கதையும் மொழிதலும் – 2 மெளனியின் ‘பிரபஞ்ச கானம்’

0
4

முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
ramachandran78.blogspot.com
9360623276

நான் சாதாரணமாக நல்ல சிறுகதைகள் எழுதியவர்கள் என்று ஒரு எட்டு, ஒன்பது பேரைக் குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம். என்னளவில் என் இலக்கிய ரசனைக்கு எட்டுகிற அளவில், இந்த ஒன்பது பேரில் ( பெயர் வேண்டுமா, புதுமைப்பித்தன், மெளனி, கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி) ஒரு இரண்டு மூன்று பெயர்களை விமரிசகனாக நான் அடிக்கத் துணியாவிட்டாலும் நிர்த்தாட்சண்யமான காலம் அடித்துவிடும். இந்த மூன்று பெயர்களில் மெளனியின் பெயர் இராது என்கிற ஒரு நிச்சயத்தைத் தவிர இந்தப் பட்டியலில் எனக்கு நிச்சயமான விஷயம் – விமரிசகனாக – மெளனியின் நண்பனாக அல்ல – வேறு ஒன்றுமில்லை என்று ஒவ்வொரு தடவையும் மெளனியைப் படிக்கும்போதும் எனக்குத் திடம் ஏற்படுகிறது. – க.நா.சுப்ரமண்யம்

எனக்கு மிகவும் பிடித்த கதைகள் என்று ‘அழியாச்சுடர்’, ‘பிரபஞ்ச கானம்’ இரண்டையும் சொல்வேன். ஆனால் மெளனியினுடைய எல்லாக் கதைகளிலுமே சிறுகதை அமைதி பிரமாதமாக அமைந்திருக்கிறது என்று  க.நா.சுப்ரமண்யம் கூறியுள்ளார். ‘தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்’ என்ற வாசகம் மெளனியைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற உந்துதலை 1996ஆம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் படிக்கும்போது ஏற்படுத்தியது. பிறகு தேடி அலைந்ததில் மெளனி என்ற பெயர், ஒரு மாயாஜால ஈர்ப்பைத் தந்தது. அன்று முதல் இன்று வரை மெளனியின் கதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அது மட்டுமல்லாமல் இவரின் தோற்றத்தில் ஒருவகை மயக்கம் ஏற்பட்டது. குறிப்பாக இவரின் வெண்மையான தலைமுடி வசீகரப்படுத்தியது. இவரின் சிறுகதைகள் மற்றவர் கதைகளைவிட வேறுபட்டு நிற்பதை வாசிப்பின் ஊடாக அறியமுடிந்தது. அத்தகைய அனுபவத்தைப் பிரபஞ்ச கானமும் தந்தது.

கதையின் போக்கு, இயற்கை வருணனை, அவன் அவள் காதல், இசையும் அவளும், மரணத்தின் வாசனை என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மனத்துள் எண்ணும்போது தஞ்சை வட்டார எழுத்தாளர்கள் பெரும்பாலும் இத்தகைய பின்புலத்தைக் கையாண்டிருக்கிறார்கள். ஆனால் மெளனி இப்போக்குகளுக்கு இடையே வைத்துச் செல்லும் மெளனம், வாசகனைச் சற்றுச் சிந்திக்கத் தூண்டுகிற அதே நேரத்தில், கதையின் கயிற்றிலிருந்து விடுவித்தும்விடுவதும் இல்லை. இங்கே மெளனியின் சிறுகதை ஆளுமை, மலர்ந்து பரப்பும் வாசனையாகவும் வண்டாகிய வாசகனைச் சிந்தனைத் தேனுண்ணவும் செய்துவிடுகிறது. இதிலிருந்து விடுபட முடியாமல் மயங்கி, கதையினை மீண்டும் மீண்டும் படித்து இன்புற்று மெளனித்துவிடும் நிலையிலிருந்து க.நா.சுவும் தப்பவில்லை.

அவளது பார்வைக்கும் இசைக்கும் தன்னை இழந்து தவித்து வருகிறான். அவளைத் திருமணம் செய்துகொள்ளத் துணிவில்லை. அவளின் காத்திருப்பும் உடல்நலக்கேட்டில் இதயம் பாதிக்கப்பட்டுப் பாடவேண்டாம் என்ற மருத்துவரின் ஆலோசனையையும் மீறி இவனுக்காகப் பாடுகிறாள். இவன் குளிப்பதற்குக்  குளத்தங்கரை செல்வதும் அங்கே அவள் இருப்பதும் அருகில் பெண்ணொருத்தி வரட்டிகளைத் தட்டுவதும். அவளுக்குத் திருமணம். மூன்றாம் நாள் விசேஷத்தில் அவளைப் பாடச் சொல்கிறார்கள் மறுத்த நிலையில் அவனைப் பார்க்கிறாள். அவன் திரும்பிக்கொள்கிறான். அவள் பாடத் தொடங்கி மரணித்துச் சாய்கிறாள் என்று கதை முடிகிறது.

இந்தப் பின்புலத்தில் கதைக்கு உயிர் கொடுக்க மெளனி மேற்கொள்ளும் மெளனங்களே மெளனிக்கு உயிர் கொடுத்துள்ளன. அவனுக்கும் அவளுக்கும் நீண்ட காதல். அவளின் உயிர் உண்ணும் நோக்குக்குத் தன்னையே அவளாக்குகிறான். இந்தக் காதல் எப்படிப்பட்டது என்பதை முழுமைப்படுத்தாமல் வாசகச் சிந்தனைக்கு விட்டுவிடுகிறார். இங்கே வாசகனுக்கு ஒரு காதல் தேடல் பிறந்துவிடுகிறது. அவன் தனது பாதையில் பயணிக்கத் தொடங்குகிறான். இத்தகைய வாசகச் சாத்தியப்பாட்டைக் கதை முழுவதும் விதைத்துச் செல்லும்போது வாசகன் தனது ஒவ்வொரு வாசிப்பிலும் பழைய சிந்தனைகளைக் கலைத்துப்போடும் ரசவாதம் நிகழ்ந்து மீண்டும் மீண்டும் வாசிப்பின் தேவையை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது கதை.

இன்னொரு இடத்தில் இதே அனுபவம் நிகழ்வதை உணரலாம். குளக்கரைக்குக் குளிக்கச் செல்லும் அவன், அங்கே அவளைப் பார்க்கிறான். அவள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறாள். இங்கே அவர்களுக்குள் ஒரு உரையாடலை மெளனி உருவாக்கியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. மெளனமும் காத்திருப்பும் இங்கே மீண்டும் வாசகனைத் துன்புறுத்துகின்றன.  வாசகனின் எதிர்பார்ப்புகள் இங்கே கவனமாகக் கைவிடப்படுகின்றன. அதற்கு ஈடாக மேலும் ஒரு புதிரை இங்குக் கட்டமைக்கிறார் கதையாசிரியர். அருகில் வேறொரு பெண் சாணியை உருட்டி வரட்டித் தட்டிக்கொண்டு இருக்கிறாள். கிராமம் சார்ந்த வாழ்க்கையில் நதியும் குளமும் வாழ்வுக்கும் மரணத்திற்குமான இடமாக இருந்து வருகின்றன. இங்கே அவள் வாழ்வாகவும் வரட்டிகள் மரணமாகவும் இருமைகளைப் பின்னிச் செல்கிறார். மரணத்தின் வரவை வாசகனுக்குத் தந்துவிட்டாலும் அது நிகழப்போகும் தருணங்களைக் காதலால் உன்னதப்படுத்த எண்ணுகிறார். இதற்குத் திருமணமாகி மூன்றாவது நாளைத் தேர்ந்தெடுக்கிறார். அவளின் பார்வையும் கானமும் நம்மைத் தூங்கவிடாமல் செய்துவிடுகின்றன. இவர்களின் காதலுக்குத் தடையாக இருப்பது எது என்ற எதிர்ப்பாத்திரத்தை உருவாக்காமல் காலத்தை நகர்த்திச் சென்றுவிடுகின்ற உத்தி, கதைக்கு வலுச் சேர்க்கிறது.

அவளுக்குத் திருமணம் முடிந்துவிடுகிறது. இரவின் வருகையில் அவளும் கணவனும் தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் இடுக்கிலிருந்து ஒளியின் பிரவேசம் தெருவைக் கோடிட்டிருக்கிறது. எதிர் வீட்டின் சுவரோரத்தில் இருட்டின் மறைவில் அவனும் அவனது காதலும் தனிமையில் நிற்கின்றன. ஒளியோடு பேசிக்கொள்ளும் அவனது காதலும் காமமும் கடந்து செல்லமுடியாத கையறுநிலைப் படலம். இங்கே வாசகனுக்குத் தோன்றுவது அவளின் காதல் நோய். இவனை மறந்து கணவனோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அவளின் இசையாகிப்போன அவனை மறக்க முடியுமா என்ற ஏக்கத்தை உள்ளுணர்வை வாசகனுக்குத் தந்துகொண்டே இருக்கிறது. மதிக்கப்பட வேண்டிய இருவரின் காமமும் இரவின் குரலாய் அவளின் மரணத்திற்கு அப்பாலும் வாசகருக்குக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

அவனை ஒரு கலாரசிகனாக உருவாக்கும் மெளனி, இயற்கைக்குத் திரும்புகிறார். இயற்கையின் ஓசைகளைக் கேட்கும் அவனுக்கு முழுமையில்லாத உணர்வு ஏற்படுகிறது. அந்த விடுபட்ட முழுமையின் பகுதியாக இவள் இசை பிரபஞ்ச கானமாக இருப்பதுபோல எண்ணுகிறான். அவளின் மரணம் இயற்கையோடு இணைவதும் இயற்கையை முழுமைப்படுத்துவதுமாகக் கூறும் நிலையில் வாசகனுக்கு அவர்களை வாழவைத்து இசை கேட்க ஆவல் மேலோங்குகிறது. வாசகனின் பார்வை, இயற்கையைத் தாண்டி சமூக மதிப்பீடுகளில் முரண்பாடுகளில் வினையாற்றத் தொடங்குகிறது. இவ்வாறு கதையின் மூலமாக விரிந்த சமூக யதார்த்தத்தை வாசக மனவெளியில் ஓவியமாக அவனைக் கொண்டே தீட்டும், காலத்தைக் கடந்த ஆளுமையாக மெளனி வலம் வருகிறார்.

“ஒரு நல்ல எழுத்தை நாம் கட்டி இழுத்துக்கொண்டு வர வேண்டும் என்கிற அவசியமில்லை. அதற்குரிய இடத்தை அது தானாகவே வந்து சேர்ந்துவிடும்” என்பதன் அடையாளமாக மெளனியின் கதைகள் இலக்கியக் காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தையும் இலக்கியக் குழுக்களின் ஒவ்வாமையையும் மீறி காலத்தின் கைகளில் சுவடென நிலைத்து நிற்கும் உள்ளீட்டைக் கொண்டுள்ளன. இதில் அதி கவனம் பெறுவது பிரபஞ்ச கானம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.