Blog

  • பேரழகு கொஞ்சும் பெல்ஜியம் மான்கள்

    பேரழகு கொஞ்சும் பெல்ஜியம் மான்கள்

    பெல்ஜியத்தில் வசிக்கும் கிறிஸ் வேய்னான்ட்ஸின் தோட்டத்தில் அவர் வளர்க்கும் மான்கள். எழுத்தாளர் மாதவன் இளங்கோ, அங்கே சென்றபோது செல்லம் கொஞ்சிய பேரழகுக் காட்சிகள். பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வேப்பம்பழம் உண்ணும் குயில்

    வேப்பம்பழம் உண்ணும் குயில்

    வேப்பம்பழம் மரத்தில் இருக்கும்போதே அதன் தோலைக் கழற்றிப் போட்டு, தொங்கும் கொட்டையை மட்டும் குயில் லாகவமாக லபக் செய்யும் காட்சி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அபிராமவல்லியின் நிறம்

    அபிராமவல்லியின் நிறம்

    அபிராமி அந்தாதியில் அன்னையை மாதுளம்பூ நிறத்தாள் என்று அபிராமி பட்டர் பாடுகிறார்.

    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
    பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை….

    இந்த மாதுளம்பூ நிறம் எப்படி இருக்கும்? இந்தப் பதிவைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • ஜெயந்தி சங்கர் பிறந்து வளர்ந்த கதை

    ஜெயந்தி சங்கர் பிறந்து வளர்ந்த கதை

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 22 வயது வரை தான் பெற்ற அனுபவங்களை, கற்ற கலைகளை, பயணித்த ஊர்களை, சந்தித்த மனிதர்களைப் பற்றி இந்த அமர்வில் பகிர்ந்துகொண்டுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 40 புத்தகங்களை எழுதியவர், எனக்குப் பிடித்த மொழி மலையாளம் எனக் கூறுகிறார். இந்தச் சுவையான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 136 (சார்வரும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 136 (சார்வரும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு:

    மலைமேலிருந்த சிவக்கொழுந்தை நேரில் கண்ட திண்ணனார் மகிழ்ச்சி  வேகத்தால்  அருகில் சென்று  தழுவி முகம்சேர்த்தி நின்றார்; அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது; கண்ணீர் மல்க அப்பெருமான் மேல் பரிவு கொண்டவராய் ‘‘அடியேன் கண் முன் இவ்வாறு உள்ளாரே!’’ என்று நின்றார்;  வேடுவர் வாழும் மலைமேல் யானை, வேங்கை, கரடி ,சிங்கம் திரிகின்ற இடத்தில் துணை புரிவார் யாருமின்றி இப்படி இருக்கலாமா?  என்று மனம் வருந்தினார்; தம் கையிலிருந்த வில் கீழே விழ, ‘’இங்கே இவர்மேல் பச்சிலையும் பூவும் பறித்து இட்டுச் சிதைத்தவர் யார்?’’ என்று கேட்டார்; அருகிருந்த நாணன் ‘’இதை நான் அறிவேன்!  முன்னர் உன் தந்தையுடன் வேட்டையாடிய போது இங்கே வந்தோம்; அப்போது இவரை நீராட்டி இலை, பூ, ஆகியவற்றைச் சூட்டி ,  ஒரு பார்ப்பனர் ஏதோ சொன்னதைக் கண்டோம்; இன்றும் அப்பார்ப்பனரே செய்திருப்பார்!‘’என்றான். திண்ணனார் உள்ளத்தில் அன்பெழுந்தது! அன்புடன் அந்தப் பார்ப்பனர் செய்தவை, திருக்காளத்தி இறைவனுக்கு இனிய செய்கை போலும் என்று எண்ணினார்.தாமும் அதையே செய்ய வேண்டும் என்று அங்கேயே ஆதரவாய் நின்றார்; ‘’இவர் நான் காணத் தனியாய்  இருந்தார்! இவருக்கு உணவூட்ட இறைச்சியிட்டவர் இல்லை! இவரை என்னால் பிரிய இயலாது; என்செய்வேன் ‘’ என்று சிந்தித்து, ‘’இவருக்கு இறைச்சியை நானே கொண்டு வர வேண்டும்!’’ என்று கூறி, அங்கிருந்து செல்வார்; மீண்டும் வருவார்; அரவணைப்பார்; மீண்டும் போகாமல் அன்புடன் நோக்குவார்; கன்றைவிட்டு நீங்கிய பசுவைப்போல் நிற்பார்; ‘’நானே சென்று நல்ல இறைச்சியைக் கொண்டுவந்து கோதற அமைத்து ஊட்டுவேன்!’’ என்பார்; ‘’துணைவரின்றி நீர் இங்கே இருப்பதா? என்று நீங்க மனமில்லை; உங்கள் பசியை எண்ணி இங்கே நிற்கவும் மனமில்லை!’’ என்று கண்ணீருடன் இங்கிருந்து வில்லேந்திப் புறப்பட்டார்.

    பொன்முகலி  ஆற்றை அடைந்த அவரிடம் நாணனுடன் சோலையில் நுழைந்தார். அங்கிருந்த காடன், ‘’தீ மூடிட்டி வைத்துள்ளேன்! வேட்டையாடிய பன்றியின் உறுப்புகளைப்   பாருங்கள்! என் இவ்வளவு தாமதம்?’’ என்றான். உடனே நாணன், ‘’இவர் மலைமேலிருந்த  சிவனை அணைத்துக்கொண்டு. பொந்தினைப் பிடித்துக்கொண்டு விலகாமல் நின்ற உடும்பு போல அங்கேயே நின்றார், அவர் உண்ண  இறைச்சி எடுத்துக் கொண்டு போகவே இங்கு வந்தார்! நம் வேடுவர் குலத்துத் தலைமையை விட்டு நீங்கினார்; அவருக்கே ஆட்பட்டார்!’’ காடன் ‘’என்செய்தாய்? ‘’என்று கேட்டதை உணராமல், பன்றியை  நெருப்பில் வாட்டித் தசையை அம்பில் கோத்து எடுத்துக்கொண்டு, அவற்றை வாயிலிட்டு அதுக்கி , நல்ல  பதத்தில் உள்ளவற்றை ஓர்  இலையை  மடக்கி தொன்னையாக்கி எடுத்து  வைத்துக்  கொண்டார். மற்றோர் ‘’;இவன் என்ன செய்கிறான்? தசையுணவை வாயிலிட்டு  மீண்டும் உமிழ்ந்து, பசியுடையவன் போல, எமக்கும் தராமல் வேண்டாதவற்றை வீசி எறிகின்றான்?,  இவனுக்கு இறைவன் மேல் மயக்கம் வந்து விட்டது! இதனைத் தீர்க்க நாம் வேட்டுவிச்சியுடன் நம் ஏவலரையும் அழைத்து வருவோம்!’’ என்றெண்ணி அகன்றார்.

    வேடர்கள் அகன்றதை நினையாமல், அந்த இலை மடக்கில் ஊன் அமுதை ஏந்தி, இறைவனுக்கு நீராட்ட எண்ணி, நதிநீரை வாய்க்குள் அடக்கிக் கொண்டு, கொய்த பூக்களை சடைமேல் கட்டிக்  கொண்டு, கையில் வில்லேந்தி, மறுகையில் உணவை ஏந்தி எடுத்துக் கொண்டு, ‘’எம்பிரானுக்குப் பசிக்குமே!’’ என்று வருந்தி ஏங்கித் திண்ணனார்  விரைந்து மலைமேல் ஏறினார்.

    ‘’நம் தலைவர் பசியால் வாடினாரே!’’ என்று விரைந்து சென்று சிவலிங்கத் திருமேனி முடிமேல் இருந்த மலர்களைக் காற் செருப்பால் தள்ளி, வாயிலிருந்த அபிடேக நீரை அன்பையே உமிழ்வார் போல முடிமேல் உமிழ்ந்தார்! தலைமேல் சூடி வந்த பூமாலையைச்  சாத்தி, இலை  மடக்கில்  இருந்த ஊன் உணவை இறைவன் எதிரே வைத்தார். கொழுத்த தசைகளை அம்பில் கோத்து, அழலில் காய்ச்சிய ஊனைப்  பல்லிலிட்டு அதுக்கி , நாவால் அதன் சுவையைப்  பார்த்து, ‘’ இந்த இறைச்சி மிகவும் சுவையாய் இருக்கிறது! இறைவனே, அமுது செய்க!’’ என்றார்.

    அப்போது இன்னும் இறைவருக்கு உணவிட வேண்டும் என்ற அவர்தம் ஆசையைக் கண்ட கதிரவன் வணங்கியபடியே மலையில் மறைந்தான்! இரவு நெருங்கவும், ‘’இங்கே கொடிய விலங்குகள் உள்ளன’’ என்றெண்ணி அன்புடன்  கையில் வில்லேந்தி மலைமேல்  இருந்த இறைவன் பக்கத்தில் சிலை போல் நின்றார்! இதனைச் சேக்கிழார் ,

    ‘’சார்வருந் தவங்கள் செய்து முனிவரும்  அமரர் தாமும்
    கார்வரை யடவி சேர்ந்தும்  காணுதற்கு  அரியார் தம்மை
    யார்வம்  முன்பெருக ஆரா அன்பினில்  கண்டு கொண்டே
    நேர்பெற நோக்கி நின்றார் நீளிரு ணீங்கநின்றார்’’

    என்று பாடினார்

    பொருள் :   சார்தற்கரியனவாகிய தவங்களைச் செய்தும், மேகங்கள் தவழும் மலைகளையும் காடுகளையும் சேர்ந்தும், முனிவர்களும் தேவர்கள் தாமும் காணுதற்குஅரியவராகிய சிவபெருமானை ஆசைமுன்னே பெருக ஆராத அன்பினாலே கண்டுகொண்ட படியே நேர்பெற நோக்கி நின்றார்; நீண்ட இருள் நீங்கும்படி நின்றார் (திண்ணனார்).

    விளக்கம்:

    சார்வரும் தவங்கள் – விரதம், யோகம்முதலியன. தவம் – தபித்தல் – வாட்டுதல்  என்ற பொருளில் வந்தது.  இங்கு உடலைவாட்டிப் புலன்களை ஒறுக்கும் முயற்சியிற் செய்யப்படுவனவாகிய சாதனங்களைக் குறித்து நின்றொழிந்தது. அவை வெயிற்காலத்துத் தீயினிடை நிற்றல். குளிர்காலத்து நீரினிடை நிற்றல், இட்டிகளை இயற்றல் முதலியன.

    “மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள், மக்களை மனைவியை
    யொக்கலை ஓரீஇ,
    மனையும் பிறவும்  துறந்து நினைவருங், காடும்  மலையும் புக்குக்
    கோடையில் ,
    கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி, ஐவகை நெருப்பின்
    அழுவத்து நின்றும்,
    மாரி நாளிலும் வார்பனி நாளிலும், நீரிடை மூழ்கி நெடிது
    கிடந்தும்,
    சடையைப் புனைந்தும்  தலையைப் பறித்தும் , உடையைத் துறந்தும்
    உண்ணாது  உழன்றாங்கு
    காயும்  கிழங்கும்  காற்றுதிர்சருகும், வாயுவும்  நீரும்
    வந்தனஅருந்தியுங்,
    களரிலும்  கல்லிலும்  கண்படை கொண்டுத், தளர்வுறும்
    யாக்கையைத் தளர்வித்து
    அம்மை முத்தி யடைவதற் காகத், தம்மைத் தாமே
    சாலவு மொறுப்பர்…

                  – திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (19)

    என்று பட்டினத்தடிகள் இவற்றை விரித்துரைத்தது காண்க.

    முனிவர் – மனனசீல முடையார். அமரர் – சாவா மருந்துண்ணல் முதலியவற்றால் மரணத்தைத் தடுத்து நிற்பவர்  வானோர்; இவர்கள் முதலியோரினும் உயர்ந்த நிலை யுடைமையால் முனிவர் முன் வைக்கப் பட்டனர்.

    வரை அடவி – வரைகளையும் அடவிகளையும். அடவி மரங்கள் அடர்ந்த காடு, தவங்கள் செய்தும் அடவி சேர்ந்தும் என்க. செய்து சேர்த்தும், சேர்ந்து செய்தும், எனக் கூட்டியுரைப்பினுமாம்.

    “புற்று மாய்மர மாய்ப்புனல் காலே யுண்டியாய் அண்ட வாணரும் பிறரும்,
    மற்றி யாருநின் மலரடி காணா மன்ன!”

    என்பது திருவாசகம்.

    காணுதற்கு அரியார் – அருந்தவங்களாலும் காண்டற்கரியார். இவை ஆன்மபோத முனைப்பினாற் செய்யப்படுவன ஆதலின் அரியராயினார். அன்பு மிகுதியால் ஆன்மபோதம் சிவபோதத்துளடங்கி நின்றவழி இறைவர் எளியராய் வெளிப்பட்டருளுவர் என்பதை  எல்லா நூல்களும்  கூறும்.

    “முத்திக் குழன்று முனிவர் குழா நனிவாட –
    அத்திக் கருளிஅடியேனை யாண்டுகொண்டு –
    பத்தி கடலுட் பதித்த பரஞ்சோதி”

    என்பது  திருவாசகக் கருத்து.

    ஆரா அன்பினிற் கண்டுகொண்டே – மேன்மேல் வளர்ந்து மீதூரும் அன்பதனுள் இறைவன் வெளிப்பட, அவனைக் கண்டவண்ணமாகவே.

    “பாசங்கழித்த கண்களால்  அரனுருக் கண்டுகொண்டு”

    என்பது திருவிளையாடற் புராணம்.

    நேர் பெற நோக்குதல் – காண்பானும் காட்சிப் பொருளும் காட்சியும் வேறு தோன்றாமல் ஒன்றாம் வண்ணம் ஊன்றிப்பார்த்தல்.

    நின்றார் – அச்செயலிலே நிலைத்து நின்றனர். மேற்பாட்டில் அகலா நின்றார் என்றதும் காண்க. மேற்பாட்டால் அவர் நின்ற புறச்செயலும், இப்பாட்டால் அவர் நின்ற அகச்செயலும் கூறப்பட்டன.

    நீள் இருள் நீங்க நின்றார் – நீள் இருள் – நீண்டு சென்றதாகிய அவ்விரவு. தலைவனிடத்துப் பணிசெய்யும் அன்புமிகுதி யுடையார்க்கு அந்தப் பணிவிடைக்கும் தமக்கும் இடையில் இடையூறாய்த் தடுத்துநிற்கும் காலம் சிறிதேயாயினும், ஊழிபோல நீண்டுக் காட்டும் என்பது அகத்திணை யினியல்பாம்.

    “மிகுபுலவிப் புனர்ச்சிக்கண் ஊழியாம்  ஒருகணந்தான்;
    அவ்வூழி யொருகணமாம்”

    என்று இதன்இயல்பை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வைத்து ஆசிரியர் சுவைபடக் காட்டுவது காண்க.

    நீங்க நின்றார் – நீள் இருள் நீங்குதலை எதிர்பார்த்து நின்றார்.  “புலரும் படியன் றிரவும்” என்றபடி, இந்நீண்ட விரவு நீங்குவதனையும், பொழுது விடிவதனையும், இறைவனைப் பின்னரும் ஊட்டுவதனையும் எதிர்பார்த்து நின்றனர். இனி, நீள் இருள் நீங்க – அநாதியே பந்தித்து உயிருடன் தொடர்ந்த நீண்ட இருளாகிய ஆணவமலம் நீங்கியதனாலே – முன்னர் அங்கணரது அருட்டிரு நோக்கம்  எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட்டகல நீங்கியதனாலே; நின்றார் – சிவத்தோடொன்றாய் நிலைபெற்றனர் என்ற குறிப்பும் காண்க. ஆணவமலம் நீங்காதவழிக் கறங்கோலைபோல ஆன்மா ஒருவழியில் நில்லாது சுழற்சியுறும்.

    “மலங்களைந் தாற்சுழல் வன்றயி ரிற்பொருமத்துறவே”,

    “வன்மத்திட வுடைந்து, தாழியைப் பாவு தயிர்போற் றளர்ந்தேன்”

    என்ற திருவாசகங்கள் காண்க. ஆதலின் ஆணவமலம் நீங்கியதனால் நின்றார்.

    நீங்க நின்றார் – மேற் பாட்டில் அகலா நின்றார் என்றார்; எவ்வகை நின்றாரெனின்? நேர் பெற நோக்கி நின்றார்; எவ்வளவும் நின்றார் எனின்? நீளிருள் நீங்கு மளவும் நின்றார் என இவ்விரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து பொருள் பொருந்த உரைத்துக் கொள்ள நின்றன.

    நோக்கி நின்றார் …. நீள் இருள் நீங்க நின்றார் – இருள்நீங்க – உயிர்கள் இருளை நீங்க என்று கொண்டு, அவர் நோக்கி நின்றதானால் உலகத்தில் உயிர்கள் அன்பின் நிலைகண்டு ஆணவ இருள் நீங்கி உய்யுமாறு நின்றார் என்றதொரு குறிப்பும் காண்க.

    நீங்கநின்றார் – நின்றாராகிய திண்ணனார் என வினையாலணையும் பெயராக்கிப் பெரிய மலவிருள் அகத்தினின்று நீங்கும்படி நின்றவராகிய திண்ணனார் நேர் பெற நோக்கி நின்றார் என்று பொருள் கூட்டி உரைக்கலாம்.

    இப்பாடலில் முனிவரும் சித்தரும் யோக்கியரும் களவிறந்த நெடுங்காலம் தம் செய்தும் காண வியலாத  பெருமானைத்  திண்ணனார் தவமேதும் செயாமலே  எளிதாக, ஆறாத அன்பினால் மட்டுமே நேரில் கண்டார் என்பதும்,  பெருமானும் இவரைக் கண்டார் என்பதும், இவர்  பக்திக்  குறிப்புக் கொண்டு   நோக்கியபடியே , தம்  மலவிருள் நீங்கும் வரை நின்றார். என்று விளக்கப் பெறுகிறது!

    Share
  • ஜெயந்தி சங்கரின் வீணையிசை – 2

    ஜெயந்தி சங்கரின் வீணையிசை – 2

    ஜெயந்தி சங்கரின் வீணையிசையில் இதோ இன்னொரு ரத்தினம்

    பாடல்: மகாகணபதிம்
    இயற்றியவர்: முத்துசாமி தீக்‌ஷிதர்
    ராகம்: நாட்டை
    தாளம்: ஆதி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பூமகள் ராமச்சந்திரன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    பூமகள் ராமச்சந்திரன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    திருவண்ணாமலையில் ஏழாம் வகுப்புப் படிக்கும் பூமகள் ராமச்சந்திரனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 22

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 22

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதைகளில் உவம மரபு

    முன்னுரை

    ‘மரபுக் கவிதை’ என்னுந் தொடர் யாப்பை மட்டும் உணர்த்துவதாகக் கொண்டு மயங்குவர் பலர். அவர் ஒரு பாட்டைத் திறனாய்வு செய்யத் தொடங்கியவுடனேயே ‘காய் காய் மா மா’ என்று கவிதையைக் கொத்துக் கறியாக்கிவிடுவர். வேட்டியும் புடவையும் எப்படி மரபு சார்ந்ததோ அதுபோலவே  கவிதையின் புறக்கட்டுமானமும் மரபு சார்ந்ததே! இதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் வேட்டியும் புடவையும் மட்டுமே ஒருவனை மனிதனாக்கிவிடுகிறது என்னும் நிலைப்பாட்டை அன்னார் எடுக்கிறபோதுதான் நமக்கு மடையளவு தண்ணீர் அணையளவு பெருகுகிறது. உள்ளடக்கத்தின் பரிமாணம், உத்தியின் புதுமைகள், உவமத்தின் பன்முகப் பரிமாணம் மற்றும் பயன்பாடு, வடிவக் கட்டுமானம் இவை அத்தனையும் கலந்த கலவைதான் மரபு என்பது.  பரத்தையரைப் பற்றியும் பத்தினியைப் பற்றியும் பாடுவது நம் தமிழ் மரபு.  நூன்மரபில் தொடங்கி மரபியலில் தமது நூலை முடித்துக் காட்டியிருக்கும் தொல்காப்பியம் சொல்ல வருவது அதுதான். ‘வாழையடி வாழையென வந்த தமிழ் மரபு’ அது. அந்த மரபு ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியங்களில் உவமத்திலும் உத்தியிலும் குடிகொண்டிருப்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

    தழுவும் தோளும் நழுவும் உள்ளமும்

    நாலடியாரில் நல்ல நூலுக்கு ஒரு உவமத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த உவமம் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

    பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிபட்டுக்
    கற்பவர்க் கெல்லாம் எளிய, நூல்., மற்றும்
    முறிபுரை மேனியர் உள்ளம் போன்று யார்க்கும்
    அறிதற்கு அரிய பொருள்

    என்பது அந்தப் பாட்டு. ஒரு நூல் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்லவரும் பாடல் இது. நூல் மொழியால் எளிமையாகவும் கருத்துக்களால் அரியதாகவும் இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வருகிறது. இதற்கு இந்தப் பாட்டில் விலைமகளிரின் இரண்டு உறுப்புக்கள் உவமங்கள் ஆக்கப்படுகின்றன. ஒன்று அவளுடைய தோள். மற்றொன்று அவளுடைய மனம். முன்னது காணக்கூடியது. பின்னது காட்டலாகாதது. பெறுவது கொள்பவர் என்றதனால் தான் பெற வேண்டியதை மிகச் சரியாகப் பெறும் இயல்புடையவர் என்பது பெறப்படும். பொருளை அவள் பெற்றுக் கொண்டதனால் அவளுடைய தோள் தழுவதற்கு எளிதாகி விடுகிறது. இனி அந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் பொருள் அரிதாக இருத்தல் வேண்டும். ‘அரிது’ என்றால் இதுவரை யாரும் சொல்லாதது. இதுகாறும் அறிந்து கொள்ள இயலாதது. அறிந்து கொள்ளுமாறு அமையாதது.  பெறுதற்கு அரிய பொருள். இந்த அருமை எதனைப் போல் அமைதல் வேண்டுமென்றால் தோள் எளிய விலைமாதரின் உள்ளம் போல் இருத்தல் வேண்டும். ஒரு நூல் கற்பவருக்கு எளிதாக இருக்க வேண்டும். எது போல என்றால் விலை மாதர் தோள்போல. அதே நூற்பொருள் உணர்வதற்கு  அரியதாக  இருத்தல் வேண்டும் எது போல என்றால் விலைமாதர் உள்ளம் போல். இதனால் பொருட்பெண்டிர் உள்ளம் பொருட்கொடுப்பவனிடம் சிக்காமல் நழுவுவதை உணரமுடியும். புறத்தில் எளிமை, அகத்தில் ஆழம் என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் விளக்கலாம்.

    பாரதி பாடல்களில் மரபு

    இதனை வேறுவகையாகவும் விளக்க முடியும். நூலின் சொல்லமைதி  எளிதாக இருக்கலாம். அது உரைக்கும் பொருளமைதி அரிதாக இருத்தல் வேண்டும். பாரதிக்கு இது கைவந்த கலை. பாரதியின் கவிதைகள் மொழியால் எளிமை வாய்ந்தவை. பொருளால் மிகவும் அரிதானவை.

    தேம்பி அழுங்குழந்தை நொண்டி’’

    என்னும் ஒரு வரி போதும். ‘தேம்புதல்’ தெரியும். ‘அழுவது’ தெரியும். ‘குழந்தையும்’ தெரியும். ‘நொண்டியும்’ தெரியும். தேம்பியழுபவனைக் கோழை என்றால் கூட ஏற்கலாம். ஆனால் நொண்டி என்கிறார் பாரதி. கால் இல்லாதவனே நொண்டி  என்பதுதான் உலகம் அறிந்தது. பாரதி இதனை எளிய தமிழ் கொண்டு மாற்றிக் காட்டுகிறான். ‘அழுகின்ற குழந்தை நொண்டி’ ஆனது. எப்படி? ‘தன்னால் முடியும்’ என்ற நம்பிக்கை குறைந்து ‘முடியாமல் போய்விடுமோ’ என்னும் கையற்ற நிலையில் அழுகிற கோழைத்தனம் மனத்துக்குள் வந்து விடுமோ?’ என்னும் அச்சத்தில் ‘அழுகின்ற குழந்தையை நொண்டி’ என்கிறான். மொழிநடை விலைமாதர் தோள் போல் எளிமையாகியிருப்பதையும் பொருள் அவர் உள்ளம் போல் அறிதற்கு அரிதாக இருப்பதையும் காணலாம்.

    துரியோதணன் அவையில் அனைவரும் சபதம் ஏற்கிறார்கள். அர்ச்சுனன் ஏற்கும் சபதத்தில் ஒரு குறிப்பு வருகிறது. அது என்ன குறிப்பு?

    தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு எங்கள்
    சீரிய நண்பன் கண்ணன் கழலாணை
    கார்த்தடங் கண்ணி எந்தேவி அவள்
    கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை!”

    இறைவன் மீதும் வில்லின் மீதும் விஜயன் சபதம் ஏற்றது சரி. ஆனால் பாஞ்சாலியின் கண்ணின்மீது சபதம் ஏற்கிறான். அதுவும் எப்படி வண்ணனை செய்து சபதம் ஏற்கிறான் என்றால் ‘கார்த் தடம் கண்ணி’ என்று அடைகொடுத்துப் பாராட்டிய கண்ணின் மீது சபதம் ஏற்கிறான். இதனைப் படிக்கிறவர்கள் சாதாரணமாகக் கடந்து போய்விடுவார்கள். ஆனால் பாரதியை முழுமையாக உள்வாங்கியவர்கள் ‘புதுமைப்பெண்’ பற்றி முன்னாலே அவன் சொல்லியிருப்பதைக் கவனிப்பார்கள்.

    காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதல்
    பெண்களின் கடைக்கண் பணியிலே

    என்று பெண்ணின் கண்ணசைவு ஆணிடம் உண்டாக்கும் பேராற்றலை உணர்ந்து கொள்ள முடியும். கடைக்கண் என்பது ஒரு வினைவேக மாற்றி. கடைக்கண் பார்வைக்கே இந்த வலிமை என்றால் கார்த்தடங்கண்ணியின் முழுப்பார்வைக்கு எவ்வளவு வலிமை இருந்திருக்கும்? இந்த மரபுத் தாக்கத்தினால்தான் பின்னாலே வந்த பாவேந்தர்,

    கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
    மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்

    என்றும் பாடமுடிகிறது. இத்தகைய மரபு உவமத்திலும் இழைகிறது என்பதுதான் இந்தக் கட்டுரையின்  சாரம்.

    களிறுகளோடு சாயும் கொடிகள்

    களப்போரில் ஈடுபடும் யானைகள் தங்களுடைய அடையாளப் படைக்கொடியைச் சுமந்து கொண்டு செல்லும். களிறு களத்தில் பட்டொழிந்தால் அதன் பருத்துக் கருத்த மேனியில் அந்தக் கொடியும் விழுந்து போர்த்திக் கொள்ளும். பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் காட்சி இது. அப்படியொரு காட்சியைக் கலிங்கத்துப் பரணி காட்டுகிறது,

    சாய்ந்துவிழும் கடகளிற்றின் உடனே சாய்ந்து
    தடங்குருதி மிசைப்படியும் கொடிகள் தாங்கள்
    காந்தருடன் கனல் அமளி அதன்மேல் வைகும்
    கற்புடை மாதரை ஒத்தல் காண்மின் காண்மின்!”

    என்பது அந்தக் காட்சியைச் சித்திரிக்கும் கலிங்கத்துப் பரணி பாடல். இரத்த வெள்ளத்தில் களிறு சாய, அந்தக் களிற்றின் குருதியிலேயே இந்தக் கொடிகளும் சாய்கின்றன. அது எதுபோல் இருக்கிறது என்றால் உடன்கட்டை ஏறும் பத்தினிப் பெண்டிர் தீயில் மூழ்குவதுபோல் இருக்கிறதாம். ‘கனல் அமளி’ என்பதனால் ‘தீயெரி’ என்பது பெறப்படும். களிற்றின் மேல் விழுந்து உயிரைப் போக்கிக் கொள்ளும் ‘அஃறிணைக் கொடிகளுக்குக் கணவனோடு தமது உயிரைப் போக்கிக் கொள்ளும் ‘உயர்திணைப் பெண்கள்’ உவமமாக வந்திருப்பதைக் காணலாம்.

    வாரணத்தைப் பிரியும் வண்டுகள்

    மேலே களத்தில் களிற்றோடு சாய்ந்துவிழும் கொடிகள் கணவனோடு உடனேகும் பத்தினிப்பெண்டிரை நினைவுபடுத்தின என்றால் மதநீர் ஒழுகும் வரை அதனைக் குடித்து மயங்கி யானையோடு உறவாடிய வண்டுகள். மதநீர் நின்றவுடன் யானையை விட்டுப் பிரிந்த நிலையைப் பரத்தையரோடு ஒப்பிடும் பாடலும் கலிங்கத்துப் பரணியில் உண்டு.

    மாமழைபோல் பொழிகின்ற தான வாரி
    மறித்துவிழும் கடகளிற்றை வெறுத்து வானோர்
    பூமழைபோல் பாய்ந்தெழுந்து நிரந்த வண்டு
    பொருட்பெண்டிர் போன்றவையும் காண்மின்! காண்மின்!”

    என்பது அந்தப் பாடல். யானை ஒன்று அதனோடு பறந்த கொடி அதனோடு சாய்ந்து விடுகிறது. யானையிடமிருந்து ஒழுகிய மதநீரைப் பருகித் திரிந்த வண்டுகள் அது அற்று நின்றவுடன் அதனைப் பிரிகிறது. அதனால் அவை பொருள் குறைந்தவுடன் விலகும் விலைமாதராயின. வண்டுகளுக்கு விலைமாதர் உவமமாய் வந்த பாடல் இது. நாலடியாரில் ஒரே நூலின் இருவேறு தன்மைகளுக்கு ஒரே உவமத்தின் இருவேறு பண்புகள் உவமமாக்கப்பட்டன. கலிங்கத்துப் பரணியில் இருவேறு தனித்தனிக் காட்சிகளில் இருவேறு பண்புடையவர்கள் உவமமாக்கப்பட்டனர். இனி வரும் பாடலில் ஒரே பொருளின் இருவேறு பண்புகளுக்கு இருவேறு உவமங்கள் பயன்படுத்தியிருக்கும் பாங்கினை ஆராயலாம்.

    தேவரின் சிந்தாமணியின் எளிமையும் அருமையும்

    தமிழிலக்கியத்தில் தேவரின் சிந்தாமணி பகலில் தோன்றும் நிலவு!. கண் பார்வைக்கு மறைந்த அழகு!. திரை மூடிய சிலை!. சிறையில் மலர்ந்த மலர்! “சிந்தாமணியை ஆராய்வதற்கு என்பால் ஓரளவு தகுதி உண்டு” என்று சொன்னவர் சாதாரண நபர் அல்லர். உ.வே.சா.! அதன் புறமொழி எளிமை. ஆனால் அகக்கட்டுமானம் மிகக் கடுமை. எனவே அதன் நிலைப்பாடு தெய்வத் தன்மை பொருந்தியது என்பது கருத்து. இவற்றையெல்லாம் உள்வாங்கிய கவிஞர் ஒருவர் எழுதுகிறார்.

    கலைதேர்ந்த விலைமாதர்  தொடுதோள் போன்று
                   கற்பார்க் கெல்லாம் மிக்க எளிதாய், அந்த
    விலைமாதர் உள்ளம்போல் திட்ப நுட்ப
                   விளக்கமெலாம் அறிதற்கே அரிதாய் நல்ல
    நிலைமாதர் கற்பனவே சிறந்ததோர் நூல்” 

    சொல்லளவில் எளிமையாயும் பொருளளவில் ஆழ்ந்தும் நுண்ணிதாகவும் இருத்தல் ஒரு நல்ல நூலின் இலக்கணமாம். சொல்லெளிமையும் பொருளருமையும் ஒரு நூலைச் சிறக்கச் செய்யும். பரத்தையரையும் பத்தினிமாரையும் துணிந்து உவமிக்கும் மரபாற்றல் சுரதாவுக்கு இருந்திருக்கிறது.

    நூலின் சிறப்புக்குப் பத்தினிப் பெண்டிரின் கற்பை உவமித்திருக்கும் கவிஞர் எளிமைக்கும் அருமைக்கும் விலைமாதரின் தோளையும் உள்ளத்தையும் உவமித்திருப்பது சிந்தனைக்குரியது. பொருட்பெண்டிராகிய விலைமாதர் எல்லாருக்கும் எளியர். எல்லாவற்றிலும் எளியர். அதனால் நூலின் புற அமைப்புக்கும் பொருண்மைக்கும் விலைமாதர் உவமமாயினர். பிறர் நெஞ்சுபுகாமையே கற்பாதலாலும்,  பிறப்பால் பெண்டிராயினும் கற்பால் உயர் நிலை என்பது பத்தினிப் பெண்டிருக்கே உரியதென்பதால் நூலின் நிலைபேற்றுச் சிறப்புக்குப் பத்தினிப் பெண்டிரின் கற்பும்  உவமமானது.

    நிறைவுரை

    மேலே காட்டப்பட்டிருக்கும் இலக்கிய எடுத்துக்காட்டுக்களை அதாவது உவமப் பகுதிகளை ‘தமிழ்க்கவிதை உவமக்கோட்பாடுகள்’ என்ற அடிப்படையில் ஆராய்ந்தால் அவற்றின் வளர்ச்சிநிலை புரியக்கூடும். ஒருமை மகளிரையும் வரைவின் மகளிரையும் நீதி நூல்கள் பாடிய நிலை மாறி, உவமங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். உடன்பாட்டையும் எதிர்மறையையும் உவம வழியாகவும் உணர்த்தியிருக்கிறார்கள் எனக் கருதலாம். நூலுக்கு உவமமான பொருட்பெண்டிர் வண்டுகளுக்கு உவமமாக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பொருட்பெண்டிரின் புறப்பகட்டு நூலின் புறக்கட்டுமானத்திற்கும் பத்தினியரின் கற்பு நெறி நூலின் நிலைபேற்றுக்கும் ஒப்பீட்டு உவமங்களாக வந்துள்ளன. உவமங்களில் மரபும் பின்பற்றப்படுகிறது. வாழ்க்கை நெறியும் கற்பிக்கப்பட்டுள்ளது.

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(357)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(357)

    பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
    கருமமே கட்டளைக் கல்.

    – திருக்குறள் – 505 (தெரிந்து தெளிதல்)

    புதுக் கவிதையில்...

    கல்வி, அறிவு, ஒழுக்கம்
    குடிப்பிறப்பு போன்றவற்றில்
    மக்களின்
    நற்குணத்தால் வரும் பெருமைக்கும்,
    குற்றங்களால் வரும் சிறுமைக்கும்
    அளவு அறிந்திட,
    அவரவர்
    ஆற்றிடும் செயல்களே
    உரைகல்லாய் ஆகின்றன…!

    குறும்பாவில்...

    மக்களின் உயர்ந்த குணத்தையும்
    சிறுமைக் குணத்தையும் உரசிக் கண்டறிந்திடும்
    உரைகல் அவரவர் செயல்களே…!

    மரபுக் கவிதையில்...

    பொன்னின் மாற்றை யறிந்திடவே
    போட்டே உரசிப் பார்க்கையிலே
    தன்மை காட்டும் உரைகல்லே,
    தரணி வாழ்வில் மாந்தரிலே
    என்றும் நல்ல குணந்தருநல்
    ஏற்றம் மற்றும் குற்றங்கள்
    தன்னால் சிறுமை யறிந்திடவே
    தகுந்த உரைகல் லவர்செயலே…!

    லிமரைக்கூ...

    தரங்காட்டும் உரைகல் பொன்னை,
    செயலதே கல்லதாய்க் காட்டிடும் மாந்தரின்
    சிறுமையுடன் பெருமை தன்னை…!

    கிராமிய பாணியில்...

    ஒரசிப்பாக்கணும் ஒரசிப்பாக்கணும்
    பொன்னோட மாத்து பாக்க
    ஒரகல்லுல ஒரசிப்பாக்கணும்..

    அப்புடித்தான் மனுசன் கதயும்,
    அவனுக்கு
    நல்ல கொணத்தால வரும்
    பெருமைக்கும்,
    குத்தங்களால வரும்
    சிறுமைக்கும்
    அளவு பாக்கிற ஒரகல்லு
    வேற எதுவுமில்ல-
    அவனோட செயல்பாடுதான்..

    தெரிஞ்சிக்கோ
    ஒரசிப்பாக்கணும் ஒரசிப்பாக்கணும்
    பொன்னோட மாத்து பாக்க
    ஒரகல்லுல ஒரசிப்பாக்கணும்…!

    Share
  • நல்ல கூந்தல் பெற – நிர்மலா ராகவன் உடன் ஒரு நேர்காணல்

    நல்ல கூந்தல் பெற – நிர்மலா ராகவன் உடன் ஒரு நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    நல்ல கூந்தல் பெற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைத் தன் நேரடி அனுபவங்கள் வாயிலாக நகைச்சுவையுடன் எடுத்துரைக்கிறார் நிர்மலா ராகவன். முடி வளர, முடி உதிர்வது நிற்க, வழுக்கையிலிருந்து முடி வளர, முடி கெட்டியாக இருக்க, பொடுகு நீங்க… பற்பல குறிப்புகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அமாவாசையன்று இப்படிச் செய்தால் முழங்காலைத் தொடும் அளவுக்கு முடி வளரும் என அவர் சொல்வது ஓர் ஆச்சரியத் தகவல். இந்தப் பயனுள்ள உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அச்சமில்லை! அச்சமில்லை!

    அச்சமில்லை! அச்சமில்லை!

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே – மகாகவி பாரதியுடன் இணைந்து எங்கள் மகன் ஹரி நாராயணனின் வீறுமிகு வீர முழக்கம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 73

    பழகத் தெரிய வேணும் – 73

    நிர்மலா ராகவன்

    குழந்தைகளும் கைத்தொலைபேசியும்

    பெண்களுக்கு இயற்கையாக, மூளையின் இரு பக்கங்களும் ஒரே சமயத்தில் மாறி, மாறி வேலை செய்யும். ஒரு பக்கம் குழந்தை அழ, சமையலையும் அதனுடன் கவனித்துக்கொண்டு, இன்னும் பிற வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்ய முடியும்.

    Lateral thinking (பக்கவாட்டு சிந்தனை) என்னும் இத்திறனைப் பெற ஆண்களுக்குப் புத்தகங்கள் வழிகாட்டுகின்றன.

    தொலைக்காட்சி, கைத்தொலைபேசி போன்று, திரையையே உற்றுப் பார்க்க வைப்பவையோ, இரு பக்க மூளைக்கும் வேலை கொடுப்பதில்லை. அதன் நடுப்பாகத்தைத்தான் உபயோகிக்கின்றன. இதனால் ABSTRACT THINKING குறைந்துவிடுகிறது. அதாவது, எதிரில் இல்லாத பொருளைப் புரிந்துகொள்வது கடினமாகிவிடுகிறது.

    பாலர் பள்ளியில், இரண்டும் இரண்டும் என்பதுபோன்ற எளிதான கூட்டல் கணக்கு போட, கரும்பலகையில் இரு ஆப்பிள்களை வரைந்து காட்டும் நிலை இன்று.

    இதைத் தவிர்க்க, சிறுவயதில் இருபது நிமிடங்களுக்குமேல் இச்சாதனங்களைப் பயன்படுத்த விடுவது நல்லதல்ல.

    சிறுவயதிலிருந்தே, பக்கத்திலிருப்பவர்களுடன் பேசுவதைவிட, எங்கோ ஆயிரக்கணக்கான மைல் தூரத்திலிருக்கும், முகமறியாத `நண்பர்களுடன்’ பேசுவதுதான் பழக்கமாகிவிடுகிறது.

    அவர்களில் எத்தனைபேர் நல்லெண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்? தம் குழந்தைகள் நல்ல நண்பர்களுடன் பழகுகிறார்களா என்று கண்காணிப்பது அவசியமாக இருந்தாலும், கடினமாகிவிடுகிறது.

    தனித்திருந்தால் கற்பனை வளம் பெருகும். ஆனால், இவ்வாறெல்லாம் தனிமையையே நாடுகிற குழந்தைகளுக்குப் பிறருடன் பழகத் தெரிகிறதா என்பது சந்தேகம்தான்.

    தூக்கமே வரதில்லே!

    படுத்துக்கொண்டு கைத்தொலைபேசியை உபயோகித்தால், களைப்பில்லாது பல மணி நேரத்தைச் செலவிடலாம். ஆனால், கண்கள் பழுதாகிவிடுவது என்னவோ உறுதி.

    இரவில் தூங்கப்போகுமுன், படுத்தபடி கைபேசியில் கவனம் செலுத்துகிறவர்கள் விரைவில் தூங்க முயற்சித்தாலும் அது இயலாத காரியமாகிவிடும். ஏதேதோ யோசனைகள் எழும். மிகுந்த ஒளியுடன் இருக்கும் திரை செய்யும் காரியம் அது. இதனால், அடுத்த நாள் பள்ளியில் தூங்கிவிழுவார்கள்.

    அதன் விளைவு?

    பள்ளிக்கூட இடைவேளையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துகிறவர்களின் கற்கும் திறன் குன்றுவதோடு, மன நிலையையும் பாதிக்கப்படுகிறது. நட்பு இருக்கவேண்டிய இடத்தில் முரட்டுத்தனம், இல்லை, அதிகாரம்.

    இச்சாதனத்தைப் பள்ளிக்குக் கொண்டுவரக் கூடாது என்று சில பள்ளிகள் விதித்திருப்பதன் காரணம் இதுதான்.

    `குழந்தைகளின் நச்சரிப்பிலிருந்து தப்பலாம்’ என்று, இரண்டுவயதுக் குழந்தைகளைக்கூட இச்சாதனங்களை உபயோகிக்கப் பழக்கும் பெற்றோர், பதின்ம வயதில் அவர்கள் தம்முடன் அதிகம் பேசுவதில்லையே என்று குறைப்படுவது என்ன நியாயம்!

    மூளையில் பாதிப்பு

    இரு நிமிடங்கள் உபயோகித்தபின், கைத்தொலைபேசியிலிருந்து எழும் வானொலி அலைகள் குழந்தைகளின் மூளையில் ஒரு மணி நேரம்வரை தங்கியிருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மூளை பெரியவர்களைவிட 60% அதிகமாகக் கதிர்வீச்சை உள்வாங்கிக்கொள்கிறதாம். அதனால் மூளையிலும் காதிலும் கட்டிகள் வரக்கூடும்.

    ஐபேட் (I pad) போன்றவற்றைச் சிறுவயதிலேயே உபயோகிக்க ஆரம்பிக்கும் குழந்தைகள் ரோபாட்போன்று இயந்திரகதியில் பேசுகிறார்கள்.

    கணினி, கைத்தொலைப்பேசி போன்றவை இன்று அவசியமானதாக இருந்தாலும், செய்யவேண்டிய வேலைகளை ஒத்திப்போட வைக்கின்றன என்பதுதான் உண்மை.

    `இவற்றை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது,’ என்ற நல்லெண்ணத்துடன் சிறுவர்களைத் தடுத்தால், அழுது, முரட்டுத்தனம் செய்கிறார்களா? அப்படியானால், அவர்களுக்கு இப்பழக்கம் போதை அளிக்கிறது என்று அர்த்தம். ஆரம்பத்திலேயே தவிர்க்கவேண்டும்.

    இப்படிப் பல வேண்டாத விளைவுகளை எப்படித் தவிர்ப்பது?

    நான் பெரியவனாப் பிறந்திருக்கணும்

    எங்கள் குடும்பத்தில், `பத்து வயதுப் பையனுக்கு அரைமணி, ஏழு வயதிற்கு கால்மணி’ என்று நான் பேரன்களுக்கு உத்தரவு போட, “நான் ஏன் மொதல்லே அம்மா வயத்திலிருந்து வரலே?” என்று சின்னவன் சண்டை பிடித்தான்!

    அத்துடன், `புத்தகங்களும் படித்தாக வேண்டும்,’ என்ற கட்டாயத்திற்கு உள்ளாக்கினோம். சிந்தனைவளம் வேறு எப்படித்தான் பெருகும்!

    முந்தைய தலைமுறைகளில், குடும்பத்திலுள்ள பெரியவர்கள் கதை சொன்னார்கள், குரலில் ஏற்ற இறக்கத்துடன்.

    இரவு வேளைகளில், அல்லது உணவருந்தும்போது, பயனுள்ள கதைகள் சொல்வது நன்மையை விளைவிக்கும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

    என்ன நன்மை?

    படிக்கத் தெரியாத வயதில் கதை கேட்பதாலோ, பிறகு சுயமாகப் படிப்பதாலோ, கற்பனாசக்தி வளரும்.

    தம் நலனில் அக்கறைகொண்டு, நேரத்தைச் செலவிடும் பெரியவர்களிடம் அன்பும் மரியாதையும் நிலைக்கும். தம் அன்றாட வாழ்க்கையை அவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.

    வித்தியாசமான பிறரைப் புரிந்துகொள்ளவும் முடியும்.

    குழந்தைகளை விடுங்கள்! அலுவலகத்தில் வேலை செய்யும்போதே கைத்தொலைபேசியில், `புதிதாக என்ன வந்திருக்கிறது?’ என்று இடையிடையே பார்ப்பவர்களின் I.Q (நுண்ணறிவு) பத்து எண்கள் குறைந்துவிடுகிறதாம். மரியுவானா என்று போதைப்பொருளால் விளையும் தீங்கைப்போல் இருமடங்கு!

    இரு காரியங்களை ஒரே சமயத்தில் செய்வது

    புத்தகம் படிக்கும்போதோ, காரோட்டிப் போகையிலோ, கைத்தொலைபேசியில் கண்ணைப் பதித்தால் சக்தி விரயமாவதுடன், கவனமும் குறைந்துவிடும். தெரு விபத்துகள் அதிகரிக்காமல் என்ன ஆகும்?

    எல்லாவற்றிற்கும் ஒரே கருவி

    கைத்தொலைபேசி உபயோகத்தில் வந்ததிலிருந்து, புகைப்படக் கருவிகளுக்கு அவசியம் இல்லாது போயிற்று. மணிக்கட்டில் கட்டிய கைக்கடிகாரத்தைவிட தம் விரல்களுடன் சொந்தம் கொண்டாடும் தொலைபேசியைத்தான் ஆண்கள் பார்க்கிறார்கள், நேரத்தைத் தெரிந்துகொள்ள. தேதி பார்க்க இனி எதற்கு காலண்டர்?

    `என்ன சாப்பிடுகிறோம்?’ என்றே புரியாது, கண் கைத்தொலைபேசியில் நிலைக்கிறது பலருக்கும்.

    “கைத்தொலைபேசி இளைத்துக்கொண்டே வருகிறது. மனிதர்களோ, அதற்கு நேர் எதிரிடை!” என்று புலம்புகிறார் ஒருவர்.

    முகமறியாதவர்களுடன் ஓயாமல் பேசிக்கொண்டும், திரையை வெறித்துக்கொண்டும் இருந்தால், உடற்பயிற்சிக்கு ஏது நேரம்?

    `அதுதான், சாயங்கால வேளைகளில் உலவப்போகிறேனே!’ என்கிறீர்களா?

    அப்போதுகூட, கைத்தொலைபேசி, அதன் பெயருக்கேற்ப, கையைவிட்டு இறங்குவதில்லையே!

    Share
  • கதையும் மொழிதலும் – 3 புதுமைப்பித்தனின் ‘கயிற்றரவு’

    கதையும் மொழிதலும் – 3 புதுமைப்பித்தனின் ‘கயிற்றரவு’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    “காலம் ஒருவனை உயிர்ப்பிக்கிறது புகழ்விக்கிறது உச்சாணிக் கொம்பில் நிலைநிறுத்துகிறது. அதே காலம் அவனைக் குப்பைத்தொட்டியில் வீசி எறிகிறது, காய்ந்த சருகென அனாதையாக்குகிறது “

    மனித வரலாற்றில் அனைத்துச் சிந்தனையாளர்களையும் கவர்ந்த புதிர், காலம். காலக் கோட்பாடு மிகவும் முக்கிய இயங்கு தளமாக எல்லா நிலைகளிலும் இருந்து வந்துள்ளது. இடம், பொருள், காலம் என்ற சிந்தனை பகுத்தறிவின், அறிவியலின் முக்கியப் புள்ளியாக வினையாற்றியுள்ளது. வாழ்க்கை, காலச் சக்கரத்தில் சிக்கி, மனிதர்களை எவ்வாறு பந்தாடுகிறது என்பதை இலக்கியப் படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. காலப் பிரக்ஞை மனிதனுக்கு இருக்கிறதா இல்லையா என்ற வினா, விடையில்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்து சென்ற வாழ்வியல் நிகழ்வுகளின் தொகுப்பாக இலக்கியங்கள் படைக்கப்படும்போது நிகழ்வுகளை இடம், காலம் பற்றிச் சிந்திக்கும் போக்கு இயல்பாக அமைந்துவிடுகிறது. இடத்தைப் பற்றிய நுண்ணுணர்வும் காலத்தைப் பற்றிய அக்கறையும் இலகுவாக வாசகனுக்கு வசப்பட்டுவிடுகின்றன. ஆனால் வாழ்ந்து முடித்த கதைமாந்தர்களுக்கும் அப்படிப்பட்ட ஒன்றாகவே இருந்து வருவதை எண்ணும்போது, காலச் சிந்தனை மற்றும் புரிதலில் பெரும் மாற்றத்தை விளைவிப்பதைத் தொடர்ந்து கவனித்துவர முடிகிறது.

    காலம் என்ற தத்துவத்தைப் புதுமைப்பித்தன் பரமசிவம் பிள்ளையின் மூலம் விவாதத்திற்கு உட்படுத்த முயலும் கதையாக ‘கயிற்றரவு’ அமைந்துள்ளது. கயிறு+அரவு என்ற இரு பெயர்கள் கொண்ட சொல்லாக இது உள்ளது. மனதின் இயக்கமாகக் கயிறு அரவாகவும் அரவு கயிறாகவும் மனம் காட்டும் இந்தத் தத்துவ மரபின் போக்குகளை விவாதித்துச் செல்கிறார். உலகம், உயிர்கள், இறைவன் என்ற முப்பொருள் உண்மையில் இறைவன் தவிர்த்து உலகமும் உயிர்களும் காலப் பிரக்ஞை அற்று இயங்கிக்கொண்டு இருப்பதும் அவ்வியக்கத்தைக் கயிறால் கட்டியிழுக்க மனிதன் மேற்கொண்ட கணக்கே காலம். காலத்தின் பார்வையில் உலகப் பொருட்களைத் தனது சிந்தனைக்கும் அறிவுக்கும் உட்பட்ட செயல்களாகக் கட்டியெழுப்ப எண்ணுகிறான். ஆனால் அனைத்தும் தனது கருவூரை நோக்கியே பயணப்படுகின்ற வாழ்வியல் நிலையைச் சற்று உரத்துக் கூறுவதாகப் பரமசிவம் பிள்ளை படைக்கப்பட்டுள்ளார்.

    ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பரமசிவம் பிள்ளை பனை மரநிழலில் வெளிக்குப் போய்கொண்டு இருக்கிறார். சுதந்திரச் சுற்றுப்புற வெளி தத்துவார்த்தச் சிந்தனைக்கு அவரைக் கொண்டு செல்கிறது. ஒவ்வொரு பொருளும் எப்படி இருப்பதும் இல்லாமல் போவதுமான செயல்பாடுகளை எண்ணும்போது விசாரணை, தன்னை நோக்கித் திரும்புகிறது. தனது வாழ்க்கை நோக்கி பயணப்பட்டு நிலையாமையின் பெரும் தத்துவமாக வளர்ந்து நிற்கிறார். நொடிகள், நிமிடங்கள், மணிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள், யுகங்கள் என்று காலத்தின் கருவறைக்குப் பயணப்பட்டுத் தனது வாழ்க்கையில் முடிக்கிறார்.

    வெயில் தாளாமல் அருகில் இருக்கும் விடலிப் பனை நிழலில் போய்க் குந்துகிறார். சற்றுச் செளகரியமாக உணர்கிறார். மனதில் ஒரு நிம்மதி ஏற்படுகிறது. இது உயரம் குறைந்த விடலிப்பனை நல்ல நிழல். இதோ அந்த இடத்தில் மூத்த பனை இருந்தது. போன ஆடிக் காற்றில் சாய்ந்துவிட்டது. இப்போது அது இருந்ததற்கான இடம் தென்படவே இல்லை. காலம் அனைத்தையும் தன்னுள் கரைத்துக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. விழுந்த பனை  விட்டமாக, விறகாக மாறி இறுதியில் வந்த இடத்திலேயே மீண்டும் ஐக்கியமாகி விடுகிறது.

    ஆற்றங்கரைப் படிக்கட்டு அழகாக அடுக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. அழகியநம்பியா பிள்ளை காலையில் வந்து துணி துவைத்துக் குளித்துத் திருநீறு அணிந்துகொண்டு வீடு திரும்பும் அதே இடம், இன்று தூர்ந்துபோய் உள்ளது. காலமாற்றத்தில் இதன் தேவை இல்லாமல் போனது. காற்று அடிக்கிறது, மழை பெய்கிறது, ஆற்றில் வெள்ளம் வருகிறது ஆனால் அன்றைய வளமைகள் இன்று இல்லாமல் போய்விட்டன. அணுக்கூட்டத்தின் தொகுப்பில் ஓரணு வீரியம் பெற்று உந்தித் தள்ளி தன் முனைப்பில் ஆற்றல் கொண்டு கருவூர் அடைந்து உயிர் பெற்றது என்று தனது பிறப்பைக் கூறுகிறார். இங்குப் புதுமைப்பித்தனின் தத்துவ விசாரணை, மேன்மை கொள்கிறது. உயிர்களின் தோற்றமும் வாழ்வியல் கற்றலும் மனிதனுக்கு வாழச் சொல்லிக் கொடுக்கின்றன. தானும் அப்படியே வளர்ந்து நிற்பதாக நினைவுகூர்கிறார்.

    கற்றலின் கற்பித்தலின் ஊற்றாகப் பெருவெள்ளத்தை அழகியநம்பியா பிள்ளையின் உணர்ச்சிப்பெருக்கில் சொல்லிச் செய்கிறார். நம்பியா பிள்ளை தனது மகனுக்குப் பெயரைச் சொல்லிக் கொடுக்கிறார். தனது பெயர் நம்பியா பிள்ளை என்றும் உனது பெயர் பரமசிவம் என்றும். ஆனால் குழந்தையைக் கைகளில் தூக்கிக்கொண்டு நம்பியா பிள்ளை யாரு? என்று கேட்கும்போது குழந்தை தன் மேல் கை வைத்தது. உடனே ‘முட்டாப்பயலே’ என்று கூறி அதுதான் என்றும் உனது அப்பா என்றும் புரிய வைக்கிறார். பிறகு மீண்டும் கேட்கும்போது குழந்தை சரியாகச் சொல்கிறது. நம்பியா பிள்ளை மகிழ்ச்சியில் திளைக்கிறார். வாழ்க்கை, உறவுகள், தொழில் என்று கற்றுத் தரப்படும் வாழ்க்கையின் நாத தாளங்கள், நெளிவு சுழிவுகளை வியக்கிறார்.

    இவ்வாறு கற்றுக்கொண்ட பாடத்தின் மூலமாகத் தானும் இன்று ஐம்பதைக் கடந்து வாழ்ந்து வருவதை எண்ணுகிறார். காலம் போடும் கோட்டில் யாரும் தப்பிக்க முடியாது. உலகம் கோடானு கோடி ஆண்டுகள்  இயங்கிக்கொண்டே இருக்கிறது. இருக்கும். பரமசிவம் பிள்ளையின் உடல் தளர்ந்துவிட்டது. வாழ்ந்த வீடும் தன்னிலை இழந்து இயற்கைக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறது. விட்டம் விட்டால் பரவெளி தான் உயிர் நீங்கினால் உடல் ஒன்றுமில்லை என்று பரமசிவம் பிள்ளையின் சொற்களாகப் புதுமைப்பித்தன் முன்வைக்கும் கிழக்கத்திய தத்துவ மரபு பெரும் விசாரம் கொண்டது.

    காலத்தின் வெள்ளத்தில் நீந்திக்கொண்டு இருந்த பரமசிவம் பிள்ளைக்கு நிகழ்காலப் பிரக்ஞை இல்லாமல் போய்விட்டது. விடலிப்பனையின் நிழலில் குந்தியிருந்த அவரை அருகில் வந்த பாம்பு தீண்ட, மயங்கி விழுந்தார். அவரது மனம் பாம்பா,கயிறா என்ற வியப்பிலிருந்து விடுபடவில்லை. பாம்பின் விஷம் ஏறி உடல் நோவுற்றுப் படுக்கையானார் பரமசிவம் பிள்ளை. வீட்டில் தேவாரம் பாடத் தொடங்கிவிட்டார்கள். காலின் கட்டைவிரல் தொலைதூரத்திற்குப் பயணம் செய்தது. நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக விட்டு விடுதலை ஆகின. உடல் தனது நீண்ட பற்றைவிட்டு நீங்கியது. உயிர் வந்த இடத்திற்கே சென்று சேர்ந்தது.பரமசிவம் பிள்ளை எங்கிருந்து வந்தாரோ அங்கேயே ஒடுங்கிவிட்டார்.

    புதுமைப்பித்தன், பரமசிவம் பிள்ளையின் மூலமாக உணர்த்த விரும்புவது அவரது வாழ்க்கையில் அனுபவித்த அனைத்துத் துன்பங்களும் துயரங்களும் அவத்தைகளும் இந்த உடம்பும் உயிரும் இருக்கும் காலம் வரைதான். உயிர் சென்றுவிட்டால் உடம்பிற்கு ஏற்படும் அனைத்தும் வெறுமையானது என்ற மரபான தத்துவப் பார்வையும் காலத்தின் வெளியில் மனிதர்கள் சருகுகளாக மக்கிப்போகும் யதார்த்த வாழ்க்கைச் சூழலும் பரமசிவம் பிள்ளையைப் படைக்கத் தூண்டின.  இயற்கையிலிருந்து மனிதன் எத்தகைய மாற்றங்களைச் செய்தாலும் அப்பொருள் மீண்டும் இயற்கையை நோக்கிப் பயணிக்கும் போக்கைக் கதையின் வழியாக வலுவான கதைக் கட்டமைப்பில் கச்சிதமான மொழி ஆளுமையில் கிண்டலும் கேலியும் கலந்து புனைந்துள்ளார்.

    நவீன கதை வடிவில் மரபான வாழ்வியல் தத்துவ விசாரணையை உட்பொதித்துக் கலையாக்கி, சாகசம் செய்து காட்டியுள்ளார் புதுமைப்பித்தன். கதை கூறும் முறையில் ஒரு வேகத்தைக் கட்டி எழுப்புகிறார். தத்துவத்தின் சாறு மிகைப்படாமல் கதை மொழியில் வாசகனை உலவச் செய்துவிடுகிறார். பரமசிவம் பிள்ளையும் அழகிய நம்பியா பிள்ளையும் பனைமரங்களைப் பார்க்கும் போதும் ஆற்றுப் படித்துறையைப் பார்க்கும் போதும் காலப் படிமமாக வந்து போகின்றனர். ஒவ்வொரு வாசகனையும் அகவயமாகத் திரும்பிப் பார்க்கத் தூண்டும் அற்புதக் கதை இது. இக்கதை மணிக்கொடியில் 1938ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

    Share
  • பெல்ஜியத்தில் செர்ரிப் பழ அறுவடை

    பெல்ஜியத்தில் செர்ரிப் பழ அறுவடை

    பெல்ஜியத்தின் தீனன் நகரில் வாழும் எழுத்தாளர் மாதவன் இளங்கோ, தன் வீட்டில் உள்ள பச்சைப் பசேல் செர்ரி மரத்திலிருந்து செக்கச் சிவந்த செர்ரிப் பழங்களை அறுவடை செய்கிறார். உண்ணும்போது மட்டுமில்லை, காணும்போதும் தித்திக்கும் பழங்கள் இவை. கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆண்டவன் அன்பே சக்தி தரும் | பாபநாசம் சிவன் | கிருஷ்ணகுமார்

    ஆண்டவன் அன்பே சக்தி தரும் | பாபநாசம் சிவன் | கிருஷ்ணகுமார்

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘ஆண்டவன் அன்பே சக்தி தரும்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். ஆண்டவன் என்று பொதுவாகக் குறிப்பிட்டிருப்பதால், எல்லா மதங்களை, மார்க்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும். இந்தப் பாடலைக் கேட்டுச் சக்தி பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share