Blog

  • நித்திலம் வேண்டினேன்!

    கவிஞர்.மகேந்திரன் பன்னீர்செல்வம்

    நித்தமும் நிறைமதி
    புத்தம்புது ஒளிபாய்ச்ச
    சத்தமின்றி வருகையில்
    சித்தம் வேண்டினேன்
    நித்திலம் வேண்டுமென!!

    சிந்தனையில் சிரித்து
    சந்தத்தில் சிந்து பாடும்
    சுந்தரத் தொன்மையின்
    செப்புத் தமிழினால்
    நித்திலம் வேண்டுமென!

    நஞ்செனும் சொற்களால்
    வஞ்சகரின் பேச்சில்
    மஞ்சு முகில் போல்
    நெஞ்சம் கனத்து
    தஞ்சம் அடைகையில்
    நித்திலம் வேண்டுமென!!

    நெறியுடை வாழ்வில்
    குறிப்பறிந்து செயலாற்றி – நெஞ்சை
    பறித்துச் செல்லும்
    செறிவுநிறை மாந்தருறையுள்
    அறிவுநிறை புவனத்தில்
    நித்திலம் வேண்டுமென!!

    நேர்மைத்திறம்  மாறா
    கூர்மை அறிவுடை
    தேர்வு நிலைதனில் – பிறர்
    பார்வை துச்சமாக்கி
    தேர்ச்சி அடைகையில்
    நித்திலம் வேண்டுமென!!

    அந்தம் நெருக்கையில்
    மந்தப் போக்கினில்
    பந்தமென்று இருந்த
    சொந்தங்கள் யாவுமே
    நிந்தனை செய்கையில்
    நித்திலம் வேண்டுமென!!

    சத்தியம் சொல்கிறேன்
    நித்திலம் வேண்டினேன்!
    முத்ததின் ஒளியுடை
    புத்தியின் திண்மையே
    நித்திலம் என்பதாம்!!

    சான்றோர் சபையினில்
    மாண்போர் நடுவில்!
    பண்புசார் சொற்களை
    அம்புபோல் பாய்த்திடவே
    அகிலம் ஆளும் இறைவா – எனை
    நித்திலம் ஆக்கிவிடு!!!

    Share
  • சிறுகதைகள் இலக்கியம்

     

    பவள சங்கரி

    இலக்கியங்கள் என்பது அந்தந்தக் காலங்களின் கலாச்சாரங்கள், பண்பாடு, நடைமுறை வாழ்க்கை, இன்னல்கள் என அனைத்தையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நச்சென்று வார்த்தைகளால், பளிச்சென்று தம் கருத்தை முன் வைக்கும் கட்டுரைகள் ஒரு விதம் என்றால், அலங்கார வார்த்தைகள் என்ற ஒப்பனையுடன் அழகாகத் தாம் கண்டவற்றை, கேட்டவற்றை, சற்றே கற்பனை கலந்து சுவையான பண்டமாக வழங்கக்கூடியது சிறுகதை. ஆரம்பக் காலங்களில் சிறுகதைகளுக்கு பரவலான அங்கீகாரம் இருந்திருக்கவில்லை. ஆங்கில இலக்கியங்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்ற மொழி இலக்கியங்களுக்கு கிடைப்பது அரிதாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் இலக்கியவாதிகளாக கருதப்பட்ட காலமும் இருந்திருக்கிறது. மேலை நாட்டவர்களின் பிரவேசத்தினால் நமக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவமே சிறுகதை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

    இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெரும் காவியங்களில் பல சிறுகதைகள் கிளைக்கதைகளாக வேரூன்றியிருக்கும். நாயன்மார்களின் வரலாறுகள் இன்றளவிலும் இறை நம்பிக்கையை ஊக்குவிக்கக்கூடிய திறன் பெற்றவையாகவே விளங்குவது சிறப்பு. மாபெருங்காவியங்களான இவைகளின் தாக்கம் இன்றைய வாழ்வியலிலும் காண முடிகிறது.

    சிறுகதைகளின் முன்னோடி என்று எடுத்துக்கொண்டால் வீரமாமுனிவரைச் சொல்லலாம் எனினும், 18ம் நூற்றாண்டுகளில், தாண்டவராய முதலியார் என்பவரால் வடிக்கப்பட்ட சுவையான சிறுகதைகள் இன்றளவும் குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறது என்றால் அது மிகையில்லை. பாரதியாரின் சிறுகதைகள் 20ம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்டது. புதுமைப்பித்தன், கு.ப ராஜகோபாலன், வ.வே.சு. போன்றோரின் சிறுகதைகளும் பிரபலமாக இருந்தது.

    1809ம் ஆண்டில் (ஜனவரி 19) பிறந்த அமெரிக்க கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் விமர்சகர் ஆலன்போவின் (Allan Poe) திகில் கதைகள் மிகப்பிரபலமானது. உலகம் முழுவதையும் தம்முடைய படைப்புத் திறனால் கட்டுக்குள் வைத்திருந்தார். ‘துப்பறியும் கதைகளின் தந்தை’ என்று பெரும் பெயரும் பெற்றிருந்தார்.அவர் சிறுகதைகளின் இலக்கணம் பற்றிக் கூறும்போது,அரை மணி முதல் ஒன்று அல்லது ஒன்றரை மணிக்குள் படித்து முடிக்கக்கூடிய உரைநடையாக இருக்க வேண்டும் என்கிறார்.

    ஹட்சன் என்ற பிரபல எழுத்தாளர், ஒரே மூச்சில் படித்து முடிக்கக்கூடியது நல்ல சிறுகதை என்கிறார். ஒரு சிறு அனுபவமோ, வாழ்க்கையில் நடக்கும் சுவையான நிகழ்ச்சிகளோ, கிடைத்த வெற்றிகள், அதனால் ஏற்படும் சிறு சிக்கல்கள், கவர்ச்சியான காட்சிக்ள் இப்படி எதுவும் நல்ல சிறுகதையின் அடிப்படையாகலாம் என்கிறார் மு. வரதராசனார். கல்கி காலத்தில் சிறுகதைகள் தனிப்பொலிவுடன் மிளிர்ந்தது. மணிக்கொடி போன்ற அச்சிதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்கான பெரும் பணியாற்றியுள்ளது. ரா. கி. ரங்கராஜன் அவர்களின் ‘எப்படிக் கதை எழுதுவது’ என்ற நூலும், அகிலனின் ‘கதைக்கலை’ என்ற நூலும், மகரம் என்பவரின் தொகுப்பான, ‘எழுதுவது எப்படி’ போன்ற நூல்கள் சிறுகதை எழுதும் கலையை பயிற்றுவித்திருக்கின்றது. வானொலியிலும் சிறுகதைகள் வாசிக்கப்பட்டு வருகின்றன. அமுதசுரபி, கல்கி போன்ற இதழ்கள் சிறுகதைப் போட்டிகள் நடத்தி நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

    நல்ல சிறுகதைகள் என்பது, வாசித்து முடித்தவுடன், சிந்தனைக்கு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்கிறார் புதுமைப்பித்தன்.

    “கதையை வாசிப்பது, நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடிவடையும்போது அதைப்பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்று சொன்னால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை” என்பது புதுமைப்பித்தனின் வாதம்.

    மனக்குகை ஓவியங்கள், துன்பக்கேணி, மனித யந்திரம் போன்ற புதுமைப்பித்தனின் பல சிறுகதைகள் இது போன்று சிந்தனைக்குத் தூண்டுகோலாக இருப்பதைக் காணலாம்.

    நாட்டுப்புறக் கதைகள் மிகச் சுவையான கதைக்களங்கள் கொண்டவை. இன்று அவைகள் பெரும்பாலும் மறைந்து கொண்டுவருகின்றன எனலாம். விக்கிரமாதித்தன் கதைத் தொகுப்புகளும், பாட்டிமார்கள் சொன்ன பழங்கதைகளும் குழந்தைகளுக்கும் படிப்பினை ஏற்படுத்தக் கூடியவைகள்.

    சமகால எழுத்தாளர்களான, கல்கி கிருஷ்ணமூர்த்தி, தீபம் நா. பார்த்தசாரதி, புதுமைப்பித்தன் மு.வரதராசனார், ந.பிச்சமூர்த்தி, லா.ச.ராமாமிருதம், ராஜம் கிருஷ்ணன், ரமணிசந்திரன் , சு. சமுத்திரம், சாவி பனசை கண்ணபிரான், போன்றோர்கள் என்றும் மனதில் நிற்பவர்கள்.

    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், கள்வனின் காதலி, பொய்மான் கரடு, மோகினித் தீவு போன்ற புதினங்கள் இன்றளவிலும் இளைஞர்களையும் கவர்ந்திழுக்கக்கூடியவைகளாவே உள்ளது குறிப்பிடத்தக்கது. 75க்கும் மேற்பட்ட சுவையான சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

    சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள தீபம். நா. பார்த்தசாரதி அவர்களின் பிரபலமான புதினங்களான, பொன் விலங்கு மற்றும் குறிஞ்சி மலர், தொலைக்காட்சித் தொடர்களாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடைய கதை நாயகர்கள், சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் போராளிகளாகவே இருப்பார்கள். முறையாகத் தமிழ் பயின்றுள்ள இவரின் பயணக் கட்டுரைகளும் சுவாரசியமானது. பிரான்சு, செருமனி, இரசியா, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற நாடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவங்களை பலருக்கும் பயன்படும் வகையில் எழுதியுள்ளார்.

    நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக் கதைகளும் எழுதியுள்ளார். அகல்யை என்ற சிறுகதையில், கௌதமர் என்ற பாத்திரத்தின் அங்க இலட்சணங்களை விளக்கிய விதம்  வித்தியாசமாக இருக்கும்.

    “ அவருக்கு வயது முப்பது. கறுத்து அடர்ந்த தாடி, அகன்று பிரகாசமான ஒளிவிடும் கண்கள், மெல்லிய உதடு, பரந்து விரிந்து திரண்ட மார்பு, ஒடுங்கிய வயிறு, எல்லாவற்றிலும் இயற்கையின் கனிவு பொங்கியது. மிருக அழகன்று – ஆளை மயக்காது, வசீகரிக்கும். அந்தக் கண்களில், அந்த உதடுகளில் ஒரு தெய்வீக ஒளி – தேஜஸ் – உள்ளத்தின் சாந்தியை எடுத்துக் காட்டிற்று.”

    அதைவிட அவருடைய மனைவியை வர்ணிக்கும் போது அந்தக்கால பண்பாடும், கலாச்சாரமும் தெளிவாக விளங்கும்படி விவரித்திருப்பார்.

    “அவர் மனைவி – அவள் தான் அகல்யை. அவர் ஆணுக்கு இலட்சியம் என்றால், இவள் பெண் குலத்திற்கு வெற்றி. மருண்ட பார்வை, அவரைக் காணுந்தோறும் காதல் பொங்கும் கண்கள். அவரைத் தனது உள்ளத்தில் மட்டும் வைத்துவிடவில்லை. அவளது ஒவ்வொரு செயலும் அவரது இன்பத்திற்காகவே. அதிலே அவளுக்கு ஓர் இன்பம்.”

    துளியும் விரசமில்லாமல் அத்துனை ஆழ்ந்த காதல் கதையை, அழகாக வடித்த பாங்கு ஆச்சரியமூட்டுபவை.

    மு. வரதராசனார் அவர்களுடைய ’அகல்விளக்கு’ என்ற புதினத்தின் அறிமுக உரையில்

         “என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவு கொண்டு பழகவில்லையா? … ஆண்கள் இருவர் பழகும்போது அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் பெண்ணும் பழகும் போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம், ஏமாற்றம் எல்லாம்?” …. இமாவதியின் ஆழ்ந்த உள்ளத்திலிருந்து எழுந்த இந்தக் கேள்வியை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் எண்ணி எண்ணி விடை காண முடியுமானால், சமுதாயம் பண்பாடு மிக்கதாய் எளிதில் முன்னேற்றம் எய்தலாம்.

    என்ற கா.அ.ச. ரகுநாயகன் (திருப்பத்தூர் வ.ஆ) அவர்களின் கருத்து இன்றளவிலும் ஆழ்ந்து நோக்கத்தக்கதொன்றாகும்.

    அந்தக் காலத்தில் மு. வ அவர்களின் படைப்புகளை பலர் தம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவே பயன்படுத்தியுள்ளனர். அத்தகைய முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவைகள் அவர்தம் படைப்புகள்.

    லா. சா. ராமாமிர்தம் அவர்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 6 நாவல்களும் எழுதியுள்ளவர். 1989ம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.

    திருமதி ராஜம் கிருஷ்ணன் தம் பல கட்டுரைகள் மட்டும் கதைகள் மூலம் பெண் விடுதைலைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். ஒரு புதினத்தை எழுதுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட களங்களில் நேரிடையாகத் தங்கி ஆய்வு மேற்கொண்டு பின்னரே அதுபற்றி எழுதுவதே இவருடைய தனிச்சிறப்பு. ‘கரிப்பு மண்கள்’ என்ற இவருடைய புதினம், தூத்துக்குடியில் வாழும் மீனவர்களுடன் தங்கி, அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும், நிலைகளையும் உணர்ந்து எழுதிய ஒன்றாகும். அதேபோல் ‘முள்ளும் மலரும்’ என்ற புதினத்திற்காகத் தம் கணவருடன் சம்பல் பள்ளத்தாக்கிற்குச் சென்று கொள்ளைக்கூட்டத் தலைவன் டாகுமான்சி என்பவரையும், மான்சிங் என்ற 400க்கும் மேற்பட்ட கொலைகள் செய்தவரையும் சந்தித்து நான்கு மணிநேரம் உரையாடி, பின்னர் அந்தப் புதினத்தை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. ’வேருக்கு நீர்’ என்ற புதினத்திற்காக 1973ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார்.

    ’அமுதமாகி வருக’ என்னும் புதினம் பைகாரா நீர் மின் திட்டம் செயல்பாடுகள் குறித்த கருப்பொருளுடன், கள ஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டது என்பது சிறப்பு. 1952ல் அகில உலகச் சிறுகதைப் போட்டியில் தமிழ்ச் சிறுகதைக்காக இவருடைய ‘ஊசியும் உணர்வும்’ என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்படது குறிப்பிடத்தக்கது.

    இதுபோல சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதுவதில் பெரும் புரட்சி ஏற்படுத்திய படைப்பாளிகள் பலர்.சுஜாதா அவர்களின் பல்வேறு விதமான படைப்புகளில், ‘மீண்டும் ஜினோ’ என்ற புதினம் என்றும் மனதை விட்டு அகலாதவை. இவர்களின் அனைத்து படைப்புகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் பூர்த்தியாக இறைவனை இறைஞ்சுகிறேன். ஒரு சிலவற்றையே இதுவரை வாசித்திருக்கிறேன்.

    மக்களின் நடைமுறை வாழ்க்கையும், நடை, உடை மற்றும் பாவனைகளும் காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருப்பதே இலக்கியங்களில் மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறது.  இந்த மாற்றங்களே சிறுகதைகளின் வளர்ச்சிக்கு வித்தாகிறது என்பதும் நிதர்சனம்.சமீபத்தில் இந்து நாளிதழ் மும்பை வாழ்க்கையைச் சித்தரிக்கும் இரண்டு கதைகளுடன், மேலும் மூன்று சிறந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை நேசிக்கவும், அவர்தம் துன்பங்களை கருணைக் கண்களுடன் காணக் கூடியவர்களும், மற்றும் மக்கள் மனதில் தம் எழுத்துக்கள் நீங்காத இடம் பிடிக்க வேண்டும் என்ற வேட்கை உடையவர்களே சிறந்த படைப்புகளை அளிக்க வல்லவர்கள். மிகைப்படுத்தப்பட்ட கற்பனைக் காட்சிகள் தற்காலங்களில் அதிகமாக விரும்பப்படுவதில்லை. யதார்த்தமான சூழல்களில், மிக யதார்த்தமாக, சுருக்கமாக எழுதப்படும் சிறுகதைகளே பெரிதும் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக வட்டார வழக்குகளில்  எழுதப்படும் சிறுகதைகள் வாசகர்களை பெரிதும் கவருகிறது. தேசியச் சிந்தனைகள்,  சமுதாய சீர்திருத்தம், பெண்ணியம், தலித்தியம், கலாசாரம், பண்பாடு, மனிதத் தத்துவம், உளவியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என பல வடிவங்களில் சிறுகதைகள் எழுதப்படுகிறது.

    அச்சிதழ்கள் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகளே வெளியிடுவதால் சிறுகதை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளிக்கொண்டு வருவதில் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். அந்த வகையில் பலவிதமான படைப்புகளை வெளியிடும் பல இணைய இதழ்கள் மற்றும் பல்வேறு இணைய தளங்கள் மூலமாக இன்றைய இலக்கியம் சிறந்த முறையில் வளர்ச்சியடைய வாய்ப்பாக அமைகிறது என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கக்கூடியதான படைப்புகள் மட்டுமே காலத்திற்கும் அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதும் சத்தியம்.

    படத்திற்கு நன்றி:

    http://en.wikipedia.org/wiki/Edgar_Allan_Poe

    நன்றி : இன் & அவுட் சென்னை இதழில் வெளியானது.

     

     

    Share
  • அனுதினமும்…


        செண்பக ஜெகதீசன்

    வாரத்தில் ஒருநாள்

    விடுமுறை நாள்..

     

    மாதத்தில் ஒருநாள்

    சம்பள நாள்..

     

    வருடத்தில் ஒருநாள்

    பிறந்தநாள்..

     

    வாழ்க்கையில் ஒருநாள்

    இறந்திடும் நாள்..

     

    ஆனாலும்,

    அனுதினமும் மனிதர்பலர்

    அஞ்சியஞ்சி சாகிறாரே

    அது ஏன்…!

     படத்துக்கு நன்றி

    http://www.iappfind.com/app/411900526

    Share
  • “ நவீன ரோபோக்கள் “

    தமிழ்த்தேனீ

    பூம் பூம் பூம் பூம் ஐயாவுக்கு நல்ல காலம் பொறக்குது,நல்ல காலம் பொறக்குது  ,  ஐயா வீட்டுலே சுப காரியம் நடக்கப் போகுது, வூட்லே இருக்கறவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கப் போறாங்க. என்று வாயிலில்  பூம்பூம் மாட்டுக்காரனின் குரல் கேட்டது.

    கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார்  சபேசன், இவரின் தலையைக் கண்டவுடன்  பூம்பூம் மாட்டுக்காரன் நம்பிக்கையுடன் , குரலில் இன்னும் உத்வேகத்துடன்  ராகத்தோடு முழங்கத் தொடங்கினான் ,ஐயா எட்டிப் பாக்கறாரு தலையை ஆட்டுடா ராசா , ஐயா பழைய துணி ,  காசு எல்லாம் குடுப்பாரு  என்று கூறிவிட்டு அவன் கையிலிருந்த  குட்டையான நாதஸ்வரத்தை  ஒலிக்கத் தொடங்கினான்.

    மாட்டுக்கு என்ன புரிந்ததோ  அந்த  நாதஸ்வரத்தின் ஓசைக்கு ஏற்ப தலையை அப்பிடியும் இப்படியுமாக ஆட்டிற்று.  எப்போதுமே   மனிதருக்கு   யானை, குரங்கு , புலி சிங்கம் போன்றவைகளை மீண்டும் மீண்டும் பார்க்க ஆர்வம் வரும், அதே போல் சபேசனும் அந்த மாட்டையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.    ஐயா பாக்கறாரு தலையை வேகமா ஆட்டுரா ராசா என்றான் பூம் பூம் மாட்டுக்காரன், மாடும் வேகமாய்த் தலையை ஆட்டத் தொடங்கியது.

    .ஏதோ ஒரு இரக்கம் தோன்றவே அவருடைய  பழைய வேட்டியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்,  . பூம்பூம் மாட்டுக்காரன் ஐயாவுக்கு  நன்றி சொல்லுடா ராசா வேட்டி குடுத்தாரு மகராசன்  என்று கூறிக் கொண்டே அந்த வேட்டியை நிரந்தரமாக மாட்டுக்கே கொடுப்பது போன்ற பாவனையில் அந்த வேட்டியை மாட்டின் மேலேயே போட்டான்.

    அந்த மாட்டின் மேல் பலவிதமான  வண்ண ஆடைகள் போர்த்தப்பட்டு இருந்தன.  அனேகமாய் அந்த  வண்ணத் துணிகளை எடுத்துவிட்டால் அதன் எலும்புகள் தெரியும் என்று தோன்றியது சபேசனுக்கு,  கையோடு கொண்டு வந்த இரண்டு வாழைப்பழங்களை மாட்டுக்கு கொடுத்தார் சபேசன் , வாங்கிக்கோ ராசா ஐயா அன்போட குடுக்கறாரு என்றான் பூம்பூம் மாட்டுக்காரன்

    அவன் குரலுக்கு கட்டுப்பட்டு வாயைத் திறந்து தன்னுடைய  நாக்கை நீட்டி வாழைப்பழத்தை  கவ்விக்கொண்டு பூம்பூம்மாட்டுக்காரனிடமே  நீட்டியது பூம்பூம் மாடு.    ஆச்சரியமாய் இருந்தது சபேசனுக்கு , எப்படிக் கட்டுப் பாட்டோடு பழக்கி இருக்கிறான் இந்த மாட்டை என்று அதிசயித்துப் போனார் சபேசன்.

    அதன் வாயில் தொங்கிக் கொண்டிருந்த வாழைப் பழங்களிலிருந்து  ஒரு வாழைப் பழத்தை எடுத்து உரித்து அவன் உண்டு விட்டு இன்னொன்றை மாட்டுக்கு கொடுத்தான் . மாடும் அதை தோலோடு உண்ணத் தொடங்கிற்று

    அது சரி இயல்பாய் ஏதேனும் உண்ணக் கொடுத்தால் வாங்கி உண்ணுமே மாடுகள், இந்த மாடு  அவர் கொடுத்த வாழைப்பழத்தைக் கூட பூம்பூம் மாட்டுக்காரன் அனுமதித்த பிறகே  வாங்கி உண்கிறது, அப்படிப் பழக்கி இருக்கிறான் இந்த மாட்டுக்காரன்  என்று தோன்றியது.

    ஒரு நவீனவகை ரோபோ போல் பூம்பூம் மாட்டுக்காரன் இடும் கட்டளையை எல்லாம் நிறைவேற்றியது  மாடு.  இவன் தன் வயிறு நிரம்ப இந்த  வேலையைச் செய்கிறான், இவனுக்கு  மனோவசியம் தெரிந்திருக்கிறது, நல்ல சொற்களைக் கூறினால்  மனதில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும், அந்த மகிழ்ச்சி எப்படிப்பட்டவரையும்   ஏதேனும் கொடுக்கச் செய்துவிடும் என்று நன்றாகவே தெரிந்து கொண்டிருக்கிறான்.

    நம்மில் பலர்  நல்ல சொற்களை கூறக் கூட தயங்கிக் கொண்டேதானே இருக்கிறோம். அப்படிப்பட்டவர்களைக் காட்டிலும் ,ஏதோ ஒரு வகையில் இந்த பூம்பூம் மாட்டுக்காரன் சாதாரண மனிதர்களை விட  உயர்ந்தவன் என்று தோன்றியது சபேசனுக்கு.

    சபேசனுக்கு நன்றி கூறிவிட்டு  மேலும் மற்ற வீடுகளுக்கு சென்று தன்னுடைய தொழிலைத் தொடர, நாதஸ்வரத்தை வாசித்தபடியே நகரத் தொடங்கினான் பூம்பூம் மாட்டுக்காரன், தலையை ஆட்டியபடியே பின் தொடர்ந்தது பூம்பூம் மாடு. உள்ளிருந்து கனகா,  யாரு வாசல்லே  என்றாள், யாரும் இல்லே பூம்பூம் மாட்டுக் காரன் வந்தான், அவனுக்கு ஒரு பழைய வேட்டியைக் குடுத்து அனுப்பினேன்  என்றார் சபேசன்.

    அதெல்லாம் சரி காலம் கெட்டுக் கெடக்கு , வயசானவா நாம ரெண்டு பேரும் தனியா இருக்கோம், நீங்க பாட்டு தானம் தர்மம்னு கதவைத் திறந்து அவனுக்கு தானம் செய்யப் போறீங்க,   அவன் கையிலே வெச்சிருக்கற கொம்பாலே உங்களை அடிச்சுப் போட்டுட்டு  வீட்டிலே இருக்கறதை எல்லாம் எடுத்துண்டு போய்ட்டான்னா என்ன செய்யறது.

    என்னைக் கேக்காம கதவைத் திறக்காதீங்கன்னு எவ்ளோ தடவை உங்களுக்கு சொல்றது, இனிமே இப்பிடி கதவைத் திறக்காதீங்க என்றாள்.  சரி சரி என்று வேகமாய்த் தலையை ஆட்டினார் சபேசன்,

    பூம்பூம் மாட்டுக்காரன் வந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான், இவர்கள் வீட்டைத் தாண்டி செல்லும் போது  ஏனோ அந்த பூம் பூம் மாடு ஒரு முறை இவரை திரும்பிப் பார்த்துவிட்டு மேலே நடக்கத் தொடங்கியது.  ,

    அன்று மாலை ,கனகா கதவைத்  தாப்பாள் போட்டுக்கோ  ,காலார ஒரு நடை நடந்துட்டு , அப்பிடியே காய்கறி வாங்கிட்டு வரேன்  என்றபடி  வெளியே வந்தார்  சபேசன்,   சற்று தூரத்தில் அந்த மாடு படுத்துக் கொண்டிருந்தது, பூம்பூம் மாட்டுக்காரன்  அரசாங்க மதுக் கடையில் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

    அவன் கண் விழித்து தனக்கு ஏதேனும் உண்ணக் கொடுப்பான் என்னும் நம்பிக்கையுடன்  பூம்பூம் மாடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.  அந்த மாட்டைக் கடந்து போகும்போது ஏனோ ஒரு முறை சபேசன் அந்த மாட்டைத் திரும்பிப் பார்த்தார். அதன் கண்களில் ஒரு இரக்கமும் , நன்றியும்  தெரிந்தது.

    Share
  • பிக்கோலிம் புளுகு – 1

     

    தேமொழி

     

    முன்னுரை:

    வல்லமையில் முன்பு வெளிவந்த கட்டுரையான “பிக்கோலிம் போர்” (http://www.vallamai.com/?p=30512/) பற்றி உங்களுக்கு நினைவிருக்கலாம். “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றி மிகச் சுருக்கமாக ஒரு அறிமுகம் …  இவ்வாறு ஒரு போரே நடந்தது இல்லை.  ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிபீடியாவில் நிகழ்ந்திருக்கிறது. கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர்  நடந்ததாக ஒரு கட்டுக் கதை.  1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிபீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது.   இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதன உடன்படிக்கை ஏற்பட்டு போர் நின்றது.  உடன்படிக்கையின் விளைவாக சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது.  இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிபீடியா வலைதளத்தில் இடம் பெற்ற பின்பு, அது மோசடி பதிவு என கண்டு கொள்ளப் பட்டு, சென்ற ஆண்டு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை.  தற்பொழுது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict).

    விக்கிபீடியா அதை நீக்கிவிட்டாலும், சிறந்த விக்கி கட்டுரைகளை நூலாக வெளியிடும் பதிப்பகம் ஒன்று, அதனை நூலாக வெளியிட்டு விற்பனை செய்கிறது (http://www.alibris.com/search/books/isbn/9785510567311). விக்கி கட்டுரைகளை  இதுபோல விற்பனை செய்வதை காப்புரிமை என்ற அடிப்படையில் விக்கி தடுப்பது இல்லை. கல்வி பரவவேண்டும் என்ற அடிப்படையில் அனுமதியும் அளிக்கிறது.  ஆர்வக் கோளாறின் காரணமாக, “பிக்கோலிம் போர்” கட்டுரையில் அப்படி என்னதான் இருந்தது எனத் தெரிந்து கொள்ளும் நோக்கில் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆசை எழுந்தது. லென்நெக்ஸ் கார்ப் (LENNEX Corp) பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள 90 பக்கங்கள் உள்ள அந்த நூலில் ஒரு ஆறு பக்கம்  மட்டுமே “பிக்கோலிம் போர்” (Bicholim Conflict) பற்றி கட்டுரையில் விவரிக்கப் படுகிறது.  மற்ற பக்கங்களில் கோவா, பிக்கோலிம், மராட்டியர்கள், போர்ச்சுகீசியர்கள்  என்ற மற்ற பல விக்கி கட்டுரைகள் நூலை நிறைக்கிறது.  இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டு “பிக்கோலிம் புளுகு” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.  இனி விக்கிபீடியாவில் வெளியிடப்பட்ட கட்டுக்கதை(கட்டுரை) தொடர்கிறது.

    பிக்கோலிம் புளுகு:

    பிக்கோலிம் போர் என்பது  1640-1641 இல் கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும், சிவாஜி பான்ஸ்லே (Shivaji  Bhonsle) ஆட்சிக்குட்பட்ட மராட்டியப் பேரசிற்கும் இடையே நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆகும். இது நிகழ்ந்தது கோவாவின் வட பகுதியான பிக்கோலிம் என்ற இடத்தில். இப்போராட்டம் 1640 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில் இருந்து 1641 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்கள் வரை நிகழ்ந்தது. பிறகு மராட்டியர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு,  முன்பிருந்த அரசுகளின் எல்லைகளையே இருதரப்பினரும் ஏற்றுக்கொள்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் பிக்கோலிம் போர் முடிவிற்கு வந்தது [1]. எனினும், போர்ச்கீசியர்களுக்கும் மராத்திய அரசுக்கும் இடையே ஒரு பதட்டமான சூழ்நிலை கோவாவிலும் மராட்டியத்தின் அண்டைத் தீவுகளான டையு-டாமனிலும் (Diu, Daman) தொடர்ந்தது[2].  போராட்டம் பெரும்பாலும் கோவாவில் நிகழ்ந்தாலும் சில கால கட்டங்களில் போர்சுகீசியர்களுக்கு எதிரான கலகம் அருகிருந்த பேர்னம் மற்றும் பார்டெஸ்  (Pernem, Bardez) பகுதிகளிலும் நிகழ்ந்தது [3].

    (தொடரும்)

    ______________________________________
    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051

    Share
  • பஞ்சாட்சர கவசம் –

    சத்திய மணி

    நங்கையாம் மீனாளின் சொக்கனாய் ஆள்பவன்
    நம்பியாய்த் தருவாகி சதாசிவம் ஆனவன்
    நந்தியும் துதிபாட நடராசன் ஆட அவன்
    நகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

    மந்தாகினி கங்கை சடைமீது தரித்தவன்
    மலைமகளை சரிபாதி தனதென்று வரித்தவன்
    மறையோரின் ஓதுகுழாம் புடைசூழக் களித்தவன்
    மகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

    சிறக்கின்ற பிறைசூடி சிவமென்று நிலைத்தவன்
    சிரிக்கின்ற கயிலாயப் பனிப்பொழிய குளிர்ந்தவன்
    சிங்கார அரவுதனை அணியாக்கி மகிழ்ந்தவன்
    சிகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

    வானோரின் தலைவனாகி மகாதேவ மிறையவன்
    வாசங்கள் வீசும்நல்ல திருநீற்றில் ஒளிர்பவன்
    வாக்கோடு கணபதி வடிவேலன் பெற்றவன்
    வாகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

    யமபயம் அழித்துடனே மரணத்தையே அழித்தவன்
    யட்சரும் அரக்கருமே தவமியற்ற அருள்பவன்
    யமுனைக் கரைதனிலே தனைக்காட்சி கொடுத்தவன்
    யகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

    நமசிவாயமென இசையொழுக பாடினேன்
    நமசிவாயமென மனமுருக ஓதினேன்
    நமசிவாயமென குருமுகமே நாடினேன்
    நமசிவாயமென அருளோச்சி காக்கவே!!

    Share
  • காதல் நாற்பது – எலிஸபெத் பிரௌனிங் – தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்

    எலிஸபெத் பிரௌனிங் (1806-1861)

    தமிழாக்கம் :   சி. ஜெயபாரதன், கனடா

    நானொரு கறுப்பி ! குள்ள மாது !
    சாஃப்போ கவிஞனைப் போல,
    சாகாவரம் வாங்கியவள் நான் !
    ஐந்தடி ஓரங்குலம் உயரம் !
    பரிதியொளி பளிங்கு பட்டையில்
    பிரிவதுபோல்
    வண்ணங்கள் உடையவை என்
    கண்களின் நிறங்கள் !
    கண்ணாடி முன்னின்று நோக்கினால்
    என் தோற்றம்
    அழுத்தப் பச்சைப் பழுப்பு !
    பச்சை வேலியில் மறையும் பச்சை !
    நாசி ஒன்றும் பிரமாத மில்லை,
    அது ஒருவித மாதிரி !
    அதை ஈடுசெய்ய அகண்ட வாய் !
    அந்தோ ! மிக மிகச்
    சின்னக் குரல் எனக்கு !

    +++++++++++++++

    கவிதை மேதை எலிஸபெத் பிரௌனிங்.

    இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிப் பாக்களைத் தமிழாக்கம் செய்த பிறகு, புதிதாக “காதல் நாற்பது” என்னும் தலைப்பில் பிரிட்டிஷ் கவிதை மேதை எலிஸபெத் பிரௌனிங்கின் கவிதை மலர்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளிக்க விழைகிறேன்.

    எலிஸபெத் பிரௌனிங் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா காலத்தில் (1819-1901) வெற்றிகரமாக வாழ்ந்து பெரும்புகழ் பெற்ற கவிதை மாது. ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் பிரௌனிங்கின் காதல் மனைவி. டென்னிஸன் நினைவுப் பரிசைப் பெற்ற எலிஸபெத் எழுதிய உன்னதக் காவியப் படைப்பு, 1850 இல் வெளியான “போர்ச்சுகீஸின் பதினான்கு வரிக் கவிதைகள்” (Sonnets from the Portuguese). ராபர்ட் “போர்ச்சுகீஸ்” என்ற செல்லப் பெயரால் தன் காதலி எலிஸபெத்தை அழைத்தார். நாற்பத்து நான்கு எண்ணிக்கையுள்ள அந்த கவிதைகள் யாவும் ராபர்ட்டைக் காதலித்த போது எலிஸபெத் தொடராக எழுதியவை. எலிஸபெத்தின் கூரிய ஞானமும், நளினக் கவி நடையும், முகக் கவர்ச்சியும் கார்லைல், ரஸ்கின், தாக்கரே, ரொஸ்ஸெட்டி, ஹாதொரோன் போன்ற கவிதா மேதைகளை ஈர்ந்தன.

    எலிஸபெத் 1806 இல் இங்கிலாந்தில் டுரம் நகர்க் கருகில் கோக்ஸொ ஹால் (Coxhoe Hall near Durham) என்னும் ஓர் இடத்தில் ஒரு செல்வத் தம்பதிகளுக்குப் பிறந்தார். சிறு வயதில் எலிஸபெத் தனிப் பயிற்சியாளர் மூலமாகக் கல்வி பயின்றுத் திறமையோடு ஆங்கிலம், ·பிரெஞ், லத்தீன், கிரீக் ஆகிய அன்னிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார். பதினாங்கு வயதிலேயே எலிஸபெத் “மராத்தன் போர்” (The Battle of Marathon) என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்பைப் படைத்து வெளியிட்டார். அடுத்து வெளியான நூல்கள்: An Essay of mind (1826), Prometheus Bound (1833). The Serapim & Other Poems (1838), Sonnets of the Portuguese (1850). Last Poems (1862) எலிஸபெத் 1835 இல் லண்டனுக்கு வந்து தங்கிய போது பல வெளியீடுகளில் கவிதைகளை எழுதிப் பேரும், புகழும் பெற்றார். 1844 இல் அவரது கவிதைகள் வெளியாகிப் பலரது மனதைக் கவர்ந்து அமெரிக்கக் கவிஞர் எட்கர் அல்லன் போவின் பாராட்டைப் பெற்றார். எல்லா வற்றிலும் உயர்ந்த படைப்பாக எடை போடப்படுவது : போர்ச்சுகீஸின் பதினான்கு வரிக் கவிதைகள் (Sonnets from the Portuguese). போர்ச்சுகீஸ் என்பது ராபர்ட் எலிஸபெத்துக்கு வைத்த செல்லப் பெயர்.

    1820 இல் எலிஸபெத் ஓர் மர்ம நோயில் விழுந்து வயிற்று வலியில் மிகவும் வேதனைப் பட்டார். வலியைத் தாங்கிக் கொள்ள அந்தக் காலத்தில் அவருக்கு மருத்துவர் பயங்கர மார்·பின் மந்த மருந்தைக் கொடுத்து வந்தார்கள். மறுபடியும் 1838 இல் எலிஸபெத் இரத்தக் குழாய் ஒன்று அற்றுப் போய் கடும் நோயில் துன்பப்பட்டு மெலிந்து போனார். அதே சமயத்தில் அவரது சகோதரர் ஒருவர் நீரில் முழ்கி, அவருக்கு ஆறாத துயரை உண்டாக்கியது, அதற்குப் பிறகு எலிஸபெத் யாரையும் கண்டு கொள்ள விருப்பற்றுத் தனிமையில் கிடந்தார். அப்போது முழு நேரத்தையும் அவர் தன் அரியக் காவியப் படைப்புகளுக்கே அர்ப்பணித்தார்.

    தனது 39 ஆம் வயதில் (1845), தன்னை விட ஆறு வயது இளமையான கவிதா மேதை ராபர்ட் பிரௌனிங்குடன் கடிதத் தொடர்பு கொண்டு, ஆழ்ந்த காதல் வயப்பட்டார். அவர்களது அந்தரங்க ஆத்ம நட்பு பெற்றோருக்குத் தெரியாமல் மர்மமாகவே தொடர்ந்தது. காரணம் அவரது தந்தையார் தனது புதல்வர், புதல்வியர் திருமணமாவதைத் தடுத்துக் கொண்டு வந்தார். அடுத்த ஆண்டு எலிஸபெத் வீட்டை விட்டே வெளியே ஓடிவிட்டார். 1846 இல் ஒரு தேவாலயத்தில் பெற்றோர்க்குத் தெரியாமல் எலிஸபெத் ராபர்ட்டை மணந்து, ரோமுக்குச் சென்று, அங்கே ·பிளாரென்ஸில் குடியேறினார்கள். அவர்களுக்கு 1849 இல் ஓர் ஆண்மகவு பிறந்தது.

    இறுதிக் காலத்தில் திடீரென எலிஸபெத்துக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் பெருகிற்று. வட அமெரிக்காவில் கறுப்பு ஏழைகளைப் பிடித்து அடிமைகளாய் வணிகம் புரிந்து வருவதைக் கண்டித்தார். அக்கருத்தை மையமாக வைத்தொரு நூலும் எழுதினார். நோய் முற்றி ·பிளாரென்ஸில் 1861 ஆம் ஆண்டு கனிவுக் கணவரின் கையணைப்புக் கனலில், காதல் ராணி களிப்புடனே விண்ணுலகம் ஏகினாள். அவளது மரணத்துக்குப் பிறகு எழுத்தாள மேதை எட்வெர்டு பிட்ஸ்ஜெரால்டு துயரைக் காட்டாது தன் உன்னத இரங்கல் உரையில் கேலியாகக் குறிப்பிட்டார்: “மிஸிஸ் பிரௌனிங் மரணம் அடைந்ததில் எனக்கொரு பெரிய விடுவிப்பு ! “அரோரா லைஸ்” [Aurora Leigh: Collection of Poems by Elizabeth Browning] போன்ற மாபெரும் கவிதைத் தொகுப்புகள் இனிமேல் வெளிவாரா ! கடவுளுக்கு நன்றி ! அவள் ஓர் உயர்ந்த மேதை ! எனக்குத் தெரியும் அது. எல்லாவற்றுக்கும் முடிவாக நான் என்ன சொல்வது ? அவளும் அவளது பெண்பாலும் அடுப்பறையில் கிடந்து, குழந்தைப் பராமரிப்பைக் கவனித்திருக்க வேண்டும் ! ஏழையர் மீது வேண்டுமானால் இரக்கம் கொள்ளட்டடும் ! இப்படிக் குறுநாவல் எழுதுவது போன்ற பணிகளைச் சிறப்பாகப் படைக்கும் ஆடவர் கைவசம் விட்டு விட்டுத் தான் தலையிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் !”

    *******
    காதல் நாற்பது  (1)
    உன்னை நேசிப்பது எவ்விதம் ?

    எலிஸபெத் பிரௌனிங்

    (1806-1861)

    தமிழாக்கம் :   சி. ஜெயபாரதன், கனடா

    1.   Free Verse

    எவ்விதம் நேசிப்பது உன்னை ?
    எண்ண வேண்டும் நான்
    எத்தனை வழிகள் உள்ளன வென்று !
    ஆழமான காதல் உன்மீது !
    அகண்டது ! நீண்டது  !
    உணர்ச்சி மறைந்துள்ள போது,
    உயிரின முடிவாய்,
    ஒப்பிலா நளினத்தில்
    உன்னை எட்டித் தொடும் என் ஆத்மா.
    பரிதிப் பகல், மெழுகுவர்த்தி
    வெளிச்சத்தில்
    அவசியம் நேசிப்பேன் உன்னை
    அனுதின முடிவு வரை  !
    மனத் தடங்க லின்றி
    காதலிக்கிறேன்,
    மானிட உரிமைத் தேடலாய் !
    தூய மனதுடன் நேசிக்கிறேன்,
    என் புகழின் திருப்பமாய் !
    முந்தைத் துக்கங்க ளோடு
    குழந்தையின்
    பிடிவாத நம்பிக்கை யோடு
    பித்தானேன் உன் மீது !
    இழந்த புனிதரிடம்
    நழுவிய முந்தைக் காதல்
    நாடுகிறது உன்னை !
    பெருமூச்சு காட்டுகிறது
    என் காதலை !
    முறுவல் காட்டி விடும்
    என் காதலை !
    கண்ணீரும் காட்டி விடும்
    என் காதலை !
    வாழ்வு பூராவும் நேசிப்பேன்.
    முடிவிலே
    கடவுளின் விதி அதுவாயின்,
    அழுத்தமாய் இருக்கும்
    காதல் மட்டும்,
    உன்மேல்
    சாதலுக்குப் பிறகும் !

    +++++++

    2.    Sonnet Style

    எப்படி நேசிப்ப துன்னை ? எண்ண வேண்டும் வழிகளை
    என் காதல் ஆழ்ந்தது, அகண்டது, உயர்ந்தது, உன்மேல்
    எட்டித் தொடும் என் ஆத்மா பிரிவை உணரும் போது
    உயிரின வாழ்வின் முடிவாய், உன்னத நளின மதில்
    அனுதினம் இயலும் வரை நானுனை நேசிப்பேன்
    பரிதி வெளிச்சம், இரவு விளக்கில் அமைதிக் கவசியம்
    தடையிலா நேசம் மனித உரிமை முயற்சி போல்
    தூய தென் நேசம் பிறரது புகழின் திருப்பமாய்
    நேயம் உணர்ச்சி வசப்படும், பயன் படுத்தப் படும்
    பழைய துயரொடு, என் குழந்தை நினைப்பொடு
    இழந்த காதலை மீட்டு நேசிப்பேன் பாசமுடன்
    நழுவிய புனிதருடன் நேசிப்ப துன்னை, மூச்சுடன்
    கண்ணீர் முறுவல் ஆயுள் வரை கடவுள் விதியெனின்
    உனை மட்டும் நேசிப்பேன் மேலாய் சாதலுக்குப் பிறகும்.

    ++++++++++++

    ++++++++++++

    தகவல் :

    1. Sonnets from the Portuguese By: Elizabeth Barrett Browning (1967)

    2. The Selected Poetry of Browning (1966)

    3. The Works of Robert Browning By: The Wordsworth Lobrary (1994)

    4. Robert Browning Selected Works By: Johanna Brownell (2002)

    5. Elizabeth Barrett Browning’s Biography

    6.  http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning

    **************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan]   [May 30, 2012] R-2

    Share
  • துள்ளி வருகுது வேல்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    2014ல் தேர்தல் வரப்போகிறது.. யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் மக்கள் வெதும்பியிருக்கிறார்கள். கிராமத்தில் சொல்லும் ஒரு சிறுகதை நினைவிற்கு வருகிறது. ஒரு வீட்டிற்கு வரும் விருந்தாளி ஒருவர், உங்கள் குடும்பத்தில் மிக நல்லவர் என்று யாரைச் சொல்லுவீர்கள் என்று குடும்பத் தலைவனிடம் கேட்டபோது அவர், அதோ அங்கு கூரையில் ஏறி கொள்ளி வைப்பவன்தான் மிகச் சிறந்தவன் என்றாராம்.. வந்திருந்தவருக்கு தெளிவாகப் புரிந்ததாம், மற்றவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்று. . இப்பொழுது சமுதாயச் சிந்தனையிலும், சமுதாய வளர்ச்சியிலும் துளியும் நாட்டம் இல்லாதவர்களின் கையிலேயே அரசியல் இருக்கிறது. இதற்கு எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கு அல்ல என்பது அன்றாடம் வரும் செய்திகள் மூலமாக அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. அன்றைய சுதந்திரக் காலப் போராட்டங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, கோயிலுக்கு நேர்ந்துவிட்டதுபோல் வரிசை வரிசையாகச் சென்று அன்றைய காவல் துறையினரிடம் அடியும் உதையும் பெற்று இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம அல்லவா இது. தாயகக்கொடி மண்ணில் வீழ்வதைத் தடுத்து நிறுத்தி காப்பதற்காக தம் உயிரை விட்டவர் வாழ்ந்த பூமியல்லவா இது. அப்படி காப்பாற்றிய கொடியை மென்மேலும் வானில் பட்டொளி வீசிப்பறக்கச் செய்ய வேண்டாமா?  இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம். இன்று தனி மனிதர்களும், பொது மக்களும் நாடு வளம் காண வேண்டுமென்று தனியாத ஆவல் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்மிடையே வழிநடத்த சிறந்த தலைவர்கள் இல்லையே? இன்று இவர்கள் தவறு செய்துவிட்டார்கள் அவருக்கு வாக்களிக்கலாம் என்றால் அதுவும் முடியாத சூழ்நிலையாக உள்ளது. நம்மை ஆளச் சிறந்த தலைவர்களாக யார் இருக்கிறார்கள்.. முப்பது கோடி முகமுடையாள் என்று சொன்ன அந்தக் காலத்தில் நம்மை வழிநடத்த ஒரு மாபெரும் தலைவர் இருந்தார். இன்று 130 கோடியைத் தாண்டிவிட்ட நிலையிலும் நமககு வழிகாட்ட நல்லதொரு தலைவரில்லை என்பதுதான் வேதனை. நல்லதொரு பாதை காட்டினால் அனைவரும் செல்வதற்குத் தயாராக இருப்பினும் அந்தப் பாதையைக் காட்ட நல்ல தலைவரில்லையே.. இன்னும் ஓராண்டே தேர்தலுக்கு இருக்கக் கூடிய சூழலில், தேர்தல் வான வேடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டது. .இதைக் கண்டு மயங்கி நாம் வாக்களிக்கப் போகிறோமா.. அல்லது வளமான வாழ்க்கை அமையும் என்று நம்பி வாக்களிக்கப் போகிறோமா என்று கனவில் பிதற்றும் நிலையில் இன்று மக்களின் மனம் இருக்கிறது. .

    படித்தவர்களும் அறிஞர்களும் மக்களின் நலனில் அக்கறையுள்ள சிந்தனாவாதிகளும்  அரசியலுக்கு வருவதற்கு தயங்கக்கூடிய இன்றைய நிலை மாற வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி அறைகூவல் விட்டதுபோல மாணவர்கள் அரசியலை சுத்தப்படுத்துவதற்கு வர வேண்டும். நாட்டு நலனைப் பேணும் மகக்ள் உங்களுக்கு ஆதரவளிக்கக் காத்திருக்கிறார்கள். அசாமில் இது போன்றதொரு சூழலில்தான் மாணவர்கள் மாற்றங்களை ஏற்படுத்திக் காட்டினர். ’துள்ளி வருகுது வேல்’ என்பதுபோல இளைய சமுதாயம், மாணவ சமுதாயம் அரசியலுக்கு வர வேண்டும்.. இளைஞர்களை நாடு  எதிர்பார்க்கிறது இன்று. பொறுப்பை உணர்ந்து தயங்காமல் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.. ஜனநாயக முறையில் மாற்றங்கள் ஏற்படுத்துவோம்.. நம் இந்தியா வல்லரசு ஆவதும், வளமான வாழ்க்கையை இழப்பதும் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது என்பதுதான் சத்தியம்.  ஜெய்ஹிந்த்..

    Share
  • புதுத் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு பூதச் செர்ன் விரைவாக்கியில் உறுதியானது.

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா




    அணுத்தொடர் இயக்கம் புரிந்து
    அணுசக்தி தூண்டியது போல்,
    உயிரியல் விஞ்ஞானத்தில்
    முதன்முதல் டியென்ஏ
    உருவாக்கியது போல்
    அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும்
    செர்ன் விரைவாக்கி யந்திரம்
    பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய்
    அரங்கேற்றி உருவாக்கும் !
    கடவுள் துகள்
    தடத்தைக் கண்டதாய்
    உறுதிப் படுத்தும் இப்போது.
    ஒளிவேகத்தை ஒட்டிய விரைவில்
    எதிர் எதிரே
    புரோட்டான்கள் மோதி
    சக்தி துகளாய் மாறும் விந்தை !
    பூஜியச் சுழற்சி ஹிக்ஸ் போஸான்
    பரமாணுக்கு நிறை அளிக்கும்
    கடவுள் துகள் !
    மூவான் நுண்துகள் மோதலில்
    தோன்றும் ஐந்தில் ஒன்று !
    அணுவுக்குள் நிலையற்ற
    கனத்துகள் பிரபஞ்ச மூலத்தின்
    கண்காட்சி நடத்தும் !
    பராமணு வயிற்றில்
    வெடித்துப் பொரிக்கும்
    குஞ்சுகள் !
    குளுவான் ! குவார்க்குகள் !
    லிப்டான் !
    ஃபெர்மி யான் !  ஹிக்ஸ் போஸான் !
    பிரபஞ்சத்தின்  செங்கற்கள் !

    +++++++

    “செர்ன் பூத விரைவாக்கி யந்திரத்தில் கிடைத்த பில்லியன் கணக்கான புரோட்டான்-புரோட்டான் மோதல் கணித விளைவுகளை [LHC Proton-Proton Collision Data]  ஆராய்ந்த செர்ன் விஞ்ஞானிகள் “ஹிக்ஸ் போஸான்” புதுத் துகள் இருப்பதை [99.99%] உறுதிப் படுத்தியுள்ளார்.   அதன் கண்டுபிடிப்பு நேர் போக்குத் துகள் பௌதிக விதிக்கு [Mainstream Particle Physics Priciples] ஏறக்குறைய ஏற்புடையதாய் உள்ளது.”

    டேவிட் சார்ல்டன், [CERN LHC ATLAS Team] [மார்ச் 14, 2013]

    “2012 ஜூலை மாதத்தில் கிடைத்த முன்னோடி மோதல் விளைவுகள் முக்கியமானவை.  காரணம் அவை “ஹிக்ஸ் போஸான்” கடவுள் துகளைத்தான் ஆய்ந்து வருகிறோம் என்றெனக்குத் தெளிவாய்க் காட்டின.    ஆயினும் அது எந்த வகையான ஹிக்ஸ் போஸான் என்று தீர்மானமாக அறிய இன்னும் நெடுங்காலம் ஆகும்.”

    ஜோ இன்காண்டிலா  [Physicist Spokeperson, CERN Compact Muon Solenoid Team (CMS)]

    “கண்டுபிடித்த “ஹிக்ஸ் போஸான்” எந்த வகையைச் சேர்ந்த துகளென்று அறிய, துகள் பௌதிகத்தில் ஐயத்துக்கு அப்பால் முழுமையான ஆய்வு செய்யப் பட வேண்டும்.   ஆயினும், பூஜியச் சுழற்சி [Zero Spin] உறுதியாக்கப் பட்டதால், இந்தக் கண்டுபிடிப்பு புத்துணர்ச்சி உண்டாக்குகிறது !   பூஜியச் சுழற்சி கொண்ட முதல் அடிப்படைத் துகளே ஹிக்ஸ் போஸானாகத்தான் இருக்க வேண்டும்.”

    டாக்டர் வைட்பெர்க் [CERN Particle Physics Scientist]

    கடவுள் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு உறுதி செய்யப் பட்டது

    2012 ஜூலையில் பூதச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் விஞ்ஞானிகள் தடம் மட்டும் கண்ட கடவுள் துகள் எனப்படும் “ஹிக்ஸ் போஸான்” இப்போது [2013 மார்ச் 14]  விஞ்ஞானிகளால் ஏறக்குறைய [99.99%] உறுதி செய்யப்பட்டிருக்கிறது.   இந்த புதுத் துகள்தான் நமது பிரபஞ்சத்தின் தோற்றத்தின் மூலச் செங்கல் என்று கருதப்பட்டு அது இருப்பதாய் 1964 இல்  பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவரால் அனுமானிக்கப்பட்டது.   காணப்படாத இந்த கடவுள் துகளைக் கண்டுபிடிக்க  உலக விஞ்ஞானிகள் 10 பில்லியன் டாலர் செலவில் 27 கி.மீ. நீளமான [16 மைல்] செர்ன் விரவாக்கியைக் கட்டியமைக்க வேண்டியதாயிற்று !  இந்த விஞ்ஞானத் தேடல் கடந்த 25 ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடந்து வருகிறது.   அவ்விதம் அசுர சாதனை செய்து விஞ்ஞானிகள் தாம் தேடிய கடவுள் துகளை உருவாக்கிப் படமெடுத்து உறுதிப்படுத்தியது பெரிய நிதிச் செலவையும் நேரச் செலவையும் நேர்மைச் செல்வாக்குகிறது !  இப்போது செர்ன் நிறுத்தம் செய்யப் பட்டு இரண்டு வருடம் பராமறிப்புப் பணிகள் நடக்கும்.  அதற்குப் பிறகு செர்ன் விரைவாக்கி இருமடங்கு மிகையான ஆற்றலில் [14 TeV] 2015 இல் மீண்டும் இயங்கி ஐந்து வகை ஹிக்ஸ் போஸான்களை ஆக்கி  ஆழ்ந்த ஆராய்ச்சிகள் செய்யும்.

    ஹிக்ஸ் போஸான் ஓர் அடிப்படைத் துகள் !  மிகக் கனமானது !  சீக்கிரம் உடைந்து சிறு துகளாவது !  காலக்ஸிகள், சூரியன்கள், அண்டக்கோள்கள், கருந்துளை, கரும்பிண்டம், உயிரினங்கள்,  போன்ற பிரபஞ்சப் படைப்புகள் அனைத்துக்கும் “மூலச் செங்கல்” என்று கருதப்படுவது.  அதன் இருப்பு அனுமானமும், கண்டுபிடிப்பு உறுதிப்பாடும், பிரபஞ்சத் தோற்றப் பெருவெடிப்பு நியதியைப் பூர்த்தி செய்து வலுப்படுத்துகிறது.  “பூஜிய சுழற்சி” [Zero Spinன்] நிரூபணமான இந்த ஹிக்ஸ் போஸான் இல்லாமல் போனால் “துகள் பௌதிகத்தின் மாதிரி நிலைப்பாடு”  [Standard Model of Particle Physics] பிரபஞ்சத்தில் நிகழும் இயக்கங்களுக்கு விளக்கம் தர முடியாமல் போகும்.   அது இல்லாமல் ஈர்ப்பியல் விசையை விளக்கும் ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதிக்கு உடன்பாடு ஏற்படாது.

    Fig 1H God's Particle Higgs Boson

    1969 இல் சந்திரனுக்குக் குறிப் பயணம் செய்த மகத்தான மனித முயற்சி போல் ஹிக்ஸ் போஸான் துகளைத் தேடிச் சென்றதும் உலக மாந்தர் கவனத்தைக் கவர்ந்தது.   நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்பொல்லோ விண்வெளிக் குறிப் பணிகள்  பொதுமக்களை  விஞ்ஞானத் தேடல் கண்டுபிடிப்புகளில் ஈர்த்தன.   அடுத்த பிறவி விஞ்ஞானிகளுக்கும் புத்துணர்ச்சி ஊட்டி ஆர்வத்தைத் தூண்ட இந்தக் கடவுள் துகள் கண்டுபிடிப்பு நீடித்துச் செல்லும்.

    பேராசிரியர் பீட்டர் நைட் (Professor Peter Knight, President of Institute of Physics, UK. )

    ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுபிடிப்பு உயிரியல் விஞ்ஞானத்தில் “டி யென் ஏ” (DNA) மூலவி கண்டுபிடிப்புக்கு ஒப்பாகும்.  இது  டியென்ஏ  கண்டுபிடிப்பின் ஒரு பௌதிக வடிவம்.   நமது பிரபஞ்ச அமைப்புப் பின்னல் நாரைப் (Fabric of the Universe) புரிந்து கொள்ளும் முயற்சியின் போக்கில் புது தீரச் செயலுக்கு ஒரு பாதை உண்டாக்கும்.

    பேராசிரியர் பீட்டர் நைட்.

    கடவுள் துகள் கண்டுபிடிப்பு ஒரு மகத்தான சாதனை.   15 ஆண்டுகள் அகில நாடுகளின் கூட்டுறவில் மாபெரும் பரமாணு உடைப்பியைக் (Large Hadron Collider) கட்டி அமைத்ததின் பயனைப் பெற முடிந்தது.   இந்த அறிவிப்பானது  “துகள் பௌதிகத்தின்” நிலைத்துவ மாடல் (Standard Model of Particle Physics.) ஏற்பு உடையது என்பதை உறுதிப் படுத்தி உள்ளது.

    பேராசிரியர் பீட்டர் நைட்.

    “உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”

    ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)

    “செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”

    ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)

    “இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி வி¨சையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.

    டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)

    Fig 1 CERN Ready to Smash Protons


    “பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ந்து பில்லியன்த் தசம விநாடியில் (Billionth of a Second after the Big Bang) தோன்றிய திரைக் காட்சியைக் கண்டு விட்டோம். இந்தப் புதிய கட்டம் “முதல் பௌதிகம்” என்று பெயர் அளிக்கப் படுகிறது ! இவற்றைப் போல் இன்னும் ஈராண்டுகள் செய்யப் போகும் பல பில்லியன் புரோட்டான் மோதல்களின் துவக்கக் கட்டம் இது.”

    ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist)

    “இது உலகத் தோற்றத்தைக் கூறும் முதற்பிரிவு (Genesis Chapter -1) விளக்கம் நோக்கி மனிதர் வைக்கும் மாபெரும் கால்தடம் ! செர்ன் உடைப்பி பிரபஞ்சத் தோற்றப் படைப்பு யந்திரம் (Genesis Machine) ! பிரபஞ்ச வரலற்றின் மாபெரும் மகத்தான காட்சியை மீண்டும் திரையிட்டுக் காட்ட செர்ன் உதவுகிறது ! புதிரான இந்த நுண்துகள்களின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நாம் யாரென்னும் கருத்தை மாற்றி விடலாம் !”

    மிஸியோ காக்கு, பௌதிக மேதை (Michio Kaku, New York)

    “மேற்கட்ட செர்ன் சோதனையில் விரைந்து பாயப் போகும் எதிர் எதிர் ஒளிக்கற்றைகள் நேரிணைப்பு (Alignment of Beams) செய்யப் படவேண்டும். அது நிபுணருக்குப் பெரும் சவாலானது. அட்லாண்டிக் கடலின் அகண்ட இருபுறக் கரைகளி லிருந்து இரண்டு எதிர், எதிர் ஊசிகளை அனுப்பிக் கடல் நடுமையத்தில் அவற்றை மோத வைக்கும் சவாலைப் போலாகும்,”

    ஸ்டீவ் மையர்ஸ் (Steve Myers, Director of CERN Accelerators & Technology)

    “இந்தப் புதிய ஹிக்ஸ் போஸான் தேடல் விளைவுகள் டெவடிரான் விரைவாக்கியில் கிடைத்த ஏராளமான தகவல் இலக்கத்தாலும் (Tevatron Collision Data) அநேகப் பட்டப் படிப்பு நிபுணர் வடித்த கூரியக் கணித விதிகளாலும் (Smart Search Algorithms) கிடைத்தவை.”

    ராபர்ட் ரோஸர் (Fermilab Co-Spokeperson, CDF & DZero Analysis Groups)


    “ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியின் (Tevatron Collider) உற்பத்தியைத் தூண்டி உன்னத நிலைக்கு ஆய்வுகள் உயர்ந்துள்ளன.  டெவடிரான் உடைப்பியின் சிறந்த சோதனை விளைவுகளுக்கு நாங்கள் நன்றி செலுத்து கிறோம்.  உலக நாடுகளின் CDF & DZero சோதனை ஆய்வுக் கூட்டாள விஞ்ஞானிகள் சாதித்த விளைவுகள் துடிப்புணர்ச்சி உண்டாக்குபவை.  அவை ஹிக்கிஸ் போஸான் தேடல் ஆராய்ச்சியில் மகத்தான முன்னேற்றைக் காட்டியுள்ளன.”

    டெனிஸ் கோவர், (Dept of Energy Associate Director of Science for High Energy Physics)

    “உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”

    ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)

    “செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists).  இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”

    ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)

    “இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது.  அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும்.  மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி விசையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.

    டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)

    செர்ன் விரைவாக்கி யந்திரம் உண்டாக்கிய புரட்சிகரமான மூலத்துகள் ஹிக்ஸ் போஸான்

    சுமார் பதினாங்கு பில்லியன் ஆண்டுகட்கு முன்பு  நேர்ந்ததாகக் கணிக்கும் பிரபஞ்சப் பெருவெடித் தோற்றத்தில் முதன்முதல் உதித்ததாக யூகிக்கபட்ட “ஹிக்ஸ் போஸானைப்”  போன்ற ஒரு துகளைச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் புரோட்டான்களை மோத விட்டுக் கண்டுபிடித்திருப்பதாக பிரிட்டிஷ்  துகள் பௌதிக விஞ்ஞானிகள் 2012 ஜூலை 5 ஆம் தேதி  அறிவிப்பு செய்து ஒரு பரபரப்பை உண்டுபண்ணினார்.    அந்தத் துகளின் பெயர் :  ஹிக்ஸ் போஸான் (Higgs Boson).    அந்த அற்புதத் துகளை வடிவாக்கிய விரைவாக்கி யந்திரம் செர்ன் அல்லது  “பரமாணு பெரு உடைப்பு யந்திரம்” (CERN or Large Hadron Collider) என்பது.    கண்டுபிடித்த புதிய துகள், ஹிக்ஸ் போஸானின் பண்பாடுகள் கொண்டதற்கு மெய்யான சான்றுகள் கிடைத்துள்ளதாயினும் இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்ப நிலை செர்ன் ஆய்வு விளைவுகளை வைத்தே இப்போது அறிவிப்பு செய்யப் பட்டிருக்கிறது.   கடவுள் துகளின் உறுதிப்பாடு பூரணமாக இன்னும் ஏராளமான விளைவுப் பதிவுகள் ஆராயப்பட நீண்ட காலம் ஆகலாம்.   புதுத் துகள் எந்த விதமான வடிவம் எடுத்தாலும் சரி, இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு அணுப் பிண்டத்தின் அடிப்படை அமைப்பு (Fundamental Structure of Matter) பற்றிய நமது பழைய அறிவு பேரளவில் உயர்ந்து முன்னேறப் போகிறது.

    2012 ஜூலை ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த செர்ன் விரைவாக்கி ஆய்வு நிபுணர் நடத்திய “துகள் பௌதிகப் பேரவையில்” (Major Particle Physics Conference) பிரிட்டிஷ் துகள் விஞ்ஞானிகள் இந்த அரிய கண்டுபிடிப்பை முதன்முதல் வெளியிட்டனர்.  நீண்ட காலம் எதிர்பார்த்த ஹிக்ஸ் போஸான் துகள்  உண்டாக்கிய செர்ன் அட்லாஸ், சி யெம் எஸ் சோதனைக் கருவி விளைவுகளை (ATLAS, CMS Experiments)  அறிவித்தார்.   இரண்டு சோதனைக் கருவிகளின் விளவு களும் 125 –126 GeV (Gega Electron Volt Energy) கெகா எலக்டிரான் ஓல்ட் சக்தியுள்ள துகளை உருவாக்கின.  இந்த அறிவிப்பு முன்னோடி விளைவுகளை (Preliminary Results) வைத்துச் செய்யப் பட்டது.   ஆனால் பூரண உறுதி அளிப்பதற்கு இன்னும் ஆராயப் பட வேண்டிய சோதனை விளைவுகள் ஏராளமாய் உள்ளன.   விஞ்ஞானிகள் ஆயினும் ஹிக்ஸ் போஸான் பண்பாடு உள்ள ஓர் புதுத் துகளை நிச்சயம் செர்ன் விரைவாக்கி உண்டாக்கிய விட்டதாக உறுதியாக அறிவித்தார்கள்.  2012 ஜூலை மாதக் கடைசியில் அனைத்து விளைவுகளும் ஆய்வு செய்யப் பட்டு முடிவான அறிவிப்பு செய்யப்படும் என்பது தெரிகிறது.

    2013 Higgs Boson confirmation

    ஹிக்ஸ் போஸான் மூலத்துகள் கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் என்ன ?

    இரண்டாம் உலகப் போரின் போது 1945 இல் நூற்றுக்கணக்கான அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் சோதனைத் தளத்தில் அணுவைப் பிளந்து தொடரியக்கத்தைக் கட்டுப் படுத்தி அணுசக்தியின் பேராற்றலை முதன்முதல் வெளிப்படுத்திய நிகழ்ச்சி, நூற்றுக் கணக்கான உலக விஞ்ஞானிகள் ஐரோப்பிய செர்ன் விரைவாக்கியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து பிரபஞ்ச தோற்றத்தின் கடவுள் துகளை உருவாக்கிக் கண்டுபிடித்ததற்கு நிகராகும்.   இப்போது செர்ன் விஞ்ஞானிகளின் குறிக்கோள் என்ன ?   கண்டுபிடித்த ஹிக்ஸ் போஸான் துகளின் துல்லிய இயற்கைப் பண்புகளை ஆழ்ந்து அறிவது,  அதனால் இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி விளக்கமாக அறிவது போன்ற புதிய விபரங்களே.   அவ்விதம் பெற்ற துகளின் பண்பாடுகள் துகள் பௌதிகத்தில் இறுதியாக நிலைத்துவ மாடலில் நிரப்பப் பட வேண்டிய உட்கூறா (Missing Ingredient in the Standard Model of Particle Physics) என்பது தெளிவாக்கப் படும்.    அல்லது ஹிக்ஸ் போஸான் துகள் புரட்சி உண்டாக்கப் போகும் ஒரு புது அதிசயமா என்பது அறியப் படும்.

    துகள் பௌதிகத்தின் நிலைத்துவ மாடல் என்ன சொல்கிறது ?   நாம் தோன்றக் காரணமான மூலாதார துகள்கள், பிரபஞ்சத்தில் காணப்படும் அண்ட பிண்டங்கள் உண்டாக உதவிய அடைப்படைத் துகள்கள்,  அவற்றுடன் பின்னிப் பிணைந்து இயக்கி வரும் அகில விசைகள் (Forces of the Universe) ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது.    பிரபஞ்சத்தில் அண்ட பிண்டங்களின் இருப்பு  மொத்தத்தில் 4%  மட்டுமே.   தற்போது கண்டுபிடிக்கப் பட்ட கடவுள் துகள் 96% மர்மாக இருக்கும் பிரபஞ்ச மீதிப் புதிரை விடுவிக்க ஒரு பாலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   ஹிக்ஸ் போஸான் பற்றிய ஆணித்தரமான விளக்கம்  வெளிவர இன்னும் செர்ன் சோதனை விளைவுகளை ஆராய நீண்ட காலம் ஆகும் என்று அறியப் படுகிறது.

    ஹிக்ஸ் போஸானை முன்மொழிந்த பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ்

    கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் அதை ஊகித்து விளக்கிய பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் பெயரைக் கொண்டது.  1964 இல் அவர் ராபர்ட் பிரௌட், பிரான்காய் எங்லெர்ட், டாம் கிப்பிள், ஹேகன், ஜெரால்டு குரல்னிக் ஆகியோரின் கருத்துக்களுடன் மூன்று வெளியீடுகள் வெளியிட்டார்.   அந்தக் கோட்பாடு ஹிக்ஸ் தளம், போஸான் சார்ந்த ஹிக்ஸ் யந்தரவியல் (Higgs Mechanism Related to Higgs Field & Boson) என்று அழைக்கப் பட்டது.    ஹிக்ஸ் போஸான் ஒரு கனமான துகள் ஆனதால், அது செர்ன் விரைவாக்கியில் உருவானதும் உடனே சிதைந்து வேறு சிறு பரமாணுக்களாய் மாறுகிறது (It decays almost immediately into two jets of hadrons and two electrons, visible as lines.)   ஹிக்ஸ் போஸான் தேடல் செர்ன் விரைவாக்கியில் 2010 ஆண்டின் ஆரம்ப காலத்தில் துவங்கி,  அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் விரைவாக்கியில்  2011 ஆம் ஆண்டில் அது மூடுவது வரை ஆய்வு செய்யப் பட்டது.

    பரமாணுகளுக்கு நிறை தருவது (Mass) இந்த ஹிக்ஸ் போஸான்.  ஹிக்ஸ் தளத்தின் ஈடுபாடே  (Higgs Field Interaction) அடிப்படைத் துகள்களுக்கு நிறை கொடுக்க ஏதுவாகிறது.   ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசையே  அதன் மீதுள்ள பொருளுக்கு எடை கொடுப்பது போல் அதைக் கருதலாம்.   ஈர்ப்பு விசை பூஜியமானால் பொருளுக்கும் எடை இல்லாது போகும்.  ஹிக்ஸ் துகள் ஒரு போஸான் துகள்.   அடிப்படைத் துகள் சில இந்திய விஞ்ஞானி சத்தியேந்தர  நாத் போஸ் பெயரைத் தாங்கி  உள்ளன.   அவர் ஐன்ஸ்டைன் காலத்தில் அவருடன் விஞ்ஞானப் பணி செய்தவர்.   போஸன் துகள் ஒரு தனிப் பண்பு கொண்டது.  அது அதைப் போன்று ஒத்திருக்கும் பற்பல துகள்களை ஒரே இடத்தில், ஒரே குவாண்டம் நிலையில் (Quantum State)  வைத்திருக்க அனுமதிக்கும்.   மேலும் நிலைத்துவ மாடல் விதிப்படி ஹிக்ஸ் போஸானுக்கு சுழற்சி இல்லை, நேர், எதிர் மின்னேற்றங்கள் கிடையா.   நிற ஏற்றமும் இல்லை.  (No Intrinic Spin, No Electrical Charge, No Color Charge).

    Dark Matter in the Universe

    பூர்வீக மூலத் துகள் தேடலில் நெருங்கிச் சென்ற முதல் விரைவாக்கி யந்திரம்

    வெகு விரைவில் உலகப் பெரும் விரைவாக்கி புதிய அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்கத் துவங்கும் நிலைக்கு வந்து விட்டதென்று ஒரு பெரும் செர்ன் விஞ்ஞானி அறிவித்தார். செர்ன் யந்திரத்தின் சமீபத்திய இயக்க முன்னேற்றம் தொடர்ந்தால், விஞ்ஞானிகள் இவ்வாண்டு வேனிற் கால முடிவுக்குள் துகள் பௌதிகத்தில் (Particle Physics) புதியதோர் திருப்பத்தை உண்டாக்குவார் என்று தெரிந்தது. அவற்றுள் முதலில் கண்டுபிடிக்கப்பட இருப்பவை ஏற்கனவே உள்ளதாக ஊகிக்கபட்ட இரண்டு போஸான் துகள்கள் (Boson Particles). பத்து பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப் பட்டு ஆரம்பத்தில் ஹீலியம் கசிந்து பழுதுகள் நீக்கப் பட்டு முதன்முதல் 2009 நவம்பரில் செர்ன் விரைவாக்கி யந்திரம் செம்மையாக இயங்க ஆரம்பித்து பல பில்லியன் மோதல்களை உண்டாக்கி விட்டது. பிரென்ச்-சுவிஸ் எல்லையில் ஜெனிவாவுக்கு அருகில் 27 கி.மீ. விட்டமுள்ள வட்ட அடித்தளத்தில் இயங்கி வருகிறது செர்ன் விரைவாக்கி யந்திரம். அந்த உலகப் பெரும் விரைவாக்கி அணுவின் அடிப்படைத் துகள் “ஹிக்ஸ் போஸான்” என்பதை 1000 GeV (Gega-electron Volt) மின்னாற்றலில் காணலாம் என்று விஞ்ஞானிகளால் ஊகிக்கப் பட்டது.

    புரோட்டான் நிறையைப் போல் ஆயிரம் மடங்கு பெரிதானது ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்னும் ஊகிப்பு அடிப்படைத் துகள். இந்த நிறை அளவீட்டில் முதலில் உதிக்கும் புதிய துகள்கள் ‘பிரதம W போஸான்கள்’ & ‘பிரதம Z போஸான்கள்’ (W Prime Bosons & Z Prime Bosons). இவை இரண்டும் கனமான போஸான்கள்.. மெலிந்த போஸான்கள் எனப்படும் ‘W போஸான்கள்’ & ‘Z போஸான்கள்’ (W Bosons & Z Bosons) நலிந்த இயக்கப்பாடுகளுக்குப் (Weak Interactions OR Weaker Nuclear Force) பொறுப் பானவை. நான்கு அடிப்படை இயக்கப்பாடுகள் : ஈர்ப்பியல் சக்தி, மின்காந்த சக்தி, வலுத்த அணுக்கருச் சக்தி, நலிந்த அணுக்கருச் சக்தி. (Four Fundamental Interactions of Nature: Gravitation, Electromagnetism, Strong Nuclear Force & Weaker Nuclear Force).

    1980 இல் W போஸான் & Z போஸான் ஆகிய இரண்டும் 100 GeV (Gega-Electron Volt) சக்தியில் பழைய செர்ன் விரைவாக்கியில் கண்டுபிடிக்கப்பட்டன. நிறை மிகையான துகள்களைப் பதிவு செய்ய அதிக சக்தி வாய்ந்த தற்போதுள்ள விரைவாக்கி யந்திரம் செர்ன் போல அமைக்க வேண்டியதாயிற்று. ஒரு சில மாதங்களில் செர்னில் 1000 GeV மின்னாற்றல் உண்டாக்க முடியும் என்று ஆக்ஸ்·போர்டு பல்கலைக் கழகத்தின் துகள் பௌதிகவாதி டாக்டர் டோனி வைட்பர்க் கூறுகிறார். செர்ன் விரைவாக்கியில் இவ்வாண்டும், அடுத்த ஆண்டும் 3.5 TeV (Tetra- Electron Volt) மின்னாற்றலில் கணை மோதல்கள் நடத்தப் படும். செர்ன் பொறியியல் நிபுணர் படிப்படியாக மின்னாற்றலை மிகையாக்கி வருவார். 18 முதல் 24 மாதங்கள் நீடிக்கப் போகும் பில்லியன் கணக்கான செர்ன் விரைவாக்க மோதல் களின் விளைவுகளை ஆராய்வதற்குச் சில ஆண்டுகள் கூட ஆகலாம் ! கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மோதல்களின் எண்ணிக்கை (10^27) (10 to the power 27). இப்போது எண்ணிக்கை (10^29). இந்த வாரத் திட்டம் (ஜூன்–ஜூலை) மோதல்கள் எண்ணிக்கை : (10^30). செர்ன் விஞ்ஞானி களின் குறிக்கோள் திட்ட எண்ணிக்கை : (10^34) மோதல்கள். இதுவரைப் புரோட்டான் வேகத்தை ஒளி வேகத்துக்கு ஒட்டி (99.99% ஒளிவேகம்) சக்தி ஆற்றலை 7 TeV அளவு உயர்த்தி உள்ளார். முடிவான குறிக்கோள் திட்ட ஆற்றல் : 14 TeV. செர்ன் விரைவாக்கியின் முழுத் தகுதிச் சக்தியில் விநாடிக்கு 600 மில்லியன் மோதல்கள் நிகழும். அப்போது டிரில்லியன் கணக்கில் புரோட்டான்கள் விரைவாக்கி வட்டக் குழலில் விநாடிக்கு 11245 தடவை சுற்றிவரும் !

    விரைவாக்கியில் பெரு வெடிப்பு இயக்கம் நுண்துகள் உளவும் கருவிகள்

    ஆறு முக்கிய கருவிகளின் பெயர்கள் இவை: (CMS, Atlas, Alice, LHCb, Totem & LHCf) அவை புரியும் பணிகள் என்ன ?

    1. அட்லாஸ் உளவி (ATLAS Detector – A Toroidal LHC Apparatus) : 150 அடி (46 மீடர்) நீளமுள்ள இந்தக் கருவி எல்லாவற்றிலும் பெரியது. இரண்டு கருவிகள் உள்ளன. அவை பிண்ட ஆரம்பத்தைக் காணும். புதிய பௌதிகம், பிறப் பரிமாணம் (Extra Dimension) காணும்.

    2. CMS Detectors (Compact Muon Solenoid) : இதுதான் ஹிக்கிஸ் போஸான்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் கருவி. கரும்பிண்டத்தின் இயற்கைப் பண்பாடையும் உளவும். இது பன்முக உளவுக்குக் கருவி (Multi-Purpose Detector)

    Higgs boson Established

    3. ALICE (A Large Ion Collider Experiment) : இது திரவப் பிண்டத்தைக் கண்டுபிடிக்கும்.
    (Liquid form of Matter called Quark-Gluon Plasma that existed shortly after the Big Bang)

    4. LHCb (Large Hadron Collider Beauty) : பெரு வெடிப்பில் தோன்றிச் சரிபாதி இருக்கும் பிண்டம், எதிர்ப்பிண்டம் (Matter & Anti-Matter) ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது. இழந்து போன எதிர்ப்பிண்டத்துக்கு என்னவாயிற்று என்று உளவு செய்யும்.

    5. LHCf (Large Hadron Collider Forward) விண்வெளியில் இயற்கையாக உண்டாகும் மின்னேற்றத் துகள்கள், அகிலக் கதிர்கள் (Charged Particles & Cosmic Rays) போலி இருப்பை ஏற்படுத்தும்.

    6. Totem இது புரோட்டான்கள் எவ்விதம் சிதறும் என்று கண்டு அவற்றின் நிறையை அளக்கும்.

    செர்ன் விரைவாக்கி என்ன முடிவுகளைக் கண்டுள்ளது ?

    செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சத்தின் புதிர்களை விடுவிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டது என்று ஆங்கு பணி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார். நுண்துகளுக்கு நிறை எதனால் ஏற்படுகிறது ? கடவுளின் துகள் எனப்படும் ‘ஹிக்ஸ் போஸான்’ நுண்துகளுக்கு நிறை அளிப்பது என்று முன்பே யூகிக்க பட்டதுதான். இப்போது செர்ன் விநாடிக்கு 10,000 மோதல்களை உண்டாக்குகிறது என்று பௌதிக விஞ்ஞானி ஆன்ரி கொலூட்வின் (Anderi Golutvin) குறிப்பிடுகிறார். விநாடிக்கு எத்தனை அளவு மோதல்கள் மிகையாகுமோ அத்தனை அளவு நெருக்கத்தில் “உச்ச சீரமைப்பு”, “பிண்டம்”, “ஹிக்ஸ் போஸான்” (Supersymmetry, Dark Matter, Higgs Boson) ஆகியவற்றை அடைகிறோம் என்று பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார். “செர்ன் விரைவாக்கியின் கருவி (LHCb) எதிர்ப் பிண்டத்தின் (Anti-Matter) இயற்கைப் பண்பாட்டை நுட்பமாய் நோக்கும். அதே கருவி சமீபத்தில் முதன்முதலாக “நளினி” “விபரீத அழகி” என்னும் இரண்டு பரமாணுக் களைக் (Sub-atomic Particles, Called : Charm & Strange Beauty) கண்டு பிடித்துள்ளது. “விபரீத அழகி” நுண்துகளை முதன்முதல் கண்டுபிடித்த எனது குழுவினர் பேருவகை அடைந்தனர்.

     

    இயல் பிண்டத்தைப் (Normal Matter) போலின்றி மாறாக இயங்கும் எதிர்ப் பிண்டத்தை (Anti-Matter) அறிய நாங்கள் இந்த நுண்துகளை பயன்படுத்துவோம். ‘விபரீத அழகி’ நுண்துகளைப் பற்றி வேறு யாரும் அறியார். அதுவே செர்ன் விரைவாக்கி யந்திரத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது.” என்று லிவர்பூல் பல்கலைக் கழக ஆய்வாளர், டாக்டர் தாரா ஸியர்ஸ் கூறினார். செர்ன் விரைவாக்கியின் சக்தியும், இயக்கமும் தயாராகி “ஹிக்ஸ் போஸான்” நுண்துகளைக் கண்டுபிடிக்க 2011 ஆண்டு ஆரம்ப மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டர் வைட்பர்க் கூறுகிறார்.

    அணுகருவுக்குள் இருக்கும் புரோட்டான் மிகவும் சிக்கலான துகள். அதனுள் குவார்க்குகள், குளுவான் உள்ளன. இந்த வார முடிவில் விஞ்ஞானிகள் முதன்முதல் எதிர் எதிர் வரும் முத்திரட்சி உள்ள இரு புரோட்டான் கற்றைகளை (Two Beams Consisting Three Bunches of Protons) செர்ன் விரைவாக்கியில் மோத விட்டார். முதல் முறையாக செர்ன் படைப்புத் திறனில் இயங்கி இயல் அடர்த்தியில் (Normal Intensity) இம்மூன்று திரட்சிகளும் இருந்தன. ஆதாவது ஒவ்வொரு திரட்சியிலும் 100 பில்லியன் புரோட்டான்கள் உச்ச அளவில் ஏவப்பட்டன.

     

    Fig 1D Comparative Size of Particles

     

    இப்போது பாதி அளவுத் தீவிரத் திறனில்தான் (7 TeV) செர்ன் இயங்கியுள்ளது. ஒவ்வொரு கற்றையும் முழுத் திறமையில் (14 TeV) இயங்க 2014 ஆண்டில்தான் முடிவான சோதனையாக இருக்கும். முடிவான குறிக்கோள் திட்டம் 2808 திரட்சிகளை ஒரு கற்றைக்குள் உண்டாக்குவது. அது 2016 ஆண்டில்தான் நிகழும் என்று நம்பப் படுகிறது. புரோட்டான்கள் ஓடிச் சென்று மோதிக் கொள்ளும் வட்ட வளைக் குழலில் நான்கு பெரிய சோதனை நிகழ்த்திப் பிரபஞ்ச மர்மத்தின் புதிய பௌதிகப் படிக்க நான்கு கருவிகள் [Compact Muon Solenoid (CMS), (Atlas, Alice, LHCb] அமைக்கப் பட்டுள்ளன. இந்தக் கருவிகளின் விளைவுகளை ஆராயும் தலைமைத் திட்ட விஞ்ஞானி : டாக்டர் கொலூட்வின். கற்றையில் திரட்சிகள் கூடும் போது விஞ்ஞானிகள் ஒரு சிறு கருந்துளை (Mini Black Hole) தோன்று வதை எதிர்பார்க்க லாம் !  “செர்ன் விரைவாக்கியில் கருந்துளைகளை நாங்கள் படைக்க முடிந்தால் அது பேருவகை அளிக்கும் எங்களுக்கு”, என்று பௌதிகப் பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார்.


    இத்தாலிய விஞ்ஞானி வெளியிட்ட ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு வதந்தி

    2010 ஜூலை 12 இல் இத்தாலியின் படோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிக விஞ்ஞானி தாமஸோ தோரிகோ (Tommaso Dorigo, University of Padova) இரண்டு மூலாதாரத் தகவல் வழியாக தன் காதில் விழுந்த வதந்திச் செய்தியைத் தன் வலை இதழில் குறிப்பிட்டு எழுதினார்.  அதாவது சிகாகோவில் இருக்கும் ·பெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியில் (Fermilab’s Tevatron Collider) செய்த சோதனையில் முதன்முதலாக உற்பத்தியான ஓர் “எளிய ஹிக்ஸ் போஸான்” துகளுக்குச் (Light Higgs Boson) சான்று உள்ளதை வெளியிடப் போவதாக அறிந்தாராம்.  இதை வெறும் வதந்தி என்று ஒதுக்கியவர் சிலர்.  அடுத்துக் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பைப் பற்றி ஃபெர்மி ஆய்வகத்தின் நிபுணரோ, செர்ன் விரைவாக்கி (CERN Accelerator) விஞ்ஞானிகளோ  வெளியிடப் போவதைப் பலர் எதிர்பார்த்திருக்கிறார்.  ஆனால் எவ்வித ஆதாரமின்றி, நிரூபணம் இல்லாமல் இப்படி ஒரு விஞ்ஞான வதந்தி ஒரு பெரும் இத்தாலிய பௌதிக நிபுணர் மூலம் வெளியானதில் சிறிதளவு மெய்ப்பாடும் இருக்கிறது.

    பிரபஞ்சப் பெரு வெடிப்பு நிகழ்ந்து ஒரு சில விநாடிகளில் தோன்றிய கனநிறைத் துகள்களில் “ஹிக்ஸ் போஸான்” என்பது ஒன்று என்னும் அழுத்தமான யூகம் விஞ்ஞானிகளிடையே நிலவி யுள்ளது.  அதனால் அது “கடவுள் துகள்” என்றும் பலரால் மதிக்கப் படுகிறது.

     

    ஐரோப்பாவில் உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியிலும் புரோட்டான் கணைகளை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் மோத விட்டு விஞ்ஞானிகள் இதே “ஹிக்ஸ் போஸானைக்” காணத்தான் துடித்துக் கொண்டிருக்கிறார்.  ஃபெர்மி ஆய்வக விஞ்ஞானிகள் “எளிய நிறை ஹிக்ஸ் போஸானை” முதன்முதலில் கண்டு விட்டார் என்னும் செய்தி செர்ன் விஞ்ஞானிகளுக்கு ஓர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் !

    ஆனால் ஃபெர்மி ஆய்வகம் தனது புதுக் கண்டுபிடிப்புப் பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பும் இதுவரைச் செய்ய வில்லை.  எளிய நிறை ஹிக்ஸ் போஸானை ஃபெர்மி விஞ்ஞானிகள் டெவடிரான் விரைவாக்கிச் சோதனையில் உற்பத்தி செய்ததை மட்டும் மறுக்கவில்லை.  ஆனால் ஹிக்ஸ் போஸான் உற்பத்திச் சோதனையில் தாமொரு முன்னேற்றைப் புரிந்துள்ளதாக அறிவித்தார்.  அதாவது 50-50 வாய்ப்பு முறையில் இந்த ஆண்டு (2010) முடிவுக்குள் அல்லது 2011 ஆண்டு துவக்கத்துக்குள் ஹிக்ஸ் போஸான் இருப்பை அழுத்தமாக வெளியிடத் தகுந்த அளவு தகவல் சான்றுகளோடு வருவோம் என்று அறிவித்தனர்.

     



    ஃபெர்மி ஆய்வக டெவடிரான் உடைப்பியின் மகத்தான சாதனைகள்

    1983 இல் சிகாகோ அருகில் (Batavia, Illinois, USA) 120 மில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப் பட்ட டெவடிரான் விரைவாக்கி (1994-1999) இல் 290 மில்லியன் டாலர் நிதிச் செலவில் அடுத்தடுத்து மேம்படுத்தப் பட்டது.  1995 இல் அதன் நிபுணர்கள் (CDF & DZero Experiment Collaborators) முதன்முதல் “மேல் குவார்க்” (Top Quark) அடிப்படைத் துகளை உற்பத்தி செய்து கண்டுபிடித்தார் !  அடுத்து 2007 இல் மேல் குவார்க்கின் நிறையை 1% துல்லிமத்தில் அளந்தார்.  2006 ஆம் ஆண்டில் இருவித “சிக்மா பரியானைக்” (Two Types of Sigma Baryon) கண்டுபிடித்தார்.  2007 ஆம் ஆண்டில் செய்த சோதனையில் (DZero Experiment) புதுவித பரியான் (Xi Baryon) ஒன்றைக் கண்டுபிடித்தார்.  2008 இல் அதே சோதனையில் மீண்டும் வேறு வித பாரியானைக் (Double Strange Omega Baryon) கண்டுபிடித்தார்.

    அமெரிக்க எரிசக்தித் துறையகத்தைச் சேர்ந்த ஃபெர்மி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் (US Dept of Energy, Fermilab Scientists) செய்த இரண்டு புரோட்டான் உடைப்புச் சோதனைகளில் (CDF & DZero Collider Experiments) கீழ்க்காணும் விளைவுகள் நிகழ்ந்தன.  இந்தச் சோதனைகள் 158 முதல் 175 GeV/C2 வரை நிறையுள்ள ஹிக்ஸ் போஸான் துகள்களைத் தவிர்த்து விட்டன.  துகள் பௌதிக நிலவர மாதிரிப்படி (Standard Model of Particle Physics) ஹிக்ஸ் போஸானின் நிறை 114 முதல் 185 GeV/C2 முடிய இடைப்பட்டு இருக்க வேண்டும்.  (ஒப்பீடாகச் சொல்லப் போனால் நிறை 100 GeV/C2 அளவு என்பது 107 மடங்கு புரோட்டான் நிறைக்குச் சமமாகும்).  இந்த விஞ்ஞான விளைவுகள் யாவும் ஜூலை 22-28, 2010 தேதிகளில் பாரிசில் நடந்த அகில நாட்டு உயர் சக்திப் பௌதிகப் பேரவையில் (International Conference on High Energy Physics (ICHEP-2010) விவாதிக்கப் பட்டன.  அப்போது இத்தாலிய விஞ்ஞானி எழுதிய ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு வதந்தி பொய்யானது என்று கூறப்பட்டது !

    வியக்கத் தக்க முறையில் பூமியில் ஏற்படும் பூகம்பங்களை உளவி எச்சரிக்கை செய்துள்ளது டெவடிரான் விரைவாக்கி !  அதனுடைய அடித்தளக் காந்தங்கள் மிக்கக் கூர்மையானவை.  ஆயிரக் கணக்கான மைல் தூரத்தில் மிகச் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதை உணர்ந்தறியும் வல்லமை படைத்தவை டெவடிரான் மின் காந்தங்கள் !  2004 இல் இந்து மாக்கடலில் எழுந்த அசுரப் பூகம்பத்தையும், சுனாமியையும் உளவி அறிந்தது.  மறுபடியும் சுமாத்ராவில் 2005 இல் நேர்ந்த கடல் பூகம்பம், 2007 இல் நியூ ஸீலாந்தில் கிஸ்போர்ன் நிலநடுக்கம் (Gisborne Earthquake), 2010 ஹெய்தி பூகம்பம், 2010 சில்லியின் நிலநடுக்கம் ஆகியவற்றை டெவடிரான் கண்டுபிடித்து அறிவித்தது.

    ஃபெர்மி ஆய்வகத்தின் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு

    இத்தாலிய விஞ்ஞானி பேராசிரியர் தாமஸோ தோரிகோ சொல்லிய தகவலை நம்பினால் அது “முச்சிக்மா முத்திரையாக” (Three Sigma Signature) எடுத்துக் கொள்ளப்படலாம்.  அதன் அர்த்தம் என்ன வென்றால் புள்ளி விபரப்படி 99.7% அந்தக் கூற்று மெய்யானது என்பதே.  உலகக் கண்கள் ஐரோப்பாவின் செர்ன் பரமாணு உடைப்பி மீது விழுவதால், அதுதான் ஹிக்ஸ் போஸானை முதலில் கண்டுபிடிக்கும் என்னும் கருத்து இப்போது மாறி விட்டது.  கடந்த 27 ஆண்டு களாக (1983-2010) அடுத்தடுத்து சிகாகோ டெவடிரான் செம்மையாக்கப் பட்டு மேன்மைப் படுத்தப் பட்டுள்ளது.  ஃபெர்மி ஆய்வகம் டெவடிரான் விரைவாக்கி மூலம் ஒரு குவார்க்கையும், நான்கு வித பாரியான்களை இதுவரை உற்பத்தி செய்து நிரூபித்துள்ளது.  எளிய ஹிக்ஸ் போஸான் ஒன்றை முதன் முதலில் உற்பத்தி செய்து காட்டி, ஃபெர்மி ஆய்வகம் அற்புதக் “கடவுள் துகளைக்” காணும் காலம் நெருங்கியது என்பதே இந்த இத்தாலிய விஞ்ஞானியின் தகவலுக்கு உறுதி அளிக்கிறது.  ஹிக்ஸ் போஸான் துகளே கடைசித் துகளாக துகள் பௌதிகத்தின் நிலவர மாடலாகக் (The Standard Model of Particle Physics) கருதப் படுகிறது. கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டதால், நிலவர மாடல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அப்படி இல்லாவிட்டால் பழைய துகள் நியதிகள் மீளாய்வு செய்யப் படவேண்டும்.  2012 ஜுலை 6 ஆம் தேதி செர்ன் விரைவாக்கி துகள் விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான் போன்ற ஒரு கனத்துகளைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.    இது ஆரம்ப நிலை விளைவின் முடிவு மட்டுமே.  இன்னும் ஏராளமான செர்ன் விரைவாக்கியின் சோதனை விளைவுகள் ஆராயப் பட வேண்டும்.   கண்டுபிடித்த துவக்க நிலை கடவுள் துகளின் தடத்தை வைத்து, அது ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்று  துகள் விஞ்ஞானிகள் அழுத்தமாக நம்புகிறார்.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: Fermilab, Chicago, USA, CERN, Geneva Websites.,

    1 CERN Large Hadron Collider – Particle Physics – A Giant Takes on Physics’ Biggest Question By : The New York Times (May 15, 2007)
    2 CERN Fires up the New Atom Smasher to Near Big Bang By : Alexander Higgins [Sep 7, 2008]
    3 World’s Largest Atom Smasher (CERN) Completion [March 26, 2008]
    4. Time Magazine Report – The Moment [September 10, 2008] Geneva [Sep 22, 2008]
    5 CERN Atom Smasher – Latest Wikipedia Report.
    6 BBC News What Happened to the Big Bang Machine (Sep 20, 2008)
    7 BBC News LHC Gets Colder than Deep Space By Paul Rincon (Oct 16, 2009)
    8 BBC News Particle Beams Injected into LHC (Oct 26, 2009)
    9 Rebirth of the LHC : The Search for the God Particle Resumes (Nov 2, 2009)
    10 Second Chance of Large Hadron Collider To Deliver Universe’s Secrets By : Robin McKie, Geneva (Nov 1, 2009)
    11. http://jayabarathan.wordpress.com/2008/09/18/cern-atom-smasher/ (CERN Article-1)
    12 http://jayabarathan.wordpress.com/2008/09/26/cern-atom-smasher-2/ (CERN Article-2)
    13 http://jayabarathan.wordpress.com/2009/11/05/cern-worlds-greatest-atom-smasher/ (CERN Article-3)
    14 http://jayabarathan.wordpress.com/2010/03/25/cern-atom-smasher-4/ (CERN Article-4)
    14(a) http://jayabarathan.wordpress.com/2010/04/02/cern-atom-smasher-5/ (CERN Article-5)
    14(b) http://jayabarathan.wordpress.com/2010/04/09/cern-atom-smasher-6/ (CERN Article-6)
    14(c) http://jayabarathan.wordpress.com/2010/07/03/cern-atom-smasher-7/ (What is Happening in CERN ?)
    15 BBC News LHC High Energy Results Published By Jason Palmer (Feb 9, 2010)
    16 BBC News : LHC Smashes Energy Record Again (March 19, 2010)
    17 BBC News : God Particle Hunt Set to Start By Paul Rincon (March 23, 2010)
    18 http://en.wikipedia.org/wiki/Large_Hadron_Collider (CERN Atom Smasher) (25 March 2010)
    19 BBC News : The Science of LHC By Paul Ricncon (Nov 20, 2009)
    20 BBC News : Collider Sees High-Energy Success (March 30, 2010)
    21 Large Hydron Atom Smasher Reaches Near Speed of Light (Daily Galaxy) March 31, 2010
    22 Deep Thought – The Large Hadron Collider Could Prove the Existence of a Parallel Universe (Daily Galaxy 2009 Top Story) Jan 6, 2010
    23 Atom Smasher Will Keep Revealing “The Beginning” (CTV News, Canada) March 30, 2010
    24. Why the Large Hadron Collider (LHC) ? A Few Unanswered Questions
    25. What Will the Large Hadron Collider (LHC) Reveal ? By : Steve Giddings Los Angeles Times(January 7, 2010)
    26. Will the LHC Solve the Mystery of the Great Attractor ? By Casey Kazan, Daily Galaxy (Jan 11, 2010)
    27 ABC News – Atom Smasher Closer to Big Bang By : Rachael Brown (March 31, 2010)
    28 BBC News : LHC Particle Search Nearing By : Paul Rincon (May 17, 2010)
    29 Space Daily – World’s Biggest Atom Smasher Gains Pace : CERN By : Staff Writers (June 28, 2010)
    30 BBC News : LHC Smashes Beam Collision Record By Katia Moskvitch (June 28, 2010)
    31 Telegraph, New Scientist – The Tevatron Accelerator – Competition with Large Hadron Collider Heats Up By Clay Dillow (July 12, 2010)
    32 Fermilab Web / Space Daily Fermilab Experiments Narrow Allowed Mass Range for Higgs Boson (July 26, 2010)

    32 (a) http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=41003121&format=html  (Satyendranath Bose)

    33. Wikipedia The Tevatron Collider, Fermilab (August 3, 2010)
    34 New Scientist Magazine ” Who Will Find the God Particle First ?” (Will an old Faithful Find the Higgs ?) By : Rachel Coutland (July 24, 2010)
    35.  http://jayabarathan.wordpress.com/2010/07/03/cern-atom-smasher-7/  (July 3, 2010)
    36.  http://jayabarathan.wordpress.com/2010/08/07/god-particle-rumour/  (August 7, 2010)
    37  Daily Galaxy :  News of the Century  ?  CERN to Announce its Findings on Higgs Boson Tomorrow (July 3, 2012)
    38.  Time & Space : CERN Experiments Observe Particle Consistent with Long-Sought Higgs Boson (July 5, 2012)
    39. Time & Space :  A New particle has been Discovered- Chances are, it is the Higgs Boson(July 5, 2012)
    40.  Time & Space :  Higgs Boson Hunters Declare Victory – as Significant as DNA Discovery  (July 5, 2012)

    41.  http://www.bbc.co.uk/news/science-environment-21421460 LHC switches off for two-year Maitenance  [February 14, 2013]

    42. http://www.bbc.co.uk/news/science-environment-21785205 LHC cements Higgs boson identification [Masrch 14, 2013]

    43. CERN: LHC Data Confirms Particle is “God Particle”, But the Devil is in the Details [March 14, 2013]

    44  Daily Galaxy : LHC Data confirms Higgs Boson [March 14, 2013]

    45.  http://en.wikipedia.org/wiki/Higgs_boson  [March 2013]

    46.  Daily Tech CERN: LHC Data Confirms Particle is “God Particle”, But the Devil is in the Details  [March 14, 2013]

    47.  http://rt.com/news/higgs-boson-found-confirmed-274/  [March 15, 2013]

     

    ******************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (March  17, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • மயிலுக்கு ஆட்டத்தையும் மானுக்கு துள்ளலையும்…

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    ஒருவரை ஒருவர் விரும்பும் தலைவனும் தலைவியும் சந்திக்கும் நேரம். தலைவியைத் தலைவன் தொடுவான்.

    தலைவி கழுத்தை வளைப்பாள், தலை குனிவாள், முகம் சிவப்பாள், கொடுப்புக்குள் சிரிப்பாள், உடல் நெளிவாள், கால் விரல்களால் நிலத்தில் கோடிடுவாள், மேனி சிலிர்ப்பாள். காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்வாள்.

    கண்களின் கடைக்கோடிக்கு விழிகள் போவதும் வருவதுமாய்… அடுத்துத் தலைவன் என் செய்வானோ என்ற ஏக்கம் ஒருபுறம்.. ஏதும் செய்யாமலிருக்கும் தலைவனின் தேக்கத்தால் வரும் ஏக்கம் மறுபுறம்..

    இவ்வளவு நீண்ட விளக்கத்துக்குத் தமிழில் ஒரே சொல் நாணம்…. தலைவியின் நாணம்.

    இறியூனியன் தீவில் பரத நாட்டியப் பள்ளி. கலாச்சேத்திராவில் பயின்ற ஆசிரியை சொல்லிக் கொடுக்கிறார். நாணத்துக்குரிய அடவுகளைக் கூறுகிறார். பிரஞ்சு மொழியில் விளக்குகிறார். பதம் பிடித்துக் காட்டுகிறார்.

    மாணவிகளுள் ஒருத்தி. 18 வயதுப் பெண். தமிழ் மொழி தெரியாத தமிழ்ப் பெண். பிரஞ்சு மொழியில் கேட்கிறாள். நாணம் என்றால் என்ன? பிரஞ்சு மொழியிலோ ஆங்கில மொழியிலோ அதற்கான சொல்லை ஆசிரியையால் கூற முடியவில்லை. தலைவன் தொட்டால் ஏன் நாண வேண்டும்? இது அடுத்த வினா.

    அந்த மாணவி மட்டுமன்று, அங்கிருந்த மாணவிகளுள் பெரும்பாலோரின் உள்ளத்தில் எழுந்த வினாக்கள் அவை.

    250 ஆண்டு காலமாகத் தமிழர் இறியூனியனில் வாழ்கின்றனர். பிரஞ்சுக்காரர், ஆபிரிக்கர், கலப்பினத்தார் நடுவே இன்றைய (2013) மதிப்பீட்டில் ஐந்து இலட்சம் தமிழர்.

    தமிழ் மரபுகளை மழுங்கடிப்பதையே தலைமுறைகள் பலவூடாக ஊக்குவிக்கும் பிரஞ்சு மேலாதிக்கச் சூழல்.  வெங்கானத்தில் காணற்கரிய நீரூற்றையும் சுற்றிய நிழல்தரு மரங்களையும் போல, அங்கங்கே தமிழ் ஆர்வலர்கள், கோயில்கள், ஊடகங்கள், நூல்கள், சைவ சமயச் சடங்குகள், இசை நாட்டியப் பள்ளிகள், தமிழ் வகுப்புகள். இவையே தமிழ் மரபுகளுக்கு நங்கூரங்கள்.

    நாணம் என்ற தமிழ் மரபின் பொருளை அறியாமலே பேதையாகிப் பெதும்பையாகி நங்கையாவோர்.

    இறியூனியனுக்கு மட்டுமன்று, புலம்பெயர்ந்து உலகெங்கும் பல நாடுகளில் பரந்து வாழும் தமிழர், அங்கங்கே பெற்று வளர்க்கும் தமிழ்த் தலைமுறைக் கொடுப்பனவுகள் இவை.

    30 ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்த தமிழர் ஆத்திரேலியாவில் பெற்றெடுக்கும் தமிழ்க் குழந்தைகள் விதிவிலக்காவாரா? அவர்களுள் பெரும்பாலோர் கொண்ட கோலம் அதுவே. ஆனாலும் விதிவிலக்காக வாழ்கிறோம் என்கின்றனர் மெல்போணில் வாழும் வாசன் இல்லத்தவர்.

    வாசனும் மங்களமும் பெற்றெடுத்த மக்கள்,  18 வயதான இலட்சணியா, 14 வயதான வசீசர்.

    மயிலாப்பூரின் கிழக்கு மாட வீதியில், பாரதப் பண்பாட்டுப் பேழை போற்றும் பாரதீய வித்தியா பவன அரங்கில், 2013 மார்கழி இசை விழாவிற்குப் பங்களிப்பாக, 06. 01. 2013 அன்று சென்னையின் விற்பன்னர் நடுவே, தெரிந்து சுவைக்கும் சுவைஞர் குழாம் சூழ இலட்சணியாவும் வசீசும்  ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி.

    அலாரிப்பில் கணேச  கவுத்துவம். சிறீகாந்தரின் செழுமைக் குரலில் கஜானனம். எடுத்த எடுப்பிலேயே வசீசரின் கால் அடிகளின் கட்டுக்கோப்பும் இலட்சணியாவின் முக பாவங்களும் மேடையைக் கொள்ளைகொண்டன. இருவரா? மேடையில் ஒருவரா? அதே பதங்களை ஒரே நேரத்தில் இருவரும் இரு பாவைகளாக, பதம் பிடித்தனரே, இம்மியும் பிறழாது ஒத்திசைந்து நடனமாடினரே.

    அடியார் மேல் பரிவு கொண்டார்.  காலனைக் காலால் உதைத்தார். மார்க்கண்டேயருக்கு வாழ்வளித்தார். நம்மை ஆட்கொண்டவர். மௌவலும் மாதவியும் புன்னையும் வேங்கையும் செருந்தியும் செண்பகமும் குருந்தும் முல்லையும் வளரும் சோலை சூழ்ந்த திருக்கோணமலை இறைவன் எனத் திருஞானசம்பந்தர் 1400 ஆண்டுகளுக்கு முன் பாடிய தேவாரப் பாடல். மூன்றாம் திருமுறை 123ஆம் பதிகம் 6ஆவது பாடல். பரிந்து நன் மனத்தால் எனத் தொடங்கும் அப்பாடல் வரிகளுக்குப் பதம் பிடித்தனர் இலட்சணியாவும் வசீசரும். இருவரின் தாய்வழிப் பாட்டனார் யாழ்ப்பாணத்து மாவிட்டபுரத்தார். எனவே இலங்கையர்கோன் வழிபட்ட ஈசருக்கு அஞ்சலி!

    அடுத்துத் தோடி இராகம், ஆதி தாளம், ஆதிசிவனைக் காணவே  எனத் தொடங்கும் பாடல். தண்டாயுதபாணிப்பிள்ளை ஈந்த பாடல் வர்ணமாக. ஒன்பான் சுவைகள், ஒன்பதுக்கும் முக பாவங்கள் முன்னெடுத்த பதங்கள். நரேந்திராவின் சொற்கட்டுகளுக்கு நடனமணிகள் இருவர் ஈந்த அசைவுகள். ஒருவர் அசைந்த வழி ஒத்திசைந்த மற்றவரின் அசைவு. குழலிசைத்தார் அதுல் குமார். மத்தளம் ஒலித்தார் அரிபாபு. கலையரசன் இராமநாதன் வயலின் இசைத்தார். இலட்சணியா முக பாவங்களில் மிளிர்ந்தார், வசீசர் காலடிக் கட்டமைப்பு முதலாகக் கழுத்தசைவு வரையாக இயைந்து அசைந்து பரந்து ஒளிர்ந்தார்.

    இருவரும் ஒரே நேரத்தில் மேடையிலாயின் மேடை பொலியுமா? அல்ல அல்ல, ஒவ்வொருவரும் தனித் தனியே திறமையாளர். அவரவர் பாணி அவரவருக்கு. இருவரையும் தனித தனியாகப் பார்க்கலாமா என்ற குரு நரேந்திரனாரின் ஆவலுக்கு விடை தந்தனர் வசீசரும் இலட்சணியாவும்.

    கருணைரஞ்சனி இராகத்தில், கண்ட தாளத்தில் அம்புசம் கிருட்டினா இசையில், திருமால் பூவுலகிற்குக் குருவாயூரப்பனாக வந்து அருளுவதை வியக்கும் அடியாராக, ஓம் நமோ நாராயணா எனத் தொடங்கும் பாடலுக்குத் தனியாகவே வந்து நடனமாடி அசத்தினார் இலட்சணியா.

    செஞ்சுருட்டி இராகத்தில் ஆதி தாளத்தில் காவடிச் சிந்துக்கு ஆடி அசத்தினார் வசீசர். பழனி மலையையும் காவடி ஆட்டத்தையும் மெல்போணில் இருந்தவாறே கண்டவரோ கேட்டவரோ வசீசர்? காவடிக்காக அவர் தோள்கள் வளைந்த அழகும் கால்கள் வைத்த அடி ஒழுங்கும் வியப்பில் என்னை ஆழ்த்தின.

    அடுத்துக் காம்போதி இராகம், ஆதி தாளம், குழலூதி மனமெல்லாம் எனத் தொடங்கும் பாடல். ஊத்துக்காடு வேங்கட சுப்பிரமணியனாரின் பாடல். மயிலே வசீசரைப் பார்த்துப் போலச்செய்யுமோ என்ற மயிலாட்டம் இடையில் வந்தபோது என் கைகள் தாமே சேர்ந்தன, தட்டின. உள்ளமோ ஆர்ப்பரித்தது.

    நாட்டிய இணையர் தனஞ்செயனும் சாந்தா தனஞ்செயனும் கற்பித்து ஆளாக்கிய நரேந்திராவின் மாணாக்கர் இலட்சணியாவும் வசீசரும் மேடையில் ஆடுந்தொறும் நரேந்திராவின் முகத்தில் பூரிப்பு. தன் முயற்சிக்கு முழு வடிவம் கொடுத்தனரே இருவரும் என்ற மன நிறைவு.

    சிறப்பு விருந்தினரான சாந்தா தனஞ்செயன் மேடைக்கு வந்து இலட்சணியாவையும் வசீசையும் பாராட்டி மகிழ்ந்தார்.

    திருமந்திரப் பாடலான அன்பு சிவம் இரண்டென்பர் எனத் தொடங்கும் பாடலுக்கும் அதையொத்த இரு பாடல்களுக்கும் இலட்சணியாவும் வசீசரும் ஆடி மகிழ்வித்தனர்.

    பிருந்தாவன சாசங்க இராகத்  தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவெய்திய பின்னரும், பாட்டியார் பாலம் இலட்சுமணனின் இராமகிருட்டிண மிசன் சார்ந்த மங்களப் பாடலை நினைவூட்டிச் சுவாமி அரங்கானந்தாவின் பாடலுக்கு நடனமாடி மங்களம் சேர்த்தனர் இருவரும்.

    கொல்லன் தெருவில் ஊசி விற்கலாமா? மயிலாப்பூரில் பரத நாட்டிய மரபுகளைக் காட்டிப் பிழைக்கலாமா?

    அருள்மிகு கபாலீச்சரர் கோயிலின் மாட வீதியில் தொடங்கி தெற்கே திருவான்மியூர் வரை, மேற்கே மாம்பலம் வரை, வடக்கே திருவல்லிக்கேணி வரை படைப்பாற்றலின் மேதைகள், இசையில் நுண்மா  நுழைபுலத்தார், நடனத்தின் துல்லிய மரபுகளைத் துலக்குவோர் குவிந்து வாழ்கின்றனர் . அவர்களின் ஆற்றல், திறன், புலமை யாவுக்குமான அரங்குகள் தெருவுக்குத் தெருவாய், சந்து பொந்தெங்கும் விரவியுள.

    மெல்போணில் பிறந்து, வெள்ளையர் நடுவே வளர்ந்து, ஆங்கில மொழி மூலம் கற்று, தமிழ்க் கலைகளோ, விளையாட்டுகளோ, பண்பாட்டுக் கூறுகளோ இல்லாத வெங்கானத்தில் நீரூற்றான பரத நாட்டியப் பள்ளி ஒன்றில் பயின்ற இருவர், மயிலாப்பூரின் பாரதீய வித்தியா பவன அரங்கில் நாணத்துக்கு இலக்கணம் வகுத்தனராயின், மயிலுக்கு ஆட்டத்தையும் மானுக்கு துள்ளலையும் கற்பித்தனராயின் அந்த நிகழ்ச்சியைக் கண்ணாரக் கண்டு களிகொண்டு என் உள்ளம் சிலிர்த்ததை, யான் பெற்ற இன்பத்தை என் தமிழில் பகிரவேண்டாமா?

    என் தமிழ் எழுத்தை ஊக்குவித்தவர் இலட்சுமண ஐயர். என் தொண்டை ஊக்குவிப்பவர் அவரின் அருமைத் துணைவியார் பாலம் இலட்சுமணன். இருவரும் ஈந்த இளைய மகள் பெருமாட்டி மங்களம். அவர் கணவர் திருவுடையார் சீனிவாசன். இருவரும் இடையறாது உழைத்தனர்.  தம்மக்கள் இலட்சணியாவையும் வசீசைரையும் பரத நாட்டிய விற்பன்னராக்கினர். ஆத்திரேலியாவில் தமிழ் மரபு பேணுகின்றனர். அவர்களின் முயற்சிக்குத் தமிழுலகம் கடப்பாடுடையது.

    Share
  • வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும்

    கார்கில் ஜெய்

    “பான் ஸ்டார் வால் நட்சத்திரம் (பவர் ஸ்டார் அல்ல : http://www.space.com/20147-comet-pan-starrs-sunset-viewing.html), அந்தி நேரத்தில் அடிவானத்தில் தென்மேற்கு திசையில் தோன்றும்” என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.  அதைப் போட்டோ எடுத்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கேமரா, ட்ரைபாட், டார்ச் லைட்(இது வால் நட்சத்திரத்தை தேட அல்ல இருட்டில் நெப்பு தெரிய),  எடுத்து வைத்துகொண்டு ஆயத்தமானேன். ஐந்தரை சுமாருக்கு அந்தி சாயும் என்பதால், நாலரைக்கே கிளம்பினேன். காரை கிளப்பும்போது வீட்டு சொந்தக்காரரின் நாய் ஒடி வந்து காரில் ஏறியது. சரி நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வருகிறதே என்று அதையும் வால்  நட்சத்திரம் பார்க்க ஏற்றிக் கொள்ளுகையில் எனக்குத் தெரியாது நானே திரும்பி வரும்போது நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வரவேண்டி இருக்கும் என்பது.

    பல விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மேற்குப்பக்கம் தாழ்வான கடற்கரைக்குப் போனால் நன்றாகத் தெரியும் என்று சொன்னதால் டேரியன் டவுன்ஷிப் – இல் உள்ள ‘நியர் வாட்டர்’ அவின்யூவிற்கு காரை ஓட்டினேன். அது பெரும் பணக்காரர்கள் வசிக்கும் இடம், தூய்மையான கடற்கரையும், படகுத்துறையும், ஒவ்வொரு பணக்காரருக்கும் சொந்தமான மொத்தம் 80 படகுகளும் மிக அழகாக இருக்கும். படகுத் துரையின் முனையில் சென்றால், வால் நட்சத்திரம் பார்க்க நல்ல வாகான இடம் கிடைக்கக் கூடும்.

    கடற்கரை ஓரத்திலேயே காரைப் பார்க் செய்வதில் எந்தவித அசௌகரியமும் இருக்கவில்லை. தோளில் கேமிரா, ட்ரைபாட் சகிதம்  நாயைக் கூட்டிக்கொண்டு காலாற நடந்தேன். நாய் சந்தோஷமாக துள்ளிக்கொண்டு ஓடியது. நீந்திகொண்டிருந்த சில வாத்துக்களை துரத்தியும், கிளிஞ்சல் பொறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகளை, குறைத்து பயமுறுத்தியும் குதித்துக்கொண்டு திரிந்தது. மரியாதை நிமித்தமாக நான் குழந்தைகளுக்கு வருத்தம் தெரிவித்து சில அழகான கிளிஞ்சல்களைப் பரிசளித்தேன். திடீரென  பைரவருக்கு கும்ப மேளா நியாபகம் வந்தோ என்னவோ தெரியவில்லை, ஆவேசம் வந்தவராய் தண்ணீரில் இறங்கி ஸ்நானம் பண்ணினார்,

    இந்த பைரவருக்குப் பிடித்த விளையாட்டு ஏதாவது உடைந்த, ஓரடி  நீளமுள்ள மரக்கிளையை கொண்டுவந்து கொடுப்பது. அதை வீசி எறிந்தால் மீண்டும் ஓடிச்சென்று எடுத்து வந்து கொடுப்பது. இவ்வாறாக விளையாட்டிலும் வேடிக்கையிலும் ஒரு மணி நேரம்  போன பின்பும் சூரியன் அஸ்தமிப்பதாகத் தெரியவில்லை. அப்போதுதான் புரிந்தது, மார்ச் இரண்டாம் ஞாயிறு ஆதலால் நேரத்தை ஒரு மணி நேரம் முன்பாகவே மாற்றி  வைத்துவிட்டார்கள் என்று. சரி என்று பொழுதைக் கழிக்க படகுத் துறைக்கு எதிர்ப்பக்கம் இருந்த பாலத்தை போட்டோ எடுக்க ஆரம்பித்தேன்.


    பாலத்தை போட்டோ எடுத்தபின் பாலத்தின் அடியிலும் சென்று போட்டோ எடுத்தேன். பாலத்தை தங்கியிருந்த பலகைகள் குறுக்கு நெடுக்காக அழகாக இருந்தன. பாசிகளும் குட்டி சங்கு போன்ற சிப்பிகளும் அடியில் ஒட்டிகொண்டிருந்தன :

    இருந்தாலும் சூரியன் அஸ்தமிப்பதாய் தெரியவில்லை, ஆதலால் ரெண்டு  தெருக்களில் சுற்றி நடந்து திரும்பி அதே பாலத்துக்கு வந்து சேர்ந்தேன். இப்போது சூரியன் பொற்கிரணங்களை அணிந்துகொண்டு அஸ்தமிக்க ஆரம்பித்திருந்தான். அப்போது சில சீகல் பறவைகள் இறை தேடித் பறப்பதும் மேலே போய் கீழிறங்குவதுமாக இருந்தன:

    கேமிராவை பேன்னிங் மோடில் வைத்து தொலை தூரத்தில் இருந்த சீகலைப் படம் பிடித்தேன் . படத்தை உற்றுக் கவனித்ததில் அவை மூடியிருக்கும் சிப்பிக்களை பொறுக்கிக் கொண்டு பறப்பது அரைகுறையாகத் தெரிந்தது. அந்த சிப்பிகளை உயரத்தில் பறந்து பின்பு பாறைகளின் மேல் எறிகின்றன இந்த சீகல் பறவைகள். இதனால்  சிப்பி உடைந்த பின் உள்ளிருக்கும் பூச்சியை எளிதாக உண்கின்றன, என்பது தொலைதூர போட்டோக்களை ஸூம் செய்து பார்த்தபோது தெரிந்தது.

    இதை அதிசயமாக வேடிக்கை பார்த்துகொண்டிருக்கையில் கடகடவென சூரியன் மறைந்து கீழ்வானம் சிவந்தது. தூரத்தில் எதிர்க்கரையில் சில வாத்துக்கள் கத்தியபடியே வந்திறங்கின

    சற்றும் தாமதிக்காமல் பாலத்தை நோக்கி நடந்தேன். தாமிர நிறமாக நீரெல்லாம் தகதககக்க அற்புதமாக இருந்தது அந்தப் பாலம் :

    பாலத்தின் முனையில் சென்றால் எல்லையில்லா கடல் பரப்பின் எதோ ஒரு மூலையில் வால் நட்சத்திரம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை, பனி மூட்டமும், மேகமும் இருந்ததால், குறைய ஆரம்பித்திருந்தது. பாலத்தின் மேல் ஏறி முனையில் சென்று நின்று கொண்டேன்:

    பாலத்தின் மேல் பகுதிக்கு வராமல் நாய் ஏனோ அடம்பிடித்தது. பிரயோஜனமில்லை என்று அதற்குத் தெரிந்தது போலும். சூரியன் மறைய கடும் குளிர்காற்றும் வீசத் தொடங்கியது, வாழ் நட்சத்திரம்தான் தெரியவில்லை . பற்கள் கிட்டித்துக்கொள்ள கைகளும் உறைந்து போக, தென்மேற்குத் திசையை வெறித்துப் பார்த்துக் காத்திருந்தேன். மேகமூட்டம் இருந்ததனாலோ என்னவோ, பேன் ஸ்டார் வால் நட்சத்ரம் கண்ணுக்குத் தென்படவேயில்லை. தயக்கத்துடன்  திரும்பி நடக்கையில், பசி வயிற்றைக் கவ்வ, வானத்தை இருள் கவ்வ ஆரம்பித்திருந்தது. வெயிலிலும் அந்தியிலும் போட்டோ எடுத்த அதே பாலத்தை இரவிலும் போட்டோ எடுத்துவிடலாம் என்றெண்ணி மறுபடியும் டிரைபாடை பொருத்தினேன். 15 நொடி ஸ்லோ  ஷட்டர் ஸ்பீட் வைத்து இரவு போட்டோக்களை எடுத்தேன். முழு இருட்டில் எடுத்த கடைசி போட்டோ,  நீல நிறத்தில் வானவில்லைப் பார்க்காத மனதுக்குத் திருப்தி அளித்தது.

    திரும்பி வருகையில், எதோ ஒன்றுக்காக காத்திருப்பதுதான் வாழ்க்கையோ என்று தோன்றியது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சில ஆண்டுகளுக்கு முன்பு அலிகாரில் இருந்த பத்திரிகை நண்பர் மூலம் ஒரு தொலைபேசி. ஒரு தெலுங்கு சிறுவன் ஒருவன் உத்திரப்பிரதேசத்தில் அடிமை முறையில் வேலை செய்வதாகவும் அங்கிருந்து தப்பித்து போலீஸில் சிக்கியதாகவும், அவனிடம் பேச்சுக் கொடுக்க முடியவில்லை, சரியாக பேசமுடியவில்லை, திகிலும், பயமும் அதிகமாக உளறிக்கொண்டே இருக்கிறான்.. தெலுங்கு பாஷையாகத்தான் இருக்கவேண்டும், பக்கத்தில் அனகாபள்ளி என்று ஏதாவது ஊர் இருக்கிறதா என்று விசாரியுங்கள், அங்கு போலீஸ்  ஸ்டேஷனில் விசாரிக்கவும் என்று கோரிக்கை வந்தது. இந்தப் பையனுக்கு ஆறு வயது இருக்கும். அனகாபள்ளியில் ஒரு டீக்கடை வைத்திருப்பவரின் மகன். வீட்டில் யாரோ அடிக்க, ஸ்டேஷன் வந்து ரயில் ஏறி சென்னை வந்து பிறகு அங்கிருந்து இன்னொரு டிரெயின், வடக்கே. அங்கே யார் மூலமோ அடிமை வேலை. இத்தனைக்கும் பையன் போனது குறித்து அவன் குடும்பத்தார் கூட கவலைப்படவில்லையாம்.

    என் அலிகார் நண்பர் விகடன் செய்தியாளர் என்பதால் சென்னையில் சேவாலயா முரளி மூலம் சென்னை போலீஸைத் தொடர்பு கொண்டு அந்த உத்தரப்பிரதேச அடிமைத்தனத்திலிருந்து அந்த சிறுவனை மீட்டு வந்தார். சேவாலயா முரளி இதற்காக பிரத்யேகமாக அந்த ஊருக்கே சென்று ஆவன செய்து அந்தச் சிறுவனை மீட்டு வந்தது ஒரு சிறப்பான பணி. பிறகு அவனுக்குப் படிக்கவும் வகை செய்தார். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் சமீபத்தில் ஈரோட்டுக் கதிர் அவர்களின் பதிவு ஒன்றினைக் கண்டந்தும் இத்தகைய மனிதர்கள் யாரோ ஓரிருவர் இருப்பதால் மட்டுமே மழையை பொய்க்க வேண்டிய நிலையில் இந்த உலகத்தார் வைத்திருந்தாலும், அந்த மழையானது இவர்களுக்காக பெய்கிறதோ என்று தோன்றியதுதான். இனி கதிர் அவர்களின் பதிவு

    எப்போதும் எனக்கு ஒரு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. எவரொருவர் தன்னலம் பாராது சேவையாற்றுகிறாரோ, அவருக்கான பலன், அவர் எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும் சரியான நேரத்திலோ, காலம் தாழ்த்தியோ எப்படியேனும் வந்தடைந்தே விடுகின்றது என்பது. ஒருபோதும் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து போய்விடுவதில்லை. எப்போதும் தங்களைக் குறித்து மனதில் ஒரு திருப்தி இருந்து கொண்டேயிருக்கின்றது.

    மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன், ஈரோட்டில் இருக்கும் ஒரு மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்குசலுகை விலையில் உணவளிப்பதாகவும், அரசு மருத்துவமனையில் ஏழ்மையாய் இருக்கும் 20 நோயாளிகளுக்கு 1ரூபாய் பெற்றுக்கொண்டு மதிய உணவு அளிப்பதாகவும் சொன்னார். அதன்பின் சில நாட்கள் அந்த மெஸ்ஸிற்குசாப்பிடச் சென்றேன். அவர்களின் சேவையில் ஒரு நேர்மைத்திறன் இருப்பதை உணர்ந்தேன். மதியம் உணவுவழங்குகையில் சில படங்களை எடுத்துவந்து அதுகுறித்து ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய் கட்டுரையைஎன்னுடைய வலைப்பக்கத்தில் எழுதினேன்.
     

     
    அந்தக் கட்டுரை இணையத்தில் பல்லாயிரக்கணக்கில் வாசிக்கப்பட்டது. புதியதலைமுறை இதழ் அதையொட்டிஒரு கட்டுரை எழுதியது. புதியதலைமுறை தொலைக்காட்சி தனது ”பதிவு” நிகழ்ச்சியில் மெஸ் உரிமையாளர் திரு.வெங்கட்ராமனை படம் பிடித்து ஒளிபரப்பி கௌரவப்படுத்தியது.

    நல்ல விஷயங்கள் சரியான சமயத்தில் கொண்டு வரப்படுவதால் இவைகளைப் பார்த்து மேலும் பல நல்ல விஷயங்கள் நடக்க வேண்டிய சந்தர்ப்பத்தைத் தருகின்றோம். சேவாலயா முரளி போல, மதுரை அட்சயா கிருஷ்ணன் போல, இதோ ஈரோடு வெங்கட்ராமனைப் போல சமூகப் பணியாற்றும் மனிதர்கள் மேலும் மேலும் அதிகமாகவேண்டும் என்ற ஆவல் கதிருக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் இருக்கிறது என்பதோடு தக்கதொரு சமயத்தில் வெளிக்கொணர்ந்த திரு கதிரை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சியும் கூடுகிறது. வல்லமையாளர் திரு கதிருக்கு நம் வாழ்த்துகள்

    கடைசி பாரா: மேகலா ராமமூர்த்தி அவர்களின் பாடல் தேன்.

    நடராசன் என்றபெயர் கேட்டிட்ட நாள்முதலாய்
    நங்கைஎன்பேர் மறந்தே னடி!
    கடலளவு ஆசைதான் அவன்மீது பெருகுதே
    கன்னியென்னைக் காண்பா னோடி!
    உண்ணவும் மறந்தேனே உன்மத்தம் கொண்டேனே
    உறக்கத்தைத் தொலைத்திட் டேனே
    கண்காட்டும் பொருளெல்லாம் பரம்பொருளாய்த் தோன்றுதே
    கண்கட்டு வித்தை என்பதோ?

    Share
  • முத்தம்

    பழமைபேசி

    இது என்றாவது நிகழ்கிற சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ அன்று. நியூயார்க் பங்குச்சந்தை திறவுபடுகிற நாட்கள், திறவுபடாத நாட்கள், அமெரிக்க டாலருக்கும் தங்கத்துக்கும் ஒட்டு உறவு இருக்கிறதாக நினைத்துக் கொள்கிற நாட்கள், நினைக்காத நாட்கள் என அனைத்து நாட்களிலும் நடைபெறுகிற உவப்புகால பூசையிது. உடனடியாக குளத்திற்குப் போக வேண்டும் போல இருக்கிறது எனக்கு.

    சிந்தைக்கெட்டிய முதல் முத்தமாரி அதுதான். இரு கன்னங்களிலும் அடுத்தடுத்து மாற்றி மாற்றித் தொடர்ந்து முத்தங்கள் கொடுத்துக் கொஞ்சி நனைத்தவள் என் சின்னம்மா. அந்த நாள் தொட்டு, என்னை இடைவிடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது முத்தம்.

    காத்து கறுப்பு அண்டிவிட்டதென்று சின்னம்மாவுக்குக் கல்யாணம் செய்து வைக்காமலே விட்டு விட்டார்கள். வீட்டில், ஊரில், எல்லாருக்கும் அவளைக் கண்டால் வேடிக்கை. அம்மா சாயலை ஒத்திருக்கும் சின்னம்மாவுக்கும் அம்மாவுக்குமான வித்தியாசம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சின்னம்மாவுக்கும் அது வசதியாய்ப் போயிற்று. இடுப்பில் வைத்துக் கொண்டு எங்கும் கிளம்பி விடுவாள். அடிக்கடி கொஞ்சி முத்தமிட்டு அணைத்துக் கொள்வாள். அள்ளியள்ளிக் கொடுத்தவள் தனக்கொரு போதும் கேட்டு வாங்கிப் பெற்றதாக எனக்கு நினைவில்லை. அந்நினைவுகள் அறிவுப்புலத்தில் வாசம் கொள்ளத் துவங்கிய நாளிலிருந்து என்னை ஆண்டு வருகிறது முத்தமாரி.

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு எதுவும் நிகழாத இனிய இந்நாளில், முத்தக் கச்சேரி இடம்பெறுகிறது எங்கள் அலுவலக நண்பர்களிடத்திலும். அதற்குக் காரணம் குதிரைவால் டீனா. முகபாவங்களுக்கொப்ப நர்த்தனம் மேற்கொள்ளும் அந்த குதிரைவால் சடை. எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் அவள். வாய்த்துடுக்கும் விம்மித்திமில்கிற குயமிரண்டும் உடையவள். சிரித்து மாளும் அவளுக்கு ஒரே ஒரு கணவன், மைக் ஜெஃப்பர்சன்.  ஃபெட்எக்ஸ் கூரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அவனுக்கு வேலை. அன்றாடம் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் டீனாவை எங்கள் அலுவலக வாயிலில் இறக்கி விட்டுப் போவான். போகிறவன் சும்மா போக மாட்டான். மனங்குழையும் காட்சியொன்றை எங்களுக்கு ஊட்டிவிட்டுப் போவானவன். இன்றைக்கு அது நிகழாமற்போனதுதான் முத்தம் குறித்தான எங்களது அரட்டைக் கச்சேரிக்கான வித்தாகும்.

    நண்பகல் பசியாற்றுகைக்கு மெக்சிகன் உணவகமொன்றுக்குப் போவதெனத் தெரிவானது. அதன்படியே குதிரைவால் டீனாவும் நாங்களும் குடோபா துரித உணவகத்துக்குப் போய்ச் சேர்கிறோம். மோவாய் உச்சிநோக்க, கண்ணிமைகள் சரிந்திருக்க அவள் சிரித்துக் கொண்டிருக்கிற தருணமொன்றில், அவளது பெருமானங்களைக் களவாய்க் கண்டு இரசிக்கிறான் தொப்பை தீபக். அப்படியே நேக்காய்ச் சந்தில் சிந்துவும் பாடுகிறான்.

    “”என்ன டீனா? காட்சி எதுவும் எங்க கண்களுக்கு சிக்கலையே இன்னைக்கு??”, வாகாய் வீசியெறிகிறான் தூண்டிலை.

    “ஏய், காய்ஸ்? அதெல்லாமா பார்த்திட்டு இருக்கீங்க?? மைக்கேலுக்கும் எனக்கும் சும்மா ஒரு சின்ன ஊடல். அவன் ஃபேசுபுக்ல என்னோட தங்கச்சிகூட எதோ வறுத்துகிட்டு இருந்தான். அதான் சும்மா தொங்கல்ல விட்டிருக்கேன்!!”, மீண்டும் மோவாயை உயர்த்திச் சிரித்தாளவள். இம்முறை தொப்பை தீபக்கோடு சேர்ந்து நாங்களும் கண்ட பேறு கொண்டோம். அது படைக்கப்பட்ட படைப்பினுடைய வெற்றியேயன்றி காமனின் சிருங்காரக் குறும்பல்ல.

    அமெரிக்காவில் அப்படித்தான். அவ்வப்போது முத்தப்பரிமாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். அல்லாவிடில் அவனுக்கு வேறொருவளுடன் தொடுப்போவென மனம் கிலேசங்கொள்ளும் அவளுக்கு. முத்தம் கொடுத்து அண்டியிருக்காவிடில் தொடுப்பு தூர்ந்து அந்தோவெனப் போய்விடுவாளோ என்கிற அச்சம் ஆடவனுக்கு. இப்படியாகத்தான் அடிக்கடி ஐலவ்யூ சொல்லிக் கொள்வதும் இச்சு கொடுத்துக் கொள்வதும் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. நாம் சொல்லிக்கொள்கிற இந்த மணித்துளியிலே கூட ஆயிரமாயிரம் இச்சுகள் பிறந்திருக்கும். சம்பிரதாயச் சடங்குகளாய் சிலபல ஆயிரங்களும், உள்ளபடியே மனத்தின் ஆழத்தில் இருந்து சிலபல ஆயிரங்களுமாக ஐலவ்யூக்கள் உதிர்ந்திருக்கும். ஹனி தடவப்பட்ட அம்புகளுக்குக் கூடுதல் வீரியம் உண்டு.

    போட்டு வாங்கி நூதனம் கறப்பதில் யோகாசன கார்ப்பரேட் குருக்களை எல்லாம் மிஞ்சக்கூடியவன் தொப்பை தீபக். அதனாலேயே அவன் எங்கள் நிறுவனத்தினுடைய விற்பனைப் பிரிவின் இயக்குநராய் கோலோச்சுகிறான். முத்தக்கச்சேரியில் முதல் கறவையை நடத்திக் கொண்டிருப்பவனும் அவனே. நாகரிகமாயும் படிப்படியாயும் அடி மேல் அடி வைத்துக் கொண்டிருக்கிறான். அதை இரசித்தபடியே கச்சேரியில் முனைப்பாய் தன்னையும் இணைத்துக் கொள்கிறாள் டீனா.

    காலையில் எழும்பும் போதே முத்தம் கொடுத்துவிட்டுத்தான் எழுவான் மைக்கேல். கண் விழித்த கணம் முதல் அலுவலகம் வந்து சேரும் வரையிலுமாக நான்கைந்து இச்சுகள். காரை விட்டு இறங்கும் போது ஒரு இச்சும் ஐலவ்யூக் கொஞ்சகமும். பிற்பாடு மாலையில் திரும்ப வந்து ஏற்றிச் செல்வதற்குமான இடைப்பட்ட நாழிகைகளில் அலைபேசியினூடாக நான்கைந்து. மஞ்சத்தில் நடப்பனவற்றை இக்கணக்கில் சேர்த்த விரும்பவில்லை எனச் சொல்லிவிட்டாள் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு. அத்தோடு அவர்கள் வீட்டுச் செல்ல நாய்க்கு மைக்கேல் கொடுக்கும் முத்தங்களும் வர்ணிக்கப்பட்டன. தூய்மைச் சிநேகத்தின் தூதுவர்கள் நாய்கள்.

    இளம்பிராயத்தின் போழ்து வகுப்புத் தோழன் ஒருவனிடத்தில் எல்லாமும் ஈந்திருக்கிறாள். அக்காலகட்டத்தில் இடம் பெற்ற இச்சுகள்தான் துவக்ககால இச்சுகள். மழலைப்பருவத்தில் அம்மாவோ அப்பாவோ அவ்வளவாய் அணுக்கம் காட்டியிருக்கவில்லை. பாட்டிதான் எல்லாமும். ஆனாலும் பாட்டியின் முத்தங்கள் அரிதினும் அரிதாய் பிறந்த நாள் அன்று மட்டுமே. அவளுடைய  முத்தகளத்தின் வளம் என்பது மைக்கேல் ஒருவனின் துணை கொண்டு மட்டுமே கட்டியெழுப்பப்பட்ட ஒன்று.

    முத்தக்கச்சேரியில் அடுத்த ஆலாபனை நிகழ்த்தியவன் பிரையன் வோஷ்னி. ஏற்கனவே இரண்டு துணைகளோடு காதல்வீணையை மீட்டி மணமுறிவு பெற்று, தற்போது மணமெதுவும் முடிக்காமல் தாம்பத்தியப் பேரரசுக்கு ஈடு கொடுத்து வருகிறான். பஞ்சணை இச்சுகளைக் கொண்டு மட்டுமே இணையாளை ஆண்டு வருகிறான். வசியப்படுத்துவதில் கில்லாடி. காமவனக் கதைகள் எவ்வளவும் எழுதலாம். கிடைகொள்ளாமல் நெளியும் குதிரைவால் டீனாவைப் பார்த்து மனம் இளகி, ஆலாபனையைச் சுருக்கமாகவே முடித்துக் கொண்டான் சிநேக முத்தமலடு கொண்டவன்.

    ஒடிசலாய்த் தலையை வைத்துக்கொண்டு என்னைப் பார்த்தான் தொப்பை தீபக். அவனை டீனா இடைமறித்துச் கேட்கிறாள், “ஏய், நீர் சொல்லுமய்யா! சும்மா எங்களை மட்டும் துவையல் கல்லுல துடைச்சி எடுக்குற மாதிரி வளிச்சு வளிச்சு எடுத்தியே?”.

    நன்றாகப் பேசுவான் தொப்பை. அடிக்கிற காற்றில் இருந்தே வெண்ணெய் எடுக்கக் கூடியவன். மிசிசிப்பி ஆற்றில் ஓடுவதெல்லாம் மின்னசோட்டாக் கால்நடைகளின் உச்சாதான் என மெய்ப்பிக்கும்படியான தந்திரச்செப்புகை கூட கைகூடி வரும் அவனுக்கு.

    பாலகனாய் இருந்த நாட்களில் அம்மா அப்பாவின் வழமையான முத்தங்கள் அவனுக்கும் கிடைத்திருக்கிறது. சிறுவயதிலேயே வணிகச்சிந்தனை ஆட்கொண்டுவிட்டதால் மெல்லுணர்வுகளுக்கு அவ்வளவாக ஆட்பட்டிருக்கவில்லையவன். காதல் உணர்வு என்பதே கூட அரிதாய்த்தான் மேலெழுந்திருக்கிறது. கல்யாணமும் பெற்றோர் பார்த்து வைத்த உறவுக்காரப் பெண்ணோடுதான்.

    தொப்பை தீபக்கின் மனைவி ஜெயஸ்ரீ. அலுவலக நிகழ்ச்சிகளின் வாயிலாக ஜெயஸ்ரீயை எங்களுக்கும் தெரியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிந்துணர்வு உண்டு. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அக்கறையின்பால் நிகழும் இச்சுகள்தான் பெரும்பாலும். அதுவும் என்றாவது ஒருமுறைதான். துயரம், சோகம், துக்கம் முதலானவற்றின் போது அவள் அழுகையைக் கட்டுப்படுத்த இவன் பாவிப்பது முத்தங்களைத்தான். இவனும் இச்சைப் பொழுதில் எழுவனவற்றை முத்தக்கணக்கில் சேர்த்த விரும்பவில்லை.

    கிரங்கிய கண்களோடு என்னைப் பார்க்கிறாள் டீனா. எந்த ஹார்மோன் சுரந்து என்ன விளையாட்டு விளையாடுகிறதோ அவளுக்குள்? தொப்பை தீபக்கும், பிரையன் வோஷ்னியும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.   சாலையோரத்தில் நின்று போலீசுகாரரிடம் தண்டச்சீட்டு பெற்றுக் கொண்டிருக்கும் அகப்பட்ட வாகன ஓட்டியைப் பார்ப்பதைப் போலப் பார்த்தார்கள் என்னை.

    கச்சேரியில் என்னுடைய ஆலாபனைக்கான நேரம். எழில் சிந்தும் அழகுப் பெட்டகமாய் என் முன்னால் அமர்ந்திருக்கும் டீனாதான் எனக்கிருக்கும் ஒரே இடைஞ்சல்.

    நெளிகிறாள். சிரிக்கிறாள். சாய்த்த செவிகளில் உள்வாங்கி கண்களால் கொப்புளிக்கிறாள் தான் சுவையோடு நுகர்வதாய்ச் சொல்லும் உளக்குறிப்பை. குதிரைவால் சிலுப்பிச் சிலுப்பி ஆடுகிறது. ஒருசோட்டு பப்பாளிகளிரண்டும் அவ்வப்போது என் கண்களைச் சுண்டுகிறது. ஆனாலும், முத்தம் என்பதன் மீதான தாக்கம் எனது கச்சேரியைச் செவ்வனே செலுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

    உதடுகளால் செய்கிற செய்கையெல்லாமே முத்தம் ஆகிவிடுமா? மாந்த நேயம் அற்ற பதர்கள் இதிலும் கலப்படம் செய்து தொலைத்து விட்டார்கள். அவர்களுள் முதலாவதாகக் காமனைத்தான் நான் சுட்டுவேன்.

    நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான்தான் வகுப்புக்கு சட்டாம்பிள்ளை. சட்டாம்பிள்ளைக்கென்று சில சிறப்புகள் உண்டு. ஆசிரியர்களின் செல்லப் பிள்ளையாக இருப்பதும் அதில் ஒன்று. சத்துணவு டீச்சர் என்னைத்தான் எதற்கும் நாடுவார்கள். டீச்சர் என்பதில் ஒரு முரண் உண்டு. ஆனால் கிராமத்தான்கள் நாங்கள் சொல்வதுதான் வெல்லும். வெல்ல வேண்டும்.

    பள்ளியில் ஆண் ஆசிரியர்களை வாத்தியார் என்போம். பெண் ஆசிரியர்களை டீச்சர் என்போம். நகரத்து ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நிர்மல் எங்களைப் பார்த்து கேலி செய்தான். ”டீச்சரும், வாத்தியாரும் ஒன்னுதானடா?”, கெக்கலித்தான். “டீச்சருக்கும் வாத்தியாருக்கும் வித்தியாசமே தெரீல இவனுக்கு? டவுன் பள்ளிக்கூடத்துல படிக்கறானாமா இவன்??”, ஒட்டுமொத்தமாய் நாங்கள் சொல்லிச் சிரித்ததில் அழுது கொண்டே போனவன் வெகுநாட்களுக்கு எங்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளவில்லை.

    சத்துணவு ஆயா என்பார்கள். ஆனால் எங்களுக்கு சத்துணவு டீச்சர்தான் அந்த சிவகாமி அக்கா. பக்கத்திலிருந்து அடுப்புக் கூட்டுவதற்கு என்னைத்தான் கூப்பிடுவார்கள். பெரிய காவுமொடாவில்தான் சோறுக்கு உலை வைத்து அரிசி போடும் சிவகாமி அக்கா. நான் பக்கத்திலிருந்து விறகுகளை உள்ளே தள்ளி, ஊதி விட்டு சமேதரம் பார்ப்பேன். முதலில் தொளக்புளக் சத்தம் வரும். பிற்பாடு சத்தம் மங்கி, மொடாவில் முக்கால் அளவில் தண்ணி அடங்கி நிற்கும். தண்ணியைத் தன்னுள் வாங்கி அரிசிப் பருக்கைகள் மகிழத் துவங்கும். ஒவ்வொரு பருக்கையும் மகிழ மகிழ அளவில் அது பெரிதாகிக் கொண்டே வரும். சரியாக நெகமம் பஸ் மேற்கே போகும் போது காவுமொடாப் பொங்கி, மூடியிருக்கும் தட்டினைப் புறந்தள்ளியபடி சோறு வெளித்தள்ளிக் கொண்டு இருக்கும்.

    சிநேக பாவங்களுக்காய் மாந்தன் மனம் மகிழ்ந்து வரும். உள்ளம் கனிந்து, பின் உணர்வு மகிழ்ந்து மேலெழும்பிக் கொண்டே வந்து செவ்வாம்பல் இதழ்களில் முத்துகள் தெறிக்கும். அத்தகு முத்தங்களைக் கொடுக்கவும் பெறவும் ஆசைப்பட்டுப் பித்தனானேன் நான்.

    உளம் கனிந்து மனம் மகிழாமல் கொடுக்கிற, கொடுக்கப்படுகிற எதுவும் வெறும் இச்சு மட்டுமே. நீர்க்குமிழி போல வெறுமனே பெரிதாகி வெடித்துச் சிதறும் ஒலிக்கூளமது.

    இச்சைக்காகவும் கிளர்ச்சிக்காகவும் இடம் பெறுவன முத்தங்களா? அவை சும்பனங்கள். ”சும்பனத்துக்கடங்காத கொம்பன் எவன்டா நாட்டுல?” என்று எக்காளமிடுவார்கள் நாட்டுப்புறத்தில். கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திதழ் கொடுப்பர். கூடவே சும்பனமும் உகப்பர் பரத்தையர் என்று கூட எழுதி வைத்திருக்கிறார்கள்.

    டீனாவுக்கு இவையெல்லாமே புதிதாய் இருந்தன. முத்தமலட்டிலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்தான் பிரையன் வோஷ்னி. எங்க ஊர் நாட்டாமை சோமலிங்கத்தின் கைத்தடி நாகசாமியைப் போலவே, சொன்னதற்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான் தொப்பை தீபக். “வாட் மேன், வாட் டு யு திங்க்?”, தொப்பையின் தொடையைத் தட்டினாள் டீனா தனக்கேயுரிய ஏகடியச் சிரிப்போடு. தொப்பை நெளிந்து நாணுகிறான்.

    கலப்படமேதுமின்றி சிப்பிக்குள்ளிருந்து கிடைப்பது முத்து. முத்தமற்ற இதழ்கள் வெறும் கிளிஞ்சல்கள்.

    சின்னம்மாவின் அன்பு முத்தங்கள் அகாலத்தில் நின்று போனது எனக்கு. என் அப்பாவுக்கும் தாய்மாமான் ஒருவருக்கும் நேர்ந்த பிணக்கில், என் பாட்டி வீட்டிலிருந்து எங்கள் ஊருக்கே கொண்டு வரப்பட்டேன். ஆனால் எனக்கான முத்தங்கள் நின்று விடவில்லை.

    வீட்டில் கடைப்பிள்ளை என்பதால் நான் அப்பா செல்லம். வீட்டில் இருக்கும் போதெல்லாம் என்னைக் கொஞ்சிக் கொண்டேயிருப்பார் அப்பா. “முலுவா, முலுவா” என்று விளித்துக் கொஞ்சுவார்.

    “முலுவா, எனக்கொரு முத்தங்குடு பாக்கலாம். டேய், ஒன்னு குடுறா!”, கெஞ்ச விட்டுக் கொடுப்பேன் நானும். அவர் கொடுக்க எத்தனிக்கும் போதெல்லாம், “பீடி நாத்தம், பீடி நாத்தம்” எனச் சொல்லி போக்குக் காட்டி மகிழ்வேன்.

    ஏழாம் வகுப்பு படிக்கத் துவங்கிய நாட்களில் படிப்படியாக அவருடைய நின்று போனது. ஆனால், கடவுள் மறுபக்கக் கதவுகள் பலவற்றைத் திறந்து வைத்தார் எனக்காக. என் அம்மாவின் மற்றொரு தங்கையின் வழியாக தம்பி தங்கைகள் அடுத்தடுத்து எனக்குக் கிடைத்தார்கள். முத்தமிட்டுக் கொஞ்சி மகிழ்வேன். அவர்களும் எனக்கு வேண்டிய முட்டும் கொடுப்பார்கள்.

    சின்னம்மாவின் குழந்தைகளில் சின்னவனுக்குக் கன்னத்தில் குழி விழும். அதைப் பார்க்கும் போதெல்லாம் மனம் உவந்து வரும். அப்போதிருந்து கன்னத்தில் குழிவிழச் சிரிக்கும்படியாக யாரைப் பார்த்தாலும் எனக்கு சிநேகம் சுரக்கும். முத்தங்கள் கொடுக்கத் தோன்றும். அதனால்தானோ என்னவோ, கன்னக்குழிக்கு சொக்கறை என்ற மற்றொரு பெயரும் உண்டு. எப்பேர்ப்பட்ட சிநேக மலட்டுக்காரரையும் சொக்க வைக்கும் அது.

    கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது பக்கத்து வீட்டில் ஒரு சின்ன வாண்டு இருந்தது. சொக்கறை கொண்ட வாண்டு அது. எந்நேரமும் என்னுடன்தான் விளையாடித் திரியும். அதுக்கு நான் கொடுப்பேன் முத்தங்கள். அதுவும் எனக்கு வஞ்சனையில்லாமல் கொடுத்துச் சிரிக்கும். எங்களுக்குள்ளான அணியம் அந்த ஊரிலிருந்தே என்னை அந்நியனாக்கியது.

    இந்நேரமும் நொட்டை நாகசாமியாய் தலையாட்டிக் கொண்டிருந்த தொப்பை தீபக் தன்னுடைய வேலையைத் துவங்கியிருக்கிறான் இப்போது.

    “நம்ம ஆபிசுல யாருக்காவது டிம்பிள் இருக்கா? இவன்கிட்ட இருந்து எட்ட வைக்கணும். நல்லவேளை டீனாவுக்கு டிம்பிள் இல்லை!”, என்றான் நக்கல் சிரிப்போடு. “என்னோட கேர்ள் பிரண்டை இவன் கண்ணுலயே காண்பிக்க மாட்டேன்பா. ஏன்னா அவளுக்கு இருக்கு!”, என்றான் முத்தமலட்டு வோஷ்னி. சிரிப்பினை அடக்க வேண்டி தண்ணீர் குடித்துச் சிரிப்பினைத் திசை திருப்ப முயன்றாள் டீனா.

    சிங்கப்பூரில் இருந்து விடை பெறும் நாளில், நிறுவன மேலாளர் ஷியாவ் லீ தன் மனைவியோடு விமானநிலையத்திற்கு வந்திருந்தான். கைகுலுக்கி முதுகு தட்டிக் கொடுத்துப் பிரியாவிடை கொடுத்தான் ஷியாவ்.  டொங் லீயும் எங்கள் அலுவலகத்தில்தான் சம்பளப்பிரிவில் கணக்காளராக வேலை பார்க்கிறாள். ஆனால் அவ்வளவாகப் பழக்கம் கிடையாது. கைகுலுக்கப் போனேன். இரு தோள்ப் பட்டைகளையும் சாதுவாய்ப் பிடித்துக் கொண்டு வலது கண்ணத்தில் இதழ் பதித்து, “விஷ் யூ ஆல் தி பெஸ்ட்”, என்றாள்.

    சிநேகம் சிவந்து வராத முத்தங்கள் நீர்க்குமிழி போலச் சற்று நேரத்திலேயே மரித்துப் போகின்றன. மனம் நெகிழ்ந்து எதிர்நீச்சல் போட்டு வந்து இதழ்களில் வெடிக்கும் முத்தங்களுக்குச் சாவே இல்லை. ஷியாவ் இணையரோடு தொடர்பு இல்லாவிடினும், டொங் லீ கொடுத்த முத்து மனச்சிப்பிக்குள் காத்திரமாகவே இருக்கிறது இன்னமும்.

    அமெரிக்க விமான நிலையங்களை எல்லாம்  செயலிழக்கச் செய்தது உயிரோட்டம் கொண்ட முத்தமொன்று. பாதுகாப்புச் சோதனை வளையத்துக்குள்ளிருந்த ஒருவர் வெளியிலிருந்த துணைவருக்குப் பரிசுத்தமான முத்தமொன்று கொடுக்க, இழுத்து மூடப்பட்டது நியூஜெர்சி விமான நிலையம். அந்நேரத்தில் நானும் விமான நிலையத்தில்தான் இருந்தேன்.

    சிலகாலம் முத்தங்களை இன்னபிற தளங்களிலும் தேடித்திரிந்தேன். எங்கள் வீட்டுக் குழாயடிக்கு அண்மையில் எப்போதும் சேறும் சகதியுமாகவே இருக்கும். அங்கே போய் உட்கார்ந்து கொள்வேன். அரிதினும் அரிதாய்ப் பறந்து கொண்டே கொசுக்கள் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சிக்காகக் காத்திருப்பேன். அவை முகர்ந்து கொண்ட காட்சியைப் பார்க்கப் பார்க்க எனக்கும் மனம் மகிழ்ந்து வரும். ஓடிச் சென்று என் அண்ணன் மகனைக் கொஞ்சுவேன்.

    முத்தம் என்பது பண்பாடு சார்ந்த ஒன்றாகவும் இருக்கிறது. கோத்தகிரியில் இருக்கும் நண்பன் மோகனுடைய அம்மா என் நெற்றியில் சிலுவையிட்டு முத்தம் கொடுப்பார்.

    டொரொண்டோவில் இருக்கும் வகுப்புத் தோழன் பிரான்சிஸ் பிரெஞ்ச் நாட்டுக்காரன். அவர்கள் வீட்டிற்குப் போகும் போதெல்லாம் அவனுடைய அம்மாவும், அக்காவும் வரவேற்புக்காகவும் பிரியா விடைக்காகவும் முத்தமிடுவார்கள். வலது கன்னத்தோடு வலது கன்னமும், இடது கன்னத்தோடு இடது கன்னமுமாக மாற்றி மாற்றி ஒத்தி எடுப்பார்கள். ஒத்திக் கொள்ளும் போது அதரங்கள் உச்சுக் கொட்டும்.

    பல்கேரியா நாட்டு சோஃபியாவைச் சார்ந்தவன் நண்பன் மேத்யூஸ். நானும் அவனும் டொரொண்டோவில் அலுவலக நண்பர்கள். அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் வரவேற்புக்காய் வலது கையைப் பற்றிப் புறங்கையில் முத்தமிட்டு நலம் விசாரிப்பார்கள்.

    அமெரிக்காவில் பண்பாட்டுத் தளத்தில் இன்னமும் வடக்கும் தெற்கும் பிரிந்தே இருக்கின்றன. வடக்கில் இருப்பவர்களுக்கு கைகுலுக்குவதே வழமை. தெற்கில் இருப்பவர்கள் அரவணைத்து நெற்றியில் உச்சி முகர்ந்து கொள்கிறார்கள். புளோரிடாவில் இருக்கும் நண்பன் ரிக்பெரியின் மனைவி, மருமகள்கள் எல்லாரும் என்னை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்புகிறார்கள்.

    கனடிய நகரான பிக்கரிங்கில் இருக்கும் பஞ்சாப் நண்பன் லலித்தும் நானும் பதினேழு ஆண்டுகால நண்பர்கள். பங்காளிகள் எல்லாரும் கூட்டுக் குடும்பம். எப்போது போனாலும் பத்துப் பதினைந்து பேராவது வீட்டில் இருப்பார்கள். அவனுடைய குடும்ப வழக்கத்துக்கொப்ப இருக்கும் பெரியவர்கள் எல்லாருடைய காலிலும் விழுந்து ஆசி வாங்குவேன். அவர்களும் தோள்பிடித்து எழுப்பி தலையில் முத்தமிட்டுக் கைவத்தபடி ஆசி கொடுப்பார்கள்.  கிராமத்து மனிதரான லலித் அப்பாவுக்கு பஞ்சாபிமட்டும்தான் தெரியும். பஞ்சாபி தெரியாத நானும் அவரும் வணங்கிக் கொள்வதோடு சரி. நாவொலியால் பேசிக்கொண்டதில்லை. ஆனாலும் ஆசைதீரப் பேசிக் கொள்வோம். ஆசி வழங்கிய கையோடு என் வலக்கையைப் பறித்துத் தனது கைகளுக்கிடையில் வைத்துப் பொத்திக் கொள்ளும் அந்த வெள்ளந்தி. எங்களது கைகள் தொடர்ந்து மாந்தம் பரிமாறிக் கொண்டிருக்கும். அதையெல்லாம் வெளியில் சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை அந்த வாஞ்சனைகள். “அவனைக் கொஞ்சம் வுடுறியா? வந்த எதனா சாப்பிடட்டும்!” என்று லலித் இரையும் வரை,  சமவெளியில் அமைதியுற்றுப் பாயும் முதுநதி போல நேயசுகம் எங்கள் உடம்புக்குள் அசும்பிக் கொண்டிருக்கும்.

    ராலேவில் இருக்கும் பாகிசுதான் நண்பன் இர்ஃபான் வீட்டுக்குப் போனால் இடது புறமும் வலது புறமும் மாறி மாறி அரவணைத்துக் கடைசியில் உச்சியில் முத்தமிட்டு வாழ்த்துவார்கள். மிசிசாகாவில் இருக்கும் பங்களாதேசு நண்பன் ஷகாரியர் இமாம் வீட்டுக்குப் போகும் போது, நம் இரு கைகளையும் ஒரு சேரப்பிடித்துக் குலுக்கி நான்கு கைகளும் இணைந்திருக்கும் இடத்தில் முத்தமிட்டு வரவேற்பான் அவன். இப்படி முத்து முத்தாய் முத்தங்கள் சூழ சுவாசித்து வாழும் வாழ்க்கையானது பரவசத்தில் ஆழ்த்தித் திளைக்கச் செய்கிறது.

    மனைவி, மக்கள் என ஆன பிறகு முத்தங்களே வாழ்க்கையாகிப் போனது. முத்தங்களற்ற வாழ்க்கை ஒரு சூனிய வாழ்க்கை. பிள்ளைகள் செய்யும் சில விநோத செயல்களைப் பார்த்ததுமே மனம் வாஞ்சையுற்று மகிழத் துவங்கும். அடிக்கடி பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கிறீர்கள் என மனையாள் கடிந்து கொள்வாள். எல்லாமும் தனக்கே வந்து சேர வேண்டியது எனும் ஆற்றாமையாகக் கூட இருக்கலாம் அது. யாருக்குத் தெரியும்?

    வயதான கிழவன் கிழவிகள் ஒருவருக்கொருவர் அணுசரணையாக இருந்து, சார்ந்தொழுகிக் கொள்வதைப் பார்த்தாலும் எனக்கு மனம் வாஞ்சையுற்றுப் பொங்கி வரும். இதற்காகவே மாலை நேரங்களில் குளக்கரைக்குப் போவதும் உண்டு. அங்கிருக்கும் அமர்விடங்களில் பெரியவர்கள் ஆற அமர இருக்கும் பாசமுறு காட்சியை எப்போதும் காணலாம். அக்கணங்களில் மனைவியோ, பிள்ளைகளோ இருந்தால் அவர்களுக்கு முத்தமிட்டு இன்புற்றுக் கொள்வேன். அவர்கள் இல்லாத நேரங்களில், வலது கை விரல்களை உள்மடக்கி உள்ளங்கையினைக் குவித்து அதன் மீது முத்தமிட்டுக் கொள்வேன். வலது கைக்குமிட்டியில் கொட்டிக் கிடக்கின்றன ஜீவனுள்ள முத்தங்கள் மாமாங்கமாய்.

    முதல்முறையாக இடைமறித்தாள் குதிரைவால் டீனா. “காலையில் வேலைக்குக் கிளம்பி வரும் போது உங்களுடைய முத்தப்பரிமாற்றம் எப்படி இருக்கும்?”, ஏக்கமுசுமுசுப்போடு கேட்கிறாள் அவள்.

    அப்படியொரு பழக்கமே எங்களுக்கில்லை என்றதும் அவள் முகம் சூம்பிப் போனதே பார்க்கலாம். இப்படி ஒரு பதிலை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள்.

    பிற்பகல் மணி மூன்று இருக்கும். இராலே நகரத்தின் ஊர்ப்புறமொன்றில் இருக்கும் அலுவலக வளாகம். ஆந்திர நண்பன் பெஞ்சல் ரெட்டிதான் வந்து முதலாவதாகக் காதைக் கடித்தான். அடுக்ககத்தில் பழக்கமான ஜெகன் சவுத்ரி நெஞ்சு வலியால் போய்ச் சேர்ந்து விட்டானாம். உடனே போயாக வேண்டுமென்கிறான்.

    சேப்பல்ஹில் மருத்துவமனைக்குப் போகும் வழியில் அவன் மனைவிக்குத் தெரியப்படுத்தி விட்டு வரச் சொல்கிறான் பரத் ரெட்டி. கணவனை இழந்திருக்கும் மனைவியிடம் போய் என்னவென்று எப்படிச் சொல்வது? நெஞ்சு பிசைகிறது எனக்கு. கூடவே வாந்தி பேதியும் வருவது போல இருக்கிறது. பொழையாப் போன பெஞ்சல் ரெட்டி என்னை விட்டானில்லை. என் மனைவியையும் கூட அழைத்து வரச் சொல்லி அக்கப்போர் செய்கிறான். “ஒதனம்மத்தோ நேனே செப்பானு!”, இந்தக் குழைச்சலுக்கு ஒன்றும் கொறைச்சல் இல்லை.

    என் மனைவி, நான், அவன் என மூன்று பேருமாகச் சென்றோம். ஏற்கனவே செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே அழுகைச் சத்தம். தரையில் விழுந்து புரண்டு கொண்டிருக்கிறாள் ஜெகனின் மனைவி சாரதா. “எப்பவும் இல்லாதபடிக்குக் கிளம்பும் போது முத்தமெல்லாங் குடுத்திட்டுப் போனயே, நாவாடு இங்க்க ராடா? கொண்டமார உண்டுத்துடே?!”, ஓலமானது கடைக்கோடி வீட்டு வரைக்கும் உள்ள எல்லா மேப்பில் மரங்களையும் அதிரச் செய்து, எல்லாரும் வெளியில் வந்து பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

    அன்று தீர்மானமானது; வீட்டை விட்டுக் கிளம்பும் போது ஒருநாளும் முத்தம் கொடுக்கவே கூடாதாம். தீர்மானமாய்ச் சொல்லி விட்டாள்.

    இந்த அமெரிக்கப் பெண்மணிகளுக்குத்தான் அடுத்தவர் மேல் எவ்வளவு கரிசனம்?  நாகரிகம், மாந்தநேயம், பண்பாடு, இங்கிதம் முதலானவற்றைக் கருவில் வைத்தே ஏதாவது ஊசிமூலம் செலுத்தி விடுவார்களோ? அப்படியிருந்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும்?? “சாரி! ஐ ஃபீல் சாரி!!”, மனமுருகிச் சொல்வது தெரிகிறது அவள் கண்களில்.

    பேசிக் கொண்டே உணவகத்திலிருந்து வெளியே வருகிறோம். வானம் பூராவும் நீலம் பாய்ச்சிக் கிடக்கிறது. உயரெழும்பி அலை பாய்ந்து சேட்டை செய்து கொண்டிருக்கக்கூடிய நான்கு மனங்களும், வாளாது தாழ்ந்து பணிந்தே இருக்கின்றன.

    அந்த ஓக் மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கை ஏன் கரைகிறதென்று அதற்கே தெரியாது. தன் கால்களால் அமர்ந்திருக்கிறதா, அல்லது நின்று கொண்டிருக்கிறதா அந்தக் காகம்? காகங்கள் கூடத் தன் அலகுகளால் ஒன்றையொன்று உரசி முத்தமிட்டுக் கொள்கின்றன. மனம் கசிந்து முத்தமிட்டது போக, எதையாவது கொண்டு வந்து பங்கித் தருகிறது மற்றவர்களுக்கும். காகம் ஒரு பகுத்துண்ணி. மனப்பாடம் செய்தால் மட்டும் போதுமா?

    இனி நாங்கள் மூவரும் தொப்பை தீபக்கின் காரில் அலுவலகம் போய்ச் சேர வேண்டும். டீனா அவளது காரில் தனியாக வந்திருக்கிறாள். போகிற வழியில் வங்கி வேலை எதோ இருக்கிறதாம் அவளுக்கு.

    எதுவும் சொல்லிக் கொண்டா நடக்கிறது? அதற்கான தருணங்கள் வாய்க்கும் போது அதனதன் வீச்சில் யாவும் நடக்கத்தான் செய்கின்றன. நினைத்த மாத்திரத்தில் கனடியன் கீசுகள் மேலெழும்பிப் பறக்கின்றன. காரணகாரியம் எதுவுமேயில்லாமல் வெறுமனே துள்ளிக் குதிக்கிறது குளத்து மீன். எனக்கும் இன்று மாலையில் மனைவி மக்களோடு குளத்திற்குப் போக வேண்டும் போல இருக்கிறது.

    நாங்கள் நால்வரும் பங்கேற்ற முத்தக் கச்சேரியின் கடைசிக் கட்டமான மங்களம் பாடும் நேரம் வந்து விட்டது.

    மணவாளனுக்குக் காலையில் தராமல் விட்டுப் போனதற்குப் பிராயச்சித்தமாய், இப்போது காகமாகவே மாறிப் போயிருக்கிறாள்.

    உறவு கலப்பதிலும் முத்தம். பிரிவதிலும் முத்தம். சிநேகச்சாறு வழிந்தோடி முத்தப் பெருநதிகளாய் உருக்கொண்டு பிரபஞ்சத்தின் பிறவிப்பயனை நீட்டித்துக் கொண்டே இருக்கிறது. முத்தப்பெருநதிகள் வற்றும் போது பிரபஞ்சமும் இல்லாது போகும்.

    தேனுண்ட வண்டுப் போல முயங்கிவந்து ஆளாளுக்கும் கனிந்த மெலிந்த முத்தமொன்றை நெற்றிப் பொட்டில் கொடுத்துப் போகிறாள் குதிரைவாலி! கணிசமாக நீட்சி கொள்கிறது பிரபஞ்சத்தின் ஆயுளும்!!  இந்த நாள் நமக்கு நல்ல நாள் என்கிற களிப்பில் தத்தம் வலக்கைகளை உயர்த்தி ஒன்றோடொன்று மோதிச் சப்பாணி கொட்டிக் கொண்டன சிநேகமும் முத்தமும்!!!

     

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும்

    -செல்வன்

    பிளட் பிரஷர், கொலஸ்டிரால், சர்க்கரை வியாதி இவை மூன்றும் நாகரிக மனிதனின் வியாதிகள் என அழைக்கபடுபவை. ஏன் எனில் காட்டுமிராண்டி சமூகங்களில் இந்த வியாதிகள் இல்லை. தினம் பல் துலக்காத காட்டுமிராண்டி சமூகங்களில் ரூட்கனால் சர்ஜரி தேவைப்படுவது இல்லை. தினமும் மூன்று வேளை பல் துலக்கி, ஃப்ளாஸ் செய்து சுத்தமாக பல்லை வைத்து இருக்கும் நகர்ப்புற சமூகங்களில் தான் டென்டிஸ்டுகள் தேவைப்படுகின்றனர்.

    1913ல் ஆப்பிரிக்காவில் மருத்துவ சேவைப்பணி ஆற்ற சென்ற ஆல்பர்ட் ஸ்வைட்சர் அங்கே மேற்கு ஆபிரிக்காவில் வசித்த பழங்குடி மக்களை சந்தித்தார். 41 வருடங்கள் அங்கே மருத்துவராக பணி ஆற்றினார். 41 ஆண்டுகளில் பல லட்சம் ஆப்பிரிக்க பழங்குடி மக்களுக்கு மலேரியா, வயிற்றுகடுப்பு மாதிரி வியாதிகளுக்கு சிகிச்சை அளித்தார். அதற்காக நோபல் பரிசும் பெற்றார். ஆனால் 41ஆண்டுகளில் அவர் சந்தித்த அப்பென்டிக்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஒன்று. கான்சர் வந்த பழங்குடி மக்களையும் அவர் சந்திக்கவில்லை. தொப்பை, தொந்தி, சர்க்கரை, கொலஸ்டிரால் இவை எதுவும் அந்த மக்களுக்கு இருக்கவில்லை.

    ஆனால் 41 ஆண்டுகளில் மேலைய நாகரிகமும், மேற்கத்திய உணவுமுறையும் ஆப்பிரிக்கர்களிடையே பரவின. ரொட்டிகள், மாவுகள், பிஸ்கட்டுகள், இனிப்புகள் ஆகியவை நாகரிகமாயின. ஸ்வைட்சரின் இறுதி ஆண்டுகளிலில் ஆப்பிரிக்கர்களிடையே கான்சரும், சர்க்கரை, கொலஸ்டிரால் வியாதிகளும் பரவலாயின.

    இதுபோல தென்னாப்பிரிக்காவில் 19ம் நூற்ராண்டில் இன ஒதுக்கல் கடுமையாக நிலவியது. இந்தியர், பூர்வகுடி ஸூலூக்கள், வெள்ளையர் என மூன்று விதமான இன ஒதுக்கல் அங்கே இருந்தது. இந்தியர், பூர்வகுடி ஸூலூக்கள், வெள்ளையர் என மூன்று விதமான இன ஒதுக்கல் அங்கே இருந்தது. அங்கே டயபடிக் க்ளினிக் நடத்தி வந்த ஜார்ஜ் கேம்பெல் எனும் மருத்துவர் இரு விதமான நோயாளிகளை மட்டும் கண்டார். வெள்ளையர்களுக்கு டயபடீஸ், அப்பென்டிக்ஸ், ரத்த அழுத்தம் முதலிய நாகரிக வியாதிகள் அனைத்தும் இருந்தன. ஸூலுக்களுக்கு அம்மாதிரி வியாதிகள் இல்லை. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அவரிடம் வந்த சர்க்கரை நோயாளிகளில் 80% பேர் இந்தியர்கள் (தமிழர்கள்). இதே மருத்துவர் பின்னாளில் பிலடெல்பியா சென்றபோது அங்கே இருந்த கருப்பினத்தவருக்கு வெள்ளையருக்கு சமமாக நாகரிக மனிதனின் வியாதிகள் இருந்ததை கண்டார். ஸூலுக்களுக்கும் அவர்களுக்கும் பெருமளவில் வித்தியாசம் இருந்ததை அறிந்தார்.

    ஆனால் இன்று உடல் இளைக்கவும், டயபடீஸ், கொலஸ்டிரால் கட்டுபாட்டுக்கும் மக்களுக்கு கொடுக்கபடும் அறிவுரைகள் எது? நாகரிக மனிதனின் உணவுகளை உண்பதுதான். உதா; ரொட்டி, சப்பாத்தி, இட்டிலி முதலியவை. இவற்றில் கொலஸ்டிரால் அல்லது கொழுப்பு சுத்தமாக இல்லை. கொலஸ்டிராலோ, கொழுப்போ இல்லாத உணவை உண்ண சொல்லி மக்களுக்கு பரிந்துரைக்கபடுகிறது. மக்களும் 2% கொழுப்புள்ள பால், ஸ்கிம் மில்க், சோயா பால் முதலியவற்றை உண்கின்றனர். சிகப்பு மாமிசத்தை தவிர்த்து பழங்கள், வெள்ளை மாமிசம் எனப்படும் சிக்கன், சாலட் என உண்கின்றனர். இதனால் வியாதிகள் குறைகிறதா? உணவில் உள்ள கொழுப்புக்கும் உடலில் உள்ள கொலஸ்டிராலுக்கும் எதாவது தொடர்பு உண்டா?

    கொலஸ்டிராலுக்கு காரணம் கொழுப்பு நிரம்பிய உனவுகளை உண்பது என நாம் எப்படி அறிந்தோம் என்பதே சுவார்சியமான விஷயம். இதை கண்டுபிடித்தவர் ஆன்சல் கீஸ் எனும் ஆய்வாளர். அவர் சுமார் 22 நாடுகளில் மக்களின் உணவையும் அவர்கள் கொல்ஸ்டிரால் அளவையும் ஆராய்ந்தார். அதன்பின் அதில் ஏழு நாடுகளின் டேட்டாவை மட்டும் எடுத்து பதிப்பிட்டார். அதில் மக்களின் உணவில் கொழுப்பு அதிகம் இருக்க அவர்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவும் அதிகமாக இருப்பது கன்டுபிடிக்க பட்டது.

    60களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆய்வுக்காக ஆன்சல் கீஸ் டைம் பத்திரிக்கையின் அட்டைபடத்தில் வெளியிடப்பட்டு சிறப்பிக்கபட்டார். அதன்பின்னர் கோடிகணகான டாலர்கள் கொலஸ்டிராலுக்கும் நம் உணவில் உள்ல கொழுப்புக்கும் இருக்கும் ஒற்றுமையை ஆராய செலவிடபட்டன. பின்னளில் வெளியான ஆய்வுகள் தெளிவான எந்த முடிவையும் தரவில்லை. ஆனால் அதற்குள் ஆன்சல் கீஸின் ஆய்வு முடிவை ஒட்டி பலரும் கொழுப்பு குறைந்த உணவுகலை உண்ண துவங்கினர்.

    இந்த பிரச்சனையை தீர்க்க அமெரிக்க அரசு செனட்டர் ஜார்ஜ் மெக்கவர்ன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. ஜார்ஜ் மெக்கவர்ன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். கமிட்டி கொலச்டிராலுக்கு காரணம் கொழுபப என ஆராய்ந்தது. கமிட்டி முன் அறிக்கை சமர்ப்பித்த விஞ்ஞானிகளிடம் கடும் கருத்துவேறுபாடுகள் நிலவின. ஆனால் ஜார்ஜ் மெக்கவர்ன் இதற்கு முன் நேதன் ப்ரிக்ட்கிர்ன் எனும் மருத்துவர் நடத்திய கொழுப்பு குறைவான உணவுகளை உண்ணும் புரக்ராமில் கலந்து கொண்டவர். இந்த புரக்ராமில் கலந்துகொன்டவர்கள் எடை குறைந்தது உண்மை. ஆனால் கொழுப்பு குறைந்த உணவுகலை உன்ட பலரும் பின்னாளில் மன அழுத்தம் அடைந்து தற்கொலை செய்துகொண்டதால் நேதன் அந்த புரக்ராமையே பின்னாளில் கைவிட்டு விட்டார்.

    இப்படி இந்த புரக்ராமில் கலந்துகொண்டதால் மெக்கவர்ன் கொழுப்பு குறைவான உணவுகள் தான் நல்லவை என நம்பிவந்தார். கமிட்டி அறிக்கை வெளியாகி “உடலில் கொலச்டிராலை குறைக்க கொழுப்பு குறைந்த உணவுகளை உண்பதே வழி” என பரிந்துரைக்கபட்டது. உடனே அதை ஒட்டி அமெரிக்க அரசின் புட் பிரமிட் வெளியிடபட்டது. அதில் ரொட்டி, சீரியல் முதலிய தானிய உணவுகளை அதிகம் உண்ன மக்களுக்கு பரிந்துரைக்கபட்டது. மாமிசம், முட்டை, வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக உண்ன அல்லது தவிர்க்க பரிந்துரைக்கபட்டது.

    இந்த பரிந்துரைகளை ஒட்டி மில்லியன்கனகான டாலர்கள் சீரியல், ரொட்டி கம்பனிகளால் விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டன. “இதயத்துக்கு நன்மை அளிக்கும் சீரியல்கள்” என்ற முத்திரையுடன் அவை வலம் வந்தன.

    ஆனால் இது அனைத்துக்கும் அடிப்படையான மருத்துவர் ஆன்சல் கிஈஸின் ஆய்வு பல நாட்கள் மறுபரிசீலனைக்கு உடபடவே இல்லை. அவற்றை பின்னாளில் ஆராய்ந்தவர்கள் ஆன்சல் கீஸ் ஏழு நாடுகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துகொன்டதை விடுத்து அந்த 22 நாடுகளின் புள்ளிவிவரங்களையும் பதிப்பிட்டிருந்தால் நாம் உண்ணும் உணவில் உள்ல கொழுப்புக்கும், நம் உடலில் உள்ல கொலஸ்டிரால் அளவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை கண்டறிந்தார்கள்.

    கீழே இருக்கும் கிராபில் இடப்பக்கம் இருப்பது 7 நாடுகளின் டேட்டா. வலப்பக்கம் இருப்பது 22 நாடுகளின் டேட்டா.

    ஆன்சல் கீஸின் ஆய்வில் கொழுப்பு என ஒட்டுமொத்தமாக கணக்கிட்டதை விடுத்து புராசஸ் செய்யப்பட்ட செயற்கை கொழுப்புக்கும் (உதாரணமாக ஹைட்ரஜனேட்டெட் ஆயில்கள்- மாரடைப்பு அதிகமாக இருந்த நாடுகளில் இவை அதிகம் பயன்பட்டன), மாரடைப்புக்கும் உள்ள உறவை கணக்கிட்டிருந்தால் அவர் டேட்டாவில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்திருக்கும் என பின்னாளில் ஆய்வாளர்கள் கூறினார்கள். (உதா: கரோலின் பாரிங்கர்)

    துரதிர்ச்டவசமாக கொழுப்பு மோசம் என ஒட்டுமொத்தமாக கொழுப்புக்களை குறைக்க சொன்னதால் மக்கள் இயற்கை கொழுப்புக்களான நெய், வெண்ணெய், பன்றிக்கொழுப்பு ஆகியவற்ரில் சமைப்பதை நிறுத்தி செயற்கை கொழுப்புக்களான மார்கரின், ஹைட்ரஜனேட்டட் வெஜிட்டபிள் ஆயில் (சோயா, சன்பிளவர், கார்ன் ஆயில்) ஆகியவற்ருக்கு மாறினார்கள். இவற்றில் இருந்த டிரான்ஸ்ஃபேட் மிக ஆபத்தானது, மாரடைப்பை ஏற்படுத்துவது என்பது பின்னாளில் தெரியவருவதற்குள் இவை “இதயத்துக்கு நலமளிப்பவை” என்ற முத்திரையுடன் பெரும் சந்தையை பிடித்து விட்டிருந்தன.

    Inline image 1

    ஆலன் கீஸ் ஆய்வை தொடர்ந்து உணவில் உள்ள கொழுப்புக்கும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலுக்கும் இடையே உள்ள உறவு ஆராயபட்டது. ஆய்வு முடிவுகள் தெளிவான எந்த ரிசல்ட்டையும் தரவில்லை.

    உதாரணமாக அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் சார்பில் நடந்த இந்த ஆய்வை எடுத்துகொள்வோம். ஆய்வின் முழு பிடிஎப் சுட்டியும் இங்கே காணலாம்

    229 பேரிடையே நடத்தபட்ட இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டனர். கண்ட்ரோல் க்ரூப் என அழைக்கபட்ட பிரிவினருக்கு உணவு கட்டுபாடு எதுவும் விதிக்கப்டவில்லை. கரோனரி க்ரூப் என அழைக்கபட்ட பிரிவினர் குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவுகளை உண்டார்கள். இறுதியாக கணக்கிட்டதில் கன்ட்ரோல் க்ரூப் கரோனரி க்ரூப்பை விட 12% அதிக கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் நிரம்பிய உணவுகளை உண்டதாக கணக்கிடபட்டது.

    அதன்பின் இந்த இரு பிரிவினரின் ரத்தத்தில் உள்ள சீரம் கொல்ஸ்டிரால் அளக்கபட்டது. அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் குறைந்த கொழுப்புக்களை உண்ட கரோனரி க்ரூப்பின் ரத்தத்தில் உள்ள சீரம் கொல்ஸ்டிரால் அளவு கண்ட்ரோல் க்ரூப்பின் கொல்ஸ்டிரால் அளவை விட 16% அதிகம் இருப்பதாக் தெரிய வந்தது.

    ஆக 12% அளவு குறைந்த கொழுப்பை உண்ட பிரிவினர் 16% அளவுக்கு ரத்தத்தில் கொல்ஸ்டிராலை அதிகரித்து கொன்டனர்.

    இதய அடைப்பு உள்ளவர்களுக்கு குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவுகளை பரிந்துரைப்பதன் நன்மைகளை நிருபிக்க நடந்த இந்த ஆய்வு தலைகீழான ரிசல்டுகளை அளித்ததால் வெறுத்துபோன விஞ்ஞானிகள் “இதய அடைப்பு உள்ளவர்கள் கொலஸ்டிரால் குறைவாக உள்ள உணவுகளை உண்ணவேண்டும் என பரிந்துரைப்பதில் எந்த நன்மையும் இல்லை” என கூறி எழுப்பி ஆய்வை முடித்தார்கள்

    அடுத்த வாரம் இதே தலைப்பில் நடந்த வேறு சில ஆராய்ச்சி முடிவுகளை காண்போம்

    References:

    1) Good calories, bad calories- Gary Taubes

    2) http://en.wikipedia.org/wiki/Ancel_Keys#Seven_Countries_Study

    3) D M. GERTLER, STANLEY MARION GARN and PAUL DUDLEY WHITE
    Diet, Serum Cholesterol and Coronary Artery Disease
    Print ISSN: 0009-7322. Online ISSN: 1524-4539

    Share