Blog

  • திருமால் திருப்புகழ் (83)

     

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ——————————————
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணன் அந்தாதி’’
    ———————————–
    ஆழ்ந்து படித்தென்ன, ஆராய்ந்து பார்த்தென்ன,

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம், -தாழ்ந்த,
    சபரியெச்சில் ஏற்ற, சமத்துவத்தின் மூலம்,
    அபரி மிதமான, அன்பு….(21)

    அன்பே எதுகையாய், ஆர்வமே மோனையாய்,
    உன்பால் தளையற்ற உந்துதலால், -வெண்பாக்கள்
    பாடி அணுகுகிறேன், வேடிக்கைக்(கு) அல்லகண்ணா,
    வாடிக்கை யாளனாக வா….(22)

    வாவென்றால் வாலிபன், வாக்கில் வயோதிகன்
    தாவென்றால் கற்பகத் தாயவன், -சோவென்று,
    மாரியருள் பெய்கின்ற, காரிருள் கண்ணனே,
    வேறிருள் போக்கும் விளக்கு….(23)

    விளக்கீசல் போலே, வியனுலகில் ஈசா,
    உளத்தாசை கொண்டிங்(கு) உதிர்ந்தேன், -அளப்பரிய,
    ஆதியே, உந்தனனு பூதியில் மூழ்கிடும்,
    தேதியைச், சொல்லியெனைத் தேற்று….(24)

    தேற்றி விஜயனைத், தேரேற்றி வில்லேந்தச்
    சாற்றினாய், கீதையை சர்வேசா, -சேற்றினுள்,
    பஞ்சப் புரவிகட்(கு) அஞ்சிப் புதைந்திடும்,
    நெஞ்ச ரதத்தை, நிறுத்து….(25)

    —————————————————————————————————————-

    Share
  • கும்ப முனியின் குறுநகை

    கே.ரவி

    26-10-1988, பெங்களூரு போகும் வழியில் உள்ள குறடு மலையில் சில நண்பர்களோடும்,ஷோபனாவோடும் இருந்தேன். அது ஒரு மிகச்சிறிய கிராமம். அதில் ஒரு மிகப்பழைய,சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வினாயகர் கோயில் உள்ளது. அதில் உள்ளவினாயகர் சிலை ஒரே சாளக்ராமக் கல்லால் ஆனது, மிகப் பெரியது, சுமார் 20 அடி உயரவினாயகர். அதை அகத்திய முனிவர் நிறுவினார் என்று குருநாதர் சொல்லியிருந்தார்.அங்கே, அன்று பகல் நேரத்தில் சற்றுக் கண்னயர்ந்தேன். துயில் கலைந்ததும் ஒரு பாடல்வந்தது, என் கனவில், வஷிஷ்ட, அகத்திய மாமுனிவர் இருவரும் வந்து சில வாசகங்கள் சொன்னதுபோல் …..

    thalakaveri
    அந்தக் கவிதையை, சென்னை வந்ததும் குருநாதருக்குப் படித்துக் காட்டினேன். உடனேஅவர் என்னைத் தலைக்காவேரிக்குச் சென்று அங்கே உள்ள குளம் அருகே அகத்தியமுனிவரை தியானம் செய்துவிட்டு, ‘கும்பமுனியின் குறுநகை’ என்ற தலைப்பில் ஒருகவிதையெழுதி அங்கேயே அதைப் படித்துவிட்டு வருமாறு பணித்தார். நானும்,ஷோபனாவும், ‘திராவிட மாயை’ சுப்புவும் 02-11-1988 புறப்பட்டு, மைசூர் சென்று, இன்னும் மூன்று நண்பர்களை அழைத்துக் கொண்டு மறுநாள் மாலை தலைக்காவேரி சென்றடைந்தோம். அங்கே, கும்பமுனியின் குறுநகை என்று ஐந்து பாடல்களை எழுதி அரங்கேற்றினேன். அந்தப் பாடல்கள் வரக் காரணமாய்க் குறடு மலையில் நான் எழுதிய பாடலையும், கும்பமுனியின் குறுநகை பாடல்களையும் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

    kuradu

                                                                                  குறடுமலை விநாயகர் : படம் கே. ரவி

    “குந்து மணியுள் குத்து விளக்கா கூர்ந்து கவனித்தேன்
    அந்த மணியென் அருகில் வந்தென் ஆக்ஞ விபூதியிலே
    சென்று நுழைந்து சிதறி வெடிக்கச் சித்துருவா யெழுந்தான்
    குந்து மணியுள் குறுகிக் கொண்டு குந்தி யிருந்தவனே

    பெயர்சொல்ல வில்லையந்தப் பெரிய சித்தன்
    பிடியென்றான் கைநீட்டிப் பிடித்துக் கொண்டேன்
    முயல்பாகம் இல்லாத முழுநி லாப்போல்
    முகமெங்கும் ஜோதியதில் முறுவல் வேறு
    குயவன்மண் பானைவரச் சுற்று தல்போல்
    குறுமுனிவன் எனைப்பற்றிச் சுற்றி விட்டான்
    சுயநினைவு நீங்கியது சூனி யத்தின்
    சூட்சுமத்தில் சுடராக அவனி ருந்தான்

    ஒன்றாக இருந்தவனே இரண்டு கூறாய்
    ஒளியோடு பிரிந்துநின்ற காட்சி கண்டேன்
    ஒருவன்கை ஜபமாலை பிடித்தி ருக்க – (இன்)
    னொருவன்கைக் கமண்டலத்தைக் கொண்டி ருக்க
    நின்றவர்கள் இருவருமே நெடிதி ருந்தார்
    நிலவுமழை போலவொளி வழிய நின்றார்
    நீண்டதொரு கரமந்த ஒளிவட் டத்துள்
    நேராக என்தோளைத் தொட்ட போது

    மூன்று மொழியென் சிந்தையிலே தோன்றி நிறைந்தனவே
    ஒன்று ‘பருகு வெளிச்சத்தை’ என்று பணிக்கிறது
    ஒன்று ‘பழகு ப்ரம்மத்தை’ என்று தொனிக்கிறது
    ஒன்று ‘புலர்க சித்தவெளி’ என்று முடிக்கிறது

    மீண்டும் எதிரே குந்துமணி – அதன்
    உள்ளே ஒருவிளக்கு
    கூண்டுக் குள்ளே சிறகடித்துத் – துயில்
    கலைந்த நினைவெனக்கு.”

     

    (நாள்: 3-11-1988. நேரம்: கும்மிருட்டு. இடம்: தலைக்காவேரி. பாத்திரங்கள்: சுப்பு, ஷோபனா, நான், பின்னணியில் மாமுனிகள் அகத்தியரும், விஸ்வாமித்திரரும். தலைப்பு: “கும்ப முனியின் குறுநகை” என்று குருநாதர் குறும்பாகத் தந்தது! இப்படி ஒரு சூழலில் வந்த பாடல்களை இங்கே பதிவு செய்கிறேன்)

    ஓங்கி எழுந்தவோர் ஓங்காரப் பேரொளியின் ஊற்றுத் தடாகத்திலே
    உந்துகதி யாகிவெளிச் சென்றுகலை யாதுவளி நின்றுநிலை யாகியுள்ளே
    வேய்ங்குழலும் ஆகியதை ஊதுமித ழாகியலை மோதுமுள் நாதமாகி
    மொட்டுமல ராகியதை முட்டியுற வாடியது கொட்டுகிற அமுதமாகி
    வானொன் றிலாதபடித் தானென் றெழுந்துநித் யானந்த லஹரியாகி
    வாசிவெளி யாகமுனை ஊசிவழி யாகவருள் வ்யாபித்து விட்டதிரையில்
    கூன்பிறை யணிந்தசிவ னார்விழி திறந்துதழல் மான்மழு வுடனுடுக்கை
    கொண்டுநட மாடுமெழில் கண்டுமல ரும்பொய்கை கும்பமுனி யின்குறுநகை (1)

    அன்றுதிரி சூலிநட மாடியவி நாடியிலிவ் வண்டச ராசரங்கள்
    விண்டுசித றுண்டுதிசை யென்றநிலை இன்றிவெளி யெங்கும் தெறித்துவீழ
    ஒன்றிலொன் றாயவை கொண்டுசெய் தானொரு மண்டலம் பெரியதேவன்
    மண்டலத் தைச்செய்த மந்திரத் தைத்தன்க மண்டலத் தேந்திவந் தான்
    வந்தமுனி வன்ஞான வாசல் திறந்தந்த மண்டலத் தொளிகொடுக்க
    விந்துமணி யுள்கோயில் கொண்டுபின் வேள்வியில் கும்பத் தெழுந்துவந்தான்
    குந்துமணி போல்சின்ன குண்டலியி லேயவன் குறுகிக் கிடந்தஅழகை
    என்றுநினைத் தாலுமுடன் இந்துவெனத் தோன்றுவது கும்பமுனியின் குறுநகை (2)

    வீடுமறி யாதுவெளி யேகிஉழல் வார்தம்மை வேண்டிச் சுமந்துவந்து
    வித்தையறி வித்துமன வீச்சிலொரு மித்துப்பொய் வித்தகம் அடக்கியாண்டு
    பாடுபடு கின்றபல தேவதூ தர்க்கெலாம் பரமகுரு கும்ப முனிவன்
    பாதையிது தானென்று பாடமுரைப் பானொரு பவித்திரம் புனையவைப்பான்
    ஆடுகட லத்தனையும் அள்ளிப் பருகியவன் ஆனந்த ஜோதி வள்ளல்
    ஆத்ம விதானத்தில் ஆழ்ந்த நிதானத்தில் ஆச்சர்ய மாய்முளைப்பான்
    கூடுபிரி யாமலொளி ஏடுபிரி யாதென்ற கூற்றுப்பொய் யானசரிதை
    கொண்டலுக் குள்மின்னல் கொண்டுவைக் கும்திங்கள் கும்பமுனி யின்குறுநகை (3)

    அன்றிலங் கைப்போரில் வெல்வதற் காதித்ய மந்திரம் சொன்னதென்ன
    அமரரெ லாரும்வந் அமர்ந்தும்கை லாசகிரி அழுந்தாது காத்ததென்ன
    தென்னகத் தேயொளி தங்கவைத் தேநல் லிலக்கணம் வகுத்ததென்ன
    தேடும்விழி யாவுமொளி சூடும்வழி யோகமெனத் தெளிவா யுரைத்ததென்ன
    ஒன்றுவழி என்றமறை வள்ளுவத் தையுடன் வாழ்த்தியருள் செய்ததென்ன
    ஓங்கிவளர் விந்தியத்தின் கர்வம் அகற்றியடி பணியப் புரிந்ததென்ன
    என்றுமுல காளுநெறி சத்யனெறி என்றதொரு சங்கல்பம் தந்ததென்ன
    என்றுமுள தென்றமிழ் இயம்பியிசை கொண்டமுகை கும்பமுனி யின்குறுநகை (4)

    ஐங்கரத் தான்கோயில் செய்துவைத் தானங்கே ஆனந்த ஜோதிவைத்தான்
    ஜோதியுள் ஜோதியெனச் சொல்லவைத் தானின்று சொன்னபடி யேசிரித்தான்
    திங்கள்பகல் என்றவிரு கண்கள்கொண் டானிந்த அகிலத்தின் ஆத்மஜோதி
    தேவமுனி யாவரையும் வரவழைத் தேயெமை அறிமுகம் செய்துவிட்டான்
    சங்கடம் அகன்றதினி சாதகம் கைகூடும் சத்ய யுகமலருமே
    சன்னிதியி லேநின்று சொல்லுகின் றேனிது சத்தியம் தேவதேவே
    செங்கதிரைச் சொல்லாக்கி மந்திரம் ஜபித்தமுனி யோகவிஸ் வாமித்திரன்
    கோமுனிவ னேயென்னைப் பாடவைத் தானதைப் பாடினேன் வணங்குகின்றேன்
    ஓமென் றுரைக்கட்டும் அண்டமெல் லாமிந்த உலகம் இனிதுவாழ்க
    ஆமென் றுரைக்கட்டும் அமரர்கள் அகிலத்தில் ஆனந்த அமைதிசூழ்க. (5)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    மே 12, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

    இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

    திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள்

    Untitleda

    ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர் திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றார். பொறியியல் பட்டதாரியான இவர் சுருதி, கதிரொளியான் என்னும் புனைபெயர்களிலும் எழுதுவதுண்டு.

    இலங்கை, இந்தியா, மலேஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் வெளியிடப்படும் பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. குறிப்பாகப் மரத்தடி, திண்ணை, திசைகள், பதிவுகள், கீற்று, ஈழநேசன், வல்லினம், அப்பால் தமிழ், அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, எதுவரை? வல்லமை எனப் பல இணைய தமிழ் மின்னிதழ் தளங்களிலும் இவரது கட்டுரைகளையும் கதைகளையும் இவர் எழுதியதால் தமிழ் இணைய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

    கே.எஸ்.சுதாகரின் சிறுகதைகள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றவை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நார்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (ஆஸ்திரேலியா), பூபாள ராகங்கள் (இங்கிலாந்து), மரத்தடி இணையம், தென்றல் (அமெரிக்கா), தாய்த் தமிழ்ப்பள்ளி (ஆஸ்திரேலியா), வல்லமை உட்பட மொத்தம் 20 சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். ‘எங்கே போகின்றோம்’ ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத்தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான கே.எஸ்.சுதாகர் தற்போது இந்த அமைப்பின் நிதிச் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

    சென்றவாரம் இவர் வல்லமை வாசகர்களுடன் அவருடைய “அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்” என்ற சிறந்த கட்டுரை ஒன்றினைப் பகிர்ந்து கொண்டார்.

    அக்கட்டுரையில் கருத்தைக் கவர்ந்த ஒரு சிறு பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு பகுதிகளாக வெளிவந்த இக்கட்டுரையின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 1

    அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 2

    ……பண்டைய தமிழர்கள் ஓடித் தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு ‘வளரி’ என்ற ஆயுதத்தைப் பாவித்தார்கள். சங்க கால இலக்கியமாகிய புறநானூற்றுப் பாடலில் (பாடல் எண் 233) வரும் ‘திகிரி’ என்னும் பதம் இந்த ‘வளரி’யையே குறிக்கின்றது.

    பாடல் எண். 233 – பொய்யாய்ப் போக!
    பாடியவர் : வெள்ளெருக்கிலையார்

    “பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
    பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
    சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
    பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!”

    என்று செல்கின்றது அந்தப்பாடல்.

    ‘வளைதடி’ என்று தமிழில் சொல்லப்படும் இந்த ‘வளரி’ என்ற ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. இந்த வளரியைப் போன்று அவுஸ்திரேலியா ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் ‘பூமராங்’ (boomerang) ஆகும். எனவே இந்த ஆயுதம் தமிழருக்கும் அவுஸ்திரேலியா ஆதிவாசிகளுக்கும் பொதுவானதாகின்றது. இது ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறை வடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படுகிறது. இதை ஆதிவாசிகள் ஒரு இலக்கை நோக்கி எறிவார்கள். இலக்கு தவறும் பட்சத்தில் அந்த பூமராங் எறிந்தவரின் கைகளுக்குத் திரும்பி வந்து விடும். இதை ஆதிவாசிகள் வேட்டையாடுவதற்கு உபயோகித்தார்கள்.

    மத்திய அவுஸ்திரேலியாவில் இருந்த பழங்குடிகளின் இனத்தின் பெயர்களாக (Tribes Names) – வாகை (Waagai), சிங்காலி (Chingali), இளம்பிறை (Ilpirra), வால்பாறை (Walpari), அருந்தா (Aruntha) போன்ற பெயர்கள் இருப்பதைக் காணலாம். Alice Springs போன்ற இடங்களில், சிறுசிறு குழுக்களாக பரந்த அளவில் ‘அருந்தா’ இனக்குழுவினர் உள்ளனர். மேலும் இவர்கள் விலங்குகள், மரங்களின் பெயர்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஏமு மனிதன் (Emu man), கங்காரு மனிதர்கள் (Kangaroo men), பிளம் மர மக்கள் (‘Plum tree’ people) போன்றவறை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

    பழங்குடி மக்களின் பெரும்பாலான உரையாடல்களில் தமிழின் உச்சரிப்பைக் காணலாம். ‘Ten Canoes’ என்ற அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அபரிஜினல் மக்களைப் பற்றிய படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம். அவர்கள் பாவிக்கும் சில சொற்களிற்கும் தமிழ்ச் சொற்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம்.

    சிட்னியில் ‘விண்மலே’, ‘காக்காடு’ என இரு இடங்கள் இருக்கின்றன. ஆகாயமும் (விண்) மலையும் ஒட்டி நிற்பதைப் போல இருக்கும் அந்த அற்புதமான இடத்திற்கு winmalle (விண்மலை) என்று பெயர். ‘கா’ என்றால் சோலை, காடு என்றால் வனம். உண்மையிலே சோலைவனம் போல ஏராளமானவர்களைக் கவர்ந்திழுக்கும் அந்த இடத்திற்கு kakadu என்று பெயர் வழங்குகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் மதுர (Madura) என்று இன்னொரு இடம் இருக்கின்றது. இன்னொரு ஆதிவாசி இனம் அதிகம் பாவிக்கும் சொற்றொடர் ‘பூனங்கா யிங்கவா’. அதன் அர்த்தம் ‘பெண்ணே இங்கே வா’. ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதியே அவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்.

    ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனிதர்கள் தெற்குப்பக்க கடற்கரை வழியாக வந்து இந்தியாவினூடாக அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கக்கூடும் என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகின்றது. இந்தக்கருத்தை இந்தியாவிலுள்ள Dr Raghavendra Rao என்பவருடைய ஆய்வு உறுதி செய்கின்றது. இவரது குழுவின் மனிதவர்க்கசாஸ்திர ஆய்வின்படி (Anthropological Survey), திராவிடப்பழங்குடிமக்களிற்கும் தற்போதைய அபரிஜினல் இனத்தவருக்கும் பொதுவான DNA மரபணு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர்களின் கருத்துப்படி 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அபோர்ஜினமக்கள் தென்னிந்தியா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்து குடியேறியதாகவும், தற்போதைய அபரிஜினமக்களுக்கும் இந்தியக்குடிமக்களுக்கும் பொதுவான முன்னோர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்……..

    தமிழர்களின் பரவலுக்கு சான்றாக அமையக்கூடிய கருத்துக்களை தனது கட்டுரையின் வழியாகப் பகிர்ந்து கொண்ட திரு. கே.எஸ்.சுதாகர் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share
  • சாம கானம்

    -விசாலம்

    Ravanan_-_King_of_Lanka

    இராவணணின் அப்பா யார் தெரியுமா? அவர் தான் ’விஸ்ரவஸ்’ என்ற முனிவர்; சிறந்த சிவ பக்தர். இராவணனுக்குக் கும்பகர்ணன், விபீஷணன் என்று இரண்டு இளைய சகோதரர்கள். இராவணின் தங்கைதான் சூர்ப்பனகை. இராவணனும் மிகுந்த சிவ பக்தன். கடுந்தவங்கள் புரிந்தவன். இதனால் சிவ பெருமானே நேரே தோன்றி  அவனுக்கு வரங்களையும் கொடுத்தார். இலங்கையை ஆண்டு,  தன் வரங்களால் மூவுலகையும் வென்று இலங்கேஸ்வரன் ஆனான்.

    இதனால் அவன் செருக்கு  அதிகரித்தது. நாம் ஏரோப்பிளேனில் பறப்பது போலவே அவனும் தன் புஷ்பக விமானத்தில் அடிக்கடிப் பறப்பான். புஷ்பக விமானத்தில் பறவை போல் இரு இறக்கைகள் இருக்கும். அதில் ஜம்மென்று அமர்ந்து ஓட்ட  எங்கு வேண்டுமானாலும் வானத்தில் பறக்கமுடியும்!

    ஒரு நாள்  இராவணன்  தன் புஷ்பக  விமானத்தில்  பறக்க,  ஓர்  இடத்தில் விமானம்  மேலே பறக்க முடியாமல்  நின்றுவிட்டது. இது எதனால் இருக்கும் என்று எண்ணி அவன்  அந்த விமானத்திலிருந்து இறங்கினான்.

    அவன் முன்பு நந்திதேவர் தோன்றினார். “இராவணா!  நீ வந்திருக்கும்  இடம் கயிலயங்கிரி; இது ஈசனிருக்குமிடம்.  ஆகையால்  கர்வம் கொண்டவர் எவருமே இதைத் தாண்ட இயலாது; அதனால் திரும்பிச்செல்!”

    இதைக்கேட்ட இராவணனுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது!

    “நீ யார் என்னைத் தடுக்க! குரங்குபோன்று முகம் உனக்கு!  நீயா என்னைத் தடுக்கிறாய்? நான் யார் என்று தெரியுமா? என்  பராக்கிரமம் என்னவென்று உனக்குத் தெரியுமா? என்னைத் தடுத்து நிறுத்திய நீ யார் சொல்லு முதலில்?”

    “இராவணா என்னைக் குரங்கு என்று இகழ்ந்து பேசுகிறாயா? நீயும்  உன் இலங்கையும் அழிய  ஒரு குரங்கே காரணமாக இருப்பார்! நான் நந்திதேவர் தெரியுமா உனக்கு?”

    இராவணன் கண்கள் சிவந்தன. மேலும் கோபம் கொண்டு “இந்த மலையா ஹா..ஹா..ஹா…இதை நான் பிடுங்கி எறிந்து விடுகிறேன்!” என்று அடியோடு பெயர்க்க ஆரம்பித்தான். திடீரென்று இமயம் பூகம்பம்போல் ஆடியது. அந்த நடுக்கத்தில் உமையவள்  நடுங்கிப்போனாள். நீரில் வாழும் ஜந்துக்கள்,   பறவைகள், விலங்குகள் எல்லாம் கலவரப்பட்டுக் கத்தின. முனிவர்களின் தபசு கலைந்து போனது. இதையெல்லாம் கண்ட பரமசிவன், இராவணனின் செருக்கை உணர்ந்து அவனுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க எண்ணித் தன் கட்டைவிரலால்  மலையை ஓர் அமுக்கு அமுக்கினார். அப்போது இமயமலை சாதாரண நிலை அடைந்தது; கலவரமும் நின்றது. சிவபெருமானின் கட்டைவிரலின்  பலத்தைத் தாங்க முடியாமல் இமய மலையின் கீழே இராவணன் நசுங்கிப்போனான். அவன் ஆற்றலும் மறைந்தது!

    சுமார் ஆயிரம் ஆண்டுகள் அந்த நிலைமையில் இருந்தான். நசுங்கியபடியே வருந்தினான். பின்பு, தான் செய்ததற்குப் பிராயச்சித்தமாகத் தன் ஒரு தலையைக் கொய்து குடமாக்கித்  தன் நரம்பை வீணைத்தந்தி போல் அதிலே பொருத்தி  இனிய  நாதத்துடன் இசையை எழுப்பினான். அதுவே சாம கானமாக வந்தது. சிவபெருமான் சாம கானத்தில் உருகிப்போனார். அவனை மன்னித்து விட்டார். பின்பு அவனுக்கு ’இராவணேஸ்வரன்’ என்ற பட்டமும் வந்தது.

    Share
  • ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்

    ஔவையார் எழுதிய புகழ்பெற்ற அறநூல்களில் ஒன்று ’ஆத்திசூடி’ என்பது அனைவரும்  அறிந்ததே. ஆயினும், அதில் ஆத்திசூடியாகக் குறிக்கப்படுபவர் யார் என்பதில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதுகுறித்து ஓர் சுவையான கருத்தாடல் நிகழ்த்தி ஆத்திசூடி குறித்த பல புதிய தகவல்களை வாசகர்களுக்கு அறியத் தரலாமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ‘ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்’ எனும் இப்பகுதி.

    இதில் அறிஞர்கள் பலர் பங்கேற்று ’ஆத்திசூடி’ பற்றித் தங்கள் கருத்துக்களை, விளக்கங்களை நம்முன் படைக்க இருக்கின்றார்கள்.

    முதலில், ’ஆத்திசூடி’ என்பது சமண சமயத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர் ஒருவரைக் குறிப்பதாகும் என்று நிறுவ வருகின்றார் முனைவர் நா. கணேசன் அவர்கள்.

    இனி அவருடைய கருத்துக்கள் நம் சிந்தனைக்கு…

    “ஆத்திசூடி அமர்ந்த தேவன்” என்று சமணர்கள் கொண்டாடும் தேவர், பார்சுவநாத தீர்த்தங்கரர். அவர் ஒரு வரலாற்று நாயகர். பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சமணர்களின் 23-ஆவது தீர்த்தங்கரராகப் போற்றப்படுபவர்.

    அரச குலத்தில் தோன்றிய பார்சுவநாதர் நூறு ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார். தம் வாழ்நாளில் 30 ஆண்டுகள் இல்லறத்தை மேற்கொண்டும், 70 ஆண்டுகள் துறவறத்தை மேற்கொண்டும் சிறப்புற்றார். உயிர்க்கொலை, சாதிப் பாகுபாடு ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தவர் அவர்.

    போதி மர நீழலில் புத்தர் ஞானம் பெற்றதுபோல, ஆத்தி (வடமொழியில் தாதகி என்பர்) மர நீழலில் தவஞ்செய்து ஞானம் அடைந்தவர் பார்சுவநாதர். புத்தரும், பார்சுவநாதரும் காசி அருகே மகத மண்டலத்திலே சமகாலத்தில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

    ஔவைக் குரத்தியார் தாம் எழுதிய ஆத்திசூடி என்ற நூலின் கடவுள்வாழ்த்துப் பாடலில்,

    ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
    ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே”
    என்று ஆத்திமர நீழலில் அமர்ந்து ஞானம் பெற்ற  பார்சுவநாதரையே குறிப்பிடுகின்றார். ஏனெனில் ’சூடுதல்’ என்றால் ’அணிதல்’ என்ற பொருள்மட்டுமின்றிச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருளும் உண்டு. அந்த அடிப்படையில் ஔவையால் ’ஆத்திசூடி’யாகச் சுட்டப்படுவர் பார்சுவநாதரே எனக் கொள்வதில் தவறேதுமில்லை.

    அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்:

    Parsvanatha_Lodhruva

    ’சூடுதல்’ என்ற சொல்லுக்குச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருள் இருப்பதைச் சென்னை தமிழ்ப் பேரகராதியும் உறுதிசெய்கின்றது.

    Madras Tamil Lexicon:
    சூடு¹-தல் cūṭu-
    To surround, envelope; கவிதல்.

    இதற்கான சான்றுகள் சில சங்க நூல்களிலிருந்தும் கீழே தரப்பட்டுள்ளன:

    சான்று 1:

    புறநானூறு 35

    நளியிரு முந்நீ ரேணி யாக
    வளியிடை வழங்கா வானஞ் சூடிய
    மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
    முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…

    உரை: நளியிரு முந்நீர் ஏணியாக – நீர் செறிந்த பெரிய கடல்
    எல்லையாக; வளியிடை வழங்கா – காற்று ஊடு போகாத; வானம்
    சூடிய மண்திணி  கிடக்கை – வானத்தைச்  சூடிய  மண்செறிந்த
    உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் – குளிர்ந்த தமிழ்நாட்டிற்
    குரியராகிய;

    சான்று 2:

    வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).

     இதற்கு நச்சினார்க்கினியரின் உரை:

    409-10: புலவு கடல் உடுத்து வானம் சூடிய மலர்தலை உலகத்துள்ளும்-புலால் நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரில் விசேடித்தும்,

    சான்று 3:

    வான்கவிந்த வையகமெல்லாம்” (நாலடி.பொறை.10)

    சான்று 4:

    ஐங்குறுநூறு 209

    அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று
    யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்
    கொண்டல் அவரைப் பூவின் அன்ன
    வெண்டலை மாமழை சூடித்
    தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே.

    இவையல்லாது, ஆத்திமரத்தின் கீழ் அமர்ந்த  தீர்த்தங்கரர் (பார்சுவநாதர்) மீதான பாடல் தமிழிலக்கண நூலான வீரசோழியத்தில் உள்ளது. மேலும் ஒரு பாடல் அகத்துறையாய்ச் சோழ மன்னன் மீதும் இருக்கிறது. பார்சுவநாதரது அடியாராகிய ஒரு குரவடிகள் சோழமன்னர்களுக்கு ஆத்தியைக் குலமரமாகப் பரிந்துரைத்திருக்கலாம் என்று எண்ணுதற்கும் இடமுண்டு.

     ’ஆத்திசூடி’ சிவபெருமானைக் குறித்தது என்று கருதுவோரும் உளர். ஆனால் அதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. ஆத்தியைச் சிவனது திருமேனியிலே காட்டும் சிற்பங்களோ, தேவாரமோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பல சிற்பங்களில் ஆத்தி தாவரமும், நாகக் குடையும் கொண்டு பார்சுவநாத தீர்த்தங்கரரே விளங்குகிறார்.

    சுமார் 1500 வருடப் பழமை வாய்ந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கர்நாடகாவில் கிடைத்துள்ளது. தீர்த்தங்கரசாமிமேல் முழுவதும் ஆத்தி தாவரம். அந்த அலங்காரத்தின் உச்சியில் ஒரே ஓர் அரவம். இந்த உச்சி நாகத்தால்தான் அந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் பார்சுவர் என அடையாளம் தெரிகின்றது.

    parsuvanatha with one snake

    எனவே, ஆத்திசூடி நூலின் கடவுள்வாழ்த்தில் ’ஆத்திசூடி’யாகக் குறிப்பிடப்படுவர் சமண தீர்த்தங்கரராகிய ‘பார்சுவநாதரே’ என்பது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது.

    Share
  • பருவம் எனது பாடல் …..

    — கவிஞர் காவிரிமைந்தன்

     

    பருவம் எனது பாடல் … – ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக – கவிஞர் வாலியின் வரிகள்!!

     

    பருவம் எனது பாடல்.. இப்படத்தில் முதல் பாடல்! முத்தான பாடல்! குழுவினர் நடனத்தோடு அந்தக் குதூகலம் அரங்கேறுகிறது! மாடமாளிகையின் மைய மண்டபம்.. சித்திரம்போல் எழுதிவைத்த சிங்காரியின் வருகையை கலைநுணுக்கங்களோடு கண்ணுக்கு விருந்தாக்கிப் படைக்கிறது! இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் கற்பனை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

    ஆம்.. அதோ வருகிறாள் கதையின் நாயகி.. அறிமுகக் கட்டத்தை இப்படி ஆராதிக்க ஒரு கவிஞனால் மட்டுமே முடியும் என்று கருதிதான் பாடல்காட்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது. வரிகளை வரிந்து கட்டிக்கொண்டு எழுதியிருக்கிறார் கவிஞர் வாலி வண்ணத்தமிழில் வசந்தவிழா எடுக்க.. எண்ணங்களில் கோலம்வரைந்த இயக்குனர் கைவண்ணம் நம் கண்களில் விரிகிறது! அழகு மயிலொன்று ஆடிவருகிறது!

    பருவம் எனது பாடல்..
    பார்வை எனது ஆடல்..
    கருணை எனது கோயில்..
    கலைகள் எனது காதல்!

    முதல் நான்கு வரிகளுக்கு முத்திரை பதிக்கும் காட்சிப்படிமங்கள்!

    கன்னித்தீவின் இளவரசி.. கட்டழகுப் பெட்டகமாய்.. கலைகளையெல்லாம் கற்றுக் காத்திருக்கிறாளோ.. கதையின் நாயகன் வருகைக்காக!

    50 வருடங்களுக்குப் பிறகும் அன்று பூத்தமலர்போல வாடாமல் இருக்கிற பவளமல்லிகை.. தமிழ்த்திரையிசைப் பாட்டுச்சுரங்கத்துள் கொட்டிக்கிடக்கும் முத்துமாலை! காதுகளை மட்டுமல்ல! இதயங்களையும் கவனமாக வைத்துக் கேளுங்கள்! எப்படியும் களவாடப்பட்டிருக்கக்கூடும் உங்கள் இதயம்!

    பருவம் எனது பாடல்…

    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில்
    கலைகள் எனது காதல்
    கருணை உனது கோயில்
    கலைகள் உனது காதல்

    இதயம் எனது ஊராகும்
    இளமை எனது தேராகும்
    மான்கள் எனது உறவாகும்
    மானம் எனது உயிராகும்
    மான்கள் உனது உறவாகும்
    மானம் உனது உயிராகும்
    தென்றல் என்னைத் தொடலாம் –
    குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம்
    மலர்கள் முத்தம் தரலாம் –
    அதில்மயக்கம் கூட வரலாம்
    (பருவம்)

    சின்னஞ்சிறிய கிளி பேசும்
    கன்னங்கரிய குயில் கூவும்
    பறவையினங்கள் துதி பாடும்
    பாவை எனக்குத் துணையாகும்
    பறவையினங்கள் துதி பாடும்
    பாவை உனக்குத் துணையாகும்
    பழகும் விதம் புரியும் –
    அன்பின்பாதை அங்கு தெரியும்
    பயணம் அதில் தொடரும் –
    புதுவாழ்க்கை அங்கு மலரும்

     

     

     

     

     

    Share
  • தெரியாதவைகள்

    பத்மநாபபுரம் அரவிந்தன்

    வண்டுகள் தேனுறியும் போது
    மலர்கள் ரசிக்குமா? துடிக்குமா?

    பூமி துளையுற்று                                                                                  bee-on-yellow-flower
    ஊற்றுக்கண் உடைபட்டு
    நீர் பொங்கி வழிகையில்
    பூமி நடுங்குமா? பூரிக்குமா?

    மலை தடவிச் செல்லும் மேகம்
    உள்ளுள் சிலிர்க்குமா? அதைத்
    தடையென்று நினைக்குமா?

    ஆற்றின் கரையுடைத்துப்
    பாய்ந்தோடும் புது வெள்ளம்
    தன் சுதந்திரத்தை ருசிக்குமா?
    ஆற்றை விட்டு வந்ததில்
    சோகமாய்த் தவிக்குமா?

    கூண்டுள் அடைபட்ட பறவைகள்
    பெருவானை நினைக்குமா?
    கூடேதான் வானமென்று கிடக்குமா?

    இப்படித் தொடரும்
    கேள்விகள் இன்றோடு முடியுமா?
    தினந்தோறும் தொடருமா??

     

    Share
  • பொம்மைகள்!

    பிச்சினிக்காடு இளங்கோ     

    நாங்கள்
    பொம்மைகள் அல்ல…
    உங்கள்
    பிள்ளைகளின் மகிழ்ச்சி!

    பிள்ளைகளைப் பெற்றதால்                                                                      Angel-Doll-Angel-Baby
    உங்களுக்கு மகிழ்ச்சி!
    எங்களைப் பெற்றால்
    உங்கள்
    பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி!

    எங்களை வாங்காமலிருந்தால்
    உங்களுக்கு நட்டமில்லை!
    பிள்ளைகளின் முகத்தில்
    மகிழ்ச்சியைக் காணாமலிருந்தால்
    உங்களுக்கு லாபமில்லையே!

    நினைவில் வையுங்கள்…
    உங்களைப்போலவே   நாங்களும்
    உங்கள்
    பிள்ளைகளுக்காகவே இருக்கிறோம்!

    நீங்கள்
    உங்கள்
    பிள்ளைகளுடன் விளையாடுகிறீர்கள்!
    உங்கள் பிள்ளைகள்
    எங்களுடன் விளையாடுகிறார்கள்!

    உங்கள் கைகளில்
    பிள்ளைகள்!
    பிள்ளைகளின் கைகளில்
    நாங்கள்!

    மீண்டும் நினைவுபடுத்துகிறேன்…
    நாங்கள்
    பொம்மைகள் அல்ல…
    உங்கள்
    பிள்ளைகளின் மகிழ்ச்சி!

    மகிழ்ச்சியை வாங்குங்கள்!
    மகிழ்ச்சியாய் வாங்குங்கள்!

    (சிராங்கூன் சாலையில் ஒரு பொம்மைக்கடைக்குப் போனபோது ஒரு கவிதை எழுதுங்களேன் என்றார்கள். விளைவு இந்தக் கவிதை!)

    Share
  • திருமால் திருப்புகழ் (82)

     

    கிரேசி மோகன்

    Experiments with Krishna series. #Krishnafortoday Keshav
    Experiments with Krishna series. #Krishnafortoday Keshav

    கண்ணன் திருப்புகழ்….
    —————————————-
    ”கண்ணன் அந்தாதி’’
    ————————————-
    கூப்பிட்டால் ஆயர்க்காய்க், கூச்சலிட்டால் ஆனைக்காய்ச்,

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    சாப்பிட்டால் நட்புக்காய்ச், சோர்வின்றிக் -காப்பிட்ட
    ராதை கரம்விலக்கிக், கீதை உரைநிகழ்த்தி
    ஆதரவுக்(கு) ஓடும் அரி….(16)

    அரியா தவனை, அறியா தவரே
    அறிய முயல்வர் அறிவால், -எறியா(து)
    ஒளிந்த நெருப்பை, உணர மரத்தைப்,
    பிளந்த குருடனைப் போல்….(17)

    ‘போலெ’ன்(று) உவமை புகல முடியாது,
    மாலென் றனரோ மகாகவிகள், -கேளொன்று,
    சிந்தனை தேவையா, சித்திரத்திற்(கு) ஓவியா
    எந்தனை வேறுவடி வாக்கு….(18)

    வாக்கிலே பாரதி, வார்த்தைகள் வந்திட
    நாக்கிலே நம்மாழ்வார் நின்றிட, -நோக்கிலே,
    ஆண்டாளின் பக்தி, அகலா(து) இருந்திட,
    வேண்டினேன் கண்ணா வழங்கு….(19)

    வழங்கினாய் செல்வம், வழங்கினாய் சேலை,
    வழங்கினாய் கீதை, வணக்கம் -வழங்கிடும்,
    காலம் முடிந்ததோ, கண்ணா மவுனமாய்,
    ஆலில் படுத்தாயோ, ஆழ்ந்து….(20)

    ——————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/

    Share
  • அம்மா என்னும் பிரம்மா!

     

    பவள சங்கரி

    Elephant-Family-Wallpapers15
    அம்மா கைதேர்ந்ததொரு சிற்பி
    பிண்டத்தைக் கொடுத்த பிரம்மாவுக்கு
    அண்டத்தில் வாழும் உருவைச் செதுக்கிய சிற்பி!
    கண்டம் விட்டு கண்டம் போனாலும் உண்மை
    விண்ணம் ஆகாமல் உறுதியாய் வடித்த சிற்பி!

    குருதியுடன் குறும்பும் குறும்புடன் அன்பும்
    அன்புடன் பண்பும் பண்புடன் பாசமும்
    பாசமுடன் நேசமும் நேசமுடன் மனிதமும்
    சேர்த்தேச் செதுக்கினாள் சீரான உளிகொண்டு!

    வாய்கோணி வழிந்தோடும் சலவாயில் சொல்தேடி
    வாக்குச் சித்தராய்க் கிடந்த மழலையைத் தட்டி
    வார்த்தெடுத்து வாழவைத்த வல்லமையான சிற்பியவள்!
    சிற்றாடை கட்டிச் சிட்டாகப் பறந்து திரிய எத்தனித்தபோது
    சிறப்பாக நடைபயில சினந்துநின்று பதம் பார்த்த சிற்பியவள்!

    உற்றார் என்றாலும் ஊரார் என்றாலும் பரிவோடு பற்றுதல் அளவையும்
    கற்றார் உளரென உளியால் உள்ளத்தே ஆழச் செதுக்கியவள்!
    மாற்றாரையும் வஞ்சம் கொள்ளாமல் மதிகொண்டு வாழ்த்தும்
    பேற்றைத் தவமாய் ஊட்டி உயிர்த்த உன்னதச் சிற்பியவள்!

    பருவத்தில் பன்றிக்குட்டியும் அழகுதானென்று வசைபாடியே
    பற்றில்லாமல் பதின்மத்தைக் கடக்கச் செய்த பெரும்சிற்பியவள்!
    அன்பு மட்டுமே நிரந்தரம் மனிதம் மட்டுமே மதிநலம் யாக்கை நிலையாது
    அதமம் இல்லாது அருளெனும் உதிரம் குழைத்து உருவாக்கிய சிற்பியவள்!

    கந்தையும் சிந்தையும் கசக்கிக் கட்டிக் கருத்தாய் கடவுளாய் வாழ
    வழிகாட்டி உள்கடவென உத்தமமாய் உருவாக்கிய சிற்பியவள்!
    சொல்லொன்றும் செயலொன்றுமென செறிவற்று நில்லாமல்
    சீர்தூக்கிச் சிதிலமில்லாமல் சிறப்பெய்தச் செய்த சிற்பியவள்!

    களிமண்ணாய்க் கிடந்ததைப் பொன்னாய் மணியாய் சீராய் செதுக்கிய
    ஓசையில்லா ஒளிவட்டமும் ஆடம்பரமில்லா ஞானமும் தேர்ந்த சிற்பியவள்!
    கனிவும் பணிவும் பாலபாடமாய் உறுதியும் உன்னதமும் கன்னிப்பாடமாய்
    தெளிவும் நம்பிக்கையும் வாழும்காலமாய் இறுதிவரை போராடும் வரமும்
    குழைத்துச் சமமாய் மூச்சைக்கலந்து சீராய் வெளியிடச்செய்த சீர்மிகு சிற்பியவள்!!

    சிப்பிக்குள் முத்தாய்ச் சீவனுக்குள் சிவமாய்ச் சீராகவாழும் தன்மையாய்
    என்னை வார்த்தெடுத்த சீலமிகு சிற்பியவள்!!
    அம்மா.. அவள்தான் என் பிரம்மா!!!

     

     

    Share
  • நீதானே தெய்வம் அம்மா

     


    எம். ஜெயராமசர்மா.. மெல்பேண் 

     

    கருவறையில் சுமந்தவளே14547_622869037804572_1530437069541877286_n
    கண்விழித்துக் காத்தவளே
    பெருவிருப்பத் தோடென்னை
    பெத்து வளர்த்தவளே
    அருமருந்தாய் காத்தவளே
    அன்பிலென்னைத் தோய்த்தவளே
    ஒருக்காலும் உனைமறவேன்
    உள்ளமெலாம் நீதானே

    நானழுத போதெல்லாம்
    ஊனுருகி நின்றவளே
    தேனெனவே எனதெச்சில்
    திகட்டாமல் சுவைத்தவளே
    பாலொழுகும் முகம்பார்த்து
    பனிபோல சிரித்தவளே
    பழிங்குமுகம் என்மனதில்
    பதிந்துபோய் இருக்கிறது

    பால்குடித்த போதெல்லாம்
    பல்லாலே கடித்திடுவேன்
    நீசிரித்து நின்றிடுவாய்
    நெத்தியிலே கொஞ்சிடுவாய்
    கடித்த இடம் நொந்தாலும்
    கருணையுடன் பார்த்திடுவாய்
    நினைத்துமே பார்க்கின்றேன்
    நீதானே தெய்வமம்மா

     

    Share
  • அன்னையின் கருணை!

    -சீர்காழி உ. செல்வராஜு

    அன்னையின் கருணை அமுதம் போன்றது

    அன்பே தாயென வடிவம் பெற்றதுmother and a child

    உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது

    உறவே நிறையென உள்ளம் நிறைந்தது!

     

    வாழ்வின் தத்துவம் சொல்லித் தந்தது

    வாழ்வே கலையென வகுத்துச் சொன்னது

    உணர்வைச் செதுக்கிடும் மகிமை வாய்ந்தது

    உழைப்பே உயர்வென ஊக்கம் படைத்தது!

     

    பசியில் பகிர்ந்திடக் கற்றுத் தந்திடும்

    பரிவே மூச்சென மலரச் செய்திடும்

    இனிய சொற்களைப் பேச வைத்திடும்

    இல்லமே கோயிலென உணரச் செய்திடும்!

     

    வினாக்கள் பற்பல விடைகள் கிடைத்திடும்

    விதியே இன்றி வினோதம் படைத்திடும்

    நிழலாய் ஒளியாய் நிலையாய்க் காத்திடும்

    நினைந்தே நெஞ்சம் நிம்மதி பெற்றிடும்!

     

    கருணை உள்ளம் கண்களில் மின்னிடும்

    கண்களில் கண்ணீர்ச் சொரிந்து வடிந்திடும்

    தேகம் வளர்ந்திடத் தேனாய்ச் சுரந்திடும்

    தேறிட மனமோ அம்மா என்றிடும்.

     

    Share
  • தன்னேரிலாத தாயன்பு!

    -மேகலா இராமமூர்த்தி

    amma pic with a poem for megala's article

    ஒவ்வோர் ஆண்டும் மே இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை உலகின் பெரும்பான்மையான நாடுகள் அன்னையர் தினமாகக் கொண்டாடி வருவது நாமறிந்ததே. அன்னையரின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் ஓர் நாள் கொண்டாடப்படவேண்டும் என்ற எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ’அன்னா ஜார்விஸ்’ என்ற அமெரிக்கப் பெண்மணிக்குத் தோன்றியது. அந்நாளை ஓர் விடுமுறை நாளாக அரசாங்கம் அறிவிக்கவேண்டும் என்றும் அவர் முனைப்போடு செயல்பட்டுத் தன் கோரிக்கையில் அவர் வெற்றி பெற்றுள்ளார். (பின்பு அன்னையர் தினம் வணிகமயமாக்கப்பட்டபோது அதன் தோற்றத்துக்குக் காரணமாக இருந்த அன்னாவே அன்னையர் தினத்தை எதிர்த்தது வேறு விஷயம்!)

    அன்னையர் தினத்தின் தோற்றம் அமெரிக்காவில் நிகழ்ந்தபோதிலும் உலகம் முழுவதும் இந்நாள் ஓர் திருநாள்போல இப்போது கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்னையர்க்குப் பரிசுப் பொருட்களைக் கொடுப்பது, வாழ்த்து அட்டைகளை வழங்குவது, அவரோடு சுற்றுலாவுக்குச் செல்வது, விருந்துண்பது  என்று பல்வேறு வகைகளில் கேளிக்கை நிறைந்ததாக இந்நாளைக் கொண்டாடிவருகின்றனர் மக்கள்.

    எனினும் முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள் சுமந்து குழந்தைகளை ஈன்று புறந்தருகின்ற அன்னையரைக் கொண்டாடுவதற்கு (ஒரே) ஒருநாள் போதுமா?

    அன்னையர் தம் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது பரிசுப் பொருள்களோ, வாழ்த்து அட்டைகளோ இல்லை; அவர்கள் என்றும் வேண்டுவது தம் பிள்ளைகளின் (நீங்காத) அன்பையே! பிள்ளைகள் தன்னை மறந்தாலும் அவர்கள்மீது மாறாத அன்பு பாராட்டுபவள் இவ்வுலகில் அன்னை எனும் உன்னத உயிர் ஒன்றுதானே?

    ஒரு தாய் தன் மகள்மீது கொண்டிருந்த அளவிடமுடியாத அன்பை அழகாய் வெளிப்படுத்தும் ஓர் காட்சி ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்திலிருந்து…

    தன்னருமைத் தாயையும், அவளின் தூய அன்பையும் மறந்து தான் விரும்பிய காதலனோடு சென்றுவிடுகின்றாள் ஒரு பேதைப் பெண். அருமையாகவும் பெருமையாகவும் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த தன் அன்புமகள் தன்னைத் தவிக்கவிட்டுச் சென்றுவிட்ட அவலத்தைத் தாங்கவொண்ணாது தவிக்கின்றாள், துடிக்கின்றாள் அந்த அன்னை!

    உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் கண்ணனாகவே கண்ட ஆழ்வார்கள்போல், வீட்டில் கண்ணில்படும் பொருள்களிலெல்லாம் தன் அருமை மகளைக் காண்கிறாள் அந்த அபலைத் தாய்! அவை ஒவ்வொன்றையும் கையில் எடுத்து ஏக்கத்தோடு பார்த்து, ”இது என் மகள் வைத்து விளையாடிய பொம்மையாயிற்றே! இது ஒளிமிக்க நெற்றியையுடைய என்னருமைப் பைங்கிளி எடுத்து வளர்த்த பைங்கிளியாயிற்றே! இவற்றைக் காணும்போதெல்லாம் என் கண்கள் கலங்குமாறு என்னுயிரினும் இனிய மகள் என்னைவிட்டு நீங்கிச் சென்றாளே!” என்று கண்ணீரோடு புலம்புகின்றாள்.

    ”இதுஎன் பாவைக்கு இனியநன் பாவை
    இதுஎன்
    பைங்கிளி எடுத்த பைங்கிளி
    இதுஎன்
    பூவைக்கு இனியசொல் பூவைஎன்று
    அலமரு
    நோக்கின் நலம்வரு சுடர்நுதல்
    காண்தொறும்
    காண்தொறும் கலங்க
    நீங்கினளோ
    என் பூங் கணோளே!” (ஐங்குறுநூறு: 375)

    பெத்த மனம் பித்து…பிள்ளை மனம் கல்லு என்பது இதைத்தானோ?

    ’அன்னையர் தினம்’ என்றதும் என் நினைவுக்கு வரும் மற்றொன்று, பள்ளி இறுதிவகுப்பில் நான் படித்த ஆங்கிலப் பாடமான ’The Mother’s Day.’

    அன்று அன்னையர் தினம்! தங்கள் அன்னையை எங்கேனும் வெளியே சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று மகிழ்விக்கவேண்டும் என்று விரும்பிய அவள் பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்வதற்கு ஏற்றவகையில் ஓர் வேனை ஏற்பாடு செய்கின்றனர்.

    சுற்றுலாவுக்கு எடுத்துச் செல்லவேண்டிய தின்பண்டங்கள் தயாரிப்பதில் அவர்களின் அன்னை மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருக்கப் (பாவம்! அந்தத் தாய்க்கு அன்றுகூட ஓய்வு இல்லை!) பிள்ளைகள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு வேனில் இடம்பிடித்து அமர்கின்றனர். கடைசியில் மிஞ்சியிருந்ததோ ஒரே ஓர் இடம்! ஆனால் அங்கே அமர்வதற்காக எஞ்சியிருந்ததோ இருவர்!

    ஒருவர் அந்த அன்னையின் கடைசிப் பிள்ளையான ராஜூ எனும் சிறுவன், இன்னொருவர் ’விழா நாயகியான’ அந்த அன்னை. இருவரில் யாரை அழைத்துச் செல்வது என்று புரியாமல் வண்டியில் அமர்ந்திருந்தோர் விழிக்க…..சுற்றுலாச் செல்லவேண்டும் என்று மிகுந்த ஆசையோடு புத்தாடைகளையெல்லாம் அணிந்துகொண்டு வண்டியில் ஏறத் துடித்துக் கொண்டிருந்த அந்தக் கடைக்குட்டிப் பையன் ராஜூ, தன் அன்னையின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருளை உடனே புரிந்துகொண்டுவிட்டாள் அன்புவடிவான அந்த அன்னை!

    உடனே, ”நான் வயதானவள்; பிறிதொரு சமயம் சுற்றுலாவுக்கு வருகிறேன். ராஜூவை அழைத்துச் செல்லுங்கள்! அவன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்!” என்று அன்போடு கூறித் தன் மகனை வேனில் ஏற்றி அமரச் செய்கிறாள்.

    வண்டியில் அமர்ந்திருந்த அனைவருக்கும் அந்த அன்னை அன்போடு கையசைத்து  விடைகொடுக்க, அவளை ஏற்றிக்கொள்ளாமலேயே அந்த வேன் மற்றவர்களோடு சுற்றுலாவுக்குப் புறப்பட்டுச் சென்றது என்பதே The Mother’s Day’ என்ற அந்தப் பாடத்தின் சாரம். வேதனையான வேடிக்கை இல்லையா?

    ’தியாகம் செய்வதற்கென்றே பிறந்தவர்கள் அன்னையர்!” என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்துகின்றது மேற்கண்ட நிகழ்வு!

    ஆம்…அன்னையரே எப்போதும் தங்கள் ஆசைகளைத் துறக்கவேண்டும்; மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து நடந்துகொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே நம் சமுதாயத்தில் (பெரும்பாலும்) பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்நிலை மாறவேண்டும். அன்னையானால் என்ன…அவளுக்கும் ஆசைகள் இருக்குமல்லவா? எனவே அவளுடைய உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்; விருப்பங்கள் தடையின்றி நிறைவேற்றப்படவேண்டும்!

    இறைவன் தன்னால் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்ல முடியாது என்று கருதித்தான் அன்னையரை வீடுகள்தோறும் அனுப்பினான் என்று சொல்லப்படுவதுண்டு. இல்லத்திலே உறைகின்ற தெய்வம் அன்னை! அந்த அன்னையின் காலடியில்தான் சுவனம் (சொர்க்கம்) இருக்கின்றது என்கிறது இஸ்லாம். ”தெய்வீகத் தாயைப் பெற்றிருக்கும் எந்த மனிதனுமே ஏழையில்லை!” என்பது அமெரிக்க முன்னாள் அதிபர் அபிரகாம் லிங்கனின் அமுதமொழி!

    இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் தன்னேரிலாத தாயை, அவளின் பெருமையை அன்னையர் தினத்தில் நினைந்து போற்றுவோம்!

     

    Share
  • தாயினும் சிறந்த ஒரு கோயிலுமில்லை

    — விசாலம்

     

    mothersday

     

     

    “அன்னையர் தினம்” எப்போது ஆரம்பித்தது?

    எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் வேதம் தோன்றிய காலத்திலிருந்தே அன்னையை வணங்கும் கருத்து இருந்திருக்கவேண்டும் வேதமும் அன்னையைப் பூஜிக்கும் தருமத்தை சொல்கிறது .’மாத்ரு தேவோ பவ’ . என்பதிலிருந்து அன்னை ஒரு தெய்வமாகவே கருதப்படுகிறாள். அடுத்ததாக ஔவையாரும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார். சக்தி இல்லாமல் சிவம் இல்லை என்பதும் அர்த்தநாரீஸ்வரர் தோற்றமும் பெண்ணின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

    ஜகத்குரு சங்கராசார்யார். அவர்கள் எழுதிய ‘மாத்ரு பஞ்சகம் ‘என்பதைப் படித்தால் கண்களில் தன்னால் கண்ணீர் நிரம்பிவிடுகிறதே! அதில் ஆரம்பத்திலேயே அவர் “என்னை ஈன்ற அன்னையே. என்னை பெற்றெடுத்த போது நீ பட்ட வலி என்னென்பேன்.வலி பொறுக்கமுடியாமல் உன் பற்களைக்கடித்தாய். பிரசவ வலியில் துடி துடித்தாய். நானோ மலங்களினால் பல வருடம் துர்நாற்றம் அடையச்செய்தேன். அம்மா ! பாவி நான். கருவிலிருந்தபோதே ஊனினை உருக்கி, உடலினை வருத்தி, உதிரத்தால் உணவு தந்து உயிர் கொடுத்தாய். நான் உனக்கு என்ன கைமாறு செய்வேன்? பேரும், புகழும், பொன்னும், பொருளும் தந்து போற்றினாலும் போதாது ” என்று அவர் தாயின் மரணம் போது பாடிய பாடல்கள் ‘ மாத்ரு பஞ்சகம் ‘.

    சிலர் இன்றும் தங்கள் வீட்டில் “சுமங்கலி பிரார்த்தனை’ என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். அதில் சுமங்கலியாக இறந்து போன தங்கள் சொந்த பந்தங்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கென்று விருந்தும் படைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியும் ஓரளவு அன்னைகளை நினைவு கூர்வதாக இருக்கிறது.

    அன்னையருக்கு முதல் விழாவாக சைபீல் என்ற பெண் தெய்வம் வணங்கபட்டு அவளை முதல் தாய் கடவுளாக பிரிஜியா மக்கள் ஏற்றுக்கொண்டு அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.

    ரோமானிய மக்கள் தங்கள் தாய் தெய்வத்திற்கு பாலடைன் மலையில் ஒரு கோயிலை கட்டினர். பின் வருடாவருடம் மார்ச் மாதம் 15 ந்தேதி ஆரம்பித்து மூன்று நாட்கள் திருநாளாக கொண்டாடினர். அம்மனுக்கு படையல் வைப்பது போல் இந்த தாய் தெய்வத்திற்கும் படையல் வைத்தனர்.

    கிருஸ்துவ மதத்தில் ஏசுபிரான் பாலையில் கழித்த நாளை ஞாபகப்படுத்திக்கொள்ள நோம்பு என்று நாற்பது நாட்கள் விரதம் இருந்து பின் கடைசி ஞாயிறு அன்று மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட தேவாலயத்திற்குச்சென்று பரிசுகள் கொடுக்கும் தினமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாம் .

    கிரேக்கர்களை எடுத்துக்கொண்டால் வசந்த காலம் வந்ததும் தாய் தெய்வத்தை வணங்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.அவர்களது தாய் தெய்வமாக ரேஹா என்பவர் வணங்கப்பட்டார்.

    ரோமில் இருக்கும் மக்கள் வசந்த காலத்தில் சைபெலி என்ற பெண் தெய்வத்தை தங்கள் தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிப்பாட்டில் பிரார்த்தனை தவிர நமது கிராமத்தில் மாரித்தாய்க்கு முன் கரகம், வீரவிளையாட்டு, நடனங்கள் போன்று நடப்பது போல் இங்கும் பல கலை நிகழ்ச்சிகள் நடைப்பெறுமாம்.

    தற்போது நாம் கொண்டாடும் அன்னையர் தினம் மிகவும் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த
    அன்னையர் தினம் ஆரம்பித்து வைத்த ஜார்விஸ் என்ற பெண். திருமணமாகாதவர். தனக்கென்று ஒரு பிள்ளையை வளர்த்தவரும் இல்லை. ஆனால் இவரது முயற்சியால்தான் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இவர் அமெரிக்காவில் மேற்கு வெர்ஜீனியாவில் கிராப்டன் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் ஏகப்பட்ட போர். அந்தப்போரில் பலர் தங்கள் சொந்தபந்தங்களை இழந்து தனித்து விடப்பட்டனர். சிதைந்து குலைந்துப்போன குடும்பங்களை ஒன்று சேர்க்கவும். அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கவும் பாடுபட்டு ஒரு சமூக சேவகியானார். அவர் இதற்காக பாடுப்பட்டது கொஞ்சம் நஞ்சமல்ல. அவரது அயாரத உழைப்பு அவரது 84 வயது வரை நீடித்தது.

    ஆஸ்பத்திரியில் அவரது கடைசி நேரம் நிருபர்களை அழைத்தார். “அன்பர்களே, உலகமுழவதும் ‘மதர்ஸ் டே’ கொண்டாட வேண்டும் என்பதே என் ஆசை. அன்னையர் தினம் பெற்ற அன்னைக்கு மட்டுமல்ல. மற்ற அன்னையர்களையும் வணங்கி .மதித்து வணங்க வேண்டும். அவர்கள் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். இதுவே என் கடைசி ஆசை”.

    அவரது ஆசை பூர்த்தியானது எல்லோருக்குமே மகிழ்ச்சிதான். ஆனால் அவர் அன்றைய தினத்தில் ஆத்மார்த்த அன்பும், பாசமும், மதிப்பும் அளிக்கும் அன்னை தினத்தையே எதிர்ப்பார்த்தார். இதில் கடமையே என்று செய்யும் எண்ணம் தவிர்த்து ஆழ்மனதிலிருந்து எழும் அன்புணர்ச்சியே தேவையாகிறது. “எங்காத்துக்காரரும் கச்சேரி போகிறார்” என்று சிலர் பேருக்காக ஏதோ பொருளை வாங்கி அன்னைக்கு அனுப்புகின்றனர். தவிர இருக்கவே இருக்கு “Flip kart ” வியாபரஸ்தலம். வீட்டில் அமர்ந்தபடியே எதை வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். நேரம் மிச்சம். கடையின் நெருக்கடி கிடையாது.
    பெட் ரோல் செலவு கிடையாது. ரொம்ப சௌகரியமான சமசாரம் தான். ஆனால் நேரே அன்னையிடம் சென்று அவள் ஆனந்தக்கண்ணீர் வடித்து நம்மை பார்க்க, நாம் அவளை அணைக்க, அவளுக்கு அந்த நேரம் கிடைக்கும் சுகம் இருக்கே அது தனி சுகம் தான். அது வேறு எங்கேயாவது கிடைக்குமா? அதை விட்டு விட்டு ஏதோ ஒரு பொருளை எங்கிருந்தோ அனுப்புவது ஒரு இயந்தரம் போல் இது எனக்கு தோன்றுகிறது. ஒன்றுமே இல்லாததற்கு ஏதோ இதாவது இருக்கே என்று வேண்டுமானால் மனம் சமாதானமடையலாம் .

    இது போல் தினங்கள் வந்தால் வியாபாரிகளுக்குத்தான் கொண்டாட்டம். ஆன்நா ஜார்விஸ் இருக்கும் போதே ஒரு கம்பெனி அன்னையின் படம் ஒன்றை போட்டும், கொடி ஒன்றை விற்றும் பணம் புரட்ட ஆரம்பித்தது. இதை ஆன்நா ஜார்விஸ் அறிய அவருக்கு மிகவும் கோபம் வந்தது. அன்னையர் தினம் வியாபார நோக்குக்காக எழுந்த தினமல்ல. ஆகையால் அந்தக்கொடி விற்பனையைக்குறித்து வழக்கு தாக்கல் செய்தார். அன்னையர் தினம் மனம், உணர்ச்சிகள் பின்னிக்கொண்ட தினமாக இருக்க வேண்டுமே தவிர அதில் லாபம் அடையும் நோக்கம் கண்டிப்பாக இருக்கக்கூடாது என்று அதற்காக வாதாடி வெற்றியும் பெற்றார்.

    அன்னையரை மதிக்க நமது சக்திக்கேற்றாற்போல் ஏதாவது செய்தாலே போதுமானது. இரண்டு துளசி தளத்தை உள்ளன்புடன் வைத்தாலே போதும். படாடோபமாய் பல ரூபாய்கள் செலவுடன் செய்யும் பூஜையை நான் விரும்புவதில்லை என்கிறான் கீதாசார்யன் கண்ணன்.அதுபோல் அன்னையும் இதைத்தான் விரும்புகிறாள். எங்கு உண்மையான அன்பு இருக்கிறதோ அங்கு முதியோர் நிலையங்கள் ஏற்பட வாய்ப்பு மிக மிக குறைவு.

    நம் ஒவ்வொருக்கும் நம் அன்னை செய்த தியாகமும், காட்டி வரும் அன்பும், பட்ட கஷ்டங்களும் வார்த்தைகளில் அடங்கமுடியாது. அன்னையின் பெருமானத்தை தராசில் வைத்து இன்னொரு பக்கம் நம் அன்பு இருக்க அது ஓரளவு சமமாக காட்டலாம். ஆனால் பரிசோ .பணமோ .வேறு பொருட்களோ தராசு தட்டில் ஏற்ற அது சமமாக ஆகுமா என்பது சந்தேகம் தான்.

    அன்னையர் தின நல் வாழ்த்துகள் . அன்னையருக்கு என் வணக்கங்கள்.

     

    படம் உதவி: நன்றி மன்னன் திரைப்பட உரிமையாளருக்கு.  இப்படம் மன்னன் திரைப்படக் காட்சியை கொண்டு உருவாக்கப் பட்டது.

    Share
  • நிம்மதி நெஞ்சில் நிற்கும்!

    எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    அடிக்கடி அழுவாய் நீயும்
    அனைவரும்  விழிக்கச் செய்வாய்!
    துடித்து நாம் ஓடிவந்தால்
    தூக்கமாய் இருப்பாய் அப்போ                                                           nimmathi nenjil nirkum
    அடிக்கவா முடியும் உன்னை?
    அரவணைத் திடுவோம் நாங்கள்!
    சிரிப்புடன் விழித்துப் பார்ப்பாய்
    சிலிர்த்துமே நிற்போம் அங்கே!

    பல் இல்லா வாயினாலே
    பலகதைச் சொல்வாய் நீயும்!
    சொல்லிடும் கதைகள் கேட்டுச்
    சொக்கியே நிற்போம் நாங்கள்!
    மெல்லிய விரல்கள் கொண்டு
    மேனியைத் தீண்டும் போது
    எல்லையில் இன்பம் வந்து
    எங்களை அணைத்தே நிற்கும்!

    கவலையில் மூழ்கி நாங்கள்
    கட்டிலில் இருக்கும் போது
    ’களுக்’கென்று சிரித்து நிற்பாய்
    கவலைகள் பறந்தே போகும்!
    பதட்டமாய் இருக்கும் போது
    பால்முகம் பார்த்தோ மாயின்
    நெருக்கடி மறைந்தே போகும்
    நிம்மதி நெஞ்சில் நிற்கும்!

    பிரசவத்தில் தாய் அழுவாள்
    பிறந்தவுடன் நீ அழுவாய்
    பெண்ணாகப் பிறந்து விட்டால்
    பெற்றவரும் அழுதிடுவார்!
    அழுதழுது பிள்ளை பெற்று
    ஆருக்கு என்ன பயன்?
    அப்படி நினைப்பதனை
    அடியோடு மறவுங்கள்!

    ஆண்பிள்ளை பெண்பிள்ளை
    அத்தனையும் எம்பிள்ளை!
    ஆதலால் பிள்ளைதனில்
    அன்னியத்தைக் காட்டாதீர்!
    பிள்ளையின் சிரிப்பினிலே
    கொள்ளையின்பம் இருக்குதப்பா!
    குழந்தைகளைத் தெய்வமாய்க்
    கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!

    மலடு என்று பேசாமல்
    மனங் குளிரச் செய்வதற்கு
    வரமாக வந்ததுவே
    மடிதவழும் எம் குழந்தை!
    குழந்தை என்று சொன்னாலே
    குதூகலமே வந்து நிற்கும்!
    குழந்தைகளைப் பெற்றிடுவோம்
    குறைவின்றி வாழ்ந்திடுவோம்!

     

    Share