Blog
-
காதலை என்றும் காப்போம் !
– எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
வாழ்விலே காதல் இன்றேல்
வரட்சியே வந்து நிற்கும்
ஆதலால் காதல் செய்வோம்
அனைவரும் மகிழ்ந்து நிற்போம்!
ஆண்டவன் எமக்குத் தந்த
அருங்கொடை காதல் அன்றோ
ஆதலால் காதல் தன்னை
அணைத்துமே நிற்போம் வாழ்வில்!மாதாவைக் காதல் செய்வோம்
மனமெலாம் குளிரச் செய்வோம்
மாண்புடைத் தந்தை மீது
மறக்காது காதல் கொள்வோம்!குருதனை எண்ணி எண்ணிக்
குறைவின்றிக் காதல் செய்வோம்
அருமறை போற்றும் அவனை
அனுதினம் காதல் செய்வோம்!இளசுகள் காதல் என்றும்
இனிப்பாக இருக்கும் என்பர்
பழசுகள் காதல் தன்னில்
பக்குவம் தெரியும் என்பர்!உலகிலே காதல் செய்வோர்
உண்மையாய் இருந்தே விட்டால்
அழகுடைக் காதல் அங்கு
அருமையாய் மலரும் அன்றோ?காதலை மோதல் ஆக்கும்
கயவரின் கூட்டம் தன்னைக்
காதலர் தினத்தில் நாங்கள்
மோதியே மிதித்தல் வேண்டும்!காதலை மனத்தில் கொண்டு
கண்ணியம் அதனுள் சேர்த்து
வேதனைக் கொடுக்கா நின்று
விருப்பமாய்க் காதல் செய்வோம்!இருமனம் இணைந்தால் அன்றோ
என்றுமே மலரும் காதல்
இருமலர் ஆக வாழ்வில்
இணைப்பதும் காதல் அன்றோ?காதலர் தினத்தில் நாங்கள்
காதலைக் காக்க வேண்டில்
காதலைக் கண்போல் எண்ணிக்
காதலை என்றும் காப்போம்!பூதலம் மீது காதல்
புனிதமாய் இருக்க வேண்டி
மாமலர் கொண்டு நாங்கள்
மாதவன் கோவில் செல்வோம்! -
காதல் என்றால். . . ?!
-ரா.பார்த்தசாரதி
கண்ணும் கண்ணும் கலப்பதா
இருமனங்கள் ஒன்றாவதா!இரு இதயங்கள் ஒன்றோடுஒன்று இணைவதா
காதலித்த பெண்ணை நெஞ்சுக்குள் நினைப்பதா!அன்பையும் நெஞ்சத்தையும் அள்ளித் தருவதா
நீரோட்டம் போல் இருவரிடையே ஓடி வருவதா!இரு உள்ளங்கள் ஒன்றோடுஒன்று பந்தாடுவதா
இருவர் நெஞ்சில் அழகாய்ப் பூப்பதா, சுமையாய்த் தாக்குவதா!கண்கள் பேசாமல் ஒன்றோடுஒன்று பேசுவதா
வார்த்தைகள் மௌனமாய் நிலைத்து நிற்பதா!நிலவையும் மலரையும் பாடச் சொன்னேன்
அதில் என் காதலியை நடமாடச் செய்தேன் !காதலர்களின் நினைவிற்கும், ஊக்கத்திற்கும் ஒரு தினம்
அதுவே உலகெங்கும் கொண்டாடும் காதலர் தினம் !
-
ஊர்க் காதல்!
-பத்மநாபபுரம் அரவிந்தன்
தடகளப் போட்டியில் ஓடிவந்தவன்
போல் துடித்ததென் இதயம்
முதலில் உன்னைப் பார்த்ததும்…உன் கண்களால் என் நெஞ்சுள்
நீண்ட நாட்களெரியும் ஒரு
கற்பூரத்தை ஏற்றினாய்…விளக்கமுடியாப் புல்லரிப்பும்
புது சுகமும் பரவியது
உனைப் பார்த்தபோது…நீ பார்த்தபோது…எடுத்த பிறவிக்குப் பயனென்று
உனை நினைத்தேன்…உன்னிடம் பேசவென்று சேர்த்து
வைத்த வார்த்தைகள் பேசாமலேயே
நெஞ்சையடைத்து நிறைந்தது…உனக்கும்கூட அப்படியிருந்திருக்கலாம்
எனவேதான், போலி இருமலால்
அவற்றை வெளியேற்றினாய் போல…எத்தனைக் கூட்டமிடையிருந்தாலும்
நம் கண்கள் சந்திக்கமட்டும்
தவறியதேயில்லை…பேசுவதற்குக்
கிடைத்த சந்தர்ப்பங்களையும், நேரங்களையும்
நாம் பார்வையாலேயே கொன்று போட்டோம்…பேசாமலேயே…முதன்முதலாய் நீ பேசியபோது
பல முத்துக்கள் உதிர்ந்தன
என்பதாய் நினைவு…நீ கேட்ட,” சுகமா?” என்ற
கேள்விக்குப்பின் நான் சுகமாகவேயில்லை…
நீ பிடித்திருக்கிறதென்று
சொன்ன பிற்பாடுதான் நான்
மீண்டும் சுகமானேன்…! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
‘Sri Ramana Charitam’ – Audiobook launch on Feb 19
It gives me immense happiness to invite you to the launch of the audiobook version of ‘Sri Ramana Charitam’ authored by me. The function will be held at 6.30 PM on February 19, 2015 in TAG Dakshinamurthy Auditorium, PS Highschool, RK Mutt Road, Mylapore.
I have attached the invitation. Kindly treat this as invitation in person and grace the occasion.
Thanks.
anbudan
Madhurabharati
-
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம்
நாகேஸ்வரி அண்ணாமலை
இதுவரை உலகம் கண்டிராத ஒரு வெற்றி ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. எந்த நாட்டிலும் எந்தத் தேர்தலிலும் 96 சதவிகித இடங்களையும் 56 சதவிகித ஓட்டுக்களையும் பெற்று ஒரு கட்சி ஜெயித்திருப்பதாகச் சரித்திரம் இல்லை (தனிப்பட்ட ஒரு நபர் ஆட்சியைப் பிடித்துப் பெயருக்குத் தேர்தல்கள் நடத்தி 90 சதவிகிதத்திற்கு மேல் ஓட்டுக்கள் பெற்றதாகப் பறைசாற்றிக்கொள்ளும் சர்வாதிகார நாடுகளில் தவிர). ஆம் ஆத்மிக்குக் கிடைத்தது பெரிய வெற்றி; பி.ஜே.பி.க்குக் கிடைத்தது பெரிய தோல்வி.
இந்த வெற்றிக்குப் பல அரசியல் விமரிசகர்கள் பலவித விளக்கங்களைக் கூறுகிறார்கள். ‘மோதியின் மேஜிக்’ முடிந்துவிட்டது என்று சிலர் கூறுகிறார்கள். அவர் கட்சியில் யாரையும் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக முடிவுகள் எடுத்தது பலருக்குப் பிடிக்கவில்லை. பல நாட்டுத் தலைவர்களையும் அழைத்துத் தன்னால் அவர்கள் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்று மார்தட்டிக்கொண்டது பாமர மக்களுக்கு எந்தவிதப் பயனும் விளைவிக்கப் போவதில்லை என்பதை ஏழை மக்கள் உணர்ந்துகொண்டார்கள் என்கிறார்கள். பி.ஜே.பி.யோடு சம்பந்தப்பட்ட பல இந்துத்துவவாதக் கட்சிகள் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை இந்து மதத்திற்கு ஏமாற்றி இழுப்பது, இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான திருமணங்களை ‘லவ் ஜிஹாட்’ என்ற பெயரில் எப்படியாவது தடுத்து நிறுத்துவது, மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்த இந்தியாவை இந்து நாடாக ஆக்க முயற்சிப்பது போன்ற பல அடாவடிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் மோதி இருந்து வருகிறார். இந்தப் போக்கு ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை போல் தெரிகிறது.
மற்றக் கட்சிகளின் தயவில்லாமல் தாங்களாகவே அரசு அமைக்கலாம் என்று இறுமாந்திருக்கும் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகவும் ஆம் ஆத்மி கட்சிக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் போலும். மோதி பதவிக்கு வந்தவுடனேயே மோதிக்குச் சார்பாக பல பத்திரிக்கைகள் திரும்ப ஆரம்பித்தன. மோதியின் புகழ்பாடுவதே இவர்களுடைய வேலையாகப் போயிற்று. இப்போது மோதியின் செல்வாக்கு ஆட்டம் கண்டிருப்பதால் இப்பத்திரிக்கைகளும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு.
பி.ஜே.பி.க்கு மூன்றே இடங்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு டில்லி முதலமைச்சர் என்று அந்தக் கட்சி முன் நிறுத்திய கிரண் பேடியே தோற்றிருக்கிறார். தன் தோல்விக்குக் காரணம் பி.ஜே.பி.யின் கொள்கைகளோ அந்தக் கட்சியின் அடாவடிச் செயல்களோ காரணம் என்று கருதாத கிரண் பேடி தான் தோற்றதற்கு பி.ஜே.பி. தலைமையிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இவர் தோற்றதற்கு இவர் மட்டும்தான் காரணம் என்று கருதுகிறாரா இந்த முன்னாள் போலீஸ் அதிகாரி. இது கூடத் தெரியாதா இவருக்கு? தான் இன்னும் என்ன செய்திருந்தால் ஜெயித்திருக்க முடியும் என்று நினைக்கிறார்?
இதுவரை எந்தக் கட்சிக்கும் கிடைத்திராத வெற்றியைக் கண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலுக்கு இனிமேல்தான் நிறையப் பொறுப்புகள் இருக்கின்றன. இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்று வாக்குறுதிகள் கொடுப்பது வேறு, அவற்றை நிறைவேற்றிக் காட்டுவது வேறு. உங்களுக்கு ஓட்டளித்த டில்லி மக்கள் அனைவரும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.
எதிலாவது உங்களை மாட்டிவைத்து நீங்கள் பதவியைத் துறப்பதற்கு எல்லா உபாயங்களையும் மத்திய அரசு கையாளலாம். அதற்கு ஒரு போதும் இடம் கொடுக்காதீர்கள். முன்னால் ஆட்சி அமைத்தபோது நடந்துகொண்டதுபோல் சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்யாதீர்கள். டில்லி மக்கள் பூராவுமே உங்கள் பக்கம். அரசு என்ன முடிவெடுத்தாலும் அடிமட்ட மக்களை அதன் பலன்கள் போய்ச் சேருகின்றனவா என்று சிந்தித்துச் செய்யுங்கள். பாரபட்சமின்றி எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உங்கள் கொள்கையை நிறைவேற்றுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முதலில் செய்யுங்கள். மக்களுக்குக் கல்வி புகட்டுவதுதான் உங்கள் முதல் கடமை. மக்கள் எல்லோருக்கும் கல்வி கிடைத்து அவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் அதன் பிறகு அந்த சமூகமே மேம்பாடடையும்.
அடுத்தது மக்களுடைய ஆரோக்கியம் முக்கியமானது. பாமர மக்களுக்கும் அவர்களுக்குத் தேவைப்படும்போது வைத்திய உதவி கிடைக்கச் செய்வது. உங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் இருபது அம்சங்களைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். அதில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அதற்கு முன்னுரிமை கொடுங்கள். எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிதானமாக ஒவ்வொன்றாக நிறைவேற்றுங்கள். அரசியலில் நீங்கள் நுழைந்ததற்கே முதல் காரணமான இந்திய அரசியலில் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலை முழுவதுமாகக் களைந்து இந்தியாவிற்கே உதாரணமாக விளங்குங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வெற்றி உங்கள் கண்களை மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கட்சி இந்திய அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியாக அமைந்தால் இந்தியாவின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை பிறக்கும்.
-
ஒரு பனித்துளி ஈரம்
– எம்.ரிஷான் ஷெரீப்
இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து
தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி
ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவெனவெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு
குளிர்காலக் கம்பளிகளைப்
பின்னுகிறது காலம்
அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது
நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட
சிறு ஒற்றைக் கொடிவைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென
விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள்
எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்நிலம் பிளந்து வந்த கொழுந்துக்குப் புதிது
அலையெனச் சுழலும் காற்றும்
நிமிரும்போதெல்லாம்
உற்றுப் பார்த்தவாறிருக்கும் பரந்த ஆகாயமும்
விசாலமாய் நகரும் பூச்சிகளும் இன்னபிற ஜந்துக்களும்
இன்னும்
மிதிக்கக் காத்திருக்கும் மனிதர்களும்வரும் காலங்களில்
அதன் கிளைகளில் வந்தமரும் அணில்கள்
இன்னும் பிறக்கவேயில்லை
இலைகளின் மறைவுகளுக்குள் தம்
கூடுகளைச் செதுக்கக் கூடிய பட்சிகள்
கண்டங்கள் தாண்டி இன்னும் புலம்பெயரவேயில்லை
வேர்களை வளப்படுத்தும் புழுக்களும்
இன்னும் நகரவேயில்லை எனினும்
எப்போதோ மனிதன் உறிஞ்சியகற்றி விட்டான்
தாவரங்களுக்கான ஈரத்தை
மண்ணிலிருந்தும் மனதிலிருந்தும்பனிக் கூட்டம் விடியலைப்
பேரோசையுடன் பாடும் சொப்பனங்களெல்லாம்
காடுகளால் நிரம்பி வழிகின்றனதீயிடம் யாசகனாக்கும்
குளிர் காலத்தின் நீள இரவுகளிலும்
வனங்களைத் தொழுத ஆதிவாசிகளைக்
கடவுளிடம் மீளக் கொடுத்துவிட்ட இக் காலத்தில்
துளிர்த்திடப் போதுமானதாக இருக்கலாம்
தளிரின் வேருக்கென
இப் பேரண்டம் தரும்
ஒரு பனித் துளி ஈரம்! -
என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 44
–சு. கோதண்டராமன்.
ரிஷிகள் வேண்டிய செல்வம்
(இதுவரை வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று சொற்களான, தேவ, யக்ஞ, ருதம் ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இனி வேதத்தின் வேறு சில குறிப்பிடத் தகுந்த விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம்.)
ரிக் வேதத்தின் முதல் மந்திரம் அக்னியை வேண்டுவது. அதில் அக்னி செல்வம் தருபவராகப் போற்றப்படுகிறார். இதைத் தொடர்ந்து பல இடங்களில் அக்னியைச் செல்வத்தின் தலைவராகவும் செல்வம் தருபவராகவும் கூறுகிறது வேதம்.
அக்னி மட்டுமல்ல, வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்கள், சூரியன், உஷை ஆகிய எந்தத் தெய்வத்தை வேண்டினாலும் அவர்களிடம் “எங்களுக்குச் செல்வம் கொடு” என்ற கோரிக்கை முன் வைக்கப் படுகிறது.
இவ்வாறு நூற்றுக்கணக்கான இடங்களில் இந்தப் பிரார்த்தனை திரும்பத் திரும்ப வருவதைப் பார்க்கும் போது ரிஷிகள் செல்வத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே என வியப்புத் தோன்றும். இது பற்றி ஆராய்வோம்.
செல்வம் என்பதற்கு அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் – வஸு, ரயி, ரேக்ண, தனம், ராதஸ் முதலியவையாம். இவை அனைத்தும் ஒரு பொருட்சொற்கள்.
செல்வம் என்றால் எத்தகைய செல்வம்? அவர்கள் பிரார்த்தனையில் எங்களுக்கு நீண்ட ஆயுள் கொடு, மக்கட்பேறு கொடு, உணவு கொடு என்பதோடு கூட செல்வமும் கொடு என்று வேண்டுவதால் செல்வம் என்பது மேலே கண்டவை அல்லாத வேறு ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என அறிகிறோம்.
அது பணமா? அக்காலத்தில் பண்டமாற்று முறையே வழக்கில் இருந்ததால் பொருளாதாரப் பரிவர்த்தனைச் சாதனமாக தங்கமோ வெள்ளியோ பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அறிகிறோம். அவர்கள் தங்கம் வெள்ளியை அறிந்திருந்தும் கூட எங்கும் தங்கம், வெள்ளி கொடு என்று வேண்டவில்லை.
தெய்வங்களைப் போற்றும்போது பொன் வண்ணமுடையவர் என்று போற்றுகின்றனரே அன்றி ஆடவரோ, பெண்டிரோ தங்க நகை அணிந்து மகிழ்ந்ததற்குச் சான்றான குறிப்புகளும் அங்கு இல்லை. தெய்வத்திடம் கேட்டுப் பெற்ற செல்வத்தை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்ற விவரங்களும் இல்லை.
எனவே அவர்கள் கோரிய செல்வம் என்பது வேறு ஏதோ ஒரு பொருளைக் குறிப்பதாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது. இன்னும் ஆராய்வோம்.
ரிஷிகள் வேண்டிய மற்ற பொருள்களான உணவு, நீண்ட ஆயுள், மக்கட் பேறு இவை உலக வாழ்வின் பௌதிகத் தேவைகளை நிறைவு செய்து சந்தோஷம் தருவன. செல்வம் என்பது ஆனந்தம் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் ஆனந்தம் சந்தோஷம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே தமிழில் மகிழ்ச்சி என்று மொழிபெயர்க்கப்பட்டாலும் இவற்றினிடையே நுட்பமான வேறுபாடு உண்டு. சந்தோஷம் என்பது திருப்தியடை என்ற பொருளுள்ள ‘துஷ்’ என்ற வேரிலிருந்து பிறந்தது. ஆனந்தம் என்பது மகிழ்ச்சி அடை எனப் பொருளுடைய ‘நந்த்’ என்ற தாதுவிலிருந்து தோன்றியது. நமக்கு ஒரு தேவை இருந்து அது நிறைவேறுவதால் ஏற்படும் திருப்திக்குப் பெயர் சந்தோஷம். தேவைகள் அற்ற நிலையில் உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்குத்தான் ஆனந்தம் என்பது பெயர்.
உதாரணமாக, பசியினால் வருந்தும் ஒருவனுக்கு உணவு கிடைத்தால் அவனது தேவை நிறைவடைகிறது. அந்த திருப்தி உணர்வு சந்தோஷமாகும். பசி முதலான உடல் தேவைகள் தீர்ந்த குழந்தை தனக்குத் தானே பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் அடையும் உணர்வு ஆனந்தம். அவ்வாறே மனநலம் சரியில்லாத ஒருவன் எந்தக் காரணமுமின்றி சிரித்துக் கொள்கிறான். அதுவும் ஆனந்தமே. (இந்த இரண்டாவது உதாரணம் வியப்பூட்டலாம். ஆனால் ஆதி சங்கரர் பஜகோவிந்தம் என்னும் நூலில் பிரம்மத்தில் ஈடுபட்ட ஞானியின் சித்தம் அளவற்ற ஆனந்தம் அடைவதாகவும் குழந்தைகள் போலவும் பித்தர்கள் போலவும் ரமிப்பதாகவும் கூறுகிறார்.)
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் நந்ததி நந்ததி நந்தத்யேவ. 19
யோகீ யோக நியோஜித சித்தோ ரமதே பாலோன்மத்தமதேவ 22
கவிஞர்கள் இந்த ஆனந்தத்தைத்தான் பெரிதாக மதித்தார்கள். அன்றாட வயிற்றுப் பாட்டுக்குக் காணி நிலத்துக்கு மேல் ஆசைப்படாத பாரதி, அங்கே கத்தும் குயிலோசை சற்றே வந்து காதிற் பட வேண்டும் என்கிறார். கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலாவை உணர்ந்து இன்பம் காண்கிறார். பார்க்கும் மரங்களில், காக்கைச் சிறகினில் எல்லா இடங்களிலும் இறைவனைக் கண்டு ஆனந்தம் அடைகிறார்.
ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் தன் கவிதையில் குறிப்பிடுகிறார்.
I gazed—and gazed—but little thought
What wealth the show to me had brought:
நான் அந்த டாபோடில் மலர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது எனக்கு எத்தகைய செல்வம் தந்தது என்பதை அப்பொழுது உணரவில்லை. பின்னர் வீட்டில் தனிமையில் நாற்காலியில் சாய்ந்து அமைதியான மன நிலையில் இருந்தபோது அது என் உள்ளத்தை ஆனந்தத்தால் நிறைத்து மலர்களுடன் நடனமாடச் செய்தது என்று கூறுகிறார்.
நம்மைச் சுற்றிலும், இறைவனால் படைக்கப்பட்ட அழகான இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. இதைப் பார்த்து ஆனந்திக்கும் மனம் வேண்டும். ரசிக்கும் மனம் இல்லாவிட்டால் எந்தப் பொருளும் ஆனந்தம் தராது. அது மட்டும் இருந்துவிட்டால் எந்தப் பொருளிலும் அழகைப் பார்க்க முடியும். அத்தகைய மனம் தம்மிடம் என்றும் மாறுதலின்றி இருக்க வேண்டும் என்று ரிஷிகள் விரும்புகிறார்கள். அதைத்தான் அவர்கள் செல்வம் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் என்றும் குறையாத இச்செல்வம் பிறரால் களவாடப்பட முடியாதது. இது ஒன்று இருந்து விட்டால் உலகத் தேவைகளில் ஒரு சில குறைந்திருந்தாலும் குறையாகத் தோன்றாது.
இதோ இந்தக் கவிதையைப் பாருங்கள். மதுவாதா ருதாயதே என்று தொடங்கும் இது ரிக் முதல் மண்டலம் 90 வது சூக்தத்தில் உள்ளது.
ருதத்தைப் பின்பற்றுபவனுக்குக் காற்று இனியது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன.
செடிகொடிகள் எங்களுக்கு இனியவையாக இருக்கட்டும்.
இரவும் பகலும் எங்களுக்கு இனியன. மண் இனியது. விண் இனியது.
சூரியன் இனியவன், பசுக்கள் இனியன.
இந்தக் கருத்தைத்தான் பாரதி தன் வசன கவிதையில் இப்படிப் பாடுகிறார்.
இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் இனிமையுடைத்து.
காற்றும் இனிது. தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது.
ஞாயிறு நன்று, திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது.
கடல் இனிது, மலை இனிது, காடு இனிது.
ஆறுகள் இனியன.
சூரியன் தன் தெய்வீக வசுக்களுடன் தோன்றுகிறான் என்னும் போது அது இயற்கை எழிலைத்தான் குறிக்கிறது என அறிகிறோம். வைகறைப் பொழுதை வியந்து போற்றும் ரிக் 1-113 இன் மொழிபெயர்ப்பை முன்பு பார்த்தோம். அதில் ஒரு பகுதியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.
உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை
இனிய சொற்களின் எழில்மிகு தலைவி
பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,
கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.
ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்
எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்
எண்ணிலா விடியல் கண்டு களித்து
எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.
உஷையின் ஒளி கண்டு உள்ளம் மகிழ்ந்திட
இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.
புதிய மக்கள் நாளை வருவர்
விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.
பாரதியும் வேர்ட்ஸ்வொர்த்தும் மற்றும் உயர்ந்த கவிஞர்கள் பிறரும் எதைச் செல்வம் என்று கருதினரோ, அந்த இயற்கையின் எழில் வளத்தை ரசித்து, அதனால் அடையும் ஆனந்தத்தையே செல்வம் என்று ரிஷிகள் கருதினர் என்று அறிகிறோம். மழையைக் குறித்தும் புயற் காற்றைக் குறித்தும் பிற இயற்கைத் தோற்றங்களைக் குறித்தும் அவர்கள் பாடிய கணக்கற்ற பாடல்கள் இதை நமக்கு உணர்த்துகின்றன.
இந்த ரயி (செல்வம்)ஒருவருக்குக் கிடைக்கப் பெற்றால் அவருக்கு வாழ்க்கையாகிய போர்க் களத்தில் தோல்வி என்பதே இல்லை. அவருக்குப் பகைவர்கள் இல்லை.
ஜயத்திற்கு மூலமாயிருப்பதும், பகைவர்களைத் தாழ்த்துவதுமான ரயியை எங்களுக்கு அளிக்கவும். குதிரை மீது செய்யப்படும் போரிலோ அல்லது கைகலந்து செய்யும் போரிலோ அந்தச் செல்வத்தால் நாங்கள் பகைவர்களை வெல்வோமாக. 1.8.1,2
இவ்வுலக வாழ்க்கை மட்டுமல்ல. வாழ்க்கையின் இறுதி லட்சியமாகிய ஒளியை அடையவும் இந்த ரயி உதவும் என்பது இதை ஒளியை அறிய உதவும் செல்வம் (ஸ்வர்விதம் ரயிம்) 8.13.5 என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது.
Picture Source: http://viralscape.com/city-nature-cinemagraphs/
-
முதிர் குமரன்!
-றியாஸ் முஹமட், கத்தார்
வயதுக்கு வந்து பல வருடமாச்சு
மீசையோடு வெள்ளை முடியும்
எட்டிப் பார்த்தாச்சு !வெட்கமாக இருக்கு வெளியுலகத்துக்கு
தெரிந்து போச்சு நானும் ஒரு
முதுமைக் குமரன்
என்று…!கூடப் படித்தவர்கள்
எல்லாம்
குடித்தனம் போயாச்சு!குழந்தை, குட்டிகளோடு
கூடி வருகையில்,
மனசு துடிக்கிறது,
எரி மலையாக வெடிக்கிறது…!என் பள்ளிப் பருவத்திலேயே
தாய்க்கு வந்தது வாதம்,
கை, கால்களை
முடக்கி வாழ்க்கையைச்
சிதைத்து விட்டது!மூத்த தங்கை வயதுக்கு வந்து,
இருபது வருடங்களாச்சு !கல்யாணச் சந்தையில்
காலூன்ற நிற்கும்,
இளைய தங்கை வேறு…!தங்கைகளை நினைத்து,
உறங்கும் அம்மாவின்
அழுகையும் அதிகமாச்சு !அவளின் மூச்சும்
வரவரக் குறைந்து போயாச்சு !எங்கள் ஏழ்மை வாழ்வு
கண்டு குடும்பத்தாரும்,
அயலவரும்
எட்டிப் போயாச்சு !எங்க வீட்டு எச்சி தின்னு
வளர்ந்த செல்லப்
பூனையும் வீட்டுச்சுவர்
ஏறிப் போயாச்சு !குடும்பச் சுமையைக் குறைக்க
முதுகுச் சுமை ஏற்றியாச்சு !வாழ்ந்தும் வாழாமலேயே,
உடம்பு தளர்ந்து,
இளமையும் போயாச்சு !இனிமேல் என்ன இருக்கு சுமக்க…?
என் தங்கைகளைக்
கரை சேர்க்கும் வரை….
கனவுகளைக் கண்களில்
சுமந்து கொண்டு
வாழும்
நானும் ஒரு
முதிர் குமரன்தான்! -
மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
தஞ்சை வெ.கோபாலன்
எம்.ஜி.ஆர் எனும் இந்த மூன்றெழுத்து மந்திரச்சொல் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு எழுச்சியை உண்டாக்கியது. இதன் தாக்கம் பின்னாளில் இவர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றபோது அந்த எழுச்சி பல மடங்கு பெருகி இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. திரையுலக நாயகன் எனும் முறையிலாகட்டும், அரசியல் தலைவர் என்ற வகையிலாகட்டும் இவரது தோற்றத்தினாலும், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் போல தன் இரு விரலை விரித்து வெற்றிக் குறி காட்டி, புன்னகை மன்னனாய் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். திரையில் கதாநாயகனாக வந்து தீனர்களைக் காக்கும் அனாதரட்சகனாக நடித்ததை உண்மை வாழ்க்கையிலும் மக்கள் அவரை அதுபோலவே உணரத் தலைப்பட்டுவிட்டார்கள். திரையில் நல்லவனாக, ஏழைகளுக்கு இரங்கி உதவி புரிபவனாக, பெண்களின் மானம் காக்கும் மாவீரனாக, சகோதர பாசம் நிறைந்தவராக, தந்தை தாய் நலன் பேணும் நல்ல மகனாக இவர் திரையில் தோன்றியவாறே நிஜ வாழ்விலும் இருப்பவர் எனும் எண்ணம் நிரந்தரமாக மக்கள் மனங்களில் தங்கிவிட்டது.
1954 இவர் மலைக்கள்ளன் எனும் திரைப்படத்தில் நடிக்க கோவைக்குச் சென்று நடித்துவிட்டு ரயிலில் சென்னை திரும்புவதற்காக கொச்சின் விரைவு ரயிலில் கோவை ரயில் நிலையத்தில் முதல் வகுப்பில் ஏறி அமர்கிறார். அவருடன் ஸ்ரீராம் எனும் நடிகர், ஜி.வரலட்சுமி எனும் நடிகை ஆகியோரும் இருக்கின்றனர். இவருக்கு அடுத்த பெட்டியில் எர்ணாகுளத்திலிருந்து பயணம் செய்து வந்து கொண்டிருந்த பள்ளி மாணவனாக இருந்த நான் ஜன்னல் புறம் சென்று இவர் முதுகைத் தொட்டு அழைத்து ‘என்ன படத்தில் நடிக்கிறீர்கள்?” என்றேன். இன்றைய நிலைமையாக இருந்தால் என்னை அங்கேயே ஒருவழி செய்திருப்பார்கள். அவர் அமைதியாகத் திரும்பி “மலைக்கள்ளன்” என்றார். நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை எழுதிய அந்த நாவலை நான் படித்திருந்ததால் இன்ன வேஷமா என்று வினவ, அவர் ஆம் என்று தலையாட்டினார். அதற்குள் ஸ்ரீராம் கீழே இறங்கி ஏதோ வாங்க வெளியே வந்தார். அவருடன் ஜி.வரலட்சுமியும் இறங்கினார். ரசிகர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். நான் எம்.ஜி.ஆர். இருந்த ஜன்னல் அருகிலேயே நின்று பேச்சு கொடுத்தேன். திரும்பிப் பார்த்த அவர் புன்னகை செய்து, போதும் என்பதை அறிவுறுத்தினார். அவர் பார்வையில் கோபமோ, எரிச்சலோ இல்லை என்பது புரிந்தது. அவர் நடிப்பில் எனக்கு அத்தனை ஈடுபாடு இல்லையாயினும், அவருடைய இந்த அன்பான நடவடிக்கை என்னை அவர்பால் ஈர்த்தது. இதுவே முதன் முதல் அவரிடம் என் மரியாதை உருவானது.1956ஆம் ஆண்டு. திருச்சியில் தி.மு.க. இரண்டாவது மாநில மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் தி.மு.க. தேர்தலில் நிற்க வேண்டுமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அந்த மாநாட்டில் மிகப் பெரிய அறிவுபூர்வமான கருத்தரங்கம்; அதில் தி.மு.க.வின் பெருந்தலைவர்கள் ஒவ்வொரு தலைப்பில் பேசினார்கள். ஈ.வி.கே.சம்பத் திராவிட நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்று பேசினார். அதைப்போல், திராவிட நாட்டின் பல்வேறு கொள்கைகள் குறித்துப் பலரும் பேசினார்கள். மாநாட்டுப் பந்தல் நிறைந்த கூட்டம். தலைவர்கள் பேச்சுக்கு ஒன்றும் பெருத்த ஆரவாரமோ, வரவேற்போ இருந்ததாக உணரவில்லை. ஒப்புக்கு திராவிடநாடு எனும் கற்பனை நாட்டின் நிறைவேற்ற முடியாத பல கொள்கை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்ததைத் தவிர அதில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை. அப்போது எம்.ஜி.ஆர். அந்த பந்தலுள் நுழைந்தார். கொட்டகை நிறைந்த மக்கட்கூட்டம் எழுந்து நின்று உற்சாக கைதட்டலுடனும், ‘விசில்’ ஒலியுடன் வரவேற்பு கொடுத்தது. காலம்சென்ற என்.ஜி.ஓ. சங்கத் தலைவர் சிவ.இளங்கோ மற்றும் அவர் நண்பர்களுடன் மாநாட்டில் உட்கார்ந்திருந்த எனக்கு இது ஒரு புதுமை. பிரபலமான தலைவர்களுக்கு இந்த அளவு வரவேற்பு இல்லாத நிலையில், போயும் போயும் திரைப்பட புகழ் மட்டுமா இவருக்கு இப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுத்திருக்க முடியும்? இல்லை இதன் பின்னால் ஏதோவொரு கவர்ச்சி, ஏதோவொரு நம்பிக்கை மக்களுக்கு இவர்மீது வந்திருக்க வேண்டும். அது என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு ஏற்பட்டது.
சென்னையில் ஒரு குப்பத்துப் பகுதி. இவரது பட ஷூட்டிங் அந்த மீனவர் குப்பத்துக்கு அருகில் நடந்தது. அங்கிருந்த ஏழை எளிய குடிசை வாசிகள் இவர் ஓய்வில் இருக்கும் சமயம் அருகில் சென்று ஏதோ பேச்சுக் கொடுக்க, அவரும் அன்போடு அவர்களுடன் கலந்துரையாடிய காட்சி, இது என்ன இவர் ஒரு வித்தியாசமான மனிதராகத் தென்படுகிறாரே என்று எண்ணத் தோன்றியது.
ஒரு சமயம் பத்திரிகையொன்றில் இவரது புகைப்படம் வெளியானது. வயது முதிர்ந்த கிழவி, மகா ஏழையாக இருக்க வேண்டும், பொக்கை வாய், இவர் அருகில் சென்று இவர் முகத்தருகே திருஷ்டி கழித்து கைகளைத் தன் முந்தலையில் வைத்து சொடுக்கி திருஷ்டி கழித்தாள். அடுத்த கணம் இவர் தன் ஜிப்பா பைக்குள் கைவிட்டு கையில் வந்த கரன்சி தாள்களை இந்த அம்மையின் கையில் கொடுத்து அவரைத் தழுவிக் கொண்டார். இது நடிப்பா, இந்த மனிதரின் உள்ளார்ந்த அன்பா? பத்திரிகைகளும், இவரைப் பிடிக்காதவர்களும் இதை நடிப்பு என்றனர். பெரும்பாலோர், இதுதான் இந்த மனிதரின் உண்மையான முகம் என்றனர். நான் பின்னதை ஏற்றுக் கொண்டேன்.
முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை அவர்கள் அகாலமாக மரணமடைந்துவிட்டார். அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது. அண்ணா இருக்கும்போதே நாவலர் நெடுஞ்செழியனை அழைத்து, மாநாட்டுக்கு “தம்பீ வா! தலைமையேற்க வா!” என்று அழைத்த வாசகம் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. ஆகையால் அவர்தான் அடுத்த தலைவர் என்று நாடே எதிர்பார்த்திருந்த நிலையில், தலைமைக்குப் போட்டி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். விரும்பியவரே தலைவராக முடிந்தது என்றால், இந்த தனி மனிதனுக்கு அந்தக் கட்சியிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி ஊடுறுவியிருந்த செல்வாக்கு நாட்டுக்கு நன்கு புரிந்தது.
ஏதோவொரு சினிமா படப்பிடிப்புக்காக இவர் கோவா கடற்கரையில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சார்ந்திருந்த கட்சியின் போராட்டமொன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மக்கள் மனங்களில் எழுந்த சந்தேகம், இவர், தான் சார்ந்த நடிப்புத் தொழிலுக்கு முதலுரிமை தருவாரா, அரசியலுக்கா என்று பார்த்துக் கொண்டிருந்தனர். கட்சிக்காரர்கள் கட்சிப்பணிதான் என்பர்; கலா ரசிகர்களோ அவர் சார்ந்த நடிப்புத் தொழில்தான் என்பர். இவர் இரண்டாவது நிலைப்பாட்டை எடுத்தார், அதனால் வீண் கசப்புக்களை எதிர்கொண்டார். ஆனாலும் அவர் தொழில் மீது வைத்திருந்த பற்று கட்சிப் பற்றைக் காட்டிலும் அதிகம் என்பதை வெளிப்படுத்தினார். அந்த வகையில் தன்னுடைய நம்பகத் தன்மையை இவர் மக்களுக்குச் சொல்லாமல் புரியவைத்தார் என்பதே என் எண்ணம்.
ஆதியில் இவர் ஒரு காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜ் மீது மாறாத மரியாதை வைத்திருந்தார். அந்த வகையில் இவர் கதரே அணியவும் தொடங்கினார். 1953இல் இவரது அரசியல் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் வந்தது. காங்கிரசில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தி.மு.க.வை நாடி வந்தார். அதற்குக் காரணம் சி.என்.அண்ணாதுரை எனும் மாமனிதர்தான். அவரே சொன்னார் எம்.ஜி.ஆரிடம். இவர் முகத்தைக் காட்டினால் போதும் லட்சக் கணக்கில் கட்சிக்கு வாக்குகள் வந்து குவியும் என்று. ஆம்! அதுதான் சரியான கணிப்பு, அதை சிலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதால் வந்தது கட்சியில் பிணக்கு.
1967இல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். கட்சியின் பொருளாளர் ஆனார். 1967இல் சொந்த முறை விரோதம் காரணமாக இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி உயிர் பிழைத்தார். இவர் கழுத்தில் கட்டோடு படுத்திருக்கும் படம் சுவரொட்டிகளில் கண்டதுமே அவர் சாந்திருந்த கட்சிக்கு வாக்குகள் பேய்மழைபோல கொட்டித் தீர்த்து, அவர்கள் மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள் என்பது நாடு கண்ட வரலாற்று உண்மை. இப்படித் தனிமனிதனின் துன்பம் ஒரு கட்சியின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது என்றால் அவர் மக்கள் மனங்களில் எத்தனை ஆழமாகப் பதிந்திருக்கிறார் என்பதுதானே?
ஒரு முறை தஞ்சையில் காவல்துறையில் விருது பெற்ற அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கும் அணிவகுப்பு மாலை 4 மணிக்கென்று ஏற்பாடாகியிருந்தது. நான் 3 மணி சுமாருக்கு அந்த போலீஸ் திடல் இருக்கும் கலெக்டர் அலுவலக சாலை வழியாக என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு வேறோரு சுற்றுப் பாதை வழியாகச் செல்லப் பணிக்கப்பட்டேன். சாலை வெறிச்சோடிக் கிடந்தும் அந்த திசையில் இருந்த என் அலுவலகம் செல்ல முடியாமல் சுற்றி வரும்படி நேர்ந்தது வருத்தமளித்தது. ஆனால் எம்.ஜி.ஆர். ஒரு முறை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் திறந்த ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். எங்கள் குடியிருப்புப் பகுதி பாலத்தடியில் நாங்கள் பலர் பேசிக்கொண்டு நின்றிருந்ததைப் பார்த்து, அவர் ஜீப் நின்றது. புன்னகையோடு எங்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு வணங்கியதைக் கண்டு எங்களுக்கு திகைப்பு. நட்புரிமையோடு அவர் நடந்து கொண்டது ஒரு அரசியல் வாதிக்கே உரிய சாமர்த்தியமாகக் கூட இருக்கலாம். அதை உண்மை நட்புபோல நடந்துகொண்ட அந்த அருமையான காட்சி எங்கள் மனங்களில் அவர் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.
அவர் காலமானார் எனும் செய்தி கேட்டு எங்களுக்கே ஏற்பட்ட சொந்த இழப்பைப் போல உணர்ந்தோம். இதற்கு முன்பு மகாத்மா காந்தி சுடப்பட்ட போதும், ஜவஹர்லால் நேரு காலமானபோதும், பெருந்தலைவர் இறந்து போனார் எனும் செய்தியைக் கேட்டபோதும் ஏற்பட்ட அதே உணர்வு எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து மனிதர் மாண்டார் எனும்போதும் உள்ளத்தை வருத்தியது, துக்கத்தை ஏற்படுத்தியது; அப்போதுதான் தெரிந்தது அவர் எங்கள் மனங்களில் எத்தனை உறுதியாக அமர்ந்திருக்கிறார் என்று. காலங்கள் மாறலாம்; கோலங்கள் மாறலாம், ஆனால் மனங்களில் படிந்த இதுபோன்ற உணர்வுகள் மட்டும் என்றென்றும் மாறாதிருக்கும்.
முந்தைய காலங்களில் ஒரு தனி மனிதரின் புகழையும், பெருமைகளையும் உலகுக்கு அறிவிக்க அவரது மெய்க்கீர்த்தியை எழுதி கருங்கல்லில் வடித்து வைப்பார்கள். அப்படிப்பட்ட மெய்க்கீர்த்தியாக எம்.ஜி.ஆர். என்ற இந்த தனிமனிதரின் புகழ், பெருமை அனைத்தையும் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக ஏழை, எளியவர்கள், பெண்மணிகள், இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோர் தத்தமது நெஞ்சங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். அது சென்ற தலைமுறையோடு முடிந்துபோன செய்தியல்ல, இந்த தலைமுறைக்கும் தொடர்ந்து அதே உணர்வை தந்து கொண்டிருக்கிறது என்பதை அவரது பழைய படங்கள் இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோத பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து தெரியவருகிறது. இது ஏதோ மார்லன் பிராண்டோவையோ, கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த படங்களையோ பார்க்கும் உணர்வில் அல்ல, எம்.ஜி.ஆர். எனும் நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மாமனிதனின் புகழுக்கு மரியாதை செய்கிறோம் எனும் உணர்வில்தான் பார்க்கிறார்கள். காலத்தால் அழிக்கமுடியாத இடத்தை அந்த மனிதர் பெற்றிருந்தார் என்பதுதான் முக்காலும் உண்மை.
-
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(139)
—சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன்.ஒரு மாத கால இடைவெளியின் பின்னால் இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன். இந்த ஒரு மாத காலமும் என்ன செய்து கொண்டிருந்தேன் ?
ஓடி ஓடி இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தப் புலம்பெயர் வாழ்வில் சில நேரங்களில் காட்சி மாற்றம் தேவைப்படுகிறது.
தேவைப்படும் அனைத்தையும் இலகுவாக அதிக சிரமமின்றி (பெரும்பான்மையாக) பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலையிலிருந்து சற்றே மாறுபட்டு நம்பிக்கையை மூலாதாரமாக வைத்து அன்றைய வாழ்விற்கான தேவைகளின் தேடலில் ஈடுபடுவோரின் மத்தியில் இருக்கும் போதுதான் வாழ்வின் யதார்த்தம் புரிகிறது.
ஏறத்தாழ நான்குவார விடுமுறையில் தமிழின் பிறப்பிடமான தமிழகத்திற்கு எனது வருடாந்தர விஜயத்தை மேற்கொண்டிருந்தேன்.
சென்னைப் புத்தகத் திருவிழா ! அப்பப்பா… இத்தனை பெரிய அலைமோதும் வாசகர் கூட்டத்தைக் கண்டதும்தான் என்னதான் இணையத்தின் தாக்கம் இருந்தாலும் நூல்களை கையில் வைத்துப் படிக்கும் எமது வாசகர்களின் ரசனை குறையவில்லை என்பது புரிந்தது.
தமிழின் தலைநகரமல்லவா ? அங்கே தமிழை ரசித்துப் படிக்கும் உள்ளங்களுக்கு பஞ்சம் இருக்குமா, என்ன ?
ஜனவரி 18ம் நாள் சென்னைப்புத்தக விழா வெளியீட்டரங்கிலே எனது நூல்களின் பதிப்பு நிறுவனமும் எனது நண்பர்களான ரவி, லேனா தமிழ்வாணன் அவர்களின் நிறுவனமுமான மணிமேகலைப் பிரசுரத்தாரின் வெளியீட்டு விழா.வழமையாக வருடம் ஒரு நூல் வெளியிடும் எனக்கு இவ்வருடம் சிறிது ஓய்வு. கடந்த ஜூலை மாதம் நடந்தேறிய எனது மகனின் திருமண வைபவத்தின் ஏற்பாடுகளில் மூழ்க வேண்டி இருந்ததால் இவ்வருடம் எனது நூல் தயாராகவில்லை.
இருப்பினும் எனது நண்பர்களின் அன்பு அழைப்பின் பெயரால் நானும் எனது மனைவியும் சிறப்பு விருந்தினராக அவ்விழாவில் கலந்து கொண்டோம்.
பெருந்திரளான வாசகர்கள். அரங்கத்தில் அமர்ந்திருந்த அறிஞர்கள், அவர்களோடு அரங்கத்தில் பெருமையுடன் வீற்றிருந்த 38 நூல்களின் 38 நூலாசிரியர்கள்.
ஆமாம் 38வது புத்தக விழாவில் மணிமேகலைப்பிரசுரம் 38 நூல்களை வெளியிட்டிருந்தது.
விழாத்தலைவராக பிரதம நீதியரசர் திரு. தமிழ்வாணன்; சிறப்பு விருந்தினர்களாக வேலூர் VIT நிறுவனத்தின் அதிபர் ஆ.ப.விஸ்வநாதன், முன்னனி திரை நட்சத்திரம் திருமதி. வடிவுக்கரசி எனப் பலர் மேடையிலே வீற்றிருந்தார்கள்.
நண்பர் திரு ரவி தமிழ்வாணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நண்பர் திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் வரவேற்புரையோடு சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரைகளோடு நூலாசிரியர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டார்கள்.
அருமையானதொரு நிகழ்வில் பங்கு பற்றிய அற்புத உணர்வோடு நானும் மனைவியும் வீடு திரும்பினோம்.
அது மட்டுமா ?
நண்பர்கள் காந்தி கண்ணதாசன், எஸ்.வி சேகர், பாண்டியராஜன், ஆன்மீக உணர்வாளர் பி.என்.பரசுராமன் எனப் பலரோடும் அன்பான சம்பாஷணைகள். அவ்வாற்றல் மிகுந்தவர்களின் அனுபவ ஆற்றில் ஒரு சிறிய நீச்சல்.செட்டிநாடு தந்த இளவல் அருமைக்குமரன், காமெடி கிங், அசத்தல் மன்னன் ஆன்மீகப் பேச்சாளர், நகைச்சுவைப்புயல் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் என்னினிய தம்பி தேவகோட்டை இராமநாதனின் இனிய சந்திப்பு.
அப்பப்பா ! தம்பியின் அன்பை என்ன கூறுவேன் ? காலை 4 மணிக்கு செட்டிநாட்டிலிருந்து புறப்பட்டு மதியம் மூன்று மணிக்கு என்னை அண்ணாநகரில் சந்தித்து விட்டு மீண்டும் மாலை இரயிலில் செட்டிநாட்டுக்குப் புறப்பட்ட என் தம்பியின் அன்பிற்கு ஈடாக எதைக் கொடுத்துவிட முடியும் ?
இத்தகைய அன்பானவர்களின் உறவைக் கொடுத்து எனது உள்ளத்தைச் செழிப்பாக வைத்திருக்கும் அந்த அண்ணாமலையானின் பாதங்களை வணங்குவதே நான் செய்யக்கூடியது.
தமிழகத்தில் நான் காணும் அன்றாட ஆட்டோ சாரதிகள், கார்ச் சாரதிகள் என்பவர்கள் அனைவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்பவை ஏராளம்.
நம்பிக்கையின் ஆதாரத்தில் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஆரம்பம் அலாதியானது. வாழ்க்கையின் மூலத்தின் யதார்த்தம் எமக்குப் புரியும் வகையில் பல நிகழ்வுகளின் பின்னனி எமக்குப் பாடமாக அமைகிறது.
மாடமாளிகைகள் ஒருபுறம், மண்குடிசைகள் மறுபுறம். விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் ஒருபுறம், செருப்பு அணிய வழியில்லாத ஏழை மக்கள் மறுபுறம் என சென்னையின் வாழ்க்கை போதிக்கும் பாடங்கள் ஆயிரமாயிரம்.
இந்த அரிய அனுபவச் செழிப்புகள் என் இதயத்தின் அனுபவப் புத்தகத்தில் ஆழமாய்ப் பதிந்திருக்கும்.
என் மனதின் இனிய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்திற்காக என் அன்பான நன்றிகள்.
மீன்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

















