-றியாஸ் முஹமட், கத்தார்

வயதுக்கு வந்து பல வருடமாச்சு
மீசையோடு வெள்ளை முடியும்
எட்டிப் பார்த்தாச்சு !

வெட்கமாக இருக்கு வெளியுலகத்துக்கு
தெரிந்து போச்சு நானும் ஒரு
முதுமைக் குமரன்
என்று…!

கூடப் படித்தவர்கள்
எல்லாம்
குடித்தனம் போயாச்சு!

குழந்தை, குட்டிகளோடு
கூடி வருகையில்,
மனசு துடிக்கிறது,
எரி மலையாக வெடிக்கிறது…!

என் பள்ளிப் பருவத்திலேயே
தாய்க்கு வந்தது வாதம்,
கை, கால்களை
முடக்கி வாழ்க்கையைச்
சிதைத்து விட்டது!

மூத்த தங்கை வயதுக்கு வந்து,
இருபது வருடங்களாச்சு !

கல்யாணச் சந்தையில்
காலூன்ற நிற்கும்,
இளைய தங்கை வேறு…!

தங்கைகளை நினைத்து,
உறங்கும் அம்மாவின்
அழுகையும் அதிகமாச்சு !

அவளின் மூச்சும்
வரவரக் குறைந்து போயாச்சு !

எங்கள் ஏழ்மை வாழ்வு
கண்டு குடும்பத்தாரும்,
அயலவரும்
எட்டிப் போயாச்சு !

எங்க வீட்டு எச்சி தின்னு
வளர்ந்த செல்லப்
பூனையும் வீட்டுச்சுவர்
ஏறிப் போயாச்சு !

குடும்பச் சுமையைக் குறைக்க
முதுகுச் சுமை ஏற்றியாச்சு !

வாழ்ந்தும் வாழாமலேயே,
உடம்பு தளர்ந்து,
இளமையும் போயாச்சு !

இனிமேல் என்ன இருக்கு சுமக்க…?

என் தங்கைகளைக்
கரை சேர்க்கும் வரை….
கனவுகளைக் கண்களில்
சுமந்து கொண்டு
வாழும்
நானும் ஒரு
முதிர் குமரன்தான்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “முதிர் குமரன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *