Blog

  • முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்

    முனைவர் மு.பழனியப்பன்.

    BabyMurugaOriginal

     

    திருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத்தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறை என்று தொகுக்கப்பட்ட இறைத்தொகுப்பில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைவது சேய்த்தொண்டர் புராணம் ஆகும்.

    முருகவேள் திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. ஏழாம் திருமுறை பிற பதிகளைப் போற்றிய திருப்புகழ்ப் பாடல்களால் தொகுக்கப் பெற்றது. கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகியன எட்டாம் திருமுறைகளாயின. ஒன்பதாந்திருமுறை திருவகுப்பு ஆகியது. கந்தரனுபதி பத்தாம் திருமுறைப் பகுப்பாகியது. முற்கால அடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்புகள் பதினோராம் திருமுறையாயின. பன்னிரண்டாம் திருமுறை சேய்த்தொண்டர் புராணம் ஆகும். இதனை இயற்றியவர் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார் ஆவார்.

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றாம் ஆண்டில் தணிகைமணி வ.சு. செங்கலவராயப்பிள்ளை அவர்கள் பதினோரு திருமுறைகளாக முருகவேள் திருமுறையை வடிவமைத்து அவற்றுக்கு சிறப்பான உரை எழுதி வெளியிட்டார். அப்போது பதினோராம் திருமுறைவரை கந்தவேளுக்கு அமைக்கப்பெற்றுவிட்டது. சைவத் திருமுறையை ஒட்டி பன்னிரண்டாம் திருமுறையாகத் திருத்தொண்டர் புராணம் யாராலும் செய்யப்படவில்லையே என்ற ஏக்கம் தணிகைமணி மனதில் ஏற்பட்டு அக்கருத்தை அவர் அப்பதிப்பில் வெளியிட்டார். இந்த ஏக்கம் தீரப் பிறந்தது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். ஆயிரத்து ஐம்பத்திரண்டாம் ஆண்டிலேயே சேய்த்தொண்டர் புராணம் இயற்றும் பணி தொடங்கிச் சிற்சில பாடல்கள் திருக்கழுகுன்றத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. அப்பணி சிற்சில ஆண்டுகளில் முழுமை பெற்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்றாம் ஆண்டில் முழுப் புராணமாக ஆகி வெளிவந்தது.

    தேனூர் வரகவி சொக்கலிங்கனார் சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றுவதற்கு முன்பு சேய்த்தொண்டத்தொகை என்பதைப் பாடினார். இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் திருவந்தாதி என்பதையும் இயற்றி இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் புராணத்தை அவர் இயற்றத் தொடங்கினார். இம்முயற்சி பெரியபுராணத்தின் தோற்றத்திற்கு ஆக்கத்திற்குச் சுந்தரர் நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் ஆகியோர் வழிவகுத்த அமைப்பிலேயே நடந்துள்ளது என்பது குறிக்கத்தக்கது. ஆயினும் இச்சான்றோர்களை அடியொற்றி இம்மூவர் முயற்சிகளையும் முன்னுதாரணமாகக் கொண்டு தேனூர் வரகவி சொக்கலிங்கம் அவர்கள் தான் ஒருவராகச் செய்தவை மேற்கண்ட மூன்று படைப்புகள் என்பது குறிக்கத்தக்கது.

    சேய்த்தொண்டர் புராணத்தில் அறுபத்தாறு தனியடியார்களும் பன்னிரு தொகையடியார்களும் அவர்களின் வரலாறும் தொண்டும் எடுத்து இயம்பப் பெற்றுள்ளன. அரகரவேல் மயிலென்பார்ஆலயத்தொண்டர் இறந்துமிறவாதார் இனிவரு சேய்த்தொண்டர் கந்தனையே போற்றுவார், செந்தில் வாழ் அந்தணர், திருத்தணியிற்பிறந்தார், தொண்டரடித்தொண்டர், பாடாது விடுபட்டோர், புராணிகர்கள், முருகன் திருவருளைச் சிந்திப்போர், முருகனையே பாடுவோர் ஆகியோர் தொகையடியார்கள் ஆவர்.

    இப்புராணத்துள் ஒளவையார், மீனாட்சி அம்மையார், முருகம்மையார் ஆகிய மூன்று பெண்ணடியார்கள் பாடப்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஏனைய அறுபத்து மூவர் ஆணடியார்கள். ராமலிங்க வள்ளலார், அருணகிரிநாதர், குமரகுருபரர், நக்கீரர், அகத்தியர், கச்சியப்ப சிவாச்சாரியார், பாம்பன் சுவாமிகள் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகனின் தொண்டர்கள்வரை இதனுள் பாடப்பெற்றுள்ளனர். கடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த முருகனடியார்கள் தொடங்கி இந்தப் புராணம் பாடியுள்ளது. இக்காலத்திற்குப் பின் வரும் அடியார்களைப் போற்றி இனிவரும் சேய்த்தொண்டர் புராணம் என்று இவர் பாடியிருப்பதும் கருதத்தக்கது.

    செந்தில்வாழ் அந்தணர் சருக்கம், கம்பை சூழ் சருக்கம், குமர குருபரச் சருக்கம், வென்றி மலைச் சருக்கம், அரஹாரச் சருக்கம், காவடிச் சருக்கம், குகனேரிச் சருக்கம், கல்லாடச் சருக்கம், தென்பழநிச் சருக்கம், நின்றசீர்ச் சருக்கம், நாரதச் சருக்கம், வானார்ந்த சருக்கம் ஆகிய பன்னிரண்டு சருக்கங்கள் சேய்த்தொண்டர் புராணத்துள் உள்ளன. இதிலும் சேக்கிழாரின் படைப்பு முறை பின்பற்றப்பெற்றுள்ளது. அதாவது சருக்கங்களின் பெயர்கள் திருத்தொண்டத்தொகைப்பாடல்களின் முதலடி கொண்டுத் தலைப்பிடப்படுவது என்பது சேக்கிழார் தந்தமுறை. இங்கும் சேய்த்தொண்டத் தொகையின் பன்னிரு பாடல்களின் முதற்சீர் சேய்த்தொண்டர் புராணச் சருக்கமாக அமைக்கப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

    இப்புராணம் 3333 என்ற தொகையில் விருத்தப் பாவகை பலவற்றால் பாடப்பெற்றுள்ளது. இது நிலம் எனத்தொடங்கி இம்மாநிலம் என முடிகின்றது. இவ்வாறு வடிவமைப்பில் பெரியபுராணத்தை ஒத்துச் செய்யப்பெற்றுள்ள சேய்த்தொண்டர் புராணம் முருக பக்தியளவில் மிக முக்கியமான பக்திக் காப்பியம் ஆகும். இப்புராணத்தின் சிற்சில பக்தி முத்துக்கள் இக்கட்டுரையில் அளவுகருதிச் சுருக்கி உரைக்கப்பெற்றுள்ளன.

    அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த அழகைப் பின்வருமாறு சேய்த்தொண்டர் புராணம் பாடுகின்றது. சம்பந்தாண்டானுக்கும் அருணகிரிநாதருக்கும் இடையே நடந்த போட்டியில் அருணகிரிநாதர் முருகனை அழைத்துக்காட்டி வெற்றி பெறுகிறார்.

    இதனையோர்ந்து அங்கு எம்பிரான் எழுந்து செங்கைகூப்பிநின்
    றதல சேடனார் என எடுத்ததொர் பா அங்கு ஓத அம்
    மதுரகானம் கேட்கவே மய+ர வாகனத்தின்மேல்
    சதன கோல கால வேல்கருத்தன் வந்து தோன்றவே (1181)

    என்று பாடுகின்றார்.

    கந்தனை நேரில் கண்டவர்கள் நிலையை
    ஏற்றினார் யாவருங்கை முடியின் மேல்நின்று இறைஞ்சினார்
    பரவசமாய் வீழ்ந்தெழுந்து
    போற்றினார் ஐயன்இனிது உருக்கரப்பப் புலம்பினார்
    இனியென்று காண்பதென்று
    சாற்றினார் ஆன்ற பெரியார்க்குத் தீங்கு சாற்றிய தீமதி
    படைத்த சம்பந்தாண்டன்
    தோற்றுளான் அருணகிரிநாதர் வாகை சூடினார் என்று
    ஆர்த்தவையோர் தொழுதுபோற்றி (1182)

    என்ற கந்தனைக் கண்ட அனுபவத்தை மொழிகிறது சேய்த்தொண்டர் புராணம். இனியென்று காண்பது என்று எல்லா உயிர்களும் கந்தனைத் தொழுத காட்சியைக் காட்டி அக்காட்சியைத் தானும் வணங்குவதாகப் போற்றி இப்பாடலை முடித்திருப்பது இவ்வாசிரியரின் கந்தன் மீதான பற்றுதலைக் காட்டுவதாக உள்ளது.

    பாம்பன் சுவாமிகளுக்கு காலில் ஏற்பட்ட இடையூற்றை மருத்துவர்கள் தீர்க்கமுடியாதென்று கைவிரித்தபோது, முருகனடியார்கள் பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முகக்கவசத்தைப் பாட அவரின் நோய் நீங்கியது என்பது ஒரு அருள் வரலாறு. இதனை இப்புராணம்

    அவரேகலும் அச்சாலையில் (மருத்துவமனையில்) அதிபன் பரிவோடு அம்
    புவிபேண்பரிகாரம் பலபுரிந்தும் பயனிலாதலால்
    இவர் நோய்க்கு அவுடதம்எம்மிடம் இல்லையென்னலும் இம்மா
    தவசீலர் முன் அருள் சண்முகக் கவசம்தனை அடியார்

    பந்தத்தொடும் பாடிக் குகபரமன் திருவருளைச்
    சிந்தித்தனர் சிந்தித்திடும் திருநாள்களில் ஒருநாள்
    வந்தித்தவர் முழந்தாண்மிசை வைவேல்இரண்டு ஒன்றாய்
    சந்தித்தது என்பொன்றித்து புண்தழும்பறிய திதைத்தம் (2582)

    என்று பாடுகின்றது. சண்முகக் கவசம் பாடிட குகப் பரம்பொருள் பாம்பன் சுவாமிகள் கால் நோயைத் தீர்த்த அதிசயத்தை இப்புராணம் பாடிட அவ்வருள் படிப்போர் நெஞ்சிலும் பரவுகின்றது. இரு வேல்கள் முழங்காலைத் தாங்கிப்பிடித்து ஒரு வேலான காட்சியை ஒரு அன்பர் காண அதன்வழி பாம்பன் சுவாமிகள் பிணி நீங்கியது என்ற இந்தக் காட்சியின் அருள் நிலை சண்முகப்பெருமானின் கருணையை எடுத்துரைப்பதாக உள்ளது.

    குமரகுருபரக் குழந்தை பேசாதநிலை பெற்றிருந்தபோது அவர்தம் பெற்றோருடன் இக்கவிஞரும் அழுகின்றார்.

    முருகா உன் கிருபையால் அவதரித்தகான் முளையிதுமூங்கையாய் அதுகண்டுஏங்கினோம்
    இருபதிற்றிரட்டிமேல் நாலிரண்டு நாள் எய்துமுன் அதைஒழித்து இனிதுபேசுமா
    அருளுதி இல்லையேல்உயிர்க்கெல்லாம் உயிராயவர் அவர் நினைப்பதை அளித்திடும்
    கருணைவாரிதி உனக்கபயம் நீள்கடலில் வீழ்ந்தெமதுயிர் விடுவதுண்மை காண் (1324)

    என்ற இந்த வேண்டுதல் குமரகுருபரா என்று முருகனால் அக்குழந்தை அழைக்கப்பெற்று, அக்குழந்தை வாயில் வேலால் அக்காரம் எழுதி வைக்கப்பட்டது. அக்குழந்தையே குமரகுருபரக்குழந்தை. அதுவே முருகனைப் பற்றிப் பல பனுவல்களைப் பாடியது. இக்குழந்தையைக் கந்தப் பரம்பொருளிடம் பெற்றோர்கள் அபயமாக விட அப்பெருமான் இக்குழந்தையைப் பேசவைக்கவேண்டும். இல்லையென்றால் கடலுள் மாய்வோம் என்ற இப்பெற்றோர் நம்பிக்கை உறுதி பேசாக் குழந்தையைப் பேச வைத்தது. அருள்மணக்கும் பாடல்களைப் பாடவைத்தது.

    இவ்வகையில் சேய்த்தொண்டர் புராணம் முருகப்பெருமானின் அடியார்களை, அவர்களின் வாழ்வை, தொண்டை, சோதனைகளை மாற்றிய சாதனைகளை எடுத்துரைப்பதாக அமைகின்றது. முருகத்தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம். இதனைப் போற்றிப்பரவிச் செவ்வேளையும் செவ்வேள் தொண்டர்களையும் அறிந்துப் போற்றி மகிழ்வோம்.

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழாய்வுத் துறைத்தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    படம் உதவிக்கு நன்றி: indianknowledgesystemacademy.blogspot.com

    Share
  • அமெரிக்காவில் தேர்தல் பின்னடைவு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    98f62e054ae1f4328a3471911522cfe05492baa7

    அமெரிக்காவில் 2014-க்குரிய இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற மேலவையில் சில இடங்களில் தோற்றுப் பெரும்பான்மை இழந்திருக்கிறது; கீழவையில் தேர்தலுக்கு முன்பே சிறுபான்மையாக இருந்தது; இப்போது இன்னும் சில இடங்களை இழந்து இன்னும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது. 2008-இல் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒபாமா என்னென்னவோ சாதிக்கப் போவதாக அமெரிக்க மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அமெரிக்கா செல்லும் பாதையைத் திசைதிருப்பி உலக அரங்கில் அதன் படிமத்தை உயர்த்த வேண்டும், அமெரிக்காவின் ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய கஷ்டங்களை நீக்குவதற்குக் குறைந்தபட்ச ஊதியம் போன்ற சட்டங்களைக் கொண்டுவர வேண்டும், அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டார். இந்தக் கனவுகளை முறியடிக்கும் விதமாக 2010-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் கீழவையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை போயிற்று. 2012-இல் ஜனாதிபதித் தேர்தலோடு நடந்த இடைத்தேர்தல்களில் எப்படியோ மேலவையில் பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சித் தக்கவைத்துக்கொண்டது. ஆனால் 2014-இல் நடந்த தேர்தலில் மேலவையிலும் பெரும்பான்மை போயிற்று. இப்போது இரண்டு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்து நிற்பதால் ஒபாமா என்ன திட்டங்கள் கொண்டுவந்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடக் குடியரசு உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள்.

    ஜனநாயகக் கட்சி இரண்டு அவைகளிலும் நிறைய இடங்களை இழந்ததற்கு இந்தத் தேர்தலில் ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் குறைந்தது ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். கடந்த எழுபது வருடங்களில் – அதாவது 1942 தேர்தல்களுக்குப் பிறகு – இப்போதுதான் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 36.3 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. பெரும் பணக்காரர்கள் அளித்த ஆதரவோடு குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் செய்த பொய்ப் பிரச்சாரங்களும் இதற்குக் காரணம் என்கிறார்கள். புஷ் காலத்தில் சரிந்த பொருளாதாரத்தை ஒபாமா எழுந்து நடக்கவைத்தார். ஆனாலும் புதிதாக வந்த வளத்தின் நன்மைகள் சிறுபான்மையினரான பணக்கார வர்க்கத்தினருக்கே போய்ச் சேர்ந்தது. மத்தியதர வர்க்கத்தினரும் தொழிலாளி வர்க்கத்தினரும் தங்கள் வருமானத்தில் அதிக வித்தியாசத்தைக் காணவில்லை. இதனால் பொதுமக்களிடையே அதிருப்தி நிலவியது. இதைப் பயன்படுத்திக்கொண்டு ஒபாமாவின் கடந்த ஆறு ஆண்டு சாதனைகளை மறக்கும்படிச் செய்தனர். அவற்றைக் குறைத்து மதிப்பிட்டுச் செய்த பிரச்சாரங்களே வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச் சாவடிகளுக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள். கருப்பர்களை வாக்களிப்பதிலிருந்து தடுத்து நிறுத்த சிலர் சில முயற்சிகளை மேற்கொண்டார்கள். கருப்பர்கள் அதிகமாக வாழும் சிகாகோவின் தென்பகுதியில் வாக்குப்பதிவு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்று சிலர் புரளி கிளப்பியதாகச் செய்தி வந்தது. ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் இல்லினாய் மாநிலத்திலேயே ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்ட ஜனநாயக் கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜெயித்திருக்கிறார். எது லோக்சபா தேர்தல், எது அசெம்பிளி தேர்தல் என்று தெரியாத பல அப்பாவி இந்திய மக்கள் இருப்பதுபோல் ஒபாமா போட்டியிடாததால் தாங்கள் ஓட்டுப் போடத் தெவையில்லை என்று நினைத்த அமெரிக்கர்களும் இருக்கலாம்.

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு அவை உறுப்பினர்களும் ஒபாமாவின் முக்கியத் திட்டங்களை முறியடிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு தயாராக இருக்கிறார்கள். முதலாவது பல வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்திருந்து அமெரிக்காவின் குடியுரிமை பெறத் துடிப்பவர்கள் பற்றியது. இவர்களுக்குச் சட்டபூர்வ குடியுரிமை வழங்க ஒபாமா எவ்வளவோ முயன்றார். அவை எல்லாவற்றையும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்கள் முறியடித்துவிட்டனர். இப்போது இரண்டு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்திருப்பதால் தன்னுடைய ஜனாதிபதிக்குரிய நிர்வாக அதிகாரத்தை உபயோகித்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கப் போவதாக ஒபாமா அறிவித்திருக்கிறார். இதற்குக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கீழவைத் தலைவர் மிகுந்த எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். ‘ஒபாமா நெருப்போடு விளையாடுகிறார். நெருப்போடு விளையாடுபவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்வார்கள்’ ஒபாமாவும் தன்னுடைய விஷேச அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுத்தால் தன்னைத் தானே அழித்துக்கொள்வார்’ என்று பயமுறுத்துகிறார். இது ஒரு புறம் இருக்க, ஒபாமா இந்தச் சட்டத்தைத் தன் அதிகாரத்தின் மூலம் கொண்டுவந்தாலும் 2016 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதிக்குரிய இதே அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தை நீக்கிவிடலாம்.

    இரண்டாவதாக ஒபாமா மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுவந்த மருத்துவக் காப்பிட்டுத் திட்டம். இதைச் சட்டமாக்குவதற்கு குடியரசுக் கட்சியினர் என்னென்னவோ தடைகள் கொண்டுவந்தனர். ஆனாலும் ஒபாமா எப்படியோ அவர்களின் முயற்சிகளை முறியடித்து அதைச் சட்டமாக்கினார். இப்போது அதை எப்படியும் நீக்கிவிடுவது என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாகச் செயல்படப் போகிறார்கள். இதனால் பல ஏழை அமெரிக்கர்களுக்கு மருத்துவ வசதி இல்லாமல் போகும். 65 வயதிற்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு குறைந்த பிரீமியத்தில் வழங்கும் மெடிக்கேர் என்னும் மருத்துவத் திட்டத்தையும் குடியரசு உறுப்பினர்கள் தனியார்மயமாக்க முயற்சிக்கலாம். இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சிரமம் ஏற்படும்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி ஒபாமா மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். கனடாவிலிருந்து கச்சா எண்ணெயை சுத்தீகரிப்பதற்கு டெக்ஸாஸிற்குக் கொண்டுவர ஒரு எண்ணெய்க் கம்பெனி முயன்று வருகிறது. கச்சா எண்ணெயைக் கொண்டுவருவதற்குக் கட்டப்படும் கால்வாயினால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதால் ஒபாமா இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்தக் கால்வாய் கட்டப்பட்டால் பலருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பது குடியரசுக் கட்சியினரின் வாதம். சமீபத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்ற அப்பெக் (APEC) மாநாட்டில் ஒபாமாவும் சீன அதிபரும் சேர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் கரியமில வாயுவைக் குறைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஒபாமாவின் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கப் பாராளுமன்றம் நிறைவேற்றுமா என்று தெரியவில்லை.

    தங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய பல திட்டங்களைக் கொண்டுவந்த ஒபாமாவின் கைகளைப் பலப்படுத்த அவருடைய கட்சிக்கு அமெரிக்க மக்கள் வாக்களித்திருக்க வேண்டும். மாறாக ஏழைகளின் (இவர்களில் கருப்பர்கள் அதிகம்) நலன்களைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் `கார்ப்பரேட்டுகளின் நன்மைகளையே முதன்மையாகக் கொண்டு இயங்கப் போகும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதை அமெரிக்கர்களின் அறியாமை என்பதா? பணம் படைத்த அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் பலம் என்பதா?

    Share
  • இத்தாலியும் இன்பத்தமிழும்

    எம்.ஜெயராமசர்மா

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியால் வியந்து பார்க்கப் பட்டது தமிழ்மொழியாகும். பாரதி இக்காலக்கவிஞன். அவன் பல மொழிகளை அறிந்தவன். அந்த மொழி அறிவின் துணையோடுதான் இவ்வாறு கூறும் துணிவு அவனுக்கு வந்திருக்கிறது. அவனது கூற்றை மறுத்துக் கூற எவரும் முன்வரவில்லை. எனவே தமிழ் மொழி மற்றைய மொழிகளை விட இனிமையானது என்பதை எண்ணி நாம் பூரிப்படைதல் வேண்டுமல்லவா? இப்படியான எமது இன்பத் தமிழை – பல மேலை நாட்டறிஞர் விருப்புடன் கற்றார்கள் என்பதை அறிகின்றோம். எமது மொழியின் பால் ஆராக் காதல் கொண்டு கற்றதோடு  நின்றுவிடாமல் – கற்றுத்தேர்ந்த கன்னித்தமிழுக்கு நன்றிக்கடனாகப் பலவற்றைச் செய்து தமது  காணிக்கை ஆக்கினார்கள்.அவர்களது இந்தத் தமிழ்த் தொண்டானது யாவராலும் ஏற்றிப் போற்றப் படுகின்றது.இந்த ரீதியில் மேலை நாடான இத்தாலியும் எமது தமிழ் வளர்ச்சிப்பாதையில் தன்னை  இணைத்து கொண்டதை நாம் காணமுடிகிறது.

    கிறீஸ்த்தவ மதப்பணியினை முன்னிட்டு 1710ல் தமிழ் நாட்டுக்கு வந்தவர்தான் பாதிரியார் பெஸ்க்கி அவர்கள். இவர் முப்பது வயதில் தமிழ் நாட்டுக்கு வந்து ஏறக்குறைய முப்பத்து  ஏழு வருடங்கள் மதப்பணியில் ஈடுபட்டார். இவர் தமிழை விருப்புடன் கற்றார். இதனால் இவருக்குத் தமிழில் ஆழ்ந்த புலமை ஏற்பட்டது. இத்தாலி, கிரேக்கம், எபிரேயம், ஆகிய மொழிகளிலும் இவர் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். இவரது பன்மொழி ஆற்றல், தமிழ் மொழியில் இவரால் பல படைப்புகளைப் படைப்பதற்கு உறுதுணையாக இருந்தது எனலாம்.  தமிழ் மொழியைப் பொறுத்தவரை பல்வேறு வகைகளில் இவரது தொண்டுகள் அமைந்து காணப்படுகின்றன.

    1. தமிழ் எழுத்துத் திருத்தம்
    2. செய்யுள் நூல்கள் ஆக்கம்
    3. உரைநடை நூல்கள் ஆக்கம்
    4. மொழிபெயர்ப்புப் பணி
    5. இலக்கண நூல்கள் ஆக்கம்
    6. அகராதி நூல்கள் ஆக்கம்

    Veera mamunivarதமிழ் எழுத்துக்களைப் பண்டைக்காலத்தில் எழுதும் பொழுது அவற்றில் ஓசை குறைவாக வரும் இடங்களுக்கு அந்த எழுத்துக்களின் மேல் புள்ளி வைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. ” க ” என்னும் எழுத்துக்கு மாத்திரை ஒன்று.அதே எழுத்தின்மேல் புள்ளியை வைத்துவிட்டால் அந்த எழுத்து ” க் ” என மாறிவிடும். அதே வேளை உச்சரிப்பிலும் மாற்றம் ஏற்பட்டுவிடும். அது மட்டுமல்ல; ஒரு மாத்திரையாக இருந்தது புள்ளி வைத்த காரணத்தால் அரை மாத்திரை ஆனதோடு, ஒலியளவிலும் குறுகி ஒலிக்கும் நிலைக்கும் வந்துவிட்டதைக் காணமுடிகிறதல்லவா?

    இந்த வகையில்” எ”, ” ஒ” என்னும் இரண்டும் – புள்ளி பெற்றால் அவை குறிலாகவும்    புள்ளி பெறாத நிலையில் அவை நெடிலாகவுமே உச்சரிக்கும் வழக்கம் காணப்பட்டது. நாளடைவில் அவற்றுக்குப் புள்ளியிட்டு எழுதும் வழக்கம் மறந்துபோன நிலையில்   இவற்றினது குறில் – நெடில் வித்தியாசங்களை அடையாளம் காண்பது சிக்கலாகி விட்டது. இந்தச் சிக்கலுக்குத் தக்க பரிகாரம் காட்டினார் இத்தாலியப் பாதிரியார் பெஸ்க்கி அவர்கள். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டதே இன்று நாம் கைக்கொள்ளும் “ஏ” நாவும் “ஓ” வன்னாவும் ஆகும். அவரால்த்தான் “எ” கீழ் பகுதியில் ஒரு கோடும், “ஒ” வில் ஒரு சுழியும் வந்தது என்பதை எம்மில் பலர் அறியாமலும் இருக்கலாம்தானே! அதுமட்டுமல்ல, கெ, கொ, என்ற எழுத்துக்களில் காணப்படுகின்ற ஒற்றைக் கொம்புகளை மேலே சுழித்து இரட்டைக்கொம்புகளாக்கி கே, கோ, என்ற உச்சரிப்பு வரத்தக்கதாக — இன்றுவரை அந்த அமைப்பிலேயே நாங்கள் பின்பற்றக் கூடியதாக எழுத்துமுறையில் சீர்திருத்தம் செய்தவரும் இத்தாலிப் பாதிரியார் பெஸ்க்கியேதான் என்பதையும் மனதில் கொள்ளுதல் வேண்டும். இவரால் கொண்டுவரப்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழும் ஏற்றுக்கொண்டது. தமிழரும் ஏற்றுக்கொண்டனர். நல்லதை ஏற்பது தமிழின் பண்பாடு அல்லவா!

    தமிழ் எழுத்தில் திருத்தம் செய்த இப்பெரியார், தமிழ் இலக்கிய வரலாற்றில் – அதாவது காப்பிய இலக்கியத்திலும் தனது ஆற்றலைக் காட்ட விழைந்தார். இதன் பயனாக 3615 விருத்தப்பாக்களைக் கொண்ட “தேம்பாவணி” என்னும் காப்பியம் எழுந்தது. இது மூன்று காண்டங்களையும் முப்பத்தாறு படலங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டது. திருக்குறளின் தெள்ளிய நயம், சிந்தாமணியின் செழுஞ்சுவை, கம்பராமாயாணத்தின் கவியின்பம், யாவும் இந்தத் “தேம்பாவணியில்” தேங்கிக் கிடக்கக் கூடியதாய் இந்த இத்தாலியப் பாதிரியார் படைத்தளித்தார். இந்தச் செழுமிய நூல் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. அவ்வேளை இவரது தமிழ் ஆற்றலை மெச்சிய புலவர்கள் இவருக்கு “வீரமாமுனிவர்” என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார்கள் என்று அறியமுடிகிறது. அது தொடக்கம் இவரை யாவரும் “வீரமாமுனிவர்” என்று அழைத்து வரலாயினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதைவிட 101 பாக்களால் ஆன “திருக்காவலூர் கலம்பகம்” “கித்தேரி அம்மானை”     “அடைக்கல நாயகி வெண்கலிப்பா’ போன்றவற்றையும் ஆக்கி அளித்தார். தேவாரப்             பதிகம் இத்தாலியம் பெருமகனைக் கொள்ளை கொண்டது. அதன் காரணத்தால் “கரணாம்பரப் பதிகம்” உருவானது. மேலும் இவரால் பல பாடல்கள் இலக்கிய நயம் கனியப் பாடப்பட்டன. “தமிழ்ச் செய்யுள்தொகை” என்ற தொகுப்பின் மூலமாக தமிழில் உள்ள பல நயமான நீதி நூல்களைத் தெரிந்து தொகுத்துக் காட்டினார். இது ஒரு சிறந்த வழிகாட்டலாக அமைகிறது என்பது அறிஞரின் கருத்தாகும்.

    செய்யுள் இயற்றிச் செந்தமிழுக்கு அணிசெய்த இவ்வறிஞர் உரைநடை இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை. முதன் முதலாகப் பாமரரும் விளங்கக்கூடியதாக இலகுவான வசனநடையில் “அங்கத” இலக்கியத்தைத் தோற்றுவித்த பெருமை இவரையே சாரும். “பரமார்த்த குருகதை” என்ற இந்த நூலைப் பண்டிதர்கள்கூட ஏற்றுக் கொண்டார்கள் என்றால் இவரின் ஆற்றலை வியக்காமல் இருக்கமுடியுமா? தாம் சார்ந்த கிறீஸ்த்தவம் சம்பந்தமாகப் பல உரைநடை நூல்களையும், துண்டுப்பிரசுரங்களையும் பரமார்த்த்குரு கதையைத் தொடர்ந்து வெளியிட்டார். இந்த வகையில் வேதியர் ஒழுக்கம், வேதவிளக்கம், பேத மறுத்தல், லூத்தர் இனத்தியல்பு என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.

    ஆக்க இலக்கியம் படைத்தை இப்பெருமகன் – மொழிபெயர்ப்புத் துறையிலும் முன்னின்று உழைத்தார். அந்தத் துறையில் அவரின் மொழி பெயர்ப்புக்கு இலக்காக அமைந்தது வள்ளுவரின் வான்மறையாகும். மேலை நாட்டவர் பலரும் வள்ளுவத்தின் பால் பெருவிருப்புக் கொண்டிருந்தனர் என்பது பொதுவான உண்மையாகும். குறளில் அமைந்திருந்த அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். இம்முயற்சியானது குறளின் அருமையையும், பெருமையையும், மேனாட்டாரும் அறிந்து கொள்ள உதவியது எனலாம்.

    வீரமாமுனிவரின் பண்பட்ட உள்ளம் – தமிழ் அன்னைக்கு மேலும் ஏதாவது பயன் உள்ள பணியைச் செய்ய வேண்டுமென விளைந்தது. இதன் பயனாக தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் “தொன்னூல் விளக்கம்” என்னும் இலக்கண நூல் உருப்பெற்றது. இதனைத் தமிழறிஞர் “குட்டித் தொல்காப்பியம்”  என ஏற்றுக் கொண்டாடினர். தமிழிலே உரையாடுவதும், எழுதுவதும், ஒரேமாதிரி இல்லாமல் இருப்பதை வீரமாமுனிவர் நன்கு கவனித்திருக்கின்றார். இதனால் இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத்தமிழுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து அவற்றுக்கு எனத் தனித்தனியே செந்தமிழிலக்கணமும், கொடுந்தமிழிலிலக்கணமும் எழுதினார்.

    இலக்கணத்தில் ஆர்வம் கொண்டு உழைத்த இவர் – மொழித் தொடர்புக்கான ஊடகம் என்ற முறையில் அகராதி ஆக்கத்திலும் தனது நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டினார். இந்தவகையில் தமிழில் இவரால் படைக்கப்பட்டதே “சதுர் அகராதி” ஆகும். பின்னாளில் எழுந்த அகராதிகளுக்கெல்லாம் வழிகாட்டியாகவும் முதல்நூலாகவும் அமைந்தது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். இதைவிட “தமிழ் இலத்தீன் அகராதி”  “தமிழ் போர்த்துக்கீசிய அகராதி” ஆகியனவும் இவரது படைப்பாக வெளிவந்தன. 4400 சொற்களைக் கொண்டதாக ‘தமிழ் போர்த்துக்கீசீய’ அகராதி விளங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் லத்தீன் அகராதியில் 900 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் எழுதப்பட்டது. இம்முயற்சி முதல் நடந்த முயற்சி ஆதலால் பலராலும் பாராட்டுக்கு உரியதாகி நிற்கின்றது எனலாம்.

    எங்கிருந்தோ வந்த ஒருவர் – எமது அன்னை மொழியாம் தமிழின் அருமை பெருமைகளை உணர்ந்து, அதனைப் பற்றோடும் பாசத்தோடும் படித்திருக்கிறார். படித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. தனது ஆராக் காதலால் நாட்டு வேற்றுமையை, கலாசார வேற்றுமையை, மறந்தார். தான் ஒரு இத்தாலியனாக இருந்தும், பெயராலும், பண்பாட்டாலும், தன்னை இன்பத்தமிழனாகவே ஆக்கிக் கொண்டார். இதனால் இத்தாலியும் இன்பத்தமிழும் இணைந்தன. பெஸ்க்கி என்ற பாதிரியார் தைரியநாதராகி வீரமாமுனிவராகி வளர்ந்த வரலாறு தமிழோடு கலந்த வாழ்வாகும். இப்பெருமகனால் மேலை நாடான இத்தாலியும் கீழைநாடான தமிழ் நாடும் இணைந்து கொண்டதை மறக்க முடியுமா அல்லது மறைக்கத்தான் முடியுமா?

    படத்திற்கு நன்றி: http://twicsy.com/i/Vf3EGb

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy
    ”வில்லங் கமாய்ப்போரை விட்டு விலகிடும்
    வில்அங்கம் பூண்ட விஜயனுக்கு, -உள்ளங்கை,
    நெல்லிக் கனியாய், நெடுமாலன் கீதையை,
    சொல்லிக் கொடுக்கும் சகா’’….கிரேசி மோகன்….

    Share
  • திருமால் திருப்புகழ்

    கிரேசி மோகன்

    290413E 026-1024

    images (1)

    Parthasarathy-swamy

    அருணாசலத்தை நினைத்தாலே முக்தி, அதுபோல் திருவல்லிக்கேணியை நினைத்தாலே பக்தி….பார்த்தசாரதி பெருமாளுக்கு முத்தங்கி சேவை, என்று அல்லிக்கேணி பக்தை சொன்னாள்….போக முடியவில்லை அட்லீஸ்ட் நினைத்துப் பார்க்கலாமே நீலமேகன் ஜொலிப்பதை….

    ”கத்துங் கடல்வண்ணன் , கீதை உரைத்தவன்
    பத்தங்கம் பூண்ட பரந்தாமன், -முத்தங்கி
    மேனி அணிந்தவன் மின்னும் திருவல்லிக்
    கேணி நினைப்போர்க்கும் காப்பு’’….கிரேசி மோகன்….

    பத்தங்கம் -பத்து அவதாரம்….

    Share
  • பா.ஜ.க.வின் சாணக்கியம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    images (1)

    மத்தியில் ஆட்சியைப் பிடித்ததோடு மற்ற மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அதிலும் அரியானாவில் தனித்து ஆட்சி அமைத்திருப்பதும் மஹாராஷ்டிராவில் சிறுபான்மை அரசு அமைத்திருப்பதும் பா.ஜ.க.வுக்கு பெரிய தெம்பைக் கொடுத்திருக்கிறது. எப்படியாவது நாடு முழுவதும் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்று பல உத்திகளைக் கையாளுகிறது.

    தேசியத் தலைவர்களான காந்திஜியையும் வல்லபாய் பட்டேலையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொண்டிருக்கிறது. தேசத் தந்தை காந்திஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சரித்திரமே இல்லை என்று புரிந்துகொண்டதால் அவரை ஓரம் கட்ட முடியாது. அதனால் அவரை மதிப்பதுபோல் மோதி காந்திஜியின் சிலைகளுக்கு மாலையிடுகிறார்; காந்திஜி பிறந்த நாளை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் நாளாகக் கொண்டாடுகிறார். இப்படிக் காந்திஜியைப் போற்றுவது எல்லாம் அரசியல் ஆதாயத்திற்குத்தான். குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் இரத்தக் கறை தன் கைகளில் இல்லையென்று காட்டும் பாவனைதான். காந்திஜியை இப்படிக் கொண்டாடும்போது ஆர்.எஸ்.எஸ். மீது தனக்குள்ள பாசத்தையும் நன்றிக் கடனையும் விட முடியவில்லை. காந்திஜியைக் கொன்ற ஆ.எஸ்.எஸ்.காரர்களை அரசிலும் கட்சியிலும் முக்கிய பதவிகளில் அமர்த்தியிருக்கிறார்.

    பட்டேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்தவர். சிறுபான்மையினருக்கு நாட்டில் சம உரிமையும் மரியாதையும் கொடுத்தவர். சிறுபான்மையினர் இரண்டாம்தரக் குடிமக்களாகத்தான் இருக்க முடியும் என்று ஆ.எஸ்.எஸ். சொல்கிறது. இதனுடைய சிறுபான்மை வெறுப்பு அரசியல்தான் காந்திஜியின் கொலையில் முடிந்தது. (ஆ.எஸ்.எஸ்ஸுக்கும் காந்திஜியைக் கொன்ற கோட்சேக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதைப் பட்டேலே ஒப்புக்கொள்ளவில்லை. இந்தப் பட்டேலைத் தங்கள் தலைவராகக் கொண்டாடி அவருக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் சிலை எழுப்பப் போகிறார்களாம்.

    நாடு முழுவதையும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசியத் தலைவர்கள் சிலரைத் தங்களுக்குச் சொந்தமாக்க முயலுகிறார்கள்.

    இதற்குத் துணைபோக ஆள் சேர்க்கும்போது கொள்கை கணக்கில் இல்லை. வாக்குகள் வாங்கும் தகுதியே போதும். இதற்கு ஒரு உதாரணம் ரஜினி காந்தைப் பா.ஜ.க. தன் கட்சிக்குள் இழுக்க முயன்றது. ஏராளமான ரசிகர்களைத் தன் கைக்குள் வைத்திருக்கும் இந்த நடிகர் தன்னுடைய அரசியல் கொள்கையென்று இதுவரை எதையும் சொன்னதில்லை.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க.விற்கு விலாசமே இல்லாமல் இருந்தது. இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறிப் பதவிக்கு வந்து மற்ற எந்தக் கட்சிகளையும் உள்ளே நுழையவிடவில்லை. இப்போது அ.தி.மு.க.வின் நிரந்தர தமிழக ‘மக்களின் முதல்வருக்கு’ (அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அவரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கவே பிடிக்கவில்லை. அதனால் அவருக்குப் புதுப் பட்டம் வழங்கியிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் வேறு; தமிழக மக்கள் முதல்வர் வேறு.) ஏற்பட்டுள்ள இறங்குமுகத்தையும் தி.மு.க. செல்வாக்கு இழந்து நிற்பதையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

    தமிழுக்குப் புகழ் சேர்த்த திருக்குறள் எழுதிய திருவள்ளுவரைப் பற்றி நன்கு அறிந்த ஒரு பா.ஜ.க. உறுப்பினரைத் தமிழகத்திற்கு அனுப்பப் போகிறார்கள். இவர் திருவள்ளுவருடைய ‘இந்து மத’ச் சிந்தனைகளைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம். தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான திருக்குறள் இந்து மத நூலாக இனங்காட்டப்படலாம். ராஜராஜ சோழன் தமிழர்களின் பெருமையைத் தமிழகத்திற்கு வெளியே எடுத்துச் சென்றவன் என்று திராவிட அரசியல் கட்சிகள் புகழும். இவனுடைய மகன் கங்கைகொண்டசோழபுரத்தைக் கட்டியவன். கங்கையை வென்ற இந்தச் சோழ மன்னனை பா.ஜ.க தனதாக்கிக்கொள்ள முயலுகிறது. இவனுடைய ஆயிரம் ஆண்டு நிறைவை ஆர்.எஸ்.எஸ். கொண்டாடப் போகிறது. சோழ மன்னர்கள் தமிழ் கலாச்சாரத்தை தென்கிழக்காசியாவில் பரப்பினார்கள் என்பது தமிழர்கள் பெருமைப்படும் விஷயம். தாய்லாந்தில் திருவெம்பாவை இன்னமும் பாடப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். கொண்டாட்டத்தில் தமிழ் இலக்கியத்தைவிட இந்து மதம்தான் முன் நிறுத்தப்படும். வேதம் ஓதிய பிராமணர்களுக்கு வரி இல்லாத நிலம் கொடுத்த சோழர்களின் இந்து மத ஆதரவு கொண்டாடப்படும். இப்படித் தமிழ் அடையாளங்கள் எல்லாம் இந்து மத அடையாளங்களாக ஆக்கப்படலாம்.

    இவை பா.ஜ.க.வின் சாணக்கியத்திற்கு சில உதாரணங்கள். இந்தியாவின் பெருமை அதன் பல கலாச்சாரங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மை உண்டு; தனி வரலாறு உண்டு. எல்லாவற்றையும் மறைத்து இந்து மதக் கலாச்சாரத்திற்குக் கொண்டுவருவதே பா.ஜ.க.வின் நோக்கம். இதற்கு பல மொழிக் கலாச்சாரங்களின் பெருமையைக் கொண்டாடுவதுபோல் பாவனை செய்கிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாட்டுப் பா.ஜ.க. தலைவர்களே உடந்தை. சில தமிழர் கட்சிகள் பா.ஜ.க.வோடு அரசியல் ஆதாயத்திற்காகக் கூட்டுச் சேரலாம். இதில் தமிழ் மக்கள் ஏமாறுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    பி. கு. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளர் திருமதி. நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் சொந்த கருத்துகளே.  வல்லமை இதழுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    ஆசிரியர்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 17, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  சமூகசேவகி சீதாலட்சுமி அவர்கள் 

    DSC_0021

     

    சமூகநல சேவகியாக தமிழக அரசில் முப்பத்துநான்கு ஆண்டுகள் பணியாற்றி, துணை இயக்குனர் பதவியில் இருக்கும் பொழுது ஓய்வு பெற்றவர் இவ்வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினரால் பாராட்டப்படும் திருமதி சீதாலட்சுமி சுப்பிரமணியன் (Seethaalakshmi Subramanian) அவர்கள். அவரை அறிந்தவர்களால் சீதாம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் எண்பது வயதைக் கடந்த சீதாலட்சுமி அவர்களை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் மற்றும் இலக்கிய எழுத்தாளரும் வாசகருமான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

    முற்போக்கு சிந்தனைகளும் கொள்கைகளும் கொண்ட சீதாம்மா பெண்களின் உரிமைக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் சமூகப்பணியாற்றியவர். இவரது எழுத்துக்களும், பணிகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்டவையாக இருப்பதுடன் தன்னை சமூகசேவகி என்று அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்பவர். சுவாமி சிவானந்த மகரிஷியின் வழிகாட்டுதலில் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடிவெடுத்த சீதம்மா அவர்கள் கலப்புத்திருமணம், காதல் திருமணம் போன்றவற்றின் நெடுநாள் ஆதரவாளர். குழந்தை கருவில் உருவாவது முதல் ஆறு வயது வரை அதன் வளர்ச்சிகள் பற்றிய சிறப்புக்கல்வியும் பயிற்சியும் பெற்றவரான சீதாம்மா, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சமூகசேவகியாகப் பணியாற்றி இருக்கிறார். நான்கு ஆண்டுகள் ஓர் பன்னாட்டு அமைப்பில் ஆசிய நாட்டுப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார், சமூகப்பணியின் பொருட்டு உலகவங்கித் திட்டங்களில் பணியாற்றி இருக்கிறார்.

    தமிழின் மீது கொண்ட தணியாத ஆர்வம் காரணமாக, வேலையில் ஊதியமில்லாமல் தற்காலிக விடுப்பெடுத்து அவரது நாற்பதாவது வயதிலும் கல்லூரியில் சேர்ந்து தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். பணியிலும் எழுத்திலும் இவரது கவனம் சமுதாயத்தின் மேல் இருப்பதால் இவருடைய ஆய்வுகள், “பெண்” மற்றும் “சமுதாயம்” இவைகளைப் பற்றியதாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக “பாரதிகண்ட புதுமைப் பெண்” என்று மறைந்த பெண்ணிய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனால் அன்புடன் அழைக்கப்பட்டவர்.

    இந்தப் புதுமைப் பெண்ணும் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் பிறந்து, பாரதி படித்த பள்ளி அதே பள்ளியிலும் படித்து, பாரதி வாழ்ந்த வீட்டிலும் சிறிது காலம் வாழ்ந்தவர் என்பது ஒரு வியப்பைத் தரும் ஒற்றுமை. அக்காலச் சூழலில் பாரதி ஊரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த முதல் பெண்ணும், கல்லூரிப்பட்டம் பெற்ற முதல் பெண்ணும் சீதாம்மாவே.

    எழுதப்படிக்கத் தெரிந்த நாள் முதலாய்ப் பத்திரிகைகள் புத்தகங்கள் படிப்பதுடன் நில்லாமல் அப்பொழுதே கதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்ததுடன் இவரை பத்திரிகை உலகுக்குச் செல்ல வைத்தவர் திரு. ருத்ர துளஸிதாஸ். மனிதன் தன் எண்ணங்களைப் பதியச் செய்யும் இடமான பத்திரிக்கையும் பதிப்பகமும் இவருக்கு மிகவும் பிடித்தமான உலகம். சீதாம்மா 1958 ல் எழுத ஆரம்பித்தவர், தொடர்ந்து பல வாரப் பத்திரிக்கைகள், மாதப் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார். இவரது 63 சிறுகதைகள் வாரப் பத்திரிக்கைகளிலும், மாதப் பத்திரிக்கைகளும் வெளிவந்துள்ளன. இரு புத்தகங்கள் வெளியிட்டதுடன், ஒரு சிறு கதைத் தொகுப்பினை நா. பார்த்தசாரதி உள்ளிட்ட மதுரை எழுத்தாளர்களுடனும் சேர்ந்து வெளியிட்டுள்ளார். ஆனந்த விகடனில் இவரது முத்திரைக்கதை வெளி வந்திருக்கின்றது. சீதாலட்சுமி என்ற பெயரில் பெரும்பாலான கதைகளும், சிறுகதைத் தொகுப்பும், வைதேகி என்ற பெயரில் சில கதைகளும், மேழிச்செல்வி என்ற பெயரில் இவரது கவிதைப் புத்தகமும் வெளிவந்துள்ளன.

    ஒரு வீட்டில் பெண்படித்திருந்தால் அந்த வீடே படிக்க ஆரம்பித்துவிடும். பெண்ணின் முன்னேற்றம் குடும்பத்தை, சமுதாயத்தைக் காக்கும்படியாக இருக்க வேண்டும். அவளையும் அழித்துக் கொண்டு குடும்பக் கோட்பாட்டையும் அழிப்பது பெண் விடுதலையல்ல. ஆணுக்குப் பெண் பினாமியாக இருக்கும் நிலையும் மாற வேண்டும். முதலில் பெண்ணுக்கு எதிரியாகப் பெண் வளர்வதும் சரியல்ல என்பது பெண்களின் உரிமையையும் முன்னேற்றதையும் பற்றி சீதாம்மா கொண்டிருக்கும் கொள்கை.

    இக்கருத்தை விளக்கும் வகையில் பெண்ணை முதன்மைப் படுத்தி சீதாம்மாவே கதை, வசனம் எழுதி, அவரே நாயகியாகவும் நடித்த நாடகம் கலைவாணர் அரங்கத்தில் அரங்கேறிய பொழுது, நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த கலைஞர் கருணாநிதி, “இவர் ஏன் அரசாங்கத்தில் வேலை பார்க்கணும் சினிமாவிற்குச் சென்றிருக்கணும்” என்று வியந்து பாராட்டி இருக்கிறார். தமிழக திரைப்பட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய “பராசக்தி” கதையை நாடகமாகவும், திரைப்படமாகவும் கதை வசனம் எழுதிய கலைஞர் இவர் நடிப்பைப் பார்த்து இவ்வாறு சொன்னது வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைப்பது போன்ற பெருமை தரும் பாராட்டு.

    drama-5drama-10

    இன்றும் தொடர்ந்து இணையக் குழுமங்களிலும், திண்ணை போன்ற இணையப் பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர் சீதாம்மா. மின்தமிழ்க் குழுமத்தில் எட்டயபுர வரலாறு, வரலாற்றுப் பயணம், சீதாம்மாவின் குறிப்பேடு, நினைவலைகள், எண்ணங்கள் ஊர்வலம், முத்தொள்ளாயிரம் – மலரும் நினைவுகள் என்று பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

    காலங்கள் மாறுகின்றன
    ரசனைகள் மாறுகின்றன
    மனிதனின் வாழ்வு முறையும் மாறுகின்றன
    மாற்றங்களில் நீச்சல் அடிக்கின்றோம்
    சிலர் ஓட்டத்துடன் நீந்துகின்றனர்
    சிலர் எதிர் நீச்சல் போடுகின்றனர்
    மாறுதல்களைப் பார்த்து எழும் நெஞ்சக் கொதிப்பையும்
    காலம் ஆற்றிவிடும்
    இதுதான் வாழ்க்கை

    என்று வாழ்வின் யதார்த்தத்தை அழகாகக் குறிப்பிடுகிறார் சீதாம்மா.

    என் குணங்களில் “தேடல்“ உணர்வு அதிகம், அத்துடன் சமுதாயம் முதன்மையானது என்று கூறி ஓய்வு பெற்ற பிறகும் சமூக அக்கறையுடன் தனது எழுத்து மூலம் சமூகப்பணியைத் தொடர்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாக செயல்படும் சீதாம்மாவை வல்லமையாளராக பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 144

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    முந்தைய நாளில் போல, மூவரும் இரவில் வழிநடத்தல்

    கோவலனும் கண்ணகியும்
    முந்தைய நாட்களைப் போலவே
    கவுந்தியடிகளுடன்
    அன்றும் பகல் பொழுதை
    அந்தணர் வாழும் அப்பகுதியில் கழித்துவிட்டு
    இரவில் மீண்டும் புறப்பட்டனர்.

    வைகறைப்போதில் மதுரையின் பேரொலி கேட்டு வருத்தம் நீங்குதல்  

    அரிய தொழிலாகிய அழிக்கும் தொழிலை
    மேற்கொண்ட சிவபெருமான் கோயிலிலும்
    பெரும்புகழ் வாய்ந்த
    பாண்டியமன்னனின் அரண்மனையிலும்
                     Paraiyoli
    பல்வகைச் சிறப்புகளையும் உடைய முரசு
    சிறப்பாக ஒலித்தது.

    நான்குமறைகளையும் பயின்ற
    அந்தணர் ஓதுகின்ற ஒலியும்,
    மாதவ முனிவர்கள் ஓதும்
    மந்திரத்தின் ஒலியும்,
    வெற்றியிலிருந்து மீளாத
    அரசனின் சிறப்பினை வாழ்த்திப்பாடும்
    வாள்வீரர் அதிகாலையில் எடுத்து முழக்கிய
    முரசின் ஒலியும்,

    போரில் பகைவரை வென்று
    கவர்ந்து வந்த போர்யானை முழக்கமும்,
    காட்டில் பிடித்துக் கொண்டுவந்த
    காட்டு யானையின் முழக்கமும்,
    லாயங்களில் நிற்கும் குதிரைகளின்
    கனைப்பு ஒலியும்,
    வைகறையில் கிணைப்பறையுடன்
    மள்ளர் கொட்டுகின்ற பறையொலியும்
    அவர்கள் மன்னனை வாழ்த்திப்
    பாடும் பாடல்களின் ஒலியும் ஒலித்து நின்றன.

    மகிழ்ச்சி பொருந்திய மதுரைக்கண்
    ஒலித்த ஒலிகள்
    கருங்கடல் ஒலிகள் போலவே
    ஓங்கி ஒலித்ததால்
    இதைக் கேட்ட அவர்கள்
    தம் வருத்தமெல்லாம் நீங்கி
    வையை ஆற்றை அடைந்தனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 135 – 150
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி:
    http://www.ourjaffna.com

    Share
  • நாளும் நீ பாடவேண்டும்!

    -எம். ஜெயராம சர்மாமெல்பேண்

    சுந்தரத் தெலுங்கரான
    சுசீலா அம்மாவெங்கள்
    செந்தமிழ் மொழியில்பாடி
    தீஞ்சுவை தந்துநின்றார்!

    நெஞ்சினில் பதியும்வண்ணம்                   suseela
    நிறைவுடன் பாடிநின்று
    விஞ்சியே வியந்துபோற்ற
    விதம்விதம் பாடல்தந்தார்!

    பின்னணி பாடினாலும்
    முன்னணி ஆகிநின்றார்
    எவ்வணி சேர்ந்திட்டாலும்
    இனியதே அளித்துநின்றார்!

    தன்னிலை மாறிடாமல்
    தரமுடன் பாடிநின்றார்
    இன்னமும் பாடுகின்றார்
    இன்னிசை சுசிலாஅம்மா!

    டிஎம்எஸ் ஸோடு சேர்ந்து
    திரையிசை மிளிரச்செய்தார்
    பாமரர் ரசிக்கும்வண்ணம்
    பலபாடல் பாடிநின்றார்!

    சங்கீத ரசிகர்க்கெல்லாம்
    சளைக்காமல் பாடிநின்றார்
    எங்குமே சுசீலாபாடல்
    ஏற்றமாய் ஒலிக்குதிப்போ!

    குரலிலே இனிமைகொண்டுக்
    குயிலெனப் பாடிநின்ற
    திரையிசை திலகம்தன்னைத்
    தினமுமே வாழ்த்திநிற்போம்!

    சுவைபடப் பாடியெம்மை
    சுமையெலாம் போகவைத்த
    திரையிசைக் குயிலேநாளும்
    திறலுடன் வாழ்கவாழ்க!

    திரையிசைத் திலகமாக
    தினமுமே வந்தாயம்மா
    நரைதிரை வந்திடாமல்
    நாளும்நீ பாடவேண்டும்!

    Share
  • ஒதுங்கிய ஊர்மிளை!

    ஒதுங்கிய ஊர்மிளை!
    (இலக்குவன் ஊர்மிளையைப் பிரியும் காட்சி)

     

    நகர் நீங்கு படலத்தில் மூவரும் நகரை நீங்குவதற்கு முன், இலக்குவனனுக்கும் அவன் மனைவி ஊர்மிளைக்கும் இடையே நடந்த உரையாடலாய் அமைந்தது இப்பாடல். கம்பனின் நகர் நீங்கு படலத்தில் இலக்குவன் மற்றும் ஊர்மிளை இருவரும் இத்தருணத்தில் பேசுவதாக எவ்விதக் குறிப்பும் இல்லை. இந்த பாடலின் முதல் அடி கம்பன் கொடுத்ததே. இக்காட்சியின் இடத்தைக் குறிக்கவே கம்பனின் அடியைக் கொண்டு ஆரம்பித்துள்ளேன். கம்பனின் அப்பாடலைத் தொடர்ந்து வரும் காட்சிகளாக என்னுடைய பாடல் வரிகளை எண்ண வேண்டுகிறேன்.

    சீரை சுற்றித் திருமகள் பின்செல
    ஊரும் சென்றது யிர்த்துணை நாயகன்
    மூரி விற்கை இளையவன் மாளிகைச்
    சேர வாயிலாய் ஆயினள் ஊர்மிளை

    தேடி வந்தவன் தேவியின் நெஞ்சடை
    பாட னைத்தையும் பார்வையில் வாங்கினன்
    ‘நாட னைத்தையும் நல்கிடும் அண்ணலின்
    பீட கற்றிடப் பிரிகுவம்’ என்றனன்

    ‘அன்னை என்றனம் அண்ணறன் தாயினை,
    ஒன்றென் றாகிடின் ஒன்றதே இன்னலும்;
    பின்னைச் செல்குவம் பேணுவம் தாயவள்
    என்னை ஈன்பயன் ஈதெனக் காண்குவம்’

    என்றி யம்பிட இயம்புவள் ஊர்மிளை
    ‘நன்று நும்நிலை நாமதற் கொப்பினும்
    ஒன்று வேண்டுவம் உம்மிடம் யாசகம்;
    பின்னர் யாம்வரும் பேறெமக் கருள்கவே’

    ‘மண்ணை நீக்கெனும் மன்னவன் ஆணையால்
    அண்ணல் நீங்கினன் அவ்வழி யாமுளோம்;
    பெண்ணைக் கானகப் பெருவழி சேர்த்திடும்
    எண்ணம் எமக்கிலை; எண்ணுக’ என்றனன்

    ‘அண்ணல் முன்னவர் ஆனதால் செல்கிறீர்!
    மண்பெண் சானகி எம்முறைச் சோதரி;
    பெண்ணென் றானதால் போனதோ சாத்திரம்?
    உண்மை சொல்க’வென் றுரைத்தனள் ஊர்மிளை.

    ‘முன்னை ஓர்நிலை, முற்றிலும் வேறினி;
    அன்னை மூவரை ஆரினிக் காப்பது?
    தன்னைப் பார்த்திடின் தாயினைப் பார்ப்பதார்?’
    என்று நின்றனன் இணைவிழி நீருடன்

    ஓங்கும் உணர்வுகள் ஒதுங்கும் போதினில்
    தாங்கும் தூணெனத் தானெழும் மாமதி;
    வீங்கு கண்களில் விரையும் நீருடன்
    ஏங்கும் ஏந்தலை இளையவள் ஏந்தினள்!

    உங்கள் கண்கள்நீர் உகுத்திடும் போதெலாம்,
    எங்கண் வற்றிடும் காரணம் அறிகிலோம்
    தங்கள் கண்களில் தங்குநீர் எம்மதோ?
    அங்ங ணமென்றிடின் அழுதிடா துளமினி!

    கானில் இருவரைக் காத்திடும் பணியுமக்
    கான தால்விழி அசைத்திடா திருந்தவை
    சேனை யாயல்பகல் சேர்ந்து காத்திட
    வானின் இறைவனை வணங்கி ஏத்துவம்

    அல்லும் பகலுமாய் அடர்ந்தநற் காட்டினுள்
    தொல்லை அறுத்திட தோள்வலி நாயக
    எல்லை யாகியே இருவரைக் காத்திடும்
    இல்லை துயிலினி எமக்குமாம் என்கவே

    நின்று பேசினள் நேரிழை ஊர்மிளை
    ‘நன்று நன்றெ’ன நாயகன் நோக்கவே
    ‘இன்று கண்களில் ஏந்திய உம்முரு
    என்றும் வாழ்ந்திடும் என்விழி’ என்றனள்

    சென்ற நாயகன் சென்றிடும் பாதையை
    ஒன்றி அவளுயிர் ஓடிடும்; ஊனுடல்
    மன்றம் நின்றிட நாயகன் இலக்குவன்
    தன்னைக் கண்களில் தாங்குவள் ஊர்மிளை

    Share
  • நிமிரும்..

    நாகினி

     

    மன்னன் தோள் சேரும்
    மணித்துளி இலாது காலம்
    மலையளவு கடந்தாச்சு
    மணமாலை வேறாச்சு..

    காலமே கதையாகி
    கானலாகிய வாழ்வில்
    கண்ணீரும் வற்றிடலாச்சு
    கவலைகள் விடாது சுற்றிடலாச்சு..

    வரும் வரும் நிம்மதியென்று
    தினம் தினம் எட்டுவைக்கும்
    மனம் மனம் நிமிரும் வரம்
    தரும் தரும் புதிர் காலம்..!!

    .. நாகினி

    Share