Blog

  • கோவை – பொள்ளாச்சி சாலை

    கோவை – பொள்ளாச்சி சாலை

    கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலை எப்படி இருக்கிறது? தார்ச் சாலை – சிமெண்டுச் சாலை ஆகிய இரண்டில் எது சிறந்தது? இதோ ஒரு சோதனை ஓட்டம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணித மேதை ராமானுஜன் – 134ஆவது பிறந்த நாள்

    கணித மேதை ராமானுஜன் – 134ஆவது பிறந்த நாள்

    இன்று கணித மேதை ராமானுஜனின் 134ஆவது பிறந்த நாள். 32 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன், மறைந்து 100 ஆண்டுகள் கடந்த பிறகும், கணித உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். இவரது பிறந்த நாளை இந்தியாவின் கணித நாளாகக் கொண்டாடுகிறோம். கும்பகோணத்தில் உள்ள, இராமானுஜனின் நினைவு இல்லத்தைக் கடந்த ஆண்டு ஆவணப்படுத்தினேன். அவரது அறையும் பயன்படுத்திய கட்டிலும் பார்த்துக்கொண்டிருந்த ஜன்னலும் அப்படியே உள்ளன. ராமானுஜன் நடமாடிய இடத்தை நீங்களும் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மயிலொன்று கண்டேன்

    மயிலொன்று கண்டேன்

    குரங்குகளைக் காண்பதற்கு முன்னதாக முதலில் கண்டது இந்த மயிலைத்தான். கோவை மாவட்டம், கவியருவியின் சாலையோரத்தில் அச்சமின்றி இரைதேடிக்கொண்டு இருந்தது. வாகனங்களின் இரைச்சலை இது கண்டுகொள்ளவே இல்லை. இது என் இடம் என்ற சுதந்திரத்துடன் சுற்றி வந்தது. இந்தச் சுதந்திரம், இதன் அழகை இன்னும் கொஞ்சம் அதிகரித்துவிட்டது. இந்தக் கான மயிலைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 153 (மெய்  அன்பர்)

    சேக்கிழார் பாடல் நயம் – 153 (மெய் அன்பர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    மழநாட்டில் தோன்றிய ஆனாய நாயனார் ஆயர் குலத்தைச்  சார்ந்தவர். தூய திருநீறணிந்து வாயால் சிவநாமம் செப்பி,  பேயோடு ஆடும் பிரான் அடியையே போற்றுவார். ஆநிரைகளை, அகன்ற வெளியில் மேய்த்தார். கொடியவிலங்குகளாலும், நோய்களாலும்   அவை துன்புறாமல் காத்தார் . தன மாட்டுக் கொட்டில் வளரும் படிக்காப்பாற்றினார். அங்கே ஆநிரைகள் பெருகின. தம்மிடம் ஆயர்கள் பணி புரிய , அவர் புல்லாங்குழல் ஊதும் பயிற்சியில் சிறந்தார்.

    வேதமுறை கற்று, மூங்கிலில் சரியான அளவை வெட்டி, காற்று புகும் துளை , மற்றும் சுரத்தானங்கள் கொண்ட துளைகளை அமைத்துக் குழலிசைப் புலமை பெற்றார். அக்குழலில் சிவபிரானின் அஞ்செழுத்துடன், ஏழிசைச் சுருதி முறையில்  வாசித்தது அசைகின்ற ஆசையாய் பொருள்களைக் கவர்ந்து வாசித்தார். புல்லாங்குழலுக்குப் பூசை செய்து, தாமும் வெண்ணீறணிந்து அனைவரையும் கவர்ந்த அணிகலன்களுடன், நீறணிந்த மார்பில் வண்டு மொய்க்கும் முல்லை மாலை அணிந்தார்.

    தம் பாதத்தில் செருப்பணிந்து கையில் குழல் எந்தகி ஆயர் குழுவுடன் ஆநிரை மேய்க்கச்  சென்றார்.அப்போது, நீலநிறம் பொருந்திய பெரிய மயில்கள் அகவவும், வரிசையாகிய கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப் பண்ணைப் பாடவும், இந்திர கோபமாகிய வாயினில் வண்ணமுடைய வெள்ளிய  அழகிய முல்லையரும்புகள் புன்முறுவல் காட்டவும், அசைகின்ற மின்னலாகிய இடையும் சூழும் மாலைப்பொழுதாகிய முலை அசையவும் ஞாலமாகிய பெரிய அரங்கத்திலே

    ஆடுவதற்குக் காலம் என்கின்ற பருவத்தையுடைய பெண் வந்தனள்.

    ஆனாயர் தம் அடியார்களுடன் கொன்றி மரத்தைச்  சார்ந்தார். அக்கோன்டரை மரம் சிவபிரான் போலத்  தோன்றியது. அதன் நேரே நின்று  உள்ளம் உருக, சிவபத்தித் திறம் தோன்றக் குழல்  இசைத்தார்.  பக்தி பொங்கும் இசையில் ஐந்தெழுத்தை வாசித்து,ஏழு துளைகளில் விரல் தடவி,   எல்லாவுயிர்களின்  எலும்பும்   கரைந்து உருகும் வண்ணம், மூங்கில் குழற் கருவியில்  வாய் வைத்து ஊதினார். அது வண்டு  மலரை மொய்ப்பது போல் இருந்தது!

    குழலின் துளைகளில்  ஊதிய படியே ஓசையின் ஏற்ற இறக்கங்களைச்  சோதித்துப்  பண்ணிசை பெருக, இசையின் வகைகள் அனைத்தும் சேர முல்லைப்பண்ணில் சடைமுடியார் சிரமசைக்கத் தானம் முதலான ஓசைவகைகள் ததும்ப ஐந்தெழுத்தை இசைத்தார். வலிவு, மெலிவு, மத்திமம் என்ற வகைகளில் குழல் துளைகளில் விரலிட்டு அழுத்தி, இசையை எங்கும் பரப்பினார்.

    அவர் இசைத்த ஓசை நிலமெங்கும் பரவி வானகத்தேவர்களைக் கவர்ந்தது. அவர்முன் எல்லாவுயிர்களும்  தம்மை மறந்து நெருங்கின. பசுக்களும், மான்களும் பாலூட்டும் கன்றுகளும் பெரிய கொம்புடைய காளைகளும் மெய்  சிலிர்த்து வந்தன. மயில்களும் பறவைகளும் நெருங்க, மாடு மேய்ப்பவர்களும் தொழிலை மறந்து கூடினர். உலகெங்கும் உள்ளோர், குழலிசைக்கு மயங்கினர். வானத்து தேவ மகளிர், வித்யாதரர்கள், சாரணர்கள், கின்னரர்கள், தேவர்கள், வான் வழியே வந்திறங்கினர். தேவமகளிர்கள் கற்பகப் பூஞ்சோலைகளின் பக்கத்திலிருந்து மலர்போன்ற தமது கைகளால் அமுதூட்டும் கனி பொருந்திய வாயினையுடைய மெல்லிய கிளிகளுடனே தமது கூந்தல் அலையும்படி தத்தம் விமானங்களில் விரைவாக ஏறிவந்து பரவிய ஏழிசை யமுதத்தினைப் பருகினார்கள்.

    வலியோரும் மெலியோரும்  உணர்வு ஒன்றிக் கேட்டலால் , பாம்புகளும் மயில்களுடன் சேர்ந்து வரும்; சிங்கமும் பெரிய யானையும் சேர்ந்து நிற்கும்; புலியின் வாயருகே மான்கள் சேர்ந்து நிற்கும்;  அவை காலை எடுத்து வைக்கவில்லை; மரங்கள் மலர்களை அரும்ப வில்லை; அருவிகளும் காட்டாறுகளும் ஒலிஎழுப்பி ஓடவில்லை; மேகங்கள் மழை பொழிய மறந்தன;

    இடிகள் முழங்க வில்லை; கடலையையும் ஓய்ந்தன;

    இவ்வாறு அசையும்,  அசையாப்  பொருள்கள்  இசைவயப்பட்டன; அவற்றின் புலன்களும் அந்தக்கரணங்களும் அடியாரின் குழலிசையால் உருகின! உண்மையான அடியாரின் குழலிசை வையமும் வானமும் நிறைந்தது! அடுத்துச் சேக்கிழார் பாடுகிறார்..

    பாடல்

    மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை
    வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயம் ஆக்கிப்
    பொய் அன்புக்கு எட்டாத, பொன் பொதுவில் நடம் புரியும்
    ஐயன் தன் திருச் செவியின் அருகு அணையப் பெருகியது ஆல்.

    பொருள்

    மெய்யன்பரது அன்பினால் விளைந்த குழலினது இசையோசையானது இந்த உலகத்தையும் நிறைவித்து வானுலகத்தினையும் தன் வசமேயாகச் செய்து, பொய்யன்பினுக்கு எட்டாதவரும், பொன்னம்பலத்தினில் திருக்கூத்து இயற்றுகின்றவரும் ஆகிய ஐயரது திருச்செவியின் பக்கத்தில் அணையும்படி பெருகிற்று.

    விளக்கம்

    மெய்யன்ப ராதலின் அவரது மனத்து அன்பின்விளைந்த குழலோசை ஆண்டவர் திருசசெவியின் அருகு அணையப் பெருகியது என்பது குறிப்பு. இதனையே வலியுறுத்துவார் பொய்யன்புக் கெட்டாத என்று எதிர்மறை முகத்தானுங்கூறினார்.

    குழல் இசை  பேரோசையாகப்  பெருகிய.ஓசை . அவ்வோசை வையத்தையும்  வானத்தையும்  நிறைத்து, இறைவன் திருச்செவியையும் நெருங்கியது!

    நிறைத்து – வயமாக்கி – பெருகுதல் – என்ற தொழிற்பாடுகளின் உள்ளுறை குறிக்கத்தக்கது. தூல சூக்கும காரணநிலைகளுக்கேற்றவாறு கூறியது கண்டு கொள்க. புடைபெயர்ந்து ஒன்றை யொன்று பரம்பரையிற் றொடர்ந்து சென்று மறைவது ஒலியலைகளின் இயல்பு. நீரினுட் போகட்டதொரு கல்லினால் முதலில் அதனைச்சுற்றி மூண்ட அலைகள் உளவாம். பின் அவற்றைத் தொடர்ந்து தளர்ந்த அலைகள் உளவாம். பின்னர் அவ்வாறு மெலிந்து கொண்டே சென்று இறுதியில் ஒன்றும் அசையாமைபோல அவை மிக மெலிந்து காணப்படும். அது போலவே ஒலியலைகளும் உண்டாகும் இடத்தினின்றும் மேன்மேற் கிளம்பிச் சென்று சென்று இறுதியில் அதி சூக்குமமாகிய காரணத்தில் ஒடுங்கும். இங்கு ஆனாயர் குழலிசை ஓசை முதலில்  தூலமாகிய ஒலியலைகளாக எம்மருங்கும் பரவி வையத்தை நிறைத்து, அதன்பின் சூக்கும ஒலியலைகளாகமேற்பரவி வானத்தைத் தன் வயமாக்கி, அதன்மேல் அதிசூக்குமமாகிய காரண ஒலியுருவில் ஐயர் திருச்செவியின் அருகு அணையும்படி பெருகியது. அலைகள் முதலில் நாற்புறமும் சுருங்கக் கிளம்பிப் பின்னர் மேன் மேல் விரிவாகப் பெருகுமியல்பு பற்றிப் பெருகியதால் என்ற குறிப்பும் காண்க.

    இஃது எல்லாக் குழலோசைகட்கும் எல்லா ஓசை ஒலிகட்கும் இயல்பாமே? எனின், அற்றன்று; பூதசம்பந்தமாய் வையந்தன்னை நிறைத்த மட்டில் நின்று ஒழியும் ஏனைத் தொனியான்மக ஓசைகள் போலல்லாமல் இஃது அஞ்செழுத்தை உள்ளுறையாகக் கொண்டொழுகிய வர்ணான்மக ஓசையானதால் ஐயன் றிருச் செவியின் அருகணையப் பெருகியதென்க.

    ஆனாயரது குழலிசை இம்மை, மறுமை, வீடு என்னு மூன்றினையும் தரவல்லதாயிறறென்பதாம். வைய நிறைத்ததனால் இம்மையும், வானம் தன்வயமாக்கியமையால் மறுமையும், ஐயன்றிருச் செவியினருகணைதலால் வீடும் அளிக்கவல்லதாயினமை கூறப்பட்டது. இறைவனைப் பாடுதல் இம்மூன்று பயன்களையும் அளிக்கவல்லதென்பது

    “எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்,
    இம்மையேதருஞ் சோறுங் கூறையும்; ஏத்த லாமிடர் கெடலுமாம்,
    அம்மை யேசிவ லோக மாள்வதற் கியாதுமையுற வில்லையே”

    என்ற ஆளுடைய நம்பிகள் திருவாக்கா னறிக. பொய்யன்புக் கெட்டாத – ஐயன் – எனக் கூட்டுக.

    “பொக்க மிக்கவர் பூவு நீருங் கண்டு,
    நக்கு நிற்ப னவர்தமை நாணியே”

    என்பது தமிழ்மறை. ஐயனது பொற்பொது என்றது மெய்ஞ்ஞானமேயான அம்பலத்தை. எட்டாத பொற்பொது என்று கூட்டி உரைத்தலுமாம். பொற்பொது – பொன்னம்பலம்.

    மெய் அன்பு – மன மொழி மெய்என்ற மூன்றானும் சிவபெருமானையல்லாது வெறொன்றினையும் பற்றாத அன்பு. அங்ஙன மல்லாது தம்மையும் உலகையுமே பற்றுக்கோடாகக் கொண்டு செலுத்தும் அன்பு பொய்யன்பாம்.

    ஐயன்  திருச் செவியின் அருகணையப் பெருகுதலாவது கீழுள்ள தத்துவங்களை யெல்லாம் கடந்து சுத்த தத்துவத்தில் விளங்கும் இறைவனிடமும் செல்லும்படி வியாபித்தல்.ஆயின்,

    “சகஸ்ர சீரிஷாத் புருஷ சகஸ்ராட்ச சகஸ்ரபாத்” எனவும்,

    ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும்”   எனவும்,

    ஆயிரங் கமல ஞாயி றாயிரமுக் கண்முக கரசர ணத்தோன்”எனவும்,

    “எங்கும் திருமேனி” (திருமூலர்) எனவும், “எங்கணும் பணிவதனங்கள்”  எனவும், “எங்குஞ் செவியுடையாய்”  எனவும்

    வரும்திருவாக்குக்களா லறியப் படுகின்றபடி எங்கும் நிறைந்து எல்லாம்கேட்பது இறைவனது தன்மையாதலின், இங்கு “ஐயன் றிருச்செவியி னருகணையப் பெருகியது” என்றது  என்னையோ? எனின், “அவன் மற்றிவ்விடங்களிற் பிரகாசமாய் நின்றே அல்லாதவிடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்”  என்ற  சிவஞானபோத  ஏதுவை விளக்குவாராகி, “அம்முதல்வன் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து (பத்தரது வேடமும் சிவாலயமும்) மாத்திரையே தயிரின்நெய் போல விளங்கி நிலைபெற்று, அல்லுழியெல்லாம் பாலினெய்போல வெளிப்படாது நிற்றலான்” என்று எமது மாதவச் சிவஞான சுவாமிகள் சிற்றுரையினுள் உரைத்தது கொண்டு இதனை  அமைவுபடுத்திக் கொள்ளத்தக்கது.

    அன்பின் விளைந்த இசையாதல் பற்றியே, இறைவரும், இது கேட்டவுடன் வெளிப்பட்டுவந்தனர் என மேல்வரும் பாட்டிற் கூறுதலும் கருதுக.

    திருச்செவி – என்பது அரன்றன் கரசரணாதி சாங்கமெல்லாம் அருளே என்ப; ஆதலின் ‘சிவனடிசென்னி வைப்பாம்’ என்பது போல உபசாரம். இறைவனுக்கு அருளே திருமேனியாம். அத்திருமேனியில் கண் செவி முதலாகிய அவயவப் பகுப்பெல்லாம் அருளே. இக்கருத்துப்பற்றியே

    “இத்தன்மை நிகழுநாளிவர் திருத்தொண் டிருங்கையிலை,
    யத்தர்திரு வடியிணைக்கீழ்ச் சென்றணைய வவருடைய,
    மெய்த்தன்மை யன்புநுகர்ந் தருளுதற்கு விடையவர்தாஞ்,
    சித்தநிகழ் வயிரவராய்த் திருமலைநின் றணைகின்றார்”

    என்று சிறுத்தொண்டநாயனார் புராணத்துட்கூறுதலுங் காண்க.

    இப்பாடலில் ஓசையின் செயல்களும், அளவைகளான்  அறியப்படும் அறிவியல் கருத்தும் இணைந்து,  அறிவியலையும் ஆன்மிகத்தையும் துல்லியமாக  இணைத்து விளக்கும்  நுட்பத்தைக்  காட்டுகிறது!

    Share
  • குரங்கு அருவி | கவியருவி

    குரங்கு அருவி | கவியருவி

    கோவை மாவட்டத்தின் வால்பாறை நகராட்சியில், ஆழியாறு பகுதியை அடுத்துள்ள கவியருவி என்ற குரங்கு அருவிக்குச் சென்று வந்தோம். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உடுமலைப்பேட்டையின் காற்றாலைகள்

    உடுமலைப்பேட்டையின் காற்றாலைகள்

    வெறுங்கையால் முழம் போடலாம். காற்றிலும் காவியம் தீட்டலாம். வெட்டவெளி, பொட்டல் காடு என்று வர்ணித்த இடங்கள், இன்று கோடிகளைக் குவித்து வருகின்றன. தமிழகத்தின் முக்கியமான காற்றாலை மையங்களுள் ஒன்றாக, உடுமலைப்பேட்டை திகழ்கிறது. ஆண்டு முழுவதும் காற்று வீசும் இடங்களையே இதற்குத் தேர்வு செய்கிறார்கள். ஒவ்வொரு காற்றாலையும் பல கோடிகள் செலவில் அமைக்கப்படுகின்றன. அதே போல, இவற்றிலிருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான மின்சாரம் உற்பத்தி செய்து, லாபம் ஈட்டுகிறார்கள். பரபரப்பான சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் காற்றாலைகளைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வானத்தில் எத்தனை வண்ணங்கள்

    வானத்தில் எத்தனை வண்ணங்கள்

    நண்பர்களே!

    வணக்கம்.

    21.12.2021 அன்று காலை 11 மணிக்கு, இந்தத் தொடர் நிகழ்ச்சியில் என் குருநாதரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரைப் பற்றிப் பேசவுள்ளேன்.

    வாய்ப்புடையோர் வருக! அல்லாதார் நேரலையில் காண்க!

    https://youtu.be/5L9eJCAAZYw

    அன்புடன்,

    ரமணன்

    Share
  • கோவை விமான நிலைய உள்ளழகு

    கோவை விமான நிலைய உள்ளழகு

    கோவை விமான நிலையத்தின் உள்ளழகு எப்படி இருக்கு? இதோ ஒரு சிறு உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னை விமான நிலைய உள்ளழகு

    சென்னை விமான நிலைய உள்ளழகு

    சென்னை விமான நிலையத்தின் உள்ளழகு எப்படி இருக்கு? இதோ ஒரு சிறு உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • (Peer Reviewed) க.நா.சுவின் ‘அசுரகணம்’ – பித்தேறி அலையும் அடர் காமம்

    (Peer Reviewed) க.நா.சுவின் ‘அசுரகணம்’ – பித்தேறி அலையும் அடர் காமம்

    ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    முதுகலைத் தமிழாய்வுத்துறை
    ஜமால் முகமது கல்லூரி
    திருச்சி – 20.
    george.joshe@gmail.com
    +91 9788784958

    க.நா.சு தினமும் நாற்பது பக்கங்களுக்கு குறையாமல் எழுதிக் குவித்தார் என்று சொல்வர். அத்தனை பக்கங்கள் எழுதியிருக்க மாட்டார் எனப் ப்ரமிள் விமர்சித்ததும் ஊரறிந்தது. அவர் அப்படி எழுதினார் என்று எடுத்துக் கொண்டால், இந்நாவலை மூன்று நாட்களில் எழுதி முடித்திருக்கலாம். ஆனால், இதைத் திருப்திகரமாக எழுதி முடிக்க, பதினைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன் என முன்னுரையில் குறிப்பிடுகிறார் க.நா.சு. மேலும் இத்தனை காலம் நாவலின் தத்துவப் போக்கைப் கனப்படுத்த பயன்பட்டது என்று குறிப்பிடுகிறார். அவரது வார்த்தையிலிருந்தே, இது அவருக்கு எத்தனை முக்கியமான பிரதி என்பதை உணரலாம்.

    தாயைச் சிறுவயதிலே இழந்த இளைஞன் வாலிபம் மீதூறும் காலத்தில் தாயொத்த வயதுடைய பெண்ணின்மேல் உண்டாகும் காமத்தை, அடக்கியாளத் துன்பப்படும் நிலையே நாவலின் களம்.

    ஃப்ராய்டியம், இடிபஸ் உளச்சிக்கல் என நவீன உளவியல் கூறுகளின் புனைவாக்கமே அசுரகணம் என எடுத்துக் கொண்டு கடந்துவிடாதபடி செய்கிறது, இதன் ராமாயணத் தொன்மத்தின் மீளுருவாக்கப் பிறழ்ச் சித்திரிப்புகள்.

    அவதூதர், பொய்த்தேவு போன்ற நாவல்களில் ஞானத்தை அடைந்த, நிம்மதியை அடைய எண்ணித் துறவு பூண்ட கதாப்பாத்திரங்கள், இடம்பெற்றிருக்கும். அந்நாவல்களை விடவும் க.நா.சுவின் இருத்தலியல்சார் கேள்விகள், விசாரணை எய்தி வெளிப்பாட்டை நோக்கி நகரும் நாவல், அசுரகணம்.

    “ நாதசுர சப்தம் கேட்டால் யாருக்காவது சாவு நினைவுகளாக வருமோ?
    எனக்கு  வருதே என்ன செய்ய?”

    என்றுதான் நாவல் ஆரம்பிக்கின்றது.

    மங்களம் எனக் குறிப்பிட்ட நாதத்தை அமங்களமாக உணரும் இளைஞன் எனத் தொடக்கத்திலே நாவலின் போக்கை உணரத் தருகிறார், ஆசிரியர். தன்னுடைய வித்தியாசமான பார்வையினாலே ராமன் ’செமி (பைத்தியம்)’ என்று வகுப்பு மாணவர்களாலும் பேராசிரியர்களாலும் சுட்டப்படுகிறான். படிப்பில் முதலிடம் என்றாலும் பொது காரியங்களில் ராமனுக்கு அறிவு போதாது என்கிற விவரணைகள் ராமனைச் சிந்தனையாளனாக, தனித்து நிற்கும் புத்தி ஜீவியாக முன்வைக்கிறது.

    இடிபஸ் உளச்சிக்கல் என்பது எந்த இளைஞனுக்கும் இருக்கலாம். ஆனால், அதை ஓர் புத்திஜீவியான இளைஞன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதில்தான் பிரதியின் கனம் கட்டமைகிறது.

    ராமனின் அதிகப்படியான சிந்தனைப் போக்கிற்குத் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் முக்கியக் காரணமாக அமைகிறது. நடைப் பயணத்தில் அலாதியின்பம் காணும் ராமன், எங்கு சென்றாலும் நடந்தே செல்கிறான். அந்த நடைப் பழக்கமே அவனது சிந்தனைப் பெருக்கத்திற்கு உதவியும் புரிகிறது. மனிதர்களின் பலத்தரப்பட்ட முகவமைப்புகள் பற்றி வியக்கும் பார்வைகளுக்கு மத்தியில் க.நா.சு ராமனை, ஒவ்வொருவரின் தனித்துவமான கழுத்துகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் உறுப்புகளில் கூட மனிதர்களிடமுள்ள மாற்றங்களை எண்ணி வியக்கவும் வைக்கிறார்.

    நூல்கள், தங்கை என இரண்டைத் தவிர அவனுடன் உரையாடுவதற்கு யாரும் இல்லை. அவன் அதை உருவாக்கிக் கொள்ளவுமில்லை. தாயைச் சிறுவயதிலே இழந்த பாரதி, தந்தையுடன் ஒருமித்து வாழ முடியாதது போலத்தான் ராமனும் வாழ்கிறான். தான் தன் தந்தையைப் போல் இருந்துவிடக் கூடாதென்ற தவிப்புகள், அவனைத் துண்டாடுகிறது. தன்னியல்பாக நடந்து கொள்ளும் வேளையில் அவனை யாராவது தந்தையைப் போல் நடந்து கொள்கிறாய் என்று சொல்லிவிட்டால் சமநிலை குலைந்துவிடுகிறான்.

    சமநிலை அறுபடுவது, கற்பனையின் பிடியில் அவனைச் சமர்ப்பிக்கிறது. தன்னை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படும் வேளைகளில், அவனைப் ஆட்கொள்ளும் கற்பனை நிஜம் போலவே தோற்றம் கொண்டு ஆளுகை செய்கிறது.

    தன்னிலையின் இயல்பிலிருந்து பிறரைக் காண்பதிலுள்ள சிக்கல், அவர்களும் தன்னைப் போன்றே எல்லாக் காரியங்களையும் சிந்திப்பதாக மயக்கம் கொள்வது. ஆனால் ராமனின் தன்னிலையிலிருந்து எழும் சிந்தனை பிறர் தன்னைப் போல் எதையும் சிந்திக்கவோ அணுகவோ மாட்டார்கள் என்று மயங்குவதாக உள்ளது. தன்னுடைய போக்கை நியாயப்படுத்தும் சுயபச்சபாத உணர்வின், முழுத் தொகுப்பாகவே ராமன் எழுதப்பட்டிருக்கிறான்.

    சாதாரண காரியத்திற்காகச் சென்ற ஓரிடத்தில் கண்டடையும் அசாதாரணத்திலிருந்து மீட்சிக் கொள்ள வழியுண்டா? என அலைகிறது ராமனின் மனம். தன் வகுப்புத் தோழியின் தாயாக இருக்கும் மத்திய வயதுடைய பெண்ணின் அழகு ராமனைக் கொதிப்படையச் செய்கிறது. அவனுலகில் அவளது ரூபம், இயல்விதி கடந்து எங்கும் வியாபித்தலைகிறது. பெருந்தாபம் கனலாகிக் கருத்தில் வெற்றி கொள்ள முனகும் உடலின் கொந்தளிப்பை, பூர்வ கவியின் கற்பனை மாந்தர்களைக் கொண்டு அணைத்துவிட நினைக்கிறார், க.நா.சு.

    ராமன் அவளைச் சூர்ப்பணகையாகவே பார்க்கிறான். தனது இன்ப ஒடுக்கத்தைக் களவாடும் ரவிவர்மனின் மோகினியாகவே கண்டு கலங்குகிறான். இளமையை உடல் களையும் பருவத்தில், மீண்டுமாய் ருதுவெய்திய காலத்து பரிபூர்ண அழகு மேலெழுந்து மெருகேறுவதைக் கண்டு அல்லல் படுகிறான்.

    அவனது மீட்புச் சுயமாய் நிகழமுடியும் என நம்பமுடியாத நிலைக்குப் போய்விடுகிறான். சூர்ப்பணகையின் மூக்கறுக்க லட்சுமணன் வேண்டுமெனத் தேடுகிறான். இல்லாத லட்சுமணனைத் தெரிந்தே வரவழைக்கத் துடிக்கிறான். தாபத்தை மேலும் எரியூட்டி வளர்ப்பதாக உள்ளது, ஹேமாவின் வருகை. ஹேமா அச்சூர்ப்பணகையின் மகள். அவளைத் தான் விரும்புவதாகச் சிந்திப்பதன் பின்னாலும் அவளது தாயே உள்ளதைக் கண்டடைவதோடு நாவல் முடிகிறது. மகளைக் கைப்பிடித்ததால் தாயின்மேல் நாட்டம் விலகியதாகச் சொல்லும் ராமன், ஹேமாவைத் தாயாகப் பார்க்கும் நிலையிலிருந்து தன்னுடைய நிரந்தர போராட்டத்தைத் தொடக்கிவிடுகிறான். தாய் நிலையை மனைவிக்கு வழங்குவதில் மீண்டும் குடிகொண்டுவிடுகிறது ஃப்ராய்டின் தத்துவம்.

    இங்கே கேள்வி, அத்தாய்மைக் கருத்துரு இருவரில் யாருடைய தாயாக உருக்கொள்கிறது என்பதில் மீண்டும் முடிச்சு கிளைவிடுகிறது. நாவல் மறுவாசிப்பிற்கும், புதுதிறப்பிற்கும் கண்டடைதலுக்கும் அழைத்துச் செல்லும் பகுதி, இக்கேள்வியிலிருந்துதான் துளிர்க்கிறது.

    இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பிராமணச் சமூகத்தில் பெரும்பாலான பெண்களுக்குத் தனது முதல் மகளை, மணம் முடித்து வைக்கும்போது வயது, நாற்பதிற்குள் தானிருக்கும். பண்பாட்டு ரீதியாக மணவயது பொருட்படுத்தப்படாத காலத்தில் இளவயதிலே பெண்கள் பேரப்பிள்ளைகளை எடுத்துவிடுவார்கள். இன்றும்கூட சொற்ப அளவில் பெண்கள் இளவயதிலே தன் இரண்டாம் தலைமுறையைக் காண்பதைப் பார்க்கிறோம். அப்படியான இளவயதுடைய தன்னுடைய வகுப்புத் தோழியின் தாயாக இருப்பதும் அவள் கவர்ச்சிகரமாக இருப்பதுமே ராமனைத் திக்குமுக்காட வைத்ததன், பின்னணி.

    ராமன் என்கிற பெயருக்கு, பதிவிரதன் என்னும் பொருள் சூட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. அந்தத் தேய்வழக்குச் சிந்தனைப் போக்கை (Stereotype mentality) கூறுபோடுவது போல க.நா.சு, ராமனை நாலரை ரூபாய் கொடுத்து விலைமாதுவிடம் காதல் பயின்றதாகக் காட்சிப்படுத்துகிறார்.

    தன் தந்தையை நகல் செய்து வாழக்கூடாதென ராமன் நினைக்கிறான். தந்தையை வெல்லவேண்டுமென்பதே அவனுடைய ஏக்கமாக இருக்கிறது. இங்கு தந்தையை வெல்லுதல் என்பது தந்தையின் குணாம்சத்தை, தான் அறிந்தும் அறியாமலும் சுவீகரித்துக் கொண்டு தளைப்பட்டுவிடக்கூடாது என்பதாகும். ராமனுடைய தந்தை இதிகாசத்தின்படி தசரதன் தானே. தசரதனின் போக இயல்பைத் தானும் பின் தொடர்ந்து யாருக்கும் தளைப்பட்டு (தசரதன் கையேயிடன் தளைப்பட்டதைப் போல்) விடக்கூடாதென்று ராமன் நினைக்கிறான்.

    தசரதனின் போகந்துய்க்கும் பண்பு, நாவலின் தசரதனாகிய நாராயணனிடம் உள்ளதைச் சுட்டிக் காட்டுமிடம் நுட்பமானது. தான் காதல் பாடம் பயின்ற இடத்திற்குத் தந்தையும் அடிக்கடிச் சென்று வருபவர் என்பதால் அவருக்குத் தான் போய் வந்தது தெரிந்திருக்கும் என்கிறான் ராமன்.

    அதற்கு முன்னும் பின்னும் நாராயணின் அச்செயலைப் பற்றி எவ்வித அறவியல் தீர்மானமும் (Moral correctness) ராமனிடமிருந்து வெளிப்படவில்லை. ராமனே அத்தீர்மானப் போக்கிற்கு எதிரான மனநிலை உள்ளவனாகவே தன்னைக் குறிப்பிடுகிறான். இவையாவும் நேரடி கூற்றாகவோ நனவோடையாகவோ இடம்பெறாமல் நுண்வாசிப்பில் வெளிப்படுவது, இந்நாவலின் சிறப்பு. க.நா.சுவின் மறைபிரதி என்று அசுரகணத்தைக் குறிப்பிடுவது சாலத் தகும்.

    அந்தரங்கங்களிலிருந்து தப்பலாம் ஆனால் அந்தரங்கக் கதைகளிலிருந்து தப்புவது என்பது ஞானமடைந்ததாகத் திரிபுற்று சாக்கடைக் குழியில் சவமாகி மிதக்கும் சோமு பண்டாரத்தின் நிலைதான்.

    மானுட வாழ்வுள்ளவரை அவனுக்கு ஒழுக்கவியல் சிந்தனையும் போதிக்கப்பட்ட அறவியலை மீறுவதால் உண்டாகும் குற்றவுணர்வும் உள்ளவரை, அசுரகணங்களை அவன் எதிர்க்கொண்டுத்தான் ஆக வேண்டும். அதை நுட்பமாகவும் எக்காலத்திற்கும் பொருந்துவதாகவும் பிரதியாக்கிய க.நா.சு, இந்நாவலுக்காக என்றும் நினைக்கப்படுவார்.

    க.நா.சுவின் அசுர வார்த்தைகளாலே இக்குறுங்கட்டுரையை நிறைவுச் செய்கிறேன்:

    ”சிறை (புலன்) வாழ்வென்பது சுவடு தேய்ந்த பாதையிலே வளைய வருவதாகும்”.

    முதன்மை நூல்:

    1. க.நா.சு, அசுரகணம், எழுத்து பிரசுரம், சென்னை – 40, முதற்பதிப்பு – 2020.

    துணைமை நூல்:

    1. ஜெயமோகன், நவீனத்தமிழிலக்கியஅறிமுகம் கிழக்கு பதிப்பகம், சென்னை – 14, முதற்பதிப்பு – 2011.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review): 

    கட்டுரையாளர் அசுரகணம் நாவலைப் படித்துத் தெளிவாக உள்வாங்கி இருக்கிறார். தமிழ் இலக்கிய மரபில் வரும் பெருந்திணை சார்ந்த கதையாடல் இந்நாவலில் வந்திருப்பதை உளவியல் கண்ணோட்டத்தில் இடிபஸ் சிக்கலாக எடுத்துக் கூறுவது சிறப்பு. ராமனுக்கும் அவனது தந்தையாகிய நாராயணனுக்கும் இடையே இருக்கும் குணம் சார்ந்த தலைமுறைப் போக்கிலிருந்து விடுபட என்னும் ராமனின் முயற்சிகளைக் கட்டுரையாளர் மிகவும் கவனத்துடன் உற்று நோக்கி இருக்கிறார். ஒவ்வொரு மகனும் தனது தந்தையின் சாயலில் இருந்து விடுபட்டுத் தனக்கான அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற, போராடுகின்ற மனநிலை இங்குச் சிந்திக்கத்தக்கது. ராமனின் அப்பா பெண் சார்ந்த ஈடுபாட்டில் மயங்கி திரிவதில் இருந்து தான் மீண்டு வர வேண்டும் என்று எண்ணுகின்ற இயக்கப் போக்கு நாவலின் உட்சரடாக இருப்பதை இக்கட்டுரையாளர் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். க.நா.சுவின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பாங்கில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.


    Share
  • எழுத்தால் சமூக மாற்றம் நிகழுமா? | கே.ஜி.ஜவர்லால் நேர்காணல் – 3

    எழுத்தால் சமூக மாற்றம் நிகழுமா? | கே.ஜி.ஜவர்லால் நேர்காணல் – 3

    எழுத்தால் சமூக மாற்றத்தை உருவாக்க முடியுமா? கதையில் செய்தி ஏதும் சொல்ல வேண்டுமா? கடினமான நடையில் எழுதுவது உகந்ததா? புரிந்தால் புரிந்துகொள், புரியாவிட்டால் சொறிந்துகொள் என்று சுஜாதா சொன்னது ஏன்? நல்ல எழுத்து எப்படி இருக்க வேண்டும்? எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லாலின் அனுபவப் பகிர்வு இங்கே. இதில் அவர் சொல்லும் காட்சிக்கு நீங்கள் ஒரு கதை எழுதி அனுப்புங்கள். சிறந்த கதையை அவர் தேர்ந்தெடுப்பார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(381)

    குறளின் கதிர்களாய்…(381)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(381)

    மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
    தாஅய தெல்லா மொருங்கு.

    – திருக்குறள் – 610 (மடியின்மை)

    புதுக் கவிதையில்…

    சோம்பலில்
    சுகமது காணா
    சுறுசுறுப்பான மன்னன்,
    அன்று
    தன் அடியால்
    ஓங்கி உலகளந்தோன்
    கடந்த
    உலகை யெல்லாம்
    ஒருசேர அடைவான்…!

    குறும்பாவில்…

    தன் திருவடியால் உலகளந்தவன்
    தாண்டிய உலகமனைத்தையும் ஒன்றாய்ப் பெறுவான்
    சோம்பலே இல்லாத அரசன்…!

    மரபுக் கவிதையில்…

    தலையில் காலை வைத்தேதான்
    தரணி யெல்லா மொன்றாக
    அலையில் துயில்வோன் அளந்திட்ட
    அகில மனைத்தும் பெற்றிடுவான்,
    நிலையே யில்லா உலகத்தில்
    நிம்மதி யென்றே சோம்பலென்னும்
    வலையில் விரும்பி வீழ்ந்திடாத
    வல்லோ னான மன்னவனே…!

    லிமரைக்கூ…

    மன்னவன் சோம்பலே இல்லான்,
    மண்ணளந்தோன் அடியாலளந்த உலகை யெல்லாம்
    ஒன்றாய்ப் பெற்றிட வல்லான்…!

    கிராமிய பாணியில்…

    கொடியது கொடியது
    சோம்பலு கொடியது,
    சோம்பலில்லா வாழ்க்க
    சொர்க்கமா மாறுமே..

    மாவுலி தலயில கால்வச்சி
    மண்ண யெல்லாம்
    ஒண்ணா அளந்த பெருமாளு
    கடந்த
    ஒலகத்த யெல்லாமே
    ஒண்ணாப் பெறுவாரு
    சோம்பலுல சொகம்காணாத
    சுறுசுறுப்பான மகராசாவே..

    தெரிஞ்சிக்கோ,
    கொடியது கொடியது
    சோம்பலு கொடியது,
    சோம்பலில்லா வாழ்க்க
    சொர்க்கமா மாறுமே…!

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 45

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 45

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமம் என்பது ஒருபுடையன்று

    முன்னுரை

    ‘ஒருபுடை’ என்றால் ஒரு பக்கம் என்பது பொருள். ‘ஒரு பகுதி’ என்பது பொருள். ‘ஒருபுடை’ என்ற சொல் தமிழாசிரியர் மற்றும் பேராசிரியர்களிடம் புழங்கி வருகிறது. எங்கே புழங்கி வருகிறது என்றால் அவர்கள் சொல்லும் உவம விளக்கத்தில் புழங்கி வருகிறது. சான்றாகப் ‘பசுபோல் சாதுவானவன்’ என்றால் பசுவின் இயல்பை மட்டுமே குறிக்குமேயன்றி அதன் தோற்றம், வினை, அதன் பயன்பாடு ஆகியவற்றைக் குறிக்காது என்பதாக அவர்கள் கருதுகின்றனர். அவர்கள் கருதாவிட்டாலும் அதுதான் உண்மை. காரணம் ஒரு பொருளை எதற்கெல்லாம் எப்படியெல்லாம் உவமிக்கலாம் என்பதை முன்னாலேயே வடிகட்டி வைத்திருக்கிறார்கள் நம்முடைய இலக்கண முன்னோர்கள்.  அவர்கள் அனைத்தும் அறிந்து அமைதியாக இருந்தவர்கள். உவம அமைப்பை வினை, பயன், மெய், உரு என வகுத்துவிட்டதனால் அந்தந்த வகையில் அவை முழுமையாகவே செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். இவர்கள் சொல்லுகிற ஒருபுடை என்பது நான்கு வகையுள் ஏதேனும் ஒன்றில் அடங்கிவிடும். ‘புலிபோலப் பாய்ந்தான்’ என்பது வினையுவமம். இதில் ‘ஒருபுடை’ என்ற பேச்சுக்கே இடமில்லை. அதாவது வினைக்கான உவமம் என்றாகிவிட்டதால் அதில் அது முழுமையானது. ‘ஓரளவு பாய்ந்தது’ என்று பொருள் தராது. ‘பால்போலும் இனிமையாகப் பேசினாள்’ என்பது பண்புவமம். ஓரளவு இனித்தாள் என்பது பொருளன்று. முழுமையாக இனித்தாள் என்பதே பொருள். இவள் கற்பில் கண்ணகி என்றால் அது கண்ணகியின் கற்பினை முழுமையாக உவமித்தது. ஓரளவு கற்பு என்றாகாது. அது அறியாமையினால் வந்த மயக்கம். ஒரு பொருளின் எந்தப் பகுதி உவமிக்கப்படுகிறது என்பதை வினை, பயன், மெய், உரு என்னும் பகுப்பே காட்டிவிடுதலின் ‘ஒருபுடை’ என்பது பொருளற்றது என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். பொருளின் அதாவது உவமேயத்தின் ஒரு கூற்றினை விளக்கவே உவமத்தின் ஒரு கூறு கொள்ளப்படுகிறது என்பது கருத்து. இந்த அடிப்படையில் மணிவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை ஆகிய இலக்கியங்களில் காணப்படும் சில உவமப்பயன்பாடுகளின் தனித்தன்மை இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராயப்படுகின்றது.

    உவமத்தின் முழுப் பரிமாணம்

    பொருள் விளக்கத்திற்காக உவமத்தைப் பொருளோடு நோக்குகையில் எத்தகைய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் தமது புலமைநலம் வெளிப்படக் கூறியிருக்கிறார். இரண்டு குறட்பாக்களின் உவம அமைதி கொண்டும் அவற்றுக்குப் பரிமேலழகர் தரும் விளக்கவுரை கொண்டும் இதனைத் தெளியலாம். எல்லாருக்கும் தெரிந்த குறட்பா,

    “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர் நீப்பர் மானம் வரின்” (969)

    என்பதாகும். இக்குறட்பாவிற்குத்,

    “தன் மயிர்த்திரளில் இருந்து ஒரு மயிர் நீங்கினும் உயர்வாழாத கவரிமானை ஒப்பார் உயிர் நீக்கத் தான் மானம் எய்தும் எல்லை வரின் அதனைத் தாங்காது இறப்பார்”

    எனப் பதசாரம் எழுதிய பரிமேலழகர்,

    “இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம்.

    உவமை அவர்க்கு அது இயல்பென்பதை விளக்கி நின்றது”

    என்று விளக்கவுரை தருகிறார். இந்த விளக்கவுரையில்தான் அவர் உவமத்தைப் பொருளோடு நோக்கும் நெறிபற்றித் தொல்காப்பியம் சொல்லாததைச் சொல்லுகிறார். என்ன சொல்லுகிறார்? ‘வாழாது’ என்பது உவவமத்தின் வினை. ‘நீப்பர்’ என்பது பொருளின் வினை. அவ்வளவுதான் உவமத்தினால் பெறக்கூடியது. தொல்காப்பிய விதிப்படி பெற வேண்டியது. பரிமேலழகர், சொல்லியது கொண்டு சொல்லாததைப் பெறுவதும் உவமக் கோட்பாடு அல்லது உவமப்பயன் என்று உவமத்தின் முழுக் கொள்ளளவையும் கொண்டுவருகிறார். அது என்ன முழுக் கொள்ளளவு? மயிர் இழந்த கவரிமா உயிரிழப்பது அந்த ஒரு மானுக்கன்று. அந்த மான் வர்க்கத்திற்கே இயல்பு. இந்தக் கருத்து பாட்டில் இல்லை. உவமத்தில் இல்லை. உவமம் இதற்காகவும் சொல்லப்படவில்லை. ஆனால் அழகர் உவமச்சுரங்கத்தில் இறங்கிப் பொருள் மணிகளைக் கொண்டுவருகிறார். யாராவது சான்றோர் என்பது இல்லை. சான்றோர் அனைவருக்கும் பொதுவான இயல்பு மானம் காப்பது. இது பாட்டில் சொல்லப்படாவிட்டாலும் உவமத்திலிருந்து பெறக் கூடிய கருத்து.

    1. மயிர்நீப்பின் கவரிமா உயிர்வாழாது என்பது அவ்வினத்திற்கு இயல்பு.
    2. மானமா? உயிரா? என்றவழி உயிர்கொடுத்து மானம் காப்பது சான்றோர்க்கு இயல்பு.

    வள்ளுவரின் குறட்பாவில் இல்லாத அல்லது சொல்லப்படாத இந்தக் கருத்துக்களை உவமத்தின் முழுப்பரிமாணத்தையும் கொண்டு வந்து உரைசொல்லும் அழகர் எழுதுகிற உரையில் அறிய முடிகிறது.

    “தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
    நிலையின் இழிந்தக் கடை” (964)

    என்னும் குறட்பாவிலும் உவமத்தின் முழுமையான பொருட்பரிமாணத்தையும் வெளிக்கொணர முயல்கிறார் பரிமேலழகர். ‘மயிரனையர்’ என்பதால் இது பொருளுவமம். நிலையின் இழிந்த மாந்தர் என்பது பொருள். தலையின் இழிந்த மயிர் உவமம்.

    “குடிப்பிறந்த மாந்தர் தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்று தாழ்ந்த வழி, தலையைவிட்டு அதனின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர்”

    என்பதுதான் இந்தப் பாட்டில் சொல்லப்பட்ட கருத்து. பரிமேலழகர் என்ன செய்கிறார்? ‘இழிந்தக்கடை’ என்னும் சொற்பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு ‘உயர்ந்த கடை’ (உயர்ந்து நின்ற பொழுது) என்பதை வரவழைத்துக் கொள்கிறார். இந்தக் கருத்து குறட்பாவில் இல்லை. கொண்டு, (தலையினின்றும்) வீழ்ந்தபோது அதன் நிலை இவ்வாறென்றால் (தலையில்) இருந்தபோது அதன் நிலை என்ன என்பதைச் சிந்திக்கிறார். சிந்திக்கவே சொல்லப்பட்ட பொருளுவமத்தின் பொருட்பரிமாணத்தை இன்னும் ஆழமாக்கி,

    “அந்நிலையை விடாது நின்றவழிப் பேணப்படுதலும் விட்டுத் தாழ்ந்தவழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்”

    என்றும் எழுதுகிறார். அழகரின் இந்த நுண்ணியம் அழகருக்கே உரியது. மேலும் உவமத்தைப் பொருளோடு பொருத்துகிறபோது இலக்கண வரையறையைத் தாண்டியும் படைப்பாளனின் உள்ளத்தை ஊடுருவிச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. உண்மையில் ஒருபுடை ஒப்புமை என்றால் அழகரின் ஆய்வு ‘உரிமை மீறலுக்கு’ உரியதாம் என்க.

    திருப்பாவையில் பெய்த மழை

    பொருளை உவமிக்கிறபோது அணுஅணுவாக அனுபவித்து உவமித்திருக்கிறார்கள் சான்றோர்கள். முந்தைய பத்திகளில் எடுத்துக்காட்டப்பட்டனவெல்லாம் உரையாசிரியர் அதனைக் கையாள்கிற முறை பற்றியது. ஆனால் ஆண்டாள் நாச்சியாரும் மணிவாசகப்பெருமானும் பாடிய பெருமக்கள். படைப்பாளர்கள். இவர்களுள் நாச்சியார் பாடிய திருப்பாவையுள் ஒரு பாடலில்  உவமத்தைப் பொருளாக்கி உரைக்கிறார். மற்றொரு பாடலில் உவமத்தின் ஒவ்வொரு அசைவையும் பொருளுக்கேற்றியுரைக்கிறார். அதாவது ‘பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்’ (1239) என்னும் தொல்காப்பியத்தையும் கடைப்பிடிக்கிறார். உவமத்தின் வண்ணனைகளையும் செயல்பாடுகளையும் அப்படியே முழுமையாகப் பொருளுக்குப் பொருத்திக் காணவேண்டும் என்ற உவமக் கோட்பாட்டினை முன்னெடுத்து ‘ஒருபுடை ஒப்புமை’ என்னும் கருத்தியலை முற்றிலுமாக நிராகரிக்கிறார்.

    “ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
    ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!”

    இந்தப் பாட்டில் பெண்கள் மழைக்கண்ணனாகிய வருணனை விளித்து ‘பெய்திடாய்’ என்று வினைமுடிபு செய்கிறார்கள். செயப்படுபொருள் மழை. இந்த மழை எப்படிப் பெய்ய வேண்டும் என்று அவர்கள் விவரிக்கிறபோது பெருமாளின் தரிசனம் முழுமையாகக் கிட்டி விடுகிறது என்பதை உணரலாம். மழை எப்படிப் பெய்ய வேண்டுமாம்? நாச்சியார் சொல்கிறார்.

    1. ஆழியுள் புக்கு, நீரை முகந்து, ஆர்த்து, வான்வெளியில் ஏறி வருதல் வேண்டும்.
    2. ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுக்க வேண்டும்.
    3. பத்மநாபன் வலக்கையில் உள்ள சக்கரத்தைப் போல மின்னுதல் வேண்டும்.
    4. அவன் இடக்கையில் உள்ள சங்கின் நாதத்தைப் போல முழக்கம் வேண்டும்.
    5. சார்ங்கம் என்னும் வில்லினின்றும் பாயும் அம்புபோலப் பெய்தல் வேண்டும்.

    சங்கு, சக்கரம், சார்ங்கம் என்னும் மூவகை ஆயுதங்களையும் உவமையாகச் சொல்லிப் பொருளாகிய மழையின் வினையை வரன்முறை செய்கிறார் நாச்சியார். உவமமயக்கமோ பொருள் மயக்கமோ ஏதுமின்றிப் பொருளின் ஒவ்வொரு வினைக்கும் பொருத்தமான உவமவினைகளை நிரல்படுத்திவிடுகிறார். திருப்பாவை இலக்கியத்தின் தனிப்பயன் நல்ல கணவன். பொதுப்பயன் நாட்டிற்கு நல்ல மழை. ஆதலின் உவமத்தைப் பொருளாக்கியுரைத்தார் என்க. ‘ஊழிமுதல்வன் உருவம்போல்’ மெய்கறுத்து என்றவழி மெய் உவமமும், உரு உவமமும் ‘ஆழிபோல் மின்னி ‘வலம்புரிபோல்’ நின்றதிர்ந்து என்றவழி வினையுவமமும் ‘சரமழைபோல்’ என்றவிடத்துப் பயன் உவமையும் அமைந்து மரபுவழி உவமக்கோட்பாட்டை வலியுறுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன.

    திருவெம்பாவையில் பெய்த மழை

    திருப்பாவையில் நாச்சியார் உவமத்தைப் பொருளாக்கிப் பொருளை உவமமாக்கியதைப் போலவே மணிவாசகப் பெருமானும் பாடியிருக்கிறார். மழையைப் பற்றிப் பாடுகிற இவ்விரண்டு பாடல்களிலும் இவ்வாறு பொருளே உவமமாகியிருப்பது நோக்குதற்குரியது.

    “முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
    என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
    மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
    பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
    என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
    தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
    முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
    என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்”

    “மேகமே! முதலில், இந்தக் கடல்நீரை உட்கொண்டு, மேல் எழுந்து, – எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நிறத்தோடு விளங்கி, எம்மை அடிமையாகவுடையவளது,  சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த, – பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து,  அவளது திருப்புருவம் போல,- வானவில்லிட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய, அவ்வன்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கோமான் -எங்கள் தலைவனாகிய இறைவனது,  அடியார்களுக்கும், நமக்கும் – பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளங்கொண்டு,  முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று, பொழிவாயாக!”. என்பதே இப்பதிகத்தின் பொருளாம். திருப்பாவையில் கண்டது போலத் திரும்வெம்பாவையில் காணும் உவமங்களைப் பொருளொடு பொருத்தினால்,

    1. உமாதேவியின் மேனி போல் மேகம் கறுக்க வேண்டும்.
    2. அம்மையின் இடைபோல மின்னல் தோன்ற வேண்டும்.
    3. அவள் காற்சிலம்புபோல இடி ஒலிக்க வேண்டும்.
    4. அப்போது தோன்றுகிற வானவில் அவள் திருப்புருவம் போல் திகழவேண்டும்.
    5. சிவபெருமானுடைய அருள் பொழிவதுபோல மேகம் மழையாகப் பொழிய வேண்டும்.

    உமாதேவியின்  திருமேனி  நீல நிறமாகும். பெண்களது  இடைக்கு  மின்னலை உவமமாக்குவது இலக்கிய மரபு.  இறைவன் அம்மையின் மூலமாகத்தான் உயிர்களுக்கு அருளுவானாதலின், ‘அவள் அன்பர்க்கும் நமக்கும் முன் சுரக்கும் இன்னருளே!’ என்ன’ என்றனர். இது, நீராடச் சென்ற பெண்டிர் பொதுப்பயனாகிய மழையை வேண்டிப் பாடியதாம்.  இதனால், இறைவன் சத்தி மூலமாக மெய்யடியார்களுக்கு அருளை வழங்குவான் என்பது கூறப்பட்டது.

    உவமத்தின் செயலணுக்கள்

    ‘உவமையால் பெற்றாம்’ என்னும் பரிமேலழகரின் தொடர் உவமத்தை எப்படி நோக்க வேண்டும்? நோக்கிப் பொருளோடு அதனை எப்படிப் பொருத்திப் பார்க்க வேண்டும்? என்ற புதிய நெறியைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறது. ‘பெற்றாம்’ உற்றுநோக்கிப் பெறவேண்டியது கற்பார் கடன்! உவமத்தின் பரிபூரணத்தை உணர்ந்தாலேயொழிய பொருளின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள இயலாது. அத்தகையதொரு உவமச் சித்திரிப்பை நாச்சியார் காட்டுகிறார்.

    “மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
    போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
    கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
    காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!”

    பள்ளிகொண்டிருக்கிற திருமாலை ஆயர்குலத்துப் பெண்கள் துயில் எழுப்புகிறார்கள்.  மேலே கண்ட பாடல்களில் பொருளை உவமமாக்கியும் உவமத்தைப் பொருளாக்கியும் ‘இது போல இது’ என்னும் விளக்கத்தோடும் (உவம விரியாக) பாடிய பெண்கள் இந்தப் பாட்டிலே உறங்கும் பெருமாளுக்குச் சிங்கத்தை உவமமாக்கி அதன் வினையை மட்டும் பாடுகிறார்கள். ‘படுத்திருக்கும் சிங்கம் எழுந்து வந்தாற்போலப் பள்ளிகொண்ட பெருமாள் எழுந்து வந்தான்’ என்று ஒரே தொடரில் உவமத்தைப் பொருளோடு பொருத்திக்காட்டிவிடலாம். ஆனால் நாச்சியார் உறங்கும் சிங்கத்தின் ஒவ்வொரு அசைவையும் நுணுகிக் கண்டு அனுபவித்துப் பாடுகிறார். உவமத்தையும் பொருளையும் முற்றுமாகப் பொருத்திக்காட்டும் உவமக்கோட்பாட்டை வலியுறுத்துவது இந்தக் கட்டுரையின் முதல் நோக்கமெனின் இந்தக் கட்டுரையின் இரண்டாவது நோக்கம் இப்படி அமைகிறது. அதாவது உவமத்தின் ஒவ்வொரு அசைவையும் நுண்பகுதிகளையும் உற்று நோக்கியுரைத்துக் கற்பாரை அவற்றைப் பொருளோடு பொருத்திப் பார்க்கத் தூண்டுவது. ‘ஒருபுடை உவமம்’ என்னும் தொடர் வெற்றசையாக வெளிறி நிற்பது இங்கேதான்.

    பாட்டு முழுமையும் உவமமாகிய சிங்கத்தின் செயல்பாடுகளே நிரல்படுத்தப்படுகின்றன. ஆராயப்படுகின்றன. ‘மாரி மழை’ என்றால் மழைபோலப் பனிவிழும் மார்கழி என்பது பொருள். முன்னொரு பாசுரத்தில் ‘பனித்தலை வீழ’ என்றதும் அது. ‘முழைஞ்சில்’ என்றால் குகை. குகையில் படுத்திருக்கும் சிங்கம் எப்படிப் படுத்திருக்கிறது. ‘மன்னிக் கிடந்து உறங்குகிறது’. கடுங்குளிரில் தன் பெடையொடு செயலின்றி உறங்கும் சிங்கம் என்பது பொருள். மன்னி என்பதற்குச் சோம்பலை அள்ளிப் பூசிக்கொண்டு உறங்குகிறது என்று எழுதுவார் வியாக்கியாணக்கார். மழைக்காலம் முடிந்த நிமித்தங்கள் கண்டு, அதுவரை அசையாமல் இருந்தது – திடீரென்று உயிர் வந்ததுபோல் அசைந்து, உறங்கிய பின் பார்க்கிற முதல் பார்வையாகையால் சிறிது சிவந்து விழித்த விழிகள் – வேரி மயிர் பொங்க –என்றால் பரிமளம் என்கிற விலங்கினத்திற்குரிய மணம் கமழ – பிடரி மயிர்களை உதறி, வெப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து – உடம்பில் இன்னமும் ஒட்டியிருக்கும் சோம்பலை உதறுகிறதாம். முன்னங்கால்களை நீட்டி உடம்பை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்து, பின் பின்னங்கால்களை நீட்டி மறுபடியும் உடம்பை இழுத்து சோம்பலை உதறுகிறதாம். பிறகு முழங்கி வேட்டையாடக் கிளம்பும் சிங்கத்தைப்போலே என்று சொல்கிறார்கள் பெண்கள். ‘நான் என்ன சிங்கம் மாதிரி கருணை இல்லாமலா இருக்கிறேன்? பெருமாள் பார்க்க, (பார்ப்பதாக இவர்கள் எண்ணம்)  சிங்கத்தை உன் பெருமிதத் தோற்றத்திற்காகவே உவமித்தோம் என்பார், ‘பூவைப்பூவண்ணா!’ என்று தலைகீழாக மாறிப் பேசுகிறார்கள். காளையின் வீறுகொண்ட நடையும் வேழத்தின் பெருமிதமும் புலியின் சினமும் சிங்கத்தின் சாமர்த்தியமும் கொண்ட அரங்கனின் நடையழகை அனுபவித்துப் பாடுகிறார்கள் பெண்கள். வந்த காரிய நோக்கத்தைச் சொல்வதற்கு முன் இங்கே எழுந்து வந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய வேண்டும் என்று வேண்டுகிறார்கள். என்ன காரியம் என்பதனைச் “சிற்றஞ் சிறுகாலே’ என்னும் அடுத்த பாட்டில் வைத்தார்கள்.

    பாட்டில் சிங்கம் உவமம். அரங்கன் பொருள். அரங்கன் செய்ய வேண்டும் வினைக்கு சிங்கத்தின் வினைகள் உவமம். எனவே வினையுவமம். இந்த வினையுவமத்தில் ஒருபுடை என்ற பேச்சுக்கே இடமில்லை. அரங்கனைப் பற்றி ஓர் அசை கூடச் சொல்லாமல் அத்தனைச் செயல்பாடுகளையும உவமமாகிய சிங்கத்திற்கே நுண்துகளாக நோக்கி உரைத்தார். கவிதையாய் ஆக்கியுரைத்தார் நாச்சியார்.

    “சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமாப் போலே”

    என்பன உவம வண்ணனை. ‘அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து, உதறி, மூரி நிமிர்ந்து, முழங்கிப், புறப்பட்டுப் போதருமாப் போலே” என்னும் அத்தனை எச்சங்களும் உவமத்தின் தொடர் நிகழ்வுகள். எனவே அத்தனையும் பொருளான அரங்கனுக்கானவை. ‘போந்து, அருளி, காரியம் ஆராய்ந்து அருளேல்’ என்பது பொருளாகிய  அரங்கனுக்கானவை. ‘போந்து அருளி ஆராய்ந்து என்னும் எச்சங்கள் ‘அருள்க!’ என்னும் வினைமுடிபு கொண்டன. இந்தச் செயலைச் செய்வதற்கு முன்னாலே அரங்கன் எப்படி எழுந்து வந்தான் என்பதை உவமத்தைக் கொண்டு அனுமானிக்க வேண்டியது அறிவார் கடன்! அரங்கன் அருளையும் ஆண்டாள் அருளையும் வேண்டுவார் கடன்!

    நிறைவுரை

    வினை, பயன், மெய், உரு என உவமப் பயன்பாட்டின் நோக்கத்தை நான்காகப் பிரித்திருக்கிறார்கள். காரணம் அத்தகைய பிரிவு பிரிவின் அடர்த்தியைத் துல்லியமாக நோக்கி உவமத்தைச் சிறக்கச் செய்வது. அதனால் பொருளின் பரிமாணத்தை மேலும் புலப்படச் செய்வது. காட்டலாகாப் பொருளாகிய இறைவனுக்குத் திருவள்ளுவர் அகர ஒலியை உவமமாக்கிய நுண்ணியமும் ‘காணப்பட்ட உலகத்தினின்றும் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் ‘ஆதிபகவன் முதற்றே’ என உலகின் மேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க’ என்னும் அழகரின் உரையாழமும் ஈண்டு நினையத்தகுவன. மேற்கண்ட பத்திகளில் உவமத்தையும் பொருளையும் ஒவ்வொரு கூறாகப் பொருத்திக் காட்டிய ஒன்றும் உவமத்தை மட்டும் கூறு கூறாக விளக்கி அதன்வழிப் பொருளைப் புலப்படச் செய்த மற்றொன்றும் காட்டப்பட்டன. இவ்விரண்டு நெறிகளிலும் ‘ஒருபுடை’ என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். உவமம் அழகியல் சார்ந்தது மட்டுமன்று. பொருண்மையின் நுண்ணியம் துலக்கும் கருவியுமாகும்!.

    (தொடரும்…)

    Share
  • சென்னையிலிருந்து கோவைக்கு விமானப் பயணம்

    சென்னையிலிருந்து கோவைக்கு விமானப் பயணம்

    சென்னையிலிருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் வந்து சேர்ந்தோம். ஹரி நாராயணனின் முதல் விமானப் பயணம் இது. எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே.

    இதில் தமிழகத்தை ஒரு பறவைப் பார்வையில் நீங்கள் காணலாம். கீழே காணும் அனைத்தும் தமிழ் மண், மேலே காணும் யாவும் தமிழ் வான். தமிழகத்தின் வளங்கள், வயல்கள், ஆறுகள், காடுகள், ஆலைகள், மனைகள், வீடுகள், மக்கள் அடர்த்தி… என அனைத்தையும் ஒரே வீச்சில் கண்டு மகிழுங்கள்.

    Indigo image courtesy: Wikimedia.org

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 44

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 44

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘கூம்பேறும் பறவை’ குலசேகர ஆழ்வார்

    முன்னுரை

    தமிழில் இலக்கண விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் இலக்கியப் பொருண்மை புலப்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும்  தனித்தனி இயல்புகள் உண்டு. இது தனி ஆய்வுக்கு உரியது. உயிரோடு மெய் கலப்பதற்கு ‘அப்போடு கலக்கும் உப்பு’ என்பது இலக்கண உவமம். நல்லவரோடு நல்லவர் கலந்துரையாடுவதற்கு ‘நற்றாமரைக் குளத்தில் நல்லன்னம் சேர்வது’ என்பது இலக்கிய உவமம். முன்னது அறிவு சார்ந்தும் பின்னது உணர்வும் அழகியலும் சார்ந்ததுமாகும். ஆனால் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமங்கள் இவற்றினும் வேறாகி அமைகின்றன. காரணம் பக்தியுணர்வு அகப்புற உணர்வுகளினின்றும் மாறுபட்டு நெகிழ்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதே. இது பற்றிய சில கருத்துக்கள் முந்தையக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. வைணவப் பாசுரங்களில் தனித்து விளங்கும் குலசேகர ஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழியில் உருக்கும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்வதாக அமைகிறது.

    குலசேகர் ஆழ்வாரின் உள்ளமும் உவமமும்

    ‘அரற்றுதல்’ என்பது ஒன்று. அனுபவித்தல் என்பது மற்றொன்று. சைவத் திருவடியார் நால்வரும் அரற்றியவர்கள். அவ்வரற்றுதலில் இறைவன் மேனியழகைக் கண்டு அனுபவிப்பது என்பது அளவால் குறைவு. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்’ என்பது போன்ற பாடல்கள் சைவத்தில் குறைவு. ‘ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்’ என்பது போன்ற அரற்றலே மிகுதி. வைணவத்தில் இறைவனின் திருமேனி அழகைப் “பச்சை மா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்” என்று ஒவ்வொரு துளியாகச் சுவைத்து அனுபவித்துப் பாடித் தாமும் மயங்கிக் கற்பாரையும் மயக்குவர்.

    ‘தன்னைக் கைவிடலாகாது காத்தல் வேண்டும்’ என்பதே பொதுவான அடியவர்தம் வேண்டுகோளாயினும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் வேண்டுகிற முறையில் வேறுபாடு உண்டு. குலசேகரர் வித்துவக் கோட்டு அம்மானிடம் வைக்கின்ற வேண்டுகோள் கைவிடலாகாது என்பதேயாயினும் அதற்காக அவர் காட்டுகின்ற உவமங்கள் பல திறத்தன. பாசம் நிறைந்த உறவுகளைக், கடமை தவறாத பணியாளர்களை, முறைதவறா மன்னர்களைச், சிறகடித்துப் பறக்கும் பறவைகளைக், கடலை மறக்காத ஆறுகளை எல்லாம் மையமாக வைத்து உவமம்  சொல்கிறார். இறுதியாகப் பற்றற்ற நிலையில் தான் விரும்பாச்  செல்வம் நிழலைப்போல் தன்னைத் தொடரும் என்று செல்வத்தையும் பெருமாளுக்கு உவமமாக்கியுரைக்கிறார்.

    பெருமாளைத் தாயாக்கிய ஆழ்வார்

    அரசியல் தலைவர்களில் தொடங்கி ஆண்டவன் வரை அனைவராலும் பயன்படுத்தப்படுகிற உவமம் தாயும் சேயும். தாய் அன்பின் வடிவம். தந்தை அறிவின் வடிவம். தாயன்புக்கு வரம்பில்லை. தந்தையின் அன்பின் வரம்பு வெளிப்படத் தெரிவதில்லை. தாய் குழந்தையை மறப்பதில்லை, இயலாது. வள்ளற்பெருமான் தன்னை  மகவாகவும் இறைவனைத் தாயாகவும் வைத்துப் பாடுகிறார்.

    “பெற்றதம் பிள்ளைக் குணங்களையெல்லாம்
    பெற்றவர் அறிவரே அல்லால்
    மற்றவர் அறியார் என்று எனை ஈன்ற வள்ளலே!”

    “பெற்றதாயை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
    …………………………………………………………………
    நற்றவத்தவர் உள் இருந்து ஓங்கும்
    நமசிவாயத்தை நான் மறவேனே!”

    என்றெல்லாம் வள்ளற் பெருமான் தன்னைச் சேயாகவும் இறைவனைத் தாயாகவும் உருவகித்தும் உவமித்தும் பாடுவதைப் போலவே குலசேகரரும் பாடுகிறார்.

    “அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள்தன்
    அருள் நினைந்தே அழுங்குழவி அதுவே போன்றிருந்தேனே” (688)

    ‘அரிசினம்’ என்பது அரிதாக வருகின்ற சினம் என்பது பொருள். ‘அளவுகடந்த சினம்’ என்பது பொருள். ‘பெற்ற தம் பிள்ளை’, ‘ஈன்ற தாய்’ என்னும் பெயரெச்ச அடைகள் எல்லாம்  அவர்தம் அருமை உணர்த்தி நின்றன. அவர் அவ்வாறு செய்யமாட்டார் என்பதாம்! எனவே இறைவனும் தம்மை வெறுக்காது அணைப்பன் என்பது கருத்து. ‘அம்மை நீ! அப்பன் நீ’ எனத் தாய்க்கு முதன்மை தந்து பாடிய அப்பர் நினைவுக்கு வருவார். இந்தப் பாட்டில் ஒரு நுண்ணியம் உணரப்படுகிறது. குழந்தை இரண்டு வகையாக அழுகிறது. அடி தாங்காமல் அழுவது ஒன்று. அடிக்கின்ற தாயின் அருள் வேண்டி மற்றொன்று. ‘அழுகை’ மாறாதது. ஆனால் உனக்கு வேண்டியது என் அழுகைதான் என்றால் நான் உன் அருளுக்காக அழுகிறேன் என்பது கருத்து. ‘மறந்தாலும்’, ‘அகற்றிடினும்’ என்னும் உம்மைகள் எதிர்மறை.

    கொண்டானை அன்றிப் பிறரை அறியாக் குலமகள்

    தமிழிலக்கிய உலகில் சேதாரமில்லாது சிந்தையில் நிற்கும் பாத்திரங்கள் இரண்டு. அவையிரண்டும் ஆண் பாத்திரங்கள். சிந்தையில் நிற்பதற்கு அவர்களின் ஒழுக்கச் சிதைவே காரணம். ஒருவன் இராவணன். இவன் இராமாயணத்தின் எதிர்நிலைப் பாத்திரம். மற்றொருவன் கோவலன். இவன் சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தலைவன். காப்பியத்தில் தலைவிக்கே முதலிடம் ஆதலின் இவனுக்குக் காப்பியத் தலைமையில்லை என்பதும் அறிஞர் சிலருடைய வாதம். இவ்விரண்டு பாத்திரங்களாலும் இவர்தம் மனைவியராகிய மண்டோதரியும் கண்ணகியும் வானுயர்ந்து நிற்கிறார்கள்.

    மண்டோதரியும் கண்ணகியும்

    கம்பன் படைத்த பாத்திரங்களுள் கம்பனையே படைத்த பாத்திரமாகி நிற்பவள் மண்டோதரி. சீதையைத் தேடி இலங்கை செல்லும் அனுமன் இராவணன் அருகில் உறங்கும் மண்டோதரியைச் சீதையென்று கருதி மயங்கினான் என்கிற அளவுக்கு மண்டோதரியின் பாத்திரம் உயர்ந்தது.

    “இன்ன தன்மையின் எரிமணி விளக்கங்கள்
    எழில்கெடப் பொலிகின்ற
    தன்னது இன்னொளி தழைப்புற துயில் உறு
    தையலைத் தகைவு இல்லாள்
    அன்னள் ஆகிய  சானகி இவள் எனஅயிர்த்து,
    அகத்தெழுதீ வெந்தீ துன்னும் ஆருயிர் உடலொடு சுடுவது
    ஓர் துயர் உழந்து”

    என்பது கம்பன் வாக்கு. மண்டோதரி இராவணனை எதிர்த்துத் தன் கருத்துக்களைக் கூறியதாக இராமாயணத்தில் பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இராவணனுக்கு வரவிருக்கும் பேரழிவை முன் உணர்ந்தே அவள் நிகழ்வுகள் அமைகின்றன. இந்திரசித்தன் மறைந்தபோது,

    “அஞ்சினேன் அஞ்சினேன் சீதையென்ற  அமிழ்தால் செய்த
    நஞ்சினால் இலங்கைவேந்தன் நாளைஇத் தகையன் அன்றோ?”

    என்று புலம்பிய மண்டோதரியைக் காணமுடிகிறது. மேற்கண்ட தரவுகளால் இராவணனைக் கண்டார்கள்  இகழ்ந்தாரன்றி மண்டோதரி இகழவில்லை. ஆனால் கோவலனைக் கண்டார்  இகழ்ந்தார்கள். கண்ணகியும் இகழ்ந்திருக்கலாம். ஆனால் இல்லற நெறி இழந்ததைத்தான் அவள் பெரிதாகக் கண்டாள் என்பதை அறிந்து கொள்ள முடியும். “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’  என்னும் தொடரில் அமைந்துள்ள ‘ஒழுக்கம்’ என்னும் சொல் அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்புதல், துறவோர்க்கு எதிர்தல், விருந்தெதிர் கோடல் என்னும் இல்லற நெறிகளே.

    காப்பிய மகளிரும் குலசேகர ஆழ்வாரும்

    இராவணனும் கோவலனும் மிக உயர்ந்த பண்புகளைப் பெற்றிருந்தும் ஒழுக்கச் சிதைவு காரணமாக அவர்தம் பெருமையினை இழந்தனர். கண்டவர் இகழ்வது இருக்கட்டும் அவ்விரு காப்பியங்களைப் படிக்கின்றவர் இன்றைக்கும் வேதனைப்படுகிறார்கள் அவர்களை நினைத்து. இருப்பினும் அக்காப்பிய மாதர் இருவரும் தம் கணவன்மாரை வெறுத்தார் இலர். இராவணன் இறந்தவுடனேயே மண்டோதரியும் களத்திலேயே உயிர்விடுகிறாள். கண்ணகியோ கணவன் பழி துடைக்கிறாள். ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ எனத் தன் மனைவியினாலேயே நோக்கப்பட்டவன் கோவலன். ஆழ்வாரின் ‘கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்’ என்ற தொடருக்குப் பொருத்தமானவர்களாகவே அவ்விரு பெண்களும் திகழ்கிறார்கள் என்பது கட்டுரையாளர் கருத்து.

    “கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
    கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்” (689)

    என்னும் உவமத்தில் வரும் ‘குலமகள்’ என்பது நுண்ணியமிக்க சொல்லாட்சி. இந்த இடத்தில் நல்லகுடிப் பிறப்பை மட்டும் அது குறிப்பதாகக் கொள்ளாமல் கணவனையன்றிப் பிற ஆடவர் மனத்திலும் புகாத உயரொழுக்கத்தைக் குறித்ததாகக் கொள்ளலாம். கண்டறிதல், கேட்டறிதல் என்னும் இருவகை அறிவில் எந்த  அறிவாலும் கணவனைத் தவிர பிற ஆடவரை அறியாதார் என்பது கருத்து. இகழ்வன என்னும் பன்மை வினையாலணையும் பெயர் கணவன் செய்த தொடர் நிகழ்வுகளைக் குறித்தது. ‘அத்தனையும் தாங்கி அவனையே கொண்டொழுகும் பத்தினியர் போலத் தானும் திருமாலையன்றி வேறொருவனை எண்ணேன்’ என்பதாம். ‘நீ கொண்டு ஆளாகியிலும்’ என்னுந் தொடர் மனைவியைக் கொண்டு செலுத்த வேண்டிய கணவன் அவ்வாறு செலுத்தாவிடினும் அவனை நம்பி வழிபடும் மனைவியைப்போல் தான் என்பதை உணர்த்தி நின்றது. ‘குலமகள்’ தன் கணவனை மட்டுமே அறிவாள் என்றதால் ஆழ்வார் பெருமாளையன்றிப் பிற தெய்வம் அறியார் என்பது குறிப்பு. இனி, இகழ்வன செய்யும் கணவனுக்குப் பெருமாள் உவமம் ஆனதால் ஆழ்வார் மனைவியாகிறார். எனவே இந்தப் பாட்டில் ‘கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்’ என்னும் துறைக்கருத்து இழைய, நாயக நாயகி பாவம் முன்னெடுக்கப்பட்டது என்க. இது வள்ளற் பெருமான் பாடிய ‘இங்கித  மாலையோடும் மகாகவி பாடிய கண்ணன் பாட்டோடும் ஒக்கும்.

    மன்னனை நோக்கும் மக்கள்  மருத்துவனை நோக்கும் நோயாளி!

    திருக்குறள் பொருட்பாலின் தலையதிகாரமே இறைமாட்சி என்பதாகும். நாட்டை ஆளுவது என்பது அதிகாரப் பீடம் என்பதை விட்டு மக்களுக்குத் தொண்டு செய்வதற்கான வாய்ப்பு என்பதைக் கருத வேண்டும். இது மன்னராட்சிக்கும் பொருந்தும் மக்களாட்சிக்கும் பொருந்தும். ஓச்சுதல் கடிது போலத் தோன்றினாலும் எறிவது மென்மையாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் காட்டும் மாட்சி. இறைமாட்சியுள் அமைந்த பத்து குறட்பாக்களில் முன்னவை ஐந்தும் மன்னனின் தகுதி பற்றியன. பின்னவை ஐந்தும் மன்னனின் பண்பு பற்றியன.

    1. காட்சிக்கு எளியன் கடுஞ்சொல் அல்லன்
    2. இன்சொலால் ஈத்து அளிக்க வல்லான்
    3. முறைசெய்து காப்பாற்றும் மன்னன்
    4. செவிகைப்பச் சொல் பொறுக்கும் வேந்தன்
    5. கொடை, அளி, செங்கோல், குடியோம்புபவன்

    முந்தைய தகுதிகளை அதிகாரத்தை மையமாக்கி ஒரு மன்னன் செயல்படின் மக்கள் துன்புறுவர்.. பிந்தைய பண்புகளை, மக்களை மையமாக்கி ஒரு மன்னன் செயல்படின் மக்கள் இன்புறுவர். முன்னது நடக்கும் காலத்திலும் அம்மக்கள் பிந்தைய காலம் வராதா என ஏங்கி நிற்பர். அதனைத்தான் குலசேகர ஆழ்வார் உவமமாகப் பயன்படுத்துகிறார்.

    “தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
    கோல்நோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே” (690)

    மன்னன் மக்களுக்குச் செய்கிற துயர் அதிகாரத்தினால் வருவது. இறைவன் அடியவருக்குத் தரும் துன்பம் அவனைப் பக்குவப்படுத்துவது. அல்லது வினைவழி வருவது. கொடுங்கோல் ஆட்சி செய்யும் மன்னனின் அன்பையே மக்கள் எதிர்நோக்குவர். அதுபோலத் திருவடிப் பேறு வேண்டி நிற்பார் இத்தகைய துன்பங்களையும் இன்னல்களையும் பொருட்படுத்தாது அவற்றின் நோக்கமறிந்து செயல்படுவராதலின் இடர் தரும் இறைவனையே எதிர் நோக்குவர் என்பதாம். துன்பம் தருபவனையே எதிர்நோக்கும் இரண்டு சூழல்களில் ஒன்று நாட்டை ஆளும் மன்னனிடம் அன்பை எதிர்நோக்குவது. இரண்டு சிகிச்சையில் துன்பம் தரும் மருத்துவனையே நம்பி அவனையே எதிர்நோக்குவது.

    “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
    மாளாத காதல் நோயாளன் போல்” (691)

    எதிர்வினையைக் கருத்திற் கொள்ளாது மக்களை வாட்டும் மன்னனை ஒதுக்காமல் அவனை அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழும் மக்களை உவமமாகச் சொன்ன ஆழ்வார் இந்தப்பாட்டிலும் ‘கொடுமை’ செய்யும் மருத்துவனையே நேசிக்கும் நோயாளியை உவமமாக்குகிறார். இந்தப் பாட்டில் ‘அறுப்பது’ ஒரு வினை. ‘சுடுதல்’ மற்றொரு வினை. அறுவைச் சிகிச்சை என்பது இவ்விரண்டும் இணைந்ததே. நோயாளி தன் உடல் அறுக்கப்படும்போதும் அல்லல் உறுகிறான். அறுத்த இடத்தில் சுடப்படுகிறபோதும் அல்லல் படுகிறான். எனவே ‘அறுத்து’ என்பது எச்சமாகாது தனித்த வினையைக் குறித்தது.

    நோய் தீர்ந்தவுடன் மருத்துவனை மறந்துவிடுதல் இயல்பு. ஆனால் இந்தப் பாட்டில் நோய் தீராமலேயே அவன்பால் தீராத காதல் உடைய நோயாளன் என்கிறார். அறுவைச் சிகிச்சை உடலுக்கானது. அதற்குத் தீர்வு காணும்வரை அவன்பால் வைத்திருக்கும் அன்பு குறையாது. எனவே அது நீளும். அதனால் மாளாத அன்பு என்றார். பிறவி நோய் தீர்ந்து திருவடிப்பேற்றுக்காக இறைவன் தரும் சோதனைகள் தாங்கொணாவாக இருப்பினும் அவன் மேல் கொண்டிருக்கும் அன்பு ‘மாளாது’ என்பது பெறப்படும். அடித்து மேய்ப்பவனே அணைத்து மீட்பான் என்பது கருத்து.

    தொடர்ந்து சுட்டெரிக்கும் வேறொரு பொருளையும் சுட்டெரிக்கும் அதனையே விரும்பும் மற்றொரு பொருளையும் இணைத்து உவமம் கூறுகிறார் ஆழ்வார். கதிரவனுக்குத் தாமரை மலரும் என்பது இயற்கையும் கவிமரபும் ஆகும். இந்த மரபுகள் கவியின்பத்திற்காக மாற்றப்படுவது உண்டு. ‘சுடர் மின்னற் கண்டு தாழை மலர்வது போலே உனைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே’ என்பதும் ‘தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க’ என்பதும் மரபு காத்த திரையிசைப்பாடல் வரிகள்.

    “செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
    அந்தரஞ்சேர் வெங்கதிரோற்கல்லால் அலராவால்” (693)

    கதிரவன் கனன்றாலும் தாமரை அதற்கே மலர்வது போலத் தானும் பெருமாளுக்கே மகிழ்கிறார் என்பது கருத்து. கொடுங்கோல் மன்னனால் வரும் துன்பத்திற்குக் காரணம் ஏவுதற் கருத்தா. மருத்துவனால் வரும் துன்பத்திற்குக் காரணம் இயற்றுதற் கருத்தா. இவையிரண்டிலிருந்தும் மாறுபட்டுத் துன்பம் தருவது கதிரவன். அது அந்தரத்தில் நிற்கிறதேயன்றிச் சுற்றாது சுழலாது. ஆனால் அதன் ஒளிக்கதிர்கள் சுட்டெரிக்கும். சினைவினை முதல்வினையாகக் கருதப்படும். காணாதார் தரும் துயரமும் கண்டார் தரும் துயரமும் காண இயலாதன தரும் துயரமும் என எதுவாயினும் தாங்கிக் கொள்வது போல இறைவன் எத்தகைய துன்பத்தைக் கொடுத்தாலும் அவனுடைய அருளையே வேண்டுவன் என்பதாம்.

    மழைநோக்கும் பயிர்கள்

    கடவுள் வாழ்த்து என்னும் தலையதிகாரத்தைத் தொடர்ந்து திருவள்ளுவர் எழுதிய அதிகாரத்திற்குப் பெயர் ‘வான் சிறப்பு’. மழையினது சிறப்பு என்பது பொருள். மழை இல்லாவிடின் உலகியல் இல்லை. உலகியல் என்பது மக்களையும் ஞானிகளையும் உள்ளடக்கியது. இவர்களைப் பசியடக்கும். எனவே உலகியல் நடக்க வேண்டுமெனின் பசியடங்க வேண்டும்.  பசியென்னும் நோயைப் பற்றியும் அது தணிக்கும் வாயில் பற்றியும் தணித்தவர் அடையும் பெருமை பற்றியும் பேசாத இலக்கியங்கள் எண்ணிக்கையில் குறைவு. நோய் என்பது உடலுக்கு வருவது. பிணி என்பது உயிருக்கு வருவது. உடலுக்கு வரும் நோயை உயிருக்கு ஆக்கியது அதன் கொடுமை பற்றி. இறுதியாக வள்ளற்பெருமானைத் தொடர்ந்து உணர்ந்து பாடியவர் மகாகவி. ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’ என்பது அவர் வாக்கு. அந்தச் சோற்றுக்குக் காரணமானது பயிர். பயிர் தழைக்க நீர் வேண்டும். அந்த நீர் வானின்று வருவது. பயிர் இருவகைப்படும். வான்நீரின் பல்வகைப் பரிமாணங்களாகிய ஏரி, ஆறு, குளம் என்பவற்றால் உயிர்தழைப்பன ஒன்று. வான் மழையை மட்டுமே நம்பியிருப்பன மற்றொன்று. முன்னது நன்செய் என்றும் பின்னது புன் செய் எனவும் வழங்கப்படும். நன்செய்க்கும் மழைதான் மூலமெனினும் ‘வானம் பார்த்த பூமி’ என்னும் சொல்வழக்கு புன்செய்ப் பயிரையே குறிக்கும். வானத்தை நோக்கியே வளரும் புன்செய்ப் பயிரை இறைவனின் அருள் வேண்டி நிற்கும் ஆழ்வார் தனக்கு உவமமாக்கியுரைக்கிறார்.

    “எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
    மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்று அவைபோல” (694)

    இந்தப் பாட்டில் வானம் பயிர்களைக் காக்க வேண்டியது கடமை என்பதுபோலப் பாடுவதைக் காணலாம். வானம் மழைபெய்ய மறந்துவிட்டதாகக் கூறும் நுண்ணியம் உணரத்தக்கது. மழைபெய்யாவிடினும் அம்மழையையே எதிர்நோக்கும் புன்செய்ப் பயிராகத் தன்னை உருவகித்துக் கொள்கிறார். மாமுகில் என்னும் உரிச்சொற்றொடரில் உள்ள மா என்பது முகிலுக்கு அடையாகி நின்று இறைவனின் அளப்பரிய பேரருளைக் குறிப்பாகச் சுட்டியது.  உவமத்திற்கான அடைமொழிகள் பொருளுக்கும் ஆகிவரும் என்னும் உவமக் கொள்கைக்கு அரண் சேர்ப்பது.

    போக்கிடமின்றிப் புலம்பும் குலசேகரர்

    ‘திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே’ என்பார் பாரதி. உய்யும் வழி ஏதுமின்றி மானுட உயிர்கள் வழி காணாது தவித்து இறுதியாகத்தான் இறைச்சிந்தனை வரப்பெற்று (அதற்கும் ஊழ் இருக்க வேண்டும். அவனருளாலே அவன்தாள் வணங்கி என்பது திருவாசகம்) இறைவனை நோக்கித், தம் வழியில் நடக்கத் தொடங்குகின்றன.

    “தொக்கு இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
    புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவை போல” (695)

    உயிர்கள் ஆறெனின் இறைவனே கடல். ஆறுகள் கடலை நோக்கிச் செல்வது இயல்பு. இந்த இயல்பு மாறினாலோ மாற்றப்பட்டாலோ உட்படுத்தினாலோ உலகியல் வாழ்க்கை தடம் புரளும். நீர்வழித்தடங்களைத் தடுக்கக் கூடாது என்பது நீதிமன்ற ஆணை. உயிர்கள் பிறப்பது இறப்பதற்காக. பிறப்புக்குப் பயணம் கிடையாது. ஆனால் இறப்புக்குப் பயணம் உண்டு. அந்தப் பயணம்தான் மானுட வாழ்வு. இந்த வாழ்வின் குறிக்கோள் பிறந்த இடத்தையே சேர்வது. பிறந்த இடம் என்பது இறைவன் திருவடி. உலகியல் என்னும் மாயை உயிர்களின் வழித்தடத்தை மறைக்கும் திரைகள். உயிர்கள் தோன்றுகிற இடத்தையும் இறைவன் கோயில் கொண்டிருக்கும் இடத்தையும் ‘கருவறை’ என்ற சொல்லாலேயே குறிக்கும் நுண்ணியம் இதுதான். தன்னை ஆறாக உருவகித்துக் கொள்ளும் குலசேகரர்  இறைவனாகிய கடலன்றி வேறு போக்கிடம் காணாது அதனையே தன் உயிர்க்கான புகலிடமாகக் கொள்கிறார் என்பது கருத்து.

    உவமத்தை இன்னும் விரிவுபடுத்துகிறார் ஆழ்வார். ஆறு கடல்வழி தெரிந்து அதனுள் கலக்கும். ஆனால் கடலுக்குள் சென்றுவிடின் கரை தெரியாது. தன்னை ஆறாக உருவகப்படுத்திக் கொண்டவர் தொடர்ந்து கடற்பரப்பில் சென்ற திசைமாறிய பறவையாக உருவகித்துக் கொள்கிறார். பிறவியைப் பெருங்கடல் என்றார் திருவள்ளுவர். ஒரு பிறவி முந்தைய பிறவியின் காரியமாகவும் வர இருக்கும் பிறவிக்குக் காரணமாகவும் கரையின்றி வருதலின் பிறவியைப் பெருங்கடல் என்றார். இதற்குக் கரையில்லை. இதனை உள்வாங்கிய ஆழ்வார் பாடுகிறார்.

    “எங்கும்போய் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேகும்
    வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே” (682)

    வங்கம் என்னும் பலபொருள் ஒரு சொல் ஈண்டு நாவாயைக் குறித்தது. நாவாயின் உச்சியில் இருக்கும் ஒரு பகுதிக்குக் கூம்பு என்று பெயர். முக்கோண வடிவில் கொடிமரத்தின் உச்சியில் இருக்கும் அந்தக் கூம்பினைப் பிடித்துக் கொண்டாலேயே கப்பல் பயணம் கைகூடுவதைப் போல இறைவனாகிய கூம்பைப் பிடித்துக் கொள்ளும் புத்திசாலிப் பறவையைத் தனக்கு உவமமாகக் கூறிக் கொள்கிறார் ஆழ்வார்.

    உவமத்தின் உச்சம்

    அருவப்பொருளை அருவப்பொருளுக்கே உவமமாக்கிக் கூறுவது தமிழ்க் கவிதைகளில் காணப்படும் நுண்ணிய உவமக் கொள்கையும் கோட்பாடும் ஆகும். இது முந்தைய கட்டுரைகள் பலவற்றில் சொல்லப்பட்டது. ஒருவனுடைய நிழல் அவனையே தொடர்ந்து சென்று அவன் காலடியிலேயே தங்குவதுபோல அவன் செய்த தீவினைக்கான பயன் அவனையே சென்று அடும் (208) என்பது வள்ளுவம்! இதனை வேறுமாதிரியாகவும் கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள். நிழலை நீ புறந்தள்ளினால் அது உன்னைத் தொடரும் அதுபோலச் செல்வத்தை நீ மனத்தால் புறந்தள்ளினால் அது உன்னைத் தொடரும் என்றும் பாடியிருக்கிறார்கள். கணவனே எல்லாம் என்றிருக்கும் மனைவி தன்னை நிழலாகப் பாவித்து ‘எங்கெங்கே போனாலும் நிழல்போகும் தன்னோட எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட’ என்னும் திரையிசைப்பாடல் நிழலை உறவுக்கோணத்தில் பார்க்கிறது. இந்தப் பின்புலத்தில் குலசேகர ஆழ்வார் பாடல் நோக்கப்படுகிறது.

    “நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
    தன்னையே தான் வேண்டும் செல்வம்போல்” (696)

    உலகிலேயே அழியாத பொருள் இறைவன். தோற்றம் இல்லாததால் அழிவும் இல்லையாயிற்று. அதனால் அது நிலைபேறுடையதாயிற்று. நில்லாதவற்றை நிலையென்று நம்பும் புல்லறிவுக்கும், பொருள் அல்லவற்றைப் பொருள் என்று நம்பும் அறியாமைக்கும் இது புலப்படுவதில்லை. அப்படியானால் நிலையானது எது? பொருள் எது? நிலைப்பவை மட்டும் நிலைக்கும் என்பதை உணர்வது ஞானம். நிலைப்பது எது? இறைவன் மட்டுமே! எனவே நிலைத்த செல்வமாகிய இறைவனை நினைத்துத் தொடர்ந்தால் நிலையாத செல்வம் இவனைத் தொடருமாம். அந்தச் செல்வத்தைப்போல ஆழ்வார் இறைவனைத் தொடர்கிறாராம். எவ்வளவு ஆழமான சிந்தனை? ஆழமான உவமம்?

    நிறைவுரை

    சைவ நாயன்மார்களின் அரற்றலைப் பாசுரங்களைப் பொருத்தவரையில் பெருமாள் திருமொழியிலேயே செவிமடுக்க முடிகிறது. வித்துவக்கோட்டம்மா என்னும் பகுதியில் அவர் நிரல்படுத்தியிருக்கும் உவமங்கள் குடிமக்கள், நோயாளி, குழந்தை, குலமகள், பயிர், ஆறு, பறவை எனப் பல திறத்தன. இவற்றின் கொடுமுடியாகத் திகழ்வது வேண்டாத  செல்வமாகும். ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்பது நம்மாழ்வாரின் கொள்கையாதலின் அதனை வழிமொழிவதைப் போல அமைந்த உவமம் இது. நம்மால் துறக்கப்பட்ட பொருள் நம்மைத் தேடிவரும் என்பது உலகியல் நம்பிக்கை. எல்லாருக்குமாக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. இதன் ஆழமான நுண்ணியத்தையும் விரிவான அழகியல் சித்திரிப்பையும் பெரியவாச்சான் பிள்ளையின் பிரபந்த உரை கண்டு தெளியலாம்.

    (தொடரும்…)

    Share