Blog

  • காக்கைச் சிறகினிலே நந்தலாலா

    காக்கைச் சிறகினிலே நந்தலாலா

    மகாகவி பாரதியாரின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ என்ற அற்புதமான பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 71

    பழகத் தெரிய வேணும் – 71

    நிர்மலா ராகவன்

    தனித்திருந்தால் தவறேதுமில்லை

    “ஏம்மா, யார் எது சொன்னாலும், எல்லாரும், `ஆமா, ஆமான்னு சொல்வா, நீ மட்டும் அப்படிச் சொல்றதில்லையே!” கேட்டது என் மகள். அப்போது அவளுக்குப் பன்னிரண்டு வயது.

    இறைவனின் படைப்பில் எல்லா உயிர்களும் – அது மனிதனோ, பிராணியோ – ஒன்றுபோல் இருப்பதில்லை.

    இது புரியாமலோ, அல்லது ஒத்துக்கொள்ள விரும்பாததாலோ, தன்னுள் அடங்கியிருக்கும் எல்லாரும் ஒரேமாதிரிதான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது ஒவ்வொரு சமூகமும்.

    இவ்வகையான, எழுதப்படாத கட்டுப்பாடு குடும்பத்தில் ஆரம்பித்து, பள்ளிக்கூடத்திலும், அதற்குப் பின்பும் – ஆயுள் முழுவதும் — தொடர்கிறது.

    அநாவசியமான கட்டுப்பாட்டை எதிர்க்கத் துணிபவர்கள் பற்பல ஏச்சுப்பேச்சுக்கும் தண்டனைக்கும் தயாராக இருக்கவேண்டும்.

    ‘இவர்கள் நம்மை மதிக்கவில்லை!’ என்ற ஆத்திரத்துடன், பிறர் அவர்களைத் தனிமைப்படுத்தக்கூடும்.

    இதற்கெல்லாம் பயந்துதான், பெரும்பான்மையோர் பிறரைப் பின்பற்றி நடந்துவிடுகிறார்கள்.

    அதனால் இயற்கையிலேயே தமக்கு அமைந்த கற்பனாசக்தி குன்றிவிடுகிறது என்பதை ஒரு சிலர் உணர்ந்தாலும், எதிர்த்து நடக்கும் துணிவு எல்லாருக்கும் இருப்பதில்லை.

    `பிறரைப்போல் இருக்கவேண்டும்!’ என்று, தம் குழந்தைகளிடம் சிறு வயதிலேயே போதித்துவிடுகிறார்கள் தாய்மார்கள்.

    தாம் அருமையாக வளர்த்த செல்வங்கள் வித்தியாசமாக நடந்து, பிறரது ஏச்சுப்பேச்சுக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற பயம்தான் காரணமோ?

    கதை

    எங்கள் பள்ளி விழா ஒன்றிற்கு, ஆசிரியை, மிஸஸ்.ஸா (Saw), தன் ஐந்து வயது மகளைத் தன்னுடன் அழைத்து வந்திருந்தாள்.

    சிறுமியை, `புத்திசாலி!’ என்று நான் கணித்தேன்.

    சில மாதங்களுக்குப்பின், ஓய்வு வேளையில் பேசிக்கொண்டிருந்தாள் அந்த ஆசிரியை, `கேட்பவர்கள் கேட்கட்டும்’ என்ற தன் வழக்கப்படி.

    “என் பெண்ணுக்குப் பிறருடன் பழக ரொம்பப் பிடித்திருக்கிறது,” என்று ஆற்றாமையுடன் ஆரம்பித்தாள், மகள் செய்யக்கூடாத ஒன்றைச் செய்வதுபோல்.

    “எப்போதும் அண்டை அயலில் உள்ள தோழிகளுடன் விளையாடப்போகிறாள். என் நாத்தனார்கள்போல் இவளும் extrovert (கலகலப்பு)! இது என்ன கெட்ட வழக்கம்! பிரம்பால் விளாசினேன்!”

    அடுத்த முறை, அப்பெண் பயந்தவளாகக் காணப்பட்டாள். அம்மாவின் நிழல்போல் எங்கும் நடந்தாள். பேசும்போது, வாய் திக்கியது! பரிதாபமாக இருந்தது எனக்கு.

    இயல்பான குணத்தைத் தடைசெய்து, பிறர்போல், பெரியவர்கள் விரும்புவதுபோல், நடக்கும்படி செய்தால் குழப்பம்தான் விளையும்.

    `ஒரு பெண் அழகாக இருந்தால்தான் ஆண்களுக்குப் பிடிக்கும். புத்திசாலியாக இருக்கக்கூடாது – பயந்து விடுவார்கள்,’ என்று மிஸஸ்.ஸாவின் பாட்டி `புத்திமதி’ கூறியிருந்தாளாம்! என்னிடம் விவாதித்தாள், பெண்களுடைய அறிவுத்தாகம் பெருத்த தவறு என்பதுபோல்.

    அதன்படி, மகளுக்கு விதவிதமான ஆடை அணிகள் வாங்கிக்கொடுத்து, `அவள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறாள்!’ என்று முடிவு கட்டினாள்.

    ங் (NG) என்ற ஒரு சீன இளைஞன் என்னிடம் கூறியது நினைவில் எழுந்தது. “உங்களைப்போல் என்னால் எழுத முடியாது. பிறர்போலவே இருக்கவேண்டும் என்ற கண்டிப்பும் கட்டுப்பாடும் எங்களுக்கு அதிகம். அதனால், எங்கள் கற்பனைத் திறன் காணாமல் போய்விடுகிறது!”

    எல்லாரும் அறிவாளிகளாகவோ, பிறர் மெச்சும்படியாகவோ இருக்க முடியாது.

    கதை

    ஆடிசம் (autism) என்ற நரம்பியல் கோளாறு உள்ளவன் ஜான். அவனால் பிறருடன் கலந்து பழக முடியாது. பேச்சும் குழறும்.

    முதல் முறை, நீச்சல் குளத்தில், வாய் நிறைய இருந்த நீரை என்மேல் உமிழ்ந்தான் அந்த எட்டு வயதுப் பையன்.

    பதறிய அன்னை க்ளோரியா, என்னிடம் வெகுவாக மன்னிப்புக் கேட்டாள். “இவனுக்கு மூளை சரியில்லை,” என்றாள் கெஞ்சலாக.

    “தெரியும் பரவாயில்லை,” என்றேன் சுருக்கமாக.

    அவள் சமாதானமாகாது, “ஆன்ட்டிக்கிட்ட ஸாரி சொல்லு!” என்று மகனைக் கண்டித்தாள்.

    அவன் எங்கோ பார்த்துக்கொண்டு, “ஸாரி ஆன்ட்டி,” என்றான்.

    “சரியாச் சொல்லு,” என்று அவன் முகவாயைப் பிடித்து, என் புறம் திருப்பினாள்.

    `நெருப்பு சுடும்!’ என்று தாய் எத்தனை முறை எச்சரித்தாலும், புரியாதாம். வருத்தத்துடன் தெரிவித்தாள்.

    கூடவே, “எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களைப்போலவே நடித்துக் காட்டுகிறான்!” என்று பெருமையுடன் தெரிவித்தாள் க்ளோரியா.

    அது மட்டுமா! அவடைய நீச்சல் திறமையைப் பார்த்தால், மீன் துள்ளி விளையாடுவதுபோல் இருக்கும்.

    எல்லோராலும் அப்படிச் செய்ய முடியுமா?

    இருந்தாலும், `மகன் மற்றவர்களைப்போல் இல்லையே!’ என்ற வருத்தம் தாய்க்கு.

    அதன்பின், அங்கு அவனைப் பார்க்கும்போதெல்லாம், “குட்மார்னிங், ஜான்!” என்று முகமன் கூறுவேன்.

    பார்வை எங்கோ பதிந்திருக்க, அவனும், “குட்மார்னிங் ஆன்ட்டி நிர்மலா!” என்று குரலில் ஏற்ற இறக்கம் இல்லாது பதில் கூறுவான்.

    பல வருடங்களுக்குப் பின்னர் அவனை ஒரு கடையில் பார்த்தபோது, நான், “குட் ஈவினிங், ஜான்,” என, என்னைத் திரும்பிக்கூட பாராது, “குட் ஈவினிங் ஆன்ட்டி நிர்மலா!” என்று தன்போக்கில் சொல்லியபடி நடந்தான். அப்போது அவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும். என்னை மறக்கவில்லை. அத்துடன், என் குரலை வைத்தே என்னை அடையாளம் கண்டிருக்கிறான்!

    `இப்படித்தான் இருக்கவேண்டும்!’ என்று இவனைப் போன்றவர்களைக் கண்டித்துக்கொண்டே இருந்தால், இன்னும் குழம்பிவிட மாட்டார்களோ?

    குறைபாடுகள் இருந்தாலும், அவற்றையே பெரிதுபண்ணாது, அவர்களால் இயன்றதைப் பாராட்டக்கூடாதா!

    கட்டுப்படுத்தப்பட்ட பெண்கள்

    `சரியாக உட்கார்!’

    மிகச் சிறிய வயதிலேயே, பல முறை பெண்குழந்தைகள் கேட்கும் திட்டு இது.

    `உட்காரத் தெரியாமல் உட்காரும்’ அந்த வயதில், கிட்டத்தட்ட முழங்கால்வரை நீண்ட உள்ளாடையை எனக்கு அணிவித்திருந்தாள் என் தாய். அதனால், என்னை எவரும் கண்டிக்கவில்லை.

    பதின்ம வயதில், `என்ன இருந்தாலும், உன் அண்ணன் (அல்லது தம்பி) ஆண்பிள்ளை!’ என்று, பெண்ணாகப் பிறந்த `குற்ற’த்திற்காக பெண்களுக்குப் பல சலுகைகள் மறுக்கப்படலாம்.

    ஒரு சில பெண்கள் வாய்திறவாமல் இதை ஏற்றாலும், வேறு சிலருக்கு இத்தகைய பாரபட்சம் ஆத்திரம் மூட்டும்.

    கதை

    என் முன்னாள் மாணவி ஸ்யூ லின் (SIEW LIN) எங்கள் பள்ளிக்கூடத்திலேயே தாற்காலிக ஆசிரியையாகச் சேர்ந்தாள்.

    “நீ நன்றாகப் படிப்பாயே! ஏன் பட்டப்படிப்பு படிக்கவில்லை?” என்று கேட்டேன்.

    அவள் முகம் வாடியது. “என் பெற்றோர் என் அண்ணனைப் படிக்க வைக்கத்தான் பணம் இருக்கிறது என்றுவிட்டார்கள்! `அவன் என்ன உயர்த்தி?’ என்று நான் சண்டைபிடித்தேன். அவன் நன்றாகக்கூடப் படிக்கமாட்டான். அதற்கு என் அம்மா என்ன சொன்னார்கள், தெரியுமா?”

    என் பதிலுக்குக் காத்திராமல், அவளே தொடர்ந்தாள்: “அவன்தான் கடைசி காலத்தில் எங்களை வைத்துக் காப்பாற்றுவான். நீ, எப்படியும், கல்யாணமாகி, இன்னொரு வீட்டுக்குப் போகப்போகிறவள்தானே!”

    எத்தனை பெண்கள் இப்படி ஒடுக்கப்பட்டிருப்பார்கள் என்று என் யோசனை போயிற்று.

    ஸ்யூ லினது மனக்குமுறல் மேலும் வெளிவந்தது. “`அண்ணா உங்களைக் காப்பாற்றுவான் என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?’ என்றுகூட வாதாடினேன். என் பெற்றோர் மசியவில்லை,” என்றவள், தன் எதிர்காலக் கனவைப் பற்றிப் பேசினாள்.

    “மிஸஸ் ராகவன், எனக்குப் பெண்குழந்தைகள் பிறந்தால், அவர்களை நிறையப் படிக்கவைப்பேன். விரும்பும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று சுதந்திரமாக நடக்கவிடுவேன்!’ அழுதுவிடுவாள் போலிருந்தது.

    என் தாயும் இதையே பிறரிடம் கூறக் கேட்டிருக்கிறேன் –வேறொரு தலைமுறையில்.

    இக்காலத்திலும், `பெண் என்றால், அதிகப் பொறுப்பு. பிற பெண்களைப்போல் இருந்தால், பலரும் பாராட்டாவிட்டாலும், குறை கூறமாட்டார்கள்!’ என்று தாய்மார்கள் எண்ணுவதால், தம் பெண்குழந்தைகள் அவர்கள் விருப்பப்படி – அது நல்லவிதமாக இருந்தாலும் – விடுவதில்லை.

    அது எப்படி, ஒரு சில பெண்கள் மட்டும் சாதனைகள் புரிவதில் தனித்து நிற்கிறார்கள்?

    பதில்: அவர்களுக்குப் பின்னால் எப்போதும் ஓர் ஆண்துணை இருக்கும்: பால்யப் பருவத்தில் தந்தை, அதன்பின் கணவர், மகன். இன்னும், மருமகன், பேரன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். மொத்தத்தில், ஆண் துணை.

    ஒரு பெண்ணின் திறமைகளைப் பாராட்டி, தகுந்த நேரத்தில் தைரியம் அளித்து, தன்னை நம்பியிருப்பவள் முன்னுக்கு வருவாள், வரவேண்டும், என்பதில் உறுதியாக நிற்பவர்கள் இத்தகைய ஆண்கள்.

    Share
  • கதையும் மொழிதலும் – 1  கி.ராவின் ‘பலம்’

    கதையும் மொழிதலும் – 1 கி.ராவின் ‘பலம்’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran.ta@gmail.com
    9360623276

    கி.ரா. அறிமுகமாகி முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. திருநெல்வேலி (கரிசல் வாழ்க்கை) வாழ்வின் வளமைகள் துல்லியமாகத் துலங்கும் கதைகள் இவருடையவை. கல்லூரிக் காலங்களில் கதவு சிறுகதையைப் படித்துவிட்டு மயங்கித் திரிந்த நாட்கள் உண்டு. இன்றும் பழைமையான வீடுகளைக் கடந்து செல்லும் போது கி.ராவும் உடன் கடக்கிறார். சமீபத்தில் இவரின் பலம் சிறுகதையைப் படித்துவிட்டு என் தந்தையின் நினைவுகளுடன் பல நாட்கள் கடந்து சென்றன. இந்தக் கதை, அலையோசையில் 1980இல் வெளிவந்துள்ளது.

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மனநிலையில் அவனது பலம் ஏதோ ஒன்றில் ஈர்க்கப்பட்டுவிடுகிறது. பணப்புழக்கம் பரவலாக்கப்பட்ட சூழ்நிலையில் அதன் ஆளுமை பலரைக் கவர்ந்திழுந்தது. நிலத்தின் மேல் கொண்ட மதிப்பு, பண மதிப்பாக மாற்றப்பட்ட காலம். கிராமத்தில் நிலபுலம் எவ்வளவு இருந்தாலும் கையில் காசு இல்லையென்றால் ஏற்படும் மன அவலம் இக்கதையின் மையப் பொருளாகும்.

    செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோதும் கையில் இருக்கும் பணம் ஏற்படுத்தும் அதீத மன தைரியமும் சமூகத்தை எதிர்கொள்ளும் தன்மையும் அலாதியானது. இருக்கும்போது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தாத பணம், கையில் இல்லையென்றால் வீட்டைவிட்டு வெளியில் செல்ல மனம் விரும்புவதில்லை. இயற்கையைச் சார்ந்து அறிவின் துணையில் கைவீசி வாழ்ந்த மனித வாழ்க்கை சட்டைப்பைக்குள் மடித்து வைக்கப்பட்ட பணக் காகிதத்தில் முடங்கிப்போன அவலத்தையும் மாற்றத்தையும் இக்கதையில் போகிறபோக்கில் சொல்லிச்செல்லும் இவரின் ஆற்றல் வியக்கத்தக்கது.

    தென் மாவட்டங்களில் இத்தகைய மனநிலையைப் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்ததுண்டு. சொந்த வீடு, விவசாயம், சுயதொழில், தற்சார்பு என்று வாழும் மக்களின் மனநிலை சட்டைப் பையில், டிரவுசர் பையில் இருக்கும் பத்து ரூபாய் நோட்டுதான் திருப்தி அளிக்கிறது. வெறும் கை என்பது அவமானத்தின் அத்தாட்சி, வாழத் தெரியாதவனின், வாழ்ந்து கெட்டவனின் இருத்தல் ஆகையால் எப்போதும் கையில் பணம் இருக்க வேண்டும். இந்த மனநிலையே இவர்களின் வாழ்க்கைச் சூழலை நகர்த்திச் செல்கிறது.

    சென்று வருவதற்கு நூறு ரூபாய் போதும் என்றாலும் ஆயிரம் ரூபாய் கையில் இருந்தால் மட்டுமே செயலில் தன்னம்பிக்கையும் உள்ளத்தில் இறுமாப்பும் உறுதிப்படுகிறது. அவ்வாறு இல்லையென்றால் வராத விருந்தாளி வருவதாகவும் உதவி கேட்டு உறவுக்காரன் வந்துவிட்டால் என்ன செய்வது என்பதுமான எண்ண ஓட்டத்தின் பதற்ற நிலையையும் அவர்களால் தவிர்க்கவே முடியாது. அத்தகைய பதற்ற மனநிலையே இக்கதை. கழுத்து நிறைய நகை போட்டு வருகின்ற மனைவியைக் கண்டாலும் கையில் பணம் இல்லாத நிலையும் அதனை வெளிப்படுத்தத் தயங்கும் வறட்டு மரியாதையும் மனைவியின் தாராள மனநிலையும் குடும்ப வாழ்க்கையின் யதார்த்த போக்கும் கதையில் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

    மன அவத்தையில் வெளியில் கிளம்ப உந்தித் தள்ளும் மன இறுக்கமும் பணம் இல்லாமல் தடுத்து நிறுத்தப்படும் எண்ண ஓட்டமும் கெளரவம் என்ற பண்பாட்டின் செயல்பாடுகள் தகர்ந்துவிடுமோ என்ற சூழலும் காசு இருக்கும்போது ஒருவரும் உதவி கேட்பதில்லை பணம் இல்லாதபோது கேட்டு வரும் நிதி வசூல் செய்பவர்களையும் நினைத்துப் பார்க்கும் கையறுநிலை ஒவ்வொரு மனிதனின் மனப்போக்கையும் எளிதில் சொல்லிவிடும் அல்லது பிரதிபலித்துவிடும் தன்மை கொண்டது. குடும்ப உறவில் வாழ்ந்தாலும் கணவன் வரவு செலவு என்றும் மனைவி வரவு செலவு என்றும் வருமானத்தின் போக்குகளைப் பதிவு செய்யும்போது ஒவ்வொருவரின் சொந்த இருப்புக்கான வாழ்வியல் களங்கள் உருவாக்கப்படுவதும் அதில் ஒருவருக்கொருவர் கண்ணியத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத அறநெறியையும் இங்கே காண முடிகிறது. வீட்டில் மாடு, பால், தயிர் மூலம் வருகின்ற பணம் மனைவியின் இருப்பில் இருப்பதும் இவற்றை எதிர்பார்க்கக் கூடாது என்ற தற்கெளரவமும் கணவனின் நிலை உணர்ந்து இருபது ரூபாய் நோட்டை நீட்டும் மனைவியின் இணைச்செயலும் இருவருக்குமான வாழ்வியல் பிணைப்பை உறுதி செய்கின்றன.

    அவர் நடந்து செல்லும் கம்பீரமும் தன்னம்பிக்கையும் அவர் சட்டைப் பையில் திணிக்கப்பட்ட இருபது ரூபாயில் இருந்து உயிர் பெற்றது. மனிதனுக்கு என்ன தான் சொத்துடைமை இருந்தாலும் காசில்லாமல் ஊர் சுற்றுவது, மனநிலை ரீதியில் முடியாத செயலாக இருக்கிறது. உடலில் உயிர் இருப்பது போல மனித இயக்கத்தில் பணம் உயிர்நாடியாக மாறிப்போன பணப் பண்பாட்டைப் பதிவு செய்கிறது பலம் சிறுகதை. உடல் வலிமை தாண்டி பணமே உளவலிமை என்றான காலத்தைப் பிரதியிலிக்கும் அற்புதக் கதை இது.

    Share
  • குயிலின் அமுத கானம் – 14

    குயிலின் அமுத கானம் – 14

    இன்று காலை, குயில் அருளிய அமுத கானம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கருவேப்பிலைப் பழம்

    கருவேப்பிலைப் பழம்

    கருவேப்பிலையைச் சமையலில் சேர்க்கின்றோம். அதன் சுவை என்னவென்று நமக்குத் தெரியும். ஆனால், கருவேப்பிலைப் பழத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியுமா? நம்ம வீட்டுக் கருவேப்பிலை மரத்திலிருந்து இன்று பெற்ற அனுபவம், இதோ.

    படப்பதிவு – ஹேமமாலினி லோகநாதன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 133 (ஆவதென்)

    சேக்கிழார் பாடல் நயம் – 133 (ஆவதென்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    97. ‘ஆவது என் ? இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்
    போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல்
    மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்பு உற விரையா நிற்கும்
    தேவர் அங்கு இருப்பது எங்கே ? போகு’ என்றார் திண்ணனார் தாம்

    வரலாறு

    வேட்டைக்கு  அணுக்கத் தொண்டர்களுடன்  சென்ற திண்ணன், நெடு நேரம் நெடுந்தூரம் சென்று ஒரு காட்டுப்பன்றியை இரண்டாக்கி  வீழ்த்தி  நின்றான்! அவனை வந்தடைந்த  காடனும் நாணனும் இச்செயலைக் கண்டு வியந்தனர். பசியைப் போக்கிக்கொள்ள  எண்ணி, அதனை அறுத்துச்  சுட்டு உண்ண முயன்றனர்! காட்டுச் சுள்ளிகளில் தீ மூட்டிய போது, ‘’உண்பதற்குத்  தேவையான  குடிநீர்  எங்கே உள்ளது?’’ என்று திண்ணன் கேட்டான். உடனே, நாணன் ‘’இப்பெரிய தேக்குமரச்   சோலையைத் தாண்டி அப்புறம் சென்றால் நீண்ட மலையடிவாரத்தில்  நீர்நிறைந்து ஓடும் பொன்முகலி ஆற்றைக் காணலாம்’’ என்றான். உடனே திண்ணன்  அங்கே சென்றபின் இதனை உண்ணலாம் , எடுத்துக் கொண்டு வாருங்கள்!’’ என்று கூறி அந்த இடம் நோக்கிச் சென்றான்! வாறு அரைக்காத தூரம் நடந்த போது, சிவந்த கண்ணை உடைய காளையை  உடைய சிவபிரான்  எழுந்தருளும் திருமாளை சாரலில் உள்ள சோலையை அடைந்தனர். ‘’இதோ, நம்முன்  தோன்றும் இக்குன்றில்  ஏறுவோம்! ‘’ என்று திண்ணன் கூற, நாணன் ‘’ இக்குன்றில் நற்காட்சி  கிட்டும்! இங்கே மலைமேல் கோணம் இல்லாத குடுமித்தேவர் இருப்பார், கும்பிடலாம்!’’ என்றான். சைவநெறியின்  ‘ நற்காட்சி, இறைவன் இருப்பு, தரிசனம் ‘ ஆகியவற்றைத்  திண்ணனுக்கு  நாணன்  உபதேசித்த சிறப்பைக் கண்டோம்! அப்போது திண்ணனின்  உள்ளத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி  மிக்க  அனுபவத்தைச் சேக்கிழார்  கூறுகிறார்!

    பாடல்

    “ஆவதென்? இதனைக் கண்டு  இங்கு  அணைதொறும்  என்மேல்  பாரம்
    போவது  ஒன்று உளது போலும் ; ஆசையும் பொங்க  மேன்மேல்
    மேவிய நெஞ்சும் வேறு  ஓர் விருப்பு உற  விரையா நிற்கும்;
    தேவர்  அங்கு இருப்பது  எங்கே? போது ” என்றார் திண்ண னார்தாம்.

    பொருள்

    “இவ்வாறு ஆவது என்னை? இம்மலையைக்கண்டு இவ்விடத்தே அணுகிச் செல்லுந்தோறும் என்மேல் உள்ள பாரம் குறைவது போல அனுபவம் உளதாகின்றது; ஆசையும்பொங்கி மேலும்மேலும் பொருந்திய நெஞ்சமும் வேறொரு விருப்பம் கொண்டதாக விரைந்துசெல்லாநிற்கும்; அங்கே தேவரது இருப்பிடம் எங்குள்ளது? போவாயாக” என்று திண்ணனார் கூறினார்.

    விளக்கம்

    கண்டுஇங்கு அணைதொறும்என்ற தொடர், மேலே  கூறியபடி பேசிக் கொண்டு இருவரும் மலையைநோக்கி நடந்து செல்கின்றார்களாதலின் இவ்வாறு கூறினார்.

    போவது போலும் உளது – . அடிபெயர்த்து வைக்குந்தோறும் அவ்வளவிற்குச் சிறிது சிறிதாய்  என்பாரம்   குறைவது போன்ற அனுபவம் நிகழ்கின்றது. போலும்  என்ற சொல்  போல்வதாகிய நிகழ்ச்சி.

    ஒவ்வொன்றாய்க் குறையும்அளவு,  உளது ஒன்று போவது என்றும், அணைதொறும் என்றும் கூறினார்.

    ஆசையும் பொங்கி  என்ற தொடர்,  தோன்றும் குன்றில் நண்ணுவோம் என்று முன்னர் எழுந்த ஆசையும் பொங்கியதைக்   குறித்தது. அவ்வாறெழுந்த ஆசை அடங்காது மேலும் மேலும் பொங்கி வளர்ந்தது என்க.

    நெஞ்சும் – விரையாநிற்கும் என்பது , மனவேகத்தைக்  குறித்தது. உடல் அணைவதன் முன்னே நெஞ்சு மிக விரைகின்றது. நெஞ்சும்- உடலோடு  மனத்தையும்  குறித்தது. கம்பராமாயணத்தில்  இராமனைக்  கண்ட அனுமன் உள்ளத்தில்  நிகழ்ந்த மாற்றங்களை,

    ‘’துன்பினை துடைத்து மாய தொல் வினை-தன்னை நீக்கி
    தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம்
    என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல்
    அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன்’’

    என்ற  பாடலில் காணலாம்.

    வேறுஓர் விருப்புஉற –  வேட்டையாடி உண்ணும் விருப்பத்திலிருந்து வேறு பட்ட  இறைநாட்டம்  பெற்ற  இயல்பு! காணவேண்டுமென்னும் ஆசையே யன்றி, இன்ன தென்றறியப்படாத மற்றோர் விருப்பமும். இன்னதென்று உணரவாராமையின் வேறுஓர் என்றார். இது முன்னைப்பிறவியின் தொடர்ச்சிபற்றி இவருள்ளத்தில் எழுந்தது.

    கம்பராமாயணத்தில்  அனுமன் வீடணன் இராமனிடம்  வந்த  போது, அவன் அரசாட்சியை அடைவதற்கு  மேலாக இறைவனைச் சரணடையும் ஆசையும்  அவன் பால்  இருந்தது  என்பதைக்

    ‘’கருத்து உற நோக்கி போந்த காலமும் நன்று காதல்
    அருத்தியும் அரசின் மேற்றே’’

    என்று கூறுவதும், இங்கு  நோக்கத்தக்கது.

    “முந்தை யறிவின் றொடர்ச்சியினால் முகைத்த மலரின் வாசம்போற்,
    சிந்தை மலர உடன்மலருஞ் செவ்வி யுணர்வு”

    என்ற சண்டீசநாயனார் புராணமும்,

    “ஒருமைக்கண்  தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும்  ஏமாப் புடைத்து”

    என்ற திருக்குறளும் இக்கருத்தை விளக்குவன.  “முன்பு செய் தவத்தி னீட்டம்” என்று பின்னர்க் கூறுவதும் காண்க.

    தோன்றுங் குன்றில்  நண்ணுவோம் என்று முன்னர் எழுந்த ஆசை இவராற் காரணமறியப்பட்டதும் இங்கு உறும் வேறு ஓர் விருப்பம் காரணம்  அறியப்படாததும் ஆம்.

    தேவர் என்று  நாணன் சொல்லியதனால் இவர் அறிந்த குடுமித்தேவர். அங்குத் தேவர் எங்கே இருப்பது? என்க. எங்கே – மலையில் அவர் இருப்பதாகக் குறித்த இடம் எது? என்றபடி. அங்கு – அக்குன்றில் – சேணுயர்மலையில். போது – போவாயாக.

    தத்துவ தாத்துவிகங்களாகிய தொண்ணுற்றாறும்  தன்னின் வேறாகக்கண்டு கடந்த நிலையில், உடல்முதலிய கருவிகரணங்கள் பாரமாகக்காணப்பட்டுக் கழல்வனவாம். அதுவரை அவற்றிற்  பற்றுண்டு அவற்றைச் சுமை என்று உணராது சுகமென்றும், அவற்றையே தான் என்றும் கண்டு, சுமந்து திரிந்த உயிர் இப்போது சுமை என்று அறிந்தது. பெரும்பாரம் சுமந்திளைத்தவன் அதுகுறையக்  குறையக் களிப்பது போல, இந்நிலையடைந்த உயிரும் களிப்படையும். இப்பாரம் குறையக் குறைய இறைவனை அணையும் ஆசையும் மிகும். அதுவரை ஆணவத்தோடு ஒற்றித்து நின்று அறிவிழந்த உயிர் அதன்கண் உவர்ப்படைந்து, அதனை  விட்டுப் பின்னர் மெய்ஞ்ஞானத் தாணுவினோடு ஒற்றித்து நிற்கத் தலைப்படும்.

    “துருத்தியாங் குரம்பை தன்னில்  தொண்ணூற்றங்கு  அறுவர்  நின்று
    விருத்திதான் தருக வென்று வேதனை பலவுஞ் செய்ய
    அருத்தியால் வல்ல வாறு வந்துவந் தடைய நின்ற
    அருத்தியார்க் கன்பர் போலும்  அதிகைவீ ரட்டனாரே!

    என்ற அப்பர் திருநேரிசைக் கருத்தையும் காண்க. இந்த அருத்தியே  கம்பராமாயணத்தில்  எடுத்துக் கொள்ளப்பெற்றது. இவ்விளைவின் தன்மை இப்பாட்டில்   திண்ணனார் தம் அனுபவநிலையைக் கூறும்வகையாற் குறிக்கப்பட்டது. இது 96 பாட்டுக்களையுங் கடந்த மேல் 97-வது திருப்பாட்டாக அமைந்த தெய்விக அமைப்பும் காண்க. மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையை அடையும்போது இத்தன்மைத்தானதொரு நிலையை அடைந்தனர். இதனை,

    பித்திது  எனப்பிறர்  நகைக்க  வரும் நாலாம்
    சத்திபதி   யத்தமது  சத்தறிவு  தன்னைப்
    பொத்திய   மலத்தினும்  வெரீஇச்சுமை   பொறுத்தோன்
    ஒத்துஇழி  பிணிப்புறும்  ஒருத்தனையும்   ஒத்தார்.

    எனப்பாடுகிறது. இப்பாடல் இறைவனருள்  வாய்க்கப் பெற்ற உயிர்கள் அடையும்  பல்வகைப் படிநிலைகளை  அறிமுகப் படுத்துகிறது. இறைவன் அருள் வாய்த்தமையால்   திண்ணன், திண்ணனார்  எனப் போற்றப்  பெற்ற  சிறப்பை இப்பாடலில் கண்டு கொள்க.

    Share
  • மாட்டின் கொம்பில் இருப்பது என்ன?

    மாட்டின் கொம்பில் இருப்பது என்ன?

    இந்த மாட்டின் கொம்பில் இருப்பது என்ன? உரிமையாளர் ஏதோ ஒரு பொருளைத் தன் வீட்டில் கொண்டு சேர்க்க, சாமர்த்தியமாக இந்தப் பையைத் தொங்கவிட்டிருப்பது போல் தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 19

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 19

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள் – 5

    முன்னுரை

    உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியரே இலக்கியம், இலக்கணம் என்னும் இரண்டனுக்கும் உரைகண்ட சான்றோர். பரிமேலழகரின் திருக்குறள் இலக்கிய உரையை அறிஞருலகம் இலக்கண உரை என்றே பெருமைப்படுத்தும். அச்சிறப்பு நச்சினார்க்கினியருக்கும் பொருந்தக்கூடும். இவருடைய இலக்கண உரைகளில் இலக்கிய மணம் வீசும். இலக்கிய உரைகளில் இலக்கணத் தெளிவு மேலோங்கி நிற்கும். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சிந்தாமணி முதலிய நூலுரைகளைக் கற்பார் இதனை அறியலாம். ஆழ்ந்த தமிழ்ப்புலமை, பல்லாயிரம் வரிகளை மனத்துக்குள் இருத்திக்கொள்ளும் பேராற்றல், ஆராய்ச்சி அறிவு, பல்துறை அறிமுகம், மக்களின் நடப்பியல் வாழ்வியல் நெறிகள் பற்றிய நோக்கு, வடமொழிப் புலமை என்னும் இவற்றின் பரிமாணமாக விளங்கும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரைப்பகுதிகளில் காணப்படும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    இலக்கியத்துள் காணும் இலக்கண நுட்பம்  

    நச்சினார்க்கினியர் உரைக்கருத்துக்களில் மட்டும் பிற உரையாசிரியர்களிடமிருந்து வேறுபடுபவரல்லர். அவருடைய பரந்துபட்ட இலக்கியப் புலமை இலக்கண உரைக்குப் பயன்படுவதைப் போலவே ஆழமான இலக்கணப் புலமை  இலக்கிய உரைகளுக்குப் பயன்படுகிறது. எனவே இருவகை உரைகளிலும் அவ்விருவகை உரையாசிரியர்களிடமிருந்து நோக்கு, உத்தி முதலிய எல்லாவற்றிலும் மாறுபடுகிறார். இலக்கியங்களை எடுத்துக்காட்டி இலக்கண விளக்கம் தரும் நச்சினார்க்கினியர்  இலக்கிய வரிகளையே உவமமாக்கி விளக்கம் தருவதும் உண்டு. ஏனைய உரையாசிரியர்களும் இவ்வாறு உரைவிளக்கம் செய்தாலும் இவருடைய இலக்கியப் புலமை தனித்தன்மை மிக்கதாய் விளங்குகிறது.

    விளியேற்பதில் உயிரீறும் மெய்யீறும்

    பெயர்ச்சொற்கள் இயல்பாக நின்றும் விளியாகும். சில மாற்றங்களைக் கொண்டும் விளியாகும். அத்தகைய மாற்றங்களுள் அஃறிணைப் பெயர்களும் அடங்கும். அவ்வஃறிணைப் பெயர்கள் விளியேற்குங்கால் இறுதி பற்றி மாறுபடும்.  புள்ளியீற்று அஃறிணைப் பெயர்களும் உயிரீற்று அஃறிணைப் பெயர்களும் விளியேற்குங்கால் ஏகாரம் பெறும் என்பது விதி.

    புள்ளியும் உயிரும் இறுதி யாகிய
    அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
    விளிநிலை பெறூஉம் காலந்தோன்றின்
    தெளிநிலை உடைய ஏகாரம் வரலே”151

    என்னும் நூற்பாவில் இந்தக் கருத்து பெறப்படுகிறது. மரம், ‘மரமே!’ என்றும் அணில் ‘அணிலே!’ என்றும் நாய் ‘நாயே!’ என்றும் புலி ‘புலியே!’ என்றும் விளிக்கப்படும்.   இவ்வாறின்றி ஏகாரம் பெறாமலும் விளியேற்கும் நிகழ்வுகளை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன. அஃறிணை நோக்கிப் புலம்பும் தலைமக்கள் கூற்று அவ்வாறு அமைந்திருக்கின்றன. அத்தகைய பயன்பாடு முழுவதையும் தொகுத்துத் தர எண்ணும் நச்சினார்க்கினியர் சிலவற்றை மட்டும் உவமமாகக் காட்டி விளக்குவதைக் காணமுடிகிறது.

    “வருந்தினை வாழி என் நெஞ்சம்!’ (அகம் -19:2)

     ‘கருங்கால் வெண்குருகு! ஒன்று கேண்மதி.’ (நற். 54)

    என்றாற் போலப் “பிறவாற்றான் விளி ஏற்பனவும் கொள்க”. மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் ‘நெஞ்சம்’ என்னும் மகர ஈறு ‘நெஞ்சம்’ என்றும், குருகு என்னும் உகர ஈறு ‘குருகு’ என்றும் விளிகொள்வதைக் காணலாம். சேனாவரையர் இத்தகைய எடுத்துக்காட்டுக்களைத் தந்து ‘தொடக்கத்தன’ என அமைதி கொள்கிறார். நச்சினார்க்கினியர் இவற்றை உவமமாக்கி, இவைபோல விதிக்கு வேறுபட்டும் வேறு சில நெறிகளிலும் விளியேற்பன உளவென விளக்குவதைக் காணலாம். அஃறிணைப் பெயர்களில் மகர ஈறும் உயிரீறும் வேறுவகையாக விளிகொள்ளும் பாங்கு இலக்கியங்களில் செறிந்து கிடக்கும் அளவையும் நுட்பத்தையும் நோக்கி அவற்றுள் சிலவற்றை உவமமாக்கிக் கூறும் நச்சினார்க்கினியரின் உவமத்திறன் போற்றத்தக்கதாய் உள்ளது.

    எழுத்தும் இறைவனும்

    அகர முதல் னகர இறுவாய் முப்பது எழுத்துக்களும் முதல் எழுத்துக்கள் எனத் தொகுத்துச் சொன்ன தொல்காப்பியம் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு, மெய்யெழுத்துக்கள் பதினெட்டு என்பதைப்பின்னாலே விவரிக்கிறது.  அவற்றுள் உயிரெழுத்துக்களைக் கூறும் நூற்பா,

    ஔகார இறுவாய்ப்
    பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப” 8

    என்றவாறு அமைகிறது. இந்த நூற்பாவின் விளக்கத்தில் நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் உவமத்தின் கொடுமுடியையும் அவருடைய ஆழமான பக்தியையும் சித்தாந்தப் பார்வையையும் ஒருங்கே காட்டுகிறது எனலாம். உயிரெழுத்துக்கள் மெய்களை இயக்குவதால் தனியாக அவை உயிரெனப்படுமா என்னும் ஐய வினாவை அவராகவே எழுப்பிக் கொண்டு அதற்கான விளக்கத்தையும் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

    மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வரிவடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்குமேல் உயிரென வேறோர் எழுத்தின்றாம் பிறவெனின், “மெய்யில் நிற்கும் உயிரும் தனியே நிற்கும் உயிரும் வேறென்க.! என்னை? ‘அகர முதல’ (குறள் – 1) என்றுழி அகரம் தனியுயிருமாய்க் ககரவொற்று முதலியவற்றிற்கு உயிருமாய் வேறு நிற்றலின். அவ்வகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அம்மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாதலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதொரு தன்மையையுடைத்தென்பது கோடும்,. “இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல

    உவமத்தை உவமத்திற்காகவே சொல்லுவது வேறு. இலக்கியத்தின் பயன்நோக்கிக் கையாள்வது என்பது வேறு. ‘அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயன்’ என்னும் தமிழிலக்கியப் பயன் கோட்பாடு காணப்படுவது இலக்கணத்திலேயே என்பதை நன்குணர்ந்த நச்சினார்க்கினியர் இலக்கண விளக்கத்திற்காகக் கையாளப்படும் உவமமும் கற்பாருக்கு நாற்பொருளையும் பயத்தல் வேண்டும் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் உவமம் கூறுவதைக் காணமுடிகிறது. முதற் குறட்பாவில் கடவுளின் உண்மையை, அதாவது கடவுள் இருக்கிறார் என்னும் அவரது இருப்பைக் கூறிய திருவள்ளுவரை நினைவுபடுத்தி மொழியிலக்கணம் கற்கின்ற மாணவருக்கும் அவ்வுண்மையை உணர்த்த வேண்டும் என்னும் கடமை உணர்வோடு சிந்திக்கத்தக்கதோர் உவமத்தை நச்சினார்க்கினியர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை அறியலாம். அதாவது உயிரின்றேல் மெய்யின் இயக்கம் இல்லை. இறைவன் இன்றேல் உலக இயக்கம் இல்லை என்பதாம்.

    உயிருக்குள் அகரமுண்டா?

    மெய்கள் இயங்குதற்கு அகர உயிர் காரணமென்பதைத் தொல்காப்பியம்,

    ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ 46

    என்னும் நூற்பாவில் விளக்குகிறது. தனிமெய்களினது நடப்பு அகரத்தொடு பொருந்தி நடக்கும் என்பது இதன் பொருள். நடப்பு என்பது ஒலிவடிவையும் வரிவடிவையும் குறிக்கும் அகரம் தவிர்த்த ஏனைய உயிர்கள் இயங்குவதற்கு அகரம் காரணமாவது யாங்ஙனம்? இதுபற்றித் தொல்காப்பியம் கூறியிருக்கிறதா என்னும் வினாவை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தாமே எழுப்பிக் கொண்டு அதற்கான விடைகாண முயல்கிறார். சென்ற பத்தியில் விளக்கிய அவ்வுவமத்தின் பேராற்றலை முற்றும் உணர்ந்தவராய் எழுதுகிறார்.

    இங்ஙனம் மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு கூறினாற்போல பதினோருயிர்க்கண்ணும் அகரம் கலந்து நிற்கும் என ஆசிரியர் கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு என்று உணர்த்துதல் அரிதாகலானுமென்று உணர்க

    இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும்  பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது’.

    அகரமுதலஎன்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம், அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றாலும், கண்ணன்எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானேஎனக் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க

    என்பது நச்சினார்க்கினியரின் உவம விளக்கம். உயிர் மற்றும் மெய் ஆகியவற்றின் இயக்கத்திற்கு அகரமே காரணமாகி நிற்கும் நுண்ணியத்தை   இறைத்தன்மையை  உவமமாக்கி விளக்கும் நச்சினார்க்கினியர், வள்ளுவர் கூறிய உவமத்தையும் வழிமொழிவதைக் காணமுடிகிறது.

    நிலத்தது அகலம் போல

    குற்றியலுரகத்தை நெடில், உயிர், வன்மை, மென்மை, இடைமை, ஆய்தம் என்னும் ஆறுவகையாகப் பாகுபடுத்தினர் இலக்கண ஆசிரியர்கள். தொல்காப்பியம் இதனை,

    நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
    குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே” 36

    என்னும் நூற்பாவில் சிந்திக்கிறது. “வல்லெழுத்துக்கள் ஆறினையும் ஊர்ந்து நெட்டெழுத்தின்பின்னும் ஐவகைத் தொடர்மொழியின் இறுதியிலும் நிற்றல் வேண்டும்” என இதற்கு நச்சினார்க்கினியர் பதசாரம் தருகிறார். குற்றியலுகரத்தின் முன்னெழுத்து கொண்டு பெயர் பெறுவது ஆறுவகைக்கும் பொதுவாக இருந்தாலும் தொல்காப்பியம் நெடில் தொடரைத் தனித்து ‘நெட்டெழுத்து இம்பரும்’ எனப் பிரித்தாளுகிறது. இது பற்றிச் சிந்திக்கும் நச்சினார்க்கினியர், உண்மையில் இது பிரிப்பன்று. ஈரெழுத்தில் அமையும் நெடில் தொடரும் தொடர் மொழியில் அமையும் ஏனைய ஐவகைக் குற்றியலுகரமும் ஈறுபற்றியதே. எனவே இதனைத் தனியாகக் கருதுதல் வேண்டாம்.

    நெட்டெழுத்தினது பின், தொடர்மொழி ஈறு என்பன நிலத்தது   
    அகலம் போல ஒன்றியற் கிழமைப்பட்டு நின்றன.”

    என்பது நச்சினார்க்கினியரின் உவம விளக்கம். இந்த விளக்கத்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் தனியாகாது, ஏனைய ஐந்துடன் ஒன்றி, ஆறே என்பதைப் பெறவைக்கிறார். வைத்து, தமது அளப்பரிய நினைவாற்றலுடன் “தொடர் மொழியீற்று” (36) வருமென்று ஆண்டுக் கூறியதனை ஐந்து வகைப்படுத்தி, அதனோடு நெட்டெழுத்து இம்பரும் என்றது ஒன்றேயாதலின் அதனையும் கூட்டி அறுவகைத்தென்றார்” (406) என்று நினைவூட்டுகிறார். நிலத்தது அகலம் என்னும் உவமம் குற்றியலுகரம் ஆறே என்பதை உறுதி செய்கிறது எனலாம்.

    நிறைவுரை

    இலக்கியத்திற்கு உரை எழுதுங்கால் இலக்கணத்தை மறக்காமலும் இலக்கணத்திற்கு உரைகாணுங்கால் இலக்கிய உணர்வோடும் எழுதுவது நச்சினார்க்கினியருக்கே உரிய சிறப்பு. இலக்கியப் பகுதிகளையே இலக்கண விளக்கத்திற்கு உவமமாக்கும் அவர், தமிழ்மொழியின் ஏனைய எழுத்துக்களில் அகரத்தின் ஆதிக்கத்தை இறைவனோடு பொருத்தி நோக்கிப் பொருத்தம் காட்டுகிறார். திருக்குறளின் உவமக் கோட்பாட்டில் ஈடுபாடு காட்டுகிறார். தலையின்றிக் கூந்தல் இல்லையாதல்போல நெடில்தொடர் இன்றிக் குற்றியலுகரம் நிறைவு பெறாது என்பதை ‘நிலத்தது அகலம்’ என்னும் உவமம் கொண்டு விளக்குகிறார். பானைச் சோற்றுக்குப் பதசோறாக அமைந்த இந்தக் கட்டுரை நச்சினார்க்கினியரின் ஏனைய இலக்கண, இலக்கிய உவமங்களைக் கண்டறிந்து துய்ப்பதற்கு ஏதுவாகலாம்.

    (தொடரும்…)

    Share
  • பச்சைச் சூரியன்

    பச்சைச் சூரியன்

    2021 ஜூன் 13 அன்று மாலை சென்னையில் பலத்த காற்றுக்கு நடுவே பச்சைச் சூரியனைத் தரிசித்தேன். இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வடதுருவக் கடற்பனிப் பரப்பளவு, முந்தைய கணிப்பை விட இரண்டு மடங்கு சுருங்கிவிட்டது

    வடதுருவக் கடற்பனிப் பரப்பளவு, முந்தைய கணிப்பை விட இரண்டு மடங்கு சுருங்கிவிட்டது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    • Arctic sea ice may be thinning twice as fast as previously thought, scientists say
    • The discovery raises concerns that parts of the region could be ice-free by 2040
    • It would cause global temperatures to rise and increase risk of extreme weather
    • Previous snow data was outdated and relied on Soviet expedition measurements

    Concerning: Sea ice in much of the Arctic may be thinning twice as fast as previously thought, scientists fear. The research vessel Polarstern is pictured drifting in Arctic sea ice

    Concerning: Sea ice in much of the Arctic may be thinning twice as fast as previously thought, scientists fear. The research vessel Polarstern is pictured drifting in Arctic sea ice

    Arctic seas: Researchers studied sea ice thickness in all seven Arctic coastal seas (pictured). In Laptev, Kara and Chukchi, waters increased by 70 per cent, 98 per cent and 110 per cent respectively, when compared with earlier calculations

    Arctic seas: Researchers studied sea ice thickness in all seven Arctic coastal seas (pictured). In Laptev, Kara and Chukchi, waters increased by 70 per cent, 98 per cent and 110 per cent respectively, when compared with earlier calculations

    Calculations: Researchers used new computer models to produce detailed snow cover estimates from 2002 to 2018 (pictured in red). These are more accurate than previous data from Soviet expeditions between 1954 and 1991 (green) and a modified version of these recordings which account for changes in sea ice throughout the year (blue)

    Calculations: Researchers used new computer models to produce detailed snow cover estimates from 2002 to 2018 (pictured in red). These are more accurate than previous data from Soviet expeditions between 1954 and 1991 (green) and a modified version of these recordings which account for changes in sea ice throughout the year (blue)

    Weakened ice sheets West Antarctica and Greenland, combined with the Atlantic Gulf stream and Amazon rainforest, could cause a 'climate domino effect'

    SEA LEVELS COULD RISE BY UP TO 4 FEET BY THE YEAR 2300 

    பூகோளச் சூடேற்றத்தால் மாறும் கடல் மட்ட உயர்ச்சி, தாழ்ச்சி நிகழ்வுகள்

    பூகோளக் காலநிலை மாற்றங்கள் புவியின்பனிதட்டுகளைத் தொடர்ந்து பலவீனப் படுத்தி, கடல்நீர் உஷ்ணத்தை உயர்த்தி, பனித்தட்டுகளும், க்டலும் ஒன்றை ஒன்று பாதித்து, உலக மாந்தருக்கு, காலநிலைச் சுழல்வீக்க விளைவை [Climate Domino Effect] உண்டாக்கியுள்ளன. இந்த புதிய காட்சிகளைப் புவித்தளக் கொந்தளிப்பு விளைவு [Earth System Dynamic] என்னும் புத்தகம் வெளியிட்டுள்ளது.

    2300 ஆண்டு காலத்தில் கடல்நீர் மட்டம் 4 அடி [1.2 மீடர்] உயர்ந்து விடும் என்று அச்சம் ஊட்டுகிறது புது வெளியீடு.

    2020 ஆகஸ்டு மாதம் ஜெர்மெனி நிபுணர், கீரீன்லாந்து 532 கிகா டன் [giga ton (1 gega ton = 1 X10^9 ton] பனிப் பளுவை இழந்துள்ளது என்று அறிவித் துள்ளார். இதுபோல் பேரளவு பனிப்பளு உருகி இழக்கப் படவில்லை என்றும் கூறியுள்ளார்.

    1. மெலிந்து போகும் வடதுருவக் கடற்பனித் தட்டுகள் காலநிலைச் சூடேற்றச் சுழல்வீக்க விளைவினை உண்டாக்கும்.
    2. ஆய்வாளர் மேற்கு அண்டார்க்டிகா, கிரீன்லாந்து, சூடான அட்லாண்டிக் வெப்ப ஓட்டப் பகுதி,, அமேசான் பெருமழைக் காடுகளை எடுத்துக்கொண்டார்.
    3. ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி, 2 டிகிரி செல்சியஸ் உஷ்ண உயர்ச்சிக்கு, மூன்று மில்லியன் கணனிப் போலிக் கணிப்புகள் [Computer Simulations] சூடேற்ற சுழல்வீக்கத்தை உறுதிப் படுத்தின.
    4. 2017 ஆண்டு முடிவு வரை, சுமார் 40% உலக ஜனத்தொகை கடற்கரை ஓரத்தில்தான் வாழ்ந்து பாதிக்கப் பட்டுளார்.

    Information:

    Melting ice sheets and rising sea temperatures could cause ‘climate domino effect,’ scientists warn | Daily Mail Online

    Global warming: Antarctica’s Pine Island glacier could COLLAPSE within 20 years, study warns | Daily Mail Online

    Share
  • போதி மரம்

    போதி மரம்

    பாஸ்கர்

    எழுபதுகளின் முடிவில் எம் ஜி ஆர் ஆட்சியில் மாணவர்களுக்குப் பதினைந்து ரூபாய் பஸ் பாஸ். இலவசமாக எங்கும் செல்லலாம். எங்களுக்குக் கொண்டாட்டம்-பிரயாணச் செலவு இல்லை. பசிக்குப் பொறை சிங்கள் டீ. எப்போதும் ஒரு நாயர் கடை எங்கேயும் உண்டு. படிப்பெல்லாம் பிடிப்பு இல்லை. வீட்டுக்காகக் கல்லூரிக்குச் சென்றோம். அரட்டை. சினிமா, பத்திரிகை சிவாஜி. இது தான் வாழ்க்கை. வாராவாரம் மாங்காடு, திருவேற்காடு. எங்கள் கும்பலின் அலட்டல் பேச்சு, பேருந்து முழுக்கக் கேட்கும். எல்லோர் பார்வையும் எங்கள் மீது. இதில் நடுவே ஆங்கில அலட்டல் வேறு.

    சிறு வயசு. என் பக்கத் துணை சந்திர மௌலி. சுருக்கமாய் மௌலி. காலை அஞ்சு மணிக்குக் கச்சேரி ஆரம்பம். இந்த பாசில் சுற்றாத ஊர் இல்லை. படிப்பறிவு குறைவாய் இருந்த எனக்குப் பள்ளியில் தர்ம பாஸ். கல்லூரியில் பஸ் பாஸ். எல்லாம் மடியில் விழுந்த ஆப்பிள். பல்லவனில் எல்லாத் திசையும் எங்களுக்கு அத்துபடி.. சில இருக்கைகளில் எங்கள் பெயரும் இருக்கும். எல்லாம் எங்கள் பால்பென் கைவண்ணம். வாழ்க்கை எல்லோரையும் ஈர்க்கவே என்று ஆணித்தரமாய் நம்பின காலம்.

    இந்த மயக்கம் அந்த வயதில் நிஜம். ஆனால் படிப்பு அதற்கு விலை என்பது எனக்குப் புரிய கொஞ்ச காலமானது. சேர்ந்து அரட்டை அடித்த கூட்டம் தனித்தனியாகப் படிக்கச் செல்ல நான் தனியானேன். மூணு வருஷம் காணாமல் போனது அன்று தான் தெரிந்தது. பெரிய வலி. நான் இன்னும் பட்டதாரி இல்லை எனப் புரிந்த பெரிய வலி. இனி காலை எழுந்து கல்லூரிக்கு வர வேண்டாம் என்பது சந்தோஷம் இல்லை. பெரிய துக்கம். புத்திசாலி இல்லையெனினும் என் காதல், அந்த கல்லூரி மேல் படர்ந்து இருந்தது.

    இந்த வலியில் இரண்டு மாதம் கழித்து பரீட்சை எழுதப் பேருந்தில் அமர்ந்தேன். டிக்கெட் டிக்கெட் என நடத்துர் என்னைக் கேட்க, வேதனையான தொண்டையில் ஜெயின் காலேஜ் ஒன்னு என்றேன். என் வலி அவருக்குத் தெரியாது. விவரம் தெரிந்து நான் வாங்கின முதல் டிக்கெட். என்னால் இருக்கையில் கர்வமாய் அமர முடியவில்லை. மூணு வருஷப் படிப்பைத் தாண்டி அந்த பஸ் பிரயாணம் எனக்கு ஒரு போதி மரம்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(354)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(354)

    இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங்
    கழிபே ரிரையான்க ணோய்.

    – திருக்குறள் – 946 (மருந்து)

    புதுக் கவிதையில்...

    அளவறியாமல் உண்பதால்
    அடையும் இழிவினை
    அறிந்து,
    அளவோடு உண்பவனிடம்
    அளவிலா இன்பம் நிலைத்திடும்..

    அதுபோல
    அளவே இல்லாமல்
    அதிக உணவு உண்பவனிடம்
    அகலாமல் நோய் நிலைக்குமே…!

    குறும்பாவில்...

    இழிவறிந்தே அளவாய் உண்பவனிடம்
    இன்பம் என்றும் நிலைப்பதுபோல் அளவேயின்றி
    இரையுண்பவனிடம் நோய்தான் நிலைக்குமே…!

    மரபுக் கவிதையில்...

    உணவ ததிகமாய் உண்பதனின்
    உண்மை இழிவினை யறிந்தேதான்
    உணவை யளவாய் உண்பவனே
    உயர்வாய் இன்பம் பெற்றிடுவான்,
    உணர்வா யதனைப் போலத்தான்
    உரிய அளவினுக் கதிகமாகக்
    கணக்கே யின்றியே உண்பவனைக்
    கணமும் நீங்காப் பிணிகளுமே…!

    லிமரைக்கூ...

    உணவதிகம் உண்ணல் இழிவே,
    அறிந்தளவாய் உண்போனுக் கின்பம்போல் அளவிலாமல்
    உண்போனுக்குண்டு நோயால் அழிவே…!

    கிராமிய பாணியில்

    திங்காதே திங்காதே
    தீனிய அளவுக்குமிஞ்சி
    திங்காதே திங்காதே..

    அதிகமாத் திங்கிறது அழிவுங்கிறத
    அறிஞ்சியேதான்
    அளவோட திங்கிறவனுக்கு
    இன்பம் நெலச்சிருப்பதுபோல,
    அளவில்லாமத் திங்கவுனவுட்டு
    அகலாம நோயிதான் நெலச்சிடுமே..

    அதால
    திங்காதே திங்காதே
    தீனிய அளவுக்குமிஞ்சி
    திங்காதே திங்காதே…!

    Share
  • அரசமரக் கன்றும் நவதானிய விநாயகரும்

    அரசமரக் கன்றும் நவதானிய விநாயகரும்

    பறவை எச்சத்தில் முளைத்த அரசமரக் கன்றை எடுத்துவந்து, அதனடியில் நவதானிய விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்கிறார், நாமக்கல் பாலமூர்த்தி. விநாயகருக்கு இருபுறமும் நாகர் சிலைகளுக்குப் பதிலாக, மரூள் தாவரத்தை நட்டுள்ளார். ஊரடங்கின் காரணமாக, கோவிலுக்குச் செல்ல முடியாத நிலையில், வீட்டுத் தோட்டத்திலேயே இயற்கையாக ஒரு கோவிலை எழுப்பியுள்ளார். இந்தப் புதிய முயற்சியைப் பாருங்கள், பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆண்குயில் – பெண்குயில் – காதல்

    ஆண்குயில் – பெண்குயில் – காதல்

    ஆண்குயிலையும் பெண்குயிலையும் ஒன்றாகப் பார்ப்பதே அரிது. அதிலும் அவை காதலிப்பதைப் பார்ப்பது இன்னும் அரிது. இதோ, இங்கே ஒரு பெண்குயிலை ஆண்குயில் எப்படி நெருங்குகிறது என்று பாருங்கள். இந்த நேரத்தில் ஆண்குயிலின் குரல் எப்படிக் குழைகிறது என்று கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இரஷியாவின் மகத்தான படைப்பாளி!

    இரஷியாவின் மகத்தான படைப்பாளி!

    -மேகலா இராமமூர்த்தி

    புதின எழுத்தாளர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாளர், தத்துவவாதி எனும் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட மாபெரும் படைப்பாளி, இரஷியாவைச் சேர்ந்த பியதோர் தாஸ்தயெவ்ஸ்கி. சமூக, அரசியல் ஆன்மிகத் தளங்களில் மனித உளவியலை மிக ஆழமாக ஆராய்ந்தவை அவருடைய படைப்புக்கள்.

    மருத்துவர் மிகையில் தாஸ்தயேவ்ஸ்கி – மரியா தாஸ்தயேவ்ஸ்கயா (Mikhail Dostoevsky and Maria Dostoevskaya) இணையரின் இரண்டாவது மகனாக நவம்பர் 11 1821இல் இரஷியாவிலுள்ள மாஸ்கோவில் பிறந்தார் பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி.

    குழந்தைப் பருவத்திலேயே இலக்கியத்துடனான அறிமுகம் தாஸ்தயெவ்ஸ்கிக்கு கிடைத்தது. மூன்று வயதுக் குழந்தையாக அவர் இருந்தபோதே வீரக்கதைகளையும் சாகசக் கதைகளையும் அவருக்கு வாசித்துக் காட்டிய பாட்டி அலேனா புரோலோவ்னா (Alena Frolovna), வீர சாகசக் கதைகளில் தாஸ்தெயெவ்ஸ்கிக்கு ஆர்வமேற்படக் காரணமாக இருந்திருக்கிறார். அவருக்கு நான்கு வயதானபோது அவரின் தாயார் விவிலியத்தை (Bible) வாசித்துக் காட்டி அவருக்கு எழுதவும் படிக்கவும் கற்பித்திருக்கின்றார்.

    இரஷியாவின் புகழ்வாய்ந்த படைப்பாளர்களான புஷ்கின் (Pushkin), கரம்சின் (Karamzin), டெர்சாவின் (Derzhavin) ஆகியோரின் படைப்புகள், கெதே (Goethe), ஷில்லர் (Schiller) போன்ற ஜெர்மானியப் படைப்பாளர்களின் படைப்புகள், ஹோமரின் படைப்புகள் முதலியவற்றை இளம் வயதிலேயே அறிமுகப்படுத்தித் தாஸ்தயெவ்ஸ்கியின் வாசிப்புத்தளத்தை விரிவுபடுத்தி அவருடைய சிந்தனைத் திறனையும் கற்பனை வளத்தினையும் மேம்படுத்தியிருக்கின்றனர் அவரின் பெற்றோர்.

    கல்வியில் கண்டிப்பு மிகுந்தவராகத் தாஸ்தயெவ்ஸ்கியின் தந்தை இருந்திருக்கின்றார் என்று தெரியவருகின்றது. செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கிலுள்ள இராணுவப் பொறியியல் கல்லூரியில் தாஸ்தயெவெஸ்கியும் அவருடைய சகோதரர் மிகையிலும் (Mikhail) கல்வி பயின்றுகொண்டிருந்த காலத்தில் அவர்களின் அருமை அன்னை காசநோயால் பாதிப்புற்று இறந்தார்.

    அறிவியல், கணிதம், இராணுவப் பொறியியல் போன்றவற்றில் ஈடுபாடின்மையால் அந்தக் கல்லூரிப் படிப்பு தாஸ்தயெவ்ஸ்கிக்கு விருப்பமானதாயில்லை. எனினும், அதற்காகக் கல்வியைக் கைவிட்டுவிடாது கற்றுத்தேறி பொறியாளர் எனும் தகுதியோடு அந்தக் கல்லூரியிலிருந்து வெளியில் வந்தார் தாஸ்தயெவ்ஸ்கி. தாயார் இறந்த இரண்டாண்டுகளுக்குள் வருந்தத்தக்க வகையில் அவருடைய தந்தையும் மறைந்தார்.

    ஆகஸ்டு 12, 1843இல் லெப்டினண்ட் பொறியாளராகப் பணியில் சேர்ந்து தம் சகோதரர் மிகையிலின் நண்பரான ரிசன்காம்ஃப் (Rizenkampf) என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கினார் தாஸ்தயெவ்ஸ்கி.

    பிரெஞ்சு எழுத்தாளரான பால்சாக்கின் (Balzac) யூஜின் கிராண்டட் (Eugénie Grandet) எனும் புதினத்தை மொழிபெயர்த்து எழுத்துத் துறையில் அடியெடுத்து வைத்தார் தாஸ்தயெவ்ஸ்கி. அதைத்தொடர்ந்து மேலும் சில புதினங்களை அவர் மொழிபெயர்த்தார். எனினும், அம்மொழிபெயர்ப்புப் பணி அவருக்கு வெற்றியைத் தரவில்லை. போதாக்குறைக்கு அவருடைய சூதாட்டப் பழக்கங்களும், ஊதாரித்தனமான வாழ்க்கைமுறைகளும் அவரைப் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கின. இவற்றையெல்லாம் சமாளிக்க விரும்பித் தாமே புதினம் ஒன்றை எழுதும் பணியில் இறங்கினார்.

    அவ்வாறு தாஸ்தயெவ்ஸ்கி எழுதியதுதான் ஏழைமக்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஏழையினம் (Poor Folk) எனும் அவருடைய முதல் புதினம். ஒன்பது மாதங்களில் அப் புதினத்தை எழுதி, 1845ஆம் ஆண்டு மே மாதம் அவர் வெளியிட்டார். ஏழை மக்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான உறவையும் உணர்வுபூர்வமாய்ப் பேசுகின்ற அந்தப் புதினத்திற்குச் சிறந்த சமூகப் புதினம் எனும் பாராட்டை வழங்கினார் இரஷியாவின் புகழ்பெற்ற இலக்கிய விமரிசகரான பெலின்ஸ்கி (Vissarion Belinsky). இப் புதினத்திற்கு இரஷிய மக்களிடமும் நல்ல வரவேற்பு கிட்டியது.

    தம்முடைய இலக்கியப் பணிக்குத் தம் பொறியாளர் பணி இடையூறாக இருக்குமெனக் கருதிய தாஸ்தயெவ்ஸ்கி அப்பணியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் எழுதிய இரண்டாவது புதினம் ‘இரட்டையர்’ (The Double) என்பது. அதற்குக் கிடைத்த எதிர்மறையான விமரிசனங்கள் அவர் உடல்நிலையைப் பாதித்தன; எனினும், அவர் எழுதுவதை நிறுத்தவில்லை.

    1846க்கும் 1848க்கும் இடைப்பட்ட காலத்தில் பல சிறுகதைகளை எழுதி வெளியிட்டார் தாஸ்தயெவ்ஸ்கி. திரு. புரோகார்ச்சின் (Mr. Prohartchin), குடியிருப்புமனைக் கிழத்தி (The Landlady), பலவீனமான இதயம் (A Faint Heart), வெண்ணிற இரவுகள் (White Nights) ஆகியவை அவற்றுள் சில.

    இதில் வெண்ணிற இரவுகள் என்ற சிறுகதை, ஓர் இளைஞன் தன் சொந்தக் கதையைச் சொல்லுகின்ற வகையில் அமைந்தது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் தனிமையில் வாழ்கின்ற அந்த இளைஞன் ஓரிளம்பெண்ணைச் சந்தித்துக் காதல் கொள்கின்றான்; ஆனால் அவள் அவனைக் காதலிக்கவில்லை. காரணம் அவள் தொலைந்துபோன தன்னுடைய காதலனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள்; அவனும் ஒருநாள் வந்து சேர்கின்றான்; அவர்கள் இருவரும் இறுதியில் இணைகிறார்கள்.

    தாஸ்தயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டதே 2003ஆம் ஆண்டு திரு. ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த ’இயற்கை’ என்ற தமிழ்த் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், தாஸ்தயெவ்ஸ்கி எழுதிய இந்தச் சிறுகதைகள் எவையும் எதிர்பார்த்த வரவேற்பை இரஷிய மக்களிடம் பெறவில்லை. அச்சமயத்தில் அவரைப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து காத்தது, அவர் இணைந்திருந்த யுடோபியன் சோசியலிச பெடகாவ் வட்டமே (Utopian Socialist Betekov circle).

    அந்த வட்டம் கலைந்தபின்னர் 1846இல் கவிஞர் அலெக்சி ப்லஷேயேவ் (Aleksey Pleshcheyev) என்பவரின் தூண்டுதலினால் ’பெட்ராஷேவ்ஸ்கி’ என்ற இலக்கிய வட்டத்தில் (Petrashevsky Circle) இணைந்தார் தாஸ்தயெவ்ஸ்கி. இவ்வட்டம் இரஷியாவில் சமூகப் புரட்சிகள் நிகழவேண்டும் எனும் சிந்தனையைக் கொண்டிருந்தது.

    ஆதலால் இவ்வட்டம் குறித்து இரஷியாவின் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியான லிப்ராண்டி (Liprandi) என்பவரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    டிசம்பர் புரட்சி போலவோ, 1848இன் புரட்சிகள் போலவோ ஏதேனும் கிளம்பக்கூடும் என்று அஞ்சிய இரஷிய அரசாங்கம், தாஸ்தயெவ்ஸ்கியும் அவரது கூட்டாளிகளும் சதிகாரர்கள் என்று முத்திரை குத்தி ஏப்ரல் 23, 1849 அன்று கைது செய்தது. மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் வைக்கப்பட்டிருந்த அதிகப் பாதுகாப்பு கொண்ட பீட்டர்-பால் கோட்டையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். அவர்கள் மீதான விசாரணை நான்கு மாதங்கள் நடைபெற்றது; அதன்முடிவில் பெட்ராஷேவ்ஸ்கி வட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    ஆனால் அந்த தண்டனையானது நல்வாய்ப்பாகக் கடைசி நிமிடத்தில் ரத்துசெய்யப்பட்டுக் கைதிகள் சைபீரியாவிலுள்ள சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கே நான்கு ஆண்டுகள் மிகக் கடுமையான வேலைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார் தாஸ்தயெவ்ஸ்கி; அக்காலக்கட்டத்தில் வலிப்பு நோயால் அவர் பெரிதும் துன்புற்றிருக்கின்றார். அவர் வாழ்நாள் முழுவதுமே அந்நோய் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி நலிவடையச் செய்தமை வருந்தத்தக்கதே.

    பிப்ரவரி 14, 1854இல் சிறையிலிருந்து விடுதலையானார் தாஸ்தயெவ்ஸ்கி. சிறைமீண்ட அவர் தமது சகோதரர்  மிகையிலிடம் பொருளாதார உதவி கோரியதோடு விகோ (Vico),ஹெகல் (Hegel), காண்ட் (Kant) போன்ற சிந்தனையாளர்களின் புத்தகங்களை அனுப்பி உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    தன் வரலாற்றையும் கலந்து அவர் எழுதிய பிணங்களின் வீடு (the house of the dead) என்ற புதினம், வ்ரெம்யா (Vremya) என்ற இதழில் 1861இல் வெளியானது. இரஷியச் சிறைகளைப் பற்றி முதலில் எழுதப்பட்ட புதினம் அதுவேயாகும். இரஷியாவின் மற்றொரு பெரிய இலக்கிய ஆளுமையான லியோ டால்ஸ்டாய் இப்புதினத்தைத் தாஸ்தயெவ்ஸ்கியின் தலைசிறந்த படைப்பு என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கின்றார்.

    கட்டாய இராணுவப்பணியும் இரஷிய அரசாங்கத்தால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலத்தில் மேட்டுக்குடியைச் சேர்ந்த பிள்ளைகள் பலருக்குப் பாடங்கற்பிக்கும் ஆசிரியராகவும் தாஸ்தயெவ்ஸ்கி பணியாற்றியிருக்கின்றார். அப்போது இராணுவ அதிகாரி ஒருவரின் மனைவியான மரியா என்ற பெண்மீது தாஸ்தயெவ்ஸ்கிக்குக் காதல் பிறந்தது. சில ஆண்டுகளில் அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிடவே, மரியாவை மணந்துகொண்டார் தாஸ்தயெவ்ஸ்கி. எனினும் வலிப்புநோய் கொண்ட கணவரோடு மரியாவால் மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை.

    ஏழு ஆண்டுகளில் மரியா இறந்துவிடவே மகிழ்ச்சியற்ற அம் மணவாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.

    தம் தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் அதற்காகத் துவண்டு தம் எழுத்துப்பணிகளைக் கைவிடாத தாஸ்தயெவ்ஸ்கி, 1861இல் எழுதிய புதினம், ’நிந்திக்கப்பட்டவர்களும் அவமதிக்கப்பட்டவர்களும்’ (The Insulted and Humiliated). அதில் இரு முக்கியக் கதாபாத்திரங்களை எதிரெதிர் தன்மையும் மனநிலையும் கொண்டவர்களாக படைத்திருக்கின்றார் அவர்.

    இளவரசன் அலெக்சி ((Prince Alexey), அசட்டுத்தனங்கள் நிறைந்தவனாகவும் அதேசமயம் தெய்வீகத்தன்மை கொண்டவனாகவும் இருக்கின்றான்; அதற்கு மாறாக அவனுடைய தந்தை இளவரசர் வால்கோவ்ஸ்கி (Prince Valkovsky) அதிபுத்திசாலியாகவும் அதன் விளைவாகத் தீமையே வடிவானவராகவும் படைக்கப்பட்டிருக்கின்றார்.

    உலகப் பேரிலக்கியங்களில் சிறந்த ஒன்றாக இன்றளவும் போற்றப்படுகின்ற  குற்றமும் தண்டனையும் (Crime and Punishment) என்ற புதினத்தை 1866இல் எழுதினார் தாஸ்தயெவ்ஸ்கி. வறுமையில் வாடுகின்ற இளைஞன் ரஸ்கோல்நிகோவ் (Raskolnikov), எவ்வித நேர்மையான விதிமுறைகளையும் பின்பற்றாமல் அநியாயமான முறையில் அடகுக்கடை நடத்திவருகின்ற பெண்மணி ஒருத்தியை அவளுடைய பணத்தை அடையும் நோக்கில் கொன்றுவிடுகின்றான். அந்தப் பணத்தால் தன் வறுமை ஓடும்; வாழ்வில் இன்பம் கூடும் என்ற எண்ணத்துடனேயே அவன் கொலை செய்தான்; எனினும், அதன்பின்னர் அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சி அவனுக்குக் கிடைக்கவில்லை. அதற்கு நேர்எதிராக அக்கொலையானது அவன் மனநிலையை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது. அவன் நிம்மதியிழந்து குற்றவுணர்ச்சிக்கு ஆளானான். இறுதியில் அவனது நிலையென்ன என்பதை இந்நாவல் உணர்ச்சிவேகம் நிறைந்த அக ஓட்டங்களோடும் சுழன்றடிக்கும் சொற்றொடர்களோடும் விவரித்துச் செல்கின்றது.

    குற்றம் என்பது சார்புத்தன்மை உடையது; ஆனால் தண்டனை என்பது முழுமுற்றானது. இன்று செய்யப்பட்ட குற்றம் நாளை குற்றமில்லாததாக ஆகலாம்; அளிக்கப்பட்ட தண்டனையை நாம் ஒன்றும் செய்யமுடியாது. எனவே தண்டனை என்பது குற்றத்தை ஒருபோதும் சமன் செய்வதில்லை என்ற புதிய தரிசனத்தை இந்தப் புதினம் உருவாக்கியது.

    நீதி என்பது தண்டிக்கும் சமூக அதிகாரத்தின் கோணத்திலேயே பொதுவாக விவாதிக்கப்படுவது வழக்கம். ஆனால், தண்டனைக்குள்ளாகும் குற்றவாளியின் தரப்பிலிருந்து நீதியை இப்புதினம் அணுகியிருப்பது புதுமையே!

    தாஸ்தயெவ்ஸ்கியின் மற்றொரு சிறந்த படைப்பு அசடன் (The idiot). 1868இல் இந்தப் புதினத்தை அவர் எழுதினார். அசடனின் நாயகனாகிய பிரின்ஸ் மிஷ்கின் (Prince Myshkin), ’நிந்திக்கப்பட்டவர்களும் அவமதிக்கப்பட்டவர்களும் புதினத்தில் வருகின்ற பிரின்ஸ் அலெக்ஸியின் மற்றொரு வடிவமே.

    சுவிட்சர்லாந்தின் மருத்துவ விடுதியில் தங்கி வலிப்புநோய்க்குச் சிகிச்சை பெற்றுப் பின் இரஷியாவிற்குத் திரும்பிவந்து ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முயலும் பிரின்ஸ் மிஷ்கின் என்ற 17 வயது இளைஞனின் கதையிது. அவன், தான் சந்திக்கும் மனிதர்கள் வழியாக மானுட உறவுகளின் சிக்கலான பிணைப்பைக் கண்டுகொள்கின்றான். அந்த உக்கிரமான வேட்டை விளையாட்டில் தன்னுடைய நல்லியல்பு கெடாத ஒரு புனிதனாக அவன் கடந்துசெல்கின்றான்.

    இப்புதினத்தில் தாஸ்தயெவ்ஸ்கி தாம் மரணதண்டனைக்காகக் காத்திருந்த கடைசி நிமிடங்களை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்; சாவின் முன்னால் நிற்பவன் தனக்குக் கிடைத்துள்ள கடைசி ஐந்து நிமிடங்களை எப்படித் துளித்துளியாகப் பகிர்ந்து கொள்கிறான் என்ற விவரணை இப்புதினத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.

    அசடனின் நாயகன் மிஷ்கினுக்கு இருக்கும் ஏசு கிறிஸ்துவின் சாயலைப்பற்றி மேனாட்டு இலக்கிய விமரிசகர்கள் நிறையவே எழுதியிருக்கின்றார்கள். சகமனிதர்களின் துயரங்களுக்கும், தன் சொந்தத் துயரங்களுக்கும் வேறுபாடு தெரியாதவன் மிஷ்கின். அந்த இயல்பே அவனை அனைத்து மானுடத் துயரங்களுக்கும் மேலானவனாக, அவற்றில் இருந்து மீட்பளிப்பவனாக ஆக்குகின்றது.

    இடியட் என்ற தலைப்பு இந்தப் புதினத்துக்கு ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வாதப்பிரதிவாதங்கள் இன்றும் நீள்கின்றன. ’அப்பாவி’ என்பதே இப்புதின நாயகனை அடையாளப்படுத்தும் சரியான சொல் என்று ஒருசாராரும், இல்லை… வெளிப் பார்வைக்கு முட்டாள்போலத் தோன்றும் ஒருவன் உள்மனத்தில் தெய்வத்தன்மை பொருந்தியவனாயிருக்கின்றான் என்பதே இந்தத் தலைப்பின் உண்மையான பொருள் என்று இன்னொரு சாராரும் வாதிடுகின்றார்கள். தலைப்புக்கான காரணம் எதுவாயினும் தாஸ்தயெவ்ஸ்கியின் புதினங்களில் மிகவும் கலைநேர்த்தி கொண்டது என்ற பாராட்டைப் பலரிடம் பெற்றது அசடன் எனும் இந்தப் புதினமே.

    தஸ்தாயெவ்ஸ்கியின் மற்றொரு மகத்தான படைப்பு, கரமசொவ் சகோதரர்கள் (The Brothers Karamazov). மனித மனத்தின் இருண்மையைப் பொருண்மையாகக் கொண்டு விரிகின்ற நெடிய புதினமிது. ’பகுப்பாய்வு உளவியலின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மருத்துவர் சிக்மண்டு பிராய்டால் (Sigmund Freud) ‘மிகச் சிறந்த கலைப் படைப்புக்களுள் ஒன்று’ என்று போற்றப்பட்ட புதினமிது.

    தாஸ்தயெவ்ஸ்கியைப் பொறுத்தவரை, புதினம் என்பதை நீண்ட கதையாடல் என்ற வகையில் மட்டும் கொள்ளாமல், அதனூடாகச் சமகாலச் சூழல், அடித்தட்டு மக்களின் இருண்ட வாழ்க்கை, மனித மனத்தின் கசடுகள், ஆன்ம விடுதலை, கடவுளின் இருப்பு என்று நிறைய வாதங்களைத் தம் புதினங்களில் அவர் முன்வைக்கின்றார். எனவே அவருடைய படைப்புக்கள், தர்க்கங்களும் தத்துவங்களும் அரசியல் விமரிசனங்களும் கொண்டவையாக அமைந்திருக்கின்றன. முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இணையாகத் துணைக் கதாபாத்திரங்களையும் உருவாக்கியிருப்பது அவரின் தனிச்சிறப்பு.

    இரஷியா உலகிற்களித்த இந்த மாபெரும் படைப்பாளியைப் பல பிரபலங்களும் அறிஞர்களும் போற்றியிருக்கின்றார்கள்.

    ஜெர்மனியின் சிறந்த தத்துவவாதியான பிரெட்ரிக் நீட்சே (Friedrich Nietzsche), ”நான் கற்றுக்கொள்வதற்கான விஷயங்களைக் கொண்டிருக்கும் ஒரே உளவியலாளர் தாஸ்தயெவ்ஸ்கியே” என்று புகழ்ந்துரைத்திருப்பதும், நோபல் பரிசுவென்ற நார்வே நாட்டு இலக்கியவாதியான கென்யூட் ஹாம்சன் (Knut Hamsun), ”மனித வடிவமைப்பின் சிக்கல்களை தாஸ்தயெவ்ஸ்கி அளவுக்கு ஆராய்ந்தவர் எவருமில்லை” என்று போற்றியிருப்பதும் இங்கே எண்ணத்தக்கன.

    புனைவிலக்கியத்தில் தமக்கெனத் தனிமுத்திரை பதித்த பியதோர் தாஸ்தயெவ்ஸ்கி 1881ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் நாள் தம்முடைய 59ஆவது அகவையில் காலமானார்.

    அவருடைய புகழ்பெற்ற புதினங்களான குற்றமும் தண்டனையும், அசடன், இரட்டையர் போன்றவற்றை மதுரை பாத்திமா கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா அவர்கள், சிறப்பாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கின்றார். புனைவிலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் படிக்கவேண்டிய புதினங்கள் இவை. தாஸ்தயெவ்ஸ்கியின் படைப்பாற்றலை நாமும் உணர்ந்துகொள்ள இவ்வாசிப்புத் துணைசெய்யும்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://en.wikipedia.org/wiki/Fyodor_Dostoevsky
    2. https://www.notablebiographies.com/De-Du/Dostoevsky-Fyodor.html
    3. https://www.hindutamil.in/news/literature/150622–4.html
    Share