தேடப்படாத இலக்கியமாய் இருக்கும் குண்டலகேசியும் வளையாபதியும்!

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

தமிழ் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும்  தமிழ்த்தாயை வாழ்த்திப் பாடிய பின்னர்தான் ஆரம்பிப்பது என்பது வழமையாக இருந்து வருகிறது. தேடப்படாத இலக்கியமாக இருக்கின்ற குண்டலகேசியையும், வளையாபதியையும் பற்றி உங்கள் யாவருக்கும் எடுத்துச் சொல்ல வந்திருக்கும் இவ்வேளையில் – தமிழ் வாழ்த்தினை சொல்லாமல் ஆரம்பித்தால் அது சிறப்பாய இருக்காதல்லவா! ஆதாலால் தமிழ் அன்னைக்கான வாழ்த்தினை வழங்கி தேடப்படாத இலக்கியத்தை தேடலாம் என்று எண்ணுகின்றேன்.

காதொளிரும் குண்டலத்தாள்
கனிமொழியாள் வாழ்க
கைக்கு வளையாபதி கொள்
கன்னிகையாள் வாழ்க
மேதகு மென்மார்பிடைச்
சிந்தாமணியாள் வாழ்க
மின்னுமணி மேகலை சூழ்
மெல்லிடையாள் வாழ்க
சீதமலர்ப் பாதமொலி
சிலம்புடையாள் வாழ்க

வாழ்த்துப் பாடி ஆகிவிட்டது. இனி விஷயத்துக்கு வருவோம்.

காணக்கிடைக்காத காப்பியங்கள் என்று கருதப்படுவனதான் வளையாபதியும் குண்டல கேசியுமாகும். சிலம்பதிகாரத்துக்கோ, மணிமேகலைக்கோ, சீவக சிந்தாமணிக்கோ கொடுக் கப்படுகின்ற முக்கியத்துவங்கள் வளையாபதிக்கோ குண்டலகேசிக்கோ கொடுக்கப்படுவதி ல்லை. இவை இரண்டைப் பற்றியும் யாருமே பெரிதாய் பேசுவதும் இல்லை. ஐம்பெரும் காப்பியங்கள் என்னும் நிலையில் இக்காப்பியங்கள் இரண்டும் காப்பிய வரிசையில் கடை சியாகவே வைக்கப் பட்டிருப்பதையும் கருத்திருத்த வேண்டும்.

சிலம்புக்காவலர், சிலம்புச் செல்வர், என்றுதான் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. மணிமே கலையானது சிலம்போடு இணைக்கப்பட்டு “இரட்டைக் காப்பியங்கள்” என்று வியந்து கூறப்படுவதையும் காண் கின்றோம். இரட்டைக் காப்பியம் என்னும் பெயர் எப்படி வந்தது? யார் இவ்வாறு இணைத்தார்கள் என்பதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது அநபாயச் சோழ மன்னன் மிகவும் விரும்பிப் படித்த காப்பியமாக சீவகசிந்தாமணி இருந்தது என்று அறிய முடிகிறது. சிற்றின்ப ரசம் பொருந்திய சிந்தாமணியினை அரசன் விடாமல் படித்துச் சுவைப்பதை சேக்கிழாரின் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அநபாயனின் போக்கினை மாற்ற வேண்டுமென்று அல்லும் பகலும்  அமைச்சராய் இருந்த சேக்கிழார் எண்னினார். சேக்கிழாரின் எண்ணம் ஈடேறியதால் அநபாயன் மனம் மாறினான் என்றும் – இந்த மடை மாற்றத்துக்கு சேக்கிழாரின் பெரியபுராணம் என்னும் சைவசமயக் காப்பியம் காரணமாய் அமைந்தது என்பதையும் அறிகின்றோம்.

ஆனால் காப்பிய வரிசையில் இடம் பெற்று நிற்கும் வளையாபதிக்கோ, குண்டல கேசி க்கோ இப்படியான ஒரு நிலை வரவில்லை என்பதையும் கருத்திருத்தல்  வேண்டும். என்றாலும் இவற்றை எல்லாம் மீறி இந்த இரண்டு காப்பியங்களும் பேசு பொருளாக இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதே.அந்தக் காப்பியங்களைப் பற்றிப் பேசும் நிலையும் இன்று எனக்கும் வாய்த்திருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதே!

ஆரம்பத்திலே பாடப்பட்ட தமிழ் வாழ்த்தினை எழுதியவருக்கும்-  குண்டலகேசி, வளையாபதி பற்றிய ஒரு ஆதங்கம் இருந்தே இருந்திருக்கிறது. அவரின் மனமிருந்த கருத்தே வாழ்த்தாய் மலர்ந்திருக்கிறது. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்றுபாரதி போற்றுகின்றார். ஆனால் இந்த வாழ்த்துப் பாடியவரோ சற்று வித்தியாசமாய் பார்க்கிறார். தமிழ் அன்னை என்றவுடன் முதலில் தெரிவது அவளின் முகம்தானே! முகத்துக்குப் பின்தான் மற்றைய உறுப்புகள் வந்தமையும். பார்க்கப்டாத முக்கியத்துவம் கொடுக்கப்படாத – குண்டலகேசியை “காதொளிரும் குண்டலத்தாள்” என்று முதலில் காட்டுகிறார். பின்னர் அடுத்த நிலையில் வளையாபதியினை “கைக்குவளையா பதிகொள் “கனிமொழியாள் வாழ்க” என்று காட்டி தனது மனக்கிடக்கையினை வெளிப்படுத்திய பின்புதான் – மென்மார்பிடைச் சிந்தாமணி என்றும், மின்னும் மேகலைசூழ் மெல்லிடை என்றும்  கடைசிசியில்த்தான் “சீதமலிப் பாதமலர் சிலம்புடையாள்” என்று ஐம்பெரும் காப்பிய வரிசையினையே மாற்றிப் பார்க்கும் ஒரு புதுமையை இப்புலவர் செய்திருக்கிறார் என்பதையும் கருத்திருத்தல் அவசியம் என்று எண்ணுகின்றேன். பார்க்கப்படாத தேடப்படாத நிலையில்  குண்டலகேசியும், வளையாபதியும், இருக்கக் கூடாது என்னும் மனக்குறை யினைப் போக்குவதாய் இந்த வாழ்த்து அமைகிறதல்லவா!

கல்லூரிகளில் படிக்கும் காலத்தும், பல்கலைக்கழகங்களில் பயிலும் காலத்தும் – சிலம் பையும்,மணிமேகலையும், சிந்தாமணியையுமே முக்கியத்துவப்படுத்தி கற்பித்தார்கள். ஐம்பெரும் காப்பியம் என்று தமிழ் வகுப்புகளில் பாடம் நடத்தும் வேளையில் மட்டுமே, குண்டலகேசியினதும், வளையாபதியினதும், பெயர் உச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரண்டையும் பற்றிப் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதையும் சுட்டாமல் இருக்கவே  இயலவில்லை. அந்த அளவுக்கு குண்டலகேசியும், வளையாபதியும், பார்க்கப்படாத காப்பியங்களாகவே இருந்திருக்கின்றன. படிக்கின்ற காலத்தில் எனக்குள் ஒரு ஐயம் எழுந்தது. ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இடம்பெறும் வளையாபதியும், குண்டல கேசியும் அனாதை நிலையில் ஏன் பார்க்கப்படுகின்றன என்பதுதான் அது!

எனக்கு ஆசான்களாய் அமைந்த ஒரு பேராசிரியரிடம் இதனைப் பற்றித் துணிந்து கேட்டுவிட்டேன். எனது ஐயத்தைக் கேட்ட பேராசான் சற்று யோசித்து விட்டு “நாங்கள் பாடம் நடத்தாவிட்டால் என்ன? பாடப்பகுதியில் சேர்க்கப்படாவிட்டால்த்தான் என்ன? வளையாபதியும், குண்டலகேசியும் இல்லை என்றுதான் ஆகிவிடுமா? ஐம்பெரும் காப்பி யங்கள் என்னும் வரிசையிலிருந்தும் அகற்றப்பட்டுத்தான் போய்விடுமா? ஒருக்காலும் போகவே மாட்டாது. பொது மக்கள் மத்தியில் அந்த இரண்டுமே மிகவும் சிறப்பாகப் போய்ச்சேர்ந்தே விட்டது. உனக்கு அது தெரியுமா? என்று என்னை நோக்கி ஒரு கேள்விச் சர த்தை எனது ஐயப்பாட்டுக்கு மறுமொழியாக அவர் விடுத்தார்”

“நான் மெளனமாய் இருந்தேன்”. என் ஆசானே பேசத் தொடங்கினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் அவர்கள். அவர் முதலமைச்சர் நிலைக்கு வருவதற்கு முன்பே தேடப்படாத இலக்கியம் என்னும் குண்டலகேசியைத் தேர்ந்தெடுத்து நன்றாக உள்வாங்கியும் விட்டார். குண்டகேசியை யாவரும் அறியச் செய்வதற்கு உகந்த வழி எது என்பதை மனமெண்ணி அவர் தேர்ந்தெடுத்த வழிதான் திரைத்துறையாகும். திரையில் வந்தால் அது எல்லாவிடத்தும் செறிந்தும் பரந்தும் நிறைந்தும் விடு மென்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் குண்டலகேசியைஉள்வாங்கி  “மந்திரிகுமாரி” என்னும் திரைக்காவியத்துக்கு வித்திட்டார். அவரே திரைக்கதை வசனமும் எழுதினார். அவரின் எண்ணத்தில் குண்டலகேசி காவியம் 1950 ஆம் ஆண்டில் மந்திரிகுமாரி என்னும் பெயரில் வெள்ளித்திரையில் வலம் வந்தது என்று என் ஆசான் மூச்சுவிடாமல் சொல்லி நின்றார்”. அந்தப் படத்தைப் பார்த்தால் புரியும் குண்டல கேசியின் கதை என்றார்.

அத்துடன் நிற்காமல் எனது அடுத்த ஐயத்தையும் போக்கினார் ஆசான். வளையாபதியும் தேடாத இலக்கியமாய் இருக்கக் கூடாது என்று எண்ணினார் புரட்சிக்கவி பாரதியின் சீடர் பாரதிதாசன். கலைஞருக்கு மிகவும் பிடித்தமான தமிழ்க் கவிஞன்தான் புதுவைக்கவி பாரதிதாசன். அந்தப் புதுவைப் புயல் பாரதிதாசன் திரைக்கதை வசனம் எழுதி திரையில் வளையாபதியை வெளிபரப் பண்ணினார் . “வளையாபதி என்னும் பெயருடனேயே 1952 ஆம் ஆண்டில் வெள்ளித் திரையில் தேடப்படாத இலக்கியம் வந்தது” என்று எனது மனத்தெழுந்த ஐயங்களெலாம் விளங்கும் வகையில் – விளங்கும் உதாரணத்துடன் ஆசான் அவர்கள் சொன்னதும் – எனக்கு நல்ல திருப்தி கிடைத்தது. பள்ளிக்கூடமும் பல்கலைக் கழகமும் செய்யாததை வெள்ளித்திரை செய்து விட்டதே என்பது பெரும் ஆறுதலாய் எனக்கு இருந்தது.

தேடப்படாத காவியங்கள் வரிசையில் வளையாபதிபோல் இருப்பதுதான் குண்டல கேசியாகும். வளையாபதி ஒன்பதாம் நூற்றைண்டைச் சேர்ந்தது. குண்டலகேசி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அறிஞர்களின் கருத்தாய் இருக்கிறது. வளையாபதியின் ஆசிரியர் இன்னார் என்று அறியா நிலை இருக்கிறது. ஆனால் குண்டலகேசியின் ஆசிரியர் நாதகுத்தனார் என்று காட்டப்படுகிறார். எழுபத்து இரண்டு பாடல்களுடன் வளையாபதி அமைய குண்டலகேசியோ மிகக்குறைந்த அளவில் பத்தொன்பது பாடல்களுடன் இலக்கியமாய் கவனிக்கப்படுகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். வளையாபதி சமணத்தைப் பேச குண்டலகேசியோ பெளத்தத்தைப் பேசுகிறது.

சிலம்பிலும் பெண்தான். மணிமேகலையிலும் பெண்தான். சிந்தாமணியிலும் பெண்ணே. குண்டலகேசிலும் பெண்தான் வந்து முன்னிற்கிறாள். பெண்கள் இல்லை என்றால் காப்பியங்களே இல்லை என்று சொல்லும் வகையில் காப்பியங்களைக் கொண்டு செல்லும் விதத்தில் பெண்களே இருப்பதும் நோக்கத்தக்தேயாகும். அதே வேளை வணிகர் குலம் என்பதும் தொடர் நிலையாக இருப்பதையும் காண்கின்றோம். வளையாபதியில் வருகின்ற கதாநாயகன் வணிகர் குலத்தவன். குண்டலகேசியின் கதாநாயகியும் வணிகர் குலத்தவள்தான். ஆனால் கதையின் போக்கு மட்டும் மாறுபடுகிறது.

வசதிமிக்க வணிக குலத்துப் பிறந்தவள் பத்தா சீதா. இவளின் காதல் பொருந்தாவிடத்தில் சென்று விடுகிறது. அதனால் அவளின் வாழ்வும் வசந்தத்தை இழந்து விடுகிறது. வசதி யான குடும்பத்தைச் சேர்ந்தவள் – கொள்ளை அடிக்கும் ஒருவனை விரும்புகின்றாள். அரசனால் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டவனைக் கண்டதனால் காதல் கொண்டு அவனையே மணந்திட நினைந்து விடுகிறாள். மகளின் ஆசையினை தந்தை நிறை வேற்றும் பொருட்டு – கொலைக்களம் அனுப்பபட்ட கொள்ளைக்காரனைப் பொரு ளைக் கொடுத்து மீட்டு மகளுக்கு மணம் முடித்து வைக்கிறான். கள்வன் காதல் கணவனாய் வந்தமை பத்தாவுக்கு பெரும் ஆனந்தமாய் அமைகிறது.

களவிலே ஊறிப்போனவனுக்கு களவினை மறந்து வாழ்வது என்பது சற்றுக் கடினந்தான். வீட்டிலேயே கைவரிசையினைக் காட்டிட முனைகிறான். இதனால் மனஸ்தாபம் உருவாகிறது. முடிவில் மனைவியையே கொன்றுவிடத் திட்டமும் இடுகிறான். அவளைக் காதல் மொழிகள் கூறி மலை உச்சிக்கே அழைத்துச் சென்று கொன்றுவிடத் திட்டமிட்டு அவளை மலை உச்சிக்குக் கூட்டிச் செல்கிறான். தன்னைக் கொல்லப் போகிறான் என்பதை அறிந்து கொண்ட பத்தா – தந்திரமாக அவனை மூன்றுமுறை வலம் வருபோல செய்து முடிவில் தன்னைக் கொல்ல வந்த தனது காதல் கணவனையே மலை உச்சியில் இருந்து தள்ளிக் கொன்று விடுகிறாள் என்று கதை அமைகிறது.

வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை
நீவாராய்

ஆகா மாரிதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே

இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
கலந்துயிர் விண்ணினைக் காண்பாய்
அமைதி நிலவுதே
சாந்தம் தவழுதே

முடிவிலா மோன நிலையை நீ
மலை முடிவில் காணுவாய்
ஈடிலா அழகு சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்

இன்பம் அடைந்தே இகமறந்தே
வேறு உலகம் காணுவாய் அங்கே

புலியினைத் தொடர்ந்தே
புதுமான் நீயே

இந்தப் பாடல் வந்து எழுபத்து ஒரு ஆண்டாகிறது. ஏழாம் நூற்றாண்டில் வந்த குண்டலகேசிக் கதைக்கு ஏற்ற பாடலைக் கேட்கின்ற வேளை கதையின் காட்சி கண்முன்னேயே வந்து நிற்கிறதல்லவா? காவியக்காட்சி வெள்ளித் திரையில் மந்திரிகுமாரியாய் மலர்ந்தது என்பதை நினைத்துப் பார்ப்போம்.

சமணமும், பெளத்தமும் வாழ்க்கை நிலையாமையினை வலியுறுத்தும் பாங்கிலேதான் கருத்துக்களைக் கொட்டியபடியே இருக்கும். அந்த வகையில் காதலித்தவன் வஞ்சகம் செய்தபடியால் குண்டலகேசியின் அப்போதைய மன நிலைக்குச் சமணந்தான் மருந்தாய் அமைந்தது எனலாம். சமணப்பள்ளியை அடைந்தாள். சமண சம்பிரதாயப்படி அவளின் கூந்தல்கள் களையப்பட்டன. மழித்த தலையுடன் சமணப்பள்ளியில் இருந்தாள். சமணத்தில் ஊறிய அவள் சமணத்தை எதிர்ப்போரை யெல்லாம் வாதித்திட்டு நிற்கும் நிலைக்கு வந்து நின்றாள். ஆனால் பெளத்தத்திடம் அவள் வாதம் எடுபடா நிலையில் முடிவில் அவள் பெளத்தத்துக்கே மாறிவிடாள். மழிக்கப்பட்ட அவளின் கூந்தல் சுருண்டு வளர்ந்தது.வளைந்து குண்டலம் போல் அவளின் கூந்தல் காணப்பட்டதால் குண்டலகேசி என்றே அழைக்கப்ட்டாள். அந்தப் பெயரே இக்காப்பியத்துக்கும் பொருத்தமாய் அமைந்து விட்டது.

யாக்ககை நிலையாமை, கூற்றுவனின் கொடுமை,வாழ்க்கையின் நிலையாமை, உடம்பின் இழிவு, என்பன பற்றியெல்லாம் குண்டலகேசி தன் கருத்துக்களைப் புகன்று நிற்கிறது,

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

நிலையாமையினை விளக்குதற்கு குண்டலகேசி ஆசிரியர் தருகின்ற ஒவ்வொரு படிமுறையும் அவரின் பேராளுமையினையே காட்டி நிற்கிறது எனலாம். இதைவிட இலகுவாய் நிலையாமையினை விளக்கிடல் முடியுமா என்றுதான் எண்ணிப் பாருங்களேன்! செத்துப்பிழைத்துக் கொண்டே ஒவ்வொரு நாளுமே இருக்கின்றோம். ஆனால் அதற்காக யாருமே அழுவதே இல்லை. இந்த உடலைவிட்டு உயிர்பிரிந்த போது மட்டும் ஏன்தான் அழுகிறார்களோ தெரியவில்லை என்று – யாவரும் விழித்திட வேண்டும் என்று நிலை யாமையினை எப்படி நாசுக்காய் காட்டுகிறார் குண்டலகேசி ஆசிரியர்.

மறிய மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்
அறிவது அறிவர் அழுங்கார் உவவார்
உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று

நயமும், நலமும், பொதிந்த பாடல். பாடலின் அமைப்பே அருமையோ அருமை! சொல்லும் பாங்கும், சொல்ல தேர்ந்தெடுத்த சொற்களின் பாங்கும், அந்தச் சொற்களைப் பாடலாய்க் கோர்த்த பாங்கும் வியக்காமல் இருந்திடவே முடியாது. அழுதாலும் பயனில்லை. ஆனந்தப் படுவதாலும் பயனில்லை. வருவதும் வரும். வந்தது வந்ததுபோல் போயும் விடும். போய்விடும் பொழுது புலம்புவதால் ஆவது எதுவுமே இல்லை. என்ன அருமையான வாழ்க்கைத் தத்துவம். தேடப்படாத குண்டலகேசியா இப்படிச் சொல்கிறது என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா!

மண்ணுளார் தம்மைப் போல்வர் மாட்டதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையை யார் கறையன்று என்பார்

கறை என்பது மனிதராயினும், தேவராயினும் ஏன் கண்ணுதற் கடவுளாகிய சிவனே ஆயினும் கறை என்பது கறைதான். தவறு என்றால் அங்கு எந்தவிதப் பாகுபாட்டுக்கும் இடமே இல்லை. என்று பார்க்கும் குண்டலகேசியின் பார்வை சுட்டெரிக்கும் தூய்மையான பார்வையாய் தெரிகிறதல்லவா!

உவமைநயம் மிக்க நல்லதொரு பாடலையும் குண்டலகேசியில் பார்க்கிறோம். உவமையினைக் காட்டிட அமைந்தாலும் அங்கும் தத்துவமே முன்னிற்கிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கியுள வாழ்க்கை யதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்ல்லாத்
தூயவனை நோக்கியுள துப்பரவும் எல்லாம்.

காற்றை நம்பியே ஓடம் செல்லுகிறது. ஊழ்வினையின் வழியேதான்  வாழ்க்கை அமைகிறது. மனத்தில் தூய்மை வருவதற்கு உகந்தவழி எது தெரியுமா? தூய மனத்தினை உடைய அந்த புத்தபிரானை நினைப்பதேயாகும், இங்கு ஒவ்வொன்றுக்குமே காட்டப்படும் உவமையினை எண்ணிப்பார்த்தால் குண்டலகேசியும் நல்லதொரு இலக்கியமே என்பது புலனாகும்.

ஐம்பெரும் காப்பிய வரிசையில் இடம் பெறும் வளையாபதி ஒன்பதாம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்னும் கருத்து இலக்கிய அறிஞரிடையே காணப்படுகிறது. அதேவேளை இதனை வள்ளுவத்தின் பின் வந்ததென்றும்  அறிஞர்கள் சிலர் சொல்லு கிறார்கள். வள்ளுவத்தின் சில பாடல்களை எடுத்தாளும் தன்மையினை வளையாபதி கொண்டு இருப்பதால் இப்படிக் கூறும் நிலையும் வந்திருக்கலாமோ என்றுகூடக் கருதிட முடிகிறதல்லவா? இது சமணம் சார்ந்தது என்னும் கருத்து இருக்கிறது. அதேவேளை இதில்வரும் நாயகன் சைவமதத்தவனாய் இருப்பதால் – சமணம்  சார்ந்தது என்று எடுப்பது பொருந்துமா என்னும் நிலையும் அறிஞரிடையே காணப்படுகிறது. ஆனால் வளையாபதியின் பாடல்களில் காணப்படும் கருத்துக்களை நோக்கும் பொழுது சமணச் சார்ப்பான தன்மையே பெரிதும் இருப்பதும் தெரிய வருகிறது.

வளையாபதிக் காவியத்தின் ஆசிரியர் யார் என்பதும் அறியமுடியவில்லை. எழுபத்து இரண்டு பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஆனாலும் இப்பாடல்களை மையப்படுத்தி ஒரு கதையும் அமைந்தே இருக்கிறது. அந்தக் கதையும் ஊகமாய்த்தான் இருக்கும் என்னும் ஒரு நோக்கும் அறிஞர்களிடையே  இருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

எழுபத்து இராண்டு பாடல்களுமே ஒரே இடத்தில் கிடைக்க வில்லை. புறத்திரட்டு என்னும் நூல் பதினான்காம் நூற்றாண்டில் வந்தமைகிறது. அந்த நூலில் இருந்து அறுபத்து இரண்டு பாடல்களை வளையாபதியின் பாடல்கள் என்று அறிஞர்கள் கண்டறிந் திருக்கிறார்கள். அடியார்க்கு நல்லார் என்பார் சிலப்ப திகாரத்துக்கு உரை எழுதி இருக் கிறார். அவர் உரை எழுதும் பொழுது மூன்று பாடல்களை எடுத்துக்காட்டாய் கையா ண்டிருக்கின்றார். அந்த மூன்று பாட்டும் வளையாபதியின் பாட்டென்று தீர்மானித் திருக் கிறார்கள். அத்துடன் மேலும் இரண்டு பாடல்களும் கிடைத்திருக்கின்றன. இலக்கணத்துக் கென்று பல நூல்கள் தமிழில் இருக்கின்றன அவற்றில் யாப்பருங்கலக்காரிகை என்பதும் முக்கிய இலக்கண நூலாகும்.

இந்த நூலுக்கு ஒரு தமிழறிஞரால் எழுதப்பட்ட விருத்தி உரையில் இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாய் கையாளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கையாளப்பட்ட இந்த இரண்டு பாடல்களும் வளையாபதிக்கே உரியதாகும் என்று தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டி இருக் கிறார்கள். வளையாபதிக்கான பாடல்கள் இப்படித்தான் சேர்க்கப்பட்டன என்பதை வளை யாபதி பற்றி நோக்கும் பொழுது அறியக்கூடியதாக இருக்கிறது.

நிறைவான நிலையில் வளையாபதி காப்பியம் கிடைக்கா விட்டாலும் – கிடைத்த பாடல் களைக் கருத்திருத்தில் இருத்தி அதனையும் காவிய வரிசையில் வைத்தமை யினைப் பாராட்டியே ஆகவேண்டும்.குறைவான பாடல்கள் கிடைத்த நிலையிலும் அதனூடாக ஒரு கதையினையும் இணைத்த பாங்கையும் பாராட்டவே வேண்டும்.

சிலம்பில் புகார் வந்தது போல் வளையாபதியிலும் புகார்வருகிறது. இங்கு தான் – கதையின் நாயகனான நவகோடி நாராயணன் வருகிறான். சிலம்பின் நாயகனான கோவலன் கண்ணகியை மணம் முடிக்கிறான். பின்னர் மாதவியையும் மணக்கிறான். கோவலனும் கண்ணகியும் வணிகர் குலத்தவர். மாதவி அக்குலத்தவள் அல்ல. வளை யாபதி நாயகன் நவகோடி நாராயணனும் வணிகர் குலத்தவன். வணிகர்  குலத் துப் பெண்ணை இவனும் முதலில் மணக்கிறான். பின்னர் வணிகர் குலம் அல்லாத இடத்தில் இருக்கும் ஒரு பெண்ணையும் இரண்டாந்தாரமாய்  மணக்கிறான். கிட்டத்தட்ட கோவலனின் சகோதரன் போல வளையாபதி நாயகன் நவகோடி நாராயணனும் அமைகிறான் அல்லவா!

சிலம்பின் நோக்கம் வேறு. அதனால் அங்கு கதையின் திருப்பம் வேறு விதமாய் மாறுகிறது. வளையாபதியை எழுதிய ஆசிரியர் கதையினை வேறு நிலையில் காட்டிட முன் வருகிறார். தன் குலத்தை விட்டு வேறு குலத்தில் இரண்டாந்தாரமாய் நவகோடி நாராயணன் திருமணம் செய்ததை அவனுடைய வணிக குலத்தார் எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பார் – அவனையே வணிகர் குலத்தை விட்டு ஒதுக்கி விடுவோம் என்று எச்சரிக்கையும் செய்கிறார்கள். குலத்தாரின் எதிர்ப்புக்கு அஞ்சிய நிலையில் நவகோடி நாராயணன் தன்னுடைய இரண்டாவது மனைவியை விட்டு விட்டு தனது வணிகத்தைக் கவனிக்கக் கடற்பயணத்தை மேற்கொள்ளுகின்றான். அவனால் கைவிடப்பட்ட அவனின் இரண்டாவது மனைவி அப்பொழுது வயிற்றில் கருவினைச் சுமந்தபடி இருந்தாள் என்பது முக்கியமாகும்.

கடல் பயணத்தால் ஈட்டிய பெருஞ் செல்வத்துடன் முதல் மனைவியோடு நவகோடி நாராயணன் ஆனந்தமாய் வாழ்கிறான். அபலையான அவன் இரண்டாம் மனைவி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கிறாள். அந்தப் பிள்ளை வளர்ந்து வரும் வேளை – அவனது நண்பர்கள்  “தகப்பன் பெயரே தெரியாதவன்” என்று கேலியும் கிண்டலுமாகப் பேசி அவனை மனம் நோகும்படி செய்து விடுகிறார்கள். மனம் நொந்த பிள்ளை தாயிடம் வேதனையைக் கொட்டித் தீர்க்கின்றான். பிள்ளையின் கவலை தாயையும் வாட்டியதால் இதுவரை மூடி வைத்திருந்த விஷயத்தை சொல்லி விடுகிறாள்.

தனக்குத் தந்தை இருக்கிறார் என்று கேட்டதும் கவலைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு துள்ளலுடனும், உற்சாகத்துடனும், ஆனந்தந்துடனும் தந்தையை நாடிச் செல்லுகின்றான். தந்தையைக் காணுகிறான். ஆனால் தந்தையோ தன்னுடைய வணைகர் குலத்துக் கட்டுப்பாட்டுக்குப் பயந்து அவனை மகனாக ஏற்றிட மறுத்துவிடுகிறான். ஏற்க மறுத்த விஷயத்தை அறிந்த தாயானாவள் சக்தியாய் விளங்கும் காளியை வேண்டுகிறாள். வணிகர் குலத்துப் பெண்கள் மத்தியில் காளியின் அனுக்கிரகத்தால் அவள் புனிதமானவள் என்னும் நிலை வெளிச்சமாகிறது. நிறைவில் நவகோடி நாராயணன் கைவிட்ட மனைவியையும், மகனையும் இணைத்துக் கொள்ளுகின்றான். அந்தப் பிள்ளைக்கு வீரபாணிபன் என்று பெயரையும் சூட்டி எல்லோரும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள் என்று வளையாபதி கதை நல்லதாய் நிறைவுறுகிறது.

நல்லதொரு சுபமான திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது அல்லவா? இப்படியான ஒரு கதை இதற்குள் புதைதிருந்த காரணத் தால்த்தான் – பாரதி தாசன் இதனைத் திரைக்காவியம் ஆக்கினாரோ என்றும் நினைத்திட வைக்கிறதல்லவா!

வளையாபதி இவ்வளவுதானா? இதனைப் படிப்பதால் என்னதான் வரப் போகிறது? வளையாபதி ஏதாவது கருத்துக்களைப் பகர்ந்திருக்கிறதா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது அல்லவா! கருத்துக்கள் இல்லா விட்டால் அங்கு காவியமும் இல்லை. இலக்கியமும் இல்லை என்றாகிவிடும் அல்லவா! சமணக் காவியமா, சைவக் காவியமா என்றெல்லாம் விவாதிப்பதை விட்டு விட்டு – இக்காவியம் எதனைக் கூறுகிறது என்று பார்த்தால் – கல்லாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை இவைதான் இக்காவியத்தின் கருப்பொருள்களாகும்.  அதேவேளை வாழ்வியலுக்கு ஏற்ற கருத்துக்கதுக்களையும் காட்டாமலும் வளையாபதி இருக்கவில்லை என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். இங்கே காட்டப்பட்ட கருக்கள், சைவத்திலும் போற்றப்படு கின்றன. அதே வேளை சமணனந்தான் இக்கருக்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக் கிறது என்பது பொதுவான நிலை எனலாம். ஆதலால் வளையாபதியினைச் சமணக் காப்பியம் என்றே எடுக்கும் நிலை வந்துவிட்டது.

பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்
துறையிலா வசன வாவி துகில் இலாக் கோலத் தூய்மை
நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே

என்னதான் இருந்தாலும் பிள்ளைச் செல்வம் இல்லாவிட்டால் எல்லாமே வீண்தான் என்று காட்டும் இந்தக் கருவானது வாழ்வியலைக் குறிப்பதாய் இருக்கிறது அல்லவா? வளையாபதியின் பார்வை இப்படியும் இருக்கிறது.

உயர்குடி நனியுட் டோன்றலூனமில் யாகையாதன்
மயிர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல்
பெரிதுண ரறிவே யாதல் பேரறங் கோட லென்றாங்
கரிதிவை பெறுதலேடா பெற்றவர் மக்க ளென்பார்

என்னென்ன நல்ல பண்புகள் இருக்க வேண்டுமோ அத்தனையும் அமையப் பெறுதல் வேண்டும். அவ்வாறு அமையப் பெறுபவர்களே பிறவியின் பயனை அடைந்து நல்ல பிறப்புடையாராய் மதிக்கப்படுவர் என்பதும் வளையாபதியின் பெருநிலை எனலாம். செப்பம் வேண்டும், நாண் வேண்டும். ஒழுக்கமும், வாய்மையும்  அமைய வேண்டும். ஈகையும் கூடவே இன்சொல்லும் இருக்க வேண்டும்.அதுமட்டுமன்றி இகழாமையும் கொள்ள வேண்டும்.ஒழுக்கத்தைப் பேணவேண்டும், பணிவுடமையினைப் பக்குவமாக்க வேண்டும்.என்னும் வாழ்வியல் தத்துவங்கள் இப்பாடலினால் காட்டப்படுவது கருத்திருத்த வேண்டியதே.

அடக்கமுடமை, அறமனை காத்தல், பிறன்மனை நாடாமை, உண்டி கொடுத்தலின் உயர்வு, அருளின் பெருமை, புலால் மறுப்பதன் உன்னதம், தவத்தின் மாண்பு, காமத்தின் இழிவு, கள்ளாமை விளக்கம், செல்வத்தின் நிலையாமை, இளமை நிலையாமை என்று பல அறக்கருத்துக்களை வழங்கும் பாங்கில் – கிடைத்திருக்கும் வளையாபதிப் பாடல்கள் தந்து நிற்கின்றன.

வல்கண் மடவார் விழைவுஒழிய யாம்விழையக்
கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம்
நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்தது இனி
நீத்தல் துணிவாம் நிலையாது இளைமையே

என்னும் பாடலை மனமிருத்தினால் ஆடாத ஆட்டமும் பாடாத பாட்டுகளுமாய் திரியவே மாட்டோம்.இருக்கும் வாழ்வினைச் சீராக வாழ்வதற்கே முயலுவோம்.

வளையாபதியின் கிடைத்த பாடல்களே இவ்வளவு அரிய கருத்துக்களை வழங்கி இருக்கிறது என்றால் – முழுமையாய் வளையாபதி கிடைத்திருக்கு மானால் – எத்தனையோ பொக்கிஷமான கருத்துக்களை அனைவருமே பெற்றுப் பயன் அடைந்திருப்போம். நல்ல கற்பனை வளமான பாடல்களையும் வளையாபதி கொண்டி ருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

காப்பு + இயம் என்பதே காப்பியம் ஆகிறது. மக்களின் வாழ்வியல் சிந்தனை, சமய நம்பிக்கைகள், அரசியல் நிலை, இவற்றை உள்ளடக்கியதாய் அதனூடாக பயணிக்கும் வகையில் கதைமாந்தரைக் கொண்டு கதையை  நடத்தி – அக்கதை மாந்தரின் வாயிலாகப் பலகருத்துக்களை வெளியிடும் பாங்கில் – படைத்த புலவனின் ஆளுமையினை வெளிப்படுத்தும் பாங்கில் முகிழ்த்து வந்து நிற்பதுதான் காவியம் ஆகிறது. காவியம் என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் இருக்கின்றன. எல்லாக் காவியங்களிலும் இந்த வரை விலக்கணங்கள் முழுமை பெற்றிருக்கின்றனவா என்பதும் ஆராய்வுக்கு உரியதேயாகும்.

காவியங்களில் தலைவன் தலைவி நிச்சயம் இடம் பெறுவார்கள். சில வேளை தலைவனை விட தலைவியே அக்காவியத்தில் முதன்மையாய் இருப்பதையும் காணமுடிகிறது. காவியத்தைப் படைப்பவரின் எண்ணமே இவற்றை வடிவமைக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. கதைகளினூடாக பல்வகையான அறங்களை வெளிப்படுத்திக் காட்டும் பாங்கினையே காவியங்களில் காண்கிறோம்.

அந்தவகையில் ஐம்பெரும் காவியங்களும் இணைந்தே இருக்கின்றன என்றுதான் எடுக்க முடிகிறது. குண்டலகேசியையும் வளையாபதியையும் படிப்பதால் என்னவந்து விடப் போகிறது என்னும் எண்ணமும் நிச்சயம் ஏற்பட்டே ஆகும்.தேடப்படாத இலக்கியங்களான இவை  – பல கருத்துக்களைச் செப்பி நிற்பதற்காகவேனும் படிக்க வேண்டும். இந்தக் காவியங்கள் காலத்தும் திருமணம் என்பதில் சாதிக்கட்டுப்பாடு மிகவும் இறுக்கமாய் இருந்திருக்கிறது என்பதும் அறிந்திட முடியும். தாக்கத்துக்கு உள்ளானவர்கள் பெண்களாகவே கானப்படுகிறார்கள் என்பதையும் அறிந்திடுகிறோம் பெண்களையே – அக்காலம் தொடக்கம் இக்காலம் வரையில் துன்பத்துள் ஆழ்த்துவது என்பது சமூகத்தின் மாற்ற முடியா நிலை என்பதும் மனத்தில் பதிகிறது. எதிர்த்த பெண்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களின் வாழ்வு வசந்தம் இல்லாது வரண்டே போனது என்பதும் மனத்தில் பதிகிறது. முடிவில் உலக வாழ்வினையே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கே பெண்கள் வந்தும் விடுகிறார்கள் என்பதையே குண்டலகேசியும் , வளையாபதியும் எமக்கெல்லாம் காட்டி நிற்கிறது எனலாம்.

காலத்தின் கருத்துக்களே இலக்கியமாய் எழுகின்றன. இலக்கிய வரலாற்று அறிஞரின் நோக்கும் இதுவாகத்தான் இருக்கிறது. ஐம்பெரும் காப்பியங்கள் எழுந்த காலத்துச் சமய நிலையும், சமூக நிலையும், அரசியல் நிலையும், அந்தக் காப்பியங்களிலும் புகுந்துவிடாமல் இருக்கவே இல்லை என்பதும் நோக்கத்தக்கதே. ஐம்பெரும் காப்பியங்களிலும் சமயக்கருத்துகள் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்க முடியாத் ஒன்றாகவே காணப்படுகிறது. சிலம்பினைச் சமணம் சார்ந்தது என்று சொன்னாலும் கூட – அது சமய நல்லிணக்க்த்தைப் பேணுவதாய் அமைகிறது என்று அறிஞர் சுட்டிக் காட்டுவார்கள். அதே வேளை தேடப்படாத இலக்கியம் என்று நான் குறிப்பிடும் குண்டல்கேசியும், வளையாபதியும், சமய சமரசத்துக்கு அப்பால் சென்று – சமணம் என்னும் மதம்சார்ந்த உறுதியான கருத்துக்களைக் காட்டும் பாங்கிலேயான் அமைந்திருக்கின்றன என்பதும் மனங்கொள்ளத் தக்கதேயாகும். அதேவளை   வாழ்வியலிலும்  அறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாய், நிலையாமையினை மேலோங்கிக் காட்டும் பாங்கினையே – தேடப்படாத இலக்கியங்கள் செப்பி நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதேயாகும். கதைக்குக் கதையாயும், கருத்துக்களுக்குக் கருத்தாயும் – காட்டி நிற்கும் குண்டலகேசியையும், வளையாபதியையும் “தேடப்படாத இலக்கியம்” என்று எண்ணுவதையோ அல்லது சொல்லுவதையோ மறந்துவிடுவோம். அவையும் நாடப்படும் இலக்கியமே என்பதையும் கருத்திருத்துவோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.