Blog

  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 22ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​​கோபாலன்

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேனோ
    பட்டநாள் பட்டாலும் பதமெனக்குக் கிட்டாதோ
    நற்பருவமாக்கும் அந்த நாளெனக்குக் கிட்டாதோ
    எப்பருவமுங் கழன்ற ஏகாந்தம் கிட்டாதோ
    வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ
    தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்கத்தி கிட்டாதோ
    வெந்துயரைத் தீர்கும் அந்த வெட்டவெளி கிட்டாதோ
    சிந்தையைத் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ
    அனாடியார்க் கடிமை கொளக் கிட்டாதோ
    ஊனமற என்னை உணர்ந்து வித்தல் கிட்டாதோ
    என்னென்று சொல்லுவண்டா என்குருவே கேளடா
    பின்னை யெனக்கு நீ அல்லாற் பிரிதிலையே. 1.

    மதுரையம்பதி வாழ் சோமசுந்தர சிவமே! நினது திருவருளைப் பெறாமல் நாட்கள் வீணாகிப் போனாலும், இனியாவது நின்றன் கருணையினைப் பெறாமல் இருப்பேனோ? அருள் கிடைக்காமல் நான் அவதியுற்றாலும் இனியொருநாள் நற்கதியை அடையாமல் போவேனோ? நற்பேறு பெருகின்ற நல்ல காலம் எனக்குக் கிட்டாதோ, அதனால் விளைகின்ற நன்மைகளை நான் அடையும் நாள் வந்து சேராதோ. சதாகாலமும் பேசிக் கொண்டிருக்கும் நிலைமை மாறி உன்னில் மனம் வைத்து வாய் மெளனம் கிட்டாதோ, மேலும் ஜீவராசிகளோடு கூடியிருக்கும் நிலை மாறி சுத்த சிவத்தில் லயிக்கும் ஏகாந்தம் கிட்டாதோ. பிறவியினால் பெற்ற துன்பங்கள் நீங்கி பரவெளியின் அமைதியில் நான் நிலைக்கும் நாள் வாராதோ, எண்ணங்களை அடக்கி ஒருமுகப்படுத்தி உன்னில் ஒன்றும் அந்தத் தேன்சுவையும் கிட்டாதோ. மெய்யடியார் கூட்டத்தில் நான் தொண்டுபுரியும் காலமும் வாராதோ, குற்றமே குணமாக்கொண்ட எனக்கு நின் திருவருளை ஓதுவித்தல் கூடாதோ. சற்குருநாதா, என் குருமணியே! என்னவென்று சொல்லுவேன், என்னவென்று சொல்லுவேன். நின்னையன்றி என்னை ஆதரிப்பார் இல்லையே.

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    அன்ன விசாரம் அது அற்ற இடம் கிட்டாதோ
    சொன்ன விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ
    உலக விசாரம் ஒழிந்தவிடம் கிட்டாதோ
    மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ
    ஒப்புவமை அற்றோடொழிந்த இடம் கிட்டாதோ
    செப்புதற்கும் எட்டாத் தெளிவிடமும் கிட்டாதோ
    வாக்கு நனாதீத வகோசரத்திற் செல்ல எனைத்
    தாக்கு மருட் குருவே நிந்தாளிணைக்கே யான்போற்றி. 2.

    கன்னிவனத்து நாதனே, சிவபெருமானே! சோற்றுக் கவலையே பெருங்கவலை, அந்தக் கவலை இல்லாத இடம் எனக்குக் கிடைக்காதா, தங்கம் தங்கம் என்று பொன்னின் நினைவாக இருக்கும் நினைவு அகன்று அது போன இடம் தெரியாத வெற்றிடம் எனக்குக் கிடைக்காதா. பூலோக வாழ்க்கையின் நிறை குறைகளில் ஈடுபட்ட இவ்வுலக விசாரம் தொலைந்து போன இடம் எனக்குக் கிடைக்காதா. இழிநிலையாம் மகளிரொடு கூடிவாழும் வாழ்க்கை நிலை இல்லாத வெற்றிடம் எனக்குக் கிடைக்காதா. பிறரது சுகவாழ்க்கை, நல்வாழ்க்கை இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து இரங்குகின்ற நிலை மாறி சமமான பார்வை எனக்குக் கிடைக்காதா. சொற்களால் வியந்து போற்ற முடியாத வெற்றிடமும் கிட்டாதோ. வாக்கு, மனம் இவற்றுக்கு அப்பாற்பட்ட இடத்துக்கு எனை செலுத்துவீர் ஐயனே! நினது திருத்தாள் இணையடி போற்றுகின்றேன்.

    (முதல்வன் முறையீடு நிறைவு பெற்றது)

    Share
  • உறைந்த காலம்

    உமா மோகன்

    uraintha

    உதிர்த்த சொற்களில்

    நீ நின்றாய் ..

    உரைக்காத சொல்லில் நான்…

    என் உச்சரிப்பு குறித்து

    கிளர்ச்சியோடு பகிர்கிறாய்…

    மௌனத்தில் நடமிட்ட

    பொழிவை கோர்க்க இயலவில்லை

    என்னால் …

    வண்ணத்துப் பூச்சியின்

    சிறகு படிந்த மகரந்தமென ரசிக்கிறாய்

    கூட்டுப் புழுவின் வரிகள்

    என்னாயின ..

    ஒருமுறை கேட்டிருக்கலாமோ

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…87

    சக்தி சக்திதாசன்

    mandela-cell-jpg_extra_big Nelson-Mandela-bw

     

     

     

     

     

     

     

     

     

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…87

     

    அன்பினியர்களே !

    இனிய வணக்கங்களுடன் உங்களின் முன்னே அடுத்த மடலில் சந்திப்பதில் மிக்க மகிழ்வுறுகிறேன்.

    உலகளாவிய ஊடகங்கள் அனைதிலும் இவ்வாரம் ஊடுருவி நிற்கும் விடயம் மறைந்த தென்னாபிரிக்க அரசியல் தலைவர் திரு நெல்சன் மண்டலா அவர்களின் மறைவைப் பற்றியதே !

    ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பது அவன் வாழும் காலத்தில் அவனைப் பற்றி எழும் பேச்சுக்கள் அல்ல அவன் மறைந்த பின்னால் அவனைப் பற்றி மக்கள் மத்தியில் மிதக்கும் கருத்துக்களே என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு சமயம் கூறியிருந்தார்.

    அரசியல் கைதியாகச் சிறையிலே 27 வருடங்கள் அடைப்பட்டுக் கிடந்த ஒரு மனிதன் சிறையிலிருந்து வெளியே வந்து இரண்டு வருடங்களில் அந்நாட்டின் ஜனாதிபதியாக அரசியல் கதிரையை அலங்கரித்த சரித்திரம் படைத்தவர் நெல்சன் மண்டலா.

    சொந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வாக்குரிமை அற்று சிறுபான்மை இனத்தவரால் அரசியல் ரீதியாக சட்டம் மூலம் அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறு கொண்ட நிறவெறி அதிகார வர்க்கத்திற்கெதிராக போர்க்கொடி தூக்கிய ஒரு இளம் வீரரான நெல்சன் மண்டலா 27 வருடங்களின் பின்னால் அவரைப் பயங்கரவாதி என வருணித்த அரசியல் தலைவர்களாலேயே மாமனிதன் எனும் பெருமையோடு அரசியல் கோலோச்சும் வல்லமை கொண்ட ஒரு தலைவராக முடிந்தது என்பது ஒரு சாதாரண விடயமல்லவே !

    அப்படி அவர் எதைத்தான் சாதித்து விட்டார் ? மர்ரைய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களிடத்தில் காணப்படாத உயரிய அம்சம் இவரிடம் அப்படி என்னதான் இருந்தது ?

    கேள்விகள் எழத்தான் செய்யும் ?

    அவர் சிறையில் வாழ்ந்த அந்த 27 வருடங்களில் தன்னை அடக்கி ஒடுக்கிய அதைகார வர்க்கத்தினர் பேசும் அவ்ரிக்கானா மொழியைப் படித்தார் என்பதே அவருடைய சிறப்பம்சத்தின் அடிப்படையாகும்.

    அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டார். அந்தப்புரிதலின் அடிப்படையில் எப்படி தமது மக்களின் வாழ்விற்கு ஒரு விடியலைத் தேடிக் கொடுப்பது என்னும் வகையினை அறிந்து கொண்டார்.

    உலகளாவியரீதியில் தமது விடுதலைக்கான குரல் ஒலித்துக் கொண்டிருந்தது என்பதனை அவர் ஒருபோதும் மறக்கவில்லை.

    நெல்சன் மண்டலா தென்னாபிரிக்காவின் அரசியல் தலைவராக, நாட்டின் அதிபராக வருவதை விரும்பாத பல நாடுகளின் தலைவர்கள் அவர் பதவிக்கு வந்தால் தென்னாபிரிக்காவில் இரத்த ஆறு ஓடும். இனவெறிக் கலவரங்கள் தலைவிரித்தாடும் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டியிருந்ததை தலைவர் மண்டலா உணர்ந்திருக்கத் தவறவில்லை.

    அவரது அரசியல் தானும் தான் சார்ந்திருந்த இயக்கமும் எனும் குறுகிய கண்ணோட்டத்திற்கு அப்பால் தனது நாடு, தனது மக்கள் அவர்களின் நல்வாழ்விற்கான உலக அரசியல் என்பனவற்ற தகுந்த வகையில் உள்வாங்கியிருந்தது.

    எதையும், ந்ப்படியும், எப்போதும் சாதிக்கலாம் எனும் மனநிலை கொண்டிராது இதை, இப்போது, இப்படித்தான் எனும் வகையில் அவரது கொள்கைகளை வகுத்துக் கொண்டார்.

    அதற்கேற்ப சிறையிலிருந்து வெளிவந்த அவரது வாயிலிருந்து பழிவாங்கும் வகையிலான ஆத்திர உணர்வுகளோடு கலந்த பேச்சை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கிடைத்ததோ மாபெரும் ஏமாற்றம்.

    அவரது பேச்சின் சாரமே “மறப்போம் மன்னிப்போம்” எனும் வகையில் அமைந்திருந்தது. மன்னிக்கத் தெரிந்த மனிதனின் மனது மாணிக்கக் கோவிலப்பா எனும் கவியரசரின் வரிகள் அவரது மாண்மைக்கு எடுத்துக்காட்டாகியது.

    தன்னை அடக்கி ஒடுக்கிய சிறுபான்மை அதிகார வர்க்கத்தினருக்கும் தனது அர்சியல் கட்டமைப்பில் இடம் உண்டு என்பதைத் துல்லியமாக தமது நடைமுறையில் எடுத்துக்காட்டினார்.

    இந்தியாவின் தந்தை மக்காத்மா காந்தியடிகள் ஆரம்பகால தென்னாபிரிக்க உரிமைக்குரலில் முக்கிய பங்கு வகித்திருந்தார் என்பதை மறைந்த தலைவர் நெல்சன் மண்டலா அவர்கள் எப்போதும் மறந்து விடவில்லை.

    அரசியல் தர்மத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததினால் தான் மறைந்த இத்தலைவரின் நினைவுப் பெருநாளில் 90 நாடுகளிக்கும் மேலான தலைவர்கள் கலந்து சரித்திர வரலாற்றில் இந்நிகழ்வை இடம்பெற வைத்தார்கள்.

    உலகநாடுகள் னைத்தும் வியந்து நோக்கிய ஒரு வித்தியாசமான நெல்சன் மண்டலாவைப் போன்ற தலைவர்கள் நூற்றுக்கணக்காக அனைத்து நாடுகளிலும் தோன்ற வேண்டும்.

    அது ஒன்றே அமைதியான, சமாதானமான, சமத்துவமான அன்பின் அடிப்படையில் ஒரு அகிலத்தைச் சமைக்கும் வல்லமை படைத்தது

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள்…

     காவிரிமைந்தன் 

    அன்றுதொட்டு இன்றுவரை அர்த்தமுள்ள பாடல்கள் மக்கள் மனதில் பசுமையாய் நிறைந்திருக்கின்றன.அப்பாடல் வரிகள் பசுமரத்தாணிபோல் பதிவாகியிருக்கின்றன.கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கும் கவிஞானி வாலி அவர்களுக்கும் தனித்தனியே நூல்வடிவம் தந்தபின்னர், ஏனைய பல கவிஞர்கள்-திரைப்பாடலாசிரியர்கள் நெஞ்சில் உலா வந்த வண்ணம் உள்ளனர்.

    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை முதல் புலவர் புலமைப்பித்தன் என நெஞ்சில் குடிகொண்ட பாடல்களை வடித்தெடுத்த படைப்பாளர்களை – கால நிமித்தமாய் அவர்களின் மறக்கவொண்ணாப் பாடல்களைப் பற்றிய பகிர்வுகளை உங்களுடன் பரிமாற விழைகின்றேன்!

    இந்த நூலுக்கு பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்று பெயரிட்டுள்ளேன்.இதிலே விடுபட்டுப் போகாத வண்ணம்,தமிழ்கூறும் நல்லுலகம் தந்த சீர்மீகு பாடலாசிரியர்களை பட்டியலிட்டுத்தான் இப்படைப்பைத் துவங்குகிறேன்.  மேலும் இவர்களால் எழுதப்பெற்று மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற பாடல்கள் நாளைய தலைமுறைக்கு சேர்த்தாக வேண்டம் என்கிற வேட்கையும் இந்நூல் வடிவம் பெறக் காரணமாகும்.

    உண்மையைச் சொல்வதென்றால், இப்பாடல்கள் எழுதப்பெற்ற திரைப்படங்களைத்தாண்டி, மக்கள் வாழ்வியலோடு கைகோர்த்து கால இடைவெளி வென்று வாழுகின்றன என்பதற்கு சத்திய சாட்சியாக மக்கள் பல்லாயிரம், பல இலட்சம், பல கோடி என பரப்பளவு விரியும்.

    சொல்லாட்சி, பொருள், கருத்து, உணர்ச்சி, வாழ்க்கை தத்துவம், என எண்ணிலாத் தளங்களில் இப்பாடல்கள் மேலோங்கி நிற்பதும் அதற்கேற்ற இசை வடிவம் நம்மை இன்னும் நெருங்கச்செய்யவும் பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்கிற பெயருக்கு கட்டியங்கூறும்!

    வார்த்தைப் பூக்களாகவும், சில நேரம் புரட்சிக்கு வித்திடவும், வார்த்துத் தந்த கவிஞர் பெருமக்களை ஒருசேரப் போற்றி பாராட்டவும் வணங்கிடவும் கடமைப்பட்டுள்ளேன்!  இந்நூல் கவிஞர் பெருமக்கள் பலரையும் உள்ளடக்கமாய் வடிவம் பெறுவதால், அனைத்துப்பாடல்களும் இடம்பெற வழிகளில்லை!

    எனினும் இடம்பெற்றுள்ள பாடல்கள் அக்கவிஞர்களின் மேன்மையினை பறைசாற்ற ஏதுவாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்குத் திடமாக உண்டு.  வெறும் கற்பனைகளைக் காற்றில்பிடித்து பட்டம் விடுபவர்களாக நில்லாமல், தங்கள் தமிழ் ஆற்றலை – இந்தச் சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் தந்துவிட வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியோடு ஆற்றிய பணிகளால் விளைந்த முத்துக்களிவை என்பதனை முன்மொழிவது என் கடமையாகிறது!

    புலவர் புலமைப்பித்தன்

    • ·         இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்..

    திரைப்பாடல் என்றாலும் எல்லோரையும் திரும்ப வைத்த பாடல்!  கருத்துப் பெட்டகத்தைத் தன் கவி வண்ணத்தால் புலவர் புலமைப்பித்தன் புனைந்து தந்த பாடல்!  மக்கள் திலகத்திற்காக மலர்ந்த பாடலிது – மக்கள் மனதிலெல்லாம் நிறைந்திருக்கும் பாடல்! மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த பாடல்! திரையில் இரு வேறு கட்டங்களில் இரு வேறு குரல்களில் இடம்பெற்ற பாடல்! மறைந்த எஸ்.வரலட்சுமி அவர்களின் கம்பீரக்குரலில் தவழ்ந்திடும் தாலாட்டாகவும் பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் குரலில் குழைந்திடும் அன்பின் நீலாம்பரியாய்  நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் பிறந்து இந்த பூமியில் என்றும் தவழும் பாட்டு!

    பாட்டுடைத்தலைவன் கதாநாயகனாக.. வளர்ந்த பின்னரும் அடம்பிடிப்பதும். அன்னைக் காட்டும் பரிவில்..  மலர்ந்த முகம் காட்டி..கண்ணுறங்கும் காட்சியில்.. புலவர் புலமைப்பித்தனின் கனிந்த வரிகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இனிய ஸ்வரங்களில் இறக்குமதியாக.. தங்கள் குரலால் அதைப் பரிமாறியிருக்கிறார்கள்.  இதில் கவி விருந்தும் உண்டு!  நல்லிசையால் செவி விருந்தும் உண்டு!

    தாய் பாடும் பாட்டல்லவா தாலாட்டு! தங்கக் கிண்ணம், வெள்ளித்தட்டு, இவைகளைக் காட்டிலும் மதிப்பிடமுடியாத தாயின் பாசம் பரிணமிக்க.. தன் பிள்ளையின் கொள்ளை அழகை.. கொட்டி அளக்கிறார் பாடலில்..

    நின்றுநிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும்..

    எழில் நீந்தும் உடலினை காணும்பொழுதினில் சிற்பம் அதைக் கேட்கும்!”

    பொன்மனச் செம்மலுக்கு புகழாரமாய் அமைந்த பாட்டு!  பலகோடி தமிழ்மக்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் தலைவனுக்கு –தாயை முதல் கடவுள் என்று வாழ்ந்து காட்டிய தலைமகனுக்கு – அந்த தாயே பாடிய அன்பின் நீராட்டு!

    மற்றுமொரு முறை தன் தாய் பாடிய பல்லவியைக் கொண்டு, இந்தச் சமுதாயத்திற்கு நீதிகளையும் நெறிகளையும் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் சொல்லிவந்த எம்.ஜி.ஆர். பாடும் பாடலாய்..

    • இந்தப்பச்சைக்கிளிக்கொருசெவ்வந்திப்பூவில்
      தொட்டிலைக்கட்டிவைத்தேன் அதில்
      பட்டுத்துகிலுடன்அன்னச்சிறகினை
      மெல்லெனஇட்டுவைத்தேன்
      நான்ஆராரோஎன்றுதாலாட்ட
      இன்னும்ஆராரோவந்துபாராட்டஎந்தக்குழந்தையும்நல்லக்குழந்தைதான்
      மண்ணில்பிறக்கையிலே
      எந்தக்குழந்தையும்நல்லக்குழந்தைதான்
      மண்ணில்பிறக்கையிலே
      பின்நல்லவராவதும்தீயவராவதும்
      அன்னைவளர்ப்பதிலேநான்ஆராரோஎன்றுதாலாட்ட
      இன்னும்ஆராரோவந்துபாராட்ட

      தூக்கமருந்தினைப்போன்றவை
      பெற்றவர்போற்றும்புகழுரைகள்
      நோய்தீர்க்கும்மருந்தினைப்போன்றவை
      கற்றவர்கூறும்அறிவுரைகள்
      கூறும்அறிவுரைகள்  (இந்தப்பச்சைக்கிளிக்கொரு)

    ஆறுகரையில்அடங்கிநடந்திடில்
    காடுவளம்பெறலாம்
    தினம்நல்லநெறிகண்டுபிள்ளைவளர்ந்திடில்
    நாடும்நலம்பெறலாம்

    நான்ஆராரோஎன்றுதாலாட்ட
    இன்னும்ஆராரோவந்துபாராட்ட

    பாதைத்தவறியகால்கள்விரும்பிய
    ஊர்சென்றுசேர்வதில்லை
    நல்லபண்புத்தவறியபிள்ளையைப்பெற்றவள்
    பேர்சொல்லிவாழ்வதில்லை

    இந்தப்பச்சைக்கிளிக்கொருசெவ்வந்திப்பூவில்
    தொட்டிலைக்கட்டிவைத்தேன்  அதில்
    பட்டுத்துகிலுடன்அன்னச்சிறகினை
    மெல்லெனஇட்டுவைத்தேன்
    நான்ஆராரோஎன்றுதாலாட்ட
    இன்னும்ஆராரோவந்துபாராட்ட ம்…ம்…ம்…ம்..

    பொதுவாக பெண்மைதான் தாலாட்டுப் பாடும்!  பொன்மனச் செம்மலின் இதயம் எவ்வளவு மென்மை வாய்ந்தது என்பதற்கு இந்தப் பாடலில் அவர் முகம் காட்டும் அத்தனை நளினங்களும்.. பாவங்களும்.. கதையின் நாயகியை மட்டும் கண்ணுறங்கச் செய்யவில்லை!  நம்மையும்தான்!!

    எத்தனையோ ஆசிரியர்கள் எத்தனையோ நாட்களாய் நடத்தினாலும்கூட இத்தனை அருமையாய்.. இத்தனை அழுத்தமாய் நம் இதயங்களில் இடம் பெற வைத்துவிட முடியுமா?

    வாழ்க்கைக்கு விளக்கம்!  பயணத்திற்கு பாதை!  உள்ளத்தில் ஏந்த வேண்டிய இலட்சியம்!  சராசரி மனிதர்களுக்காகவே சமைக்கப்பட்ட பாடல்!  சரித்திரம் படைக்கவும் நம்மை உசுப்பிவிடும் வரிகள்! எளிய சொற்களால் புரியும் விதத்தினில் கற்பனை கலக்காத கருத்துப் புதையலிது!

    கேட்கும் நேரம் கண்ணுறங்கலாம்!  கேட்கும்போதே உள்ளம் விழிக்கலாம்!   உலகம் முழுவதும் உயர்ந்த பாடல் வரிசயைிலே நிச்சயமாய் இடம் பெற்ற பாடல்!  இதன் படைப்பாளர்களை .. கூட்டணியை நாம் போற்றியே பாராட்டுவோம்!

    http://www.youtube.com/watch?v=ApWApnJisy0
    Intha pachai HD Song

     

    காவிரிமைந்தன்

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
     
     
    அன்புடன் 
    காவிரிமைந்தன் 

     

    Share
  • சீதாயணம் நாடகம் -11

    சீதாயணம் படக்கதை -11

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்

     

    unnamed 3

    unnamed2

    unnamed only

     

    Share
  • செம்பொன் சோதீசன் பதிகம்

    (இலாலாப்பேட்டை, குளித்தலை கரூர் இணைக்கும் சாலையில் உள்ளது. எனது இளம்பிராயம் அங்கு தான் அனுபவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைப் பணியில் கோயில் இடம்மாறி புதுபிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளம் கொட்டிகிடக்கும் இக்கிராமத்தில் அருள்வல நாயகனை கண்டு தரிசனம் செய்ய இப்பதிக காணிக்கை.)

    நாமம்

    அகண்ட காவிரியின் தென்கரைச்    சீலமாக்க‌

    உகந்த     நிலமென்று  உமையோடு குடியமர‌

    முகர்ந்த மலர்கதம்ப  மல்லிகை      மாலைசூடி

    சகண்டை நாதமோடு செம்பொன்   சோதீபோற்றி

     

    நிலம்

    கீழ்திக்கில்        கடம்பராக‌     தென்கீழ்     ரத்தினக்கிரி

    தென்திக்கில்    சொக்கனாய் தென்மேல் நாமகிரி

    மேற்திக்கில்      கொடுமுடி    வடமேற்கு ஞானகிரி

    வடதிக்கில் கொள்ளிசித்தன் ஈசானம்  மரகதகிரிவாழி

     

    தலம்

    வாழைதன் தோட்டமோடு தென்னைசூழ்  பச்சையாக‌

    தாழையின் வாசம்சேர்     தளிர்வெற்றி    லைப்பாக்கு

    பேழைவயி ற்றெடுத்த     பெரும்பிள்ளை வேலனோடு

    மாழையாய் செம்பொற்   சோதியான்  பாதம்போற்றி

     

    தீர்த்தம்

    தவமுடை முனிவரோடு     சித்தரும் குழுமிநிற்க‌

    சிவசிவ       நாதமோடு          நந்தியும்  ஓதிநிற்க‌

    புவனமும் பொன்னியோட‌   செம்பொன்  துறைசேர்

    ப‌வனமும் அணியுமாக    பல்வினைப் போகுமாமே

     

    விருட்சம்

    பொன்னியில் தலைமூழ்கி புதுகுட நீரெடுத்து

    பொன்னீசன்   குளிரவென   அபிடேகம் செய்வித்து

    பொன்மஞ்   சற்மலரோடு    வில்வத்தால் பூசித்து

    பொன்சடை யேற்றிபாடு குலம்வாழச் செய்யுமாமே

     

    அருள்

    நம்பிக்கை பக்திநேச‌ம்    தருமமொடு   வாய்மையுமே

    கும்பிடும்  அன்புநேயம்  குறைகாணா  பிறைசூடன்

    அம்பரத் தாடுவான்முன் அனைத்தோடு துதிசெய்யாய்

    பம்பர  மனதடங்கி பல்காலம் நலங்காண்பாய்

     

    மகிமை

    திருநீறு தரித்துவரின்     அறிவோடு நலமேறும்

    திருநீறு அணிந்துவரின்  கேடுதசை மாறிவிடும்

    திருநீறு பூசிவரின்    பெருநோயும் ஓடிவிடும்

    திருநீறு குளித்துவரின் தீராதவினைத் தீறும்

     

    வாழ்த்து

    வாழியச் செம்போற்சோதி வாழிய தருமவர்த்தனி

    வாழியத் தொண்டர்குழாம் வாழிய தருமநெறி

    வாழிய    வையகமும்   வாழிய இந்நிலமும்

    வாழிய   கங்கையென வற்றாமல் பொன்னியுமே!!

    Share
  • வாழ்க்கை நலம் – 39

    குன்றக்குடி அடிகள்

    39. தீயினும், தீமை தீது!

     

    நல் வாழ்க்கை அமைய, தீமை தரும் செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். நல்லன செய்தல் வாழ்க்கையின் குறிக்கோள். நல்லன செய்தல் நன்று.

    நல்லன செய்வது ஒருபுறம் இருக்கட்டும். தீமையைச் செய்யாது இருத்தல் வேண்டும். தீமையாவன வெறுப்பு, அகங்காரம், பொறாமை, பகைமை, பயம், தூற்றுதல் முதலியன.

    இத் தீமைகளிலிருந்து வாழ்க்கை முற்றாக விலக வேண்டும். யாரொருவரையும் வெறுத்தல் கூடாது. நான் என்ற அகங்கார உணர்வு மேலிடுதல் கூடாது. யார் மாட்டும் எவர் மாட்டும் அழுக்காறு கொள்ளுதல் ஆகாது. யாரோடும் பகை கொள்ளுதல் கூடாது. பயம், அதாவது அச்சம் அறவே ஆகாது! மற்றவர்களுடைய சிறுமையை, குற்றங்களைத் தூற்றக்கூடாது. இவை தீமைகள். இவை தம்மைச் சார்ந்தாரை அழிக்கும்.

    தீயைவிடத் தீமை கொடிது. தீ சார்ந்ததை மட்டும் எரித்து அழிக்கும். தீமை தோன்றும் இடத்தையும் அழிக்கும். சேரும் இடத்தையும் அழிக்கும் தீ, ஒரோ வழி பயன்படும். தீமை பயன்படாது; அறவே தீது; முற்றிலும் தீது. ஆதலால், தீயன சொல்லற்க. தீயன செய்யற்க. தீமை செய்தலைத் தவிர்த்திட ஒரே வழி நல்லன செய்தலேயாம்.

    தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும்.

    (திருக்குறள் 202)

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

    Share
  • சக்தியை சேமிப்போம்!…

    விசாலம்

     

    டிசம்பர் 14 சக்தியைச் சேமிக்கும் நாள் energy conservation day.இந்த நாள் BEE என்ற {“Bereau of energy efficiency } என்ற அமைப்பு மக்களுக்கு விழிப்புணர்வைத் தர முழித்துக்கொள்கிறது. இந்த அமைப்பு 2001லிருந்து செயல்படுகிறது .பள்ளியில் இந்த நாள் வந்தால் ஆசிரியர்களுக்கு இரட்டிப்பு வேலை. மத்திய அரசின் வழியாக சில போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வைக்க வேண்டும் அதாவது எப்படி எனர்ஜியை மீத்து வருக்காலத்திற்கு சேமிக்க வேண்டும் என்ற கருத்தில் போட்டிகள் தொடங்கும். இதில் கட்டுரைப்போட்டியும் ,சித்திரப்போட்டியும் நிச்சியம் இருக்கும். இதில் ஜெயிப்பவர்களுக்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும் ரூ 33000 ஒதுக்கப்பட்டிருக்கும். பரிசுமுடிவுகள் வெளிவந்தவுடன் நேஷனல் எனர்ஜி கன்வெர்ஸேஷன் டே அன்று விழாப்போல் கொண்டாடுவார்கள்.விழாத்தலைவர் பரிசுகளை வழங்குவார்.

    இந்த நாளை நாம் மிக முக்கியமான நாளாகக்கொண்டு நம்மால் முடியும் வரை சக்தியைச் சேமிக்க வேண்டும் இந்த பூமியிலேயே நமக்குத் தேவையான சக்திகள் அனைத்தும் உள்ளன நீர்மின்சக்தி அணுமின்சக்தி என அனைத்தையும் உருவாக்கியது மனித ஆற்றல் என்ற சக்திதான், இதைச்சேமிக்க ஒவ்வொருவரும் தங்களால் இயன்றவரை முயல வேண்டும். இல்லத்தரசிகள் கேஸ் அடுப்பை தேவைக்கு அதிகமாக உபயோகிக்காமல் சேமிக்கலாம் சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு டிவி கீழ் அமர்ந்த விடுவார்கள் அது கொதித்து பாதி ஆனவுடன் பின் வந்து அணைப்பார்கள் சிலர் தோசை வார்க்கும் தவாவை பெரிய அளவில் வைத்து அதில் சிறிய தோசை வார்ப்பார்கள், சின்ன தவா வைத்தாலே தேவையான் சூடு பரவும் ,பெரிய குடும்பமானாலும் சிறிய குடும்பமானாலும் சாப்பாட்டிற்கு என்று ஒரு நேரம் ஒதுக்க ஒரே நேரத்தில் எல்லோருக்கும் சுடச்சுட பரிமாறமுடியும் அது இல்லாமல் நினைத்த நேரத்தில் தன் இஷ்டப்படி வந்து சாப்பிடும் பொருளை மறுபடியும் சுட வைக்க எனர்ஜி அங்கு வீணாகும். தவிர அதில் காய்களின் ஊட்டச்சக்தியும் குறையும்.

    இல்லறத் தலைவிகள் தன் காரியமே கண்ணாயினார் என்பதுக்கொப்ப வேலை செய்தால் எரி பொருள் வீணாவதைத் த்டுக்கலாம் அடுத்ததாக மொபைலில் பேசிக்கொண்டே இருக்க அடுப்பை அணைத்தோமா இல்லையா என்ற சந்தேகம் வந்து அங்கும் எரி பொருள் வீணாகும். பர்னரின் அளவு இருந்தால் நன்றாக இந்தச் சக்தியைச் சேமிக்கலாம்,இனி ஆண்கள் ராஜ்ஜியத்திற்கு வருவோம். சில ஆண்கள் ஷேவிங் செய்த்துக்கொள்ள குழாயைத் திறந்து விட்டபடி தங்கள் வேலையைத் தொடருவார்கள் ,அத்துடன் செல்லிலும் பேசுவார்கள். ஐயோ பரிதாபம் தண்ணீர் கீழே கொட்டியபடி இருக்கும் .இதே போல் பலதடவைகள் குழாய் திறந்து விட்டபடி வந்து செல்லில் பேச்சு தொடங்கி விடும் . பக்கெட் ரொம்பி வழிந்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று விழித்துக்கொள்வார்கள். “ஐயோ குழாயை மூடவேல்லையே .நல்ல வேளை இப்பவாவது ஞாபகம் வந்துதே .இல்லாவிட்டால் இந்த முசுடு வீட்டுக்காரன் என்னைப்பின்னி எடுத்துடுவான் “என்று தன் தவறை உணராமல் பேசுவதைக் கண்டிருக்கிறேன் சிலர் மேலே தண்ணீர் ஏற மோட்டார் போட்டு விட்டு பின் அந்த டேங்க் ரொம்பி வழிந்து கீழே கொட்ட பின் முழித்துக்கொள்வார்கள்.

    வீட்டுக்குழந்தைகளோ எல்லா அறையிலும் சுழலும் விசிறியைப் போட்டு விட்டு அதை அணைக்காமல் வெளியே சென்றுவிடுவார்கள் .ஒரு அறையை விட்டு வெளியே வரும்போது லைட் . ஏசி எல்லாம் அணைத்துவிட்டு வரும் வழக்கத்தை பெற்றோர்கள் தவறாமல் கற்றுக்கொடுக்க வேண்டும் .அதே போல் கணினியையும் அணைத்துவிட்டு வர பழக்கப்படுத்த வேண்டும் அரசை சார்ந்தவர்களும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதை நான் கண்டிருக்கிறேன் .சில தெருல் பகலிலும் விளக்கு எரியும் ,,அதை அணைக்க மறந்து இருக்கலாம், இதே போல் ஆபீஸில் மனிதர்கள் இல்லாத அறையிலும் சுழல் காற்றாடி சுழன்றுக்கொண்டிருக்கும் ,கணினியோ கேட்கவே வேண்டாம் அதை சிலர் அணைப்பதே இல்லை. மைக்ரோஅவனில் தேவையான அளவுடன் கண்ணாடி பாத்திரம் வைக்க நிறைய சக்தி சேமிக்கலாம் , வீட்டு வாசலில் மரங்கள் இருந்தால் நல்ல காற்று வருவதால் மினசாரச் சக்தி சேமிக்கலாம்.

    தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் விதம் மிக வியப்பைத் தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும் மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம். உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசி போட்டாற் போல் இருக்கிறது இது நல்ல வெயில் காலத்திலும் தான். எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி. இந்த வெளி சக்தியைச் சேமிக்கும் போது எனக்கொன்று தோன்றுகிறது .ஏன் நாம் நம்மிடம் இருக்கும் சக்தியையும் சேமிக்கக்கூடாது? படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியை இழக்கிறோம் .அளவு கடந்த மோகத்திலும் அல்லது காமத்திலும் சக்தி விரயமாகிறது நம் உடலில் இருக்கும் சக்தியை விரயமாக்காமல் தக்க வைத்துக்கொள்ள அங்கு நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது, மௌனத்தில் தியானம் சீக்கரம் பலன் தருகிறது “.மௌனகுருவே நடராஜா நீலகண்டனே ” என்று அந்த ஞானகுரு தக்ஷிணாமூர்த்தியைத் தியானிப்போம்

    ஜே.வி செர்னே சொல்கிறார்

    ஆற்றல் சக்தியை நாம் பயன்படுத்தி வெற்றிபெற வார்த்தைகள்
    வாகனங்களாக உள்ளன . “செய்து முடிப்பேன்” என்ற வாகனத்தில்
    ஏறிக்கொண்டால் அடக்கமுடியாத ஆர்வத்துடன் கூர்ந்து செயல்
    வடிவில் ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம் வானத்தைத் தொட்டுவிடலாம்

    சக்தியைச்சேமிப்போம்!…

    Share
  • பாரதி கண்ட கனவும் மக்கள் தீர்ப்பும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    5-color bharathiமகாகவி பாரதியாரின் 132வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடு சுதந்திரம் பெறும் முன்னரே ஆனந்தமாக சுதந்திரப்பள்ளு பாடி கனவுலகில் குளிர்ந்தவன் பாரதி!! சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று பாரதி கண்ட கனவும் அந்த ஆசையை அவர் பலவிதங்களில் வடிவமைத்துக் காட்டிய விதமும் ஒவ்வொரு இந்தியனின் உணர்விலும் ஊடுறுவிக் கிடக்கும் ஒன்றுதான் என்றாலும் அவைகள் அனைத்தும் இன்று செயல்படாமல் ஏட்டளவிலேயே நின்று போய்க்கிடப்பதற்கான ஆதாரங்களும் பல. பாரதி கண்ட கனவுகளில் பல இன்றும் கனவுகளாகவே உள்ளதுதான் வேதனைக்குரிய விசயம். பாரதி கண்ட யுகப் புரட்சியும், உருசியப்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி பற்றி பாடிவைத்துப்போன அனைத்தும் இன்றும் நினைவுகூரத்தக்கது!

    மாகாளி பராசக்தி உருசியநாட்
    டினிற்கடைக்கண் வைத்தாள். அங்கே
    ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி;
    கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்;
    வாகான தோள்புடைத்தார் வானமரர்;
    பேய்களெல்லாம் வருந்திக் கண்ணீர்
    போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;
    வையகத்தீர், புதுமை காணீர்!

     

    உருசிய நாட்டில் கடைக்கண் பார்வை வைத்த மாகாளி நம் நாட்டிலும் வைக்க வேண்டும் என்ற பாரதியின் கனவு நனவாகும் காலம், மக்கள் நல்லாட்சி பெறும் காலம். இன்று ஐந்து மாநிலங்களின் தேர்தல் நடந்து முடிந்து வெற்றி தோல்விகளைப் பற்றி அறிவித்து யார் பதவிக்கு வரப்போகிறார்கள் என்பதை அறியும் சூழலில் இருக்கிறோம். இதில் நம் கவனத்தை ஈர்ப்பது, எங்கெல்லாம் நல்ல ஆட்சி நடந்திருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் தங்கள் வாக்குகள் என்னும் புரட்சிகள் மூலம் அவர்களுக்கு மீண்டும் பதவியைக் கொடுத்து புரட்சி ஏற்படுத்தியுள்ளார்கள். ஐந்து மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் மிஜோரம் மாநில முதல்வர் லால் தன்ஹாவ்லா ஐந்தாவது முறையாக அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது வெற்றிக்கான காரணமாக அவர் குறிப்பிடுவது கடந்த 5 ஆண்டுகளாக தாம் வழங்கிய ஊழலற்ற ஆட்சி என்பதுதான். அது போலவே டெல்லி சட்ட சபைக்கு நடைபெற்ற தேர்தலிலும் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிர்ப்பாக பிரச்சாரம் செய்த கட்சியான, ஆம் ஆத்மி என்ற கட்சி அறிமுக நிலையிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் 27 இடங்கள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது! ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை ஆண்ட ஆளும் கட்சி மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நல்ல ஆட்சியை வழங்கியதாலேயே அவரை மக்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான விழிப்புணர்வு பெறும் காலமாகவே உள்ளது இது.

    பாரதி கண்ட மற்றொரு கனவு பெண் விடுதலை!

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
    உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
    உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

    இன்று நிமிர்ந்த நன்னடையால் அமில வீச்சும், பாலியல் வன்கொடுமைகளும் பரிசாகக் கிடைக்குமோ என்று அஞ்சி, அஞ்சி முக்காடிட்டு குனிந்த தளர்நடை நடக்க வேண்டிய சூழலுக்குப் பல பெண்கள் தள்ளப்பட்டிருக்கும் கொடுமையை அந்த பாரதி ஒருவேளை கண்டிருந்தால் இன்னும் என்னவெல்லாம் பாடிவைத்திருப்பானோ?

    “காலனி ஆதிக்கத்திலிருந்து புதிதாக விடுதலைப் பெற்ற நாடுகள் தன் சொந்த காலில் நிற்க வேண்டும், பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டுமென்றால் அந்த நாடு மின்சாரத்திலேயும், இரும்புக் கனி வளத்திலேயும், பெட்ரோலியத்திலும் தன்னிறைவுப் பெற்றிருந்தால்தான் ஒரு நாடு வேற்று நாடுகளுக்கு அடிமையாகாமல் தம் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்” என்று லெனின் சொன்ன இந்த வார்த்தைகள் இன்று இந்தியாவிற்கு எப்படிப் பொருந்துகிறது என்று சிந்திக்க வேண்டிய தருணம் இது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், பெட்ரோல், மின்சாரம் போன்றவற்றிற்காக அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய மோசமான சூழலில் நாடு இருப்பது வேதனையான விசயம்.

    பெண் அடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்த கவிஞன் பாரதி, தமிழுக்கும் தமிழினத்திற்கும் செய்த தொண்டு பாராட்டிற்குரியது. புலவர்கள் மத்தியில் முடங்கிக் கிடந்த தமிழை பாரதி தன் எளிய நடை மூலம் அதனைக் கையைப் பிடித்துப் பொதுமக்களிடம் கூட்டி வந்து சேர்த்துள்ளான் என்றால் அது மிகையல்ல. தமிழ் மொழியின் இனிமையை முழுமையாக உணர விரும்புபவர்களுக்கு இன்றும் அவன் பாடல்களுக்கே முதல் வாய்ப்பு . வெளிநாடுகளில் அடியுதைபட்ட தமிழச் சாதிக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குரல் கொடுத்தவன் பாரதி.

    சாத்திரங்கள் பல தேடினேன் – அங்கு
    சங்கையில்லாதன சங்கையாம் – பழங்
    கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் பொய்மைக்
    கூடையில் உண்மை கிடைக்குமோ?

    என்று பாடிய மனிதாபிமானி!

    புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
    தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
    கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
    வசையென்னாற் கழிந்த தன்றே!

    என்ற பாரதியின் வரிகள் சத்தியமானவைகள். வெறும் புகழ்ச்சி இல்லை. பாரதியின் கவிதை வீச்சை வெல்லத்தக்க கவிஞர் வேறு எவரும் இன்னும் பிறக்கவில்லை என்பதே உண்மை.பாரதிதாசன் பாரதியை உச்சி மீது வைத்து மெச்சுவதொன்றே போதும் அவன் புகழுக்கு. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய’ இந்த மண்ணில் சாதி மத வேறுபாடு அகன்றிட, அறியாமை இருள் நீங்கிட ,சமுதாயம் சீர் பெற்றிட, வறுமையை வெளியேற்ற ‘எல்லோரும் ஓர் நிலை எல்லோரும் ஓர் நிறை’ ஆகவேண்டும் என்று கனவு கண்ட பாரதியின் கவிதையில் ஷெல்லியின் கற்பனை, பிரௌனிங்கின் வாழ்வு நோக்கு, வோர்ட்ஸ்வொர்த்தின் கடவுள் கொள்கை, , டென்னிசனின் கவிதையின் எளிமை போன்றவற்றைக் காணலாம். மகாகவிஞன் பாரதி, புதிய சுதந்திரப் போர்ப் படையைப் படைத்திட்ட கவித்தளபதி என்றால் அது மிகையாகாது. பெரும் கவிப்பரம்பரையையே படைத்திட்ட படைப்பாளி என்பதே உண்மை. உன்னதமான சிந்தனையாளன். பாரதியின் பாடல்களால் விழிப்புணர்வு பெறுவோர் எண்ணிக்கை இன்றும் குறைந்தபாடில்லை என்பதே நிதர்சனம்! வாழ்க பாரதி புகழ்!

    Share
  • பாரதிப் புலவனைப் போற்றுவோம்!

    மேகலா இராமமூர்த்தி

    Subramanya_Bharathi

    அடிமை யிருளது அகன்றிட

    அக்கினிக் குஞ்சென வந்தவன்!

    மடமை எனும்களை அழித்திட

    அறிவுக் கோடரி யானவன்!

     

    சுதந்திர தேவிதன் துயிலெழப்

    பள்ளி யெழுச்சியைப் பாடினான்!

    மதத்தின் பெயரினால் சண்டைகள்

    செய்பவர் தம்மையே சாடினான்!

     

    கண்ணனைக் காதலி ஆக்கியே

    கண்டு மகிழ்ந்திட்ட கோமகன்!

    எண்ணத்தில் உறைந்தவள் சக்தியே

    என்று உரைத்தநல் பாமகன்!

     

    ஆணும் பெண்ணுமே நிகரென

    வீர முழக்கத்தை எழுப்பினான்!

    நாணும் அச்சமும் நாய்கட்கே

    நங்கையர்க் கெதற்கென வினவினான்!

     

    பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ஆகியே

    பா ரதம் ஓட்டிய பாவலன்!

    நைந்திடும் உள்ளங்கள் ஒளிபெற

    பாரதம் கண்டமா கவியிவன்!

     

    Share
  • சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் – 2

    மேகலா இராமமூர்த்தி

    செல்லாச் செல்வன் 

    கருணை மறவனாக விளங்கி அந்தண முதியவர் ஒருவரை மதயானையிடமிருந்து காத்த கோவலன், இன்னொரு சந்தர்ப்பத்தில் ஓர் பார்ப்பனப் பெண்ணுக்கு நேர்ந்த மிகப் பெரிய கொலைப் பாவத்திலிருந்து அவளைக் காத்து, அவளிடம் கோபித்துச் சென்ற  கணவனை அவளோடு சேர்த்துவைத்த பெருந்தகையாளனாகத் திகழ்கின்றான். சுவையான அந்த வரலாற்றை இனிக் காண்போம்.

    புகார் நகரில் வசித்துவந்த ஓர் பார்ப்பனத் தம்பதிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறின்மையால் அவர்கள் (தம்மை அண்டி வந்த) ஓர் கீரிப்பிள்ளையைத் தம் பிள்ளையாகவே எண்ணி வளர்த்துவந்தனர். அந்தக் கீரி வந்த நல்ல நேரமோ என்னவோ..அவர்களின் பிள்ளையில்லாக் குறைக்கும் ஓர் விடிவு ஏற்பட்டது. அந்தப் பெண் அழகான ஆண் மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள். அந்தக் கீரியும் அக் குழந்தையிடம் மிகுந்த அன்போடு பழகி வந்தது.

    Picture1

    ஒரு நாள் தண்ணீர் எடுப்பதற்காகக் குடத்தோடு வெளியே சென்றாள் அந்தப் பெண். தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் அவள் கண்ட காட்சி அவளைத் துணுக்குற வைத்தது. அவள் அன்போடு வளர்த்துவந்த அந்தக் கீரிப்பிள்ளை தன் வாயில் இரத்தம் வழிய அவளை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதனைக் கண்டவுடன் மிகவும் பதற்றமடைந்த பார்ப்பனி, சற்றும் சிந்தியாமல், என்ன நடந்தது என்பதனை நேரில் கண்டு தெரிந்துகொள்ளாமல் தன் குழந்தையைத்தான் அந்தக் கீரிப்பிள்ளைக் கொன்றுவிட்டு வாயில் இரத்தத்தோடு வந்துகொண்டிருக்கிறது என்று அவசரப்பட்டு முடிவுகட்டித் தன் கையில் இருந்த குடத்தால் அந்தக் கீரியைக் கொன்றுவிட்டு  அழுதவண்ணமே வீட்டை நோக்கி விரைந்து வந்தாள்.

    ஆனால் அங்கே அவள் கண்ட காட்சியோ அவளை வெட்கித் தலைகுனிய வைப்பதாகவும், மிகுந்த மனவேதனையில் ஆழ்த்துவதாகவும் இருந்தது. ஆம்..அங்கே அவளுடைய அருமைக் குழந்தை யாதொரு அபாயமும் இல்லாமல் தொட்டிலிலே தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அத்தொட்டிலின் கீழே ஓர் பாம்பு இறந்து கிடந்தது. அங்கே நடந்தது என்ன என்று இப்போது அவளுக்கு நன்றாகவே விளங்கிவிட்டது. ”தான் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்த வேளையில் ஒரு பாம்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தீண்ட வந்திருக்கிறது, அதைக் கண்ட கீரிப்பிள்ளை அப்பாம்பினைக் கொன்றுக் குழந்தையைக் காத்திருக்கின்றது. அடடா! எப்பேர்ப்பட்ட மகத்தான செயலைச் செய்திருக்கின்றது அன்பே உருவான அந்தக் கீரிப்பிள்ளை! தன் குழந்தைக்கு மறுவாழ்வு அல்லவா கொடுத்திருக்கின்றது! இதனை அறியாமல் பூசிக்க வேண்டிய அந்தக் கீரியை ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிட்டல்லவா வந்திருக்கிறோம்!” என்று எண்ணி அவள் வருத்தம் மேலிட இருந்த வேளையில் வெளியில் சென்றிருந்த அவளுடைய கணவன் வீட்டிற்குத் திரும்பி வந்தான்.

    மனைவியின் முகவாட்டத்தைக் கண்டவன் அதன் காரணம் என்ன என்று வினவ, பார்ப்பனி நடந்தவற்றைக் கண்ணீரோடு அவனிடம் விவரிக்கின்றாள். அது கேட்டு வெகுண்டெழுந்த பார்ப்பனன், ”மிகப்பெரும் கொலைப் பாதகத்தைச் செய்த உன்னோடு இனி என்னால் வாழ இயலாது. உன் கையால் சமைத்த உணவை நான் இனி உண்ணவும் மாட்டேன்!” என்று கடுங்கோபத்தோடு கூறிவிட்டு வடமொழி வாசகம்1 எழுதிய ஏடு ஒன்றை அவள் கையில் திணித்துவிட்டு, ”இதன் பொருள் உணர்வாரிடம் இதனைக் கொடு” என்று சொல்லிவிட்டு வடதிசை நோக்கிப் புறப்பட்டுவிட்டான். (அப்பார்ப்பனி வடமொழி அறியாதவள் என்பது இதன் மூலம் தெரியவருகின்றது.)

    என்ன செய்வது என்று புரியாது திகைத்த அப்பெண், தன்னை மன்னிக்கும்படிக் கணவனிடம் கெஞ்சியபடியே அவன்பின்னே தொடர்ந்து செல்கின்றாள். ஆனால், அவள் கணவனோ அவள் செய்த பாவத்தை மன்னிக்க விரும்பாதவனாய் அவளைத் திரும்பியும் பாராமல் தனியே விட்டுவிட்டுக் கங்கைக்கு நீராடச் சென்றுவிடுகின்றான்.

    இவ்வாறு, கீரிப்பிள்ளை இறந்ததனால் கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிரிவு ஏற்பட்டுவிடுகின்றது. இச்சம்பவத்தை இளங்கோவடிகள் பின்வரும் அடிகளில் காட்சிப்படுத்துகின்றார்.

    பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக
    எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
    வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
    கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
    வடமொழி வாசகம் செய்தநல் ஏடு
    கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கென” (அடைக்கலக் காதை: 54-59)

    இப்பாடலில் பிள்ளை நகுலம்’ என்ற அழகான சொற்றொடர் கீரிப்பிள்ளையைக் குறிக்கின்றது.

    பின்பு அப்பார்ப்பனி அவ்வாசக ஏட்டைக் கையில் ஏந்தியவளாய் கடைவீதிகளிலும், வணிகர் வாழும் தெருக்களிலும் கண்ணீரோடு சுற்றித் திரிந்து ”இந்த வடமொழி வாசகத்தை யாரேனும் படித்துச் சொல்லுங்கள்; என் பாவத்தினைப் போக்கிப் புண்ணியப் பயனை அடையுங்கள்!” என்று கண்ணில்படுவோரிடமெல்லாம் இரந்து கேட்கின்றாள். ஆனால் அங்கே ஒருவருக்கும் அவள் கையில் உள்ள ஏட்டில் என்ன எழுதியிருக்கின்றது என்பதனை விளங்கிக்கொள்ள இயலவில்லை. இவ்வாறு அப்பார்ப்பனி துயருற்றுத் திரிவதை ஒருநாள் கோவலன் காண்கின்றான். அவளை அருகில் அழைத்து, “அம்மா! உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இவ்வாறு வருத்தத்தோடு போவோர் வருவோரிடமெல்லாம் ஏதோ கேட்டுக்கொண்டிருக்கிறாய்? கையில் வைத்திருக்கும் இந்த ஏடு யாது?” என இரக்கத்தோடு வினவுகின்றான்.

    அப்பெண் தன் நிலையைக் கோவலனிடம் மிகுந்த வருத்தத்தோடு விளக்கி, ”இந்த ஏட்டில் குறிப்பிட்டுள்ளதன் பொருளறிந்து என் துயரத்தையும், பாவத்தையும் போக்குங்கள்!” என்று கோவலனிடம் மன்றாடுகின்றாள். அதுகேட்டு அவள்பால் மிகுந்த பரிவு கொண்ட கோவலன், “கவலைப்படாதே அம்மா! தாளாமாட்டாத உன் துயரத்தை நான் போக்குகிறேன்” எனக்கூறி, அந்தணர்களின் வேதநூலில் கூறியுள்ளபடி அந்தப் பார்ப்பனியின் கொலைப் பாவம் நீங்குமாறு தானங்கள் பல செய்கின்றான். அத்தோடு நில்லாமல் அவளைப் பிரிந்து வடக்கே சென்ற அவள் கணவனையும் தேடிக் கண்டுபிடித்து அழைத்துவந்து அவளோடு சேர்த்து வைக்கிறான்.

    இவ்வாறு அவர்களை நன்னெறிப்படுத்தியதோடு, அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய செல்வங்களையும் வரையாது வழங்கிய செல்வந்தனாகக் கோவலன் விளங்குகின்றான். ’அப்பார்ப்பனியின் துயரத்தைக் கோவலன் போக்கினான்’ என்று இளங்கோ குறிப்பிடுவதால் அவ்வேட்டில் எழுதப்பட்டிருந்த வடமொழி வாசகத்தை அவன் படித்து அதன் பொருளை உணர்ந்தே அதில் குறிப்பிட்டிருந்தபடி கொலைப் பாவத்தைப் போக்குதற்குரிய பரிகாரத்தைச் செய்திருத்தல் வேண்டும் என்பதனை நாம் உய்த்துணர முடிகின்றது. கோவலனின் வடமொழிப் புலமையை ஆசிரியர் இந்நிகழ்வின்மூலம் குறிப்பாய் உணர்த்தியுள்ளார் என்று கொள்வதில் தவறில்லை.

    கோவலன் பார்ப்பனியின் துயர்தீர்த்த வரலாற்றை விளக்கும் சிலம்பின் வரிகள் இதோ…

    ”அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
    நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
    ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
    தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
    தானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக்
    கானம் போன கணவனைக் கூட்டி
    ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
    நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ!” (அடைக்கலக் காதை: 68-75)

    இப்பாடல் வரிகளில் கோவலனைத் ’தொலையாத செல்வமுடையவனே’ என்ற பொருள்தரும் ”செல்லாச் செல்வ!” என்ற சொல்லால் உயர்வுபடுத்துகின்றார் அடிகள். மிகுந்த செல்வம் படைத்திருந்ததோடல்லாமல் அதனை மற்றவருக்கு வாரிக் கொடுக்கும் வள்ளலாகவும் அவன் திகழ்ந்திருக்கின்றான் என்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய உயர்பண்பு தானே?

    கோவலனின் பொன் மனத்தை வெளிச்சமிடும் மற்றொரு சம்பவம் அடுத்த பகுதியில்…

    (தொடரும்)

    *********************************************************************************************************************************

    1. வடமொழி வாசகமாகச் சிலப்பதிகார உரையாசிரியர் ‘அடியார்க்கு நல்லார் குறிப்பிடுவது அபரீக்ஷ்ய நகர்த்தவ்யங் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம், பச் சாத்பவதி ஸந்தாபம்  ப்ராஹ்மணீ நகுலம்யதா என்பதாகும். இதன் பொருள்: “எந்த செயலையும் ஆராயாமல் செய்யக்கூடாது; நன்கு ஆராய்ந்த பின்பே செய்யவேண்டும்; இல்லையெனில் கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியைப் போல் பின்னால் வருந்த நேரிடும் என்பதாகும்.”

    கீரிப் பிள்ளையைக் கொன்ற பெண்ணின் கதை, குப்த அரசன் 2-ஆம் சந்திரகுப்தன் (also known as விக்கிரமாதித்தன்) காலத்தில் வாழ்ந்த ’விஷ்ணு சர்மா’ என்பவர் எழுதிய பஞ்சதந்திரக் கதைகளில் (a collection of fables) ஒன்றாகவும் பின்னாளில் சொல்லப்பட்டுப் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    Share
  • திருமணங்கள் பிரிவதற்கா?

    தஞ்சை வெ.கோபாலன்

    பெண்கள் சிலர் திருமணமான பிறகு கணவனுடன் சுமுக உறவு இன்றி, பிணக்கு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். அப்படிச் செய்பவர்கள் நம் நாட்டில் மிகக் குறைவாக இருந்தாலும், இப்போதைய நாகரிக சமுதாயத்தில் இங்கும் அந்த மேற்கத்தியக் கலாச்சாரம் பரவி வருகிறது. ஒரு அமெரிக்க தகவல் அங்குள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இது போன்ற பிரச்சினைகளால் அவர்கள் தனித்திருக்க நேருகிறது என்கிறது. ஆனால் இந்தியாவில் என்ன நிலைமை, இங்கும் அதுபோன்றதொரு நிலைமை ஏற்படுவது இங்கு நிலவி வந்த சுமுகமான குடும்பச் சூழ்நிலையைச் சீரழித்துவிடும். இது போன்ற கணவன் மனைவி பிரிவுகளுக்கு என்ன காரணம்? உளவியல் ரீதியாக இது பற்றிய ஆய்வுகள் மேலை நாடுகளில் அதிகம் செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட ஆய்வுகளில் கண்ட சில விடைகள் நம் சூழ்நிலைக்கும் ஏற்றதாக இருக்கும். அப்படியானால் அப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையை எப்படி சமாளிக்கலாம்?

    பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் பல்வேறு காரணங்களில் சில:-

    “நான் மனத்தளவில் அதிகம் புண்படுத்தப்படுகிறேன். அதன் விளைவாக என்னால் சுமுகமாக நடந்து கொள்ள முடியவில்லை, மற்றவர்கள் மனத்தை நோகடிக்கும்படி பேசியும் நடந்தும் கொள்ள நேர்கிறது.”

    “என் கணவன் என்னிடம் இப்போதெல்லாம் அன்னியோன்யமாக, நட்புறவோடு நடந்து கொள்வதில்லை”

    “இரவில் படுக்கையறையில் மட்டும்தான் என் நினைவு அவருக்கு இருக்கிறது, மற்ற நேரங்களில் என் மனநிலை உணர்வுகள், ஆசா பாசாங்கள் இவை பற்றி அவருக்கு அக்கறை இல்லை.”

    “தாய் தந்தையர்களோடு வாழ்ந்துவிட்டு புதுவீடு வந்த பின்னர் உறுதுணையாக இருக்க வேண்டிய கணவன் எப்போதெல்லாம் உடுக்கை இழந்தவன் கைபோல வந்து பாதுகாத்து உதவ வேண்டுமோ அப்போது அப்படியெதையும் செய்வதில்லை. ஏனோதானோவென்ற நடவடிக்கை மனவேதனையை ஏற்படுத்துகிறது.”

    “நாம் தவறு எதுவும் செய்துவிட்டால், மன்னிக்கவும் என்று சொல்வதைப் போல, அவர் செய்யும் தவறுகளுக்கு மனைவியிடம் வருத்தம் தெரிவிப்பதில்லை. தவறு செய்வது தன் உரிமை போலவும், பொறுத்துக் கொள்வது மனைவியின் கடமை போலவும் நடந்து கொள்வது.”

    “திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தாரோ, அப்படியே திருமணத்துக்குப் பின்னரும் இருப்பது, மனைவியாக வந்திருப்பவரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பில்லாமல் போய் அலட்சியத்துக்கு ஆளாக நேர்ந்து விடுகிறது.”

    “இருவருக்கும் சிந்தனை ஒற்றுமை இல்லை. கணவன் ஒரு திசையிலும், மனைவி எதிர்த்திசையிலும் அவரவர் மன நிலைமைக்கேற்ப பயணம் செய்வதால், மன ஒற்றுமையோ, சுமுக நிலைமையோ ஏற்பட வழியில்லாமல் போய்விடுகிறது.”

    “பெற்றோர் வீட்டில் வளர்ந்தபோது சகோதரர்கள், சகோதரிகள் மற்ற உறவுகள் அவர்களோடு பழகிய முறை, இவை அனைத்தும் இங்கு காணப்படவில்லை. அவரவர் வருவதும், உண்பதும், உறங்குவதும் ஒரு சத்திரம் போல் இருக்கிறதே தவிர, ஒற்றுமையான ஒரு கூட்டுக் குடும்பமாக இல்லை.”

    “வெளியே வேலைக்குப் போய்விட்டு வரும் கணவன், மனைவி என்ன செய்தாள், இன்றைய பொழுதை எப்படிக் கழித்தாள், அவளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததா, உடல் நலம் எப்படி, பொழுது போக்குகள் என்ன என்பது எதையும் பற்றி கவலைப்படாமல், தானுண்டு தன் சுகங்கள் உண்டு என்று இருப்பது.”

    ஆண்களிடம் கேட்டால் அவர்களும் இதுபோல பல நூறு காரணங்களைச் சொல்லி மனைவியைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் சில காரணங்கள்:-

    “திருமணத்துக்கு முன்பு அவள் வேறொரு ஆணிடம் நெருக்கமாகப் பழகி வந்தது இப்போதுதான் தெரியவந்தது”

    “கணவன் மீதும், கணவனுடைய பெற்றோர்கள் மீதும் ஒரு சிறிதும் அக்கறையோ, அன்போ கிடையாது. தன் பெற்றோர், தன் சகோதரர்கள் என்று தன் குடும்பத்தை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்து ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறாள்.”

    “அவளுடைய விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் என்னுடையதோடு ஒத்துவரவில்லை. ஒரே அலைவரிசையில் எங்கள் மனவோட்டம் இல்லையென்பதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.”

    இப்படி எத்தனையோ காரணங்கள் பெண்களுக்கும் ஏன் ஆண்களுக்கும்கூட திருமணமத்துக்குப் பிறகு ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற எண்ணங்கள் பொதுவாக வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கும் பெண்களுக்கே அதிகம் பாதிப்புகள் ஏற்படுகிறது. வேலைக்குப் போகும் பெண்களுக்கு வேறுவிதமான பிரச்சினைகள். ஆபீசில் அவனுடன் அதிகம் பேசுவாயாமே? உன்னுடன் சேர்ந்து பயணம் செய்தானே அவன் யார்? என்பது போன்ற சந்தேகக் கண்கொண்ட கேள்விகள் இவர்களை அதிகம் பாதிக்கச் செய்கின்றன.

    ஒரு இளைஞன், இளைஞிக்குத் திருமணம் நிச்சயம் ஆகின்றபோது, திருமண வாழ்க்கையைப் பற்றி அதிகம் சிந்தித்து அந்த வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கும், தான் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், தன்னிடம் கணவனும் கணவன் வீட்டாரும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமென்றெல்லாம் பெண்கள்தான் அதிகம் கவலை கொள்கிறார்கள். அதற்காகப் பலரிடம் விசாரித்து நிலைமைகளைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஆண்களோ அதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. அழகிய மனைவி வருவதும், அவளோடு ஊர் சுற்றுவது, அவள் வேலைக்குப் போனால் அவள் வருமானம் தங்களுடைய அதிகப்படி செலவுக்களுக்குப் பயன்படும் என்பது போன்ற சுயநல அடிப்படை எண்ணங்கள் மட்டுமே நிலவுமே தவிர, தான் பிறந்து வளர்ந்து உறவாடிய தங்கள் பெற்றோர்களை விட்டுவிட்டு நாமே கதி என்று வரப்போகிற ஒரு வயது வந்த, விவரங்கள் புரிந்த ஒரு பெண்ணைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

    பெண் வீட்டில் பெண்ணின் தாய் தந்தையர் தன் மகளின் திருமண வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்பதில் அதிகக் கவலையும், பயமும் கொள்வது போல ஆணின் பெற்றோர் சிந்திப்பதில்லை. வருகின்ற பெண் தங்கள் குடும்பத்தைப் பிரித்துவிடாமல் இருக்க வேண்டும், பெரியவர்களிடம் மரியாதை வைத்திருக்க வேண்டும், நம் குடும்பத்தில் பிறருடன் அனுசரித்து இருக்க வேண்டும், இவை தவிர அவள் என்னென்ன கொண்டு வருவாள் என்பதில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்களே தவிர, பெண்ணின் பெற்றோர் போல கவலை கொள்ள வழியில்லை.

    திருமணமான பின்னர் கணவன் மனைவிக்குள் ஏதேனும் மனவேற்றுமை உருவாகுமானால், பெண் தனக்கு நெருங்கிய தோழிகளிடமோ, தன் பெற்றோர்களிடமோதான் இதைப்பற்றி பேசுவாளே தவிர அக்கம் பக்கத்தாரிடமோ, தெரிந்த மற்ற உறவினர்களிடமோ பேசமாட்டார்கள். ஆனால் ஆண் பக்கத்தில் அந்தப் பெண் மீது குற்றம் சொல்வதில் முழுக் குடும்பமும் ஒன்றாகச் செயல்படும்.

    பிரச்சினை முற்றி விவாகரத்து என்று வருகின்ற நிலையில் மேலை நாடுகளில் பெண்களை விட ஆண்களே அதிகமாக விவாக ரத்துக்குப் போகிறார்கள். இங்கு நிலைமை சமநிலையில் இருப்பதாகத்தான் தெரியவருகிறது. விவாகரத்து வரை போகும் தம்பதியரில் ஆண்களிடம் பேசும்போது அவர்கள் சொல்லுகின்ற காரணங்கள் பொதுவாக, பெண்கள் சொல்லும் காரணங்களிலிருந்து மாறுபட்டு காணப்படுகிறது. திருமணமாவதற்கு முன்பு தானும் தன் பெற்றோரும் தங்கள் நிதி நிலைமை, மற்ற வசதிகள் இவற்றைக் கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் குடும்பம் நடத்தி வந்திருப்பார்கள். திருமணம் ஆன பின்பு மனைவி தன் கணவனது வருமானம், செலவு செய்யக்கூடிய வசதி போன்றவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றவும், மனைவியின் சுற்றத்தார் அடிக்கடி விருந்தினராக வந்து இருக்கும்போது அவர்களை நல்ல முறையில் கவனிப்பதற்காக அதிகமாகச் செலவு செய்ய நேர்வதையும் சொல்லித் தாங்கள் கடன்காரர்களாக ஆக்கப்படுவதைச் சொல்லி வருத்தப்படுகிறார்கள். ஒரு ஆண் தன் சம்பளம் முழுவதும் மாமியார் வீட்டுக்காரர்களுக்கு காப்பிக்கே செலவழிக்க நேர்ந்ததைச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

    திருமணமான புதிதில் மனைவி தன் கணவனின் வருமானம் என்ன, அதற்குத் தகுந்தபடி எப்படி குடித்தனம் செய்ய வேண்டுமென்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் அவளும் அவள் குடும்பத்தாரும் கணவன் தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டு இஷ்டம் போல் செலவுகளைச் செய்து கணவனைக் கடன்காரனாக ஆக்கி விடுகிறார்கள். அது மட்டுமல்ல விரலுக்கேற்ப வீங்க வேண்டும் என்பதற்கு எதிராகத் தனக்குத் தெரிந்த தோழிகளைப் போல தானும் ஆடம்பர வாழ்க்கைக்கு விரும்பினால் நிச்சயம் கணவன் கடன்காரனாகத்தான் ஆவான்.

    மனைவியின் விருப்பம் போல நடந்து கொள்ளவில்லையானால் தாம்பத்ய உறவில் விரிசல், கோப தாபங்கள், பிரிவு என்று விரும்பத்தகாத விளைவுகளைச் சந்திக்க நேர்கிறது. சில இடங்களில் ஈகோ பிரச்சினை. கணவனை விட சந்தர்ப்ப வசத்தால் மனைவிக்கு அதிக சம்பளமோ, பதவியோ கிடைத்துவிட்டால் போயிற்று, அப்படிப்பட்ட மனைவிகள் தங்கள் கணவன்மார்களை துச்சமாக, ஏளனமாக நடத்தத் தொடங்குகிறார்கள். வார்த்தைகளால் கொட்டுகிறார்கள். இது எல்லோருக்கும் பொதுவானது அல்ல, கூடியவரையில் இப்படி நடந்து கொள்வோர் அதிகம்.

    மனைவி இப்படியெல்லாம் நடந்து கொள்வதால் கணவன் மனவேதனை அடைந்து மனச்சோர்வினால் கிட்டத்தட்ட பைத்தியக்காரனைப் போல அலையத் தொடங்குகிறான். மனைவிகளைப் பொறுத்த வரை அவர்கள் பொறுத்துக் கொண்டு பார்த்துவிட்டு, முடியாத நிலையில் வெடித்துச் சிதறி பிரிவினை நாடுகிறார்கள்.

    நன்கு படித்த, நாகரிகம் தெரிந்த மனைவியர் கூட கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை இருந்தால் அதனைத் தங்கள் மனத்துக்குள் வைத்துக் கொள்வதோ, நம்பிக்கைக்குரிய தங்கள் பெற்றோர் அல்லது மிகவும் நெருங்கிய தோழிகளிடம் மட்டுமோ சொல்லாமல் பார்ப்பவர்கள் முன்னிலையில் எல்லாம் கணவனையோ, அல்லது கணவன் தன் மனைவியைப் பற்றி குறை கூறியோ அறையில் நடக்கவேண்டியவைகளை அம்பலத்துக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். பொதுவாகவே எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் கணவன் சாமர்த்தியமில்லாதவன் என்று மிக அதிகமான பெண்கள் எடுத்துக் கொண்டு அப்படியே பிறரிடம் சொல்லவும் செய்கிறார்கள். அவருக்கு என்ன தெரியும், நான் பார்த்து இந்தக் காரியங்களைச் செய்தேன் என்று சுய பெருமை பாராட்டுவதில் சிலருக்கு ஆர்வம். அதுபோன்ற இடங்களில் அந்த ஆண் நல்ல திறமைசாலியாகத்தான் இருப்பான். அவர்கள் வீடு சிதம்பரமாக இருக்கும். வேறு சில பெண்கள், என் வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம், அவர் வார்த்தையை நாங்கள் யாருமே மீற மாட்டோம் என்று தன்னை அப்பாவியாக சித்தரிப்பாள். அங்கு கணவன் மதுரையாகத்தான் இருப்பான்.

    பொதுவாக பெண்கள் பிரிவுக்குச் சொல்லும் காரணம் கணவனுடனான திருமணம் மகிழ்ச்சி தருவதாக இல்லை. அவன் வேறு பெண்ணுடன் உறவு கொண்டிருக்கிறான். தன்னையும் குடும்பத்தையும் கவனிப்பதில்லை. அடித்துத் தொல்லை கொடுத்துத் துன்புறுத்துகிறான், மனத்தளவில் தன்னைத் துன்புறுத்தி கொடுமைப் படுத்துகிறான் இதுபோன்ற பல காரணங்கள்.

    பொதுவாக ஆண்களுக்குத் தன் மனைவிக்குப் பிள்ளை பேறு இல்லையென்றால், அவன் நினைக்காவிட்டாலும், அவன் பெற்றோர் தொல்லை செய்து வேறு திருமணம் செய்து கொள்ள முதல் மனைவியை ரத்து செய்ய விரும்புகிறான். பெற்றோர் சொல்லாவிட்டாலும் மற்ற உறவினர், அக்கம்பக்கத்தார் தூண்டி விடுவார்கள். அவளுக்கும் பிள்ளை இல்லாமல் போனால் என்ன செய்வது என்ற எண்ணம் இருப்பதில்லை. இப்போதெல்லாம் இதற்கு மருத்துவர்களைக் கண்டு தேவையான சிகிச்சைகளோ அப்படியும் இல்லையென்றால் தத்து எடுத்துக் கொள்வதோ அதிகமாக ஆகிவருகிறது. பொதுவாக மனைவியை கவனித்து பேணி வராமையே பொதுவான பிரிவுக்குக் காரணமாக ஆகிவிடுகிறது.

    இதுபோன்ற தடைகளையெல்லாம் மீறி கணவன் மனைவி ஒற்றுமையுடன் இருக்க முயற்சி செய்வது ஒன்றே வழி. முணுக்கென்றால் ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் காட்டி பிரிவது ஏற்றுக் கொள்ள முடியாது. திருமண பந்தத்தில் மட்டும்தான் கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் விவரம் புரிந்து, பருவம் வந்த பின் தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற உறவுகள் அவன் அல்லது அவள் பிறக்கும்போதே கிடைத்துவிடுகிறது. இதுபோன்ற ஏதாவதொரு காரணத்தைக் காட்டி பெற்றோர்களையோ, உடன் பிறந்தவர்களையோ ரத்து செய்யும் உரிமை இருந்தால் என்னென்ன விளைவுகள் இருக்குமோ. இந்திய நாட்டின் பண்பாட்டில் கணவன் மனைவி பிரிவு என்பது சர்வசாதாரணமாகப் போய்விடக் கூடாது. சட்டங்கள் இருக்கிறது என்பதற்காக அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டுமென்கிற சட்டம் எதுவும் இல்லை. எத்தனையோ குற்றங்களுக்கு சட்டங்கள் இருக்கின்றன. அதற்காக தண்டனைக் கொடுப்பது என்று ஆரம்பித்தால் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவருமே ஏதாவதொரு குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

    நாம் வாழும் காலம் மிகக் குறைவு. அந்த குறைந்த காலத்தில் நமக்குக் கிடைத்த உறவுகளைப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். அதிலும் கணவன் மனைவி உறவு என்பது இறைவன் படைப்பில் உன்னதமான படைப்பு. வேறு எந்த உறவோடும் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றையும் கணவன் மனைவி மட்டும்தான் பகிர்ந்து கொள்ள முடியும். ஆகையால் இறைவன் போட்ட முடிச்சை அவிழ்க்கவோ, அறுக்கவோ முயற்சிக்காமல் பிரச்சினைகளை சமாளித்துத் தீர்ப்பதற்கு வழிபார்த்தலே மனித சமுதாயத்துக்கு நல்லது.

    Share
  • குறளின் கதிர்களாய்… (16)

    செண்பக ஜெகதீசன்

     

    குறளின் கதிர்களாய்… (16)

     

    நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
    கினத்தியல்ப தாகு மறிவு.
    -திருக்குறள்- 452 (சிற்றினம் சேராமை)

    புதுக் கவிதையில்…

    இருக்கும் நிலத்தின்
    இயல்பு போல்
    மாறிடும்
    தண்ணீரின் தன்மை..

    இதுபோல் தான்
    சேர்ந்திடும்
    இனத்தின் இயல்புபோல்
    சேர்கிறது அறிவு
    மனிதனுக்கே…!

    குறும்பாவில்…

    நிலம் மாற்றும் நீரின் இயல்பை,
    சேரும் இனம்,
    மனிதனின் அறிவை …!

    மரபுக் கவிதையில்…

    நிலத்தில் வீழும் நீரதுவும்
    நிறத்தில் குணத்தில் மாறிடுமந்
    நிலத்தின் தன்மை போலவேதான்,
    நிலத்தில் மனிதனின் நிலையிதுதான்
    கலந்து பேசிப் பழகையிலும்
    காணும் மனித உறவினிலும்
    பலனாய்க் கிடைக்கும் அறிவதுதான்
    பழகும் மாந்தர் இயல்பாமே…!

    லிமரிக்…

    நிலத்தின் குணத்தில் மாறிவிடும் பார்
    நிலத்தில் வந்தே சேர்ந்திடும் நீர்,
    மாந்தருள் பழகிடும் கணம்
    மாறிடும் அவர்தம் குணம்,
    சேர்ந்திடும் மனிதர் அறிவெனவே பார்…!

    கிராமியப் பாணியில்…

    மழத்தண்ணி மண்ணுல உழுந்தா
    மாறிப்போவும்- நல்லா
    மாறிப்போவும்..

    நெறமில்லாத் தண்ணிக்கும்
    நெறம் வருமே- மண்ணு
    நெறம் வருமே,
    கொணம் வருமே- மண்ணு
    கொணம் வருமே..

    இந்த
    மழத்தண்ணி கததானே
    மனுசங் கதயும்,
    அவன்
    கூட்டுசேரும் மனுசம்போலக்
    கொணம் மாறும்- இருந்த
    கொணம் மாறும்,
    அறிவுமாறும் அறிவுமாறும்
    அவனப் போல…!

     

     

    Share
  • மகாகவி பாரதியும் மெகா தொடர் பாரதமும் (பண்டார பாட்டு – 2013)

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    இலவசங்கள் பெற்றும் மாற்றி ஓட்டுபோட்ட போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    வாக்குறுதி அத்துனையும் மறந்து விட்ட போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    வரிக்குமேல் வரிகள் போட்டு வசூலித்த போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    சேதுசிதைத்து ஈழம்பிரிந்து வாடுகின்ற‌ போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    பெரும்பாண்மை பெற்றும்பின்னர் சிதறுகின்ற‌ போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    இலஞ்சமென்று ஆயிரந்தான் தெரிந்துவிட்ட போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    காவிரியா கங்கையுமே காயவைத்த போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    சாதிகள் சொல்லி கட்சி கூட்டம் சேர்க்கும் போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    தங்கத்தாலி பறிகொடுத்து தவிக்குங்குரல் கேட்கினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    ஒற்றுமைக்கு வேட்டு வைத்து ஒழுக்கம்வீழும் போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    டாலர்ஏற ரூபாயிங்கு சரியவைக்கும் போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    மின்வெட்டு விலைகளிங்கு வானைத்தொட்ட போதிலும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    அடிக்கடி தேர்தல் என்று அசிங்கம் பட்ட போதிலும்
    மிச்சமில்லை வெட்கமில்லை சொல்வதற்கு இல்லையே?

     

     

    Share
  • கண்டேன் கண்டேன் காண்கின்றேன்

    கண்டேன் கண்டேன் காண்கின்றேன்
    கண்களுக்கினியானய் காதற்பெருக்கினால்()

    வண்டுகள் விழியத‌னாற் மனங்குடைந்தான்
    உண்டுகள் அதரங்கள் வழிந்திட அழைக்கிறான்
    கண்டுமுன் காணாமல் நடிக்கிறான்
    நண்டுதன் கொடுக்குபோல் வாரியே அணைக்கிறான் ஆகா ()

    அசைந்திடும் மயிற்பீலி வசமிடதொடுத்தான்
    இசைத்திடும் குழல்ராகம் மயக்கிட சிரித்தான்
    பசையினில் என்னுடன் கலந்து களிக்கிறான்
    விசையெனும் பக்தியில் என்னையும் இயக்கினான் ஆகா ()

    தேடிடும் போதெதிர் வந்தெழில்ரசிக்கிறான்
    ஏடிடும் முன்இவனே கவிதைப் படிக்கிறான்
    கூடிடும் தாளமும் தட்டிதலை அசைக்கிறான்
    பாடிடும் என்னோடு கண்ணனும் இருக்கிறான் ஆகா ()

    Share