Blog

  • கனவிலே கண்ணன்

    இசைக்கவி ரமணன்

     

    கனவிலே கண்ணன் (பாடல்)

     images (1)

     

    கனவிலே கண்ணன்
    நினைவிலே கண்ணன்
    கனவும் நினைவும் கலந்து மயங்கும்
    கவிதை யாவும் கண்ணன்
    கனவும் நினைவும் கண்ணன்
    கவிதை யாவும் கண்ணன்

    தன்னை உருக்கிக் கரைந்து போகும்
    தவத்தின் கனலில் கண்ணன்
    தானில்லாத லஹரியில் வந்து
    தழுவும் உறவு கண்ணன்
    கவலை யாவும் கன்னியராகி
    அவர்கள் நடுவில் கண்ணன்
    திசைதொலைந்து திணறும்போது
    தெருவின் முனையில் கண்ணன்

    தவத்தின் கனலில் கண்ணன்
    தழுவும் உறவு கண்ணன்
    கவலை நடுவில் கண்ணன்
    தெருவின் முனையில் கண்ணன்

    சொல்ல மறந்த வார்த்தையுள்ளே
    சுழலும் ஜோதி கண்ணன்
    சொல்லி முடிந்து ஓய்ந்த பின்னும்
    தொடரும் மெளனம் கண்ணன்
    எல்லை யாவும் தீர்ந்த போது
    இன்னும் இன்னும் கண்ணன்
    எதிரில் தோன்றி மறைந்து சிரிக்கும்
    இதய வாசன் கண்ணன்

    சுழலும் ஜோதி கண்ணன்
    தொடரும் மெளனம் கண்ணன்
    இன்னும் இன்னும் கண்ணன்
    இதய வாசன் கண்ணன்

     

    Share
  • சில நாட்கள்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (25)

     

    சிலநாட்கள்

    {கேட்டு மகிழ}

    0_5cd93_2d2431e3_orig[1]

    சிலநாட்கள் இப்படித்தான்
    கையில் எடுத்ததெல்லாம் கீழே விழும்
    காகிதம் கூட கனக்கும்
    எத்தைச் சொன்னாலும் தப்பாய்ப் போகும்
    அவளுக்கே கூட
    என் சொற்கள் சலிக்கும்

    சில நாட்கள் அப்படித்தான்
    உறங்கவே முடியாத உற்சாகம்
    ஒவ்வொர் அடியிலும் வெற்றிக் கல்
    அவளாகவே வந்து
    கழுத்தைக் கட்டிக்கொள்வாள்

    நாட்களே ஏனிப்படி இருக்கிறீர்கள்?
    ஏன் நடிப்பு? ஏதுக்கு நொடிப்பு?

    தேதியைக் கிழித்தான் சிறுவன்
    மீதி,
    நாட்காட்டியில்
    மிஞ்சிக் கெஞ்சிக் கொண்டிருந்தது
    செய்த கப்பலைச் செலுத்த வேண்டி
    மணலில் சரிந்து நதியில் இறங்கினான்

    வளர்ந்தும் குறுகியும் தளர்ந்தும்
    கரைதிமிறும் வெள்ளமாகவும்,
    அவ்வப்போது
    கரையோடு ஒதுங்கி ஆதங்கம் பேசியும்
    வறண்டும் கூட
    வளைந்து வளைந்து தொடரத்தான் செய்கிறது நதி.

    ஆற்றுக்குக் கடலும் முடிவில்லை என்றால்
    அது நடுவே நின்றாலென்ன?
    அடித்துக்கொண்டு சென்றாலென்ன?
    நதிபோலத்தானே நமது நாட்களும்?
    நகர்த்த முடியாத நிறுத்த இயலாத
    நிரந்தரத் தொடர்ச்சிதானே?

    ஒருநாள்
    கெண்டைகள் விழிகண்டு துள்ள, கூந்தலில்
    மண்டும் வண்டுகள் கண்ணில் மயங்கவும்
    மின்னற் கைகளால் விலக்க, நீரில்
    கண்ட முகத்தைக் கண்டு நாணிக்
    கல்லெறிந்து முகம் தேடியபடி
    ஆற்றங் கரையில் ஆறே உயிர்த்ததுபோல்
    தன்னைப் புறந்தள்ளிப் பாயும் கவிதையில்
    தானே மயங்கிக் கிடக்கும் கவிஞன்போல்

    அந்த மாலைப் பொழுதுகளில்
    அவள் தென்படுவாள்
    அடுத்தநாள் மாலை
    அந்த மாலையாய் இருக்காது
    அதற்கு அடுத்த நாள்
    மாலையே இருக்காது
    ஆனாலும் மாலை மீண்டும் வருமென்று
    ஆற்றுக்கும் மீனுக்கும் காற்றுக்கும் தெரியும்

    நேற்றைய நிகழ்வின் நினைப்புத்தானே
    இன்றைய வெறுமையை, நாளைய மறுப்பைக்
    கடப்பதற்கான சுவாசம்?

    அவற்றைத் தாண்டி அங்கே நின்றால்
    ஆற்றங் கரையில் அவள் இருப்பாள்
    அலைகள் புரளப் புன்னகைத்தபடி..

    அப்படித்தானே கண்ணே?

    படத்திற்கு நன்றி

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “கையேந்தி நிற்போர்க்கு, காவல்பூ னையவன்வெண்,
    ணையேந்தி ஊட்டும் நவநீதன், -மையேந்தும்,
    ஆய்ச்சியர் கண்ணிமைபோல், காக்கின்ற கண்ணனின்,
    தாய்ச்சிறகுள் சிக்கென்று தூங்கு”….கிரேசி மோகன்….

    crazy

    “மாமணக் கூந்தலாள், மாற்றான்தாய் முன்னமவன்,
    வாமனனாய் வந்து வளர்ந்ததை, -ஸ்யாமளன்,
    காட்டுகின்ற சாக்கிட்டு, காலால் உறிப்பானை,
    போட்டுடைக்கப் பார்க்கிறானென் பேன்”….

    “என்னதவம் செய்தாய், யசோதை குமாரனே,
    வண்ணமுற கேசவ் வரைவதற்கு; -மன்னவனே,
    கோவிலுக்கு லீவுவிட்டு, கேசவ்இல்ல வாயிலின்,
    காவலுக்கு கண்ணா கிளம்பு”….கிரேசி மோகன்….

    Share
  • கண்ணன் வந்தான்

    கண்ணன் வந்தான் ! இங்கே கண்ணன் வந்தான் !!

    தாய்மை ஏக்கந்தனை தீர்க்கவென கண்ணன் வந்தான்()

    வல்லமையின் மின்வலையில் கண்ணன் வந்தான்
    வாழ்த்துகளை அள்ளிதர கண்ணன் வந்தான்
    கணினியின் மென்பொருளாய் கண்ணன் வந்தான்
    கவிமகளாம் தமிழ்பருக கண்ணன் வந்தான்
    சொல்லமைக்க சொல்லாக கண்ணன் வந்தான்
    சொல்லாத சொல்லாக கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான்()
    அடிமை யென்னும் சிறைபிளக்க கண்ணன் வந்தான்
    முடியாட்சி முடித்து வைக்க கண்ணன் வந்தான்
    வறுமை யென்னும் பிணிவிலக்க கண்ணன் வந்தான்
    உரிமையாய் உணவாக கண்ணன் வந்தான்
    சமநீதி ஆக்கமெனக் கண்ணன் வந்தான்
    சமதர்மம் வாழவைக்க கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான்()
    தாயகத்தை தூய்மைசெய கண்ணன் வந்தான்
    நூலகமாய் மாற்றிடவே கண்ணன் வந்தான்
    சேவகனாய் தாய்காக்க கண்ணன் வந்தான்
    காவினங்கள் தான் அழைக்க கண்ணன் வந்தான்
    நட்புரிமைப் பாராட்டி கண்ணன் வந்தான்
    நல்லதொரு மாற்றம்தர கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான்()

    Share
  • பாரதமாதாவும் கண்ணன் அட்டமியும்

    (கண்ணன் அட்டமியில் பாரதமாதாவின் துதி…மெட்டு உங்களுக்கு தெரியும்)

     

    கண்ணா! கார்முகில்  நிறவண்ணா!

    நீயில்லாமல்  நானில்லையே!

    உன்னை  மறப்பேனில்லை!  மறக்க  நினைப்பேனில்லை

    என்நிலைப்   பார்த்து   ஏன்நீயும்    விரைவாயில்லை ()

     

    மொழி  பார்த்து   நிலமென்னைப்   பிரித்தார்  கண்ணா

    இனம்  பார்த்து  சங்கங்கள்  வளர்ப்பார்  கண்ணா

    முகம்பார்த்து    சண்டைகள்   பிடிப்பார்   கண்ணா

    மதம்  பார்த்து  சமயத்தில்     வதைப்பார்க்  கண்ணா

    பாண்டவராய்  கெளரவராய்  இருந்தார்   கண்ணா – வேடம்

    பூண்டவரும்   அதனாலே  வாழ்வார்   கண்ணா()

     

    பணம்சேர்க்க   பிறதேசம்   செல்வார்   கண்ணா

    பொருளீட்டி    குடியுரிமை  பெறுவார்  கண்ணா

    தாயெனக்கு   அணிசேர்க்க‌  மறந்தார்   கண்ணா

    தன்புகழை   முகப்பதிவில்  பதிப்பார்   கண்ணா

    எதைச்சொல்லி   புரியவைப்பேன்   சொல்வாய்   கண்ணா

    இதற்காக   வாவென்றேன்   வருவாய்   கண்ணா()

     

    படியேறி   முன்னேற   மறுப்பார்   கண்ணா – தள்ளு

    படியென்றால்   பெருங்கூட்டம்  சேர்வார்  கண்ணா

    உழைப்பென்றால்    ஒருஓரம்   அமர்வார்  கண்ணா – பதவி

    உயர்வென்றால்  உரிமைக்கு   நிமிர்வார்    கண்ணா

    தங்கத்தை   உடலெங்கும்   தரிப்பார்   கண்ணா – கடமைத்

    தங்காமல்   செய்நன்றி   மறப்பார்   கண்ணா ()

     

     

    பாஞ்சாலி   துகில்தம்மை    உரிப்பார்க்   கண்ணா

    கர்ப்பத்தில்   பெண்சிசுவை   கலைப்பார்    கண்ணா

    உன்கதையும்   இதுபோல்தான்    அறிவேன்   கண்ணா

    என்மக்கள்   என்னுடனே    சேர்ப்பாய்    கண்ணா

    இத்தனைநாள்    நீகண்கள்    அயர்ந்தாய்   கண்ணா

    இனிப்போதும்   எனக்காக   எழுவாய்    கண்ணா()

    Share
  • காதல் நாற்பது (16)

     

     

    முழுமைப் படுத்தும் என்னை !

    jay

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    கண்ணியம் மிகும் வேந்தனைப் போல் நீ
    என்னை மீட்டுக் கொண்டதால்
    எனது அச்சத்தை எதிர்த்து
    மேற்பட்டு நிற்கிறாய் !
    போர்த்தி விடு
    உன் பழுப்பு வண்ண அங்கியை
    என் மீது,
    நெருங்கி என்னிதயம் ஒன்றி
    உன்னிதய முடன்
    ஒருங்கே வளரும் வரை !
    தனிமையில் நான் தவித்திட
    எப்படி என் மனம்
    ஆடிப் போன தென்று
    அறிவாய் நீ !
    வெல்ல முயலும் போது
    சீமானாய் நிரூபிக்கும் உன்னை
    முழுமைப் படுத்தி என்னை !
    மேலெழ ஒருவர்
    கீழே அழுத்தித் தணிவது போன்றது.
    விழுந்த படைவீரன்
    குருதிப் புலத்தி லிருந்து
    தூக்குவோன் கையில்
    விட்டுவிடும் உடைவாள் போல,
    முடிந்தன இங்கு இறுதியாய் எனது
    முயற்சிகள் !
    இனி நீ எனக்கு அழைப்பு விடுத்தால்
    உன் சொல்லை மதித்து
    என் தாழ்வுணர்வைத் தாண்டித் தான்
    நான் மேல் எழலாம்,
    என்னினிய காதலனே !
    உன் காதல் உணர்வைப் பெரிதாக்கு
    என் மதிப்புத் தரம்
    உயர்வாக !

    +++++++++++

    Poem : 16

    Sonnets from the Portuguese
    By: Elizabeth Barrett Browning (1806-1861)

    And yet, because thou overcomest so,
    Because thou art more noble and like a king,
    Thou canst prevail against my fears and fling
    Thy purple round me, till my heart shall grow
    Too close against thine heart henceforth to know
    How it shook when alone. Why, conquering
    May prove as lordly and complete a thing
    In lifting upward, as in crushing low!
    And as a vanquished soldier yields his sword
    To one who lifts him from the bloody earth,–
    Even so, Beloved, I at last record,
    Here ends my strife. If thou invite me forth,
    I rise above abasement at the word.
    Make thy love larger to enlarge my worth.

    +++++++++

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy
    “படுகளம் நீங்கி, பயத்தினால் மோட்ஷ,
    விடுதலை கேட்கும் விஜய! , -கெடுதலிதைப்,
    போலெதுவும் இல்லை, புறமுதுகு காட்டலென்றான்,
    நீலமது சூதன் நகைத்து”….கிரேசி மோகன்….

    crazy

     

    “தன்னை மறந்தவன் தாண்டவம் ஆடினும்,
    பொன்னை விடாது பிடிக்கின்றான், -அன்னை,
    அணிவித்த மாலை, அவதார ரக்ஷை;
    அறிவிக்கின் றானோ அரி”….கிரேசி மோகன் ….

    Share
  • நெஞ்சுக்குள்ளே ஒரு பொக்கிசமா

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக    (24)

    நெஞ்சுக்குள்ளே ஒரு பொக்கிசமா
    (பாடல்)

     

    Paintings of rural indian women - Oil painting (4).forblog

     

    நெஞ்சுக்குள்ளே ஒரு பொக்கிசமா ஒன்ன
    நெறெச்சு வச்சிருக்கேன் தாயி தாயி
    ஒன் காவலும் நான் கொண்டைச் சேவலும் நான், இப்பம்
    கண்ணாரக் கொஞ்சம் ஒறங்கு தாயி தாயி!
    கொஞ்சிக்கொஞ்சி மனசுக்குள்ளே கோயில் கட்டினேன், அங்க
    குயிலு ராகத்துல வண்ணம் பூசினேன்
    அஞ்சி அஞ்சிக் கண்ணீரால் கழுவித் தொடெச்சேன், அங்க
    அன்பு என்னும் ஒரே ஒரு கொடிய வளத்தேன்

    நெஞ்சாரச் சொல்லுறேண்டி உசுர தீபமாக்கினேன்
    நெனெப்பு முழுக்க ஒன்ன நெனெச்சு நெனெச்சு ஏங்கினேன்
    கண்ணுரெண்டும் சிமிட்டிச் சிமிட்டிக் கலகலன்னு சிரிப்பவளே!
    காட்டுக்குள்ள நொழெஞ்சவனத் தடுத்து வழி மறிச்சவளே
    கண்ணெல்லாம் இருண்டபோது காலைபோல வந்தவளே!
    காதோரம் பாடுகிறேன் தாயி தாயி! இப்பம்
    கண்ணாரக் கொஞ்சம் ஒறங்கு தாயி தாயி! (நெஞ்சுக்குள்ள)

     
    மேகத்தையும் மேகத்தையும் காத்து சேக்குது
    ஆத்தையும் ஆத்தையும் பூமி சேக்குது
    தேகத்தையும் தேகத்தையும் தாகம் சேக்குது
    தவிப்பையும் தவிப்பையும் சோகம் சேக்குது

    பாத்ததும் புரிஞ்சதடி சேந்து பிரிஞ்சு பொறந்தகத
    பழகித் தெரிஞ்சதடி பிரிக்க முடியாத கத
    ஆனந்தமானவளே! அன்பின் மறுபெயரே!
    அலைகடல் நடுவினிலே அமைதி தரும் நிலவே!
    தாயாகி சேயாகி தழுவவந்த தேவதையே!
    கண்ணில்மணியாக ஒன்னக் காப்பேன் தாயி! ஒன்
    கண்ணாளன் சொல்லுறதக் கேளு தாயி! என்
    மார்பில் ஒன்னெ ஏந்திக்குறேன் தாயி தாயி, எம்
    மடியில் சாச்சுக்குறேன் தாயி தாயி! இப்பம்
    கண்ணாரக் கொஞ்சம் ஒறங்கு தாயி தாயி!

     

    படத்திற்கு நன்றி: இளைய ராஜா

     

     

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.

    Rotation of planets

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    சூரிய குடும்பப் பிணைப்பிலே
    சுற்றிடும் கோள்கள் தன்னச்சில்
    சுழலும் விந்தை யென்ன ?
    கோள்கள் சுழல்வதால்
    உயிரினம் நிலைத்ததா ?
    நீள் வட்ட வீதியில் அண்டங்கள்
    மீளும் நியதி என்ன ?
    கோள்கள் அனைத்தும்
    சீராகச் சாய்ந்து
    ஒரே திசை நோக்கிச்
    சுற்றுவ தென்ன ?
    பூமியில் மட்டும்  உயிரினங்கள்
    தாமாய்ப் பிறப்ப தென்ன ?
    புவிச் சுழற்சி ஓர் காரணமா ?
    யுரேனஸ் அச்சும்
    சரிந்து போய்ச் சாய்ந்த தென்ன ?
    பரிதி மண்டலத்தில்
    வக்கிரமாய்ச் சுழன்று
    சுக்கிரன் மட்டும்
    திக்குமாறிப்
    போன தென்ன ?
    நின்று சுழலாமல் பொன்னிலா
    முன்னழகைக் காட்டிப்
    பின்னழகை
    மறைப்ப தென்ன ?

    +++++++++++++

    jay

    அண்டக்கோளின் சுழற்சி ஒரு பெரும் விளைவை கோளுக்கு உண்டாக்குகிறது.   உயிரனத் தகுதி பெறாதவை என்று  முன்பு  அறவே விலக்கட்ட அண்டக் கோள்கள், தற்போது தகுதி வாய்ப்புள்ளவை என்று கருதப் படுகின்றன. புதிய ஆய்வு முடிவு கூறுவதென்ன வென்றால், ஒரு கோளின் சுழற்சி வேக வீதம் அதில் உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு உதவும் என்பதே.  அண்டக்கோள்  சுழற்சி பகல் இரவு நீட்சியைக் கட்டுப் படுத்துவது மட்டுமில்லாமல், காற்றோட்டத்தைப் பற்றிக் கொண்டு முடிவாக முகில் மந்தைச் சூழ்வெளி வடிவாக்கத் தூண்டுகிறது.

    டோரியன் அப்பட் [Dorian Abbot]  [சிகாகோ பல்கலைக் கழகம்]  ஆகஸ்டு 9, 2014

    விண்வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால், முகில் மண்டலம் பரவிய மேற்குப் பசிபிக் வேனில் தள அரங்கின் பெரும்பகுதியில்  உஷ்ணம் [-70, -50 டிகிரி செல்சியஸ்] இடைப்பட்டதாகத் தெரிகிறது.   அந்தப் பகுதிகளில் தள உஷ்ணம் 30 டிகிரி செல்சியஸுக்கு மேற்பட்டிருந்த போதினும் முகில் மூட்டம் பேரளவு தென்படுகிறது.

    டோரியன் அப்பட் [Dorian Abbot]

    Habitability

     அண்டக் கோளின் சுழற்சி உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.

    2014 ஆகஸ்டு 9 ஆம் தேதி வானியல் பௌதிக இதழ் [Astrophysical Jounal] அறிவிப்பில் நாசா கெப்ளர் விண்ணோக்கி மூலம் கண்ட 2000 மேற்பட்ட அண்டவெளிக் கோள்களில் பரிதியை உயிர்த்தகுதி அரங்குகளில் [Habitable Zones] சுற்றிவரும்  சில கோள்கள் பூமிபோல் சிறியதாய், பாறை மேடுகள் கொண்டு, உயிரினத் தோற்ற வாய்ப்பு உ ள்ளதுபோல் தெரிந்தது.  “உயிர்த்தகுதி அரங்கம் என்றால் என்ன ?   உயிரின வசிப்புக்கு ஏற்ற நீர் திரவமாய் நிலவ ஏதுவான உஷ்ணமுள்ள  சுற்றுப் பாதையில் ஒரு பரிதியைச் சுற்றியுள்ள வட்ட அரங்கம்.   அந்த சுற்றுப்பாதை அரங்கின் உட்புற முனை, பரிதியின் எரிக்கும் கனல், நீரை ஆவியாக்கி மேகமாக்கி சூழ்வெளி மண் டலத்தில் மீறிடும் பரிதிப் பசுமைக் குடில் விளைவாய்  [Runaway Greenhouse Effect] ஏவி விடும்.  அரங்கின் வெளிப்புற முனையில்,  உஷ்ணம் குளிர்ந்து மிதமாகி, கார்பன் டையாக்ஸைட்டு முகில் உருவாகி, கோள் உறைப்பனி வீண் தளமாய்ப் போகும் [Frozen Wasteland].

    உயிர்த் தகுதி அரங்கில் பூமியை நெருங்கிச் சுற்றிவரும் நிலவில் பூமிபோல் ஏன் உயிரின வசிப்பு நேரவில்லை என்னும் கேள்வி எழுகிறது.   முதல் காரணம் : நிலவின் மிக மிக மெதுவான சுழற்சி.  நிலவு தன்னைத் தானே சுற்றிக் கொள்ள சுமார் 27 நாட்கள் பிடிக்கின்றது !  பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணி நேரம் [ஒரு நாள்] எடுக்கிறது.  நிலவில் பூமிபோல் வாயுச் சூழ்வெளி இல்லை.  உஷ்ணம் மிகையாகி நீர் திரவமாய் இருப்பதில்லை.  சூரிய ஒளி புகாத குகைகளில் நீர் பனியாக உருகிக் கிடக்கிறது.

    Cloud Formation

    ஒரு கோளின் உயிர்த் தகுதி வசதிக்குத் தேவையான முறைப்பாடுகள் பற்பல.  புதிய ஆராய்ச்சி கூறுவது என்ன வென்றால், ஓர் அண்டக்கோள் சுற்றும் சுழற்சி வேக வீதம்  கோளில் உயிரின வசிப்புக்கு ஆதரவு அளிக்கும்.  கோளின் சுழற்சி பகற் பொழுது, இராப் பொழுது நீட்சிகளைக் கட்டுப்படுத்துவதோடு, காற்றை நகர்த்தி, உருவான முகில் ஓட்டத்தைச் சூழ்வெளியில் இயக்குகிறது.  இந்த அறிவிப்பு  2014 ஆகஸ்டு முதல்வாரத்தில் வானியல் பௌதிக வெளியீட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டு [Astrophysical Journal] முன்பதிப்பாக [Preprint] இடப் பட்டுள்ளது.

    பூமத்திய ரேகைப் பகுதியில் விழும் பரிதியின் கதிர்வீச்சு தீவிரமுள்ளது.  அந்த அரங்களில் உள்ள காற்று சூடேறி மேல் எழுந்து சூழ்வெளியில் கலந்து  துருவப் பகுதிகளுக்கு விரைகிறது.  பின்னர் அங்கே காற்று குளிர்ந்து போய்த் தாழ்ந்து பூமத்திய ரேகைக்கு மீள்கிறது. இந்தச் சூழ்வெளிச் சுற்று இயக்கத்துக்கு   “ஹாட்லி சுழற்சி முகில்”  [Hadley Cell] என்று பெயர்.   உருவாகும் முகில் மூட்டம் பூமத்திய ரேகைப் பகுதியில் பேரளவு தங்கி, பூமியில் விழும் சூரிய ஒளியை விண்வெளிக்குத் திருப்பி அனுப்புகிறது.   பரிதிக்கு அருகே சுற்றும் புதன், வெள்ளி  போன்ற கோள்களில் விழும் கதிர்வீச்சு மிக மிகத் தீவிரமானது.   மேலும் புதன் கோள் போன்ற அகக்கோளில் பூமத்திய ரேகை, துருவப் பகுதி உஷ்ண வேறுபாடு மிகக் குறைவு.  ஆகவே பூமத்திய ரேகைப் பகுதியில் உருவாகும் மெலிந்த முகில் மூட்டம் மிகச் சிறிதே.  அதே சமயத்தில் வெள்ளி போன்ற மெதுவாகச் சுழலும் கோள்களில் ஹாட்லி சுழற்சி முகில் பெரிதளவு பரவிக் கோள் முழுப் பகுதியும் மூடிக் கொள்கிறது.  பூதக்கோள் வியாழன், சனிக்கோள் போன்று வெகு விரைவாகச் சுற்றும் போது இந்த ஹாட்லி சுழற்சி முகில்கள் மேலிருந்து கீழே இறங்கி தணிவு நிலையில் அகப்பட்டுக் கொள்கின்றன.  இவை யாவும் உயிரினத் தோற்றத்தைக் குன்றச்  சூழ்வெளி முகில் மூட்டத்தைப் பெரிதும் பாதிக்கின்றன.

    Effect of Rotation

    சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

    சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

    விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

    இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

    இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்ட மானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

    Rotation, clouds humidity

     

    அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

    வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !   அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

    பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

    Hadley Cells

    பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

    பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

    பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

    ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agensy)  [ஏப்ரல் 15, 2008]

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

    ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் !  அப்போது தான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் !  அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியிலிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html [சூரியன்]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (What will Happen to the Sun ?)
    17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008].

    19.  http://en.wikipedia.org/wiki/Planetary_habitability  [August 9, 2014]

    20.  http://www.dailygalaxy.com/my_weblog/2014/08/speed-of-a-planets-rotation-has-a-huge-effect-on-possibility-of-life.html  [August 9, 2014]

    21.  http://www.spacedaily.com/reports/Rotation_of_Planets_Influences_Habitability_999.html  [August 11, 2014]

    22.  http://en.wikipedia.org/wiki/Earth  [August 12, 2014]

    23.  http://beyondearthlyskies.blogspot.ca/2014/05/influence-of-planetary-rotation-on.html  [May 7, 2014]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  August 15, 2014

    Share
  • காடும் மலையும் எங்கள் வீடு!

    -வைகைச் செல்வி

    ஆம்!
    நாங்கள் ஆதிவாசிகள்தான்!
    நாங்கள் காட்டுவாசிகள்தான்!
    நிலமெல்லாம் வீடாக
    உங்களுக்கு இருக்க,
    காடும் மலையும்
    மட்டும்தானே
    எங்களுக்கு வீடு?

    வானம் முட்ட
    நிமிர்ந்து நிற்கும்
    அடுக்கு மாளிகைகள்
    எங்களுக்கில்லை!
    மழைக்கு ஒதுங்க
    தலை குனிந்து செல்லும்
    குட்டிக் குடிசைகள்தான்!
    ஆனால்…
    ஆயிரம் இடிகள் விழுந்தாலும்
    இடியாமல் நிற்கும்
    எங்களைப் போல் உறுதியாய்!

    எங்களுக்குப் படிப்பில்லைதான்!
    ஆனாலும்…
    எங்கள் அறிவு சொல்லுகிறது
    எங்களின் வளங்கள்
    சுரண்டப்படுவதை!

    செவ்வாய்க் கிரகமும்
    சுக்கிரனும்
    உங்களுக்காய்க் காத்திருக்க
    விட்டுவிடுங்களேன்
    எங்களை. . .!
    இந்தக் காட்டின் மூலையில்
    பூச்சியோடும் புல்லோடும்
    ஒண்டிக்கொள்வதற்கு!

    Share
  • சுதந்திரம் என்பது….

     

    பவள சங்கரி

    தலையங்கம்

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

    10551014_706107949437000_8473909052027307686_nசுதந்திரம் என்பது அடிமைத் தளைகளிலிருந்து விடுபடுவது என்று பொதுவாகக் கூறுகிறோம். பசித்தவனுக்கு உணவு கிடைத்தால் அது சுதந்திரம் அவனுக்கு. துரத்தி வரும் புலிகளிடமிருந்து தப்பிக்கும்  மான்களுக்கு அதுதான் சுதந்திரம், வயல்வெளிகளிலும், காடுகளிலும்,  கூவித்திரியும் குயில்களுக்கு அந்த கானமே சுதந்திரம். நமக்கு எது சுதந்திரம்?  எந்த நாடாக இருந்தாலும், பொருளாதாரத்தில் விடுதலை பெற்றாலே அது உண்மையான சுதந்திரமாகக் கருதப்படும். 67 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15இல்  கொடியேற்றிவிட்டு சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று, மகிழ்ச்சியுடன்  ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாடியும்விட்டு,  பின் அவரவர்  கடமைகளுக்குச் சென்றுவிடுகிறோம்.  சிந்திக்க வேண்டிய நேரம் இது. நம் இந்திய நாடு பொருளாதாரத்தில் சீர்பட மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  முந்தைய ஆட்சிக்கும்  இன்றைய ஆட்சிக்கும் சீர்திருத்த செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் காணமுடியவில்லை.  ரிசர்வ் வங்கி ஆளுநரின் கருத்துப்படி கடன் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பினும் கடன் பெற்று தொழில்களையும், தொழிற்சாலைகளையும் விரிவுபடுத்தத் தயங்கக்கூடிய நிலையே இன்று உள்ளது. தொழில் வளர்ச்சியும், மேம்படுத்தப்பட்ட பொருளாதாரமுமே தனி மனித சுதந்திரத்தை அளிக்க இயலும். 67 ஆண்டுகளுக்குப் பின்பும், மத்திய தொகுப்பு மற்றும் மாநில தொகுப்பிலிருந்தும் நுகர்வுப் பொருட்களை அதாவது உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்துச் செல்லும் நிலை இருக்கும் போது நாம் எப்படி சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் நிறைவு பெற்றன என்று பெருமைப்பட முடியும்.. உலக வங்கியின் அறிக்கை மற்றும் ஐ. நா. சபையின் அறிக்கையின்படியும், உலக மக்கள் தொகையில் 33 சதவிகிதத்தினர், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்திய மக்கள் தொகையில் 66 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இதனை கவனத்தில்கொண்டு செயல்பட்டாலொழிய நாம் பூரண சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று பெருமைப்பட முடியாது!

    Share
  • பராசக்தி!

    இசைக்கவி ரமணன்

     

    பராசக்தி! (கேட்டு மகிழ)

    10530681_820952731257554_5883851054705537964_n

     

    அறிந்தவர்க்கே புதிராய், ஆனந்த வெள்ளமாய்
    முடிந்தெரிந்து போனபின்னும் மூங்கில் தளிர்போலே

    தெரிந்து முளைப்பவளாய், தேசத்து நாயகியாய்,

    திசைகளாய் வாழ்வில் திகழ்பவளின் தாள்போற்றி!

     
    தன்னந் தனியளாய்த் தனித்திருந்தும், உயிர்மீட்டும்

    சின்னஞ் சிறிய சிரிப்புச் சிரிப்பவளாய், ஆங்கோர்

    வன்னக் கடற்கரை வாசலிலே நின்றிருக்கும்

    வாலையே உன்றன் வசந்தப் பதம் போற்றி

     
    செம்மைத் தமிழுக்குத் தெம்புதரும் மதுரையில், என்

    பிள்ளைக் கவிதைகளை இடையொசிந்து கேட்டிருக்கும்

    அம்மே! அலங்காரி! அனற்புயலைப் புன்னகையில்

    அமைதிசெயும் ராஜ மாதங்கி அடி போற்றி!

     
    பரந்து கிடக்குமிந்தப் பார்வெளியில், நிலவாய்

    பவனிவரும் உறவு எங்கள் பராசக்தி! துன்பமே

    விரிந்திருக்கும் பாழில் நான் விழுந்து தவிக்கையிலே

    விசைத்துச் சிலிர்க்கவைக்கும் வீரகீதம் பராசக்தி!

     
    ஒற்றைப் பொய்க்கும் ஒருநூறு சவுக்கடிக்கும்

    உண்மையின் தாயெங்கள் பராசக்தி! மானத்தை

    விற்றுவிட்டுப் பற்றிலார்போல் விரவிக் கிடக்குமந்த

    வீணருக்கோ கொள்ளிப் பேயெங்கள் பராசக்தி!

     
    சின்னக் குழந்தையிடம் சிரிப்பாக, ஞானத்

    திகிரியிலே கனலும் நெருப்பாக, அந்தக்

    கன்னற் கணுக்களிலே ரசமாக, உயிர்க்

    கவிதையிலோர் சாயைமட்டும் வசமாக

     
    கட்டவிழ்ந்த காட்டாற்று வெள்ளமாக, மெத்தக்

    கற்றவர்க்கும் கால்தடுக்கும் பள்ளமாக, புத்தி

    முட்டமுட்ட முழைக்கின்ற பாறையாக, எங்கோ

    முணுமுணுத்துக் கொல்லுகின்ற தேரையாக

     
    ஓட ஓடச் சரியும் தொடுவானாக

    உந்த உந்த விலகும் நிலவாக

    பாடப் பாடப் பணிய மறுக்கும்

    பரவசம் அதிசயம் பொய் எங்கள் பராசக்தி!

     
    பிடரியுள் குடியிருக்கும் பீதியுள் புகுந்து ஏதோ

    பிதற்றுகின்ற பேதையிவள்! பெரும்புதிர் இவள் தாதை! பனி

    படர்ந்திருக்கும் இமயத்தின் பயம்சரிந்த சரிவுகளில்

    பல்லவி மறந்து அலையும் பசுமழலை பராசக்தி!

     
    உலகிலே இருக்கின்ற உயிரெலாம் கொன்று

    உயரப் பறக்கின்ற ஒருகோடித் தீக்குழம்பை

    உலையிட்டுக் கொதிக்கவைத்து உதிரமாய்க் கொட்டினாலும்

    நிலைகொணாது தவிக்கின்ற நீலி எங்கள் பராசக்தி!

     
    ஓடுகின்ற ஒருகோடி நரம்பெல்லாம் துடித்தாலும்

    ஒவ்வோ ரணுவுமிவளை ஓஹோ என் றழைத்தாலும்

    ஓடிக்கொண் டேயிருந்து ஒருநோக்கில் நகைவெட்டி

    ஒளிசிதறி மறைந்துவிடும் ரெளத்திரமே பராசக்தி!

     
    தீக்குழம்பில் தோணிவிட்டு, திமிர்பிடித்த கரிகளிடம்

    திமில்தேடித் தலைதிருகித் திண்மைக்கு மலையுடைத்து

    போக்குக்கே புரியாத போக்கில், புவியதிரப்

    புறப்பட் டுலாவுகின்ற பெளருஷமே பராசக்தி!

     
    கவிதையாம்! பக்தியாம்! இவளைக் கண்டாராம்! கொண்டாராம்!

    கதையிலெத்தனை கதைகள்! காளியடா காளியிவள்!!

    சிவிகையிலே புயலமர்ந்து திருவுலா வருமோடா?

    சிற்றெறும்பு தின்வடுத்தால் யானைகளைத் தேடுமோடா?

     
    அம்மா! என்றே அலறி, அகம் சிதறிச் சிதறி

    அதோ அந்தத் தரைமீது தலைபிளந்து வீழ்ந்திருப்போம்!

    தம்மால் ஆகாததெல்லாம் தயவில்தான் சாத்தியம், இந்தத்

    தழலுக்குத் தனையறியாச் சரணம்தான் பாத்திரம்

    Share
  • விடுதலை

    -எம். ஜெயராம சர்மாமெல்பேண்

    பகலவன் வந்துநின்றால்
    பாரி
    னுக்கு விடுதலை
    பசித்தவர்க்கு
    உணவுஅளித்தால்
    பசிக்கெலாம்
    விடுதலை

    உழைத்துமே நிற்பார்க்குஎலாம்                   KrishnaArjunaKarna
    ஓய்வுநல்
    விடுதலை
    ஒன்றுமே
    செய்யாவிட்டால்
    உமக்குமேன்
    விடுதலை

    கார்முகில் கண்ணன்பார்க்கக்
    கர்ணனுக்கு
    விடுதலை
    போர்முனை
    வந்தகீதை
    புவிக்கெலாம்
    விடுதலை

    தாயொடு பிள்ளைசேரின்
    தனிமைக்கே
    விடுதலை
    வாய்தனைக்
    காப்போமாயின்
    வம்புக்கே
    விடுதலை

    கண்டதைப் பார்க்காவிட்டால்
    கண்ணுக்கு
    விடுதலை
    காதினைக்
    காத்துவிட்டால்
    கயமைக்கே
    விடுதலை

    சிண்டுகள் முடிக்காவிட்டால்
    சிக்கலுக்கே
    விடுதலை
    சின்னத்தனம்
    காப்போமாயின்
    சிதைந்திடுமே
    விடுதலை

    ஸ்ரீராமன் வந்துநின்றான்
    சீதைக்கு
    விடுதலை
    கார்நிறத்தான்
    கால்பட்டுக்
    கல்லுக்கே
    விடுதலை

    பேரறிவு வளரவிட்டால்
    பேதமைக்கே
    விடுதலை
    பெம்மானின்
    கழல்பற்றி
    பெறுவோம்நல்
    விடுதலை

    Share
  • சுதந்திரம்!

     

    கே.ரவி

    1959363_1524648954434992_6619161968674812884_n

    இந்தியச் சுதந்திரம் வீர சுதந்திரம். பலருடைய உயிர்த்தியாகத்தில் வளர்ந்தது நம் சுதந்திரப் போராட்ட வேள்வி. அவர்களுடைய தியாகத்தைக் குறைத்து மதிப்பிடுவது சரியில்லை.

    கத்தியின்றி ரத்தமின்றி வந்த சுதந்திரம் என்பது ஒரு நோக்கில் சரிதான். நாம் ஆயுதப் புரட்சியால் விடுதலை பெறவில்லை. நம்மை அடக்கியாண்ட வெள்ளைப் பரங்கியரின் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடச்செய்து சுதந்திரம் வாங்கவில்லை. ஆனால் நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் ரத்தத்தைச் சிந்திப்பெற்ற சுதந்திரம் இது என்பதை மறந்து விடக் கூடாது. மீண்டும் பாரதி வரியை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்:

    “வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்பு

    வேறொன்று கொள்வாரோ”

    இது வீர சுதந்திரம். விண்ணப்பச் சுதந்திரம் இல்லை. மிதவாதிகளைப் பெட்டிஷன் காங்கிரஸ், அதாவது, வெள்ளைக்காரனிடம் விண்ணப்பம் போட்டே சுதந்திரம் வாங்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் நிதானக் கட்சியினர் என்று பாரதி கடுமையாக விமர்சித்தான்.

    எனவே, வாங்கிய சுதந்திரத்தின் மதிப்பைக் குறைக்கும் எதையும் நாம் சொல்லத் தேவையில்லை; சொல்லத் தேவையில்லை. ஆனால், என் இனிய கவிதைச் சகோதரர்களே அப்படிச் சொல்லும் போது என் மனத்தில் ஒரு வலி உண்டாகிறது.

    “நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை” என்ற வரி மேடைகள்தோறும் முழங்கப் படும் வரி. இன்னும் வாழ்க்கையில் வளம் பெற முடியாத ஏழைகளின் இதயத் துடிப்பை அந்த வரி எதிரொலித்தாலும், சுதந்திரத்துக்குப் பிறகு நம் நாடு எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை நாம் ஒரேயடியாக மறுக்க முடியாது. பல முட்டுக்கட்டைகளைக் கடந்து, சோதனைகளை எதிர்கொண்டு, எதிர்நீச்சல் போட்டபடி நாம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறோம். நம்பிக்கை இழக்கத் தேவையே இல்லை.

    பொருளாதார மேடு பள்ளங்கள் பெருமளவில் சமன் செய்யப் படுகின்றன. ஜாதி, மத துவேஷங்கள் பெருமளவு குறைந்துள்ளன. அன்றாட வாழ்க்கையில் இந்தக் கூற்றுகளை நிரூபிக்கும் சான்றுகள் ஏராளம்.

    இன்று அன்னதானம் என்று உணவு வழங்கினால், அடிதடியாகக் கூட்டம் அலைமோதுவதில்லை. அழைத்து அழைத்துக் கொடுக்க வேண்டும். பட்டினிச் சாவுகள் இல்லை. என் வீட்டில், என் பாட்டிக்கு நடந்த திவசம் என்ற திதி விருந்தில், தலித் வகுப்பைச் சேர்ந்த என் சக வழக்கறிஞர் என்னோடு அமர்ந்து விருந்து அருந்திய நிகழ்ச்சி முப்பது ஆண்டுகளுக்கு முன்பே எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடந்தது. என் ஒரு மறுமகன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன்.

    இப்படியெல்லாம் சொல்வதால், நம் பொருளாதாரம் மிகச் சிறந்த நிலை அடைந்து விட்டதென்றோ, நம் நாடு ஒரு சமத்துவச் சமதர்மப் பூங்கா என்றோ, இங்கே ஜாதி, மத பேதங்களே இல்லை என்றோ நான் சொல்ல வரவில்லை. சுதந்திரத்துக்கு முன் இருந்ததைக் காட்டிலும் நாம் எவ்வளவோ மேம்பட்டிருக்கிறோம் என்பதுதான் என் கருத்து. நம் வளர்ச்சியை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ள வேண்டியதில்லை.

    பொதுவாக மனிதர்களுக்கு, எல்லா நாட்டினர்க்கும், இருக்கும் சில மனோபாவங்கள், சில சுயநலங்கள் நம் மக்களுக்கும் இருக்கின்றன என்பதை நாம் பெரிது படுத்தத் தேவையில்லை. நாம் பார்க்க உலகின் முக்கால் பங்கை ஒருகுடைக்கீழ் ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இன்றைய நிலையென்ன? அவர்களுடைய பொருளாதாரம் சரிந்த நிலையில்தான் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் வரை எதற்கெடுத்தாலும், ‘ஜப்பானைப் பார்’ என்று சொல்லி வந்தோம். இன்று ஜப்பானின் பொருளாதார நிலை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. ஆனால், நாம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறோம்.

    இன்று இஸ்ரேல், பாலஸ்தீனம் இடைப்பட்ட காஜா முனையில் ஆயிரக்கணக்கானவர்கள் குண்டுமழையில் கொன்று குவிக்கப் படுகின்றனர். நம் நாட்டில், அல்லது நம் எல்லையில் அப்படி நடக்கவில்லையே!

    பொருளாதாரம் அவ்வப்போது பின்னடைவு கொள்வதும், பிறகு சீராவதும் எல்லா நாடுகளிலும் நடக்கத்தான் செய்கிறது. அமெரிக்காவில் கூடச் சென்ற நூற்றாண்டின் முதற் பகுதிய்ல் ‘த கிரேட் டிப்ரஷ்ன்’ எனப்படும் பொருளாதார பாதாளநிலை ஏற்பட்டது. உண்பதற்கு உணவின்றி மக்கள் தெருக்களில் அடித்துக் கொண்ட நிலை அங்கே ஏற்பட்டது. சில ஆண்டுகளில் நிலைமை சீர்படவில்லையா? இப்பொழுது அமெரிக்கா மீண்டும் பாதாள நிலைக்குப் போய்க் கொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதெல்லாம் சகஜம். எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் உண்டோ அப்படித்தான் ஒவ்வொரு நாட்டுக்கும்.

    பொதுவாழ்வில், குறிப்பாக நிர்வாக மேலாண்மையில் ஊழல் அதிகரித்து விட்டது என்ற குற்றச் சாட்டில் ஓரளவு உண்மை இருக்கிறது. எப்போதுமே, மேல் பதவிகளில் இருந்தவர்கள் ஊழல் புரிந்திருக்கிறார்கள். ஆனால், அவற்றைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தும் சாதனங்கள் இப்போது இருப்பது போல் அப்பொதெல்லாம் இல்லை. மேலும் ஆயிரங்களாக இருந்த ஊழல் மதிப்பு இப்பொழுது நினைத்துப் பார்க்க முடியாத அளவு பல பூஜ்யங்களைச் சேர்த்துக் கொண்டு லட்சோப லட்சம் கோடிகளாக மாறியதற்கு ஒரு காரணம், பணத்தின் மதிப்புக் குறைந்து விட்டது; இன்னொரு காரணம், ஊழலுக்கு ஏற்ற களங்களின் சந்தை மதிப்பு மிகவும் அதிகரித்து விட்டது. ஒரு பொது காண்டிராக்ட், ஒப்பந்தம் முன்பெல்லாம் லட்சங்களில் இருந்தது. இப்போது பல்லாயிரம் கோடிகளாக உயர்ந்து விட்டது. 2 ஜி ஊழலே சாட்சி.

    ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால், இன்னும் இருக்கும் ஜாதி, மத துவேஷங்களை அழிக்க வேண்டுமென்றால், நாடு மேலும் வளம் பெற்று உயர வேண்டும் என்றால் இன்னின்ன செய்ய வேண்டும் என்று பல பட்டியல்கள் பலர் கொடுக்கலாம். எனக்குத் தெரிந்தவரை ஒரு முக்கியமான மனமாற்றம் மக்களுக்கு, அதுவும், கல்வியில் பின்தங்கியுள்ள மக்களுக்கு, ஏற்பட்டால் அது ஓரளவுக்கு ஊழல் குறையவும், ஜாதி, மத, இன பேதங்களால் ஏற்படும் பூசல்கள் குறையவும், வளம் பெருகவும் உதவக் கூடும் என்று நம்புகிறேன்.

    அது என்ன மனமாற்றம்? பாரதி சொன்ன, “நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்ற தாரக மந்திரத்தின் முழுப் பொருளையும் நன்கு உணர்வதே அந்த மனமாற்றம். நாம் இன்னும் தலைவர்கள் என்றொரு தனி ஜாதியை வைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் ‘நிரந்தரத் தலைவனே/தலைவியே’ என்று வேறு புகழாரம் சூட்டுகிறோம்.

    இந்த மனோபாவம் மாற வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதம மந்திரி எல்லாருமே மக்களுடைய பணியாளர்கள். அவர்கள் யாருமே தலைவர்கள் இல்லை; நம்மால் பணியில் அமர்த்தப்பட்ட நம் வேலைக்காரர்கள். அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்று தட்டிக் கேட்கும் உரிமை பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. தேர்தலில் வாக்குக் கேட்டு வரும் வாக்காளர்களிடம், உங்கள் தலைவர்கள் மக்களே, உங்கள் கட்சியின் நிர்வாகிகள் தலைவர்கள் இல்லை என்பதைச் சொல்லி அதை வெளிப்படையாகவும், தேவைப்பட்டால் எழுத்து மூலமான உறுதிமொழியாகவும் அவர்களிடம் பெற வேண்டும் இந்த விழிப்புணர்ச்சி எல்லா மக்களுக்கும் வந்துவிட்டால் அதுவே பெருமளவு பொதுவாழ்க்கைத் தூய்மைக்கு வழிகோலும் என்பது என் நம்பிக்கை.

    காங்கிரஸிலோ, திரினாமூல் காங்கிரஸிலோ, மாயாவதி கட்சியிலோ, தமிழ்நாட்டுத் திராவிடக் கட்சிகளிலோ, தே.மு.தி.க., பா.ம.க. போன்ற மாநிலக் கட்சிகளிலோ, தலைமையை எதிர்த்துக் குரல் கொடுத்துவிட்டு யாரும் கட்சியில் நீடிக்க முடியாது. தலைமைக்கு எதிராகக் கருத்துச் சொல்லும் சுதந்திரம் இந்தக் கட்சிகளில் இல்லை. தன் கட்சித் தலைவர்/தலைவி எதிரில் தைரியமாக உட்காரும் சுதந்திரம் கூட இந்தக் கட்சிக்காரர்களுக்குக் கிடையாது. இவர்களையெல்லாம் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு நாம் சுதந்திரம் பற்றிப் பேசுவதே தவறு.

    எனக்குத் தெரிந்தவரை இந்தக் குறைபாடு இல்லாத கட்சிகள் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி, இன்னொன்று பாரதிய ஜனதா கட்சி. சாதாரண நிலையில் இருந்து எந்தப் மரபுப் பின்னணியும் இல்லாத நரேந்திர மோடி, அந்தக் கட்சியின் பழம்பெறும் தலைவர்களை எல்லாம் ஒதுக்கி விட்டுத் தலைமை நிலைக்கு வரமுடிந்ததே அந்தக் கட்சியின் வலிமை என்று கருதுகிறேன். ஆனால், இதே நிலை நீடிக்குமாற மோடி அவர்கள் செயல்பட வேண்டும். அதாவது, தம்முடன் கருத்து வேறுபடும் நபர்களைத் தள்ளிவிடாமல், கட்சிக்குள் கருத்துப்போர் நடத்திக் கருத்துத் தெளிவு ஏற்படும் சூழலைப் பாதுகாக்க வேண்டும். மாற்றுக் கருத்தைக் கருத்து வலிமையால் மட்டுமே சந்திக்க வேண்டும். தேவைப்பட்டால் தன் கருத்தை மாற்றித் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை வலிமையாலும், பண, அதிகார வலிமையாலும் மாற்றூக் கருத்துகளை அடக்க நினைக்கும் சரிவுக்கு அந்தக் கட்சி ஆளாகாமல் இருக்கும் வரை, கட்சியின் உள்கட்சி ஜனநாயகம் சிதையாமல் இருக்கும் வரை நாட்டுக்கு நல்லது.

    நம்பிக்கை இழக்க வேண்டாம், சகோதர, சகோதரிகளே. நம் முன்னோர்கள் நமக்கு நல்ல நாட்டைத்தான் விட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம் மேலும் நல்ல நாடாக நம் பிள்ளைகளுக்கு இதை விட்டுச் செல்வோம் என்பது உறுதி. பாரதி நம் நாட்டைப் பற்றிச் சொன்னதை மறக்கவே வேண்டாம்:

    “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு.”

    எப்பொழுதும் நல்ல நாடாகவே இருப்போம்.

    வந்தே மாதரம்!

    Share