காந்திய மாமணி T D திருமலை நூற்றாண்டு நிறைவு நாள் – அக்டோபர் 26. 2021

0

சுபாஷிணி திருமலை (T.D.திருமலை அவர்களின் மகள்)
எழுத்தாளர், தலைவர், சிறுவாணி வாசகர் மையம்

தடம் பதித்த தந்தை போற்றுதும்•••

மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் எங்களது நண்பரும் ஓவியருமான பாலசுப்ரமணியன் என்னை எழுத்தாளர் பா ராகவன் அவர்களைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். என் கைகளில் இருந்த சில புத்தகங்களை அவருக்கு அளித்தேன்.

அப்புத்தகங்களைக் கண்டு சந்தோஷிக்கும் போது , வாசிப்பைப் பரவலாக்கும் ஒரு இயக்கமாக “சிறுவாணி வாசக மையம்” என்ற அமைப்பைத் தலைமையேற்று நடத்துகிறார் என என்னை அறிமுகப்படுத்திவிட்டதோடு, மேலும் சிறப்பாக இவர் T.D. திருமலை என்னும் காந்தியவாதியின் மகள் சுபாஷிணி திருமலை என்றதும் “சட்” என்று இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்.

நாங்களும் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டோம்.

” காந்தியைப் பிடிக்காதோ? தவறான அறிமுகமாகிவிட்டதோ” என பயந்து விட்டேன்.

“பாலுசார்! இதை முதலில் சொல்லக்கூடாதா!

நீங்கள் வந்தது எனக்கு கௌரவம் சந்தோஷம் எல்லாம். அமருங்கள் “என்று எங்களை அமர்த்தித் தானும் அமர்ந்தார்.

“நான் கல்லூரிப் படிப்பை முடித்ததும் தி நகரில் தக்கர்பாபா வளாகத்தில் உள்ள ஒரு குடிலில் உங்கள் தந்தையைச் சந்தித்தேன். 3 மணிநேரம் பேசினோம் . கிளம்பும்போது “காந்தி மண்டபத்தில் உள்ள நூலகத்தில் காந்தி பற்றிய நூல்களைப் படித்துப்பார்” என்றார். அந்த சந்திப்பு, அந்த வார்த்தைகள் என் வாழ்வில் திருப்புமுனை. “

“தினந்தோறும் அங்கு போய் நூலகம் திறக்கும் முன்பே போய்விடுவேன். நூலகம் மூடும்போதுதான் நானும் வெளியில் வருவேன். இது நிகழாமல் இருந்திருந்தால் நான் வேறு மாதிரி உருவாகிஇருப்பேன்” என்றார்.
நாங்கள் இருவரும் வாயடைத்துப்போனோம்.

ஆம். இன்று என்று இல்லை. என்றும் திருமலை மகள் என்பதுதான் என் முகவரி.

இதுதான் எனது 55 ஆவது வயதில் எனக்கு “செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில்” பணிபுரிய வாய்ப்பு நல்கியது. அந்நிறுவனத்திறகு வரும் பேராசிரியர்கள், ஆளுமைகள் அனைவரும் என்னைத் திருமலை மகளா என மகிழ்ந்து என் தந்தை பற்றி சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வர். அவருக்குள்ள இலக்கியத்தின் பால் உள்ள ஈடுபாடுதான் இதற்கு காரணம்.

ஜஸ்டிஸ் மகராஜன் அவர்களின் நட்பால் ரசிகமணி டி கே சி அறிமுகமானார். அவருடைய ரசனையின் பால் கொண்ட மகிழ்வால் “உலக இதய ஒலி” என்ற காலாண்டு இதழை நடத்தினார். அவரது ஆசிரியர் அ சீனிவாசராகவன் அவர்கள் ஆவார். அப்போதைய இலக்கிய ஆளுமைகள் தெ பொ மீ அவர்களிலிருந்து அனைவருடனும் நட்பு கொண்டு இலக்கியத்தின் மூலம் காந்தியம் வளர்த்தார்.

சித்தாந்தங்கள் வேறாக இருந்தாலும் இலக்கியத்தால் அன்பால் அனைவரிடமும் நட்பாக இருந்தார். அது தான்… அப்பா T.D.திருமலை.

ஶ்ரீ வில்லிபுத்தூரில் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் தங்கள் செல்வத்தை நாட்டுக்காகவும், கல்வி நிறுவனங்களுக்கும், ஏழைஎளியோர்க்கும் அளித்து விட்டு ஏழ்மையை உவந்தே ஏற்றுக்கொண்டவர்கள். அப்பா அன்றையத் தேவையான வெள்ளையனே வெளியேறு , போராட்டத்தில் தொடங்கி பூதான இயக்கத்தில் கலந்து கொண்டவர். அவ்வூர் முனிசிபல் சேர்மனாக பதவி ஏற்று தண்ணீர் வசதி செய்தல் போன்ற நற்பணிகள் செய்தவர்.

பின் மதுரையில் காந்தி மியூசியத்திலுள்ள காந்தி நினைவுநிதியில் தத்துவப் பிரசாரகராக பணியில் சேர்ந்து, தன் இறுதிநாள்வரை காந்தியை இளையதலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் செலவிட்டார்.

எங்களது இந்த உறவின் உன்னதம் பல நற்பணிகள் செய்வதற்கு ஆதரவாக இருக்கிறது. நான் கோவை நண்பர்களோடு இணைந்து நடத்தும் சிறுவாணி வாசகர் மையத்திற்காக பல இலக்கியவாதிகளையும் படைப்பாளிகளையும் எளிதில் அணுக முடிகிறது. ஆகச்சிறந்த ஓவியர்கள் என் நண்பர்கள். அனைத்தும் என் தந்தைவழி கிட்டியதுதான்.

என்தாய்க்கு என தந்தை பற்றிப் புகார் இல்லை. மாறாக பெருமிதம் இருந்தது. தந்தையை எதிர்பார்க்காது தன் உழைப்பால் எங்களை வளர்த்தார். இது எங்களுக்கு இருவர்பாலும் மதிப்பும் மரியாதையையும் உணரவைத்தது…
உறவுகளை நட்பைப் பேணிகாக்க சொல்லிக்கொடுத்தது.

எங்கள் அம்மாவின் அறிவுரைப்படி எங்கள் கல்வி, உழைப்பு, அதனுடன் பணிவு போன்றவை எங்கள் வாழ்வின் ஆதாரமானது. அம்மாவின் நிர்வாகம் மிகவும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

அப்பா இல்லாவிட்டாலும் (அப்பா மாதம் ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார்) அவரது வாழ்வியல் எங்களுக்குப் பாடமாக அமைந்தது. மனம் , உணர்வுகள் மயங்கும் போது அறிவு மேலோங்கி நிலையை நேர்செய்யும்.

அறிவு தடுமாறும்போது உணர்வு உண்மையை உணர்த்தி நிலைநிறுத்தும்.

கல்லூரிப் படிப்புக் காலம் வரை மதுரை காந்தி மியூஸித்தில்தான் பெரும்பகுதி இருப்போம். முன்னாள்பிரதமர் நேரு, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர். உசேன், காமராஜர் பக்தவத்சலம் போன்ற தலைவரகள் ஆகியோர்கள் அங்கு வரும்போது நாங்களும் அவர்களுடன் இருப்போம். நல்ல கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் போன்ற இலக்கிய கூட்டங்கள் நடக்கும். ஞாயிறு தோறும் நல்ல படங்கள் காட்டுவார்கள். இப்படி நல்ல விஷயங்களோடு வளர்ந்தோம். அப்பாவுடன் சென்னை வந்தபோது சென்னையில் அப்பா நடத்தும் காந்தியக் கூட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள், போன்றவற்றில் கலந்து கொள்வோம். இதெல்லாம் நாங்களாகத்தான் வருவோம் . என்றைக்கும் எங்களிடம் அப்பா எவற்றையும் திணித்ததில்லை.

மேலும் எங்களுக்கு தத்துவஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியையும் அறிமுகப்படுத்தினார். சென்னையில் டிசம்பர் மாதங்களில் அவரது இடமான வசந்தவிஹாரில் கூட்டம் நடக்கும். அப்பா போகும்போது நாங்கள் உடன் போவோம். புரியறமாதிரி இருக்கும் . ஆனால் கூட்டம் முடிந்து அப்பா மற்றும் அவர் நண்பர்களுடன் திரும்பிவரும்போது அன்றைய பேச்சைப் பற்றிய விவாதம் பிரமாதமாக அமையும். அப்போது எங்களுக்குத் தெளிவாகி விடும்.

என் தந்தையோ அவரது தந்தையோ பணத்தை விட்டு சென்று இருந்தால் பணக்காரர்களாக இருந்து இருப்போம். இந்த விழுமியங்களும் பெருமிதமும் எங்களுக்குக் கிடைத்திருக்காது.

என் தந்தை எங்களைக் கவனிக்காது சமூகத்தைக் கவனித்ததால் நாங்கள் எதையும் இழக்கவில்லை. மாறாக. பல உறவுகளையும் உன்னதங்களையும் பண்பாட்டையும் பணிவுடன் மேன்மையையும் பெற்றோம். அவரது நற்பணிகளால் அவரது ஆசீர்வாதத்தால் நாங்கள், எங்கள் குடும்பம், நல்ல மருமகன்களையும் நல்ல மருமகள்களையும் சிறந்த பேரன் பெயர்த்திகளையும் பெற்றிருக்கிறோம் என்னும் பகிர்தலையன்றி பிறிதில்லை.

அன்பின் விரிவாக்கம்தான் எங்கள் குடும்பம். திருமலை குடும்பம் என்பது காந்தி குடும்பம் ஆகியது. காந்தி கல்வி நிலையத்தில் உள்ளவர்கள் இணைந்து விரிவாக்கினோம். தென்காசியிலிருந்து டி .கே. சி குடும்பத்தார் கி .ரா.வின் குடும்பமும் இணைந்தது. பின் கோவை சிறுவாணி வாசகர் மையம் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் குடும்பம், எழுத்தாளர்நாஞ்சில் நாடன் , ஆலோசகர் சொல்வனம் வ ஶ்ரீநிவாசன் , ராக் அமைப்பாளர் ரவீந்திரன் குடும்பம் , ஆடிட்டர் கிருஷ்ணகுமார் என பல்கிப்பெருகி மிகப்பெரிய குடும்பம் ஆகிவிட்டோம்.

என் தந்தை வாழந்த வாழ்க்கை எங்களுக்கு சாத்தியமாக்கிக்கொடுத்துள்ளது.

வண்ணதாசன், வண்ணநிலவன், சந்தியா நடராஜன் ஆகியோர் தாண்டி ரவி சுப்ரமணியன், சண்முகம் சுப்ரமணியம் என்று தொடங்கி இளைய தலைமுறைகள் வரை ஒரு நட்பு கிடைத்திருக்கிறதே!

வரும் அக்டோபர் 26 அன்று தந்தையின் 100 வது பிறந்தநாள் பூர்த்தியாகிறது். அவரது திருநட்சத்திரம் மகம் 31 ஆம் தேதி வருவதாலும் ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதாலும் அன்று விமரிசையாக அவர் பணிபுரிந்த காந்தி மியூஸியத்தில் நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவை ஆறு காந்தியநிறுவனங்கள்- புது தில்லி நேஷனல் அருங்காட்சியகம், சென்னை காந்தி கல்வி நிலையம், மதுரை தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை தமிழ்நாடு சர்வோதய மண்டல், மதுரை சர்வோதய இலக்கிய பண்ணை, மதுரை காந்திய இலக்கிய சங்கம் ஆகியவை விழா எடுத்து சிறப்பிக்கப் போகின்றன.

இது எங்கள் குடும்பத்தாருக்கு மிகவும் பெருமையும் சந்தோஷமும் ஆகும் .

அப்பா T.D. திருமலை எழுதிய “வினோபா” வாழ்க்கை வரலாற்று நூலும், அம்மா சீதா திருமலை இந்தியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்த காந்தியின் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய “தியாக உள்ளம்” என்னும் நூலும் மீள்பதிப்பபாக விழாவில் வெளியிடுகிறோம்.

மேலும் அப்பாவின் வாழ்க்கை வரலாறை “மனதில் நிறைந்த மாமனிதர்” என்னும் நூலாக எங்களது சகோதரர் தி.விப்ரநாராயணன் எழுதியதும், அப்பாவைக் கதாநாயகனாக வைத்து “வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்று நண்பர் திரு கம்யூட் ராஜ் எழுதிய நாவலையும் முதற்பதிப்பாக விழாவில் வெளியிடுகிறோம். தவிர அப்பா 20 வருடங்கள் நடத்திய இலக்கிய இதழான “உலக இதய ஒலி”யின் முதல் இதழை அனைவருக்கும் அளிக்கிறோம்.

முனைப்பாகப் பல தேசியத்தலைவர்கள்இருப்பினும் என் தந்தை T D திருமலை அவர்களுக்குத்தான் ஒரு நிறுவனம் அமைந்து இன்னமும் சிறப்பாக சென்னையில் காந்தி கல்வி நிலையமாகச் செயல்பட்டு, முனைவர் பிரேமா அண்ணாமலையால் சிறப்பாக இயங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.

அனைவரும் விழாவிற்கு வந்திருந்து ஆசீர்வதிக்குமாறு எங்கள் அனைவரின் சார்பில் கேட்டு கொள்கிறேன்.!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *