணவில்லை என்பது பற்றி பராங்குசத்துக்கு நிம்மதி.

    சில சமயம், அவர்கள் குடில் வாசலிலிருந்த வராந்தாவில் போடப்பட்டிருந்த நிறம் மங்கிப்போன பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்தார்கள், ஓய்வாக. ஜட்டி மட்டுமே அணிந்து, அல்லது முழு நிர்வாணமான மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், மணலில் வீடு கட்டி, அவைகளின்மீது சிப்பிகளையோ, அல்லது கடற்கரையைச் சார்ந்து இயற்கையாகவே வளர்ந்திருந்த சவுக்கு மரங்களின் கூரான இலைகளையோ வைத்து அழகுபடுத்துவதை கண்கொட்டாது பார்த்தபடி இருந்த விசாலி ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

    அதை ஓரக்கண்ணால் கவனித்த பராங்குசத்துக்கு அவள்மேல் பரிதாபம் பொங்கியது. `நல்லா தூங்கினியா?` `அடுத்த தடவை பினாங்கு போகலாம், என்ன? அங்க சாப்பாடு நல்லா இருக்கும்,` என்று பரிந்தார்.

    மூன்று இரவுகள் போனதே ​தெரியவில்லை.

    முதல் நாளே விசாலி கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள், `என்னால இனிமே அந்த பாடாவதி பஸ்ஸில ஏற முடியாது. ஏதாவது டாக்ஸி பாருங்க!` என்று.

    அவளது கட்டளையைச் சிரமேற்கொண்டு, இந்த வாடகைக் காரை ஏற்பாடு செய்திருந்தார் பராங்குசம்.

    வண்டியோட்டியை ஒரு பார்வை பார்த்தாள் விசாலி. அவ்வளவுதான். (இப்போது கதையின் முதல் வரியை நினைவுபடுத்திக் கொள்ளவும்).

    கணவர் பரிதாபமாக, “இப்பல்லாம் இங்கேயிருந்து கே.எல் (K.L, கோலாலும்பூர்) போக நானூறு வெள்ளியாம். 280 கிலோமீட்டர் தொலைவில்ல! இவன் ஒருத்தன் மட்டும் முன்னூறு சொன்னான். அதான்..,” என்று இழுத்தார். `இதுக்கே பஸ் கட்டணத்தைவிட மூன்று மடங்கு அழணும், ​தெரியுமா? ஒன் பிடிவாதத்தினாலதான் இப்படி!` என்ற விமரிசனத்தை சாமர்த்தியமாக மறைத்தார்.

    “இந்த ஆளோட முகமே சரியா இல்ல. எலும்பா இருக்கான். கண்ணு வேற கலங்கி இருக்கு. சரியான போதைப் பித்தன்! எப்படித்தான் அவ்வளவு தூரம் ஓட்டப் போறானோ!” டிரைவர் தமிழனில்லை என்ற ​தைரியத்தில், அவள் அங்கலாய்ப்பு உரக்கவே ஒலித்தது.

    பராங்குசத்துக்குக் கூசியது. ஒருவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, அவரைப் பற்றி இழிவாகப் பேசுவது யாராக இருந்தாலும்… அது அவரது ஆசை மனைவியாகவே இருந்தாலும்… அது தப்புதான் என்று தோன்றிற்று அவருக்கு. ஆனால், அவள் வாயை அடக்கப்போய், அவள் ஏட்டிக்குப் போட்டியாக கத்த ஆரம்பித்தால்.., மொழி ​தெரியாதவராக இருந்தாலும், இன்னொருவரால் புரிந்துகொள்ள முடியாதா, என்ன!

    மௌனம் என்ற ஒன்றுதான் பல சமயங்களில் எப்படி கை கொடுக்கிறது என்ற அயர்ந்துபோய் அமர்ந்திருந்தார்.

    காரோட்டி, “ஸாயா (நான்).. யாஹ்யா!” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கையை நீட்டியபோது, விசாலி திகைத்துப்போனாள். ஒரு வினாடி தயங்கிவிட்டு, கையை நீட்டினாள்.

    முன் கதவைத் திறந்து, பராங்குசம் ஏற யத்தனித்தபோது, “இந்த புரோடான் ஸாகா (PROTON SAGA, மலேசியாவில் தயாரிக்கப்படும் கார்), அதோட டிரைவர் மாதிரியே, பாத்தா பரிதாபமா இருக்கு. பின்னால ஒக்காந்தா, எனக்கு மறுபடியும் வயத்தைப் புரட்டும். என்னால முடியாதுப்பா!” என்றபடி, அவரைத் தள்ளாத குறையாக முன்னால் ஏறிக்கொண்டாள். `அம்பது வயசு ஆகப்போகுது. ஆம்பளைங்க பக்கத்தில ஒக்காந்தா, என்னா தப்பு! அதான் கையைக் குலுக்கியாச்சே!` என்று முணுமுணுத்துக்கொண்டாள்.

    காரை ஓட்ட ஆரம்பிப்பதற்குள், காரோட்டி நிறைய நிபந்தனைகள் விதித்தார்.

    “நான் மெதுவாத்தான் போவேன். முந்தி பென்ஸ் கார் வெச்சிருந்தேன். அதில நூத்துப் பத்து என்ன, நூத்து நாப்பதுகூடப் போகலாம். ஆனா, இதில..,” என்று சிரித்தவர், “இன்னிக்குக் காரை மெகானிக்கிட்ட விடறதா இருந்தேன்,” என்று ஏதோ சாக்குபோக்கு சொல்ல ஆரம்பித்தார்.

    உள்ளே குளிர்சாதன வசதி இருந்ததென்று பெயர்தான். சன்னல் கண்ணாடியை முழுமையாக அடைக்க முடியாதுபோக, வெளியே வீசிய அனல்காற்றும், அந்த நெடுஞ்சாலையில் விரைந்துகொண்டிருந்த பிற வாகனங்கள் பெருமூச்சாக விட்ட புகையும் உள்ளே நுழைந்தன.

    பற்களைக் கடித்துக்கொண்டு, விசாலி தூங்க முயற்சித்தாள். மனதுக்குள் சுலோகம் சொல்லிப் பார்த்தாள். இருப்பினும் ஒன்றரை மணிக்குமேல் அவளால் தாக்குப்பிடிக்க இயலவில்லை.

    “நல்ல காடி வெச்சிருக்கான் இந்த ஆளு! பஸ்ஸே தேவலாம்னு இருக்கு,” என்று, தலையைத் திருப்பி, கணவரிடம் கூறினாள்.

    “என்ன சொல்றாங்க?” என்று விசா​ரித்தார் யாஹ்யா.

    “பாத்ரூம் போகணுமாம்!” சமயோசிதமாகப் புளுகினார் பராங்குசம்.

    “கே.எல் போக இன்னும் எத்தனை நேரமாகும்?” இத்தனை நேரம் டிரைவரின் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்ததில், அவருடன் பேசும் துணிவு வந்திருந்தது விசாலிக்கு.

    “இன்னும் மூணு மணியாவது ஆகும். நாம்ப என்ன, வால்வோ கார்லேயா போறோம்?” என்று சிரித்துவிட்டு, “நீங்க ரெண்டுபேரும் போயிட்டு வாங்க,” என்று விடை கொடுத்தார்.

    கதவை உள்பக்கத்திலிருந்து திறக்கும் சாதனம் உடைந்து போயிருந்தது. அசட்டுச் சிரிப்புடன், “இன்னிக்குக் காரை மெகானிக்கிட்ட விடறதா இருந்தேன்,” என்றபடி, யாஹ்யா வெளியே வந்து, திறந்துவிட்டார்.

    “எனக்கென்னமோ சந்தேகமா இருக்குங்க. அந்த ஆளு பத்துப் பதினஞ்சு நிமிஷத்துக்கு ஒருவாட்டி எதையோ குடிக்கறான். எல்லாத்துக்கும் சிரிக்கறான். தண்ணியில ஏதாவது போதை மருந்து போட்டு கலக்கியிருப்பானோ?”

    அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாது, “அந்தப் பக்கம் இருக்கு,” என்று அநாவசியமாக, பெண் படத்தைக் கதவில் தாங்கியிருந்த கழிப்பறையைக் காட்டிவிட்டு, தன்பாட்டில் விரைந்தார் பராங்குசம்.

    விசாலி திரும்ப வரும்போது, அவள் கரத்தில் கொட்டையில்லாத கொய்யாத் துண்டங்கள் நிரம்பிய சிறிய பிளாஸ்டிக் கை.

    “இந்தாங்க!”

    கையை நீட்டினார் கணவர்.

    ஆனால், அவள் யாஹ்யாவை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தாள்.

    அவருடைய முகத்தில் நன்றி கலந்த முறுவல். “வேணாம்மா. என்னால சாப்பிட முடியாது!” என்றபடி, பல பற்களை இழந்திருந்த வாயைத் திறந்து காட்டினார். பின், “எனக்குத் தொண்டையில கான்சர்!” என்று அசாயாசமாகத் ​தெரிவித்தார். குரலில் வருத்தமில்லை. `இன்னிக்கு மழை வரும்,` என்று சொல்வதுபோல் இருந்தது.

    விசாலி அதிர்ந்தாள். பையைத் தவறவிட்டாள். நல்லவேளையாக, அது அவள் மடியில் விழுந்தது.

    “கீமோ சிகிச்சை குடுத்தாங்களா! அதில பல்லெல்லாம் போயிடுச்சு. என் வாயில உமிழ்நீர் சுரக்கிறதில்ல. அதனால, அப்பப்போ, கொஞ்சம் தண்ணியால நனைச்சுக்கணும்”.

    வருடந்தவறாது, கடலில் இருபதாயிரம் மைல் நீந்தி, மே மாதம் முதல் செப்டம்பர்வரை, இரவு வேளைகளில் செராட்டிங் கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆமையைப்போல, விசாலியின் தலை கழுத்துக்குள் நுழைந்தது.

    அதைக் கவனியாது, தன்பாட்டில் பேசிக்கொண்டே போனார் மற்றவர். “தொண்டையில ஓட்டை போட்டு, சாப்பாட்டை உள்ளே இறக்கலாம்னாங்க. எனக்குப் பிடிக்கல. வெண்டைக்காய், கீரை, கோபீஸ் எல்லாத்தையும் வேகவெச்சு அரைச்சு, சாதத்தோட திரும்பவும் ஒண்ணா அரைச்சுடுவேன். அதைக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஒரு மணி நேரம் பிடிக்கும். அதனால வீட்டை விடறதுக்கு முந்தி சாப்பிட்டுட்டுத்தான் புறப்படுவேன்”.

    “வீட்டுக்கு வெளியே வந்தா, என்ன சாப்பிடுவீங்க?” விசாலியின் குரல் மங்கியிருந்தது.

    “ஐஸ்கிரீம். இல்லாட்டி, நல்லா மசிச்ச உருளைக்கிழங்கு — கெண்டகி சிக்கன் கடையில கிடைக்குதில்ல!” என்று மகிழ்ச்சியுடன் ​தெரிவித்தார்.

    போத்தலைத் திறந்து ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரை அவர் வாயில் கவிழ்த்துக்கொண்டபோது, ஏதேனும் பேச வேண்டும்போல இருந்தது அவளுக்கு. “ஒங்க வீடு செராட்டிங்கிலேயே இருக்கா?” என்று கேட்டுவைத்தாள்.

    “நான் கே.எல்.காரன்தாம்மா.  ஒரு கார் கம்பெனியில ​பெரிய வேலையில இருந்தேன். என்னோட நிலைமை இப்படி ஆனதும், எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க — பெண்டாட்டி, பிள்ளைங்ககூட!” லேசான வருத்தம் குரலில். “பென்ஸ் காரையும் விக்க வேண்டியதாப்போச்சு. மத்தவங்க கையை எதிர்பாக்கறது அசிங்கம், இல்லியா? அதனால, இங்கேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கிட்டு இருக்கேன்”.

    “தனியாவா இருக்கீங்க?”

    யாஹ்யா ​​பெரிதாகச் சிரித்தார். “தனியாத்தானே வந்தேன்? தனியாத்தான் போகவும் போறேன்!” என்று தத்துவம் பேசிவிட்டுத் தொடர்ந்தார். “இது சின்ன கிராமம். அதனால மனுஷன் இன்னும் மனுஷனாவே இருக்கான். எனக்கு உடம்பு ரொம்ப முடியாட்டி, அக்கம்பக்கத்துக்காரங்க உதவி செய்வாங்க. நான் சொந்தமா தோட்டம் போட்டு, எனக்கு வேண்டியதைப் பயிரிட்டுக்கறேன். என் சிகிச்சை, மருந்துச் செலவுக்கு எல்லாம்… உடம்பு ஒத்துழைக்கறப்போ, இப்படி சவாரி ஏத்திக்கிட்டுப் போவேன். ஒரு நாளைக்கு ஐம்பது மாத்திரைகளை இல்ல விழுங்கித் தொலைக்க வேண்டியிருக்கு!”

    அங்கு சிறிது நேரம் மௌனம் நிலவியது. யாஹ்யா சொன்னவற்றை சீரணித்துக்கொள்ள முயன்றுகொண்டிருந்தாள் விசாலி. சிறிது யோசனைக்குப்பின், “நமக்கு ஏன் இப்படி வந்திடுச்சுன்னு ஒங்களுக்கு வருத்தமா இல்ல?” என்று துருவினாள்.

    “வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது! சாகாம யாராவது இருக்காங்களா? நாம்ப சாகறதுக்கு ஏதோ ஒரு வழி. அவ்வளவுதான். ஒல்லியா இருந்தா, ஏன் இப்படி ஒடிஞ்சு விழறமாதிரி  இருக்கேன்னு கேள்வி. முந்தி ரொம்ப குண்டா இருந்தேன். இருநூறு பவுண்டில்ல! அப்ப, `ஏன் இப்படி குண்டோதரனா இருக்கே?`ன்னு கேட்டாங்க!” சிரித்தார்.  “ஏன், ஏன்னு கேட்டுட்டு இருந்தா, அதுக்கு முடிவே இல்ல,” என்று அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிவிட்டு, “இப்படிப் பேசிக்கிட்டே மெதுவா கார் ஓட்டறது ரொம்ப ரிலாக்ஸிங்கா இருக்கு. நான் ஏத்திட்டுப் போறவங்க எல்லாருமே ஒங்கமாதிரிதான் — அன்பாப் பழகறாங்க. அவங்க கஷ்டத்தை எங்கிட்ட சொல்லிக்கிறாங்க. போன வாரம் பாருங்க..!” என்று ஆரம்பித்தார்.

    பேசிக்கொண்டே வந்ததில், கண்ணாடி சரியாக மூடாத ஜன்னல்வழி உள்ளே வந்த புகையோ, வீடு வந்து சேர்ந்ததோ எதுவுமே ​தெரியவில்லை விசாலிக்கு. கைகளைக் கூப்பியபடி, யாஹ்யாவிடம் விடைபெற்றுக்கொண்டாள்.

    “சாமானை நான் எடுத்துக் குடுக்கறேன்,” என்றபடி யாஹ்யா பின்னால் விரைந்தபோது, விசாலி கணவரைப் பார்த்து முறைத்தாள். “நீங்க போய் எடுங்க. அதான் மூணு நாள் ஒரு வேலையும் செய்யாம, ஜாலியா இருந்தாச்சில்ல! இன்னும் என்ன சோம்பல்?”

    கார் கண்ணிலிருந்து மறைந்தபின், “எவ்வளவு குடுத்தீங்க?” என்று கேட்டாள். குரல் அனாவசியமாக, ரகசியமாக ஒலித்தது.

    “அதான் அங்கேயே சொன்னேனே — முந்நூறுதான்!” என்று அவர் அலட்சியமாகக் கூறியபோது, சற்றும் எதிர்பாராதவண்ணம், அவர்மேல் பாய்ந்தாள் தர்மபத்தினி.

    “நாம்ப எல்லாம் ஒரு தலைவலி, காய்ச்சலுக்கே என்ன அமர்க்களப்படுத்தறோம்! அவரு சொந்தக்காலில நிக்கறாரு, இவ்வளவு ​பெரிய வியாதியோட போராடிக்கிட்டு!” ஆத்திரத்தில் பெருமூச்சு வாங்கியது அவளுக்கு. “எதையுமே கூழா அரைச்சுத்தான் சாப்பிடுவாராமே, பாவம்! கூட ஒரு அம்பதோ, நூறோ போட்டுக் குடுத்திருந்தா குறைஞ்சா போயிடுவீங்க? ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் ​தெரியுதா?”.

    Share
  • குறவன் பாட்டு – 18

    கரும்பு ஒடித்தல்

     

    மலையில் புதராய் வளர்ந்த கரும்பினில்,

    கணுக்கள் தொலைவினில் அமைந்த கரும்பினை,

    வேருடன் பிடுங்கித் தோகையை ஒடித்து,

    மன்மதக் கரும்பைத் தன்வசம் கொண்டாள்!                                 140

     

    பலாச்சுளை சேகரித்தல்

     

    தொடர்ந்து நடந்த குறத்தியின் நாசியை,

    திரண்டு கனிந்த பலாவின் வாசம்,

    திகட்டத் திகட்டத் தாக்கியதாலே தன்னைமறந்து,

    வாசம் வீசிய திசையை நோக்கி நடந்தாளே!                                                                                       141

     

    முள்ளாய் இருந்த மேல்தோல் தேய்ந்து,

    மெலிந்து கனிந்து வெடித்த நிலையிலும்,

    தாயைப் பிரிய மனமற்ற சேய்போல்,

    சுளைகள் சடையில் ஒட்டிக் கொண்டன!                                                                                 142

     

    குறமகள் கரும்பின் அடிக்குப் பணிந்து,

    கனியது கிளையில் தங்கிக் கொள்ள,

    அருவியில் குதிக்கும் சிறுவர்கள் போல,

    வரிசையில் சுளைகள் தரையில் குதித்தன!                                                                                          143

     

    தரையில் விழுந்த சுளைகளை எடுத்து,

    ஒட்டிய மண்ணை ஒருமுறை துடைத்து,

    தலையில் சுமந்த கூடையில் வைத்து,

    தன்வழிப் பயணத்தைத் தொடர்ந்தாள் குறத்தி!                                                                                   144

     

    இஞ்சி தின்ற குரங்கு

     

    மஞ்சளொடு இஞ்சியும் வளர்ந்திருந்த புதரில்,

    மந்தி ஒன்று வாசம் கண்டு,

    மஞ்சள் என்று எண்ணிக் கொஞ்சம்,

    ஆசையோடு “இஞ்சி தின்ற குரங்கு”                                         145

     

    இஞ்சி தின்ற மந்தி, கோபம்

    கொண்டு, புயலடித்த வயலைப் போல்

    புதர் பறித்துப் பிய்த்தெறிய, எளிமையாக

    மஞ்சளொடு இஞ்சி கொண்டாள் குறத்தி!                                                                  146

     

    பப்பாளி மற்றும் சுண்டைக்காய் சேகரித்தல்

     

    அடி பெருத்து நுனி சிறுத்த,

    அழகான பப்பாளி மரம் கொண்ட,

    பழுக்காமல் திரண்டு நிற்கும் காய்களை

    அலுங்காமல் அடிஎற்றிப் பறித்து நின்றாள்!                                                                                            147

     

    மரம் போலப் பெரிதாய் வளர்ந்து,

    பெரும் புதராகப் பரவி விரிந்து,

    பருந்தின் நகம் போல முட்கள் கொண்ட,

    சுண்டைச்செடி உலுக்கிக் காய் கொண்டாள்!                                                                                          148

     

    ஊனுண்ண மறந்த குறத்தி

     

    தேனுண்டு, உயர் தினையுண்டு, அடர்

    பாலுண்டு, மலர் பலவுண்டு, இன்னும்

    காயுண்டு, கனியுண்டு சுவைத்துக் களித்து

    ஊனுண்ணும், மீனுன்னும் ஆசைதுறந்த குறத்தி!                                                                            149

    Share
  • பகவான் பாபா அவதார தினம் – நவ.23

    சு.ரவி

    Parthi Nayakan 5 Jul 09 2

    Sathya Sai Feb 09

     

     

     

     

     

    வணக்கம், வாழியநலம்

    தன்னை ஏற்க மறுப்பவர் உள்ளத்திலும் கூட எப்போது உட்புகுந்தார் என்று உணர ஏலாது, ஒரு ஊதுவத்தியின் புகை இல்லம் முழுவதும் வியாபிப்பது போல அவர் தம் வாழ்விலும் புகுந்து நிறைந்து பகவான் ஆக்ரமிக்கிறார் என்பது நான் கண்கூடாகக் கண்ட உண்மை.

    பேரான்மா ஒன்றின் சங்கல்ப பலத்தால் மட்டுமே மானுடரால் செயற்கரிய மாபெரும் செயல்கள் நிறைவேறும் என்று பாபா பலமுறை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு, புனே நகர்ப்புறதே ஹட்ஷி என்ற திருத்தலத்தில் பாண்டுரஙன் மற்றும் ஷீரடி பாபா ஆலயங்களைக் குடமுழுக்காட்டித் திறந்து வைத்து பாபா 2 தினங்கள் உரையாற்றினார்.

    அவ்விரு தினங்களில் அக் குக் கிராமத்தில் கூடிய பக்த்ர்கள் எண்ணிக்கை 75000த்துக்கும் மேலே. ஒரே மாத அவகாசத்தில், அந்த புறநகர் கிராமத்தில் போக்குவரத்து சாலை வசதி, கார் பார்க்கிங் வசதி, அத்தனை ஜனங்களுக்கும் டாய்லெட் மற்றும் சுகாதார வசதி, மருத்துவ வசதி, காலை முதல் இரவு வரை வயிறார சாபுதானா கிச்சடி (ஒவ்வொருவருக்கும் க(த)ட்டுப்பாடில்லாமல் 4-5 தேங்காய் பர்பிகள் உட்பட)..

    நேரில் பார்த்தவர்களுக்குத்தான், இவ்வனைத்தும் பகவான் பாபா ஒருவரின் சங்கல்ப பலத்தால் மட்டுமே சாத்தியம் என உணர முடியும்.

    பகவான் பாபாவின் சுந்தரம் பஜனைகளில் உள்ளம் ஒன்றித்திளைத்த தினங்களும், புட்டபர்த்தியில் அதிகாலை நகரசங்கீர்த்தனமும், பாபா தரிசனமும் நெஞ்சில் நிழலாட, பகவானின் பாதகமலங்களை நினைந்து அவர்தம் திரு உருவக் கோட்டோவியங்களை சமர்ப்பிகிறேன்!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…84

    சக்தி சக்திதாசன்

     

    epickels immig1

     

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    ஒரு நாட்டின் மக்கள் இன்னொரு நாட்டிற்கு பல்வேறு காரணக்களினால் இடம் பெயர்கிறார்கள்.

    நானும் இத்தகிய ஒரு இடப்பெயற்சிக்கு உள்லானவன் எனும் காரணத்தினால் இப்பக்கத்தின் இன்னல்களை உணர்ந்தவன்.

    தாய், தந்தை , சுற்றம், சூழல் என நாம் வாழ்ந்த பாதுகாப்பான வலயத்தை விட்டு வெளியேறுவது என்பது சுலபமான செயல் அல்ல.

    புத்தம் ப்துச்சூழல், புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை முறைகள் எவர்ரின் மத்தியில் வந்து விழும்போது தொட்டி மீன் ஆழிக்குள் விழுந்த கதை தான்.

    ஆனால் அதேசம்யம் என்ன காரணக்களுக்காக இவ்விடப்பெயர்வு நிகழ்கிறது என்பதைப் பொறுத்தே இவ்விடப் பெயர்விற்கு உள்ளானவர்களின் மனதின் உணர்வுகளும் அமைகிறது.

    உதாரணமாக ஈழத்து போர்ச்சூழலினால் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த அகதிகளின் மனநிலையில் அவர்கள் பாதுகாப்பான சூழலன்றி பாதுகாப்பின்மையை விட்டு வெளியேறியதால் அவர்களின் மனம் ஓரளவு ஆறுதலான உணர்வை வெளிப்படுத்தலாம்..

    ஆயினும் தாம் பிறந்து வழளர்ந்த தாய்மண்ணை விட்டு வெளியேறும் வேதனை மனதினை வாட்டுவதையும் சகிக்க முடியாது.

    அதேசமயம் தமது நாட்டில் தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வழியின்றி வசதி மிக்க நாடொன்றிற்கு இடம்பெயர்ந்து அதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தும் வழியைச் தேடிக் கொள்பவர்கள் மனதில் இவ்விடப்பெயர்ச்சி நிச்சயம் ஓரளவு மகிழ்ச்சியத் தோற்றுவிக்கத்தான் செய்யும்.

    ஆனால் அதேசமயம் இவ்விடப்பெயர்ச்சிக்குள்ளாகும் மக்களைத் தாங்கிக் கொள்ளும் அந்த மாற்ராந்தாய்மண்னைச் சார்ந்தவர்களை இவ்வெளிநாட்டு மக்களின் வருகை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் ஆழ்ந்து கவனிக்கும் தேவையுள்ளது.

    நான் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த காலம் ஒரு மூன்று தாசாப்தங்களுக்கு மேலானது ஆனால் எனக்கு முன்னால் இங்கே வந்து கால்பதித்தவர்களில் ஏராளம்.

    நான் வந்த காலத்திற்கும் இன்றைய காலத்திற்குமான இடைவெளியில் இங்கிலாந்து பலவிதமான சமூக மாற்றங்களுக்குள்ளாகியுள்ளது.

    இம்மாற்றங்க|ள் கொடுத்த தாக்கம் இந்நாட்டின் மக்களின் மனக்களில் வெளிநாட்டவரின் குடியேற்றங்களை நோக்கிய பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மையே !

    ஆனால் இவ்வாறு இந்நாட்டு மக்கள் வெளிநாட்டவரின் குடியேற்றத்தை நோக்கிக் கொண்டுள்ள கருத்து ஓரளவு இக்குடியேற்றங்களுக்கு எதிராகத் திரும்புவது சரியா ?

    இக்கேள்விக்கு விடை நாம் வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் வகையிலேயே உள்ளது.

    நான் வாழும் ஊரில் அடுத்தடுத்து பேரூந்துகளில் அடுத்த ஊரைச் சேர்ந்தவர்கள் வந்து இறங்கும் போது எம் மனநிலை எப்படியிருக்கும் ?

    ஜயையோ ! இத்தனை பேர் எம்மூரில் வந்து தங்கி விட்டால் எனது வசதிகள் அனைத்தையும் இவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டி வந்து விடுமே ! என்று எண்ணுவதுதான் அடிப்படை மனித இயல்பு. இதற்கு நானும் விதிவிலக்கானவல்ல.

    இப்படி ஒரே நாட்டிற்குள் இருந்தும் வேற்றூர் மக்களின் மீது நாம் வேறுபட்ட பார்வை கொண்டுள்ளோம் . பின் எப்படி வேறிரு நாட்டிலிருந்து தம் நாட்டிற்குள் இலட்சக் கணக்கில் வந்திறங்கும் வெளிநாட்டவர் மீது இந்நாட்டு மக்கள் அபிமானமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் ?

    சரி இது ஒருபுறமிருக்க இங்கே வந்து இறங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இனிவரும் மக்களின் வருகைக்கு இந்நாட்டு மக்கள் ஆதரவளிக்கும் வகையில் நடந்து கொள்கிறோமா?

    இல்லை என்பதே பொதுப்படையான வாதம்.

    அதற்காக அனைவருமே அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் என்று கூற நான் விளையவில்லை.

    குறிப்பாக நாம் வாழும் சமுதாயத்துடன் எம்மை இணைத்துக் கொள்வதற்கான வழிமுறையில் மிகவும் அடிப்படையான மொழியையே நாம் கடைப்பிடிப்பதில்லை.

    இங்கு வந்திறங்கும் பல வேற்ரு நாட்டவர்கள் ஆங்கிலம் அறவே பேசத் தெரியாத்வர்களாக வந்திறங்குகிறார்கள் அதில் தவறொன்றுமில்லை ஆனால் இங்கு வாழத் தொடங்கியதும் இம்மொழியக் கர்ருக் கொள்வதர்கான முயற்சிகளில் இறங்குகிறார்களா?

    இல்லையானல் ஆங்கில மக்களுடன் சக நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசிப்பழகி தமது ஆங்கில மொழித்திறனை விரிவாக்கும் நடவடிக்கைகளில் இறங்குகிறார்களா ?

    பொதுவாக தமது சமூகத்தினிடையே தம்மைப் புதைத்துக் கொள்ளும் பலரைத்தான் காண்கிறோம்.

    இன்றைய காலத்தில் இங்கிலாந்தில் வேற்ரு நாட்டினர் பலர் வியாபார ஸ்தலங்களை நடத்தி வருகிறார்கள் அதனால் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் அமைப்புகளுக்குள் தம்மை முடக்கி விஉவதனால் தாம் ஆங்கிலம் தெரியாமலும் பிழைப்பை நடத்தி விடக்கூடிய ஒரு நிலையில் தம்மைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

    இது அவர்களின் வாழ்வின் காலத்தை ஓட்டுவதர்கு ஏதுவாகலாம் ஆனால் அவர்களின் அடுத்த தலைமுறையின் வாழ்வைச் சிக்கலுக்குள் தள்ளத்தான் செய்கிறார்கள்.

    அதற்காக தமது சமூகத்தைச் சார்ந்த காலாச்சாரங்களைத் தூக்கி எறிய வேண்டும் என்பதல்ல எனது கருத்து. அக்காலாச்சார அடையாளங்களை தமது முகவரிகளாக வைத்துக் கொள்ள வேண்டுமேயல்லாது அவற்ரை தமது முன்னேற்றத்தைத் தடுக்கும் கால் விலங்காக மாற்றிக் கொள்ளக்கூடாது.

    இத்தகைய ஒரு முடக்கமே இந்நாட்டு மக்களின் அவர்கள் மீதான பார்வையில் ஒரு வித்தியாசத்தைத் தோற்றுவிக்கிறது.

    எரிக் பிக்கில்ஸ் எனும் சமூகங்களுக்கான மைச்சர் சமீபத்தில் ஒரு கொள்கையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். .

    இங்கிலாந்தில் இயங்க்கும் பல்வேறு சூப்பர் மார்க்கெட் எனப்படும் பல்ப்பொருள் அங்காடிகளுக்கு அரசாங்கம் நிதியளிப்பதன் மூலம் அந்நிலையங்களில் வேற்ரு நாட்டவர் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்வதர்கான பயிற்றுனர்களின் சேவையை அந்நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அளிப்பது எனபதே இக்கொள்கை.

    இதன் பிரதிகூலங்கள் அனுகூலங்க:ளைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் ஊடகங்களில் எழுந்துள்ளன.

    இக்கொள்கை பயனுள்ளதா ? இல்லையா ? என்பதல்ல எனது கருத்து. ஒரு அடிப்படை உண்மையின் மீதான வாதத்தை சமூகத்தின் மத்த்கியில் அமைச்சரின் இந்த கொள்கைப்பிரகடனம் ஏற்படுத்தியுள்ளது ஒரு பயனுள்ள விடயமே !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • வாழ்க்கை நலம் – 36

    குன்றக்குடி அடிகள்

    36. நடுவின்றி நன்பொருள் விரும்பற்க!

     

    வெஃகல் – பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல், அதாவது தனக்கு உரியன அல்லாதனவற்றிற்கு ஆசைப்படுதல் என்பது பொருள்! ஆம்! ஒருவர் மற்றவருடைய பொருளை விரும்புதல் களவுக்குச் சமம்! இதனால் வாழ்க்கை நிலைகளும் மாறிக் களவு, காவல் என்ற இழி நிலைகள் தோன்றும். பூட்டுக்கள் பெருகலாம். ஆனாலும் களவு நின்றபாடில்லை ஏன்? பொருள் என்பது உழைப்பின் பயன். உழைப்பாலன்றிப் பொருள் ஈட்ட விரும்புபவன் அறநெறி நிற்பவன் அல்லன். அதுமட்டுமன்றிப் பிறர் பொருளை விரும்புபவன் தனது அறிவை இழக்கின்றான்.  ஆற்றலை இழக்கின்றான். காலப்போக்கில் மானத்தையும், பெருமையையும் இழக்கின்றான்; பழியைத் தேடிக் கொள்கின்றான்.

    உழைத்துப் பொருள் ஈட்டாது பிறன் பொருளை விரும்புபவர்கள் பொருளுடையாரைத் துன்புறுத்துவதும் செய்வர். ஈரநெஞ்சினை அறவே இழந்து வெறித்தனமாக நடந்து கொள்வர். அன்பும் அருளும் இவர்களுடைய பண்புகளாக அமைந்து விளங்கா.

    இங்ஙனம் பிறன் பொருளுக்கு ஆசைப்படுபவர்கள் அதனால் அடையும் துன்பமும்  பலப்பல. யாருடைய பொருளை விரும்புகிறார்களோ, அவரிடமிருந்தும் துன்பம் வரும். பிறர் கைப்பொருளை நம்பி வாழ்ந்தமையால், தாம் பொருளீட்டும் முயற்சியின்மையின் காரணமாக அவலம் வளரும், ஆதலால் பிறர் பொருள் மாட்டு உள்ள விருப்பம் இன்பத்தைத் தருவது இல்லை; மாறாகத் துன்பம் தருகிறது.

    பொருளியல் நியதிகளைச் சார்ந்தே ஒழுக்கங்கள் வளர்கின்றன. அறிவு, ஆற்றல்கள் வளர்க்கின்றன. சமுதாயத்தினரிடையில் நம்பிக்கையும், நல்லெண்ணமும் வளர்கின்றன. ஆதலால் உழைத்து வாழ்தலே வாழ்வு. பிறர் பொருளை எடுத்துக்கொள்ள விரும்புதல்  – உதவியாகப் பெறுதல், இனாமாகப் பெறுதல் ஆகியனவும்கூட வெறுக்கத் தக்கனவேயாம்.

    பிறர் பொருள் ஒரே வழி நம் கையகப்படினும் கூடச் சிறிது பொழுதே இன்பந்தரும்.  அந்த இன்பத்தினைத் தொடர்ந்து பெருந்துன்பம் வரும் என்பதறிக. நல்வாழ்வின் முன் இன்மை என்பது ஒரு பெரிய குற்றமன்று. இன்மையும் கூட மன்னிக்கப்பெறும். ஆனால் நடுவின்றிப் பொருள் வெஃகுதல் தாம் பிறந்த குடியையே அழிக்கும். மேலும் பல குற்றங்களையும் தரும்.

    ஆதலால், பிறர் பொருளை எந்த வகையிலும் அடைய விரும்பற்க! உழைத்துப் பொருளீட்டி வாழ்தலையே விரும்புக.

    “நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
    குற்றமும் ஆங்கே தரும்”
    (குறள்  –  171)

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

    Share
  • ‘ஏடிஎம் / ஃபோன் பேங்கிங்’ அபாயங்களும் தீர்வுகளும்

    அண்ணாகண்ணன்

    (‘ஏடிஎம் / போன் பேங்கிங்’ அபாயங்கள் என்ற தலைப்பில் 2009 ஜனவரி 30 தேதியிட்ட சென்னை டைஜஸ்ட் வார இதழில் இந்தக் கட்டுரை வெளியானது. அதன் திருத்திய, இற்றைப்படுத்திய வடிவம் இங்கே)

    பெங்களூருவில் 2013 நவம்பர் 19 அன்று கார்ப்பரேஷன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் 38 வயதுடைய ஜோதி என்ற பெண் தாக்கப்பட்டுள்ளார். ஜோதி உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், அதே மையத்தில் நுழைந்த மர்ம நபர், சுருள் கதவினை (ஷட்டரை) இறக்கி, அரிவாளால் அவரைத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்தவற்றைப் பறித்துச் சென்றுள்ளார். அந்நேரத்தில் அங்கே காவலரும் இல்லை. இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, ஏடிஎம் மையங்களில் பற்பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

    bangalore_atm_attack_650

    அதற்கு முன், வேறு சிலவற்றைக் கவனிக்கலாம்.

    இந்தியா முழுவதும் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கு எந்திரங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. அது தொடர்பான புகார்களும் நீள்கின்றன. பண அட்டையாளரை மிரட்டிப் பணம் எடுத்துக் கொள்ளை; ஏடிஎம்மில் கள்ள நோட்டுகள்; பண அட்டைகள், எந்திரத்தில் மாட்டிக்கொள்ளுதல்; ஒரு முறை விவரங்களை உள்ளிட்டுப் பணம் வராததால் அடுத்த முறை மீண்டும் விவரங்களை உள்ளிட்டால் கணக்கில் இரு முறை பணம் கழிந்தது…. எனப் பல வகைப் புகார்கள். இவை அல்லாமல் வேறு பல சிக்கல்களும் உள்ளன.

    ஏடிஎம் வங்கிச் சேவையைத் தொடங்கியதிலிருந்தே வங்கிகள் ஒர் எச்சரிக்கையை விடுத்து வருகின்றன. உங்கள் தனி அடையாள எண்ணை (PIN – Personnel Identification No.) எவரிடமும் சொல்லக் கூடாது. எங்கும் எழுதி வைக்கக் கூடாது… எனப் பல அறிவுரைகள்; பத்திரிகைகளில் விளம்பரங்கள். ஆனால், ஏடிஎம் மையங்களின் வடிவமைப்பு, அவர்களின் அறிவுரைகளுக்கு மாறாக உள்ளது.

    2008இல் ஐசிஐசிஐ வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்திற்குச் சென்றேன். இந்த வங்கியின் மையங்களில் தொலைபேசி வங்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. சுவரில் சுமார் 5 அடி உயரத்தில் ஒரு தொலைபேசி நெடுக்குவாட்டில் பொருத்தப்பட்டிருந்தது. அதை எடுத்து ஒரு சேவை தொடர்பாக அவர்களை அழைத்தேன். தானியங்கிக் கருவி என்னைச் சோதிக்கும் முகமாக, என் பண அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை உள்ளிடச் சொன்னது. உள்ளிட்டேன். அடுத்து, என் தனி அடையாள எண்ணை உள்ளிடச் சொன்னது. உள்ளிட்டேன். அப்போது அந்த அறையில் உள்ள மூன்று பண எந்திரங்களிலும் பணம் எடுக்க ஆட்கள் நின்றிருந்தார்கள். காசோலை இடுகிறேன் என இன்னும் இருவரும் நின்றிருந்தார்கள். காவலர் ஒருவரும் வாயிலில் நின்று கவனித்துக்கொண்டிருந்தார். கதவுக்கு வெளியே ஓர் இருபது பேருக்கும் மேலாக வரிசையாக நின்றிருந்தார்கள். கண்ணாடிக் கதவு. வெளியே நிற்பவரும் உள்ளே நடப்பதைத் துல்லியமாகக் கவனிக்க முடியும்.

    சுவரில் எல்லோரும் பார்க்கும் படியாக அமைந்திருந்த தொலைபேசியில் என் தனி அடையாள எண்ணை உள்ளிட்டுள்ளேன். அந்தக் கணத்தில் உள்நின்றவர்களும் கதவுக்கு வெளியே நின்றிருந்தவர்களும் என் தனி அடையாள எண்ணை எந்தச் சிரமமும் இல்லாமல் எளிதில் பார்த்திருக்க முடியும். அதன் பிறகே அந்த விபரீதத்தை உணர்ந்தேன்.

    தொலைபேசி வங்கிச் சேவையில் தானியங்கிக் கேள்விகளுக்கு இந்த 16 இலக்க எண்ணும் தனி அடையாள எண்ணும் போதுமானது. அடுத்து நான், வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு அதிகாரியிடம் பேச விரும்பினேன். அவர் தொடர்பில் வந்ததும் என்னைச் சோதிக்கும் முகமாக, என் பிறந்த நாள், என் விண்ணப்பத்தில் நான் அளித்த கமுக்கப் பதில்கள் சிலவற்றைக் கேட்டுப் பெற்றார். நான் கூறிய பதில்களை அந்நேரம் அங்கு இருந்த அனைவரும் கேட்டிருக்க முடியும். இதுவும் அபாயமானது.

    (இந்த ஆபத்து, ஏடிஎம் மையங்களில் மட்டுமின்றி, பொதுவாக எல்லா இடங்களிலும் உள்ளது. வீட்டில் நம் தனியறையில் இப்படி பேசலாம். அலுவலகத்திலோ, பொது தொலைபேசி மையங்களிலோ, இன்ன பிற பொது இடங்களிலோ தொலைபேசி வழி வங்கிச் சேவையைப் பயன்படுத்துவதில் ஆபத்துகள் உண்டு. இந்தக் கோணத்தில் வங்கிகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்).

    ஐசிஐசிஐ வங்கி, திடீரெனத் தன் ஏடிஎம் மையங்களில் உள்ள தொலைபேசி வசதியைத் திரும்பப் பெற்றுவிட்டது. இது குறித்து எந்தத் தகவலோ, விளக்கமோ இல்லை.

    ================================

    இது குறித்து ICICI வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு 28.9.2008 அன்று நான் எழுதிய மடல் இது:

    I want to know why u have disconnected all the telephone lines at ur ATMs?

    Why u didn’t informed about this to ur customers? Even ATM security person don’t know why it was disconnected?

    When u r going to give again?

    ================================

    இதற்கு 30.9.2008 அன்று Jagdish P., Customer Service Manager, ICICI Bank Limited அளித்த பதில் வருமாறு:

    Dear Mr. Kannan,

    We understand your concern.

    We are deeply concerned with the issues raised by you in your e-mail. We would like to assure you that all our customers are important to us and your feedback will aid us in introspection and improvements in our processes.

    Kindly note all the telephone lines are removed from ATM’s as the same is a business decision.

    Looking Forward to your co-operation in helping us to serve you better.

    ================================

    வேறு ஓர் ஆபத்தும் ஏடிஎம் மையங்களில் உள்ளது. அங்கு பணம் எடுக்க விரும்புவோர், வரிசையில் நிற்கிறார்கள். பெரும்பாலான மையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பண எந்திரங்கள் உள்ளன. வாயிற் காவலர், கண்ணாடி அறைக்குள் ஒரே ஒருவரை விடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். ஒரு நேரத்தில் ஒரு கண்ணாடி அறைக்குள் மூவர் பணம் எடுக்கிறார்கள். பண எந்திரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் அமைப்பின்படி ஒருவர் தன் தனி அடையாள எண்ணை உள்ளிடுவதை அடுத்தவரால் எளிதில் பார்த்துவிட முடியும்; அவர் தன் உடலால் மறைத்துக்கொண்டாலும்கூட ஓரங்கள் மூலம் அதைக் காண முடியும். காசோலை இடுவதற்காக வருபவர், சர்வ சாதாரணமாக இதைப் பார்க்க முடியும்.

    நடப்பில் கண்ணாடி அறைக்குள் பணம் எடுப்பவரும் அவர் உடன் வந்தவரும் அனுமதிக்கப்படுகிறார்கள். கணவன் – மனைவி, அப்பா/அம்மா – மகன்/மகள், பெரியவர்களுக்கு உதவ இளையவர்கள், நண்பர்கள், காதலர்கள்… என இருவர் தாராளமாக அந்த அறைக்குள் செல்கிறார்கள். ஒருவர் பணம் எடுக்கையில் அடுத்தவர் என்ன கண்ணை மூடிக்கொண்டோ, வேறு பக்கம் பார்த்துக்கொண்டோவா இருக்கிறார்கள். ஆக, உள்ளே சென்ற இன்னொருவருக்கும் தனி அடையாள எண் தெரிந்துவிடும்.

    கண்ணாடி அறைக்கு வெளியே இருப்பவரும் சற்று கூர்மையாகக் கவனித்தால் உள்ளே இருப்பவரின் விரலசைவுகளைக் கொண்டே அவரின் கமுக்க விவரங்களைக் கண்டுபிடித்துவிட முடியும். எல்லோரிடமும் செல்பேசி உள்ளது. பெரும்பாலான செல்பேசிகளில் புகைப்படக் கருவி உள்ளது. கண்ணாடி அறைக்குள் செல்பேசியில் பேசக் கூடாது என்ற விதி இருப்பினும் பல இடங்களில் இது மீறப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், கண்ணாடி அறைக்குள் செல்பேசியில் பேசவே வேண்டாம். கையில் எடுத்துச் சென்றாலே போதும். உள்ளே செல்வதற்கு முன்பே செல்பேசியில் வீடியோவை ஆன் செய்துவிட்டுச் சென்று, உள்ளே சும்மா செல்பேசியைக் கையில் வைத்திருப்பது போலவோ, குழந்தையின் கையில் செல்பேசியைத் தந்தோ உள்ளே நடப்பதை, வாடிக்கையாளரின் பேச்சை, அவரின் விரலசைவுகளின் மூலமாக அவரின் கமுக்க எண்ணை எளிதில் பதிந்துவிட முடியும். கையில் செல்பேசி எடுத்துச் செல்வதைத் தடுத்தாலும் ஒருவர் தன் சட்டைப் பையில் செல்பேசியை வைத்தே இதைச் செய்ய முடியும்.

    இது சாதாரண செல்பேசியை மையப்படுத்திய அபாயம் மட்டுமே. Hidden camera எனப்படும் மறைவாக எடுத்துச் செல்லும் வீடியோ கருவிகளை ஓர் எழுதுகோல் வடிவத்திலோ, மூக்குக் கண்ணாடி வடிவத்திலோ எடுத்துச் சென்றும் பதிய முடியும். இந்த அளவுக்கு நம் குற்றவாளிகள் முன்னேறவில்லை என்றாலும் இதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. ஏதும் பை, கைப்பை, பெட்டி… என எந்தப் பொருள் எடுத்துச் சென்றாலும் அதற்குள் மறைத்து எடுத்துச் சென்றும் இதைச் செய்ய முடியும்.

    கண்ணாடி அறைக்கு வெளியே இருப்பவரால் கூட, தன் அதிக சக்தி வாய்ந்த செல்பேசி வழியே உள்ளே நடப்பதைக் காட்சிகளாகப் பதிந்துவிட முடியும். ஏன், வரிசையில் கூட நிற்க வேண்டாம். தூரத்தில் நின்றபடியே கூட இதைச் செய்வது சாத்தியம்தான்.

    இத்தகைய பாதுகாப்பு குறைபாட்டுடன் ஏடிஎம் மையங்கள் இருப்பது, எவ்வளவு பெரிய ஆபத்து!! இன்று போலி பண அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன எனச் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில், நம் தனி அடையாள எண்ணும் களவாடப்படுமானால் நாம் பாடுபட்டுச் சேர்க்கும் பணத்தைக் கண்ணிமைக்கும் நேரத்தில் இழப்போம்.

    ஏடிஎம் மையத்திலிருந்து வெளியே வரும் ஒருவரை மயக்கியோ, ஏமாற்றியோ, தாக்கியோ அவரின் பண அட்டையை ஒருவர் பறிக்கலாம். அவர் அறியாமலே அவரிடமிருந்து ஜேப்படி செய்துவிடவும் முடியுமே. அப்படி நடந்தால், ஏற்கெனவே கமுக்க எண்ணும் தெரிந்த நிலையில் பணத்தை எளிதில் கொள்ளையிட முடியுமே.

    பண அட்டை பயன்படுத்தும் புதியவர்கள், அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வாயிற் காவலர்களோ, பக்கத்தில் பணம் எடுத்துக்கொண்டிருக்கும் வேறு புதிய நபரோ தான் உதவுகிறார். அட்டையைச் செருகுவது, தனி அடையாள எண்ணை அழுத்துவது, எவ்வளவு பணம் தேவை என எண்களை அழுத்துவது… என ஒவ்வொரு கட்டத்தையும் இவர்களே சொல்லித் தருகிறார்கள். சில நேரங்களில் பண அட்டையைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களும் தங்கள் விவரத்தை அடுத்தவரிடம் இழக்கிறார்கள். ஏடிஎம் எந்திரத்தில் ஏதும் குறைபாடு எனில், மீண்டும் மீண்டும் தன் விவரங்களை இட்டுச் சோர்வடைபவர், அடுத்தவரின் உதவியை நாடுகிறார். அப்போது, சிக்கல் தீர்கிறதோ, இல்லையோ, நமது கமுக்கத் தகவல், அடுத்தவருக்குத் தெரிந்துவிடுகிறது. இதுவும் அபாயமே.

    வங்கிகள், உங்கள் தனி அடையாள எண்ணை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருங்கள் என்று வேறு எச்சரிக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதிய எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா? எங்காவது எழுதி வைப்பதும் சிக்கலே.

    இத்தகைய சிக்கல்களைத் தீர்க்கச் சில வழிமுறைகள் இங்கே-

    முதலாவதாக, பண எந்திரத்தின் முன் நிற்பவரின் விரலசைவுகளைப் பின்னாலும் அருகிலும் இருப்பவர் பார்க்க முடியாத வகையில் ஒரு கூடு அமைக்க வேண்டும். எண்களை உள்ளிட வேண்டிய பகுதிக்கு மட்டுமாவது ஒரு கூடு போன்ற மறைப்பு தேவை. ஒவ்வொருவரின் கையின் பருமனும் வெவ்வேறு அளவில் இருக்கலாம் என்பதால், அந்தக் கூடு நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். கைகள் மட்டும் உள்ளே செல்லும்படியாக, அதே நேரம் நாம் இடும் விவரங்களை நாம் மட்டுமே மேலிருந்து காணும் வகையில் ஒரு திறப்பும் இருக்க வேண்டும்.

    இது, தற்காலிமான தீர்வே. கமுக்க எண்ணை உள்ளிடுவது என்ற முறையையே மாற்றுவது அடுத்த தீர்வு. உலகின் பல பகுதிகளில் கைரேகைகளையே அவரின் கமுக்க அடையாளமாகப் பயன்படுத்துகிறார்கள். கட்டை விரலையோ, முழு உள்ளங்கையையோ இப்படிப் பயன்படுத்தும் விதத்தில் நம் ஏடிஎம் மையங்களை மாற்றியமைக்க வேண்டும். இது தொடர்பான ஆராய்ச்சியை விரைவுபடுத்தி, உடன் நடைமுறைக்குக் கொணர வேண்டும்.

    பெங்களூரு ஜோதி தாக்குதல் போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க என்ன செய்யலாம்?

    ஏடிஎம் மையத்தின் சுருள் கதவைத் திறந்ததும் அது, மேலே சென்று அங்கே பூட்டிக்கொள்ள வேண்டும். மீண்டும் சாவி போட்டுத் திறந்தால் மட்டுமே இறக்கும் வண்ணம் திருத்தி அமைக்க வேண்டும். வங்கிகளின் பணப் பெட்டகங்களுக்கு இரட்டைச் சாவி உண்டு. வாடிக்கையாளரிடம் ஒன்றும் வங்கி மேலாளரிடம் ஒன்றும் இந்தச் சாவி இருக்கும். இதே போன்று, ஏடிஎம் மையங்களின் சுருள் கதவுகளுக்கும் காவலாளியிடம் ஒரு சாவியும் வங்கியிடம் இன்னொரு கடவு எண்ணும் இருக்க வேண்டும். கதவைத் திறகும் நேரத்திலும் மூடும் நேரத்திலும் காவலாளி விண்ணப்பித்தால், அவருக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத் தகுந்த கடவு எண்ணை அனுப்பலாம். அந்தக் கடவு எண்ணை இட்டு, அதன் பிறகு சாவியையும் பயன்படுத்தினால் மட்டுமே கதவைத் திறக்க / மூட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். கதவுக்கு வெளியே ஒரு கண்காணிப்புத் தொலைக்காட்சியைப் பொருத்தி, கதவு திறக்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய வகையில் ஏடிஎம் மையத்தில் ஏதும் நடந்தால், தொலைவிலிருந்தே கதவை மூடிவிடுவதற்கும் ஒரு வாய்ப்பினை அமைக்க வேண்டும்.

    அத்துடன், ஏடிஎம் அறைக்குள் மயக்கமூட்டும் மருந்து ஒன்றை மறைவிடத்தில் வைக்க வேண்டும். சந்தேகத்துக்கு உரிய நிலையில், மயக்கும் புகையை / நறுமணத்தை அங்கே செலுத்தி, அறைக்குள் இருப்பவர்களை மயக்கத்தில் ஆழ்த்த வேண்டும். அத்தகைய சூழலில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் மருத்துவமனைக்கும் உடனடித் தகவல் அனுப்பி, அவசர உதவிகளைப் பெற வேண்டும்.

    ஏடிஎம் மையத்தின் வாசலிலும் உள்ளேயும் உள்ள கண்காணிப்புத் தொலைக்காட்சியை யாரும் சேதப்படுத்தினால், உடனடியாக ஒட்டுமொத்த மையமும் செயலிழந்திடும் வண்ணம் அமைக்க வேண்டும். அதாவது, கதவு தானாக மூடிக்கொள்ள வேண்டும். மின் இணைப்பு அறுந்து, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் உடனே தகவல் செல்ல வேண்டும்.

    மேலும், வாடிக்கையாளரின் பை, கைப்பை உள்ளிட்ட எந்தப் பொருளானாலும் வெளியே வைக்கச் சொல்ல வேண்டும். ஆலயங்களில் செருப்புகளைப் பாதுகாப்பது போல் ஏடிஎம் மையங்களின் வெளியேயும் பொருட் பாதுகாப்புப் பிரிவுகளை அமைக்க வேண்டும். அங்கு வைத்துவிட்டுச் செல்லுவோருக்குக் கட்டணம் விதிக்கலாம்.

    ஏடிஎம் மையங்களில் செல்பேசி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை எடுத்துச் செல்லவே அனுமதிக்கக் கூடாது. விமான நிலையங்களில் மின்னணுப் பொருள்கள் உடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா எனச் சோதனையிடுவது போல் இங்கும் சோதிக்க வேண்டும்.

    தொலைபேசி வங்கிச் சேவையை ஏடிஎம் மையங்களில் வழங்குவோர், அதற்கெனத் தனிக் கூண்டு வைப்பது நல்லது. பொது தொலைபேசி மையங்களில் (PCO) இருப்பது போல் தனி அறைகள் அமையலாம். அங்கும் அவரின் விரலசைவுகள் வெளியே தெரியாத வண்ணம் மறைப்பு இருக்க வேண்டும். மேலும் அவரின் குரலும் வெளியே கேட்கக் கூடாது.

    ஏடிஎம் மையங்களுக்கு வெளியிலும் பொதுவான செல்பேசி, தரை வழி தொலைபேசி ஆகியவற்றின் வழியே தொலைபேசி வழி வங்கிச் சேவை பெற முடிகிறது. இது குறித்தும், வங்கிகள் தீவிர அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று தொலைபேசி வழியே பல்வகைக் கட்டணங்களைக் கட்டவும் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் வங்கிகள் வசதி அளித்து வருகின்றன. செல்பேசியை ரீசார்ஜ் செய்யவும் வசதி உண்டு. இந்நிலையில் அந்தத் தொலைபேசி உரியவரால்தான் இயக்கப்படுகிறது என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

    ஏடிஎம் மையங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோரை அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு முக்கியமானவராக, அந்நியோன்யம் கொண்டவராக இருந்தாலும் வாடிக்கையாளர்களும் சரி; காவலர்களும் சரி; இதில் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

    பண அட்டை பயன்படுத்தும் புதியவர்களுக்காக, எல்லா ஏடிஎம்களிலும் ஒரு மாதிரிக்குப் பொம்மை எந்திரம் வைக்கலாம். பள்ளி மாணவர்களுக்கும் இதில் நேரடிப் பயிற்சி அளிக்கலாம். சரியாக விவரங்களை உள்ளிட்டால் ‘பாராட்டுகள்! நீங்கள் சரியாகப் பயன்படுத்துகிறீர்கள்’ எனத் திரையில் வருமாறு செய்யலாம். தவறாக விவரங்களை உள்ளிட்டால் ‘மன்னியுங்கள். தவறான பயன்பாடு. மீண்டும் முயலுங்கள்’ எனத் திரையில் வரச் செய்யலாம். அந்த எந்திரத்தில் புதியவர் நேரடியாகச் செய்து பழகலாம். கல்வியறிவு இல்லாத கோடிக்கணக்கானோர் வாழும் நாட்டில் அவர்களையும் சேர்த்து நம் வங்கியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

    இதை நீதிமன்றங்கள், நுகர்வோர் அமைப்புகள், வங்கிகள் அனைத்தும் உடனடி கவனத்தில் எடுத்துக்கொண்டு ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். இதற்கென வல்லுநர் குழு அமைத்து மேலும் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாடிக்கையாளரின் பணத்தை மட்டுமின்றி, அவரது உயிரையும் உடல்நலனையும் காப்பாற்றுவதிலும் வங்கிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    நன்றி: சென்னை டைஜஸ்ட்

    படத்திற்கு நன்றி :

    http://www.ndtv.com/article/cities/bangalore-woman-attacked-with-machete-inside-atm-suffers-severe-injuries-paralysis-448357

    Share
  • அணு, அகிலம், சக்தி !

     

    அணு, அகிலம், சக்தி !

    atoms-man

     

    சி. ஜெயபாரதன், கனடா

     

    பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
    பொரி உருண்டை ஒன்று
    பரமாணுக்களாகி,
    துணுக்காகி அணுவாகி,
    அணுவுக்குள் அணுவாகித்
    துண்டுக் கோள்கள் திரண்டு
    அண்டமாகி,
    அண்டத்தில் கண்டமாகித்
    கண்டத்தில்
    துண்டமாகிப் பிண்டமாகி,
    பிண்டத்தில் பின்னமாகிப்
    பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
    பேரளவுச் சக்தி யாகித்
    சீராகிச் சேர்ந்து
    சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
    பிணைந்து, பிணைந்து பேரொளி யாகிப்
    பிரம்மாண்டப் பிழம்பாகி,
    பரிதியாகி,
    பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
    பாசபந்த ஈர்ப்பில்
    அணைத்து
    அம்மானை ஆடினாள் என்
    அன்னை !

     

    நீராகி, நிலமாகி, நெருப்பாகிப்
    வாயுவாகிக்
    கல்லாகி, மண்ணாகிக் காற்றாகி
    புல்லாகி, நெல்லாகிப்
    புழுவாகி, மீனாகிப் பறவையாகி
    நில்லாமல் செல்லும்
    எல்லாமே படைத்தாய் !
    ஒன்றுக்குள் ஒன்றாகிப்
    புணர்ச்சியில்
    ஒன்றும் ஒன்றும் பலவாகி
    உருவுக்குள் கருவாகி,
    தாயின் கருவுக்குள் உருவாகி
    உயிரளித்து
    நீயாகி, நானாகி, அவனாகி,
    விலங்குகளாய்
    வடிவாகி, விரிவாகி,
    மடிய வைத்தாய் !
    கன்றுக்குள் பசுவாகிப் பாலாகி,
    ஒன்றுக்கு ஒன்று வித்தாகி,
    ஒன்றும், ஒன்றும் சேர்ந்து
    மூன்றாகி, மூன்று
    மூவாயிரம் கோடி யாகித்
    தொடர்ந்து
    வித்திட்டாய் ! வேரிட்டாய் !
    கிளை விட்டாய் !
    விழுதிட்டாய் !
    ஆலுக்கு வேரிலே
    மூளை வைத்தாய் !
    நீரேற்றும் பொறி வைத்தாய் !

     

    பெண்ணுக் குள்ளே எப்படி
    என்னை வைத்தாய் ?
    கண்ணுக் குள்ளே எப்படி
    எண்ணற்ற
    வண்ணங்கள்  இட்டாய் ?
    முட்டையைப்
    பெயர்த்து வெளிவரும் குஞ்சுக்கு
    உயிர் எப்படி  ஊட்டினாய் ?
    ஊர்ந்திடும் இலைப்புழு எப்படி
    ஒருசில நாட்களில்
    பறந்திடும்
    பட்டாம் பூச்சி ஆனது ?
    வான வில்லை எப்படி ஓவியமாய்
    வரைந்து வைத்தாய் ?
    மரத்தில்
    காயாகிக் கனியாகிக்
    முதிர்ந்து மூப்பாகி
    உதிர்ந்து விழ வைத்தாய் !

     

    பிண்டமும் சக்தியும் ஒன்று !
    அணுவுக்கு
    ஒளிவேகம் அளித்தால் சக்தி !
    சக்திக்கு
    ஒளிவேகம் குன்றின் பிண்டம் !
    முதலாகி
    முதலுக்கு மூலமாகி,
    தோற்றக் காலம் அறியா
    மூலத்தின்  வேராகி, வித்தாகி
    முடிவே இல்லா காலத்தின்
    முதியோ னாகி,
    வடிவே இல்லா உருவாகி
    உள்ளத்தைக் கடந்த
    ஒளியாகிக் கனலாகி
    அகிலாண்ட கோடி யெல்லாம்
    உப்பி விரிந்திடும்
    சோப்புக் குமிழாகி
    ஒப்பற்ற
    உன் மகத்துவத் தோற்றம்
    வியந்து எமது
    உள்ளம் விரிய வைப்பாய் !

    +++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 11, 2013 (R-3)

    Share
  • மாறி வரும் சமுதாயத்தில் பொருளாதார மாற்றங்கள்

    பவள சங்கரி

    தலையங்கம்

    நம்முடைய பொருளாதாரத்தை பெரிதாகப் பாதிப்பு ஏற்படுத்துவதில் முக்கியமானது அந்நிய முதலீடுகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள். அந்நிய முதலீடுகள், ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலும் முதலீட்டாளர்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே, ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னாட்களில் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வல்லுநர்களின் எச்சரிக்கையையும் மீறி முதலீடுகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ரூபாயின் மதிப்பை ஏற்றுவதும் , இறக்குவதும் அந்த முதலீட்டாளர்களின் கையில் போய்விடுகிறது. இதைத் தடுப்பதற்கு நமது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் போன்ற அனைத்துப் பொருள்களும் இன்று விலையுயர்ந்து இருப்பதால், பணவீக்கமும் அதிகரித்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக, நமது நாட்டில் 40 சதவீதத்துக்கும் மேல் உள்ள நடுத்தர வருவாய்ப் பிரிவு மக்கள் தங்களது வருமானத்திற்குள் அத்தியாவசிய செலவுகளுக்காகக்கூட மிகவும் சிரமப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதால், நுகர்வோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பிற்கு ஈடாக அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று ரூபாய் 62.57 ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    பெட்ரோலியப் பொருட்கள் உபயோகிப்பதை இதுவரை வரைமுறைப்படுத்தப்படவில்லை. ஒரு ஆண்டிற்கு மிகச் சாதாரணமாக குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஊர்திகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பை அதிகம் கரைப்பது இந்த பெட்ரோலியப் பொருட்கள்தான் அல்லவா? வாகன உபயோகிப்பின் பெருக்கத்திற்கு ஏற்ப மாற்று பெட்ரோலியப் பொருட்களை உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டியது தற்போதைய அவசரத் தேவை. இயற்கை எரிவாயுவின் விலை பெட்ரோலைவிட பாதிக்குப் பாதி குறைகிறது. பிரச்சனை இல்லாத வகையில் அந்த இயற்கை எரிவாயுவை உபயோகிப்பதற்கு அதிகமாக ஊக்குவிக்க வேண்டியது அவசியம். நம் இந்தியாவில் கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயுவையும் கூட சரியான முறையில் பயன்படுத்தாமல் இருக்கிறோம் நாம். பெட்ரோல் எரிவாயு நகர்ப்புறம் அல்லாத பல இடங்களில் கிடைப்பதில்லை. முதலில் அனைத்துப் பெட்ரோலிய நிலையங்களிலும் இந்த பெட்ரோலிய எரிவாயு கிடைப்பதை நடைமுறைப்படுத்த வேண்டியதும் அவசியம். இரண்டாவதாக 1000 சி.சி வரை உல்லாச உந்துகளிலும், இரு சக்கர வாகனங்களில் 125 சிசி வரையிலும் இந்த பெட்ரோலிய வாயு உபயோகிப்பதை ஊக்கப்படுத்தலாம். வாகன தயாரிப்புகளிலும் இதை நடைமுறைப்படுத்துவது நலம். இதற்கான ஆய்வரங்கங்களை அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் வைத்திருக்க வேண்டியதும் அவசியம். அந்த ஆய்வரங்கங்கள் பெட்ரோலிய எரிவாயுவை உபயோகப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், அதன் பலனும் முழுமையாக மக்களை சென்று அடையும். இந்த இரு விசயங்களிலும் நம் நிதியமைச்சகமும், பெட்ரோலிய அமைச்சகமும் இணைந்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் உபயோகிப்பாளருக்கும் அரசாங்கத்திற்கும் மிக மிக பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    Share
  • மௌவல் – “மல்லிகை மௌவலின் போதலர்த்தி” – மௌலி — மவுவா (MAHUA )

    மௌவல் மௌவல்
    நூ த லோ சு
    மயிலை

    ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சாதாரண மக்களால் ஊடகம் வழி நன்கு அறியப்பட்ட முணுமுணுக்கப்பட்ட
    ஓர் திரைப்பட (சிவாஜி) பாடல் வரியில் பலரறிய வந்த நல்ல சங்கத்தமிழ் சொற்களில் ஒன்று
    மௌவல் மௌவல்

    கவிஞர் வைர முத்து என்னும் நல்ல கவிஞர் புனைந்த பாடல் அது என பலரும் அறிவர்

    ஆனால் இங்கு நாம் காட்ட நினைப்பது மௌவல் எனும் பூவினை குறிக்கும் சொல்லினைப் பற்றி
    ஐயம் எழுந்த மடல் ஒன்று நம் மடலாடலில் கண்டேன்

    வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகால்
    கொன்ற தேவநின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே
    மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி
    தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு வெள்ளறை நின்றானே

    என திருமங்கை மன்னன் தன் பெரிய திருமொழி (நா.தி.பி.- 5.3.1 / 1368 )
    பாசுரத்தில்பயன்கொண்ட இடத்து இதற்கு ஓர் பூ அல்லாத வேறு ஓர் பொருள் கொள்ள முடியுமா என்பதே அது

    மேலும் மடலிழையில் அறிஞர் பலர் இதற்கே மரமல்லிகை எனவும் பொருள் காட்டினர்

    இவ்வையங்களை களைய எழுந்ததே இக்கருத்துரை

    பாசுரத்தில் திருமங்கையாழ்வார் பேசும் கருத்து

    தென்றலானது (வீடு / பொது) மன்றிலிலும் மாமரப் பொழிலி நுழைந்து வந்த நிலை மல்லிகையின்
    மற்றும் மௌவல் மலர்களின் ‘போது’ களை விரியச் செய்ததால் அம் மணங்களை ஏந்தி வந்து நாறும்
    ‘வெள்ளறை’ எனும் தலத்தில் உறையும் நின்ற கோலம் காட்டும் திருமாலே
    போர்க்கருவியாம் மழுவினை ஏந்தி முன் ஒரு காலத்தில் ஏழேழ் தலைமுறையில் வந்த மன்னர்
    பலரை கொன்றொழித்த தேவனே உன்னுடைய கழலினைத் தொழும் வழியை காட்டமாட்டாயா

    ஈங்கு மௌவல் ஓர் மலர் என பொருள்கொள் நிலைதான் உள்ளது.

    ‘மல்லிகை’ யில் (யின்) எனும் வேற்றுமை தொக்கி நின்றுள்ளது

    மல்லிகையின் மௌவலின் (எனும் இரண் டின்) எனக்கொள்ளவேண்டும்

    தென்றல் – – – – – மல்லிகை மௌவல் எனும் இருவகை மலர்களின் போதுகளை அலர்த்தி
    தான் மண ம் நிறைத்துக் கொண்டு வீசியது எனக் கொளளல் வெண் டும்

    அரும்பு>>> போது >>> மலர் >>>> அலர் என்பது பொதுவாக
    ஓர் மலரின் பருவ வடிவ வளர்ச்சி என பலரும் அறிவர்

    காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
    மாலை மலரும் இந் நோய் குறள் 1227
    அலர் என்பது மலர்ந்த நிலை கடந்து மேலும் சில நாள் வாடிவிடாமல் பூத் துக்கா ண் பது

    இங்கு மௌவல் என்பது மல்லிகையின் வெண்மை பருவம் வடிவம் என வேறு ஒர் பண்பு ஆகாது

    ஆகமுடியாது ஏனெனில் வெண்மை என பொருள் உள்ள ஓர் சொல் லுடன் யின் எனும்
    வேற்றுமை சேர அது போது எனும் சொல்லுடன் அமையாது

    ‘போது’ எனும் சொல் பின் உள்ளதால் வடிவமும் பருவமும் குறிக்கும் பண்பு முன் வரத் தேவையில்லை

    மௌவல் என்பது ஓர் மலர்தான் என்பதை
    கீழ் வரும் மேற் கோள் பாடல் அடிகள் ஐயம் ஏதும் இன்றி காட்டக் காண லாம்

    மேலும்
    மௌவல் ஓர் கொடி >>>>>>>>>>> தேவாரம் 1.101.3 பெரிய 12-1217 ; 12-2955 ; அகம் 23-12 ; நச்சி. உரைமேற்கோள் பாடல் ;

    மகளிர் தலை யில் அணியும் மலர் >>>>>>>>>> நா.தி.பி. 3.2.7 / 1164 ; சீவக சிந்தாமணி;

    நல்ல மண ம் வீசக்கூடியது >>>>>>>>>> நா.தி.பி. 9.1.3 / 1750 ; 9.10.2 / 1839 ; தேவா 1.14.7 ; 3.46.7; 3.59.1 ; 3.110.7 ; 3.119.5 ;
    கலி 14-3 ; கலி 27-4; கல்லாடம் 83-26 ;

    அஃதும் இரவில் பூத்து நாறும் பண்பினது >>>>>>> குறு 19

    வெண்மையான இதழ்களை உடையது >>>>>>>>>>> தேவா 1.136.3 ; அகம் 21-1 ;

    இதன் அரும்பு பல்லிற்கு உவமை >>>>>>>>>>>>> கலி 14-3 ; கலி 27-4 ;

    புதராக பல்வகை இனத்துடன் வளர்வது >>>>>>>>> தேவா 2.84.9

    வீட்டிலும் வளர்ப்பார் >>>>>>>> அகம் 21-1 ; கல்லாடம் 83-26 ; பெரிய 12.1217

    மரமல்லிகை அல்ல என்பது
    மேற்கண்டபடி
    ஓர் கொடியாவதாலும்
    புதராக முல்லை மல்லிகை என பலவகை இனத்து டன் படர்ந்து மிடைந்து வளர்வதாலும்
    பல்லிற்கு உவமை காட்டுவதாலும்

    மேலும்
    மௌவல் நீண்மலர் மேலுறைவானொடு
    பௌவ வண்ணனு மாய்ப் பணிவார்களே 5.97.13 அப்பரடிகளின் சித்தத் தொகை

    இதனில் நீண்மலர் (= நீள் மலர் நீண்ட காம்பினை உடைய து ) என்றது தாமரையை அதாவது பிரமன் அமர்ந்த மலர்

    எங்கனம் எனில்
    கடல் வண்ணனும் (பௌவ வண்ணன் = திருமால்) உடன்
    அடிமமுடி காணாத திரு விளையாடல் காட்டப்படுவதால்
    எனவே நீள் மலர் = நீண்ட காம்பினை உடைய மரமல்லி ஆகாது
    இங்கு மௌவல் எனும் சொல் எதுகை நோக்கி வெண்மைக்கு ஆகுபெயராக வந்தது

    அதான்று,
    மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழும் (குடமூக்கு தேவாரம் 3.59.1 )
    எனும் வரிகளில் காணும் மர எனும் சொல் மரவம் எனும் வேறு ஒரு மலரைக் குறி த்தது

    அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே
    மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்
    குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
    இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே

    இப்பாடலில் கோடல் மல்லிகை குரா முதலிய மலர்களைத்தான் பேசுகிறது காண்க

    ——————————————————————————

    மேற்கோள் வரிகள்

    மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து நா.தி.பி. 3.2.7 / 1164
    திருமங்கை பெரிய திருமொழி

    போதலர் புன்னை மல்லிகை மௌவல் புதுவிரை மதுமல ரணைந்து நா.தி.பி. 9.1.3 / 1750
    திருமங்கை பெரிய திருமொழி

    மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்து நா.தி.பி. 9.10.2 / 1839
    திருமங்கை பெரிய திருமொழி
    தேவாரம்
    மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட 1.14.7 கொடுங்குன்றம்

    கொல்லையின்முல்லை மல்லிகைமௌவல் கொடிபின்னி 1.101.3 கண்ணார்கோயில்

    தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர் 1.136.3 தருமபுரம்

    புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை 2.84.9 நனிபள்ளி

    கந்த மௌவல் கமழும் கருகாவூர் எம்எந்தை 3.46.7 கருகாவூர்

    மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழும் 3.59.1 குடமூக்கு

    நறவ மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி 3.110.7 வடகரை மாந்துறை

    வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர் மலரணைந் தெழுந்த 3.119.5 வீழிமிழலை

    விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கைவண் செருந்தி 3.123.5 கோணமாமலை

    மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு 5.97.13

    துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் 12.240 பெரிய புராணம்

    நடையில் படர்மென் கொடி மௌவல் நனையில் திகழும் 12.1217

    மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து வந்து எய்தி 12.2955

    சங்க நூல்கள்

    ஞாழன் மௌவல் நறுந்தண் கொகுடி குறிஞ்சி 81

    மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத் அகம் 21-1-

    தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் மௌவல் மாச்சினை அகம் 23-12

    மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும் அவ்அளவு அகம் 117-1

    மணமௌவல் முகைஅன்ன மாவீழ்வார் நிரைவெண்பல் கலி 14-3

    மாதரார் முறுவல்போல் மணமௌவல் முகைஊழ்ப்ப கலி 27-4

    மல்லிகை மௌவல் மணம்கமழ் சண்பகம் பரிபாடல் 12

    மனைமரத்து எல்லுறு மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல் குறு 19

    மாக்குரல் நொச்சி மனைநடு மௌவலொடு ஊழ்முகை அவிழ குறு. 115

    மெல்அவல் மருங்கின் மௌவலும் அரும்பின குறு. 122

    மலரில் மௌவல் நலம் வரக் காட்டி கயல் ஏர் உண்கண் குறு 316

    முல்லையும் மௌவலும் முருகுயிர்த்து அவிழ கல்லாடம் 39-7

    மௌவல் இதழ்விரிந்து மணம்சூழ் பந்தர்செய் முன்றிலும் கல்லாடம் 83-26

    பொறி வண்டு மூசிய மௌவல் முருகுயிர்ப்பத்-தேசிகப் 270 விக்கிரமசோழனுலா

    மாடுநின்ற கொன்றைஏறி மௌவல்பூத்த பாங்கெலாம் நச்சி. உரைமேற்கோள் பாடல்

    மௌவலம் குழலியை மன்னன் ஏயினான் சீவக சிந்தாமணி

    —————————-
    அதான்று
    மௌவல் >>>>>>>> மௌலி எனும் சொல்லுடன் பிணைத் த ஐயம் மும் கட்ட ப்பட்டது

    ஆனால்
    மௌவல் >>> மௌலி என்பன வேறுவேறு சொற்கள்

    மௌலி என்பது தலையில் அணியும் ஓர் அணிகலன் = முடி = கிரீடம்

    கீழ் காணும் பெரிய புராணப் பாடல் வரிகளைக் காண்க ஐயம் எதும் இன்றி மன்னர்களின் முடியைப் பே சுகின்றது

    ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச் செவ்வான்மதி 3.126.2 (விடைவாய் தேவாரம் )

    சூடும் சடைமௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் 12.1015 பெரிய புராணம்

    சோதி சூழும் மணி மௌலிச் சோழர் பொன்னி திரு நாட்டு 12.1022 பெரிய புராணம்

    பொன்னாரும் மணிமௌலிப் புரவலன்பால் அருளுடையார்12.1292 பெரிய புராணம்

    பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார் 12.3783 பெரிய புராணம்

    பொன்னார் மௌலிச் சேரலன் ஆர் போற்றும் அமைச்சர்க்கு 12.3793 பெரிய புராணம்

    கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு 199 குலோத்துங்கசோழனுலா
    ————————–

    நிற்க

    வாட இந்தியாவில் மவுவா (MAHUVA ) எனும் சொல்லால் விளிக்கப்படும் ஓர் மலர் உள்ளது

    அதுவோ தமிழில் இலுப்பை எனும் மரமாகும் இதன் மலர்களை இனிப்புச் சுவைகாகப் பயனகொள் வர்

    “ஆலை இல்லை ஊருக்கு இலுப்பைப்பூ சர்கரை ” எனும் முதுசொல்தான் அறிவோமே

    தலையில் அணியப் படாமல் வாணிப மல ராக க உள்ளமைக் காண்க இந்த ‘மவு வா’ பற்றி சில இணையச் சுட்டிகள்
    http://en.wikipedia.org/wiki/Madhuca_longifolia

    https://www.google.co.in/search?q=mahua+flower+in+english&espv=210&es_sm=93&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=bciLUpniK5GkiQejioHwAg&ved=0CE8QsAQ&biw=1920&bih=954

    Share
  • பொய்யின்றி அமையாது உலகு

    ரமணி பிரபா​தேவி

     

    பொய் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தவறாது இடம்பெற்று விடுகிறது. ஏதோவொரு தவிர்க்கவியலாச் சூழலில் உரைக்கப்படும் பொய்யானது வாழ்நாள் முழுவதும் நம்மைப் புரட்டிப்போடுகிறது. மறைக்கப்படும் உண்மை வெளிவராமல் போனவுடன் நம் தைரியம் தலைதூக்குகிறது. சிறு தவறை மறைக்கக் கூறப்படும் பொய்யானது  பாராட்டைப் பெற, குழப்பங்களைத் தவிர்க்க, மரியாதையை நிலைநாட்ட, கருத்து வேறுபாடுகளைக் களைய, அருகிலுள்ளோரை மகிழ்வூட்ட, வேலையில், கல்லூரிகளில், பள்ளிகளில் ஏன் சாவுப்படுக்கையிலே கூட எண்ணிலடங்காமல் அடுக்கப் படுகிறது.

    முதல் முறை கூறப்படும் பொய் மீதான தயக்கமும், தடுமாற்றமும் அடுத்து வரும் முறைமைகளில் இருப்பதில்லை. எல்லோரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொய் அரக்கனின் பிடியில் சிக்கிக் கொள்கிறோம். ஆனாலும் உண்மையை அறிந்தபின்னர் கூறப்படும் பொய்கள் நெருஞ்சியாய் மனதைத் தைக்கின்றன.

    பொய், அதனை மறைக்க வரிசையாகக் கூறப்படும் பொய்களென எண்ணிக்கை உச்சத்தை அடைகிறது. பொய்களை ஏற்றுக்கொண்டே பழக்கப்பட்டுவிட்ட நாம், அதனூடேயே வாழத் தொடங்கிவிடுகின்றோம். தினசரி வாழ்வினில் பொய்யரக்கன் இரவுறக்கம் வரை நம்முடனேயே பயணப்படுகிறான். துயிலெழுந்தவுடனே பொய்யுடன் நாளைத் துவக்கி, பொய்களுடையே வாழ்ந்து போலியான வாழ்க்கையை வாழ்பவர் பலர்.

    பொய்யின் சாராம்சம் யாதெனில், இது பிரிவினை கொள்வதில்லை. ஆண்,பெண், தாய் ,தந்தை ,குழந்தை, உற்றார் ,உறவினர், ஜாதி,மத பேதம் பாராமல் அனைவரிடமும் சரளமாய்ப் பொய் நாடகமாடுகிறது. பொய்களால் சூழ்ந்த இவ்வுலகம் பொய்மூட்டைகளினூடேயே இயங்குகிறது. சிறு பள்ளிக்குழந்தை முதல் தள்ளாடும் மூதாட்டி வரை அனைவரும் பொய்யினை ரசிப்பவர்கள்.

    பொய்களில் புறக்கணிக்கப்படுபவை சில, புறந்தள்ளப்படுபவையும் சில, புரட்டிப்போடுபவை பல. சில நேரங்களில் உயரிய உண்மைகளை, அற்பமான பொய்கள் பின்தள்ளுகின்றன. உண்மையின் வலியைவிட, பொய்யின் அழகு முலாம்  எல்லோர்பாலும் எளிதாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

    மிருகமாய்க் கிடந்து, இன்று எங்கோ உயரமாய்ப் போய்விட்ட மனித மூளை, அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் மட்டுமல்லாது, இதுபோன்றதொரு ஏமாற்றுதலிலும் முன்னேறிவிட்டது.

    Share
  • தட்டாமாலை

    தமிழ்த்​தேனீ

    “அப்பிடி என்னப்பா நான் தப்பா சொல்லிட்டேன், ஒரு ஆம்பளைப் புள்ள இருக்கு, ஆனாலும் வீட்டுக்கு அழகு பொம்பளைப் புள்ளைதான், அதுனாலே ஒரு பொம்பளைப் புள்ளையப் பெத்துக்குடுன்னுதானே சொன்னேன், எனக்கு ஒரு பேத்திவேணும்னுதானே கேட்டேன்.”

    “என்னை நீங்கதான் பெத்தீங்க. அதுக்காக  எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு உங்களுக்கு நெனைப்பா? இது எங்க வாழ்க்கை நாங்கதான் ப்ளான் பண்ணனும். எல்லாமே  நீங்க சொல்லித்தான் நாங்க தெரிஞ்சிக்கணுமா? நீங்க சொல்றதைத்தான் கேட்டு நடக்கணுமா? எதிலே தலையிடறது எதிலே தலையிடக் கூடாதூன்னு தெரிஞ்சு நடந்துக்கணும் பெரியவங்க.” என்று எரிந்து விழுந்த மகன் சேகரை  தீர்க்கமாகப் பார்த்து,

    “இதோ பாரு உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நான் சொல்லலை, ஏதோ எங்களுக்கு தெரிஞ்சதை சொல்றோம். கேட்டா கேளு, வேணாம்னா விட்டுட்டுப் போயேன். அதுக்கு ஏன்  எரிஞ்சு விழறே?

    அனுபவப்பட்டவங்க  சொல்வாங்க. அதைக் கேக்கறதும் கேக்காததும் உங்க இஷ்டம். எல்லாம் உங்க நல்லதுக்குதான் சொல்றோம்”  என்றார் சபேசன்.

    “அப்பா நீங்க இனிமே எங்க விஷயத்திலே தலையிடாதீங்க, எங்களுக்கும் வயசாச்சு, நாங்க பாத்துக்கறோம்” என்றான் சேகர்.

    “டேய்! நான் உன்னோட அப்பாடா!  நான் ஒண்ணும் தப்பா சொல்லலே.”

    “சரிப்பா. போதும் உங்க அட்வைஸ். உங்க வேலையைப் பாத்துட்டுப் போங்க” என்றான் சேகர்.

    சூழ்நிலையின் கனம் ஏறிக்கொண்டே இருந்தது . மருமகள் சிந்துஜா  “ஏங்க எதுக்கு இப்பிடி தூக்கி அடிக்கறா மாதிரி பேசறீங்க?” என்றாள்.

    “இப்போ நீ உள்ளே போறியா! அனாவசியமா என் கோவத்தைக் கிளறாதே! மரியாதையா உள்ளே போயிடு” என்று எரிந்து விழுந்தான் சேகர்.

    “இதோ பாருப்பா! நீ இவ்ளோ கோவக்காரனா இருப்பேன்னு நான் நெனைக்கலே. என்னதான் இருந்தாலும் அப்பாங்கற ஸ்தானத்துக்காவது, அப்பிடியும் இல்லேன்னா வயசுக்காவது மரியாதை குடுத்து பேசுவேன்னு நெனைச்சேன்.

    இனிமே இந்த வீட்டுப் படி ஏறமாட்டேன், இனிமே உங்கிட்ட பேசவே மாட்டேன், நான் வரேன்… இல்லே… போறேன்” என்று  சொல்லிவிட்டு ஆத்திரத்துடன் வெளியேறினர்  சபேசன்.

    இரவு பக்கத்தில் சிந்துஜா புரண்டு படுத்து அவன்மேல் கையைப் போட்டுக்கொண்டு “நீங்க நடந்துக்கறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலே, இப்பிடி அப்பாவை அவமானப்படுத்தி அனுப்பறது சரியில்லேன்னு தோணுது.

    அமைதியா இருங்க உங்களுக்கு அடிக்கடி கோவம் வருது, எரிச்சல் படறீங்க. அதுனாலேதான் அப்பா உங்களை எதுக்கும் டாக்டர்கிட்டே போயி செக்கப் பண்ணிக்கோன்னு சொன்னாரு.  ஒரு பொம்பளைப் புள்ளையை பெத்துக் குடுன்னு சொல்றாரு; நல்லதுதானே சொல்றாரு, அதுக்கு எதுக்காக இவ்ளோ வார்த்தைகளை வளத்து  அவரோட சண்டை போட்டு  அவர் மனசைப் புண்படுத்தி அனுப்பினீங்க.

    ‘அழ அழச் சொல்வர் தமர்’  அப்பிடீன்னு சொல்வாங்க. நம்ம மேலே அக்கறை இருக்கறவங்கதான் நல்லதை சொல்வாங்க” என்றாள்.

    சிந்துஜா சொல்வது  உண்மைதானே என்று தோன்றியது சேகருக்கு.

    சேகருக்கு அவன் மேலேயே வெறுப்பாய் இருந்தது, கோவம் கோவமாக வந்தது, சில விஷக்கடி வேளைகள் நம்மைத் தூண்டி தேவையில்லாமல் பேசவைத்து சூழ்நிலைகளைக் கெடுத்து விரோதங்களை உண்டாக்குகிறது.

    அந்த நேரங்களில்  சற்றே அமைதியாக இருக்கலாமே, ஏன் இப்பிடி நான் நிலை குலைஞ்சு போறேன்?  என்று தன்னைத் தானே நொந்தபடி படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த  சேகருக்கு தூக்கம்  பிடிக்கவில்லை.

    எழுந்து வரண்டாவில் நின்று ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து புண்பட்ட நெஞ்சத்தை புகை விட்டு ஆற்றிக் கொண்டிருந்தான்.

    யோசித்துப் பார்த்ததில் அப்பிடி என்ன அப்பா தப்பா சொல்லிட்டாரு, எல்லா அப்பாவும் சொல்றதுதானே, மனம் குமைந்துகொண்டிருந்தது. வெறுப்புடன் அந்த சிகரெட்டை தூக்கி எறிந்துவிட்டு படுக்கையில் வந்து படுத்தான் சேகர்.

    வாசலில்  அழைப்பு மணி ஒலித்தது. மணியைப் பார்த்தான் சேகர். இரவு மணி இரண்டு. யாரு இந்த நேரத்திலே? அழைப்பு மணி விடாமல் ஒலிக்கவே கதவைத் திறந்தான் சேகர்.

    பக்கத்துவீட்டு பாஸ்கர் “என்ன சேகர் இப்பிடித் தூங்கறீங்க?” என்று கூறிவிட்டு மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

    “ஏங்க பாதி ராத்திரிக்கு கதவைத் தட்டி உபதேசம் செய்யறீங்க? எதுக்கு வந்தீங்க? அதைச் சொல்லுங்க” என்றான் எரிச்சலோடு சேகர்.

    “இல்லேங்க. உங்க தோட்டத்திலேருந்து ஏதோ புகை வாசனை வருது. நெருப்பும் தெரியுது அதைச் சொல்லி எச்சரிக்கலாம்னு வந்தா எரிஞ்சு விழறீங்க” என்றார் பாஸ்கர்.

    பதறிப் போயி “அடேடே! மன்னிச்சுக்கோங்க! வாங்க, போயி பாக்கலாம்” என்றபடி தோட்டத்துக் கதவைத் திறந்து பார்த்தான் சேகர்.

    செடிகளிலேருந்து கீழே விழுந்து மூலையில் சேகரித்து வைத்திருந்த இலைச் சருகுகள் எரிந்து கொண்டிருந்தன. நல்ல வேளை இன்னும் சற்று நேரம் கவனிக்காமல் இருந்திருந்தால் அப்படியே ஜன்னலுக்குத் தீ பரவி இருக்கும்.

    பாஸ்கரும் சேகரும் நிறையத் தண்ணீர் கொட்டி அதை அணைத்துவிட்டு பதட்டத்தால் எழுந்த வியர்வைப் பெருக்குடன் பெருமூச்சு விட்டுக் கொண்டே  தோட்டத்தில் இருந்த திண்ணையில் உட்கார்ந்தனர்.

    “ரொம்பத் தேங்க்ஸ் பாஸ்கர்! சரியான நேரத்துக்கு வந்து உதவினீங்க. நாந்தான் அவசரப்பட்டு  உங்ககிட்ட எரிச்சல் பட்டேன். மன்னிச்சிருங்க” என்றான் சேகர்.

    “அட! அதை விடுங்க! சரி, வாங்க போயி தூங்கலாம்” என்றபடி பாஸ்கரும் போன பின் கதவைத் தாப்பாள் போட்டுவிட்டு பதட்டம் தணிய சற்றே குளிர்ந்த நீரைக் குடித்துவிட்டு வந்து படுத்தான்.

    காலையில் எழுந்து குளித்துவிட்டு  வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் சேகர். அழைப்பு மணி ஒலித்தது,  “சிந்து, போயி யாருன்னு பாரு. எனக்கு நேரமாச்சு நான் கிளம்பணும்” என்றபடி சாக்ஸை போட்டுக்கொண்டு ஷூவை மாட்டினான் சேகர்.

    கதவைத் திறந்தாள் சிந்துஜா. “அடேடே! வாங்க மாமா!  உள்ளார வாங்க” என்று அழைத்துவிட்டு, “ஏங்க மாமா வந்திருக்காரு” என்றாள்.

    வாசலில் இவனையே பார்த்தபடி நின்றிருந்தார் சபேசன். “வாங்கப்பா” என்றான் சேகர். “நல்ல வேளைப்பா, பக்கத்துவிட்டு பாஸ்கர் சொன்னார். பதறிப் போயி ஓடிவந்தேன். உனக்கு ஒண்ணும் காயம் படலியே” என்றார். “அதெல்லாம் ஒண்ணும் இல்லேப்பா,  உக்காருங்க” என்றான் சேகர்.

    சிந்துஜா காப்பியைக் கொண்டு வந்து கையில் கொடுத்துவிட்டு “சாப்பிடுங்க மாமா” என்றாள். காப்பியை ஒரு முழுங்கு குடித்துவிட்டு நிமிர்ந்து,

    “சேகர், நம்ம வம்சத்திலே எனக்கு பிள்ளையா வந்து பொறந்திருக்கே. என்னோட அப்பா சொல்லும்போது நானும் இப்பிடித்தான் அவர் மேலே எரிஞ்சு விழுந்தேன். உன்னைவிட அதிகமா வார்த்தைகளைக் கொட்டினேன். ஆனா இப்போ ஒரு பொம்பளைப் புள்ளெ இருந்திருந்தா என் மேலே அன்பா ஆதரவா இருக்கும்னு தோணுது. அனுபவசாலிகள் சொல்றத அலக்‌ஷியம் செய்யக் கூடாதுன்னு இப்போ தோணுது. காலம் கடந்த ஞானோதயம்.

    அது சரி நீ என்னோட பிள்ளைதானே, நம்ம வம்சத்தோட கோவம் அப்பிடியே எறங்கி இருக்கு உனக்கும். நானும் கொஞ்சம் நிதானமாப் பேசியிருக்கலாம்.

    நான் நேத்து உன்னைப் புண்படுத்தறா மாதிரி பேசிட்டேன். இதோ பாரு நான் இது வரைக்கும் யார் கிட்டேயும் மன்னிப்பு கேட்டதே இல்லே.

    இந்தக் கோவம்கிற நெருப்பை அணைக்காம அப்பிடியே வெச்சிருந்தா அது நீரு பூத்த நெருப்பு மாதிரி எப்போ எதைப் புடிக்கலாம்னு காத்துகிட்டே இருக்கும். அதான் அந்த நெருப்பை அணைச்சிடலாம்னு வந்தேன்.

    என் வாழ்க்கையிலே இது வரைக்கும் நான் யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்டதில்லே, முதன் முதலா உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். ஏன்னா எனக்கு நீ  வேணும்ப்பா ,உன்னை விட முக்கியம் எனக்கு எதுவுமே  இல்லே” என்றார் நாத் தழுதழுக்க.

    சேகருக்கு அடி வயிற்றிலிருந்து விம்மிக்கொண்டு  ப்ரவாகமாய்ப் பொங்கி வழிவதற்கு இடம் தேடி அவன் கண்களின் வழியே தாரை தாரையாய் கண்ணீர் பொங்கிற்று.

    “அப்பா! நான்தான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும், நாந்தான் உங்களைப் புண்படுத்திட்டேன்” என்றபடி அவரைத் தழுவிக்கொண்டு அவர்மேல் சாய்ந்து கொண்டான்  சேகர்.

    சபேசனுக்கு இரண்டு வயதுப் பையன் சேகரை தோளில் சுமந்தபடி தட்டாமாலை சுற்றியது நினைவுக்கு வந்தது.

    கண்களில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீரை புடவைத் தலைப்பால் ஒற்றி எடுத்துவிட்டு “ஏங்க, உங்களுக்கு ஆபீசுக்கு நேரமாச்சு” என்றாள் சிந்துஜா.

    Share