Blog

  • பழகத் தெரிய வேணும் – 80

    பழகத் தெரிய வேணும் – 80

    நிர்மலா ராகவன்

    மகிழ்ச்சியுடன் வளரவிடுங்கள்!

    அநேகமாக எல்லாருமே ஏதாவதொரு சமயம் குழந்தைகளை வளர்க்கிறோம். பெற்றோராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அவர்களுடைய சகோதர சகோதரிகளுக்கோ, மூத்த குழந்தைகளுக்கோகூட இப்பொறுப்பு ஏற்படக்கூடும்.

    `இப்படித்தான் இருக்கவேண்டும்!’ என்ற பொதுவான நியதியோ, பாடமோ இதற்குக் கிடையாது. ஏனெனில், குழந்தைக்குக் குழந்தை வளர்ப்புமுறை மாறுபடும்.

    கதை

    ஒரே வயது நிரம்பிய என் முதல் குழந்தையை பணிப்பெண்ணிடம் விட்டுவிட்டு வேலைக்குப் போவது என் வழக்கம்.

    ஒரு நாள், பக்கத்து வீட்டிலிருந்த இளம்பெண், “உங்களிடம் ஒன்று சொல்லவேண்டுமே!” என்ற பீடிகையுடன், “நீங்கள் இல்லாதபோது, குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது,” என்று தெரிவித்தாள்.

    `இன்னொருவர் குடும்ப நிர்வாகத்தில் தலையிடலாமா?’ என்று தயங்கியிருப்பாள்.

    நான் அவளுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

    எனக்கு ஒரே அதிர்ச்சி. எனக்குக் குழந்தைகளை வளர்த்த பழக்கம் கிடையாது. ஆனால், ஒரு குழந்தை சிரித்தபடி, மகிழ்ச்சியுடன் இருந்தால், வளர்ப்புமுறை சரியெனக் கொள்ளலாம் என்றவரை தெரியும்.

    “வீட்டு வேலை முன்னேபின்னே இருக்கலாம். ஆனால், குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தியவுடன், என் எதிர்பார்ப்பைக் கூறுவேன்.

    யாருக்குமே அது புரிந்ததாகத் தெரியவில்லை.

    “நீங்க புத்தகத்திலே போட்டிருக்கிறமாதிரி வளர்க்கணும்னு சொல்றீங்க. அது எப்படி முடியும்? நல்லா அடிச்சு வளர்க்கணும்,” என்று என்னிடம் தப்பு கண்டுபிடித்தாள் ஒருத்தி!

    அவள் வளர்ந்த சூழ்நிலையில், விவரம் தெரியாத பெற்றோர் அப்படிச் செய்ததை, `நாங்க எல்லாம் வளர்ந்து ஆளாகலியா?’ என்று நியாயப்படுத்தலாம். ஆனால், என்னால் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    “நாங்க அடிக்கறதில்லே. நீயும் சும்மாச் சும்மா திட்டக்கூடாது,” என்றேன்.

    என்னுடைய இந்த கண்டிப்பால், பணிப்பெண்களை அடிக்கடி மாற்றும்படி நேர்ந்தது. அதனால் எனக்கும் கெட்ட பெயர்!

    பெண்களின் பொறுப்பா?

    பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்குப் பொறுமை சற்று அதிகம். அதனால், குழந்தை வளர்ப்பு அவர்களுடைய வேலை என்றாகிவிட்டது.

    வெளிவேலைக்குப் போகாத நாட்களில், அவர்கள்தாம் அதிக நேரத்தைக் குழந்தைகளுடன் செலவிட வேண்டியிருந்தது மற்றொரு காரணம்.

    பொறுப்பிலிருந்து தப்பிக்கவோ, மனைவிக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்துக்கொண்டோ, இன்றும் பல ஆண்கள் இந்தக் கடமையை அவளிடம் விட்டுவிடுகிறார்கள்.

    தந்தை அதிகம் படித்தவராகவும், தாய் படிக்காதவளாக, காலத்துடன் ஒன்றிப்போகத் தெரியாதவளாகவும் இருந்தால்?

    கதை

    அரசாங்கத்தில் உயர்தர உத்தியோகத்திலிருந்தார் ரம்லான்.

    அவர் மணக்கச் சரியானவள் என்று அவருடைய தாய் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.

    அவருக்கென்று எந்த விருப்பு வெறுப்பும் இருக்கவில்லை.

    நான்கு குழந்தைகளுக்குப் பின்னர், “என் குழந்தைகள் ரொம்ப வீக்!” என்று அங்கலாய்ப்பார், என்னிடம்.

    ரம்லான் செய்த தவறு, குழந்தைகளை வளர்ப்பதை முழுமையாக மனைவி அயினியிடம் ஒப்படைத்ததுதான்.

    குழந்தைகள் விஷயத்தில் அவள் என்ன செய்தாலும், அதில் தான் தலையிட்டால், அவளை அவமரியாதையாக நடத்துவதுபோல் ஆகிவிடும் என்றெண்ணி நடந்திருக்கிறார்.

    அவளோ, அதிகம் படிக்காத பட்டிக்காட்டுப் பெண். அன்புக்குப் பதில் அதிகாரம் செலுத்துவாள்.

    “பண்டிகைக்கு என் மகளுக்கு பத்து உடைகள் தைத்தேன்!” என்று அயினி அலுத்துக்கொண்டபோது பிரமித்தேன்.

    ஒன்றோ, இரண்டோதான் வாங்குவார்கள். எதற்காக அத்தனை?

    “என் மகள், `ஒனக்கு நான் ஒரே பொண்ணுதானேம்மா? இவ்வளவு கருமியா இருக்கியே!’ என்று சொல்லிச் சொல்லி வாங்கவைத்தாள்!”

    பதினைந்து வயது மகள் தாயை மரியாதை இல்லாது பேசியபோது அவளைக் கண்டிக்கத் தெரியவில்லை தாய்க்கு.

    ஒரு முறை, அயினி சில நாட்கள் வெளியூருக்குச் செல்ல நேரிட்டது.

    மூத்த மகனிடம், “தங்கை, தம்பிகள் வீட்டுப்பாடம் ஒழுங்காகச் செய்கிறார்களா என்று பார்த்துக்கொள். தெரியாவிட்டால், சொல்லிக்கொடு,” என்று சொல்லிவிட்டுப் போனாளாம்.

    திரும்பி வந்தபோது, அவள் கூறியது எதையுமே செய்திருக்கவில்லை அவன்.

    “எல்லாரும் கூட்டு சேர்ந்துகொண்டு, எனக்கு எதிராக வேலை செய்கிறார்கள்!” என்று என்னிடம் பிரலாபித்துவிட்டு, அழ ஆரம்பித்தாள் அயினி.

    சிறிது காலமாவது, அம்மாவின் கண்டிப்பும் அதிகாரமும் இல்லாமல் இருக்கலாமே என்று குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டிருக்கிறான் அண்ணன்.

    நான் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “விடு! எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான்!” என்று சொல்லிவைத்தேன்.

    ஒத்த மனம்

    தாய், தந்தை இருவரும் வளர்ப்புமுறை இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் ஒரே கருத்து கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

    மகிழ்ச்சியான குடும்பத்திலிருந்து வந்தவரின் வழிகாட்டலைப் பின்பற்றுவது புத்திசாலித்தனம்.

    எந்தக் குழந்தை புத்திசாலி?

    இப்போதெல்லாம், சினிமாத்தனமாக, வயதுக்குமீறி பேசும் குழந்தைகளை `smart” என்று கொண்டாடுகிறார்கள்.

    அவர்கள் வளர்ந்தபின், `மரியாதை இல்லாமல் நடக்கிறாள்!’ என்று பிறர் பழிக்கும்போது, வருந்துவது என்னவோ பெற்றோர்தாம்.

    ஏன் மரியாதை இல்லை?

    கதை

    சாதாரணமாக, நல்ல குடும்பத்திலிருந்து வந்த மலாய் மாணவிகள் மிகவும் பணிவாக இருப்பார்கள். ஆசிரியை திட்டினால், அழுகை வரும் — அவ்வளவு மென்மையானவர்கள்.

    ஆனால், கமாரியா எப்போதுமே என்னிடம் மரியாதையின்றி பேசுவாள்.

    எங்கள் பள்ளியிலேயே ஆசிரியையாகப் பணிபுரிபவள்தான் அவளுடைய தாய் என்று அறிந்தபோது, ஆச்சரியமாக இருந்தது.

    “உன் மகள் ஏன் இப்படி இருக்கிறாள்?” என்று எங்களில் பலரும் அவளைச் சாட, “என் காலத்தில் மிக அடக்கி வளர்க்கப்பட்டோம். மூத்தவர்களுடன் பேசவே பயமாக இருக்கும். மகளும் அப்படி பயந்து வளரக்கூடாது என்று அவள் போக்கில் விட்டேன்,” என்றாள், வருத்தத்துடன்.

    பதினைந்து வயதில் எந்தப் பெண்ணும் சற்றுத் திமிறுவாள். இப்படிப்பட்ட மகளை இனி எப்படி அடக்குவது!

    ஓயாது சண்டைபோடும் பெற்றோர்

    கதை

    தாய் தந்தையருக்குள் எப்போதுமே வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், மெல்வின் தனித்து உணர்ந்தான். புத்தகங்களில் ஆழ்ந்து, நிகழ்காலத்தை மறக்க எண்ணினான். ஆனாலும், அவனுடைய உடல்நிலை கெட்டது. படிப்பிலும் சோடை.

    “உங்களால்தான் அவனைத் திருத்தமுடியும்!” என்று, என்னிடம் படிக்க அனுப்பினார்கள்.

    நான் எவ்வளவோ முனைந்தும், மெல்வின் படிப்பில் முன்னேறவில்லை. அவன் வந்துவிட்டுப் போகும்போதெல்லாம் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பேன்.

    “குழந்தைக்கு உங்களிடம் வருவதற்கு மிக்க மகிழ்ச்சி. துள்ளிக்கொண்டு வருகிறான்!” என்று தந்தை தெரிவித்தபோது, வியப்பாகத்தான் இருந்தது.

    அவன் நல்லபடியாகத் தேறியது எனக்கே ஆச்சரியம் அளித்தது.

    அவனுடைய தங்கையோ, மரியாதையில்லாமல், ஆசிரியைகளையும் எதிர்த்துப் பேசுவாள்.

    இன்னொருவருடன் ஒத்து வாழமுடியாது, திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து வாங்கினர்.

    பெற்றோருக்குக் காலம் கடந்தபின்தான் புரிந்தது தாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்று. (நான் குழந்தை வளர்ப்பைப்பற்றித் தொடராக எழுதியதைப் படித்துவிட்டு, அவர்கள் கூறியது).

    கொடுமை செய்யும் பெற்றோரை உடைய குடும்பங்களிலோ, மகள் தந்தையைப் போன்றவனைக் கணவனாகத் தேர்ந்தெடுப்பாள்

    மகன் தந்தையை முன்னுதாரணமாக நினைத்து நடப்பான்.

    பணிப்பெண்களால் வளர்க்கப்படும் குழந்தைகள்

    கதை

    சாயங்கால வேளைகளில், பெற்றோர், பாட்டிகள் சகிதம் குழந்தைகள் எங்கள் வீட்டருகே இருந்த மைதானத்தில் விளையாட வருவார்கள். ஆனால், நோர்மாவின் பெற்றோரை நாங்கள் யாரும் பார்த்ததில்லை.

    அவளை எந்நேரமும் பார்த்துக்கொண்ட பணிப்பெண் மஸ்னாவிடம் (MAZNAH) அடியும், திட்டும் வாங்கினாள் நோர்மா. `அடி’ என்றால், பெயருக்கு முதுகில் ஒரு தட்டு இல்லை.

    “ஒருவயதுக் குழந்தையை எதற்கு இப்படி அடிக்கிறாய்?” என்று, நானே மஸ்னாவைக் கண்டித்திருக்கிறேன்.

    “உங்களுக்குத் தெரியாது, ஆன்ட்டி. இவள் ரொம்ப நாட்டி!” என்பாள்.

    நோர்மாவுக்குப் பத்து வயதானபோது, எல்லாக் குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருக்க, “வீட்டுக்குப் போகலாம்,” என்று உத்தரவு பிறப்பித்துவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து இழுத்தாள் பணிப்பெண் மஸ்னா.

    அவள் மறுக்க, தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள். சிறுமி கதற, அதைப் பார்த்த ஒரு சிறுவன் பெரிதாக அழ ஆரம்பித்தான்.

    தூரத்தில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த என்னால் பொறுக்க முடியவில்லை. அங்கு விரைந்து, “விடு அவளை!” என்று இரைந்தேன்.

    அவளுடைய வீட்டிற்குச் சென்று, நோர்மாவின் தாயிடம் வருடக்கணக்கான வதையை விரிவாகக் கூற, அவள் அதிர்ந்தாள்.

    சற்று வளர்ந்தபின்னரும், நோர்மா பலியாடுபோல் இன்னொரு பணிப்பெண்ணைத் தொடர்வதைப் பார்த்தேன்.

    `இவளுக்குக் குழந்தைகள் பிறந்தால், அவர்களிடம் இவளால் அன்பு செலுத்த முடியுமா?’ என்று என் யோசனை போயிற்று.

    என்னதான் தத்து எடுத்த பெண்ணானாலும், நிலைமை அவ்வளவு மோசமாகும்வரை வளர்ப்புப்பெற்றோர் விட்டிருக்கலாமா?

    Share
  • கணினித் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் – அண்ணாகண்ணன் கருத்துரை

    கணினித் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் – அண்ணாகண்ணன் கருத்துரை

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசாணையின்படி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில், துறைதோறும் வல்லுனர் குழுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. அதில், தெரிவிக்கும் கலைச்சொற்களை, சொற்குவை இணையத்தளத்தில் ஏற்றி வருகின்றனர். அந்த வரிசையில், 19.08.2021 அன்று கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வல்லமை மின்னிதழ் ஆசிரியர் முனைவர் அண்ணாகண்ணன், கணினித் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் குறித்து வழங்கிய கருத்துரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம்

    கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம்

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசாணையின்படி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில், துறைதோறும் வல்லுனர் குழுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. அதில், தெரிவிக்கும் கலைச்சொற்களை, சொற்குவை இணையத்தளத்தில் ஏற்றி வருகின்றனர். அந்த வரிசையில், 19.08.2021 அன்று கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் வல்லமை மின்னிதழ் ஆசிரியர் முனைவர் அண்ணாகண்ணன், நீச்சல்காரன், முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் தமிழ்ப்பரிதி மாரி, இரா.நரசிம்மன் (சைபர்சிம்மன்), முனைவர் இல.சுந்தரம், முனைவர் வ.தனலட்சுமி, மீ.சோமசுந்தரம், முனைவர் ச.முத்துவிக்னேஷ், மு.சு.அருண்குமார். இர.கன்னியம்மாள், அ.கிருஷ்ணகுமார், ச.பார்த்தசாரதி, கி.முத்துராமலிங்கம், க.விஜயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் தங்க.காமராசு, நோக்கவுரை நிகழ்த்துகிறார். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார்.

    சொற்குவை (sorkuvai) யூடியூப் தளத்தில் இது நேரலையாக ஒளிபரப்பாகிறது.

     

    Share
  • மீன்பிடிக்கும் ஆங்கிலேயர்கள்

    மீன்பிடிக்கும் ஆங்கிலேயர்கள்

    இங்கிலாந்தில் எப்படி மீன்பிடிக்கிறார்கள் என்று பாருங்கள்.

    படப்பதிவு – நவ்யா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காலவெளி ஒரு நூலகம்

    காலவெளி ஒரு நூலகம்

    சி. ஜெயபாரதன், கனடா

    வானகம் எனக்கும் போதி மரம்
    வைர முத்துவின் ஞான ரதம்
    வையகம் மக்கள் ஆதி வரம்
    வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம்.

    காலவெளி எனக்கும் ஓர் நூலகம்
    கடவுள் படைப்பி லக்கண நாடகம்
    ஐன்ஸ்டீன் காணும் இறைப் பீடகம்
    அகரத்தில் தொடரும் இயற்கை ஏடகம்.

    காலம் எனக்குத் திசைகாட்டி
    காவியம் எனக்கோர் வழிகாட்டி
    ஞாலம் நமக்கோர் ஆலயம்
    ஞானம் எனக்கோர் ஆயுதம்.

    கல்வி எனக்குக் கால்படி
    காசினி அனுபவம் மேல்படி
    கற்பது முதுமைக் கைத்தடி
    நிற்பது வள்ளுவர் சொற்படி.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 28

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 28

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    அன்பலையில் மிதக்கும் அழகிய  உவமங்கள்

    ஓர் இலக்கியம் அல்லது அவ்விலக்கியத்துள் அமைந்துள்ள கவிதை படைக்கப்படுவதற்குப்  பல காரணங்கள் அமைந்திருப்பதுபோலவே அவை சுவைக்கப்படுவதற்கும் காரணங்ககள் பல. அருணாகிரியாரின் திருப்புகழை யாரும் இலக்கிய நயத்திற்காகப் படிப்பது என்பது இயலாது. ஆனால் வண்ண அமைப்பில் அமைந்திருக்கும் அதன் சந்தக் குழிப்புக்கள் அந்நூலை நோக்கி நம் ஆன்மாவை இழுக்கிறது என்பதில் ஐயமில்லை. அதன் ஈர்ப்பு விசை அதன் வண்ணத்தில் இருக்கிறது. கவிதைச் சுவையுணர்வுக்குக் கற்பனை, உணர்ச்சி, வெளிப்பாட்டு  உத்தி, யாப்பியல் நுட்பம் முதலியன தனியாகவும் கூட்டாகவும் கூடக் காரணிகள் ஆகலாம். பழந்தமிழ் இலக்கியங்கள், அவற்றின் சொற்செறிவு, இயற்கை மற்றும் உலகியல் சார்ந்த உவமங்கள், எளிய ஆசிரியப்பா கட்டுமானம், பெயரடைகள் மற்றும் வினையடைகள் முதலியவற்றால் காலத்தை வென்று நிற்கின்றன. அந்த வகையில் சங்க இலக்கியத்தில் ஒன்றாகிய குறுந்தொகையில் காணப்படும் சில உவமங்கள் ‘அடங்காது நிற்கும் அவற்றின் உவமச் சிறப்பு’ நோக்கி இந்தக் கடடுரையிலும் ஆராயப்படுகின்றன.

    மலரும் முள்ளும்

    ‘முள்ளும் மலரும்’ என்னும் ஒரு திரைப்படத் தலைப்பினைப் பொதுவாக அனைவரும் எண்ணும்மையாகக் கொண்டு அவற்றை இருவேறு பாத்திரங்களின் குறியீடாகக் கொண்டு அமைதியடைந்தனர். கற்பனை வளமுடைய சிலர் ‘கால நேரம் வந்தால் முள் கூட மலரும்’ அதாவது மலர்வதற்கு வாய்ப்பில்லாத முள்ளும் ஒரு காலத்தில் மலரும் என்று (THORN ALSO BLOSSOMS) அத்தலைப்பினைத் சுவைத்து மகிழ்ந்தனர்.  இதனையொத்ததொரு  ஒரு பாடல்.

    “நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே!
    புன்புலத்து மன்ற சிறியிலை நெருஞ்சி
    கட்கின் புதுமலர் முள் பயந்தாங்கு
    இனிய செய்த காதலர்
    இன்னா செய்தல் நோமென் நெஞ்சே” (குறு. 202)

    இப்படி அமைந்திருக்கிறது. அந்தப் பாட்டுப் பன்முக அழகுப் பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டது. மலர் பயந்த செடியில் முள் முளைத்த காட்சியைச் சித்திரிக்கும் பாடல். அருகிருந்து இனிய செய்தவன் தலைவன். கறைபடிந்த புறவொழுக்கம் காரணமாகப் பரத்தையரிடம் சென்று திரும்பித் தோழியிடம் குறைநயந்து நிற்கிறான். தலைவனுக்காகப் பரிந்து பேசுகிறாள் தோழி. தோழியின் வாயிலைத் தலைவி மறுக்கிறாள். பாட்டை இப்படிக் கண்ணழித்தால் தலைவியின் உள்ளம் புரியும். உவமத்தின் சிறப்பு புலப்படும்.

    “இனிய செய்த காதலர், இன்னா செய்தல்
    நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே!”

    ‘நெஞ்சு சுடும்’ என்பது இதுதான். மூன்று முறைக்குமேல் சொல் அடுக்கி வராது எனினும் தலைவனின் புறவொழுக்கக் குறைபாட்டின்  விளைவை அவ்வடுக்கு நன்குணர்த்துகிறது. தலைவன் செயலுக்குத்தான் ஓர் உவமத்தைச் சொல்கிறாள் தலைவி.

    “தீயவன் நல்லவன் ஆவது இயல்பு. நல்லவன் தீயவனாவது எப்படி? என் தலைவன் அத்தகையவனாக அல்லவா மாறியிருக்கிறான்?. மிகச்சிறு இலைகொண்ட நெருஞ்சியில் கண் இனிக்க பூப்பூத்தது  முன்னாள். கைவலிக்க முள் விளைந்தது இந்நாள்! அதனை எண்ணுகிற பொழுதெல்லாம் என் நெஞ்சம் வேதனைப்படுகிறதே?”

    என்கிறாள் தலைவி. தன்னால் ஆளப்படுபவனாகவே தலைவன் இருக்க வேண்டும் என்னும் தலைவியின் ஆதங்கம் கண்ணுக்கு இனிய நெருஞ்சிப்பூவின் உவமத்தால் வெளிப்படுவதை அறியலாம்.

    ஏழூர் பொதுவினையும் ஓரூர் உலையும்

    ‘கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு’ என்னும் அழுகணிச் சித்தர் பாடல் வரிகளில் வரும் ‘அடிவயிறு’ என்பதற்குச் சித்தாந்தத்தின் அடிப்படையில்  பலரும் பலவாறு பொருள் சொல்வர். ஆனால் ‘கொல்லன் உலைக்கு’ உரை மாற்றம் இல்லை. இங்கே ‘கொல்லன் உலை’ என்பது நெருப்புக்குவியல். இதனோடு தொடர்புடையதுதான் ‘ஊதுலைக்குருகு’. ‘ஊதுலை’ என்பது உலை. ‘குருகு’ என்பது அதன் மூக்குப் பகுதி. தற்காலத்திலும் கொல்லன் பட்டறையில் ஒருவன் வயிறுபோன்ற பகுதிக்குப் பின்னால் இருந்து இயக்க, அப்பகுதி வழியாக வெப்பத்தோடு கூடிய காற்று, கட்டி நெருப்பைக் கனலாக்கும். மூக்குப் பகுதி வழியாக வரும் காற்றின் தன்மையையும் வேகத்தையும் வெப்பத்தையும் ஏமாற்றத்திற்கும், பிரிவாற்றாமைக்கும் உவமமாக்கியிருக்கிறார்கள் புலவர் பெருமக்கள்.

    “காதலர்ப் பிரிந்த  மாதர் நோதக
    ஊதுலைக்குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி” (சிலம்பு)

    “காதலர்க் கெடுத்த நோயொடு உளங் கனன்று
    ஊதுலைக் குருகின் உயிர்த்தனள்”  (சிலம்பு)

    “காதலர் இறப்பின் கனையெரி பொத்தி
    ஊதுலைக் குருகின் உயிர்தகவு அடங்காது
    இன்னுயிர் ஈவர்” (மணி. 2-43-45)

    என்றெல்லாம் ஆற்றாமைக்கு உவமமாக ஊதுலைக்குருகு பயன்பட்டு வந்துள்ளது. உள்ளுடல் கொதித்து வெப்பத்தோடு வெளியேறும் பெருமூச்சுக்கு ஊதுலைக் குருகின் காற்று உவமம் பொதுவாகத் தலைவனையோ கணவனையோ மகளிர்க்கு உவமமாக்கப்படும் இந்த ஊதுலைக் குருகு என்பது மரபு சார்ந்தது.

    “ஏழ் ஊர்ப்பொதுவினைக்கு ஓரூர் யாத்த
    உலைவாங்கு மிதிதோல் போலத்
    தலைவரம்பறியாது  வருந்தும் என் நெஞ்சே!” (குறு. 172)

    என்பது ஒரு தலைவியின் ஆற்றாமையைச் சித்திரிக்கும் சங்க இலக்கியப் பாடல் பகுதி. இவள் என்ன சொல்கிறாள்? ஒருபடி மேலே செல்கிறாள். உவமத்தின் அடர்த்தியைக் கூடுதலாக்குகிறாள். சாதாரண உலையில் உள்ளூரைச் சார்ந்த அல்லது அதற்குத் தேவையான ஒருசில தளவாடங்கள் உருவாக்கப்படும். எனவே நெருப்பும் அதற்கான ஊதுலையின் அளவும்  வரம்புக்கு உட்பட்டு இருக்கும். ஏழு ஊர்களுக்குத் தேவையான தளவாடங்களை ஒரே ஊரில் உள்ள ஒரே ஊதுலையில் தயாரித்தால் அந்த ஊதுலையின் பரிமாணம் எப்படி இருக்கும்? அந்த ஊதுலையின் குருகிலிருந்த வெப்பக் காற்று எப்படி இருக்கும்? தலைவனைப் பிரிந்த எல்லலையற்ற ஆற்றாமையை இவ்வாறு வெளிப்படுத்துகிறாள் தலைவி. ஊதுலையின் பரிமாணத்தைத் ‘தலைவரம்பற்ற தனது வருத்தத்தின்’ மேல் வைத்துக் காட்டும் நுட்பம் ஓர்க. பின்னாளில் தனிமனிதன் காணும் வாழ்க்கைச் சிக்கலைப் இராமச்சந்திரக் கவிராயர்,

    “ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ,
    அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக,
    மாவீரம் போகுதென்று விதைகொண்டோட,
    வழியிலே கடன் காரர் மறித்துக் கொள்ள,
    சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற,
    தள்ளவொண்ணா விருந்துவர, சர்ப்பந் தீண்ட,
    கோவேந்தன் உழுதுண்ட கடனைக் கேட்க
    குருக்களோ தட்சணையைக் கொடுஎன் றாரே!”

    எனத் ‘துன்பக் கலம்பகம்’ பாடுதற்குச் சங்க இலக்கியத் தலைவியும் ஒரு வழிகாட்டியாக இருக்கலாமோ?

    விலகினால் சுடும்! நெருங்கினால் குளிரும் நெருப்பு!

    கவிதையில் சொல்லப்படும் கருத்தே கவிதையாகாது. அக்கருத்து சொல்லப்படும் முறையே கவிதையைத் தீர்மானிக்கிறது. இந்த முறைக்கு இலக்கிய உத்தி என்னும் பெயரும் பொருத்தமானதே. தலைவன் அருகிருந்தால் தலைவிக்கு மகிழ்ச்சி. அவன் அவளை விட்டுப் பிரியும் நேர்வுகளில் அவள் வருந்துவாள். இப்பிரிவு களவியலில் ஒரு வகையாகவும் கற்பியலில் ஒருவகையாகவும் அமையும். இருப்பினும் பிரிவுத்துன்பத்தால் வரும் ஆற்றாமையும் அதன் காரணமாக உடலில் தோன்றும் நிறவேறுபாடும் தவிர்க்க முடியாதவையே. கல்லூரி விடுமுறையால் பிரிந்தால் களவியல் பிரிவு. ஆடி மாதத்திற்குத் தாய்வீட்டுக்கு மனைவி சென்றால் கற்பியல் (இல்லறம்) பிரிவு.  அவ்வளவுதான்.

    “நீங்கின் தெரூஉம் குறுகினால் தண் என்னும்
    தீ யாண்டு பெற்றாள் இவள்”

    என்பது வள்ளுவர் கண்ட தலைவன் மயக்கநிலை கூற்று! எதனாலே இதனைத் தலைவனின் மயக்கம் என்கிறோம் எனின் தலைவனின் காமத்தீயால் அவன் தன்னையே சுட்டுக் கொள்கிறான். ஆனால் அத்தீ தலைவியால் வெளிப்படுதலின்  எங்கே பெற்றாள் என்று அவள் மீது வைத்துக் கூறுகிறான். நீங்குவதும் குறுகுவதும் இவன்தானே! இந்த நோய் தலைவனுக்குப் பசப்பு என்றால் தலைவிக்கு இது பசப்பாக மாறும்.

    “விளக்கற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு” (குறள்.1186)

    என்னும் தலைவி கூற்றில் இதனை உணரலாம். விளக்கு முற்றும் அணைந்தால்தான் இருட்டு வரும் என்பதன்று. ‘விளக்கொளி’ குறையத் தொடங்கினாலே இருள் பரவத் தொடங்கும். இருள் ‘விளக்கொளி’ எப்போது குறையும் என்று காத்திருக்கும். அதுபோல முயங்கிய தலைவன் எப்போது விலகத் தொடங்குவான் என்று பசலை நோய் காத்திருக்குமாம். ‘அற்றம்’ என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் ‘மெலிவு’ என்று உரை காண்பதற்கு இதுதான் காரணம்.  இந்தப் பசலை தன்மேனியில் படர்வதற்கு அக்காலத் தலைவி ஓர் உவமம் கூறியிருக்கிறாள். அது எல்லாரும் அறிந்த உவமம். இன்றைக்கும் காணப்படுகிற காட்சி!

    “ஊருண் கேணி உண்டுறை தொக்க
    பாசி யற்றே பசலை? காதலர்
    தொடுவுழித் தொடுவுழி நீங்கி
    விடுவழி விடுவழிப் பரத்த லானே!” (குறு. 399 பரணர்)

    ஊர் மக்கள் நீரெடுத்துப் பயன்படுத்தும் கேணி மக்கள் பயன்படுத்துகிற காலத்தில் தூய்மையாகவும் பயன்படுத்தாது விடுபட்ட காலத்தில் பாசி படர்ந்தும் காணப்படுவது இன்றைக்கும் காணக்கூடியது.  தலைவனோடு கூடியிருக்கும் காலத்துத் தன் மேனியில் படரத் தயங்கிய பசப்பு அவன் பிரிந்த நொடியிலிருந்து பரவுகிறதாம். பசப்பு பாசியான கதை இதுதான். இந்தக் கதையைக் கலித்தொகை தலைவி இன்னும் ஆழமாகச் சொல்கிறாள்.

    “குடிபுறம் காத்தோம்பும் செங்கோலான் வியன்தானை
    விடுவழி விழுவழிச் சென்றாங்கு அவர்
    தொடுவழித் தொடுவழி நீங்கின்றல் பசப்பே”  (கலி. 130)

    மக்களை அன்பால் காத்து ஓம்பும் செங்கோல் மன்னனுடைய பெரிய படைகள் நாலாப் பக்கத்துப் பகைவர் மீதும் ஏவ, அப்பகைவர்கள் ஓடி மறைந்து செத்து ஒழிவதைப்போலப் பிரிந்த என் தலைவன் என்னைத் தொடத் தொட நீங்கியது என்கிறாள். மன்னன் படைகண்டு பகைவர் ஒழிந்தனர். தலைவன் தீண்டுதல் கண்டு பசலை ஒழிந்தது. அணைந்தால் குளிர்ச்சி! பிரிந்தால் கொதிப்பு! விளக்கொளி குறையும் காலம் பார்க்கும் இருட்டு!  நீரெடுத்தால் படராத பாசி எடுக்காவிட்டால் படரும்! படைகண்டு பகை நடுங்கும்! தலைவன் தொடல் அறிந்துப் பசலை நீங்கும்! பிரிவுத்துன்பத்தைத்தான் எப்படியெல்லாம் எத்தனை உவமங்கொண்டு விளக்கியிருக்கிறார்கள் பாருங்கள்?

    திண்கரை பெருமரம் போல

    பயன்படுத்தாத ஊருணியில் படர்ந்த பாசிக்கு ஒப்பானது தலைவனைப் பிரிந்த காலத்துத் தன் மேனியில் படர்ந்த பசலை என்பது ஒரு தலைவியின் இரங்கத்தக்க நிலை. தலைவன் வந்த நிலையில் அவனோடு முயங்கும் முயக்கம் எத்தகையது என்பதற்கும் அதே ஊருணிக் கரை உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்துவதால் விலகும் பாசி அங்கே உவமம். தலைவன் அருகிலேயே இருப்பதால் நீர்ப்பிடிப்புக் கரையில் வளர்ந்த திண்மரம் இங்கே உவமம். அந்தப் பாடல் இப்படி அமைந்திருக்கிறது.

    “மெல்லிய லோயே! மெல்லிய லோயே!
    நன்னாள் நீத்த பழிதீர் மாமை
    வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்
    சொல்ல கிற்றா மெல்லிய லோயே!
    சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
    நாள் இடைப்படா நளிநீர் நீத்தத்து
    திண்கரை பெருமரம் போலத்
    தீதில்நிலைமை முயங்குகம் பலவே” (குறு. 168)

    கரை நொய்தாயின் மரத்திற்கு அழிவுண்டாமாகலின் ‘திண்கரை’ என்கிறாள் தலைவி. நீத்தம் என்றால் வெள்ளம். ‘நீர்ப்பிடிப்பான் கரையில் வளர்ந்த உறுதியான மரம்’ என்ற தொடர் தலைவனின் தண்ணளியை உணர்த்தியது. அவன் அன்பென்னும் நீர் சுரக்கும் என்பது கருத்து. இனி ‘நாள் இடைப்படா நளிநீர்’ என்றதனால் இடையிடாது மக்கள் நீரைப் பயன்படுத்துவதுபோலத் தலைவனின் அன்பும் அரவணைப்பும் தொடர்ந்து தனக்குக் கிட்டும் என்பதாம். தலைவன் பிரிந்து சென்ற வருத்தத்திற்கு இரங்காது பழிதூற்றியவரும் இவ்வூரினரேயாதலின் தலைவன் அருகிருக்கும் அதாவது வரைவுமலிந்திருக்கும் காலத்தில் அவர்கள் தலைவிக்குச் ‘சிறியர்’ ஆயினர். தான் தலைவனோடு கொண்ட பேரன்பின் காரணமாக நிலம்பக வேர்பிடித்து நிற்கும் மரத்தைத் தனக்குத் தானே உவமித்துக் கொண்டாள் தலைவி.

    தலைவன் தன்னோடிருக்கும் போது தான் ஒரு திண்மரம் எனச் சொல்லுகிற தலைவியின் கூற்றில் அமைந்துள்ள உவம அடைச்சொற்கள் தலைவியின் உள்ளக் கூறுகளைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

    வேழத்தை மிரட்டிய வெள்ளரவுக் குருளை

    எளிய சிறிய செய்தி. அது மொழியாளுமை கொண்ட படைப்பாளன் ஒருவன் சிந்தனையில் கவிதையாக மலர்கிறபோது சொற்களின் எண்ணிக்கை புறந்தள்ளப்படுகிறது. குறள் வெண்பாவாகிய ஏழு சீர்கள் திருவள்ளுவருக்குப் போதுமானவையாக இருந்தன. சத்திநாதனார் என்னும் சங்கப்புலவருக்குத் தலைமகன் ஒருவனின் காதல் துயரத்தைக் கவிதையாக்கப் பதினைந்து சொற்கள் போதுமானவையாக இருந்திருக்கிறது. இந்தப் பதினைந்து சொற்களில் தலைவியின் புன்னகையால் சிதறடிக்கப்பட்ட ஆண்மை சித்திரிப்புக்கு ஆளாகிறது. காதல் விளையாட்டில் தலைமகன் எவ்வாறு எளியனாகிறான் என்பனவற்றையெல்லாம் இரத்தினச் சுருக்கமாகப் பதிவு செய்திருப்பதை அறியமுடிகிறது.

    “சிறு வெள் அரவின் அவ்வரிக் குருளை
    கான யானை அணங்கி யாங்கு
    இளையள் முளைவாள் எயிற்றள்
    வளையுடைக் கையள் எம அணங்கி யோளே!” (குறு. 119)

    இந்தப் பாடடில் பொருளின்கண் வந்துள்ள அடைகளும் உவமத்தின்கண் வந்துள்ள அடைகளும் பெரிதும் சுவைத்தற்குரியன. முதலில் பாம்புக்குட்டிக்குக் ‘குருளை’ என்னும் பெயர் வழக்கு உண்டு என்பதை அறிதல் வேண்டும். ‘கருநாகம்’ என்பதினின்று பிரித்தற்கு ‘வெள்ளரவு’ என்கிறார். அவ்வரவின் மேல் அழகான வரிகள் இருக்கும். அவள் புன்முறுவலே தன்னைத் தாக்கியது என்பதை ‘முளைவாள் எயிற்றள்’ என்னும் சொல்லால் குறிக்கிறான் தலைவன். முகைமொக்கும் நகை  மொக்கும் ஒன்றல்லவா? போர்க்களத்தில் நண்ணாரும் உட்கும் தலைவனின் பீடு இச்சிறுமுது குறைவியின் புன்னகைக்குச் சீரழிந்தது என்பது கருத்து.

    ‘சிறு வெள்ளரவு’ என்பதற்கேற்ப ‘இளையள் வாள் முளை எயிற்றள்’ என்னும் ஒப்புமை காண்க. தலைவியைத் தழுவிய போது அவன் கண்ணுக்குக் கிட்டியது அவள் கையேயாதலின் கையள் என்றான்.

    பாம்புக் குட்டி யானையை அச்சுறுத்துமா எனின் அது வழக்கியல் சார்ந்த இலக்கியப் பதிவு என்க. “அளைதாழ் அரவும் அரியும் செந்தீயும் அரசும் இளைதாயினும் கொல்லும்” என்னும் அம்பிகாபதிக்கோவை வரி பாம்புக்குட்டியும் அணங்குதற்குரியது என்பதைச் சுட்டுகிறது. இனிக் “குஞ்சரம் கோள் இழைக்கும் பாம்பு” என்னும் திருச்சிற்றம்பலக் கோவை வரி பாம்பு யானையை அணங்கும் என்பதைக் காட்டுகிறது.

    ஒரு நான்கு வரிப் பாடலில் ;காணப்படும் இந்த உவமச் செறிவு என்பது தற்கால மரபுக்கவிதை எழுதுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களின கவனத்தை ஈர்க்குமா?

    நிறைவுரை

    அகவுணர்வுகளை வெளிப்படுத்துகிறபோது குறிப்பாகவே வெளிப்படுத்த வேண்டும் என்பது தமிழ் அகத்திணை மரபு. இந்த மரபை நூறு விழுக்காடு பின்பற்றி அமைந்திருப்பது சங்க இலக்கியம். ஆழமும் நுட்பமும் உடைய அகமனத்து அதிர்வுகளை இயற்கை சார்ந்த உவமங்களாலும் உலகியல் சார்ந்த உவமங்களாலும்  உள்ளங்கவர் முறையில் விளக்கிக் காட்டுவது அதன் தனிச்சிறப்பு. மக்கள் நாளும் பயன்படுத்தும் ஊருணிக்கரையும் அதன் கரைவளர் மரமும் கூட உவமமாகியிருக்கிறது.  திருவள்ளுவர் பேரறிவாளன் திருவிற்கு ஊருணியை உவமமாக்கினார். சத்திநாதனார் அதன் பயன்பாட்டைத் தலைவியின் பசலை நோய்க்கு உவமமாக்கினார். குறைந்த சொற்கள்! எளிய கட்டுமானம்! அழகிய உவமம்! ஆழமான பொருள்! இவற்றின் வேதியல் கலவைதான் சங்க இலக்கியம்!

    (தொடரும்…)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 141 (வாய்ந்த)

    சேக்கிழார் பாடல் நயம் – 141 (வாய்ந்த)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    12. குங்கிலியக் கலைய நாயனார் புராணம்

    முன்னுரை

    திருத்தொண்டருள் பன்னிரண்டா மவராய்ச்  சிறப்பிக்கப் பெறுபவர், குங்கிலியக் கலைய நாயனார்  ஆவார். இவர் தம் வறுமையிலும் செம்மையராய்  தம் குங்கிலியப்புகை ஊட்டும் செயலில் வழுவாமல் வாழ்ந்தது மட்டுமின்றி அதன் பெருமையை உலகறியச் செய்யும் பொருட்டு, இறைவன் திருப்பனந்தாள் என்ற தலத்தில் செய்த திருவிளையாடலை மாற்றியமைத்த  வரலாறு இப்புராணத்தில் கூறப்பெறுகிறது!

    பாடல்

    வாய்ந்தநீர் வளத்தா லோங்கி மன்னிய பொன்னி நாட்டில்
    ஏய்ந்தசீர் மறையோர் வாழு மெயிற்பதி யெறிநீர்க் கங்கை
    தோய்ந்தநீள் சடையார் பண்டு தொண்டர்மேல் வந்த கூற்றைக்
    கய்ந்தசே வடியார் நீடி யிருப்பது கடவூ ராகும்.

    பொருள்

    நீர் பொருந்தியதனா லுளதாம் வளத்தினாலே சிறந்து ஒங்கி நிலைபெற்ற காவிரிபாயும் சோழநாட்டில்;.சிறப்புப் பொருந்திய வேதியர்கள் வாழ்தற்கிடமாகிய மதில்சூழ்ந்த ஊர்;  அலைகள்வீசும் நீரையுடைய கங்கையாறு தோய்ந்த நீண்ட சடையினையுடையாரும்;  தொண்டராகிய மார்க்கண்டேயர் மேல் உயிர்கொள்ள வந்த காலனை முன் உதைத்த சிவந்த திருவடியினையுடையாரும் ஆகிய சிவபெருமான்; நிலைத்து வாழ்வதான திருக்கடவூர் என்பதாகும்.

    விளக்கம்

    நீர்வாய்ந்த வளத்தால், அதாவது  நீரின் வாய்ப்பாவது உயிர்க்கும் பயிர்க்கும் நிலத்துக்கும் பொருந்தியதாகுதல். குடகு நாட்டினும் கொங்கு நாட்டினும் போந்த காவிரிநீர் இங்குச் சோழநாட்டில் வந்து  பொருந்திய  என்றலுமாம்.

    நீர் வளத்தால் ஓங்கி மன்னிய – நீர்வளம் ஒன்றானே சிறந்து நிலை பெற்ற. பொன்னிநாடு – சோழநாட்டைப் பொன்னிநாடு, நீர்நாடு; காவிரிநாடு என் பனவாதி பெயர்களாற் கூறுவது ஆசிரியர்மரபு. காவிரி, தான் தொடக்க முதலாகச் செல்லும் ஏனைநாடுகளிற் பயன் தராது, சோழநாட்டுக்கே பெரும் பயன் தருதலால் இவ்வாறு கூறுவது மரபு. கன்னடதேயத்திற் காவிரி பயன்றருதல் பின்னாள் வழக்கு.

    மறையோரின் சீராவன அவர்களது பிறப் பொழுக்கமாகிய வைதிகசீலத்தானும் வேத உள்ளுறையாகிய சைவசீலத்தானும் சிறப்புறுதல்.

    மறையோர் வாழும்பதி என்ற தொடர்,  இச் சரிதநாயகராகிய கலயநாயனார் மறையவர் மரபினராதலின் அதனை முற்குறிப்பாகக் காட்டியபடி. மறையோர் மரபினர் தனித்து வாழும் பதிகளும் உண்டு. இவை போல்வன சதுர்வேதிமங்கலம் என்று வழங்கப்பட்டன என்பது கல்வெட்டுக்களால்  அறியப்படும்.

    எதிர்நீர்க் கங்கை தோய்ந்தநீள் சடையார் – என்ற தொடர்  அலைகளால் நீரினை மேலே வீசும்  கங்கையாற்றைக்  குறித்தது. உலகங்களை அழிக்கவல்லதாய்ப் பல்லாயிர முகங்களாகப் பரந்திழிந்த கங்கை என்ற சரிதக்குறிப்பும் காண்க.  எறிநீர் என்றது இவ்வாறு மேல் அலைகளால் எறிதலேயன்றிக் கீழ் ஊற்றுக்கால்களின் வழிப் பல இடமும் செல்லும்படி பரப்புதலும் குறித்தது. திருத்தில்லையில் திருச்சிற்றம்பலத்தி னருகே உள்ள பரமானந்த கூபத்தில் ஐப்பசி மாதத்துப் பூர்வபக்க நவமியில் கங்கை வருகின்றது என்ற மரபும், திரு அவிநாசியிற் காசிக்கங்கைக் கிணற்றின் வரலாறும், திருக்குடந்தை மகாமக வரலாறும் இவை போன்றன அங்கங்குள்ள சான்றுகளும் இங்குக். கருத்தத்க்கன.

    தோய்ந்த நீள்சடை என்பது  எறியும் நீராயினும் அவ்வாறு எறியாது தன்மட்டில் அமைவதாகக் கொண்ட சடையைக் குறித்தது. தோய்ந்த – சடைக்கற்றையின் அளவில் கட்டுப்பட்டு நின்ற.  நீள்சடை – கங்கையின் பரப்புக்குத் தக்கபடி நீளும்சடை, மார்க்கண்டேயர் பூசிக்கும்பொருட்டுக் கங்கை வருகின்றதென்று வழங்கும் இத்தலத்துத் தீர்த்தமும், அதன் நீரினையே இங்கு அமிர்தகடேசருக்கு நாளும் திருமஞ்சனமாட்டும் வழக்குங் காண்க.

    காசியினின்றும் கங்கை கடவூர்வரை நீர் எறிந்து பரவுமாகில் இவரது சடையும் அவ்வளவும் நீண்டு இங்கு விளக்கமுறும் என்ற உட்குறிப்பும் காண்க. இக்குறிப்பினையே இச்சரிதத்தில் பலவிடத்தும்,  தேற்றம்பெற முதலில் வைத்துக்காட்டியதும் காண்க.

    மார்க்கண்டேயர் மேல்வந்த கூற்று, பதினாறு வயது என்ற அவர் வாழ்நாளின் எல்லை யணுகிற்று என்று அவருடைய உயிர் கவரும் பொருட்டு வந்த காலன். “தருமராசற்காய் வந்த கூற்றினை” என்ற திருத்தாண்டகம் காண்க. மேல்வந்த – குறித்துவந்த என்ற பொருளில் வந்தது. பண்டு – முன். இது ஒரு கற்பத்திற் காசியில் நிகழ்ந்ததாகக் கந்தபுராணம் கூறும்.

    காய்ந்த சேவடியார் என்ற  தொடர்,  சேவடியினால் உதைத்துக் காய்ந்தவர் என்பதைக்  குறித்தது. இச்சரிதம் இத்தலத் தேவாரங்களிலெல்லாம் போற்றப்படுதலாலும், இப்புராணத்தினுட் பல இடத்திலுங் குறிக்கப் படுதலும் காண்க. இத்தலத்திற் காலசங்கார மூர்த்தி சிறக்க வழிபடப் பெறுகின்றதும், அவரது திருவிழா பெருஞ்சிறப்பாகப் போற்றப்படுகின்றதும் காணத்தக்கன.

    நீடியிருத்தல் என்ற தொடர், இப்பெருமையுடன் என்றும் நீங்காது விளக்கமாக வீற்றிருத்தல். இருப்பது, இருப்பதாகிய அவ்வூர்.

    கடவூர் – அமிர்தகடம், கலயம் சிவலிங்கத் திருமேனியாக உருக்கொண்டு எழுந்தருளிய ஊர் ஆதலின் கடவூர்  கால பயத்தைக் கடத்தற்குதவும் ஊர் என்றலுமாம்.

    இப்பாட்டினால் இப்புராணத்துக்குரிய ஆறு – நாடு – நகரம் – குடிவளம் – மூர்த்தி – தலம் – தீர்த்தம் – சரிதம் முதலிய சிறப்புக்கள் பலவும் ஒருங்கே கூறிய அழகு கண்டு மகிழத்  தக்கது!

    Share
  • மாதவிடாய் வலி தீர | நிர்மலா ராகவன்

    மாதவிடாய் வலி தீர | நிர்மலா ராகவன்

    இல்லறத்தில் இன்பம் சூழ – 2

    மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்குத் தாங்க முடியாத அளவுக்கு வலி, வருத்தம், கோபம், எரிச்சல் போன்ற கலவையான உணர்வுகள் எழுகின்றன. உயிரைப் பிளக்கும் இந்த வலியைத் தீர்க்கும் மருந்துகள், மருத்துவ முறைகள், பயிற்சிகள் என்னென்ன? இந்த நேரத்தில் அவர்களும் குடும்பத்தினரும் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? இதோ, ஆலோசனை வழங்குகிறார் நிர்மலா ராகவன். அத்துடன், மகப்பேற்றுக்குப் பிறகு வயிறு பெருத்துவிடும் பெண்கள், வயிறு சுருங்க என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அருகம்புல்லை உண்ணும் பூனை

    அருகம்புல்லை உண்ணும் பூனை

    காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவது நல்லது என்பர். இது பூனைகளுக்கும் தெரிந்திருக்கிறது. இதோ இந்தப் பூனை, இளசான அருகம்புல்லாகத் தேடி எடுத்துச் சுவைக்கிறது. இன்று காலை 6 மணியளவில் கண்ட காட்சி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒரு செம்ம கதை | ஹரி நாராயணன்

    ஒரு செம்ம கதை | ஹரி நாராயணன்

    இன்று எங்கள் மகன் ஹரி நாராயணனின் மூன்றாவது பிறந்த நாள். இதை முன்னிட்டு, அவன் சொன்ன கதை ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கதையும்  மொழிதலும் – 8 பி.எஸ். ராமையாவின் ‘பணம் பிழைத்தது’

    கதையும் மொழிதலும் – 8 பி.எஸ். ராமையாவின் ‘பணம் பிழைத்தது’

    முனைவர் ம. இராமச்சந்திரன்

    சி.சு.செல்லப்பாவால் கொண்டாடப்பட்ட சிறுகதை எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. இவரின் சிறுகதைகளை ஆய்வு செய்து ‘பி.எஸ்.ராமையாவின் சிறுகதை பாணி’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறார். ‘மணிக்கொடி முதல்வர்கள்’ என்ற நூலிலும் பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் போக்குகளைப் பற்றி விரிவாக விவாதித்துள்ளார். அந்த அளவிற்கு பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் பங்களிப்பு வியக்கத்தக்கது. மணிக்கொடி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டவர் பி.எஸ். ராமையா. தமிழ்ச் சிறுகதையின் தொடக்கக்கால ஆளுமைகளில் மிகவும் போற்றத்தக்கவராகப் பலரால் கருதப்பட்டவர் இவர். அதே நேரத்தில் இவரின் கதைகள் காலத்தைக் கடந்து நிற்கும்  ஆற்றலோ, நவீனத்துவமோ இல்லை என்று விமர்சிக்கப்பட்டவரும் இவரே. இவ்வாறு பி.எஸ்.ராமையாவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிடைத்து வந்தன. ஆதரவாளர்களில் முக்கியமானவராகச் சி. சு. செல்லப்பாவும் எதிர்க் கருத்துக் கொண்டவர்களில்  முக்கியமானவராகக் க.நா.சு.வும் விளங்கினார்கள்.

    மணிக்கொடி இதழ் காந்தியச் சிந்தனையைப் பின்புலமாகக் கொண்டு வெளிவந்தது. அதே போல தமிழ்ச் சிறுகதை எப்படி அமையவேண்டும் என்ற கோட்பாட்டு வரையறையோடு நவீனச் சிறுகதைகளை வரவேற்றது. தமிழக மரபில் பரவலாகப் பேசப்பட்ட, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடுநிலையான வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்ட கதைகள் (மணிக்கொடி எழுத்தாளர்கள்) இவர்களால் எழுதப்பட்டன. பழமைக்கும் புதுமைக்குமான போராட்டத்தில் பழமையின் சிறப்புகளை வெளிப்படுத்தும், போற்றும் வகையில் இவர்களின் கதையமைப்பும் கதைக்கருவும் இருந்தன. இதே காலகட்டத்தில் நவீனத்துவத்தின் வரவும் நகர வாழ்க்கையின் போதாமையும் சிக்கல்களும் பரவலாகக் கதையாக்கப்பட்டன. இவ்வாறு இரண்டு

    போக்குகளுக்கும் ஆதரவும் மறுப்பும் இருந்து கொண்டே வந்தன. பி.எஸ்.ராமையா மரபான வாழ்வியல் கூறுகளையும் மக்கள் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதைகளை எழுதினார். இவரின் கதைகள் அக்காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டன. பாராட்டப்பட்டன. இவரின் முக்கியமான கதைகளில் ஒன்று ‘பணம் பிழைத்தது’.

    பிழைப்புத் தேடி சென்னைக்குச் சென்ற முதலியாரின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. முதலியார் வியாபாரத்திற்காகச் சென்னைக்கு இடம்பெயர்ந்து பெரும் பணக்காரராக மாறுகிறார். முப்பது ஆண்டு வியாபாரத்தில் பெரும் செல்வந்தராக மாறுகிறார். முதுமையின் அறிகுறிகள் அவ்வப்போது தலை காட்ட தொடங்கின. ஒரு கட்டத்தில் இவரின் உழைப்பும் சுறுசுறுப்பும் தேக்கம் அடைகின்றன. காலத்தின் கைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள எண்ணுகிறார். ஆனால் முதுமையும் நோயும் இவரை ஆட்கொள்கின்றன. தொழிலில் ஏற்படும் மன நெருக்கடிகளும் உடலின் முதுமையும் இவரை மனதளவிலும் முதுமை ஆக்குகின்றன. முப்பது ஆண்டு கால வாழ்க்கையில் இத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்தவர் இல்லை முதலியார்.

    ஒருகட்டத்தில் உடலும் மனமும் ஒத்துழைக்காத அளவிற்கு நோய் தீவிரமடைந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொழிலிலிருந்து சற்று விலகி ஓய்வு எடுக்குமாறு கூறுகின்றனர். பலரின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகு வழக்கம்போல அவற்றைப் பின்பற்றாமல் தனது போக்கில் முடிவெடுக்கிறார். முப்பது ஆண்டுகால உழைப்பில் சேர்த்த சொத்துக்களைத் தனது சொந்த கிராமத்திற்குச் சென்று பராமரிக்கலாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் சொந்த கிராமத்திற்குச் சென்ற சில நாட்களிலேயே அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.

    முப்பது ஆண்டுகளாகச் சேர்த்து வைத்த நிலபுலன்களைப் பார்த்துத் தனது வளர்ச்சியின் வேகத்தை எண்ணுகிறார். இவற்றையெல்லாம் முறையாக எதிர்காலத்தில் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தேவையான செயல்களைச் செய்ய எண்ணுகிறார். ஆனால் இவரின் உடல் நிலை மோசமடைகிறது. மருத்துவர்களின் வருகையும் மருத்துவமும் கிராமத்திலேயே நடைபெறுகின்றன. என்றாலும் சில நாட்கள் உடல்நிலை தேறுவதாக இருந்தாலும் பிறகு மீண்டும் மோசமடைந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் முதலியாரின் மனமும் மரணத்தை நோக்கியே எண்ணுகிறது. அப்பொழுது தெரு நாயின் ஊளைச் சத்தம் வீட்டில் இருப்பவர்களை அச்சம் கொள்ள செய்கின்றது. உறவினர்கள் நாயைக் கல்லெறிந்து விரட்டும் ஓசை கேட்கிறது. முதலியார் படுக்கையில் படுத்தபடியே நடப்பவை எல்லாவற்றையும் உற்று நோக்குகிறார். தனக்கு மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வீட்டின் வாசலில் எமன் வந்து நிற்கிறான். எப்படியாவது அவனிடமிருந்து தப்பிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கிடைத்தால் தனது சொத்துக்களையெல்லாம் முறைப்படுத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டே இருக்கிறார். திடீரென்று அவருக்கு யோசனை தோன்றுகிறது. தனக்குப் பதிலாக யாராவது மரணத்தைத் தழுவிக் கொண்டால் அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக எண்ணுகிறார்.

    இதனைச் செயல்படுத்துவதற்குத் தனது செக் புக்கை எடுத்து வருமாறு கூறுகிறார். அந்தநேரத்தில் கிராமத்தில் ஒரே கலவரமாக இருக்கிறது. வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஓடிச்சென்று என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து வந்தவர்கள் பேசிக்கொண்ட பேச்சொலி முதலியாரின் காதில் விழுகிறது. பக்கத்துத் தெருவில் இருக்கக்கூடிய ஒருவரின் வீட்டிற்குத் திருடன் வந்து, வீட்டில் உள்ள நகைகளை எல்லாம் திருடிச் சென்றுவிட்டான். அப்படி செல்லும்போது அருகில் இருப்பவர்கள் அவர்களைத் துரத்திச் சென்றனர். துரத்தி சென்ற ஒருவனுக்கும் திருடனுக்கும் ஏற்பட்ட மோதலில் திருடனால் குத்தப்பட்டு அதே இடத்தில் இறந்து விட்டான் அவனைத் துரத்தி சென்றவன் என்ற செய்தியும் இறந்தவன் மிகவும் நல்லவன் என்றும் இப்பொழுதுதான் அவனுக்குத் திருமணம் ஆகியிருக்கிறது என்றும் அவர்களின் பேச்சிலிருந்து முதலியார் அறிந்துகொள்கிறார்.

    இதனைக் கேட்ட உடனே முதலியாருக்கு உடலில் புதுத்தெம்பு கூடுகிறது. கண்களைத் திறக்க முயற்சிக்கிறார். எளிமையாகத் திறக்க முடிகிறது. கை கால்களுக்கு ஒரு வலிமை வந்தது போல் உணர்கிறார். அவரது மனம் சொல்லியது, ‘எமன் எனது வீட்டிற்கு வரவில்லை. பக்கத்து வீட்டிற்குத் தான் வந்திருக்கிறான். இப்பொழுது எனக்கு மரணமில்லை’ என்று எண்ணுகிறார். உடனே தனது உறவினரிடம் எழுதிக் கொடுத்த செக்கைக் ‘கிழித்துப் போடு’ என்று கூறுகிறார். உறவினர் ‘செக் புக்கில் எதுவுமே எழுதவில்லை, எதற்காகக் கிழித்துப் போட வேண்டும்’ என்று கூறுகிறார். இதனைக் கேட்டவுடன் முதலியாருக்கு மனதிலே தோன்றிய எண்ணமே பணம் பிழைத்தது. அதுமட்டுமல்லாமல் தனது முப்பதாண்டுக் கால வாழ்க்கையில் முதலியார் நஷ்டம் அடையும் எந்தத் தொழிலையும் செய்ததில்லை. ஆகையால் தனக்குப் பதிலாக இரண்டு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியது, தன் வீட்டிற்கு எமன் வரவில்லை என்பதால் அத்தொகையை வழங்க வேண்டாம் என்ற எண்ணம் இங்கே முதலியாரின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

    கதையைப் படிக்கும் வாசகர்களுக்கு முதலியார் அந்த இரண்டு லட்ச ரூபாயை இறந்தவனுக்குக் கொடுக்கப்போவதுபோல ஒரு எண்ண உணர்வைத் தோற்றுவித்து விடுகிறார் பி.எஸ்.ராமையா. இறந்தவனின் குடும்ப வாழ்க்கையும் அவனது துன்பங்களும் இவரால் துடைக்கப்பட்டுவிடும் என்ற ஒரு உணர்வைக் கதையின் ஊடாக எடுத்துச் சென்றாலும் இறுதியில் முதலியாரின் மனப்போக்குத் தனது பணத்தைப் பாதுகாப்பதில் இருப்பதைக் கதை ஆசிரியர் பதிவு செய்யும்போது வாசகனுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்ற உணர்வையும் சிந்தனைச் சிக்கலையும் ஏற்படுத்தி விடுகிறார். இங்கே கதை தொடர்ந்து சிந்திப்பதற்கான சூழலை அமைத்துத் தருகிறது. அந்தவகையில் இக்கதையின் முக்கியத்துவம் வாசகர் மனதில் சிறு பாதிப்பை ஏற்படுத்தி செல்கிறது.

    மரணத்திற்கும் வாழ்க்கைக்குமான போராட்டத்தில் மனித மனமானது தனது கடந்த கால வாழ்க்கையை எப்படி எல்லாம் அசை போடுகிறது என்பதையும் இவ்வளவு காலத்தில் கட்டமைத்த ஒரு பொருளாதார வாழ்க்கை சிதையாமல் அதைப் பாதுகாப்பதற்கான எண்ண ஓட்டங்களும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏற்படும் எதார்த்தமான சூழல் தான். அத்தகைய ஒரு எதார்த்த சூழலை இக்கதையில் பதிவு செய்திருக்கிறார் பி.எஸ்.ராமையா. ஆனால் கதையின் முடிவானது மனித இயல்பை லட்சியவாத போக்கிற்குக் கொண்டு செல்லாமல் எதார்த்த நிலைக்கு ஏற்றவகையில் முடித்திருப்பது சிறப்பானதாக அமைந்துள்ளது. பி.எஸ்.ராமையா இக்கதையை முடிக்கும்போது முதலியாரை ஒரு தியாகச் செம்மலாக மாற்றியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் ஒரு வியாபாரியின் என்ன போக்கிற்கு ஏற்ப இக்கதையை நிறைவு செய்திருப்பது கதாபாத்திரங்களின் செயல்பாடுகளில் கதையாசிரியர் தலையிடக்கூடாது என்கிற செயல்பாடு இங்கே சிந்திக்கத்தக்கது.

    கதையின் கட்டமைப்பு மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. வாசகனை எந்த இடத்திலும் விலகிச் செல்லாமல் கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் சூழலோடு கதை நகர்ந்து செல்கிறது. மரபான சிந்தனைப் போக்கில் வாசகனைக் கதையோடு கட்டிப்போடும் ஆற்றல் இக்கதைக்கு இருக்கிறது. இவரின் மொழிநடையும் வாசகனுக்கு எந்த வாசிப்புத் தடையும் இல்லாமல் நீரோடையாகச் செல்வதை உணர முடிகிறது.

    பி.எஸ்.ராமையா மணிக்கொடியில்  அதிகமான கதைகளை எழுதியிருக்கிறார். ஆனால் இவரின் பல கதைகள் இன்றைய சிறுகதை வாசிப்பிற்கு ஏற்றதாக அமையவில்லை என்றாலும் சிறுகதை வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் அக்கதைகளின் இருப்புக் காத்திரமான பங்களிப்பைச் செய்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஒரு காலகட்டத்தின் சிறுகதை வெளிப்பாட்டுப் பண்பை அறிந்து கொள்ள முயலும்போது பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பங்களிப்புத் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

    Share
  • இலக்கியங்களில் உயிரினங்கள்

    இலக்கியங்களில் உயிரினங்கள்

    கௌசி, ஜெர்மனி

    மனிதன் மட்டுமே அறிவார்ந்த பிறவி என்று எம்மில் பலர் நினைத்திருக்கின்றோம். விலங்குகள், பறவைகள் தமக்கென கொள்கை, அறிவார்ந்த தன்மைகள் கொண்டுள்ளன. Olympian bats என்று சொல்லப்படும் வெளவாள்கள் பிரித்தானியாவில் இருந்து ரஷ்யாவுக்கு 2018 கிலோ மீற்றர் பறந்து போயிருக்கின்றதாம். இவை காலநிலை பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன என அறிவியலாளர்கள் எடுத்துரைக்கின்றார்கள். ஒரு பறவை மனிதன், விலங்குகளுடைய தலைமயிரை எடுத்து பிறக்கப் போகும்  குஞ்சுக்காக கூடு கட்டுகின்றது. பஞ்சுமெத்தை தேடிக் குஞ்சுக்குப் பஞ்சணை அமைக்கின்றது.  இதேபோல் புலி இறந்த உடலை உண்ணாது. பசித்தாலும் புல்லைத் தின்னாது. யானை பசித்தாலும் மாமிசம் உண்ணாது. சிங்கம் தன் பசிக்கு மேலதிகமாக வேட்டையாடிய மிருகத்தை உண்ணாது. மிகுதியை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடும். ஆனால், புலி வேட்டையாடி கொன்ற தன்னுடைய இரையை இழுத்துச் சென்று தன்னுடைய குகையில் வைத்திருந்து அழுகிப் புழுத்துப் போனாலும் திரும்பத் திரும்ப அதை உண்ணும்.

    “ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்
     ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய
     இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை
     நாம நல்லராக்  கதிர்பட உமிழ்ந்த
     மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்
     வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை
     உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி”  

    என்னும் அகநானூற்று 72 ஆவது பாடல் தெளிவுபடுத்துகின்றது.

    இவ்வாறு பண்புகள் கொண்ட உயிரினங்களை இலக்கியங்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றன. புலவர்கள் தாம் எடுத்துக் கொண்ட பொருளை விளக்குவதற்கு உவமையாக பிற பொருளை எடுத்துக் காட்டுவது வழக்கம். அவற்றில் பல இரசனைகளும், அறிவியல், தகவல்களும் காணக்கிடக்கின்றன.

    சங்க காலப் புலவர்களில் ஒருவர் சத்திமுத்தப் புலவர்;. சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று பாண்டியமன்னனை கண்டு அவரைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற மதுரைக்கு வந்தார். வருகின்ற வழியிலே குளத்தங்கரையில் குளிரில் வாடிக் கொண்டிருந்தபோது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல இப்பாடலைப் பாடுகின்றார். இப்பாடல் சங்கப்பாடல்களில புறநானூற்றுத் தொகுப்பிலே காணக்கிடக்கிறது.

    “நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
    நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
    வடதிசைக்கு ஏகுவீராயின்
    எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
    நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
    பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
    எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
    ஆடையின்றி வாடையில் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்தி
    காலது கொண்டு மேலது தழீஇப்
    பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனம் எனுமே”

    முதலிலே ஒரு ஏவல் செய்ய வேண்டும் என்றால், அவர்களை புகழ்ந்து தள்ள வேண்டும். அந்தப் பாணியிலேயே நாரைக் கொக்கின் வாய் பனங்கிழங்கைப் போன்று நுனிப்பகுதி கூராக இருக்கின்றதாகவும் பவளம் போன்ற நிறத்தில் இருப்பதாகவும், கால்கள் சிவந்த நிறத்தில் அழகு செய்வதாகவும் புகழ்ந்து தள்ளுகின்றார். அதன் பின் நீ போகின்ற பாதை தானே என்பது போலவும் திருத்தல யாத்திரை செல்பவர்கள் தம்முடைய மனைவியுடன் தெப்பக் குளங்களிலே நீராடிச் செல்வது வழக்கம். அதனால், நீ உன் மனைவியுடன் தென் திசையில் உள்ள கன்னியாகுமரியில் நீராடிய பின் வட திசைக்கு வந்து காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்மையாரையும் வணங்கி தலயாத்திரை முடிக்கும் சமயத்திலே திரும்பும் போது மதுரையில் மழைநீர் வடிந்த ஓலை வீட்டுச் சுவரிலே பல்லி எப்போது நல்ல செய்தி சொல்லும் என்று காத்துக் கிடக்கின்ற என் மனைவியிடம் ஆடை இல்லாமல் வாடைக்காற்றிலே மெலிந்து கைகளால் உடம்பைப் பற்றிக் கொண்டு கால்களால் உடலைத் தழுவியபடி பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும் உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள். என நாரையைத் தூது அனுப்புவதாக இப்பாடல் வருகின்றது.

    பல்லி சொல்லுதல் நல்ல சகுனம் என்பது தமிழர்கள் நம்பிக்கை. இந்நம்பிக்கையையும், நாரை நீண்ட தூரப் பயணம் செய்யும் என்னும் செய்தியையும், சிறிய துளையூடாக பார்வையைச் செலுத்தக்கூடிய திறனை நாரைக் கொக்கு பெற்றிருக்கின்றது என்னும் அறிவியல் உண்மையையும் இப்பாடல் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.  இதனாலேயே வீட்டினுள் கூரையைப் பார்த்திருக்கும் தன் மனைவியை இந்நாரை கண்டு கொள்ளும், இச்செய்தியைக் கொண்டு சொல்லும் என்று தூதாக நாரையை சத்திமுத்தப் புலவர் அனுப்புகின்றார்.

    குறிஞ்சி நிலத்திலே விலங்காக குரங்கும், பறவையாக மயிலும். முல்லைநிலத்திலே விலங்காக கரடி, முயல் போன்றனவும், பறவையாகக் கிளியும். மருத நிலத்து விலங்காக எருமை பறவையாக நாரை, நெய்தல் நிலத்து மீன், கடற்காகம், பாலை நிலத்து யானை, கழுகு போன்ற உயிரினங்களை வகைப்படுத்திய பாடல்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றன. இதேபோல சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும் உயிரினங்களை தம்மிடம் பாடற்சுவையூட்ட பாவலர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

    நளன், தமயந்தியைக் காட்டில் விட்டுச் செல்கின்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைப் பாடப்புகுந்த புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக தற்குறிப்பேற்ற அணியிலே கூறுகிறார்.

    “தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
    கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
    வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
    கூவினவே கோழிக் குலம்”

    மூவேந்தர் சேர,சோழ, பாண்டியனைப் பற்றி மூன்று தொள்ளாயிரம் பாடல்களைப் பாடியதாக முத்தொள்ளாயிரம் சொல்லப்படுகின்றது. இப்பாடல்கள் முழுவதும் வெண்பாக்களால் ஆனவை. அதில் ஒரு பாடல்

    “அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
    வெள்ளந் தீப்பட்டதென வெரீஇப் புள்ளினந்தம்
    கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ!
    நச்சிலைவேற் கோக்கோதை நாடு!”

    சேர மன்னன் நாட்டிலே போரே ஏற்படுவதில்லை. ஒரு நாட்டுடன் போரிடும் வீரர்கள் அந்த நாட்டைக் கொளுத்தி அதாவது தற்போது அணுகுண்டு வீசி அழிப்பது போல் அந்நாட்டு ஊர்களை, வயல்களை அழித்து, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி ஆரவாரம் செய்ய வைப்பார். ஆனால், சேர மன்னன் ஆளுகின்ற நாட்டிலே இவ்வாறான ஆரவாரம் ஏற்படுவதில்லை. அம்மன்னன் நச்சுத் தோய்த்த இலைப்பரப்பை உடைய வேலேந்தியவன். அதனால், அவனுக்குப் பயந்த எதிரிகள், கொள்ளையர்கள் அந்நாட்டில் இல்லை. அதனால், அச்சத்தால் எந்தவித ஆரவாரமும் இருந்ததில்லை. ஆனால், அங்குள்ள வயல்நீரிலும், அதன் கரைகளிலும் வாழுகின்ற பறவைகள் அந்த வயல்களிலே பூத்திரிக்கும் ஆம்பல் மலர்களைக் கண்டு வயலிலே தீப்பிடித்து விட்டது என்று பயந்து ஆரவாரத்துடன் அலைந்தனவாம். அதுமட்டுமல்ல இதனால், தம் குஞ்சுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சி அவற்றைத் தம்முடைய கை போன்ற சிறகுகளால் அணைத்து மறைத்துக் கொள்ளுமாம்.

    மனித இனங்கள் மட்டுமல்ல பறவை விலங்குகள் கூட தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கின்றன. இங்கிலாந்தில் Dover என்னும் இடத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய தொடர்வீட்டு மாடியிலே ஒரு Gull என்னும் பறவை கூடுகட்டியிருந்தது. அந்த வீட்டை வாங்கிய மனிதர்களை வரவிடாமல் துரத்திக் கொத்தியபடி விரட்டியது. அங்குள்ள முட்டை குஞ்சி பொரித்து குஞ்சுப் பறவை பறந்த பின்தான் அங்கு செல்லக்கூடியதாக இருந்தது.

    குரங்குக்கும் மனிதர்களுக்கும் இடையிலே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. குரங்கில் இருந்தே மனிதன் வந்தான் என்று பரிணாமக் கோட்பாடு கூறுகின்றது. ஜெர்மனி வூப்பற்றால் நகரத்து மிருகக்காட்சிச்சாலையிலே ஒரு குரங்கு தான் இருக்கும் இடத்திற்கு ஒரு சாக்குத் துணியை எடுத்துக் கொண்டு போய் போட்டு அதன்மேலேதான் இருக்கும். குரங்கு தன் குட்டிக்கு பேன் பார்க்கும் காட்சியை நாம் இலங்கையில் அதிகமாகக் கண்டிருக்கின்றோம். இக்குரங்குகள் பற்றிய பல இலக்கியச் சுவை மிகுந்து பாடல்கள் எம்மால் அறியக்கிடக்கின்றன.

    நற்றிணை 151 ஆவது பாடலிலே

    மிளகுக் கொடி படர்ந்திருக்கும் மலையடுக்கத்தை, பெண் குரங்கும், ஆண்குரங்குக்கும் புணரும் இடமாக சங்க இலக்கியத்திலே காட்டப்பட்டுள்ளது. ஆண்குரங்கும் மந்தியும் களவியில் ஈடுபட்டுக் கொண்ட பின் குரங்குக் கூட்டங்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, மரத்தின் மீது ஏறி அங்கே இருக்கும் ஆழமான சுனைநீரில் தன் உருவத்தைப் பார்த்துக் கலைந்து கிடக்கும் தன் தலை முடியைப் பெண்குரங்கு திருத்திக்கொள்ளுமாம். இக்காலப் பெண்கள் கண்ணாடி பார்க்கும் பழக்கத்தைப் போல் அக்காலப் பெண்குரங்குகள் சுனைநீரைக் கண்ணாடியாகப் பாவித்திருக்கின்றன.

    “கடுவன், முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
    கறிவளர் அடுக்கத்து கள்வினிற் புணர்ந்த
    செம்முக மந்தி செல்குறி கருங்காற்
    பொன்னினர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்
    குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கி கவிழ்ந்து தன்
    புன்தலைப் பாறு மயிர் திருத்தும்”

    காதல் கணவன் இறந்தால் தற்கொலை செய்கின்ற மனிதர்களைக் காணுகின்றோம். ஆனால், தன் கணவன் இறந்த பின் குட்டிகளைத் தன்னுடைய சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மலையேறித் தற்கொலை செய்து கொண்ட ஒரு குரங்கு பற்றி குறுந்தொகை 66 ஆவது பாடலிலே காணுகின்றோம்.

    “கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
    கைம்மை உய்யாக் காமர் மந்தி,
    கல்லா வன்புறழ் கிளைமுதற் சேர்த்தி
    ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்”

    திருக்குற்றாலக்குறவஞ்சியிலே ஒரு பாடல் குரங்குகளின் காதலை எடுத்துக்காட்டுகின்றது. ஆண் குரங்குகள் பெண்குரங்குக்கு பழங்களைப் பறித்து வந்து கொடுத்துத் தழுவுகின்றன. இச்சமயத்திலே பெண்குரங்கு சில பழங்களை கீழே சிந்துகின்றன. அச்சிந்தும் கனிகளை தேவர்கள் கேட்பார்கள் வேடர்கள் தேவர்களை கண்களால் பார்ப்பார்கள். என்று இப்பாடல் செல்கின்றது.

    “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
    மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
    கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
    தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
    செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
    கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
    குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே”

    இவ்வாறு மனிதர்களை விட பிற உயிரியங்கள் எவ்வாறு சிறப்புடையவை என்பதனை ஒளவையார் சோழ மன்னனிடம் பாடிய பாடல் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

    “வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்
    தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
    வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்
    எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.”

    குருவியின் கூடு, கறையான் புற்று, தேன்கூடு, சிலந்திவலை போன்றவை யாராலும் செய்ய முடியாது. அதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. எனவே அறிவில் குறைந்தோர் என்று  எண்ணும் யாம் உயிரினங்களின் சிறப்புக்கள் பற்றி அறியப் புகுந்தால் எண்ணிலங்காத சான்றுகள் கடலிலும், வானிலும், தரையிலும் அறியக்கூடியதாக இருக்கின்றன.

    Share
  • Face is not the Index of the Mind

    Face is not the Index of the Mind

    Baskar Seshadri

    I used to see that lady very often in the Mada streets of Mylapore and she was around forty years old. She will speak to herself and wander here and there with a bag on her shoulders. Once when I offered some food months back she simply declined to accept and went about her work. She used to be very rough on everyone and try always to be agitated.

    She is very slightly imbalanced.

    One day when i was shopping in a pan shop she came straight and told me that she wanted to get a D T Next. (This English daily costs Rs Two) She took the paper and walked away.

    Just recently when I was there in the pan shop she started narrating that she was a close family member of A Thangavel Nadar and sons and she is in penury since she was denied the property by some family members. I don’t know how far it’s true.

    Then she spoke in a simple blemish-less English for about half a minute about her and moved on with a smile .I was wonder struck and the very opinion that all like her who are on Road are for alms . It’s not to be.

    I am working as to how I could help her with some assistance one of these days. She is our Fellow citizen and she deserves what all we deserve. The equality is the basis of life and we should nourish that. Since she is a middle aged woman I have avoided her photo. I am sure you may come across her one of these days in the vicinity of Mada streets.

    Share
  • குறளின் கதிர்களாய்…(363)

    குறளின் கதிர்களாய்…(363)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(363)

    பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத்
    தல்ல லுழப்பிக்குஞ் சூது.

    – திருக்குறள் – 938 (சூது)

    புதுக் கவிதையில்

    சூதாட்டம்
    கைப்பொருள் அழித்துப்
    பொய்சொல்ல வைத்து
    மனதில் தோன்றும்
    அருளையும் அழித்துவிடும்,
    அதனால்
    இம்மை மறுமை
    இன்பங்களைத் தடுத்தே
    துன்பத்தில்
    துடிக்க வைத்திடுமே…!

    குறும்பாவில்

    பொருளழித்துப் பொய்செல்ல வைத்து
    மனத்தகத்தே அறமதைக் கெடுத்து, சூது
    இருமையிலும் துன்பமே தரும்…!

    மரபுக் கவிதையில்

    உள்ள பொருளை அழித்துவிட்டே
    உண்மை மறந்து பொய்சொல்லும்
    கள்ளத் தனமும் கற்கவைத்து
    கனிந்த இதயம் காட்டுகின்ற
    உள்ள அறத்தைக் கெடுத்தேதான்
    உலகில் இம்மை மறுமையிலும்
    கொள்ளா அளவில் இடர்தருமே
    கொடிய பழக்கம் சூததுவே…!

    லிமரைக்கூ

    கொடிய பழக்கம் சூது,
    பொருளழித்துப் பொய்யனாக்கி மனவறம் கெடுத்துத்
    துன்பமே தந்திடும் தீது…!

    கிராமிய பாணியில்

    வேண்டாம் வேண்டாம்
    சூதாட்டம் வேண்டாம்,
    வேதன தந்திடும்
    சூதாட்டமே வேண்டாம்..

    அது
    கையில உள்ள
    காசயெல்லாம் அழிச்சி
    பொய்சொல்ல வச்சி,
    மனசுல வருற
    எரக்கமே இல்லாமக் கெடுத்து
    ஒலக வாழ்க்கயிலயும் அப்புறமும்
    இன்பமே இல்லாம ஆக்கித்
    துன்பத்தயே தந்திடுமே..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    சூதாட்டம் வேண்டாம்,
    வேதன தந்திடும்
    சூதாட்டமே வேண்டாம்…!

    Share
  • பாரதி வேண்டிய சுதந்திர நாள் | ஷைலஜா பாடல்

    பாரதி வேண்டிய சுதந்திர நாள் | ஷைலஜா பாடல்

    கவிதாயினி ஷைலஜா இயற்றிய ‘பாரதி வேண்டிய சுதந்திர நாள்’ என்ற பாடலைத் திருமதி நாகி, திருமதி பானு ஆகியோர், இனிய குரலெடுத்துப் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share