Blog

  • நம்பினார் கெடுவதில்லை!

    நம்பினார் கெடுவதில்லை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நம்பிக்கை என்றால் நம்பிக்கை வேண்டும்
    தும்பிக் கையானை தொழுகிறார் பலபேர்
    பற்பல மதங்கள் பல்வகைத் தெய்வங்கள்
    இப்புவி இருப்பதை எண்ணிட வேண்டும்

    அல்லா என்கிறார் யேசு என்கின்றார்
    அரியே என்கிறார் அரனே என்கிறார்
    அகிலாண் டேஸ்வரி அம்பிகை என்கிறார்
    நம்பிக்கை என்பது நாமமாய் பெருகுது

    உண்டு என்று நம்பிக்கை வைக்கிறார்
    இல்லை என்று சொல்பவர்  இருக்கிறார்
    உண்டா இல்லையா என்பதை நினைக்க
    நம்பிக்கை எதுவெனத் தெளிந்திட வேண்டும்

    பாசம் நேசம் பர்த்ததே இல்லை
    அன்பு கருணை பார்த்ததே இல்லை
    எல்லாம் இருக்கு என்னும் நம்பிக்கை
    எல்லோர் இடத்தும் இறுக்கமாய் இருக்கு

    நிறமும் இல்லை உருவும் இல்லை
    கண்ணால் எவரும் கண்டதும் இல்லை
    இருப்பதாய் நம்பிக்கை இறுக்கமாய் இருக்கு
    விமர்சனம் வெறுப்பை வெளியிட  மாட்டோம்

    இவைகள் அனைத்தும் நிறைந்தது இறையே
    இறையில் நம்பிக்கை தவறா சொல்வீர்
    நம்பிக்கை உருவமே இறையே ஆகும்
    நம்பிக்கை என்றுமே நல்லதே காட்டும்

    நம்பினார் கெடுவதில்லை நம்பினார் வீழ்வதில்லை
    நான்மறையும் நம்பிக்கை நல்வழியும் நம்பிக்கை
    மதங்கூறும் தத்துவங்கள் மகத்தான நம்பிக்கை
    மகத்தான நம்பிக்கை மாநிலத்தில் இறையாகும்!

    Share
  • ஆண்களை விட அறிவார்ந்த சிறுமிகள் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    ஆண்களை விட அறிவார்ந்த சிறுமிகள் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மொழி பெயர்ப்பாளர்
    முனைவர் ப. செல்வி,
    இணைப்பேராசிரியர்
    ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் 
    கலை அறிவியல் கல்லூரி,
    கோவை.

    லியோ டால்ஸ்டயின் மொழிபெயர்ப்பு சிறுகதை

    அது ஒரு முன்கூட்டியே வந்த ஈஸ்டர் பண்டிகைக் காலம். பனிச்சறுக்கு விளையாட்டுகள் அப்போதுதான் முடிவடைந்திருந்தன; வீடுகளின் முற்றங்களில் பனி இன்னும் உறைந்திருந்தது; கிராமத்துத் தெருக்களில் நீர் ஓடைகளாகப் பெருகி ஓடிக்கொண்டிருந்தது.

    வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், இரண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட ஒரு சந்தில் தற்செயலாகச் சந்தித்தனர். அந்த இடத்தில், பண்ணை முற்றங்கள் வழியாக ஓடிவந்த அழுக்கு நீர் தேங்கி, ஒரு பெரிய குட்டையை உருவாக்கியிருந்தது. அச்சிறுமிகளில் ஒருத்தி மிகவும் சிறியவள்; மற்றவள் அவளைவிடச் சற்றுப் பெரியவள்.

    அவர்களின் தாய்மார்கள் அவர்கள் இருவருக்கும் புதிய கவுன்களை அணிவித்திருந்தார்கள். சிறியவள் நீல நிற ஆடையையும், பெரியவள் மஞ்சள் நிற அச்சுப் பதித்த ஆடையையும் அணிந்திருந்தனர்; இருவர் தலையிலும் சிவப்பு நிறத் துண்டுகள் கட்டப்பட்டிருந்தன. அவர்கள் இருவரும் தேவாலயத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் சந்தித்தனர். முதலில் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் புதிய ஆடைகளின் அழகைக் காட்டிக்கொண்டனர்; பின்னர் விளையாடத் தொடங்கினர். சிறிது நேரத்தில், அந்தக் குட்டை நீரில் இறங்கி விளையாட அவர்களுக்கு ஆசை ஏற்பட்டது. சிறியவள் தன் காலணிகள் மற்றும் காலுறைகளுடனேயே குட்டைக்குள் இறங்க முயன்றபோது, ​​அவளைவிடப் பெரியவள் அவளைத் தடுத்து நிறுத்தினாள்:

    “இப்படி உள்ளே செல்லாதே, மலாஷா,” என்று அவள் கூறினாள். “உன் அம்மா உன்னைக் கண்டிப்பார். நான் என் காலணிகளையும் காலுறைகளையும் கழற்றிவிடுகிறேன்; நீயும் உன் காலணிகளைக் கழற்றிவிடு.”

    அவர்கள் அவ்வாறே செய்தனர். பின்னர், தங்கள் ஆடைகளைச் சற்று மேலே தூக்கிப் பிடித்துக்கொண்டு, அந்தக் குட்டை நீர் வழியாக ஒருவரை நோக்கி ஒருவர் நடக்கத் தொடங்கினர். நீர் மலாஷாவின் கணுக்கால் வரை உயர்ந்தது; உடனே அவள்,

    “நீர் ஆழமாக இருக்கிறது, அகூல்யா! எனக்குப் பயமாக இருக்கிறது!” என்று கூறினாள்.

    “வா,” என்று மற்றவள் பதிலளித்தாள். “பயப்படாதே. நீர் இதைவிட ஆழமாகாது.” அவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வந்தபோது, ​​அகூல்யா,

    “ஜாக்கிரதை, மலாஷா! நீரைத் தெறிக்கவிட்டுவிடாதே. கவனமாக நடந்து வா!” என்று கூறினாள்.

    அவள் அவ்வாறு சொல்லி முடிப்பதற்குள், மலாஷா தன் காலை ‘தொப்’பென்று நீரில் ஊன்றினாள்; அதனால் நீர் தெறித்து நேராக அகூல்யாவின் ஆடையின் மீது விழுந்தது. அகூல்யாவின் ஆடை மட்டுமல்லாமல், அவளுடைய கண்களிலும் மூக்கிலும் கூட நீர் தெறித்தது. தன் ஆடையின் மீது படிந்த கறைகளைக் கண்டதும், அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது; அவள் மலாஷாவை அடிப்பதற்காக அவளைத் துரத்தி ஓடினாள். மலாஷா பயந்துபோனாள்; தான் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டதை உணர்ந்த அவள், அவசரம் அவசரமாகக் குட்டையிலிருந்து வெளியேறி, வீட்டுக்கு ஓடிச் செல்லத் தயாரானாள். சரியாக அந்த நேரத்தில், அகுல்யாவின் தாய் அவ்வழியே சென்றுகொண்டிருந்தார். தன் மகளின் பாவாடையில் சேறு தெறித்திருப்பதையும், அவளது சட்டையின் கைகள் அழுக்கடைந்திருப்பதையும் கண்ட அவர்,

    “ஏ சேட்டைக்காரி, அழுக்குப்பிடித்த பெண்ணே! நீ என்னதான் செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்டார். “மலாஷா வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தாள்,” என்று அப்பெண் பதிலளித்தாள்.

    இதைக் கேட்டதும், அகுல்யாவின் தாய் மலாஷாவைப் பிடித்து, அவளது கழுத்தின் பின்பக்கத்தில் ஓங்கி அடித்தார். மலாஷா தெருவின் மறுமுனை வரை கேட்கும் அளவுக்கு உரக்கக் கதறி அழத் தொடங்கினாள். உடனே அவளது தாயார் வெளியே ஓடிவந்தார்.

    “என் பெண்ணை எதற்காக அடிக்கிறாய்?” என்று கேட்ட அவர், தன் அண்டை வீட்டுக்காரப் பெண்ணை வசைபாடத் தொடங்கினார். ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தைக்கு இட்டுச்செல்ல, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. ஆண்களும் வெளியே வர, தெருவில் ஒரு கூட்டம் திரண்டது; அனைவரும் கூச்சலிட்டனரே தவிர, ஒருவர் பேச்சை மற்றொருவர் காதுகொடுத்துக் கேட்கவில்லை. அவர்கள் அனைவரும் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர்; ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரைத் தள்ளிவிட, சண்டை கைகலப்பாக மாறும் நிலைக்கு மிக நெருக்கமாக வந்தது. அப்போது அகுல்யாவின் வயதான பாட்டி, அவர்கள் கூட்டத்திற்குள் நுழைந்து, அவர்களை அமைதிப்படுத்த முயன்றார்.

    “நண்பர்களே, நீங்கள் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? இப்படி நடந்துகொள்வது நியாயமா? அதுவும் இப்படிப்பட்ட ஒரு நாளில்! இது கொண்டாடி மகிழவேண்டிய நேரம்; இது போன்ற மடத்தனமான செயல்களுக்கு உரிய நேரமல்ல.”

    அவர்கள் அந்த மூதாட்டியின் பேச்சைக் கேட்கவில்லை; சொல்லப்போனால், அவளைத் தள்ளிவிட்டுத் தடுமாறவும் செய்துவிட்டார்கள். அக்குல்யாவும் மலாஷாவும் தாமே முன்வந்திருக்காவிட்டால், அந்த மூதாட்டியால் கூட்டத்தை அமைதிப்படுத்தியிருக்கவே முடியாது. பெண்கள் ஒருவரையொருவர் கடுமையாகத் திட்டிக்கொண்டிருந்த வேளையில், அக்குல்யா தன் ஆடையிலிருந்த சேற்றைத் துடைத்துவிட்டு, மீண்டும் அந்தச் சேற்றுக்குட்டைக்குச் சென்றாள். அவள் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு, சேற்றுக்குட்டையின் முன்புறமிருந்த மண்ணைக் கீறி அகற்றி, நீர் வெளியேறித் தெருவில் பாய்வதற்கான ஒரு வாய்க்காலை உருவாக்கத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் மலாஷாவும் அவளுடன் சேர்ந்துகொண்டாள்; ஒரு மரச்சில்லின் உதவியுடன் அந்த வாய்க்காலைத் தோண்ட அவளுக்கு உதவினாள். ஆண்கள் சண்டையிடத் தொடங்கிய அதே வேளையில், அந்தச் சிறுமிகள் உருவாக்கிய வாய்க்கால் வழியாக நீர் பெருக்கெடுத்து ஓடி, அந்த மூதாட்டி ஆண்களை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்த இடத்தையே நோக்கிப் பாய்ந்தது. அந்தச் சிறுமிகள் நீரைப் பின்தொடர்ந்து ஓடினார்கள்; அந்தச் சிறிய நீரோடையின் இருபுறமும் ஆளுக்கொருத்தியாக ஓடினார்கள்.

    “அதைப் பிடி, மலாஷா! அதைப் பிடி!” என்று அக்குல்யா உற்சாகமாகக் கூவினாள்; மலாஷாவோ சிரிப்புப் பொறாமையால் பேசவே முடியாமல் போனாள்.

    மிகுந்த மகிழ்ச்சியுடனும், தங்கள் நீரோடையில் மிதந்து சென்ற அந்த மரச்சில்லைக் கவனித்துக்கொண்டும், அந்தச் சிறுமிகள் நேராக ஆண்கள் கூட்டத்திற்குள்ளேயே ஓடிச் சென்றார்கள். அவர்களைக் கண்ட அந்த மூதாட்டி, ஆண்களைப் பார்த்து இவ்வாறு கூறினாள்:

    “உங்களுக்குச் சற்றும் வெட்கமாக இல்லையா? இந்தச் சிறுமிகள் தாங்கள் சண்டையிட்டதை முற்றிலுமாக மறந்துவிட்டு, இப்போது மகிழ்ச்சியாக ஒன்றிணைந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது, ​​நீங்கள் மட்டும் இவர்களைக் காரணமாக வைத்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டிருக்கிறீர்களே! எத்துணை அன்பான பிஞ்சு உள்ளங்கள்! இவர்கள் உங்களைவிட அதிக ஞானம் படைத்தவர்கள்!”

    அந்த ஆண்கள் அந்தச் சிறுமிகளைப் பார்த்தார்கள்; தங்கள் செயலுக்காக வெட்கித் தலைகுனிந்தார்கள். பின்னர், தங்கள் மடத்தனத்தை நினைத்துத் தாங்களே சிரித்துக்கொண்டே, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

    “நீங்கள் மனம் மாறி, சிறுபிள்ளைகளைப் போல ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்திற்குள் ஒருபோதும் பிரவேசிக்கவே முடியாது.”

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 34

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 29 – திருமூல நாயனார்

    ‘நம்பிரான் திருமூலன்’ அடியார்க்கும் அடியேன், என்று ஆரூரர் தம் திருத்தொண்டத் தொகையில் போற்றிப் புகழும் திருமூல நாயனார், சைவ சமயத்தில் காலத்தால் முதிர்ந்தவர் மட்டுமின்றி கருத்தால், எண்ணத்தால், சிந்தையால் முதிர்ந்தவர் என்று அறியப்படும் ஆகச்சிறந்த சிவயோகி ஆவார். திருக்கையிலை மலையின் திருக்கோயிலுக்கு முதற்பெரும் நாயகரான திருநந்திதேவர், இந்திரன், மால், அயன் முதலிய தேவர்களுக்கு நெறி அருள்கின்ற திருவருள் பெற்றவர். இத்தகைய நந்தி தேவரின் திருவருள் பெற்ற சிவயோகிகளில் ஒருவர் என்ற பேர் பெற்றவர். திருமந்திரத்தில் திருமூலர் என்று குறிப்பிடப்படும் இவர் சுந்தரநாதன் அன்று அழைப்பட்டவர்.

    “நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
    என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே” 

    திருமூலரின் பழைய நண்பராகிய, பொதிகையில் எழுந்தருளியுள்ளஅகத்திய மகாமுனிவருடன் சில நாட்கள் தங்கியிருக்க விரும்பியவர் கயிலையினின்றும் புறப்பட்டுத் தென் திசையை நோக்கி வந்தார். திருக்கேதாரம், நேபாளம், காசி, திருசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே ஆவடுதுறைப் பெருமானை வணங்கத் திட்டமிட்டார்.

    ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்தினில் பசுக்கூட்டங்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். சாத்தனூரில் மூலன் எனும் இடையன் அவைகளை மேய்க்கின்றவன். அன்று அவன் அவ்விடத்தில், பசும்புல்வெளியில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவன் மீது உள்ள அன்பினால் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கதறி அழுதன.

    பசுக்களின் துன்பத்தைக் கண்ட சிவயோகியார், எம்பெருமானின் திருவருளால் அப்பசுக்களின் துயரத்தை நீக்க  வேண்டும் என்று முடிவெடுத்தார். தம் திருமேனியை ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்துவிட்டு, மூலனின் உடலிலே தன் உயிரைப் புகுத்தினார். பசுக்களின் துயரத்தைப் போக்குவதற்காக திருமூலராய் எழுந்தார். மூலனை மோந்த பசுக்கள் அளவற்ற மகிழ்ச்சி கொண்டன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற் சென்று மேய்த்தார். மகிழ்ந்து, துள்ளிக் குதித்து, மேய்ந்திருந்த பசுக்கள் அந்தி நேரத்தில், பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன. சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் தத்தமது வீடுகளுக்குச் செல்லத் தாம் வெளியிலே நின்றார்.

    மூலனுடைய மனைவி தன் கணவனைத் தேடி வந்தவள், சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, அவருடைய திருமேனியைத் தீண்ட, அவர் விலகி நின்றார். திருமூலநாயனார், தனக்கும் மூலனின் மனைவிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று மறுத்து, ஒரு பொது மடத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி கவலை கொண்டிருந்தவள் மறுநாள் அதனை ஊர்ப்பெரியவர்களிடம் சென்று முறையிட்டாள். தன் கணவனுக்கு சித்தம் பேதலித்துவிட்டதாகவும் கூறினாள். திருமூலனைக் கூர்ந்து கவனித்த அப்பெரியவர்கள் அவர் சிறந்த ஞானியாகத் தெரிவதாகவும், சிவயோகியாராகத் தெரிவதாகவும் கூறி, அவரை இனி அவள் என்றும் சேர முடியாது என்று புரிய வைத்து திரும்ப அழைத்துச் சென்றனர்.

    சிவயோகத்தில் இருந்த திருமூல நாயனார் எழுந்து, பசுக்கள் வந்த வழியே சென்று தாம் மறைத்து வைத்திருந்த தம் உடலைக் காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, சிவபெருமான் அருள் செய்த ஆகமத்தினுடைய பொருள் அனைத்தும் தமிழ் ஆக்க எம்பெருமான் திருவருள் இவ்வுடலைத் தந்தது என்று உணர்ந்தார்.

    “தண்ணிலவார் சடையார்தாம் தந்த ஆகமப் பொருளை
    மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்பக்
    கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
    எண்ணிறைந்த உணர்வுடையார் ஈசர் அருள் எனவுணர்ந்தார்” 

     திருமூலரும் எம்பெருமானின் திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்தின் சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப் புறத்தில் உள்ள அரசின் கீழ் அமர்ந்து சிவயோகத்தில் நிலைத்திருந்தார். மூவாயிரம் ஆண்டுகள் அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு ஆண்டிற்கு ஒவ்வொரு திருப்பாடலாக மூவாயிரம் திருப்பாடலால் சைவாகமங்களில் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரம் எனும் தமிழ்நூலைப் பாடியருளி, பின் திருக்கையிலையை அடைந்தார்.

    முன்னிய அப் பொருள் மாலைத்

      தமிழ் மூவாயிரம் சாத்தி

    மன்னிய மூவாயிரத்து ஆண்டு

      இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து

    சென்னி மதி அணிந்தார் தம்

      திருவருளால் திருக் கயிலை

    தன்னில் அணைந்து ஒரு காலும்

      பிரியாமைத் தாள் அடைந்தார். 

     

    திருமூலதேவ நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”

    திருமூலர் அருளிய மூவாயிரம் பாடல்களும் திருமந்திரம் என்ற நூலாகப் பன்னிரெண்டு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக விளங்குவது. திருமூலர், இறைவன் தம்மைப் படைத்தது இறைவனுடைய தன்மைகளைத் தமிழில் அழகுற எடுத்தியம்புவதற்காகவே என்றார். திருமூலர் திருமந்திரம் ஆகமப் பொருளையெல்லாம் திரட்டி ஒன்பது தந்திரங்களாக அருளிச் செய்தார்.

    ஞானமுதல் நான்கும் மலர் நற்றிரு மந்திரமாலை” என்ற திருத்தொண்டர்புராண வசனமாகிய புறச்சான்றினாலும் அது வலுவுறும்.

     

    பக்தன் சரியை கிரியை பயில்வுற்றுச்

    சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்

    உய்த்தநெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்

    சித்தங் குருவருளாற் சிவமாகுமே”

    சிவப்பேறடைதற்குரிய நெறிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கும் சைவநாற்பாதங்களாம். நான்காவதாகிய ஞானம் சிவப்பேற்றை நேரே அருள்வதாக, ஏனைய மூன்றும் படிமுறைக்கிரமத்தில் அதற்குத் தகுதியளிப்பன. ஞானம் என்பது சிவத்தில் இலயித்த உயிர் சிவத்தையுணர்தலாகிய மெய்யுணர்வு விளக்கமுற்றிருப்பதாகவும் அமையும்.

    திருவாவடுதுறையில் அரசின் கீழ் திருமூலர் யோகத்தில் இருந்ததை ,

    சேர்ந்திருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச்
    சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்டுறை
    சேர்ந்திருந்தேன் சிவ போதியின் நீழலில்
    சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே

    என்று குறிப்பிடுகின்றார்.

    சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கு முன்னோடியாக விளங்கும் திருமந்திரம், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அனைவராலும் பயன்படுத்தப்படுகின்ற சொற்றொடரை அருளியவர் திருமூலர். சாத்திரங்களின் சாரத்தை மிக எளிமையாகவும், முழுமையாகவும் உரைத்தவர் திருமூலர். ஆகமங்கள் 28 தமிழாகமம் சொல்ல வந்த திருமூலர் வரலாறு 28 பாடல்களில் அமைந்துள்ளதும் போற்றத்தக்கது.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • Lexifyd – தமிழ் கற்க ஒரு செயலி

    Lexifyd – தமிழ் கற்க ஒரு செயலி

    தமிழ் கற்க, இதோ ஒரு நல்ல வாய்ப்பு. இதில் விளையாட்டைப் போல் தமிழ் கற்கலாம். இதில் தமிழ் மொழியுடன் கூடவே தமிழ் மரபையும் கற்கலாம். இதன் உள்ளடக்கத்தை உருவாக்கியதில் எனக்கும் சிறு பங்கு இருக்கிறது.

    வணக்கம் நண்பர்களே!

    எங்கள் மாத்யமிக் குழுவினர், 5 முதல் 8 வயதுக் குழந்தைகளுக்காக Lexifyd என்ற தமிழ் கற்கும் செயலியை (App) கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளோம்!

    உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ தமிழ் கற்க விரும்பும் குழந்தைகள் இருந்தால், தயவுசெய்து இந்தத் தகவலை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிவிறக்கம் செய்ய (Download Link): https://play.google.com/store/apps/details?id=com.maadhyamik.kanchi

    முதல் நிலையில் (Level-1) உள்ளவை:

    முழுமையான எழுத்துகள்: எழுத்துகளின் வடிவங்களை அறிந்து, அவற்றைத் தொடுதிரையில் எழுதிப் பழகுவதோடு, சரியான உச்சரிப்பையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

    10 சுவாரசியமான பாடங்கள்: குழந்தைகளுக்கு ஏற்ற தலைப்புகளில், உயர்தர நிகழ்படங்கள் (Videos), வரைகலை ஓவியங்கள் (Graphics) மூலம் வடிவமைக்கப்பட்ட பாடங்கள். மேலும், குழந்தைகளின் கற்றல் திறனைப் புரிந்துகொள்ளத் திருப்புதல் பாடங்களும் (Review Lessons) இதில் உள்ளன.

    விளையாட்டுகள்: சொல் சார்ந்த பல விளையாட்டுகள் மூலம் குழந்தைகள் தங்களுடைய சொற்களஞ்சியத்தையும் (Vocabulary) எழுத்துத் திறனையும் வளர்த்துக்கொள்ளலாம்.

    தேவையானவை (Pre-requisites): எதுவுமில்லை! எளிய பேச்சுத் தமிழைப் புரிந்துகொள்ளும் திறன் மட்டும் இருந்தால் போதும்.

    (இதன் iOS பதிப்பும் அடுத்தடுத்த நிலைகளும் விரைவில் வரவுள்ளன!)

    இதை நீங்கள் பயன்படுத்திப் பார்த்துவிட்டு, மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவ வேண்டுகிறேன். மிக்க நன்றி!

    Learn Tamil through play! Fun, interactive lessons on language and heritage.

    #Lexifyd #Tamil #Tamillearning #LearnTamil #Maadhyamik #Tamillessons #TamilAlphabets #Games #app #androidapp #தமிழ்

    Share
  • சேக்கிழார் சிந்தனை சிறந்த நற்சிந்தனை !

    சேக்கிழார் சிந்தனை சிறந்த நற்சிந்தனை !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    காவியம் பாடினால் கம்பனை விஞ்சுவார்
    கற்பனைத் திறனில் உச்சந் தொட்டவர்
    பக்தியின் வழியில் பயணந் தொடங்கினார்
    பாடினார் பாடினார் பக்தியைப் பாடினார்

    கல்வியில் சிறந்தவர் கசடுகள் களைந்தவர்
    எண்ணிடும் அனைத்தும் ஏற்றமாய் கொண்டவர்
    மண்ணிலே வாழும் மக்களின் மனத்தில்
    பக்தியின் பெருமையை பாடியே கொடுத்தார்

    அரசனின் அவையில் அமைச்சராய் இருந்தார்
    அதிகாரம் ஆணவம் அவரகம் இல்லை
    ஆண்டவன் நினைப்பே அவரிடம் நிறைந்தது
    அமைச்சராய் இருப்பதை மறந்தே இருந்தார்

    அரன் அடியார்கள் பெருமையை அறிந்தார்
    அவர் வரலாற்றை இணைத்திட  முனைந்தார்
    எப்படி இணைக்கலாம் என்றவர் எண்ணினார்
    பக்தியின் நினைப்பவர் புத்தியில் புகுந்தது

    பக்தியை உத்தியாய் கொண்டனர் அவரும்
    பக்தியைக் காட்டிடப் பதங்களை நாடினார்
    புத்தியில் புகுந்திடப் பக்குவப் பதங்கள்
    வந்துமே குவிந்தன வளர்ந்தன வளர்ந்தன

    பற்பல குலங்கள் வந்த நல்லடியார்
    அறுபத்து மூவரை பக்தியால் இணைத்தார்
    பற்பல இடங்கள் பற்பல குணங்கள்
    பக்தியில் கலந்திட பகர்ந்தனர் கதையை

    ஒதுக்கப் பட்டவர் உயர்வுடன் மிளிர்ந்தார்
    வெறுக்கப் பட்டவர் வணங்கிட  உயர்ந்தார்
    ஆலயம் எங்கணும் சிலையாய் அமர்ந்தார்
    குருபூசை ஆற்றிடும் பெருநிலை எய்தினார்

    அன்பால் இறையினைத் தொட்டவர் அடியவர்
    அவரது கதையினைத் தொட்டவர் சேக்கிழார்
    சேக்கிழார் தமிழால் செப்பிய கதையே
    மாக் கதையாக  மலர்ந்தது புராணமாய்

    நாயகன் இல்லை நாயகி இல்லை
    எதிரியாய் பாத்திரம் எதுவுமே இல்லை
    இறை அடியாரின் நிறைவுகள் கருவாய்
    அமைந்திடும் வண்ணம் அமைந்தனர் கதையை

    பாமரர் படித்தவர் பக்குவம் பெற்றிட
    பக்தியை தேர்ந்து எடுத்தனர் சேக்கிழார்
    காதலை உருக்கத்தைக் காட்டிடும் நிலையிலும்
    கடவுளின் நினைப்பைக் காட்டியே எழுதினார்

    பக்தியாய் மலர்ந்த நல்பெரிய புராணத்தை
    பாமரர் படித்திட வைத்தவர் நாவலர்
    நாவலர் பெருமான் செய்தநற் பணியால்
    சேக்கிழார் கவியெலாம் மலர்ந்தன வசனமாய்

    ஆலயந் தோறும் பெரிய புராணத்தை
    ஆறுமுக நாவலர் விரித்துமே உரைத்தார்
    அரன் அடியாரின் பெருமையைப்  பக்தியை
    பாமரர் விளங்க நாவலர் செய்தார்

    தத்துவம் சமயம் தலையாய தொண்டு
    சித்ததில் இருக்கச் செய்தவர் சேக்கிழார்
    சேக்கிழார் சிந்தனை சிறந்த நற்சிந்தனை
    போற்றியே நிற்போம் பூசனை ஆற்றுவோம் !

    Share
  • விதி

     

    காலை நேரத்தில் மட்டும் இன்னும் இரண்டு கைகள் சேர்த்து முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    சாந்தாம்மா வேலைக்கு வருவதற்குள் பரபரவென, காலை சிறுதானிய கஞ்சி, கருவேப்பிலைத் தொகையல், மதிய உணவிற்கு சாம்பார், காய், கீரை என அனைத்தையும் சமைத்து முடித்தாக வேண்டும். இதற்கிடையில் பால்காரர் வந்தால் பால் வாங்கவும், காய்காரம்மா வந்தால் வாங்குவதும், கணவர்,  “கங்கா அதெங்கே, இதெங்கே” என்று கேள்விக் கணைகள் தொடுத்தால் அதற்கு விடை சொல்லவும்  வேண்டும். பால் காய்ச்சி காபி தயாராகணும். இதற்கு நான்கு கைகளே போதாதென்றாலும் இரண்டு கைகளுடன் வேகமாகச் செய்து பழகிக் கொண்டாகிவிட்டதற்கு என்னையே பாராட்டிக் கொள்ளத்தான் வேண்டும். ஆகா இந்த நேரத்தில் போன் வேறு அடித்துக் கொண்டிருக்கிறதே. யாராக இருக்கும்?

    இந்த நேரத்தில் என் அன்பு மகள் இனியாதான் கூப்பிடுவாள். மகப்பேறியல் மருத்துவத்தில் உயர் கல்வியான எம்.டி. டி,ஜி.ஒ படித்துவிட்டு அரசு மருத்துவமனையில் ராஜஸ்தானில் பணிபுரிகிறாள். ஆனாலும் இன்று வெள்ளிக்கிழமை, அவளுக்கு போர்ட் மீட்டிங் இருக்குமே, மாலையில்தானே பேசுவாள். பால் பொங்கும் நிலையில் ரொம்ப நேரமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. பார்த்துக் கொண்டேயிருந்தால் இப்படித்தான் அப்படியே அசங்காமல் இருக்கும், சற்று நகர்ந்தால் போதும் புசுபுசுவென்று பொங்கிவிடும். போன் அடித்து ஓய்ந்துவிட்டது. பாலை இறக்கிவிட்டுப் போய் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன் அமைதியாக நின்று கொண்டேன்.

    இனியாதான் கூப்பிட்டிருக்கிறாள். கார் ஓட்டும்போது கூப்பிட்டிருப்பாள்போல. எப்போதும் கண்மூடித்தனமாக வேகமாக ஓட்டுபவள் என்பதால் கார் ஓட்டும்போது போன் பேசக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறேன்.  ஆனாலும் ஏதாவது முக்கியமான விசயமாக இருக்குமோ? சரி போன் செய்து பார்க்கலாம் என்று டயல் செய்தேன்.  போன் முழுவதும் அடித்து ஓய்ந்துவிட்டது. மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்திருப்பாள். மீட்டிங் ஆரம்பித்திருக்கும். ஓய்வு நேரத்தில் அவளே கூப்பிடும் வரை காத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

    வேலையெல்லாம் முடித்துவிட்டு ஓய்வாக வந்து உட்கார்ந்த மறுநொடி மகளின் நினைவுதான் வந்தது. கொஞ்ச நாட்களாக அவள் ஏதோவொரு குழப்பத்திலேயே இருக்கிறாள். அழகான பெண் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டோடு நல்ல ஆளும் அமைந்துவிட்ட பின்புதான் அவளை ராஜஸ்தானில் விட்டுவிட்டு மதுரைக்குத் திரும்பினேன். மருமகன், கதிரவன் இந்திய இராணுவத்தில் உயர் பதவியில் இருப்பவர். மரியாதைக்குரிய பணி, வீட்டில் பாதுகாப்பு, எல்லா வேலைக்கும் கூப்பிட்ட குரலுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். தன் மகளையும், மனைவியையும் பொக்கிசமாக வைத்துப் பார்த்துக்கொள்கிறார். ஆனால் மாப்பிள்ளை அடிக்கடி காம்ப் என்று சென்றுவிட்டால் திரும்புவதற்கு வாரக்கணக்காகவோ அல்லது பல நேரங்களில் மாதக்கணக்காகக் கூட ஆகலாம். மற்றபடி வேறு எந்தக் குறையும் இல்லை அவளுக்கு.

    என்றாலும் சில நாட்களாக அவளுக்கு அந்தக்  கனவு அடிக்கடி வந்து அவளைக்  குழப்பிக்கொண்டிருக்கிறது. ஒருமாதம் முன்னால் ஒருநாள் காலையில் ஏழு மணிக்கே போனில் அழைத்தவள் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள். பதறிப்போய் விட்டேன் நான்.

    “அம்மா, இன்று விடிகாலையில் அப்படியொரு கெட்ட கனவு கண்டேன்மா. விடியற்காலை கனவு பலிக்கும்னு நீதானே சொல்லுவே. அதான் ஒரே டென்சனா இருக்கு”

    “அப்படி என்னம்மா கனவு அது. நீதான் அதெல்லாம் மூட நம்பிக்கைன்னு சொல்லுவியே. இப்ப என்னாச்சு”

    “இல்லம்மா, இது கனவு மாதிரியே இல்லம்மா. எதோ நேரில் பார்த்த காட்சி போலவே தெளிவா இருந்துச்சி. விடியற்காலம் அப்பவே முழிச்சிக்கிட்டேன். ஒரு வேலையும் ஓடல. பயமா இருக்குமா”

    “என்னடா இது. டாக்டருக்குப் படிச்ச பொண்ணு ஒரு கனவுக்கா  இப்படி பயந்துடுவே. அப்படி என்னதான் கனவு அது?”

    “அம்மா, வீட்டில் ஒரே கூட்டமா இருக்கு. ஹால்ல ஒரு பெரிய பெட்டி வந்து இறங்குது. எல்லோரும் கூச்சல் போடுறாங்க. நான் மட்டும் அழாமல் அப்படியே நிற்கிறேன். கதிரோட அலுவலகத்திலிருந்து நிறைய பேர் வந்திருக்காங்க. அந்தப் பெட்டியில் என்ன இருக்குன்னு பார்க்க முயற்சி செய்தேன். கடைசிவரை பார்க்கவே முடியல”

    “அடடா, என்னம்மா இது. இப்ப இந்தியா – பாகிஸ்தான் போர் நடக்குதில்ல. அதையே நினைச்சுக்கிட்டு படுத்திருப்பே. மாப்பிள்ளையும் பிசியா இருக்கிறதாலே நீ எதையோ நினைத்து குழம்பிட்ட போல. அதெல்லாம் ஒன்னும் இருக்காதும்மா. நிம்மதியா இருடா” என்று சொல்லிவிட்டாலும் பெற்ற தாயான என் மனதிலும் மகளின் இந்தக் கனவு பாரமாக அழுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

    இருப்பது ஒரே பெண், இராணுவ மாப்பிள்ளை வேண்டாம், அதுவும் ராஜஸ்தானில்  என்றுதான் கூறிக்கொண்டிருந்தேன். அவ்வளவு தொலைவு சென்று மகளை அடிக்கடிப் பார்க்க முடியாதே என்ற வருத்தம்.  அப்பா போலவே தன் கணவனும் இராணுவத்தில் பணியாற்றுவதில் அவ்வளவு பெருமை இனியாவிற்கு. அம்மாவானாலும் என் பேச்சு எடுபடாமல் போய்விட்டது. மாப்பிள்ளையின் குணம் சொக்கத்தங்கம் என்று அப்பாவும், மகளும் சேர்ந்துகொண்டு ஒரே பிடிவாதமாக அதே மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து விட்டார்கள்.

    மாப்பிள்ளை கதிரவனின் சுறுசுறுப்பான, கம்பீரமான தோற்றம்  அழகு தேவதையான என் மகளுக்குப் பொருத்தமாக இருப்பதால் எனக்கும்  பிடித்துவிட்டது. மாப்பிள்ளையின் குடும்பத்தில் எல்லா ஆண்களும்  பரம்பரையாக இராணுவத்தில் உயர் பதவி வகிப்பவர்கள். மாப்பிள்ளையும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதாவது தனது 22 வயதிலேயே ‘பரம் வீர் சக்ரா’ விருது பெற்றிருந்தார். அவ்விருதைப் பெற்றவர்களில் மிகவும் இளையவர்  இவர்தான். இந்தியா, பாகிஸ்தான் போரில் இவர் செயல்பட்ட விதத்தைப் போற்றும் வகையில் இந்த விருது கதிரவனுக்கு வழங்கப்பட்டது. எனவே அப்படிப்பட்ட மாப்பிள்ளையை யார் வேண்டாம் என்று சொல்ல முடியும்?

    திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் கதிரவன் எல்லைப் பாதுகாப்பில் இருந்தபோது, எதிரிகளுடன் ஏற்பட்ட மோதலால் பதுங்கு குழியில் இருந்தவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்பதில் துடிதுடித்துப் போய் விட்டாள். அரசு வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று அவளுடன் தங்கியிருந்த என்னால் அவளை சமாதானப்படுத்தவே முடியவில்லை. தந்தை உடனிருந்து தைரியம் சொன்னதால் அமைதியானாள். நல்ல வேளையாக ஒரு சில நாட்களிலேயே கதிரவன் திரும்பி வந்து வயிற்றில் பாலை வார்த்தார்.

    ***

    ராஜஸ்தான் செல்வதற்கு விமானத்தில் அடுத்த நான்கு நாட்களில் டிக்கெட் போட்ட பின்புதான் மனம் ஆறுதலடைந்தது.  அப்பாவும் மகளைப் பார்க்க உடன் வருவார் என்றுதான் பார்த்தேன். ஆனாலும் அவர் பணி ஓய்வு பெற்ற பின்பும் எப்போதும் ஏதோவொரு சமூகச் சேவையில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதன் நிவாரணப் பணிகளில் ஒத்தாசையாக இருப்பதற்காகச் சென்று கொண்டிருக்கிறார். எப்போதும் சுறுசுறுப்பாக அவர் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கவே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அப்பாவைப் பார்த்தால் இனியா மகிழ்ச்சியாக இருப்பாள் என்றுதான் கூப்பிட்டும் பார்த்துவிட்டேன். 10 நாட்களுக்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார். இனியாவிடம் சொன்னேன். அவள் குரலில் மகிழ்ச்சி இருந்தாலும், அதில்  ஒரு சலிப்பும் இருந்தது. மாப்பிள்ளை கேம்ப்பிலிருந்து திரும்புவதற்குப் பதினைந்து நாட்கள் ஆகும் என்றாள். அதற்குள் நான் சென்று அவளுடன் சில நாட்கள் இருந்தால் அவள் இயல்பு நிலைக்கு வந்துவிடலாம் என்று நம்பினேன்.

    இதோ, இனியாவுக்கும் பேத்தி அனன்யாவுக்கும் பிடித்த பலகாரங்கள் மற்றும் சட்டை துணிமணிகள் தயார். என் கணவருக்கும் தொக்கு, ஊறுகாய் என்று போட்டு வைத்தாகிவிட்டது. மறுநாள் மகளையும், பேத்தியையும் காணப்போகும் மகிழ்ச்சியில் மனம் துள்ளிக் குதித்தது.

    இந்த நேரம் பார்த்தா இப்படியொரு செய்தி வரவேண்டும்? என் அம்மா குளியலறையில் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் உடனே கிராமத்திற்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. தம்பியும், மனைவியுடன் மகளைப் பார்க்க அமெரிக்கா சென்றுவிட்டதால் அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேறு யாரும் இல்லாததால் தவிர்க்க முடியவில்லை. மகளுக்குத் தகவல் சொல்லக்கூட நேரம் இல்லாமல் கணவனிடம் சொல்லி இனியாவிற்கு போன் செய்யச் சொல்லிவிட்டு கிளம்ப வேண்டியதாகிவிட்டது. காரில் போகும் வழியெல்லாம் அம்மாவின் நினைவு ஒருபுறம் இருந்தாலும் மகளுக்கு மிகவும் ஏமாற்றமாகியிருக்குமோ என்றும் கவலையாக இருந்தது.

    அடுத்த ஒரு வாரம் அம்மாவுடன் மருத்துவமனையில் இருந்துவிட்டு பின்னர் வீட்டில் கொண்டுவந்து விட்டு நல்ல கேர்டேக்கர் கிடைக்கும்வரை உடன் தங்க வேண்டியதாகிவிட்டது. பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. இடையில் மகளிடம் ஒரு சில முறைகள் பேசியபோதும் அவளிடம் பழைய உற்சாகம் இல்லை.

    நான் ராஜஸ்தான் கிளம்புவதற்கு விமான பயணச் சீட்டு ஏற்பாடு செய்தாகிவிட்டது. இன்னும் மூன்று நாட்கள்தான். நேரில் பார்த்து ஆறுதலாகப் பேசி அவள் மனதில் உள்ளதை அறிந்துகொண்டால் பின் மெல்ல சமாதானம் செய்துவிடலாம். முடிந்தால் அவளை ஊருக்குச் கூட்டிவந்து ஒருமாதமாவது வைத்திருந்து அனுப்ப வேண்டும் என்று மனது கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது.

    காலை ஒன்பது மணிக்கு விமான நிலையம் செல்லவேண்டும். இரவெல்லாம் சரியான உறக்கமில்லை. விடியற்காலையில்  என்னையறியாமல் கண்ணயர்ந்துவிட்டேன்.

    அருகில் யாரோ தோளைத்தட்டி அம்மா .. அம்மா என்று அழைக்கிறார்கள்.

    “அட இனியா செல்லம், நீயே இங்கே வந்திட்டியா. அம்மாவுக்காக காத்திருந்து விட்டு நீயே நேரில் வந்துவிட்டாயா கண்மணி. நல்ல வேளை. நம்ம வீட்டிற்கு வந்திட்ட இல்லையா. இனிமேல் பாரேன், எல்லாமே சரியாகிவிடும். குட்டிப் பாப்பா எங்கே காணோம். தூங்கிட்டாளா. என்ன ஆச்சு, சொல்லாம கொள்ளாம திடீர்ன்னு வந்துட்ட. சரி, சரி பரவாயில்லை. மாப்பிள்ளை வரும்வரை நீ இங்கேயேதான் இருக்கணும். சரியா” என்று படபடவென கொட்டித் தீர்த்தபோது, இனியா ஒன்றும் பேசாமல் அமைதியாக பார்த்துக்கொண்டே நிற்கிறாள். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது.

    “என்னம்மா .. என்னம்மா .. என்னாச்சுடா தங்கம். ஏன் இப்படி …..” என்று சத்தமாக நான்  படபடக்கவும் அருகில் இருந்த கணவர் திடுக்கிட்டு விழித்தார்.

    “கங்கா என்னாச்சுமா?  ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் இப்படிப்  புலம்பற. போய் மகளோட சந்தோசமா தானே  இருக்கப் போற?  அதுக்குள்ள என்ன ஆச்சு உனக்கு. கிளம்பு நேரத்தோட” என்றார்.

    நான் அவர் கைகளை விலக்கினேன். “இல்லைங்க. இனியா இங்க வந்துட்டாளே.. இதோ என் பக்கத்தில் இருந்தாளே.. இதோ இப்பதான் என்னைத் தொட்டு அம்மா.. அம்மான்னு கூப்பிட்டாளே. எங்கே போனாள்?  கண்ணம்மா விளையாடாதே . எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாய். வெளியே வாடா கண்ணு” என்று கட்டிலை விட்டு இறங்கிப்  பரபரவென வீடு முழுக்கத் தேட ஆரம்பித்தேன்.

    ஆனால் அவர், “ஏய் என்ன பைத்தியமா உனக்கு. நான் சொல்லிட்டே இருக்கேன். நீ என்னமோ இனியா வந்தாள்னு உளறிக்கிட்டிருக்கே. போய்ப் பார்.  கதவு பூட்டியிருக்கு. அப்படின்னா அவ என்ன மாயாவியா, அப்படியே உள்ளே நுழைந்து வருவதற்கு” என்று சொல்லிச் சிரிக்க, எனக்கு மட்டும் ஏனோ சிரிப்பே வரவில்லை.

    இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. வீட்டிற்குள் எங்கோதான் என் இனியாக் குட்டி இருக்கிறாள் என்றே தோன்றுகிறது…

    மெல்ல இயல்பு நிலைக்கு நான் வர முயன்றபோது, போன் அடித்தது. அப்போது விடியற்காலை ஐந்து மணி. இந்த வேளையில் யாராக இருக்கும்? கடவுளே அம்மாவுக்கு ஏதும் ஆகியிருக்கக் கூடாதே என்ற படபடப்புடன் போனை எடுத்தேன்.

    புதிய எண்ணிலிருந்து வந்த அழைப்பு. ஒன்றும் புரியாமல் “ஹலோ, யாருங்க” என்றேன்.

    போனில் வந்த செய்தி தலையில் இடியென இறங்கியது. “என்னது. என்னது, என்ன சொல்றீங்க.. நீங்க யாரு. ஏதோ தப்பான நம்பருக்கு கூப்பிட்டிருக்கீங்க. இல்லை .. இல்லை” என்றவாறு மயங்கிச் சரியப் போனேன். சட்டென்று கைபேசியைப் பிடுங்கிய என் கணவர், பொறுமையாகக் கேட்டுவிட்டு “ஐயோ இனியா, என் தங்கம்..” என்று அலற ஆரம்பித்துவிட்டார்.

    இரவுப் பணி முடிந்து வீடு திரும்பும்போது இனியாவின் கார் மலைப்பகுதியில் ஒரு வளைவில் கட்டுப்பாடில்லாமல் உருண்டு விழுந்துவிட்டதாம். அந்த இடத்திலேயே அவள் உயிர் பிரிந்து விட்டதாம்.

    என்னென்னவோ நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு,  தன்னுடைய முடிவைத்தான் காட்சியாகக் கனவில் பார்த்திருக்கிறோம் என்று தெரியாமலே போயிருக்கிறது. விதியின் விளையாட்டை யாரால்தான் கணிக்க முடிகின்றது?

    மாப்பிள்ளையின் நிலைதான் மிகவும் பரிதாபமாக இருந்தது. அவருடைய பெற்றோர் அவரைச் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள். குழந்தையை அங்கு விட்டுவிட்டு வர மனம் இடங்கொடுக்கவில்லை. இதைப்பற்றி விவாதிக்கும் மன நிலையிலும் அவர்கள் இல்லை. குழந்தையை எடுத்துக்கொண்டு நாங்கள் கிளம்பத் தயாரானபோதுதான் சுயநினைவு வந்தவராக மாப்பிள்ளை ஓவென்று கதற ஆரம்பித்துவிட்டார். எத்தனையோ மரணங்களை நேரில் சந்தித்தவர். தனக்கென்று ஒரு இழப்பு வரும்போது அதெல்லாம் மறந்து ஒரு சாதாரண மனிதனைப்போல மாறிவிடுவதுதானே மனித இயல்பு. கிடைத்தற்கரிய ஒரு பொக்கிசத்தை இழந்துவிட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர இயலாமல் தவிப்பதைக் காணும்போது ஈரக்குலையெல்லாம் நடுங்கத்தான் செய்கிறது. ஆனாலும் வேறு என்னதான் செய்ய முடியும்?

    சம்பந்தி வீட்டாரிடம் ஒருவழியாகச் சமாளித்து குழந்தையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டோம். அவர்களும் சில நாட்களுக்குப் பிறகு நேரில் வந்து மற்ற விசயங்களைப் பேசிக்கொள்ளலாம் என்றிருக்கிறார்கள். அடுத்து நடக்கப்போவதை இறைவன்தான் முடிவு செய்ய வேண்டும்.

    இன்று அந்த இரண்டு வயதுக் குழந்தை அனன்யாவைக் கையில் வைத்துக்கொண்டு இதயத்தில் பெரும் பாராங்கல்லைச் சுமந்தபடி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மகளை இழந்த துக்கத்தை எங்கள் பேத்தியான குட்டி இனியாதான் இனித்  தீர்த்து வைக்கவேண்டும். விதி வலியது, என்றாலும் நம்பிக்கைகள்தானே நம்மைப் பிழைக்க வைத்திருக்கிறது!

    ***

     

    Share
  • சார்லஸ் டிக்கன்ஸ்  – ஒரு துணைச்சித்திரம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மொழி பெயர்ப்பாளர்

    முனைவர் ப. செல்வி,
    இணைப்பேராசரியர்
    ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் 
    கலை அறிவியல் கல்லூரி,
    கோவை.

    “சிட்னி,” என்று அதே இரவில்—அல்லது விடியற்காலையில்—திரு. ஸ்ட்ரைவர் தன் உதவியாளனிடம் கூறினார்; “இன்னொரு கிண்ணம் ‘பஞ்ச்’ (punch) பானம் கல; நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்.” அந்த இரவிலும், அதற்கு முந்தைய இரவிலும், அதற்கு முந்தைய இரவிலும்—இப்படித் தொடர்ந்து பல இரவுகளாக—சிட்னி இரவும் பகலும் பாராமல் கடுமையாக உழைத்திருந்தான்; நீண்ட விடுமுறைக்காலம் தொடங்குவதற்கு முன், திரு. ஸ்ட்ரைவரின் அலுவலக ஆவணக் குவியல்களை முழுமையாகச் சீர்செய்து முடிப்பதே அவனது பணியாக இருந்தது. அந்தச் சீரமைப்புப் பணி இறுதியாக முடிவடைந்தது; ஸ்ட்ரைவரின் நிலுவைப் பணிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக முடிக்கப்பட்டன; நவம்பர் மாதம் வரும்வரை—அதன் வளிமண்டலப் பனிமூட்டங்களையும், சட்டரீதியான சிக்கல்களையும் சுமந்து வந்து, மீண்டும் வருமானத்தை ஈட்டித் தரும்வரை—அனைத்துப் பணிகளும் முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிட்டன. இவ்வளவு தீவிரமாக உழைத்ததனால் சிட்னிக்கு உற்சாகம் ஏதும் கூடிவிடவில்லை; அதே சமயம், அவனது போதையும் குறைந்துவிடவில்லை. அந்த இரவை எப்படியோ கடந்துவர, அவன் தன் தலையில் ஈரத் துண்டால் ஒத்தடம் கொடுக்கும் கூடுதல் முயற்சி தேவைப்பட்டது; அந்த ஒத்தடத்திற்கு முன்னதாகவே, அதற்குச் சமமான கூடுதல் அளவு மதுவை அவன் அருந்தியிருந்தான். இப்போது அவன் தன் தலைப்பாகையை உருவி, கடந்த ஆறு மணி நேரமாக அவ்வப்போது நனைத்துக்கொண்டிருந்த நீர் நிறைந்த பாத்திரத்திற்குள் வீசியெறிந்தபோது, ​​அவன் மிகவும் நலிவுற்ற நிலையிலேயே காணப்பட்டான். “அந்த இன்னொரு கிண்ணம் ‘பஞ்ச்’ பானத்தைக் கலந்துகொண்டிருக்கிறாயா?” என்று, தன் கைகளை இடுப்புப் பட்டையில் செருகிக்கொண்டு, தான் மல்லாந்து படுத்திருந்த சோஃபாவிலிருந்து சுற்றிலும் நோக்கியவாறு, பருத்த உடலமைப்பு கொண்ட ஸ்ட்ரைவர் கேட்டார். “கலந்துகொண்டிருக்கிறேன்.” “இப்போது, ​​இதைக் கேள்! உனக்குச் சற்று வியப்பை அளிக்கக்கூடிய—மேலும், வழக்கமாக நீ என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பதைப் போல நான் அவ்வளவு புத்திசாலித்தனமானவன் அல்ல என்று உன்னை நினைக்க வைக்கக்கூடிய—ஒரு விஷயத்தை நான் உன்னிடம் சொல்லப்போகிறேன். நான் திருமணம் செய்துகொள்ள உத்தேசித்துள்ளேன்.” “அப்படியா?” “ஆம். அதுவும் பணத்திற்காக அல்ல. இப்போது நீ என்ன சொல்கிறாய்?” “நான் அதிகம் பேசுவதற்குத் தயாராக இல்லை. அவள் யார்?” “ஊகித்துச் சொல்.” “எனக்கு அவளைத் தெரியுமா?” “ஊகித்துச் சொல்.” “விடியற்காலை ஐந்து மணிக்கு, என் மண்டைக்குள் மூளை வெந்து பொரிந்துகொண்டிருக்கும் இந்த நிலையில் என்னால் எதையும் ஊகித்துச் சொல்ல முடியாது. நான் ஊகித்துச் சொல்ல வேண்டும் என்று நீ விரும்பினால், என்னை இரவு விருந்துக்கு அழைக்க வேண்டும்.” “சரி, அப்படியென்றால் நானே உன்னிடம் சொல்கிறேன்,” என்று கூறியவாறே, ஸ்ட்ரைவர் மெதுவாக எழுந்து அமர்ந்தார். “சிட்னி, நான் சொல்வதை உனக்குப் புரியவைக்க முடியுமா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது; ஏனென்றால், நீ ஒரு உணர்ச்சியற்ற முரட்டுப் பிராணி.” “அப்படியென்றால் நீயோ,” என்று ‘பஞ்ச்’ பானத்தைக் கலப்பதில் மும்முரமாக இருந்த சிட்னி பதிலளித்தான், “மிகவும் உணர்ச்சிமிக்க, கவித்துவமான ஆன்மாவைக் கொண்டவர் போலும்—” “போதும் நிறுத்து!” ஸ்ட்ரைவர் பெருமையுடன் சிரித்தவாறே மறுமொழி கூறினார்: “நான் காதல் உணர்வின் வடிவமாகத் திகழ்வதாக எந்த உரிமையையும் கோரவில்லை என்றாலும் (ஏனெனில், எனக்கு அதைவிடச் சிறந்த புரிதல் இருப்பதாக நம்புகிறேன்), நான் உன்னைவிட மென்மையான இயல்புடைய ஒருவன்.” “நீ அதிர்ஷ்டசாலி என்று சொல்ல வருகிறாயா?” “நான் அதைச் சொல்லவில்லை. நான் என்ன சொல்ல வருகிறேனென்றால், நான் இன்னும் அதிக… அதிக…” “நீ சொல்ல வந்ததைச் சொல்லிவிடு—‘வீராவேசம்’ என்றே வைத்துக்கொள்,” என்று கார்டன் இடைமறித்துச் சொன்னார். “சரி! நான் ‘வீராவேசம்’ என்றே வைத்துக்கொள்கிறேன். என் கருத்து என்னவென்றால்,” என்று ஸ்ட்ரைவர் தன் நண்பரைப் பார்த்து மார்பை நிமிர்த்திக்கொண்டே கூறினார், “பெண்களின் மத்தியில், உன்னைவிட நான் மிகவும் இணக்கமானவனாக நடந்துகொள்ள விரும்புகிறேன்; அதற்காக அதிக முயற்சி எடுக்கிறேன்; எப்படி இணக்கமாக நடந்துகொள்வது என்பதையும் உன்னைவிடச் சிறப்பாக அறிந்திருக்கிறேன்.” “தொடர்ந்து பேசு,” என்று சிட்னி கார்டன் கூறினார். “இல்லை; ஆனால் நான் தொடர்ந்து பேசுவதற்கு முன்,” என்று ஸ்ட்ரைவர் தன் வழக்கமான மிரட்டும் பாணியில் தலையை ஆட்டியவாறே கூறினார், “நான் உன்னிடம் இதைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். டாக்டர் மனெட்டின் வீட்டிற்கு நீயும் என்னைப் போலவே, அல்லது என்னைவிடவே அதிகமாகச் சென்றிருக்கிறாய். ஏன், அங்கே நீ நடந்துகொண்ட அந்த முகச்சுளிப்பு மிகுந்த போக்கைக் கண்டு நான் வெட்கப்பட்டிருக்கிறேன்! உன் நடத்தை மிகவும் அமைதியாகவும், கடுகடுப்பாகவும், ஏதோ தவறு செய்தவனைப் போலவும் இருந்தது; என் உயிரின் மீதும் ஆன்மாவின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன், சிட்னி—உன்னைக் கண்டு நான் மிகவும் வெட்கப்பட்டேன்!” “வழக்கறிஞர் தொழிலில் இருக்கும் உன்னைப் போன்ற ஒருவனுக்கு, எதையாவது நினைத்து வெட்கப்படுவது மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும்,” என்று சிட்னி பதிலளித்தார்; “அதற்காக நீ எனக்கு மிகவும் கடமைப்பட்டிருக்க வேண்டும்.”

    “நீ அவ்வளவு எளிதாகத் தப்பித்துவிட முடியாது,” என்று ஸ்ட்ரைவர் பதிலளித்தார்; அந்தப் பதிலைத் தன் தோளில் சுமந்து கொண்டு, சற்றே ஆக்ரோஷமாக அவர் சிட்னியை நோக்கினார். “இல்லை சிட்னி, உனக்குச் சொல்வது என் கடமை—அதுவும் உனக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதற்காகவே உன் முகத்திற்கு நேராகச் சொல்கிறேன்—அந்த வகையான சமூகச் சூழலில் நீ மிகவும் முரட்டுத்தனமான, பொருத்தமற்ற ஒரு ஆளாக இருக்கிறாய். நீ ஒரு விரும்பத்தகாத நபர்.” சிட்னி தான் தயாரித்திருந்த ‘பஞ்ச்’ பானத்தை ஒரு முழு கோப்பை அளவு குடித்துவிட்டுச் சிரித்தான். “என்னைப்பார்!” என்று கூறிய ஸ்ட்ரைவர், தன் உடலை நிமிர்த்தி கம்பீரமாக நின்றார். “பொருளாதார ரீதியாக நான் அதிக சுதந்திரத்துடன் இருப்பதால், உன்னைப் போல மற்றவர்களுக்குப் பிடித்தமானவனாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்குக் குறைவுதான். அப்படியிருந்தும் நான் ஏன் அதைச் செய்கிறேன்?” “நீ அப்படிச் செய்வதை நான் இதுவரை பார்த்ததே இல்லை,” என்று கார்டன் முணுமுணுத்தான். “நான் அதைச் செய்வது ஒரு ராஜதந்திரம் என்பதால்தான்; ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே நான் அதைச் செய்கிறேன். அதோ என்னைப் பார்! நான் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.” “உன் திருமணத் திட்டங்களைப் பற்றிய பேச்சில் மட்டும் நீ முன்னேறவே இல்லை,” என்று கார்டன் சற்றும் கவலையற்ற பாவனையில் பதிலளித்தான். “நீ அந்த விஷயத்திலேயே கவனம் செலுத்துமாறு நான் விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை—நான் திருத்தவே முடியாத ஒருவன் என்பதை நீ ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டாயா?” அவன் அந்தக் கேள்வியை ஒருவித இகழ்ச்சி கலந்த பாவனையுடன் கேட்டான். “நீ திருத்தவே முடியாதவனாக இருப்பதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை,” என்று அவனது நண்பன் பதிலளித்தான்; அந்தப் பதில் சற்றும் இதமான தொனியில் அமையவில்லை. “நான் எதற்காகவும் இருக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது,” என்று சிட்னி கார்டன் கூறினான். “அந்தப் பெண்மணி யார்?” “இப்போது, ​​நான் அந்தப் பெயரைக் குறிப்பிடும்போது நீ சங்கடப்படக் கூடாது சிட்னி,” என்று திரு. ஸ்ட்ரைவர் கூறினார்; தான் வெளியிடவிருக்கும் அந்தத் தகவலுக்கு அவனைத் தயார்படுத்தும் விதமாக, அவர் செயற்கையானதொரு நட்புறவை வெளிப்படுத்தினார். “ஏனென்றால், நீ வாயால் சொல்வதில் பாதி விஷயங்களை நீ மனதார விரும்புவதில்லை என்பது எனக்குத் தெரியும்; அப்படியே நீ சொன்ன அனைத்தையும் மனதார விரும்பியிருந்தாலும், அதனால் எந்த முக்கியத்துவமும் இருக்கப்போவதில்லை. நான் இந்தச் சிறிய முன்னுரையைச் சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், ஒருமுறை நீ அந்த இளம் பெண்மணியைப் பற்றி என்னிடம் இகழ்ச்சியான சொற்களால் குறிப்பிட்டிருந்தாய்.” “நானா?” “நிச்சயமாக; அதுவும் இதே அறையில்தான்.” சிட்னி கார்டன் தன் கையில் இருந்த ‘பஞ்ச்’ பானத்தைப் பார்த்தான்; பிறகு தன் சுயதிருப்தியுடன் அமர்ந்திருந்த நண்பனைப் பார்த்தான். அவன் அந்தப் பானத்தைக் குடித்தான்; மீண்டும் தன் நண்பனைப் பார்த்தான். “அந்த இளம் பெண்ணை நீ ஒரு ‘பொன்னிறக் கூந்தல் பொம்மை’ என்று குறிப்பிட்டாய். அந்த இளம் பெண் தான் மிஸ் மனெட். சிட்னி, உனக்கு அந்த விஷயத்தில் ஏதேனும் உணர்வுநுட்பமோ அல்லது மென்மையான மனப்பாங்கோ இருந்திருந்தால், நீ அத்தகைய அடைமொழியைப் பயன்படுத்தியதற்காக நான் சற்று வருத்தப்பட்டிருப்பேன்; ஆனால் உன்னிடம் அது இல்லை. அந்த உணர்வே உன்னிடம் அறவே இல்லை; எனவே, அந்தச் சொற்றொடரைப் பற்றி நான் நினைக்கும்போது எனக்குச் சிறிதும் எரிச்சல் ஏற்படுவதில்லை. ஓவிய ரசனை இல்லாத ஒருவன் என் ஓவியத்தைப் பற்றித் தெரிவிக்கும் கருத்தையோ, அல்லது இசை ஞானம் இல்லாத ஒருவன் என் இசையைப் பற்றிச் சொல்லும் அபிப்பிராயத்தையோ கேட்டு நான் எப்படி எரிச்சலடைய மாட்டேனோ, அதேபோலத்தான் இதுவும்.” சிட்னி கார்டன் மிக வேகமாக அந்தப் பஞ்ச் பானத்தைப் பருகினான்; தன் நண்பனையே உற்றுநோக்கியவாறு, கோப்பைகளை நிரப்பி நிரப்பி மடமடவென்று குடித்தான். “இப்போது உனக்கு எல்லா விவரங்களும் தெரிந்துவிட்டது, சிட்,” என்றார் திரு. ஸ்ட்ரைவர். “எனக்குப் பணத்தைப் பற்றிய கவலையில்லை; அவள் மிகவும் வசீகரமான ஒரு பெண். என் மனதிற்குப் பிடித்ததைச் செய்துகொள்ள நான் முடிவு செய்துவிட்டேன்; மொத்தத்தில், என் விருப்பப்படி நடந்துகொள்ளும் அளவுக்கு என்னிடம் வசதி இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அவளுக்குக் கணவனாகக் கிடைக்கப்போகும் நான், ஏற்கனவே நல்ல வசதியுடன் இருப்பவன்; மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் ஒருவன்; சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தைப் பெற்றிருப்பவன். இது அவளுக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பே என்றாலும், அத்தகைய நல்வாய்ப்பைப் பெறுவதற்கு அவள் முழுத் தகுதி வாய்ந்தவள். உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?” பஞ்ச் பானத்தைத் தொடர்ந்து பருகிக்கொண்டே கார்டன் பதிலளித்தான்: “நான் ஏன் ஆச்சரியப்பட வேண்டும்?” “நீ இதை அங்கீகரிக்கிறாயா?” பஞ்ச் பானத்தைத் தொடர்ந்து பருகிக்கொண்டே கார்டன் மீண்டும் பதிலளித்தான்: “நான் ஏன் இதை அங்கீகரிக்காமல் இருக்க வேண்டும்?” “சரி!” என்றார் அவருடைய நண்பர் ஸ்ட்ரைவர். “நான் எதிர்பார்த்ததைவிட நீ இதை மிகவும் இயல்பாக எடுத்துக்கொள்கிறாய்; என் விஷயத்தில் நீ இவ்வளவு பணத்தாசை இல்லாமல் நடந்துகொள்வாய் என்று நான் நினைக்கவில்லை. என்றாலும், உன் பழைய நண்பன் மிகவும் உறுதியான மன உறுதி கொண்டவன் என்பது உனக்கு இந்நேரம் நன்றாகவே தெரிந்திருக்கும். ஆம், சிட்னி, ஒரே மாதிரியான இந்த வாழ்க்கை முறையே எனக்குப் போதும் என்றாகிவிட்டது; இதிலிருந்து மாறுபட்டுச் செல்ல எனக்கு வேறு வழியும் இல்லை. ஒருவனுக்குத் தன் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எழும்போது, ​​அவனுக்குச் சொந்தமாக ஒரு வீடு இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்று நான் உணர்கிறேன் (அவனுக்கு விருப்பம் இல்லாதபோது, ​​அவன் வீட்டிற்குச் செல்லாமல் வெளியிலேயே இருந்துவிடலாம் அல்லவா?). மேலும், மிஸ் மனெட் எந்தச் சூழலிலும், எந்த அந்தஸ்திலும் மிகச் சிறப்பாகப் பொருந்திப்போவாள் என்றும், எப்போதும் எனக்குப் பெருமை சேர்ப்பவளாகவே திகழ்வாள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.”

    ஆக, நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இப்போது, சிட்னி, நண்பா, உன் எதிர்காலத்தைப் பற்றி உன்னிடம் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். நீ ஒரு மோசமான நிலையில் இருக்கிறாய், உனக்குத் தெரியுமல்லவா; நீ உண்மையிலேயே ஒரு மோசமான நிலையில் இருக்கிறாய். உனக்குப் பணத்தின் மதிப்பு தெரியாது, நீ ஆடம்பரமாக வாழ்கிறாய், என்றாவது ஒரு நாள் நீ நோய்வாய்ப்பட்டு ஏழையாகி விடுவாய்; நீ கண்டிப்பாக ஒரு செவிலியரைப் பற்றி யோசிக்க வேண்டும்.” அவன் அதைச் சொன்ன அந்த மிதமிஞ்சிய ஆதரவு தொனி, அவனை இருந்ததை விட இரண்டு மடங்கு பெரியவனாகவும், நான்கு மடங்கு வெறுக்கத்தக்கவனாகவும் காட்டியது. “இப்போது, நான் உனக்கு ஒரு யோசனை சொல்கிறேன்,” என்று ஸ்ட்ரைவர் தொடர்ந்தான், “இதை நேருக்கு நேர் பார். நான் இதை என் வேறு வழியில் நேருக்கு நேர் பார்த்திருக்கிறேன்; நீயும், உன் வேறு வழியில் இதை நேருக்கு நேர் பார். திருமணம் செய்துகொள். உன்னைக் கவனித்துக்கொள்ள ஒருவரை ஏற்பாடு செய். உனக்குப் பெண்கள் சமூகத்தில் எந்த அனுபவமும் இல்லை, அதைப் பற்றிய புரிதலும் இல்லை, அதற்கான சாமர்த்தியமும் இல்லை என்பதைப் பற்றிக் கவலைப்படாதே. யாரையாவது கண்டுபிடி. கொஞ்சம் சொத்து உள்ள ஒரு மரியாதைக்குரிய பெண்ணைக் கண்டுபிடி—வீட்டு உரிமையாளர் அல்லது தங்கும் விடுதி நடத்துபவர் போன்ற ஒருவரை—வருங்காலத்திற்காக அவளைத் திருமணம் செய்துகொள்.” உனக்கு இது மாதிரிதான். இப்போது யோசித்துப் பார், சிட்னி.” “யோசிக்கிறேன்,” என்றான் சிட்னி.

    Share
  • மோட்டார் சைக்கிள் எண் 4474 (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    “இன்றும் மற்றுமொரு நாளே” என்பதால் காலை எட்டு மணி அளவில் காந்தி ரோட்டில் மக்கள் கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் எதிர் காலக் கனவுகளைச் சுமந்து கொண்டிருந்த  எதிர்காலத் தலைமுறைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பள்ளிக்கும் பின் பணியிடத்திற்கும் அரக்க பரக்க விரைந்து கொண்டிருந்தனர்.

    எழுபது வயது விஜய் வழக்கம்போல் திரு.வி.க. பூங்காவில் நடைப் பயிற்சியில் இருந்தார், விரைவில் தன் வாழ்க்கையில் ஒரு கொலை வழக்கு நுழையும் என்பதையறியாமல்.

    மனிதர்களை அவதானிப்பது விஜய்க்கு ஒரு தலையாய கடமை, ஒவ்வொரு மனிதர்க்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதால். அப்படித்தான் அந்த முப்பத்தி ஐந்து வயது ஜோடி நடைப்பயிற்சி செய்வதை கவனித்துக் கொண்டிருந்தார். அது ஒரு இயல்பான திருமண தம்பதி போல் தெரியவில்லை. கணவன், மனைவி என்றால் அவர்களுக்குள்ளே ஒரு சகஜத்தன்மை, அன்னியோன்யம், சற்றே சோம்பல் கலந்த டுகெதர்நெஸ், அதீத இனிப்பு சாப்பிட்டு திகட்டிப் போன அலுப்பு கலந்த நிறையுணர்வு, எல்லாம் இருக்கும். பொதுவெளியில் மிகவும் ஒட்டியும் இருக்க மாட்டார்கள்; எட்டியும் இருக்க மாட்டார்கள்.

    அந்த ஜோடியின்  நடவடிக்கை செய்தித் தாளில் வரும் கள்ளக்காதல் ஜோடியின் ஆரம்ப நிலையாக அவருக்கு புலப்பட்டது. லோஹிப் சாரீயுடன் பாதி முதுகு தெரியும் ரவிக்கையணிந்த அந்தப் பெண்ணை  நெருங்கியும் விலக்கியும் நடந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். அவரிடம் ஓவர்-என்துசியாசம் எனப்படும் என்டார்பின் எனர்ஜி சுரந்து கொண்டேயிருந்தது.

    அவர் கண்களில் “அடைந்தால் மகாதேவி; அடையாவிட்டால் மரணதேவி” காமம்;

    அவள் அதை சில நேரங்களில் ஏற்றும் மறுத்தும் விரும்பியும் விலகியும் அவரோடு நடந்து கொண்டிருந்தாள் அளவளாவியபடியே.

    வாக்கிங் முடிந்தபின் இருவரும் பூங்காவிற்கு வெளியே வந்து அவரவர் டூவீலர்களை எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு திசையில் சென்று நகர வாழ்க்கையில் கலந்து விட்டனர்.

    அவர்களின்  கூடாநட்பு தினமும் நெருக்கமாகிக் கொண்டே இருந்ததை விஜய்யின் கண்கள் கணித்தன. இது எங்கே கொண்டு போய் விடுமோ என்று கவலைப் பட்டாலும் விஜய் கண்காணிப்பதை நிறுத்தவில்லை.

    இப்போதெல்லாம் அந்த ஜோடி விதவிதமான விலை உயர்ந்த ஆடைகளில் வாக்கிங் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஒரு முறை நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த விஜய்யை அவர்கள் ஓவர் டேக் செய்து  கடந்த போது அவர்கள் அணிந்து இருந்த பெர்ஃப்யூம் ஆளைத் தாக்கியது. தூக்கியது.

    திடீரென்று ஒரு நாள் அவர்கள் வாக்கிங்  வருவது நின்று போனது. ஒருக்கால் அவர்கள் வீட்டில் தெரிந்து விட்டதோ, என்று நினைத்த விஜய் வழக்கம்போல் வாக்கிங் வந்து சென்று கொண்டிருந்தார்.

    சில நாட்கள் சென்று வழக்கம்போல் வீட்டிலிருந்து பூங்காவிற்கு நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று அந்த ஜோடி “உமா ஸ்டோர்ஸ்” தாண்டி தெருக்கோடியில் இருக்கும் “பாரதி பூங்கா”வை நோக்கி அவன் இடுப்பில் இவள் கை அணைத்திருக்க கூந்தல் முதுகில் இல்லாமல் முன்னே இருக்க  முக்கால் முதுகும் தெரியும் வண்ணம் ஒரு மோட்டார் சைக்கிளில்  விரைந்து கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார் விஜய்.

    அந்த வண்டியின் ரிஜிஸ்டிரேசன் நம்பர் 4474. கல்லூரியில் படிக்கும்போது அவர் அட்மிஷன் நம்பர் அந்த நம்பர் தான் என்பதால் அது ஏனோ நினைவில் பதிந்தது. பின் தொடர்ந்து சென்ற அவர் அந்த ஜோடி இப்போதெல்லாம்  பாரதி பூங்காவிற்கு வருவதை இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணித்துத்  தெரிந்து கொண்டார்.

    “கர்மம்! கர்மம்! எக்கேடு கெட்டோ தொலையட்டும்” என்று அவர் திரு. வி. க. பூங்காவில் வாக்கிங் செல்வதைத் தொடர்ந்தார்.

    அங்கு தினமும் ஒரு ஆட்டோ வந்து நிற்பதையும் அந்த ஆட்டோ டிரைவர் சிரத்தையில்லாமல் வாக்கிங் என்ற பெயரில் கடமைக்கு சில அடிகள் நடப்பதையும் பூங்காவுக்குள் வந்து செல்லும் மனிதர்களை அந்த டிரைவர் உற்று கவனிப்பதையும் யாரோ ஒருவரின் வரவை எதிர்பார்த்து வரவில்லை என்பதால் பொறுமை இழப்பதையும் விஜய் அவதானித்தார். போதாக்குறைக்கு அந்த ஆட்டோ டிரைவர் அவ்வப்போது மொபைல் ஃபோனி”ல் பேசுவதையும் பேசிய சில நிமிடங்களில் டிரைவர் அங்கிருந்து கிளம்பி செல்வதையும்  விஜய் கவனித்தார்.

    தினம் பூங்காவிற்கு ஆட்டோ டிரைவர் வருகை, கவனிப்பு, கண்காணிப்பு, ஃபோன் பேச்சு என்று சில நாட்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை ஏராளமான துப்பறியும் நாவல்களை வாசித்திருந்த விஜய் கவனிக்கத் தவறவில்லை.

    ஒரு நாள் வாக்கிங் முடிந்து அசதியுடன் இருந்த விஜய் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பார்க் பெஞ்ச்சில்  அமர்ந்திருந்தார். போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவரும் அவர் அருகே வந்து உட்கார்ந்தார்.

    பக்கத்தில் இருப்பது கிழவன் தானே என்று ஆட்டோ டிரைவர் அசால்ட்டாக

    போனில் “அண்ணே! அவங்க ரெண்டு பெரும் இங்க வரலைண்ணே! நானும் நீங்க சொல்றீங்களேன்னு தினம் இங்க வந்து வாட்ச் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கேன்; எனக்கு என்னமோ அவங்க இரண்டு பெரும் வேறு இடத்துக்கு போய்ட்டாங்களோன்னு  தோணுது அண்ணே!” என்று பேசிக் கொண்டிருந்தார்.

    விஜய்க்கு எப்பவுமே வாய் ஜாஸ்தி. அவர் மனைவி கீதா விஜய்யை அவ்வப்போது “ உங்களுக்கு வாய் கிழியறது; “தவளையும் தன் வாயால் கெடும்” என்பது போல் “போற இடத்தில் எல்லாம் பாலிட்டிக்ஸ் அது இதுன்னு வாயைக் கொடுத்து உங்களை கெடுத்துக்காதீங்கோ; காலம் கெட்டுக் கிடக்கு;” என்று அவ்வப்போது அபாய மணி அடிப்பதுண்டு;

    மனுஷன் கேட்டானா?

    டேவிட் பல்டாக்ஸி, டான் பிரவுன், ஜான் க்ரிஷாம், டாம்  க்லான்சி  என்றெல்லாம் ஏகப்பட்ட எழுத்தாளர்களின்  நாவல்களை வாசித்திருந்த விஜய்யின் மனம் ஆட்டோ டிரைவரின் ஃபோன் பேச்சால் குறுகுறுத்தது

    “ஓஹோ! இந்த ஆட்டோ டிரைவர் டெய்லி அவா ரெண்டுபேரையும் வாட்ச் பண்ணாத்தான் வரார் போல் இருக்கு; ஆளை  வச்சு நோட்டம் பாக்கறாப் போல இருக்கு”  என்று முடிவுக்கு வந்தார் விஜய்.

    ஆட்டோ டிரைவர் “தினம் இங்க வரவேண்டியது; வேவு பாக்க வேண்டியது; ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல; நம்ம பொழைப்புதான் வீணாப் போவுது என்று விஜய் காதில் பட அலுத்துக்  கொண்டார்.

    விஜய்யின் வாய்க்குள் இருந்த தவளை துள்ளிக் குதித்தது.

    “என்ன சார் ஏதாவது பிரச்சனையா? என்று ஆட்டோவை வினவினார் விஜய்.

    விஜய் எல்லோரையும் சார் என்று அழைப்பதுதான் வழக்கம்; மனிதர்களோடு பழகும்போது மரியாதை கொடுத்துப் பழக வேண்டும் என்று நினைப்பவர். மரியாதை கொடுப்பது என்பது இலவசம்தானே? காசா; பணமா? மரியாதை கொடுத்து மரியாதை பெறுவது இருவருக்கும் பரவசம்தானே?

    ஆட்டோ டிரைவர், “அதை  ஏன் சார் கேக்குறீங்க; எங்க முதலாளி சம்சாரம் யாரோடோயோ சுத்துறாங்கலாம்; ”கண்டு பிடிங்கடா” ன்னு எங்களுக்கு உத்தரவு போட்டு இருக்கார்; இருக்கற வேலை  பத்தாதுன்னு இது வேற எக்ஸ்ட்ரா தொல்லை’ என்று அலுத்துக்  கொண்டே மொபைல் ஃபோனை திறந்தபோது உள்ளே ஒரு பெண்மணியின் போட்டோ தெரிந்தது அருகிலிருந்த விஜய்க்கு.

    விஜய்யின் “ஷெர்லாக் ஹோம்” கண்கள் அந்த போட்டோவைப் பார்த்து திடுக்கிட்டு “இந்த அம்மா இப்பல்லாம் பாரதி பூங்காவுக்கு தினம் வர்ராங்க” என்றார் மிகப் பெரிய குற்றவாளியை கண்டு பிடித்த திருப்திப் புன்னகையுடன்.

    அறுதிப் பெரும்பான்மை அரசு அமைக்க ஆறு நாட்களாக ஆறு “எம்.எல்.ஏ”க்களுக்காக அலைந்து கொண்டிருந்து இறுதித் தருணத்தில் ஆறும் கிடைத்த  அரசியல்வாதியின் மகிழ்ச்சியை மிஞ்சும் வண்ணம் அந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த அதிர்ச்சியில் கிழவனுக்கு தாங்க்ஸ் சொல்லி விட்டு வெளியே ஓடி ஆட்டோவைக் கிளப்பினார் ஆம்புலன்ஸ் வேகத்தில்.

    நாட்கள் நகர்ந்தன. இப்போது அந்த ஆட்டோ டிரைவர் பூங்காவிற்கு வருவதில்லை. ஒருக்கால் நல்லபடியாகப் பேசி சுமூகமாகப் பிரச்சனையை தீர்த்துக் கொண்டுவிட்டார்கள் போலிருக்கிறது என்று விஜய் திருப்தி பட்டுக் கொண்டார்.

    வாக்கிங் சென்று  வந்த விஜய் ஒரு நாள் “ஷாலிமார் நியூஸ்” பார்த்துக் கொண்டிருந்தபோது “விருகம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி  மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி தூக்கி வீசப்பட்டு  மரணம்”. இருவரும் கணவன் மனைவி இல்லையென்பதால்  இது விபத்தா , கொலையா என்று போலீஸ் புலன் விசாரணை’ என்ற செய்தியுடன் வந்த வீடியோவைப் பார்த்த  விஜய் ஸ்தம்பித்து சாய்ந்து விட்டார் சோபாவில். வீடியோவில் உருக்குலைந்து கிடந்த அந்த மோட்டார் சைக்கிள் எண்  4474. பெண்ணின்முகம் ஆட்டோ டிரைவரின்  போனில் பார்த்த அதே முகம்.

    அன்றிரவு தூக்கம் வரவில்லை விஜய்க்கு. மனைவி கீதாவிடம் சொன்னால் கொன்று  கூறு போட்டு விடுவாள் என்ற பயம் வேறு.

    எவ்வளவோ எடக்கு மடக்கான இடங்களில் எக்குத் தப்பான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தன் புத்திசாலித்தனத்தால் தப்பியவர் விஜய்.

    “டேய் ஆட்டோ! நீ நினைக்கறமாதிரி நான் முட்டாள் கிழவன் இல்லைடா“

    என்று நினைத்துக் கொண்டே படுத்திருந்த  மனிதர்  கடந்த சில நாட்களில் பூங்காவில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

    துப்பறியும் பொறி தட்டி தன் மொபைல் ஃபோனின் போட்டோக்களைத் தேடினார். தேடியது கிடைத்ததால்  நிம்மதி கலந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் உறங்கினார்.

    போலீஸ் அவர் வீட்டுக் கதவை தட்டும் முன் அவரே மறுநாள் காலை விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் சென்று “நடந்தது என்ன” என்பதையெல்லாம் விவரித்தார்.

    போலீஸ் அதிகாரியிடம் ஆதாரத்தையும் காட்டினார்.

    அது ஒரு போட்டோ. தன் நீண்ட நாள் நண்பன் ராஜாராமனுடன் பூங்கா வாசலில் எடுத்துக் கொண்ட செல்ஃபி. அவர்களுக்குப்  பின்னே பளிச்சென்று ரிஜிஸ்டிரேசன் நம்பர் தெரிந்த அந்த ஆட்டோவும் அருகில் அந்த ஆட்டோ டிரைவரும்.

    Share
  • மீண்டும் இணையவழிக் கல்வி

    மீண்டும் இணையவழிக் கல்வி

    முனைவர் திரிவேணி சுப்ரமணியம்
    தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
    கோயம்புத்தூர் – 641014
    மின்னஞ்சல்: venitamil@srcw.ac.in

    “கல்வியைவிடப் பரிசுத்தமான ஒரு பொருளை மனிதன் எங்குமே கண்டறிய இயலாது” – பிளேட்டோ

    தொன்மை காலந்தொட்டுக் கற்றலின் நோக்கமும் வடிவமும் மாறினாலும் கூடக் கல்வியின் முக்கியத்துவமும் மேன்மையும் போற்றப்பட்டு வந்திருக்கிறது. இந்தியக் கல்விமுறையானது மேம்பட்ட ஒன்றாக உலக நாடுகளால் மதிக்கப்பட்டிருந்தது. உலகின் பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்து பயிலும் இடமாக நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது. கணிதவியல், இலக்கணம், தத்துவம், மனையியல், உளவியல் முதலியவை இந்தியக் கல்வியின் தலைசிறந்த கொடைகளாகக் கருதப்பட்டன. பாரம்பரியக் கல்விமுறையில் இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் கல்வி கற்றலின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டன. அதன் மூலம் பலதரப்பட்ட அனுபவங்கள் கிடைக்கும் என்பதால் பயணங்கள் அப்போதைய கல்வியில் முதன்மை இடம் பெற்றிருந்தன.

    ஆரம்பக் கல்வி, உயர் கல்வி எனக் கற்றல் இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தது. கல்வியின் எந்த நிலையிலும் அனுபவங்களும் செயல்வழிக் கற்றலும் முதன்மையானதாக வலியுறுத்தப்பட்டது. கல்வித்துறையில் உலகின் மிகப் பழமையான நாடான இந்தியா தற்போது மிகப் புதுமைக் கூறுகளைத் தன்னகத்தே ஏற்றுக்கொள்ளும் நாடாக விளங்குகிறது.

    கொரோனா பரவல் காரணமாக மக்கள் வாழ்வில் பல இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும் தடைகளைக் கடந்து மாணவர்களைச் சென்றடைய இணையவழிக் கல்வி உதவியது. தற்பொழுது போர் காரணமாக எழுந்திருக்கும் எரிபொர்ள் தட்டுப்பாடென்னும் பெரும் இடர்ப்பாடு மீண்டும் உலகை ஐந்து வருடங்கள் பின்னோக்கித் திருப்புகிறது. மீண்டும் இணைய வழிக் கல்வியை நோக்கித் திரும்புவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இணையவழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவது குறித்த கருதுகோள்கள் அதற்கு முன்னரே இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமற்ற, கற்பனைக்கெட்டாத ஒன்றாகவே கருதப்பட்டது. ஆனால் பெருந்தொற்றுக் காலம், உலகைப் பல்லாயிரம் மைல்கள் தூரத்தை ஒரே தாவலில் கடந்து செல்லத் தள்ளியிருக்கிறது. தற்போது இணையவழிக் கற்றல் நடைமுறைக்கு வந்துவிட்ட சூழலில் இணையவழிக் கற்றலில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாயினும் நன்மைகளும் அதிகம் என்பதை உணர்ந்து இணையவழிக் கற்றலைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள மாணவர்கள் முழுமுனைப்போடு செயல்பட வேண்டும். முழுமையாக இல்லாவிடினும் இணையவழிக் கற்றலை இனி எப்போதும் கைவிடாதிருப்பது கூடுதல் நன்மையாக அமையும்.

    யாதும் ஊரே

    இணையம் உலகிற்குக் கிடைத்த பெரும் கொடை. இதனால் இன்று எந்த ஊரிலிருந்தும் கல்வி, பணி என மக்கள் தங்களது வாழ்வைத் தொடரலாம். இணையமும் அலைபேசியும் பல்கிப் பெருகிவிட்ட தற்காலத்தில் அவற்றை சில தவறுகளுக்காகவும் குறைகளுக்காகவும் முடக்குவதைவிட, ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தக் கற்றுத்தரலாம். நகரமயமாக்கல், கிராமங்கள் மனிதர்களற்றுப் போதல் போன்ற சமூகக் குறைகளை இணையவழிக் கற்றலும் வேலைவாய்ப்பும் நிவர்த்தி செய்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

    இணையவழிக் கற்றலின் காரணமாகக் கல்வியை, அறிவைப் பெற விரும்பும் ஒருவர் தான் விரும்பிய துறையில் திறனடையலாம். வயது வேறுபாடு, இடம், சூழல் போன்ற எந்தத் தடைகளும் அதற்குக் கிடையாது. SWAYAM, NPTEL போன்ற இணையதளங்கள் மட்டுமல்லாது தற்போது குறிப்பிட்ட துறைசார் ஆர்வலர்களால் யூடியூப் கற்றலும் சாத்தியமாகி உள்ளது. இதனால் கற்க விரும்பும் ஒருவர் தான் விரும்பிய துறைகளை, விரும்பிய நேரத்தில் கற்கலாம்.

    நோதலும் தணிதலும்

    இணையவழிக் கற்றலில் சைபர் க்ரைம், தவறான வழிகாட்டுதல், உடல் மற்றும் மனநலச் சீர்கேடுகள் போன்றவை குறித்த அறிவு புகட்டலும் வழிகாட்டுதல்களும் அவற்றைச் சரியாகக் கையாளத் தேவையான பயிற்சிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது. இதுவும் ஒருவகைக் கற்றலேயாகும்.

    கல்வியின் முக்கியக் கூறுகள்

    கற்றவர் – கற்பிப்பவர் – சமூகம் என்ற அமைப்புடையது கல்வி. இம்மூன்று தளங்களிலும் இணையவழிக் கல்வி நன்மை பயக்கக் கூடியதாகும். கற்பவருக்குச் சுதந்திரமும் ஈடுபாடும் தரவல்லதாக ஒலி- ஒளி அமைப்பு, வீடியோக்களுடன் கூடிய இணைய வழிக் கல்வி ஈர்க்கிறது.

    கற்பித்தலில் நன்மைகள்

    கற்பித்தலில் மூன்று படிநிலைகள் உள்ளன.

    1. கற்பித்தல்
    2. மதிப்பீடு
    3. திறன் மேம்பாடு

    கற்பித்தலில் பலவித நன்மை தரும் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இணையவழிக் கற்றல் அமைகிறது. யூடியூப் வீடியோ, படக்கதை, உருக்காட்சிப் பயன்பாடு, படக்கோப்புகள் எனப் பல வகைகளைக் குறிப்பிடலாம்.

    மதிப்பீட்டுக்கு உதவும் இணைய வழித் தளங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. Quizizzes.com, Kahoot.com, google forms போன்றவை வினாக்களை மாற்றித் தருவது, உடனடி மதிப்பீடு, மதிப்பீட்டில் துல்லியம் எனப் பல பயன்களோடு கூடுதலாக மாணவர் ஆர்வத்தைத் தூண்டும் அம்சங்களோடும் அமைந்துள்ளன.

    திறன் மேம்பாடு

    ஒளிப்படங்களை உருவாக்குதல், ஒலி – ஒளிக் கோப்புகளை உள்ளீடு செய்தல் போன்ற செயல்களால் ஒவ்வொரு பாடத்துக்கும் பாட்டு, கதை, உரையாடல் எனச் சுவையான கோப்புகளை உருவாக்க முடியும். அரசுப் பள்ளிகளில் பாடத்திட்டம் இவ்வாறாக வடிவமைக்கப்பட்ட பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதே இதன் நன்மைக்குச் சான்றாகும். கல்லூரிகளில் அல்லது உயர் வகுப்புகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு இத்தகைய கோப்புகளையும் வீடியோக்களையும் அவர்களே உருவாக்க வழிகாட்டும் போது அவர்களுக்குக் கற்றல் இனிமையானதாக அமையும்.

    மீம்ஸ் உருவாக்கமும் காணொளிகளை உருவாக்குவதும் தற்போது மிகப் பிரபலமாகி வருகிறது. பாடம் சார்ந்த மீம்ஸ்களையும் காணொளிகளையும் இசைக்கொர்ப்பு மற்றும் பாடல்களுடன் சேர்த்து மாணவர்களே உருவாக்கினால்  கற்றலில் ஈடுபாடு அதிகமாகும். அவர்களது படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனும் மேற்கூறிய செயல்பாடுகளால் மேம்படும்.

    மனிதமும் கல்வியும் உலகம் முழுமைக்கும் பொதுவானது. அவற்றை எத்தகைய கால இடர்களுக்கும் பலியாக்காமல் காப்பது மனிதர்களாகிய நம் கடமை. நம் தலைமுறையானது பெருந்தொற்று மற்றும் போர்கள் எனப் பல கடினமான சவால்களைக் கண்டும் கடந்தும் வருகிறது. இவற்றால் கிடைக்கும் அனுபவங்களும் மிக வல்லமைமிக்கதாக இருக்கும். எதிர்கால மக்களுக்குப் பொறுப்புள்ளவர்களாகச் சில கடமைகளை மேற்கொள்வதும் சிலவற்றை அத்தியாவசியமானது என இனங்கண்டு கடைபிடிக்க வேண்டியதும் நம் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    கல்வி என்பது உயிரும் உடலும் மனமும் இணைந்த மனிதர்களுக்கானது. அதை உயிரற்ற சுவர்களுக்குள் சம்பிரதாயமான சடங்காக மாற்றாமல் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளதாக, செயல்வழிக் கற்றலாக மாற்றும் போது அறிவானது மாணவர்களின் உள்ளத்தில் இருந்து மலரக் கூடியதாக அமையும். தன்னம்பிக்கையும் சுய சார்பும் பழக்கமாகும். அவர்களின் படைப்பாற்றலையும் சுய சிந்தனையும் மழுங்கடிக்கப்படாமலிருக்க இணையவழிக் கற்றல் பெரிதும் உதவும்.

    விழுந்த இடத்திலேயே வாழ்வதற்கான வல்லமை பெற்று வருவது தானே மனிதனின் மாண்பு. தனக்கான வாழ்வு தேடி வரும் ஒரு விதை போல மனித இனமும் முழு உலகுக்கும் விஸ்வரூபம் எடுத்து எழுந்து நின்று எல்லைகள் கடந்து அறிவால் ஆள இணையவழிக் கற்றலைப் பரவலாக்குவோம்.

    Share
  • விளம்பரத்தில் ஒரு பிழை

    விளம்பரத்தில் ஒரு பிழை

    அண்ணாகண்ணன்

    திருச்சியில் காவேரி மருத்துவமனையின் விளம்பரத்தைப் பல இடங்களில் கண்டேன். படியேறு பாட்டி என்பது ஒரு நல்ல வாசகம். ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் மூட்டுச் சிக்கல் இருந்தாலும் பெண்ணைக் குறிவைத்து இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்கள். ஏனெனில், அப்பாவையும் தாத்தாவையும் விட அம்மாவையும் பாட்டியையும் கூடுதலாகக் கவனிப்பார்கள். அவர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள் என்ற உளவியல் இதன் பின்னே இருப்பதாக நினைக்கிறேன்.

    அதிநவீன VELYS (DePuy Synthes) ரோபோ உள்ள ஒரே மருத்துவமனை என இதில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். அப்படியா என்று கூகுளிடம் கேட்டேன். வேறு பல மருத்துவமனைகளில் இந்த வசதி உள்ளது எனத் தெரிகிறது.

    இதர மருத்துவமனைகள் கூட இதைக் கேள்வி கேட்கவில்லையா? எங்களிடம் இந்த வசதி உள்ளது என்று கூறலாம். எங்களிடம் மட்டுமே உள்ளது என்று கூறக் கூடாது.

    இதைப் போன்றே ஒரு துறையில் உள்ள பல நிறுவனங்களும் (பத்திரிகைகள் உள்பட) நாங்களே நம்பர் ஒன் என விளம்பரப்படுத்துகிறார்கள். இவற்றை யாருமே சரிபார்ப்பதோ, சுட்டிக் காட்டுவதோ இல்லை. விளம்பரங்களுக்கும் உண்மை சரிபார்ப்பும் தணிக்கையும் தேவை.

    Share
  • டெலிபிராம்ப்டர் என்கிற உரைத்திரை

    டெலிபிராம்ப்டர் என்கிற உரைத்திரை

    அண்ணாகண்ணன்

    சட்டப் பேரவையில் நான் கவனித்த ஒன்று.

    பேரவைத் தலைவர், தற்காலிகப் பேரவைத் தலைவர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் எழுதி வைத்தே படித்தார்கள். பிரேமலதா உள்ளிட்ட சிலரே நேரடியாகப் பேசினார்கள். நேரடியாகப் பேசுவோரும் கையில் குறிப்புகள் வைத்திருப்பது வழக்கம்.

    திரைப்படப் படப்பிடிப்புகளில் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் முன்னரே எழுதிய பிறகே படப்பிடிப்புக்குச் செல்வார்கள். வெகு சிலர், அந்த இடத்தில் எழுதி அல்லது பேசி வசனத்தைச் சொல்வார்கள். கதையைக் கூடத் திடீரென மாற்றுவோர் உண்டு. இதனால் தேவையற்ற தாமதங்களும் விரயங்களும் ஏற்படும். எழுத்தாளர் முழுவதும் எழுதி முடித்துவிட்டால், திரைப்பட இயக்குநரின் பணி 90 சதம் முடிந்துவிட்டது என்ற ஹரால்டு ராமிஸின் கூற்று புகழ்பெற்றது.

    எழுதிப் படிப்பதன் பின்னுள்ள இன்னோர் உண்மை, இக்காலக் கல்விச் சூழலும் தொழில்நுட்பக் கருவிககளின் வளர்ச்சியும். முன்னர், அனைத்தையும் மனப்பாடம் செய்வது ஒன்றே வழியாக இருந்தது. கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்றவற்றை எழுத்தெண்ணிக் கற்றவர்கள் எனச் சிலரைப் பாராட்டுவார்கள். அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒவ்வோர் எழுத்தும் அவர்களின் நினைவில் இருக்கும். மடமடவென்று இவற்றைச் சொல்லியே பெரும் புலவர் என்ற பெயரைப் பெற்றார்கள். உண்மையில் இவை அனைத்தின் பின்னும் இருந்தது, அவர்களின் மனப்பாடத் திறனே. இப்படிக் கற்றதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வாய்மொழியாகவே கற்பித்தார்கள். இப்படித்தான் முற்றோதல், பஜனை, தொடர் சொற்பொழிவு உள்ளிட்டவை முகிழ்த்தன.

    அச்சுக் கருவிகளைக் கண்டுபிடித்த பிறகு, புத்தகங்கள் எளிதாகக் கிடைக்கத் தொடங்கின. நூலகங்கள் உருவாகின. ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்களை வைத்துக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இவற்றை மனப்பாடம் செய்யாமல், புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவானது. எனவே, பெரும் புலவர்கள் கூட, நூறு, இருநூறு பாடல்களுடன் தங்கள் புலமையைச் சுருக்கிக்கொண்டார்கள்.

    கணக்கில் கால்குலேட்டர் வந்ததும் மனக்கணக்கு பெரும்பாலும் மறைந்துவிட்டது. சிறிய கணக்குகளையும் அதன் வழியாக போடத் தொடங்கினோம். ஒரு தொலைபேசி எண்ணைக் கூட நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.

    கணிப்பொறி, செல்பேசி, இணையம் வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமானது. நூலகத்திற்குச் சென்று தேடி எடுக்கும் சிக்கலும் இல்லை. ஒரு சொடுக்கில் அனைத்தும் நம் விரல் நுனிக்கு வந்து சேர்ந்தது. இப்போது எழுதும் தேவையும் குறைந்து வருகிறது. நாம் பேசினாலே கணிப்பொறி தானாகவே எழுதிக்கொள்ளும். செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு, நாம் எழுதியதை அதுவே மேம்படுத்தித் தரும். இப்போது நாம் எழுதவும் பேசவும் தேவையில்லை. என்ன வேண்டும், எப்படி வேண்டும் என்று குறிப்பாகக் கட்டளை இட்டால் போதும். அதுவே இடத்துக்கு ஏற்ப எழுதிக் கொடுத்துவிடும். அதே எழுத்தைப் பேச்சாகவும் கொடுத்துவிடும்.

    இந்தச் சூழலில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் வெகுசிலர் மட்டுமே தானாகப் பேசுவதற்கும் வெகுநேரம் பேசுவதற்கும் உடனுக்குடன் பேசுவதற்கும் உரிய ஆற்றலைப் பெற்றவர்கள். இப்போது வெகுநேரம் பேசுவதற்கான தேவையும் குறைந்துவிட்டது. அப்படிப் பேசினால், கேட்பதற்கும் பலருக்குப் பொறுமை இல்லை. இந்த மனப்பாட மாற்றம் என்பது, ஒரு தலைமுறைக்கான இயல்பு. இதை நாம் புரிந்துகொண்டால், அதை வைத்து ஒருவரின் திறனை நாம் மதிப்பிட மாட்டோம்.

    டெலிபிராம்ப்டர் என ஒரு கருவி உள்ளது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்கள், இதைப் பார்த்தே செய்தி வாசிக்கிறார்கள். உலகம் முழுவதும் பெரும் தலைவர்கள், இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் முன்னால் உள்ள திரையில், அவர்கள் தயாரித்த பேச்சின் எழுத்து வடிவம் தோன்றும். ஆனால், அந்தக் கருவி மக்களுக்குத் தெரியாது. அவர்கள் மக்களைப் பார்த்துப் பேசுவது போலவே இருக்கும். ஆனால், ஒவ்வொரு சொல்லையும் அதிலிருந்தே படிப்பார்கள்.

    தமிழ்நாட்டு அரசியலில் டெலிபிராம்ப்டரை அறிமுகப்படுத்தினால், இந்தச் சிக்கல் தீரும். பேச்சாளர், அவையைப் பார்த்துப் பேசலாம். ஆனால், அவருடைய பேச்சு முழுவதும் திரையில் தோன்றும். இப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். துண்டுச் சீட்டுக்கும் தேவையில்லை. என்ன, முன்னதாகவே பேச்சைத் தயாரிக்க வேண்டியது அவசியம்.

    இதற்கும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவும். அவையில் உறுப்பினர் ஒருவர் ஒரு தரவைச் சொல்கிறார் என்றால், உடனடியாக அதைச் சரிபார்க்க முடியும். அதில் ஏதும் பிழை இருந்தால் உடனடியாகச் சுட்டிக் காட்ட முடியும். நாம் சொல்லும் தகவலுக்கும் உடனடியாக ஆதாரங்களைத் தர முடியும்.

    எனவே தமிழக அரசியலுக்கு இப்போது உடனடித் தேவை, டெலிபிராம்ப்டர் என்கிற உரைத்திரையும் செயற்கை நுண்ணறிவும்.

    Share
  • ரகசியக் காப்பு உறுதிமொழியில் ஒரு பிழை

    ரகசியக் காப்பு உறுதிமொழியில் ஒரு பிழை

    அண்ணாகண்ணன்

    முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஏற்றுள்ள ரகசியக் காப்பு உறுதிமொழியில் ஒரு பிழை உள்ளது.

    இதன் ஆங்கில வடிவம்

    Form of oath of secrecy for the Chief Minister:

    “I, A.B., do swear in the name of God / solemnly affirm, that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as the Chief Minister for the state of Tamil Nadu, except as may be required for the due discharge of my duties as the Chief Minister.”

    இப்போதுள்ள தமிழ் வடிவம்:

    நான், தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு வருவதும் அல்லது எனக்குத் தெரியவருவதுமான எந்த ஒரு பொருளையும், முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்றத் தேவையான அளவுக்கன்றி, ஒருவரிடமோ அல்லது பலரிடமோ நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவிக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.”

    ஆங்கிலத்தில் உள்ள matter என்பதைத் தமிழில் பொருள் எனப் பெயர்த்திருக்கிறார்கள்.

    பொருள் என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உள்ளன. அர்த்தம், பணம், பொருண்மம், சடப் பொருள், பருப்பொருள், உட்பொருள், மறைபொருள்… என ஏராளமான அர்த்தங்கள் உள்ளன. இதில் எந்தப் பொருளை அவர்கள் சொல்கிறார்கள் என்பது இந்தச் சொல்லாட்சியில் கூர்மையாக இல்லை.

    ரகசியக் காப்பு உறுதிமொழியில் உள்ள matter என்பது, விஷயத்தைக் குறிக்கிறது. கூகுள் கூட இதை எவ்விஷயத்தையும் என்றே மொழிபெயர்க்கிறது. இதைச் செய்தி என்றும் சொல்லலாம். ஆனால், News என்ற பொருள் அதற்கு ஏற்கெனவே உள்ளது. தகவல், விவரம் என்று கூறலாம். ஆனால், விஷயம், விவரம் ஆகியவை தமிழ்ச் சொற்கள் இல்லை. தகவல் என்பது தமிழா என்று ஆராய வேண்டும். ஆனால், தரவு என்ற சொல், டேட்டாவைக் குறிக்கிறது. ரகசியக் காப்பில் உள்ள மேட்டர் என்பது ஒரு வகையான டேட்டா. எனவே இதைத் தரவு என்றே குறிப்பிடலாம்.

    விஜய்க்கு முன்னதாகப் பொறுப்பேற்ற முந்தைய முதலமைச்சர்களின் ரகசியக் காப்பு உறுதிமொழியையும் கவனித்தேன். அவர்களும் மேட்டரைப் பொருள் என்றே சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பொருளைத் தரவு என்று மாற்றுவது பொருத்தமாக இருக்கும்.

    இவ்வளவும் சொல்லிவிட்டு ரகசியக் காப்பில் ரகசியம் என்பது மட்டும் தமிழா என்றும் நீங்கள் கேட்கலாம். அது தமிழில்லை. அதைக் கமுக்கம் எனத் தமிழில் அழைக்கிறோம். கமுக்கக் காப்பு உறுதிமொழி அல்லது தரவுக் காப்பு உறுதிமொழி என இனி அழைக்கலாம். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி என்பதை நிலைநாட்ட, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தலாம்.

    #vijay #cmvijay #tvk #tamil #tamilnadu #swornin #oath #terminology

    Share
  • விஜய் எனும் சாதனையாளன்

    விஜய் எனும் சாதனையாளன்

    அண்ணாகண்ணன்

    ஏனெனில்
    ஓய்வுக்குப் பிறகு இல்லை, உச்சத்தில் இருக்கும்போதே நீ அரசியலுக்கு வந்தாய்

    ஏனெனில்
    கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நீ ஆட்சியைப் பிடித்தாய்

    ஏனெனில்
    மாறி மாறி அமைந்த 59 ஆண்டுக்கால திராவிட ஆட்சியை நீ அகற்றினாய்

    ஏனெனில்
    தனித்து நின்று, ஒன்றே முக்கால் கோடி வாக்குகளை நீ பெற்றாய்

    ஏனெனில்
    வாக்குக்குப் பணம் கொடுத்து வெல்லும் பார்முலாக்களை நீ தூக்கி எறிந்தாய்

    ஏனெனில்
    த.வெ.க. வேட்பாளராகப் பல்வேறு சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றி பெற வைத்தாய்

    ஏனெனில்
    பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்தாய்

    ஏனெனில்
    இளைஞர்களை நீ முன்னிறுத்தினாய். த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களில் 23 பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள்

    ஏனெனில்
    அரசியல் பொதுக்கூட்டம், மாநாடு, பரப்புரை ஆகிய அனைத்தையும் குறுகிய நேரத்தில் நிகழ்த்தினாய். இதன் மூலம் புதியதொரு விதி செய்தாய்

    ஏனெனில்
    உன் மதத்தை நீ மறைக்கவில்லை. நான் ஜோசப் விஜய் என்று வெளிப்படையாகச் சொன்னாய்

    ஏனெனில்
    எளிய திரைப்பட ரசிகர்களை நீ அரசியல்மயப்படுத்தினாய்

    ஏனெனில்
    வாக்குரிமை இல்லாத குழந்தைகள் மனத்தையும் நீ வெற்றி கொண்டாய்

    ஏனெனில்
    மக்களின் நம்பிக்கையாக, மாற்றத்தின் அடையாளமாக நீயே இருக்கிறாய்

     

    Share
  • எரிமலை (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    காந்தி ரோடு, திரு.வி.க. பூங்காவில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து கொண்டு சுற்றிலும் உள்ள மனிதர்களை வழக்கம்போல் அவதானித்துக் கொண்டிருந்தார் எழுபது வயது விஜய்.

    சாத்வீகம் ததும்பும் ஒரு மனிதனின் கோர முகத்தை அன்று பார்க்கப் போகிறோம் என்பதையறியாமல்.

    ரிடையர்ட் ஆகியும் இன்னும் இன்றும் அதே வாத்தியாரம்மா தோரணையில் பேசும், நடக்கும் முன்னாள் ஆசிரியை; “ஆறுமாசம் அமெரிக்கா ஆறுமாசம் இந்தியா” என்று காலம் தள்ளும் அறுபது வயது அருண்குமார்; கையில் ஒரு பையுடன் தவறாது நூலகம் வந்து பத்திரிக்கைகள் வாசிக்கும் வளையாத முழங்காலில் பேண்டேஜ் போட்ட முத்துசாமி; என்று மனிதரில் எத்தனையோ நிறங்கள்;

    வலது பக்கம் “ஷியாமளா  டவர்ஸ்” அடுக்குமாடி வீடுகளில் இருந்து பரபரப்புடன் “பைக்”கில்  பறக்கும் இன்போசிஸ் இளைஞன்; வெய்யில், புழுதி மற்றும் காமக் கண்களிருந்து தப்பிக்க தீவிரவாதி போல உடலெல்லாம் உடையால் மறைத்துக்கொண்டு அவசரகதியில் “ஆக்டிவா” வில் அதிரடியாகக் கிளம்பும் மத்தியதரக் குடும்பப் பெண்மணி; என்று மனிதர்களின் வாழ்க்கைத் தேடல்களை கவனித்துக் கொண்டிருந்தார் விஜய் உடற் பயிற்சியுடன்.

    அரக்கு நிற “ஹ்யூண்டாய்” கார்  அபார்ட்மெண்ட் பார்க்கிங்கிலிருந்து  வீதிக்கு  வந்தவுடன், நெற்றியில் பளிச்சிடும் விபூதியுடன் இரண்டு பையன்கள் துள்ளிக் குதித்து ஏறிக் கொண்டவுடன் அவர்களது தந்தை அவர்களை ஸ்கூல்லில் டிராப் செய்துவிட்டு எங்கேயோ இருக்கும் அவரது அலுவலகம் செல்வது விஜய் அன்றாடம் கவனிக்கும் ஒரு நிகழ்வு.

    பூஜை முடித்த கையோடு பளபளக்கும் சந்தனம் குங்குமம்,அணிந்த அந்த நடுத்தர வயது எக்ஸிக்யூடிவ் அப்பாவின் நெற்றியில் விபூதியை விஞ்சும் கவலை ரேகைகள். இளைய மகன் வந்து காரின் முன்பக்கம் வழக்கம்போல் “பிராம்ப்ட்”டாக உட்கார்ந்து கொண்டாலும் பெரிய வகுப்பு படிக்கும் மூத்த பையன் இன்று லேட்.

    இவர்களை பள்ளியில் விட்டு விட்டு  ஆக்ஸிஜன் இல்லா ஆற்காடு ரோடு டிராஃபிக்கில் தட்டுதடுமாறி மேடு பள்ளங்களில் ஊர்ந்து சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டுமே என்ற “கூகிள் மேப்” கவலை அவர் முகத்தில்.

    நேரம் ஆக ஆக, வெயிட்டிங் எரிமலை வெடிக்கத்  தயாரானது.

    அன்றைய தினம் ஸ்கூல் யூனிஃபார்ம் ஒயிட் & ஒயிட் டிரஸ் கோடு என்பதாலோ என்னவோ  மூத்த மகன் ஒரு ஒயிட் சாக்ஸ் கிடைத்து, இன்னொரு சாக்ஸ் கண்டுபிடித்து போட்டுக் கொண்டு வருவதற்கு நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. (அந்தக் காலத்தில் “சங்கர்லால் வந்து விட்டார்” நாவல் ஆசிரியர் தமிழ்வாணன்  “சாக்ஸ்”சை  நடையன் என்று  மொழி பெயர்த்திருப்பார்.)

    “ஆஹா! இந்நேரம் பசங்களை டிராப் செய்து விட்டு போரூர் ஜங்ஷன் தாண்டியிருக்கலாமே” என்று ஆபிசர் அப்பா கோபத்தின் எவரெஸ்ட்டில் ஏறிக் கொண்டிருந்தார்.

    ஒரு வழியாக மூத்த பையன் காரில் ஏறி பின்பக்க கதவை சாத்துவதற்குள், அவனுக்கு லட்சார்ச்சனை!’ விடலைப் பையனான அவன் எடக்கு மடக்காக ஏதோ பதிலளிக்க எரிமலை இன்னும் விஸ்வரூபம் எடுத்து, டிரைவர் இருக்கைக்கு கீழே இருந்த ஒரு ரப்பர் செருப்பை எடுத்து பின் சீட்டில் அமர்ந்திருந்த மூத்தவனை  நோக்கி அடிக்க முயன்றார் ஆபிசர் அப்பா.

    பையன் லாவகமாக பின் சீட்டில் இங்கும் அங்கும் நகர்ந்து தப்பித்துக் கொள்ள அவருடைய காலணி ஆதிக்கம் பலவீனம் அடைய ஆரம்பித்தது.

    காருக்குள் நடப்பதை பொறுக்க முடியாமல் பார்க்கில் இருந்த விஜய் “ சார்! சார்! என்று அந்த ஆபிசர் அப்பாவை நோக்கி கத்தினார். “யாரோ தன்னைக் கூப்பிடுகிறார்கள்” என்று உணர்ந்த அந்த ஆபிசர் ஓங்கிய செருப்புடன் டிரைவர் இருக்கையிலிருந்து சத்தம் வந்த திசையில் திரும்பியபோது விஜய்,

    அவரை நோக்கி, சார்! சார்! வாட் இஸ் திஸ்?” “கோ ஹாப்பிலி”

    “சந்தோஷமா போய்ட்டு வாங்கோ” என்று கூக்குரலிட்டார்.

    சுதாரித்துக் கொண்ட அந்த ஆபிசர் செருப்பை காருக்குள் கீழே போட்டு விட்டு காரைக் கிளப்பிக் கொண்டு குற்ற உணர்வுடன் புறப்பட்டபோது

    மூத்த  பையனின் கண்களில் புண்பட்ட அவனுடைய இதயம் தெரிந்தது.

    “அவன்  மீது ஏன் இந்த வெறித்தனமான கோபம்? ஒரு வேளை அவன் நன்றாகப் படிக்கவில்லையோ? இல்லை, நேரமே வாழ்க்கை என்னும் நெருக்கடியால் வந்த வன்மமா? ஒரு நடுத்தர வர்க்கத்தின் அன்றாட நகர வாழ்க்கை  இவ்வளவு அலைச்சல், உளைச்சல், உணர்ச்சி கொந்தளிப்பு  நிறைந்ததாக ஆகி விட்டதே“ என்று கவலையுடன் வீடு திரும்பினார் விஜய்.

    காரை ஓட்டுபவர்கள் “ரோட் ரேஜ் “ என்ற கோபத்  தணலில் மாட்டிக்கொண்டு நிதானம் தவறுவது உண்டு. அது போலத்தான் இந்த மனிதரின் கார் கோபமா? இது போன்ற விநாடித் தருணங்களில்தான் கொலை கூட நடக்கிறது போலும்  என்றெல்லாம் விஜய்யின் மனம் அலை பாய்ந்தது.

    மறு நாள் அதே விஜய்; அதே பார்க்; அதே நேரம்; அதே அரக்கு காரில் குழைத்து விபூதி அணிந்த அதே மூவர், இன்னொரு நாள் வாழ்க்கையோடு முட்டி மோதிப்  போராடி ஜெயிக்க.

    கண்டும் காணாமலும் விஜய் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

    காரில்  இருந்த ஆபிசர் அப்பா, கண்ணாடியைத் தாழ்த்தி “சார்! சார்! என்று விஜய்யை கூவி அழைத்தார்.

    “சாரி சார்! நேத்திக்கி ஒரு நிமிஷம் நான் மிருகம் ஆயிட்டேன்! “ஐ லாஸ்ட் மைசெல்ஃப்”; நல்ல வேளை! நீங்க என்னை பழைய நிலைக்கு கொண்டு வந்துட்டீங்க! டெர்ரிபிலி சாரி சார்! “எக்ஸ்க்யூஸ் மீ; தாங்க்ஸ் சார் “என்று விஜய்யிடம் சொல்லிக் கொண்டே காரைக் கிளப்பினார்.

    இப்போது அந்த மூவரும் பழைய அன்யோன்ய நிலமைக்கு வந்து விட்டிருந்தனர்.

    விஜய், “இட்ஸ் ஓகே; அவன் மூத்த பையன் சார்; அவனை இப்ப நீங்க நன்னா பாத்துண்டாத்தான் பிற்காலத்திலே நீங்க என்  வயசுல இருக்கும்போது உங்களை அவன் நன்னா பாத்துப்பான்; வாழ்க்கைங்கறது ஒரு நாள் இல்ல; ஒரு வருஷம் இல்ல, ஒரு ஜன்மம் சார்! எல்லோருக்குமே  “தொட்டிலில் இருந்து காலில்லாக் கட்டில் வரைதான் வாழ்க்கை” ன்னு கவிஞர் சுரதா சொல்லியிருக்கார் சார்!

    “சீயர்ஃபுல்லா போட்டு வாங்கோ! டைம்  ஆறது; ஆல் த பெஸ்ட்”; என்று விடை கொடுத்து விட்டு அவசரமாக திரும்பிக் கொண்டார் விஜய்.

    அந்த ஆபிசர் அவ்வளவு தூரத்தில் இருந்தும் விஜய்யின் கண்களின் ஈரத்தைக் கவனிக்கத் தவறவில்லை அவருடைய கண்களே  ஈரமாக இருந்தபோதிலும்!

    Share