Blog

  • குறளின் கதிர்களாய்…(352)

    குறளின் கதிர்களாய்…(352)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(352)

    வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
    ளைந்து மகத்தே நகும்.

    – திருக்குறள் – 271 (கூடாவொழுக்கம்)

    புதுக் கவிதையில்...

    வஞ்சக மனங்கொண்ட
    ஒருவனின்
    பொய்யொழுக்கத்தைப்
    பார்த்து,
    அவனது
    உடம்போடு கலந்திருக்கும்
    ஐம்பூதங்களும் தம்முள்
    ஏள்ளி நகைக்கும்…!

    குறும்பாவில்...

    வஞ்சக மனம் கொண்டவனின்
    பொய்நடத்தை கண்டு அவன் உடலிலுள்ள
    ஐம்பூதங்களும் தமக்குள் சிரிக்கும்…!

    மரபுக் கவிதையில்...

    உள்ள மதிலே வஞ்சத்துடன்
    ஊரார் முன்னே நல்லவனாய்
    கள்ளத் தனமாய் மறைத்தொழுகும்
    கயவ னவனின் உடலதனின்
    உள்ளே யொன்றாய்க் கலந்திருக்கும்
    உயர்ந்த ஐந்து பூதங்களும்
    எள்ளி நகைக்கும் தம்முள்ளே
    இவனது பொய்ச்செயல் தனைப்பார்த்தே…!

    லிமரைக்கூ...

    வஞ்சம் மறைத்து பொய்யாய்
    ஒழுகும் ஒருவனை அவனுடலின் ஐம்பூதங்களும்
    தம்முள் நகைக்கும் மெய்யாய்…!

    கிராமிய பாணியில்..

    வேணும் வேணும் நல்லொழுக்கம்
    வாழ்க்கயில வேணும் நல்லொழுக்கம்,
    வேண்டவே வேண்டாம் தீயொழுக்கம்..

    வஞ்சக மனத்த மறச்சி
    வெளிய நல்லவன் போல நடிச்சி
    பொய்வாழ்க்க வாழுறவனப் பாத்து
    அவனோட ஒடம்புல இருக்கிற
    பஞ்சபூதங்களும் தமக்குள்ள
    கேலிபண்ணிச் சிரிக்குமே..

    அதால
    வேணும் வேணும் நல்லொழுக்கம்
    வாழ்க்கயில வேணும் நல்லொழுக்கம்,
    வேண்டவே வேண்டாம் தீயொழுக்கம்…!

    Share
  • குயிலின் அமுத கானம் – 13

    குயிலின் அமுத கானம் – 13

    இன்று காலை ஜன்னலருகே ஒரு குயில் கூவத் தொடங்கியது. அதைச் சற்று நெருக்கமாகப் படம் பிடிக்கும் வாய்ப்பு அமைந்தது. சூரிய ஒளியில் அதன் அலகும் கண்களும் கருமேனியும் மின்ன, அது கூவும் அழகைக் காணுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இணையத்தில் நேர மேலாண்மை – அண்ணாகண்ணன் உரை

    இணையத்தில் நேர மேலாண்மை – அண்ணாகண்ணன் உரை

    இணையத்தில் நேர மேலாண்மை என்ற பொருண்மையில் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.04.2020 அன்று ஜூம் வழியே அண்ணாகண்ணன் வழங்கிய உரையின் பதிவு இங்கே. இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த பேராசிரியர் நறுமுகை இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்புள்கோழியின் இரட்டைக் குளியல்

    கம்புள்கோழியின் இரட்டைக் குளியல்

    கம்புள்கோழி, இன்று மாலை இருமுறை அடுத்தடுத்து முங்கிக் குளித்தது. இந்த அற்புதமான, ஆனந்தமான அதிரி புதிரி இரட்டைக் குளியலைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • கம்புள்கோழியின் குரல்

    கம்புள்கோழியின் குரல்

    கம்புள்கோழியின் குரலைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 68

    பழகத் தெரிய வேணும் – 68

    நிர்மலா ராகவன்

    கொடுத்தால் திரும்பக் கிடைப்பது

    மனிதர்கள், `என் மதம், மொழி, இனம்! இதெல்லாம்தான் உயர்த்தி!’ என்று பலவாறாகப் பிறருடன் போட்டி போடும்போது, மனிதத்தன்மை குன்றி, சண்டை சச்சரவுகள் பெருகிவிடுகின்றன. நீடித்த மரியாதையின்மைதான் காரணம்.

    `மரியாதை’ என்பது நம்மிடமிருந்து மாறுபட்டவர்களது உணர்வுகளை மதித்து, அவர்களது வித்தியாசத்தைப் பாராட்டாது, அப்படியே ஏற்பது. கொடுத்தால், தானே திரும்பக் கிடைப்பது.

    ஒருவர் தன்னைத்தானே உயர்வாக நினைக்கலாம். ஆனால், சந்திப்பவர்கள் அனைவரும் தன்னை மதித்தாகவேண்டும் என்று மிரட்டலும், அதிகாரமுமாக நடத்தினால், மரியாதை நிலைக்குமா? அது உண்மையாகத்தான் இருக்குமா?

    எது நற்பண்பு?

    “குப்பைக்காரனோ, பல்கலைக்கழகத்தின் தலைவரோ, எவராக இருந்தாலும், நான் ஒரேமாதிரிதான் பேசுவேன்” (ஐன்ஸ்டீன்).

    `எனக்கு இவனால் காரியம் ஆகவேண்டுமே!’ என்று எதிர்பார்த்து, போலி மரியாதையுடன் நடந்துகொள்கிறவர்கள் மலிந்துவிட்ட காலம் இது. காரியம் முடிந்ததும், இத்தகைய காரியவாதிகள் காணாமல் போய்விடுவார்கள்.

    மரியாதை இல்லாத உறவு

    பிறர் சொல்வதும் செய்வதும் நாம் செய்வதுபோலவோ, அல்லது விரும்புவதுபோலவோ, இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவரைக் கேலி செய்வது நெருக்கத்தை எப்படி உண்டாக்கும்?

    தன் வீட்டுக்கு வரும் ஒருவரது உச்சரிப்பைக் கேலி செய்கிறவர் அவர்கள் வீட்டுக்குச் செல்கையில், கேலிக்கு ஆளாகிவிடுவோம் என்று நினைத்துப் பார்ப்பதில்லை.

    மாமியார் பதவி கிடைத்தவுடனேயே, புதிய மருமகள் மகனது அன்புக்குத் தனக்குப் போட்டியாக வந்துவிட்டாள் என்ற காழ்ப்புணர்ச்சியும் வந்துவிடும் சிலருக்கு.

    எல்லாக் குடும்பங்களிலும் ஒரேமாதிரியான சமையல் இருக்காது. இதை ஒத்துக்கொள்ள விரும்பாது, “உனக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும் என்று சொன்னார்களே! ஒன்றுமே தெரியலியே!” என்று மட்டம் தட்டும் மாமியார்மீது எந்த மருமகளுக்குத்தான் மரியாதை எழும்?

    அன்பு? கேட்கவே வேண்டாம்.

    பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்று வற்புறுத்த முடியாது. ஆனால், அவமரியாதையை எதற்குத் தாங்கிக்கொள்வது?

    “எங்கள் வீட்டில் இப்படித்தான் சமைப்போம்,” என்று மருமகள் வாதாடினால், உறவு இன்னும் விரிசலாகும்.

    `வீண் சண்டை எதற்கு?’ என்று எதுவும் பேசாமலிருந்தாலும், மனம் என்னவோ கசந்துதான் போய்விடும்.

    குழந்தைகளுக்கு மரியாதை

    குழந்தைகளிடம், `நீங்கள், சொல்லுங்கள்’ என்று பேசுவதால் மரியாதை அளிப்பதாகிவிடாது.

    கடைத்தெருவில், பார்க்கும் பொருளையெல்லாம் வாங்கிக் கொடுக்கும்படி நச்சரிக்கும் குழந்தையை எப்படிச் சமாளிப்பது?

    `காசு இல்லே’. கடைத்தெருக்களில் பல தாய்மார்கள் சொல்லும் சாக்கு.

    `உனக்குத்தான் வீட்டிலே நிறைய இருக்கே!’ என்று சுட்டிக்காட்டலாம்.

    அதைவிட்டு, பலர் முன்னிலையில் அடிப்பார்களா?

    அப்படிச் செய்த ஒருவர், “என் தந்தை எனக்கு பிடித்தது எதையும் செய்ய விடவில்லை. எனக்கு விளையாட்டுகளில் கலந்துகொள்ள ஆசை. அப்பா விடவில்லை,” என்றார், உணர்ச்சியற்ற குரலில்.

    அப்போது அனுபவித்த நிராசை குழந்தையின் ஆசையை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது, ஆத்திரத்தில் கொண்டுவிட்டது.

    கதை

    அமெரிக்காவில் வாழும் ஐந்து வயதுப் பாலகன் சத்யாவிற்கு அவனுடைய தாய் மரியாதை சொல்லிக்கொடுத்தாள்: “பெரியவர்களிடம் பேசும்போது, `வா’ என்று சொல்லக்கூடாது. `வாங்கோ,’ என்று மரியாதையாக் கூப்பிடணும்”.

    ஒரு நாள் காலையில் அவன் என்னுடன் தொலைப்பேசியில் வெகு நேரம் தொடர்பு கொண்டபோது, “ஏதாவது சாப்பிட்டியோப்பா?” என்று கரிசனத்துடன் விசாரித்தேன்.

    அவனுடைய பதில்: இல்லேங்கோ, பாட்டிங்கோ!!

    பெண்களுக்கு மரியாதை

    `நீ அழகாக இருக்கிறாய்!’ என்று புகழ்ந்தால், உலகம் புரியாத சிறுமிகள் வேண்டுமானால் அகமகிழலாம்.

    வளர்ந்தபின்னர், அவர்கள் எதிர்பார்ப்பது தன்னை மரியாதையுடன் நடத்தும் ஆண். முகத்துதி இல்லை.

    ஆணைச் சார்ந்து நிற்பவள்தான் நல்ல பெண் என்று சிறுவயதிலிருந்தே போதிக்கப்பட்டு வளர்கிறார்கள் பெண்கள்.

    ஆனால், படித்து, சொந்தக் காலில் நிற்பவர்கள் நினைப்பது: ஒருவரிடம் அன்பு செலுத்துகிறோம். அதை நம் பலகீனம் என்றெண்ணி, அவர் எவ்வளவு மோசமாக நடத்தினாலும், பொறுத்துப் போகலாமா? சுயமரியாதையை இழந்துவிடுவோமே!

    இப்படிப்பட்ட எண்ண ஓட்டத்தினால் பெண்ணியக் கருத்துகள் வலுப்பெறுகின்றன. விவாகரத்துகள் அதிகரிக்கின்றன.

    ஒரு துணுக்கு: “என் கணவர் நான் சொல்வது எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கேட்பார் – பிறரிடம் பேசும்போது!”

    அவள் சொல்லாமல் விட்டது – நான் சொல்வது எதையும் கணவர் காதில் வாங்கிக்கொள்வது கிடையாது.

    ஒருவருக்கு நாம் தரும் மரியாதை அவர் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பதில் இருக்கிறது.

    எப்படி மரியாதை அளிப்பது?

    பெண்களுக்கு நன்றாகப் பேசும் திறமையும், ஆண்களுக்கு இயந்திரத் திறன்களும் (mechanical skills) இயற்கையாகவே அமைந்திருக்கின்றன.

    ஒரு பெண் காரோட்டிப் போகையில், அவளது `திறனை’க் கேலி செய்பவன் மரியாதை அளிக்கத் தவறிவிடுகிறான்.

    கதை

    ஒரு முறை, நான் காரை நிறுத்திய இடம் சறுக்கு மரம்போல் பயங்கர சாய்வாக இருந்தது. எப்படியோ கீழே நிறுத்திவிட்டேன்.

    திரும்பப் போகும்போது, அதை எப்படி வெளியே கொண்டுவருவது என்று மலைத்து நின்றிருந்தேன்.

    முன்பின் தெரியாத ஒருவர் என் குழப்பத்தைப் பார்த்து, “நான் உதவலாமா?” என்று பணிவாகக் கேட்டு, நான் சம்மதித்ததும், உதவினார்.

    அவர் மரியாதைக்குரியவர். ஏனெனில், `உனக்கு இதுகூட முடியவில்லையே!’ என்று ஏளனமாக நினைக்கவில்லை.

    இவரைப் போன்றவர்கள், எல்லாருக்கும் எல்லாம் செம்மையாகச் செய்ய முடியாது என்று புரிந்தவர்கள். பெண்களுக்காக காரின் கதவைத் திறந்துவிடுபவர்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் `gentlemen’ என்று சிலாகிக்கிறோம்.

    இவ்வாறு, பிற பெண்களை மரியாதையாக நடத்துபவர்களின் குழந்தைகளும் தந்தையைப் பின்பற்றுவார்கள்.

    மகளாக இருந்தால், மரியாதைக்குறைவாக நடத்தும் பிற ஆண்களை எதிர்ப்பாள். `பிறர் ஏன் என்னை மதிப்பதில்லை?’ என்று குழம்பமாட்டாள்.

    அப்படி ஒருவர் நடந்தால், அது நம் தவறில்லை. அவருக்குத் தன்னையே மதிக்கத் தெரியவில்லை, அதனால் பிறரையும் மரியாதையின்றி நடத்துகிறார் என்று புரிந்து, அலட்சியம் செய்வாள்.

    குடும்பத்தில் மரியாதை

    ஒரு குடும்பத் தலைவன் சுயநலத்துடன், தான்தோன்றித்தனமாக நடந்தால் என்ன ஆகும்?

    அவனுடைய தீய நடத்தையால் அவதிப்படும் மனைவிக்கு அவன்மீது அன்போ, மரியாதையோ இருக்காது.

    அவன் கொதித்துப்போய், `நான் உனக்கு வாழ்வு கொடுத்தேன், பிள்ளைகள் கொடுத்தேன்!’ என்று வசனம் பேசினால் மரியாதை கிட்டுமா?

    இருவரும் ஒருவர் மற்றவருக்கு அளிக்கவேண்டிய மரியாதையை மறந்து, ஓயாத வாக்குவாதத்தால் வாழ்வை நரகமாக்கிக்கொள்வார்கள்.

    தான் `ஆண்’ என்ற ஒரே தகுதியால், மனைவி (மற்றும் பிற பெண்கள்) தனக்கு மரியாதை அளிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தோல்விதான் அடைகிறார்கள்.

    பிராணிகளுக்கு மரியாதையா!

    “உன்னை எப்படிப் பிறர் நடத்தவேண்டும் என்று விரும்புகிறாயோ, அதேபோல் அவரையும் நடத்து”.

    இந்த உண்மை மனிதருக்கு மட்டுமல்ல, வளர்ப்புப் பிராணிகளுக்கும் பொருந்தும்.

    ஒரு நாயையோ, பூனையோ வளர்த்தால், `நாம்தான் அதற்கு ஆகாரமும் தங்க இடமும் கொடுத்திருக்கிறோமே!’ என்று அடித்து உதைப்பவர்களும் இருக்கிறார்கள் — எங்கள் பக்கத்து வீட்டிலிருந்த மிஸ்டர் ஊ (WOO) மாதிரி.

    அவன் வளர்த்த நாய், ராஜர், நான் வாசலில் உட்கார்ந்திருக்கும்போது என் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும்.

    “சும்மா திட்டறாளாப்பா?” என்று, நான் தடவிக் கொடுப்பேன்.

    எங்கள் நெருக்கம். மிஸ்டர் ஊவின் ஆத்திரத்தை எழுப்பியது. ஒரு சிறு கூண்டுக்குள் அதை அடைத்துவைத்தான். தலையைச் சாய்த்து, பரிதாபமாக என்னைப் பார்க்கும்.

    ஒரு முறை, எப்படியோ தப்பித்து, வெகு தூரம் சென்றுவிட்டது ராஜர்.

    தூரத்தில் என்னைப் பார்த்துவிட்டு, வேகமாக ஓடி வந்த அந்த அல்சேஷன் நாயைக் கண்டு, நடந்துகொண்டிருந்தவர்கள் அஞ்சி விலக, என்மேல் பாய்ந்து, முன் கால்கள் இரண்டையும் என் நெஞ்சில் பதித்துக்கொண்டது.

    “உங்கள் நாயா?” கேட்டவர்கள் முகத்தில் ஆத்திரம்.

    “இல்லை. என் பக்கத்து வீட்டு நாய்!” என்று கூறி, அவர்களை அதிசயத்திற்கு உள்ளாக்கினேன்.

    அதை அணைத்து, “திரும்பிப் போகத் தெரியலியா? என்கூட வா,” என்று தடவிக் கொடுத்தேன்.

    அதற்கு ஆகாரம் அளித்தவன் அத்துடன் நின்றுவிடாது, உலவப் போகையில் தன்னுடன் அழைத்துப் போயிருந்தால், அந்தப் பெரிய நாய் வெகுவாக அஞ்சி, பிறரையும் அச்சுறுத்தி இருக்குமா?

    நாங்கள் குடியிருந்த இன்னொரு வீட்டிலும் இதே கதைதான்.

    “உடனே வா. இல்லாட்டா, ஆகாரம் கிடையாது!” என்ற மிரட்டல் வரும். பக்கத்து வீட்டிலிருந்து.

    “சாப்பிடு, போ, டிக்ஸி. அப்புறமா வா,” என்று நான் அனுப்பும்வரை என்னைவிட்டுப் போகாது.

    கோலாலம்பூரில், தெருவுக்குத் தெரு, செல்லப் பிராணிகளுக்கு வேண்டிய ஆகாரம், விளையாட்டுச் சாமான்கள் விற்கும் கடைகள்!

    அதைக் கண்டு, “இங்கே எல்லாருக்கும் பூனை, நாய்கள்மேல் அன்பு வந்துவிட்டது போலிருக்கிறதே!” என்று என் மகள் மகிழ, வறண்ட சிரிப்பைத்தான் அவளுக்குப் பதிலாக என்னால் அளிக்க முடிந்தது.

    நம்மைப் போலவே, மிருகங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பது எத்தனைப் பேருக்குப் புரிகிறது?

    Share
  • கூடு திரும்பும் பறவைகள்

    கூடு திரும்பும் பறவைகள்

    கூடு திரும்பும் பறவைகள் – 1

    கூடு திரும்பும் பறவைகள் – 2

    கூடு திரும்பும் பறவைகள் – 3

    கூடு திரும்பும் பறவைகள் – 4

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நீத்தார் கடனாக நினைவேந்தல்

    நீத்தார் கடனாக நினைவேந்தல்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    போர்க் களம். மார்பில் ஈட்டி. மகிழ்ந்தது நெஞ்சம். மகன் இறந்ததால் மகிழ்ச்சியா தாய்க்கு?

    முதுகில் ஈட்டி பாய்ந்து இறந்தால், ஏன் பெற்றேன் இந்த மகனை எனத் துயர் தாய்க்கு.

    மார்பில் ஈட்டி பாய்ந்து இறந்தால் என்ன தவம் செய்தேன் என மகிழச்சி தாய்க்கு.

    பெற்ற பொழுது இல்லாத உவப்பும் மகிழ்ச்சியும் மாவீரன் தன் மகன் என்பதாய் தாய்க்கு.

    வீடு திரும்புவாள் தாய், முதுகில் ஈட்டி எனில் என்? மார்பில் ஈட்டி எனில் என்? இறந்த பொழுது, உயிர் பிரிந்த பொழுது எது?

    காலையா, நண்பகலா? மாலையா? முன்னிரவா? நள்ளிரவா? விடியலா? வளர் பிறையா? எத்தனையாம் நாள்? தேய் பிறையா? எத்தனையாம் நாள்?

    கணித்தாள். அவள் செஞ்சில் நீங்காப் பொழுது. கணித்த நாளில் ஒவ்வொரு மாதமும் வழிபாடு. உயிருக்கு வழிபாடு. உயிர் உலவிக்கொண்டே தொடர்கிறதாம். வாழ்ந்த பொழுதுகளை மீட்கிறதாம்.

    குத்து விளக்கு ஒளி, குடம் நிறைத்த நீர் மூடிய மாவிலைத் தேங்காய், அரிசி மாக் குழையல்களே உயிரின் சாட்சியாக.

    பால் படையல், பழம் படையல், பொங்கல் படையல், வாழ்ந்த காலத்தில் விழைந்த உணவுகள் படையல்.

    மனம் ஒடுங்கிப் பாடுகிறாள். தாலாட்டுத் தொடக்கம் வழிபாட்டுப் பாடல்களாக, தெய்வமாக மகனை உருவகித்துப் பாடுகிறாள். மகன் நினைவுகளில் கரைகிறாள்.

    மாதந் தோறும் வழிபட ஓராண்டு. அடுத்து ஆண்டுக்கு ஒருமுறை படையலும் வழிபாடும். நீத்தார் கடன்.

    மறக்காள் பிறை நாளை. ஆண்டு நினைவுக்கு அழைப்பாள் உறவுகளை.

    போரும் காதலுமா? காதலும் போருமா? அகமும் புறமுமா? புறமும் அகமுமா?

    மனித வரலாறே போரும் காதலுமாம்.

    இராவணனன் தொடக்கம் சைவத் தமிழ் அரசர் கண்ட போர்க்களங்கள் எண்ணில் அடங்கா. இலங்கை தொடர்ச்சியாகவே போர்க்களத்தின் தளம்.

    நெடிய சைவத் தமிழர் வரலாற்றில் இலங்கைப் போர்க்களங்களில் இறந்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. இவர்களை நினைவு கூரும் சுற்றமும் உற்றமும் எண்ணுக் கணக்கில் அடங்கா.

    402 ஆண்டுகளுக்கு முன் சைவத் தமிழ் அரசன் சங்கிலியன் போரில் மாய்ந்தான். அவனோடு கணக்கில் அடங்காச் சைவத் தமிழ் உயிர்களை இழந்தோம்.

    இழந்த நாள் வைகாசி, தேய்பிறை எட்டாம் நாள்.

    இந்த நாளைக் கணக்கிட்டுத் தந்தவர் வாழும் வரலாற்றுப் பேராசிரியர் பத்மநாதன். கொழும்பில் 45 ஆண்டுகளுக்கு முன் நடந்த அரசியல் வழக்கில், ஈழச் சைவத் தமிழர் இறைமை, போர்த்துக்கேயக் கத்தோலிக்கரிடம் சென்றடைந்த நாள் திருவள்ளுவருக்குப் பின் 1970ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் தேய்பிறை எட்டாம் நாள் (05 யூன் 1619) எனக் கூறி வாதாடியவர் மூத்த வழக்கறிஞர் மு. திருச்செல்வம்.

    பேராசிரியர் பத்மநாதன் கணக்கிட்ட நாளே, வழக்கறிஞர் திருச்செல்வம் எடுத்துக் கூறிய நாள். 45 ஆண்டுகளுக்குமுன் வழக்கறிஞர் திருச்செல்வம் தன் வழக்குரை வாதங்களை நூலாக வெளியிட்டார். அவரது மகன் நீலன் திருச்செல்வத்தின் முன்னுரையுடன் கூடிய அந்த நூலை இன்றும் விலைக்கு வாங்கலாம்.

    12 ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்காலில் சைவத் தமிழர் போரில் தோற்ற நாள், கணக்கிலடங்கா சைவத் தமிழ் உயிர்களைப் போரில் பறிகொடுத்த நாள், வைகாசித் திங்கள் தேய்பிறை ஒன்பதாம் நாள்.

    சங்கிலியன் நினைவேந்தல் நாளுக்கு அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள்.

    27 ஆண்டுகளுக்கு முன்னர், உரும்பராய் சிவகுமாரன் நினைவேந்தல் வைகாசி  தேய்பிறை முதலாம் நாள்.

    பிறந்த நாளுக்கு  ஒருவர் பிறந்த நட்சத்திரம் வரும் நாளே பிறந்த நாள். மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்றுதான் உங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் அதுவே நமது மரபு.

    திதியைப் பார்த்தே நினைவேந்தல். இறந்தவர்கள் இறந்து போன நாளன்றே அவ் உயிர்கள் நம்மை நாடி வருகின்றன. எனவே அதை விடுத்து அவர்கள் இறந்து போன ஆங்கிலத் தேதியை கணக்கிட்டு திதி கொடுப்பது வீணானதே.

    Share
  • தன்வந்திரி மகாமந்திரம்

    தன்வந்திரி மகாமந்திரம்

    மகாவிஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படும் தன்வந்திரி, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தைத் தேவர்கள் உண்டதால் நிறைவாழ்வு பெற்றார்கள். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையாக வணங்கப்பெறும் தன்வந்திரி, எல்லா நோய்களையும் அச்சங்களையும் நீக்க வல்லவர். கொரோனா அலைகளால் உலகமே துன்புறும் இக்காலத்தில், மிகச் சக்தி வாய்ந்த இந்தத் தன்வந்திரி மகாமந்திரத்தை ஜபியுங்கள். நலமும் குணமும் அருளும் திடமும் பெறுங்கள்.

    ஜபம் – கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார்
    இசை – சூர்யா நீலகண்டன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சங்கர குரு ஜெய சங்கர குரு

    சங்கர குரு ஜெய சங்கர குரு

    காஞ்சி மாமுனிவர் பிறந்த அனுஷ நட்சத்திரத்தில், இந்தப் பாடலை வெளியிடுகிறோம். கேட்டு மகிழுங்கள். குருவருள் பெறுங்கள்.

    பாடல் – சங்கர குரு ஜெய சங்கர குரு
    பாடியவர்கள் – கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பரமஹம்ச மாஸ்ரயே | கிருஷ்ணகுமார்

    பரமஹம்ச மாஸ்ரயே | கிருஷ்ணகுமார்

    காஞ்சி மகாபெரியவரின் நட்சத்திரமான இந்தப் பௌர்ணமி அனுஷ நன்னாளில், ‘பரமஹம்ச மாஸ்ரயே’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தேன்சிட்டின் சங்கீதம்

    தேன்சிட்டின் சங்கீதம்

    அதிகாலை 5:30 மணிக்குத் தேன்சிட்டு இசைத்த தேனிசை இதோ.

    தேன்சிட்டுகளின் சங்கீதம்

    பறவைகளின் குரல்களே விடியலின் கடவுச்சொல் (password); அவற்றின் குரல்களை அங்கீகரித்தே (voice recognition) அதிகாலை புலர்கிறது. (அகமொழி 945) என முன்னர் எழுதினேன். அதிகாலையில் எங்கள் வீட்டைச் சுற்றிலும் தேன்சிட்டுகள் உள்பட, பல்வேறு பறவைகளின் கான வெள்ளம் பெருக்கெடுக்கும். அதில் ஒரு துளியை இங்கே கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மைனா, உன் அலகு எங்கே?

    மைனா, உன் அலகு எங்கே?

    மைனா, உன் அலகு எங்கே?

    இன்று காலை இந்த அலகுடைந்த மைனாவைக் கண்டேன். எங்கோ பலமாக மோதியிருக்கிறது போலும். ஐயோ, பாவம். இனி இது எப்படிச் சாப்பிடும்?

    அலகில்லாமல் உண்ணும் மைனா

    அலகுடைந்த மைனா எப்படிச் சாப்பிடும் என முந்தைய பதிவில் கவலை தெரிவித்தேன். ஆனால், இன்று என் மனைவி வைத்த உணவைக் காக்கையும் இந்த அலகுடைந்த மைனாவும் பகிர்ந்து சாப்பிட்டன. இந்த மைனாவால் சாப்பிட முடிகிறது என்பது நிம்மதி அளிக்கிறது. அடிபட்ட மைனாவுக்காகக் காக்கை விட்டுக் கொடுத்துப் பரிவு காட்டுவது, ஓர் உன்னத நிகழ்வு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 130 (பொருபுலி)

    சேக்கிழார் பாடல் நயம் – 130 (பொருபுலி)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொன் கை நீட்டப்
    பரிஉடைத் தந்தை கண்டு, பைந்தழை கைக் கொண்டு ஓச்ச,
    இரு சுடர்க்கு உறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி,
    வருதுளி முத்தம், அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி்.

    வரலாறு

    பிறந்த குழந்தையைத்  தந்தை எடுத்தணைத்தான்; சிறுகுடி மக்கள் கொண்டாடி விழா எடுத்தனர்; புலிக்குட்டி போன்ற குழந்தை உலகமே போற்ற விளங்கியது; அக்குழந்தையின் திண் என்றிருக்கும் உடலைக் கருதித் ‘’திண்ணன்’’ என்றே பெயரிட்டு  அழைத்தனர்;அக்குழந்தைக்கு மரபுப்படி காப்பாக,  வேப்பங்கொட்டை கோத்த அணியை அணிவித்து வளர்த்தனர்; தெய்வத்துக்குப் பான்மடை கொடுத்தனர்; குழந்தை  தலையில் புலிநகச்  சுட்டியையும்,  மார்பில்  வெண்பல் தாலியையும்  அணிவித்தனர்;  மணிகள் பூட்டிய சதங்கையுடன்  நாய்க்காசு, தாயத்துடன் கூடிய அரைஞாணையும்  அணிவித்தனர்; அந்நாளில் குழந்தை,  பெற்றோர் மார்பில் சளுவாய் ஒழுக,  மழலைச் சொல் பயின்றது. அப்போது நடந்த நிகழ்ச்சியைச்  சேக்கிழார் பாடுகிறார்; அப்பாடல்

    பொருபுலிப் பார்வைப் பேழ்வாய் முழையெனப் பொற்கைநீட்டப்
    பரிவுடைத் தந்தை கண்டு பைந்தழை கைக்கொண் டோச்ச
    விருசுடர்க் குறுகண் டீர்க்கு மெழில்வளர் கண்ணீர் மல்கி
    வருதுளி முத்த மத்தாய் வாய்முத்தங் கொள்ள மாற்றி,

    பொருள்

    குழந்தை பொருகின்ற புலியாகிய பார்வைமிருகத்தின் திறந்த அகன்ற வாயினைச் சிறு குகையென்று கருதித் தமது அழகிய கையை அதனுள் நீட்ட;  அன்பு மிக்க தந்தை அதனைக் கண்டு பரிந்து பசுந்தழை யொன்றைக் கையிற் கொண்டு ஒச்சவே; சூரிய சந்திரர்கள் என்னு மிரண்டு சுடர்களுக்கு உளதாம் துன்பத்தைத் தீர்க்கும் அழகு வளரும் கண்களின் நீர் நிரம்பி வருகின்ற துளியாகிய முத்தத்தை அந்தத் தாயாகிய தத்தை வாய்முத்தங்த்தால்  மாற்றினாள்;

    விளக்கம் :-  பார்வை விலங்காகிய  புலிக்குட்டியின் திறந்த வாயை ஏதோ ஒரு பேழை எனக்கருதியது.

    சிங்கம், புலி முதலிய விலங்கினங்களின் மேல்வாய் கீழ்வாய்ப் பற்கள் வளைந்து குறடுபோலப் பொருந்தி மாட்டிக் கொள்ளுந் தன்மையுடையன; ஆதலின் இரைகண்ட போது எளிதின் வாய்திறந்து பற்ற இயலாதன; இதுபற்றி அவை பெரும்பாலும் வாயை அகலத்திறந்து வைத்திருக்கும்  இயல்புடையன என்பர்.

    இவ்வாறு திறந்துள்ள அகன்ற வாய் சுருங்கி நீண்டு உள்ளே செல்லுதலால் குகை எனக்கருதி, குகையினுள்ளே உள்ளது எது அதனைப் பற்றுவோம் என்று

    உள்ளே கை நீட்டுதல் சிறுவரியல்புகளில் ஒன்றாம்.

    பின்னர் இக்குழந்தை,   வேட்டையாடி வந்து, சிவபிரானுக்கு அமுதூட்டிக் காவல் புரிந்தும், “இருசுடர்க்கு  உறுகண்   தீர்க்க”  அம்பினால்  தமது கண்ணைப் பேழ்ந்து அப்பிக் கண்ணப்பராகியதும் கையாதலின் அதனை முற்கூறி அழகு படுத்தினார். இவ்வாறு இளம்பிராயத்தும் பின்னர்க் காளைப்பருவத்தும் கொடிய விலங்குகளுடன் பழகியதனாலும் போர் செய்து வென்றதனாலும் இவரது திருமேனியில் அவற்றால் புண்செய்யப்பட்ட வடுக்கள் விளங்கின என்று,

    “வடிவே,
    மறப்புலி கடித்த வன்றிரண் முன்கை,
    திறற்படை கிழித்த திண்வரை யகலம்,
    எயிற்றெண்கு கவர்ந்த விருந்தணெற்றி”

    என நக்கீரதேவர் திருமறத்தில் திருக்கண்ணப்ப தேவர் அருளினார். ஆயின் அவ்வாறு நாயனாரது திருமேனியில் ஊறுபட்ட தெனக் கூறவும் மனமொருப்படாத ஆசிரியர்,  அதன் அறிகுறியாக இங்குச் சிறு வயதிற் புலியின் வாயில் இவர்கை நீட்டினார் என்ற ஒருசெய்திமட்டுங் கூறி ஏனைய வெல்லாம் அநுமானத்தா லுணர்ந்து கொள்ளவைத்தாரென்க.

    நீண்டகாலம் கழித்துத் தவங்கிடந்து அரிதிற் பெற்ற பட்டத்திற்கு உரிய மகனாதலிற் பரிவுடை என்றார். புலிவாயிற் கைநீட்டுவதாகிய பெருங்கேடு தரத்தக்க பெருஞ் செயலைத் தடுக்க முயல்பவன் அதற்குரியபடி பெருந் தண்டஞ் செய்து ஒறுக்காது பசுந்தழை கொண்டு, அதனைக் கொண்டாகிலும் அடித்து ஒறுக்காது ஓச்சுவதும் இவனது பரிவு காட்டும். ஓச்சுதல் – ஓங்குதல். அடித்துத் தண்டிப்பான் போன்ற பாவனை காட்டுதல்.

    அம்மையார் ஊட்டிய திருமுலைப்பால் உண்டுபால்வடிந்த வாயுடன் நின்ற ஆளுடைய பிள்ளையாரை,

    “எச்சின்மயங் கிடவுனக்கு  ஈது  இட்டாரைக் காட்டென்று,  கைச்சிறிய தொருமாறு கொண்டோச்சி” னார் அவரது தந்தையார் சிவபாதவிருதயர். இங்கு நாகன் புலிவாயிற் கைநீட்டிய தன் மகனாரை மாறுதானும் கொண்டோச்சச் சகியாது பைந்தழை கொண்டு  ஓச்சினான் என்றதும் அவனது பரிவு காட்டுவதாம்.

    இருசுடர்க்கு  உறுகண் என்ற தொடரால்  நாயனாரது சரிதக் குறிப்பும் கண்ணப்பர் என்ற பெயருக்குக் காரணக் குறிப்பும் பெற இதனைமுன்னபே கூறினார்.  இருசுடர்கள் சூரியசந்திரர்கள். இவர்கள் முறையே சிவபெரு மானது வலது கண்ணும் இடதுகண்ணுமாவார்.

    உறுகண் ஆவது உதிரம் பாய்ந்தது. தீர்க்கும் – உதிரம் வாராது தடுத்து  நின்ற. இவை பின்னர் இவர் சரித நிகழ்ச்சிகளின் முற்குறிப்பாக இங்குக் கூறினார்.

    எழில்வளர்கண் என்ற தொடர்,  இவரது கண்கள் அழகால் வளர்ந்தே நின்றன. அவை

    “கொன்றைதங்கு வேணி யார்தமைக், கண்ணினீடு
    பார்வையொன்று கொண்டு”

    “காணுதற்கரியார் தம்மை, ஆர்வமுன் பெருக ஆரா
    அன்பினிற் கண்டு கொண்டே”  எஞ்ஞான்றும் நிற்பன என்பதைக்குறித்தது. இவற்றில் ஒன்று இறைவனது கண்ணில் அப்பப்பட்டு அவரது கண்ணே யாயிற்று. ஆதலால் எழில்வளர்கண் என்றார்.

    நீர் கண் மல்கி வரும் துளி முத்தம் – நீர், பெருகும்போது முதலிற் கண்களில் நிறைவதும். பின்னரே துளிகளாக வீழ்வதும் இயல்பாம்.

    அத்தாய் என்றசொல்  தந்தையினும் மிக்க பரிவுடைய அந்தத் தாயைக்குறித்தது.

    துளிமுத்தம் – வாய்முத்தம் – சொற்பின்வருநிலை. ‘ஊனுக்கூன்’ எனுமுரை என்று நினைவுற்று இறைவன் கண்ணோய்க்குக் கண் மாற்றுக ஒப்பு முறை (Homeopathic) மருந்தாய் உதவும் மருந்துப் பண்டமாகிய இக்கண்கள் அந்தம் ஒப்புமுறை மருந்தினிலையில் நோய்க்கு மாற்றாகப் பழகித் தேர்ந்தன என்ற குறிப்புப் பெறத்  துளிமுத்தம் பெற வாய்முத்தம் மாற்றி எனக் கூறிய நயமும் காண்க. வாய் முத்தம் கொள்வதற்குத் துளிமுத்தம் மாற்றி எனப் பண்டமாற்றுக் குறிப்புப் பெறக் கூறிய சுவையை இங்கேகாணலாம்.

    வாய்முத்தங் கொள்ளுதல்  என்பது,  பிள்ளைப்பருவங்கள் பத்தினுள் முத்தப்பருவம் என்பது குறித்தது. இவ்வாறே முன்னர்

    “மழலைத் தீஞ்சொல்  வண்ணமென் குதலைச் செவ்வாய்
    குதட்டியேவளராநின்றார்”

    என்றது செங்கீரைப்பருவங் குறித்ததென்பர்.

    இப்பாடல் கண்ணப்பரின் குழந்தைப்பருவச்செயல் பிற்காலத்தில், அவர் செய்த செயற்கரிய செயலை, முன்னதாகக் கூறும் நயத்துடன் விளங்குகிறது. சிவபிரான்  வலக்கண்ணில் உதிரம் பாய நின்றது; பின்னர் இடக்கண்ணில் உதிரம் பாய நின்றது; இரண்டும் சூரிய சந்திரராகிய இருசுடருக்கு நேர்ந்த துன்பம்! அதை நீக்கத் தம் கண்களையே எடுத்து அப்ப முயன்ற  அரிய செயல் இங்கே  முன்னதாகப்   போற்றப் பெறுகிறது!

    Share
  • வெறுங்கையால் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியாளர்

    வெறுங்கையால் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியாளர்

    முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு, இன்று காலை தாம்பரத்தில் நம் தெருவுக்கு வந்த தூய்மைப் பணியாளர், கொரோனா தடுப்புப் பணிக்காக, வெறும் கையால் பிளீச்சிங் பவுடர் தூவுவதைப் பார்த்தேன். இதைக் கருவிகள் வழியாக அல்லது ஒரு டப்பாவில் எடுத்து, பவுடர் டப்பா மாதிரி அமுக்கித் தூவலாமே. கை படாமலே தூவ, வேறு நிறைய வழிகள் உண்டே. கையுறைகள் அணியலாமே. அரசு உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். இதன்வழியே பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share