Blog

  • மின்கம்பத்தில் அணில்

    மின்கம்பத்தில் அணில்

    மின் தடைக்கு அணிலும் ஒரு காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மின்கம்பத்தில் அணில் தாவி விளையாடும் காட்சியை இங்கே நீங்கள் காணலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஹர்ஷினி பிரசன்னா ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    ஹர்ஷினி பிரசன்னா ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    சென்னையில் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் ஹர்ஷினி பிரசன்னாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மறப்போரிலும் அறம்

    மறப்போரிலும் அறம்

    முனைவர் வி. அன்னபாக்கியம்,
    தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
    சிவகாசி – 626 123.

    முன்னுரை

    சங்ககாலப் போர் முறைகளை அறிய உதவும் தொகை நூல்களில் புறநூல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அகநூல்களில் உவமையாக வரும் செய்திகளிலும் நீதி நூல்கள் சிலவற்றிலும் இப்போர் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பண்டைக்காலப் போர்களின் துவக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் புவியாண்ட மன்னர்களின் பல்வேறு ஆசைகள் காரணமாக இருந்திருக்கின்றன. அவற்றின் காரணமாகச் செய்யப்பட்ட போர்களில் சில அறங்களையும் வியத்தகு மரபுகளையும் கையாண்டுள்ளனர். தமிழர்கள் போரின் போது கையாண்ட அறச் செயல்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

    போர்அறிமுகம்

    ‘போர்’    என்னும் சொல் பொரு அல்லது பொருவுதல், ஒப்புதல் அல்லது ஒத்திருத்தல் எனப் பொருள்படும். அகராதிகள் போர் என்ற சொல்லுக்குச் சண்டை, யுத்தம் என்ற பொதுவான பொருளை நமக்குத் தந்துள்ளன. நாடுகளுக்கிடையே ஏற்படும் மோதலே போர் என்று களஞ்சியம் கழறுகின்றது. போர் பற்றிய பல்வேறு வளர்ச்சிப் படிநிலைகளைப் பற்றிப் பேசும் தொல்காப்பியர் “போர்“ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

    போர்உலக இயற்கை

    போர் இவ்வுலகத்திற்குப் புதியது அன்று. எல்லாக் காலங்களிலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் போர் நிகழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கின்றது. போரில்லாத உலகமே இல்லை எனலாம். இவ்வுலகில் பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் உலக நியதி என்றாற்போல போர் புரிவது உலக இயற்கை என சங்கப் புலவர்கள் கருதியதை,

                “ ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
    புதுவது அன்றுஇவ் வுலகத்து இயற்கை ”                                             (புறம். 76)

    என்ற இடைக்குன்றூர் கிழாரின் பாடல் மெய்ப்பிக்கின்றது.

    தனக்குரிய பொருளைப் பிறர் பறிக்க நினைக்கும் பொழுது போர் தோன்றி இருக்கலாம். இயற்கையாகவே வலிமை உடைய ஒருவன், வலிமை குறைந்த மற்றொருவனை அடக்கி ஆள நினைத்தப்பொழுதும் போர் தொடங்கி இருக்கலாம். இவை போன்ற இன்னும் பல காரணங்களால் சங்கப்போர்கள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு காரணங்கள் பலவாக இருந்தாலும் செய்யப்பட்ட போரில் அறம் பின்பற்றப்பட்டுள்ளது என்பது போற்றுவதற்குரிய ஒன்றாகும்.

    அறப்போர்

    போர் மிகமிகக் கொடியது என்பதால் தமிழர்களின் முன்னோர்கள் அதற்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தனர். அக்கட்டுப்பாட்டோடு நடத்தும்போர் அறப்போர் எனப்பட்டது. போரில் ஈடுபடும் இருதிறத்து வீரர்களும் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அவ்விடத்தில் நேருக்கு நேர் நின்று போரிடுவர். இக்காலத்தில் நடைபெறுவது போன்று திடீரென்று தாக்கும் போர்முறை அக்காலத்தில் இல்லை. பலர் அறிய வஞ்சினம் கூறி, பொது இடத்தில் தம்மோடு ஒப்பாரிடம் மட்டுமே போரிடும் அறப்பண்பு வாய்ந்தவர்களாகப் பழந்தமிழ் வீரர் விளங்கினர்.

    “சிறப்புக் கொள்கை கொண்ட அறம் கூறும் அவை”1 முன்பு இருந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகின்றது. புறநானூற்றில் அவ்வவை,

                 “அறம் அறக் கண்ட நெறிமான் அவை”                                     (புறம்.224:4)

    எனக் குறிக்கப்படுகிறது. அவ்வவையில் சட்டம் ஒழுங்குகளைக் காக்கும் காவிதி மக்களாகிய அமைச்சர்கள் இருந்தமையை,

                “ நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி
    அன்பும் அறனும் ஒழியாது காத்து
    பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
    செம்மை சான்ற காவிதி மாக்களும் ”                             (மதுரைக்.496-499)

    என மதுரைக்காஞ்சி எடுத்துரைக்கிறது. இவர்கள் மன்னனுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி, அவனை நல்வழிப்படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் மன்னன் நீதிநெறி தவறாத செங்கோல் ஆட்சி செலுத்தியுள்ளான்.

    மேலும் இலக்கியங்கள் இயம்பக் கூடிய போர்கள் அனைத்தும் பெரும்பாலும் “நல்லமர்”2 என்றே குறிக்கப்படுகின்றன. இப்போர்கள், “அறத்தின் மண்டிய மறப்போர்” (புறம்.62:7) என்றும் “மறம் கந்தாக நல்லமர் ” (புறம்.93:8) என்றும் சுட்டப்படுகின்றன.

    போர்க்களத்தில் புறமுதுகிடாமையும், புறமுதுகிடுவாருடன் போர் செய்யாமையையும் போர் அறமாக மதித்தவர் பண்டைத்தமிழர் என்பதை, “ நற்போர் ஓடா வல்வில் ” (முல்லைப்.38-39) எனவரும் முல்லைப்பாட்டு தொடர் உணர்த்துகின்றது. இங்கு ‘ நற்போர்; ’  என்பதற்கு அறத்தால் பொருகின்ற போர் என நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். இதன்மூலம் மன்னர்கள் எவ்வளவுதான் வெறியோடு போர் செய்தாலும் அவை அறத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளதை அறிய முடிகின்றது. இதனால் “ போர் நெறியெல்லாம் கொலை வெறியேயாம் என்று பேசுதல் சங்ககால தமிழர் பண்பாட்டிற்கு ஒவ்வாததாகும் ” 3  என்பார் மா.ரா.போ.குருசாமி அவர்கள்.

    மன்னர்கள் மற்றும் மறவர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் போராக சங்ககாலப் போர் இருந்தாலும் அவற்றிலும் அறம் பின்பற்றப்பட்டு அறப்போராகவே திகழ்ந்துள்ளன என்றால் மிகையாகாது.

    பகலில் மட்டும் போர்

    பழந்தமிழ்ப் போர்கள் அனைத்தும் பகல்பொழுதில் மட்டுமே நடைபெற்றிருக்கின்றன. இப்போர்கள் அனைத்தும் மாதக்கணக்கில் நடைபெற்றுவதால் காலையில் முரசறைந்து ஆரம்பமாகும் போர் மாலையில் முரசு அறைந்து நிறுத்தப்பட்டுள்ளன. பகலில் மட்டும் போரிட்டு இரவில் போரிடாமையைப் பண்டைத்தமிழர் போர் அறமாகப் போற்றியதால் பகலவன் மறையும் மாலை நேரத்தில் போரை நிறுத்திவிட்டு இரவுப்பொழுதில் பாசறை எனப்படும் கட்டூரின்கண் வீரர்கள் ஓய்வெடுத்துள்ளனர்.

                “ வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
    வம்ப மள்ளரோ பலரே
    எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே? ”                               (புறம். 79)

    என்ற புறநானூற்றுப் பாடலில் பகலில் மட்டுமே வீரர்கள் போரிட்டு உள்ள குறிப்பு காணப்படுகின்றது.

    பகலில் மட்டும் போரிட்டதற்கான காரணம், பகைவர்களைத் தெளிவாக அடையாளம் பார்த்துப் பகலில் மட்டுமே முடியும். சூரியன் மறைந்த இரவுப்பொழுதில் தமர் யார், பகைவர் யார் என்று அடையாளம் காண்பது கடினம். மேலும் பகல் முழுவதும் சளைக்காமல் போரிடும் வீரர்களுக்கு சிறிது நேரமாவது ஓய்வு தேவைப்பட்டது. இத்தகைய காரணங்களால் பகலில் மட்டுமே போரிட்டுள்ளனர். இரவுப்பொழுதில் பாசறையில் தங்கியிருக்கும் காயமுற்ற வீரர்களுக்கு ஆறுதல் சொல்லும் அரசனின் செயல்(நெடுநல்வாடை) அறமாகக் கருதப்படுகின்றது. அரசனின் இச்செயலை ஆராயும் பொழுது பகலில் போரிடுவதும் இரவில் போர் நிறுத்தப்படுவதும் போரின் அறச்செயலாகவே உணரமுடிகின்றது. பகை கொண்ட அரசனிடத்தும் அவனைச் சார்ந்து போர் செய்யும் வீரர்களிடத்தும் சினத்தைக் காட்டும் மன்னன் தன் வீரர்களிடம் அன்பு காட்டுவது மறத்திடையே தோன்றிய அறமாகும்.

    பகலில் போர் செய்ததற்கான குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை என்றே கூறலாம். ஆனால் வெட்சிப்போர் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரையெழுதும் உரையாசிரியர்கள், போரின் முதல் நிலையாகிய ஆநிரை கவர்தல் என்பது இரவில் சமயம் பார்த்து கவர்ந்து வருவதாகும் என்று உரை விளக்கம் தந்துள்னர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

    களம் நிறுவிப் போர் 

    பழந்தமிழர்கள் பகைவரை மறைந்திருந்து தாக்குதல் மற்றும் எதிர்பாராமல் தாக்குதல் ஆகிய மடைமையின்றி களம் ஒன்றை நியமித்தே போர் செய்துள்ளனர். அவை இலக்கியங்களில் களம், முதுநிலம், பறந்தலை என்றெல்லாம் கூறப்பட்டுள்ளன. களரும் மணலும் பரந்த வெளிகளான பறந்தலை எனப்படும் இடங்களையே வேந்தர்கள் போர்க்களமாக அமைத்துக்கொண்டனர் என்பதை வாகைப்பறந்தலை, வெண்ணிப்பறந்தலை, தலையாலங்கானம் ஆகிய இலக்கியச் சான்றுகளால் அறியமுடிகின்றது.

    போர் செய்ய கருதிய மன்னன் தனக்குச் சாதகமான இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது போர் முன்னேற்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுமாயினும் பகைவனுக்குச் சாதகமான போர்க்களத்தில் அவனோடு போரிட்டு வெற்றிபெறுவதே உண்மையான வெற்றி என்று கருதப்பட்டுள்ளது. அதனையே மன்னனும் மறவர்களும் பெரிதும் விரும்பியுள்ளனர்.

    களம் நிறுவிப் போரிட்டதால் போர் காரணமாக போர்க்களத்தில் உள்ளவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். போரிலிருந்து விலக்குப் பெற்றவர்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டனர். இதனால் சங்ககாலப் போர் அறப்போராக கருதப்படுகின்றது. ஆனால் இன்று போர் என்ற பெயரில் தரைவழித்தாக்குதல், வான்வழித்தாக்குதல், நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் கடல்வழித்தாக்குதல், ஏவுகணை மூலம் குண்டுமழை பொழிதல் போன்றவற்றைக் காண முடிகின்றது. இதனால் போருக்குச் சற்றும் தொடர்பில்லாத அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இவை அரக்கத்தனமான செயலாகும். எனவே இன்றைய காலப் போரோடு அன்றைய போரை ஒப்பிடும்போது அன்றைய போர் அறப்போரே என்பதில் சிறிதும் ஐயமில்;லை.

    மறத்திலும் அறம்

    போரின்போது பகைவர் நாட்டிலுள்ள மக்கள் யாவரையும் அழிக்க வேண்டும் என்பது போர் மேற்கொள்ளும் மன்னனின் நோக்கம் அன்று. எனவே, போர் தொடங்குவதற்கு முன்னால் போர்ச் செய்தியினை முரசறைந்து தெரிவிப்பது மரபாகும். அப்போது போரில் கலந்து கொள்ளாதவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குவதற்கு எச்சரிக்கை விடுப்பதும் உண்டு.

                “ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் என
    அறத்தாறு நுவலும் பூட்கை”                                                      (புறம்.9:1-6)

    என்ற பாடல் அவ்வெச்சரிக்கைளை எடுத்துரைக்கின்றது. இவை போருக்கு முன் செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாகும். இவ்வெச்சரிக்கை பசுக்களுக்கு விடுத்ததாகக் கொள்ளாமல் அவற்றை உடையார்க்கும் பிறருக்கும் விடுத்ததாகக் கொள்வதே முறை. போரில் அப்பாவி மக்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிடுமாறு செய்யப்பட்ட இவ்வெச்சரிக்கையால் பண்;டைத்தமிழரின் அறவுணர்வு புலப்படுகின்றது.

    தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா ஒன்றிற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர்,

    “கோழைகள் மயிர்குலைந்தோர் பெண்பெயர் கொண்டோர் படைக்கருவிகளை நழுவவிட்டோர் ஒத்த படை எடாதோர் என்பவர்களும் ” 4   போர்க்கொடுமையினின்றும் விலக்கப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.  இதன்மூலம் தமிழர்தம் போர்முறையில் கடைப்பிடித்த சில அறச்செயல்களை  நாம் அறியமுடிகின்றது.

    போரில் நல்லவர்கள் அழியக்கூடாது என்பதற்காக, கடுஞ்சினம் கொண்டு மதுரையைச் சீறியழித்த கண்ணகியும் தீக்கடவைள ஏவும்போது,

                            “ பார்ப்பார் அறவோர் பசுபத் தினிப்பெண்டிர்
    மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
    தீத்திறத்தோர் பக்கமே சேர்க ”                            (சிலம்பு.26:225-230)

    என்று பணித்ததாக அடிகள் கூறுவார்.

    போர்க்களத் தாக்குதலிலிருந்து காக்கப்பட வேண்டியவர்களாக,

                “ உடையிட்டார் புன்மேய்வார் ஓடுநீர் புக்கார்
    படையிட்டார் பற்றேதும் இன்றி – நடையிட்டார்
    இவ்வகை ஐவரையும் என்றும் அணுகாரே
    செவ்வகைச் சேவகர் சென்று ”                             (சிறுபஞ்ச.41)

    என சிறுபஞ்சமூலம் கூறுகின்றது. அஃதாவது ஆடை களைந்தோரும், புல்மேய்வோர் போல் வீழ்ந்து கிடப்போரும், நீரில் இறங்கிவிட்டவர்களும் படையைக் கீழே எறிந்து விட்டவர்களும், ஆதரவின்றி நிற்பவர்களும் ஆகிய இவர்கள் போர்க்களத் தாக்குதலிலிருந்து காக்கப்பட வேண்டியவர்கள் ஆவர்.

    தமிழ்வேந்தர் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படாத தன்மையினர் என்பதைப் புறநானூறு குறிப்பிடுகின்றது. “வீரரல்லாதோர், புறமுதுகிட்டோடுவோர், போரில் புண்பட்டோர், வயோதிகர், மிக்கிளையோர் என்பவர் மீது போர் தொடுத்தல் படைமடம்” 5  எனப்படும்.

    போரின் போது பகைவர் அஞ்சிப் பின்வாங்குவார்களேயானால் அவர்களைக் கொல்லாமல் விடும் பண்பையும் சங்ககால வீரர் பெற்றிருந்தனர்.

                            “புல்லென் கண்ணர் புறத்தில் பெயர
    ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான் ஆண்டுஅவர் ”                     (புறம.78:8-9)

    என்று புறமுதுகு காட்டி ஓடும் பகைவர்களைக் கொல்லாமல் விட்டுவிடும் பண்புள்ளவர்களாக இருந்துள்ளனர்.

    “போர்க்களத்தில் வெற்றி காணும் நம்பிக்கை குறைந்துபோயின் வீரர்கள் தங்கள் தோல்விக்கு அறிகுறியாய் படைக்கலன்களைக் கீழே போட்டு விடுதலும் மரபாக”6 இருந்ததாக ஆ.இராமகிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு “ ஆயுதம் இல்லாத நிலையில் எதிரி நிலை குலையும் போது அதை ஒரு வாய்ப்பாகக் கருதித் தாக்குவதைக் கோழைத்தனமாகக் கொண்டனர்”7  என்பார் வே.தி.செல்லம்.

    இவ்வாறாக போருக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடும் பகைவரைத் தாக்கும் மரபும், நிராயுதபாணியைத் துன்புறுத்தும் மரபும் பண்டைத்தமிழரிடம் இருந்ததில்லை. எனவே போர்க்களத்தில் தமக்குச் சமமான வலிமையில்லாதவரோடு போரிடுவது அறமாகப் போற்றப்படவில்லை என்பது புலனாகிறது.

    முடிவுரை

    போர் என்றாலே அது மறத்தைக் குறிக்கும். அதாவது வீரத்தைக் குறிக்கும். அங்கே அறம் எப்படி நிலைபெறும் என்ற வினாக்கள் நமக்கு எழலாம். இதற்கு விடையாக பல சான்றுப் பாடல்கள் கொடிய போர்க்களத்திலும் அறச்செயல்கள் பல நிகழ்ந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றன. போரினால் ஏற்படும் விளைவுகளைக் குறிப்பாக அவலங்களை அக்கால மன்னர்கள் உணர்ந்திருந்தனர். கல்லுக்குள் ஈரம் என்பது போல் தமிழ் மன்னர்கள் வீரம் மிக்கவர்களாக இருந்தாலும் அவர்கள் உள்ளத்தில் ஈரம் உடையவர்களாக, இரக்கம் உடையவர்களாக விளங்கினர் என்பதை அவர்கள் செய்த போரின் போது பின்பற்றிய நெறிமுறைகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய போரிலும் அத்தகைய நெறிமுறைகளைப் பின்பற்றினால் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    அடிக்குறிப்புகள் 

    1. மதுரைக்காஞ்சி : 492

    2. புறம்.16:18, 93:9, 125:15, அகம்.67:8, 77:9, பதிற்று.42:9, 52:10

    3. மா.ரா.போ.குருசாமி, சங்ககாலம், ப.67

    4. தொல்.பொருள். 57 (நச்சினார்க்கினியர் உரை)

    5. புறம். 142 உரை

    6. ஆ. இராமகிருட்டிணன், தமிழக வரலாறும் பண்பாடும், ப. 113.

    7. வே.தி. செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், ப. 114-115.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    “மறப்போரிலும் அறம்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறைகள் பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் பரிந்துரை!

    1. ஆய்வுக்கட்டுரைக்கான புறக்கட்டுமான நெறி பின்பற்றப்படாததால் பொதுக்கட்டுரையாகவே கருத வேண்டியிருக்கிறது.

    2. மறத்திலும் இழைந்த அறத்தை உறுதிசெய்ய கட்டுரையாசிரியர் பழந்தமிழ் இலக்கிய இலக்கண நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளையும் சான்றுகளையும் தொகுத்துக் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

    3. களம், கானம், பறந்தலை என்னும் களப்பகுப்புக்கு ஆசிரியர் காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுகள் சிறப்பாக உள்ளன.

    4. ‘பகலில் மட்டும் போர்’ ‘படையிழந்தவரிடமும் ‘புறமுதுகு காட்டியவரோடும் போரில்லை என்பதைச் சிறப்பாகச் சுட்டிக் காட்டியிருக்கும் ஆசிரியர் ‘தழிஞ்சி’ என்னும் துறையை விளக்கியிருந்தால் கட்டுரை இன்னும் முழுமை பெற்றிருக்கும்.

    5. இதுபோன்ற கட்டுரைப் பொருண்மைகளில் அவ்வக்கால மக்கட்தொகையும் அறிவியல் வளர்ச்சியும் கருததிற் கொள்ளப்படல். வேண்டும். கொள்ளப்பட்டிருந்தால் தற்காலத்தோடு ஒப்பிடுவதன் பொருத்தமின்மை புலப்பட்டிருக்கக் கூடும்.

    6.  வெட்சித் திணையிலிருந்தே பழந்தமிழர் போரறம் தொடங்கிவிடுவதால் போர்க்களத்தில் ‘தும்பை’ என்பது இறுதி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    7.  ‘துவக்கம்’ என்ற சொல் இலக்கியப் பயன்பாடு இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

    8.  ‘நினைத்தப் பொழுது’ என்னுமிடத்தில் வலி மிகாது. ‘வீரர்களுக்கு சிறிது’ என்னுமிடத்தில் ஒற்று மிகும்.

    9. தமிழ் மன்னர்களின் உள்ளத்தைக் கல் என்பதாகவும் அவர்கள் போரக்களத்தில் காட்டிய  அறவுணர்வை ஈரம் என்பதாகவும் கட்டுரையாசிரியர் கூறுவதற்கு எள்ளின் முனையளவும் தொகையிலக்கியங்களில் சான்று கிடையாது. ‘கொடைமடம்’ என்பதே உயிரிரக்கத்தின் புறவெளிப்பாடு. மயிலின் நாட்டியத்தையும் காற்றில் கொடி அசைவதையும் அவற்றின் நடுக்கமாகக் கருதியவர்கள். அவர்களுக்கு ஈரம் இதயத்தோடு ஊறி வருவது.

    ஆய்வுக் கட்டுரைக்கான  புறக்கட்டுமான நெறி பின்பற்றப்படாததால்  இலக்கியக் கட்டுரைகள்  பகுதியில் வெளியிடுகிறோம்.

     

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 134 (நாணனும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 134 (நாணனும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    அவர்கள் விரைந்து நடந்தபோது பற்பல வளங்களையும் அலைகளில் திரட்டி ஓடும் பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்தனர்.அங்கே உயர்ந்த மரத்தினடியில் வேட்டையாடிய பன்றியை காடன் என்பவனை,  தீக்கடைக்  கோலால் நெருப்பை  உருவாக்கச் சொல்லிவிட்டு, நாணனும்  திண்ணனாரும் மலைமேல் ஏறத்தொடங்கினர்!  தெளிந்த சிந்தையுடன் திண்ணனார் பொன்முகலி நதியில் முதலில் நீராடினார்; நதியின்  கரையேறினார். மலைச் சாரலை அடைந்தார். (முறைப்படி நீராடி உடல் தூய்மை பேணி, பிறவிக்கடலின் கரையேறியதை இந்நிகழ்ச்சி குறிக்கிறது!)

    அப்போது மலையுச்சியிலிருந்து பெருமுழக்கம் திண்ணனாருக்குக் கேட்டது!

    (இது அவருக்கு மட்டும் கேட்ட தேவ துந்துபி ஓசை! வேதம் நான்கும் விஞ்சையர் வீணையிசையும் ஐவகை ஓசைகள்) ஈதென்ன ஓசை? என்று கேட்ட திண்ணனாரிடம் நாணன், ‘’மலையருவியில் தேன்கூட்டினைச்  சுற்றும் வண்டோசை  போலிருக்கிறது’’ என்றான் . அப்பொழுது,திண்ணனார்  முன்பு செய்த தவத்தால்  முடிவற்ற இன்பம் தரும் அன்பீனும் ஆர்வம் பொங்கியது! அவருடைய எலும்புகள் கட்டுவிட்டு உருகின; வேட்கை மிகுந்தது. இப்போது சேக்கிழார் பாடுகிறார்,

    பாடல்

    நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும்
    பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி,
    ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல, ஐயர்
    நீள் நிலை மலையை ஏறி, நேர் படச் செல்லும் போதில்.

    பொருள்

    நாணனும் அன்பும் தமக்குமுன்னே குளிர்ந்த மலையை ஏறிச்செல்ல;  திண்ணனார்தாமும்;  பேணுகின்ற தத்துவங்கள் என்கிற பெருகும் படிகளையேறிச் சத்தியே வடிவமாகிய சிவத்தைச்சார அணைபவர்களாகிய சிவயோகிகள்போல ஐயரது நீண்ட நிலைமையுடைய மலையைஏறிநேர்படப் போகும்போதில்,

    ஆர்வம்  காதல்  வேட்கை  என ஒன்றினொன்று மிக்க மூன்றுநிலையில் வெளிப்பட்டது. இவை இச்சா சத்தியின்றொழில். அது. (இச்சை) முன்னர்ச்சென்றது. பேணுதத்துவங்கள்.- பேணுதல் – போஷித்தல் -வளர்த்தல். கண்ணுக்கு விளக்குப்போலத்தத்துவங்கள் ஆன்மாவுக்குச்சகலநிலையில் அறிவு இச்சை செயல்களின் வளர்ச்சிக்குக்கருவியாய் அவற்றைவளர்த்தலின் பேணுதத்துவங்கள் என்றார். “வருமிவள் நம்மைப் பேணு மம்மைகாண்” என்ற காரைக்காலம்மையார் புராணங் காண்க. பேணுதல் – வழிபாடு செய்தல் என்றலுமாம். “கொன்றையா னடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன்” என்ற திருத்தொண்டத்தொகை காண்க. தத்துவங்களை வழிபாடுசெய்தல் சிவபூசையில் பதுமாசன பூசையிலும், நிர்வாணதீட்சையில் அத்துவ சோதனையிலும் நமாந்தமாகத் தத்துவங்களை வழிபடுதல். இம்முறைகள் ஆகமங்களில் விதிக்கப்பட்டன.

    தத்துவங்கள் என்னும் பெருகுசோபானம்  என்ற தொடர் ,  இங்குத் தத்துவமென்றது சுத்தம் அசுத்தம் என்ற இருவகை மாயைனின்றுந் தோன்றிய நிலமுதல் சிவமீறாக உள்ள முப்பத்தாறினையுமாம். இவைகளைத் தத்துவம் என்றது எல்லாஉயிர்களுக்கும் போகத்தைக் கொடுப்பனவாய்ப் பிரளயம்வரை உள்ளன என்னும் பொருள் பற்றியாம். நிலம்முதலாக ஒவ்வொன்றினையும் ஏறி அனைத்தையுங் கடந்து பரம் பொருளை அணைதற்குப் படிகள் போல இவை அமைதலின் தத்துவப்படி – தத்துவ சோபானம் என்பர்.

    முதலாவதாகிய நிலம் நூறுகோடி 1யோசனைப்பரப்புடையது. நிலத்துக்குப் பத்துமடங்கு விரிந்தது அப்புதத்துவம். இவ்வாறே அப்பு முதல் குணதத்துவம்வரை ஒன்றுக்கொன்று பத்துமடங்கு விரிவுள்ளன; அதன் மேற் பிரகிருதிமுதல் அசுத்தமாயாதத்துவம் வரை ஒன்றுக்கொன்று நூறுமடங்கு விரிவும், சுத்தவித்தைமுதல் சதாசிவதத்துவம் வரை ஒன்றுக்கொன்று ஆயிரமடங்கு விரிவுமுடையன. அதன்மேற் சத்திதத்துவம் இலக்கம்மடங்கு விரிவுடையது. அதன்மேற் சிவதத்துவம் எல்லைகடந்தது. இவ்வாறு இவை ஒன்றினொன்று மேல்விரிந்து செல்லுதலின் பெருகு சோபானம் என்றார்.

    ஆணையாம்சிவம் – புறப்பொருளை நோக்காது பேரறிவுமாத்திரமாய் நிற்கின்ற சைதன்னியமே சிவம். அச்சிவம் உயிர்களுக்குப் பசுத்துவத்தைநீக்கிச் சிவத்துவத்தை விளக்குதலில் உள்ளதாகிய இரக்கமே அருள். ஆதலின் ஆணையாம் சிவம் என்றார். அருள் – சத்தி – ஆணைஎன்பன ஒருபொருட்சொற்கள்.

    “ஆணையின் நீக்க மின்றி நிற்குமன்றே” என்பது சிவஞானபோதம்.

    இனி, அச் சிவமென்னும்பொருள் உயிர்கட்கு அருளும்பொருட்டுத் தோன்றுங்கால் அருளாகிய ஆணையினிடமாகத் தோன்றுதலின் ஆணைஆம் என்றார் என்றுரைத்தலுமாம். இப்பொருட்கு ஆணை – ஆணையினிடத்து, ஆம் – தோன்றும் என வுரைத்துக் கொள்க.

    “முன்னருட் சத்திதன்பால் முகிழ்க்குந்தான் முளையான்”

    என்ற சிவஞானசித்தியாரும், அதற்கு “அவன் யாண்டுஞ் சத்தியினிடமாகவே தோன்றுவானன்றித் தானாக வேறு தோன்றான்” என்னும் பொழிப்புரையுங் காண்க. இதற்குத் தனக்குமேற்பட்ட ஆணையில்லாத சிவம் என்றுரைப்பாருமுண்டு.

    சார – முன்சார்ந்துநின்ற பாசச்சார்பைவிட்டுச் சிவத்தைச்சார, ஆணவத்தொ டத்துவிதமாதலை விட்டு, மெய்ஞானத் தாணுவினோ டத்துவிதமாய்ச் சார என்க. சார்பு – “சார்புணர்ந்து” என்ற திருக்குறளுங்காண்க.

    அணைபவர்போல – அணைபவர் – சிவயோகிகள். இவர்கள் நிலமுதற் சிவமீறாகிய 36 தத்துவங்களையும் படிமுறையானே ஏறி நீக்கிச் சிவத்தை அணைந்து சார்வர்.

    “பூதமுங் கரணம் பொறிக ளைம்புலனும் பொருந்திய குணங்களோர் மூன்றும், நாதமுங்கடந்த வெளியிலே நீயு நானுமாய் நிற்குநா ளுளதோ?”

    என்றபட்டினத்தடிகள் திருப்பாட்டும்,

    “ஆறா றையுநீத் ததன்மே னிலையைப்,
    பேறாவடியேன் பெறுமாறுளதோ?”

    என்ற கந்தரனுபூதியுங்காண்க.

    ஐயர் – பெருமையுடையவர். ஐம்புலன்களையும் வென்றமுனிவர். ஐயர்மலை – ஐயர்கள் வாழ்கின்றமலை என்பதாம்.

    “ஐந்துமா றடக்கி யுள்ளா ரரும்பெருஞ் சோதி யாலும்” என்றுபின்னர்க் கூறுவதனால் இம்மலையில் முனிவர்கள் தவஞ்செய்து வாழ்தல் பெறப்படும்.

    இனி, ஐயர் – இறைவன் என்று கொண்டு, அவர் எழுந்தருளிய மலை என்றலுமாம்.

    நீள்நிலை – நீள் – நெடுந்தூரம் வடிவத்தாலும் நீளுவது. நீள்நிலை – முக்காலத்திலும் ஒப்ப நீளும் தன்மையுடையது. இத்தலம் ஐந்துயோசனை அகலமும் பத்துயோசனை நீளமும் உடையது என்பது திருக்காளத்திப்புராணம் சூதசங்கிதை முதலியவற்றா னறியப்படும். இதுகயிலையேயாதலின் என்றும் அழியாது நிலைத்த தன்மையுடையது என்க.

    நேர்பட – எதிர்ப்பட. எந்தப்பேற்றினைப் பெறுதற்கு அவதரித்தனரோ அதனைப் பெற. எதிர்ப்படுதல் என்பதுணர்ந்தும் நேர்படுதல் என்னும் சொல் ஈண்டு நேர்ப்பட்ட வழிப் பெறும் பயனைப்பெற என்ற பொருளில் வந்தது.

    “கீழ்ச் செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டு” என்ற திருவாசகத்தின் சொல்லும் பொருளும் இங்குவைத்துக் காண்க.

    அணையும் போதில் அங்கணர் அருட்டிரு நோக்கமெய்த என்று வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. 103

    1. யோசனையாவது 24 அங்குலம்கொண்ட முழத்தினாலே 16000 கொண்டது ஒரு குரோசமாக, நான்கு குரோசங்கள் கொண்டது ஒருயோசனையாம். எனவே 64000 முழம் ஒரு யோசனை எனப்படும். இதுபற்றி “சாளரத்திற்றோன்றும் ஞாயிற்றின் கதிரின் அதி நுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணுவெனப்படும் அஃதெண்மடங்கு கொண்டது திரிசர அணு. அஃதெண்மடங்குகொண்டது கசாக்கிரம். அஃதெண்மடங்கு கொண்டது இலீக்கை. அஃதெண்மடங்கு கொண்டது யூகை. அஃதெண்மடங்கு கொண்டது இயவைநெல்லு. இயவை நெல்லகலம் எட்டுக்கொண்டது ஓர் அங்குலம். அங்குலம் இருபத்துநான்கு கொண்டது ஒருமுழம். முழம் நான்குகொண்டது ஒருவில். வில்லிரண்டுகொண்டது. ஒரு தண்டம். தண்டம் இரண்டாயிரங்கொண்டது ஒரு குரோசம். குரோசம் நான்குகொண்டது ஒரு யோசனை; ஆகலான் இந்த அளவையாற் சாதராண புடவிதத்துவமாகிய அண்டம் நூறுகோடியோசனை ஆழ வகல நீளங்களையுடையது” என்று சிவஞானபாடியம் 2, 3-ல் “அரவுதன்” என்ற வெண்பாவின்கீழ் உரைத்தவைகாண்க. வில் ஒரு அளவு என்பது “பட்டிகை யெட்டா தங்கு நூறு விற்கிடக்கை முன்னே போனது” (திருஞான – புரா – 815) என்றதனாலும் அறிக.

    இத்திருப்பாடலால் முதலில், திண்ணன்  திண்ணனார் என்னும் சிவனடியாராகும் உயர்நிலை  படிப்படியாக உரைக்கப் பெறுகிறது.பின்னர் அடியார்  முதலில் நீராடி உடல் தூய்மை பெறுதலும், அடுத்து பிறவிக்கடலின்  கரையேறலும், அடுத்து  ஆர்வம் , காதல், வேட்கை ஆகிய மூன்று  தத்துவப் படிகளில் அடியார் மேலேறி ஆணையாம்  சிவத்தைச் சார்தல் கூறப்படுகிறது. பின்னர் உயிர் பசுத்துவத்தை விட்டு மேலேறி பதித்தத்துவத்தை அறிந்து காதலும் வேட்கையும் கொண்டு,   மேலேறி நேர்படச்  செல்லும் அருமை முறையாக விளக்கப் பெறுகிறது!

    Share
  • பெண்குயில் மிக மிக அருகில்

    பெண்குயில் மிக மிக அருகில்

    இதற்கு முன் இவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்குயிலைப் பார்த்ததில்லை. நம் ஜன்னலோரம் அமர்ந்து கருவேப்பிலைப் பழங்களைக் கவ்வி உண்ணும் காட்சியை அணுக்கமாக, நுணுக்கமாகப் பார்க்க, ஓர் அரிய வாய்ப்பு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஐஷ்வர்யாவின் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    ஐஷ்வர்யாவின் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    சென்னையில் ஆறாம் வகுப்புப் படிக்கும் எஸ்.ஐஷ்வர்யாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

    வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

    அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற அமுத வாசகத்தை அருளிய வடலூர் வள்ளல் பெருமான், இராமலிங்க அடிகள் இயற்றிய ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’ என்ற வானளாவிய புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 20

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 20

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கணக் குறியீடுகளும் உவமங்களும்

    முன்னுரை

    இலக்கண நூல்களில் அவற்றின் ஆசிரியர்கள் பொருள் புலப்பாட்டுக்காகப் பயன்படுத்தும் உவமங்கள், இலக்கண உரையாசிரியர்கள் நூற்பாக்கள் விளக்கம் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் உவமங்கள் என்னும் இவற்றைக் கடந்து இலக்கணக் குறியீடுகளையே இலக்கிய விளக்கத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு இலக்கியச் சூழலைக் காணமுடிகிறது. உயிர், மெய், குற்றியலுகரம், ஆய்தம், உடம்படுமெய், தழாஅத்தொடர் என்னும் இத்தகைய குறியீடுகளைப் பொருத்தமான உவமங்களாகக் கையாள்வதன் வழிக் கற்பனையைச் செழுமை செய்து கொள்ளும் முயற்சியைக் காணலாம். அன்புக்குரியவர்கள் தங்களை உயிரும் மெய்யுமாகக் கருதிக் கொள்வதும் எழுதுவதும் பேசுவதும் பெருவழக்கு. தாய் தன் குழந்தையை இவ்வாறு கொஞ்சி மகிழ்வதைத் தவிர மற்றவையெல்லாம் அவ்வளவு உயிர்ப்புடையன அல்ல என்பது வேறு. மேற்சொன்ன இலக்கணக் குறியீடுகளை இலக்கியச் சித்திரிப்பில் உவமங்களாகக் கையாள்வதற்கு விரிந்து பரந்த புலமையும் ஆழ்ந்த நுண்ணுணர்வும் தேவை. எனவேதான் இத்தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர் எண்ணிக்கையும் வெற்றி பெற்றவர் எண்ணிக்கையும் எதிர்விகிதத்தில்  அமைந்துபோயிருக்கிறது.

    இதுதான் ‘உடம்படுமெய்’ இலக்கணம்

    எழுத்துக்களில் மெய்யும் உயிரும் கலக்கும். ஆனால் உயிரும் உயிரும் கலப்பதில்லை. மானுட உறவுகளில் உடல் கலப்பு இல்லாமல் உயிர்க்கலப்பு அரிது. இரண்டு உயிர் கலக்குமா எனின் கலக்காது. ‘உடல் கலக்குமா?’ எனின் கலக்கும். எழுத்துக்களில் மிக அரிதான நிலையில் நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் உயிராகவே நிற்கக் கலக்க வேண்டிய நிலை வரும். அப்போது அவ்விரு உயிர்களும் புணர்வதற்கு மெய்யின் துணை தேவைப்படும். அந்த மெய்க்கு ‘உடம்படுமெய்’ என்று பெயர். (இதனை மெத்த கற்ற மேதைகள் சிலர் உடன்படுமெய் என்று எழுதுவர்) ஒற்றுமைப்படாத இரண்டு உயிர்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு மெய்யின் உதவி தேவை என்பதையே இது காட்டுகிறது. தொல்காப்பியம் இதனை,

    “எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
    உடம்படுமெய்யின் உருவுகொளல் வரையார்”

    என்று இலக்கணம் செய்திருக்கிறது. மெய்யுறு புணர்ச்சியைக் காட்சிப்படுத்துங்கால் மிகவும் எச்சரிக்கையாகச் சித்திரிக்க வேண்டிய பொறுப்பு கவிஞர்களுக்கு உண்டு. வள்ளற்பெருமான் தாம் எழுதிய இங்கிதமாலையில் இதனை வெளிப்படுத்தியிருப்பார். கலவியின்பத்தை மொழியில் காட்சிப்படுத்துவது அரிய கவிதைத் தொழில் நுட்பம்!

    “சொல்லரிதாய் மிக இனிதாய் நாழி கைபோம்!
    சுடர்விழிகள் ஈரிரண்டு நான்கு பூக்கள்
    புல்லிதழில் போய்ஒடுங்கும் தமைம றந்து
    பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்”

    என்பார் பாவேந்தர். பாவேந்தருக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலம்பாசிரியர் இளங்கோ கண்ணகியும் கோவலனும் துய்த்த புணர்ச்சி இன்பத்துக்குத் ‘தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என’ப் பாம்பின் புணர்ச்சியை உவமமாக்கி உணரவைத்தார். பாவேந்தருடைய நேரடி மாணாக்கர்களில் ஒருவரான சுரதா இதனை இன்னும் கூடுதல் இலக்கண நயத்தோடு பாடியிருக்கிறார். ‘பொருத்தம் உடலிலும் வேண்டும்’ என்பதை மறக்காத கவிஞர், தலைவனும் தலைவியும் கூடி மகிழ்ந்து அனுபவித்த இன்பதைக் காட்சிப்படுத்துகிறபோது,

    “நாவில் நீ! நெஞ்சில் நீ! அஞ்சன் ஆட்சி
    நல்லதமிழ்ப் பாடல் நீ அன்றோ?” என்றான்.
    ஓவம்மாள் ஈன்ற மகள் சிரிப்பை ஈன்றாள்
    உடம்படுமெய் இலக்கணத்தை இரவில் கண்டார்!

    எந்த உடல் முதலில் கலந்தது என்பது இருட்டுக்கும் தெரியாத புதிர். பாவேந்தர் இளங்கோவை மறக்கவில்லை. சுரதா பாவேந்தரை மறக்கவில்லை. இக்கவிஞர் யாரும் தமிழ்ப் பண்பாட்டையும் மரபையும் மறக்கவில்லை! இதுதான் தமிழினப் பண்பாட்டுக் கூறு! கவிதை என்பது ஒன்றினை உணர்த்துவது! விவரிப்பது அல்ல!

    தோன்றா எழுவாய்

    ‘படித்தாயா?’ என்னும் வினா இருக்கிறது. ‘நீ’ என்னும் எழுவாய் இல்லை. ‘படித்தானா?’ என்னும் வினா இருக்கிறது ‘அவன்’ என்னும் எழுவாய் இல்லை. ‘படித்தார்களா?’ என்னும் வினா இருக்கிறது. ‘அவர்கள்’ என்னும் எழுவாய் இல்லை. எழுவாய் இல்லை என்றாலும் அவ்வினாச் சொற்கள் இடத்தை உணர்த்தி வினாப்பொருளையும் உணர்த்துகின்றன. இவ்வாறு எழுவாய்த் தொடர் ஒன்றில் வெளிப்பட நிற்காது மறைந்து நிற்கும் எழுவாய்க்குத் ‘தோன்றா எழுவாய்’ என்று பெயர். தோன்றா எழுவாயின் மறைந்து நிற்கும் இந்தத் தன்மையைக் கவிஞர் ஒருவர் உவமமாக்குகிறார். எப்படி? இப்படி!. ‘வன்னிய வீரன்’ என்பது கவிஞர் சுரதா எழுதிய குறுங்காப்பியம். அந்தக் காப்பிய நாயகனான காத்தவராயனைப் பகைவன் கொல்ல முடியாமல் தவிக்கிறான். வெல்ல முடியாமல் விழிக்கிறான். பரத்தை ஒருத்தியைக் கொண்டு சூழ்ச்சியால் வன்னிய வீரனை வெல்ல திட்டமிடுகிறான். பரத்தை குப்பாச்சியிடம் மயங்கிக் கிடக்கும் வன்னியவீரனுக்குப் பாலில் நஞ்சு கலந்து கொடுக்கிறாள் குப்பாச்சி. குவளை தெரிகிறது. குவளையில் பால் தெரிகிறது. ஆனால் பாலுக்குள் கிடக்கின்ற நஞ்சு தெரியவில்லை. சுரதா,

    “ஆதிப்பொதுமகள் அளித்த சாறதனில்
    தோன்றா எழுவாய் போல் தோன்றாது இருந்த
    புதுவிடம் அன்னவன் உடலுட் புகுந்ததால்
    முத்தம் கொடுத்து முடித்தோன் முடிவில்
    சத்தம் கொடுத்தபடி சாய்ந்தனன் மெத்தையில்”

    என்று எழுதுகிறார். ‘தோன்றா எழுவாய் போல் இருந்த புதுவிடம்’ என்னும் இலக்கண உவமத்தால் மறைந்திருந்த நஞ்சினைக் காட்சிப்படுத்துகிறார். இலக்கணப் புலமை பெற்ற இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சிலருள் ஒருவரான சுரதாவே உவமைக் கவிஞர் என்னும் சிறப்புக்குரியவரானார்!.

    இடைநிலையும் வெண்டளையும்

    கடையெழு வள்ளல்களில் ஏனைய ஐந்து வள்ளல்களிலும் பாரியும் பேகனும் தனிச்சிறப்புக்கு உரியவர். இதனை ‘முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும்’ என்னும் வெண்பாமாலையால் அறியலாம். இவருள் பேகன் குளிரினால் நடுங்கிய மயிலுக்குப் போர்வை தந்ததாகக் கூறப்படுகிறது. இவனைப் பரணர், வன்பரணர், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார் முதலிய சான்றோர்கள் பாடியிருக்கிறார்கள். மனைவியிடமிருந்து பிரிந்து வேறொருத்தியுடன் வாழும் பேகனுக்கு அறிவூட்டி மீண்டும் இல்லறத்தில் ஈடுபட வைக்க அனைவரும் முயன்றனர். மன்னரில்லாப் புலவர் அவையில் புலவர் பலரும் வீற்றிருக்கப் பரணர் பேகன் புகழ் பாடுகிறார். பரணரின் புகழ்ப்பரணியைக் கேட்டவுடன் சினங்கொண்ட பெரும்பூதனார் எழுந்து பரணரை வினவுவதாக ஒரு கற்பனையைத் தற்காலக் கவிஞர் செய்திருக்கிறார். தமது இலக்கணப் புலமையைப் பயன்படுத்திப் பேகனைப் பாரட்டிய பரணரைக் கடிந்து கொள்கிறார்.

    நாட்டியத்து மயிலா? நடுங்குகின்ற மயிலா?

    தொன்மம் மற்றும் வரலாறு ஆகியவற்றில் காணும் நிகழ்ச்சிகளைத் தம் கற்பனையோடு இணைத்துப் புதியன படைப்பது தமிழுக்குப் புதியதன்று. இந்த நிரலில் பெரும்பூதனார் அறிவுரையும் அமைந்துள்ளது. பூதனார் என்ன வினவுகிறார்? “அவன் மயிலுக்குப் போர்வை தந்ததே அறியாமையின் விளைவு!. மயில் நடுங்கிறதா? கார்மேகம் கண்டு நாட்டியமாடுகிறதா? என்பது கூட அவனுக்குத் தெரியவில்லை!. அத்தகையவன் மனைவியின் வேதனையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? வருகின்ற பேரொலியெல்லாம் வேட்டுச் சத்தமாகத்தான் இருக்கவேண்டுமா? தும்மலாகவும் இருக்கலாம் அல்லவா?” என்று வினவும் பூதனார் “இடைநிலைகள் காலம் காட்டும்! சரி. அதற்காகக் காலம் காட்டுபவையெல்லாம் இடைநிலைகளாகிவிடுமா? வெண்பாவில் வெண்டளைகள் விரவும். சரி. அதற்காக வெண்டளைகள் விரவுகிற பாட்டெல்லாம் வெண்பாவாகிவிடுமா? மயில் தோகை விரித்தது உண்மை. மழைக்கு மயில் நடுங்கித்தான் தோகைவிரிக்குமா? அது மேகங்கண்டு நாட்டியமாடக் கூடாது என்று விதி உண்டா? கண்ணகியின் கண்ணீரைத் துடைத்தெறிய ஆவன செய்வீர்! என்று பரணரை நோக்கிக் கூறுகிறார். அந்தப் பாடல் இப்படி அமைந்திருக்கிறது!.

    “நாட்டியத்து மயிலுக்கும் குளிரி னாலே
    நடுங்குகின்ற மயிலுக்கும் வேறு பாடு
    காட்டுக்குள் அறியாத வேந்தன் நாட்டுக்
    கடமைகளை எவ்வாறு புரிந்து கொள்வான்?
    வேட்டுக்கும் தும்மலுக்கும் வேறு பாடு
    விளங்காதா? வெண்டளைகள் விரவு கின்ற
    பாட்டெல்லாம் வெண்பாவா? காலம் காட்டு
    பவையெல்லாம் இடைநிலையா? பாட்டுவேந்தே!

    “கார்போன்ற கருங்கூந்தல் நடுங்க ஏக்கக்
    கண்ணிரண்டும் புண்ணாகி நடுங்க வில்லின்
    கூர்போன்ற உதட்டுமுனை நடுங்க செங்கை
    குலைக்காந்தள் போல்நடுங்க உருட்டி விட்ட
    தேர்போலக் கிடக்கின்றாள் மனைவி! அந்தத்
    தென்பொதினிப் பொன்மயிலை மூடுதற்குப்
    போர்வைகொண்டு போகட்டும் பேகன்! என்று
    பூதனங்கு முழக்கமிட்டான்! பரணர் போனார்!”

    இலக்கணச்சுவை

    இந்தக் கவிதையில் பொருத்தமான இடத்தில் பொருத்தமான இலக்கணக் குறிப்புக்களை உவமமாக்கியிருக்கிறார். வினைச்சொல்லில் பெரும்பாலும் இடைநிலை காலம் காட்டும். சிறுபான்மை விகுதி காலம் காட்டும். பகுதி காலம் காட்டாதெனினும் பகுதி ஒற்று இரட்டித்துச் சிறுபான்மை இறந்த காலம் காட்டும். எனவே இடைநிலைதான் காலம் காட்டும் என்பதில்லை. வெண்பாவுக்குரிய தளை வெண்டளை. அதனால் அதில் அது வரவேண்டும் என்பதன்றி அதில் மட்டுந்தான் வரவேண்டும் என்பதில்லை. இந்த இலக்கணச் சிந்தனைகளை மயிலின் அசைவு பற்றிய சித்திரிப்புக்கு உட்படுத்தி, உவமமாக்கிக் கவிதை நயத்தை உயர்த்தியிருக்கிறார் கவிஞர் முருகுசுந்தரம்.

    தழுவு தொடரும் தழாஅத் தொடரும்

    வேற்றுமை, அல்வழி ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் ‘தழுவுதொடர்’ என்றும் ‘தழாஅத்தொடர்’ என்றும் இரண்டு உண்டு. ‘சங்கர் நூலைப் படித்தான்’ என்ற தொடரில் ‘நூலை’ என்னும் சொல் இயையாமல் விடுபட்டு நின்றாலும் பொருள்தொடர்பு அறாது. அதாவது ‘சங்கர்’ என்பது நிலைமொழி. ‘படித்தான்’ என்பது வருமொழி. இடையில் வந்திருக்கும் ‘நூலை’ என்னும் சொல் இரண்டனையும் பிரித்தாலும் சங்கர் படித்தான் என்னும் அவ்விரண்டுக்குமான பொருள் தொடர்பு அறுந்துவிடவில்லை என்பதைக் காணலாம். நிலைமொழி வருமொழிகள் அல்வழி, வேற்றுமைப் பொருள் புலப்பட ஒருங்கியைந்து நில்லாது இடையே பிற சொற்கள் வரச், சேய்மைப்பட நிற்கும் தொடர்மொழிக்கே தழாஅத் தொடர் என்று பெயர். அடுத்த சொல்லைத் தழுவாவிடினும் தொடர்ப் பொருள் சிதையவில்லை என்பதையே ‘தழாஅத் தொடர்’ என்பது உணர்த்துகிறது.  இதனை இன்னும் எளிமையாகப் புரியவைக்க முடியும். ‘நீர் குடித்தான்’ என்பது வேற்றுமைத் தொடர். ‘நீரைக் குடித்தான்’ என்பது வேற்றுமை வரி. இவ்விரண்டு தொடர்களிலும் நீர் என்பதும் குடித்தான் என்பதும் தழுவியே நிற்கின்றன என்பதை அறியலாம். ஆனால் நீர்க்குடம் என்று ஒரு தொடரை எடுத்துக் கொள்ளலாம். இது ‘நீரை உடைய குடம்’ என விரியும். ‘நீர்க்குடம்’ என்பதில் நீரும் குடமும் ஒன்றையொன்று தழுவி நிற்கிறது. ஆனால் ‘நீரை உடைய குடம்’ என்பதில் ‘நீரை’ என்ற சொல்லையும் ‘குடம்’ என்ற சொல்லையும் தழுவவிடாமல் ‘உடைய’ என்னும் சொல் தடுக்கிறது. (அதனால் நீர்க்குடம் என்பதை வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்பர்) நீரை உடைய குடம் என்பதைத்தான் தழாஅத்தொடர் என்கிறோம். இந்தத் தழாஅத்தொடர் என்னும் புணர்ச்சியிலக்கணக் குறியீட்டைக் கவிஞர் ஒருவர் பொருத்தமான இடத்தில் உவமமாகக் கொள்கிறார்.

    தலைவன் தழுவாத தலைவி

    தினைப்புனம் காக்கிறாள் தலைவி. அவள் நோக்கம் அங்குவரும் தலைவனைக் கண்டு மகிழ்வதே!. ஆனால் செவிலி அங்கு வந்து அவளை அழைத்துச் செல்கிறாள். தன்னோடு அண்மையாக வேண்டிய தலைவனைச் சேயனாக்கிச் செவிலியோடு இணைந்து இல்லம் திரும்பும் நிலையைக் கூறித் தலைவி தோழிக்கு அறத்தோடு நிற்பதை,

    “விழாத்தொறும் நூல்வெளியாக்கி என்றென்றும் விரிவுரைசெய்
    குழாத்தொடு தொண்டு செய்து ஓங்கும்கரந்தை குளிர்புனம் விட்டு
    அழாத்துயரோடு எமர் ஆணையிற்சோலை “அன்பர் வரின்
    தழாத் தொடர் ஆயினம்” என்று உரை சாற்றுவீர் எம் தத்தையரே”

    (கரந்தைக் கோவை)

    என்று பாடுகிறார் கவிஞர். ‘தன்னைத் தேடிவரும் தலைவரோடு தழாஅத் தொடர் ஆயினம்’ என்னும் தொடரில் தலைவனைத் தழுவாத, (தழுவ இயலாத) தன்னிலையைத் தழாஅத்தொடரோடு ஒப்பிடும் அருமை அறிக. நீரையும் குடத்தையும் ‘உடைய’ என்னும் சொல் தழுவவிடாமல் தடுக்கிறதாம்.  தலைவனையும் தன்னையும் செவிலி தழுவவிடாமல் தடுக்கிறாளாம். எனவே தழுவு தொடராயிருக்க வேண்டிய அவள் தழாஅத்தொடர் ஆனாளாம். இலக்கணத்தை இனிக்க வைக்க இப்படியும் ஒரு முயற்சி!

    மெல்லினம் விகாரமான கதை

    இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிஞர்களில் தமது சிந்தனையால் தனித்து விளங்குபவர் கவிஞர் அப்துல் ரகுமான். தனித்தன்மை மிக்க கருத்துக்கள், அளவையியல் சார்ந்து, அழகியல் குறையாமல் வெளிப்பட்டு நிற்கும் பாங்கை அவர்தம் கவிதைகளில் காணலாம். அகல்விளக்குகளாக இருக்க வேண்டிய பெண்களை ‘ஆண்கள் அடிமைப்படுத்தினார்கள்’ என்ற ஒரே ஒரு முழக்கத்தை முன்னிலைப்படுத்தித் தெருவிளக்குகளாக மாற்றி வைத்திருக்கும் கொடுமையை இன்றையச் சமுதாயம் செய்து கொண்டிருக்கிறது. அதற்குப் ‘பெண்ணுரிமை என்றும் பெயர் கொடுத்துத் தன் பெருமையை இழந்து கொண்டிருக்கிறது. பெண்மையின் அடர்த்தியைப் புரிந்து ஆற்றலைத் தெளிந்து, அதனை வணங்குவது வேறு. உரிமையளிப்பதாகச் சொல்லி அவர்களைத் தந்திரமாக அலுவலகத்துக்கு அனுப்பி உழைக்கச் செய்து அவர்தம் உழைப்பைச் சுரண்டுவது என்பது வேறு. இது தனித்த ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. ஆனால் இதுபற்றிய அப்துல் ரகுமான் கருத்து மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அக்கருத்தை அவர் உவமை வழியாக வெளிப்படுத்தும் பாங்கும் அளவையியல் நெறியும் மிகுந்த கவனத்திற்குரியதாகிறது.

    “பெண்ணே!
    உன் தளைகளை அகற்றும்
    ஆவேசத்தில்
    வாழ்க்கைக்கு ஆதாரமான
    பந்தங்களையும் அல்லவா வெட்டிவிட்டாய்!
    முன்பு
    புறம் உனக்கு
    மறுக்கப்பட்டது.
    இப்பொழுது
    அகத்தை நீ
    மறுதலிக்கிறாய்.
    மெல்லினமே!
    வல்லினமாகும் முயற்சியில்
    விகாரமாகி விட்டாயே”

    மேற்கண்ட கவிதை வரிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் மிகவும் ஆழமான சிந்தனைக்குப் பிறகு செய்யப்பட்ட பதிவுகளாகும். தளையும் பந்தமும் ஒரு பொருள் குறித்த இருசொல்லாயினும் இருவேறு நிலைப்பாடுகளைக் குறிக்கும். தளை பந்தமாகிறபோது பாட்டு இனிமையாகிறது. பந்தம் தளையாகிறபோது பாட்டு கசக்கிறது. தளை இலக்கண நெறி. பந்தம் இலக்கண உறவு. மறுக்கப்பட்ட புறத்தைப் பெறவேண்டிய பெண், மயக்கத்தால் தனக்குரிய அகத்தை மறுதலிப்பதையும், மெல்லினமாக இறைவனால் படைக்கப்பட்ட பெண், ஆணைப் போல் வல்லினமாக வேண்டும் என எண்ணியதன் விளைவாக இறுதியில் விகாரமாகி நிற்கின்றாள் என்ற உண்மையையும் இலக்கணக் குறியீடுகளால் சுட்டிக்காட்டும் உவமத்திறன் பெரிதும் சுவைத்தற்குரியது.

    நிறைவுரை

    மேற்சொல்லப்பட்ட இலக்கணக் குறியீடுகளை உவமமாகப் பயன்படுத்துவதில் கவிஞர் பலரும் ஈடுபட்டு வந்திருந்தாலும் எண்ணிக்கையில் மிகக்குறைந்த விழுக்காட்டினரே இதில் வெற்றி பெற்றுள்ளனர். ஆழ்ந்த இலக்கணப்புலமையும் இலக்கணக் குறியீடுகளுக்கான ஆழ்பொருளை நன்கு உள்வாங்குதலும் அவற்றை மறித்து நோக்கும் பேராற்றலும் பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்தலும் பொருளுக்கான பொருத்தத்தை நன்கு சிந்தித்து அமைத்தலுமாகிய ஆற்றல் எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை.  கவிப்பேரரசர் பலரும் வெல்ல முடியாத இந்தக் கவிதைத் தொழில் நுட்பம் அறிவும் உணர்வும் உணர்ச்சியும் கலந்த கலவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    (தொடரும்…)

    Share
  • அப்பா

    அப்பா

    பாஸ்கர்

    பள்ளி நாட்கள் எப்படிப்பட்டவர்க்கும் ஒரு இனிமையான விஷயம். படிப்பவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் , ஆளுமை எல்லாம் தாண்டி, பள்ளி நாட்கள் ஒரு கூட்டு வாழ்க்கை. அதுவும் இரண்டு மாத விடுமுறை முடிந்து அடுத்த வகுப்பில் எல்லோரும், புது இடத்தில கூடும்போது ஏற்படும் சந்தோஷம் எந்த சினிமாவும் பணமும் கொடுக்க முடியாதது.

    சின்ன சட்டை, அதில் பிய்ந்த பொத்தானைத் தைக்க வேண்டாம். அதனை அப்பாவோ அம்மாவோ உள்வழியாக பின்னை வைத்துக் குத்தி (தலையை குனியாதடா) ஊக்கு மாட்டி அனுப்பும் போதே தெரியும். ஒரு விளையாட்டில் அது படக்..

    இருந்தாலும் அவர்களின் அன்பு இன்றும் என் கண்ணில் நீர் வரவழைக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத செயல்.

    இங்கு மாதாவும் பிதாவுமே குருவும் தெய்வமும். அறுபதுகளில் மயிலாப்பூரில் அம்பிகா ஸ்டோர்ஸ் புத்தகக் கடை மிகப் பிரசித்தம். அங்கு லேபில் வாங்கி அதனைக் கட்டுக் கட்டாய் வைத்துக்கொண்டு வகுப்பில் பீத்திகொள்ள அவ்வளவு ஆசை. என் தந்தை புத்தகங்களுக்கு நேர்த்தியாய் அட்டைபோட்டு நாலு பக்கமும் அதனைச் சோற்றுப் பருக்கை வைத்து ஒட்டி, அதனை வெயிலில் காய வைத்து, அடுத்த நாள் அந்த அட்டையில் பெயரை, கூர்ப்பான பௌண்டைன் பேனாவால் எழுதி, துணிப்பையில் போட்டுக் கொடுப்பார். எனக்கு எந்தப் பக்கம் கிழிந்தாலும் கவலை இல்லை. அப்பா ஒட்டின லேபிளும் அவர் கையெழுத்தும் ஒன்றும் ஆக கூடாது.

    இன்று என் அலுவல் பணி சம்பந்தமாய் ஒரு புத்தகக் கடைக்குச் சென்ற போது அந்தக் கடை வாசம், என் நினைவுகளைப் பள்ளிக்கு அனுப்பியது. ஒரு புதுப் புத்தகம் எடுத்து, அதனை அழகாய் மடித்து, சீட்டுக்கட்டு போல, பக்கங்கள் புரட்டி, வாசக் காற்று முகர்ந்தேன். என் தந்தை வாசம் காற்றில் மலர்ந்தது.

    Share
  • ஆணுக்கு ஆணே எதிரி!

    ஆணுக்கு ஆணே எதிரி!

    ஜோதிர்லதா கிரிஜா

    முன்குறிப்பு1983ஆம் ஆண்டில் வெளிவந்த  ஒரு புலனாய்வு வார இதழில் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வந்த ஒரு பெண்மணி –  அதிலும் பெண்ணுரிமை இயக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவர் – “பெண்ணுக்குப்  பெண்தான் எதிரி”  என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை மிகுந்த மனத்தாங்கலுடன் வடித்திருந்தார். அவ்விதழ் வெளிவந்த அன்றே அதை மறுத்து நான் ஒரு கட்டுரையை எழுதி அதன் ஆசிரியருக்கு அனுப்பிவைத்தேன் (ஆனால், என்ன காரணத்தாலோ அது வெளிவரவில்லை. அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துகள் இன்றளவும் பொருந்துவதால் அக்கட்டுரை கீழே வருகிறது).

    “ஆணுக்கு ஆணே எதிரி” –  இப்படி யாரேனும் சொல்லக் கேட்டோ எழுதியதைப் படித்தோ இருக்கிறோமா? “இல்லை” என்னும் நிச்சயமான பதிலை உடனேயே தயக்கமின்றிச் சொல்லிவிடலாம். பெண்கள் பிரச்சினை எதுவானாலும், அது உருவாவதற்கும், அது தீர்க்கப்படாததற்கும் பெண்களே தான் காரணம் என்று அறிவித்துவிட்டு ஆண்கள் (பெண்களில் சிலரும் கூடத்தான்) ‘அப்பாடா’ என்று ஓய்வெடுக்கப் போவது வழக்கமாக ஆகிவிட்டது. ஆண்களுக்கும் பிரிச்சினைகள் ஏராளமாக உண்டு. ஆண்களின் பிரச்சினைகளுக்கு ஆண்களே காரணமாக இருப்பதும் உண்டு. ஆனால், அவற்றை விவாதிக்கும் போது, “ஆணுக்கு எதிரி ஆண்தான்” என்று இதுவரையில் யாருமே சொன்னதாய்த் தெரியவில்லை. இந்த நிலை சிந்தனைக்குரியது.  ஆழ்ந்து சிந்தித்தால்,  பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கிற – இந்த நாட்டின் – ஏன்? பொதுவாக அனைத்துலகத்தின் –  பரம்பரைத்தனமான மனப்பான்மையே இதற்கு அடிப்படை என்று சொல்லிவிடலாம். என்னதான் படித்தாலும், பெரும்பாலான ஆண்களின் சிந்தனை, தன்னலம் என்னும் கோளாறின் அடிப்படையில்தான் செயல்படுகிறது.

    பெண்களுக்கு என்று சில சிறப்புகளும், ஆண்களுக்கு என்று சில சிறப்புகளும் – அதே போல் இருபாலருக்குமே சில குறிப்பிட்ட குணக்கேடுகளும் பிறவியிலேயே அமைவதைப் பொதுவாகப் பார்க்கிறோம். ஒருவர்க்கொருவர் இட்டு நிரப்புவதற்காக இயற்கை அவ்வாறு அமைத்திருப்பதாக நாம் கருதி வந்துள்ளோம். பெண்கள் அனைவரும் தேவதைகள் அல்லர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு ஆண்கள் அனைவரும் அரக்கர்கள் அல்லர் என்பதும் உண்மையாகும். ஒரு பென்ணே மற்றொரு பெண்ணுக்குத் தீங்கு செய்வதன் மூல அடிப்படை, அவளது கல்வியறிவின்மையே ஆகும். கல்வி கற்ற மாமியார் எவளும் தன் மகனின் மனைவியை அவள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொல்லமாட்டாள். நாம் அறிந்த வரையில் இது உண்மையே ஆகும் (எனினும் ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். அதை நாம் மறுக்கவில்லை). ஆனால், படிப்பு ஆண்களைத் திருத்துகிறதா என்று பார்ப்போம். இல்லை என்கிற பதிலே நமக்குக் கிடைக்கிறது. கல்விமுறையும் பாடத்திட்டமும் சரியாக இராதது இந்தக் குறைபாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்தான். ஆனால், இப்படியும் பொத்தாம் பொதுவாய்க் குறை சொல்லிவிடுவதற்கில்லை என்று இதே கல்வியைப் பயிலும் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாய்த் திருந்துகிறார்கள் என்பதைக் கவனிக்கும் போது தோன்றுகிறது. ஏனெனில் மருமகள் எரிப்பில் பங்குகொள்ளும் மாமியார்கள் படிக்காதவர்களாக இருக்கையில், அந்த மருமகளின் கணவனும், மாமியாரின் கணவனும் பெரும்பாலும் படித்தவர்களாகவே – வங்கி ஊழியர்களாக, பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாக, மருத்துவர்களாக – சமயங்களில் காவல்துறை ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும் கூட! – இருக்கிறார்கள்! என்னே கொடுமையான வெட்கக்கேடு இது!

    எனினும், படித்த பெண்களில் கூடச் சிலர் “பெண்ணுக்குப் பெண்தான் எதிரி” என்று அறிவிப்பதற்குக் காரனம் அவர்களது இரத்தத்தில் ஊறிப் போய்விட்ட பரம்பரைப் புத்திதானே ஒழிய, வேறு எதுவும் அன்று என்றே முடிவுசெய்யத் தோன்றுகிறது. தலைமுறை தலைமுறையாகச் சில நற்குணங்களையும் குணக் கோளாறுகளையும் ஊட்டி வளர்க்கும் போது அவை மனிதர்களின் உதிரத்தில் ஊறி அவர்களுடைய சந்ததியினரின் இயல்புகளாகவும் ஆகி விடுகிற கோளாறு நேர்ந்துவிடுவதால் சில வேளைகளில் பெண்கள் சிந்தனைத் தேக்கத்துக்கு ஆட்படுகின்றனர். இத் தேக்கத்துக்கு ஆண்களும் விதிவிலக்குகள் அல்லர்.

    கல்லூரிப் பேராசிரியை பென்களின் உரிமைகளுக்காகத் தங்களைப் போன்றவர்கள் போராடுவதைப் பெண்களே எதிர்க்கிறார்கள் என்று குறைப்பட்டுள்ளார். இதற்குக்  மூளைச் சலவையின் அடிப்படையில் அவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகப் போதிக்கப்பட்டு வரும்  ஒருதலைப்பட்சமான கோட்பாடுகள் தானே காரணம்! நம் நாட்டு முன்னோர்கள் (ஆண்கள்) மிகுந்த சாமர்த்தியசாலிகள். அதனால்தான், சுயமான சிந்தனைப் போக்கு, தன்னம்பிக்கை, ஆணைச் சாராது வாழ்வதற்கான தகுதி ஆகியவற்றைப் பெண்களுக்கு வழங்கிவிடவல்ல கல்வியறிவைக் காலங்காலமாகப் பெண்களுக்கு  மறுத்து வந்துள்ளனர்! இவ்வாறு அநியாயம் செய்ததன் மூலம் பெண்களை எக்காலத்துக்கும் எதிர்க் கேள்வி கேட்க முடியாத வக்கற்ற நிலையிலேயே வைத்து ஆண்கள் அடிமைப் படுத்தினார்கள். இன்றும் கூட நம் நாட்டில் சில மாநிலங்களில் நிகழும் குழந்தைத் திருமணங்களும்,  கணவனோடு இளம் விதவைகளேயானாலும் கூட உடன்கட்டை ஏறுகிற வழக்கமும் நீடித்து வருவதும் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கின்றன. இல்லாவிடில், ராஜஸ்தானத்தில் கொஞ்ச நாள்களுக்கு முன்னால், ‘கணவனுடன் சிதையில் இறங்கி உயிரை விடுவது எங்கள் உரிமை” என்று கூச்சல் போட்டுக்கொண்டு சில பெண்கள் ஊர்வலம் சென்றிருப்பார்களா என்ன! முட்டாள்தனத்தின் உச்சமல்லவா இது!

    போகட்டும். வரதட்சிணை, மாமியார் கொடுமை ஆகிய  இரண்டுக்கும் அடிப்படைக் காரணம் ஒன்றே. பெண்ணின் பொறாமை. இந்தப் பொறாமை எதனால் வருகிறது? அறியாமையால் வருகிறது. அறியாமையின் அடிவேரோ அவள் கல்வி மறுக்கப்பட்டதன் விளைவாகும். மருமகள் எரிப்பு, கொடுமை, வரதட்சிணை இவை யாவுமே பெண்ணின் பொறாமையின் விளைவேயாம். ஆனால், இதை வளர்த்தவர் யார்? பெண்களுக்கு என்று ஆண்கள் வகுத்து வந்துள்ள வாழ்க்கை முறையே அன்றோ! கல்வியறிவு பெற்றுவிட்டால் பெண் சிந்திக்கத் தொடங்குவாள் என்பதால் அவளை எக்காலத்தும் அறியாமையிலேயே ஊறவைப்பதுதான் தனக்கு வசதியானது என்று திட்டம் தீட்டி, நிரந்தரமாக அவளை இருட்டில் வைத்து வந்துள்ளவன் ஆணேயன்றோ! இந்தக் கோளாறு தாம் பெற்ற பெண் மக்களைப் பாதிக்கும் போது மட்டும் ஆண்கள் “லெட்டெர்ஸ் டு த எடிட்டர்” எழுதி என்ன லாபம்?

    சிறு வயதில் பெற்றோருக்கும், மணமான பின் கணவனுக்கும் அடிமையாக வாழும் ஒரு பெண் குணக்கோளாறுக்கு உள்ளாகித் தான் ஆட்டிப் படைக்க ஓரு ஆன்மா கிடைத்ததும், அவிழ்த்துவிடப்பட்ட வெறிபிடித்த காளையைப் போல் நடந்து கொள்ளுவதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? இந்த வெறிக்குரிய குறைபாடு யாரால் ஏற்பட்டது, அதைக் களைய என்ன செய்யவேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்திக்காமல் “பெண்ணுக்குப் பெண்ணே எதிரி” என்று பெருமூச்சு விடுவது என்ன நியாயமாம்? ஆண்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் இந்தச் சொற்சாலத்தைப் பெண்களும் சிந்திக்காமல் பயன்படுத்தாலாகுமா? ‘அவனுக்கென்ன! ஆண்பிள்ளை! முன்னே, பின்னேதான் இருப்பான். நீ பொட்டச்சி. அடங்கித்தான் போகணும்’ என்றுதானே பெண்ணின் பெற்றோர்கள் சொல்லுகிறார்கள்! ஆண் குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே தாயும் தகப்பனும் இவ்வாறு அறிவிக்கும்போது அந்த ஆண்குழந்தையின் மனத்தில் விஷவித்தல்லவோ விதைக்கப்படுகிறது!

    தன் கணவனிடம் கொடுமைப்பட்ட ஒரு பெண்மணி தன் மருமகளிடம், ‘நீதான் அனுசரித்துப் போக வேண்டும்’ என்று கூறித் தன் பொல்லாத பிள்ளைக்கு வக்காலத்து வாங்குவதும், தன் மகள் கொடுமைக்கு ஆளாகும்போது தாங்கிக்கொள்ள முடியாமல் – ஆனால் தன் மனைவியைக் கொடுமைப்படுத்திய  – ஓர் ஆண் கண்கலங்குவதும் இந்த அநீதியின் விளைவுகள்தானே! கொஞ்சமேனும் சிந்தித்தால், இந்த மாமியாரும் இந்தத் தகப்பனும் மாறுவார்களன்றோ?

    சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால், நம் குழந்தைகளிடம் நற்பண்புகள் ஏற்படும் வண்ணம் நம் கல்வி முறை அமைந்தால் ஓரளவுக்கேனும் நிலைமை சீர்ப்படும். முன்பெல்லாம் “மாரல் க்ளாஸ்” என்பதாய் “நீதி போதனை” வகுப்பு ஒன்று இருந்தது. அது இப்போது பெரும்பாலான பள்ளிகளில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அப்படியே இருந்தாலும் இவ்வகுப்பைப் பெண்களுக்கு மட்டுமே அறிவுரை சொல்லும் ஒரு தலைப்பட்சமான வகுப்பாக மாற்றாது, பெண்களை மதிக்க ஆண்கள் பயில வேண்டியதன் நியாயத்தை வலியுறுத்தும் ஒன்றாகவும் ஆக்க வேண்டியது கல்வித் துறையினரின் கடமையாகும். கெட்டவற்றை விதைக்க முடிவது போல் காலப் போக்கில் நல்லவற்றையும் சிறுகச் சிறுகவேனும் மக்கள் மனங்களில் விதைக்க முடியும் தானே?

    Share
  • குறளின் கதிர்களாய்…(355)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(355)

    நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
    பண்பாற்றா ராதல் கடை.

    – திருக்குறள் – 998 (பண்புடைமை)

    புதுக் கவிதையில்...

    நட்புடன் இல்லாமல்
    தம்முடன் பகைமைகொண்டு
    தீமையே செய்பவர்களிடம் கூடப்
    பண்புடையவராய்
    நடக்க முடியாமல் போனால்
    அறிவுடையோர்க்கு
    அது பேரிழுக்காகும்…!

    குறும்பாவில்...

    நட்புகொள்ள முடியாதவராய்த் தீமையே
    செய்வோரிடத்தும் பண்புடன் நடக்க இயலாதுபோனால்,
    இழுக்காகும் அது அறிவுடையவர்க்கே…!

    மரபுக் கவிதையில்...

    நண்பராய் நடந்திட இயலாமல்
    நலமிலாப் பகைமை தனைக்கொண்டே
    புண்படத் தீமை பலவற்றைப்
    பொறுப்பே யின்றிச் செய்தாலும்
    பண்பே யில்லா அவரிடத்தும்
    பகைய தேதும் கொள்ளாமல்
    பண்புடன் நடக்க இயலாதெனில்
    பாரில் இழுக்காம் அறிந்தவர்க்கே…!

    லிமரைக்கூ...

    நட்பில்லை உள்ளத்தில் அழுக்கே,
    பகையுடன் தீதுசெய்பவரிடமும் பண்போடிருக்க இயலாதெனில்
    அறிவுடையோர்க்கு அதுபேர் இழுக்கே…!

    கிராமிய பாணியில்..

    பண்பிருக்கணும் பண்பிருக்கணும்
    மனுசனுக்கு
    நல்ல பண்பிருக்கணும்,
    எல்லார்கிட்டயும் பண்போட பழகணும்..

    நட்பே இல்லாம
    பகயோடே
    நமக்குக் கெடுதலே
    செய்யிறவன் கிட்டேயும்
    பகயில்லாம
    பண்போட நடக்க முடியல்லண்ணா
    படிப்பறிவு உள்ளவங்களுக்கு
    அது
    பெரிய கொறதான்..

    அதால
    பண்பிருக்கணும் பண்பிருக்கணும்
    மனுசனுக்கு
    நல்ல பண்பிருக்கணும்,
    எல்லார்கிட்டயும் பண்போட பழகணும்…!

    Share
  • பெண்குயிலுக்கு வேப்பம்பழம் ஊட்டிவிடும் ஆண்குயில்

    பெண்குயிலுக்கு வேப்பம்பழம் ஊட்டிவிடும் ஆண்குயில்

    ஆண்குயில் வேப்பம்பழத்தைக் கவ்விக்கொண்டு வந்து பெண்குயிலுக்கு ஊட்டிவிடும் அரிய காட்சி இதோ. இதில் இன்னொரு புதுமை என்னவென்றால், ஆண்குயில் வாயிலிருந்து பெண்குயில் தானாகவே எடுத்துக்கொண்டு செல்வதும் அது எடுத்துக்கொள்வதற்காகவே ஆண்குயில் வாயில் வைத்துக் காத்திருப்பதும் காவியக் காதலின் ஒரு சொட்டு. கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அந்திமந்தாரை – நான்கு நிறங்களில்

    அந்திமந்தாரை – நான்கு நிறங்களில்

    நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரே நாளில், நான்கு நிறங்களில் அந்திமந்தாரை பூத்துள்ளது. அந்தியில் மலர்ந்து காலையில் மூடிக்கொள்வதால், இது அந்திமந்தாரை எனப் பெயர் பெற்றுள்ளது. இதுவே பெருவின் அதிசயம் ((Marvel of Peru ) என்றும், நான்கு மணித்தாவரம் ( Four O’ Clock Plant), நாலு மணிப்பூ அல்லது அஞ்சு மணிப்பூ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர், மிராபிலிஸ் ஜலாபா (Mirabilis Jalapa). ‘மிராபிலிஜஸ்’ என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘அற்புதமான’ என்று பொருள். இந்த அற்புத மலரைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஸ்ரீநிதியின் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    ஸ்ரீநிதியின் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    சென்னையில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் கே.எஸ்.ஸ்ரீநிதியின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மறவன்புலவு சச்சிதானந்தனிடம் விசாரணை

    மறவன்புலவு சச்சிதானந்தனிடம் விசாரணை

    மறவன்புலவு சச்சிதானந்தன்

    சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனனைக் கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாதத் தடைப் புலனாய்வுப் பிரிவினர் (TID) வியாழன் 17 6 21 மாலை 3 மணி முதல் 5 மணி வரை இரண்டு மணி நேரம் விசாரித்தனர்

    தயாரித்துக் கொண்டு வந்திருந்த வினாக்கொத்து ஒன்றினைக் கொண்டு 22க்கும் கூடுதலான வினாக்களைத் தொடுத்தனர். விடைகளைப் பதிந்து சென்றனர்.

    சிவசேனை அமைப்புக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை அமைந்தது.

    இதுவரை காலம் சிவசேனை வெளியிட்ட நூல்கள் தட்டிகள் சுவரொட்டிகள் யாவற்றையும் ஒவ்வொன்றாகக் காட்டிய மறவன்புலவு க சச்சிதானந்தன்

    ஒவ்வொரு படியை எடுத்துச் செல்லுமாறு அவர்களுக்குக் கொடுத்த போது அவற்றின் படங்கள் தம்மிடம் இருப்பதாக கூறி எடுத்துச்செல்ல மறுத்து விட்டனர்.

    பசுவதைத் தடைச் சட்டக் கோரிக்கை தொடர்பாக இதுவரை சிவசேனை நடத்திய போராட்டங்கள் யாவற்றையும் விளக்கமாகக் கேட்டனர்.

    Press release

    Terrorism Investigation Department officials came on Thursday 17th June 2021 from Colombo to interrogate Siva Senai Chief Maravanpulavu K Sachithananthan.

    They were at his home at Maravanpulavu for nearly two hours from 1500 hrs.

    They had come with 22 or so questions on the activities of Siva Senai in Sri Lanka. Also they had a bundle of reference papers containing images and text on Siva Senai.

    They focussed on two aspects.
    1. Whether Siva Senai is in anyway connected to the LTTE left-overs and / or remnants in Sri Lanka or outside.
    2. The chain of events following the one day long fast at Chavakachcheri up to now seeking ban on bovine slaughter, the venerated symbol among Buddhists and Hindus.

    Replies of Maravanpulavu K Sachithananthan was recorded on paper.

    Maravanpulavu K Sachithananthan gave one copy each of the publications, posters, banners, advertisements, and notices to them. They politely refused saying that copies were already available with them.

    Share