Blog

  • குயிலின் அமுத கானம் – 15

    குயிலின் அமுத கானம் – 15

    இன்று கேட்ட குயிலின் அமுத கானம், நீங்களும் கேட்டு மகிழுங்கள். யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 33

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 33

    -மேகலா இராமமூர்த்தி

    துன்பமென்றால் என்னவென்றே அறியாத இளைஞன், வாலியின் அருமை மைந்தன் அங்கதன். தன் தந்தையை மலர்கள் மலைபோல் குவிந்திருக்கும் படுக்கையில் கண்டிருக்கின்றானேயன்றி இப்போது கிடப்பதுபோலக் குருதிக்கடலில் கிடக்கக் கண்டவனும் இல்லை. ஆதலால் தந்தையின் அவலநிலை அவன் உள்ளம் வாட்டியது; துன்பத் தீ மூட்டியது. அதனைத் தாளமாட்டாது நிலத்தில் வீழ்ந்துகிடக்கும் சந்திரன்மீது விண்மீனொன்று வீழ்ந்ததுபோல் வாலியின் உடல்மீது வீழ்ந்தழுதான் அங்கதன்.

    ”தந்தையே! என் தந்தையே! எழுகின்ற அலைகளையுடைய கடல்சூழந்த இந்த உலகில் எவர்க்கும் செய்கையால் மட்டுமன்றிச் சிந்தையாலும் தீங்கு ஏதும் செய்யாதவன் நீ. அப்படிப்பட்ட உனக்கு இப்படியொரு துன்பம் வந்ததே? உன் முகத்தை நோக்கி அந்தக் கூற்றுவனும் அஞ்சாமல் வந்துவிட்டானே! இனி அந்தக் கூற்றுவனின் வலிமையை அழிக்கவல்லார் ஆருளர்?” என்று கதறினான்.

    எந்தையே எந்தையே இவ் எழு
          திரை வளாகத்து யார்க்கும்
    சிந்தையால் செய்கையால் ஓர்
          தீவினை செய்திலாதாய்
    நொந்தனை அதுதான் நிற்க நின்
          முகம் நோக்கிக் கூற்றம்
    வந்ததே அன்றோ அஞ்சாது ஆர்
          அதன் வலியைத் தீர்ப்பார். (கம்ப: வாலிவதைப் படலம் – 4187)

    வாலியைப் பொறுத்தவரை, தனக்குத் துன்பம் செய்தோர், தன் பகைவர்கள் ஆகியோர் தவிர்த்துத் தன் வலிமையின் காரணமாய்ச் செருக்கடைந்து யார்க்கும் தீங்கு செய்தவன் அல்லன்.

    வாலி சுக்கிரீவன்மீது பகைமை பாராட்டியதும், அவன் மனைவியான உருமையைக் கவர்ந்ததும் தவறான செயல்களாக வாலியால் கருதப்படவில்லையாதலால் அங்கதனும் அவற்றில் குறையேதும் காணவில்லை. எனவே தன் தந்தை மனம் சொல் செயலால் யார்க்கும் எந்தத் தீங்கும் செய்யாதவன் என்றே உறுதியாய்க் கருதினான் அங்கதன்.

    இந்த இடத்தில் சிலப்பதிகாரக் காட்சியொன்று என் நினைவுக்கு வருகின்றது.

    கோவலன் செல்வத்தைத் தொலைத்துத் தான் இலம்பாடு உற்றதற்கு நாணி, தொலைத்த செல்வத்தை மீண்டும் தேடும்பொருட்டுக் கண்ணகியோடும் சமணத் துறவியான கவுந்தியடிகளோடும் மதுரைநோக்கிப் பயணமானான்; அவ் வரலாறு நாமறிந்ததுதான்!

    மதுரையை ஒட்டிய புறஞ்சேரியில் கண்ணகியோடும் கவுந்தியடிகளோடும் கோவலன் தங்கியிருந்தபோது அவனைச் சந்திக்கின்றான் அவனுடைய நெடுநாளைய நண்பனும், பூம்புகாருக்கு அருகிலுள்ள தலைச்செங்காடு எனும் பகுதியைச் சேர்ந்தவனுமான மாடலன் என்னும் மறையவன்.

    கோவலனின் உருவழிந்த தோற்றத்தைக் கண்டு வேதனையுற்ற மாடலன், கோவலன் செய்த அறச் செயல்களையெல்லாம் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டு, ”யானறிந்தவரையில் இப்பிறவியில் நீ செய்தவையெல்லாம் நற்செயல்களே! அவ்வாறிருக்கத் திருமகளையொத்த மாணிக்கத் தளிரான கண்ணகியுடன் நீ தனியே மதுரை நோக்கிப் புறப்பட்டது முற்பிறவியில் செய்த தீவினைப் பயனோ?” என்று வருந்திப் புலம்புகின்றான்.

    ”இம்மைச் செய்தன யானறி நல்வினை
    உம்மைப்
     பயன்கொல் ஒருதனி யுழந்தித்
    திருத்தகு
     மாமணிக் கொழுந்துடன் போந்தது
    விருத்தகோ
     பால நீயென வினவ….” (சிலப்: அடைக்கலக் காதை: 91-94)

    மாதவியின் பொருட்டுக் கோவலன் கண்ணகியைப் பிரிந்ததை மாடலன் ஒரு குறையாகக் கருதவில்லை என்பதையே ”இப்பிறவியில் நீ நன்மையன்றி வேறொன்றும் செய்ததில்லையே” என்று கோவலனை நோக்கி மாடலன் கூறும் சொற்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

    ஆக, ஆடவர்கள் பல பெண்டிரை மணப்பதையோ, மணவுறவைத் தாண்டி பரத்தையரோடு தொடர்பு வைத்துக்கொள்வதையோ அக்காலச் சமூகம் தவறாகவோ குறையாகவோ எண்ணவில்லை என்பதை நாம் அன்றைய இலக்கியங்கள் வாயிலாய்த் தெற்றென உணரமுடிகின்றது.

    இதற்கு விதிவிலக்காக வள்ளுவம் மட்டுமே வரைவின் மகளிரான பரத்தையரின் தொடர்பை ஆடவர் கைக்கொள்வது தவறானது என்று கண்டித்துள்ளமை கருதத்தக்கது.

    கம்பனின் காப்பியத்துக்குத் திரும்புவோம்!

    வாலியின் பெருமைகளை ஒவ்வொன்றாய் எடுத்துச்சொல்லி வேதனையிலாழ்ந்தான் அவனின் அருமை மைந்தன் அங்கதன்.

    ”பஞ்சினும் மெல்லிய அடிகளை உடைய உமையை ஒரு பாகத்தில் வைத்த சிவனாரின் திருவடிகளன்றி வேறெதனையும் வணங்கியறியாத, சிவந்த கரங்களையும் ஆணைச் சக்கரத்தையும் உடைய எந்தாய்! நீ கடைந்து தந்ததனால் அமுதத்தையடைந்து அதனையுண்ட தேவர்கள் அனைவரும் உயிரோடு நிலைத்து வாழ்கின்றார்கள்; ஆனால், அமுதம் ஈந்த நீயோ இறந்தவனானாய்! உன்னைவிட வள்ளன்மை மிக்கோர் இவ்வுலகில் வேறு யாருளர்?” என்று கண்ணீர் வழியத் தன் தந்தையைப் பார்த்து வினவினான்.

    பஞ்சின் மெல் அடியாள் பங்கன்
          பாதுகம் அலாது யாதும்
    அஞ்சலித்து அறியாச் செங் கை
          ஆணையாய் அமரர் யாரும்
    எஞ்சலர் இருந்தார் உன்னால் இன்
          அமுது ஈந்த நீயோ
    துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின்
          யார் சொல்லற்பாலார். (கம்ப: வாலிவதைப் படலம் – 4190)

    வாணாளை நீட்ட உதவும் அமுதனைய அரிய நெல்லிக்கனியைத் தானுண்ணாது, ஔவைக்கு ஈந்தான் அதியன். அதனால் நனிமகிழ்ந்த ஔவை, அவனை நீலமணிமிடற்று அண்ணலான சிவனாரைப் போல் நீடுவாழ்கென வாழ்த்தினார் என்கின்றது புறநானூறு.

    …பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
    நீலமணி மிடற்று ஒருவன் போல
    மன்னுக பெரும நீயே தொன்நிலைப்
    பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
    சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
    ஆதல் நின்னகத்து அடக்கிச்
    சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே
    . (புறம் – 91)

    வாலியோ இன்னும் ஒருபடி மேலேபோய்த் தான் கடைந்தெடுத்த சாவா மருந்தான அமுதத்தைத் தானுண்ணாது தேவர்கட்கு ஈந்திருக்கின்றான். தன்னலமற்ற அவன் செயல், வள்ளல்களுள் தலைசிறந்தவன் அவன் என்பதற்குச் சான்றாகின்றது.

    அங்கதன் கலங்கியழுவதைக் கண்டு மனம்பொறாத வாலி அவனை அணைத்துக்கொண்டு, ”மைந்த!  மூவுலகைச் சேர்ந்தவர்க்கும் இறத்தலும் பிறத்தலும் தவிர்க்க ஒண்ணாதவை. நான் முன்செய்த தவப் பயனால் அனைத்தும் தோன்றி மறைவதைத் தான் அழியாமல் கண்டு சாட்சியாய் நிற்கும் வீரனான இராமனால் வீடுபேறுற்றேன். இந்நன்மையை எனக்குச் செய்த இராமனை நீ போற்ற வேண்டும்; அவனுக்குத் தொண்டாற்ற வேண்டும்” என்றான்.

    அதனைத் தொடர்ந்து இராமனை நோக்கிய வாலி, ”நிருதர் சேனை எனும் பஞ்சுமூட்டைக்கு நெருப்புப் போன்றவனும் செயலில் தூய்மை உடையவனுமான இந்த அங்கதன் இனி நின் அடைக்கலப் பொருளாவான்!” என்றுரைத்து இராமனிடம் தன்னருமை மைந்தனை ஒப்படைத்தான்.

    தந்தையின் சொற்களையேற்ற அங்கதன், இராமனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்க, அவ் அளவில் அவனைத் தன் அடைக்கலமாக ஏற்றுக்கொண்ட, தாமரைக் கண்ணனான, இராமன், தன்னுடைய உடைவாளை அங்கதனிடம் நீட்டியவண்ணம், ”நீ என்னுடைய செயலைப் பொறுத்துக் கொள்வாய்!” என்றான். அதனைக் கேட்ட ஏழுலகங்களும் இராமனைப் போற்றின; இவற்றையெல்லாம் கண்டுகொண்டிருந்த வாலி தன் மைந்தனைத் தக்கவனிடம் அடைக்கலப்படுத்திவிட்ட நிறைவில் இவ்வுலகம் நீத்து அப்புறத்து உலகம் எய்தினான்.

    தன் அடி தாழ்தலோடும்
         தாமரைத் தடங் கணானும்
    பொன் உடைவாளை நீட்டி நீ
          இது பொறுத்தி என்றான்
    என்னலும் உலகம் ஏழும்
          ஏத்தின இறந்து வாலி
    அந் நிலை துறந்து வானுக்கு
          அப் புறத்து உலகன் ஆனான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4197)

    இப்பாடலில், ’நீ இது பொறுத்தி’ என்று சொல்லி இராமன் அங்கதனிடம் தன் உடைவாளைக் கொடுக்கின்றான். இதனை எண்ணிப் பார்க்கையில், வாலியை மறைந்திருந்து கொன்றது இராமனின் மனத்துக்கு ஓர் உறுத்தலாகவே இருந்திருக்கவேண்டும் என்பதையும் அதற்குக் கழுவாய் தேடும் வகையிலேயே வாலி மைந்தனான அங்கதனிடம், ”இதனைப் பொறுத்துக்கொள்” என்று வருத்தம் தெரிவித்து அவனை இளவரசனாக அங்கீகரிக்கும் வகையில் தன் உடைவாளைக் கொடுத்தான் என்றும் நினைய வேண்டியுள்ளது.

    வாலி இராமனிடம் அங்கதனை அடைக்கலமாய் அளித்ததும், அவனுக்கு
    இராமன் தன்னுடைய உடைவாளை அளித்ததுமாகிய செய்திகள் வால்மீகி இராமாயணம், அத்யாத்ம இராமாயணம் போன்ற வடமொழி இராமாயண நூல்களில் காணப்படவில்லை. வாலி அங்கதனைச் சுக்கிரீவனிடத்து ஒப்படைத்து உயிர்துறந்தான் என்றே அந்நூல்கள் கூறுகின்றன. ஆனால், கம்பர் அங்கதனைச் சிறப்பிக்கவேண்டி, இராமன் அவனுக்கு அடைக்கலம் அளித்து உடைவாளையும் கொடுத்துத் தன் காப்பாளனாய் ஏற்றான் என்கின்றார். அதுமட்டுமல்லாது, அங்கதனின் வீரத்தையும் பணிசெய்யும் பாங்கினையும் விளக்குமுகமாய் ‘அங்கதன் தூதுப் படலம்’ என்ற தனிப்படலத்தையும் தம் காப்பியத்தில் பாடியுள்ளார்.

    அடுத்து மற்றோர் அவலக் காட்சியை அரங்கேற்றுகின்றார் கவிவலவர் கம்பர். அது, கணவனை இழந்த தாரையின் கண்ணீரும் புலம்பலும்!

    வாலி இறந்த செய்தியறிந்த தாரை, தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக்கினாள். அவன் இறந்துகிடந்த இடத்தை அடைந்து அவன் உடல்மீது புரண்டழுதாள்.

    ”மலைகள் போல் விளங்கும் தோள்கள் புழுதிபடியத் தரைமீது கிடப்பவனே! நீ அடைந்த கதி இதுவோ என்று நான் புலம்பியழக் கண்டும் என் துயர்தீர்க்கும் வண்ணம் வார்த்தை ஒன்றும் உரைத்தாய் இல்லை! இவ்வாறு நீ என்னை வெறுத்தொதுக்க நான் செய்த பிழைதான் என்ன?” என்று கதறினாள்.

    வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்
    தரை மேலாய் உறு தன்மை ஈது எனக்
    கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று
    உரையாய் என்வயின் ஊனம் யாவதோ.
    (கம்ப: வாலிவதைப் படலம் – 4206)

    தாரையின் கதறல், மாடமலி மதுரையில் மணவாளன் கோவலன் கொடியோரால் கொலைசெய்யப்பட்டு அவன் நறுமேனி புழுதிபடியத் தரையில் கிடந்த அவலங் கண்ட கண்ணகி, “என்னுடைய மிகுதுயர் கண்டும் இவள் இக்கொடிய காட்சியைக் கண்டால் இடர்உறுவாள் என்று நீர் எண்ணவில்லையே! அந்தோ! சந்தனம் முதலிய நறுமணப் பொருள்கள் பூசப்பட்ட உம் பொன்மேனி புழுதியில் கிடக்கின்றதே!” என்று கதறிய காட்சியோடு ஒப்புநோக்கத் தக்கது.

    என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள் என்னீர்
    பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ”
    (சிலப்: ஊர்சூழ் வரி – 39-40)

    அனுமன் தாரைக்கு ஆறுதல்சொல்லி அவளை வானர மகளிரோடு அந்தப்புரத்துக்கு அனுப்பிவிட்டு, அங்கதனைக் கொண்டு வாலிக்கு இறுதிக் கடன்கள் ஆற்றச் செய்தான்.

    அடுத்து, சுக்கிரீவனுக்கு முடிசூட்டு விழா நடைபெறுகின்றது. இலக்குவன் சுக்கிரீவனுக்குத் தன் கரங்களால் முடிசூட்டுகின்றான். கிட்கிந்தையின் புதிய அரசனான சுக்கிரீவன் இராமனை வணங்க, அவனுக்கு அரசாட்சியைத் திறம்பட நடாத்துதற்கு உதவக்கூடிய அறவுரைகளைச் சொல்லத் தொடங்குகின்றான் இராமன்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • வகுளாபரணன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    வகுளாபரணன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    ஸ்ரீரங்கத்தில் எட்டாம் வகுப்புப் படிக்கும் வகுளாபரணனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிங்கப்பூரின் வரலாற்று அருங்காட்சியகம்

    சிங்கப்பூரின் வரலாற்று அருங்காட்சியகம்

    சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில், சிங்கப்பூரின் வரலாற்று அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் சிங்கப்பூரின் மொத்த வரலாறும் அருமையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் காலத்தில், மலேசிய ஆட்சியில், ஆங்கிலேயர் ஆட்சியில், ஜப்பானிய ஆதிக்கத்தில், விடுதலைக்குப் பிறகு பிரதமர் லீ குவான் யூ ஆட்சியில் சிங்கப்பூர் எப்படியெல்லாம் இருந்தது என்பதை நேரடியாகக் காணும் வகையில் தனித் தனி உள்ளரங்க வடிவமைப்புடன் அமைத்துள்ளார்கள். புகைப்படங்களை மாதிரியாகக் கொண்டு அதே போல் தத்ரூபமாகச் சிலைகளையும் உள்ளரங்கத்தையும் ஒளி ஒலி அமைப்புகளையும் செய்துள்ளார்கள். சில இடங்களில் சிலைகள் அசைகின்றன, பேசுகின்றன. வரலாற்றுக் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்வதில் இவை வெற்றி பெற்றுள்ளன. இந்த அபாரமான அருங்காட்சியகத்தைக் கண்டு மகிழுங்கள்.

    படப்பதிவு – ஹேமமாலினி லோகநாதன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 135 (திங்கள்)

    சேக்கிழார் பாடல் நயம் – 135 (திங்கள்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    திங்கள்சேர்  சடையார்   தம்மைச்   சென்றவர்  காணா  முன்னே,
    அங்கணர்    கருணை   கூர்ந்த   அருள்திரு    நோக்கம்   எய்தத்
    தங்கிய   பவத்தின்   முன்னைச்   சார்புவிட்  டகல ,  நீங்கிப்
    பொங்கிய   ஒளியின்நீழல்   பொருவில்  அன்புருவம்   ஆனார்.

    பொருள்

    விரைந்து சென்று  சடையில்  பிறைநிலவை  அணிந்த  பெருமானைநேரில் காணா முன்னரே, திண்ணனார் பால்  அழகிய கருணைக்கண்  கொண்ட சிவனார் அருள்  பார்வை இவர்பால்  பொருந்தியது.  அதனால், இவருக்கு  இறுதியாகத்  தங்கிய வேடர்குலப்  பிறப்பு, இதுகாறும்  பெற்றிருந்த பழவினைச்  சார்புடன்  இவரை விட்டு  நீங்கியது! பெருமானின் பேரொளிப் பிழம்பில்  திளைத்து ஒப்பற்ற  அன்பே உருவமாய்  விளங்கினார்.

    விளக்கம்

    சென்றவர் சடையார் தம்மைக் காணாமுன்னே என்று மாற்றப்பட்ட தொடர், நேர்படச் சென்றவராகிய  திண்ணனார், பெருமானைக்  காணுதற்குமுன் என்றது காணாமுன் என நின்றது.

    அங்கணர் என்ற சொல், கிருபைக் கண்ணுடையவரைக்  குறித்தது. கண்ணுக்கு அழகாவது கண்ணோட்டமுடைமை. கருணைகூர்ந்த அருட்டிரு நோக்கமெய்த என்று இப்பொருளை இங்குச் சொற்பொருள் விரித்துக்காட்டினார். அருட்பார்வை செய்கின்றாராதலின் அங்கணர் எனும்  பெயராற்கூறினார்.

    கருணைகூர்ந்த நோக்கம்,  அருட்டிரு நோக்கம் எனக்கூட்டுக. கருணைகூர்ந்த

    நோக்கமாவது இருவினைப்பயனை ஊட்டித் திரோதான உருவமாய் நின்ற மறக்கருணைமாறி, அறக்கருணையாய்ச் சிறந்த நோக்கம்.

    அருள்திருநோக்கம் என்பது சட்சுதீட்சை, இதனை,

    “சிஷ்ய : ஸமீக்ஷ்யதே பாசபந்த விமோக்ஷாய தீக்ஷேயம் சாக்ஷுஷீபவேத்”

    (பாசபந்தம் நீங்கும்பொருட்டுச்சீடன் [ஆசாரியனால்] பார்க்கப்படுகின்றான்) என்று ஆகமங் கூறும்.

    “முன் சினமருவு திரோதாயி கருணையாகித்
    திருந்தியசத் திநிபாதந் திகழு மன்றே”

    என்ற சிவப்பிரகாசம்  என்ற ஞானசாத்திரத்தால் கருணைகூர்ந்த திருநோக்கம் விளக்கப்பட்டது.

    நோக்கம் எய்த   என்ற தொடர்,   அருட்பார்வை இவர்பாற்பொருந்த எனப் பொருள் பட்டது.

    “தானென்னைப்,
    பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம்,
    நீத்தான் நினைவுவேறாக்கினான் – ஏத்தரிய,
    தொண்ணூற் றறுவர்பயில் தொக்கிற் றுவக்கறுத்தான்,
    கண்ணூறு தேனமுதங் காட்டினான்”

    என்ற நெஞ்சு விடுதூதுங் காண்க. இத்திரு நோக்கம் முன்னாட் கயிலாயத்தில், காளத்திசார்ந்து பூசைசெய்து

    “சாருநாள்  ஏலவே முத்தியும்   ஈதும்போ” வென்று அருளிச்செய்த காலத்து இறைவன் பார்த்த அருட்பார்வையின் தொடர்ச்சியாதலின், அவர் (திண்ணனார்) காணாமுன் எய்தியது. அவரது முன்னைத்தவம் இதற்குக் காரணமாம். ஏனையோர்க்கும் அவ்வாறு  எய்தாமைக்கு அவ்வவர் தவ மின்மையே காரணமெனவும் இறைவன் யாவரையும் ஒன்றாகவே காண்பவன் எனவும் கண்டு கொள்க.

    தங்கியபவம்  என்பது,  இவ்வுலகில்வந்த வேடராகிய இப்பிறப்பு. பவம் – பிறத்தல் உண்டாதல். இனி, இதற்குத் தங்கிய – எஞ்சி நின்ற, பவம் – பிறப்பு என்று கூறலுமாம். இவ்வொருபிறப்பே இவர்க்கு எஞ்சிநின்றது என்றபடி.

    முன்னைச்சார்பு விட்டு அகல  என்ற தொடர்,  முன்னைச்சார்பு – அநாதியே தொடர்ந்துநின்ற சார்பாகிய மல மாயை கன்மங்கள். விட்டு அகல- விடுத்துப்போக. விடுதல் – சேர்க்கையின்றாதல். நீங்கி – அவற்றினின்றும் விடுபட்டு.

    அருள்திருநோக்கால் முன்னைச்சார்புவிட்டு நீங்குதல் என்பதன்  விளக்கம்:

    “உயிர், தான் முன்னே செய்து கொள்ளப்பட்ட புண்ணிய விசேடத்தால்  தனக்கு அந்தரியாமியாய் இதுகாறும்  உள் நின்று  உணர்த்திவந்த பரம்பொருளே இப்பொழுது குருவடிவமுங் கொண்டெழுந்தருளிவந்து சீவதீக்கைசெய்து, ‘மன்னவகுமாரனாகியநீ ஐம்பொறிகளாகிய வேடருட்பட்டு வளர்ந்து நின் பெருந்தகைமை அறியாது மயங்கியிடர்ப்பட்டாய்: நின்பெருந்தகைமையாவது இவ்வியல்பிற்று  என்று  அறிவுறுப்ப, அறிந்த போதிலேயே, அவ்வேடரை விட்டு நீங்கி, அன்னிய மின்றி, அநன்னியமாந் தன்மையின் நிலைபெற்று, அம்முதல்வன்றிருவடிகளையணையும்” என்று சிவஞான போதம்எட்டாஞ் சூத்திரத்தின் பிண்டப்பொழிப்புரைக்கும் ஆற்றால் எமது மாதவச் சிவஞானசுவாமிகள் இதனை விளக்கியதுகாண்க.

    பொங்கிய ஒளியின் நீழல் என்ற தொடர்,  பொங்குதல் – விரிந்துவிளங்குதல். ஒளியின் நீழல் ஒளியினது நீழலின்கண். ஒளி என்றது ஈண்டுக் காளத்திநாதரை. நீழல் – அவரது திருவடி. அத்திருவடியினிடத்து.

    “திருக்காளத்தி யுள்ளிருந்த ஒளியே யுன்னை
    யல்லாலொன்று முணரேனே”

    என்ற ஆளுடையநம்பிகளதுதேவாரமும்,

    “அடித்தொண்டர் துன்னு நிழலாவன …….. அடித்தலமே”

    என்ற திருவிருத்தமும்

    “தண்ணிழலாம்பதி” என்ற சிவஞானபோதம் ஒன்பதாஞ்சூத்திரமும், அதனுரையுங் காண்க. இறைவனைப் பேர்ஒளியாகத் தியானித்தல் சிவாகமங்களில் விதிக்கப்பட்டது.

    “ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும்” என்ற அப்பர்சுவாமிகளது  தேவாரமும்,

    “ஞாயிறு கடற்கண் டாஅங்கு ,
    ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி”

    என்ற திருமுருகாற்றுப்படையும், பிறவும்காண்க.

    கண்டம், கண்டாகண்டம் அகண்டம் என ஒளிகள் மூவகைப்படும். கண்டஒளிகளாகிய விளக்குமுதலியவையும், கண்டா கண்ட ஒளிகளெனப்படும். கதிரவன்,  மதிமுதலியனவும் அகண்ட ஒளியாகிய சிவ வொளியி்ன்முன்னர்ப் பிரகாசிக்கமாட்டா. சிவவொளியே ஏனைஎல்லா வொளிகளுக்கும் ஒளிதரும் காரணமாம் ஆன்மஞானம் ஏனை அந்தக்கரணஞானம். இந்திரியஞானங்களின் மிக்கு அவற்றிற்கு மூலமாய் நிற்பதுபோலச் சிவவொளியே ஏனைஎல்லாவொளிகட்கும் மேலாய்நிற்பது. அது சுயஞ்சோதி,பரஞ்சோதி, அலகில்சோதி என்று பலதிறப்பட அறியப்படும்.  “சோதியே சுடரே சூழொளி விளக்கே” என்ற திருவாசகத்தில் இவ்வியல்பு விளக்கப்பட்டமை காண்க.

    “ஒளியாய்  ஒளியதன்  ஒளியாய்   ஒளியதன்
    ஒளியும்  தணிதரும்  ஒளியாகி”  என்ற பேரூர்ப்புராணமும்   காண்க.

    பொருவில் அன்பு உருவம் ஆனார், என்ற தொடர், திருவடி  நீழலின்கண்ணே

    அன்பு அடங்காது மீதூர அந்த அன்பே தமக்கு வடிவமாக ஆயினார். முன்பு செய்ததவத்தினீட்டம் முடிவிலா இன்பமான அன்பினை எடுத்துக்காட்டிற்று; அருட்டிரு நோக்கத்தால் முன்னைச் சார்புவிட்டு அகன்றது; அகலவே பொங்கிய ஒளியின்  நீழலை நேர்பட்டார்; படுதலும், அதனிடத்து அடங்காது மீதூர்ந்த அன்பே தம்   வடிவமாகப்பெற்றார் என்பதாம்.

    இனி, அன்பே சிவம்; சீவன்சார்ந்ததன் வண்ணமாவன்; சிவனைச்சார்ந்தசீவன் அவனதுருவாகிய அன்புருவமாவன் என்றலுமாம். “பரிவின் றன்மை யுருவு கொண் டனையவன்” கல்லாடம்.

    இப்பாடலால் இறைவனின் அருள் திருநோக்கம் எய்திய திண்ணனார், தம் பழம் பிறப்புகள், பழவினைகள் ஆகியவற்றின்  தொடர்பு  முற்றவும் நீங்கப் பெற்றார்  என்பதும், இறைவனின் திருவருட் பேரொளி அவரை ஒப்பற்ற  அன்பே உருவமாய்  ஆக்கியதும் பெறப்பட்டது.

    Share
  • பக்கச் சுவரில் பொன்முதுகு மரங்கொத்தி

    பக்கச் சுவரில் பொன்முதுகு மரங்கொத்தி

    செங்குத்தான மரத்தில் பக்கவாட்டைப் பற்றி எளிதில் அமரும் பொன்முதுகு மரங்கொத்தி, அதே போல் ஒரு சுவரில் பக்கவாட்டைப் பற்றி அமருகின்றது. அத்துடன் பக்கவாட்டிலேயே நகருகின்றது. இந்த அரிய காட்சியைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 72

    பழகத் தெரிய வேணும் – 72

    நிர்மலா ராகவன்

    சுயசிந்தனையும் நிந்தனையும்

    `என்னை எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும்!’ என்று கூறும் சிறுவர்கள் வெகு சிலரே.

    கதை

    பல பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்ட தற்காப்புக்கலை நிகழ்ச்சி அது.

    எனக்கு அறிமுகமில்லாத ஒரு சீனப் பெண்மணி, “என் மகளுக்கு பர்சனாலிடியே (ஆளுமை) கிடையாது,” என்று, பக்கத்தில் அமர்ந்திருந்த என்னிடம் முறையிட்டாள்.

    அந்த ஏழு வயதுச் சிறுமி பக்கத்திலேயே நின்றிருந்தாள்.

    சோனியாக இருந்தாள்.

    பாராட்ட வேண்டிய தாயே தன்னைப் பற்றிப் பிறரிடம் குறையாகக் கூறினால், பின் எப்படி இருப்பாள்?

    அந்த தாயைத்தான் குறை கூற வேண்டும். ஏனென்றால், பிற குழந்தைகளுடன் அவளை ஒப்பிட்டு, இல்லாதவற்றுக்காகப் பழிக்கலாமா? அச்சிறுமியிடம் நற்குணங்களே இருக்காதா, என்ன!

    `கூடாது என்பதைச் செய்தால் தவறா?’ என்று குழந்தைகள் ஆர்வத்துடன் செய்துபார்ப்பார்கள். சரி, தவறு புரியாத வயது அது.

    தவறு என்று தெரிந்தே, `அம்மா என்னதான் செய்துவிடுவாள்!’ என்று, தாயைப் பரிசோதனை செய்வதற்காகச் செய்தால், கண்டிக்கலாம். ஆனால், புதிய முயற்சியில் ஈடுபடும் தைரியத்தையே இழக்கும் அளவுக்குக் குறைகளைப் பெரிது பண்ண வேண்டாமே!

    கதை

    என் மூன்று வயது மகன் சசி `வாஷிங் மெஷின்’ ஓடிக்கொண்டிருந்தபோதே, மிகுந்த பிரயாசையுடன் திறந்தான். `அம்மா செய்வதுபோல் தானும் செய்யலாமே!’ என்ற ஆர்வம்தான் காரணம்.

    அப்புறம் என்ன!

    அதனுள்ளிருந்து தண்ணீர் வெள்ளமாகப் பெருக, அலறியபடி ஓடினான்.

    “போனாப்போறது! இனிமே, நான் சொல்றபோது திற, என்ன!” என்றுவிட்டு, சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கினேன். அவனே பயந்தபோது, நான் வேறு எதற்காகத் தண்டிப்பது!

    அடுத்த முறை, அதன் அருகிலேயே உட்கார்ந்திருந்தான்.

    “இந்த விளக்கு அணைந்ததும்தான் திறக்கணும்,” என்று காட்டினேன்.

    அதன்படி நடந்தபோது, அவனுக்குப் பெருமையாகிவிட்டது.

    இன்னொரு முறை, எதையோ அரைக்கப் போட்டிருந்தேன். `பிளெண்டரை’ மூடவில்லை.

    சசி அதை இயக்கிவிட்டான். அதனுள்ளிருந்த தேங்காய், மிளகாய் வற்றல் எல்லாம்…!

    அவன் பயந்து ஓடினான். நான் திட்டுவேன் என்று பயந்தல்ல. சூறாவளிபோல் பறந்தவைகளைக் கண்டு.

    அதிலிருந்து, நான் பக்கத்தில் இருக்க, சமையலறையில் எந்தவித மின்சார இயந்திரமானாலும், அதை இயக்குவது அவன் வேலையாகப் போயிற்று.

    வெற்றிகரமாக வேலையை முடித்ததும், அவன் முகத்தில் எழும் பூரிப்புக்காக நான் பொறுமையாகக் காத்திருப்பேன்.

    வீட்டில் ஒவ்வொருவரிடமும் போய், பெருமையாகச் சொல்லிக்கொள்வான், “நான்தான் cabbage (முட்டை கோஸ்) நறுக்கினேன்!” என்று.

    “நீ ரொம்ப புத்திசாலி!” என்று அவர்களும் பாராட்டுவார்கள்.

    குழந்தைகளுக்குத் தம்மையே பிடித்துப்போக பாராட்டுகள் அவசியம். ஏனெனில், பிறர் சொல்வதை அப்படியே நம்பும் வயது அவர்களுக்கு.

    சில தவறுகள் புரிந்தாலும் என்ன மோசம்! அதன்பின் செய்வது எல்லாமே தவறென்று ஆகிவிடுமா?

    கதை

    பாலர் பள்ளி மாணவனாக இருந்தபோது, என் பேரன், `இன்னிக்கு நிறைய வீட்டுப்பாடம் இருக்கு!’ என்று பெருமூச்செறிந்தான்.

    தினமும் அப்படிச் சொல்லிக்கொண்டுதான் வீடு திரும்புவான்!

    அவன் செய்ய வேண்டிய வேலை: ஒரே எழுத்தை பத்து முறை எழுதவேண்டும்.

    `வரிக்குமேல்’ என்று, ஆசிரியை ஒவ்வொருவரின் நோட்டுப்புத்தகத்திலும் உதாரணமாக ஒருமுறை எழுதியிருந்தாள்.

    அந்த வயதில், `பள்ளிக்கூடத்தில்தான் படிப்பு என்றால், வீட்டிலுமா! எப்படித்தான் எழுதி முடிக்கப்போகிறேனோ!’ என்ற அயர்ச்சி எழுவது சகஜம்.

    “எழுதி முடித்ததும், பூங்காவில் விளையாடப் போகலாம்,” என்பதுபோல், அவனுக்குப் பிடித்த எதையாவது சொல்லி, ஆசைகாட்டுவோம்.

    நினைத்ததைவிட வேலை எளிதாக, விரைவாக, முடிந்துவிடும். அப்போது தன்னம்பிக்கை கூடும். அது மேலும் பல வெற்றிகளுக்கு வழிவகுக்கும்.

    என் நெருங்கிய தோழி, முதல் வகுப்பிற்கான பரீட்சைத்தாளைப் பார்த்து, “எவ்வளவு எளிதாக இருக்கிறது!” என்று அதிசயப்பட்டாள்.

    “அந்த வயதில், உனக்கும் இது கஷ்டமாகத்தான் இருந்திருக்கும், ஸ்டுபிட்!” என்று நான் சிரித்தேன்.

    அவளும் சிரித்தாள். “அட, ஆமாம்!” என்று ஒத்துக்கொண்டாள்.

    எந்த வயதிலும், ஒவ்வொரு படியாக ஏறினால்தானே மேலே போகமுடியும்! மலைத்துப்போய் கீழேயே நின்றுகொண்டிருக்கலாமா?

    சுயசிந்தனையும் நிந்தனையும்

    தாயின் அறிவுரைப்படி நடக்காது, சுயசிந்தனையோடு செயல்படுவார்கள் சிலர். அந்த நிலையில், தோல்வியையோ, பழியையோ ஏற்க நேரலாம்.

    `நான் படித்துப் படித்துச் சொன்னேனே! கேட்டாயா? உனக்கு உலகத்தின் போக்கு புரியவில்லை,’ என்று தாய் குற்றம் சாட்டினால், மகளுக்குக் குற்ற உணர்ச்சிதான் ஏற்படும். அடங்கிப்போவதே சிறந்தது என்று தீர்மானித்துவிடுவாள் – அதனால் மனக்குறை ஏற்பட்டாலும்.

    பெற்றோரால் புகழப்படாது, சிறு வயதிலிருந்தே அவர்கள் கூறுவதையெல்லாம் ஏற்கும்படி வளர்க்கப்பட்டவர்கள், வளர்ந்தபின்னரும் தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்வார்கள்.

    `என்னைப் பற்றி உயர்வாகச் சொல்லிக்கொண்டால் தற்பெருமை என்பார்களே! அதற்கு மாறாக, `நான் மட்டம்!’ என்பதுபோல் சொல்லிக்கொண்டால், அது அடக்கம் இல்லையா?’ என்று இவர்கள் யோசனை போகிறது.

    “எனக்குத் தைரியமே கிடையாது. நான் சரியான பயந்தாங்கொள்ளி!” எத்தனைபேர் இப்படிச் சொல்கிறார்கள்!

    `ஏன் பயம்? எங்கிருந்து ஆரம்பித்தது?’ என்று யோசிக்கலாமே!

    “எதையும் உரிய காலத்தில் செய்யும் நல்ல வழக்கம் எனக்குக் கிடையாது. தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பேன்!” இப்படிக் கூறிய ஆங்கில தினசரி ஆசிரியை ஒருத்தியிடம் நான் மறுத்துக் கூறியது: “உன் குறைகளைப் பிறர் கண்டுபிடிக்கட்டும் என்று விடு. நீயே ஏன் கூறிக்கொள்கிறாய்?”

    “நீங்கள் சொல்வதும் சரிதான்,” என்று ஏற்றுக்கொண்டாள்.

    `கிடையாது,’ என்று நாம் உரக்கக் கூறும் ஒவ்வொரு நற்குணமும் நம்மிடமிருந்து சிறுகச் சிறுக விலகிவிடுகிறது. ஏனெனில், நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மூளையில் பதிந்துவிடுகிறது.

    எனக்கு என்னைப் பிடிக்கும்!

    தம் திறமைகளில் கொண்ட நம்பிக்கையுடன் புதிய காரியங்களில் ஈடுபடுகிறவர்கள், `எனக்கு என்னைப் பிடிக்கும்,’ என்ற திருப்தி உடையவர்கள். அதனாலேயே அமைதிகொண்டவர்கள்.

    ஒருவர் தனக்கேநம்பிக்கை அளித்துக்கொள்ளும் வழி இது.

    (நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப் பிறரிடம் எதற்காகப் பகிர்வது? `தற்பெருமை!’ என்று, பொறாமையுடன் பழிப்பார்கள்).

    `என்னால் முடியும். செய்துகாட்டுவேன்!” என்று விடாமுயற்சியுடன் செய்கிறவர்கள் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவார்கள். தவறோ, தோல்வியோ கிடைத்தாலும் தளர்ச்சி ஏற்படாது.

    வெற்றி அடைபவர்கள் தனித்துச் செயல்பட்டாலும், உதவி வேண்டும் என்று தோன்றும்போது, துணிந்து கேட்பார்கள்.

    தம் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த இயலுவதால், இவர்களுக்குப் பிறரைக் கண்டு பொறாமை எழுவதில்லை.

    பொதுவாக, ஒருவருக்குத் தன்னையே பிடித்துப்போனால், அவரைப்போல் நிறையபேர் இருக்கமாட்டார்கள் என்று கூறலாம். ஆனால், வித்தியாசமாக இருக்கும் பிறரையும் அவரால் ஏற்கவும், மதிக்கவும் முடியும்.

    எதுவும் அளவோடுதான்

    ஒருவருக்குத் தன்னையே பிடித்துப்போவது விரும்பத்தக்கது என்றாலும் அதுவும் ஓரளவோடுதான் இருக்கவேண்டும்.

    தன்னைத்தவிர மற்ற அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் குறைந்தவர்கள் என்று எண்ண ஆரம்பித்தால், யார் அவரை மதிப்பார்கள்!

    அப்படி எண்ணுவதே தன்னம்பிக்கை இல்லாததைத்தான் காட்டுகிறது.

    “தன்னம்பிக்கை குறைந்து வாழ்வது காரை ஓட்டிப் போகும்போது, `ஹாண்ட் ப்ரேக்’கை (HAND BRAKE) கீழே இறக்காது போவதுபோல்,” என்கிறார் ஓர் அனுபவசாலி. பாதை கரடுமுரடாகத்தான் இருக்கும்.

    Share
  • தாரிகாவின் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    தாரிகாவின் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    சென்னையில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் தாரிகாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 21

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 21

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதை உவமங்களில் வாழ்வியல்

    முன்னுரை

    வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில் உவமம் அமையலாம் என்பது பழந்தமிழ் நெறி. இந்த நெறி அப்படியே தேக்கமடைந்துவிடாமல் தொடர்ந்து பரிணாமம் பெற்றுவருகிறது என்பதுதான் இங்கே சொல்ல வரும் சேதி.  ‘தாமரைபோன்ற முகம்’ என்பது முகத்திற்குச் சொல்லப்பட்ட உவமம். ‘முகம் போன்ற தாமரை’ என்பது தாமரைக்குச் சொல்லப்பட்ட உவமம். பொருளும் உவமமும் தமக்குள் மாறுபடும் நிலை இது. முன்னது காதலியின் முகத்தைப் பார்த்த காதலன் வாய்மொழி!, பின்னது இயற்கையோடு இயைந்த கவிஞன் தாமரையோடு பேசிய மொழி! ‘பொருளே உவமம் செய்தனர் ஆயினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்’ எனத் தொல்காப்பியம் விதி செய்கிற அளவுக்கு இது சென்றிருக்கிறது. தமிழ் எல்லா நிலைகளிலும் வளர்ச்சி நோக்கியது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.  இந்தப் பின்புலத்தில் ஒரே நிகழ்வுக்கு மாறுபட்ட உவமங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாங்கினை இப்பகுதி ஆராய்கிறது.

    வாழ்வியலும் ஓர் அழகியலே!

    வாழ்க்கையின் மெய்ம்மைகளை உவமமாக்குவதாலோ கருத்துக்கு மற்றொரு கருத்தையே உவமமாக்குவதாலோ தமிழ்க்கவிதைகளில் பயன்படுத்தப்படும் உவமங்களில் அழகியல் குறைந்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. மாறாக உவமங்களை அழகியல் சார்ந்ததாகப் படைப்பதில் சங்க இலக்கிய மரபு தற்காலம்வரை உள்ளம் கவரும் வகையில் தொடர்ந்து வருகிறது என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் உறுதி செய்ய முடியும். ஒரே தன்மையான நிகழ்வுகளுக்குப் பட்டறிவின் அடிப்படையிலும் வாழ்வியல் அடிப்படையிலும் உவமங்களை அமைத்துக்காட்டும் திறனைத் தமிழ்க்கவிதைகளில் காணமுடியும்.

    பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல

    சமுதாயத்தின் பங்காளி படைப்பாளியாக மாறினால் படைப்பில் உயிர் இருக்கும். கரையில் இருந்து கொண்டு கால் நனையாமல் கடலைப் பாடுகிறவன் பாட்டில் ஈரம் இருக்காது. இளவரசன் நகருலா வருகிறான். அவனைக் காண்பதற்காகக் காதல் மேலிட, தன் வீட்டுக் கதவைத் திறப்பதற்காகச் செல்கிறாள் தலைவி, திறந்த கதவைத் தாழிட்டு வருகிறாள். மீண்டும் திறக்கிறாள். மீண்டும் தாழிடுகிறாள். இந்த நிகழ்வைச் சித்திரிக்கும் பாட்டு முத்தொள்ளாயிரத்தில் இருக்கிறது. ‘தலைவனைக் காண்பதற்காக ஆர்வத்துடன் செல்வதும், நாணத்தினால் கதவடைத்துத் திரும்புவதுமாகிய அவள் நெஞ்சத்து ஊசலாட்டத்தை,

    “ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
    காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்
    பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்நதார் போல
    வரும்., செல்லும்., பேரும் என் நெஞ்சு”

    என்னும் பாடல் காட்சிப்படுத்துகிறது. செல்வர்கள் வீட்டு வாயிற்படியில் இரப்பதற்காகச் செல்லும் இரவலனுடைய நெஞ்சம், ‘செல்லலாமா? கூடாதா? என்றலையும் ஊசலாட்டத்தோடு தலைவியின் நாணத்தால் வந்த ஊசலாட்டம் ஒப்பிட்டுக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.  பாட்டில் ‘காணிய’ (காண்பதற்காக) என்னும் ‘செய’வென் எச்சம் ‘அடைந்தேன்’ என்னும் தன்வினை கொண்டது. ‘அடைத்தேன்’ என நின்றது வலித்தல் விகாரம். பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் செல்வது என்னும் சிந்தனை திருவள்ளுவருக்கும் வந்திருக்கிறது.  கற்றலின் சிறப்புக் கூற வந்த அவர், ‘உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்க’ வேண்டும்’ என்று சொல்வார். புறம் சார்ந்த கருத்து விளக்கத்திற்குத் திருவள்ளுவரால் கையாளப்பட்ட இந்த உவமத்தை மிகச் சாதுரியமாக அகப்பொருளுக்கு அதுவும் பெண்ணொருத்தியின் மன ஊசலாட்டத்திற்கும் தயக்கத்திற்கும் உவமமாக்கியிருப்பது தமிழ்க்கவிதை உவமக் கோட்பாடுகளில் ஒன்றினை எதிரொளிப்பதாகும்.

    தயிர்கடையும் ஆச்சியின் கை

    தலைவியின் ஊசலாடும் நெஞ்சிற்கு முத்தொள்ளாயிரம் காட்டியிருக்கும் உவமம் வாழ்வியலைச் சார்ந்ததாகக் கொண்டால், நளவெண்பா காட்டியிருப்பது வாழ்வியலோடு அழகியல் சாந்ததாகக் கருத முடியும். ஊழ்வினை காரணமாகக் கானகத்தில் ஒற்றையாடையில் நளனும் தமயந்தியும் தனித்திருக்கின்றனர். கலிபகவான் அவர்களைப் பிரிக்கும் நோக்குடன் அவர் அருகே கத்தியாகக் கிடக்கிறார். கிடக்கும் கத்தியை எடுத்து ஒற்றையாடையை இருகூறாக்கி நளன் எழுந்து நடக்கிறான். நடந்து சென்றானா? என்றால் அதுதான் இல்லை. ‘ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்டாகப்’ பற்றியறுத்த நளன், துயில் கொள்ளும் தன் மனைவியாகிய தமயந்தியைக் கண்டு அவளருகே செல்வதும், மீள்வதுமாகத் தடுமாறுகிறான். இந்த நிலையைப் புகழேந்திப் புலவர் பாடுகிறார். பெருமாளைப் பாடிய வைணவராதலின், இடையர் வீட்டு நிகழ்ச்சியை உவமமாக்கி நளனின் நிலையைத் தெளிவுபடுத்துவதை அறியமுடிகிறது.

    “போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்
    ஆயர் கொணர்ந்த அடுபாலின் – தோயல்
    கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன்
    வடிவாய வேலான் மனம்”

    ‘உட்கார்ந்து பால்கறக்க முக்காலி பொன்னாலே. அணைஞ்சிருந்து பால்கறக்க அணைகயிறும் பொன்னாலே’ என்பது நாட்டுப்புற வழக்கு. இன்றைய மகளிர் சமுதாயம் மீளவும் பெறமுடியாத பேரிழப்பு உரியும் மத்தும். ஆய்ச்சியர் தயிரைக் கடைகிறபொழுது அவர்தம் கைகள் முன்னும் பின்னுமாகச் செல்லுவதை உற்றுநோக்கிய புகழேந்தி தாம் எழுதிய காப்பியத்தின் இன்றியமையாக் கட்டத்தில் அதனை உவமமாக்கிய திறன் பெரிதும் சிந்தனைக்குரியது.

    ஊசலான பாசம்

    தலைவியின் தடுமாறும் நெஞ்சிற்குப் பெருஞ்செல்வர் இல்லத்துக்குச் செல்லும் நல்கூர்ந்தார் உவமமானதைப்போல், மனைவியைப் பிரிந்த கணவன் தடுமாற்றத்திற்குத் தயிர் கடையும் இடைச்சியர் கை உவமமானதைப்போல், பாசமிக்கத் தாயொருத்தி தன் வீட்டுக்கும் கர்ப்பிணியான தன் மகள் வீட்டுக்கும் போவதும் வருவதுமாய் உள்ளாள் என்பதற்குத் தமிழ்க்கவிதை ஒன்றில் காட்டப்பட்டிருக்கும் உவமை காலத்தோடு ஒட்டியதாக உள்ளது. பாவேந்தரின்  அடையாளம் காட்டும் பனுவல்களில் குடும்ப விளக்கு தலைசிறந்தது. அதில் வரும் ஒரு காட்சியில் கர்ப்பிணியாக இருக்கும் தன் மகளை அதே பகுதியில் அவளுக்கு அருகில் குடியிருக்கும் அவள் தாய் கவனத்துடன் பராமரிப்பதைப் பாவேந்தர்,

    “நீடு மணிப்பொறி ஆடுங் காய்போல்
    தங்கம் தன்வீடு தன்மகள் வீடு
    நாடுவாள் மீள்வாள் மணிக்கு நாற்பது முறை”

    சுவர்க் கடியாரத்தின் ஊசல் (pendulum) இருமுனைக்கும் இங்குமங்குமாக அசைந்து அலைவதைப் போலக் ‘குடும்பவிளக்கு’ நாயகி தங்கம், தன் வீட்டிற்கும் தன் மகள் நகைமுத்து வீட்டுக்குமாய் நடந்ததாகப் பாவேந்தர் கவிதையோவியம் தீட்டியிருப்பதைக் காணமுடிகிறது.

    நாணத்தினால் வந்த முத்தொள்ளாயிரத் தலைவியின் தயக்கத்திற்குப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தாரும், தமயந்தியைப் பிரிந்த நளனின் பிரிவாற்றாமைக்கு ஆய்ச்சியரின் கைகளும், கருவுற்ற மகளைக் காணச் செல்லும் தாய்க்கு மணிப்பொறியின் ஊசலும் உவமங்களாய் வந்துள்ளமை நோக்கத்தக்கது. தயங்கும் தலைவி, ஆற்றாத கணவன், துடிக்கின்ற தாய் என்னுமாறு அமைந்த பாத்திரங்களின் வினைபாடுகளுக்கேற்ப நல்கூர்ந்தார், கைகள், ஊசல் என வேறுபடும் வினைகளைக் கொண்ட அழகியல் சார்ந்த உவமங்கள் அமைந்துள்ள பாங்கு சிந்திக்கத்தக்கது.

    நிறைவுரை

    ‘தமிழில் உவமக் கோட்பாடுகள்’ என்னும் ஆய்வுக்களத்தில் சமுதாயத்தை விட்டு உவமங்களைத் தேடும் அவலத்தைப் பெரும்பாலும் காண முடியாது. பழந்தமிழ் இலக்கியங்களில் உயர்வு நவிற்சி, இல்பொருள் உவமம்,  வெறுங்கற்பனை முதலியவை அந்நியப்பட்டே நிற்கின்றன. பாரதத்தின் கிளைக்கதையைப் படைப்பிலக்கியமாகச் செய்த புகழேந்தி ஆய்ச்சியர் இல்லத்தை எண்ணுவதும், அகத்திணை மரபினைக் கவிதைக் காட்சியாக்கும் முத்தொள்ளாயிர ஆசிரியர் நல்கூர்ந்தாரை நினைவில் கொள்வதும், நொடிக்கு ஒரு தடவை மகளைக் காணவரும் தாயைச் சித்திரிக்கும் பாவேந்தர் கடிகாரத்தின் ஊசலைக் கருத்திற் கொள்வதும் இலக்கியத்தில் சமுதாயப் பார்வைகளே  உவமங்களாக அமைகின்றன என்பதைக் ஓரளவு காட்டக் கூடும். ‘வருவதும் போவதுமான’ ஒரே செயலுக்குக் காலமிடையிட்ட கவிஞர் பெருமக்கள் காட்டுகிற உவமங்களில்தாம் எத்தனை வகை!

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(356)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(356)

    கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
    றிரப்பவர் மேற்கொள் வது.

    – திருக்குறள் – 1055 (இரவு)

    புதுக் கவிதையில்...

    தம்மிடம் இருப்பதை
    மறைக்காமல் ஈவோர்
    தரணியில் இருப்பதால்தான்,
    வறுமைப்பட்டவர்
    வந்து நின்று
    வாயால் கேட்காமல்
    கண்ணால் கேட்பதிலேயே
    பெற்றுக் கொள்கின்றனர்…!

    குறும்பாவில்...

    இருப்பவர் முன்நின்று கேட்காமலே
    இரப்போர் பெற்றுக்கொள்வது, இருப்பதை மறைக்காமல்
    ஈவோர் இவ்வுலகில் இருப்பதால்தான்…!

    மரபுக் கவிதையில்...

    இருப்பவர் தமது கண்முன்னே
    ஏது மில்லா வறுமையிலே
    இரப்போர் வந்து நின்றேதான்
    இதழ்கள் திறந்து கேட்காமல்
    இரக்கும் கண்கள் பார்வையிலே
    எல்லாம் நிறைவாய்ப் பெறுவதெல்லாம்,
    இருப்ப தெதையும் மறைக்காமல்
    ஈவோ ருலகில் உளதாலே…!

    லிமரைக்கூ...

    வாயால் கேட்டே இரவாதே
    வறியோர் பெறுவதெல்லாம், உளதால் உலகில்
    கொடுப்போர் எதையும் கரவாதே…!

    கிராமிய பாணியில்...

    வாயத்தொறந்து கேக்காமலே
    வந்து நின்னு
    பாக்கும் பார்வயிலயே
    எரப்பவங்களுக்கு
    எல்லாம் கெடைக்குதுண்ணா
    அதுக்கு ஒரே காரணந்தான்..

    கையில இருக்கிறது
    எதயுமே மறைக்காம,
    இல்லண்ணு எரப்பவங்களுக்கு
    இல்லண்ணு சொல்லாமக்
    குடுக்கிறவங்க
    ஓலகத்தில இருக்கிறதினாலத்தான்…!

    Share
  • ஜெயந்தி சங்கரின் வீணையிசை – 1

    ஜெயந்தி சங்கரின் வீணையிசை – 1

    எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத் திறமை படைத்த ஜெயந்தி சங்கர், வீணை வாசிக்கவும் கற்றுள்ளார். புகழ்பெற்ற காரைக்குடி சகோதரர்களின் பெண்வயிற்றுப் பெயர்த்தியான வீணை விதூஷி, காரைக்குடி ஜெயலஷ்மி சுகுமார் அவர்களிடம் சிங்கப்பூரில் 2010-2013 காலக்கட்டத்தில் வீணையிசை பயின்றார். கஜானனயுதம் என்ற இந்தப் பாடலை 2010-11ஆம் ஆண்டில் வாசித்தார். “என் வாசிப்பில், இனிமையாக, சரியாக இருப்பவை என் மதிப்பிற்குரிய ஆசிரியரின் ஆசிகள். அந்தப் பெருமை அவரையே சேரும். அல்லாதன எல்லாம் என்னைச் சேரும். அதற்காக அவரிடமும் கேட்பவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ஜெயந்தி சங்கர்.

    இந்த இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நட்சத்திர வெண்டை | ஸ்டார் வெண்டை

    நட்சத்திர வெண்டை | ஸ்டார் வெண்டை

    நம் வீட்டுத் தோட்டத்தில் விளைந்துள்ள நட்சத்திர வெண்டையை (ஸ்டார் வெண்டை) இன்று அறுவடை செய்தோம். அதன் உள்ளே எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கமலா வல்லப கோவிந்தா | கிருஷ்ணகுமார் | ஷ்ரேயா குமார்

    கமலா வல்லப கோவிந்தா | கிருஷ்ணகுமார் | ஷ்ரேயா குமார்

    ‘கமலா வல்லப கோவிந்தா’ என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தென்னகத்தின் முன்னோடிப் பெண் புரட்சியாளர்

    தென்னகத்தின் முன்னோடிப் பெண் புரட்சியாளர்

    -மேகலா இராமமூர்த்தி

    ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய அனைவருக்கும் பொதுவான கல்விமுறையானது இந்தியாவில் பல மறுமலர்ச்சி நிகழ்வுகளுக்கு வித்திட்டது. அதன் நீட்சியாகத் தமிழகத்திலும் நெடுங்காலமாக நிலவிவந்த பெண்ணடிமைத்தனத்திற்கும், பெண்கல்வி மறுப்பிற்கும் எதிராகப் பல கலகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

    அவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தென்னகத்தில் முதலில் ஓங்கி ஒலித்த பெண்குரலுக்குச் சொந்தக்காரர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் ஆவார்.

    ”அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு” என்ற உதவாத சித்தாந்தத்தில் ஊறியிருந்த மக்கள் வாழ்ந்திருந்த அன்றைய காலச்சூழலில், தம் முன்னேற்றத்திற்கெதிரான அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து சிறந்த கல்வியாளராகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்த முத்துலட்சுமி அம்மையார், தம் வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொண்டால் போதுமென்று எண்ணாமல், பிற பெண்களும் வாழ்வில் முன்னேற வேண்டும், அவர்களுக்கெதிரான சமூகக் கொடுமைகள் மடியவேண்டும் என்று அரும்பாடு பட்டவர். அந்தச் சாதனைப் பெண்மணியின் வாழ்க்கையை, தன்னலமற்ற தொண்டுகளை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்!

    தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886ஆம் ஆண்டு, ஜூலை 30ஆம் நாள் நாராயணசாமி ஐயருக்கும், தேவதாசிச் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரம்மாளுக்கும் மகளாய்ப் பிறந்தவர் முத்துலட்சுமி அம்மையார். தேவதாசிச் சமூகப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் தம் குடும்பத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டார் நாராயணசாமி ஐயர் என்று தெரியவருகின்றது. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதிக் கொடுமைகளும் ஆணவக் கொலைகளும் குறையாதிருக்கும் நிலையில், 19ஆம் நூற்றாண்டிலேயே மிகத் துணிச்சலாகச் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட நாராயணசாமி ஐயர் நம் பாராட்டுக்குரியவர்!

    தந்தைவழித் தொடர்புகள் அற்றுப்போய் தாய்வழித் தொடர்புகளே இறுக்கமாய் இருந்த நிலையில், தேவதாசிகள் சமூகத்தில் சந்திக்கும் அனைத்துச் சிக்கல்களையும் சங்கடங்களையும் அனுபவபூர்வமாக உணரக்கூடிய வாய்ப்பு முத்துலட்சுமி அம்மையாருக்கு இளமையிலேயே அமைந்தது. பின்னாளில் தேவதாசி ஒழிப்புமுறைக்கு அவர் கடுமையாய்ப் போராடியதற்கு அதுவே காரணமாய் அமைந்தது எனலாம்.

    முத்துலட்சுமி அம்மையாரின் தந்தையும், வேறுசில ஆசிரியர்களும் வீட்டிலேயே அவருக்குக் கல்வி கற்பித்தனர். அதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முத்துலட்சுமி அம்மையார் கல்விபயில விரும்பினார். ஆனால் பெண்ணாக இருந்த காரணத்தால் ஆண்கள் மட்டுமே பயிலும் அக்கல்லூரியில் கல்வி பயில அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அம்மட்டோ? அவரைக் கல்லூரியில் சேர்க்கக் கூடாது எனவும் பழமைவாதிகள் பலர் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கல்வியில் முத்துலட்சுமியாருக்கு இருந்த ஆர்வத்தையறிந்த புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறிக் கல்வி உதவித் தொகையுடன் கல்லூரியில் பயில முத்துலட்சுமி அம்மையாருக்கு இடமளித்தார்.

    அங்குக் கல்வியை நிறைவுசெய்த பின்னர், 1907ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் முத்துலட்சுமி அம்மையார். ஆண்கள் கூட்டத்துக்கிடையே அங்கே கல்விபயின்ற ஒரே மாணவியாகத் திகழ்ந்த அவர்,  அக்கல்லூரியின் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதலாவது மாணவியாகத் தேர்ச்சிபெற்றுத் தங்கப்பதக்கம் வென்று, 1912இல் ‘தங்க மங்கை’யாகக் கல்லூரியைவிட்டு வெளியில் வந்தார்.

    அப்போது மேல்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைபெற்ற பெண்கள் பலர், பெற்ற குழந்தைக்குப் பாலூட்டாமலும் தேவையான பராமரிப்பை வழங்காமலும் அவற்றையெல்லாம் கவனிக்கும் பொறுப்பை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களிடம் ஒப்படைத்திருப்பதைக் கண்டு மனம் வருந்திய மருத்துவர் முத்துலட்சுமியார், பெற்ற தாயால் ஊட்டப்படும் தாய்ப்பாலின் சிறப்புகள் குறித்து அந்த மேல்தட்டுப் பெண்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.

    மருத்துவம் படித்தவரும், முற்போக்குச் சிந்தனையாளருமான டாக்டர் சுந்தரரெட்டி என்பவரைத் தமது 28-வது வயதில் 1914ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் முத்துலட்சுமி அம்மையார். தம்மை எல்லாவகையிலும் சரி சமமாய் நடத்தவேண்டும்; தம்முடைய சமூகச் செயற்பாடுகளிலும், தனிப்பட்ட விருப்பங்களிலும் தலையிடக்கூடாது போன்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே முத்துலட்சுமியார் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்ற செய்தி இன்றைய நவநாகரிகப் பெண்களுக்குக்கூட வியப்பளிக்கக்கூடிய ஒன்றே!

     1926-ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாட்டில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் இந்தியாவின் சார்பில் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் கலந்து கொண்டார். அம் மாநாட்டில் ”ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும்; பெண்களை அடிமைகளாக நடத்துவதை ஒழிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

    அன்னிபெசன்ட் அம்மையார் மற்றும் மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்த மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார், பெண்கள் முன்னேற்றத்திற்கான இயக்கங்களிலும் பங்கேற்றார். இந்திய மகளிர் சங்கத்தின் சார்பில் (Women’s Indian Association) 1926இல் சென்னை மாகாணச் சட்ட மேலவையின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.

    தம்முடைய மருத்துவப் பணிக்கு அஃது இடையூறாக இருக்குமோ என்ற எண்ணத்தின் காரணமாக, ஆரம்பத்தில் அப்பொறுப்பை ஏற்க அவர் தயக்கம் காட்டியபோதிலும், பாரதி கண்ட புதுமைப் பெண்ணான அவர், உடனேயே அத்தயக்கத்தை உதறி, பெண்கள் தங்களது வீட்டைக் காக்கும் திறனை நாட்டை கட்டமைப்பு செய்வதிலும் காட்ட வேண்டுமென உறுதிபூண்டு அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1927 முதல் 1930 வரையிலான காலக்கட்டத்தில் சென்னை மாகாணச் சட்டமேலவையின் துணைத் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.

    அப்போது, கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பொட்டுக் கட்டி இறைவனுக்கு மனைவியாக்கும் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்டமசோதாவை முன்மொழிந்து, ”தேவதாசி நடைமுறையானது உடன்கட்டை ஏறுதலைவிட மிக மோசமானது; மதத்தின் பெயரால் நடைபெறும் குற்றச்செயல் அது” என்று துணிச்சலோடு வாதிட்டார்.

    தேவதாசி ஒழிப்புமுறைக்கு எதிராகக் காங்கிரசைச் சேர்ந்த தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் இருந்தனர். “ தேவதாசி முறையானது பழங்காலந்தொட்டுப் பின்பற்றப்பட்டுவரும் சமயம் சார்ந்த ஒரு வழக்கம்; தேவதாசிகளே நம்முடைய மரபுசார் கலைகளைப் பாதுகாப்பவர்களாகவும் உள்ளனர். எனவே, இம்முறையை ஒழிக்கக்கூடாது” என்று அவர் சட்டமன்றத்தில் வாதிட்டபோது, அதுகேட்டுக் கொதித்தெழுந்த முத்துலட்சுமி அம்மையார், ”தேவதாசிகள் எனும் குலம் அழியாமல் காக்கப்பட வேண்டியது அவசியம் என்று நீங்கள் கருதும்பட்சத்தில், நெடுங்காலமாக தேவதாசிகளாக இருந்துவிட்ட பெண்களுக்கு அதிலிருந்து விடுதலை அளித்துவிட்டு, ஏன் உங்கள் பார்ப்பன குலப் பெண்களை தேவதாசிகளாக்கக் கூடாது?” என்று காட்டமாய்க் கேட்டார்.  

    முத்துலட்சுமி அம்மையார் முன்மொழிந்த இந்த மசோதா, 1947இல் மெட்ராஸ் தேவதாசிச் சட்டம் (Madras Devadasi Act) என்ற பெயரில் சட்டமானது. இதன் மூலம் தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ளச் சட்ட உரிமை கிடைத்தது.

    பெண்களின் திருமண வயதை 14ஆக உயர்த்தக் கோரும் மசோதா குறித்துச் சட்டமன்றக் கவுன்சிலில் விவாதம் நடந்தபோது, ”உடன்கட்டை ஏறும் பழக்கத்தால் ஏற்படும் துயரம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாய் இருக்கும்; ஆனால், குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் பழக்கத்தால், பெண் குழந்தைகள் பிறப்பு முதல் இறப்பு வரையில் தொடர்ந்து துயரமான வாழ்வுக்கு அடிமைப்பட்டுப் போகும் நிலை உள்ளது. குழந்தைப் பருவ மனைவி, குழந்தைப் பருவத் தாய், ஏன் பல சமயங்களில் குழந்தைப் பருவத்திலேயே கைம்பெண் எனத் துயரங்கள் தொடர்கின்றன” என்று பெண்களின் அவல வாழ்வை உணர்வுபூர்வமாய்ப் பேசினார் முத்துலட்சுமி அம்மையார். `சட்டமன்ற உறுப்பினராக எனது அனுபவங்கள்’ (My Experience as a Legislator) என்ற தமது புத்தகத்திலும் இவற்றைக் குறிப்பிட்டுள்ளார் அவர்.

    குழந்தைத் திருமண நடைமுறையை ஒழிக்கக் கோரும் மசோதா குறித்துப் பத்திரிகைகளில் செய்தி வெளியானபோது, பழமைவாதிகள் பொதுவெளியிலும், பத்திரிகைகள் மூலமும் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்கலைக்கழகப் பட்டதாரிகளும்கூட அதனை எதிர்த்தனர் என்று முத்துலட்சுமி அம்மையார் வேதனையோடு குறிப்பிடுகின்றார்.

    உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட காந்தியடிகளை 1930இல் சிறையில் அடைத்தது வெள்ளை அரசு. அதை எதிர்த்துத் தம்முடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் முத்துலட்சுமி அம்மையார்.

    தேவதாசி முறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் தங்கிப் படிப்பதற்குத் தம்முடைய வீட்டில் ’அவ்வை இல்லம்’ என்ற பெயரில் 1930இல் ஓர் இல்லத்தைத் தொடங்கினார். 1936இல் அந்த இல்லம் மயிலாப்பூரில் ஒரு வாடகை இடத்துக்கு மாற்றப்பட்டு, பிறகு அடையாற்றுக்கு மாற்றப்பட்டது. முதலில் தேவதாசி முறையில் இருந்து வெளியில்வந்த பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட அந்த இல்லமானது பின்னாளில் அடைக்கலமும், கல்வியும் தேவைப்படும் எல்லாப் பெண்களுக்கும் உரியதாக மாற்றமும் வளர்ச்சியும் பெற்றது.

    அக்காலக்கட்டத்தில் கல்வியாளர் சர் பிலிப் ஹார்டாக் (Sir Philip Hartog) என்பவர் தலைமையில் இந்தியாவின் கல்விவளர்ச்சி குறித்து ஆராய்வதற்கோர் குழு பிரிட்டிஷ் இந்திய அரசால் அமைக்கப்பட்டது. அக்குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் உறுப்பினர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரே ஆவார். இந்தியாவிலுள்ள பெண்களின் கல்விநிலையை அறிய இந்தியாவெங்கும் ஏராளமான பயணங்களை மேற்கொண்டார் அவர். அவருடைய அந்த உழைப்பைப் போற்றும் வகையில், 1947ஆம் ஆண்டு இந்திய விடுதலையின்போது செங்கோட்டையில் ஏற்றப்பட்ட சுதந்தரக் கொடியில் இணைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்வரிசையில் முத்துலட்சுமி அம்மையாரின் பெயரும் இடம்பெற்றது.

    புற்றுநோயால் தம்முடைய இளைய சகோதரி எதிர்பாராத விதமாக  மரணித்தது பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாருக்கு அளித்தது. அதற்குச் சில ஆண்டுகள் கழித்துத் தம்முடைய மேற்படிப்பைத் தொடர இலண்டன் சென்ற முத்துலட்சுமி அம்மையார், அங்கே இராயல் மார்ஸ்டென் (Royal Marsden) மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் எர்னஸ்ட் மைல்ஸை (Dr. Ernest Miles) சந்தித்துப்  புற்றுநோய்த் தாக்கிய நோயாளிகளுக்கு அவர் அளிக்கும் சிகிச்சைகளை நேரில் கண்டறிந்தார். தமிழகத்திலும் அதுபோன்றதொரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் எனும் எண்ணம் அவர் உள்ளத்தில் அப்போது ஏற்பட்டது.

    தாயகம் திரும்பியதும், நல்லுள்ளம் கொண்டவர்களிடம் நிதி திரட்டியும், இந்தியப் பெண்கள் சங்கத்தின் உதவியோடும் அடையாற்றில் புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கும் பணியில் முழுமூச்சாய் இறங்கினார் முத்துலட்சுமி அம்மையார். அன்றைய பாரதப் பிரதர் பண்டித நேரு அவர்கள் 1952இல் அம் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 1954இல் மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுச் செயற்படத் தொடங்கியது.

    மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனைக்குப் பிறகு இந்தியாவிலேயே புற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது சிறப்பு மருத்துவமனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையே ஆகும். இன்று உலக அளவில் அம் மருத்துவமனை புகழ்பெற்றுத் திகழ்வதோடு, பல்லாயிரக்கணக்கான புற்றுநோயாளிகளின் நோயைத் தீர்த்துச் சாதனை படைத்துவருவதையும் நாமறிவோம். அதற்குக் காரணமாயிருந்தவர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்.

    மருத்துவம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக 1956ஆம் ஆண்டு முத்துலட்சுமி அம்மையாருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்
    (664) என்பார் வள்ளுவர்.

    அதுபோல் பெண்களுக்கெதிரான சமூக அவலங்களை மேடைபோட்டுச் சுட்டிக்காட்டுவது எளிது; அதற்குத் தீர்வு காண்பது மிக அரிது.  ஆனால், முத்துலட்சுமி அம்மையாரோ செயல் வீராங்கனையாகவும் களமிறங்கிச் சாதித்தார்.

    கல்வி எனும் கண்ணிழந்து, அறிவொளி குன்றி, வீட்டுக்குள் முடங்கியும் அடங்கியும் கிடந்து, ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கும் கொடுமைகளுக்கும் ஆளான பெண்குலத்தின் அடிமை விலங்கொடித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கும் நல்வாழ்வுக்கும் அயராது பாடுபட்டுச் சட்டங்கள் பல இயற்றிப் பெண்களின் வாழ்வில் விடிவெள்ளியாய்த் திகழ்ந்தவர் முத்துலட்சுமி அம்மையார். அவர் 1968ஆம் ஆண்டு தம்முடைய 81ஆவது அகவையில் காலமானார்.

    அவருடைய பிறந்த நூற்றாண்டையொட்டி 1986இல் தமிழக அரசு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டுச் சிறப்பித்தது. 2019ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு முத்துலட்சுமி அம்மையாரின் 133ஆவது பிறந்த ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தது.

    அன்பே வடிவாய்க் கொண்டு, உயர்ந்த கல்வியறிவு, சிறந்த கொள்கைகள் ஆகியவற்றை அணிகளாய்ப் பூண்டு, துணிச்சலையும் தன்னம்பிக்கையையுமே ஆயுதங்களாய் ஏந்திச் செயற்கரிய சாதனைகள் பலவற்றை அநாயாசமாக நிகழ்த்திச் சென்றிருக்கும் மகத்தான பெண்மணியான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார், இன்றைய புதுயுகப் பெண்களும் அறிந்து பின்பற்றவேண்டிய சிறந்த வாழ்க்கை வழிகாட்டியாவார்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    https://en.wikipedia.org/wiki/Muthulakshmi_Reddy
    https://www.bbc.com/tamil/india-45003076
    https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/mar/08/womens-day—muthulakshmi-reddy-3376050.html
    https://www.vikatan.com/oddities/women/131624-memories-about-dr-muthulakshmi-reddy

    Share
  • கதையும் மொழிதலும் – 2 மெளனியின் ‘பிரபஞ்ச கானம்’

    கதையும் மொழிதலும் – 2 மெளனியின் ‘பிரபஞ்ச கானம்’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    நான் சாதாரணமாக நல்ல சிறுகதைகள் எழுதியவர்கள் என்று ஒரு எட்டு, ஒன்பது பேரைக் குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம். என்னளவில் என் இலக்கிய ரசனைக்கு எட்டுகிற அளவில், இந்த ஒன்பது பேரில் ( பெயர் வேண்டுமா, புதுமைப்பித்தன், மெளனி, கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி) ஒரு இரண்டு மூன்று பெயர்களை விமரிசகனாக நான் அடிக்கத் துணியாவிட்டாலும் நிர்த்தாட்சண்யமான காலம் அடித்துவிடும். இந்த மூன்று பெயர்களில் மெளனியின் பெயர் இராது என்கிற ஒரு நிச்சயத்தைத் தவிர இந்தப் பட்டியலில் எனக்கு நிச்சயமான விஷயம் – விமரிசகனாக – மெளனியின் நண்பனாக அல்ல – வேறு ஒன்றுமில்லை என்று ஒவ்வொரு தடவையும் மெளனியைப் படிக்கும்போதும் எனக்குத் திடம் ஏற்படுகிறது. – க.நா.சுப்ரமண்யம்

    எனக்கு மிகவும் பிடித்த கதைகள் என்று ‘அழியாச்சுடர்’, ‘பிரபஞ்ச கானம்’ இரண்டையும் சொல்வேன். ஆனால் மெளனியினுடைய எல்லாக் கதைகளிலுமே சிறுகதை அமைதி பிரமாதமாக அமைந்திருக்கிறது என்று  க.நா.சுப்ரமண்யம் கூறியுள்ளார். ‘தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்’ என்ற வாசகம் மெளனியைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற உந்துதலை 1996ஆம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் படிக்கும்போது ஏற்படுத்தியது. பிறகு தேடி அலைந்ததில் மெளனி என்ற பெயர், ஒரு மாயாஜால ஈர்ப்பைத் தந்தது. அன்று முதல் இன்று வரை மெளனியின் கதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அது மட்டுமல்லாமல் இவரின் தோற்றத்தில் ஒருவகை மயக்கம் ஏற்பட்டது. குறிப்பாக இவரின் வெண்மையான தலைமுடி வசீகரப்படுத்தியது. இவரின் சிறுகதைகள் மற்றவர் கதைகளைவிட வேறுபட்டு நிற்பதை வாசிப்பின் ஊடாக அறியமுடிந்தது. அத்தகைய அனுபவத்தைப் பிரபஞ்ச கானமும் தந்தது.

    கதையின் போக்கு, இயற்கை வருணனை, அவன் அவள் காதல், இசையும் அவளும், மரணத்தின் வாசனை என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மனத்துள் எண்ணும்போது தஞ்சை வட்டார எழுத்தாளர்கள் பெரும்பாலும் இத்தகைய பின்புலத்தைக் கையாண்டிருக்கிறார்கள். ஆனால் மெளனி இப்போக்குகளுக்கு இடையே வைத்துச் செல்லும் மெளனம், வாசகனைச் சற்றுச் சிந்திக்கத் தூண்டுகிற அதே நேரத்தில், கதையின் கயிற்றிலிருந்து விடுவித்தும்விடுவதும் இல்லை. இங்கே மெளனியின் சிறுகதை ஆளுமை, மலர்ந்து பரப்பும் வாசனையாகவும் வண்டாகிய வாசகனைச் சிந்தனைத் தேனுண்ணவும் செய்துவிடுகிறது. இதிலிருந்து விடுபட முடியாமல் மயங்கி, கதையினை மீண்டும் மீண்டும் படித்து இன்புற்று மெளனித்துவிடும் நிலையிலிருந்து க.நா.சுவும் தப்பவில்லை.

    அவளது பார்வைக்கும் இசைக்கும் தன்னை இழந்து தவித்து வருகிறான். அவளைத் திருமணம் செய்துகொள்ளத் துணிவில்லை. அவளின் காத்திருப்பும் உடல்நலக்கேட்டில் இதயம் பாதிக்கப்பட்டுப் பாடவேண்டாம் என்ற மருத்துவரின் ஆலோசனையையும் மீறி இவனுக்காகப் பாடுகிறாள். இவன் குளிப்பதற்குக்  குளத்தங்கரை செல்வதும் அங்கே அவள் இருப்பதும் அருகில் பெண்ணொருத்தி வரட்டிகளைத் தட்டுவதும். அவளுக்குத் திருமணம். மூன்றாம் நாள் விசேஷத்தில் அவளைப் பாடச் சொல்கிறார்கள் மறுத்த நிலையில் அவனைப் பார்க்கிறாள். அவன் திரும்பிக்கொள்கிறான். அவள் பாடத் தொடங்கி மரணித்துச் சாய்கிறாள் என்று கதை முடிகிறது.

    இந்தப் பின்புலத்தில் கதைக்கு உயிர் கொடுக்க மெளனி மேற்கொள்ளும் மெளனங்களே மெளனிக்கு உயிர் கொடுத்துள்ளன. அவனுக்கும் அவளுக்கும் நீண்ட காதல். அவளின் உயிர் உண்ணும் நோக்குக்குத் தன்னையே அவளாக்குகிறான். இந்தக் காதல் எப்படிப்பட்டது என்பதை முழுமைப்படுத்தாமல் வாசகச் சிந்தனைக்கு விட்டுவிடுகிறார். இங்கே வாசகனுக்கு ஒரு காதல் தேடல் பிறந்துவிடுகிறது. அவன் தனது பாதையில் பயணிக்கத் தொடங்குகிறான். இத்தகைய வாசகச் சாத்தியப்பாட்டைக் கதை முழுவதும் விதைத்துச் செல்லும்போது வாசகன் தனது ஒவ்வொரு வாசிப்பிலும் பழைய சிந்தனைகளைக் கலைத்துப்போடும் ரசவாதம் நிகழ்ந்து மீண்டும் மீண்டும் வாசிப்பின் தேவையை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது கதை.

    இன்னொரு இடத்தில் இதே அனுபவம் நிகழ்வதை உணரலாம். குளக்கரைக்குக் குளிக்கச் செல்லும் அவன், அங்கே அவளைப் பார்க்கிறான். அவள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறாள். இங்கே அவர்களுக்குள் ஒரு உரையாடலை மெளனி உருவாக்கியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. மெளனமும் காத்திருப்பும் இங்கே மீண்டும் வாசகனைத் துன்புறுத்துகின்றன.  வாசகனின் எதிர்பார்ப்புகள் இங்கே கவனமாகக் கைவிடப்படுகின்றன. அதற்கு ஈடாக மேலும் ஒரு புதிரை இங்குக் கட்டமைக்கிறார் கதையாசிரியர். அருகில் வேறொரு பெண் சாணியை உருட்டி வரட்டித் தட்டிக்கொண்டு இருக்கிறாள். கிராமம் சார்ந்த வாழ்க்கையில் நதியும் குளமும் வாழ்வுக்கும் மரணத்திற்குமான இடமாக இருந்து வருகின்றன. இங்கே அவள் வாழ்வாகவும் வரட்டிகள் மரணமாகவும் இருமைகளைப் பின்னிச் செல்கிறார். மரணத்தின் வரவை வாசகனுக்குத் தந்துவிட்டாலும் அது நிகழப்போகும் தருணங்களைக் காதலால் உன்னதப்படுத்த எண்ணுகிறார். இதற்குத் திருமணமாகி மூன்றாவது நாளைத் தேர்ந்தெடுக்கிறார். அவளின் பார்வையும் கானமும் நம்மைத் தூங்கவிடாமல் செய்துவிடுகின்றன. இவர்களின் காதலுக்குத் தடையாக இருப்பது எது என்ற எதிர்ப்பாத்திரத்தை உருவாக்காமல் காலத்தை நகர்த்திச் சென்றுவிடுகின்ற உத்தி, கதைக்கு வலுச் சேர்க்கிறது.

    அவளுக்குத் திருமணம் முடிந்துவிடுகிறது. இரவின் வருகையில் அவளும் கணவனும் தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் இடுக்கிலிருந்து ஒளியின் பிரவேசம் தெருவைக் கோடிட்டிருக்கிறது. எதிர் வீட்டின் சுவரோரத்தில் இருட்டின் மறைவில் அவனும் அவனது காதலும் தனிமையில் நிற்கின்றன. ஒளியோடு பேசிக்கொள்ளும் அவனது காதலும் காமமும் கடந்து செல்லமுடியாத கையறுநிலைப் படலம். இங்கே வாசகனுக்குத் தோன்றுவது அவளின் காதல் நோய். இவனை மறந்து கணவனோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அவளின் இசையாகிப்போன அவனை மறக்க முடியுமா என்ற ஏக்கத்தை உள்ளுணர்வை வாசகனுக்குத் தந்துகொண்டே இருக்கிறது. மதிக்கப்பட வேண்டிய இருவரின் காமமும் இரவின் குரலாய் அவளின் மரணத்திற்கு அப்பாலும் வாசகருக்குக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

    அவனை ஒரு கலாரசிகனாக உருவாக்கும் மெளனி, இயற்கைக்குத் திரும்புகிறார். இயற்கையின் ஓசைகளைக் கேட்கும் அவனுக்கு முழுமையில்லாத உணர்வு ஏற்படுகிறது. அந்த விடுபட்ட முழுமையின் பகுதியாக இவள் இசை பிரபஞ்ச கானமாக இருப்பதுபோல எண்ணுகிறான். அவளின் மரணம் இயற்கையோடு இணைவதும் இயற்கையை முழுமைப்படுத்துவதுமாகக் கூறும் நிலையில் வாசகனுக்கு அவர்களை வாழவைத்து இசை கேட்க ஆவல் மேலோங்குகிறது. வாசகனின் பார்வை, இயற்கையைத் தாண்டி சமூக மதிப்பீடுகளில் முரண்பாடுகளில் வினையாற்றத் தொடங்குகிறது. இவ்வாறு கதையின் மூலமாக விரிந்த சமூக யதார்த்தத்தை வாசக மனவெளியில் ஓவியமாக அவனைக் கொண்டே தீட்டும், காலத்தைக் கடந்த ஆளுமையாக மெளனி வலம் வருகிறார்.

    “ஒரு நல்ல எழுத்தை நாம் கட்டி இழுத்துக்கொண்டு வர வேண்டும் என்கிற அவசியமில்லை. அதற்குரிய இடத்தை அது தானாகவே வந்து சேர்ந்துவிடும்” என்பதன் அடையாளமாக மெளனியின் கதைகள் இலக்கியக் காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தையும் இலக்கியக் குழுக்களின் ஒவ்வாமையையும் மீறி காலத்தின் கைகளில் சுவடென நிலைத்து நிற்கும் உள்ளீட்டைக் கொண்டுள்ளன. இதில் அதி கவனம் பெறுவது பிரபஞ்ச கானம்.

    Share