Blog

  • திருமால் திருப்புகழ் (59)

     

     

    கிரேசி மோகன்

    mambalamramar2
    மாம்பலம் கோதண்ட ராமர்….
    ———————————————————

    தான்தன தானந்த தான தான்தன தானந்த தான
    தான்தன தானந்த தான -தனதான….

    ————————————————————-

    ramar08-horz

    ”பாண்டியன் ஊர்வந்த போது, மாண்டது யாரென்ற கேள்விimages (3)
    தூண்டிடும் நானந்த மூலம் -தனைநாடி,
    பாம்பணை சாய்கின்ற மாலன் பூந்தவ நூலுந்தி நாதன்
    சேர்ந்தறி யாசம்பு சோணை-மலையேறி

    வேண்டுதல் வீணென்ற மோன வேங்கட ராமன்சு பாவ
    சாம்பசி வானந்தம் காண-அருள்வாயே
    பாண்டவர் போர்வென்று பூமி ஆண்டிட தேர்நின்று கீதை
    காண்டிபர் காதன்று கூவும் -நவநீதா

    தோண்டிய போதன்று வேலை ,மூண்டெழு ஆலங்கொள் ஈசர்
    தீண்டிடும் மாதங்கி மீனாள் -அபிராமி
    சாம்பவி யாள்சம்பு பாக னாங்கிச தாலிங்க னோடு
    தாந்த்ரிக மாய்நின்ற காளி -முதியோனே.

    காண்டமு லாசுந்த ரேசர், தாங்கத சாகண்டன் சாய,
    சோம்பலி லாதம்பி யோடு -வனமேகும்,
    கோன்ஜன கானந்த சீதை ஆம்படை யானென்று வாழும்,
    மாம்பலம் கோதண்ட ராம -பெருமாளே
    ———————————————————————–

    mambalamramar4

    mambalamramar4-horz

     

     

    படங்களுக்கு நன்றி:

    http://www.dinamani.com/religion/2014/01/21/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0/article2012318.ece

    Share
  • தேர்தல் நிகழ்வுகளும், அவசியமான சீர்திருத்தங்களும்

     பவள சங்கரி

    தலையங்கம்

    தேர்தல் நெருங்க, நெருங்க, நடந்து கொண்டிருக்க, அரசியல் கட்சிகளின் வேகங்களும், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிதுடிப்பும், ஒருவர் மீது மற்றொருவர் சேற்றை வாரி எரிதலும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அதிகாரிகளால் பல நூறு கோடி ரூபாய்கள் கைப்பற்றப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. காந்தியடிகள் கண்ட ராமராஜ்யம் இதுதானா.. இதுதான் ஜனநாயகத் தேர்தல் முறையா? இன்று காந்தியடிகள் உயிரோடு இருந்து அவர் தேர்தலில் நின்றால்கூட அவரால் இவ்வளவு செலவுசெய்து வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம்தான். பல கோடி ரூபாய்களைச் செலவழித்து, தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் அவர்கள் மக்களுக்கு நல்லாட்சி தருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். பொது மக்கள் பேசுவது போல, “இவ்வளவு செலவு பண்ணிபோட்டு, சும்மா வேலை செய்ய முடியுமா.. தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்க முடியுமா.. போட்ட முதலுக்கு லாபம் எடுக்கத்தானே செய்வாங்க” என்று ஊழல் செய்பவரை நியாயப்படுத்தி அவர்களுக்குத் துணை போகும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    நமக்கு ஊழலற்ற அரசாங்கம் வேண்டுமென்றால் அதற்கு ஆரம்பத்திலிருந்தே நாம் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். தேர்தல் முறைகளில் சில சீர்திருத்தங்கள் செய்வதன் மூலம் இது போன்ற தவறுகளை நியாயப்படுத்துதலை தவிர்க்க முடியும். அதில் முக்கியமாக, அனைத்துத் தேர்தல் செலவுகளையும் அரசே எற்க முன்வர வேண்டும். தனிப்பட்ட செலவுகள் எதையும் வேட்பாளர்கள் செய்யக்கூடாது. அப்படி இருந்தால் தான் நியாயமானவர்களும், சீரிய சிந்தனை உள்ளவர்களும், நாட்டிற்காக உண்மையாக உழைப்பவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும். மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களும், மக்களுக்காகப் பணியாற்றுவதற்காக தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்.

    இன்றைய செய்தித் தாள்களில் மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 58 மற்றும் 62 சதவிகிதங்களே பதிவாகியுள்ள நிலையில் மிக அதிகமான வாக்குப் பதிவு என்று சொல்ல வேண்டியதாக உள்ளது. அதாவது 31 சதவிகிதம் வாக்குப் பெற்றவர் 69 சதவிகித மக்களையும் சேர்த்தல்லவா ஆட்சி செய்வார்கள். ஜனநாயக முறைப்படியான தேர்தலாக இதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? ஆகவே வாக்குப் பதிவு 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாக்களிப்பது மக்களுடைய உரிமை, கடமை என்று சொல்வதோடு நிற்காமல் மக்களை வாக்களிக்க கட்டாயப்படுத்துதல் வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் வாக்களிக்கத் தவறுபவர்களின் குடியுரிமை அட்டை, கடவுச்சீட்டு, பொருளாதார அட்டை (பேன் கார்ட்) போன்றவைகள் முடக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயலலாம். இதன் மூலம் நியாயமான, நேர்மையான வல்லமையுள்ள ஆட்சியாளர்களையும் பெற முடியும். லோக்பால் போன்ற மசோதாக்களின் அவசியம்கூட இருக்காது. நல்ல முறையில் தேர்தல் நடந்து, மக்கள் நல்ல ஆட்சியாளரைத் தேர்வு செய்வதால் இந்தியா வல்லரசாவதை நம் கண் முன்னாலேயே காண வாய்ப்பாகவும் அமையும்.

    ஜெய் ஹிந்த்!!!

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது

     
    jay

    fig-1-saturn-rings.jpg

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா.

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_P04G1ObJm4

    http://www.youtube.com/watch?v=_P04G1ObJm4&feature=player_detailpage

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LNW4-4uq2C8

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YL__UbPsPDg

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=D7iS95-wE_E

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=t07Liw4Yb00

    ++++++++++++++++++++++

    பல பில்லியன் ஆண்டுகட்கு முன்பே சனிக்கோள் இப்போது இருப்பதை விட பளுவான வளையங்கள் மூலம் பேரளவு வடிவுள்ள துணைக் கோள்களை உருவாக்கி வந்துள்ளது.   சந்திரன்கள் வளையத்தின் விளிம்பில் உண்டாகும் போது, வளையங்கள் வலுவிழந்து விட்டன  என்று சொல்லலாம்.  பூர்வீகத்தில் வடிவான துணைக்கோள்கள்  பெரியதாக உருவாகியும், சனிக்கோளுக்கு அப்பாலும் தள்ளப் பட்டன.

    கார்ல் முர்ரே [பிரதமக் கட்டுரை ஆசிரியர், லண்டன் குயின் மேரி பல்கலைக் கழகம்]

    ***********************

    New moon for saturn

     

    சனிக்கோளின் வளையத்தில் ஒரு புதிய துணைக்கோள் உருவான விந்தை.

    2014 ஏப்ரல் 14 ஆம் தேதி நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக் கோளின் வெளி வளையத்தில் [Outer Ring : A] ஒரு சிறிய பனி அண்டம் [Small Icy Object] துணைக்கோள் போல் உருவாகி வரும் விந்தையை லண்டன் குயின் மேரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கார்ல் முர்ரே முதன்முறையாகக் கண்டதாக “லகாரஸ் இதழில்” [Lcarus Journal]  அறிவித்துள்ளார்.   இதுவரை [2014] கண்டுபிடிக்கப்பட்ட சனிக்கோளின் சந்திரன்கள் : 62.  இவையாவும் சனிக்கோளின் வலுவான வளையங்களி லிருந்துதான் ஒருயுகத்தில் தோன்றி இருக்க முடியும்.   இது கோளாய் உருவாகி வரும் முறையை ஆராய்ந்து, இதுவரை வடிவான சந்திரன்களின் தோற்றத்தை அறிய முடியும் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.   காஸ்ஸினி விண்ணுளவியின் கூரிய காமிரா பல மில்லியன் மைல் தூரத்தில் உள்ள சனிக்கோளின் வளைய விளிம்பில், சூழ்நிலையை விட  20% மடங்கு பெரு வெளிச்சம் உள்ள ஒரு பகுதியைப் படமெடுத்தி ருக்கிறது.   அப்பகுதி 750 மைல் நீளமும், 6 மைல் அகலமும் [1200 கி.மீ. x 10 கி.மீ.]  கொண்டுள்ளது.  இம்மாதிரி மாறுபாடுகள் அங்குள்ள அண்டத் துணுக்குகளின் ஈர்ப்பு விளைவால் நேர்கின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்..

    இச்சிறு பனி உண்டை பெரிதாகப் போவதில்லை என்றும், சிறிது காலத்தில் முறிந்து போகலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.   ஆனால் அது வடிவாகும் முறையும், நகரும் விதமும், சனிக்கோளின் மற்ற பனிக்கோள் சந்திரன்கள், பெரு வளையத்திலிருந்து எப்படி உருவாயின என்று அறிந்து கொள்ளப் பயன்படும்.   அதுபோல் நமது பூமியும் பிற அண்டக்கோள்களும் சூரிய மண்டலத்தில் உருவாகி எப்படி நகர்ந்து அப்பால் சென்றன  என்று ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

    சனிக்கோளின் இச்சிறு சந்திரனுக்குப் “பெக்கி” [Peggy] என்று பெயரிட்டுள்ளார். சனிக்

    ​ ​

    கோளுக்கு அப்பால் தூரத்தில் சுற்றிவரும் சந்திரன்கள் தொலைவுக்கு ஏற்ப பெரிது பெரிதாய் உருவாகியுள்ளன.   சந்திரன் உருவாக்கும் வளையங்கள் மேற்கொண்டு துணைக்கோள் வடிவாக்க வலுவிழந்து இந்தப் பெக்கியே சனிக்கோள் வளையம் படைக்கும் இறுதிச் சந்திரனாய் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். 

     

    New Moon formation

    “அடுத்த பத்தாண்டுத் துவக்கத்தில் நாசா புரியப் போகும் ‘விண்வெளி ஊடுருவு அளப்புத் திட்டம்’ [The Space Interferometry Mission (SIM)] 30 அடிச் சட்டத்தில் பற்பல தொலை நோக்கிகளை அமைத்து ஒளியியல் பௌதிகத் துறையின் உச்ச நுணுக்கத்தில் விண்வெளியைக் கூர்ந்து நோக்கப் போகின்றன.  அந்த விண்ணோக்கி விழிகள் பூமியைச் சுற்றிக் கொண்டு செவ்வாய்க் கோளில் விண்வெளி விமானி ஒருவன் சைகை காட்டும் கைவிளக்கு ஒளியைக் கூடக் கண்டுவிடும்.  அந்த உளவிகள் பூமியிலிருந்து 50 ஒளியாண்டு தூரத்தில் அடங்கிய 1000 விண்மீன்களை ஆராயக் கூடும் !  அடுத்து நாசா ஏவப் போகும் ‘அண்டவெளிக் கோள் நோக்கி’ (Terrestrial Planet Finder) பூமியைப் போலுள்ள மற்ற கோள்களைக் கண்டுபிடிக்கும் தகுதி உள்ளது”

    மிசியோ காக்கு, பௌதிகப் பேராசிரியர், நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகம் (Michio Kaku)

    இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவிக் கப்பலே உன்னத வேட்கைத் தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது.  மனித இனம் அண்டவெளியைத் தேடித் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது.

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]

    பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம்’ [Time Machine] போன்றது, டிடான் எனப்படும் சனிக்கோளின் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனி நிலவு, பூர்வீகப் பூமி உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் !

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

     

    சனிக்கோளின் தனித்துவ மகத்துவ ஒளிவளையங்கள்

    சூரிய மண்டலத்திலே நீர்மயமான பூமியைப் போல் தனித்துவம் பெற்றது ஒளிமய வளையங்கள் அணிந்த எழிலான சனிக்கோள் !  நானூறு ஆண்டுகளுக்கு முன்பு காலிலியோ தன் புதிய தொலைநோக்கியில் சனிக்கோளையும் இறக்கைபோல் தெரிந்த அதன் வளையங்களைக் கண்டது வானியல் விஞ்ஞானம் உலகில் உதயமாக அடிகோலியது !  சனிக்கோளைத் தொலைநோக்கியில் ஆய்வு செய்த முப்பெரும் விஞ்ஞானிகள், இத்தாலியில் பிறந்த காலிலியோ, டச் மேதை கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [1629-1695], பிரென்ச் கணித ஞானி கியோவன்னி காஸ்ஸினி [1625-1712].  முதன்முதலில் தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனிக்கோளை ஆராய்ந்தவர் உலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானிக் கருதப்படும் காலிலியோ. அவர் ஆக்கிய தொலைநோக்கிப் பிற்போக்கானதால் சனியின் வளையங்கள் செம்மையாகத் தெரியவில்லை ! கால வேறுபாட்டால் பிறகு சனி வளையங்களின் சரிவுக் கோணம் மாறுவதையும், காலிலியோ காணாது தவற விட்டார்!

    1655 இல் ஹியூஜென்ஸ் முதன்முதல் சனியின் துணைக்கோள் டிடானைக் [Titan] கண்டுபிடித்தார். வளையங்களை 1610 இல் சனியின் சந்திரன்கள் என்ற தன் கருத்தை மாற்றி 1612 இல் காலிலியோ சனி ஒரு நீள்கோளம் [Ellipsoidal Planet] என்று தவறாகக் கூறினார்!  1659 இல் ஹியூஜென்ஸ் காலிலியோவின் கருத்தைத் தனது மேம்பட்ட தொலைநோக்கியில் சரிபார்த்த போது, அவை சந்திரன்கள் அல்ல வென்றும், சனி நீள்கோள் அண்டமில்லை என்றும் அறிவித்தார். சனியைச் சுற்றி இருக்கும் ‘திடத் தட்டுதான் ‘ [Solid Plate] அவ்விதக் காட்சியைக் காலிலியோவுக்கு காட்டி யிருக்க வேண்டும் என்று ஹியூஜென்ஸ் எடுத்துக் கூறினார்.

    அதற்கடுத்து இன்னும் கூரிய தொலைநோக்கியை ஆக்கிய பிரென்ச் கணிதஞானி காஸ்ஸினி, அது திடப் பொருள் தட்டில்லை என்றும், சனியைத் தொடாது சுற்றி யிருக்கும் துளைத் தட்டு என்றும் கண்டுபிடித்தார். காஸ்ஸினி மேலும் சனியின் உட்தள, வெளிப்புற வளையங்கள், வளையங்களின் இடைவெளிகள், சனியின் மற்ற நான்கு பனிபடர்ந்த துணைக் கோள்கள் இயாபெடஸ், ரியா, டையோன், டெதிஸ் [Icy Moons: Iapetus, Rhea, Dione, Tethys] ஆகியவற்றையும் கண்டுபிடித்தார். வளையங்களின் விளிம்புகள் பூமியை நேராக நோக்கும் போது, சில சமயங்களில் வளையங்கள் தெரியாது சனியின் கோள வடிவம் மட்டுமே தொலைநோக்கியில் தெரிகிறது!

    சனிக்கோள் வளையங்களின் தனித்துவ அமைப்புகள்!

    சூரிய குடும்பத்தில் பூதக்கோள் வியாழனுக்கு அடுத்தபடி இரண்டாவது பெரிய கோள் சனிக்கோளே. சனிக்கோள் நமது பூமியைப் போல் 95 மடங்கு பெரியது. தன்னைத் தானே சுற்ற 10.5 மணி நேரமும், பரிதியைச் சுற்றிவர 29.5 ஆண்டுகளும் எடுத்துக் கொள்கிறது. சனிக்கோளின் விட்டம் மத்திய ரேகைப் பகுதியில் 75,000 மைலாக நீண்டும், துருவச் செங்குத்துப் பகுதியில் 7000 மைல் சிறுத்து விட்டம் 68,000 மைலாகக் குன்றியும் உள்ளது. சனியைச் சுற்றிவரும் வளையங்களின் எண்ணிக்கை சுமார் 100,000 என்று அனுமானிக்கப் படுகிறது. அந்த வளையங்களில் விண்கற்களும், தூசிகளும், துணுக்குகளும் பனிமேவி இடைவெளிகளுடன் வெகு வேகமாய்ச் சுற்றி, சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால், அவை சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன. வளையங்களின் தடிப்புகள் 10 மைல் முதல் 50 மைல் வரை பெருத்து வேறு படுகின்றன. சனிக்கோளின் வெளிப்புற வளையத்தின் விட்டம் மட்டும் 169,000 மைல் என்று கணக்கிடப் பட்டுள்ளது! தூரத்திற் கேற்ப வளையங்களின் துணுக்குகள் பல்வேறு வேகங்களில் சனிக்கோளைச் சுற்றி வருவதால்தான், அவை சனியின் ஈர்ப்பு விசையில் இழுக்கப்பட்டு சனித்தளத்தில் மோதி நொறுங்காமல் தப்பிக் கொள்கின்றன!

    சனி மண்டலம் வாயுப் பாறை உறைந்த ஒரு பனிக்கோளம்!

    சனித் தளத்தின் திணிவு [Density] பூமியின் திணிவில் எட்டில் ஒரு பங்கு! காரணம் சனிக் கோளில் பெரும்பான்மையாக இருப்பது பாறையாக உறைந்திருக்கும் ஹைடிரஜன் [Hydrogen] வாயு. மிக்க பளு உடைய சனிக்கோளின் சூழ்நிலை, சூழக அழுத்தத்தைச் [Atmospheric Pressure] சனியின் உட்பகுதியில் விரைவில் உச்சமாகி ஹைடிரஜன் வாயுத் திரவ மாய்க் குளிர்ந்து கட்டியாகிறது [Condenses into a Liquid].  உட்கருவில் திரவ ஹைடிரஜன் மிக்கப் பேரழுத்தத்தால் இரும்பாய் இறுகி, உலோக ஹைடிரஜன் [Metallic Hydrogen] பாறை ஆகி, மின்கடத்தி யாக [Electrical Conductor] மாறுகிறது. சனிக்கோளம் ஒரு பிரமாண்டமான காந்தக் களமாக [Magnetic Field] இருப்பதற்கு இந்த உலோக ஹைடிரஜனே காரணம்

    நாசா ஏவிய காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்ணுளவியின் தலையான பணி, ஹியூஜென்ஸ் உளவியைச் சுமந்து கொண்டு சனிக்கோளை அண்டி, அதைச் சுற்றி வருவது. சனிக்கோளைச் சுற்றும் போது, அதன் நூதன வளையங்களின் அமைப்பு, பரிமாணம், போக்கு, இடை

    ​ ​

    வெளிகள் ஆகிய வற்றை அளந்து ஆராய்வது. அடுத்து சனியின் சந்திரன்களை நெருங்கி அவற்றையும் ஆராய்ந்து புதுத் தகவல்களைப் பூமிக்கு அனுப்பும் பணி. ‘இதுவரைக் குருடர் தடவிப் பார்த்த யானையைப் போன்றுதான், சனிக் கோளின் காந்த கோளத்தைப் பற்றி வானியல் விஞ்ஞானிகள் தெரிந்து கொண்டிருந்தனர்! இப்போதுதான் யானையைக் கூர்ந்து பார்க்கப் போகிறோம்’ என்று டாக்டர் டாம் கிரிமிகிஸ் [Dr. Tom Krimigis John Hopkins Applied Physics Lab, Laurel Maryland] கூறுகிறார். பரிதியின் மேனியிலிருந்து வெளியேற்றப் பட்ட பரமாணுக்களின் புயல் வெள்ளம் சூழ்ந்த சக்தி மிக்க துகள்கள் உருவாக்கிய காந்த கோளமே, சனிக்கோளைச் சுற்றிலும் போர்த்தி யுள்ளது. 

    சனிக்கோள் அணிந்துள்ள ஒளிவீசும் எழில் வளையங்கள்!

    சனி மண்டலத்தின் ஒளிமயமான வளையங்கள் மிகவும் பிரம்மாண்டமான பரிமாணம் உடையவை ! சனியின் வளையங்களை பெண்ணின் கை வளையல் என்றோ, கால் சிலம்பாகவோ, அன்றி இடை அணியாகவோ எப்படி வேண்டு மானாலும் ஒப்பிடலாம் ! சனிக் கோளின் விட்டம் சுமார் 75,000 மைல் என்றால், அதற்கு அப்பால் சுற்றும் வெளி வளையத்தின் விட்டம் 170,000 மைல்! உள்ளே இருக்கும் முதல் வளையத்தின் விட்டம் 79,000 மைல் ! E,G,F,A,B,C,D, என்னும் பெயர் கொண்ட ஏழு வளையங்கள், சனியின் இடையை ஒட்டியாண அணிகளாய் எழிலூட்டுகின்றன! E என்னும் வளையம் அனைத்துக்கும் வெளிப்பட்டது. D என்னும் வளையம் அனைத்துக்கும் முற்பட்டது. A வளையத்துக்கும் B வளையத்துக்கும் இடைவெளி மட்டும் சுமார் 3000 மைல்! காலில் அணியும் சிலம்புக்குள்ளே இருக்கும் முத்துக்களைப் போல் ஒவ்வொரு வளையத்தின் உள்ளே கோடான கோடித் தனித்தனித் துணுக்குகள் [Individual Ringlets] பரவலாகி, சனிக் கோளை வட்டவீதிகளில் [Circular Orbits] சுற்றி வருகின்றன.  விண்கப்பல் வாயேஜர்-2 தனிக்கருவி மூலம் எண்ணியதில் சனியின் வளையங்களில் சுமர் 100,000 மேற்பட்ட கற்களும், பாறைகளும் சுற்றுவதாக அது காட்டி யுள்ளது!

     

    வளையங்கள் யாவும் சனியின் மத்திமரேகை மட்டத்தில் [Equator Plane] சுற்றும், வட்டவீதிக்கு 27 டிகிரி சாய்ந்த கோணத்தில் அமைந்துள்ளன.  சுடர்வீசும் வளையங்கள் எல்லாம் திரட்சியான தட்டுக்கள் [Solid Disks] அல்ல! சில இடத்தில் வளையம் 16 அடியாக நலிந்தும், சில பகுதியில் 3 மைல் தடித்துப் பெருத்தும் உள்ளன. வளையங்களில் பல்லாயிரக் கணக்கான பனித்தோல் போர்த்திய கூழாம் கற்கள் [Pebbles], பாறைகள், பனிக் கட்டிகள், தட்ப வாயுக் கட்டிகள் [Frozen Gases] தொடர்ந்து விரைவாக ஓடிச் சனிக்கோளைச் சுற்றி வருகின்றன! வளையங்கள் சூரிய ஒளியில் மிளிர்வதற்குப் பனி மூடிய கற்களும், பனிக் கட்டிகளுமே காரணம். சனிக்கோளை நெருங்கிய உள் வட்ட வளையத்தின் துணுக்குகள் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வெகு வேகமாகச் சுற்றிவரும் போது, வெளி வட்ட வளையத் துணுக்குகள் சிறிது மெதுவாக 15 மணி நேரத்தில் ஒரு தரம் சுற்றுகின்றன. வளையத் துணுக்குகளின் பரிமாணம் தூசியாய் இம்மி அளவிலிருந்து, பாறைகளாய் 1000 அடி அகலமுள்ள வடிவில், வட்டவீதியில் உலா வருகின்றன.

     

     

    சனிக்கோள் வளையங்கள் எப்படி உருவாயின என்பது புதிரே

    பனித்தோல் மூடிய துணுக்குகள், தூசிகள் நிரம்பிய சனியின் வளையங்கள் பரிதியின் ஒளியை எதிரொளிக்கின்றன !  அவற்றின் மீது விழும் 80% ஒளித்திரட்சியை அவை எதிரனுப்புகின்றன.  ஒப்புநோக்கினால் சனிக்கோள் தான் பெறும் 46% சூரிய ஒளியைத் திருப்பி விடுகிறது.  பூதக்கோள் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஓரிரு வளையங்களைக் கொண்டிருந்தாலும் அவை பூமியிலிருந்து தெரியப் படுவதில்லை !  பரிதியின் வெளிக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் அனைத்தும் பெரும்பான்மையாக வாயுக்கள் கொண்ட வாயுக் கோள்கள்.  அசுர வேகத்திலும், பூதக் கவர்ச்சி ஆற்றலிலும் அகப்பட்ட கோடான கோடி துண்டு, துணுக்குகளை சனிக்கோள் ஒன்றுதான் தனது மத்திம ரேகைத் தளத்தில் (Equator Plane) வட்ட வீதியில் சுற்றும் பல்வேறு வளையங்களாய் ஆக்கிப் பிடித்துக் கொண்டுள்ளது !  செவ்வாய்க் கோளுக்கு அப்பால் கோடான கோடிப் விண்கற்கள், பாறைகள் பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றலில் சுற்றி வந்தாலும் அவற்றைத் தனது சொந்த வளையங் களாக மாற்றி இழுத்துக் கொள்ள முடியவில்லை !  சனிக்கோள் மட்டும் எப்படித் தன்னருகே கோடான கோடிப் பனிக்கற்களை வட்ட வீதிகளில் சுற்றும் தட்டுகளாய்ச் செய்தது என்பது இன்னும் புதிராகவே இருந்து வருகிறது !  பேராசிரியர் மிசியோ காக்கு கூறியது போல் இந்த புதிய நூற்றாண்டில் சனிக்கோளின் அந்த நூதனப் புதிரை யாராவது ஒரு விஞ்ஞானி விடுவிக்கப் போகிறார் என்று நாம் எதிர்பார்க்கலாம் !

     

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Created Saturn’s Rings ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html
    11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40308155&format=html
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html
    13 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    14 “Physics of the Impossible” Michio Kaku – Article By : Casey Kazan (March 4, 2008)

    15 http://en.wikipedia.org/wiki/Rings_of_Saturn  [April 15, 2014]

    16  http://www.dailygalaxy.com/my_weblog/2014/04/saturns-rings-are-they-revealing-the-creation-of-a-new-moon.html

    17  http://www.jpl.nasa.gov/spaceimages/details.php?id=PIA18078  [April 14, 2014]

    18  http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-112  [April 15, 2014]

    19.  http://www.tasnimnews.com/English/Home/Single/341311  [April 17, 2014]
    ******************

    jayabarathans@gmail.com  [April 17, 2014]

    This Image Is Possibly The Birth of Saturns Newest Moon

    Saturn’s Mysterious Moons (V1)

    Saturn’s Mysterious Moons

    NASA | Cassini Mission to Saturn Highlights

    NASA | The Cassini-Huygens Mission To Saturn
    Share
  • கவிஞனாகிறேன்

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

     

    இதை இதைimages (4)
    எழுதவேண்டுமென்று
    எண்ணியதில்லை
    எண்ணுவதுமில்லை

    அது அது
    வந்து நச்சரிப்பதால்தான்
    எனது எழுதுகோல்
    உச்சரிக்கிறது

    அதுவரை தெரியாதது
    அடுத்தடுத்து தெரிகிறது

    இருட்டுக்குள் வெளிச்சம்
    வழிகாட்டுகிறது

    சூத்திரம் இல்லாமல்
    சூட்சுமம் அவிழ்கிறது

    திறவுகோல் இல்லாமல்images (3)
    பூட்டுகள் திறக்கின்றன

    பார்ப்பதால் உடன்
    பாதிக்கப்படுகிறேன்

    எண்ணுவதால் என்னை
    இழந்துவிடுகிறேன்

    கவனம் கூடி
    கரைந்துவிடுகிறேன்

    பறவையாகி
    பறந்துவிடுகிறேன்

    விதவிதமாக
    பொருள்புரிகிறேன்
    புரிந்ததைப் புதிதாய்ப்
    புரியவைக்கிறேன்

    அதிசயம்கண்டு
    அசந்துவிடுகிறேன்

    வியப்புற்று என்னையேteaching-poetry-to-children
    வியக்கிறேன்
    ஆனந்தமாய் ஒரு
    கவிதையடைகிறேன்

    கவிதையைக்கண்டு
    கர்வமடைகிறேன்

    அக்கணத்திலேயே நான்
    கவிஞனாகிறேன்

    (15.04.2014 அன்று 5.50க்கும் 6.30க்கும் இடையில் பேருந்து எண் 67 ல் விளைந்தது)

     

    படத்திற்கு நன்றி :

    http://go2uttyler.blogspot.in/2013/04/experimental-poetry-self-discovery-and.html

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (28)

    28. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! லியானார்டோ அருங்காட்சியகம், வின்ச்சி, இத்தாலி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    வரலாற்றில் இடம்பெறும் முக்கிய நபர்களில் சிலர் வாழ்ந்த இல்லங்கள் அல்லது அவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு மணடபங்கள் போன்றவற்றிற்குச் செல்லும் போதெல்லாம் காலத்தைக் கடந்து நிற்கும் அவர்களது நினைவுகளுடன் நான் சஞ்சரிப்பது வழக்கம். இப்படி அமையும் வாய்ப்புக்களெல்லாம் ஒரு அனுபவம் தானே என்று மிகச் சாதாரணமாக என்னால் நினைத்து விட முடியாது. மாறாக இவ்வகை நிகழ்வுகளை எனது டைரியில் முக்கிய நிகழ்வுகளாக நான் குறித்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.

    இப்படி வாய்க்கும் அனுபவங்களில்.. அதிலும் குறிப்பாக நம் மனதில் மிக மிக நாம் ரசிக்கும், விரும்பும், அதிசயத்து வியக்கும், லயித்துப் போகும் ஒருவரது நினைவின் சுவடாக இருக்கும் ஒரிடத்திற்கு நாம் செல்கின்றோம் எனும் போது அந்த அனுபவம் தரும் உணர்வுப் பூர்வமான அனுபவங்களைப் பிரமிப்பு என்று சொல்வதா அல்லது வியப்பு என்று சொல்வதா எனக் குழம்பிப் போனாலும் இந்த வாய்ப்பு அமைந்ததை நினைத்து மனம் முழுக்க மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பது என் அனுபவப் பூர்வமான உண்மை.

    உலக மனிதர்களில் என்னை மிகக் கவர்ந்த ஒருவர்.. எப்போது நினைத்தாலும் அல்லது அவர் பெயரைக் கேட்டாலும் வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும் ஒருவர்.. என்று சொன்னால் அதில் முதல் இடம் பெறுபவர் லியோனார்டோ டாவின்சி.

    ஒரு கலைஞன்..!
    ஒரு விஞ்ஞானி…!
    ஒரு கட்டிடக் கலைஞன்..!
    ஒரு அறிஞன்..!

    இவற்றிற்கும் மேல் லியோனார்டோ டாவின்சி …
    ஒரு புதுமை சிற்பி..!

    unnamed
    லியோனார்டோ டா வின்ச்சி

    பொதுவாக டாவின்சி என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனம் தொடர்பு படுத்திப் பார்ப்பது இந்தக் கலைஞன் உருவாக்கிய வரலாற்று பிரமாண்டங்களான தி லாஸ்ட் சப்பர் (The Last Supper) சித்திரமும் மோனா லிசாவின் (Mona Lisa) உருவப் படமும் தான். இதில் மோனா லிசா சித்திரத்தைப் பற்றி முந்தைய பிரான்ஸிலுள்ள லூவ்ர அருங்காட்சியகத்தைப் பற்றிய அருங்காட்சியகப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். லியோனார்டோ என்னும் இந்தப் புதுமை உலகப் படைப்புச் சிற்பியின் புகழைச் சொல்லிக் கொண்டிருப்பது இந்த இரண்டு சித்திரப் படைப்புக்கள் மட்டுமல்ல. இக்கலைஞனின் சிந்தனையில் உருவான பல்லாயிரக்கணக்கானச் சிந்தனை ஓட்டங்களின் பிரதிபலிப்பாக, புதிய உருவாக்கங்களைச் சலிக்காமல் படைத்தவன் இம்மாபெரும் கலைஞன். லியோனார்டோவின் படைப்புகள், கண்டுபிடிப்புகள், முயற்சிகள் இவற்றைப் பற்றி தனிப் பதிவாக எழுத வேண்டும் என்பதும் என் விருப்பம். பின்னர் ஒரு முறை இது நிச்சயம் வடிவம் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

    1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி இத்தாலியின் வடக்கு மாநிலப் பகுதியின் ஒரு சிற்றூரான வின்ச்சி நகரில் பிறந்தவர் இவர். இவரது படைப்புகளைப் பார்க்கும் போது இவரது சிந்தனையை முற்றும் முழுதுமாக அறிவியலும், இயற்கை நியதிகளும், புதுமை படைக்க வேண்டும் என்ற தீவிர தாகமுமே ஆர்ப்பரித்திருந்தமையை மிக நன்றாக உணர முடியும். தனது சமகால படைப்புகளைப் பார்த்து அதன் நீரோட்டமாக தனது படைப்புகளை உருவாக்கியவன் அல்ல டாவின்சி. இதற்கு முற்றிலும் மாறாக தனது சமகால படைப்புகளிலிருந்தும் அதற்கும் முந்தைய படைப்புகளிலிருந்தும் மாறுபட்ட சிந்தனையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவன் இவன். லியோனார்டோவின் பெயர் சொல்லி உருவான சித்திரக் கூடங்களும், கட்டிட கட்டுமான நெறி முறைகளும், அறிவியல் கருத்துகளும், மாணவர்களும் அவரை பின்பற்றி ரெனைசான்ஸ் எனக் குறிப்பிடப்படும் கலாச்சார மறு பிறப்பினை ஐரோப்பிய பிராந்தியம் முழுமைக்கும் இட்டுச் செல்ல வைத்த மிகப் பலம் பொருந்திய ஒரு ஆளுமை லியோனார்டோ டா வின்சி என்று சொன்னால் இதனை யாரும் மறுப்பதற்கில்லை.

    leo3

    வின்ச்சி நகரில் நுழையும் சாலை- இரு புறமும் ஆலிவ் மரங்கள் (ஏப்ரல் 2013)

    கடந்த ஆண்டு (2013) ஏப்ரல்-மே மாதங்களில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது வின்ச்சிக்கு பிரத்தியேகமாக பயணித்து இங்கிருக்கும் டாவின்சி அருங்காட்சியத்தை நேரில் சென்று பார்த்து வந்தேன். கலையும் அறிவியலும் வெவ்வேறு தானே? இவையிரண்டும் ஓரிடத்தில் சங்கமிக்க முடியுமா என பலர் நினைக்கலாம். ஆனால், இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து லியோனார்டோவின் படைப்புகளைப் பார்வையிடும் ஒவ்வொருவரும் இவன் அறிவியலையும் கலைப்படைப்புகளையும் பிரித்துப் பார்க்காத ஒரு மனிதன் என்பதை அறிவர். அறிவியலுக்கும் கலைப்படைப்புகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை வைக்காது இரண்டையும் இணைத்துப் பார்த்து அதன் வழி புதுமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தனி இடமும் சிறப்பிடமும் பெறுபவர் லியோனார்டோ.

    இது வரை கிடைத்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் லியோனார்டோவின் குறிப்புகளும் புதிய கண்டுபிடிப்புகளும் 13,000 பக்கங்களில் அவரது சொந்தக் கையெழுத்தினால் எழுதியும் வரைந்தும் வைக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளில் வானில் பறக்கும் இயந்திரம், போர் இயந்திரங்கள், மனித உடலின் உட்பகுதியில் அமைந்திருக்கும் அங்கங்களை தனித்தனியே ஆய்வு செய்து விளக்கிய வரைபடங்கள்-குறிப்புகள், கட்டுமான வரை படங்கள், வீட்டுத் தேவைக்கான இயந்திரங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.

    leo2

    லியோனார்டோ வடிவமைப்பான, வின்ச்சி நகரைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் Vitruvian Man (ஏப்ரல் 2013)

    ரோபோட் எனப்படும் இயந்திர மனிதன் அல்லது மிருகங்களின் உருவாக்கம் என்னும் கருத்து கடந்த நூற்றாண்டில் விரிவாக வளர்ந்த ஒன்று. லியோனார்டோவின் சிந்தனையில் இயந்திர மிருகம் ஒன்றும் படைக்கும் சிந்தனை எழுந்து அதன் விளைவாக அசைந்து நடந்து சென்று தன் இதயத்தைத் திறந்து லில்லி மலர்களை வழங்கும் ஒரு இயந்திர சிங்கத்தையும் கருத்தில் சிருஷ்டித்து, அதனை உருவாக்கி அதன் உருவாக்கக் குறிப்புகளையும் பதிவு செய்து வைத்திருக்கின்றார்.

    ஒரு மனிதனால் இவ்வளவு விஷயங்களைப் படைக்க முடியுமா..? வெவ்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் கலந்து இருந்து அதில் தன் முத்திரையைப் பதிக்க முடியுமா என்றால் முடியும் என்பதற்கு எனக்கு கண் முன்னே தோன்றும் உதாரணம் இந்த 15ம் நூற்றாண்டு மனிதர் லியோனார்டோ டா வின்ச்சி!

    அவர் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, இயந்திரக் கல்வி பயின்று தனது இளமைக் காலத்தைச் செலவழித்த வின்ச்சி நகரிலேயே அந்நகரின் ஊராட்சி மையம் அவருக்கு ஒரு அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றது. இப்படி ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் 1919ல் எழ பின்னர் படிப்படியாக இதற்கானப் பணிகள் ஆரம்பிக்க, இவரது ஒரு பிறந்த தினத்திலேயே அதாவது 1953ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் இந்த அருங்காட்சியகம் திறப்பு விழா கண்டது.

    leo1

    நினைவு இல்லத்தின் வாசலில் (ஏப்ரல் 2013)

    இங்கு தான் உங்களை அழைத்துச் செல்ல விருக்கின்றேன்.

    வாருங்கள்.. இணைந்து செல்வோம்..!

    தொடரும்

    Share
  • பசுபதியே போற்றி போற்றி

    இரமேஷ் சிவநாதன்temple

    1.    பெண்பாதி உருவாகி பிறைசூடிக் கூத்தாடி
    கண்ணாரக் கண்டாரை களிப்பூட்டிக் கரையேற்றி
    விண்ணாய கினபாலு மிளிர்நகர்வாழ் பசுபதியே
    மண்ணாகி நின்றாயென் மாணிக்கமே போற்றி போற்றி!

    2.    வேராகி தருவாகி வேதத்தின் குருவாகி
    சீராக அடியார்க்கு சிவஞானம் அருள்வாய்நீ
    நீராடும் கமலக்குள நிறைஞானப் பசுபதியே
    நீராகி நின்றாயென் நிருமலனே போற்றி போற்றி!

    3.    தாயாகித் தத்துவத் தந்தையாகி அடியாரை
    சேயாக்கி வல்வினைக்கு சிதையூட்டி சிவமாக்கி
    ஓயாமல் கூத்தாடும் ஓங்காரப் பசுபதியே
    தீயாடி நின்றாயென் சிவமணியே போற்றி போற்றி!

    4.    வேற்றாக ஒலிக்கின்ற வேதத்தின் ஒலியாகி
    காற்றாடி மனமூடி மந்திர செபமாகி
    கூற்றுவனை உதைத்தெம் குறைநீக்கும் பசுபதியே
    காற்றாகி நின்றாயென் கனகமணி போற்றி போற்றி!

    5.    வளிநாடி விழிமூடி வழிநாடி மனவாசல்
    ஒளிநாடி உள்ளத்தே ஒழுகிவரும் அமிர்தாகி
    துளியாகி தூவுணர்வால் சிவமாகி பசுபதியே
    வெளியாகி நின்றாயென் வேதியனே  போற்றி போற்றி!

     

    Share
  • ஒருபொதுக் கூட்ட மேடையின் செலவு வெறும் 2,500 ரூபாய்

    எஸ். வி. வேணுகோபாலன்

    acs

    திருச்சியில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பேசுகிறார்.

    திருச்சி, ஏப். 17 -தஞ்சை-கந்தர்வக்கோட்டை-திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் படாடோபம்-பகட்டாரவாரம் எதுவுமின்றி எளிமையிலும் மிக எளிமையாக நடைபெற்றன என்று `தி இந்து’ நாளிதழ் புகழாரம் சூட்டி யிருக்கிறது. சமீபத்தில் தஞ்சை-கந்தர்வக் கோட்டை-திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் குறித்து தி இந்து நாளிதழின் திருச்சி, புதுகை செய்தியாளர்கள் ஒரு தொகுப்பினை தி இந்து நாளிதழில் வெளியிட்டிருக் கிறார்கள். அதன் சாராம்சம் வருமாறு: எவ்விதமான படாடோபமோ, பகட்டாரவாரமோ இன்றி நடைபெற்ற ஒரு முக்கிய பிரமுகரின் பிரச்சாரம் என்றால் அது திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்தான்.

    ராட்சச கட்-அவுட்டுகள் கிடையாது, பெரிய பெரிய பதாகைகள் கிடையாது, டிரம் சத்தம் கிடையாது, மாபெரும் பொதுக்கூட்ட மேடை கிடையாது, எல்லாவற்றிற்கும் மேலாக எங்கேயும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப் படவில்லை. நம்பமுடியாதுதான், ஆனால் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் பொதுக்கூட்ட நிகழ் வுகள் அவ்வாறுதான் நடந்தன.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலும், திருச்சியிலும் அவர் பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் அவரைப் போலவே மிகவும் எளிமையுடன் நடந்தன. இவ்விரு இடங்களிலும் மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களவை வேட் பாளராகத் திருச்சி தொகுதியில் போட்டியிடும் எஸ். ஸ்ரீதருக்கு வாக்களிக்குமாறு கோரி உரை நிகழ்த்தினார்.

    இவ்விரு இடங்களிலுமே மிகவும் குறைந்த செலவிலான திறந்தவெளி மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் படங் களுடன் ஒவ்வொரு மேடையின் பின்புறமும் ஒரேயொரு ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. மேடையையொட்டி கட்சிக்கொடிகள் பறந்தன. கட்சிஊழியர்கள் சிவப்பு டி-ஷர்ட்டுகளை அணிந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். இவ்விரு இடங்களிலுமே மேடைக்கான செலவு 2500 ரூபாய்க்கும் குறைவு என் பதைக் கேட்டபோது மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. “ஒவ்வொரு கூட்டத்திற்கும் மேடை, மைக் செட்டு அமைப்பு,

    நாற்காலிகள், மின்விளக்கு வசதிகள் என அனைத்துக்குமே 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவு செய்திருக் கிறோம்,’’ என்று வேட்பாளர் எஸ். ஸ்ரீதரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட் டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னதுரையும் கூறினார்கள். மேடையில் மின்விசிறியோ ஏர் கூலரோ கூட வைக்கப்பட வில்லை.தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி முடிவடைந்தபின் மாணிக் சர்க் காரை, கந்தர்வக்கோட்டை நிகழ்ச் சிக்காக அழைத்துச் செல்ல புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி ஊழியர்கள் அவரை அணுகியபோது, கட்சி யின் மாவட்டக்குழுவுக்குச் சொந்தமான காரிலேயே கந்தர்வக் கோட்டை சென்றுவிடலாம் என்று மாணிக் சர்க்கார் கூறியிருக் கிறார். எனினும், “கட்சிக்குச் சொந்தமான கார் சரிவர இயங்காத நிலையில் இருந்ததால், டாக்சி ஏற்பாடு செய்து அவரை அழைத்து வந்தோம்,’’ என்று எம். சின்னதுரை தெரிவித்தார்.

    “கூட்டத்தினரிடையே அவர் பேசிக்கொண்டிருக்கையில்கூட பக்கத்திலிருந்த டீக் கடையி லிருந்துதான் 6 ரூபாய்க்கு டீ வாங்கி அவரிடம் கொடுத்தோம். அதைத்தான் அவர் பருகினார். அவருக்கு என்று நாங்கள் செலவு செய்தது அந்த 6 ரூபாய் மட்டுமே,’’ என்று அவர் மேலும் கூறினார்.திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போதும் பொது மக்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை. கூட்டம் நடைபெற்ற இடத்தில் கூட போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாணிக் சர்க்காருக்கு இசட்பிளஸ் செக்யூரிட்டி தரப்பட் டிருந்தபோதிலும், பாதசாரிகள் எவ்வித இடையூறுமின்றி மிகவும் சுதந்திரமாக பொதுக்கூட்ட மேடையினருகே வரைசெல்வதற்கு அனுமதிக்கப்பட் டிருந்தார்கள்.1998லிருந்து திரிபுராவின் முதல்வராகத் தொடர்ந்து பதவி வகித்து வரும் உருக்கு போன்றமனிதரான மாணிக் சர்க் கார், திருச்சி கூட்டம் முடிந்தபின் திருச்சி ரயில்நிலையத்தில் பிர முகர்கள் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, சென்னை செல்லும் ராக் போர்ட் எக்ஸ் பிரசில் ஏறுவதற்கு முன் சாப் பிட்டது என்ன தெரியுமா? ஒரு சில இட்டிலிகள் மட்டுமே.

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 15

    இவள் பாரதி


    மரம்
    நாய்
    காகமென
    ஒவ்வொரு உயிரினமும்
    நிலவு
    விமானம்
    வண்டியென பலவும்
    நாளுக்கொன்றாய் அறிமுகமாகிறது (more…)

    Share
  • வர்ணம்

    அன்று காலை. பெல்கிய நாட்டின் லூவன் நகரில் ஒரு மின்னணு சாதன அங்காடியில் அந்த மனிதருக்காக (attender) காத்துக் கிடந்தேன். வந்தவர் என்னைத் தவிர்த்து விட்டு எனக்கருகே நின்ற, எனக்கடுத்து வந்த சீமாட்டியிடம் என்னவென வினவிவிட்டு கவனித்தார். சில மணித்துளிகள் காத்திருப்பில் கழிந்தது. திரும்பி வந்தவரிடம் மீண்டும் கேட்க முற்பட்டேன்.

    “ஒரு நிமிடம்!” என அவர் மொழியில் தெரிவித்துவிட்டு, இன்னொரு கனவானை கவனிக்கச் சென்றார். அவரும் எனக்கடுத்து வந்தவரே! இன்னும் சில மணித்துளிகள் விழுந்து முடிந்திருந்தது. திரும்பி வந்தவர் மீண்டும் இன்னொரு கனவானை நோக்கிச் சென்றார்.

    பொறுமை இழந்தவனாய் உரக்க உரைத்தேன், “மன்னிக்கவும்.” நான் குறுக்கே நுழைந்து தொல்லை தருகிறேன் என்பது போன்று என்மீது கோபப்பார்வை வீசியவரிடம் தொடர்ந்து கூறினேன், “மன்னிக்கவும். நான் வந்து வெகுநேரம் ஆயிற்று.”

    “மன்னிக்கவும். கவனிக்கவில்லை!” என்றார்.

    “பரவாயில்லை. தங்கள் கவனத்தை கவரும் அளவிற்கு என் முகம் ‘பளிச்சென’ இல்லாததற்கு தாங்கள் என்ன செய்வீர்கள் பாவம்!” என்று உடனே கூறினேன் சிறுபுன்னகையுடன் – அவர் மொழியில்.

    யாரோ அறைந்ததுபோல் சில நொடிகள் உறைந்து போனார். பின் என்ன தோன்றியதோ தெரியவில்லை. என் கைகளைப் பற்றி, “மன்னிக்கவும்!” என்றார் – பலமுறை!

    எனக்கு இன்னமும் புரியவில்லை. இந்த மன்னிப்பு ‘என்னைக் காத்திருக்க வைத்ததற்கா?’ அல்லது ‘அவர் மொழியில் பேசியதற்காகவா’ அல்லது ‘நான் பளிச்சென இல்லை என்பதற்கா?’, அல்லது ‘அவரது இருண்ட ஆழ்மனம் எனக்கு தெரிந்துவிட்டது என நினைத்துக் கொண்டதாலா?’ எனக்கு இன்னமும் புரியவில்லை.

    வளர்ந்த நாடாயிருந்தாலென்ன? வளரும் நாடாயிருந்தாலென்ன? வளரா நாடாயிருந்தாலென்ன?

    ‘மனித மனங்கள் வளராத வரை!’.

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 29​

     

    சி. ஜெயபாரதன், கனடா

    [இறுதிக் காட்சி]

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -29​
    ​நாடகம்: சி. ஜெயபாரதன், கனடா
    வடிவமைப்பு : வையவன்
    ஓவியம் : ஓவித்தமிழ்

     

    [படக்கதை முடிவு]

     

    unnamed (1)

    unnamed (2)

    unnamed (3)

    தகவல் :

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and

    Picture Credit to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

     

     

    Share
  • முத்தமிழில் பாட வந்தேன்….

    கவிஞர் காவிரி மைந்தன்

    முத்தமிழில் பாட வந்தேன்….கவிஞர் பூவை செங்குட்டுவன்.. குன்னக்குடி வைத்யநாதன் வாணி ஜெயராம்…. ஏ.பி.நாகரஜன்

    மேல்நாட்டு மருமகள் என்கிற திரைப்படத்தை இயக்குனர் ஏ.பி.நாகரஜன் இயக்க.. இசையமைக்க குன்னக்குடி வைத்தியனாதன் பொறுப்பேற்க.. சங்கீதத்தில் கர்நாடக வித்வானாக.. விளங்கிய குன்னக்குடிக்கு இப்படம் எப்படி பொருந்தும் என்கிற வினாவை வில்முறித்த கதையாக்கி.. முத்திரை பதித்தார் என்றே சொல்ல வேண்டும். இசையில் மேல்நாட்டு மருமகள் மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது.

    திரைக்கதையில் வருகின்ற கதாநாயகி ஆங்கில நாட்டிலிருந்து தமிழகம் வந்து நம் தமிழ் மொழியைக் கற்றுத்தேர்ந்து பாடகியாய் மேடையில் தோன்றி தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழ்க்கடவுள் முருகனது சிறப்பையும் ஒருசேர பாராட்டி பண்ணிசைக்கும் பாடலாக..

    முருகன் Specialist என்று பட்டயம் தரலாம் என்னுமளவிற்கு சிறப்புற பாடல்கள் வழங்கி வந்த கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதிய வரிகளுக்கு மனதை மயக்கும் இசை குன்னக்குடி வைத்தியனாதன். சங்கீதக்கலாவாணி என்று சபைகளெல்லாம் புகழப்படும் திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் குரலில் இந்தப் பாடல் கந்தன் கருணையும் காட்டுகின்றது பாருங்கள்!

    மல்லிகை என் மன்னன் மயங்கும் என்கிற பாடலைப் பாடிய அதே குரல்.. முத்தமிழில் பாட வரும்போது கேட்டு மகிழாத உள்ளங்கள் ஏது? பூவையாரின் வரிகளில் உள்ள பொருள் யாவும் தமிழுக்குப் பெருமையும் கந்தனின் கருணையுமாய் தவழ்கின்ற கானமிது!

    வரம்பெற்ற மா கவிகள் வரைந்தளித்த பல்லாயிரம் செய்யுள்கள்.. மக்கள் மனதில் ஏற்படுத்த இயலாத தாக்கத்தை 16 வரிகளிலே வரையப்படும் ஒரு திரைப்பாடல் ஏற்படுத்தி விடுகிறது. எப்படி தெரியுமா? அதுவே இசையுடன் இணைந்த கவிதையின் பெருமை!!

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன் –

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன்
    தித்திக்கும்குமரன்பெயரில்
    தெய்வீகஅழகைக்கண்டேன
    தித்திக்கும்குமரன்பெயரில்
    தெய்வீகஅழகைக்கண்டேன

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன் –

    வேலனேன்றால்வீரம்வரும்
    கந்தனென்றால்கருணைதரும்
    வேலனேன்றால்வீரம்வரும்
    கந்தனென்றால்கருணைதரும்
    ஷண்முகனைசரணடைந்தால்
    சங்கீதம்பாடவரும்
    ஷண்முகனைசரணடைந்தால்
    சங்கீதம்பாடவரும்
    ஆறுபடைவீட்டில்ஓடிவிளையாடும்
    சுவாமிநாதனேசரவணனே
    ஆறுபடைவீட்டில்ஓடிவிளையாடும்
    சுவாமிநாதனேசரவணனே
    ஆறுமுகம்கொண்டுஆறுதல்தந்து
    கோடிநலம்காட்டும்குருபரனே

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன்
    தித்திக்கும்குமரன்பெயரில்
    தெய்வீகஅழகைக்கண்டேன
    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன்

    பாரதத்தாய்மடியினிலே
    பண்புடனேதவழுகிறேன்
    பாரதத்தாய்மடியினிலே
    பண்புடனேதவழுகிறேன்
    பழமையெல்லாம்நினைவூட்டும்
    பைந்தமிழில்பாடுகிறேன்
    பழமையெல்லாம்நினைவூட்டும்
    பைந்தமிழில்பாடுகிறேன்
    காலவரலாறுபோற்றி, புகழ்பாடும்
    கவிதையாவுமேதனித்தமிழே
    காலவரலாறுபோற்றி, புகழ்பாடும்
    கவிதையாவுமேதனித்தமிழே
    நாளும்முறையோடுநன்மைபலதேடி
    வாழவழிகூறும்திருக்குறளே முத்தமிழில்பாடவந்தேன்


    Muthamizhil Paada Vandhen – Melnattu Marumagal.flv
    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (104)

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    உலகம் உருண்டு கொண்டிருக்கிறது. உருளும் இந்த உலகின் ஒவ்வொரு பாகத்திலும் வெவ்வேறு சமுதாய அமைப்புகள் வெவ்வேறு அங்கங்களாக வெவ்வேறு வகைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன..

    வித்தியாசமான வாழ்க்கைமுறைகளைக் கொண்டிருந்தாலும் அனைவருடைய அடிப்படைத் தேவைகளும் ஒரே இலக்கையே கொண்டிருக்கின்றன.

    உண்பதற்கு உணவு, உடுத்திக் கொள்வதற்கு உடை, பதுகாப்பாக வாழ்வதற்கு மனை இந்த அடிப்படை வாழ்வை நோக்கி முன்னேறிய மனிதவர்க்கம் தமது பாதுக்காப்பான வாழ்வை விடுத்து தமக்கு அடுத்த சந்ததியும் பாதுகாப்பாக வாழவேண்டும் எனும் எண்ணத்தில் தமது தேவைக்கு மேலாகச் சேமிக்கத் தலைப்பட்டார்கள்.

    இதுவே இன்றைய வாழ்க்கை முறையின் அத்தியாவசிய தேவைகளுக்கு வழிகோலி நிற்கிறது

    இத்தகைய சேமிப்பும் அச்சேமிப்புக்காக ஓயாது உழைக்கும் தன்மையும் வசையம் தானா ? எனும் கேள்வி எழும்போது இத்தேவைகளுக்கான தேடல்கள் இல்லையெனில் இன்று இவ்வுலக்கம் இத்தகைய விஞ்ஜான முன்னேற்றங்களை அடைந்திருக்குமா ? எனும் கேள்வியும் எழாமலில்லை.

    இங்கேதான் நியாயத்திற்கு அந்நியாய வரம்பினைக் கடக்கும் மனப்பான்மைக்குமான வேறுபாடு தலைதூக்குகிறது.

    தனக்கும் தனது தலைமுறைக்குமான தேடல்களை நியாய வரம்பினிற்குள் தேடும் மனிதனின் நியாயமான் ஆசைகள் அதன் எல்லையைக் கடக்கும் போது அங்கு அடுத்தவரின் தெவைகளை மதிக்காது தமக்க்கே அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை மெதுவாக உள்லே நுழைகிறது.

    என்னடா இது ? சக்தி இம்மடலில் வேத வியாக்கினகங்களை அள்ளி வீசுகிறானே என்று அங்கலாய்ப்பது புரிகிறது..

    மனைதனுடைய நியாயமான தேடல்களின் வரம்பு மீறல்களைக் கட்டுப்படுத்தி வாழ்க்கையின் அடிமட்டத்தில் சந்தர்ப்பம் இல்லாமையாலோ அன்றிக் காலத்தின் செயற்பாட்டினாலோ அல்லாடிக் கொண்டிருப்போருக்கான பாதுகாப்பை உத்தர்வாதப்படுத்துவதே உண்மையான மக்கள் அரசாங்கத்தின் கடமையாக இருக்கிறது.

    இன்றைய இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் கிடைப்பது அவசியம் எனும் பாணியில் வேலையில்லாதோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகள் இவர்களின் பராமரிப்புக்காக உதவிகள் அரசாங்கக் கொள்கைகள் வாயிலாக அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அடிப்படைத் தத்துவங்கள் அனைத்து கட்சிகளினாலும் அபிப்பிராய பேதமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

    சரி அப்படியானல் எவ்விடத்தில் கட்சிகள் இக்கொள்கையில் வேறுபடுகின்றன என்ற கேள்வி எழுவது இயற்கையே !

    மக்களின் அடிப்படைத் தேவைகள் எவை ? அவை எத்தகைய மக்களின் பாவனைக்கு அளிக்கப்படுக்கின்றன? இவ்வரசாங்க உதவிகளைப் பெற்றுக் கொள்பவர்கள் உண்மையாகவே அதற்குரிய தகுதிகளைக் கொண்டவர்கள் தானா? எனும் கேள்விகளுக்கு எந்த அள்வில் உளரீதியான மனசாட்சிக்கு விரோதமில்லாத விடைகளைத் தேட்டுவதிலேயே இக்கட்சிகளின் நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் தென்படுகின்றன.

    வேலையிலாதோருக்கு உதவிப்பணம் கொடுப்பதென்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உதவிப்பணத்தைப் பெற்று இலகுவாக பணி எதுவும் புரியாமலே வாழப்பழகிக் கொண்டவர்கள் தாம் வேலை தேடுவட்ய்ஹர்க்லு எதுவித முயற்சியும் எடுக்காமல் வாழ்வது என்பதும் எமக்குக் கண்கூடாகவே தெரிகிறது.

    இரண்டு உதாரணக்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் மிகவும் கடுமையாக உழைத்து கிடைக்கும் பணத்துக்குள் தனது குடும்பத்தைப் பராமரித்து வருகிறார். மற்றொருவரே பல வருடங்கள் எதுவுதப் பணியுமே புரியாமல் அராசங்கம் கொடுக்கும் உதவிகளைக் கொண்டு தனது குடும்பத்தைப் பராமரித்துக் கொண்டு தனது வாழ்வை விடுமுறையில் வாழ்வது போலக் கழிக்கிறார்.

    வேலையிலாதவருக்கு அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணம் எங்கிருந்து வருகிறது கடுமையாக உழைக்கும் மற்றையவரின் வரிப்பணத்திலிருந்தே !

    இங்கேதான் பல கேள்விகள் எழுகின்றன. மனிதனின் அடிப்படை வசதிகள் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன ?

    மூன்று வேளை உண்ண உணவும், கெளரவமாக உடுத்திக் கொள்ள உடையும், வசிக்க வீடுமா இல்லை கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, பயணிக்க மோட்டார் வாகனம் இவையும் சேர்ந்ததா ?

    இன்றைய இங்கிலாந்தில் இக்கேள்வி மிகப்பிரதானமாக பலரின் மத்தியில் எழுந்துள்ளது.

    அதேவேளை எத்தனையோ முயற்சித்தும் எந்த வேலையும் கிடைக்காமல் அல்லல்படும் மனிதர்களும் இல்லாமல் இல்லை.

    2015ம் ஆண்டு மேமாதம் இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. இப்பொதுத் தேர்தலில் என்றுமில்லாதவாறு கட்சிகளுக்கிடையில் கடும் போட்டிற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

    எந்தக் கட்சி ஆட்சியமைக்கப்போகிறது என்பது எந்தக் கட்சி அதிகாரக் கதிரையில் அமரப்போகிறது என்பது இந்தப் பிரச்சனையில் எந்தக் கட்சி மிகவும் அதிரடியான ஆனால் மக்களின் வரவேற்புப் பெறும் பிரகடனங்களில்  மிகவும் துணிச்சலாக முன்வைக்கப் போகிறது என்பதிலேயே தங்கியுள்ளது..

    இனிவரும் வாரங்களில் மேலும் பல சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி

    Share
  • வெள்ளி மலையும் குமரிக் கடலும்!

    சி. ஜெயபாரதன்image

    கொந்தளிக்கும் தென்குமரிக் கடலில்
    நித்தம் நித்தம் மூழ்கி

    முத்தும், பவளமும் தேடிக் 
    கோர்த்து
    கரையோரம் நீ தொடுத்த
    ஆரங்கள் பற்பல 
    அன்னையின் கழுத்தில்
    பொன்னொளி 
    வீசும் !
    முத்துக் குளித்தபின் நீ விடும்
    மூச்சலைகள்
    நெஞ்சின் முகிலாய் 
    கடல் கடந்து எந்தன் 
    பனிமலையை
    உருக்கிப் 
    பிழிகின்றன ! உன்
    ஆத்மாவின் கீதங்களைக் கேட்டு
    எதிரொலிக்க 
    மேரு மலை ஒன்று
    இன்னும்
    வேரிட வில்லை ! 
    வாடாமல், வதங்காமல்,
    இன்னும் வனப்பு மங்காது
    சூடாமலர்கள் 
    பூங்காவில் 
    தொடுப்பாரற்றுப்
    பாடிக் கொண்டுள்ளன !
    தடாகத்தில் 
    தாமரைப் பூக்கள்
    தண்ணீர் ஒட்டாது
    பட்டுப் பூச்சிகள்
    பள்ளி கொள்ள
    வீணைகளை மீட்டுகின்றன! 

    கரையான்கள்
    கட்டிய
    கண்ணாடி அறையி லிருந்து நீ
    சேதியுடன் பறக்க விட்ட
    தூதுப் புறாக்கள் என்
    நெஞ்சுக்குள்
    கூடு கட்டி விட்டன !
    மலைபோல் உயர்ந்தவ னென்று
    மடலில் எழுதினாய் !
    மட்டமாயினும்
    கடல் ஆழம் உடையது !
    படைக்கும் போது
    பல்லாங்குழி விளையாடும்
    பரமன்
    ஒருத்தி மடியில் எடுத்து
    அடுத்த மடியை நிரப்பினான் !
    குமரிக் கடலைத்
    தோண்டி
    இமயச் சிகரம் நிரப்பினான் !
    பனிக் கட்டிகளை உருக்கி
    குமரிப்
    பள்ளத்தை நிரப்பினான் !

    சமத்துவ வாதிகள் சம்மட்டியால்
    இமயச் சிகரத்தை
    மட்டப் படுத்தப்
    புறப்பட்டு விட்டார் !
    தராசின் தட்டுகள் ஏறி  இறங்கி
    சமமாக ஓய்ந்து நிற்கும்
    அமைதி யுகத்துக்கு
    நாமிருவரும்
    பூமியில் காத்திருப்போம் !
    காலக் குயவன் ஆழியைச் சுற்றி
    கறுப்புப் பானைகளைப்
    படைத்தான்!
    வெள்ளைப் புடவை
    கட்டிக் கொண்டு
    காக்கைகள்
    கண்ணாடி முன் கனவு காணும் !
    வானில் பறக்க
    உந்திப் பார்க்கும் ஆமைகள் !

    குதிரையை வால் புறம் ஓட்டும்
    குருமார்கள்  உன்
    மூளையைச் சலவை செய்து
    நெஞ்சை மிதித்து
    கை, கால்களில் கட்டிய விலங்கை
    உடைக்க
    கையில் எப்போதும்
    பேனா உளியை
    வைத்திருக்கிறாய் ! எனது
    அந்தரங்கக் கொலுவில்
    உன் கை செய்த பதுமைகள்தான்
    அமர்ந்துள்ளன !
    நெஞ்சில் அரங்கேறும் உன் பரதக்கலை
    முடியும் போதென்
    கடிகாரமும் நின்று விடும்!
    இதயக் கோயிலில் நெய் ஊற்றி நீ
    எரிய விட்ட விளக்கை
    வாசலில் நிற்கும்
    எமன் ஊதி விடுவதற்குள்
    வைரக் கற்களை நான்
    செதுக்கிப்
    பட்டை தீட்ட வேண்டும் !

    கடலோரம் ஒதுங்கும் சிப்பிகளைத்
    திறந்த போது,
    உன் முத்துகள் தான்
    என் கண்ணில் தெரிந்தன !
    மின்வலையில் சிக்கிய மீன்
    தப்பி ஓடி
    எப்படிக் கண்முன் வந்தது ?
    கலைச்செல்வி கழுத்து ஆரங்களில்
    ஒன்றை எடுத்து
    இன்று ஏவும் புறாவின் காலில்
    கட்டி விடுவாயா ?
    கடல் உயரும், மலை தாழுமெனப்
    பொறுத்தது போதும் தோழீ !
    கடல் பொங்கி
    சுனாமி எழும் போது
    பேனாவுடன் தேடி வா !
    மலை சரியும் போது
    நான் மையுடன் வருவேன்
    பேனாவுக்கு !

    Share
  • வாழ்க்கை நலம் – 56

    குன்றக்குடி அடிகள்

    56. அன்பு ஈனும் ஆர்வம்

    மானிட வாழ்க்கை நலமாக, இன்பமாக இயங்க அன்பு தேவை. கடவுள் மனிதனுக்கு என்று தனியே அளித்தது அன்பு ஒன்றுதான். அன்பு, உள்ளங்களை இணைக்கும் – ஆற்றலுடையது. “ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். இந்த அன்பு வளருந்தன்மையுடையது. அன்பின் உணர்ச்சிக்கு எல்லை கிடையாது; நிபந்தனை கிடையாது.

    இந்த அன்பு தம்முடன் பழகுவோரின் இயல்புகளை அறிவது, அவர்தம் இயல்புக்கு ஏற்றவாறு தம் பழக்கங்களை, பழகும் நெறிமுறைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வதற்காக! தம்முடன் பழகுவோரின் விருப்பங்களை அறிந்து அவர்தம் பாங்குக்கு ஒத்துப் பழகினால்தான் அன்பு வளரும்; உறவு வளரும். “ஒத்தறிவான்” என்று திருக்குறள் கூறும். மற்றவர் தம்முடன் ஒத்துப்போக வேண்டும் என்றே விரும்புவர். இவர்களின் ஆன்மாவின் உயிர்ப்பாகிய அன்பு இல்லை.

    ஆன்மா எப்போதும் மற்றவர்களை நோக்கியே விரியும். உடல் எப்போதும் சுயநலத்தையே நாடும். ஆன்மாவின் ஆதிக்கத்தில் உடல் இயங்கினால் அன்பு, உறவு, தியாகம் எல்லாம் இருக்கும். அப்படி இல்லாது உடலின் ஆத்திக்கத்தில் ஆன்மா அடங்கிக் கிடந்தால் தன்னலம் மிக்கே விளங்கும்.

    தூய அன்பு விரிவடையும். தம்முடன் பழகுவோரின் இயல்பறிந்து பங்கறிந்து பழகுந்திறனில் வளரும். அவர் தம் தேவையறிந்து உதவும். அவர்தம் வாழ்வுக்காகத் தன் வாழ்வு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று கருதும். இந்த நிலை அன்பு முதிர்ந்து ஆர்வம் என்ற நிலைக்கு உயர்ந்த நிலை. “அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி” என்பது சேக்கிழார் திருவாக்கு.

    ஆர்வம் என்பது முறுகி வளர்வது. அன்பு, ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வளர்க்கப்பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பு நிலைக்கு இணையான வாழ்க்கை நிலை – உறவு இந்த உலகிலும் இல்லை; வேறு எந்த உலகிலும் இல்லை.

    நட்புக்கு மறுபெயர் தோழமை. நட்பு இதயத் தூய்மையுடையது. நட்பு எல்லையற்றது; அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் “சிறப்பு” என்று சிறப்பித்துக் கூறுகிறார். “சிறப்பு” என்ற சொல் உயர்வற உயர்ந்த உயர் நலத்தைக் குறிப்பதாகும். அதுவும் எத்தகைய சிறப்பு? எளிதில் நாடிப் பெறுதலுக்கு இயலாத சிறப்பு!

    “அன்புஈனும் ஆர்வ முடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு” (திருக்குறள் – 74)

    இத்திருக்குறள் உளவியல் வாய்ப்பாட்டில் அமைந்தது. உளதாகிய அன்பு வளரும். அன்பு வளர்ந்தால் ஆர்வம் என்ற உள்நெகிழ்வைத் தரும். ஆர்வம் தன்னை மறக்கச் செய்யும். பழகுவோரின் இயல்பறிந்து அவர் தம்முடன் விருப்பத்துடன் பழகி நட்பினை அடைய வளர்த்து உயர்த்தும்.

    அன்புக்கும் நட்புக்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் Aptitude என்பர். தமிழிலக்கியம், பாங்கு என்று கூறும்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • திருமால் திருப்புகழ் (58)

     

    கிரேசி மோகன்

    crazy
    பஞ்சமுக ஆஞ்சனேய பெருமாள்….
    ————————————————————————————————————-

    தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
    தந்ததன தந்ததன -தந்ததான…..

    ————————————————————————————————————————-
    இந்தவுடல் கந்தையைஅ கந்தைமன பந்தமென,

    நன்றி: டிவி. வரதராஜன்
    நன்றி: டிவி. வரதராஜன்

    கண்டறிய வந்தவழி -சென்றுமூலம்,
    ஒன்றுமிலை என்றுணர, அஞ்சிலொரு குன்றமதில்
    தங்கியுரை எங்கள்குரு, -வெங்கடேசர்

    உந்துவழி சென்றிவனி ருந்தயிடம், உந்தனெழில்
    பொங்குநதி சங்கமஅ -ரங்கமாக
    தந்தருளும், சங்கரனின் அன்புமகன் பந்தளனை
    திங்களிறு ஐந்துதினம் -பம்பைதீரம்

    உந்தியில்சு மந்தவன மங்கையென வந்தநர
    சிங்கமுக செந்திகிரி -சங்கபாணி,
    சங்கரிசு மங்கலியின் தந்தமகன் தம்பிகுகன்
    மங்கையர்கள் தந்தைமுறை -வந்தமாமன்,

    எந்தைரகு நந்தனுயிர் நண்பனவன் நங்கையிடம்
    கண்டுவர, லங்கைநகர் -சென்றுமீளும்.
    சுந்தரன்சிவ னன்புமுக இந்திரியம் வென்றபதி
    மந்தவெளி பஞ்சமுக -அஞ்சனேயா
    ——————————————————————————

     

     

     

     

     

     

    Share