சேக்கிழார் பாடல் நயம் – 133 (ஆவதென்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
97. ‘ஆவது என் ? இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல்
மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்பு உற விரையா நிற்கும்
தேவர் அங்கு இருப்பது எங்கே ? போகு’ என்றார் திண்ணனார் தாம்
வரலாறு
வேட்டைக்கு அணுக்கத் தொண்டர்களுடன் சென்ற திண்ணன், நெடு நேரம் நெடுந்தூரம் சென்று ஒரு காட்டுப்பன்றியை இரண்டாக்கி வீழ்த்தி நின்றான்! அவனை வந்தடைந்த காடனும் நாணனும் இச்செயலைக் கண்டு வியந்தனர். பசியைப் போக்கிக்கொள்ள எண்ணி, அதனை அறுத்துச் சுட்டு உண்ண முயன்றனர்! காட்டுச் சுள்ளிகளில் தீ மூட்டிய போது, ‘’உண்பதற்குத் தேவையான குடிநீர் எங்கே உள்ளது?’’ என்று திண்ணன் கேட்டான். உடனே, நாணன் ‘’இப்பெரிய தேக்குமரச் சோலையைத் தாண்டி அப்புறம் சென்றால் நீண்ட மலையடிவாரத்தில் நீர்நிறைந்து ஓடும் பொன்முகலி ஆற்றைக் காணலாம்’’ என்றான். உடனே திண்ணன் அங்கே சென்றபின் இதனை உண்ணலாம் , எடுத்துக் கொண்டு வாருங்கள்!’’ என்று கூறி அந்த இடம் நோக்கிச் சென்றான்! வாறு அரைக்காத தூரம் நடந்த போது, சிவந்த கண்ணை உடைய காளையை உடைய சிவபிரான் எழுந்தருளும் திருமாளை சாரலில் உள்ள சோலையை அடைந்தனர். ‘’இதோ, நம்முன் தோன்றும் இக்குன்றில் ஏறுவோம்! ‘’ என்று திண்ணன் கூற, நாணன் ‘’ இக்குன்றில் நற்காட்சி கிட்டும்! இங்கே மலைமேல் கோணம் இல்லாத குடுமித்தேவர் இருப்பார், கும்பிடலாம்!’’ என்றான். சைவநெறியின் ‘ நற்காட்சி, இறைவன் இருப்பு, தரிசனம் ‘ ஆகியவற்றைத் திண்ணனுக்கு நாணன் உபதேசித்த சிறப்பைக் கண்டோம்! அப்போது திண்ணனின் உள்ளத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி மிக்க அனுபவத்தைச் சேக்கிழார் கூறுகிறார்!
பாடல்
“ஆவதென்? இதனைக் கண்டு இங்கு அணைதொறும் என்மேல் பாரம்
போவது ஒன்று உளது போலும் ; ஆசையும் பொங்க மேன்மேல்
மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்பு உற விரையா நிற்கும்;
தேவர் அங்கு இருப்பது எங்கே? போது ” என்றார் திண்ண னார்தாம்.
பொருள்
“இவ்வாறு ஆவது என்னை? இம்மலையைக்கண்டு இவ்விடத்தே அணுகிச் செல்லுந்தோறும் என்மேல் உள்ள பாரம் குறைவது போல அனுபவம் உளதாகின்றது; ஆசையும்பொங்கி மேலும்மேலும் பொருந்திய நெஞ்சமும் வேறொரு விருப்பம் கொண்டதாக விரைந்துசெல்லாநிற்கும்; அங்கே தேவரது இருப்பிடம் எங்குள்ளது? போவாயாக” என்று திண்ணனார் கூறினார்.
விளக்கம்
கண்டுஇங்கு அணைதொறும்என்ற தொடர், மேலே கூறியபடி பேசிக் கொண்டு இருவரும் மலையைநோக்கி நடந்து செல்கின்றார்களாதலின் இவ்வாறு கூறினார்.
போவது போலும் உளது – . அடிபெயர்த்து வைக்குந்தோறும் அவ்வளவிற்குச் சிறிது சிறிதாய் என்பாரம் குறைவது போன்ற அனுபவம் நிகழ்கின்றது. போலும் என்ற சொல் போல்வதாகிய நிகழ்ச்சி.
ஒவ்வொன்றாய்க் குறையும்அளவு, உளது ஒன்று போவது என்றும், அணைதொறும் என்றும் கூறினார்.
ஆசையும் பொங்கி என்ற தொடர், தோன்றும் குன்றில் நண்ணுவோம் என்று முன்னர் எழுந்த ஆசையும் பொங்கியதைக் குறித்தது. அவ்வாறெழுந்த ஆசை அடங்காது மேலும் மேலும் பொங்கி வளர்ந்தது என்க.
நெஞ்சும் – விரையாநிற்கும் என்பது , மனவேகத்தைக் குறித்தது. உடல் அணைவதன் முன்னே நெஞ்சு மிக விரைகின்றது. நெஞ்சும்- உடலோடு மனத்தையும் குறித்தது. கம்பராமாயணத்தில் இராமனைக் கண்ட அனுமன் உள்ளத்தில் நிகழ்ந்த மாற்றங்களை,
‘’துன்பினை துடைத்து மாய தொல் வினை-தன்னை நீக்கி
தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம்
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல்
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன்’’
என்ற பாடலில் காணலாம்.
வேறுஓர் விருப்புஉற – வேட்டையாடி உண்ணும் விருப்பத்திலிருந்து வேறு பட்ட இறைநாட்டம் பெற்ற இயல்பு! காணவேண்டுமென்னும் ஆசையே யன்றி, இன்ன தென்றறியப்படாத மற்றோர் விருப்பமும். இன்னதென்று உணரவாராமையின் வேறுஓர் என்றார். இது முன்னைப்பிறவியின் தொடர்ச்சிபற்றி இவருள்ளத்தில் எழுந்தது.
கம்பராமாயணத்தில் அனுமன் வீடணன் இராமனிடம் வந்த போது, அவன் அரசாட்சியை அடைவதற்கு மேலாக இறைவனைச் சரணடையும் ஆசையும் அவன் பால் இருந்தது என்பதைக்
‘’கருத்து உற நோக்கி போந்த காலமும் நன்று காதல்
அருத்தியும் அரசின் மேற்றே’’
என்று கூறுவதும், இங்கு நோக்கத்தக்கது.
“முந்தை யறிவின் றொடர்ச்சியினால் முகைத்த மலரின் வாசம்போற்,
சிந்தை மலர உடன்மலருஞ் செவ்வி யுணர்வு”
என்ற சண்டீசநாயனார் புராணமும்,
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”
என்ற திருக்குறளும் இக்கருத்தை விளக்குவன. “முன்பு செய் தவத்தி னீட்டம்” என்று பின்னர்க் கூறுவதும் காண்க.
தோன்றுங் குன்றில் நண்ணுவோம் என்று முன்னர் எழுந்த ஆசை இவராற் காரணமறியப்பட்டதும் இங்கு உறும் வேறு ஓர் விருப்பம் காரணம் அறியப்படாததும் ஆம்.
தேவர் என்று நாணன் சொல்லியதனால் இவர் அறிந்த குடுமித்தேவர். அங்குத் தேவர் எங்கே இருப்பது? என்க. எங்கே – மலையில் அவர் இருப்பதாகக் குறித்த இடம் எது? என்றபடி. அங்கு – அக்குன்றில் – சேணுயர்மலையில். போது – போவாயாக.
தத்துவ தாத்துவிகங்களாகிய தொண்ணுற்றாறும் தன்னின் வேறாகக்கண்டு கடந்த நிலையில், உடல்முதலிய கருவிகரணங்கள் பாரமாகக்காணப்பட்டுக் கழல்வனவாம். அதுவரை அவற்றிற் பற்றுண்டு அவற்றைச் சுமை என்று உணராது சுகமென்றும், அவற்றையே தான் என்றும் கண்டு, சுமந்து திரிந்த உயிர் இப்போது சுமை என்று அறிந்தது. பெரும்பாரம் சுமந்திளைத்தவன் அதுகுறையக் குறையக் களிப்பது போல, இந்நிலையடைந்த உயிரும் களிப்படையும். இப்பாரம் குறையக் குறைய இறைவனை அணையும் ஆசையும் மிகும். அதுவரை ஆணவத்தோடு ஒற்றித்து நின்று அறிவிழந்த உயிர் அதன்கண் உவர்ப்படைந்து, அதனை விட்டுப் பின்னர் மெய்ஞ்ஞானத் தாணுவினோடு ஒற்றித்து நிற்கத் தலைப்படும்.
“துருத்தியாங் குரம்பை தன்னில் தொண்ணூற்றங்கு அறுவர் நின்று
விருத்திதான் தருக வென்று வேதனை பலவுஞ் செய்ய
அருத்தியால் வல்ல வாறு வந்துவந் தடைய நின்ற
அருத்தியார்க் கன்பர் போலும் அதிகைவீ ரட்டனாரே!
என்ற அப்பர் திருநேரிசைக் கருத்தையும் காண்க. இந்த அருத்தியே கம்பராமாயணத்தில் எடுத்துக் கொள்ளப்பெற்றது. இவ்விளைவின் தன்மை இப்பாட்டில் திண்ணனார் தம் அனுபவநிலையைக் கூறும்வகையாற் குறிக்கப்பட்டது. இது 96 பாட்டுக்களையுங் கடந்த மேல் 97-வது திருப்பாட்டாக அமைந்த தெய்விக அமைப்பும் காண்க. மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையை அடையும்போது இத்தன்மைத்தானதொரு நிலையை அடைந்தனர். இதனை,
பித்திது எனப்பிறர் நகைக்க வரும் நாலாம்
சத்திபதி யத்தமது சத்தறிவு தன்னைப்
பொத்திய மலத்தினும் வெரீஇச்சுமை பொறுத்தோன்
ஒத்துஇழி பிணிப்புறும் ஒருத்தனையும் ஒத்தார்.
எனப்பாடுகிறது. இப்பாடல் இறைவனருள் வாய்க்கப் பெற்ற உயிர்கள் அடையும் பல்வகைப் படிநிலைகளை அறிமுகப் படுத்துகிறது. இறைவன் அருள் வாய்த்தமையால் திண்ணன், திண்ணனார் எனப் போற்றப் பெற்ற சிறப்பை இப்பாடலில் கண்டு கொள்க.