Blog

  • மனம் எனும் மேடையில் ஆடுகின்றான்

    மனம் எனும் மேடையில் ஆடுகின்றான்

    தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றிய ‘மனம் எனும் மேடையில் ஆடுகின்றான்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சூடேறும் பூகோளம்

    சூடேறும் பூகோளம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    இந்த பூமி நமது
    இந்த வான்வெளி நமது
    இந்த நீர்வளம் நமது
    முப்பெரும் சூழ்வளத்தை
    துப்புரவாய் வைக்கும்,
    ஒப்பற்ற பொறுப்பு நமது.

    ++++++++++++++

    சூடு காலம் வருகுது ! புவிக்குக்
    கேடு காலம் வருகுது !
    நாடு, நகரம், வீடு, மக்கள்
    நாச மாக்கப் போகுது !
    புயல் எழுப்ப வருகுது !
    பூத மழை பொழியப் போகுது !
    நீரை, நிலத்தை, குளத்தை,
    பயிரை, உயிரை, வயிற்றை
    முடக்கிப் போட வருகுது !
    கடல் உஷ்ணம், நீர் மட்டம் ஏறி
    கரைநகர் மூழ்கப் போகுது !
    மெல்ல மெல்ல ஏறி வெப்பம்,
    மேலே மீறிப் போகுது !
    சூட்டு யுகப் பிரளயம்,
    வீட்டை நோக்கித் தாக்குது !
    உன்னை, என்னை, உலகின்
    கண்ணைப் பிதுக்கப் போகுது !

    ஓரிடத்தில் எரிமலை கக்கி
    உலகெலாம் பரவும்
    கரும்புகைச் சாம்பல் !
    ஓஸோன் குடையில்
    ஓட்டை விழுந்து,
    உருக்குலையும் வாயுக் கோளம் !
    துருவப் பனிமலைகள்
    உருகி
    உப்பு நீர்க் கடல் உயரும்!
    பருவ கால நிலை
    தாளம் தடுமாறிப்
    வேளை தவறி நாளை இன்றாகும்,
    கோடை நீடிக்கும்,
    குளிர் காலப் பனிமலைகள்
    வளராமல் போகும்
    துருவ முனைகளில் !
    நிலப்பகுதி நீர்மய மாகும் !
    நீர்ப்பகுதி
    நிலமாகிப் போகும் !
    உணவுப் பயிர்கள் சேத மாகும் !
    மனித நாகரிகம் நாசமடைந்து,
    புனித வாழ்வு வாசமிழந்து
    வெறிபிடித் தாடும்
    வெப்ப யுகப் பிரளயம் !

    **************

    பூகோளம் மின்வலை யுகத்தில்
    பொரி உருண்டை ஆனது !
    ஓகோ வென்றிருந்த
    உலகமின்று
    உருவம் மாறிப் போனது !
    பூகோள மஸ்லீன் போர்வை
    பூச்சரித்துக் கந்தை ஆனது !
    மூச்சடைத்து விழி பிதுக்க
    வெப்ப யுகப்போர் தொடங்கிவிட்டது !

    கோர நோய் பற்றும் பூமியைக்
    குணப்படுத்த தக்க மருத்துவம் தேவை !
    காலநிலை மாறுதலுக்குக்
    காரணங்கள் வேறு வேறு !
    கரங்கோத்துக் காப்பாற்ற
    வருவேன் எனக் கூறு கூறு !

    +++++++++++++

    தரணி எங்கும் தொழில்துறைகள்
    சூழ்வெளியில்
    கரும் புகை ஊட்டுமடா!
    கயவர் கூட்டம்
    காட்டு மரங்களில் தீ மூட்டுமடா!
    போரிலும் புகைதான்!
    ஈராக் எண்ணெய்க் கேணிகளும்
    எழுப்புதடா தீப்புகையே !
    தவறு செய்யும் மனிதர் கூட்டம்
    தப்பிக் கொண்டு போகும் !
    துப்புரவு செய்தி டாமல்
    தொழிற்சாலைகளின்
    கரிவாயு மூட்டம்
    விரிவானில் நாள் தவறாது
    அடுக்கடுக்காய்ச் சேருமடா!
    நிலவளம், நீர்வளம், கடல்வளம்,
    மனித நலம், உயிர் நலம்,
    பயிர்வளம்
    புனிதம் யாவும்
    இனிவரும் யுகத்தில்
    சிதைந்து போகுதடா!
    வெப்ப யுகப் பிரளயம்,
    வீதி முன் வந்து நிற்குதடா!

    ++++++

    எங்கெங்கு காணினும் வானில்
    இருட்புகை மூட்டமடா!
    ஈராக் எண்ணெய்க் கேணிகள்
    தீப்புகை எழுப்புதடா!
    தவறு செய்யும் மனிதர் கூட்டம்
    தப்பிடப் பார்க்குமடா!
    துப்புரவு செய்திடாமல்
    தொழிற்சாலைக்
    புகை போக்கி மூலம்
    கரிவாயு மூட்டம்
    விரிவான் நோக்கிப் போகுதடா!
    நிலவளம், நீர்வளம், கடல் வளம்,
    மனித நலம், உயிரினப் பயிர்வளம்
    புனிதம் சிதையப் போகுதடா!
    வெப்ப யுகப் பிரளயம்,
    வீட்டு முன்னே நிற்குதடா!

    ++++++++++++

    வெப்ப யுகப் பிரளயம்,
    குப்பெனவே
    உப்புக் கடல் உயர்ந்தது!
    நரக வாசல் திறந்து
    மாதிரிச் சூறாவளி,
    பூத வடிவில், பேய் மழையில்
    சூதகமாய் அரங்கேற்றும்,
    வேதனை நாடகம்!
    நியூ ஆர்லீன்ஸ்
    எழில் நகரம்
    ஒருநாள் அடித்த சூறாவளி மழையில்
    பெருநரகமானது!
    மந்தையாய் மூன்று லட்சம்
    மாந்தர்கள்
    வீடு, வாசல், ஆடை, வாகனம் விட்டு
    நாடு கடத்தப்பட்டார்!
    அந்தோ உலகில் நேர்ந்த முதல்
    விந்தையிது!

    ++++++++++

    நிலக்கரி எஞ்சின் மூச்சு நின்றது!
    மின்சார வண்டி உயிர் பெற்றது!
    நீராவி எஞ்சின்
    ஆயுள் ஓய்வெடுத்து
    டீசல்
    வாகனம் இழுத்தது!
    குறைவாக்கப்பட்டாலும்,
    தெரியாமல் தினமும்
    தொழிற்கூடம் வெளியாக்கும்
    கழிவுத் திரவங்கள் நதியில் கலக்கும்!
    எரிப்பில் விளையும்
    கரி வாயுக்களும்,
    கந்தக வாயுக்களும்,
    சூழ்வெளியில் கலந்து சூடேறும் பூகோளம்!
    புப்புசங்கள் நுகர்ந்து
    அப்பாவி மாந்தர் தீரா
    நோயில் வீழ்வார்,
    ஆயுளும் குன்றிவிடும்!

    ++++++++++++++

    பட்டப் பகலென்றும்,
    நட்டநடு நிசியென்றும்,
    பொட்டுப் பரிதிக்கு
    கட்டுவிதி யில்லை! ஆயினும்
    கால விதிக்கு அடிபணியும்!
    வெட்ட வெளியில்
    வெப்பத்தைக் கக்கிச்
    சுட்டு விடுவதும் அதுவே! கனல்
    பட்டெனத் தணிந்து,
    பார்மீது
    பனிக் குன்றைப்
    படைப்பதும் அதுவே!

    ++++++++++

    காலமும் சூழ்வளியும்
    கடல் மட்ட ஏற்றத் தணிவும்
    நீர், நிலவளத் தேய்வுகளும் சேர்ந்து,
    பயிர்கள் ஏதோ
    பசுமை மினுப்பில் தோன்றும்!
    யந்திர வாய்கள்
    புகைபிடித்து ஊதியதும்,
    பச்சை நிலங்கள் எல்லாம் வெளுத்து,
    பாலை மணலாகும்!
    காலநிலைச் சீர்பாட்டைப்
    பாழாக்கும் கேடுகள் பூமியைத்
    தாலாட்டுகின்றன!
    பால்போன்ற பனிக் குன்றுகள் உருகிக்
    கால்தடம் பதிக்கும்
    பசும்புல் தளமாகி
    ஆடு, மாடுகள் பசிக்கு மேயும்
    காடுகளாய்
    அங்கி மாற்றிக் கொண்டன!
    புனித மிழந்து புதையுது
    மனித நாகரிகம்,
    வெப்ப யுகப் பிரளயம்,
    உப்பி வந்து!

    +++++++++++

    குடுகுடுப்பைக்காரனாய்
    காலக் குயவன்,
    முடுக்கி விட்ட பம்பரக் கோளம்!
    உடுக்க டிக்கும்
    நடுக்கமுறும் நமது கோளம்!
    பல்லாயிரம் ஆண்டுக்கொருமுறை
    பரிதியைச் சுற்றி வரும்
    வட்ட வீதி நீளும்!
    முட்டை வீதி யாகும்!
    கோளத்தின் சுழலச்சு சரிந்து
    கோணம் மாறி
    மீளும் மறுபடியும்!
    பனிக் களஞ்சியம்
    துருவத்தின் ஓரத்தில் சேர்ந்து,
    பருவ காலத்தில்
    உருகி ஓடும்!
    காலக் குயவன்
    ஆடும்
    அரங்கத்தை மாற்றி,
    கரகம் ஆட வைப்பான்!
    சூட்டுக் கோளம் மீண்டும்
    மாறும்,
    பனிக்கோளாய்!

    +++++++++++++++

    பச்சை நிறத்தை ஒட்டி ஓரளவு
    மினுமினுக்கும்,
    இன்றைய மரங்களின் இலைகள்!
    ஆயினும்
    அவ்விதம் மின்னும் பசுமை தென்படுமா,
    கோலம் மாறும் போது,
    காலமும் கடல்மட்டமும்
    மனிதக்
    கைப்பிடியில் சிக்கி?
    புனித நிலத்தைப்
    புண்படுத்திப்
    பாலை மணலாய்ப் பாழாக்காதே
    மனிதா!

    +++++++++++++++++++

    தாரணி எங்கும்
    நீர், நிலம், நெருப்பு,
    வாயு, வானம் ஆகிய பஞ்ச பூதங்கள்
    ஆயுதங்களாய் மாறிக்
    கோர வடிவத்தில்
    பேரழிவு செய்யும்!
    எங்கெங்கு காணினும்
    பொங்கும் புகைமூட்டம்!
    வடதுருவப் பனிமலைகள் உருகி,
    கடல் மட்டம் ஏறும்!
    பருவக் காலநிலை மாறிப்
    பெரும்புயல் அடிக்கும், பேய்மழை இடிக்கும்,
    நிலப்பகுதி நீர்மயமாகி மக்கள்
    புலப்பெயர்ச்சி செய்ய நேரும்!
    மனித நலம், உயிரினம், பயிர்வளப்
    புனிதம் சிதைக்கும்
    சூட்டு யுகப் பிரளயம்,
    வீட்டு முன் வந்து நிற்குதடா!

    +++++++++++

    விரைவாய்க் கடல்மட்ட உயரம்
    ஏறும் போக்கைத்
    தெரிவிக்கும் பூகோளத் துணைக்கோள்கள் !
    பத்தாயிரம் அடிக்குக்
    கீழே உள்ள
    சுத்தக் கடல்நீர் சூடாகிப் போகும் !
    பனிக்குன்றும்,
    பனிச்சிகரமும் ஒரு காலத்தில்
    பனி சுமந்த
    பழங்கதை சொல்லா !
    நில வறட்சி, நீர் வறட்சி நெடுங்காலம்
    நீடித்துப்
    பயிர்வளர்ச்சி சிறுத்துவிடும் !
    வேகமாகத்
    தண்ணீர்ப் பூமி
    தாகமாய்ப் பிச்சை எடுக்கும்
    கண்ணீரோடு !

    ++++++++++++++

    சூட்டு யுகப் பிரளயம் !
    காட்டுத் தீ போல் பரவுது !
    ராக்கெட் மீது வருகுது !
    வானைத் தொடும் பனிமலைகள்
    கூனிக் குறுகிப் போயின !
    யுக யுகமாய் வழக்கமான
    இயற்கை அன்னையின்
    சூழ்வெளிச் சுற்றியக்கம் யாவும்
    சுதி மாறிப் போயின !
    பழைய பனிச்சிகரம் தேய்ந்து
    நழுவி அவ்விடத்தில்
    புதுப் பனிமலை வளரவில்லை !
    பருவ காலக் கோலங்கள்
    வயது வரும் முன்பே
    நடமாடி
    தடம் மாறிப் போயின !
    மனித நாகரிகம் மங்கிப்போய்
    புனித வாழ்வைப் புழுதி யாக்க
    துரித மாக வருகுது !
    பூத வடிவில்
    பாதகம் செய்யப் போகுது
    வெப்ப யுகப் பிரளயம் !

    ++++++++++++++

    தாரணி சூடேறித் தணல் சட்டியாகக்
    காரணியில்லை
    சூரியக் கதிர்வீச்சு மட்டும் !
    கடந்த இருபது ஆண்டுகளாய்
    வெப்ப யுகப் பிரளயம்
    காசினியில் அரங்கேற
    விஞ்ஞானம் கூறும் விந்தை
    கண்ணாடி மாளிகை
    விளைவு !
    பனிச்சிகரம் பரட்டைத் தலையாய்க்
    கரும் பாறையாக
    ஜீவ நதிகளில்
    நீரோட்டம் தளரும் !
    உயிர்வளப்
    பயிரினச் செழிப்புகள் சிதைந்து
    புலம்பெயரும் பறவை இனம்
    தளமாறிப் போகும் !
    வரலாறு
    தடமாறிப் போகும் !

    ++++++++++++

    மனிதர் படைக்கும்
    நச்சு வாயுக்கள் சேர்ந்து
    ஓஸோன் துளைகள்
    உண்டாகும் !
    மென்மையில் திண்மையாகும்
    வாயுக் கோளத்தின் உள்ளே மிதக்குது
    வண்ண நீர்க்கோளம் !
    தூய சூழ்வெளியில்
    பூமியின்
    ஆயுள் நீடிக்கவேண்டும் !
    ஓஸோன்
    ஓட்டைகள் ஊடே
    புற ஊதாக் கதிர்கள் நுழைந்து
    சூட்டு யுகப் புரட்சி
    நாடு நகரங்களில்
    நர்த்தனம் ஆடும் !
    நீரின்றி
    நித்திரையின்றி
    நிம்மதியின்றி
    நீண்ட காலம் தவிப்பர்
    நில மாந்தர் !

    +++++++++++++++

    நோய் பீடித்துள்ளது பூகோளத்தை !
    குணமாக்க மருத்துவம் தேவை !
    காலநிலை மாறுதலுக்குக்
    காரணங்கள் பல்வேறு !
    கரங் கோத்துக் காப்பாற்ற
    வரவேண்டும் பல்லறிஞர் !
    சிந்தனையாளர் பங்கெடுப்பும்,
    எரிசக்தி நிபுணர் ஒத்துழைப்பும்,
    செல்வந்தர் நிதி அளிப்பும்,
    புவிமாந்தர் கூட்டுழைப்பும்
    அவசியம் தேவை !

    ஜெஃப்ரி குளூகர்,
    [Jeffrey Kluger, Senior Writer Time Magazine]

    Share
  • எல்லா ஆன்மிகவாதிகளும் நல்லவர் அல்லர்

    எல்லா ஆன்மிகவாதிகளும் நல்லவர் அல்லர்

    ஜோதிர்லதா கிரிஜா

    ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்கிற நிலையில் நம்மில் பெரும்பாலோர் இருந்து வருகிறோம். மனத்தில் அமைதி இல்லை. மகிழ்ச்சியில்லை. திருப்தி என்பதோ இல்லவே இல்லை. நமக்குக் கீழே உள்ள வசதித்குறைவானவர்களையும், அங்கவீனர்களையும் பார்த்து நாம் மன நிறைவு அடையவேண்டும் எனும் ஞானம் நம்மிடம் கொஞ்சமும் இல்லை. மனிதர்களில் பெரும்பாலோர் நிம்மதியற்று அல்லாடுவதற்கு இந்தத் திருப்தியின்மையே அடிப்படையாகும்.

    நம்மில் அநேகர் கடவுள் நம்பிக்கையுடையவர்களே.  கடவுள் என்பதாய் ஒரு மாபெரும் சக்தியாளர் உள்ளார் என்பதே அந்த நம்பிக்கையாக இருந்த போதிலும், அவர் நமக்கு நல்லது செய்வார் எனும் நம்பிக்கை மட்டும் நமக்கு இருப்பதில்லை. தோல்விகளைக்கண்டு துவண்டு போவதும், அதையே நினைத்துக்கொண்டு இரவில் உறங்காமல் இருப்பதும் நம் இயல்பாகிவிட்டது.  ‘நான் யாருக்கும் கெடுதலே செய்ததில்லையே? அப்படி இருந்தும் நான் ஏன் இப்படி ஏமாற்றங்களுக்கும் நிம்மதியின்மைக்கும் ஆட்படுகிறேன்?’ என்று புலம்பாதவர்கள் உண்டா?

    அன்னீ பெசன்ட் அம்மையாரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அயர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து நம் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அரும் தொண்டும் பங்கும் ஆற்றியவர். ஆனால் அவர் இந்தியாவுக்கு வந்தது எதற்காக என்பது பலர்க்குத் தெரியாமலிருக்கக் கூடும். அவர் நம் நாட்டுக்கு வந்தது எதற்காக என்பது ஒரு சுவையான காரணத்தின்பாற் பட்டது. அவரது சொந்த வாழ்க்கைக்கும் அதற்கும் பெரும் தொடர்பு உண்டு.  அவர் வந்தது ஆன்மிகத் தேடலின் பொருட்டேயாகும்.

    அவருடைய குழந்தை ஒன்று சொல்லொணாத வலியை அனுபவித்து இறந்து போனபோது ஏற்கெனவே மாறுபட்ட கருத்துக்கொண்டிருந்த அவருக்குக் கடவுள் நம்பிக்கை அறவே போயிற்று என்று சொல்லப்படுகிறது.  ‘ஒரு பாவமும் அறியாத இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சு ஏன இவ்வளவு சிரமப்பட்டுச் சாகவேண்டும்?’ எனும் கேள்வி அவருள் எழுந்து அவரை வருத்தியது. இது போன்ற கேள்விகளுக்கு இந்தியாவின் பண்டைய நூல்களில்தான் விடை கிடைக்கும் என்பதாய்க் கேள்விப்பட்டு அவர் இந்தியாவுக்கு வந்தார்.

    இந்துமத நூல்களைப் புரிந்துகொள்ளுவதற்காக சம்ஸ்கிருதம் கற்றார். பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அளவுக்கு அவர் அந்த மொழியறிவைப் பெற்றார்! ‘கர்ம வினை’ என்பதாய் ஒன்று உள்ளது என்னும் அசைக்க முடியாத முடிவுக்கு வந்தார். மனிதன் திரும்பத்  திரும்பப் பிறக்கிறான் என்னும் நம்பிக்கையும் கொண்டார். அவ்வாறு இல்லையெனில், இந்தப் பிறவியில் எந்தப் பாவமும் புரியாத ஒருவர் துன்பப்படுவதற்குக் காரணமே இல்லை என்றும் நம்பினார்.

    தியோசாஃபிகல் சொசைட்டி எனப்படும் பிரும்ம ஞான சபையின்  உறுப்பினராகிப் பின்னர் அதன் தலைவியாகவும் பதவி ஏற்றார். இந்திய வேதாந்தம் பற்றி ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தார். இந்தக் கட்டுரையில் அவரை நினைவு கூர்ந்தமைக்குக் காரணம் அவர் தேடி யடைந்த ஞானம் நம்மில் பலர்க்கு இல்லாமற் போனதால்தான், நம் துன்பங்களுக்கெல்லாம் விடிவு ஏற்படும் என்று நம்பி ஆன்மிகவாதிகளின் ஆசிரமங்களுக்குப் போய்வருகிறோம் என்று சொல்லத்தான். இப்படிப் போவதில் எந்தத் தவறும் கிடையாது. அதது அவரார் விருப்பம், நம்பிக்கை ஆகியவற்றைப் பொறுத்த விஷயம்தான். இதில் மற்றவர் தலையீட்டுக்கோ கேலிக்கோ சிறிதும் இடம்  கிடையாதுதான்.

    ஆனால் நாம் தேடிப்போகும்   ஆன்மிகவாதிகள் உண்மையிலேயே மக்களுக்கு நல்லதைச் சொல்லவும் செய்யவும் தலைப்படும்  ஆன்மிகவாதிகள்தானா, இல்லாவிட்டால்   பணம் பண்ணும் வெறும் வியாபாரிகளா என்பதை நாம் விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இவர்களில் பலர் “பரிகாரம்” என்பதன் பெயரால் தங்களை நாடி வருபவர்களிடமிருந்து பணம், பொருள், நகைகள் போன்றவற்றைத் தந்திரமாய்ப் பறித்துக்கொள்ளுகிறார்கள். சிலர் இவற்றோடு தலைமறைவாகி விடுவதும் உண்டு.

    பரிகாரம் என்பது பச்சைப் பொய் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாவங்களுக்குரிய தண்டனையிலிருந்து எவராலும் தப்ப முடியாது. ஆன்மிகவாதிகளுக்குப் பெருந்தொகையைக் கொடுத்து  அவர்கள் மேற்கொள்ளப்போவதாய்ச் சொல்லும் பரிகாரங்களை நாம் செய்வது நாம் நம்பும் கடவுளையே ஏமாற்றப் பார்க்கும் அசட்டுத்தனமாகும். அவர் ஒன்றும் அப்படி யெல்லாம் ஏமாந்துவிடமாட்டார்.  நாம்தான் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளுகிறோம். உண்மையான பரிகாரம் என்பது வெறும் சடங்குகளிலோ, பூஜைகளிலோ இல்லை. ‘ போன பிறவியில் என்ன பாவங்கள் செய்தேனோ, இந்தப் பிறவியில் துன்பப்படுகிறேன். இனி எந்தத் தப்பையும் செய்யாதிருக்க அருள்வாய், ஆண்டவனே’ என்று வேண்டிக்கொண்டு நல்லவராக மாறுவதே உண்மையான பரிகாரமாகும். இந்த உண்மையான பரிகாரத்தாலும் கூட, தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று நாம் மனப்பால் குடிக்கக்கூடாது! இந்தப் பரிகாரத்தால், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுவதற்கும் அவற்றால் அதிகம் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கும் தேவையான மன உறுதி மட்டுமே கிடைக்கும். அவ்வளவுதான்!

    அனைத்துலக அளவில் புகழ் பெற்ற ஓர் ஆன்மிகவாதி  அளவிடற்கரிய ஆன்மிக சக்திகளைப் பெற்றவர். ஆனால் இவர் நம்பத் தகுந்தவரல்லர். தமிழகத்தில் ஒரு பெண்ணுக்கு அவள் பெற்றோர் திருமண ஏற்பாட்டைச்  செய்து அது சார்ந்த உறுதிவிழாவையும் முடித்துவிட்டிருந்த நிலையில், அந்தப் பெண் இந்தச் சாமியாரின் கூட்டம் ஒன்றுக்குச் சென்றாள். மயக்கும் விழிகளைக் கொண்ட அந்த “மெஸ்மிரிச” சாமியாரின் காந்தப் பார்வை அடிக்கடி அவள் மீது படிந்தது.  ஆன்மிக ரீதியில் மயங்கிப்போன அந்தப் பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்து அவருடைய குழுவில் இணைந்துவிட்டாள். பெற்றோரால் தடுக்க முடியவில்லை. அவர்கள் சாமியாரிடம் சென்றார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டிடுந்ததை அவருக்குச் சொன்னார்கள். ஆனால், அவரோ, “அது அவளே செய்த தீர்மானம். அவள் சம்மதித்தால் அழைத்துக்கொண்டு செல்லுங்கள். நான் குறுக்கே நிற்கவில்லை!” என்று கையை விரித்துவிட்டார். அந்தப் பெற்றோரின் உள்ளங்கள் என்ன பாடு பட்டிருக்கும்! (இது சில ஆண்டுகளுக்கு முன் கேள்விப்பட்ட நிகழ்வு.)

    தமது யோகக் குழுவில் உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாதுஎன்று விதித்துள்ள இவர் தம் மகளுக்கு மணமுடித்துவைத்துள்ளாராம். இது எப்படி இருக்கிறது!  இவரைப்பற்றிச் சில பெற்றோர்கள் காவல்துறையில் முறையிட்டார்கள். ஆனால் காவல் துறை அதிகாரிகள் அந்த இளைஞர்களை விசாரணை செய்த போது இவரும் அவர்களுடனேயே இருந்தாராம்! இது ஒரு விசாரணையா!

    இவர் மணமான பெண்களையும் விட்டுவைப்பதில்லை. அவர்களில் சிலரும் குடும்பத்தைக் கவனிக்காமல் ஆசிரம வேலைகளுக்கு வருகிறார்களாம். ஒரு பெண்மணி நாள்தோறும் தன் இரண்டு வயதுக் குழந்தையை உறவுக்காரப் பெண்ணிடம் கொண்டுவந்து விட்டுவிட்டு அவரது ஆசிரமத்துக்குப் போய்ச் சேவை செய்துவருகிறாளாம். அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நேர்ந்த ஒரு பெண் என்னிடம் புலம்பியுள்ளார்! இளைஞர்களை இப்படி மூளைச்சலவை செய்து வசப்படுத்துபவர்கள் மேலும் சிலர் உள்ளார்களாம். இவர்களின் பெற்றோர்கள்  மனம் என்ன பாடு படும்!

    அடுத்தாற்போல், புட்டபர்த்தி பாபா என்ன சொல்லியுள்ளார்?  ‘முதலில் உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள். உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யுங்கள். அப்படிச் செய்யாத எவரும் இங்கே வரவேண்டாம். அவர்களுக்குக் கடவுளின் அருள் ஒருபோதும் கிடைக்காது’ என்று அறிவித்துள்ளார்.

    பணம் பறிக்கிற ஆன்மிகவாதிகள் அந்தப் பணத்தையெல்லாம் பொது நன்மைகளுக்காகச் செலவு செய்தாலும் ஒழிந்து போகிறது எனலாம். அப்படிச் செய்பவர்கள் ஒரு சிலரே. அமரர் புட்டபர்த்தி சத்திய சாய் பாபா, அமரர் மகா பெரியவர்,  சில சங்கர மடங்கள், ராமகிருஷ்ண மடங்கள், மாதா  அமிர்தானந்த மயி, சிவசங்கர் பாபா போன்ற சிலர் மட்டுமே விதிவிலக்குகளாவர்.

    எது எப்படி இருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்தால், தவறு நம்முடையதுதான் என்பதை உணரலாம். ஆண்டவனுக்கும் நமக்குமிடையே இடைத்தரகர்கள் எதற்கு? பணம் பிடுங்காத நல்ல ஆன்மிகவாதிகளைத் தேர்ந்தெடுத்தே நாம் செல்ல வேண்டும். எல்லாரையும் நம்பிவிடக் கூடாது. அதிலும், முக்கியமாய், பரிகாரம், பூஜை என்றெல்லாம் கதைவிட்டுப் பணம் பிடுங்குபவர்களிடம் போகவே கூடாது. பணம் செலவிட்டுப் பாவங்களைப் போக்கிக்கொள்ளவோ, தண்டனையிலிருந்து தப்பவோ முடியாது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

    கடவுளின் கணக்குப் பேரேட்டில் கழித்தலோ கூட்டலோ கிடையாது. ‘நான் மூன்று கொலைகள் செய்தவன். ஆனால், ஒரு சமயம் நீரில்  மூழ்கவிருந்த ஐந்து பேரைக் காப்பாற்றியுள்ளேன். எனவே ஐந்திலிருந்து மூன்றைக் கழித்துவிட்டு, நான் இரண்டு உயிர்களைக் காப்ப்பாற்றியதாய்க் கணக்குப் போடும் கடவுளே!’ என்று ஒருவன் கடவுளிடம் பேரம் பேச முடியாது.

    மூன்று கொலைகள் செய்ததற்குத் தண்டனை கிடைக்கும்; ஐந்து உயிர்களைக் காப்பாற்றியதற்கு வெகுமதியும் கிடைக்கும். அதுதான் கடவுளின் கணக்கு! இந்த எளிய கணக்கை நாம் புரிந்துகொண்டால் கோவில்களுக்குப் போவதோடும், வீட்டிலிருந்தவாறு பக்தியும் தியானமும் மட்டுமே செய்வதோடும் நிறுத்திக்கொள்ளுவோம். நம்பகமான ஆன்மிக வாதிகளிடம் மட்டுமே போவோம்.  இல்லையா?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 70

    பழகத் தெரிய வேணும் – 70

    நிர்மலா ராகவன்

    தேடிப் போகவேண்டிய செல்வம்

    அள்ள அள்ளக் குறையாதது அறிவு மட்டுமே.

    இது புரியாத சிலர், `எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக்கொடுத்தால், பிறரும் புத்திசாலி ஆகிவிடுவார்களே! அப்புறம் என்னை யார் மதிப்பார்கள்?’ என்று கருமித்தனமாக யோசித்து, அதன்படி நடப்பார்கள்.

    அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், தெளிந்த மனத்தையும் அன்பையும் வளர்க்காத அறிவால் யாருக்கு என்ன பயன்?

    பிறரது மதிப்புதான் கிடைக்குமா?

    தமிழில் கல்வி பயின்று, பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படித்த மாதுரி, “நான் இப்போல்லாம் தமிழிலே எதுவும் படிக்கிறதில்லே. விட்டாச்சு!” என்று பெருமை பேசுவாள்.

    தாய்மொழியான தமிழால் அவள் பெற்ற அறிவு அவளுக்கோ, பிறருக்கோ பயன்படவில்லை. அந்த அறிவைப் பெருக்கிக்கொள்ள அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    தான் அறிந்தவற்றை தன் சொந்த வாழ்க்கைக்கும் பிறருக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று யோசித்து, பிறரையும் சிந்திக்க வைப்பவரே அறிவாளி.

    அறிவாளி அதிகமாகப் பேசமாட்டார். ஒருவர் தானே பேசிக்கொண்டிருந்தால், பிறரது கருத்தை அறியமுடியாதே! பணிவுடன் பிறர் சொல்வதைக் கேட்பதாலும் அறிவைப் பெருக்கமுடியும்.

    அவசியம் என்று வரும்போது, சுருக்கமாகச் சொல்வார்.

    Any fool can know. The point is to understand (ஐன்ஸ்டீன்)

    நிறையப் படித்தும், மனப்பாடம் செய்தும், பற்பல விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பவர் அறிவாளி என்பதில்லை. தாம் அறிந்ததை – பிறர் கேளாமலேயே – சொல்லி, தமது விரிவான அறிவைப் பறைசாற்றிக் கொள்கிறவர் இவர்.

    பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தையைக் கேட்டுப்பாருங்கள், “இன்று என்ன படித்தாய்?” என்று.

    “எல்லாம்!” என்று கர்வத்துடன் பதில் வரும்.

    ஆனால், வளர்ந்தபின்னரும், “எனக்கு எல்லாம் தெரியும்!” என்று முழங்குபவன் அறிவிலி. அவ்வாறு நம்புவதால், மேன்மேலும் அறிவைப் பெருக்கிக்கொள்ளும் ஆர்வம் அவனுக்கு இருப்பதில்லை.

    பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பதால் அறிவு பெருகிவிடாது. அதை நாம்தான் தேடிப் போகவேண்டும். காலம் முழுவதும் தேடிக்கொண்டிருந்தாலும். எல்லாவற்றையும் அறியமுடியாது.

    ஒரு துணுக்கு: உனக்குத் தெரிந்ததைப் பற்றி எழுது. நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும்.

    அதாவது, ஒருவனுக்குத் தெரிந்ததைவிட, தெரியாதவைதான் அதிகம்.

    தனக்கு எவ்வளவு தெரியாது என்று தெரிந்து வைத்திருப்பவனைத்தான் அறிவாளி என்கிறோம்.

    அறிவைப் பெருக்கவேண்டுமா?

    எதையும் விரைவாகத் தெரிந்துகொள்ள ஒரே வழிதான். கேள்விகள் கேட்கவேண்டும்.

    குழந்தைகள் மூன்று வயதிலிருந்தே எல்லாவற்றையும் புரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவர்களது அறிவைப் பெருக்குவது வளர்ப்பவர்கள் கையில்தான் இருக்கிறது.

    `புத்திசாலி!’ என்று பிறரது பாராட்டைப் பெறும் குழந்தைகளை நிறைய கேள்விகள் கேட்கப் பழக்கியிருப்பார்கள் பெற்றோர்.

    `ஏன்? ஏம்மா? சொல்லு!’ இரண்டு வயதில் நான் என் குழந்தைகளுக்குப் போதித்த மந்திரம்.

    எதைப் பார்த்தாலும், அந்த வயதிலேயே என்னை அப்படிக் கேட்பார்கள். வயதாக ஆக, கேள்விகளும் தொடர்ந்தன.

    கதை

    என் வயிற்றில் இருந்த மூன்று மாதக் கருவைப் பற்றி ஆவலுடன் விசாரித்தாள் எட்டு வயதான மகள்.

    “அம்மா! இப்போ குழந்தை எத்தனை பெரிசா இருக்கும்?”

    “தெரியலியே!” என்று ஒப்புக்கொண்டேன். எப்படியும், நான் எதையாவது தேடிப் படித்து, சொல்லிவிடுவேன் என்று அவள் சமாதானம் அடைந்தாள்.

    நான் என்ன பதில் அளித்திருந்தாலும் அவள் ஏற்றிருப்பாள். ஆனால், உண்மையை உள்ளபடிச் சொல்வதுதான் சரி என்று நம்புகிறவள் நான்.

    அப்போது இணையம் கிடையாது. வாசகசாலைக்குப் போனேன்.

    “ஒரு கட்டை விரல் நீளம்,” என்று நான் சொல்லக் கேட்டு, “எனக்கு அவ்வளவு குட்டி பேபியைத் தூக்கத்தெரியாதே!” என்று கவலை தெரிவித்தாள் மகள்.

    “எனக்கும் தெரியாது. ஆனா, பெரிசாப் போயிடும்”.

    “நான் படுத்தாம சாப்பிட்டாதான், பெரியவளாப் போயிடுவேன்னு சொன்னியே! பேபி எப்படி சாப்பிடும்?”

    “அதுக்காக நான் சாப்பிடறேன்”.

    இந்த ரீதியில் கேள்விகள் தொடர்ந்தன.

    `அசடாப் போயிட்டே! இந்தமாதிரி கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது,’ என்று நான் கண்டிக்கவில்லை. ஏனெனில், குழந்தைகள் எந்தவிதமான கேள்விகள் கேட்டாலும், அதற்கான பதிலை அவர்களால் ஏற்க முடியும்.

    தர்மசங்கடமான சில கேள்விகளுக்குப் பதிலை ஒத்திப்போடலாம். “குழந்தை எப்படி ஒன் தொப்பைக்குள்ள போச்சு? ஏன் முழுங்கினே?”

    முதல்முறையாக நான் சிடுசிடுத்தேன். “நீ இன்னும் கொஞ்சம் பெரியவளாப்போனதும் சொல்றேன். இப்போ போய் விளையாடு”.

    கண்ணீருடன் அவள் முறைத்தாள். “என்னை அசடாக்கணும்னு பாக்கறே! அப்புறம் நான் எப்படி அம்மாவா ஆகமுடியும்?”

    சற்றுப் பொறுத்து, “ஏம்மா, நான் எது சொன்னாலும் நீ சிரிப்பே?”

    இவ்வாறு ஆரம்பிக்கும் அறிவுத் தாகத்திற்கு ஆரம்பம் உண்டு. ஆனால், முடிவே கிடையாது.

    அறிவினால் ஏற்படும் சக்தியைத்தான் Knowledge is power என்கிறார்கள்.

    எதற்கு அறிவைப் பெருக்குவது?

    புதிய சமாசாரங்களை ஆர்வத்துடன் கற்பதாலும், புதிய அனுபவங்களை நாடுவதாலும் அடையக்கூடிய நன்மைகள் பல.

    வீண் கவலை மறைந்துவிடும்.

    எந்த வயதிலும் உற்சாகம் குன்றாது, மேலும் பலவற்றை எளிதாகக் கற்க முடியும்.

    எல்லாச் சூழ்நிலைகளிலும், புதியவர்களுடன் பழக முடிகிறது.

    தன்னம்பிக்கையுடன், பிறரது மதிப்பையும் பெறலாம்.

    ஆனாலும், புதிதாக ஓர் அனுபவம் ஏற்படும்போது சற்று பயம் எழக்கூடும். இது இயற்கை. பயத்தைப் பொருட்படுத்தாது, துணிவுடன் இறங்கினால் அறிவு பெருகும்.

    நாம் பெறும் அறிவை நன்மை, தீமை இரண்டிற்கும் உபயோகப்படுத்த முடியும். இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் இருக்கிறது.

    நாம் பெற்ற அனுபவம் நம்மை நல்லவிதமாக மாற்றுவதாக இருக்கவேண்டும்.

    சில ஆண்டுகளுக்கு முன்னர், காதல், செக்ஸ் போன்ற வார்த்தைகள் நம்மிடையே சொல்லத்தகாதனவாக இருந்தன.

    இந்த `கெட்ட வார்த்தைகளை’ப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பியவர்கள் ரகசியமாகப் படித்தார்கள், கண்ட கண்ட படம் பார்த்தார்கள்.

    அவை சரியான விளக்கங்களை அளித்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

    கதை

    நான் வானொலியில், `செக்ஸ்’ என்ற தலைப்பில் பேசினேன்.

    உறவினர்கள் அதிர்ந்தார்கள், `வெளிப்படையாக எப்படித்தான் இதைப் பற்றியெல்லாம் பேசுகிறாயோ!’ என்று.

    அதன்பின், ஆங்கிலத்தில் நிறைய எழுதினேன்.

    `கடவுளைப்போல் படைப்புத் தொழிலை மனிதனும் செய்யும் வழி இது. சொல்லக்கூடாத வார்த்தை என்று சொல்லிச் சொல்லியே, இதைக் கெட்ட வார்த்தையாக ஆக்கியிருக்கிறார்கள். அதனாலேயே இதை முறைகேடான வழிகளில் அறியும் ஆர்வம் தூண்டப்படுகிறது,’ என்ற ரீதியில் எழுதினேன்.

    ஒரு திருமண வைபவத்தில் என்னைச் சந்தித்த இளைஞன் ஒருவன், “நீங்க `அதைப்பத்தி’ எழுதினது எல்லாத்தையும் நான் படிச்சிருக்கேன்,” என்றான், ரகசியக் குரலில்.

    “அந்த வார்த்தை சொல்லக் கூடாதது இல்லேன்னு புரிய வைக்கிறதுக்காகத்தான் நான் எழுதறேன்,” என்றேன், சற்று அலுப்புடன்.

    செல்வத்திற்கும், அறிவுத் தேடலுக்கும் இடையே ஓர் ஒற்றுமை: எவ்வளவுதான் அடைந்தாலும், திருப்தி என்னவோ கிடைக்காது.

    ஒருவர், `எதையாவது புதிதாகக் கற்றால், பணம் சம்பாதிக்க முடியுமா?’ என்று கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தால், அந்த இலக்கே தவறு.

    இப்படிப்பட்டவர்கள், தாம் நம்பியவை தவறு என்று ஒத்துக்கொள்ள பயந்து, புதிய விஷயங்களை அறிய ஆர்வம் காட்டமாட்டார்கள்.

    அறிவு எப்படித்தான் வளரும்?

    Share
  • இலண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

    இலண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

    இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உள்ளே ஓர் உலா.

    படப்பதிவு – நவ்யா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னையில் பயங்கர இடி, மின்னல்

    சென்னையில் பயங்கர இடி, மின்னல்

    முந்தாநாள் (2021 ஜூன் 7, திங்கட்கிழமை அன்று) இரவு 10.45 மணி முதல் 12 மணி வரை சென்னையில் பயங்கரமான இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நீளமான இடியும் மின்னலும் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தன. உச்சியை உலுக்கி, கிடுகிடுக்க வைக்கும் அந்த அசாதாரண நிகழ்வின் ஒரு பகுதி இங்குள்ளது. படக்கருவியை வான்நோக்கிப் பிடித்து, தரையைப் பார்த்தபடி இந்தக் காட்சிகள் பலவற்றையும் படம்பிடித்தேன். இதோ, நீங்களும் அந்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு

    பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு

    சி. ஜெயபாரதன், B. Eng [Hons], P. Eng [Nuclear]

    சமீபத்தில் (2020) வெளிவந்த அகில நாட்டு பூகோளச் சூடேற்றத்தில், அணுமின்சக்தியின் பங்கு [IAEA CLIMATE CHANGE & NUCLEAR POWER ROLE REPORT] என்னும் வெளியீட்டில் அணுமின்சக்தி நிலையங்கள் பற்பல கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை வெளிவர உதவிய உலக தொழில்நுணுக்க மேதைகள் 210 பேர், 60 நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அறிக்கைக்குக் குறிநோக்கு [IPCC & PARIS AGREEMENT TARGET 1.5 C] 1.5 C உஷ்ணம் எச்சரிக்கை வரம்பு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தக் குறிநோக்கு 2050ஆம் ஆண்டுக்குள் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் குறைக்கப்படவேண்டும், மீள்புதிப்பு எரிசக்தி மின்சார நிலையங்கள் பெருக வேண்டும்,

    அத்துடன் பேரளவு அடித்தள மின்பளு ஏற்புக்கு [BASE LOAD NUCLEAR POWER PLANTS] அமைக்க வேண்டும் என்று அறிக்கை வலிவுறுத்துகிறது. மேலும் அந்த உஷ்ண வரம்பைத் தாண்டாமல் இருக்க. 400 மேற்பட்ட வழிமுறைகள் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்த 30 ஆண்டுகளில் உலக நாடுகள் சுமார் 50,000 MWe அணுமின் நிலையங்கள் கட்ட வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பெரு வெப்ப அணு மின்சக்தி நிலையங்கள், 200 MWe சிற்றளவு அணுமின் நிலையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேம்பாட்டு நீர்த் தணிப்பு அணுமின் நிலையங்கள் [ADVANCED WATER-COOLED REACTORS 9000 GWe CAPACITY (9000 1000 MWe)] கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    தற்போது 31 உலக நாடுகள் [இந்தியா உட்பட], 442 அணுமின் உற்பத்தி நிலையங்களை 392,000 MWe திறத்தில் இயக்கி வருகின்றன. புதிதாக 53 அணுமின் நிலையங்கள், 56,000 MWe திறத்தில் கட்டப்பட்டு வருகின்றன. 2050ஆம் ஆண்டுக்குள் 500, 000 MWe புதிய அணுமின் நிலையங்கள் கட்ட, குறைந்தது 50% நிதி ஒதுக்கு மேலாகத் தேவைப்படும். கடந்த பத்தாண்டு இயங்கிய அணுமின் நிலையங்கள் ஆண்டு ஒன்றுக்குச் சுமார் இரண்டு கெகா டன் கார்பன்டையாக்சைடு [2 gega ton CO2] அளவைக் குறைத்துள்ளன.

    With the adoption of the Paris Agreement in 2015, almost all Parties to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC) agreed to prepare nationally determined contributions (NDCs) to control GHG emissions and limit the increase of global mean surface temperature by the end of the century to below 2°C relative to pre-industrial levels. Since then, increasing scientific understanding of the significant risks associated with warming of 2°C, along with increasing societal concern, have established the need for more urgent and ambitious action to avoid the worst impacts of climate change, by limiting warming to 1.5°C.

    To reach this goal, carbon dioxide (CO2) emissions from electricity generation must fall to nearly zero by the middle of this century, even as electricity needs worldwide continue to grow and expand in end-uses such as transportation, heating and industrial energy use.

    Climate Change and Nuclear Power 2018
    http://www-pub.iaea.org/MTCD/Publications/PDF/CCNAP-2018_web.pdf
    https://www.iaea.org/publications/14725/climate-change-and-nuclear-power-2020
    English CCANP-18123  36   2018
    Book : 123 pages

     Download PDF (3.61 MB) Get citation details

    DESCRIPTION

    The 40th edition of RDS-1 contains estimates of energy, electricity and nuclear power trends up to the year 2050. The publication is organized into world and regional subsections, with global and regional nuclear power projections presented as low and high cases, encompassing the uncertainties inherent in projecting trends.

    DESCRIPTION

    THIS PUBLICATION PROVIDES AN UPDATE ON THE CURRENT STATUS OF NUCLEAR POWER AND PROSPECTS FOR ITS CONTRIBUTION, TOGETHER WITH OTHER LOW CARBON ENERGY SOURCES, TO AMBITIOUS MITIGATION STRATEGIES THAT WILL HELP THE WORLD LIMIT GLOBAL WARMING TO 1.5°C IN LINE WITH THE 2015 PARIS AGREEMENT. SINCE 2000, THE IAEA HAS ISSUED SUCH INFORMATION AND ANALYSIS REGULARLY, IN ORDER TO SUPPORT THOSE MEMBER STATES THAT CHOOSE TO INCLUDE NUCLEAR POWER IN THEIR ENERGY SYSTEM AS WELL AS THOSE CONSIDERING OTHER STRATEGIES. THE FOCUS OF THE 2020 PUBLICATION IS ON THE SIGNIFICANT POTENTIAL OF NUCLEAR ENERGY, INTEGRATED IN A LOW CARBON ENERGY SYSTEM, TO CONTRIBUTE TO THE 1.5°C CLIMATE CHANGE MITIGATION TARGET, AND THE CHALLENGES OF REALIZING THIS POTENTIAL. ENERGY SYSTEM AND MARKET RELATED FACTORS AFFECTING THE TRANSITION TO A LOW CARBON ENERGY SYSTEM ARE REVIEWED. THIS EDITION ALSO OUTLINES DEVELOPMENTS NEEDED TO REALIZE THE LARGE SCALE CAPACITY INCREASE REQUIRED TO RAPIDLY DECARBONIZE THE GLOBAL ENERGY SYSTEM IN LINE WITH LIMITING GLOBAL WARMING TO 1.5°C.

    Reference

    ttps://www.iaea.org/publications/14725/climate-change-and-nuclear-power-2020

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 132 (நாணனே)

    சேக்கிழார் பாடல் நயம் – 132 (நாணனே)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ‘நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம்’  என்ன நாணன்,
    ‘காண நீ போதின், நல்ல காட்சியே காணும்; இந்தச்
    சேண் உயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
    கோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்’ என்றான்.

    வரலாறு

    முதல்வேட்டைஎனப்பட்ட கண்ணிவேட்டைக்குக்  கிளம்பினான்திண்ணன். அவ்வாறு வேட்டைபயின்று வளர்ந்து பதினாறாண்டு அகவை அடைந்தான். அந்த உடுப்பூர்வேடர்குலத்தார் கானகத்தில் வேட்டையாடிப் பன்றி, புலி, கரடி, காட்டுமான், கலைமான் ஆகியவற்றை வேட்டையாடி விருந்துண்டு வாழ்ந்தனர். அப்போது முதுமையால்தளர்ந்த வேடர்குலத்தலைவன் நாகன், ‘’என்முதுமையால் தளர்ந்தேன்! இனிஇந்தவேடர்குலத் தலைவன் என்னும் பொறுப்பைத் திண்ணனுக்கு அளிப்பேன்!  தேவராட்டியை அழைத்து , காடு கிழாளுக்கு பலியூட்டி. பூசைசெய்ய அழைக்க!’’ என்றான். வேட்டுவர்  குலத்தின் பூசைமகளாகிய மூத்த  வேட்டுவச்சி, ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு வந்தாள். அவளுக்கு  வேண்டிய உணவைஅளித்துப் போற்றிய காடன்,’’ என்மகன்   திண்ணனை வேடர்குலத் தலைவனாவதற்கு உரிய வழிபாடுசெய்து உதவுக”  என்றான், முதியோளும்‘’ இவன்வேடர் குலத்தலைவன் ஆவதற்குரிய சகுனங்கள் சிறப்பாக இருக்கின்றன!’’ என்றாள்.

    நாகனும் தன்முன் வந்து வணங்கிய  மகனைத் தழுவி, முறைப்படி தலைவனுக்குரிய முதல் சுரிகை, உடை தோல்  ஆகியவற்றை வழங்கினான் திண்ணனும் தந்தையை வணங்கி மறுநாள் அதிகாலையில் வேட்டைக்குப் புறப்பட்டான்.  தலைவனுக்கு உரிய வகையில், தலை, தோள், மார்பு, கை, இடை, ஆகியவற்றில் வீரம் காட்டும் அணிகளை அணிந்து கொண்டு காலில்  வீரக்கழல்  மற்றும் செருப்பும்  அணிந்து வேடர் கூட்டமாகிய தோழர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான்!

    எல்லாரும் எல்லாத்திக்கிலும்  பரவிச் சென்று பற்பல விலங்குகளை விரட்டி, திண்ணனார் வேட்டையாட உதவினர். அப்போது காட்டின் கொற்றவைக்கு பலியூட்டி முதியவள் வந்தாள். திண்ணனுக்குத் தலையில் சேடை என்னும் அட்சதை தூவி வாழ்த்தினாள். உடனே திண்ணன்  வேட்டைக்குப் புறப்பட்டதைச்  சேக்கிழார்,

    தாளில் வாழ் செருப்பர்; தோல் தழைத்த நீடு தானையார்;
    வாளியோடு சாபம் மேவு கையர்; வெய்ய வன் கணார்;
    ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண் இலார்;
    மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே.

    என்றுபாடினார். மேலும்  அவர் எய்த அம்பில் அடிபட்ட விலங்குகளை,

    தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான்;
    வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா;
    நீள் உடல், விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா;
    மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே.

    என்று,  வேட்டையின் சிறப்பினை ஓசைநயம்படப் பாடினார்! காட்டுக்குள் நெடுந்தூரம்   வேட்டையாடிக்   கொண்டே விரைந்த  திண்ணனுடன், தொடர்ந்து  சென்ற  நாணனும் காடனும் ஓரிடத்தில் பெரிய காட்டுப்பன்றி இரண்டு துண்டாகி வீழ்ந்து கிடத்தலைக் கண்டனர்! ‘’நாம் பல காததூரம்  வந்தோம்! இவர்  தனியாக முன்னேறி வந்து,  ஆடவர்களின் தலைவனாகி இதனைக்   கொன்றான், அச்சோ!’’  என்று போற்றினர், அதனச் சுட்டு உணவாக்கிக் கொள்ள முயன்ற போது. தண்ணீரில் வேக வைக்க வேண்டுமே! என்று திண்ணன் கூறிய போது  நாணன் தண்ணீர்  ஓடும்  பொன்முகலி யாற்றைக் காட்டினான்.  அங்கே இப்பன்றியைக் கொண்டுபோவோம் என்று கூறிச்சென்ற திண்ணன், அங்கிருந்த மலையைக்  கண்டான். இவ்வாறு மலைக்காட்சியைக்  காட்டியபோது அங்கே மலையும், சாரலும். கோயிலும் ஒன்றாகி, ‘’நிர்விகற்பக்காட்சி’’ யாகப் புலப்பட்டது ; பின்னர் நெருங்கிச் சென்று காணும் போது, தனித்தனியாகிச்  ‘’சவிகற்பககாட்சி’’ ஆயிற்று. நற்காட்சி என்ற சித்தாந்த நிலையை இங்கே சேக்கிழார்  குறிப்பிட்டார்! இதனை இப்பாடலில் காண்போம்.

    ‘நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
    காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
    சேண் உயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
    கோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்’ என்றான்.

    பொருள்

    “நாணணே! முன்னே தோன்றும் குன்றின்கண் சேர்வோம்” என்று திண்ணனார் சொல்ல, நாணன், “நீ அங்கே காணப் போவாயாகில் நல்ல காட்சியே காணப்படும்; சேணில் உயரும் இந்தத் திருக்காளத்தி மலையின்மேல் எழுந்து செம்மைபெறக் கோணமில்லையாகச் செய்யும் குடுமித்தேவர் இருப்பார்; நாம் கும்பிடலாம்” என்று சொன்னான்.

    தோன்றும் குன்றில் – முதலிற் கண்ணுக்குப் புலப்பட்டது குன்றின் உயர்ந்த சிகரமாதலின் அது அவர் கருத்தைக் கவர்ந்தது.

    நீகாணப்போதின்- காண்பதற்கென்று நீ போவாயானால். இவ்வகை யிடங்களுக்குப் போதுவார் பலரும் போய்வந்த மட்டில் அமைவரே யன்றி அங்குள்ள சிறப்புக்களைக் காணாமலே வருவர் என்பது கண்கூடு. ஆதலின், நண்ணுவோம் என்று தன் தலைவன் கூற அவ்வாணைக் குட்பட்டு உடன்படும் நாணன், அவ்வாறு நீ காணும்பொருட்டே செல்வாயனால், ஏனையோர் போலல்லாது நீ காணும் சிறப்பு இன்னதென்று கூறுவானாகி, அது நல்ல காட்சியே என அறிவுறுத்துகின்றான். அக்காட்சி இன்னதாம் என மேலும் வற்புறுத்திக் கூறுகின்றான் “குன்றின் நண்ணுவோம்; அதனைக் காணல்வேண்டும்; காண்பது நல்ல காட்சி; அஃது இதுவாம்” என்றவாறு. இக்குன்றவர் கடவுட்காட்சியில் வைத்தகருத்துப் பாராட்டத்தக்கது.

    காணநீபோதின் என்று நாணன் உரைத்தவாறு உண்மையில் நாயனார் காண்பதற்கே அங்குப் போகின்றார். ஏனையோர் போலல்லாது,

    “ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டுகொண்டே
    நேர்பெற நோக்கி நின்றார்”  என்பது காண்க.

    நல்ல காட்சியே காணும் – காட்சி – காணப்படுவது. காணும் – காணப்படும்.  இவர்காணும் காட்சி இறைவனது அருள் திரு நோக்கம் பெற்று அவன் காட்டக்காணும் காட்சியாதலின் நல்ல காட்சியே என்றார். தோற்றமுமாம். நல்லகாட்சியாவது அகம் புறமாகிய கரணங்களால் எதனைக் காணவேண்டுமென்று நூல்கள் விதிக்கின்றனவோ அதனையே காணுதல்.

    “கண்காள் காண்மின்களோ – கடல் –  நஞ்சுண்ட கண்டன்றனை,
    யெண்டோள் வீசிநின் றாடும்  பிரான்றனைக் (கண்காள்)”

    என்றது தமிழ்மறை.

    இந்த …. கும்பிடலாம் – நல்லகாட்சி இதுவாமென்று நாணன் கூறியது. சேண்உயர் – வானில் உயர்ந்துவிளங்கும். உயர்ந்து தோன்றியதனால் முன்னர்த் “தோன்றும் குன்று” என்றார். அவ்வாறு திண்ணனார் “தோன்றும் குன்று” என்ற அதன் பெயரை அவருக்கு அறிவுறுத்துவான் இந்த என்று கையாற்சுட்டிக் காட்டித் திருக்காளத்திமலை என்று வாயினாற் பேர் கூறினான். “பெரிய தேக்கி னப்புறஞ் சென்றால் நீண்ட, குன்று” (743) என்று நாணன்கூறக் கேள்விமாத்திரத்தாலறிந்த நாயனார், இங்கு அதனைக்கண்ணுக்குப் புலப்படக் கண்டறிந்தபோது அவன் சொல்லியபடியே “தோன்றும் குன்று” என்று பேர்குறியாது கூறியது காண்க.

    மலைமிசைஎழுந்து செவ்வே – மலையினின்றும் வேரூன்றி முளைத்ததுபோல மேல் எழுந்து செம்மைபெற. கோணம்இல் – கோணத்தை இல்லையாகச்செய்யும். கோணம் – குற்றம். இது கோண் – கோணைஎனவும் வழங்கும்.

    “யான்செய்தேன் பிறர்செய்தாரென்னதியா னென்னுமிக்
    கோணை”

    (சிவஞானசித்தியார் – 10, சூத்திரம் – 2).

    குடுமித்தேவர் – குடுமி – உச்சி. மலையின் உச்சியிலிருப்பவர். தலையின்மேல் உச்சியிலிருப்பதால் தலைமயிர்க்கற்றை, குடுமி எனப்படும். கானவர் காளத்தியப்பரை இப்பெயராலறிந்து கும்பிட்டனர் என்க. வேதங்களுள் முடிவினிற்பது அதர்வணமாம். அதன் சிரம் அதர்வசிரசு எனப்படும். அதன்

    சிகையாயுள்ள அதர்வசிகை “ஏனையவற்றை யெல்லாங் கைவிட்டுமங்களஞ்செய்பவனாகிய சிவன் ஒருவனே தியானிக்கற்பாலன். அதர்வசிகை முடிந்தது” என்று முடிபுகூறுகின்றது. அவ்வுச்சியில் முடிந்தமுடிபாய் விளங்குபவன் இவ்விறைவன் என்பதும் குறிப்பாம். உபநிடதத்துச்சியில் விளங்கும் போதக்காட்சி என்னும் வழக்குங்காண்க.

    நாணன் மேலே  சொல்லியவை

    “குன்றினுக் கயலேயோடும் குளிர்ந்த பொன் முகலி”

    என்றது இவரை வழிப்படுத்திய முதல்உபதேச மொழி;

    இப்பாட்டிற் கூறியன இரண்டாவது உபதேச மொழிகளாம். மேலிருபாட்டிலும் முறையே தீர்த்த விசேடமும் தலவிசேடமும் கூறப்பட்டது போல இப்பாட்டால் மூர்த்திவிசேடம் கூறப்பட்டது காண்க.

    இறைவனை அறிந்து கொள்ளுதலாகிய நற்காட்சி மூலம்  அவரை அடைய வேண்டும் என்பதும், அடையும் வழிமுறையும் , அடைதலும் ஆகிய  சித்தாந்த  நெறி   இப்பாடலில்  விளக்கப்பெறுகின்றது. இறைவனை  அடையும் வழியை   முன்பே அறிந்தவர் மூலம் தெரிந்து  கொள்ளுதல் என்ற வகையில்  நாணன்  திண்ணனுக்குக்  கூறிய உபதேச  மொழியாகக்   கொள்ள வேண்டும். சமய உலகில்  உபதேசம்  எங்கிருந்து வேண்டுமானாலும்  கிட்டும் என்பது சாத்திரம்!

    Share
  • இயற்கை வழியில் நான் கண்ட தீர்வுகள் – ‘ரூட்ஸ் ஆர்கானிக்ஸ்’ தீபிகா

    இயற்கை வழியில் நான் கண்ட தீர்வுகள் – ‘ரூட்ஸ் ஆர்கானிக்ஸ்’ தீபிகா

    எந்திரப் பொறியாளரான தீபிகாவுக்கு வெளியூரில் சென்று வேலை செய்யத் தொடங்கியதும் முடி உதிர்வுச் சிக்கல் ஏற்பட்டது. கோலம் போடும்போது கையில் தோல் உரிந்தது. சித்த மருத்துவரான தம் தந்தையின் உதவியுடன், தாயின் ஆலோசனைகளுடன் தனக்கான இயற்கைவழிப் பொருள்களை உருவாக்கத் தொடங்கினார். நல்ல பலன் கிடைத்தது. நெருங்கிய தோழிகளின் சிக்கல்களுக்கும் இதே போல் தீர்வு கண்டார்.

    எங்களுக்கும் கிடைக்குமா எனப் பலரும் கேட்டதால், ரூட்ஸ் ஆர்கானிக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் வழியே நலங்கு மாவு, சிகைக்காய் மாவு, முடி உதிர்வைத் தடுக்கும் தைலம், வழுக்கையைப் போக்கும் தைலம், நரைமுடியை மாற்றும் தைலம், கண் மை, உதட்டுப் பூச்சு, பாத்திரம் தேய்க்கும் தூள், பற்பொடி, கோலப் பொடி, ஹோலிப் பண்டிகைக்கான வண்ணப் பொடி… எனப் பலவற்றை இயற்கை முறையில் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.

    தான் உற்பத்தி செய்வதை, தான் பயன்படுத்திப் பார்த்து, தானே பரிசோதித்துப் பார்த்து, அதன் பிறகே மற்றவர்களுக்கு வழங்குகிறார். தனது வெற்றிப் பயணத்தை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 32

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 32

    -மேகலா இராமமூர்த்தி

    சுக்கிரீவன் மனையாட்டியைக் கவர்ந்து வைத்திருக்கும் வாலியின் ஒழுக்கக் கேட்டைச் சுட்டிக்காட்டி, அவன் பிழைசெய்தவன் என்று இராமன் குற்றஞ்சாட்டியதைக் கேட்ட வாலி அதனை மறுத்து, ”ஐய! மனிதர்கள் பின்பற்றும் கற்பொழுக்கத்தைப் பின்பற்றி வாழும் வகையில் விலங்குகளாகிய எம்மை இறைவன் படைக்கவில்லை; மனம் விரும்பியபடி வாழும் வாழ்க்கையே எமக்குரியது; திருமண முறைகளோ அவற்றைக் கைக்கொள்ளும் பண்புகளோ எமக்கில்லை” என்றுரைத்துத் தான் சுக்கிரீவன் மனைவியைக் கவர்ந்ததில் பிழையில்லை என்று வாதிட்டான்.

    இராமன் அதனை ஒப்பவில்லை. ”தேவர்களைப்போல் பிறந்து அறவழிகள் அனைத்தையும் தெளிவுற அறிந்துள்ள உன்னை எங்ஙனம் விலங்கென்று கருதமுடியும்? எனவே நீ கூறும் சமாதானம் பொருத்தமுடைத்தன்று!” என்று மறுத்துரைத்தவன்,

    மாடு பற்றி இடங்கர் வலித்திட
    கோடு பற்றிய கொற்றவற் கூயது ஓர்
    பாடு பெற்ற உணர்வின் பயத்தினால்
    வீடு பெற்ற விலங்கும் விலங்குஅதோ.
    (கம்ப: வாலிவதைப் படலம் – 4155)

    முதலை தன்னை ஒருபக்கம் பற்றியிழுத்த வேளையில், பாஞ்சசன்னியம் எனும் சங்கினைத் தாங்கிய திருமாலைக் கூவியழைத்துத் தன் ஒப்பற்ற நல்லறிவின் பயனால் வீடுபேறுற்ற கசேந்திரனாகிய யானையை விலங்கு என்று நாம் எண்ணமுடியுமா? என்று கேட்டு, நல்லறிவு பெற்ற வாலியையும் விலங்கென்று எண்ணமுடியாது எனும் தன் கருத்தை வெளிப்படுத்திய இராமன், எக்குலத்தில் பிறந்தவராயினும் அவர்கட்கு உயர்வும் தாழ்வும் அவர்தம் செயல்களாலேயே வருவன; அத்தன்மையை அறிவிற் சிறந்த நீ அறிந்திருந்தும், பிறன் மனைவியின் மாட்சியை அழித்தாய்” என்று தன் குற்றச்சாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினான்.

    ”பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்”
    (குறள்: 505) என்ற வள்ளுவர் வாய்மொழியும், மனிதனின் சிறப்புக்கும் சிறுமைக்கும் அவன் செயல்களையே காரணங்காட்டுவது ஈண்டு நினைவுகூரத்தக்கது.

    இராமனின் கருத்தைக் கேட்ட வாலி, ”சரி, நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்! ஆனால், போர்க்களத்தில் என் முன்நின்று அம்பு எய்யாமல், கொடிய வேடர்கள் விலங்குகள்மீது மறைந்திருந்து அம்பு தொடுப்பதுபோல் என்மேல் தொடுக்கக் காரணம் என்ன?” என்று கேட்டான்.

    அவ் உரை அமையக் கேட்ட
          அரி குலத்து அரசும் மாண்ட
    செவ்வியோய் அனையது ஆக செருக்
          களத்து உருத்து எய்யாதே
    வெவ்விய புளிஞர் என்ன
          விலங்கியே மறைந்து வில்லால்
    எவ்வியது என்னை என்றான்
          இலக்குவன் இயம்பலுற்றான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4162)

    ”வேட்டுவன் புதரில் மறைந்திருந்து வலைவீசிப் புள்ளைப் பிடிப்பதற்கு ஒப்பானது, தவ வேடத்தில் மறைந்துகொண்டு ஒருவன் அவச் செயல்கள் புரிவது” என்கின்ற குறளின் மூலமாக மறைந்திருந்து வேட்டுவர்கள் விலங்கை வேட்டையாடுதல் என்பது நெடுநாளைய வழக்கமே என்பது நமக்குப் புலனாகின்றது.

    தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
    (குறள்: 274)

    வாலியின் இந்த நியாயமான வினாவுக்கு இராமன் பதிலளிக்கவில்லை; அவன் இளவல் இலக்குவன் பதிலளிக்கிறான்.

    ”உன் தம்பியாகிய சுக்கிரீவன் முதலில் வந்து இராமனிடம் சரண் புகுந்தான்; அவனிடம், முறைதவறி நடந்த உன்னைத் தென்புலத்துள்ள எமனுலகுக்கு அனுப்புவேன் என்று ஏற்கனவே இராமன் உறுதிமொழி கூறிவிட்டான். அவ்வாறிருக்கப் போர்க்களத்தில் நீயும் உயிர்மீது அன்புடையவனாகி இராமனிடம் அடைக்கலம் வேண்டினால் அவனால் அளிக்கமுடியாதன்றோ? அதனால்தான் அவன் மறைந்திருந்து உன்மீது அம்பெய்தான்” என்றான் இலக்குவன்.

    முன்பு நின் தம்பி வந்து
          சரண் புக முறை இலோயைத்
    தென் புலத்து உய்ப்பென் என்று
          செப்பினன் செருவில் நீயும்
    அன்பினை உயிருக்கு ஆகி
          அடைக்கலம் யானும் என்றி
    என்பது கருதி அண்ணல் மறைந்து
         நின்று எய்தது என்றான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4163)

    இராமனின் செயலுக்கு இலக்குவன் கூறும் சமாதானம் ஏற்புடையதாக இல்லை. ஆனால் வான்மீகத்தில், ”விலங்குகளை மறைந்திருந்து கொல்லல் தவறன்று; ஆதலால் விலங்கொத்த நடைகொண்டவனாகிய நின்னை அவ்வாறு கொன்றேன்” என்று இராமன் அமைதி கூறுவான்.

    கம்பர், இராமன் அவ்வாறு கூறியதாகப் படைக்கவில்லை. அவ்வாறு படைத்தால், ”நன்னெறிகளை அறிந்த உன்னை விலங்கென்று கருத இயலாது” எனும் இராமனின் கருத்தை அவனே மறுத்ததாகும். ஆதலால், அதே கருத்தை, ”வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் எவ்வியது என்னை” என வாலியின் வாக்காகச் சுட்டியதோடு நிறுத்திக்கொண்டார். இதனைக் காண்கையில், இராமனின் செயலுக்கு இதனை ஓர் பொருத்தமான காரணமாய்ச் செப்பக் கவிச்சக்கரவர்த்தியின் மனம் ஒருப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

    ஆயிரம் சமாதானங்கள் சொல்லினும் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கியது அவன் பேராண்மைக்கு அழகு சேர்ப்பதாயில்லை; மாறாக அவன் பண்புக்கொரு களங்கமாகவே விளங்குகின்றது.

    ஆனால், இலக்குவனின் விளக்கத்தைத் தொடர்ந்து வாலி வாதிடவில்லை; தன் தவறுணர்ந்து மெய்யுணர்வு அடைந்தவனாய் இராமனிடம் தன் புன்செயல்களுக்கு மன்னிப்புக் கோருகின்றான். இத்தகு இரசவாத மாற்றத்துக்கு உட்பட்ட வாலியைச் ‘சிறியன சிந்தியாதான்” என்று மீண்டும் உயர்த்திக் கூறுகின்றார் கம்பர்.

    இராமனைப் போற்றிப் பலமொழிகள் பகரும் வாலி, ”என் தம்பி தனக்கு வெற்றரசை எடுத்துக்கொண்டு எனக்கு உயர்ந்த வீட்டரசை நல்கிவிட்டான்” என்று அவனையும் புகழ்கின்றான். அடுத்து, இராமனிடம் வாலி கேட்கின்ற வரம் அவனைப் பண்பின் சிகரமாகவே காட்டுகின்றது எனலாம்.

    ”சித்திரத்தில் எழுதியதுபோன்ற எழிலுரு உடையவனே! நாய்போல் சிறுமை உடையவனாகிய நான் உன்னிடம் வேண்டிப்பெறுவது ஒன்றுளது! மலர்களில் உண்டாகும் மதுவையருந்தி, அறிவுதிரிந்த நிலையில் செய்யத்தகாத தீவினைகள் எவற்றையேனும் என் தம்பி செய்வானாயினும் அவன்மீது சீனங்கொண்டு, என்மேல் ஏவிய அம்பெனும் கூற்றுவனை அவன்மீது ஏவிவிடாதே!” என்று வேண்டுகின்றான் வாலி. சிறியன சிந்தியாதவன் அவன் என்பதற்கும், தம்பியின் இயல்பை நன்கு அறிந்தவன் என்பதற்கும் இப்பாடல் தக்க சான்றாகின்றது.

    ஓவிய உருவ நாயேன் உளது
          ஒன்று பெறுவது உன்பால்
    பூ இயல் நறவம் மாந்திப்
          புந்தி வேறு உற்றபோழ்தில்
    தீவினை இயற்றுமேனும் எம்பிமேல்
          சீறி என்மேல்
    ஏவிய பகழி என்னும்
          கூற்றினை ஏவல் என்றான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4172)

    வாலி கணித்தபடியே பின்னர் நறவம் மாந்தி, இராமனுக்குக் கொடுத்த வாக்கைச் சுக்கிரீவன் மறந்துபோவதைக் காப்பியத்தில் நாம் காணமுடிகின்றது.

    மற்றொரு வரத்தையும் வாலி கேட்கின்றான். ”ஐய! என் தம்பியைக் காணும்போது உன் தம்பிமார்கள், ”இவன் தமையனைக் கொல்லச் செய்தவன்” என்று இகழக்கூடும்; அவ்வாறு அவர்கள் செய்யமுற்படுவரேல் அதனை நீ தடுத்துநிறுத்த வேண்டும். சுக்கிரீவனின் குறைகளை நீக்குவதாக நீ முன்னமே மொழிந்திருப்பதால் அவனுக்குச் செய்யவேண்டியவற்றைச் செய்ய வேண்டும்; அவ்வாறே அவனால் உனக்கு ஆகவேண்டிய வினைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று மொழிகின்றான்.

    இன்னம் ஒன்று இரப்பது
          உண்டால் எம்பியை உம்பிமார்கள்
    தன்முனைக் கொல்வித்தான் என்று
          இகழ்வரேல் தடுத்தி தக்கோய்
    முன்முனே மொழிந்தாய் அன்றே இவன்
          குறை முடிப்பது ஐயா
    பின் இவன் வினையின்
          செய்கை அதனையும் பிழைக்கல்ஆமோ. (கம்ப: வாலிவதைப் படலம் – 4173)

    இவ்வரங்கள் வாலியின் நுண்மாண் நுழைபுலத்தையும், தம்பியின் நலனில் அவன் கொண்டிருந்த அக்கறையையும் புலப்படுத்துகின்றன.

    தொடர்ந்து பேசுகின்ற வாலி, ”கொற்றவனே! தீச்செயலை நினக்குப் புரிந்த இராவணனை வாலினால் பற்றிக்கொண்டு வந்து உன்வசம் நிறுத்தி இக்குரங்கின் வலிமை இன்னது என்று காட்டத் தவறிவிட்டேன்; சென்றதைப் பேசி இனிப் பயனில்லை.

    ஆழியை ஏந்திய தலைவனே! வானினும் உயர்ந்த தோளனே! இதோ இருக்கிறானே அனுமன்…இவனைச் சாதாரணமாய் எண்ணிவிடாதே! நின் கையில் இருக்கும் வில்லாகிய கோதண்டமே இவன் என்று நினைப்பாயாக; என் தம்பியை உன் தம்பியருள் ஒருவனாய் ஏற்றுக்கொள்! இவர்களைப் போன்ற ஒப்பற்ற துணைவர்கள் வேறிலர்; இவர்களின் துணைகொண்டு சீதையைத் தேடிக் கொள்வாயாக!” என்று இராமனின் பிரச்சினை தீரவும் வழிகூறுகின்றான்.

    அனுமன் என்பவனை ஆழி
          ஐய நின் செய்ய செங் கைத்
    தனு என நினைதி மற்று என்
          தம்பி நின் தம்பி ஆக
    நினைதி ஓர் துணைவர் இன்னோர்
          அனையவர் இலை நீ ஈண்டு அவ்
    வனிதையை நாடிக் கோடி
          வானினும் உயர்ந்த தோளாய்! (கம்ப: வாலிவதைப் படலம் – 4175)

    இராமன் கையிலிருக்கும் வில் நல்லோரைக் காத்து அல்லோரை அழிப்பதுபோல், இராமனின் நற்பணிகளுக்கு அனுமன் துணையாவான் என்பதையே ”அனுமனை நின் செங்கைத் தனு என நினைதி!” என்று குறிக்கின்றான் வாலி.

    அதன்பின்னர் தன் தம்பியாகிய சுக்கிரீவனை ஆரத்தழுவி, அவனை இராமனிடம் அடைக்கலப்படுத்தியவன், ”உன்னரும் புதல்வனாகிய அங்கதனை அழைத்துவா!” என்று சுக்கிரீவனைப் பணிக்கின்றான்.

    அங்கதன் வாலியின் மகனே ஆயினும் சிற்றப்பன் முறையினனான சுக்கிரீவனுக்கும் அவன் மகன் முறையே அல்லவா? அத்தோடு, வாலியின் மரணத்துக்குப்பின் தந்தையாயிருந்து அங்கதனைக் காக்கவேண்டியவனும் சுக்கிரீவனே எனும் குறிப்புப்பொருள் தோன்ற, ’உன்னரும் புதல்வன்’ என்று சுக்கிரீவனிடம் உரைக்கின்றான் வாலி.

    சுக்கிரீவன் சென்றழைத்துவர, செங்குருதிசோரச் சாய்ந்துகிடக்கும் தன் விறல்மிகு தந்தை வாலியைக் கண்டான் அவன் வீரமைந்தன் அங்கதன்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவைக் கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • திருக்குறள் படிப்பது தண்டனையா?

    திருக்குறள் படிப்பது தண்டனையா?

    குற்றவாளிகள், திருக்குறளைப் படிக்க வேண்டும் என்பதைக் காவலர்களும் நீதிபதிகளும் ஒரு நல்ல நோக்கில் சொல்கிறார்கள்.

    ஆனால், ஒரு தண்டனையாகத் திருக்குறளைப் படிக்க வைப்பது, திருக்குறளின் மீது வெறுப்பினை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு.

    தொண்டு இல்லத்தில் சமூக சேவை செய்யச் சொல்வதற்கும் இது பொருந்தும்.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 18

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 18

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 4

    முன்னுரை

    ஒரு நூல் எழுதி உலகப்புகழ் பெறுவது தமிழ்ப்புலவர் பெருமக்களுக்கு வெகு இயல்பு. திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய படைப்பிலக்கியங்களைப் போலவே உரையிலக்கியத்திலும்; இந்தப் போக்கு காணப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு மட்டும் உரையெழுதிப் பெருமையுற்றவர் இளம்பூரணர் என்றால் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரையெழுதித் தனது பெயரை நிலைநிறுத்தியவர் சேனாவரையர். மக்கள் சமுதாயமே மொழியியலின் தாயகம் என்பதை உணர்ந்த தொல்காப்பிய நெறியில் தோய்ந்த அன்னார் தமது உரைகளில் வழக்குப் பற்றிய பலவற்றை இலக்கண விளக்கத்திற்காக உவமங்களாகப் பயன்படுத்தியிருக்கிறார். உலக வழக்கில் உள்ளனவற்றை உவமமாக்குதல், ஓர் உவமைக்குப் பல விளக்கங்கள் தருதல், ஓர் இலக்கண விளக்கத்திற்குப் பல இலக்கியங்களிலிருந்து உவமம் காட்டுதல், இலக்கணத்திற்கு மற்றொரு இலக்கணத்தையே உவமமாகக் கொள்ளுதல், பிறதுறை பயிற்சியினால் உவமங்களைக் கையாளுதல் எனப் பன்முகமாக அமைந்த சேனாவரையர் சொல்லதிகார உரையில் காணப்படும் உவமங்கள் சிலவற்றின் சிறப்பினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    சொற்களை அமைத்தலா? ஆக்குதலா?

    ‘கிளவியாக்கம்’ என்னும் தலைப்பில் அமைந்த சொல்லதிகாரத்தின் முதலியல் தமிழின் சொல்வழக்கில் உள்ள வழுக்களைச் சுட்டுதல், வழுவகற்றி அவற்றை வழங்க வேண்டுதல், சில காரணம் பற்றி அவ்வழுக்களை அமைத்துக் கொள்ளுதல் என்னும் முப்பெரும் கூறுகளை ஆராய்வதாக அமைந்திருக்கிறது. இம்மூன்று கூறுகளும் மொழிக்கட்டமைப்பைக் காக்கும் தலையாய நோக்கத்துடன் பெரிதும் தொடர்புடையன. சேனாவரையர் இவ்வதிகார நூற்பாக்களைப் பன்முறை நோக்கி, அவற்றின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ‘கிளவியாக்கம்’ என்னும் இயல் தலைப்பின் பெயர் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். வழு சுட்டுதல், வழுவற்க எனல், வழுவமைத்துக் கொள்ளுதல் என்னும் மூன்றும் சொற்களை ஆக்கிக் கொள்ளும் நெறிமுறைகளே எனக் கருதுகிறார். எனவே ‘சொற்களை ஆக்கிக் கொள்ளுதல்’ அதாவது ‘கிளவிகளை ஆக்கிக் கொள்ளுதல்’ என்பதை உணர்த்தும் பகுதிக்குக் ‘கிளவியாக்கம்’ என்னும் பெயர் பொருத்தமே என்னும் முடிவுக்கு வருகிறார்.

    “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்கமாயிற்று. ஆக்கம் அமைத்துக் கோடல். நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசி ஆக்கினார் என்பவாகலின். சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கமாயிற்று எனினும் அமையும்”

    மேற்கண்ட பகுதியிலிருந்து ‘மொழிசார்ந்த இலக்கணமேயானாலும் அவர் மக்கள் சமுதாயத்திலிருந்தே அவ்விலக்கணத்தை நோக்கியிருக்கிறார் என்பது புலனாகும். ‘அமைத்ததை’ ‘ஆக்கியது’ எனத் தொல்காப்பியர் கூறியிருப்பதற்குத் தொல்காப்பியர் கால வழக்கே காரணம் என்பது சேனாவரையர் உள்ளக்கிடக்கை. ‘கிளவியாக்கம்’ என்னும் தொடருக்குப் பொருள்கொள்வதில் தெய்வச்சிலையாரைத் தவிர ஏனைய உரையாசிரியர்கள் பெரும்பாலும் ஒத்த கருத்தினை உடையவர்கள் என்பதை அவரவர் உரைகளால் அறிய முடிகிறது. இருப்பினும் ஏற்ற சொற்களை அமைத்துக் கொள்ளுதலுக்குச் சேனாவரையர் கூறிய உவமத்தின் பொருள்புலப்பாட்டுத்திறன், ‘கிளவியாக்கம்’ என்னும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் பிறர் சொன்ன கருத்துக்களை நோக்கினால் நன்கு புலப்படும். ‘நொய்யும் நுறுங்கும்’ என்பது வழுக்களைக் குறித்தன. அவை களையப்பட்ட அரிசி உணவுக்காவது போல வழுக்களைந்த சொற்களே மொழிக்கு ஆக்கமாகும் என்பது உவமத்தாற் பெறப்படும் கருத்தாகும். உரையாசிரியர்களில் சேனாவரையர் மட்டுமே இந்த உவமத்தைக் கையாண்டு பொருள் விளக்கம் தந்திருக்கிறார். அவ்வுவமையால் கிளவியாக்கம் என்னும் முதல் இயலின் உள்ளடக்கம் முழுமையும் தெளிவாகி விடுவதைக்  காணலாம்.

    இரட்டைக் கிளவி ஒரு சொல்லா? பல சொற்களா?

    தமிழில் ஓர் எழுத்து தனித்து நின்று பொருளுணர்த்தும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் இணைந்து ஒரு சொல்லாக நின்றும் பொருளுணர்த்தும். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து நின்று தொடராகப் பொருளுணர்த்தும். இவற்றோடு ஒரே சொல் இரட்டித்து நின்றும் பொருளுணர்த்தும். அவ்வாறு அது பொருளுணர்த்துங்கால் குறிப்புப் பொருளாகவே வெளிப்படும். சான்றாக ஒருவன் பற்களைக் கடித்துத் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவதை வழக்கில் மக்கள் ‘அவன் பற்களை நறநறவென்று கடித்தான்’ என வழங்குவர். ‘நறவு’ என்னும் தமிழ்ச்சொல்லுக்குத் ‘தேன்’ என்று பொருள். இங்கே தேனுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை. ‘நற’ என்னும் சொல் இரண்டுமுறை அடுக்கிவந்து பற்களைக் கடித்தவன் பாங்கினைக் குறிப்பாகப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறு ஒரே சொல் இரட்டித்து நின்று குறிப்புப் பொருளைச் சுட்டுவதை ‘இரட்டைக் கிளவி’ என்பது தமிழிலக்கண வழக்கு. இந்தக் குறிப்புப் பொருள் இசை, பண்பு, வினை என்னும் மூன்றினையும் சார்ந்து வரும். இவ்வாறு அமையும் இரட்டைக் கிளவிக்குள் இரண்டு சொற்கள் இருந்தாலும் அது ஒருசொல்லாகவே கருதப்படும் என்பது சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் கருத்து. ‘ஒரு சொல்லாய் நின்று அப்பொருள் உணர்த்திற்று’ என்பது சேனாவரையர் உரைப்பகுதி. இரண்டு சொற்களை ஒரே சொல்லாகக் கருதமுடியுமா என்பதற்கான விடையை விளக்குவதற்காகச் சேனாவரையர் காட்டுகிற உவமம் மக்கள் வழக்குச் சார்ந்ததாக அமைந்திருக்கிறது.

    “ஈண்டு இரட்டைக் கிளவி என்றது, மக்களிரட்டை விலங்கிரட்டைபோல வேற்றுமையுடையனவற்றையன்றி, இலையிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை”

    என்பது இரட்டைக்கிளவியின் அமைப்பை விளக்குதற்குச் சேனாவரையர் காட்டும் உவமம்.  மக்களிலோ விலங்குகளிலோ இரட்டை என்றால் அவை ஒரே தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அவை தனித்தனியானவை. இரட்டைக்கிளவி அவை போன்றதன்று. இலைகளிலோ பூக்களிலோ இரட்டை என்றால் ஒன்றாகவும் இருக்கும் இரண்டாகவும் அமையும். ‘இரட்டைக்கிளவி’ என்பதும் இது போன்றதுதான் என்பதே சேனாவரையர் விளக்கம். இரட்டைக்கிளவியில் அமைந்திருக்கும் இரு சொற்களில் முன்னது குறைசொல்லாகவும் பின்னது முழுச்சொல்லாகவும் (குறுகுறுத்தான், கடுகடுத்தான், விறுவிறுப்பு — இவற்றுள் முன்னவை குறைசொல்லாகவும் பின்னவை முழுச்சொல்லாகவும் இருப்பதை நோக்கினால் சேனாவரையர் காட்டும் உவமம், இலக்கணப் பொருள் புலப்பாட்டுக்குச் செய்யும் பேருதவியைப் புரிந்து கொள்ள முடியும். ‘வில்வமரத்து இலைகள் புறத்தோற்றத்தில் மூன்றாகத் தோன்றினாலும் உண்மையில் அது ஓரிலையே’ என்பதாக விளக்கும் அறிஞர் சுந்தரமூர்த்தியின் கருத்து விளக்கமும் இங்கே சுட்டத்தகுந்ததாம். ‘இரட்டை’ என்னும் பன்மையும் ‘கிளவி’ என்னும் ஒருமையும் இணைந்தமைந்த ஒரு சொல்லாட்சியின் அடிப்படையை விளக்கப் பழந்தமிழ் உரையாசியர்கள் தொடங்கித் தற்கால இலக்கண அறிஞர்கள் முடியச் செய்திருக்கும் ஆய்வுகள் சிந்தனைக்கு விருந்தாக உள்ளன.

    ஆ தீண்டு குற்றியும் அந்தநாள் வழக்கும்

    சொல்லளவில் ஒன்றாக இருப்பது பொருள்நிலையில் மாறுபடும். இதற்குப் பலபொருள் ஒரு சொல் என்று பெயர். இது  பலபொருளைக் குறிப்பது வினை, இனம், சார்பு என்னும் முத்திறத்தால் அமையும். இம்முத்திறத்தாலும் அமையும் அல்லது பொருளுணர்த்தும் பலபொருள் ஒருசொல்லை வினையால் மட்டுமே வேறுபடும் எனத் தொல்காப்பியம் கூறியிருப்பதற்குச் சேனாவரையர் வழக்குச் சார்ந்த உவமத்தைப் பயன்படுத்தி விளக்கமளிக்கிறார். பழங்காலத்தில் பசுக்கள் உடல் தினவு எடுத்தால் உராய்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே மரக்கட்டைகளை நட்டிருப்பர். பசுக்களேயன்றி ஏனைய விலங்குகளும் தங்கள் உடல் தினவுகளைத் தீர்த்துக் கொள்ளும் அந்தக் கட்டையை மக்கள் வழக்கில் ‘ஆ தீண்டு குற்றி’ என்றே வழங்குவர். தினவு தீர்த்துக்கொள்ளும் விலங்குகளில் பசுக்கள் சிறப்புடைமையின் அதனை முன்னிறுத்தி ‘ஆ தீண்டு குற்றி’ என்றேயழைத்தனர். அந்த வழக்கியல் நிகழ்வை உவமமாக்கிக் கொள்கிறார் சேனாவரையர். ‘பல விலங்குகளும் பயன்படுத்திக் கொள்ளும் குற்றியை ‘ஆ தீண்டு குற்றி’ எனப் பசுவை மட்டும் விதந்து கூறுவதுபோலப், பலபொருள் ஒருசொல்லைப் பொருள் வேறுபடுத்தும் கூறுகள் இனம், சார்பென இருப்பினும் வினையின் சிறப்பு நோக்கி ‘வினைவேறுபடூஉம் பலபொருள் ஒருசொல்’ என்றார் என விளக்கமளிக்கிறார்.

    மா பூத்தது என்பது ஒரு தொடர். மாவும் மருதும் வளர்ந்தன என்பது ஒரு தொடர். கவசம் பூட்டிய வீரன் மாவைக் கொணர்க என்பது ஒரு தொடர். இம்மூன்று தொடர்களிலும் மா என்னும் ஒரு சொல் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கிறது. முதல் தொடரில் ‘பூத்தது’ என்ற வினையால் அது ‘மரம்’ என்பது பெறப்படும். இரண்டாவது தொடரில் ‘மருது’ என்னும் இனத்தால் ‘மா’ என்பது மரம் என்பது பெறப்படும். மூன்றாவது தொடரில் மருதமாகிய சார்புநிலையால் ‘மா’ என்பது குதிரை என்பது பெறப்படும். இம்மூன்றனுள்ளும் வினையால் வேறுபடுவதே பெரும்பான்மை என்பது அறிக.

    “இனமும் சார்பும் உளவேனும் வேறுபடுத்தற்கண் வினை சிறப்புடைமையின், அதனாற் பெயர் கொடுத்தார், ஆதீண்டு குற்றி என்பதுபோல”

    என்பது சேனாவரையர் தரும் உவம விளக்கம். பலபொருள் ஒருசொல்லின் பொருள் வேறுபாடு ‘வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் தேறத்தோன்றும்’ எனப் பின்னால் தொல்காப்பியம் கூறியிருந்தாலும், அது பற்றிய அறிமுக நூற்பாவில் இரண்டினை ஒழித்து, வினையை மட்டும் முன்னிறுத்தியமைக்கான காரணம் சேனாவரையரின் இந்த உவம விளக்கத்தால் அறியப்படுவதோடு, பழங்காலச் சமுதாய வழக்கங்களில் ஒன்றினையும் அறிந்து கொள்ள முடிகிறது.

    நிலவு கருப்பென்பாரும் உளர்

    பால் வெண்மை என்பதே சரி. பால் வெண்மையானது என்பது தவறு. காரணம் பாலுக்கு வெண்மை இயல்பு. இயல்பான நிறத்தை அப்படியே சொல்லவேண்டுமேயன்றி ஆனது என ஆக்கம் வரவழைத்தல் கூடாது. ‘தனது இயல்பில் திரியாது நின்ற பொருளை அதனது இயல்பு கூறுங்கால் ஆக்கமும் காரணமும் கொடாது இத்தன்மைத்து’ எனச் சுட்ட வேண்டும் என்பது தொல்காப்பிய விதி. அதாவது நீருக்குக் குளிர்ச்சியும் நெருப்புக்கு வெம்மையும் காற்றுக்குத் திரிதலும் நிலத்துக்கு உறுதியும் இயல்பானது. தண்ணீர் குளிர்ச்சி ஆனது என்பது பிழை வழக்கு. அந்தந்தப் பொருளுக்கான மேற்கண்ட தன்மையைக் குறிக்குமிடத்து நீர் தண்ணிது, தீ வெய்யது, காற்று உளரும், நிலம் வலிது எனக் கூறல் வேண்டுமேயன்றி நீர் தண்ணிது ஆயிற்று, தீ வெம்மை ஆயிற்று, காற்று உளர்தல் ஆயிற்று, நிலம் வலிதாயிற்று என ஆக்கச்சொல் வருவித்து உரைத்தல் மரபு வழுவாகும். இம்மரபினை,

    “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்”

    என்னும் நூற்பாவில் தொல்காப்பியம் சுட்டுகிறது. சிலர் ‘நிலம் வலிதாயிற்று’ என இயற்கைப் பொருளை ஆக்கத்தோடு கூறுவது பற்றிச் சேனாவரையர் சிந்தித்து எழுதுகிறார்.

    முதற்கண் எந்தெந்த இடத்தில் இயற்கைப் பொருளை ஆக்கத்தோடு கூறுவதை அமைத்துக் கொள்ளலாம் என்பதனை விளக்கிக் காட்டுகிறார். இயற்கையான நிலத்தில் கருங்கல், செங்கல் ஆகியவற்றையெல்லாம் இட்டு வன்னிலமாக மாற்றியதொன்றை நிலம் வலிதாயிற்று என்றால் சொல்பவன் நிற்கும் இடம் இயற்கை நிலமன்று. ஆதலின் அது பிழையன்று.

    சேற்று நிலத்தில் நின்ற ஒருவன் பின் இயற்கையான நிலத்தில் நிற்பானாயின் பின்னது முன்னதின் வலிமையுடைத்து என்பதனால் அதுவும் பிழையன்று.

    மேற்கண்ட இரண்டு இடங்களிலும் ‘நிலம் வலிதாயிற்று’ என்பது ஒப்பீட்டுத் தன்மை கொண்டது. ஆனால் இத்தகைய சூழல்கள் ஏதுமின்றி ‘இயற்கை நிலத்தில் நின்று கொண்டே ‘நிலம் வலிதாயிற்று’ என ஒருவன் கூறினால் அது மரபுவழுவாம். இவ்வாறு ஒருவன் கூறுவது ‘நிலவு கரிய நிறம் உடையது’ என்று கூறுவதுபோல் என விளக்கமளிக்கிறார்  சேனாவரையர்.

    “நிலம் வலிதாயிற்று’ என இயற்கைப் பொருள் ஆக்கம் பெற்று வருமால் எனின்…. கல்லும் இட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப்பட்ட நிலத்தை வலிதாயிற்றெனின் அது செயற்கைப் பொருளேயாம். நீர் நிலமும் சேற்று நிலமும் மிதித்துச் சென்று வன்னிலம் மிதித்தான் ‘நிலம் வலிதாயிற்று’ என்றவழி மெலிதாயது வலிதாய் வேறுபட்டதென ஆக்கம் ‘வேறுபாடு’ குறித்து நிற்றலின் இயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்ததன்றாம். அல்லது ‘நிலத்திற்கு வன்மை விகாரமென்று’ ஓர்ந்து ‘நிலம் வலிதாயிற்று’ என்னுமாயின் ‘திங்கள் கரிது’ என்பது போலப் பிறழ உணர்ந்தார் வழக்காய் ஆராயப்படாதென்க”

    திங்கள் வெண்மை என்பது உண்மை. வெண்மையைக் கருப்பென்று வழங்குவது  அஞ்ஞானம். மெய்ஞ்ஞானிக்கு விளக்கம் தேவையில்லை. ஞான சூன்யங்களுக்குச் சொன்னால் புரிந்து கொள்ள இயலும். ஆனால் அஞ்ஞானிக்கு அவன் சொல்வதே வேதம். கடுமையான அணுகுமுறையைப் பெரும்பாலும் கைக்கொள்ளாத சேனாவரையர் உலக வழக்குச் சார்ந்த  கடுமையான வெளிப்பாடொன்றை  உவமமாகக் கூறியதன் மூலம் மரபு காப்பதில் தனக்குள்ள உறுதியை வெளிப்படுத்தியுள்ளார் எனக் கருதலாம்.

    நிறைவுரை

    ‘ஆற்றூர் சேனாவரையர்’ என வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படும் சேனாவரையர் நெல்லை மாவட்டத்தில் தாமிரவருணிக்கு அருகில் உள்ள ஆற்றூரைச் சேர்ந்தவர். படைத்தலைவர்களின் வழித்தோன்றலாக இருந்திருக்கக் கூடும் என நம்பப்படும் இவரது உரையின் பன்முகச் சிறப்புக்களில் மக்கள் வழக்குகளை இலக்கண விளக்கத்திற்காக உவமங்களாக்கியனவே பெருமை எனக் கருதப்படுகிறது. சமுதாய வாழ்வியல் நெறிகளையும் நிகழ்வுகளையும் இலக்கண விளக்கத்தில் எடுத்துக்காட்டியவர் வேறு எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெரியபுராணச் சேக்கிழாரை இவரோடு ஒப்பிட இயலும். எதனையும் பரபரக்காது வரவரக் கண்டாய்வதே அறிவுடைமையாம் என்னும் கொள்கையுடையவர் சேனாவரையர். சொல்லதிகாரத்திற்கு இவர் எழுதியிருக்கும் உரையைக் கல்லாதவருக்குப் புலவர் உலகம் ஏற்பளிப்பதில்லை.

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(353)

    குறளின் கதிர்களாய்…(353)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(353)

    ஆற்றாரு மாற்றி யடுப இடனறிந்து
    போற்றார்கண் போற்றிச் செயின்.

    – திருக்குறள் – 493 (இடனறிதல்)

    புதுக் கவிதையில்...

    வென்றிடத் தக்க இடத்தின்
    விபரமறிந்து,
    தம்மையும் காத்துக்கொண்டு
    பகைவரிடம்
    தம் செயலைச் செய்தால்,
    தகுந்த வலிமையற்றவரும்
    வலிமை உள்ளவராக
    வெல்வார் உறுதியாக…!

    குறும்பாவில்...

    இடத்தின் தன்மையை அறிந்து
    தம்மையும் காத்து எதிரியிடம் வினையாற்றினால்,
    வலிமையற்றவரும் வலுவுடன் வெல்வார்…!

    மரபுக் கவிதையில்...

    வென்றிடத் தக்கதாய் இடமதனின்
    விபர மதனை நன்கறிந்து,
    தன்னுயிர் தனையும் பாதுகாத்துத்
    தம்செய லதனைப் பகைவர்தம்
    முன்னே சென்று செய்திட்டால்,
    முறையாய் வலிமை யற்றவரும்
    வென்றிடும் ஆற்றல் பெற்றேதான்
    வெல்வார் எதிரியை உறுதியாயே…!

    லிமரைக்கூ...

    பகைவரை எதிர்த்திடச் செல்வார்
    இடமறிந்து தற்காத்து வினையைச் செய்தால்,
    இயலாதவரும் வலிமைபெற்று வெல்வார்…!

    கிராமிய பாணியில்..

    எடமறியணும் எடமறியணும்,
    எதுத்துப் போகுமுன்னால
    எதிராளி எடத்த நல்லா அறியணும்..

    சண்டைக்கேத்த வலிம இல்லாதவனும்
    எதிராளி எடத்த நல்லாத்
    தெரிஞ்சிக்கிட்டு
    தன்னயும் காப்பாத்திக்கிட்டு
    பகயாளி எடத்துக்குப் போனா
    பெலம்வந்து செயிப்பான் பாரு..

    அதால
    எடமறியணும் எடமறியணும்,
    எதுத்துப் போகுமுன்னால
    எதிராளி எடத்த நல்லா அறியணும்…!

    Share
  • இரண்டு ஆள்காட்டிப் பறவைகள்

    இரண்டு ஆள்காட்டிப் பறவைகள்

    இன்று மதியம் இரண்டு சிவப்புமூக்கு ஆள்காட்டிப் பறவைகளை (Red Wattled Lapwings) ஜோடியாகப் பார்த்தேன். அதுவும் காதல் உணர்வுடன் ஒன்றை மற்றொன்று பின்தொடர்ந்தது. ஆண்பறவை நெருங்கி நெருங்கி வர, பெண்பறவை தள்ளித் தள்ளிச் செல்ல, இந்தக் காதல் நாடகத்தைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெண்குயிலின் குரல்

    பெண்குயிலின் குரல்

    ஆண்குயில் கூவும்போது பல முறைகள் படம் பிடித்திருக்கிறேன். பெண்குயில் எப்போதும் எங்கோ மறைந்திருந்தே கூவும். பெண்குயில் கூவும்போது படம் பிடிக்க வேண்டும் என்று கடந்த ஒன்றரை ஆண்டாகக் காத்திருந்தேன். இன்றுதான் அது நிறைவேறியது. இந்த அரிய காட்சியைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share