தாயினும் சிறந்த ஒரு கோயிலுமில்லை
— விசாலம்
“அன்னையர் தினம்” எப்போது ஆரம்பித்தது?
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் வேதம் தோன்றிய காலத்திலிருந்தே அன்னையை வணங்கும் கருத்து இருந்திருக்கவேண்டும் வேதமும் அன்னையைப் பூஜிக்கும் தருமத்தை சொல்கிறது .’மாத்ரு தேவோ பவ’ . என்பதிலிருந்து அன்னை ஒரு தெய்வமாகவே கருதப்படுகிறாள். அடுத்ததாக ஔவையாரும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார். சக்தி இல்லாமல் சிவம் இல்லை என்பதும் அர்த்தநாரீஸ்வரர் தோற்றமும் பெண்ணின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
ஜகத்குரு சங்கராசார்யார். அவர்கள் எழுதிய ‘மாத்ரு பஞ்சகம் ‘என்பதைப் படித்தால் கண்களில் தன்னால் கண்ணீர் நிரம்பிவிடுகிறதே! அதில் ஆரம்பத்திலேயே அவர் “என்னை ஈன்ற அன்னையே. என்னை பெற்றெடுத்த போது நீ பட்ட வலி என்னென்பேன்.வலி பொறுக்கமுடியாமல் உன் பற்களைக்கடித்தாய். பிரசவ வலியில் துடி துடித்தாய். நானோ மலங்களினால் பல வருடம் துர்நாற்றம் அடையச்செய்தேன். அம்மா ! பாவி நான். கருவிலிருந்தபோதே ஊனினை உருக்கி, உடலினை வருத்தி, உதிரத்தால் உணவு தந்து உயிர் கொடுத்தாய். நான் உனக்கு என்ன கைமாறு செய்வேன்? பேரும், புகழும், பொன்னும், பொருளும் தந்து போற்றினாலும் போதாது ” என்று அவர் தாயின் மரணம் போது பாடிய பாடல்கள் ‘ மாத்ரு பஞ்சகம் ‘.
சிலர் இன்றும் தங்கள் வீட்டில் “சுமங்கலி பிரார்த்தனை’ என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். அதில் சுமங்கலியாக இறந்து போன தங்கள் சொந்த பந்தங்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கென்று விருந்தும் படைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியும் ஓரளவு அன்னைகளை நினைவு கூர்வதாக இருக்கிறது.
அன்னையருக்கு முதல் விழாவாக சைபீல் என்ற பெண் தெய்வம் வணங்கபட்டு அவளை முதல் தாய் கடவுளாக பிரிஜியா மக்கள் ஏற்றுக்கொண்டு அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.
ரோமானிய மக்கள் தங்கள் தாய் தெய்வத்திற்கு பாலடைன் மலையில் ஒரு கோயிலை கட்டினர். பின் வருடாவருடம் மார்ச் மாதம் 15 ந்தேதி ஆரம்பித்து மூன்று நாட்கள் திருநாளாக கொண்டாடினர். அம்மனுக்கு படையல் வைப்பது போல் இந்த தாய் தெய்வத்திற்கும் படையல் வைத்தனர்.
கிருஸ்துவ மதத்தில் ஏசுபிரான் பாலையில் கழித்த நாளை ஞாபகப்படுத்திக்கொள்ள நோம்பு என்று நாற்பது நாட்கள் விரதம் இருந்து பின் கடைசி ஞாயிறு அன்று மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட தேவாலயத்திற்குச்சென்று பரிசுகள் கொடுக்கும் தினமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாம் .
கிரேக்கர்களை எடுத்துக்கொண்டால் வசந்த காலம் வந்ததும் தாய் தெய்வத்தை வணங்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.அவர்களது தாய் தெய்வமாக ரேஹா என்பவர் வணங்கப்பட்டார்.
ரோமில் இருக்கும் மக்கள் வசந்த காலத்தில் சைபெலி என்ற பெண் தெய்வத்தை தங்கள் தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிப்பாட்டில் பிரார்த்தனை தவிர நமது கிராமத்தில் மாரித்தாய்க்கு முன் கரகம், வீரவிளையாட்டு, நடனங்கள் போன்று நடப்பது போல் இங்கும் பல கலை நிகழ்ச்சிகள் நடைப்பெறுமாம்.
தற்போது நாம் கொண்டாடும் அன்னையர் தினம் மிகவும் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த
அன்னையர் தினம் ஆரம்பித்து வைத்த ஜார்விஸ் என்ற பெண். திருமணமாகாதவர். தனக்கென்று ஒரு பிள்ளையை வளர்த்தவரும் இல்லை. ஆனால் இவரது முயற்சியால்தான் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இவர் அமெரிக்காவில் மேற்கு வெர்ஜீனியாவில் கிராப்டன் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் ஏகப்பட்ட போர். அந்தப்போரில் பலர் தங்கள் சொந்தபந்தங்களை இழந்து தனித்து விடப்பட்டனர். சிதைந்து குலைந்துப்போன குடும்பங்களை ஒன்று சேர்க்கவும். அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கவும் பாடுபட்டு ஒரு சமூக சேவகியானார். அவர் இதற்காக பாடுப்பட்டது கொஞ்சம் நஞ்சமல்ல. அவரது அயாரத உழைப்பு அவரது 84 வயது வரை நீடித்தது.
ஆஸ்பத்திரியில் அவரது கடைசி நேரம் நிருபர்களை அழைத்தார். “அன்பர்களே, உலகமுழவதும் ‘மதர்ஸ் டே’ கொண்டாட வேண்டும் என்பதே என் ஆசை. அன்னையர் தினம் பெற்ற அன்னைக்கு மட்டுமல்ல. மற்ற அன்னையர்களையும் வணங்கி .மதித்து வணங்க வேண்டும். அவர்கள் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். இதுவே என் கடைசி ஆசை”.
அவரது ஆசை பூர்த்தியானது எல்லோருக்குமே மகிழ்ச்சிதான். ஆனால் அவர் அன்றைய தினத்தில் ஆத்மார்த்த அன்பும், பாசமும், மதிப்பும் அளிக்கும் அன்னை தினத்தையே எதிர்ப்பார்த்தார். இதில் கடமையே என்று செய்யும் எண்ணம் தவிர்த்து ஆழ்மனதிலிருந்து எழும் அன்புணர்ச்சியே தேவையாகிறது. “எங்காத்துக்காரரும் கச்சேரி போகிறார்” என்று சிலர் பேருக்காக ஏதோ பொருளை வாங்கி அன்னைக்கு அனுப்புகின்றனர். தவிர இருக்கவே இருக்கு “Flip kart ” வியாபரஸ்தலம். வீட்டில் அமர்ந்தபடியே எதை வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். நேரம் மிச்சம். கடையின் நெருக்கடி கிடையாது.
பெட் ரோல் செலவு கிடையாது. ரொம்ப சௌகரியமான சமசாரம் தான். ஆனால் நேரே அன்னையிடம் சென்று அவள் ஆனந்தக்கண்ணீர் வடித்து நம்மை பார்க்க, நாம் அவளை அணைக்க, அவளுக்கு அந்த நேரம் கிடைக்கும் சுகம் இருக்கே அது தனி சுகம் தான். அது வேறு எங்கேயாவது கிடைக்குமா? அதை விட்டு விட்டு ஏதோ ஒரு பொருளை எங்கிருந்தோ அனுப்புவது ஒரு இயந்தரம் போல் இது எனக்கு தோன்றுகிறது. ஒன்றுமே இல்லாததற்கு ஏதோ இதாவது இருக்கே என்று வேண்டுமானால் மனம் சமாதானமடையலாம் .
இது போல் தினங்கள் வந்தால் வியாபாரிகளுக்குத்தான் கொண்டாட்டம். ஆன்நா ஜார்விஸ் இருக்கும் போதே ஒரு கம்பெனி அன்னையின் படம் ஒன்றை போட்டும், கொடி ஒன்றை விற்றும் பணம் புரட்ட ஆரம்பித்தது. இதை ஆன்நா ஜார்விஸ் அறிய அவருக்கு மிகவும் கோபம் வந்தது. அன்னையர் தினம் வியாபார நோக்குக்காக எழுந்த தினமல்ல. ஆகையால் அந்தக்கொடி விற்பனையைக்குறித்து வழக்கு தாக்கல் செய்தார். அன்னையர் தினம் மனம், உணர்ச்சிகள் பின்னிக்கொண்ட தினமாக இருக்க வேண்டுமே தவிர அதில் லாபம் அடையும் நோக்கம் கண்டிப்பாக இருக்கக்கூடாது என்று அதற்காக வாதாடி வெற்றியும் பெற்றார்.
அன்னையரை மதிக்க நமது சக்திக்கேற்றாற்போல் ஏதாவது செய்தாலே போதுமானது. இரண்டு துளசி தளத்தை உள்ளன்புடன் வைத்தாலே போதும். படாடோபமாய் பல ரூபாய்கள் செலவுடன் செய்யும் பூஜையை நான் விரும்புவதில்லை என்கிறான் கீதாசார்யன் கண்ணன்.அதுபோல் அன்னையும் இதைத்தான் விரும்புகிறாள். எங்கு உண்மையான அன்பு இருக்கிறதோ அங்கு முதியோர் நிலையங்கள் ஏற்பட வாய்ப்பு மிக மிக குறைவு.
நம் ஒவ்வொருக்கும் நம் அன்னை செய்த தியாகமும், காட்டி வரும் அன்பும், பட்ட கஷ்டங்களும் வார்த்தைகளில் அடங்கமுடியாது. அன்னையின் பெருமானத்தை தராசில் வைத்து இன்னொரு பக்கம் நம் அன்பு இருக்க அது ஓரளவு சமமாக காட்டலாம். ஆனால் பரிசோ .பணமோ .வேறு பொருட்களோ தராசு தட்டில் ஏற்ற அது சமமாக ஆகுமா என்பது சந்தேகம் தான்.
அன்னையர் தின நல் வாழ்த்துகள் . அன்னையருக்கு என் வணக்கங்கள்.
படம் உதவி: நன்றி மன்னன் திரைப்பட உரிமையாளருக்கு. இப்படம் மன்னன் திரைப்படக் காட்சியை கொண்டு உருவாக்கப் பட்டது.