Blog

  • ஈரம் (சிறுகதை)

    ஈரம் (சிறுகதை)

    சு. செல்வகுமாரன்

    அந்திவானம் இருள் கவிழ்ந்து மழை லேசாகத் தூவானம் போட்டுக் கொண்டிருந்தது.

    பள்ளி வகுப்பு முடிந்து மணியடித்ததும் அறையை விட்டு வெளியில் வந்த சுமிதா, நேராக ஒன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் தனது தம்பி குணாவை அழைத்துச் செல்வதற்காக அவனது வகுப்பிற்கு முன் வந்தாள்.

    மழை சாரலாகத் தூவிக் கொண்டிருந்ததால் தனது துப்பட்டாவைக் குணாவின் தலையில் எடுத்துப் போட்டு சுமிதா, தம்பியின் தலை நனையாதவாறு தம்மோடு இறுக அணைத்துக்கொண்டு விறுவிறு என வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

    காட்டில் நின்றுகொண்டிருந்த மாரியம்மாளுக்கு அந்திவானம் மப்பும் மந்தாரமுமாகக் காட்சிதரத் தொடங்கியதும் அவள் மனம் நிலை கொள்ளவில்லை. ஒடித்த விறகுகளை அவசர அவசரமாகக் கட்டி தலையில் தூக்கி வைத்தவாறு வேகமாக வீட்டுக்குப் புறப்பட்டாள்.

    வரும் வழியில் சாய்ப்பு தெருவினை மாரியம்மாள் கடக்கின்ற போது, பள்ளிவாசல் வெளிப்புறச் சுவரில் மாவரிக்கும் வட்ட வடிவ அரிப்பினைப் போல தொங்கிக்கொண்டிருந்த மணியில் சிறியமுள் நான்கினையும் பெரியமுள் பன்னிரண்டையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.

    வீட்டை நெருங்கையில் தூவானமும் போடத் தொடங்கியிருந்தது.

    சுமந்து வந்த விறகினை முற்றத்தில் போட்ட மாரியம்மாள், குழந்தைகள் மழையில் நனைந்துவிடக் கூடாது என்று வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவள், காலையில் தலை துவட்டி விட்டு, கொடிக்கயிற்றில் காயப்போட்டிருந்த துண்டுகளை எடுத்துத் தோளில் போட்டவாறு வீட்டின் வடக்குப் புறமுள்ள ஓடையைக் கடந்து எட்டி நடந்தாள்.

    ஆடிக்கச்சம் அப்போது தான் தொடங்கியிருந்ததால் ஓடையில் இன்னும் வெள்ளம் வரவில்லை.

    எதிரில் தம் குழந்தைகள் இருவரும் வருவதைக் கண்ட மாரியம்மாள் தம் கையில் கொண்டு சென்ற இரண்டு துண்டுகளையும் இருவரின் தலையிலும் போட்டுவிட்டாள்.

    சின்னவன் குணாவின் கையில் இருந்த புத்தகப்பையை வாங்கித் தோளில் மாட்ட, தானும் பள்ளிக்கூடக் குழந்தையானாள். இப்போதைக்குக் குழந்தைகளோடு புன்னகைத்தபடி மழையில் நனைந்தபடி மெல்ல நடந்தாள், மழையின் குளிர்ச்சியும் மனத்தின் ஈரமும் மாறாதபடிக்கு.

    Share
  • இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம், லக்னோவில் உற்பத்தி ஆலை அமைப்பு

    இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம், லக்னோவில் உற்பத்தி ஆலை அமைப்பு

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    லக்னோவில் பிரமாஸ் எறிகணை தயாரிப்பு நிறுவகம்

    2021 ஆகஸ்டு 24 ஆம் தேதி இந்திய பிரமாஸ் வான்வெளி நிறுவகம், [BrahMos Aerospace] 300 கோடி ரூபாய்ச் செலவில் லக்னோவில் ஒரு பெரும் எறிகணை உற்பத்தி தொழிற் சாலை நிறுவப் போவதாய் அறிவித்துள்ளது. பிரமாஸ் வான்வெளி நிறுவகம் ஈரிணைப்பு தொழில் முயற்சி [Defence Research & Development Organization and Russia’s NPO Mashinostroyenia which produces the world’s fastest supersonic Cruse Missiles] (BrahMos) .

    பிரமாஸ் ஆளுநர் சுதீர் மிஸ்ரா உத்தர் பிரதேஸ் முதல் மந்திரியை அணுகித் தன் திட்டங்களைக் கூறித் தலைநகரில் 200 ஏக்கர் பரப்பு நிலம் ஒதுக்கும்படி வேண்டினார். அடுத்து மூன்று மாதங்களில் திட்டம் ஆரம்பம் ஆகும் என்றும் கூறினார். அத்திட்டம் 5500 உயர் தொழில் நுணுக்க வாதிகளுக்கும், 10,000 பொதுத் தொழிலாளிகளுக்கும் வேலை தரும் என்றும் அறிவித்தார்.

    Image result for Indian BrahMos Extended Range missiles

    பிரமாஸ் கட்டளை எறிகணை

    +++++++++++++++++++++++++++++

    ஈர்த்துக் கொள் என்னை உன்னிதயத் துக்கு.
    பூர்வப் புதிர்களை வெளிப்படுத் தெனக்கு
    விடை தேடுகிறேன் நானொரு வினாவுக்கு
    எங்கோ உள்ளது என்னுள்ளே ஆழத்தில்
    எனக்குத் தெரியும் இங்கு காணேன் என்று
    ஏற்கனவே இருக்கிற தெந்தன் மனதில்
    என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான்,
    எங்கெலாம் எனை யிழுத்துச் சென்றாலும்
    என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான்,
    எப்போது நான் அழைக்கப் பட்டாலும்
    என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான்,
    ஈதோ என்னிதயம் இல்லம் நோக்கி ஏகுது
    ஓம், ஓம், ஒம்.

    ஜான் லெனன், பீட்டில்ஸ் பாடகர்.

    [இந்திய கீதம்] [John Lennon, Song India (1940-1980)]

    பிரமாஸ் தாக்குகணை -1
    BrahMos Missile -1

    “பிரமாஸ் ராணுவ ஏவுகணை குறிப்பிட்ட தளப்பகுதியைத் திட்டமிட்டபடித் தாக்கியது. மேலும் ஒலிமிஞ்சிய வேகத்தில் ஏவுகணையை முடுக்கு வளைவுகளில் [Sharp Manoeuvers] செலுத்த முடியுமா வென்னும் சோதனையும் நடத்தப் பட்டது. ஏவுகணை அப்பணிகளைச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு அதன் அசாத்திய போர்த்திறன் உறுதியானது.”

    சிவதாணு பிள்ளை தலைவர், பிரமாஸ் வான்வெளி லிமிடெட்.

    “விண்ணை நோக்கு! நாம் மட்டும் ஏகாந்தமாக இல்லை. மாபெருமிந்த பிரபஞ்சம் நம்முடன் நட்புடன் உள்ளது. கனவு கண்டு உழைப்போருக்கு மட்டும் உன்னத வெகுமதி அளிக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

    Image result for Indian BrahMos Extended Range missilesImage result for india test fires brahmos extented range missile

    “என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்.  வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.  பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”

    டாக்டர் அப்துல் கலாம்.

    “கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

    டாக்டர் அப்துல் கலாம் (இளைஞருக்குக் கூறியது )

    Image result for india test fires brahmos extented range missile

    Image result for balasore, odisha

    பலேஷ்வர், ஒரிசா [Balasore, Odisha]

    “இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து வலுவோடு நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை! இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை! வல்லமையே வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் ஒருங்கே பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.”

    டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி

    இந்தியாவுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திப்பீர்.
    இந்தியா மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்திப்பீர்,
    அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள
    மேம்பாடு களை நாமும் பெற வேண்டுமானால்!

    டாக்டர் அப்துல் கலாம்.

    இந்தியக் கட்டளை எறிகணைகள் 

    “3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா? அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையானவற்றைக் கைப்பற்றினார். நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை. எந்த நாட்டையும் கைபற்ற வில்லை. யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”

    டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி

    ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
    ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்! ……
    வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!

    மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

    “முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

    டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

    பிரமாஸ் தாக்குகணைத் திட்டம், டாக்டர் அப்துல் கலாம் பார்வை

    பிரமாஸ் தொலைநீட்சி எறிகணைச் சோதிப்பில் நாங்கள் வெற்றி பெற்றது, 248 மைலுக்கு அப்பால் உள்ள எதிர்ப்புப் பகைவரைத் தாக்கி வீழ்த்தும், அரிய படைப்பலத்தை இந்திய இராணுவ வீரருக்கு அளித்துள்ளது. பிரமாஸ் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சி எறிகணை உலகிலே சிறந்த ஓர் தயாரிப்பு என்று நிரூபித்திருக்கிறது.

    டாக்டர் சுதீர் மிஸ்ரா [CEO, BrahMos Aerospace]

    இந்தியா சோதித்த ஒலிவேகம் மிஞ்சிய பிரமாஸ் தாக்குகணை

    இந்தியா இதுவரைச் சோதித்த பிரிதிவி, அக்கினி, சூரியா போன்ற கட்டளை எறிகணைகளில், ரஷ்யக் கூட்டுறவில் ஆக்கிய பிரமாஸ் தாக்கு கணையே [BrahMos Supersonic Cruise Missile] ஒலிவேகம் மிஞ்சிய [மாக் -2.8 (Mach -2.8)]  அதிவேகத்தில் தற்போதைய நீட்சி 180 மைலுக்கு மிஞ்சி, முதன்முதல் 248 மைல் தூரத்தைத் தாண்டிச் சென்றுள்ளது.  இதில் ஈடுபட்டுப் பங்கு பெற்றவர் இரு குழுவினர் : இந்தியாவின் படைத்துறை ஆய்வு & விருத்தி ஆணையகம்  [Defense Research & Development Organization (DRDO) & Russia – Owned NPO] ரஷ்யாவைச் சேர்ந்த பொறிநுணுக்கரோடு இணைந்து செய்தது.  இந்திய படைத்துறை ஆய்வாளர் பிரமாஸ் ஒலிமிஞ்சிய எறிகணையைச் சோதித்து வெற்றி பெற்றது மாபெரும் வரலாற்றுச் சாதனையாய், வாஷிங்டனைச் சேர்ந்த ரயான் மாஸ் 2017 மார்ச் 14 இல் அறிவித்துள்ளார்.  இது ஏவப்பட்ட ஏவுதளம் : பலேஷ்வர், ஒரிசா [Balasore, Odisha]

    பாரதத்தில் எழுந்த விண்வெளி ஏவுகணைப் புரட்சி

    2007 ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று, அக்கினி-III ஏவுகணையின் முதல் தோல்விப் போக்கிற்குப் பிறகு 9 மாதங்கள் கழித்து, ராணுவ ஆராய்ச்சி விருத்தி துறையகத்தின் [The Defence Research & Development Organization (DRDO)] வெற்றிகரமாக ஏவுகணைப் பயிற்சி நிகழ்ந்தேறியது. அதுவே பாரதத்தின் நீள் பயண ராணுவ ஏவுகணைப் படைப்பலப் படைப்புக்கு [Long Range Missile Capability] அடித்தள மிட்டது. அக்கினி-III இரண்டாம் ஏவுகணை முயற்சி எவ்விதப் பழுதின்றி எளிதாக நிறைவேறிற்று. முதல் முயற்சி தோல்வி அடைந்ததற்கு மிகச் சிறிய பழுதே காரணம் என்று அறியப் படுகிறது. அக்கினி-III ஏவுகணையின் பயண நீள்போக்கு 3500 கி.மீடர் [2100 மைல்] தூரம். ஒருகட்ட அக்கினி-I ஏவுகணை [Single Stage Missile] செல்லக் கூடிய பயணத் தொலைவு: 700 கி.மீடர் [420 மைல்], இருகட்ட அக்கினி-II ஏவுகணையின் [Two Stage Missile] தூரம்: 2500 கி.மீடர் [1500 மைல்].

    BrahMos Weapon Missiles

    மூர்க்க ஆற்றல் படைத்த இருகட்ட ஏவுகணை அக்கினி-III முதல் கட்டத்தின் விட்டம் இரட்டையான SLV-3 ராக்கெட்டைக் கொண்டு புதுவித திடச்சக்தி உந்து நுணுக்கத்தில் DRDO துறைக்குழுவினரால் படைக்கப் பட்டது. திடச்சக்தி உந்து ராக்கெட்டுகள், திரவச்சக்தி உந்து ராக்கெட்டுகளை விட எளிதாகவும், விரைவாகவும், யந்திரக் கருவி உதவி குறைவான சாதனங்களால் ஏவிட வசதியாக உள்ளன. 1980 ஆம் ஆண்டில் திட எரிசக்தியில் இயங்கும் நான்கு கட்ட SLV-3 ராக்கெட் [Solid Propellant Four Stage Rocket] முதன்முதலாக வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு, அதற்கும் மிஞ்சிய உந்தாற்றல் கொண்ட ராக்கெட்டுகளும், கட்டளை ராணுவ ஏவுகணைகளும் [Ballistic Military Missiles] பாரதத்தில் படைக்கப்பட்டன. 1994 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வுத் துறையகம் [Indian Space Research Organization (ISRO)], திட எரிசக்தியில் ஏவப்படும் மாபெரும் துருவத் துணைக்கோள் ஏவு ராக்கெட்டை [Polar Satellite Lauch Vehicle (PSLV)] வெற்றிகரமாக ஏவியது. பாரதத்தின் SLV-3 ஏவுகணையின் முதற் கட்ட ராக்கெட்டே பிறகு அக்கினி ராணுவக் கணைகளின் அடிப்படை ஆனது.

    Image result for india test fires brahmos extented range missile

    BrahMos Truck Missiles

    சைனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்தித் திடச்சக்தியால் உந்தும் ராக்கெட்டுகளைக் கொண்டுள்ளன. சைனா 13000 கி.மீடர் [7800 மைல்] தூரம் ஏகும் பேராற்றல் வாய்ந்த திரவச்சக்தி உந்தும் DF-5 ராக்கெட்டை விருத்தி செய்துள்ளது. மேலும் பல்வேறு அணு ஆயுதக் குண்டுகளைத் தூக்கிச் செல்லும் உன்னத வலுவுடைய திடச்சக்தி உந்தும் ஒற்றை ராக்கெட்டைச் சைனா விருத்தி செய்து வருவதாக அறியப்படுகிறது. ஆழ்கடல் கப்பல் மூலமாக [Submarine-borne Missile] ஏவப்படும் JL-2 ராக்கெட் சைனாவிடம் உள்ளது. பாகிஸ்தானும் அதுபோல் திடச்சக்தி உந்து ராக்கெட் துறையில் முன்னேறி யுள்ளது. சைனாவின் M-11 ராக்கெட்டை ஒத்த நுணுக்கத்தில் பாகிஸ்தானின் கஸ்னாவி [Ghaznavi] ஏவுகணை தயாரிக்கப் பட்டுள்ளது. ஒற்றைக் கட்ட ஷாஹீன்-I, [Shaheen-I] இருகட்ட ஷாஹீன்-II [Shaheen-II] ராக்கெட்டுகளைப் பாகிஸ்தானே உள்நாட்டில் தயாரிக்க முடியும். 2004 ஆம் ஆண்டில் பயிற்சிப் பயணம் செய்த ஷாஹீன்-II 1100 கி.மீடர் [660 மைல்] தூரம் செல்லக் கூடியது.

    ரஷ்யாவும், பாரதமும் சேர்ந்து படைத்த பிரம்மாஸ்திரம்

    2007 பிப்ரவரி 4 ஆம் தேதி தரைப் படைக்கு உதவும் “ஒலி மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய பிரமாஸ்” ஏவுகணை [A Supersonic Russian-Indian Built BrahMos Missile] ஒரிஸா ஏவு தளத்தில் தூண்டப்பட்டு வெற்றிகரமாகத் தன் முதல் பயிற்சிப் பயணத்தைச் செய்தது. எட்டு மீடர் நீளமுள்ள [27 அடி] இரு கட்ட ஏவுகணை மூன்று டன் எடைக்கு மேற்பட்ட பளுவைச் சுமந்து 290 கி.மீடர் [180 மைல்] தூரம் செல்லக்கூடியது! தளத்திலிருந்து தளத்தைத் தாக்கும் [Ground-to-ground Missile] அந்த அசுர பிரம்மாஸ்திரம் 2.8 மடங்கு ஒலி வேகத்தில் [2.8 Mac Speed] << S >> வளைவில் வங்காள விரிகுடா மீது பாய்ந்து சென்றது! பிரமாஸ் ராணுவக் கணைத் திட்டத்தின் தலைவர் [Head, BrahMos Air Space Ltd.] சிவதாணு பிள்ளை, ஏவுகணை குறிப்பிட்ட தளப்பகுதியைத் துல்லியமாக அடித்த திறமையைப் பெருமையாக வெளியிட்டார். “மேலும் ஏவுகணை ஒலிமிஞ்சிய வேகத்தில் முடுக்கு வளைவுகளில் [Sharp Manoeuvers] செலுத்த முடியுமா வென்னும் சோதனையும் நடத்தப் பட்டது. ஏவுகணை அப்பணிகளைச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப் பட்டு அதன் அசாத்திய போர்த்திறன் உறுதியானது,” என்றும் கூறினார்.

    Image result for Indian BrahMos Extended Range missiles

    ரஷ்ய-இந்திய பிரமாஸ் கணை கூட்டுத் திட்டம், ராணுவப் பயனுக்காக 1998 பிப்ரவரி மாதம் இரண்டு அரசாங்களிடையே ஒப்பந்தமானது. முதலில் முடிவான பிரமாஸ் திட்டம் கப்பலைத் தாக்கும் கடற்-பீடத்து ஏவுகணையாக [Sea-Based Anti-Ship Missile] ஆக்கத் திட்டமிடப் பட்டது. தற்போது மூழ்கப்பல், ஆகாயக் கப்பல் மூலமாக [Submarine, Air Launch Versions] ஏவப்படும் ஏவுகணைகளாகப் படைக்கப் படுகின்றன. பிரமாஸ் தளப்-பீடத்து ஏவுகணை, வான்-பீடத்து ஏவுகணைகள் [Surface-Based & Air-Based] 10 மீடர் [30 அடி] உயரத்திலிருந்து 2.8 மடங்கு ஒலி வேகத்தில் பாய்ந்து தாக்குபவை. வான் பீடத்துக் கணை 300 கி. கிராம் பளுவைத் தூக்கும் வலுவுடையது. தளப் பீடத்துக் கணை 200 கி.கிராம் பளுவைத் தூக்கும் தகுதி உடையது. பிரமாஸ் ஏவுகணைகளைச் செங்குத்தாகவோ, சாய்வாகவோ, 360 டிகிரி வட்டத் திருப்பத்தில் நகர்த்தி ஏவிட முடியும்.

    பிரமாஸ் அசுரத் தாக்குகணைகள்

    BrahMos Large Missiles

    பிரமாஸ் ஏவுகணை பல்வேறு திசைமாற்றுப் போக்குகளில் மேலும், கீழும் ஏறி யிறங்கித் தாக்கும் பொருளின் தூரத்துக்குத் தகுந்து செம்மைப் படுத்திச் செல்லக் கூடியது! ரேடாரின் கழுகுக் கண்களின் பிடிக்குத் தப்பி விடுபவை! தாக்கப்படும் பகைக் குறிச் சாதனங்களுக்கு ஒரு பெரும் சவாலாய்ப் பாய்கிறது, விரைவாகப் போகும் பிரமாஸ் கணை! தற்போது பிரமாஸை எதிர்த்தடிக்கும் ரஷ்யாவின் மாஸ்கிட் [Russia’s Moskit] போன்ற தடுப்புக் கணைகளும் [Counter Missiles] தயாராகி வருகின்றன. ஆயினும் வேகத் தாக்குக் கணைகள் ஒலி மிஞ்சிய விரைவில் பாய்ந்து செல்வதால், குறியிடத்தின் இருப்பை அறிந்து கொள்வதற்குக் போதிய காலம் கிடைப்பதில்லை! மேலும் அத்தகைய அசுர வேகத்தில் செல்லும் ஏவுகணையின் திசை மாற்றலோ, மேல் கீழிறக்குதலோ, வேகக் குறைப்போ புரிவது அத்தனை எளிய கட்டுப்பாடல்ல!

    2001 முதல் 2003 வரை கப்பல் மீதும், வாகனம் மீதும், கரை மீதும் சாய்வாகவும், செங்குத்தாகவும் அமைக்கப்பட்டு ஆறு பிரமாஸ் ஏவுகணைகள் பயிற்சி செய்யப் பட்டன. 2004 ஆண்டு டிசம்பரில் இரு பிரமாஸ் கப்பல்-தாக்கு ஏவுகணையும், தளப்-பீடத்து ஏவுகணையும், கடல்-பீடத்து [Sea-to-Sea] ஏவுகணையும் பயிற்சி செய்யப்பட்டு, கடற்படைக் கப்பல்களில் அமைக்கப் பட்டன. விமானப்படை ஊர்தியில் [Su-30] அமைக்க வேண்டிய வானப்-பீடத்து பிரமாஸ் ஏவுகணைகளின் பயிற்சிகள் 2007 ஆண்டில் முடிவு பெறும்.

    Image result for Indian BrahMos Extended Range missiles

    இந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்

    1974 மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும் இராணுவ முற்பாடுகளில் முனைந்தது.  கடந்த மத்திய ஆசிய கல்ஃப் நாட்டுப் போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன.  எதிர்காலத்தில் எழும் போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப் போகின்றன.  சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத் தயாரிப்பில் ழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித் தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.  சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்தது.

    டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்

    1982 ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது.  அத்திட்டமே இந்திய இராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது.  அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின. அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ரம்பமாயின.  அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

    Image result for Indian BrahMos Extended Range missiles

    1. நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG – An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது.  உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.

    2. பிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம்.  வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின.  அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்).  சோவியத் யூனியன் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.

    Image result for india test fires brahmos extented range missileImage result for Indian BrahMos Extended Range missiles

    பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ரம்பமாயின.  பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம்.  அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும்.  அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.

    3. ஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile).  எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது.  அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது.  நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது.  ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.

    4. திரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) – A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை.  அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)

    5. அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest),  அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்].  உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது.  1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது.  2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..

    Image result for india test fires brahmos extented range missile

    பாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா

    இந்தியாவின் முதல் “அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை” சூரியா [Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள் ரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது.  தனிப் பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப் பட்டுள்ளது.  2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு 20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்).  சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம் [130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும் மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது.  முதல் அடுக்கு ராக்கெட் திரவ எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும் பயன்படுத்தும்.   ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2,  துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.

    (தொடரும்)

    +++++++++++++++++++

    தகவல்

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
    3. Indian Space Program By: Subhajit Ghosh
    4 Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
    9. Indian Space Program By: Wikipedia
    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
    11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
    12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
    13 Dr. Abdul Kalam : India’s Missile Program http://www.geocities.com/siafdu/kalam.html
    14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive]
    15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
    16 Missile Test By India [February 5, 2007]
    17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
    18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
    19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
    20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]
    21 A Perennial Dream By: Dr. Abdul Kalam [http://sindhu.nomadlikfe.org/]
    22 AllIndidianSite.com – Dr. Abdul Kalam-It’s All About People.
    23 History of Indian Space Program -1 [www.bharat-rakshak.com/SPACE/space-history1.html]
    24 History The Tiger of Mysore & His Rocket Barrages By: Rajivlochan, Dept of History, Punjab University.
    25 India Successfully Tests Trisul Missile [www.spacewar.com/reports/India_Successfully_Tests_Trisul_Missile.html]
    26 India’s Missile Program By: John Cherian [www.hinduonnet.com/fline/]
    27 Indian ICBM Surya Missiles – India Defence Weapon Systems.
    28. Missiles in Indian History. (Agni, Prithvi, Akash, Trishul, Nag, Astra, Surya,
    29. https://indiandefencereview.wordpress.com/category/indian-missiles/
    30. http://www.mensxp.com/special-features/today/26061-10-indian-military-weapons-that-will-make-the-enemies-tremble-with-fear.html
    31. https://en.wikipedia.org/wiki/Indian_Ballistic_Missile_Defence_Programme [March 11, 2017]
    32.http://www.spacedaily.com/reports/India_test_fires_BrahMos_Extended_Range_missile_999.html [March 14, 2017]
    33. https://en.wikipedia.org/wiki/India_and_weapons_of_mass_destruction  [March 15, 2017]
    34. https://wordpress.com/post/jayabarathan.wordpress.com/23881
    35.https://brahmos.com/
    36. https://en.wikipedia.org/wiki/BrahMos

    Share
  • குறளின் கதிர்களாய்…(365)

    குறளின் கதிர்களாய்…(365)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(365)

    புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
    லறங்கூறு மாக்கந் தரும்.

    – திருக்குறள் – 183(புறங்கூறாமை)

    புதுக் கவிதையில்…

    பிறரைக் காணாதபோது
    இகழ்ந்து பேசியும்,
    கண்முன்னே
    பொய்யாய்ப் புகழ்ந்தும்
    பொருள் பெற்று
    உயிர் வாழ்வதைவிட,
    அவ்வாறு செய்யாமல்
    இறந்திடுதல்
    அறநூற்கள் சொல்லும்
    ஆக்கம்
    அவனுக்குத் தருமே…!

    குறும்பாவில்…

    பிறர் இல்லாதபோது இகழ்ந்தும்
    நேரில் புகழ்ந்தும் பொருள்பெற்று வாழ்வதைவிடச்
    சாதலே அறநூலார் ஆக்கந்தருமே…!

    மரபுக் கவிதையில்…

    கண்முன் பிறரைக் காணாமல்
    கசப்புடன் இகழ்ந்தும் நேரினிலே
    விண்ணின் அளவாய்ப் புகழ்ந்துரைத்தும்
    விரும்பிடும் பொருளைப் பெற்றேதான்
    மண்ணில் உயிராய் வாழ்வதைக்கால்
    மரணம தெய்திப் போவதுதான்
    உண்மை சொல்லும் அறநூற்கள்
    உரைத்திடும் ஆக்கம் அவனுக்கே…!

    லிமரைக்கூ…

    பிறர்மேல் புறங்கூறி, நேரில்
    புகழ்ந்துயிர் வாழ்தலைவிட அறநூல் ஆக்கம்பெற
    இறந்து போகலாம் பாரில்…!

    கிராமிய பாணியில்…

    சொல்லாத சொல்லாத
    பொறஞ்சொல்லு சொல்லாத,
    பெறரக் கெடுத்து
    பொறஞ்சொல்லு சொல்லாத..

    அடுத்தவனக் கெடுத்து
    அவன் இல்லாதபோது
    கீழ்த்தரமாப் பேசியும்,
    நேருல நயந்து பேசியும்
    அவங்கிட்ட
    வாங்கித் தின்னு உசிரு
    வாழுறதவிட
    அது இல்லாமச்
    செத்துப்போறதுதான் அவனுக்குப
    பெரும்படிப்பு படிச்சவுங்க சொல்லுற
    பெரும தருமே..

    அதால
    சொல்லாத சொல்லாத
    பொறஞ்சொல்லு சொல்லாத,
    பெறரக் கெடுத்து
    பொறஞ்சொல்லு சொல்லாத…!

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 30

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 30

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமப் பொருளில் உற்றது உணர்தல்

    முன்னுரை

    முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என நில அடிப்படையில் வகுத்து, அவற்றுக்குப் பூக்களைக் குறியீடாக்கி, அகத்திணை வாழ்க்கையைப் பாடுபொருளாக்கிய சங்கச் சான்றோர், புறத்திணையைப் பாடுகிறபோதும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை எனப் பூக்களையே குறியீடாகக் கொண்டிருக்கிறார்கள். ‘அங்கிங்கெனாதபடி’ இயற்கையே ஊடிழையாகவே சென்ற வாழ்வியலின் எதிரொளியான இலக்கியங்களிலும் அவற்றின் கூறுகளில் ஒன்றாகிய உவமப் பயன்பாட்டிலும் இவ்வியற்கை எதிரொளிக்கிறது. ‘கால் கிளர்ந்தன்ன கதழ்பரிப் புரவி’ என்று குதிரையின் பாய்ச்சலுக்குக் காற்றினை உவமமாக்கினார்கள். ‘அரக்கத்தன்ன நுண்மணல் கோடு’ என மணல் மேட்டிற்குச் செவ்வரக்குப் பூவின் நிறத்தை உவமமாக்கினார்கள். இதன் தொடர்ச்சியாக பல உவமங்களை ஒரே தொடரியில் கோக்கவும் செய்தனர். இவை பற்றிய செய்திகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

    பருந்தின் சிறகும் கந்தலாடையும்

    பாடாண் திணையில் வைத்து மன்னரைப் பாடுகின்ற புலவர் பெருமக்கள் இலக்கியச் சிந்தனையோடுதான் பாடியிருக்கிறார்கள் என எண்ண வேண்டியதிருக்கிறது. புறநானூறு முதலிய தொகுப்பு நூல்களானாலும் பதிற்றுப்பத்தாகிய திட்டமிட்டுப் பாடப்பட்ட நூலானாலும் இந்தக் கருத்து பொருந்துவதாகவே தோன்றுகிறது. மன்னனை நேரில் பாடுகிறார் புலவர். அவன் தோற்றத்தைப் பாடித்தான் அவனைப் பற்றிச் செவிமடுத்த பெருமைகளைப் பாட வேண்டும். மன்னனின் திருவோலக்கம் புலவரைத் தடுமாறச் செய்ததால் கேட்டதை முதலில் பாடிக் கண்டதைத்  தொடர்ந்து பாடுகிறார்.

    “தார் அணி எருத்தின் வாரல் வள்ளுகிர்
    அரிமான் வழங்கும் சாரற், பிறமான்
    தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு”
    முரசு  முழங்கு நெடுநகர் அரசு துயில் ஈயாது
    மாதிரம் பனிக்கும் மறம் வீங்கும் பல்புகழ்
    கேட்டற்கு இனிது” (பதி. 2)

    என்னும் வரிகளில் அரிமா வாழும்  காட்டில் அதன் முழக்கத்தைக் கேட்டு அங்கே வாழுகின்ற பிற இன விலங்குகளின் தொகுதி அச்சத்தால் நெஞ்சு அதிர்ந்து நடுங்குவதுபோலச் சேரலாதனைக் கண்டு பகைவர்கள் நடுங்கிய சேதி கேட்டற்கு இனிதாம்.

    அவனை நாடி வந்த தனக்கும் தன்னையொத்த பாணர்களுக்கும் வறியோர்க்கும் அவருடைய வறுமை தீருமாறு உணவளித்துப், புத்தாடை அணிவித்து, அவர்களோடும் அவர்தம் சுற்றத்தோடும்  மன்னனும் அமர்ந்து காணும் காட்சி கண்ணுக்கினியதாம்.

    “வந்தவண் இறுத்த இரும்பே ரொக்கல்
    தொல்பசி உழந்த பழங்கண் வீழ
    எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
    மையூண் பெய்த வெண்ணெல் வெண்சோறு
    நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி
    நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிற கன்ன
    நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை
    நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ
    வணர் இரும் கதுப்பின் வாங்கமை மென்தோள்
    வசையில் மகளிர் வயங்கிழை அணிய
    அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
    நுகர்தற்கு இனிது”  (பதி.2)

    என்று எழுதுகிறார் புலவர். இந்தப் பகுதியில் வறுமையுழன்று வந்தவர் அணிந்திருந்த கந்தலாடைக்கு ஈரத்தால் நனைந்த பருந்தின் சிறகை உவமித்திருப்பதுதான் வியப்பினும் வியப்பு. பாட்டுக்களம் அரண்மனை. புலவருடைய உவமச் சிநதனை பருந்தைத் தேடிப் பறக்கிறது என்பதோடு வந்திருந்த தனது சுற்றத்தாரின் வறுமைநிலையையும் எண்ணுகிறது. மண்மாசு படிந்து கிழிந்து கந்தலாகிய உடைக்கு நனைந்த பருந்தின் சிறகு உவமமாவதைக் “கூதிர்ப்பருந்தின் இருஞ்சிறகன்ன பாறிய சிதாஅரேன்” என்னும் (புறம்.150) பரணர் பாட்டாலும் அறியலாம்.

    இந்தப் பாட்டையும் விளக்கப்பட்ட உவமங்களையும் நோக்குவார்க்கு மன்னனைப் பரவுதலையும் ஒரு படைப்பிலக்கியக் களமாகவும் அவனைப் பாராட்டுவதை ஓர் இலக்கிய உத்தியாகவும் கருதியிருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

    வனத்தில் சிங்கம்! வானத்தில் கதிரவன்!

    ‘அரிமா திரியும் காட்டில் பிற மாக்களுக்கு இடமில்லை’ என்று புலவர் ஒருவர் பாட மற்றொரு புலவர் அதே உணர்வுக்கு வேறொரு உவமத்தை உள்ளங்கொள்ளுமாறு புனைந்துத் தன்னைப் புரந்த மன்னனைப் பாடுகிறார்.

    “மாயிரு விசும்பில் பன்மீன் ஒளிகெட
    ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
    உறுமுரண் சிதைத்த நோன்தாள் வாழ்த்திக்
    காண்கு வந்திசின் கழல்தொடி அண்ணல்!” (பதி. 64)

    “கரிய பெரிய வானிடத்தே ஞாயிறு எழுந்துத் தோன்றிப் பலவாகிய விண்மீன்களின் ஒளியைக் கெடுத்தாற்போன்று சேரர் குடியில் தோன்றிப் பகைவரது மிக்க மாறுபாட்டைக் கெடுத்த கழலுமாறு அணிந்த தொடியினையுடைய அண்ணலே!” என விளிக்கின்றார் புலவர். ஞாயிற்றின் தோற்றமும் அதற்குரிய இடமும் கூறியதற்கேற்ப வாழியாதன் தோற்றமும் அதற்கிடனாகிய சேரர்குடியும் வருவிக்கப்பட்டன. ‘பன்மீன்’ என்றதனால் மாற்றாரது பன்மை பெறப்பட்டது. பலரும் ஒருங்கு திரண்டு இகல் செய்தமையின் “உறுமுரண்” என்கிறார் புலவர். பாட்டில் ‘ஞாயிறு தோன்றியாங்கு’ என்று இருக்கிறது. ஆனால் பொருள் ‘ஞாயிறு தோன்றி விண்மீன்களின் ஒளியை அழித்தது போல’ என்று இருக்க வேண்டும். ‘நேரடியாகக் கதிரவனைப் போல விண்மீன்களாகிய பகைவனை அழித்தவனே!’ என்று கூறாமல் ‘பகைவனை அழிக்கத் தோன்றிய கதிரவன் போல’ என வினையை முன்னிறுத்தாது தோற்றத்தை முன்னிறுத்தியது மன்னனுடைய திருவோலக்கத்தில்  அவன் பொலிவு நோக்கிய மயக்கம் என்க.

    உவம வினைகள் பொருளுக்கும் பொருந்தும்

    பொருளுக்கான வினைகளை உவமத்திற்கு ஆக்கியும் உவமத்திற்கான வினைகளைப் பொருளுக்காக்கியும் குறிப்பாகச் சொல்லுவதும் தமிழ் உவமக்கோட்பாடுகளில் ஒன்றாகும். அவ்விரண்டைத் தழுவி நிற்கும் அடைச்சொற்களுக்கும் இது பொருந்தும். ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ என்னும் குறட்பாவில் பொருளுக்கு அடைபுணர்த்த திருவள்ளுவர் ‘கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’ என்னும் உவமத்திற்கு அடை புணர்க்காமை அறிக. ‘தலையின் இழிந்த மயிர் அனையர்’ என உவமத்தின் வினையையும் விளைவையும் கூறிய வள்ளுவர், ‘நிலையின் இழிந்த மாந்தரின்’ வினையையும் விளைவையும் குறிப்பாகப் பெற வைத்தது காண்க.

    “மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
    போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா!”

    ‘எம் காரியம் ஆராய்ந்து அருள்க’ என்னும் பாசுரத்துள் (பெருமாளுக்கு) உவமமாகிய சிங்கத்தின் செயல்களைக், கிடந்து, உறங்கும், அறிவுற்று, விழித்து, பொங்க, பேர்ந்து, உதறி, நிமிர்ந்து, முழங்கி, புறப்பட்டு, போதரும்’ என்று அடுக்கிப் பொருளாகிய பெருமாளுக்கான வினைகளைக் குறிப்பாகப் பெற வைத்தமை காண்க. இவ்வுவம வினைகள் பெருமாளின் தோற்றத்திற்கேயன்றிப் பண்பாகிய அருள்நோக்கிற்குப் பொருந்தாது என்பதைப் ‘பூவைப்பூ வண்ணா!’ என்னும் மென்மலர் விளியால் உணரவைத்த நுட்பம் உணர்க.

    இந்தப் பாசுரத்தில் அவன் எழுந்திருக்கும் அழகைத், தன் பெடையொடு குகையிலே படுத்திருக்கும் சிங்கம் எழுந்து வருவதை உவமமாகச் சொல்லி ரசிக்கிறார்கள். வீரம் வெளிப்பட எழுவதை மழைக்காலம் முடிந்த நிமித்தங்கள் கண்டு, அறிவுற்று – அதுவரை அசையாமல் இருந்தது – திடீரென்று உயிர் வந்ததுபோல் அசைந்து, தீவிழித்து, – உறங்கிய பின் பார்க்கிற முதல் பார்வையாகையால் சிறிது சிவந்து, விழித்து, – வேரிமயிர் பொங்க, – மணம் கமழ, – தனது வாசனையுள்ள பிடரி மயிர்களை உதறி, நிமிர்ந்து – உடம்பில் இன்னமும் ஒட்டியிருக்கும் சோம்பலை உதறுகிறதாம். முன்னங்கால்களை நீட்டி உடம்பை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்துப், பின் பின்னங்கால்களை நீட்டி மறுபடியும் உடம்பை இழுத்துச் சோம்பலை உதறுகிறதாம். பிறகு முழங்கிப் புறப்பட்டு வேட்டையாடக் கிளம்பும் சிங்கத்தைப்போலே சபா மண்டபத்திற்கு வரச்சொல்லுகிறார்கள். இதுவரைப் பள்ளியெழுச்சி பாடியவர்கள் இப்போது சிங்காசனத்திற்கு வரச்சொல்லிப் பாடுகிறாராதலின் அரியணைக்கேற்பப் பெருமாளைச் சிங்கத்தோடு உவமித்தனர் என்பதாம். ஆண்டாளின் இந்த உவமக் கோட்பாடு பழந்தமிழ்க் கவிதைகளின் உவமக் கோட்பாட்டை ஒட்டியே அமைந்திருக்கிறது.

    “பகல் நீடாகாது இரவுப் பொழுது பெருகி
    மாசி நின்ற மா கூர் திங்கள்
    பனிச்சுரம் படரும் பாண்மகள் உவப்ப
    புல்லிருள் விடிய புலம்புசேண் அகலப்
    பாயிருள் நீங்கப் பல்கதிர் பரப்பி
    ஞாயிறு குணமுதல் தோன்றி யாங்கு” (பதி.59)

    என்பது சங்க இலக்கியப் பாடல்களில் ஒன்று. இங்கே காலையில் உதிக்கும் கதிரவனின் வினைகளாக அல்லது விளைவுகளாகப்  பாண்மகள் உவப்ப, புல்லிருள் விடிய, புலம்பு சேண் அகல, பாயிருள் நீங்க, பல்கதிர் பரப்பி என்னும் ஐந்து வினைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கதிரவனைப் போல இத்தகைய சிறப்புடைய ஆடுகோட்பா ட்டுச் சேரலாதனைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடுகிறார். குணதிசையில் கதிரவன் தோன்றியதால் உயிர்த்தொகுதிகள் புலம்பு நீங்கி இன்பம் எய்துதலும் வறுமையாகிய இருள் கழிதலும், இரவிலும் பனியிலும் அலைந்து திரிந்து வருத்தம் நீங்குதலும் சேரலாதனின் அருட்கதிர்கள் உலகெங்கும் பரவுதலும் உவமமாகிய கதிரவனின் வினையடைகளால் பெறப்படும்.

    முன் திணை முதல்வர் போல

    இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் என்னும் சான்றோர் பாடிய பத்துப்பாடல்கள் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒரு பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

    “நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்
    அளப்பரியையே!
    நாள் கோள் திங்கள் ஞாயிறு கனையழல்
    ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத்தனையை!
    போர் தலை மிகுத்த ஈர் ஐம் பதின்மரோடு
    துப்புத் துறை போகிய துணிவுடைமை ஆண்மை
    அக்குரன் அனைய கைவண்மையையே!
    ……………………………………………………………………………………
    இலங்குமணி மிடைந்த  பொலன்கலத் திகிரிக்
    கடலக வரைப்பின்  இப்பொழில் முழுதாண்ட நின்
    முன்திணை முதல்வர் போல! நின்று நீ
    கெடாஅ நல்லிசை நிலைஇத்
    தவா அலியரோ இவ்வுலகமொடு உடனே”  14

    ‘சேரலாதனின் முன்னோர்கள் எப்படிச் சிறப்பாக ஆண்டு இசையொடு வாழ்ந்தார்களோ அதுபோலப் பெரும்புகழ் பெற்று வாழ்வாயாக!’ என்று வாழ்த்துகிறார் புலவர். சேரலாதனுக்கு அவனுடைய முன்னோர்களையே உவமமாக்கும் கண்ணனார், அவனுடைய பேராற்றலைச் சொல்லுகிறபோது உவமங்களாலேயே காட்சிப்படுத்துகிறார்.

    அவனுடைய பெருமை அளத்தற்கரியது என்பதை ‘நிலம் நீர் வளி விசும்பு’ என்னும் அளக்க முடியாத நான்கினை உவமமாக்கியிருக்கிறார். “இரு முந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத்து அகலமும், வளிவழங்கு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றாங்கு அவை அளந்தறியினும் அளத்தற்கரியை” (புறம். 20) எனச் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங்கோழியூர் கிழார் பாடியிருப்பதை நோக்கினால் மன்னனுடைய வியத்தகு ஆற்றலுக்குக் குறிப்பிட்ட இத்தகைய பொருட்களை உவமமாக்குவது ஓர் உவமக் கோட்பாடு என்பது பெறப்படும்.

    அவனுடைய புகழொளியை அளவிடுகிறபோது “விண்மீன், கோள்கள், கதிரவன், திங்கள், நெருப்பு ஆகிய ஐந்தின் ஒருங்கிணைப்பான ஒளி என்று உவமத்திற்காக ஓர் புதிய ஒளியைப் படைத்துக் கொள்கிறார்.

    அவனுடைய வள்ளன்மையைப் பாரதப்போரில் நூற்றுவருக்குத் துணைபுரிந்த அக்குரன் என்பவனின் வள்ளன்மையோடு ஒப்பிடுகிறார். இந்த அக்குரன் தலையெழு வள்ளல்களில் ஒருவன் என்பதாகவும் பாண்டவருள் மூத்தவனாகிய கர்ணனாகவும் இருவேறு வகையாகக் கொள்ளப்படுவான்.

    இவ்வாறு அளப்பரிய தன்மைக்கும், புகழொளிக்கும் வள்ளன்மைக்கும் புதிய புதிய உவமத் தொகுப்புக்களைப் பயன்படுத்திப் படைத்துக்காட்டும் புலவர் இறுதியாக “அவனுடைய முன்னோர் போல வாழ்க” என முன்னோரையே உவமமாக்கி முடித்துக் காட்டுகிறார்.

    உவமக் காட்சி

    ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை ஒப்புமைப்படுத்திக் கூறுவது முதல் நிலை என்றால் படைப்பாளன் தான் கண்ட அல்லது மனக்கண்ணால் உணர்ந்த காட்சியை முழுமையாகச் சித்திரிப்பதற்கும் உவமங்கள் பயன்பட்டுள்ளன.

    “மலையுறழ் யானை வான்தோய் வெல்கொடி
    வரைமிசை அருவியின் வயின்வயின் நுடங்கக்
    கடல்போல் தானை கடுங்குரல் முரசம்
    கால் உறு கடலின் கடிய உரற
    எறிந்து சிதைந்த வாள்
    இலை தெரிந்த வேல்
    பாய்ந்தாய்ந்த மா
    ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு
    படுபிணம் பிறங்க நூறி பகைவர்
    கெடுகுடிபற்றிய கொற்ற வேந்தே! ” (பதி.69)

    மன்னனைப் பாடும் முன்னிலைப் பரவல் இது. சொல்ல வந்த சேதி  இது தான். “படையொடு சென்று பகைவரை வீழ்த்திப் பகைநாட்டில் கெட்டழிந்தோரையும் புரந்த மன்னன்’ என்பதுதான். பாட்டு ஒரு தொடரில் சொல்லியிருக்க வேண்டிய செய்தியில் பகைமுடிக்கச் சென்ற மன்னனது படைச்சிறப்பை உவமங்கள் வழியாகக் காட்சிப்படுத்தியிருப்பதுதான் உவமக்காட்சி என்னும் தலைப்புக்குக் காரணமாயிற்று. பின்னிருந்து காட்சிகளை அளந்தால் பகைமுரசு கடலைப் போல் முழுங்கியது. காரணம் படை கடல் போல் இருந்தது. யானைப் படையில் தாங்கிய கொடிகள் மலையுச்சியிலிருந்து வீழும் அருவிகளைப் போன்று இருந்தன. யானை மலைபோல் இருந்தது. இந்த உவமத்தொடரியில் எள்ளின் முனையளவும் தொடர்ச்சி அறவில்லை என்பதை நோக்குதல் வேண்டும்.

    அகநானூற்றில் இந்தக் காட்சியைப் “பெருவரை இழிதரும் நெடு வெள் அருவி ஓடை யானை உயர்மிசை எடுத்த ஆடு கொடி கடுப்பத் தோன்றும்” (358) என்று உவமத்தைப் பொருளாக்கிக் கூறுதல் காண்க. யானை தாங்கிய கொடி அருவி போல் இருந்தது என்பது இந்தப் பாட்டின் உவமம் கொடி கொட்டுகிற அருவிபோல் இருந்தது என்பது அகநானூற்றின் சித்திரிப்பு. கடல்போல் தானை என்பது மரபுவழி உவமம். “உரவுக்கடல் அன்ன தாங்கரும் தானை” என்பது பதிற்றுப்பத்து (90) மன்னனைப் பாடுகிற பாடாண்திணைப் பாடலில் கற்பனையில் கொண்டு வந்த போர்க்களத்தை உவமத் தோரணங்களால் சித்திரித்துக் காட்டியிருக்கும் பாங்கு இது.

    அயிரை நெடுவரை போல

    இலக்கண நூல்களில் நல்லாசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புநலன்களுக்கு நிலம், மலை, மலர், துலாக்கோல் முதலியவற்றை உவமமாக்கி உரைப்பர்.

    ‘நிலம் மலை நிறைகோல் மலர்நகர் மாட்சி’ என்னும் நன்னூல் வரிகளில் இதனைக் காணலாம். இவை முறையே பொறுமை, வியத்தகு தோற்றம் மற்றும் ஆற்றல், மங்கலம் மற்றும் மென்மை, நடுவுநிலை என்னும் பண்புகளை ஆசிரியருக்கு ஏற்றி உரைப்பதாகக் கொள்ள வேண்டும். இந்த நூற்பாவின் தொடக்கத்திலேயே குலன், அருள், தெய்வம், கொள்கை எனப் பகுத்துச் சொல்லியும் உவமஅளவையால் விரித்துச் சொல்லியும் ஆசிரியரின் பண்புகளின் இன்றியமையாமையை உணர்த்தியிருப்பர். இவற்றுள் சொல்லப்பட்ட மலையை ஒரு மன்னனின் புகழுக்கு உவமமாகச் சொல்லியிருக்கிறார் புலவர் ஒருவர்.

    “மாடேர் உறையும் உலகமும் கேட்ப
    இழுமென இழிதரும் பறைக்குரல் அருவி
    முழுமுதல் கோடுதொறும்  துவன்றும்
    அயிரை நெடுவரை போல” (பதி. 70)

    ‘வரைபோல வாழ்க’ என்றால் கருத்து முடிந்தது. ஆனால் கவிதை முடியுமா? அதனால் புலவர் ஒரு சொல்லோவியம் தீட்டுகிறார். எந்த மலை போல? அயிரை என்னும் உயர்ந்த மலைபோல! அயிரை என்பது மேற்கு மலைத் தொடர்ச்சியில் உள்ளதொரு மலை. வறட்சி காரணமாக அந்த மலையருவி வறண்டாலும் அயிரை மலை அசையாது நிற்குமாம். அருவி துவன்றும் துவறாத அயிரை மலைபோல! அந்த அருவியொலி எதனை ஒத்திருக்கிறது? பறையொலியை ஒத்திருக்கிறதாம். பறைபோல ஒலிக்கும் அந்த அருவியோசை பொன்னுலகத்திலும் கேட்கிறதாம். பொன்னுலகத்தில் கேட்கிறதெனவே மண்ணுலகத்தில் கேட்பது சொல்ல வேண்டாவாயிற்று. இப்போது கூட்டிப் பொருளுரைத்தால் உவம அடைகளின் அழகும் நயமும் புரியக் கூடும்.

    “பொன்னுலகமாகிய தேவர் உலகத்திலும் கேட்கக் கூடிய பறையொலியை ஒத்திருக்கும் மலைப்பக்கங்களில் வீழும் எண்ணற்ற அருவியானது ஒழுகுவதை நிறுத்திக் கொண்டாலும் நிமிரந்து நிற்கின்ற அயிரை என்னும் உயர்ந்த மலைபோல நின்புகழ் நிலைக்கட்டும்””

    இந்த உவமத் தொகுப்பையும் சித்திரிப்பையும் நோக்கினால் அருவியின் ஒலியைக் கேட்கிறபோதே படைப்பாளன் நினைவுக்குப் பறையொலி வருகிறது. முன்னது இயற்கை. பின்னது சமுதாயம். இயற்கையையும் சமுதாயத்தையும் இணைக்கின்ற பாலமாக உவமங்கள் செயல்பட்டுள்ளன என்பதாகக் கருத வேண்டியதிருக்கிறது.

    நிறைவுரை

    உவமம் பொருள் விளக்கக் கருவி அல்லது கருத்து விளக்கக் கருவி என்பதே தமிழ்க் கவிதைகளின் உவமக் கோட்பாடு. உவமத்திற்கும் பொருளுக்குமான அடைகளை ஒன்றினைச் சொல்லி மற்றொன்றைச் சொல்லாமல் விடுவதற்கும் இதுதான் காரணம். ஒப்புமை உணர்வால் ஒன்று மற்றொன்றினுள் அடங்குதலின் கற்பார் இரண்டின் பண்புகளையும் வினைகளையும் பொருத்திக் காண வேண்டும். உவமத்திற்கே மற்றொரு உவமத்தைச் சொல்வதும் மன்னனின் திருவோலக்கத்தில் இருந்தாலும் மக்களையே எண்ணி உவமம் புணர்ப்பதும் தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடுகளாகவே இருந்திருக்கின்றன.

    (தொடரும்…)

    Share
  • மாதவியின் மாண்பமை மடல்!

    -மேகலா இராமமூர்த்தி

    இந்திர விழாவின் இறுதிநாள் அது! புகார் நகரக் கடலில் மகிழ்ச்சியாய் நீராடிவிட்டுக் கடற்கரையில் இன்பப்பொழுது போக்கிக் கொண்டிருந்தனர் மக்கள். அவ்வாறே தாமும் பொழுதை இன்பமாய்க் கழிக்கவிரும்பிய கோவலனும் மாதவியும் ஏவலரும் தோழியரும் உடன்வரக் கடற்கரைச் சோலைக்குச் சென்று ஆங்கே ஓர் புன்னை மர நிழலில் விதானம் அமைத்து வெண்கால் கட்டிலில் அமர்ந்தனர். மாதவி தன்னிடமிருந்த யாழைக் கோவலனிடம் நீட்ட, அவன் அதில் சுதி கூட்டி, யாழ் மீட்டிக் கானல்வரிப் பாடல்களைப் பாடினான்.

    ஆடவரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தாதிருத்தல் மகளிரின் கடமை எனும் பொருள்பட அவன் பாடல்கள் அமைந்திருந்தன. அத்தோடு, தானொரு நெய்தல் நில மங்கையிடம் மையல் கொண்டது போன்ற உட்குறிப்புள்ள பாடல்களையும் பாடினான்.

    அடுத்து மாதவியின் முறை வந்தது. அவள் கோவலனின் கருத்தை மறுத்துரைக்கும் வகையில், ஆண்களின் நற்செயல்களே பெண்களுக்குப் பெருமை தருவன எனும் பொருளமையப் பாடினாள். அத்தோடு, தானும் ஓர் ஆடவனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்திருப்பது போன்ற குறிப்புத்தோன்ற அவள் பாட, கோவலனுக்குக் கோபம் வந்துவிடுகின்றது. ”பொழுதாயிற்றுப் புறப்படுவோம்!” என்று சொல்லிவிட்டு அவள் எழுவதற்கு முன்பாகவே ஏவலர் பின்தொடர எழுந்து போய்விடுகின்றான் அங்கிருந்து.

    இவ்விடத்தில் கானல்வரிப் பாடல்கள் குறித்தொரு செய்தியைச் சொல்ல விழைகின்றேன். கோவலனும் அவனைத் தொடர்ந்து மாதவி மடந்தையும் பாடிய கானல்வரிப் பாடல்கள் அருமையான இசைத்தமிழ்ப் பாடல்களாகும். இவற்றிற்குப் பண், தாளம் போன்றவையும் உள. எனவே, இப்பாடல்களை இசையரங்குகளில் இசைவாணர்கள் பாடிக்காட்டி இவற்றின் சிறப்பையும் சொல்நயத்தையும் தமிழ்மக்களுக்கு உணர்த்துதல் வேண்டும்.

    இனி நாம் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்…

    தான் கிளம்புவதற்கு முன்பாகவே விரைந்து சென்றுவிட்ட கோவலன் செயலால் மாதவி வருத்தமுற்றாலும், அதனைத் தன் தோழியரிடம் காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்குச் சென்றாள். கோவலன் வீடுவந்து சேராதது அவளுக்கு வேதனையளிக்கவே, தாழை மடலொன்றை எடுத்து, ”இளவேனிலரசனும் அவனுக்குத் துணையாய் வரும் திங்கட்செல்வனும் அளிக்கும் வாட்டத்திலிருந்து என்னை மீட்டெடுக்க வாரீர்! இல்லையேல் அவ்வரசன் தன் மலர்வாளியால் என்னுயிரைக் கொள்வன்!” என்று கோவலனுக்கு மடல் தீட்டினாள். அதனைத் தோழி வசந்தமாலையிடம் கொடுத்துக் கோவலனிடம் காட்டி அவனைக் கூட்டிவரச் சொன்னாள். மாதவி கோவலனுக்கு வரைந்த முதல் மடல் இது!

    கூலங்கள் விற்கும் கடைத்தெருவில் கோவலனைக் கண்டுபிடித்த வசந்தமாலை, அம்மடலை அவனிடம் நீட்ட, அப்போது மாதவிபால் மிகுந்த சினத்தோடும் சீற்றத்தோடும் இருந்த கோவலன், ”அந்த ஆடல்மகளின் நடிப்பை இனியும் நான் நம்பத் தயாரில்லை” என்று காட்டமாய்ச் சொல்லி அம்மடலை ஏற்க மறுத்துவிட்டான். வருத்தத்தோடு திரும்பிவந்த  வசந்தமாலை அதனை மாதவியிடம் தெரிவித்தாள்.

    அதனைக் கேட்ட மாதவி, மாலை வரவில்லையாயினும் நாளைக் காலை எப்படியும் அவர் வந்துவிடுவார்; நாம் காண்போம் என்று அவளிடம் சொன்னாள் நம்பிக்கையோடு.

    மாலை வாரா ராயினும் மாணிழை
    காலைகாண் குவம்”
    (சிலப்: வேனிற் காதை – 115-116)

    ஆனால் யாழிசைமீது வந்தமர்ந்து கோவலனையும் மாதவியையும் பிரித்த ஊழ்வினையானது மீண்டும் அவ்விருவரும் சந்திக்கக்கூடிய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது.

    மாதவியை நீங்கிய கோவலன், கண்ணகி மனைக்குச் சென்று அவளையும் அழைத்துக்கொண்டு மதுரைக்குப் புறப்படுகின்றான். அப்பயணத்தின் நோக்கம், அவள் சிலம்புகளை விற்று அப்பொருள்கொண்டு வாணிகஞ்செய்து தான் இழந்த பொருள்களை மீட்டெடுத்தலாகும். வழிநடைப் பயணத்தில் கௌந்தியடிகள் எனும் சமணப் பெண்துறவியார் அவர்களுக்குத் துணை ஆகின்றார். முதுவேனிற் காலத்தின் மூர்க்கமான வெப்பத்தை எதிர்கொண்டு, கடும்பயணம் மேற்கொள்கின்றனர் மூவரும்.

    மதுரைக்கு அணித்தே வந்துவிட்ட அவர்கள், வேலிசூழ்ந்த ஓரிடத்தில் இளைப்பாறுகின்றனர். அப்போது அவர்களை அங்கே விட்டுவிட்டுத் தான்மட்டும் அருகிலிருந்த நீர்நிலைக்குச் செல்கின்றான் கோவலன். அவனைக் கண்டான் மாதவியிடமிருந்து வந்திருந்த தூதுவனான கோசிகன் என்ற அந்தணன். வெயிலில் வாடிவதங்கி உருமாறிப் போயிருந்த கோவலனைக் கோசிகனுக்கு அடையாளம் தெரியவில்லை.

    அவன் கோவலன் தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பிய அவன், ஒரு யுக்தி செய்தான். அங்கே அருகிலிருந்த பந்தலில் வாடிக்கிடந்த மாதவி (குருக்கத்தி) கொடியைப் பார்த்து, “கோவலன் பிரிவால் வருந்தி வாடிய மாதவிபோல் நீயும் வேனிலால் வாட்டமுற்றிருக்கிறாயோ மாதவி?” என்று கோவலன் காதில் விழுமாறு அக்கொடியிடம் அவன் கேட்கவே, அதைக் காதில்வாங்கிய கோவலன், ”நீ சொன்னதன் பொருள் என்ன?” என்று கோசிகன் அருகில்வந்து கேட்கவும், ”ஆகா! கண்டேன் கோவலனை” என்று தெளிந்த கோசிகன், கோவலன் புகாரைவிட்டு நீங்கியதால் அவன் பெற்றோரும் சுற்றத்தாரும் படும் துன்பத்தையும், மாதவியடைந்த மாளாத் துயரத்தையும் தெரிவித்தான். ஏவலர்கள் பல இடங்களில் கோவலனைத் தேடி அலைவதையும், இராமனைப் பிரிந்த அயோத்திபோல் புகார் நகரமக்கள் வருந்தியிருக்கும் அவலத்தையும் எடுத்துரைத்தான். அதன்பின்னர், மாதவி அவனுக்கு எழுதிய மடலை அவனிடம் நீட்டினான்.

    இது மாதவி கோவலனுக்கு எழுதிய இரண்டாவது மடல். இம்முறை கோவலன் அதனை மறுக்காமல் வாங்கிக்கொண்டான். மாதவியைப் பிரிந்து நீண்ட நாட்கள் ஆனபடியால் அவள் மீதிருந்த கோபம் அவனுக்குத் தணிந்திருந்தது. மடலிலிருந்து வீசிய அவள் கூந்தலின் நெய்வாசம் அவனைப் பழைய நினைவுகளுக்குள் மூழ்கவைத்தது. மடலைப் பிரித்துப் படித்தான்…

    ”அடிகளே! உங்கள் திருவடிகளில் நான் வீழ்ந்து வணங்குகின்றேன். குழப்பத்தோடு நான் எழுதுகின்ற இந்தப் புன்மொழிகளை தாங்கள் மனத்திலே கொள்ளவேண்டும். பெற்றோரைப் பேணும் பெரும்பணியைக் கைவிட்டதோடல்லாமல், நற்குடியிலே பிறந்த மனையாட்டியோடு, பூம்புகாரில் யாரும் அறியாவண்ணம், இரவிலே புறப்பட்டுப் போகும்வண்ணம் நிகழ்ந்த தவறு என்ன? அதனை அறியமுடியாமல், அத்தவறு என்னுடையதாக இருக்குமோ? பிறருடையதோ? என ஐயுற்று என் நெஞ்சம் கையற்றுக் கலங்கி நிற்கின்றது. ஒருவேளை, தவறு என்னுடையதாய் இருக்குமானால் அதனைத் தாங்கள் பொருட்படுத்தாது விடுதல் வேண்டும். மயக்கந் தீர்ந்த காட்சியுடைய மெய்யறிவாளரே, உம்மைப் போற்றுகின்றேன்!”

    ”அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
    வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
    குரவர்பணி அன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
    இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
    கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
    பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி”
    (சிலப்: புறஞ்சேரியிறுத்த காதை – 87-92)  

    இம்மடலைப் படித்ததும் மாதவி குற்றமற்றவள்; அவளைப் பற்றித் தவறாக எண்ண வைத்தது தன் தீவினையே என்று தெளிந்தான் கோவலன். இம்மடல், தன் தந்தைக்குக் கொடுத்தனுப்புவதற்கும் பொருத்தமான செய்திகளைக் கொண்ட பொற்புடைய மடல் என்று முடிவுசெய்தவன், மாதவியின் மடலையே தன் தந்தைக்குத் தான் எழுதிய மடலாக அவரிடம் சேர்ப்பித்து அவரைத் தேற்றுமாறுக் கோசிகனிடம் கொடுத்தனுப்புகின்றான் என்கின்றது சிலம்பு.

    மாதவியின் இந்த மடல் அவளின் மாண்பை மட்டுமல்லாது தேர்ந்த சொற்களில் மடல் புனையும் அவளின் திறனையும் நமக்குத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது அல்லவா? 

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தது:

    சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்.

    படம் விக்கிபீடியாவிலிருந்து எடுத்தது.

     

    Share
  • கோவிந்தா! கோவிந்தா!

    கோவிந்தா! கோவிந்தா!

    கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு – 3

    அருள் கூடிவரும் இந்தத் திருநாளில், ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற புகழ்பெற்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முரளீதரா கோபாலா | கிருஷ்ணகுமார்

    முரளீதரா கோபாலா | கிருஷ்ணகுமார்

    கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு – 2

    என்.எஸ்.சிதம்பரம் இயற்றி இசையமைத்த ‘முரளீதரா கோபாலா’ என்ற புகழ்பெற்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இது 4K தரத்தில் அமைந்த காணொலி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முரளீதரா ஹரே மோகன கிருஷ்ணா

    முரளீதரா ஹரே மோகன கிருஷ்ணா

    கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு – 1

    பிரேம பாசம் திரைப்படத்தில், தஞ்சை ராமையா தாஸ் இயற்றி, எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையமைத்த ‘முரளீதரா ஹரே மோகன கிருஷ்ணா’ என்ற புகழ்பெற்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இன்னுமா கூம்பு ஒலிபெருக்கி?

    இன்னுமா கூம்பு ஒலிபெருக்கி?

    கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை நீதிமன்றம் தடை செய்த பிறகும் இன்னும் இவை புழக்கத்தில் இருக்கின்றன. தாம்பரம் பெருநகராட்சி ஆணையாளரே இவற்றைப் பயன்படுத்துகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா? இதில் அரசின் கொள்கை முடிவு என்ன?

    Pic courtesy: https://commons.wikimedia.org/wiki/File:Reflex_loudspeaker_animation_2.gif

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நிலையான வைப்புநிதி – எதில்? எப்படி? | ராமகிருஷ்ணன் நாயக்

    நிலையான வைப்புநிதி – எதில்? எப்படி? | ராமகிருஷ்ணன் நாயக்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    ராமகிருஷ்ணன் நாயக், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர். 26 ஆண்டுகளாக நிதித் துறையில் பணியாற்றி வருகிறார். தட்சின் கேப்பிடல் என்ற நிறுவனத்தின் இயக்குநர். நிலையான வைப்புநிதி குறித்த பல்வேறு ஐயங்களுக்கு இந்தப் பதிவில் பதில் அளித்திருக்கிறார். சிறு முதலீட்டாளர்கள் அவசியம் பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். நிதி, முதலீடு, சேமிப்பு, காப்பீடு தொடர்பான உங்கள் கேள்விகளை, பின்னூட்டம் வழியே எங்களுக்கு அனுப்புங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொண்டு செலுத்திடுவேன் – 2

    கொண்டு செலுத்திடுவேன் – 2

    அண்ணாகண்ணன் இயற்றி இசையமைத்த ‘கொண்டு செலுத்திடுவேன்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    இந்தப் பாடல், அண்ணாகண்ணன் குரலில்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கலியுக அசுரப்படைகள்

    கலியுக அசுரப்படைகள்

    சி. ஜெயபாரதன், கனடா

    இருப தாண்டுப் போர்
    இருபது நாட்களில் முடிந்தது.
    தோற்றவை சூப்பர்
    வல்லரசுகள் !
    ரஷ்யப் படையால்
    வெல்ல முடிய வில்லை !
    அணு ஆயுத
    அமெரிக்கா, பிரிட்டன்
    படை கொடுத்து, பணம் கொடுத்து,
    ஆயுதம் ஈந்து
    பயிற்சி அளித்துப்
    பலனின்றிப், பல்லுயிர்
    பலி கொடுத்து,
    வலுவிழந்து,
    ஓய்ந்து போய்ப்
    பின்வாங்கின
    வென்றவர்
    துப்பாக்கி மூர்க்கர்,
    கொள்ளை அடிப்போர்,
    கொலைகாரர்,
    பள்ளிக்குப் போகும்
    பாவையர் முகத்தில்,
    ஆசிடை வீசும்
    அசுரர் கூட்டம் !
    பெண்டிரை
    அடிமை ஆக்கும்,
    ஆப்கானிஸ் தானின்
    அரக்கர் கூட்டம் !

    COVER IMAGE: WAR PAINTINGS BY PABLO PICASSO 

    Share
  • பழகத் தெரிய வேணும் – 81

    பழகத் தெரிய வேணும் – 81

    நிர்மலா ராகவன்

    உன்னையே மாற்றிக்கொள்!

    `என்னதான் கிரைண்டர் வந்தாலும், அம்மியிலே அரைச்சாதான் ருசி!’

    இப்படிக் கூறிய பெண்மணிக்கு நாற்பத்தைந்து வயதுகூட ஆகியிருக்கவில்லை. ஆனால், எல்லாவித புதிய முயற்சிகளும் நல்லதல்ல, அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது அவளுடைய ஆணித்தரமான நம்பிக்கை.

    இலக்கு: அரைப்பது.

    அம்மியில் அரைத்தால், அதிக நேரம் செலவாகும். மின்சார இயந்திரத்தால் அரைப்பதற்குச் சில வினாடிகள் போதும். வேலைப்பளுவும் வெகுவாகக் குறையும்.

    இலக்கு மாறுபடாது இருந்தால், புதிய, எளிதான முறையைப் பின்பற்ற என்ன தடை?

    `அதுதான் மெழுகுவர்த்தி இருக்கிறதே, மின்சார விளக்கு எதற்கு?’ என்று தாமஸ் ஆல்வா எடிசன் நினைத்திருந்தால், இன்றும் அரைகுறை வெளிச்சத்தில்தான் முட்டி மோதிக்கொண்டு இருந்திருப்போம்.

    விமானங்களில் பறக்க முடியாது என்ற நிலை இருந்தால், `அயல்நாடுகள்’ என்பனவற்றைப் புத்தகங்களில்தான் படித்தாக வேண்டும். முழுமையாகப் புரிந்தும் இருக்காது.

    காலத்திற்கு ஏற்றவாறு மாறாததால், பல மிருகங்கள் காணாமல் போய்விட்டன.

    நிலைமை என்று மாறும்?

    தற்காலத்தில், தொற்றுநோய் வெகுவாகப் பரவிவிட்டதால், வெளியில் அதிகம் அலைய முடியாத நிலை.

    பொறுத்துப்போவது கடினம்தான். ஆனால், வேறு வழியில்லை. இந்நிலை விரைவிலேயே மாறிவிடும் என்று நம்பிக் காத்திருக்க முடியாது. எத்தனை மாதங்கள், ஆண்டுகள் பிடிக்குமோ! `நாம் எதற்கு மாறுவது? உலகம்தான் மாறவேண்டும்!’ என்ற வறட்டுப் பிடிவாதம் நடைமுறைக்கு உதவாது. யாருக்காகவும் உலகம் மாறப்போவதில்லை.

    ஆண்டுகள் பிடிக்குமோ!

    எதிர்பாராத இந்த மாற்றங்களை ஏற்க முடியாது போக, பலரும் ஆத்திரத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால், வன்முறை அதிகரித்துவிட்டது.

    முதியவர்களுக்குத் தம் வயதொத்தவர்களுடன் பேசிப் பழக இயலவில்லையே என்ற மன இறுக்கம்.

    இளையவர்களோ வீட்டிலேயே அடைந்து கிடக்கவேண்டும்.  அங்கேயே அலுவலக வேலை, பள்ளிப் படிப்பு.

    பெற்றோர் நாள் முழுவதும் குழந்தைகளுடன் வீட்டிலேயே கழிக்க நேர்கிறது. பணத் தட்டுப்பாடு வேறு.

    சிறு குழந்தைகளுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களுடைய பிடிவாதம் அதிகரிக்கும்.

    இச்சமயத்தில் குழந்தைகளை அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தலாம். முடிந்தால், சிறுவர்களுடன் நாமும் விளையாடலாம். சிரிப்பும் களிப்புமாக இருக்கும்.

    ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் புத்தங்களைப் படித்துக் காட்டலாம். உணவு உட்கொள்ளும்போது, கதைகள் சொன்னால் அறிவும் மொழி வளமும் பெருகுவதுடன், கதை கேட்கும் சுவாரசியத்தில், என்ன சாப்பிடுகிறோம் என்றே புரியாது சாப்பிட்டுவிடுவார்கள்.

    இன்றும், என் மகள், “அம்மா! நான் சாப்பிடறபோது நீ கதை சொல்ல மாட்டேங்கறே! அசடாப் போயிடுவேன்!” என்று விளையாட்டாக மிரட்டுவாள்!

    மாறமாட்டோம்!

    “தண்ணீர், பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்கிறது. அதுபோல், அறிவாளிகளும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தம்மை மாற்றிக்கொள்கிறார்கள்” (சீனப் பழமொழி).

    `மாற மாட்டோம்!’ என்ற கொள்கை உடையவர்களின் வாழ்க்கை எளிதாக இராது.

    `வேளை சரியாக இல்லை, கலி முத்திவிட்டது,’ என்று, தாம் கஷ்டப்படுவதற்குப் பல காரணங்கள் கற்பிப்பார்களே தவிர, தாம் எப்படி தம் வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள முடியும் என்ற யோசனை அவர்களுக்கு எழுவதில்லை.

    வாழ்க்கை ஒரே மாதிரி இருக்காது. `நான் செய்வதுதான் சரி!’ என்ற பிடிவாதம் இல்லாது, சற்றே பணிவுடன் நடந்தால்தான் குழப்பங்கள் அதிகரிக்காது. நிம்மதிக்காக மாறித்தான் ஆகவேண்டும்.

    புதிய நிலையை ஏற்பது

    `மாற்றம்’ என்றால், வெளிநாடுகளுக்குப் போய் திரும்பியதும், குட்டையான ஆடைகளும், ஆங்கில உச்சரிப்புடன் கூடிய நுனி நாக்குத் தமிழும், அடிக்கடி தோள்களைக் குலுக்கிக்கொள்வதும் இல்லை.

    மேற்கல்விக்காகவோ, அல்லது உத்தியோக நிமித்தமோ, வேற்றூருக்குச் சென்று, பெற்றோரின் கண்காணிப்பு இல்லாததால் சுதந்திரமாக உணர்ந்து, தம் வயதொத்தவர்களுடன் தீய பழக்கங்களில் ஈடுபடுவதும் வெற்றியளிக்கும் மாற்றமில்லை.

    கதை

    திருமணமானபின், இந்தியாவிலிருந்து நான் மலேசியா வந்தபோது, எல்லாமே வித்தியாசமாக இருந்ததுபோல் உணர்ந்தேன்.

    உத்தியோகத்திற்குப் போக ஆரம்பித்ததும், என் சக, சீன ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோரிலிருந்து தனித்துத் தெரிந்தேன். நான் இருந்தபடியே என்னை ஏற்க முடியவில்லை அவர்களால்.

    “When you are in Rome, do as the Romans do!” என்றார்கள் சிலர், கேலியாக.

    அதைத்தான், “ஊருடன் ஒத்து வாழ்!” என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    “தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்ளாதே!” என்று முகத்தைச் சுளித்தாள், ஒருத்தி.

    “உன் நிறத்துக்கு வெள்ளை நிற முகப் பவுடர் கூடாது. பழுப்பு நிறமாகப் பார்த்து வாங்கு!” என்று நட்புடன் அறிவுரை கூறினாள் இன்னொருத்தி.

    புதிய சூழ்நிலையில் அதிக மன இறுக்கமோ, குழப்பமோ இல்லாதிருக்க ஒரு வழிதான் இருந்தது.

    தாய்மொழி, உணவுப் பழக்கவழக்கங்கள், ஆடையணி இவற்றை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை.

    அதற்கும் கேலி: “எப்போதும் புடவையே உடுத்துக்கொள்கிறீர்களே! உங்கள் கணவர் புகார் செய்வதில்லையா?”

    எனக்கு வந்ததே கோபம்!

    “இதில் complain பண்ண என்ன இருக்கிறது? அவருடைய அம்மா புடவை கட்டியதைப் பார்த்து வளர்ந்தவர்தானே!”

    நான் எதற்கு ஆத்திரப்பட்டேன் என்று கேட்டவளுடைய புத்திக்கு எட்டவில்லை. பயந்துவிட்டாள்.

    பேச ஆரம்பித்தபோதே, அம்மா சொல்லிக் கொடுத்தது நான் பேசும் தமிழ். அதை எதற்காக மாற்றவேண்டும்?

    `புரியவில்லை,’ என்று தமிழர்கள் பலர் குறை கூறினார்கள்.

    “நீங்கள் ஏன் எங்களைப்போல் பேசக்கூடாது? எல்லாரையும் உங்களைப்போல் மாற்ற வேண்டும் என்று பார்க்கிறீர்களோ?” என்று வேறொருத்தி சண்டை பிடித்தாள்.

    “நீங்கள்தான் அப்படிச் சொல்கிறீர்கள்!” என்று பதிலடி கொடுத்தேன்.

    என் உச்சரிப்பைக் கேட்டு யாரும் தங்களுடையதை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ளப் போவதில்லை. முடியவும் முடியாது. (பத்து வயதுக்குள் ஒரு மொழியைக் கற்றால்தான் சரியான உச்சரிப்பு வரும். இந்த விதிக்கு முன்னணி நடிகர்கள் விலக்கு).

    உச்சரிப்பில் என்ன, உயர்த்தி, மட்டம்? திரைப்படங்களில் பலவித தமிழ் உச்சரிப்புகளைக் கேட்டு, நாம் புரிந்துகொள்ளவில்லையா?

    மொழியும், அதன் உச்சரிப்பும் இரு தரப்பினருக்குள் தொடர்பை ஏற்படுத்துவதற்குத்தான். பிரிக்க இல்லை. ஏனோ, பலருக்கும் இது புரிவதில்லை. எல்லாரும், எல்லா விதத்திலும், தம்மைப் போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    மாறுவதால் வெற்றி

    ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்களைப் பார்த்தாலோ, அல்லது அப்போது எழுதப்பட்ட கதைகளைப் படித்தாலோ, இன்று பலருக்கும் ரசிக்காது. அவற்றில் இருக்கும் கருத்துகள் இக்காலத்திற்கு ஒவ்வாதிருப்பதுதான் காரணம்.

    கதை

    கற்பனைத் திறனுக்கு மாற்றம் அவசியம்.

    இது புரிந்து, பெரும் வெற்றி கண்டவர் சிட்னி ஷெல்டன் (SYDNEY SHELDON) என்ற அமெரிக்க எழுத்தாளர்.

    1948-இலேயே, திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.

    அவரது முதல் புதினத்தில் நல்ல கரு இருந்தது. ஆனாலும், விற்பனை ஆகவில்லை. அதை மூன்றே பேர்தான் வாங்கினர் என்று சொல்லிச் சிரித்ததைக் கண்டிருக்கிறேன். அவரே ஒன்று வாங்க, அவருடைய தாய் இன்னொன்றை வாங்கினாராம்.

    வாசகர்கள் மனத்தை எப்படிக் கவருவது என்று யோசித்து, தன் எழுத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

    எப்படி?

    சிறப்பான கருவைக் கொண்ட கதைகளுக்குள், படுக்கையறைக் காட்சிகளை நிறைய — தொடர்ச்சியாகப் பல பக்கங்களில் — புகுத்தினார். நடையும் விறுவிறுவென்று இருந்ததா? அமோகமான விற்பனை.

    `முன்பு அப்படித்தான் எழுதினேன். இன்றும் அப்படித்தான் எழுதுவேன்!’ என்று பிடிவாதமாக மாற மறுத்திருந்தால், அவருடைய எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக ஆகியிருக்குமா?

    மாறுங்கள், ஆனால் நல்லவிதமாக.

    வெற்றி காண.

    Share
  • பசுவுக்கு உணவிடும் சிறுமி

    பசுவுக்கு உணவிடும் சிறுமி

    பசுக்களுக்கு உணவிடுவது பெரும் புண்ணியம். மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்களில் பசுவும் ஒன்று. பசுவுக்கு உணவும் பழமும் கொடுத்து வந்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். இங்கே சிறுமி ஹரிணி, பசுவுக்குப் பழங்கள் கொடுப்பதைப் பாருங்கள், வாழ்த்துங்கள்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • டாக் மெக்ஸ்டஃபின்ஸ் கதை இதுதான்

    டாக் மெக்ஸ்டஃபின்ஸ் கதை இதுதான்

    இன்று நித்திலாவின் எட்டாவது பிறந்த நாள். இதை முன்னிட்டு, தன்னைக் கவர்ந்த டாக் மெக்ஸ்டஃபின்ஸ் (Doc McStuffins) என்ற பாத்திரத்தின் (தொலைக்காட்சித் தொடரின் கதாநாயகி) கதையை நித்திலா இங்கே விவரிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share