Blog

  • ஓம் எனும் பிரணவ ரூப நாயகா!

    ஓம் எனும் பிரணவ ரூப நாயகா!

    உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றிய ‘ஓம் எனும் பிரணவ ரூப நாயகா’ என்ற பாடலைத் திருமதி விஜயலட்சுமியின் குரலில் கேளுங்கள். 72 வயதிலும் இனிமையாகப் பாட முடியும்; திறமைக்கு முதுமை ஒரு தடையில்லை என இவர் நிரூபிக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வல்லமைக்கு நன்கொடை தாரீர்

    வல்லமைக்கு நன்கொடை தாரீர்

    வல்லமை மின்னிதழ் (www.vallamai.com), 12ஆம் ஆண்டில் நடைபயில்வதை அறிவீர்கள். தமிழில் ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் முதல் இதழ் வல்லமை. பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரத்தை இரண்டு ஆண்டுகள் பெற்றிருந்த இதழ். ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட, ஆய்வாளர்களிடம் கட்டணம் பெறாத இதழ். முற்றிலும் இலவசமாகச் செயல்படுகிறது. இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேலான ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம்.

    வல்லமைக்கு நிதியாதாரம் எதுவும் இல்லை. ஆயினும் ஆண்டுதோறும் சில கட்டணங்களை நாம் செலுத்தவேண்டி இருக்கிறது. தளப்பெயரைப் புதுப்பித்தல், வழங்கிக் கட்டணம், வலைத்தள நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் நமக்கு இன்றியமையாத செலவுகள் உள்ளன. இதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பொதுவில் நன்கொடை கோருகிறோம்.

    வழங்கிக்கு 2019ஆம் ஆண்டே மூன்றாண்டுகளுக்கும் சேர்த்துக் கட்டணம் செலுத்தியுள்ளோம் (அப்படிச் செலுத்தினால் கட்டணம் சற்றுக் குறைவாக இருந்தது). அந்தச் சேவை, 2022 ஆகஸ்டு வரை கிடைக்கும். அதன் பிறகு அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.

    இப்போது வலைத்தள நிர்வாகிக்கு ரூ.12 ஆயிரம் (ஆண்டுக்கு), தளப் பெயர் புதுப்பித்தலுக்கு ரூ.1 ஆயிரம் என 13 ஆயிரம் தேவை. பேராசிரியர் ம.இராமச்சந்திரன், ரூ.3 ஆயிரம் நன்கொடை வழங்கியுள்ளார். எனவே இப்போது 10 ஆயிரம் நன்கொடை கிடைத்தால், அடுத்த ஆண்டு ஆகஸ்டு வரை சிக்கல் இருக்காது. அதன் பிறகு புதிய நன்கொடைகள் தேவைப்படும்.

    எனவே, வல்லமை தொடர்ந்து செயல்பட, அருள்கூர்ந்து நன்கொடை வழங்கி, உதவ வேண்டுகிறோம்.

    உங்கள் நன்கொடைகளைக் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்புங்கள்.

    Account Name: Annakannan K
    Account No: 602701508602
    Bank Name: ICICI Bank
    Bank Address: No-101, 3rd Ave, A Block, Anna Nagar, Chennai, Tamil Nadu 600102
    IFSC Code: ICIC0006027
    Swift Code: ICICINBBNRI

    PhonePe / Google Pay / UPI மூலமாகப் பணம் அனுப்ப: annakannan@ybl, annakannan@okicici

    உங்கள் பங்களிப்பு மூலமாக வல்லமையை வலிமைப்படுத்துங்கள்.

    அன்புடன் என்றும்
    அண்ணாகண்ணன்
    நிறுவனர் & முதன்மை ஆசிரியர்
    வல்லமை மின்னிதழ்
    செல்பேசி: 9841120975

    Share
  • தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா?

    தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா?

    தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா? யாருக்கு இது ஏற்றது? எப்படி முதலீடு செய்யலாம்? எவ்வளவு லாபம் கிடைக்கும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Please follow few tips for all our welfare

    Please follow few tips for all our welfare

    Baskar Seshadri

    Please avoid long hours of shopping

    Make Purchases Locally and avoid travel

    Spend not more than one Hour or so

    Go well with Mask and hold sanitizer on Hand

    Avoid Group shopping

    Avoid Joints if possible and Cool Drinks

    Make a quicky buy and rush back

    Avoid Public Transport

    Don’t stay long out.

    If Not vaccinated avoid outing

    Wear Gloves if you can

    Filter Visitors of all Kinds in Premises

    —————————————–

    Let’s Drive Covid Out soon

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 38

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 38

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    அகத்திணை விளக்கும் புறத்திணை உவமங்கள் – 2

    உவமம் செய்யுளணியாகக் கருதப்பட்டது தமிழக வரலாற்றில்  வடமொழித் தாக்கம் மிகுந்திருந்த பிற்பட்ட காலத்தில் என்பது நினைவுகூரத்தக்கது. வேதனை என்னவென்றால் பழந்தமிழ்ப் பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் தமிழ்க்கவிதை மரபறிந்த அறிஞர் பலரும்கூடச் சங்க இலக்கிய உவமப் பதிவுகளை ‘உவமையணி’ எனக் கருதி மயங்கியதும் வெளிப்படுத்தியதுமாகும். சொல்ல வந்த பொருளைப் புலப்படுத்துவதற்குக் கருவியாக இருந்தது உவமம். வெறும் அழகியலுக்காகப் பயன்படுவது உவமையணி. முன்னது பொருளோடு கலந்திருப்பது. பின்னது செய்யுளுக்குப் புறம்பாக நிற்பது. முன்னது உடம்பிற்குத் தோலாகி அரணாகும். பின்னது மேனிக்கு அணியாகி மினுக்கும். நுட்பமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மை இது. படைப்பாளனால் படைக்கப்படும் பாத்திரங்களுக்கும் அப்பாத்திரங்கள் பேசும் சொற்களுக்கும் பொருத்தம் இருத்தல் வேண்டும் என்பது படைப்புக் கொள்கை. திறனாய்வுக் கண்காணிப்பில் இது வெளிப்படும். சான்றாகக் கலாய் பூசுகிறவன் கலித்தொகையின் உள்ளுறை உவமம் பற்றிப் பேசினால் அது பொருந்தாமல் போய்விடும். தான் சென்று அறியாத இடத்துப் பொருளை ஒருத்தி உவமமாகச் சொன்னால் அதில் நம்பகத்தன்மையிருக்காது. இந்தக் கொள்கையைப் பரணர் கடைப்பிடிக்கிறார். அதுதான் அவரது தனிச்சிறப்பு. வரலாற்று நிகழ்வுகளாகிய புறத்திணைச் செய்திகளை அகத்திணை விளக்கங்களுக்கு அவர் பயன்படுத்துகிறபோது தோழி முதலிய அகத்திணை மாந்தர்களின் பொது அறிவைத் தனது கவனத்திற் கொள்கிறார். திணை, தலைவி, செவிலி என்னும் வட்டத்திற்குள் சுழலும் தோழி கண்காணாப் போர்க்களத்து ஆர்ப்பினை உவமம் சொல்கிறாள் என்றால் தோழியாகிய அப்பாத்திரத்தின் பொது அறிவைப் பரணர் வெளிப்படுத்திக் காட்டுகிறார் என்றே கொள்ள வேண்டியதிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் சென்ற கட்டுரையை இந்தக் கட்டுரை வழிமொழிந்து தொடர்கிறது.

    உவட்டாத உவமப் பந்தி

    இரவுக்குறி காண, தான் வந்திருப்பதைத் தலைவியிடம் தெரிவிக்கும் ஊடகம் இன்றித் தவிக்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்வதாக அமைந்த பாட்டு, தன் வருகையை அறிந்தால் ‘இரும்பல் ஒலி கூந்தலையுடைய அவள் மகிழ்ச்சியடைவாள் என்பது’ மட்டுமே துறைவிளக்கம். இந்தத் துறைவிளக்கத்தை உவமப்பந்தியில் வைத்துப் பரிமாறுகிறார் பரணர். ‘கூந்தலையுடைய தலைவி’ எனச் சொன்ன பரணர் அந்தக் கூந்தலின் நறுமணத்திற்கு வல்வில் ஓரியின் கானகத்து மணத்தை ஒப்பிடுகிறார். ‘அத்தம்’ என்பது காட்டுவழி. “கல்லதர் அத்தம் கடக்க யாவதும்” என்பது சிலப்பதிகாரம். அந்தப் பகுதியில் விளைந்திருக்கும் குமிழ மரத்தின் வளைந்த மூக்கினை உடைய கனிகள் அவ்விடத்தே விளையாடும் மான்களுக்கு உணவாகி  மணம் கமழும் காடு.

    “அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
    எறிமட மாற்கு வல்சி ஆகும்
    வல்வில் ஓரி கானம் நாறி
    இரும்பல் ஒலி வரும் கூந்தல்
    பெரும்பே துறுவள் வந்தனம் எனவே”  (நற். 6)

    ஆயிரம் காடுகளை அறிந்தவர் பரணர். இந்தப் பாட்டில் வல்வில் ஓரி என்னும் வள்ளலின் காட்டையே முன்னிறுத்துகிறார் என்பதுதான் உவமச்சிறப்பு. இனித், தலைவியின் ஒட்டுமொத்த நலனுக்கு ஓரியின் கானகத்தை உவமமாக்கிய பரணர்,

    “நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
    நார் உரித்தன்ன மதனில் மாமைக்
    குவளை அன்ன ஏந்தெழில் மழைக்கண்
    திதலை அல்குல் பெருந்தோள் குறுமகட்கு
    எய்தச் சென்று செப்புநற் பெறினே
    ‘இவர் யார்  என்குவள் அல்லள்! முனாஅது”

    என்னும் வரிகளில் அவள் மேனியில் படர்ந்திருக்கும் மாமை நிறத்திற்கு ஆம்பலின் உரித்த தண்டின் நிறத்தையும், அவளுடைய குளிர்ச்சியான கண்ணிற்குக் குவளை மலரையும் உவமித்துக் காட்டியிருப்பது மரபு பற்றியது என்க. மாமை, பசலை என்னும் தலைவி மேனியின் நிறவேறுபாடுகள் இரண்டாயினும் மாமை குறிஞ்சிக்குரியது. பசலை பாலைக்குரியது. இதன் நுண்ணியத்தைத்,

    “திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க
    புதல் இவர் பீரின் எதிர்மலர் கடுப்ப
    பசலை பாய்ந்த நுதலேன் ஆகி” (அகம். 135)

    என்னும் அகத்தானும்,

    “இனி பசந்தன்று என் மாமைக் கவினே”  (ஐங்.35)

    என்னும் ஐங்குறுநூற்றானும்,

    “பசலை உணீஇயர் வேண்டும்
    திதலை அல்குல் என் மாமை கவினே (குறுந். 27)

    என்னும் குறுந்தொகையானும் அறிந்து கொள்ளலாம். மாமை உடலுறுப்புக்களின் வண்ணம். பசலை தலைவனின் பிரிவாற்றாமையால் தலைவி உறும் நோய்!

    தலைவன் அடைந்த தண்ணுமை அதிர்ச்சி

    தலைவியை விட்டுப் புறத்தொழுக்கமாகிய பரத்தைமாட்டுச் சென்ற தலைவன், தலைவி பற்றிய எண்ணம் மீதூர மீண்டும் தலைவிபால் திரும்புகிறான். இந்நாள் வரை தன்னுடன் இருந்த தலைவனின் பிரிவைத் தாங்காத பரத்தை அவனுக்குப் பாங்காயினார் செவியில் விழுமாறு தன்னைச் சார்ந்த விறலியர்க்குக் கூறுதல்போல் தலைவனுடைய இயல்பைப் பழிக்கிறாள்.

    “முனை ஊர்ப்
    பல் ஆ நெடுநிரை வில்லின் ஒய்யும்
    தேர்வண் மலையன் முந்தை பேர் இசைப்
    புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்
    மண்ணார் கண்ணின் அதிரும்” (நற். 100)

    தன்னுடைய ஐம்பாலாகிய கூந்தலினைப் பற்றித் தன்னுடைய வளையல்களைப் பற்றிய அவன் செயலைத் தலைவிபால் சொன்னால் அவன் அதிர்ச்சி அடைவான். அந்த அதிர்ச்சி எதனைப் போன்றிருந்தது என்பதற்குத்தான் மேலே உள்ள மலையமான் திருமுடிக்காரியின் முரசின் மார்ச்சனை வைத்த கண்ணிடம் அதிர்வதை உவமமாக்குகிறார் பரணர். மன்னனிடம் பரிசுபெறும் நோக்கத்துடன் வரும் கூத்தர்கள் முழவினை முழங்குகிறபோது உண்டாகும் அதிர்ச்சி என்று உவமித்திருந்தாலும் பாட்டின் சிறப்பு குன்றப்போவதில்லை. ஆனால் பரணர் மலையமானின் வள்ளன்மையைப் பாராட்டும் புறத்திணை நிகழ்வை ஒரு நோக்கத்திற்காகவே உவமமாக்கியிருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.

    அழகுக்கு ஆயிரம் உவமங்கள்

    ஒரு பொருளை விளக்க ஒன்றுக்கு மேற்பட்ட உவமங்களைச் சொல்லுகிற நெறி சங்க இலக்கியங்களிலேயே தொடங்கிவிடுகிறது. அவ்வாறு அடுக்கிவரும் உவமங்கள் வெளிப்படுத்தப்படும் சூழல்கள் மிகவும் கவனத்திற்குரியது. தலைவியைச் சந்திக்க இயலாத ஆற்றாமை காரணமாகப் புலம்பும் தலைவன் தலைவியின் அழகைப் பல உவமங்களால் சித்திரிக்கிறான். இது இயல்பு. குழந்தையைக் ‘கண்ணே மணியே! முத்தே!’ என்பது போல.

    “இறுகுழல் மேய்ந்த அறுகோட்டு முற்றல்
    அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை
    வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
    பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
    பாரத் தன்ன”

    (இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)

    இவற்றுள் முந்தைய இரண்டு வரிகளில் மிஞிலியின் குறிஞ்சியைப் பாடிய பரணர் அடுத்த மூன்று வரிகளில் அவனுடைய புறப்பொலிவை வண்ணனை செய்து அவன் நாட்டைத் தலைவியின் கூந்தல் பொலிவுக்கு உவமமாக்குகிறார். இனித் தொடர்ந்து,

    “வார மார்பின்
    சிறுகோல் சென்னி ஆரேற்று அன்ன”

    (இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)

    எனச் சோழனை உவமப்பொருள் ஆக்குகின்றார். ‘ஆரேற்று’ என்பது தேரோட்டம் என்பது போன்றதொரு திருவிழா. சென்னியாகிய சோழன் தனக்கடங்கிய தலைவர்களை வரவேற்றுப் பாராட்டி ஆத்திமாலைப் போற்றும் ஒரு திருவிழா. அந்தத் திருவிழாவின் பொலிவை உவமிக்கும் பரணர் தொடர்ந்து,

    “மாரி வண்மகிழ் ஓலிகொல்லிக்
    கலிமயிற் கலாவத்து அன்ன”

    (இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)

    என நிமிர்ந்து நிற்கும் செருக்கினால் பொலிவு பெற்ற மயிலை உவமிக்கிறார் பரணர். இந்த மயில் ‘மாரி போல வரையாது வழங்கியதால் புகழ் பெற்ற ஓரி என்பானின் கொல்லிமலையில் வாழும் மயில்’ என்கிறார். ஒரு பொருளின் பொலிவுக்குத் தனித்தன்மையுடைய மூன்று பொருள்களை உவமமாகக் கொள்வது கவனிக்கத்தக்கது.  நாடு, திருவிழா, மயில் என்னும் மூன்று பொருள்களும் தலைவியின் அழகுக்கு உவமமாக வந்துள்ளன என்பதை அறியலாம்.

    நன்னன் கொடுமையினும் நின்னது பெரிதே!

    பரத்தையர் மாட்டுச் சென்று மீண்ட தலைவன் வாயில் நேர்கிறான். தலைவி வாயில் மறுத்த நிலையில் இருவருக்கும் நட்பான தோழி, இணக்கமான சூழலை உருவாக்க எத்தனிக்கிறாள். தலைவன் மாட்டுத் தலைவிக்குள்ள இரக்கம் அவள் அறிந்ததாதலின் பெருந்தோள் செல்வமாகிய தலைவியை உயர்த்தியும் தலைவனின் பரத்தையர் பிரிவைக் கொடுமையாகச் சித்திரித்தும் வாயில் நேர்கிறாள். இந்தச்சூழலில் தலைவனின் செயல் கொடுமைக்கு நன்னன் என்பானின் கொடுமையை உவமமாக்குகிறார் பரணர்.

    “……………………………………………..பொற்புடை
    விரியுளை பொலிந்த பரியுடை நன்மான்
    வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்
    கூந்தல் முரற்சியின் கொடிதே!

    மறப்பல் மாதோ நின் விறல்தகை மையே!” (நற்.270)

    பகையரசருடைய உரிமை மகளிரை அவர்தம் கூந்தல் பற்றி இழுத்து வருதல் அக்காலப் போரறங்களுள் ஒன்றாகாதாயினும் நன்னன் முதலியோர் அத்தகைய மறச்செயலைச் செய்திருப்பதை இதனால் அறியலாம். அதனால்தான் அந்தச் செயலை எதிர்மறையால் பரணர் பதிவு செய்திருக்கிறார். ‘கூந்தல் முரற்சியின்’ என்றவிடத்து முன்பு சொன்னது போல ‘இன்’ என்னும் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருளில் வந்து, உவம உருபுக்கான பணியினைச் செய்தது என்பதாம்.

    இருப்பை அன்ன தொல்கவின்

    ‘இருப்பை’ என்பது தற்காலத்துப் புதுக்கோட்டை மாவட்டத்துள் இருக்கும் இலுப்பூர் என்பது அறிஞர் கருத்து. அவ்வூர்ச் சிறப்பையும் அதனையாண்ட விரான் என்பானின் வள்ளன்மையும் கூறி அதனைத் தலைவியின் எழிலுக்கு உவமமாக்கியிருக்கிறார் பரணர்.

    “வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
    பழனப் பல்புள் இரீஇயக் கழனி
    வாங்குசினை மருதத்துத் தூங்குதுணர் உதிரும்
    தேர்வண் விராஅன் இருப்பை அன்ன என்

    தொல்கவின் தொலையினும் தொலைக!“ (நற். 350)

    தொல்கவின் என்பதற்கு ஆசிரியர் பரிமேலழகர், ‘பழைய இயற்கை அழகு’ (1234 -1235) என உரை கண்டிருப்பதால் அவ்வுரை நயத்தைப் பரணர் பாட்டின் பொருளுக்கு ஏற்றி உவமத்தை நோக்கினால் தேர்வண் விராஅன் இருப்பையின் அழகு இயற்கை என்பது பெறப்படும்.

    “தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்
    மலிபுனல் வாயல் இருப்பை அன்ன என்
    ஓலியல் கூந்தல் நலம்” (260)

    என்னும் மற்றொரு பாட்டிலும் இருப்பையை உவமமாக்கிக் கூறுகிறார் பரணர். இந்தப் பாட்டில் தலைவியின் அழகு பெரிதும் பொலிவு பெறுவது  கூந்தலால் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்த எண்ணிய பரணர், “இருப்பை அன்ன என் ஒலியல் கூந்தல் நலம்” என்றது காண்க.  முன்னதில் தேர்வண் விராஅன் என்றவர் இப்பாட்டில் தெவ்வர் தேய்த்த செவ்வேல் வயவன் என்கிறார். தலைவியின் அழகுக்கு விராஅன் என்பானின் இயற்கை வளம் நிரம்பிய இருப்பை நகரத்தை உவமிப்பதில் அவருடைய உவமக் கோட்பாட்டை அறிந்து கொள்ள முடிகிறது. ‘விராஅன் மலை’ என்பது ‘விராலிமலை’ எனத் திரிதற்குக் காரணம் என்பதும்  ஈண்டுச் சுட்டுதற்குரியது.

    பிச்சையெடுக்கும் யானைபோல

    களவு நீட்டித்த தலைவன் தனது பாங்காயினார் வழி, மேலும் நீட்டிக்க விழைய, அது கண்ட தோழி “அயலான் ஒருவனும் தலைவியை மணந்து கொள்ளும் விருப்பத்துடன் வந்து போனான்” என்று அச்சுறுத்துவதுபோல வரைவு கடாவுகிறாள். இந்தப் பாட்டில் மூன்று வகையான உவமங்களைப் பரணர் அடுக்கிக்காட்டுகிறார். இந்த அடுக்கினை முன்னிருந்து பின்னாகவும் ரசிக்கலாம். பின்னிருந்து முன்னாகவும் ரசிக்கலாம். இது அவரவர் சுவையுணர் திறத்தினைப் பொருத்தது. தலைவனுக்காக வந்தவன் நீட்டித்து நிற்கிறானாம். எது போல?

    “நெய் வார்ந்தன்ன துய்யடங்கு நரம்பின்
    இரும்பான ஒக்கல் தலைவன் பெரும்புண்
    ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்
    பிச்சை சூழ் பெருங்களிறு போல எம்
    அட்டில் ஓலை தொட்டனை நின்மே!” (நற். 300)

    வாயிலாக வந்த பாணனை நோக்கித் தோழி கூறும் பகுதி இது. “பெருந்தேரோடு வந்த அவனோடு நீயும் செல்லாமல் “போர்க்களத்திலே பெரும்புண்பட்டவனாகிய அழகினைக்கொண்ட தழும்பன என்பானின் ஊணூரிடத்தில் உள்ள பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றலைப் போல நிற்கிறாய்” என்று உடன் வந்த பாணனை ஏசுகிறாள் தோழி. போர்க்களத்துக் களிறு வேறு. பிச்சைக்கு வந்த பெருங்களிறு வேறு.  யானை எங்கே நிற்கிறதாம்? அட்டில் சாலை ஓலைக்குடிசையின் விளிம்பினைத் தொட்டுக் கொண்டு நிற்கிறதாம்!, பாணனுக்கு உவமமாக வந்தது யானை என்பது சரி!. ஆனால் அந்த யானைக்கு வரலாறொன்று இருக்கிறது. தழும்பனின் அந்த வரலாற்றைப் பரணர் யானைக்கு அடையாக்குகிறார். இது முதல் நிலை. இனி இரண்டாவது நிலை. பாணன் யாருக்கு வாயிலாக வருகிறான் என்றால் மருத நிலத் தலைவனுக்குப் பாங்காக வருகிறான். பணிவோடு வருகிறான். அந்த மருத நிலம் எத்தகையது? இங்கே இன்னொரு உவமத்தை நேரடியாகச் சொல்லாமல் பரணர் உள்ளுறையாக அமைக்கிறார்.

    “உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
    தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன்!”

    என்று கூறுகிறார். மருத நிலத் தடாகத்தைத் தன் வண்ணனைக்கு உட்படுத்தும் பரணர் தாமரைக்கு இறைஞ்சும் ஆம்பலுக்குச்,

    ““சுடர்த்தொடி கோமகள் சினந்தென அதன் எதிர்
    மடத்தகை ஆயம் கைதொழுது ஆங்கு” (நற். 006)

    கோமகளைத் தொழும் பணிமகள் ஆயத்தை உவமமாக்குகிறார். ஆம்பல் வணங்கும் தடாகத்துத் தாமரையை வணங்கும் ஆம்பல் கூட்டத்திற்குத் தேவியை வணங்கும் மகளிர் ஆயத்தை உவமமாக்கியது இயற்கைக்குச் செயற்கை உவமமாகியது என்க. இனிப் பெருங்களிறே பாங்கனுக்கு உவமமாக நிற்க, அந்தக் களிற்றைத் தழும்பன் ஊரோடு சார்த்திச் சொன்னது வரலாற்று உவமமாம்.

    நிறைவுரை

    பெண்ணின் பொலிவோ அவள் கூந்தலின் பொலிவோ நுண்பொருள். நகரம் பருப்பொருள். நகரத்திற்கும் நங்கையின் கோலத்திற்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை. ஆனால் பரணர் நங்கையின் பொலிவுக்கும் சிதைவுக்கும் நகரத்தை உவமமாக்குகிறார் என்றால் அவற்றில் உள்ள நுண்ணியத்தைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். நகரம் மாற்றாரின் படையெடுப்புக்கு முன் என்றும் மாற்றாரின் படையெடுப்புக்குப் பின் எனவும் இருவகைப்படும். பரணர் முன்னதைத் தலைவனோடு இருந்த நிலைக்கும் பின்னதைத் தலைவனைப் பிரிந்த நிலைக்கும் உவமிக்கிறார் என்பதை உய்த்துணர்தல் வேண்டும். ‘தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது” எனத் துள்ளிக் குதிக்கும் தலைவனின் பின்புலக் காட்சியைப் போலவும் “தேரேது? சிலையேது? திருநாள் ஏது?” என்று பாடும் ஒரு தலைவியின் பின்புலக் காட்சியைப் போலவுமே பரணரின் உவமச் சித்திரிப்பின் உள்நோக்கம் என்பதைப் புரிந்து கொண்டால் அவரின் உவமக் கோட்பாடுகளையும் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானவையல்ல! புறத்திணை வரலாற்றுக் குறிப்புக்களை அகத்திணை இலக்கியத்தில் உவமமாகக் கையாளும் பரணரின் உவமக்கோட்டை எந்த மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கையாலும் மதிப்பிடுதல் அரிது!

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(373)

    குறளின் கதிர்களாய்…(373)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(373)

    உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து
    மடையாவாம் ஆயங் கொhளின்.

    – திருக்குறள் – 939(சூது)

    புதுக் கவிதையில்

    உடுத்தும் உடை
    உரிய செல்வம்
    உண்ண உணவு
    உயர்ந்த புகழெனும் பெருமை
    உயர்கல்வி இவை ஐந்தும்
    சூதாட்டத்தை விரும்பி
    மேற்கொள்ளும்
    மன்னனிடம்
    சென்று சேராதே…!

    குறும்பாவில்

    உடை செல்வம் உணவு,
    புகழ் கல்வி என்னும் ஐந்தும்
    சூதாடும் மன்னனைச் சேராதே…!

    மரபுக் கவிதையில்

    மானம் காக்க உடுத்துமுடை
    மண்ணி லீட்டும் பெருஞ்செல்வம்,
    பான முடனே உணவதுவும்
    பாரில் புகழாம் பெருமையதும்,
    வான மெனவே உயர்கல்வி
    வரிசை யாக யிவையைந்தும்,
    மான மின்றிச் சூதாடும்
    மன்ன வர்க்கும் வாராதே…!

    லிமரைக்கூ

    சூதாம் ஆட்டத்தில் சேராதே,
    உடையுணவு செல்வம் புகழ்கல்வி இவையைந்தும்
    சூதாடும் மன்னவர்க்கும் வாராதே…!

    கிராமிய பாணியில்

    ஆடாத ஆடாத
    சூதாட்டம் ஆடாத,
    ஆளக்கெடுக்கும் சூதாட்டம்
    ஆடவே ஆடாத..

    உடுத்துற ஒட
    சேருற செல்வம்
    உண்ணுற ஒணவு
    ஒயந்த மரியாத
    பெரிய படிப்பு
    இந்த அஞ்சும்
    சூதாடும் ராசாவுக்கும்
    கெடைக்கவே கெடைக்காது..

    அதால
    ஆடாத ஆடாத
    சூதாட்டம் ஆடாத,
    ஆளக்கெடுக்கும் சூதாட்டம்
    ஆடவே ஆடாத…!

    Share
  • காந்திய மாமணி T D திருமலை நூற்றாண்டு நிறைவு நாள் – அக்டோபர் 26. 2021

    காந்திய மாமணி T D திருமலை நூற்றாண்டு நிறைவு நாள் – அக்டோபர் 26. 2021

    சுபாஷிணி திருமலை (T.D.திருமலை அவர்களின் மகள்)
    எழுத்தாளர், தலைவர், சிறுவாணி வாசகர் மையம்

    தடம் பதித்த தந்தை போற்றுதும்•••

    மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் எங்களது நண்பரும் ஓவியருமான பாலசுப்ரமணியன் என்னை எழுத்தாளர் பா ராகவன் அவர்களைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். என் கைகளில் இருந்த சில புத்தகங்களை அவருக்கு அளித்தேன்.

    அப்புத்தகங்களைக் கண்டு சந்தோஷிக்கும் போது , வாசிப்பைப் பரவலாக்கும் ஒரு இயக்கமாக “சிறுவாணி வாசக மையம்” என்ற அமைப்பைத் தலைமையேற்று நடத்துகிறார் என என்னை அறிமுகப்படுத்திவிட்டதோடு, மேலும் சிறப்பாக இவர் T.D. திருமலை என்னும் காந்தியவாதியின் மகள் சுபாஷிணி திருமலை என்றதும் “சட்” என்று இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்.

    நாங்களும் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டோம்.

    ” காந்தியைப் பிடிக்காதோ? தவறான அறிமுகமாகிவிட்டதோ” என பயந்து விட்டேன்.

    “பாலுசார்! இதை முதலில் சொல்லக்கூடாதா!

    நீங்கள் வந்தது எனக்கு கௌரவம் சந்தோஷம் எல்லாம். அமருங்கள் “என்று எங்களை அமர்த்தித் தானும் அமர்ந்தார்.

    “நான் கல்லூரிப் படிப்பை முடித்ததும் தி நகரில் தக்கர்பாபா வளாகத்தில் உள்ள ஒரு குடிலில் உங்கள் தந்தையைச் சந்தித்தேன். 3 மணிநேரம் பேசினோம் . கிளம்பும்போது “காந்தி மண்டபத்தில் உள்ள நூலகத்தில் காந்தி பற்றிய நூல்களைப் படித்துப்பார்” என்றார். அந்த சந்திப்பு, அந்த வார்த்தைகள் என் வாழ்வில் திருப்புமுனை. “

    “தினந்தோறும் அங்கு போய் நூலகம் திறக்கும் முன்பே போய்விடுவேன். நூலகம் மூடும்போதுதான் நானும் வெளியில் வருவேன். இது நிகழாமல் இருந்திருந்தால் நான் வேறு மாதிரி உருவாகிஇருப்பேன்” என்றார்.
    நாங்கள் இருவரும் வாயடைத்துப்போனோம்.

    ஆம். இன்று என்று இல்லை. என்றும் திருமலை மகள் என்பதுதான் என் முகவரி.

    இதுதான் எனது 55 ஆவது வயதில் எனக்கு “செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில்” பணிபுரிய வாய்ப்பு நல்கியது. அந்நிறுவனத்திறகு வரும் பேராசிரியர்கள், ஆளுமைகள் அனைவரும் என்னைத் திருமலை மகளா என மகிழ்ந்து என் தந்தை பற்றி சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வர். அவருக்குள்ள இலக்கியத்தின் பால் உள்ள ஈடுபாடுதான் இதற்கு காரணம்.

    ஜஸ்டிஸ் மகராஜன் அவர்களின் நட்பால் ரசிகமணி டி கே சி அறிமுகமானார். அவருடைய ரசனையின் பால் கொண்ட மகிழ்வால் “உலக இதய ஒலி” என்ற காலாண்டு இதழை நடத்தினார். அவரது ஆசிரியர் அ சீனிவாசராகவன் அவர்கள் ஆவார். அப்போதைய இலக்கிய ஆளுமைகள் தெ பொ மீ அவர்களிலிருந்து அனைவருடனும் நட்பு கொண்டு இலக்கியத்தின் மூலம் காந்தியம் வளர்த்தார்.

    சித்தாந்தங்கள் வேறாக இருந்தாலும் இலக்கியத்தால் அன்பால் அனைவரிடமும் நட்பாக இருந்தார். அது தான்… அப்பா T.D.திருமலை.

    ஶ்ரீ வில்லிபுத்தூரில் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் தங்கள் செல்வத்தை நாட்டுக்காகவும், கல்வி நிறுவனங்களுக்கும், ஏழைஎளியோர்க்கும் அளித்து விட்டு ஏழ்மையை உவந்தே ஏற்றுக்கொண்டவர்கள். அப்பா அன்றையத் தேவையான வெள்ளையனே வெளியேறு , போராட்டத்தில் தொடங்கி பூதான இயக்கத்தில் கலந்து கொண்டவர். அவ்வூர் முனிசிபல் சேர்மனாக பதவி ஏற்று தண்ணீர் வசதி செய்தல் போன்ற நற்பணிகள் செய்தவர்.

    பின் மதுரையில் காந்தி மியூசியத்திலுள்ள காந்தி நினைவுநிதியில் தத்துவப் பிரசாரகராக பணியில் சேர்ந்து, தன் இறுதிநாள்வரை காந்தியை இளையதலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் செலவிட்டார்.

    எங்களது இந்த உறவின் உன்னதம் பல நற்பணிகள் செய்வதற்கு ஆதரவாக இருக்கிறது. நான் கோவை நண்பர்களோடு இணைந்து நடத்தும் சிறுவாணி வாசகர் மையத்திற்காக பல இலக்கியவாதிகளையும் படைப்பாளிகளையும் எளிதில் அணுக முடிகிறது. ஆகச்சிறந்த ஓவியர்கள் என் நண்பர்கள். அனைத்தும் என் தந்தைவழி கிட்டியதுதான்.

    என்தாய்க்கு என தந்தை பற்றிப் புகார் இல்லை. மாறாக பெருமிதம் இருந்தது. தந்தையை எதிர்பார்க்காது தன் உழைப்பால் எங்களை வளர்த்தார். இது எங்களுக்கு இருவர்பாலும் மதிப்பும் மரியாதையையும் உணரவைத்தது…
    உறவுகளை நட்பைப் பேணிகாக்க சொல்லிக்கொடுத்தது.

    எங்கள் அம்மாவின் அறிவுரைப்படி எங்கள் கல்வி, உழைப்பு, அதனுடன் பணிவு போன்றவை எங்கள் வாழ்வின் ஆதாரமானது. அம்மாவின் நிர்வாகம் மிகவும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

    அப்பா இல்லாவிட்டாலும் (அப்பா மாதம் ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார்) அவரது வாழ்வியல் எங்களுக்குப் பாடமாக அமைந்தது. மனம் , உணர்வுகள் மயங்கும் போது அறிவு மேலோங்கி நிலையை நேர்செய்யும்.

    அறிவு தடுமாறும்போது உணர்வு உண்மையை உணர்த்தி நிலைநிறுத்தும்.

    கல்லூரிப் படிப்புக் காலம் வரை மதுரை காந்தி மியூஸித்தில்தான் பெரும்பகுதி இருப்போம். முன்னாள்பிரதமர் நேரு, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர். உசேன், காமராஜர் பக்தவத்சலம் போன்ற தலைவரகள் ஆகியோர்கள் அங்கு வரும்போது நாங்களும் அவர்களுடன் இருப்போம். நல்ல கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் போன்ற இலக்கிய கூட்டங்கள் நடக்கும். ஞாயிறு தோறும் நல்ல படங்கள் காட்டுவார்கள். இப்படி நல்ல விஷயங்களோடு வளர்ந்தோம். அப்பாவுடன் சென்னை வந்தபோது சென்னையில் அப்பா நடத்தும் காந்தியக் கூட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள், போன்றவற்றில் கலந்து கொள்வோம். இதெல்லாம் நாங்களாகத்தான் வருவோம் . என்றைக்கும் எங்களிடம் அப்பா எவற்றையும் திணித்ததில்லை.

    மேலும் எங்களுக்கு தத்துவஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியையும் அறிமுகப்படுத்தினார். சென்னையில் டிசம்பர் மாதங்களில் அவரது இடமான வசந்தவிஹாரில் கூட்டம் நடக்கும். அப்பா போகும்போது நாங்கள் உடன் போவோம். புரியறமாதிரி இருக்கும் . ஆனால் கூட்டம் முடிந்து அப்பா மற்றும் அவர் நண்பர்களுடன் திரும்பிவரும்போது அன்றைய பேச்சைப் பற்றிய விவாதம் பிரமாதமாக அமையும். அப்போது எங்களுக்குத் தெளிவாகி விடும்.

    என் தந்தையோ அவரது தந்தையோ பணத்தை விட்டு சென்று இருந்தால் பணக்காரர்களாக இருந்து இருப்போம். இந்த விழுமியங்களும் பெருமிதமும் எங்களுக்குக் கிடைத்திருக்காது.

    என் தந்தை எங்களைக் கவனிக்காது சமூகத்தைக் கவனித்ததால் நாங்கள் எதையும் இழக்கவில்லை. மாறாக. பல உறவுகளையும் உன்னதங்களையும் பண்பாட்டையும் பணிவுடன் மேன்மையையும் பெற்றோம். அவரது நற்பணிகளால் அவரது ஆசீர்வாதத்தால் நாங்கள், எங்கள் குடும்பம், நல்ல மருமகன்களையும் நல்ல மருமகள்களையும் சிறந்த பேரன் பெயர்த்திகளையும் பெற்றிருக்கிறோம் என்னும் பகிர்தலையன்றி பிறிதில்லை.

    அன்பின் விரிவாக்கம்தான் எங்கள் குடும்பம். திருமலை குடும்பம் என்பது காந்தி குடும்பம் ஆகியது. காந்தி கல்வி நிலையத்தில் உள்ளவர்கள் இணைந்து விரிவாக்கினோம். தென்காசியிலிருந்து டி .கே. சி குடும்பத்தார் கி .ரா.வின் குடும்பமும் இணைந்தது. பின் கோவை சிறுவாணி வாசகர் மையம் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் குடும்பம், எழுத்தாளர்நாஞ்சில் நாடன் , ஆலோசகர் சொல்வனம் வ ஶ்ரீநிவாசன் , ராக் அமைப்பாளர் ரவீந்திரன் குடும்பம் , ஆடிட்டர் கிருஷ்ணகுமார் என பல்கிப்பெருகி மிகப்பெரிய குடும்பம் ஆகிவிட்டோம்.

    என் தந்தை வாழந்த வாழ்க்கை எங்களுக்கு சாத்தியமாக்கிக்கொடுத்துள்ளது.

    வண்ணதாசன், வண்ணநிலவன், சந்தியா நடராஜன் ஆகியோர் தாண்டி ரவி சுப்ரமணியன், சண்முகம் சுப்ரமணியம் என்று தொடங்கி இளைய தலைமுறைகள் வரை ஒரு நட்பு கிடைத்திருக்கிறதே!

    வரும் அக்டோபர் 26 அன்று தந்தையின் 100 வது பிறந்தநாள் பூர்த்தியாகிறது். அவரது திருநட்சத்திரம் மகம் 31 ஆம் தேதி வருவதாலும் ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதாலும் அன்று விமரிசையாக அவர் பணிபுரிந்த காந்தி மியூஸியத்தில் நடைபெறவிருக்கிறது.

    இவ்விழாவை ஆறு காந்தியநிறுவனங்கள்- புது தில்லி நேஷனல் அருங்காட்சியகம், சென்னை காந்தி கல்வி நிலையம், மதுரை தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை தமிழ்நாடு சர்வோதய மண்டல், மதுரை சர்வோதய இலக்கிய பண்ணை, மதுரை காந்திய இலக்கிய சங்கம் ஆகியவை விழா எடுத்து சிறப்பிக்கப் போகின்றன.

    இது எங்கள் குடும்பத்தாருக்கு மிகவும் பெருமையும் சந்தோஷமும் ஆகும் .

    அப்பா T.D. திருமலை எழுதிய “வினோபா” வாழ்க்கை வரலாற்று நூலும், அம்மா சீதா திருமலை இந்தியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்த காந்தியின் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய “தியாக உள்ளம்” என்னும் நூலும் மீள்பதிப்பபாக விழாவில் வெளியிடுகிறோம்.

    மேலும் அப்பாவின் வாழ்க்கை வரலாறை “மனதில் நிறைந்த மாமனிதர்” என்னும் நூலாக எங்களது சகோதரர் தி.விப்ரநாராயணன் எழுதியதும், அப்பாவைக் கதாநாயகனாக வைத்து “வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்று நண்பர் திரு கம்யூட் ராஜ் எழுதிய நாவலையும் முதற்பதிப்பாக விழாவில் வெளியிடுகிறோம். தவிர அப்பா 20 வருடங்கள் நடத்திய இலக்கிய இதழான “உலக இதய ஒலி”யின் முதல் இதழை அனைவருக்கும் அளிக்கிறோம்.

    முனைப்பாகப் பல தேசியத்தலைவர்கள்இருப்பினும் என் தந்தை T D திருமலை அவர்களுக்குத்தான் ஒரு நிறுவனம் அமைந்து இன்னமும் சிறப்பாக சென்னையில் காந்தி கல்வி நிலையமாகச் செயல்பட்டு, முனைவர் பிரேமா அண்ணாமலையால் சிறப்பாக இயங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.

    அனைவரும் விழாவிற்கு வந்திருந்து ஆசீர்வதிக்குமாறு எங்கள் அனைவரின் சார்பில் கேட்டு கொள்கிறேன்.!

    Share
  • தேடப்படாத இலக்கியமாய் இருக்கும்  குண்டலகேசியும் வளையாபதியும்!

    தேடப்படாத இலக்கியமாய் இருக்கும் குண்டலகேசியும் வளையாபதியும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    தமிழ் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும்  தமிழ்த்தாயை வாழ்த்திப் பாடிய பின்னர்தான் ஆரம்பிப்பது என்பது வழமையாக இருந்து வருகிறது. தேடப்படாத இலக்கியமாக இருக்கின்ற குண்டலகேசியையும், வளையாபதியையும் பற்றி உங்கள் யாவருக்கும் எடுத்துச் சொல்ல வந்திருக்கும் இவ்வேளையில் – தமிழ் வாழ்த்தினை சொல்லாமல் ஆரம்பித்தால் அது சிறப்பாய இருக்காதல்லவா! ஆதாலால் தமிழ் அன்னைக்கான வாழ்த்தினை வழங்கி தேடப்படாத இலக்கியத்தை தேடலாம் என்று எண்ணுகின்றேன்.

    காதொளிரும் குண்டலத்தாள்
    கனிமொழியாள் வாழ்க
    கைக்கு வளையாபதி கொள்
    கன்னிகையாள் வாழ்க
    மேதகு மென்மார்பிடைச்
    சிந்தாமணியாள் வாழ்க
    மின்னுமணி மேகலை சூழ்
    மெல்லிடையாள் வாழ்க
    சீதமலர்ப் பாதமொலி
    சிலம்புடையாள் வாழ்க

    வாழ்த்துப் பாடி ஆகிவிட்டது. இனி விஷயத்துக்கு வருவோம்.

    காணக்கிடைக்காத காப்பியங்கள் என்று கருதப்படுவனதான் வளையாபதியும் குண்டல கேசியுமாகும். சிலம்பதிகாரத்துக்கோ, மணிமேகலைக்கோ, சீவக சிந்தாமணிக்கோ கொடுக் கப்படுகின்ற முக்கியத்துவங்கள் வளையாபதிக்கோ குண்டலகேசிக்கோ கொடுக்கப்படுவதி ல்லை. இவை இரண்டைப் பற்றியும் யாருமே பெரிதாய் பேசுவதும் இல்லை. ஐம்பெரும் காப்பியங்கள் என்னும் நிலையில் இக்காப்பியங்கள் இரண்டும் காப்பிய வரிசையில் கடை சியாகவே வைக்கப் பட்டிருப்பதையும் கருத்திருத்த வேண்டும்.

    சிலம்புக்காவலர், சிலம்புச் செல்வர், என்றுதான் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. மணிமே கலையானது சிலம்போடு இணைக்கப்பட்டு “இரட்டைக் காப்பியங்கள்” என்று வியந்து கூறப்படுவதையும் காண் கின்றோம். இரட்டைக் காப்பியம் என்னும் பெயர் எப்படி வந்தது? யார் இவ்வாறு இணைத்தார்கள் என்பதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது அநபாயச் சோழ மன்னன் மிகவும் விரும்பிப் படித்த காப்பியமாக சீவகசிந்தாமணி இருந்தது என்று அறிய முடிகிறது. சிற்றின்ப ரசம் பொருந்திய சிந்தாமணியினை அரசன் விடாமல் படித்துச் சுவைப்பதை சேக்கிழாரின் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அநபாயனின் போக்கினை மாற்ற வேண்டுமென்று அல்லும் பகலும்  அமைச்சராய் இருந்த சேக்கிழார் எண்னினார். சேக்கிழாரின் எண்ணம் ஈடேறியதால் அநபாயன் மனம் மாறினான் என்றும் – இந்த மடை மாற்றத்துக்கு சேக்கிழாரின் பெரியபுராணம் என்னும் சைவசமயக் காப்பியம் காரணமாய் அமைந்தது என்பதையும் அறிகின்றோம்.

    ஆனால் காப்பிய வரிசையில் இடம் பெற்று நிற்கும் வளையாபதிக்கோ, குண்டல கேசி க்கோ இப்படியான ஒரு நிலை வரவில்லை என்பதையும் கருத்திருத்தல்  வேண்டும். என்றாலும் இவற்றை எல்லாம் மீறி இந்த இரண்டு காப்பியங்களும் பேசு பொருளாக இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதே.அந்தக் காப்பியங்களைப் பற்றிப் பேசும் நிலையும் இன்று எனக்கும் வாய்த்திருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதே!

    ஆரம்பத்திலே பாடப்பட்ட தமிழ் வாழ்த்தினை எழுதியவருக்கும்-  குண்டலகேசி, வளையாபதி பற்றிய ஒரு ஆதங்கம் இருந்தே இருந்திருக்கிறது. அவரின் மனமிருந்த கருத்தே வாழ்த்தாய் மலர்ந்திருக்கிறது. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்றுபாரதி போற்றுகின்றார். ஆனால் இந்த வாழ்த்துப் பாடியவரோ சற்று வித்தியாசமாய் பார்க்கிறார். தமிழ் அன்னை என்றவுடன் முதலில் தெரிவது அவளின் முகம்தானே! முகத்துக்குப் பின்தான் மற்றைய உறுப்புகள் வந்தமையும். பார்க்கப்டாத முக்கியத்துவம் கொடுக்கப்படாத – குண்டலகேசியை “காதொளிரும் குண்டலத்தாள்” என்று முதலில் காட்டுகிறார். பின்னர் அடுத்த நிலையில் வளையாபதியினை “கைக்குவளையா பதிகொள் “கனிமொழியாள் வாழ்க” என்று காட்டி தனது மனக்கிடக்கையினை வெளிப்படுத்திய பின்புதான் – மென்மார்பிடைச் சிந்தாமணி என்றும், மின்னும் மேகலைசூழ் மெல்லிடை என்றும்  கடைசிசியில்த்தான் “சீதமலிப் பாதமலர் சிலம்புடையாள்” என்று ஐம்பெரும் காப்பிய வரிசையினையே மாற்றிப் பார்க்கும் ஒரு புதுமையை இப்புலவர் செய்திருக்கிறார் என்பதையும் கருத்திருத்தல் அவசியம் என்று எண்ணுகின்றேன். பார்க்கப்படாத தேடப்படாத நிலையில்  குண்டலகேசியும், வளையாபதியும், இருக்கக் கூடாது என்னும் மனக்குறை யினைப் போக்குவதாய் இந்த வாழ்த்து அமைகிறதல்லவா!

    கல்லூரிகளில் படிக்கும் காலத்தும், பல்கலைக்கழகங்களில் பயிலும் காலத்தும் – சிலம் பையும்,மணிமேகலையும், சிந்தாமணியையுமே முக்கியத்துவப்படுத்தி கற்பித்தார்கள். ஐம்பெரும் காப்பியம் என்று தமிழ் வகுப்புகளில் பாடம் நடத்தும் வேளையில் மட்டுமே, குண்டலகேசியினதும், வளையாபதியினதும், பெயர் உச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரண்டையும் பற்றிப் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதையும் சுட்டாமல் இருக்கவே  இயலவில்லை. அந்த அளவுக்கு குண்டலகேசியும், வளையாபதியும், பார்க்கப்படாத காப்பியங்களாகவே இருந்திருக்கின்றன. படிக்கின்ற காலத்தில் எனக்குள் ஒரு ஐயம் எழுந்தது. ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இடம்பெறும் வளையாபதியும், குண்டல கேசியும் அனாதை நிலையில் ஏன் பார்க்கப்படுகின்றன என்பதுதான் அது!

    எனக்கு ஆசான்களாய் அமைந்த ஒரு பேராசிரியரிடம் இதனைப் பற்றித் துணிந்து கேட்டுவிட்டேன். எனது ஐயத்தைக் கேட்ட பேராசான் சற்று யோசித்து விட்டு “நாங்கள் பாடம் நடத்தாவிட்டால் என்ன? பாடப்பகுதியில் சேர்க்கப்படாவிட்டால்த்தான் என்ன? வளையாபதியும், குண்டலகேசியும் இல்லை என்றுதான் ஆகிவிடுமா? ஐம்பெரும் காப்பி யங்கள் என்னும் வரிசையிலிருந்தும் அகற்றப்பட்டுத்தான் போய்விடுமா? ஒருக்காலும் போகவே மாட்டாது. பொது மக்கள் மத்தியில் அந்த இரண்டுமே மிகவும் சிறப்பாகப் போய்ச்சேர்ந்தே விட்டது. உனக்கு அது தெரியுமா? என்று என்னை நோக்கி ஒரு கேள்விச் சர த்தை எனது ஐயப்பாட்டுக்கு மறுமொழியாக அவர் விடுத்தார்”

    “நான் மெளனமாய் இருந்தேன்”. என் ஆசானே பேசத் தொடங்கினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் அவர்கள். அவர் முதலமைச்சர் நிலைக்கு வருவதற்கு முன்பே தேடப்படாத இலக்கியம் என்னும் குண்டலகேசியைத் தேர்ந்தெடுத்து நன்றாக உள்வாங்கியும் விட்டார். குண்டகேசியை யாவரும் அறியச் செய்வதற்கு உகந்த வழி எது என்பதை மனமெண்ணி அவர் தேர்ந்தெடுத்த வழிதான் திரைத்துறையாகும். திரையில் வந்தால் அது எல்லாவிடத்தும் செறிந்தும் பரந்தும் நிறைந்தும் விடு மென்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் குண்டலகேசியைஉள்வாங்கி  “மந்திரிகுமாரி” என்னும் திரைக்காவியத்துக்கு வித்திட்டார். அவரே திரைக்கதை வசனமும் எழுதினார். அவரின் எண்ணத்தில் குண்டலகேசி காவியம் 1950 ஆம் ஆண்டில் மந்திரிகுமாரி என்னும் பெயரில் வெள்ளித்திரையில் வலம் வந்தது என்று என் ஆசான் மூச்சுவிடாமல் சொல்லி நின்றார்”. அந்தப் படத்தைப் பார்த்தால் புரியும் குண்டல கேசியின் கதை என்றார்.

    அத்துடன் நிற்காமல் எனது அடுத்த ஐயத்தையும் போக்கினார் ஆசான். வளையாபதியும் தேடாத இலக்கியமாய் இருக்கக் கூடாது என்று எண்ணினார் புரட்சிக்கவி பாரதியின் சீடர் பாரதிதாசன். கலைஞருக்கு மிகவும் பிடித்தமான தமிழ்க் கவிஞன்தான் புதுவைக்கவி பாரதிதாசன். அந்தப் புதுவைப் புயல் பாரதிதாசன் திரைக்கதை வசனம் எழுதி திரையில் வளையாபதியை வெளிபரப் பண்ணினார் . “வளையாபதி என்னும் பெயருடனேயே 1952 ஆம் ஆண்டில் வெள்ளித் திரையில் தேடப்படாத இலக்கியம் வந்தது” என்று எனது மனத்தெழுந்த ஐயங்களெலாம் விளங்கும் வகையில் – விளங்கும் உதாரணத்துடன் ஆசான் அவர்கள் சொன்னதும் – எனக்கு நல்ல திருப்தி கிடைத்தது. பள்ளிக்கூடமும் பல்கலைக் கழகமும் செய்யாததை வெள்ளித்திரை செய்து விட்டதே என்பது பெரும் ஆறுதலாய் எனக்கு இருந்தது.

    தேடப்படாத காவியங்கள் வரிசையில் வளையாபதிபோல் இருப்பதுதான் குண்டல கேசியாகும். வளையாபதி ஒன்பதாம் நூற்றைண்டைச் சேர்ந்தது. குண்டலகேசி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அறிஞர்களின் கருத்தாய் இருக்கிறது. வளையாபதியின் ஆசிரியர் இன்னார் என்று அறியா நிலை இருக்கிறது. ஆனால் குண்டலகேசியின் ஆசிரியர் நாதகுத்தனார் என்று காட்டப்படுகிறார். எழுபத்து இரண்டு பாடல்களுடன் வளையாபதி அமைய குண்டலகேசியோ மிகக்குறைந்த அளவில் பத்தொன்பது பாடல்களுடன் இலக்கியமாய் கவனிக்கப்படுகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். வளையாபதி சமணத்தைப் பேச குண்டலகேசியோ பெளத்தத்தைப் பேசுகிறது.

    சிலம்பிலும் பெண்தான். மணிமேகலையிலும் பெண்தான். சிந்தாமணியிலும் பெண்ணே. குண்டலகேசிலும் பெண்தான் வந்து முன்னிற்கிறாள். பெண்கள் இல்லை என்றால் காப்பியங்களே இல்லை என்று சொல்லும் வகையில் காப்பியங்களைக் கொண்டு செல்லும் விதத்தில் பெண்களே இருப்பதும் நோக்கத்தக்தேயாகும். அதே வேளை வணிகர் குலம் என்பதும் தொடர் நிலையாக இருப்பதையும் காண்கின்றோம். வளையாபதியில் வருகின்ற கதாநாயகன் வணிகர் குலத்தவன். குண்டலகேசியின் கதாநாயகியும் வணிகர் குலத்தவள்தான். ஆனால் கதையின் போக்கு மட்டும் மாறுபடுகிறது.

    வசதிமிக்க வணிக குலத்துப் பிறந்தவள் பத்தா சீதா. இவளின் காதல் பொருந்தாவிடத்தில் சென்று விடுகிறது. அதனால் அவளின் வாழ்வும் வசந்தத்தை இழந்து விடுகிறது. வசதி யான குடும்பத்தைச் சேர்ந்தவள் – கொள்ளை அடிக்கும் ஒருவனை விரும்புகின்றாள். அரசனால் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டவனைக் கண்டதனால் காதல் கொண்டு அவனையே மணந்திட நினைந்து விடுகிறாள். மகளின் ஆசையினை தந்தை நிறை வேற்றும் பொருட்டு – கொலைக்களம் அனுப்பபட்ட கொள்ளைக்காரனைப் பொரு ளைக் கொடுத்து மீட்டு மகளுக்கு மணம் முடித்து வைக்கிறான். கள்வன் காதல் கணவனாய் வந்தமை பத்தாவுக்கு பெரும் ஆனந்தமாய் அமைகிறது.

    களவிலே ஊறிப்போனவனுக்கு களவினை மறந்து வாழ்வது என்பது சற்றுக் கடினந்தான். வீட்டிலேயே கைவரிசையினைக் காட்டிட முனைகிறான். இதனால் மனஸ்தாபம் உருவாகிறது. முடிவில் மனைவியையே கொன்றுவிடத் திட்டமும் இடுகிறான். அவளைக் காதல் மொழிகள் கூறி மலை உச்சிக்கே அழைத்துச் சென்று கொன்றுவிடத் திட்டமிட்டு அவளை மலை உச்சிக்குக் கூட்டிச் செல்கிறான். தன்னைக் கொல்லப் போகிறான் என்பதை அறிந்து கொண்ட பத்தா – தந்திரமாக அவனை மூன்றுமுறை வலம் வருபோல செய்து முடிவில் தன்னைக் கொல்ல வந்த தனது காதல் கணவனையே மலை உச்சியில் இருந்து தள்ளிக் கொன்று விடுகிறாள் என்று கதை அமைகிறது.

    வாராய் நீ வாராய்
    போகுமிடம் வெகு தூரமில்லை
    நீவாராய்

    ஆகா மாரிதம் வீசுவதாலே
    ஆனந்தம் பொங்குதே மனதிலே

    இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
    கலந்துயிர் விண்ணினைக் காண்பாய்
    அமைதி நிலவுதே
    சாந்தம் தவழுதே

    முடிவிலா மோன நிலையை நீ
    மலை முடிவில் காணுவாய்
    ஈடிலா அழகு சிகரம் மீதிலே
    கண்டு இன்பமே கொள்வோம்

    இன்பம் அடைந்தே இகமறந்தே
    வேறு உலகம் காணுவாய் அங்கே

    புலியினைத் தொடர்ந்தே
    புதுமான் நீயே

    இந்தப் பாடல் வந்து எழுபத்து ஒரு ஆண்டாகிறது. ஏழாம் நூற்றாண்டில் வந்த குண்டலகேசிக் கதைக்கு ஏற்ற பாடலைக் கேட்கின்ற வேளை கதையின் காட்சி கண்முன்னேயே வந்து நிற்கிறதல்லவா? காவியக்காட்சி வெள்ளித் திரையில் மந்திரிகுமாரியாய் மலர்ந்தது என்பதை நினைத்துப் பார்ப்போம்.

    சமணமும், பெளத்தமும் வாழ்க்கை நிலையாமையினை வலியுறுத்தும் பாங்கிலேதான் கருத்துக்களைக் கொட்டியபடியே இருக்கும். அந்த வகையில் காதலித்தவன் வஞ்சகம் செய்தபடியால் குண்டலகேசியின் அப்போதைய மன நிலைக்குச் சமணந்தான் மருந்தாய் அமைந்தது எனலாம். சமணப்பள்ளியை அடைந்தாள். சமண சம்பிரதாயப்படி அவளின் கூந்தல்கள் களையப்பட்டன. மழித்த தலையுடன் சமணப்பள்ளியில் இருந்தாள். சமணத்தில் ஊறிய அவள் சமணத்தை எதிர்ப்போரை யெல்லாம் வாதித்திட்டு நிற்கும் நிலைக்கு வந்து நின்றாள். ஆனால் பெளத்தத்திடம் அவள் வாதம் எடுபடா நிலையில் முடிவில் அவள் பெளத்தத்துக்கே மாறிவிடாள். மழிக்கப்பட்ட அவளின் கூந்தல் சுருண்டு வளர்ந்தது.வளைந்து குண்டலம் போல் அவளின் கூந்தல் காணப்பட்டதால் குண்டலகேசி என்றே அழைக்கப்ட்டாள். அந்தப் பெயரே இக்காப்பியத்துக்கும் பொருத்தமாய் அமைந்து விட்டது.

    யாக்ககை நிலையாமை, கூற்றுவனின் கொடுமை,வாழ்க்கையின் நிலையாமை, உடம்பின் இழிவு, என்பன பற்றியெல்லாம் குண்டலகேசி தன் கருத்துக்களைப் புகன்று நிற்கிறது,

    பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
    காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
    மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
    நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

    நிலையாமையினை விளக்குதற்கு குண்டலகேசி ஆசிரியர் தருகின்ற ஒவ்வொரு படிமுறையும் அவரின் பேராளுமையினையே காட்டி நிற்கிறது எனலாம். இதைவிட இலகுவாய் நிலையாமையினை விளக்கிடல் முடியுமா என்றுதான் எண்ணிப் பாருங்களேன்! செத்துப்பிழைத்துக் கொண்டே ஒவ்வொரு நாளுமே இருக்கின்றோம். ஆனால் அதற்காக யாருமே அழுவதே இல்லை. இந்த உடலைவிட்டு உயிர்பிரிந்த போது மட்டும் ஏன்தான் அழுகிறார்களோ தெரியவில்லை என்று – யாவரும் விழித்திட வேண்டும் என்று நிலை யாமையினை எப்படி நாசுக்காய் காட்டுகிறார் குண்டலகேசி ஆசிரியர்.

    மறிய மறியும் மலிர்ப மலிரும்
    பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்
    அறிவது அறிவர் அழுங்கார் உவவார்
    உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று

    நயமும், நலமும், பொதிந்த பாடல். பாடலின் அமைப்பே அருமையோ அருமை! சொல்லும் பாங்கும், சொல்ல தேர்ந்தெடுத்த சொற்களின் பாங்கும், அந்தச் சொற்களைப் பாடலாய்க் கோர்த்த பாங்கும் வியக்காமல் இருந்திடவே முடியாது. அழுதாலும் பயனில்லை. ஆனந்தப் படுவதாலும் பயனில்லை. வருவதும் வரும். வந்தது வந்ததுபோல் போயும் விடும். போய்விடும் பொழுது புலம்புவதால் ஆவது எதுவுமே இல்லை. என்ன அருமையான வாழ்க்கைத் தத்துவம். தேடப்படாத குண்டலகேசியா இப்படிச் சொல்கிறது என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா!

    மண்ணுளார் தம்மைப் போல்வர் மாட்டதே அன்று வாய்மை
    நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
    விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
    கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையை யார் கறையன்று என்பார்

    கறை என்பது மனிதராயினும், தேவராயினும் ஏன் கண்ணுதற் கடவுளாகிய சிவனே ஆயினும் கறை என்பது கறைதான். தவறு என்றால் அங்கு எந்தவிதப் பாகுபாட்டுக்கும் இடமே இல்லை. என்று பார்க்கும் குண்டலகேசியின் பார்வை சுட்டெரிக்கும் தூய்மையான பார்வையாய் தெரிகிறதல்லவா!

    உவமைநயம் மிக்க நல்லதொரு பாடலையும் குண்டலகேசியில் பார்க்கிறோம். உவமையினைக் காட்டிட அமைந்தாலும் அங்கும் தத்துவமே முன்னிற்கிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்
    ஆயுவினை நோக்கியுள வாழ்க்கை யதுவேபோல்
    தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்ல்லாத்
    தூயவனை நோக்கியுள துப்பரவும் எல்லாம்.

    காற்றை நம்பியே ஓடம் செல்லுகிறது. ஊழ்வினையின் வழியேதான்  வாழ்க்கை அமைகிறது. மனத்தில் தூய்மை வருவதற்கு உகந்தவழி எது தெரியுமா? தூய மனத்தினை உடைய அந்த புத்தபிரானை நினைப்பதேயாகும், இங்கு ஒவ்வொன்றுக்குமே காட்டப்படும் உவமையினை எண்ணிப்பார்த்தால் குண்டலகேசியும் நல்லதொரு இலக்கியமே என்பது புலனாகும்.

    ஐம்பெரும் காப்பிய வரிசையில் இடம் பெறும் வளையாபதி ஒன்பதாம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்னும் கருத்து இலக்கிய அறிஞரிடையே காணப்படுகிறது. அதேவேளை இதனை வள்ளுவத்தின் பின் வந்ததென்றும்  அறிஞர்கள் சிலர் சொல்லு கிறார்கள். வள்ளுவத்தின் சில பாடல்களை எடுத்தாளும் தன்மையினை வளையாபதி கொண்டு இருப்பதால் இப்படிக் கூறும் நிலையும் வந்திருக்கலாமோ என்றுகூடக் கருதிட முடிகிறதல்லவா? இது சமணம் சார்ந்தது என்னும் கருத்து இருக்கிறது. அதேவேளை இதில்வரும் நாயகன் சைவமதத்தவனாய் இருப்பதால் – சமணம்  சார்ந்தது என்று எடுப்பது பொருந்துமா என்னும் நிலையும் அறிஞரிடையே காணப்படுகிறது. ஆனால் வளையாபதியின் பாடல்களில் காணப்படும் கருத்துக்களை நோக்கும் பொழுது சமணச் சார்ப்பான தன்மையே பெரிதும் இருப்பதும் தெரிய வருகிறது.

    வளையாபதிக் காவியத்தின் ஆசிரியர் யார் என்பதும் அறியமுடியவில்லை. எழுபத்து இரண்டு பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஆனாலும் இப்பாடல்களை மையப்படுத்தி ஒரு கதையும் அமைந்தே இருக்கிறது. அந்தக் கதையும் ஊகமாய்த்தான் இருக்கும் என்னும் ஒரு நோக்கும் அறிஞர்களிடையே  இருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    எழுபத்து இராண்டு பாடல்களுமே ஒரே இடத்தில் கிடைக்க வில்லை. புறத்திரட்டு என்னும் நூல் பதினான்காம் நூற்றாண்டில் வந்தமைகிறது. அந்த நூலில் இருந்து அறுபத்து இரண்டு பாடல்களை வளையாபதியின் பாடல்கள் என்று அறிஞர்கள் கண்டறிந் திருக்கிறார்கள். அடியார்க்கு நல்லார் என்பார் சிலப்ப திகாரத்துக்கு உரை எழுதி இருக் கிறார். அவர் உரை எழுதும் பொழுது மூன்று பாடல்களை எடுத்துக்காட்டாய் கையா ண்டிருக்கின்றார். அந்த மூன்று பாட்டும் வளையாபதியின் பாட்டென்று தீர்மானித் திருக் கிறார்கள். அத்துடன் மேலும் இரண்டு பாடல்களும் கிடைத்திருக்கின்றன. இலக்கணத்துக் கென்று பல நூல்கள் தமிழில் இருக்கின்றன அவற்றில் யாப்பருங்கலக்காரிகை என்பதும் முக்கிய இலக்கண நூலாகும்.

    இந்த நூலுக்கு ஒரு தமிழறிஞரால் எழுதப்பட்ட விருத்தி உரையில் இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாய் கையாளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கையாளப்பட்ட இந்த இரண்டு பாடல்களும் வளையாபதிக்கே உரியதாகும் என்று தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டி இருக் கிறார்கள். வளையாபதிக்கான பாடல்கள் இப்படித்தான் சேர்க்கப்பட்டன என்பதை வளை யாபதி பற்றி நோக்கும் பொழுது அறியக்கூடியதாக இருக்கிறது.

    நிறைவான நிலையில் வளையாபதி காப்பியம் கிடைக்கா விட்டாலும் – கிடைத்த பாடல் களைக் கருத்திருத்தில் இருத்தி அதனையும் காவிய வரிசையில் வைத்தமை யினைப் பாராட்டியே ஆகவேண்டும்.குறைவான பாடல்கள் கிடைத்த நிலையிலும் அதனூடாக ஒரு கதையினையும் இணைத்த பாங்கையும் பாராட்டவே வேண்டும்.

    சிலம்பில் புகார் வந்தது போல் வளையாபதியிலும் புகார்வருகிறது. இங்கு தான் – கதையின் நாயகனான நவகோடி நாராயணன் வருகிறான். சிலம்பின் நாயகனான கோவலன் கண்ணகியை மணம் முடிக்கிறான். பின்னர் மாதவியையும் மணக்கிறான். கோவலனும் கண்ணகியும் வணிகர் குலத்தவர். மாதவி அக்குலத்தவள் அல்ல. வளை யாபதி நாயகன் நவகோடி நாராயணனும் வணிகர் குலத்தவன். வணிகர்  குலத் துப் பெண்ணை இவனும் முதலில் மணக்கிறான். பின்னர் வணிகர் குலம் அல்லாத இடத்தில் இருக்கும் ஒரு பெண்ணையும் இரண்டாந்தாரமாய்  மணக்கிறான். கிட்டத்தட்ட கோவலனின் சகோதரன் போல வளையாபதி நாயகன் நவகோடி நாராயணனும் அமைகிறான் அல்லவா!

    சிலம்பின் நோக்கம் வேறு. அதனால் அங்கு கதையின் திருப்பம் வேறு விதமாய் மாறுகிறது. வளையாபதியை எழுதிய ஆசிரியர் கதையினை வேறு நிலையில் காட்டிட முன் வருகிறார். தன் குலத்தை விட்டு வேறு குலத்தில் இரண்டாந்தாரமாய் நவகோடி நாராயணன் திருமணம் செய்ததை அவனுடைய வணிக குலத்தார் எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பார் – அவனையே வணிகர் குலத்தை விட்டு ஒதுக்கி விடுவோம் என்று எச்சரிக்கையும் செய்கிறார்கள். குலத்தாரின் எதிர்ப்புக்கு அஞ்சிய நிலையில் நவகோடி நாராயணன் தன்னுடைய இரண்டாவது மனைவியை விட்டு விட்டு தனது வணிகத்தைக் கவனிக்கக் கடற்பயணத்தை மேற்கொள்ளுகின்றான். அவனால் கைவிடப்பட்ட அவனின் இரண்டாவது மனைவி அப்பொழுது வயிற்றில் கருவினைச் சுமந்தபடி இருந்தாள் என்பது முக்கியமாகும்.

    கடல் பயணத்தால் ஈட்டிய பெருஞ் செல்வத்துடன் முதல் மனைவியோடு நவகோடி நாராயணன் ஆனந்தமாய் வாழ்கிறான். அபலையான அவன் இரண்டாம் மனைவி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கிறாள். அந்தப் பிள்ளை வளர்ந்து வரும் வேளை – அவனது நண்பர்கள்  “தகப்பன் பெயரே தெரியாதவன்” என்று கேலியும் கிண்டலுமாகப் பேசி அவனை மனம் நோகும்படி செய்து விடுகிறார்கள். மனம் நொந்த பிள்ளை தாயிடம் வேதனையைக் கொட்டித் தீர்க்கின்றான். பிள்ளையின் கவலை தாயையும் வாட்டியதால் இதுவரை மூடி வைத்திருந்த விஷயத்தை சொல்லி விடுகிறாள்.

    தனக்குத் தந்தை இருக்கிறார் என்று கேட்டதும் கவலைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு துள்ளலுடனும், உற்சாகத்துடனும், ஆனந்தந்துடனும் தந்தையை நாடிச் செல்லுகின்றான். தந்தையைக் காணுகிறான். ஆனால் தந்தையோ தன்னுடைய வணைகர் குலத்துக் கட்டுப்பாட்டுக்குப் பயந்து அவனை மகனாக ஏற்றிட மறுத்துவிடுகிறான். ஏற்க மறுத்த விஷயத்தை அறிந்த தாயானாவள் சக்தியாய் விளங்கும் காளியை வேண்டுகிறாள். வணிகர் குலத்துப் பெண்கள் மத்தியில் காளியின் அனுக்கிரகத்தால் அவள் புனிதமானவள் என்னும் நிலை வெளிச்சமாகிறது. நிறைவில் நவகோடி நாராயணன் கைவிட்ட மனைவியையும், மகனையும் இணைத்துக் கொள்ளுகின்றான். அந்தப் பிள்ளைக்கு வீரபாணிபன் என்று பெயரையும் சூட்டி எல்லோரும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள் என்று வளையாபதி கதை நல்லதாய் நிறைவுறுகிறது.

    நல்லதொரு சுபமான திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது அல்லவா? இப்படியான ஒரு கதை இதற்குள் புதைதிருந்த காரணத் தால்த்தான் – பாரதி தாசன் இதனைத் திரைக்காவியம் ஆக்கினாரோ என்றும் நினைத்திட வைக்கிறதல்லவா!

    வளையாபதி இவ்வளவுதானா? இதனைப் படிப்பதால் என்னதான் வரப் போகிறது? வளையாபதி ஏதாவது கருத்துக்களைப் பகர்ந்திருக்கிறதா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது அல்லவா! கருத்துக்கள் இல்லா விட்டால் அங்கு காவியமும் இல்லை. இலக்கியமும் இல்லை என்றாகிவிடும் அல்லவா! சமணக் காவியமா, சைவக் காவியமா என்றெல்லாம் விவாதிப்பதை விட்டு விட்டு – இக்காவியம் எதனைக் கூறுகிறது என்று பார்த்தால் – கல்லாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை இவைதான் இக்காவியத்தின் கருப்பொருள்களாகும்.  அதேவேளை வாழ்வியலுக்கு ஏற்ற கருத்துக்கதுக்களையும் காட்டாமலும் வளையாபதி இருக்கவில்லை என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். இங்கே காட்டப்பட்ட கருக்கள், சைவத்திலும் போற்றப்படு கின்றன. அதே வேளை சமணனந்தான் இக்கருக்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக் கிறது என்பது பொதுவான நிலை எனலாம். ஆதலால் வளையாபதியினைச் சமணக் காப்பியம் என்றே எடுக்கும் நிலை வந்துவிட்டது.

    பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்
    துறையிலா வசன வாவி துகில் இலாக் கோலத் தூய்மை
    நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச்
    சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே

    என்னதான் இருந்தாலும் பிள்ளைச் செல்வம் இல்லாவிட்டால் எல்லாமே வீண்தான் என்று காட்டும் இந்தக் கருவானது வாழ்வியலைக் குறிப்பதாய் இருக்கிறது அல்லவா? வளையாபதியின் பார்வை இப்படியும் இருக்கிறது.

    உயர்குடி நனியுட் டோன்றலூனமில் யாகையாதன்
    மயிர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல்
    பெரிதுண ரறிவே யாதல் பேரறங் கோட லென்றாங்
    கரிதிவை பெறுதலேடா பெற்றவர் மக்க ளென்பார்

    என்னென்ன நல்ல பண்புகள் இருக்க வேண்டுமோ அத்தனையும் அமையப் பெறுதல் வேண்டும். அவ்வாறு அமையப் பெறுபவர்களே பிறவியின் பயனை அடைந்து நல்ல பிறப்புடையாராய் மதிக்கப்படுவர் என்பதும் வளையாபதியின் பெருநிலை எனலாம். செப்பம் வேண்டும், நாண் வேண்டும். ஒழுக்கமும், வாய்மையும்  அமைய வேண்டும். ஈகையும் கூடவே இன்சொல்லும் இருக்க வேண்டும்.அதுமட்டுமன்றி இகழாமையும் கொள்ள வேண்டும்.ஒழுக்கத்தைப் பேணவேண்டும், பணிவுடமையினைப் பக்குவமாக்க வேண்டும்.என்னும் வாழ்வியல் தத்துவங்கள் இப்பாடலினால் காட்டப்படுவது கருத்திருத்த வேண்டியதே.

    அடக்கமுடமை, அறமனை காத்தல், பிறன்மனை நாடாமை, உண்டி கொடுத்தலின் உயர்வு, அருளின் பெருமை, புலால் மறுப்பதன் உன்னதம், தவத்தின் மாண்பு, காமத்தின் இழிவு, கள்ளாமை விளக்கம், செல்வத்தின் நிலையாமை, இளமை நிலையாமை என்று பல அறக்கருத்துக்களை வழங்கும் பாங்கில் – கிடைத்திருக்கும் வளையாபதிப் பாடல்கள் தந்து நிற்கின்றன.

    வல்கண் மடவார் விழைவுஒழிய யாம்விழையக்
    கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம்
    நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்தது இனி
    நீத்தல் துணிவாம் நிலையாது இளைமையே

    என்னும் பாடலை மனமிருத்தினால் ஆடாத ஆட்டமும் பாடாத பாட்டுகளுமாய் திரியவே மாட்டோம்.இருக்கும் வாழ்வினைச் சீராக வாழ்வதற்கே முயலுவோம்.

    வளையாபதியின் கிடைத்த பாடல்களே இவ்வளவு அரிய கருத்துக்களை வழங்கி இருக்கிறது என்றால் – முழுமையாய் வளையாபதி கிடைத்திருக்கு மானால் – எத்தனையோ பொக்கிஷமான கருத்துக்களை அனைவருமே பெற்றுப் பயன் அடைந்திருப்போம். நல்ல கற்பனை வளமான பாடல்களையும் வளையாபதி கொண்டி ருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    காப்பு + இயம் என்பதே காப்பியம் ஆகிறது. மக்களின் வாழ்வியல் சிந்தனை, சமய நம்பிக்கைகள், அரசியல் நிலை, இவற்றை உள்ளடக்கியதாய் அதனூடாக பயணிக்கும் வகையில் கதைமாந்தரைக் கொண்டு கதையை  நடத்தி – அக்கதை மாந்தரின் வாயிலாகப் பலகருத்துக்களை வெளியிடும் பாங்கில் – படைத்த புலவனின் ஆளுமையினை வெளிப்படுத்தும் பாங்கில் முகிழ்த்து வந்து நிற்பதுதான் காவியம் ஆகிறது. காவியம் என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் இருக்கின்றன. எல்லாக் காவியங்களிலும் இந்த வரை விலக்கணங்கள் முழுமை பெற்றிருக்கின்றனவா என்பதும் ஆராய்வுக்கு உரியதேயாகும்.

    காவியங்களில் தலைவன் தலைவி நிச்சயம் இடம் பெறுவார்கள். சில வேளை தலைவனை விட தலைவியே அக்காவியத்தில் முதன்மையாய் இருப்பதையும் காணமுடிகிறது. காவியத்தைப் படைப்பவரின் எண்ணமே இவற்றை வடிவமைக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. கதைகளினூடாக பல்வகையான அறங்களை வெளிப்படுத்திக் காட்டும் பாங்கினையே காவியங்களில் காண்கிறோம்.

    அந்தவகையில் ஐம்பெரும் காவியங்களும் இணைந்தே இருக்கின்றன என்றுதான் எடுக்க முடிகிறது. குண்டலகேசியையும் வளையாபதியையும் படிப்பதால் என்னவந்து விடப் போகிறது என்னும் எண்ணமும் நிச்சயம் ஏற்பட்டே ஆகும்.தேடப்படாத இலக்கியங்களான இவை  – பல கருத்துக்களைச் செப்பி நிற்பதற்காகவேனும் படிக்க வேண்டும். இந்தக் காவியங்கள் காலத்தும் திருமணம் என்பதில் சாதிக்கட்டுப்பாடு மிகவும் இறுக்கமாய் இருந்திருக்கிறது என்பதும் அறிந்திட முடியும். தாக்கத்துக்கு உள்ளானவர்கள் பெண்களாகவே கானப்படுகிறார்கள் என்பதையும் அறிந்திடுகிறோம் பெண்களையே – அக்காலம் தொடக்கம் இக்காலம் வரையில் துன்பத்துள் ஆழ்த்துவது என்பது சமூகத்தின் மாற்ற முடியா நிலை என்பதும் மனத்தில் பதிகிறது. எதிர்த்த பெண்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களின் வாழ்வு வசந்தம் இல்லாது வரண்டே போனது என்பதும் மனத்தில் பதிகிறது. முடிவில் உலக வாழ்வினையே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கே பெண்கள் வந்தும் விடுகிறார்கள் என்பதையே குண்டலகேசியும் , வளையாபதியும் எமக்கெல்லாம் காட்டி நிற்கிறது எனலாம்.

    காலத்தின் கருத்துக்களே இலக்கியமாய் எழுகின்றன. இலக்கிய வரலாற்று அறிஞரின் நோக்கும் இதுவாகத்தான் இருக்கிறது. ஐம்பெரும் காப்பியங்கள் எழுந்த காலத்துச் சமய நிலையும், சமூக நிலையும், அரசியல் நிலையும், அந்தக் காப்பியங்களிலும் புகுந்துவிடாமல் இருக்கவே இல்லை என்பதும் நோக்கத்தக்கதே. ஐம்பெரும் காப்பியங்களிலும் சமயக்கருத்துகள் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்க முடியாத் ஒன்றாகவே காணப்படுகிறது. சிலம்பினைச் சமணம் சார்ந்தது என்று சொன்னாலும் கூட – அது சமய நல்லிணக்க்த்தைப் பேணுவதாய் அமைகிறது என்று அறிஞர் சுட்டிக் காட்டுவார்கள். அதே வேளை தேடப்படாத இலக்கியம் என்று நான் குறிப்பிடும் குண்டல்கேசியும், வளையாபதியும், சமய சமரசத்துக்கு அப்பால் சென்று – சமணம் என்னும் மதம்சார்ந்த உறுதியான கருத்துக்களைக் காட்டும் பாங்கிலேயான் அமைந்திருக்கின்றன என்பதும் மனங்கொள்ளத் தக்கதேயாகும். அதேவளை   வாழ்வியலிலும்  அறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாய், நிலையாமையினை மேலோங்கிக் காட்டும் பாங்கினையே – தேடப்படாத இலக்கியங்கள் செப்பி நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதேயாகும். கதைக்குக் கதையாயும், கருத்துக்களுக்குக் கருத்தாயும் – காட்டி நிற்கும் குண்டலகேசியையும், வளையாபதியையும் “தேடப்படாத இலக்கியம்” என்று எண்ணுவதையோ அல்லது சொல்லுவதையோ மறந்துவிடுவோம். அவையும் நாடப்படும் இலக்கியமே என்பதையும் கருத்திருத்துவோம்!

    Share
  • பூகம்பத்தால் பூகோளச் சுற்றச்சின் கோணம் மாறி, சூடேறுகிறது பூமி

    பூகம்பத்தால் பூகோளச் சுற்றச்சின் கோணம் மாறி, சூடேறுகிறது பூமி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++

    https://youtu.be/fHS042a-Nb0
    https://youtu.be/-lLgA9C1G4c
    https://youtu.be/WLRA87TKXLM
    https://youtu.be/hvjTicipAwo
    https://youtu.be/xQSHxY5ZR6w
    https://youtu.be/dfiT3Zh5q3c
    https://youtu.be/ZD8THEz18gc
    https://youtu.be/OqsRD4HPtH0
    https://youtu.be/xVQnPytgwQ0
    https://youtu.be/B4Q271UaNPo
    https://youtu.be/3Uua_OEW2QY

    +++++++++

    Milankovitch cycles 2

    பூகோளம் மின்வலை யுகத்தில்
    பொரி உருண்டை ஆனது !
    ஓகோ வென்றிருந்த உலக மின்று
    உருமாறிப் போனது !
    பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை
    பூச்சரித்துக் கந்தை ஆனது !
    மூச்சடைத்து விழி பிதுக்க
    சூட்டு யுக வெடிப் போர் மூளுது !
    தொத்து நோய் குணமாக்க
    தூயநீர் வளம், காற்று வளம் தேவை !
    காலநிலை மாறுத லுக்குக்
    காரணிகள் வேறு வேறு !
    கரங் கோத்து பூமி காக்க, அனைவரும்
    வருவீ ர் எனக் கூறு கூறு !
    ஓரிடத்தில் எரிமலை வெடித்து
    உலகெலாம் பரவும்
    கரும்புகை மூட்டம் !
    துருவப் பனிக்குன்று வேனிற்காலம்
    உருகி, உருகி
    உப்பு  நீர்க்கடல் மட்டம் உயரும் !
    உஷ்ணம் மெதுவாய் ஏறும் !
    தாளம் தடுமாறி
    வேளை தவறிப் பருவக் காலம் மாறி,
    கோடை காலம் நீடிக்கும்,
    குளிர் காலம் குறுகிப் போகும்,
    பனி மலைகள் வளராமல்
    குள்ள மாகும்
    நில வளம் செழிப்பிழக்கும் !
    நிலப் பகுதி நீர்மய மாகும் !
    நீர்ப் பகுதி நிலமாகிப் போகும் !
    உணவுப் பயிர்கள் சேத மாகும் !
    மனித நாகரீகம் நாசமாகி
    புனித வாழ்வு மோசமாகி
    வெறிபிடித் தாளும்
    வெப்ப யுகப் பிரளயம் !

    +++++++++++++++++++++++++

    கடந்த 282,000 ஆண்டு கணிப்புத் தகவல் இலக்கங்களை [Data] ஆராய்ந்ததில், முதன் முறையாக பூகோள அச்சின் சாய்வுக்கும், பூமியின் பேரளவு நீர்மை, உஷ்ணப் பாதிப்புக்கும் பூமத்திய ரேகை உட்புறத் தளங்களில் [Inter-tropical Convergence Zone -ITCZ] ஓர் தொடர்பு உள்ளதைக் கண்டுபிடித்தோம். தகவல் இலக்கங்களை நாங்கள் கணித முப்பட்டை [Mathematical Prism] வழியாக அணித்துவத்தைப் [Pattern] பார்த்ததில் 41,000 ஆண்டு சுழற்சியில் மாறும் பூகோளச் சுற்று அச்சின் சாய்வுக்குத் தொடர்பு உள்ளதை அறிந்தோம்.

    கிரிஸ்டீன் திலாங், பூதளக் காலநிலை விஞ்ஞானி [University of Science & Technology of China & National Taiwan University Research Collaborators]

    What we can do

    பூகோளச் சுற்று அச்சின் சாய்வுக்கும், பூமியின் நீர்மை / உஷ்ணப் பாதிப்புக்கும் தொடர்பு உள்ளது.

    பூகோளச் சுற்று அச்சின் சாய்வு 41,000 ஆண்டுச் சுழற்சி மீட்சியில் மாறி வருகிறது.  உச்ச அளவுச் சாய்வு : 24.5 டிகிரி. அதம அளவு : 21.5 டிகிரி. தற்போதைய அளவு : 23.5 டிகிரி. பூமியின் சுற்றச்சு சாய்வுத் திரிபு 23,000 ஆண்டு சுழற்சியில் பூமியில் பனித்தட்டு உருவாக்கத்தைப் பாதிக்கிறது.  சுமார் 100,000 ஆண்டுக்கு ஒருமுறை சுற்று வீதி மாறும் அந்த நிகழ்ச்சி “சுற்றச்சுத் திரிபாட்டம்”  [Precession] என்று குறிப்பிடப் படுகிறது. அதனால் பூமத்தியப் பகுதிகளும் [Tropics] பரிதியைப் பூமி சுற்றும் சுற்று வீதியும் [Earth’s Orbit] பாதிப்படைகின்றன.  பூமியின் சுற்று வீதி மாறுதல் பூகோளத்தில் காலநிலைப் பாதிப்பை உண்டாக்கும். அந்த பூகோள சுழற்சி நிகழ்ச்சி “மிலன்கோவிச் சுழற்சி” [Milankovitch Cycle] என்று குறிப்பிடப் படுகிறது.

    சமீபத்தில் இந்த ஆய்வு முடிவை வெளியிட்ட குழுவினர் சைனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவியல் காலநிலை விஞ்ஞானி கிரிஸ்டீன் திலாங்க் [Kristine DeLong] தலைமையில் பணியாற்றியவர். அவர்கள் கடந்த 282,000 ஆண்டுகளாய்க் கிடைத்த தகவல் இலக்கத்தை வைத்து ஆய்வுகள் செய்து, முதன்முறையாக பூமியின் சுற்றச்சு சாய்வு திரிபுக்கும், பூமத்தியப் பகுதி நீர்மை, உஷ்ண மாறுதலுக்கும் தொடர்பு உள்ளதென அறிவித்தார். அந்த முடிவறிக்கை 2015 நவம்பர் 25 தேதி “இயற்கை வெளியீட்டு” [Nature Communications] இதழில் வெளி வந்துள்ளது.       

    Seasonal variations

    பூதளவியல் சீர்குலைப்பு, பருவச் சுழற்சி, காலநிலைப் பாதிப்புகளை  விளைவிப்பதால்,  அது அனைத்துப் பூகோள மாந்தரின் பிரச்சனையாக ஆகிவிட்டது.   அதைத் தீர்வு செய்ய முற்படும் போது, மனித இனத்தில் சில பிரிவினர் நிச்சயம் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க முடியாது.   உலக சமூக மாந்தர் முன்வந்து, பூதள மாந்தர் உரிமை, தேவைகளை நோக்கி,  அதைப் பயின்று ஆய்வு செய்து, முழுக் கவனமுடன் சீர்ப்படுத்த இப்போது எடுத்து நடத்த முற்பட வேண்டும்.

    ஜான்  கார்ல்சன் [சட்டப் பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம்]

    Global ocean mean temperature
    2013 மே மாதம் நவீன வரலாற்றில் முதன்முறையாக கரியமில வாயுத் திரட்சி 400 ppm [parts per million]  என்று ஹவாயியில் உள்ள மௌனா லோவா நோக்ககக் கருவிகள் [Mauna Loa Observatory] காட்டி ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக நிபுணர் வெளியிட்டு உள்ளார்கள். சென்ற முறை பூதளவியல் நிபுணர் இம்மாதிரி 400 ppm அளவு கரியமில வாயுத் திரட்சி [Concentration] இருந்தது முன்பு மூன்று – ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இடையே “பிளியோசீன்” காலத்தில் [Pliocene Epoch] இருந்ததாக தற்போது நம்புகிறார்கள்.   அப்போது பூகோளத்தின் உஷ்ணம் : 3.5 முதல் 9 டிகிரி F [ 2 to 5 டிகிரி C ] இப்போது உள்ளதை விட மிகையாக இருந்திருக்கிறது.  அந்தப் பிளியோசீன் யுகத்தில் மரங்கள் ஆர்க்டிக் கடல் வரை [Arctic Tundra] வளர்ந்திருந்தன.   கடல் மட்டம் உயர்ந்து 65 அடி முதல் 80 அடி வரை பொங்கி எழுதிருந்தது !

    ஜேம்ஸ் ஒயிட் [Director, CU-Boulder’s Institute of Arctic and Alpine Research]  

    அடிப்படை விதிப்படி ஆர்க்டிக் பனித் தளங்கள் உருகும் போது, ஆர்க்டிக் கடல் ஒரு பெரும் நீர்மை ஆவிப் போர்வை, முகிலை [Blanket of water vapour and clouds]  உண்டாக்கி, ஆர்க்டிக் துருவப் பகுதியைச் சூடாக வைத்துக் கொண்டு வருகிறது.

    ஜேம்ஸ் ஒயிட்.

    World sharing of gas emiissions

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டி காவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    Arctic Ice Retreat

    Antarctica

    “கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது. சூடேறும் பூகோளம் மெல்ல மெல்லச் சூடேறி 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.”

    ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)]

    “கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும். கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டித்திருக்கிறது.  அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார் !  எதிர்பார்த்தை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”

    கிரிஸ்டொஃபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]

    Pollution groups

    “55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தீவிரச் சூடேற்றம் உண்டாகி மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினம் அழிந்து போயின என்றும், அதே சமயத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் இன்றைய (நவம்பர் 19, 1999) விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது.  அந்த மாதிரி வெப்ப யுகம் “சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது.  அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை வருகிறது.”

    ஜான் ரோச் [John Roach, Environmental News Network (Nov 19, 1999)]

    “மீதேன் வாயு வெளியேற்றத்துக்கும், வெப்பச் சூடு ஏற்றத்துக்கும் உள்ள உறவு கடற்தளப் படிகைகளை [Ocean Floor Sediments] ஆராய்ந்து கண்ட விளைவுகளை வைத்துத் தீர்மானிக்கப் பட்டது.  அதுவே வெப்ப ஏற்ற விதிக்கு முதல்தர ஆதாரச் சான்று.  வெப்ப ஏற்றம் கடற்படிகையைச் சூடாக்கி திட மீதேனை நீர்த்திடச் செய்து [Hydrated Soild Methane (CH4)] வாயுக் குமிழ்களாய்க் கொப்பளிக்க வைக்கிறது.  மீதேன் வாயு நீரில் கலந்துள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து ஏரிகளில் கரிமம் [Carbon] பிரிந்து கரிமச் சுற்றியக்கம் [ Global Exogenic Carbon Cycle] தொடர்கிறது.”

    டோரோதி பாக், ஆய்வாளர், கலி·போர்னியா பல்கலைக் கழகம்

    Global Warming Effects
    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டி காவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

    Impacts of Global Warming

    What Global Warming does

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    சூடேறும் பூகோளம் பற்றி அல் கோர்

    Global warming family tree

    பூகோளம் சூடேறும் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம் ?

    பூகோளம் என்று நாம் சொல்லும் போது, மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட உஷ்ண நீட்சியில் [Temperature Range] வைத்துக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி சூட்டுப் பிரளயம் நேர்ந்துவிடும்.  வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் யாவும் சிதைந்து, சீர்குலைந்து பூகோளம் செவ்வாய்க் கோள்போல் நீர்மை, ஆக்ஸிஜென், ஹைடிரஜன் இல்லாமல் பாலைவனமாய் வரண்டு போய்விடும்!  சூழ்வெளியில் சேமிப்பாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் போன்ற வாயுக்கள்) பரிதியின் வெப்பத்தை விழுங்கிப் பூகோளத்தின் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன.  ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே.  ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, ஆயில் போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூகோள உஷ்ணம் விரைவாக ஏறுகிறது.

    Deaths due to Natural Disasters

    Fig 3 Gore's Presentation

    சமீபத்தில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டுகளாய்ச் சேமிப்பான பனிக்குவிப்பிலிருந்தும் மீதேன் வாயு பேரளவுக் கொள்ளளவில் வெளியேறுவதாகச் சூடேறும் பூகோள எச்சரிப்பாளர் எடுத்துக் கூறியுள்ளார்.  மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்படுகிறது.  பூகோளச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பன் டையாக்ஸைடை விட 23 மடங்கு பெரியது.  உலகில் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் சூடேறும் பூகோளத்தை மெய்யாகக் கருதி ஏற்றுக் கொண்டாலும், அம்மாறுதலை ஒப்புக்கொள்ளாத அறிஞரும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் சூடேறிய பூகோளத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் மெய்யாக உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.
    Earth's Orbit change

    சூடேறும் பூகோள எச்சரிக்கைகள், மாறுதல்கள், இன்னல்கள் !

    பூகோளம் சூடேறுவதால் ஒவ்வோர் ஆண்டும் காலநிலைக் கோர விளைவுகள் மாறி மாறி விளைந்து வியப்புக்குள் நம்மை ஆழ்த்துகின்றன.  துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதைக் காண்கிறோம்.  கடல் வெள்ளம் சூடேறி சூறாவளி களும், சைக்குலோன்களும், ஹரிக்கேன்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, பலத்தில் அசுரத்தன மாகிக் கோடான கோடி உலக மக்களுக்குப் பேரின்னல்களை விளைவித்து வருகின்றன.  நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் பயம் வந்துவிட்டது.  மேலும் கீழ்க்காணும் நூதனக் காலநிலைக் கோர விளைவுகள் உலக மக்களைத் துன்புறுத்தி வருகின்றன !

    1.  கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5]   எண்ணிக்கை இரட்டித்துள்ளது.

    2.  கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.

    3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.

    4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

    Fig 2 Milankovitch Cycles

    மேலும் தொடர்ந்து சூடேற்றம் மிகையாகச் ஏறிச் சென்றால், கீழ்க்காணும் பெருங் கேடுகள் பரவ வாய்ப்புகள் உண்டாகும்.

    1.  அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்.

    2.  கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்.

    3.  2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்.

    Earth'a Axis wobbles

    Earth’s Axis Wobbles

    4.  2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்.

    5.  வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம்.

    6.  நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.

    சூடேறும் பூகோளத்தில் எழுகின்ற இந்த பிரச்சனைகளை ஐயமின்றி நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும்.  அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமை நெறியாக உள்ளது.  நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும்.  அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் எப்போது என்று நினைக்கிறீர்கள் ? இப்போதுதான் !

    Impacts

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]  (April 9, 2007)
    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it”   By Al Core (2006)
    2(a)  The Assault on Reason  By Al Gore  (July 2007)
    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)
    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)
    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)
    6.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)
    7.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)
    8. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)
    9. http://www.terradaily.com/reports/Ice_free_Arctic_winters_could_explain_amplified_warming_during_Pliocene_999.html  [July 31, 2013]
    10.  http://www.livescience.com/topics/global-warming/  [August 6, 2013]
    11. http://www.nrdc.org/globalwarming/  [August 14, 2013]
    12.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [August 15, 2013]
    13.  http://www.answers.com/topic/global-warming
    14.   http://en.wikipedia.org/wiki/Effects_of_global_warming   [August 9, 2013]
    15.http://www.terradaily.com/reports/Seasonal_CO2_range_expanding_as_more_is_added_to Earths_atmosphere_999.html    [August  14, 2013]
    16. http://www.terradaily.com/reports/Greenland_ice_is_melting_also_from_below_999.html  [August 14, 2013]
    17. http://www.planetseed.com/relatedarticle/sun-and-earth-and-temperature-change
    18. https://en.wikipedia.org/wiki/Solar_activity_and_climate  [October 1, 2015]
    19. http://www.bgs.ac.uk/discoveringGeology/climateChange/general/causes.html?src=topNav
    20. http://www.spacedaily.com/reports/New_research_shows_Earths_tilt_influences_climate_change_999.html  [December 16, 2015]

    Share
  • பட்டாணி சுண்டல் செய்வது எப்படி?

    பட்டாணி சுண்டல் செய்வது எப்படி?

    பச்சைப் பட்டாணி சுண்டல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், ஜெயந்தி சுப்ரமணியன். உடன் உரையாடுகிறார், வெ.சுப்ரமணியன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கண்ணை மூடி, ஒற்றைக் காலில்!

    கண்ணை மூடி, ஒற்றைக் காலில்!

    பிங்க் உடற்பயிற்சி நிலையத்தில் இன்று குடும்ப விழா நடந்தது. இதில் இன்று தம்பதிகளுக்குப் போட்டி நடத்தினார்கள். பல்வேறு போட்டிகளைத் துண்டுச் சீட்டில் எழுதி வைத்து, குலுக்கல் முறையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். எங்களுக்கு வந்தது, கண்ணை மூடிக்கொண்டு ஒற்றைக் காலில் நிற்கும் போட்டி. அதிக நேரம் நிற்பவரே வெற்றியாளர். எங்கள் போட்டி எப்படி நடந்தது என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

    நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

    சரியான முதலீடுகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ள, சந்தையில் நிபுணத்துவம் வாய்ந்த நிதி மேலாளரும் நிதி ஆலோசகரும் தேவை. ஆனால், இந்த நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முருகா உன்னடி பணிந்தேனே | விஜயலட்சுமி

    முருகா உன்னடி பணிந்தேனே | விஜயலட்சுமி

    ‘முருகா உன்னடி பணிந்தேனே’ என்ற பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி எத்தனை இனிமையாகப் பாடுகிறார், கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கீசுகீசு என்ற ஆனைச்சாத்தன் பேச்சரவம்

    கீசுகீசு என்ற ஆனைச்சாத்தன் பேச்சரவம்

    கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? எனத் திருப்பாவையில் கேட்கிறார். ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தன் இதுதான். இரட்டைவால் குருவி, கரிச்சான், கரிக்குருவி என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இதன் கீசுகீசு என்ற குரலை இங்கே கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • (Peer Reviewed) முனைவா் வெ. இறையன்புவின் சிறுகதைகளில் வாழ்வியல் விழுமியங்கள்

    (Peer Reviewed) முனைவா் வெ. இறையன்புவின் சிறுகதைகளில் வாழ்வியல் விழுமியங்கள்

    முனைவா் அரங்கன். மணிமாறன்.
    முதுகலை தமிழாசிரியா்
    அரசு மேனிலைப் பள்ளி
    பரமனந்தல் செங்கம் வட்டம்
    திருவண்ணாமலை மாவட்டம்.
    பேசி: 99430-67963.
    Mail: maranvmctamil@gmail.com.

    முன்னுரை:

    இலக்கியங்கள் மனித வாழ்வியலின் நகல்கள். அலங்கரிக்கப்பட்ட முகபாவங்கள். கற்பனையில் முகிழ்ப்பவை என்றாலும் அடிநாதமாக ஓங்கி ஒலிக்கும் மனித வாழ்வியல் தத்துவங்கள் நூற்றாண்டுகளின் வாழ்வியல் பிழிவுகள்.

    மனித வா்க்கம் முயன்று தவறி கற்ற நற்பண்புகள், வாழ்வியல் விழுமியங்களாய் நிலைக்கின்றன.உண்மை, உழைப்பு, தியாகம், விட்டுக்கொடுத்தல், அன்பு, கருணை, மானம், வீரம், மரபார்ந்த பெருமை ஆகிய இவையெல்லாம் அவ்விழுமியங்களின் அடையாளங்கள்.

    மனித வாழ்வியலின் சாரமாய் விளங்கும் விழுமியங்கள் முனைவா் வெ. இறையன்புவின் சிறுகதைகளில் வெளிப்படுமாற்றை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.

    முனைவா் வெ. இறையன்பு:

    “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

    இகல்வெல்லல் யார்க்கும் அரிது”1

    எனும் குறளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முனைவா் வெ. இறையன்பு அவா்கள் எளிய குடும்பத்தில் பிறந்தாலும் இடையறா தன் முயற்சியாலும் உழைப்பாலும் உயர்ந்த ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றி பெற்றவா்.உழைப்பும் மனித நேசிப்பும் அவா்தம் வாழ்வில் உயர இடையறாத பாடுபடுதலுமே தம்பணியின் அழகாய்க் கண்டவா்.

    சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் கீழ்நிலையில் உள்ள மனிதா்களோடு வாழ்ந்து அவா்களோடு பழகி அவா்களின் முன்னேற்றத்திற்கான தடைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவா்தம் வாழ்வில் ஒளிவிளக்கேற்றியவா். நொடிதோறும் மானுடம் வாழச் சிந்தனை செய்தவா். எதிரெதிரான அரசியல் சூழல்களிலும் நோ்மையும் தூய்மையும் நடுவுநிலையும் கொண்டு உயா்ந்தவா்.பல்வேறு துறைகளில் பணியாற்றி பல்லாயிரம் மனித முகவரிகளை அறிந்த அனுபவம் மிக்கவா். கண்டு கேட்டு படித்து உய்த்துணா்ந்த அனுபவங்களை சிறுகதை, புதினம், தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள் என எழுதிக் குவித்துச் சாதனை புரிந்துள்ளவா். பேச்சாலும் எழுத்தாலும் பணிகளாலும் உயா்ந்து தற்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளராக விளங்குகிறார்.  கற்பனையும் கவித்திறனும் நடை அழகும் கூட்டி இலக்கியங்கள் விரைந்து படைத்து படைப்பாளா்கள் பந்தயத்தில் வென்று விருதுகளும் வெற்றிகளையும் பெறுவதொன்றே நோக்கமாகக் கொண்டு எழுதுபவா் அல்லா் இவா். மக்களின் வாழ்வை அறிந்து அறிவுறுத்தி சீா்படுத்தி செம்மையுறுத்தி மனிதம் எனும் மகத்தான விளைச்சலைக் காண பாடுபடும் எழுத்துழவன் இவா். ஊக்கப்படுத்தலும் உயா்வழிக்காட்டலும் முன்னேற்றுதலும் இவா் எழுத்தின் குறிக்கோள்களாக உள்ளன.

    முனைவா் வெ.இறையன்பு படைப்புலகம்:

    சிறுகதை உலகில் வ.வே.சு ஐயா், புதுமைப்பித்தன், கு.பா.ரா, கல்கி,  அண்ணா, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், லக்ஷ்மி, திலகவதி போன்றோர் ஒரு மரபான பாரம்பரியத்தை உருவாக்கினா்.சிறுகதைகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் சிறந்து விளங்கி வருகின்றன.இம்மரபின் வழி வரும் முனைவா் வெ.இறையன்பு அவா்கள் அனுபவ வழி ஞானத்தை பலவகை படைப்புகளாக்கித் தருவதில் வல்லவராக விளங்குகிறார். கற்ற கல்வியறிவு, பெற்ற உலகியல் அறிவு, சிந்தனைத் திறன், மனிதம் செழிக்க வேண்டும் என்ற அக்கறை ஆகிய தனிச்சிறப்புகள் அவரது படைப்புகளில் வெளிப்படுவதை அறிய முடிகிறது.

    வாய்க்கால் மீன்கள், வைகை மீன்கள்,பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் சாகாவரம், அவ்வுலகம், ஆத்தங்கரை ஓரம் ஆகிய புதினங்களும், படிப்பது சுகமே, இலக்கியத்தில் மேலாண்மை, போர்த்தொழில் பழகு, பத்தாயிரம் மைல் பயணம், வையத்தலைமைகொள், ஏழாம் அறிவு(மூன்று பாகங்கள்), ஓடும் நதியின் ஓசை என சிறியதும் பெரியதுமாகிய கட்டுரை நூல்கள் என மொத்தமாக 102 நூல்களைப் படைத்துள்ளார். தொலைக்காட்சிகளிலும் இலக்கிய மேடைகளிலும் பட்டிமன்றங்களிலும் இவரது வலிமையான கருத்துகள் மென்மையான இதமான பேச்சாக மலர்ந்துள்ளன.இறையன்பு அவ்வப்போது எழுதிய சிறுகதைகள் அரிதாரம்,(2005), அழகோ அழகு(2009), நரிப்பல்(2009), பூனாத்தி(2012), நின்னினும் நல்லன்(2014) என ஐந்து தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.அவை மனிதர்கள் எத்தகைய நெருக்கடிகள் சிக்கல்கள் எதிர்கொண்டாலும் எங்கும் கசப்பும் துயரமும் பொங்கி வழிந்தாலும் மேன்மையான அம்சத்திற்கு முக்கியத்துவம் தருவதைச் சித்திரித்துள்ளன. இறையன்பு முன்னேறத் துடிக்கும் இளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். “இறையன்புவின் பெரும்பாலான கதைகள் வாழ்வின் விழுமியங்களை முன்னிலைப்படுத்தி வெளியெங்கும் அலைகின்றன. ஆணவம், அதிகாரம், வன்முறை போன்றன கட்டமைக்கிற வாழ்தல் முறையைப் படைப்புகளின் வழியாகத் தகர்த்து, மனித இருப்பின் உயர்வு குறித்து அக்கறைகொள்வது என்பது இறையன்புவிடம் இயற்கையாகவே இருக்கிறது.பண்டையத் தமிழிலக்கியத்தின் தொடர்ச்சியாக அறச்சீற்றமும், சிறுமை கண்டு பொங்குகிற மனதின் ஆவேசமும் அவருடைய புனைவுகளின் வழியாக வெளிப்படுகின்றன” 2 என்று ந.முருகேச பாண்டியன் தனது தொகுப்புரையில் விளக்குகிறார்.மனிதர்களுக்குள்ளிருக்கும் தெய்வீக உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்வதே என் படைப்புகளின் நோக்கம் என்று தனது படைப்புகளுக்கு விளக்கம் காட்டும் வெ.இறையன்பு அவா்கள் பெரிய அலை வந்து என்னை குலுக்குகிற போதெல்லாம் என் வாசிப்பும் எழுத்தும் நான் நிலைகுலைந்துவிடாதபடி பார்த்துக்கொள்கின்றன என்று தன் எழுத்தின் பலத்தை சுயஅறிமுகம் செய்கிறார்.வாழ்வியல் உணர்வுகளான பசி, ஏழ்மை, கல்வி, வேலைவாய்ப்பின்மை,பெண்ணடிமைத்தனம் ஆகிய தீமைகள் நீங்க வேண்டும். நாடு பலவகையிலும் முன்னேற வேண்டும் என்ற இலட்சியத்தோடு கதைகளைப் படைக்கிறார். நடைமுறை வாழ்க்கையிலுள்ள உணா்வுகளும் சாதாரணமாகக் காணும் காட்சிகள் சம்பவங்கள் ஆகியவற்றையும் நடப்பு வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைக் கதைகளாக்கிக் காட்டுகிறார். இவா் எழுத்தின் வலிமைகளாக எளிமை, அறிவுறுத்துதல், பண்படுத்துதல், இளைஞர்களை இலட்சிய பாதைக்கு அழைத்தல் முற்போக்கான வளர்ச்சி பாதையில் நாட்டை உருவாக்குதல் ஆகிய சிறப்பியல்களைக் கொண்டிலங்குவதை அறியமுடிகிறது. இத்தகு சிறப்புகளையுடைய வெ.இறையன்பு அவா்களின் சிறுகதைகளைக் கொண்டு வாழ்வியல் விழுமிய சிந்தனைகளை ஆய்ந்தறிவோம்.

    ஒற்றுமையே பலம்:

    “ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே-நம்மில்
    ஒற்றுமை நீங்கி லனைவா்க்கும் தாழ்வே
    நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
    ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்?” 3

    என்று மனிதர்களாகிய நமக்குள் இனம், மொழி, மதம் என பலவகையிலும் வேற்றுமைகள் ஏற்பட்டால் அது பகைவா்களுக்கு நல்வாய்ப்பாகி விடும். நம்மின் வேற்றுமைகள் அவா்தம் மேன்மைக்கு வழி வகுத்துவிடும் எனவே நம்மில் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளைக் களைந்து வாழ்தல் நம் வாழ்வுக்குக்கும் வளர்ச்சிக்கும் வழியாகும் என்பதை அரிதாரம் கதை மூலம் உணர்த்தியுள்ளார் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவா்கள்.

    அரிதாரம் கதையில் அந்த கிராமத்திற்கு புதிதாக வந்த வளா்ப்பு நாயின் தோற்றத்தையும் போஷாக்கையும் கண்ட அந்த ஊர் தெரு நாய்கள் அதற்கு பயந்து அடிமையாகி வாழ்கின்றன. தன் உணவு, சுதந்திரம் அனைத்தையும் இழந்து கிட்டதட்ட அடிமைகளாக வாழவேண்டிய நிலைக்கு ஆளாயின.அவற்றுள் சில கூடி தங்களின் அவல நிலையை உணர்ந்து ஒன்றுகூடி சீமை நாயை விரட்டிட போராட வேண்டும் என திட்டம் தீட்டின. இதை அறிந்த சீமை நாய் மடங்கிய காது நாய்களுக்கும் நிமிர்ந்த காது நாய்களுக்குமிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கி பிரித்தாளும் சூழ்ச்சியைக்  கையாள்கிறது.

    ‘மடங்கிய காது நாய்கள் தாங்கள்தான் உசத்தி என்று சொன்னதாய் விஷயம்          பரவியபொழுது நிமிர்ந்த காதுகளுக்கு எக்கச்சக்கமான கோபம் ஏற்பட்டது.’ 4

    பின்னா் இதுவும் சீமை நாயின் சூழ்ச்சி என உணா்ந்த நாய்கள் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டதை அறிந்து இந்த கிராமத்தை நீங்களே நிர்வகித்துக்கொள்ளுங்கள் இது உங்களுடையதுதான் என விட்டுச் செல்கிறது.

    அதன் பின்னா் அந்த ஊர் நாய்களுக்கிடையிலேயே தங்கள் பரம்பரை வகையடிப்படையில் பிரிவு ஏற்படுகிறது. சில நாய்கள் சீமை நாயே நம்மை ஆண்டிருக்கலாம். சுதந்திரம் பெற்று என்ன பயன் என்று அவை கேட்கின்றன. அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் விரும்பி அவை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

    மேம்போக்காக கேலியாகத் தோன்றினாலும் கசப்பான அரசியல் சூழலைச் சுட்டி ஒன்றுபட்டு வாழ வேண்டும். ஒற்றுமையே வாழ்வுக்கும் வளா்ச்சிக்கும் வழியாகும் என்ற விழுமியத்தை வெளிக்காட்டியுள்ளார் ஆசிரியா்.

    பொய்மையும் வாய்மை:

    பொதுவாக சிலரை நல்லவா் என்று நம்புவோம். ஆனால் அவா்கள் பொய்யானவா்களாக போலிகளாக இருப்பதை காலம் கடந்து தெரிந்துக்கொள்ளும்போது மனம் வருத்தம் கொள்ளும். மனிதா்கள் மீதான நம்பிக்கையை தகர்த்து எதையும் எவரையும் சந்தேகப்படு என்பதை நிலைநிறுத்திவிடும்.

    நரிப்பல் கதையில் மாவட்ட ஆட்சித்தலைவரை அடிக்கடி தேடிவரும் பழநி ஒரு நரிக்குறவா் எனும் பழங்குடியினா் என அறிந்து அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்கிறார். அவா்கள் வங்கியில் வாங்கும் கடன் தவணைகளைச் சரியாகத் திருப்பிச் செலுத்துபவா்கள் என்றறிந்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்.பழநி தங்கள் கிராமத்திற்கு ஆட்சியா் வரவேண்டும் என பலமுறை வலியுறுத்துகிறார். நரிப்பல் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கிறார். ஆனால் நேர்மையான ஆட்சியா் அதை ஏற்க மறுத்துவிடுகிறார்.

    பழநியின் பலநாள் கோரிக்கையை ஏற்று அடுத்த வாரம் அவருடைய கிராமத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார். அவா்களுக்கு பல திட்டங்களையும் கடனுதவிகளையும் தர திட்டமிடுகிறார். ஆனால் வங்கி அதிகாரிகள் அவா்களின் கடன்திருப்புதல் சரியாக இல்லை. மேலும் கடனுதவி செய்ய தயக்கம் காட்டுகின்றனா். ஆனால் ஆட்சியா் அவா்கள் சரியாக திருப்பிக் கட்டுவதாக அறிந்திருந்தார். தற்போதைய தகவல் அவருக்கு ஏமாற்றமாகிறது.

    ‘நான் என்னென்னமோ பிளான் வச்சிருந்தேன்.தொகுப்பு வீடு கட்டித்தரணும். முதியோர் கல்வி வகுப்புகள் நடத்தணும். ஆடு கோழி வளா்க்க லோன் ஏற்பாடு பண்ணணும். அவா்கள் வாழ்க்கைய குறும்படமா எடுத்து மத்திய தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பட்டியல்ல சேக்கணும்.. இப்படி ஏகப்பட்ட ஆசை எனக்கு இருந்திச்சி…’5

    பின்னா் பழநி அடிக்கடி ஆட்சியா் சென்று வரும் செல்வாக்கைப் பயன்படுத்தி நரிக்குறவா்களிமிருந்து வங்கி கடன் கட்டுவதாய்ப் பணத்தைப் பெற்று கட்டாமல் கண்டபடி செலவு செய்ததை அறிந்து வருத்தம் அடைகிறார். மனிதர்கள் மீதான நம்பிக்கை பொய்த்துப் போன போது அவா் மனம் கனத்துப் போகிறது.

    அவனை இனிமேல் உள்ளே விடவேண்டாம் என எச்சரிக்கிறார். அவா் அந்த ஊருக்குச் செல்வதாய் இருந்த நாளில் பழநியும் அவனது மனைவியும் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறார். ஊராருக்கு தன் கள்ளம் தெரிந்துவிட்டதால் பழநி எடுத்த முடிவை எண்ணி துயரமுறுகிறார்.

    பழநி அடிப்படையில் ரொம்ப நல்லவன். அவன் இழப்பு அவா்தம் இனத்தாரிடம் கசப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிந்தபின் அவனது அண்ணன் மகன் பாபு பழநி ஆட்சியரிடம் தரச்சொல்லியதாக ஒரு பொட்டலத்தைத் தருகிறான். அதில் அந்த நரிப்பல் இருந்ததை பெறுகிறார்.

    நம்பிக்கையானவன் அந்த நம்பிக்கை இழக்கும்படியான செயலைச் செய்தாலும் மனிதத்தின் மீதான நம்பிக்கையை  இழக்க செய்யாமல் காத்த ஆட்சியரின் விழுமியம்

        “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவா்நாண
    நன்னயம் செய்துவிடல்” 6

    என்ற மனித விழுமியச் சிந்தனை இச்சிறுகதையில் வெளிப்படுகிறது.

    விருது சிறுகதையில் சாதாரண கிராமத்தில் ஏழைக்குடிசையில் பிறந்த டிக்காராம் கடுமையான முயற்சியாலும் பயிற்சியாலும் போலீஸ் அதிகாரி ஆகிறான். அவனுக்கு கொடுமையான கொள்ளையா்களை பிடிக்கும் சவாலான பணி வழங்கப்படுகிறது. அதை மிகுந்த சிரமங்களுக்குள் செய்து கொள்ளைக் கூட்டத் தலைவனை சுட்டுப்பிடிக்கிறான். அந்த கிராமத்தையே கொள்ளைக் கூட்டத்தினமிருந்து காத்து நிம்மதி ஏற்படுத்துகிறான்.

    கொல்லப்பட்ட கொள்ளையா்களின் தலைவன் டாகூ ராம்சிங்கின் புகைப்படங்களை வைத்து ஆவணங்களை ஆய்ந்தபோது பிற்கால ஆவணங்களில் அவனது பெயா் விடுபட்டிருந்தது. இதைப்பற்றி அறிய முயல முன்னாள் டி.ஜி.பி மகேஷ்சிங்கை தொலைபேசியில் தொடா்புகொள்ளக் கூறுகின்றனா். அவா் இந்த தகவலை யாரிடமும் கூற வேண்டாம் என்கிறார். இதேப்போன்று முன்பு நடந்த யுத்தத்தில் ஒரு கொள்ளையனைக் கொன்றோம். அவன் முகம் சிதைந்திருந்ததால் அது ராம்சிங்தான் எனக்கூறிவிட்டோம்.

    ‘நான் ராம்சிங்கைச் சுட்டுக்கொன்றதாக அரசுக்கு அனுப்பிவிட்டேன். எனக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்துவிட்டது.இப்போது வேறுவிதமாக அறிக்கை அனுப்பினால் அரசு என்னைப் பணியிலிருந்து நீக்கிவிடும்’.7

    எனக் கெஞ்ச டிக்கா கவலைப்படவேண்டாம் என தேற்றி அறிக்கையை மாற்றி அடையாளம் தெரியாத தலைவன் சுடப்பட்டான் என செய்தியைத் தருகிறார்.

    முன்னா் நடந்துவிட்ட தவறுக்காக தான் புரிந்த வீரதீரமான சாதனையையும் மறைத்து சக அதிகாரியைக் காப்பாற்றும் டிக்காராமின் செயல் பொய்மையும் வாய்மையிடத்த என்ற திருக்குறளின் விழுமியத்தைக் காட்டி நிற்கிறது.

    இளமையில் இலட்சிய வாழ்வு:

    இளமைப் பருவம் என்பது எதையும் செய்து முடிக்கும் வலிமையும் அறிவுத்திறனும் துடிதுடிப்பும் மிக்க பருவம். இப்பருவத்தில் யாரொருவன் தன்னை பலவகையிலும் வாழ்வில் நிலைநிறுத்திக் கொள்ளும் வழிகளில் ஈடுபடுத்திக்கொள்கிறானோ அவன் முன்னேற்றம் காண்கிறான்.

    இளமைக்காலத்தை பிரம்மச்சரியம் எனும் பருவமாகக் குறித்தனா் நம் முன்னோர்.கல்வி, அறிவு, பணிவு, எதிர்கால வாழ்வுக்கான இலட்சிய பாதையினை உருவாக்குதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட ஏற்ற பருவமாக இது அமைகிறது.

    முற்காலங்களில் குருகுலவாசம் எனும் கல்வி முறையில் தூய்மை, துறவு, சேவை, பணிவு ஆகிய நற்குணங்கள் வளா்த்தெடுக்கப்பட்டன. ஆனால் இன்றைய சுதந்திர நிலை கற்றலில் அறங்கள் நிறைந்த இளமைப்பருவம் காணாமல் போய்விட்டதை உணர்கிறோம்.

    கல்லூரிக் காதல் சிறுகதையில் கதைநாயகன் சேதுபதி எனும் வயதில் மூத்த நண்பனைச் சந்திக்கிறான். அவனது பண்பும் பாசமும் நாயகனுக்குப் பிடித்துப்போகிறது. பேச்சை விட அமைதி சிறந்தது. விடுதியில் தங்கி படிப்பதால் நிறைய நேரம் கிடைக்கும். நிறைய படிக்கவேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறுகிறார்.

    நாயகனின் உடன்படிக்கும் இளைஞா்கள் கேளிக்கை, ஊர்ச்சுற்றுதல், திரைப்படம், பெண்களைப்பற்றிய நினைப்பு ஆகியவற்றில் மூழ்கியிருக்கின்றனா். ஆனால் நாயகன் தன்னை பலவகையிலும் மேம்படுத்துக்கொள்ளும் முயற்சியில் நிற்கின்றான்.

    மற்ற ஆடவா்களெல்லாம் பழக விரும்பும் அழகியான மலா்மல்லிகை இவனை விரும்புகிறாள். சுற்றிச்சுற்றி வருகிறாள். அவனை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகிறாள். ஆனால் நாயகன் தான் இன்னும் அதற்கெல்லாம் தயாராகவில்லை எனவும் படிக்கவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகலாம் எனவும் கூறி மறுத்துவிடுகிறான்.

    “வாழ்வு நதியாக ஓடிக் கொண்டிருப்பது பனியாக இறுகிக் கொண்டிருப்பது அல்ல. அந்தக் காலகட்டத்தில் என்னைக் காட்டிலும் அறிவுள்ள அழகுள்ள என்னிடம் அன்பு காட்டுகின்ற மனிதன் கிடைத்தால் அவன் தோள்கள் என் தோள்களைக் காட்டிலும் பரந்ததாகத் தோன்றலாம். எந்த ஒப்பந்தமும் மீறக்கூடியதே!” 8

    என்று பக்குவமான இளைஞனாக எடுத்துக்கூறுகிறான். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழும் இளைஞா்களுக்கு இடையில் இவ்வாறான கல்வி, இலட்சியம், குறிக்கோள் கொண்ட இளைஞனைப் படைத்து எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய இளைஞா்களுக்கு வழிகாட்டுகிறார்.

    தன்னை வேட்டல்:

    பொதுவாக நாட்டின் நன்மைக்காக பொது அமைதிக்காக தான் துன்பமுற்றாலும் தன்னால் நன்மைக் கிடைக்கிறதென்றால் அதற்காக தன் உயிரையும் தரும் மனமுடைய மக்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் அழியாதிருக்கிறது.

        “புகழ்எனில் உயிரும் கொடுக்குவா் பழிஎனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலா் அயா்வுஇலா்
    அன்னமாட்சி அனையராகி
    தமக்கென முயலா நோன்றாள்
    பிறா்க்கென முயலுநா் உண்மை யானே” 9

    என்ற புறநானூற்று பாடல் இங்குப் பொருந்துகிறது.

    துறந்தான் மறந்தான் சிறுகதையில் மகத நாட்டில் வரலாறு காணாத வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. மக்கள் செத்து மடிகின்றனா். எல்லாத் திசைகளிலிருந்தும் துன்பமான செய்திகளே செவிக்கெட்டுகிறது. மன்னன் சந்திர குப்த மௌரியன் துறவி பத்திரபாகுவை சந்தித்து இத்துன்ப நிலையை மாற்றிட உபாயம் வேண்டுகிறான்.

    ‘அப்பாவி மக்கள் இவ்வாறு அலைகழிக்கப்படுகிறார்கள் என்றால் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் யாரோ பாவம் செய்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.அதற்கான பிராயச்சித்தமே இந்த நாட்டைக் காப்பாற்றும்’.10

    என்று கூறுகிறார்.

    இதனை அறிந்து மன்னன் நாட்டில் நிலவும் வறுமையும் துன்பமும் தீர தான் இளவரசனுக்கு பட்டம் சூட்டிவிட்டு துறவு மேற்கொள்வதாக உறுதியேற்று செயல்படுத்துகிறான்.

    ‘மகத்தான இந்த மகத சாம்ராஜ்யத்தில் அந்த உயிர்த் தியாகத்தால் அனைவரும் சுபிட்சமாக இருக்க வேண்டும்.சந்திரகுப்த மௌரியன் பதவிக்கு ஆசைப்பட்டவனல்ல என்பதை சரித்திரம் எப்போதும் உணரவேண்டும்’. 11.

    என்று நாட்டின் நன்மைக்காக தன் பதவியைத்துறந்து துறவியாகி உயிர்த்துறக்கவும் தயாராக இருக்கும் மன்னனின் தியாக மனநிலையை எடுத்துக்காட்டுவதன் வழி பொதுநலனுக்காய் தியாகம் செய்யவும் முன்வரவேண்டும் என்ற வாழ்வியல் விழுமியம் வெளிப்படுவதை அறிகிறோம்.

    நேர்மை குணம்:

    நேர்மை குணம் கொண்ட மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னமும் நிலைபெற்றிருக்கிறது. இன்னமும் உலகில் மழைப் பொழிகிறது.ஊழிக்காற்றிலும் யுகமுடிவிலும் ஆழிப்பேரலைகளாலும் கடும் பஞ்சத்தாலும் பெருமழையினாலும் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் எல்லாத் துன்பங்களை தாண்டியும் உலகம் தன்னை மீண்டும் நிலைநிறுத்துக் கொண்டு நீடிக்கிறது.

    நோ்மைக்கு சோதனை அதிகம். சோதனைகளை தாங்கும் உள்ளமே நோ்மையில் சிறந்து விளங்கும்.

    நாய்ப்பிழைப்பு சிறுகதையில் ஜோசப் என்பவா் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது பயணப்படி சம்பளப்பட்டியல் கேள்விக்குரியாகிறது. தினவனந்தபுரத்திற்கு மூன்று முறை சென்று வந்ததற்கான பயணப்படி அது. ஆனால் நிதி அலுவலா் கணேசன்  அந்த ஊரில் கம்பெனியின் கிளை இல்லாதபோது அங்கு பணிநிமித்தமாக சென்றுவந்ததேன் என கேட்டு நிறுத்துகிறார். அது கம்பெனி எம்.டி யின் பீகில் வகை நாய்க்கான மேட் தேடிச்சென்ற விடயமாகத்தான் என்று கூற, அதற்கெல்லாம் பயணப்படி தரமுடியாது என்கிறார். ஜோசப்பும் என் சொந்த செலவில் சென்று வந்ததாகவே இருக்கட்டும் என பயணப்படி பட்டியலை திரும்பப் பெறுகிறார். ஆனால் கம்பெனி எம்.டி காக தான் பட்ட நாய்படாதபாட்டையும் அதற்கான பயணப்படி கிடைக்காதபோதும் தன் செலவாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என  எடுத்துக்கொள்ளும் பக்குவமும் உணா்த்தப்பட்டிருக்கிறது.

    நோ்மை சிறுகதையில் குப்பன் என்ற அரசு அலுவலா் இறந்துவிடுகிறார். அவரது மரணத்திற்குப்பிறகு கிடைக்கவேண்டிய பணம் அவரது முதல் மனைவி தங்கத்துக்குத்தான் கிடைக்கவேண்டும் என்கிறார்.கோபாலன். அவா் எதையும் விதிமுறைப்படியே செய்பவா். ஆனால் சுப்ரமணியன் மனித நேயத்தையே பெரிதாக மதிப்பவா். குப்பன் இரண்டாவது மனைவி  செண்பகத்திற்கும் அவா்களது நான்குப் பிள்ளைகளுக்கும்தான் கிடைக்கவேண்டும் என்கிறார். தங்கம் சில காலங்களிலேயே குப்பனை பிரிந்து வேறு திருமணம் செய்து வாழ்கிறாள்.ஆனால் சட்டபடி குப்பனது வாரிசாக குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

    செண்பகம் குப்பனோடு வாழ்ந்தாலும் பிள்ளைகளை பெற்றிருந்தும் சட்டப்படியான வாரிசாக இல்லை. இதனைத் தீர்க்க தங்கத்தைத் தேடி பேசிப்பார்க்கின்றனா். வேறு வழியின்றி அவளிடமே மொத்த பணப்பலன்களையும் தருகின்றனா். ஆனால் அவள் தான் அவருடன் வாழ்ந்தது கொஞ்ச காலமே. தற்போது இரண்டாம் திருமணம் செய்த கணவரும் இறந்திருந்தாலும் குப்பனது பணப்பலனுக்கு உரியவள் செண்பகமே. அவளே அவரோடு வாழ்ந்தாள் சுகதுக்கங்களில் பங்கேற்றாள். வாரிசு பெற்றாள். எனவே அவளுக்கு மொத்த பணமும் சேரவேண்டியது என கொடுத்து விடுகிறாள்.

    ‘சாமி! இந்தப் பணத்துல நயா பைசாவக்கூட நான் தொட மாட்டேன். இதுல ஒரு டீ வாங்கிச் சாப்பிடக்கூட எனக்கு உரிமை இல்ல. அந்த மனுசனோட குடும்பம் நடத்தி பொங்கிப்போட்டு புள்ளைங்களைப் பெத்துக்கிட்ட இந்தப் பொம்பளைக்குத்தான் அத்தனை பணமும் சேரணும்’.12

    இங்கே சட்டத்தால் சிக்கல் நோ்ந்தாலும் நோ்மையும் மனிதநேயமுமே வெல்கிறது. சிக்கல் எளிதாக தீர்கிறது. பிறா்க்கு நியாயமாக கிடைக்கவேண்டியதை சட்டப்படியாக இருந்தாலும் தாம் ஏழ்மையில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளாத தங்கம் பெயரளவில் மட்டுமல்ல உண்மையிலும் தங்கம்தான் என முடிக்கிறார்.

    இன்றும் எங்கோ தொலைத்துவிடும் நகைகளையும் ரொக்க பணத்தையும் நோ்மையாக ஒப்படைத்துவிடும் மனிதர்கள் சிலரை காணும்போது மனிதம் கெட்டுப்போகாமல் சுழலும் உலகை நினைக்க பெருமையாகத்தான் உள்ளது. வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது.

    நின்னினும் நல்லன் சிறுகதையில் கருப்பச்சாமியிடம் பொன்னுமுத்து கடன்வாங்குகிறார். சொன்ன தேதியில் கடனைத்திருப்ப இயலவில்லை. இதனால் இருவரிடையே வாக்குவாதம் நடைபெறும்போது பேராசிரியா் முகமது ஷா தலையிட்டு அவரது நிலத்தை விற்று பணம் தர மூன்று மாத கால அவகாசம் கேட்கிறார்.ஆனால் பொன்னுமுத்துவால் மூன்று மாதம் கழித்தும் நிலத்தை விற்று கடனை அடைக்க முடியவில்லை. காரணம் அவசரத்திற்கு விற்காததால் யாரும் சரியான விலை கேட்கவில்லை. விற்க முடியவில்லை. அதனால் முகமது ஷா தனது வருங்கால வைப்பு கணக்கிலிருந்து பெற்ற கடன்தொகையை கருப்பசாமியிடம் கொடுத்து சொல்லைக் காப்பாற்றிக் கொள்கிறார். பொன்னுமுத்து இதை கேள்வியுற்று தன் நிலத்தை பணத்திற்குப் பதிலாக கிரையம் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். ஆனால் ஷா அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். இறுதியாக ஷா பெயரில் அந்த நிலம் பத்திரப் பதிவாகிறது. பயன்படாத அதிக விலைபோகாத அந்த நிலத்தில் தென்னங்கன்றுகளை வைக்கிறார் ஷா. கால மாற்றத்தில் அந்த நிலத்தை கம்பெனிகாரா்கள் அதிக விலைக்குக் கேட்கின்றனா் மூன்று இலட்சத்திற்கு வாங்கிய நிலம் ஒரு கோடிக்கு விலைக்குக் கேட்கின்றனா். ஷா பொன்னுமுத்துவிடம் நிலத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கேட்கிறார். ஆனால் பொன்னுமுத்து

    ‘நல்லா சொன்னீங்கய்யா. நீங்க மட்டும்தான் சோத்துல உப்பு போட்டு சாப்புடுறீங்களா? எங்களுக்கும் மானம் ரோசம் இருக்கு. கொடுத்ததைத் திருப்பி வாங்கற புத்தி எந்தக் கஷ்டத்திலேயேயும் எங்களுக்கு இருந்ததில்லை’. 13

    என்று கொடுத்த நிலம் கொடுத்ததுதான் என மறுத்துவிடுகிறார்.

    தான் என்னதான் பணக்கஷ்டத்திற்காக வாங்கியிருந்தாலும் தக்க நேரத்தில் உதவியிருந்தாலும் பல மடங்கு பொறுமான நிலத்தையும் அதன் விலை மதிப்பையும் பொன்னுமுத்துவிற்கே தந்துவிட நினைக்கும் முகமது ஷாவும் தற்போது என்ன விலையாக உயா்ந்திருந்தாலும் விற்றுவிட்ட நிலத்தின் மதிப்பு தனக்குத் தேவையில்லை என மறுக்கும் பொன்னுமுத்துவும் மரித்துவிடாத நேர்மையும் நாணயமும் உலகில் நிலைப்பதற்கான மனித சாட்சிகள். இவா்களால்தான் உலகம் சுழல்கிறது.

    முடிபுகள்:

    1. மனிதர்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு வாழவேண்டும். இல்லையெனில் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாகிவிடும்.ஒற்றுமையே பலம் என்று உணரவேண்டும். அடிமை வாழ்க்கையை விரும்பக்கூடாது.
    2. குற்றம்பார்க்கில் சுற்றம் இல்லை.மனிதர்களில் சில குற்றம் குறைகள் இருந்தாலும் அதனை பெரிதுப்படுத்தி மனிதத்தை காயப்படுத்திவிடக்கூடாது. சில சூழல்களில் அடுத்தவா் நலனுக்காக தன் சாதனைகளையும் மறைத்துக் கொள்ளும் மனித நேயா்களும் உள்ளனா்.
    3. இளமைப் பருவத்தில் மனதை சுகங்களில் திளைக்கவிடாமல் திறன்களை பெறுவதற்கான பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். இலட்சிய நோக்குள்ள இளைஞா்களையே நாடு எதிர்நோக்குகிறது.
    4. பொதுநலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் நீதிகளை நிலைநாட்டவும் தன்னையே தந்த தியாகச் செம்மல்கள் வாழ்ந்த நாடு இது. அவா்களின் தியாக மனப்பான்மையிலிருந்து இன்றைய இளைஞா்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
    5. மானம் பெரிதென வாழ்ந்த கவரி மான் பரம்பரையினா் நம் தமிழா். அடுத்தவா் பொருளையும் புகழையும் குறுக்கு வழிகளில் தாம் பெறக் கருதக்கூடாது. அது நம் மானத்திற்கு இழுக்கு.
    6. சொல் திறம்பாமை மனிதா்களின் உயா்குணம். எந்த நிலையிலும் அந்நற்குணத்திலிருந்து மாறிவிடக்கூடாது.அடுத்தவா் உழைப்பையும் அடுத்தவா் சொத்தையும் விரும்பாத நோ்மைத் திறம் மாறா மனிதர்கள் மனித விழுமியத்தின் ஆணிவோ்கள். நல்லோர் கெடுவதில்லை.
    7. உண்மை, நோ்மை, தியாகம், பற்றின்மை, பொதுநலம், தொண்டு மனப்பான்மை, மனிதமே புனிதமாய் வாழும் தூய்மை ஆகிய இவையே வெ.இறையன்புவின் சிறுகதைகளின் முடிபான வாழ்வியல் விழுமியங்களாக விளங்குவதை ஆய்ந்தறியப்பட்டன.

    சான்றெண் விளக்கம்:

    1. திருக்குறள்- திருவள்ளுவா்- பொருட்பால்-சொல்வன்மை அதிகாரம் குறள் எண் 647 ஜி.யு போப் ஆங்கில மொழியாக்கம் நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட் 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை-98 மூன்றாம் பதிப்பு செப்டம்பா் 2012 ப.133
    2. ந.முருகேச பாண்டியன்- தேர்வு மற்றும் தொகுப்பு- தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைககள்- நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட் 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை-98 மூன்றாம் பதிப்பு-2019.
    3. மகாகவி சுப்ரமணிய பாரதி-பாரதியார் கவிதைகள் தேசிய கீதங்கள்- வந்தே மாதரம் பாடல்- ப.124-பதிப்பு முனைவா் ச. மெய்யப்பன் –தென்றல் நிலையம் சிதம்பரம்-608001 முதல்பதிப்பு-2000
    4. தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்- தேர்வும் தொகுப்பும் ந.முருகேச பாண்டியன்-அரிதாரம் சிறுகதை ப.5 நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட் 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை-98 மூன்றாம் பதிப்பு-2019.
    5. மேற்குறிப்பிட்ட நூல் நரிப்பல் சிறுகதை ப.13
    6. திருக்குறள்- திருவள்ளுவா்- அறத்துப்பால்- இன்னா செய்யாமை அதிகாரம் குறள் எண்: 314 ஜி.யு போப் ஆங்கில மொழியாக்கம் நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட் 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை-98 மூன்றாம் பதிப்பு செப்டம்பா் 2012 ப.65
    7. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்- விருது சிறுகதை ப.99
    8. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்- கல்லூரிக் காதல் சிறுகதை ப.57
    9. புறநானூறு கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடல் எண் 182- ப.256 ஞா.மாணிக்கவாசகன் உரை- உமா பதிப்பகம் 18 பவளக்காரத் தெரு மண்ணடி சென்னை-600001 நான்காம் பதிப்பு-பிப்ரவரி
    10. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்-துறந்தான் மறந்தான் சிறுகதை ப.67
    11. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்- துறந்தான் மறந்தான் சிறுகதை ப.70
    12. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்-நேர்மை சிறுகதை பக்.78-79
    13. இறையன்பு சிறுகதைகள்- மேற்காண் நூல்- நின்னினும் நல்லன் சிறுகதை ப.114

    துணைநூற் பட்டியல்:

    முதன்மை நூல்:

    1. தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள், (தேர்வும் தொகுப்பும் ந.முருகேச பாண்டியன்), நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்- சென்னை-98 மூன்றாம் பதிப்பு-2019.

    துணைமை ஆதார நூல்கள்:

    1. திருக்குறள்- தமிழ்- ஆங்கிலம், ஜி.யு+ போப் ஆங்கில மொழியாக்கம், நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர் சென்னை-98, மூன்றாம் பதிப்பு-செப்டம்பா் 2012.

    2. பாரதியார் கவிதைகள், பதிப்பு முனைவா் ச. மெய்யப்பன், தென்றல் நிலையம் சிதம்பரம்-608001, முதல்பதிப்பு-2000.

    3. புறநானூறு, ஞா.மாணிக்கவாசகன் உரை, உமா பதிப்பகம், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி சென்னை-600001, நான்காம் பதிப்பு-பிப்ரவரி 2010.


    ஆய்வறிஞர் கருத்துரை: (Peer Review)

    தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதை, புதினம், சிந்தனை வெளிப்பாடுகள் மூலம் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் வெ. இறையன்பு (இ.ஆ.ப.). அவருடைய சிறுகதைகள் சமூகச் சிக்கல்களை முன்வைத்து அதற்குத் தீர்வு காணும் நோக்கில் எழுந்தவை. அத்தகைய சிறுகதைகளில் காணப்படும் வாழ்வியல் விழுமியங்களைக் கட்டுரையாசிரியர் திறம்படத் தொகுத்துக் கூறியுள்ளார். அயலக இலக்கிய வடிவமான சிறுகதையைத் தமிழ் மொழி ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உள்வாங்கிக் கொண்டது என்றாலும், அதனுடைய உச்சம் தொடுவதற்கும் சில ஆளுமைகளின் படைப்புகள் உதவின. அந்த ஆளுமைகளின் வரிசையில் தற்காலத்தில் நம்மிடையே திகழ்பவர் வெ. இறையன்பு. சமூக ஒழுங்கு, சமநீதி, மானுட மாண்பு, அறமும் அன்பும் பிணைந்து கொள்ளுகிற தருணங்கள், அரசியல், சட்டச் சிக்கல்கள் ஏற்படுத்தும் வாழ்வியல் முடிச்சுகள், இன்னும் தீர்ந்து விடாத மானுட அழுக்குகள் என பல தளங்களில் பரக்கப் பேசும் இவருடைய சிறுகதைகள் காலங்கடந்தும் நிலைபெற்றுத் திகழக் கூடியவை. இதனைக் கட்டுரையாசிரியர் பிழிவாக எடுத்துக் காட்டியுள்ளார். சிறுகதைகளுக்குள் ஊடுபாவாகச் சங்கத் தெறிப்புகளும், வள்ளுவத்தின் முத்துகளும் பரவிக் கிடப்பதையும் கட்டுரையாசிரியர் புலப்படுத்த முயன்றிருப்பது பாராட்டுக்குரியது.

    Share