Author: அவ்வை மகள்

  • 6. பெண்ணியலும் பெண்ணறமும்

    அவ்வைமகள்

    உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒவ்வாத பணியில் பெண்கள் படும் அவதி என்கிற வகையில், பென்னி ஹாரிங்டனின் கதை வெளி உலகிற்குத் தெரிந்திருக்கிற ஒன்று. தெரியாத சரிதங்கள் எத்தனையோ! இன்றைய கால கட்டத்தில், பொதுவாக, அமெரிக்காவில், காவல் துறையில் அதிமேல் பதவிகளுக்குப் பெண்கள் முயற்சி செய்யும் எண்ணமும் கூட இல்லாதவர்களாக இருப்பதாக, நான் சந்தித்த பல பெண் காவல் அதிகாரிகள் கூறினார்கள்.

    இந்நிலையில், ஒரு ஆண் காவல் தலைமை அதிகாரியிடம் பேசினேன். அவர் சொன்ன விவரங்களைப் பற்றி பேசும் முன் அமெரிக்க இராணுவத்தில் பெண்கள் நிலைமை பற்றி அறிவது நல்லது. எனவே இவ்விஷயத்திற்குப் பிறகு வருவோம்.

    அமெரிக்க இராணுவத்தில், பெண்கள் 1775 லிருந்து பணி புரிந்து வருகிறார்கள். 240 ஆண்டுகள் பெண்மை கண்ட பராம்பரியம் இது. இதில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் இவ்வாறு இராணுவப் பணிக்கு வந்த பெண்களில் மிகப் பெரும்பாலோர் செவிலியர்களாக, துணி துவைப்பவர்களாக, துணியை மடித்து இஸ்திரி போடுபவர்களாக, இருப்பிடங்களைத் தூய்மைப் படுத்தி ஒழுங்கு செய்பவர்களாக, சமையல்காரர்களாக, சில பேர் எழுத்தர்களாக என்று மட்டுமே பணியாற்றி வந்தனர். அதற்கடுத்த கட்டத்தில், தொழிநுட்ப உதவிக்கென கணினி, ஆய்வகம், அளவீடுகள் போன்ற பணிகளில் பெண்கள் வந்தமர்ந்தார்கள். இவ்வாறான உபரிப் பணிகள் மட்டுமே இராணுவப் பணிகளில் 67 விழுக்காடாகும். மற்ற 33 விழுக்காடு பணிகள் “Combat” எனப்படும் சண்டையில் இறங்கும் பணியைச் சார்ந்தவை. அப்பணிகளில் பெண்களை அமெரிக்கா அனுமதிக்கவில்லை – 1993ல் பெண்களை “Combat” பணியில் பணியமர்த்தக்கூடாது என்று தடைச் சட்டமே கூட வந்தது. ஆனால், ஆண்-பெண் சமத்துவம் பரவலாக்கப் பேசப்பட்ட நிலையில், 1970 வாக்கில் இராணுவ நிலைமையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு சண்டையின் சற்றே உட்புறமான பணிகளில் பெண்கள் அனுமதிக்கப் படலாயினர். இதையும் சேர்த்தால் மொத்தம் 78 விழுக்காடு இராணுவப்பணிகளில் பெண்கள் பங்கேற்கும் வாய்ப்பு உருவானது. இருப்பினும், முந்தைய 67 விழுக்காட்டுப்பணிகளுக்கு அளித்த முன் உரிமையைப் பெண்கள், பிந்தைய 11 விழுக்காட்டுப் பணிகளுக்கு அளிக்கவில்லை. இந்நிலையில், 2013ல் புரட்சிகரமாக, “Combat” பணிகளிலும் பெண்களை அனுமதிக்கலாம் என் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவ்வாணையின்படி பெண் இராணுவ அதிகாரிகள் போர் முனையில் நேரடியாக நின்று போரிடும் ஆற்றல் பெற சிறப்புப் பயிற்சி (இரண்டரை ஆண்டு காலம்) வழங்க ஏற்பாடானதோடு 2016 ஜனவரி முதல் பெண்கள் “Combat” பணியில் பணியமர்த்தப் படுவர் என்றும் ஆனது. பரபரப்பான மீடியா கவனமும், பெண்ணிய வெற்றியாளர்களின் உற்சாகமும் இணைந்து கொப்புளிக்க, அமெரிக்க இராணுவத்தில் ஒரு புதிய சகாப்தம் பிறந்தது. உலகின் மகோன்னத வரலாறு எனும்படியாக அது பதிவு செய்யப்பட்டது. இந்த முடிவு வெளியான உடனே, “பெண்களை “combat” பணியில் அமர்த்தக் கூடாது!” என மில்லியன் கணக்கில் கூக்குரல்கள் எழுந்தன – அந்தக் கூக்குரல்களில் நியாய தர்மமும் கரிசனமும் இருப்பதை அமெரிக்க இராணுவக் கழகம் கவனிக்கத் தவறவில்லை.

    இருப்பினும், திட்டமிட்டபடி, பெண் போர் வீரர்களுக்கான பயற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக, ஆண் போர் வீரர்களுக்கு என்னென்ன பயிற்சிகள் எத்தனைத் தீவிரமாக – எத்தனைக் கடுமையாக வழங்கப் படுமோ அவ்வாறே பாரபட்சம் இல்லாமல்போர்முனைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    “Army Rangers” பயிற்சிப் பள்ளியில் போர்முனைப் பயிற்சிக்காக 19 பெண்கள் சேருகிறார்கள். பயிற்சிக்குச் சேர்ந்த இந்த 19 பெண்களில் 11 பேர் நான்காவது நாளே பயிற்சியில் இருந்து விலகினர். இருந்த மீதம் எட்டு பேரும் முதல் டெஸ்டில் தேர்ச்சியுறவில்லை. அதில் தேவாலம் என்றிருந்த மூன்று பேரை வைத்துக்கொண்டு பாக்கி ஐந்து பேரை பயிற்சியை விட்டு விலக்க வேண்டியிருந்தது. இரண்டரை ஆண்டு காலம் சென்று. பயிற்சி முடிந்து பார்த்தால், அந்த மூன்று பேரில் இருவர் மட்டுமே பயிற்சியை வெற்றிகரமாக முடித்து “பாஸ்” ஆகிறார்கள். மூன்றாவது ஆள் இரண்டாம் தவணையாக “பாஸ்” ஆகிறார்.

    “Marine Corps” நிறுவனத்தின் காலாட்படைப் போர்முனைப்பயிற்சிப் பள்ளியில் ஆண்களுக்கே என்ற நிலைமையை மாற்றி 2013 ல் பெண்களையும் சேர்த்துக்கொண்டார்கள் – இருவர்க்கும் ஒரே பயிற்சி வழங்கப்பட்டது – ஆனால் வந்த பெண்டிர் யாவரும் பயிற்சியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் போயினர் – ஒரே ஒரு பெண் மட்டுமே பயிற்சியில் “pass” ஆகிறார். இங்கு, ஆண்-பெண் இருவரையும் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் நிறுத்தி ஒரே பயிற்சி வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. கப்பற்படைப் பயிற்சிப் பள்ளியில் இதே போன்ற கதைதான். போனது போக எஞ்சிய இரண்டு பெண்களும், பயிற்சியின் இறுதிப் பரிட்சையில் தோற்றுப் போகிறார்கள். ஆக மொத்தம், பூஜ்ஜியம் பெண்களே பயிற்சியில் வென்றது என்றானது.

    பெண்களைப் போர்முனைக்கு combat பணிக்கென அனுப்புவது குறித்த அமெரிக்கர்களின் ஏகோபித்த கரிசனக் கூக்குரல் இராணுவக் கழகத்தால் கவனிக்கப்பட்டது என்று கூறினேன் அல்லவா அதன் விளைவாக ஒரு முக்கியமான பணியை அமெரிக்க இராணுவக் கழகம் செய்தது. அது என்னவென்றால், இந்த இரண்டரை ஆண்டு காலம் நிகழ்ந்த போர் முனைப் பயிற்சியில் – ஆண்-பெண் இரு பாலருடைய செயல் திறன் எவ்வாறு அமைந்தது என்று மிக விரிவானதும் ஆழ்ந்த நுணுக்கங்களை உடையதுமான நேரடி ஆய்வு நிகழ்த்தப்பட்டு, அந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளை கண்டு இந்த உலகமே ஒரு அதிர்ச்சியான நிலை கண்டது எனலாம். அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு:

    பெண் போர் முனை வீரர்கள் ஆண் போர் முனை வீரர்களை விட மிக மிக அதிகமாக காயப்படுகிறார்கள். தோலும், காரமும், கால்களும் அப்படியே பட்டென்று ஓடிகின்றன.
    போர்முனை ஆயுதங்களைக் கையாளும்போது குறி தவறும் பிழை பெண்களுக்கு மிக மிக அதிகமாய் ஏற்படுகிறது.

    பெண் போர்வீரர்கள் ஆண் போர் வீரர்களைப் போல வேகமாக ஓடுவதில்லை.

    சக போர் வீரர் அடிபட்டு வீழ்ந்தால், அவரைத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தும் அடிப்படை வேலையைப் பெண்வீரர்களால் செய்யமுடியவில்லை ஏனெனில் இன்னொரு ஆளைத் தூக்கும் திறன் அவர்களுக்கு இல்லை. மிக பலசாலியானவர் என்று பேர் பெற்ற ஒரு பெண் வீரர் ஒரு ஆளைத் தூக்கினார் ஆனால் அதிக நேரம் எடுத்துக் கொண்டார். இது மிகப் பெரிய ஆபத்து கண்மூடிக் கண் திறக்கும் நேரம் எனும்படியாக வீழ்ந்த ஆளைத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்த வேண்டும் இல்லையேல் மிகப்பபெரிய விளைவுகளை நிகழும். கணநேரத்தில், ஆளைத் தூக்கி அப்புறப்படுத்த இயலவில்லை என்றால் அது போர்முனையில் மிகப்பெரிய தடை – இழிவு! பளுதூக்குவதில் பெண்களின் உடல் எத்தனை பலவீனமாக இருக்கிறது என்றால் – போர்முனைப் பயிற்சியே இல்லாத சாதாரண ஒரு ஆண் கூட, போர் முனைப் பயிற்சி பெற்ற இராணுவப் பெண்வீரரை விட அதிக ஆற்றலுடன் அதிக சீக்கிரமாக இன்னொரு ஆளைத் தூக்க முடிகிறது.

    சக பெண் போராளி அடிபட்டு விழும்போது ஆண் போர்வீருக்கு கவனக் குறைவு ஏற்பட்டு அவரது செயல்திறன் வெகுவாகக் குறைகிறது.

    இன்னும் சிலபல முடிவுகள் இருப்பினும் மேற்கண்ட அம்சங்கள் மிகவும் முக்கியமானவை.

    இந்நிலையில் இந்நாட்டு மக்கள் ஏன் பெண்கள் போர்முனையில் combat பணிக்கு வரக்கூடாது என்று கூறும் கருத்துக்கள் இதோ:

    அதிகமாகவும் சுலபமாகவும் அடிபடும் உடம்பு பெண் உடம்பு என்பதால், பெண் வீரர்களை ஸ்திரமான ஒரு “படை பலம்” என்று நம்பி எந்தப் போர்க் களத்திலும் இறங்கி விட முடியாது.

    போர் முனையில் பொத்து பொத்தென சுலபமாய் விழும் பெண் வீரர்களைக் காப்பாற்றுவதும், மருத்துவ உதவி அளிப்பதுமே முதன்மைப் பணியாகப் போகுமென்பதால், “Mission” ஐ (போர்ப்பணியை) முடிக்க அதிக ஆள் பலம், சிலவு ஆகியனவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

    போர் முனையில் தங்குமிடங்களில் பெண்களுக்கென பிரத்யேக வசதிகளை ஏற்படுத்துவது சில அசவுகரியங்களை ஏற்படுத்தும்.

    முகாம்களில் பெண் போர்வீரர்கள் ஆண்வீரர்களின் சிலபல தனிவகை சுதந்திரத்துக்கு இடைஞ்சலாய் இருப்பார்கள்.

    ஏற்கனவே பாலியல் பிரச்சனைகள், அவைதொடர்பான மிரட்டல்கள், அடக்குமுறை என்று இராணுவப் பெண்கள் அச்சத்தில் வெளியே சொல்லமுடியாமலும் சொல்லாமலும் இருக்க முடியாமலும் இருக்கும் நிலையை போர்முனைப் பயிற்சியும். போர்முனைப் பணியும் மேலும் சிக்கலாக்கும். பெண் போர் வீரர்களுக்கு உகந்த பாதுகாப்பு இல்லை ஏனெனில் அங்கே வேலியே பயிரை மேயும் கதையாகும்.

    நம் படையில் பெண்கள் என்றால் எதிர்ப்படைக்கு மிகவும் லாபம். அவர்களுக்கு வெற்றி எளிதாகவும் கிடைத்து விடும். அது மட்டுமல்ல, பெண் போர் வீரர் கடத்தப்படுவதும், கற்பழிக்கப்படுவதும் வெகு சுலபமாக நிகழும். போர் முனையில் வெளிநாட்டுப் படைகளால் களவாடப்படும் பெண் போர்வீரர்கள் எதிர்ப்படையினரால் கற்பழித்துக் கொல்லப்படலாம் அல்லது அவர்களின் வாழ்க்கைத் துணைவிகளாகவும் மாற்றப்படலாம்.

    இவ்வாறான கருத்துக்களும் கண்டுபிடிப்புகளும் உள்ள நிலையில், இராணுவத்தின் நிலை என்னவாயிருக்கும் என்று வினவினேன். முத்தாய்ப்பான பதில் கிடைத்த்து: இராணுவப் போர்முனை வீரர் எனும் பணி சுலபமான வேலை இல்லை – இது உடல் திறனையும் – துரிதமாக இயங்கும் ஆற்றலையும், ஒரு துளி பிசகும் ஏற்படாதவாறு – எதிரியைக் குறிவைத்து அழிக்கும் திட மனதையும் கொண்டவர் செயுயும் வேலை. இராணுவத்தில் ஆண் – பெண் என்கிற பாகுபாடு கிடையாது. இரண்டு பேரும் ஒரே விதமான திறமை காட்டவேண்டும் என்பது அடிப்படையான விதி. எனவே பெண்களுக்கு, பயிற்சியில் எவ்வித சலுகையும் காட்டமுடியாது. இது நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயம்.

    உடல் ரீதியாக பெரும்பாலான பெண்கள் இப்பணிகளுக்கு நுழைவுத்தகுதி கூட பெறுவதில்லை. ஆனால் உடல் பலம் பொருத்தமாய் இருக்கிற பெண்களை இங்கு வரவேற்க நாங்கள் தயாராய் இருக்கிறோம். ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்கிற உண்மையைப் பேசியாகவேண்டும். எனவேதான், Special Tactics Officer, Combat Control, Special Operations Weather Technician, Combat Rescue Officer, Pararescue and Tactical Air Control Party ஆகிய பணிகளை ஆண்கள் மட்டுமே செய்யும் பணிகளாக இன்றும் வைத்திருக்கிறோம். என்றும் இது இவ்வாறே இருக்கவும் கூடும். பெண்கள் பிற இராணுவப் பணிகளை முயலத் தடையில்லை. எடுத்துக் காட்டாக விமானப்படையில் போர் விமானப் பைலட்டுகளாகப் பெண்கள் இருக்கிறார்கள். அமரிக்காவில் இது வெகு நாட்களாக சாத்தியமாகி இருக்கிறது. இது போன்று, இராணுவத்தில் அவர்களுடைய உடலுக்கு ஏற்ற வேலையை அவர்கள் ஏற்றுக்கொள்வதில் நாங்கள் குறுக்கே நிற்கப் போவதில்லை. இது பெண்கள், அவரவர் உடல்நிலையைக் கருத்தில் வைத்து, பணியின் கஷ்டநஷ்டங்களை ஆலோசித்து, அவர்களது சொந்த வாழ்க்கையின் அகல நீளங்களையும் கணக்கில் வைத்து. அவர்களே சுயமாக எடுக்கவேண்டிய முடிவு. ஆண்-பெண் என்ற சமத்துவம் உடம்புக்கு இல்லை. என்பதை அவர்கள் புரிந்து கொண்டால் – நாம் புரிந்து கொண்டால் எல்லா விஷயங்களுமே எளிமையாகிவிடும். பெண்ணியம் என்பதை விட பெண்ணியலும் பெண்ணறமும் தான் மிகவும் முக்கியம். “

    மேலும் பேசுவோம்

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 4.

    அவ்வை மகள்

     மனோமயமும் அம்மையப்ப உறவும்

    இறையியல் சிந்தனைகள்

    நான் யார்? என்பது மிகப்பிரசித்தமான கேள்வி. ஊடகங்கள் பரவின பிறகு இந்த கேள்வி வெகுமிகவே பிரசித்தமாகி விட்டது. எவரைப் பார்த்தாலும், இந்த நான் யார் கேள்வியை தம் பேச்சு வழக்கில் வெகு அதிகமாகவே பயன் படுத்துகிறார்கள். விவாதிக்கிறார்கள் – விளக்கம் தருகிறார்கள். இத்தனை ஊக்கத்திற்கும் ஏதேனும் விளைவு இருக்கிறதா, உண்மையில் நிறைய பேர் “நான் யார்?” என்று தன்னைத்தானே வினவுகிறார்களா என்று நான் சுற்றிலும் பார்த்தால் நாம் காணும் காட்சி வெகுசுவாரசியமான காட்சியாக இருக்கிறது.

    ஒருவர் கேட்கிறார்: நான் யார்? நான் ஒரு கணக்குப்பிள்ளை (Accountant ஐ கணக்குப்ப்பிள்ளை என்னலாமே!). நான் அதற்கேற்ற மிடுக்கோடு உடையணிந்து கொள்ளவேண்டும் – அதற்கேற்றாற்போன்ற அந்தஸ்துள்ள வாகனம் வைத்துக்கொள்ள வேண்டும் – அதற்கேற்றாற்போன்ற அந்தஸ்துள்ள ஓட்டலில் சாப்பிடவேண்டும் – என் மனைவி மற்றும் குழந்தைகள் என் அந்தஸ்த்துக்கேற்றார் போன்று கவுரவக்குறைவு தராதபடி தோற்றமளிக்க வேண்டும் – என் குழந்தைகள் என் அந்தஸ்தைப் பிரதிபலிக்கும்படியான ஒசத்தியான பள்ளியில் படிக்க வேண்டும்!”

    சாமான்ய மனிதர்களின் ராப்பகல் நினைவும் ஏன் கனவும் கூட இவ்வாறே அமைகிறது. இவ்வாறு இவர்கள் சதாசர்வ காலமும் தன்னைப் பற்றியே சிந்திக்கின்றதான சுய வினாக்கள் நான் யார்? என்பவையே. அதில் சந்தேகம் இல்லை. இங்கு இந்தக் கணக்குப் பிள்ளை எழுப்பியிருக்கிற கேள்விகளிலே எந்தப் பழுதும் இல்லை. வாழ்வின் தரத்தை உயர்த்தவும் வளப்படுத்தவும் ஒரு தனி மனிதன் எழுப்புகிற மிக வலுவான கேள்விகள். அந்தத் தனிமனிதனது வாழ்வை இயக்கும் எஞ்சினைப் போன்ற ஆற்றல் கேள்விகள். இது நான் யாரின் ஒரு பரிமாணம் தான்.

    இன்னொருவர் புலம்பித்தீர்க்கிறார்: “என்னைப் பார்த்து அப்படி கேட்டுப் புட்டானே!” என்று. இவரைப் பார்த்து அவ்வாறு சொன்னவன் எவனோ அந்தச் சொன்னவன் கூட மறந்திருப்பான் தான் பேசியதை – ஆனால் கேட்ட இவரோ இறக்கும் வரையிலும் தான் கேட்ட அந்தச் சொல்லை மறக்க மாட்டாதவராய்த் துடிக்கிறார். தான் யார்? தான் எத்தனைப் பெரிய ஆள் – எத்தனை நல்ல ஆள் என்பது இவருக்கு மிக நன்றாகப் புரிந்திருக்கிறது. அப்படிப் பட்ட தன்னைப் பிறர் இவ்வாறு சொல்லுதல் தகுமா என்பதே இவரது துடிப்பு. ஆக, இவர், “நான் யார்?” எனும் கேள்வியைக் கேட்டவரே எனலாம். உலகு – தான் எனும் இரு தளங்களில் தன்னைப் பரிசோதிக்கும் யதார்த்தம் இம்மனிதரிடத்திலே இருக்கிறது. இவர் கரிசனத்தில் பழுதில்லை – இந்தச் சுய கேள்வி இவரை இன்னமும் கொஞ்சம் தன்னைப் பட்டை தீட்ட உதவும். இதுவும் நான் யாரின் ஒரு பரிமாணம் தான்.

    இந்த இரண்டு காட்சிகளிலும், நான் யார் எனும் கேள்வி எழுப்பப்பட்டது உண்மையே! இருப்பினும், இவர்கள், “நான்” எனும்போது “என்னை” “எனக்கு”, “என்னுடைய” என்று தான் கேள்வித்தொடுப்பைக் கேட்கிறார்களே தவிர நான் யார் எனும் கேள்வியை முறையாய், வலுவாய், நேரடியாய் எழுப்பியதாகப் புலப்படவில்லை.

    இதுபற்றியே அருணகிரி நாதரும், கந்தரநுபூதியில், “யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே!” என்கிறார். அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறை அறிந்தவர்கள் இந்த அனுபவ வாசகத்தின் பொருளை ஆழமாய் உணர்வர். யான் – தான் என்கிற எண்ணங்கள் மிக இயல்பானவையே – முதிர்ச்சியுறா நிலையில் அவையே முந்துறும் என்றே அருணகிரியார் காட்டுவது படுகிறது. எனவே, பொதுவாக, நான் என்பதிலே பிழை இல்லை என்றே படுகிறது. ஆனால் நான் என்பது “என்” என ஆகும்போது திடுக்கென எஜமானத்தனம் வந்துவிடுகிறது. அந்த “என்” எனும் சொல்லோடு “ஐ” எனும் எழுத்தையும் இணைத்து “என்னை” என மூன்றெழுத்துச் சொல்லாக மாற்றும்போது எஜமான எழுச்சி மிகுகிறது. ஆக, “நான்” என தன்னந்தனியே சும்மா கிடந்த ஒன்றைப் பிறவற்றோடு கூட்டு சேரும்போது நிகழும் பிறழ்வுகளை, குணோபேதங்களைப் பார்க்கிறோம்.

    ஐ எனும் ஒற்றை எழுத்து தமிழிலாகட்டும் I என்று ஆங்கிலத்திலாகட்டும் மிகுந்த வலிமையுடைய ஒரு சின்னமாகும். பொதுவாக ஐ என்பது வியப்புணர்வு. உளவியல் ரீதியாக I என்பது மனோமயம் எனப்படும் Egoவைக் குறிக்கும். தமிழில் , ஐ எனும் எழுத்து, விந்தைப் பொருள், கணவன், ஆசான், தந்தை, தெய்வம், நுட்பம், அழகு எனப் பல்வகைப் பொருள் படும். ஐ என்பது உடற்கூற்றில் சுவாசத்தையும், மருத்துவத்தில் விஷத்தையும் குறிக்கும். ஐ யின் இத்தனை அர்த்தங்களும் எத்தனை அர்த்தமானவை என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்குள் பரவசம் பெருகும்.

    ஆக, அடிப்படை நிலையாகப் பார்த்தால், ஐ எனும் மனோமயம் மனித வாழ்விற்கு ஜீவாதாரமான மூச்சைப் போன்றது என் அறிகிறோம். மனோமயம் இன்றி எவரும் வாழமுடியாது. அதே நேரத்தில், மனோமயம் விஷத் தன்மை உடையது என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். இவ்வகையில் இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் மருந்துகள் யாவுமே விஷம் தான். அது மருந்தா விஷமா என்பது கொள்ளும் முறையிலும் அளவிலும் உள்ளது. ஆக மனோமயம் மூச்சாகுமா – மூச்சடைப்பாகுமா – மருந்தாகுமா விஷமாகுமா என்பதிலே மனோமயத்தை வகிக்கும் வகையிலே தான் அடங்கிக் கிடக்கிறது.

    மனோமயத்தை ஆசானாகக் கொள்கிறோமா, தந்தையாக பாவிக்கிறோமா, கணவனாய் மணந்து கொள்கிறோமா, தெய்வமாய்ப் பேணுகிறோமா, நுட்பத் பொருளாய் அணுகி ஆராய்கிறோமா, புனிதப் பொருளாய், அதன் அழகு கெடாதபடி அதனை ஆராதிக்கிறோமா என்பதிலே மனிதர்கள் வேறுபடுகிறார்கள். அதே நேரத்தில், மனோமயம் என்பது ஒரு நிச்சயமான ஒன்று – அதைவிடுத்து ஒரு வாழ்வு அமையாது எனவும் காண்கிறோம். ஞானிகள் முதல் கடைக்கோடி சாமானியன் வரை, ஆண்-பெண், ஏழை-பணக்காரர், அழகுடையோர்- அழகில்லாதோர் என்கிற பாகுபாடின்றி மனோமயம் எல்லோரிடத்திலும் இருக்கிறது.

    இன்னொரு காட்சியைக் காண்போம்: “என் பாப்பா” என்று ஒரு பொம்மையைக் கட்டிப்பிடித்துக் கொள்ளும் குழந்தை அந்த பொம்மையைக் கட்டிப் பிடித்தபடியே தூங்கிவிடுகிறது. தனது உறக்கம் கலைந்தவுடன் தன் அருகில் குப்புறக் கவிழ்ந்து கிடைக்கும் பொம்மையை உலுக்கி எழுப்புகிறது, “ஏய்! இன்னமுமா தூங்குகிறாய்?” என்று. பரபரவென்று பொம்மையை வாரி அள்ளித் தூக்கிக்கொண்டு ஓடுகிறது – உணவு ஊட்டுகிறது – குளிப்பாட்டுகிறது – உடை மாற்றுகிறது – தலை பின்னுகிறது -செல்லமாய் அடிக்கிறது – முத்தம் தருகிறது – முத்தம் தா எனக்கு எனக் கேட்டு பொம்மையைத் தன் கன்னத்தில் முத்தமிடவைக்கிறது.

    மொத்தத்தில், பொம்மைப் பாப்பா இந்த பாப்பாவின் கட்டளைகளுக்கெல்லாம் ஆளாகிறது. பாப்பா ஆட்டிவைக்க இந்த பொம்மை பாப்பா அதற்கேற்ப ஆடுகிறது. பாப்பாவிற்கும் பொம்மை பாப்பாவுக்கு இடையில் நடப்பவை யாவும் உண்மை. பொம்மையின் இயக்கங்கள் யாவும் எவ்வகையிலும் பொம்மையினுடையவை அல்ல என்பதும் உண்மை. பொம்மை தூங்கியது முதல் – விழித்தது – உண்டது – முத்தமிட்டது வரை யாவும் உண்மை நிகழ்வேயானாலும் பொய்மையே. ஏனெனில் தன்னிச்சையாய் சுய ஆற்றலோடு – குருதியும், சதையும், எலும்புமாய் பொம்மை எதையும் செய்ய வில்லை இருப்பினும், இந்த எல்லாப் பொய்மைகளையும் மெய்மையாக்கியது பாப்பா பொம்மை மீது கொண்ட உறவும். உரிமையும், உணரவும், இயக்கங்களும். அன்றொருநாள், கடையில், அலமாரித்தட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தபோது இந்த பொம்மைக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை – அந்தஸ்து இல்லை – ஆனால் இன்றோ பாப்பாவின் இந்தப் பெரிய வீட்டுக்குள் அந்த பொம்மை எங்கு வேண்டுமானாலும் போய்வரலாம். பாப்பாவுடன் காரில், ரயிலில், படகில், விமானத்தில் என எதிலும் எங்கும் பயணிக்கும் தகுதியும், அரசு அனுமதியும் கூட அதற்குக் கிடைக்கிறது. ஒன்றுமில்லாத பொம்மைக்கு இத்தனை உயர்வும் தகுதியும் வந்தது எவ்வாறு என்று பார்த்தால், “என் பாப்பாவுக்கு” என்று “பெற்றோரால் அது கடையிலிருந்து வாங்கப்பட்டது – பாப்பாவிற்குக்குக் கொடுக்கப்பட்டது. நெஜப் பாப்பா, பொம்மைப் பாப்பாவை “என் பாப்பா!” என்று அங்கீகரித்தது – மடமடவென்று அதற்கு – அதிகாரம், கவுரவம், அந்தஸ்து, இயக்கங்கள் கிடைக்கின்றன. கைவாட்டாய் எங்கேயோ வைத்துவிட்டதால், கொஞ்ச நேரம் அந்த பொம்மை காணோம் என்றால் வீடு முழுக்க சல்லடை போட்டுத் தேடுவார்கள் – அத்தனை மவுசு அதற்கு.

    இக்காட்சியில், “என் பாப்பா” என்கிற அங்கீகாரத்தை இரு தளங்களில் காண்கிறோம். பெற்றோர்-பாப்பா எனும் முதல் நிலை பாப்பா-பொம்மை எனும் இரண்டாம் நிலை. நிலைகள் வேறானாலும் “ownership” என்று ஆங்கிலத்தில் சொல்வதான சொத்துரிமை தான் இங்கு இரு தளங்களிலும் செயல்படுகிறது. குழந்தையைப் பெற்றோர்கள் உரிமைப் பொருளாகக் கொள்வது இந்த இரண்டு தளங்களிலும் தெரிகிறது. இதுதவறா என்றால் “இல்லை”. இது மிகச்ச்சரியான அணுகுமுறை. அது போன்றே குழந்தைகளும் பெற்றோரை உரிமைப் பொருளாகவே கொள்கின்றனர். உரிமைப் பொருள் என்கிற நிலைக்குப் பல பரிமாணங்கள் உண்டு. சட்ட ரீதியாகப் பார்த்தால் பொருள்-சொத்துப் பகிர்வு போன்ற எண்ண அளவீடுகளுக்கு இட்டுச்செல்லும். மனோமய நோக்கில் பார்த்தால், உரிமைப் பொருள் என்பது உறவுப் பாலத்தைக் குறிக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று உறவு கொள்ளும்போது மட்டுமே வாழ்வின் கதவுகள் திறக்கின்றன. உறவு-உரிமை இரண்டு தான் இறைமையின் பண்புகளுமாகும். திருக்குறுந்தொகையில் ஈசனை அடையும் முறையை அப்பர் கூறுவார்:

    உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
    முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே!

    மோர் கடைந்து வெண்ணை எடுக்கும் தன்மையது இறைமை என்பதில் குழந்தைகளும் புரிந்து கொள்ளும் எளிய எடுத்துக்காட்டு உள்ளது. உறவும் உணர்வும் எத்தனை முக்கியமமானவை என்பதை விளக்கவும் வேண்டுமோ? மத்து உறவாம் – கயிறு உணர்வாம். அடடா எத்தனை எளிமை. மத்தின் மீது கயிறு உரிமையோடு நகரும் பட்சத்தில் தானே உணர்வு பிறக்கும். கயிறு என் மீது நகரக்கூடாதென்று மத்து மறுத்தால் கடைவதெப்போது? வெண்ணை கிடைப்பதெப்போது? எனவே தான் மனிதர்களு க்குள்ளே உறவு பிறக்கும் போது உரிமையும் பிறக்கின்றது. இது தவிர்க்க இயலாதது.

    குழந்தைக்கு மனோமயம் என்பது தாயும் தந்தையுமான அம்மையப்பனோடு அது கொள்ளும் உறவே. கலப்படம் இல்லாத முழு முதல் உறவு இது. ஆனால், சில குழந்தைகளுக்கு நம் நாட்டிலும், பற்பல குழந்தைகளுக்கு அமெரிக்க நாட்டிலும் குழந்தை-அம்மையப்ப உறவுப் பாலம் முறையாய் உருவாவதில்லை அல்லது முளையிலேயே அறுந்து போயிருக்கும் அல்லது அறுக்கப் பட்டிருக்கும். இதற்கு இயற்கைக் காரணங்களும் இருக்கலாம் அல்லது செயற்கைக் காரணங்களும் இருக்கலாம். எவ்வாறிருப்பினும், தன்னைப்பெற்ற அம்மையும் தந்தையும் இன்றி வாழ்வின் முதல் படியில் ஏறுவது என்பது சிரமமான செயல். வாழ்வின் தலையாய பிடிப்பான அம்மையப்ப உறவு கிட்டா மகவுகளின் மனோமயத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். திரைக்குப் பின்னே அம்மையப்ப உறவு கொண்டிருவர் உருவாக்கிய மகவு தன்னை உருவாக்கிய அவரிருவரையும் நேரில் காண இயலாத சூழல் அல்லது அவருடன் வாழ இயலாத சூழல் அக்குழந்தையின் மனோமய அலைகளை எவ்வாறெல்லாம் விசைப் படுத்தும் என்று கொஞ்சம் கற்பனையை ஒட்டிப் பாருங்கள். பிறப்பித்த பெற்றோரின்றி வளருவது என்பது எளிமையான விஷயமல்லவே. அவதாரப் புருஷர்கள் இவ்வித அனுபவத்துக்கு விதிவிலக்கல்லர். ஏனெனில் அவர்களும் சர்வசாதாரணக் குழந்தைகளாகவன்றோ பிறக்கிறார்கள் – வளருகிறார்கள். இவ்வகையில் ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் கடந்து வந்திருக்கிற குழந்தைப் பருவம் ஒப்பிடத் தக்கதாகவும் மிக முக்கியமான ஒற்றுமைகளை வெளிக்கொணருவதாயும் இருக்கின்றது. நான் யார் எனும் இவர்களது விசாரத்திலே இவர்களது குழந்தைப் பருவம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பேசுவோம்.

    Share
  • எழுவகைப் பெண்கள்: 5

     உடம்பெனும் தராசில் இது ஒரு அக்கினிப் பரிட்சை

    அவ்வை மகள்

    “நீங்களே சொல்லுங்கள் இந்தக் காவலர் வேலை, பெண்ணுக்கு எத்தனை நாள் தாங்கும்?” என்று எதிர் கேள்வி கேட்ட அந்தப் பெண் காவல் அதிகாரியைப் பார்த்து, நான் சொன்னேன்: “வேறு மாதிரியல்லவா கேள்விப் பட்டிருக்கிறோம் – “காவல் துறையில் ஆணாதிக்கம் – பாலியல் பலாத்காரம் – பெண்ணுக்கு அங்கீகாரம் இல்லை –” நான் சொல்லி முடிக்கும் முன் குறுக்கிட்டார்.

    “இவையெல்லாம் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவை இல்லாத இடம் ஒன்றைச் சொல்லுங்கள் பார்க்கலாம்! நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒவ்வொவொரு பெண்ணும் ஒவ்வொவொரு பணியிடத்திலும் சந்திக்கும் பிரச்சனை அல்லவா அது? சில இடங்களிலே அது அதிகமாய் இருக்கும் – சில இடங்களிலே அது குறைவாய் இருக்கும். பார்க்கப்போனால் சில பணிகள் பெண்ணாதிக்கத்திலேயே இருக்கின்றன. அங்குள்ள ஆண்களும் சில கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்க நேரிடலாமே! அங்கே பாலியல் பலாத்காரம் இல்லாமல் இருக்கும் – உண்மை. ஆனாலும் ஒரு சில தகவமைப்புச் அசவுகரியங்கள் ஆணுக்கு அங்கே ஏற்படுவது இயல்பேதான் அல்லவா?”

    தொடர்கிறார்-

    “ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் – இந்நாட்டில் – பாலியல் பலாத்காரம் என்பது மிகப்பபெறிய குற்றம் – அது கடுமையான தண்டனைக்குரியது – அதனைச் செய்ப்பவர் வாழ் நாள் பரியந்தம் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். அது சரியாக எடுத்துச் சொல்லப்படும்போது கண்டிப்பாக அது மேலே செல்கிறது; இங்கே பணியிடப் பாலியல் பலாத்காரத்துக்காக பல பேர் தன்டைனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அதை மற்றப் பணியிட அசவுகரியங்களோடு இங்கு இணைக்காதீர்கள் – அது தனியான விஷயம்! அதைத் தனியே விரிவாகப் பேசவேண்டும்! எல்லாப் பணிகளிலும் அது நீக்கமற நிறைந்திருக்கிறது வெவ்வேறு வடிவங்களில்!”

    “ஆனால் காவல் துறைப்பணியில் முரண்படுவது பெண்ணின் உடம்பும் உள்ளமும் – இப்பணிக்குப் பொருந்தாத இரண்டையும் வைத்துக்கொண்டு அல்லாடுவது அத்தனை சுலபமான செயல் அல்ல. ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்கு இந்தப் பணி பொருந்தலாம். ஆனால் எல்லோரையும் அதில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்பதும் அதிலே அவர்களை ஆசை காட்டி வலுக்கட்டாயமாக இறங்கச் சொல்வதும் மிகப்பெரிய குற்றம் என்பேன்.” என்றார்.

    “பெண்கள் எல்லாத்துறையிலும் இருக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா நாடுகளிலும் இருக்கிறதே – ஆண்-பெண் சம உரிமை இன்று மிகவும் வலுவான விஷயம் இல்லையா!” என்றேன்.

    “சமத்துவம்? தீயணைப்புப் பணியில் – உச்சிமேல் நின்று கட்டிடம் கட்டும் கட்டிடப் பணியில், சுரங்கப் பணியில், கடலில் எண்ணைக்கிணற்றைத் தோண்டுவதில் – எத்தனைப் பெண்கள் இருக்கிறார்கள் என்று போய் முதலில் பார்த்து விட்டு வந்து பேசுங்கள்!” ஆண்-பெண் சமம் என்பது எங்கே இருக்கிறது என்று “ உடலில் சமத்துவம் இல்லாதபோது – இது என்ன பேச்சு?” என்றார்.

    கடினமான பணியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அடுத்த தலைமுறையை ஊக்குவித்து இப்பணிக்கு சிபாரிசு செய்தால் அடுத்த தலைமுறை இப்பணியை சிறப்புற வளர்க்கும் – அதை நீங்கள் செய்யலாமே!” என்றேன்.

    பளீரென வாய் விட்டுச் சிரித்தார்!

    “ஒரு பெற்றோர் என்ற முறையில் என் மகளை இவ்வேலைக்குச் செல்ல நான் எந்நாளும் அனுமதிக்க மாட்டேன்.” “பெண் என்றால் அவளுக்கு சமாதானமும் இசைவும் முக்கியம். என் மகள் இவ்வேலைக்கு வந்தால் அவள் இவ்விரண்டையும் நிச்சயமாய் இழப்பாள்!” ஏற்கனவே இப்பணியில் இருப்பதால் அவளை நான் சரிவர கவனிப்பது கூட இல்லை!” “அது மட்டுமல்ல பெண்ணென்றால் பதவி உயர்வுக்கு இங்கே காவல் துறையில் படாத பாடு படவேண்டும்! – “is it that worth for a female?” பெண்ணுக்குப் பணியில் அததனைப் போராட்டம் தகுமா?” என்றவர் தொடர்கிறார்.

    “அடுத்த தலைமுறை பெண்களுக்குப் போகாத பணியாகக் காவல் பணி மாறிவருகிறது என்றால் இது பெண்களுக்கு ஏற்ற வேலை இல்லை என்று என்னால் ஆணித்தரமாய்க் கூறமுடியும்!”

    “என்னைப் பொருத்தவரையில் பெண் எந்த பணியைச் செய்தாலும் அதில் அப்பெண்ணுக்கு உடம்பின் ஒப்புதல் இருக்க வேண்டும். இவ்வேலையை இவளால் செய்யமுடியுமா – இவளுக்கு இந்த வேலையால் பாதிப்பு நிகழுமா என்பதை நாம் முதலில் அனுமானித்தாக வேண்டும். மற்றவை எல்லாம் அப்புறமே!”

    “நீங்கள் என்னதான் முயற்சி பண்ணினாலும் ஒரு ஆணைப்போல் இங்கு நீங்கள் பிரகாசிக்க முடியாது – இது அவன் பணி – அவள் பணி அல்ல!” போய்ப் பாருங்கள் பென்னி ஹாரிங்டனின் கதையை!” – “கேட்டுக் கொள்ளுங்கள்! மொத்தத்தில், இந்த 110 ஆண்டுகளில் ஏதோ ஓர் சில பேர் இங்கே வெற்றி பெற்றிருக்க முடியும். அது பெண்ணினமே வெற்றி பெற்று விட்டதாகக் கொள்ளும் பெருமிதம் அல்ல!”

    பேசினார் – முடித்தார் – “எனக்கு வேலை இருக்கிறது – நான் செல்ல வேண்டும்” என்று புறப்பட்டார். நான் சற்று நேரம் அசையாது அங்கேயே நின்றேன். அவள் பேசிய ஒவ்வொன்றும் மாணிக்க வார்த்தைகள்! அனுபவத்தின் வாக்குமூலம்! 110 ஆண்டுகள் இந்த நாடு செய்த பரிசோதனையின் முத்தாய்ப்பான கண்டுபிடிப்பு இது. பெண்ணைப் பற்றி பெண்னே பேசின சுய போதனை.

    நினைத்துப் பார்த்தேன் பாரதியை – பாரதியை எடுத்துக்காட்டி எடுத்துக் காட்டி – விளாசிப் பேசும் நம்மவர் துறு துறுப்பை.

    அமெரிக்கக் காவல் துறையில் பெண்கள் வளர்ந்து வந்த கடுமையான பாதையைத் திரும்பிப்பார்த்தேன். அமெரிக்காவின் முதல் பெண் காவல் துறைத் தலைமையான பென்னி ஹாரிங்டன் அசாதாரணப் பெண். உலகத்தில் காவல் பெண்கள் எனும் வரலாற்றில் பென்னி ஹாரிங்டனுக்கு என்றும் நிலைத்த சிரஞ்சிவியான இடம் உண்டு. ஆனால் தலைமையில் அமர்ந்த இரண்டே ஆண்டுகளில் பதவி விலகினார் – இல்லை! நிர்ப்பந்தத்தின் பேரில் பதவி விலக வைக்கப்பட்டார் என்றே சரித்திரம் காட்டுகிறது.. மீண்டும் அவர் காவல் துறையினில் நுழையவே இல்லை – நுழையவும் முடிய வில்லை. காவல்துறையின் வெளிப்புற உபரிப்பணிகளில் தான் அவரால் வேலை பார்க்க முடிந்தது.

    காவல் துறையில் மற்றும் தீயணைப்புத் துறையில் பெண்களுக்குள்ள பிர்ச்சனைகளை, .குறிப்பாக, பாலியல் பிரச்சினைகளை இவர் ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாது அவற்றை அணுகும் – நிவர்த்திக்கும் வழிமுறைகளையும் போதித்தவராகிறார். பெண் காவலர்களைப் பணியமர்த்தவும் அவர்களை காவல் பணியில் தக்க வைக்கவும் அவர் வழிமுறைகளை நிறுவி இருக்கிறார்.

    மிகப் பிரசித்தி பெற்ற மூன்று நூல்களை எழுதி இருக்கிறார். பெண்ணியக் குழுமங்களோடு மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்து பெண்களுக்காக மிகப்பெரிய அளவில் கூக்குரல் எழுப்பி இருக்கிறார். காவல் துறைப்பெண்களுக்கான தேசிய வாரியம் நிறுவி இருக்கிறார். இவரது மூசசும் நாடியும் காவல்துறையில் பெண்களின் முன்னேற்றம்” என்கிற ஒன்றையே தான் ஒலித்தவண்ணம் இருந்தன. இரண்டே ஆண்டுகள் தாம் அவர் காவல் தலைமையில் இருந்தாலும், காவல் துறையில் அவர் செய்த மறுமலர்ச்சிகள் முத்தாய்ப்பானவை. எந்த ஒரு ஆண் தலைமையும் சிந்தித்துப் பார்க்கவியலாத புதுமுனைப்பான திருத்தங்களைக் காவல் பணியின் நடைமுறையில் கொண்டு வந்தார். சொந்த கணவனே ஆனாலும் (அதுவும் அவனும் ஒரு காவலரே என்ற போதிலும் ) சட்டத்தின் முன் அவனும் ஒன்றே என பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டவர். அவனைப் பதவியிலிருந்து விலக்கியும் இருக்கிறார்.

    கறுப்பினத்தவர் மீதும், ஏழை எளியோர் மீதும். பெண்கள் – குழந்தைகள் மீதும் காவலர்கள் காட்டும் வன்முறையைச் சாடி அதனைத்தடுத்தார். வெள்ளை இனப் பெண்ணுக்கு எத்தனை நெருக்கடிகள் – இன – சமூக அழுத்தங்கள் – அந்தஸ்து இத்யாதிகள் இருக்கும் என்பதை இங்கிருப்பவர்க்ள நேரடியாக உணரமுடியும். ஆனால் வெள்ளை இனமாய் இருந்த போதும், வெள்ளை இனத்துக்கு சார்பு தராத துணிச்சல் பென்னி ஹாரிங்டனிடம் இருந்தது. அநியாயமான முறையில் ஒரு கறுப்பினக் காவல் அதிகாரி வெள்ளையினக் காவலரால் கழுத்து நெரித்து மூச்சடைக்க வைத்து கொல்லப்படுகிறார். அந்த சம்பவத்தில் அந்த வெள்ளை அதிகாரிகளை உடனடியாகப் பணி நீக்கம் செய்கிறார் பென்னி. ஆனால் கொல்லப்பட்ட கறுப்பின அதிகாரியின் அடக்க நாளன்று வெள்ளை காவலர்கள் “அவனை நெரிக்காதே! எரித்து விடு!” என்ற வாசகம் பதித்த “டி ஷர்ட்” அணிந்து கொண்டாடுகிறார்கள். இந்தக் கொடுமையான செயலுக்கு காரணமாயிருந்த அந்த இரு கொலை கார வெள்ளை அதிகாரிகளையும் சுட உத்தரவிடுகிறாள் பென்னி. ஆனால் வெள்ளை வலையின் சூழ்ச்சியும் வலிமையும் அவளது பணிக்கு யமனாக அமைகின்றன. பதவி நீக்கம் செய்யப்பட்ட அவளது கணவனைக் கைக்குள் போட்டுக்கொண்டு வெள்ளை சூழ்ச்சி வலுக்கிறது.

    தனது 22 வயதில் (1964ல்) காவல் பணியில் காவலராகப் பணியில் சேர்ந்தவர் பென்னி. 22 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் தலைமைக்கு அமர்த்தப் படுகிறார். எனவே காவல் பணியில் பழுத்த அனுபவம் கொண்ட நிலையில் மட்டுமே காவல் தலைமைக்கு பென்னி வந்தார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

    சூழ்ச்சியின் விளைவு நிகழ்ந்தது பணி நீக்கம் மட்டுமல்ல – கணவனையும் கையயோடு விவாகரத்து செய்த்துவிட்டு தான் வெளியேறுகிறார் காவல் துறையை விட்டு. கலிபோர்னியாவின் மாரோ பே நகரில் குடியேறி அங்கு வாசம் செய்து வருகிறார். இன்று அவருக்கு 74 வயது. கடை வைத்து வியாபாரம் பண்ணுகிறார். படிக ஜெபமாலைகள் விற்கிறார் – தியானம் மற்றும் ரெய்கி கற்பிக்கிறார். தெய்வீக – தியான விஷயங்களும் வாடிக்கையாளர்களுடன் சம்பாஷிப்பதுமாக, அவரது வாழ்வின் கடைசி கட்டம் போய்க்கொண்டு இருக்கிறது.

    இவரது கடைக்கு வருபவர்கள் கேட்கும் காவல் துறைப் பணி தொடர்பான கேள்விகளுக்கெல்லாம் சலிக்காமல் பதில் சொல்கிறார். காவல் துறையில், காவல் பணியில் தனக்கு ஏற்பட்ட ரணங்களை ஆற்றுமுகமாக ஜெபத்தையும், தியானத்தையும், ரெய்கியையும் தான் அப்போதே மேற்கொண்டிருந்ததாகக் கூறுகிறர். பணியிடப் பிரச்சனைகள் பெண்களை மிகவும் பாதிக்கும் அதுவும் உடம்புக்கும் உள்ளத்துக்கும் ஒத்துவராத பணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல எனபதை இத்தனைப் போராட்டத்த்திற்குப் பிறகு, தான் மனபூர்வமாய் உணருவதாகக் கூறுகிறார். “பெண்ணென்றால் அமைதி வேண்டும் அவளுக்கு. அவளுடைய உடற் கூறு – அவளுடைய உள்ளக் கூறு இவை இரண்டும் ஆணிலிருந்து வித்தியாசமானவை – அந்தத் தெளிவை நான் பட்டு நொந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று பெண்களின் உன்னதமும் மென்மையும் எத்தனை அற்புதமானவை என்பதை என்னைப்போல் ரசிக்க எத்தனைப் பேரால் முடியும்?” என்கிறார்.

    உடம்பெனும் தராசில் நடக்கும் அக்கினிப் பரிட்சையில் பெண்ணின் உள்ளமும் வேகும் என்று ஹாரிங்டன் சொலவதை எவரே மறுப்பார்?

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 3

    அவ்வை மகள்

    சமூகப் பிரக்ஞையும் சுயப் பிரக்ஞையும்

    இறையியல் சிந்தனைகள்

    அவதாரப் புருஷர்களிடம் சமூகப் பிரக்ஞை நிறைந்த இறைவழி மார்க்க நோக்கு இருந்தது என்றோம்.

    இதை நாம் அறியும் இத்தருணம், சமூகம் என்றால் என்ன என்ற கேள்வி நம்முள் முதலில் எழுகின்றது. சமூகம் என்பதை ஒழுங்கமைப்புடைய மக்கள் தொகுதி என்பர். கூட்டுப் பண்பும், ஒருமித்த குணாதிசயங்களும், பொதுப்படையான பழக்கவழக்கங்களும், ஒன்றேயான அடையாளங்களும், ஒத்ததான பரஸ்பர பரிபாஷைகளும் கொண்ட ஒரு குழுமித்த மனிதசார் அமைப்பை சமூகம் என்கிறோம்.

    அவதாரப் புருஷர்கள் இப்படிப்பட்ட ஒரு சமூகத்திலிருக்கிற சாதாரண – ஒரு பெண்ணின் வயிற்றிலே தான் உருவாகிறார்கள். அந்த சமுதாயத்தின் அடையாளங்களோடு அந்த சமூகத்தின் சாயலாகத்தான் பிறப்பெடுக்கிறார்கள். அவர்களுக்குப் பெயர், விலாசம் எல்லாம் உண்டு. எங்கு எந்தப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார்கள என்பதும் கூட எவருக்கும் தெரியும்.

    ஆனால் திடீரென ஒரு நாள் அவர்கள் வேறானவர்கள் வித்தியாசமானவர்கள் என்று புலப்படலாகிறது. இது எப்போது நடக்கிறது எவ்வாறு நடக்கிறது என்பதிலே சில வித்தியாசங்கள் இருந்தாலும், மிகப்பெரும்பாலும் இளம்பிராயத்திலேயே அவதாரப் புருஷர்களின் தீட்சண்யம் சிறு கீற்றாகவேனும் வெளிப்பட்டிருக்கும். அந்த வெளிப்பாடு பெரும்பாலும் அத்தருணத்தில் பிறருக்கு பெரிதாய்ப் படாது, அல்லது விகற்பமாய் படும். ஆனால், பின்னாளில், அவதாரப் புருஷர்கள் தம் பூரண ஆற்றலை வெளிப்படுத்துகிற போதோ அல்லது அதற்குப் பிறகோ அவர்களின் அந்த தீட்சணியமான இளம்பிராய நினைவலைகள் எவருக்கோ தோன்றி அவை நினைவுகூறப்படும் – அது வேறு எவராலோ பதிவு செய்யப்பட்டு வரலாறாகும்.

    இதை நான் இங்கு குறிப்பிடுவதன் காரணம் இறைபால் நாட்டம் என்பது ஒரு துளியேனும் உடன்பிறப்பாய் உள்ளினுள்ளே இயைந்த ஒரு கூறாக இருக்குமாறு தான் அவதாரப் புருஷர்கள் படைத்தனுப்பப்படுகிறார்கள் என்பதால் தான். அதுமட்டுமல்ல, உண்மையில், அவதாரப் புருஷர்களின் இறைநிலைக் கூறு எனும் கரு எங்கு பிறக்கிறது எவ்வாறு பிறக்கிறது என்று பார்த்தால் அது மிகச் சர்வசாதாரணமான அன்றாட நடவடிக்கைகளில் தான்.

    இங்கு ஜான் ஹென்றி நியுமனின் வாழ்க்கைக் குறிப்புகளைக் காண்பது நன்று. நியூமன்(1801-1890) இங்கிலாந்தின் மத வரலாற்றில், கத்தோலிக்க மத வளர்ச்சியில் மிகக் குறிப்படத் தக்க அவதாரப் புருஷர். சிறுவயதில், ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த போது அண்ணாந்து பார்த்தவாக்கில் ஒரு ஒற்றை மேகத்திட்டும் அதிலிருந்து புறப்பட்டிருந்த கிளைகளும், அவருக்குக் கடவுளின் ஆசிர்வாதமாய்ப் பட்டிருக்கிறது. இன்னொரு சமயம், சிறுவனாய் இருந்தபோது, காலையில், உறக்கத்திலிருந்து கண்விழிக்கும் நேரம் எங்கோ வயலில் கதிரறுக்கும் அரிவாளின் நாதம் இறைமொழியாய் அவருக்கு ஒலித்திருக்கிறது. நியூமன் காட்டுவது இறை என்பது மிக எளிமையான விஷயம் என்பதே. இதுபோன்று, இறை என்கிற ஒன்று இருக்கிறது எனும் உணர்வை அவதாரப்புருஷர்கள் உணர்ந்த விதத்தை – எல்லா மதங்களிலும் மகாமனுஷ்யர்களின் வாழ்வில் நாம் கண்ணுற முடிகிறது. இயேசுநாதர், நபிகள் நாயகம், சங்கரர், ரமணர், பட்டினத்தார், வள்ளலார், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என நாம் பலபேரை இவ்வாறு உதாரணம் காட்டமுடியும். இறைவனை மனிதனாகவும், இயற்கையாகவும், ஒளியாகவும் பார்க்கின்ற எளிய சாமான்யத்தை இவர்கள் உணர்த்திப் போயிருக்கிறார்கள்.

    இறை எனும் உணர்வு முதன்முதலில், இவ்வாறு எளிமையாய் அவர்களுக்குப் புலப்பட்டதெனில், பின்னாளில் அவர்கள் தங்களுக்கு உள்ளே செரிந்திருக்கிற இறை அருள் நிலையை வெகு வெளிப்படையாய் பிறருக்கு உணர்த்துவதும் கூட சர்வசாதாரணமான அன்றாட நடவடிக்கைகளில் தான். நீரைப் பெருக்கியும் உணவைப் பெருக்கியும், தீயை அடக்கியும், வெள்ளத்தை அடக்கியும், நோயைத் தணித்தும், சராசரி மனித நிகழ்வுகளில் தன் சமூகத்தில் உள்ள மக்களுக்கு நேரடி நிவாரணம் அளித்திருக்கிற மிக எளிமையான நிகழ்வுகளை எல்லா மதங்களிலும் எல்லா சமயங்களிலும் உள்ள மகாமனுஷ்யர்களிடமும் காண்கிறோம்.

    இறை தேடல். இறை பணி, இறை ஒழுக்கம் என எவ்வாறு கூறினாலும், இறைமை, மதம், சமயம் எனப் பிறவாறு கூறினாலும், மக்கட் சேவையே மகேசன் சேவை என்பதை எல்லா அவதாரப் புருஷர்களும் உறுதியாய்க் காட்டிச் சென்றிருக்கிறார்கள். சங்கரர் காலம் தொடங்கி, இந்த நேரடி மானுட சேவை எனும் இறையியல் சிந்தனை, காலப்போக்கில் சற்றே முன்னேற்ற மாற்றம் கண்டது எனலாம். மடாலயங்கள் மனித சேவைக்கே என்கிற வகையில் அவற்றின் கதவுகள் திறக்கப்பட்டன. மதம் என்பதை “உறுத்தும்படியாய்” முன்னிறுத்தாமல் மனிதவளத்தைத் தரத்தில் உயர்த்தும்படியான நோக்கு வளர்ந்தது. இவ்வகையில், “அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்” என்கிற திரு வாசகத்தின் சாட்சியாய் சமரச சன்மார்க்கம் எனும் உருவற்ற ஒளியாம் இறைவனை முந்துறுத்தி பொதுமைப் போக்கில் மதமெனும் மார்க்கத்தை உண்டாக்கிய பெருமை வள்ளலாரைச் சேரும். அவருக்கடுத்து ரமணரும், கூட இந்தப் பொதுமை மதநோக்கை ஆதரித்தார் எனலாம். நம்முடன் வாழ்ந்து போந்திருக்கிற தவத்திரு குன்றக்குடி அடிகளார் மதமும் அறிவியலும் ஒன்றே எனக்கொண்டு மக்கட் சேவையையும் மகேசன் சேவையையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதே போல் இறையியலையும் அறிவியலையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகப் பார்த்தவர். இறை-அறிவியல் எனும் நவீன மார்க்கம் அவருடையது எனலாம்- இதன் ஆரம்பப் புள்ளி வள்ளலாரிடமே என்பதை நம்மால் காணமுடிகிறது. குன்றக்குடி அடிகளார் விவேகானந்தரின் பாணியில் வள்ளலாரைத் தழுவியதாகவும் கூட சிலர் கூறுவார்.

    Phenomenology எனப்படும் நிகழ்வியல், மருத்துவம், ஆன்மீகம், உளவியல், ஆகிய மூன்று துறைகளுக்குமே உரித்தான ஒரு முக்கியமான தத்துவப் பிரிவாகும். இப்பிரிவை வரையறை செய்கிறபோது இவ்வாறு சொல்லுவார்கள்: நிகழ்வியல் என்பது பிரக்ஞையின் வடிவத்தை ஒரு அனுபவமாக, பிரக்ஞை கொண்டவரே தன் வாய்வழி முதற் கூற்றாகக் கூறுவது (Phenomenology is the study of structures of consciousness as experienced from the first-person point of view) என்று. நிகழ்வியலில் எட்மண்ட் ஹசர்ல் மிக முக்கியமானவர். இவரை நிகழ்வியலின் தந்தை என்பார்கள். இவர் வாழ்ந்த காலம் 1859-1938. வாழ்வுலகம் (life-world) எனும் சித்தாந்தத்தை உருவாக்கியவர் இவர். “விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்” என்கிற நம் செந்தமிழ் வாசகத்தை ஒரு தத்துவமாக்கிப் போயிருக்கிற பெருமை இவரைச் சாரும். ஹசர்ல் என்ன கூறுகிறார் என்றால் – பலபகுதிகளை இணைத்து ஒன்றை உருவாக்கினீர்கள் என்றால் அந்த முழுது (whole) பகுதிகளின் கூட்டல் அல்ல அதைவிட மிகுதியானது என்பதே. வாழ்வுலகம் என்பது நிகழ்வுகளின் அடுக்கு. வாழ்வுலகம் என்பது வாழ்வல்ல உலகமும் அல்ல. இரண்டின் கூட்டலும் அல்ல – என்கிறார் ஹசர்ல். இதை ஏதோ நகைச்சுவைத் துணுக்காகப் பார்க்காமல் – எள்ளி நகையாடாமல் கொஞ்சம் நிதானித்துப் பார்ப்பது நல்லது. ஹசர்ல் சொல்வதைக் கூர்ந்து கவனியுங்கள்: “நிகழ்வு என்பது பொருட்களும் அனுபவங்களும் சேர்ந்தது – நிகழ்வைப் பொருளாகப் பார்த்தால் அனுபவம் மறையும் – அனுபவமாகப் பார்த்தால் பொருள் மறையும். “

    பொருள்-அனுபவம் என்கிற இரண்டையும் வெறுமனே கூட்டாமல் ஒருமித்துக் காண்போமேயானால் நாம் காணக்கூடியது பொருள் அல்ல – அனுபவும் அல்ல – பரம்பொருள் எனும் இறைமை விழுது. நிகழ்வுகளை, தனிமனிதர்கள் தமது பார்வையிலே எவ்வாறு காண்கிறார்கள் என்பது தான் அவர்களது வாழ்வுலகு. எவர் பொருளைப் பார்க்கிறார், எவர் அனுபவத்தைப் பார்க்கிறார், எவர் இறை விழுதைப் பார்க்கிறார் என்பதிலே தான் தனிமனிதர்களின் தராதரம் அடங்கியிருக்கிறது.

    இந்தத் தனி மனிதர்களில், இறைதேடல் கூறுடன் பிறப்பிக்கப்பட்டிருப்பவர்கள், தன்னைச் சுற்றிலும் நிகழும் நிகழ்வுகளை, பொருள்-அனுபவம் என்ற இருகூறுகளாய்ப் பிரித்து பின்னப்படுத்தாமல் இரண்டையும் ஒருமித்து ஒர கோணத்தில், ஒரே அலைவரிசையில், ஒரே க்ஷணத்தில் காண்கிறார்கள். எனவே காணும் யாவிலும் பரம்பொருள் எனும் இறைவிழுதை அவர்கள் காண்கிறார்கள். எனவே அவர்களது வாழ்வுலகு, விஸ்தாரமாய் முளை விடுகிறது. தான் வெறும் ஆசாமியாக இல்லாமல் வேறு ஏதோ கடமை ஆற்றுமாறு ஜனித்திருப்பது புலப்படுகிறது. அந்த விவேகம் புலப்பட்ட அந்நொடி, “நான் யார்?” எனும் முதல் ஆன்ம விசாரத்தில் அவர்கள் இறங்குகிறார்கள். இந்த சுயப் பிரக்ஞை தான் அவர்களைச் சமுதாயம் எனும் தோப்பைச் செழுமைப் படுத்தும் சமூகப் பிரக்ஞைக்கு இட்டுச் செல்கிறது.

    இவ்வகையில் ஸ்டீவ் ஜாப்ஸின் நான் யார்?” எனும் முதல் ஆன்ம விசாரம் நம்மை நெகிழவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு மிகப்பெரிய நிகழ்வு.

    Share
  • எழுவகைப் பெண்கள்: 4. முரடாய்ப் போன இந்தப் பெண்ணின் உடம்பு

    அவ்வை மகள்

    ரேணுகா ராஜசேகரன்

    விளையாட்டுத் துறையைப்போலவே காவல் துறை மற்றும் இராணுவத்திலும் பெண்களின் பணிப்பங்களிப்பு பற்றிய கரிசனங்கள் உலகெங்கிலும் எழுந்தவாறு உள்ளன. ஆண்-பெண் சமான அங்கீகாரத்திற்குப் பெயர் போனது அமெரிக்காவின் காவல் துறை. பெண்கள், காவல் துறையில் நுழைந்த 110 ஆவது ஆண்டைக் கொண்டாடி முடித்திருக்கிறார்கள். இத்தருணத்தில் அமெரிக்கக் காவல் துறையில் பெண் காவலர்கள் (அதிகாரிகளையும் உள்ளடக்கி) 15 விழுக்காடு மட்டுமே! இத்தருணத்தில், இங்கு, அமெரிக்கப் பெண்காவலர்களின் வரலாற்றைக் கொஞ்சம் மீள்பார்வை செய்வது பொருத்தமாய் இருக்கும்.

    1908ல் முதல் காவல்துறைப் பெண் அதிகாரி பதவிப்பிரமாணம் எடுக்கிறார். 1912ல் முதல் பெண் ஷெரிப் பதவியேற்கிறார். 1968ல் இன்டியானாபோலிஸ் நகரில் முழுவதும் பெண்களாலான ரோந்துப்படை ஏற்படுத்தப்படுகின்றது . அதன் தலைமையும் அனைத்து அதிகாரிகளும் பெண்களே எனவும் ஆகிறது. 1970 களில் பெண்களைக் காவல்துறையில் கவர்ந்திழுக்கும்படியாய் எல்லாவகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பொது ஊடகங்களையும் கூடப் பயன்படுத்துகிறார்கள். தொலைக்காட்சியில் – சுவாரசியமான நாடகங்கள் கூட வருகின்றன. (விமன் போலிஸ் மற்றும் கெட் கிறிஸ்டி லவ் ஆகிய இரு நிகழ்ச்சிகளும் இவ்வகையில் பிரசித்தியானவை.) 1972ல் சிவில் உரிமைச் சட்டம் வெகு காட்டமாகத் தழுவப்படுகிறது. அதே ஆண்டில், ஜோயன் மிஸ்கோவும் சோசன் மலோனும் எப்.பி.ஐ அதிகாரிகளாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

    இத்தனை ஊக்கத்திற்கும் ஒரு முத்தாய்ப்பாக 1980ல் கண்ணாடிக்கூரை (glass ceiling) என்று சொல்வதான – பெண்ணுக்கு உள்ள பதவி உயர்வுத்தடையை உடைத்தெறிந்து காவல் துறையில் பெண்கள் அதிமேல் பதவிகளில் அமர்ந்தார்கள். 1985ல் போர்ட் லேண்ட் நகரில் போலிஸ் பியூரோவின் தலைமையில் அமர்ந்த பென்னி ஹாரிங்டன் மற்றும் 1994ல் காவல் தலைவராக அமர்ந்த முதல் கறுப்பினப் பெண்ணான அட்லாண்டாவின் பெவர்லி ஹார்வர்ட் ஆகியோர் காவல் பெண் முன்னோடிகளாக நின்று, பெண் குலத்தாருக்கு மிகப்பெரிய உந்து சக்தியாய் விளங்கினார்கள். பெண்கள் காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் பணிக்கு வருவதற்காக, பற்பல உத்வேக ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்தனர். பெண் காவலர் நலனுக்காகப் புதிய பணிசார் சட்டங்கள் மற்றும் புதிய சில அமைப்புக்களும் கூட உருவாகின. சட்டங்களை அமுல்படுத்துவதிலும் – பின்பற்றுவதிலும் – பின்பற்றாதோரைத்தண்டிப்பதிலும் – ஐக்கிய அமெரிக்கநாடு வெகு கறாரான நாடு என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எல்லாம் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையாகவே நடந்தன என்பதை நாம் கொஞ்சமாவது நம்பவேண்டும்.

    இவ்வமைப்புகளுக்கு, காவல் துறையில் பெண் காவலர்களுக்குள்ள பணிசார் பிரச்சனைகள் என்ன என்பதைக் கண்டறிவதும் – அவ்வாறானப் பிரச்சனைகளில் தவிக்கும் பெண் காவலர்களுக்கு, சார்பும் உதவியும் வழங்குவதும் குறிக்கோளானது. உயர்நிலை அதிகாரிகளாகப் பெண்கள் வரத் தடையாக நிற்கும் முட்டுக்கட்டைகள் எவை எனக் கண்டறியவும் இவ்வமைப்புகள் முனைந்தன .

    பட்டியலிட்டுப் பார்த்ததில் பிரமித்துப் போகிறோம்! காவல் துறையில் பெண்களை நுழைக்கவும் தக்கவைக்கவும் அமெரிக்கா செய்திருக்கிற முயற்சிகள் ஒன்றா இரண்டா? என்று!!

    ஆனால், ஐயகோ! இந்த பகீரத முயற்சிகள் ஒன்றும் பட்டென்று எந்தப் பலனையும் என்றும் அளிக்கவில்லையே! மாறாக அங்குலம் அங்குலம் என்னும் அளவாய் நத்தை வேகத்தில் தான் இங்கே பெண்காவலர்களின் எண்ணிக்கை கூடலானது. இன்று 15 விழுக்காடு பெண் காவலர்கள்’ எனும் அளவை எட்ட 110 ஆண்டுகளாக, இந்நாடு படாத பாடு பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இங்கு இனிமேலும் காவல் துறையில் பெண்களின் அளவை உயர்த்த முடியுமா என்றால் “இயலாது” என்றே பதில் வருகின்றது பெண் காவல் தலைமைகளிடமிருந்து. “இருக்கும் இந்த எண்ணிக்கையும் தக்கவைக்க இயலுமா என்பதே கூட சந்தேகம் தான்” எனும் கூடுதல் பதிலும் வழங்கப்படுகிறது. 1905-லேயே காவல் துறையில் காவல்பணிக்காகப் பெண்ணை நியமித்த ஒரு நாட்டில் – உலகின் தலைமை எனும்படியாக மனிதவளக் குறியீட்டில் முதலிடத்தை வகிக்கும் ஒருநாட்டில் இந்நிலையா எனப் பலர் அதிர்ச்சியடையவும் கூடும். அதுவும் அமெரிக்கப் பெண்கள் அசாத்தியமானவர்கள். ஆண் -பெண் எனும் பாகுபாட்டு உணர்வு கூட இல்லாதவர்கள். தைரியத்திற்கும், ஆஜானுபாகுவானத் தோற்றத்திற்கும், கம்பீரக்குரலுக்கும் பேர் போனவர்கள். இவர்கள் நடந்தால் தரையே நடுங்கும். “என்னால் முடியாதது எதுவும் இல்லை!” என இயல்பான இறுமாப்பு உடையவர்கள். இவர்களா காவல்துறைக்கு வந்து பணிசெய்ய யோசிப்பது அல்லது மறுப்பது எனச் சற்றே நடுக்கம் கொள்பவர்களும் கூட உண்டு.

    அமெரிக்கக் காவல் துறையில் உள்ள உண்மையான நிலைமை இப்படியென்றால் எங்கே பிசகு தட்டியது? – எங்கே திட்டக் கோளாறுகள் நிகழ்ந்தன? என்ன தவறு நிகழ்ந்தது? தொடர் கேள்விகள் எழுகின்றன.

    அதுவும் காவல் சீருடையுடன், துப்பாக்கி இத்யாதிகளுடன் – குண்டுதுளைக்காத கவசத்தையும் மாட்டிக்கொண்டு அமெரிக்கப் பெண் போலிஸ் அதிகாரிகள் விருட்டென அமர்க்களமாய் நடப்பதைப் பார்த்தால் ஒரு கணம் நம் குலையே நடுங்கும் – அடுத்த கணம், . இத்தனை தைரிய சாலியாய் நாம் இருக்கக் கூடாதா என நம்மை நாமே கொஞ்சம் இடித்துக் கொள்வோம்.

    அப்படிப்பட்ட, இந்தப் பலசாலிப் பெண்களுக்கு காவல் வேலையில் என்ன பிரச்சனை என்று கேட்கத் தோன்றியது.

    படக்கென்று பதில் வந்தது ஒரு பெண் காவல் அதிகாரியிடமிருந்து, “இன்றைய போலீசில் பெண்களுக்குள்ள பிரச்சனை இந்தப் பெண்ணின் உடம்பும் மனதும் தான்!” என்று.

    “போலிஸ் அதிகாரியாக நாடகங்களில் – சினிமாக்களில் நடிப்பது வேறு அன்றாடம் அதிகாரியாக வாழ்வது வேறு.” என்றார்.

    “கத்தியையும், எக்குக் குழாயையும், துப்பாக்கியையும், குண்டு ரவைகளையும், மிளகுக் குழம்பு புட்டியையும் – இடுப்பில் மாட்டிகொண்டு – இந்தப் பிசாசுக்கவசத்தையும் – பூட்ஸையும் சுமந்து செல்லும் வேலையை முரடாய்ப் போன இந்தப் பெண்ணின் உடம்பு ஒருவேளை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டாலும் கூட – அவள் மனது – அதை ஏற்றுக்கொள்ள வில்லையே!”

    “நான் ஒரு தாயல்லவா? இன்னொரு உயிரைக் கொல்ல என்னால் ஆகுமா? என் இடுப்பின் பாரத்தைப் போல் என் மனதிலும் தானே பாரம்? அதுவும் பெண்ணாயிருந்து கொண்டு நான் ஆண் என ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு நொடியும் – நிரூபிக்க வேண்டுமே! இது எத்தனைக் கொடுமை தெரியுமா?”

    கண்ணில் பனித்த நீரைத் துடைத்தபடி, “துப்பாக்கியைத் தூக்கும் ஒவ்வொரு நொடியும் என் தோளும் தொடையும் நடுங்குகின்றன!” நான் பெண்ணா – போலிஸ் அதிகாரியா என்பது இங்கே பெரிய கேள்வி!” – மார்பைத் தடவிக் காட்டுகிறார்.

    “நீங்களே சொல்லுங்கள் இந்த வேலை, பெண்ணுக்கு எத்தனை நாள் தாங்கும்?” எதிர் கேள்வி கேட்கிறார்.

    மேலும் பேசுவோம்!

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 2

    அவ்வைமகள்
    இரேணுகா இராசசேகரன்

     உணர்வும் அறிவும் இயைந்த தேடல் வெகு சுவாரசியமானது

    இறையியல் சிந்தனைகள்

    உணர்வும் அறிவும் இயைந்த தேடல் வெகு சுவாரசியமானது. மனிதனது உள்ளத்தில் ஐயம் ஒன்று முளைத்துவிட்டால் – அந்த ஐயத்தைத் தீர்த்தே ஆகவேண்டும் என்கிற வெறி பிறக்கும். மனம் எதிலும் தங்காது. தனக்குள் எழுந்துள்ள ஐயத்தைத் தீர்க்கும் சரியான விளக்கத்தைத் தேடி அது ஓடும். ஓடும் வழியில், ஒரு வேளை எவரேனும் விளக்கம் தந்தால், ஒரு வினாடி நின்று கவனிக்கும். தரப்பட்ட அந்த விளக்கம் விளங்கக் கூடியதாய் இருந்தால் அமர்ந்து யோசிக்கும். ஆனால், விளங்காத விளக்கத்தைக் காண நேரிட்டால், “தூ” என்று துப்பாத குறையாய் வெகுளும். ஆனால் சோர்ந்து போகாது! வேட்கை எண்ணம் மேலும் கூட ஓடும் – ஓடிக்கொண்டே இருக்கும். அன்றாட வாழ்விலோ பிற ஜனங்களுடன் வாழ்ந்தாலும் அவர்களிலிருந்து விலகி தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளும், சொல் மறக்கும் சுற்றம் மறக்கும், சூழல் மறக்கும். தொலைவும் பயணமும் பொருட்டில்லையெனும்படியாய் உலகின் எந்த மூலைக்கும் சென்று தன் ஐயத்தைத் தீர்த்துக்கொள்ள எத்தனிக்கும். இடம்பெயர்ந்தும், நாடு கடந்தும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்தும் கூட ஒடி ஓடித் தேடும் – விடாமல் தேடும்.

    ஆனால் இந்த ஒட்டத்தில், ஒன்றில் மட்டும் தெளிவு இருக்கும். அது என்னவென்றால் – வழக்கமான கல்விசார் அமைப்புக்களில் தனது ஐயத்திற்கு விடை கிடைக்காது என்பதே அது. எனவே, தேடல் வேட்கை, கல்விக்கூடங்களையும் ஆசிரியப்பெருந்தகைகளையும், முறைசார்க் கல்வியையும் அறவே புறக்கணிக்கும். விசாலப் பார்வையுடன் விரிந்து பரந்த நோக்கிலே சுற்றியுள்ள அனைத்தையும் அது காணும் – பரிசோதிக்கும். யதார்த்த சாகரங்களிலே குதித்து மூழ்கித்தேடும் முத்தான விளக்க முத்துக்கள் கிடைக்குமா என்று.

    ஸ்டீவ் ஜாப்ஸிற்கு உண்டாகிய இறை தேடல் உணர்வு இத்தகையதான வீரியமும் வலிவும் கொண்டதாய் இருந்தது. அவர் ஒரு அசாதாரண மனிதர். சாதாரண மனிதர்களுக்கும் அசாதாரண மனிதர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால் அது அவர்களுடைய தேடல் தீவிரம் தான்! சாதாரண மனிதர்கள் சாதாரணமாய்த் தேடுகிறார்கள் – அசாதாரண மனிதர்கள் அசாதாரணமாய்த் தேடுகிறார்கள்.

    மனம் எனும் தோணி பற்றி செல்லும் வாழ்க்கைக்கும் மதி எனும் தோணி பற்றி செல்லும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். முன்னதில் மனம் வாகனம் பின்னதில் அறிவு வாகனம். மனத்திற்கும் அறிவிற்கும் உள்ள வித்தியாசம் ஒரு படகிற்கும் கப்பலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப்போல.

    அறிவியல்-பொறியியல் ரீதியாகப்பார்த்தால் படகும் கப்பலும் நீர் வழி வாகனங்கள் எனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாகனங்கள் தாம். ஆனால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களோ ஏராளம். முன்னது நீரின் வெளிப்பரப்பில் மிதப்பது, நீரோட்டத்துடன் செல்வது – நீரோட்டத்தின் ஒவ்வொரு சலனத்திற்கும் இலக்காவது. குறைந்த தொலைவே பயணிக்க வல்லது. நீரோட்டம் கொஞ்சம் கடுமையாக ஆனாலும் பயணிக்க முடியாதது வெகுசுலபமாக விபத்துக்களைச் சந்திக்ககூடியது. இழுவைத்திறனும் கொள்திறனும் குறைவான அளவே உள்ளது. படகுப் பயணம் குறைத்த நாட்களே. படகில் பயணிப்போர்க்கு அதிக பாதுகாப்புகள் இல்லை -அதிக வசதிகள் இல்லை.

    கப்பலோ கடுமையான கட்டமைப்பும் உறுதியும் கொண்டது. நீரின் சலனங்கள் அதற்கு ஒரு தூசி மாதிரி, எந்த நீர் அதனைக் கவிழ்க்க வல்லதோ, அதையே தனக்கு ஒத்தாசை செய்யுமாறு தன்வசப்படுத்தி, நீரின் பரப்பில் வெறுமனே மிதக்காமல் நீருள் பாதி அமிழ்ந்து, நீரை ஆலிங்கனம் செய்வதைப்போல ஒரு வெளிப்புறக் காட்சியைக் கொடுத்துக்கொனடே நீரை இறுக்கிப் பாதத்தில் பிடித்துக்கொள்ளும் மகா சாமர்த்தியம் உள்ள வாகனம் கப்பல். முயலகனைக் காலில் அழுத்தியபடி மோனப் புன்னகையுடன் ஆரவாரம் ஏதுமின்றி வெகு யதார்த்தமாய் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் தட்சிணாமூர்த்தித் தத்துவத்தின் அறிவியல் எடுத்துக்காட்டு கப்பல் எனலாம்.

    பொம்மலாட்டம் ஆடாமல் நீரில் நிலையாய் நிற்பது கப்பலின் திறம். பிரம்மாண்ட இழுவைத்திறனுடன் கம்பீரமான மகா உறுதியுடன், அதிக தூரம், அதிக வேகம், அதிகக் கொள்திறன் – என்று அதிக ஆற்றலுடன் – அதிக விசையுடன் செல்லும் வாகனம் கப்பல். கப்பல் பயணத்தை நெறிப்படுத்த – கண்காணிக்க ஓராயிரம் கட்டுப்பாட்டுக் கருவிகள் – எனவே கப்பல், மோசமான வான் நிலையிலும் கடல் சீற்றத்திலும் கூட அச்சமின்றி செல்ல வல்லது. கப்பலில் பயணம் நீண்ட காலத்தன்மையுடையது. பயணம் நீண்டது தான், சேருமிடம் வெகு தொலைவு தான் என்றாலும் கப்பல் பிரயாணத்தில் விபத்துக்களோ மிகக்குறைவு. ஒன்றிரண்டு பேர்மட்டுமே அல்லாமல் பல்லாயிரம் பேரைப் பாதுகாப்பாய் கடலைக் கடக்க வைக்கும் வல்லமை உடையது கப்பல்.

    இது நிற்க.

    சரி, வாழ்வெனும் கடல் பயணத்தில், மனம் எனும் படகில் ஏறுவதா அல்லது அறிவெனும் கப்பலில் ஏறுவதா என்பதை நிர்ணயிப்பது எது? இது ஒரு மிகப் பிரம்மாண்டமான கேள்வி. ட்ரில்லியன் டாலர் வினா எனலாம். சொல்லப்ப்போனால், உலகின் பல்வேறு மதங்களும் அவற்றின் சமயங்களும் இவ்வினாவைப்பற்றியே எழுந்தவையாய்ப் பரிமளிக்கின்றன. மனத்தைப் பற்றியும் அறிவைப் பற்றியும் சமயங்கள் ஒவ்வொன்றும் எண்ணிறந்த வியக்கியானங்களைப் பொழிந்து சென்றிருகின்றன. சொல்லப்போனால், மனம் எனும் படகில் சாதரணப் பல்லோரும் ஏறிப் பயணித்து மாண்டு போவதை எல்லா சமயங்களுமே சித்திரமாய்த் தீட்டுகின்றன. மனமார்கத்துக்காய், மதியைத் தகவமைத்துக் கொள்ளும் – துணைக்கழைத்துக்கொள்ளும் சாதாரண மனித நடவடிக்கைகளால் எழும் விபத்துக்களையும் ஆபத்துக்களையும் சமயங்கள் யாவும் மனிதக் கதைகளைக் கொண்டே விளக்கிக் காட்டுகின்றன.

    இந்நிலையில், அவ்வப்போது மகா மனுஷ்யர்கள் இவ்வுலகில் அவதரிக்கிறார்கள். இவர்களை அவதாரப் புருஷர்கள் என்று சொல்வதுண்டு. “புருஷ” என்றால் “ஆண்“ எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு. “புருஷ” என்பது ஆண் – பெண் எனும் இருபாலருக்குமே பொதுவானது. புருஷ என்றால் சுற்றி நிகழும் சலனங்களுக்கு இலக்காகாத உறுதித்தன்மை உடையவர் என்பது பொருள். இவர்களைப் பிரபஞ்ச மனிதர்கள் என்பதுண்டு – விண்ணிலும், மண்ணிலும், வெளியிலும், கடலிலும் ஓராயிரம் சலனங்கள் எழுந்தாலும், பிரபஞ்சம் எவ்வாறு நிலைத்து நிற்கிறதோ அவ்வாறு இருப்பவர்கள் என்பது பொருள்.

    மகா மனுஷ்யர்கள் அசாதாரணமானவர்கள். ஆனால் அவர்கள் யாவரும் சாதாரண மனிதர்களாகவே பிறந்தார்கள் – வளர்ந்தார்கள். ஆனால், அவர்கள், வாழ்க்கைக் கடலில் பயணித்தது மதியெனும் கப்பலில் – மனம் எனும் தோணியில் அல்ல. எந்த ஒன்று அவர்கள் இதனைச் செய்யுமாறு செய்தது? என்று நீங்கள் வினவுகிறீர்கள்.

    விடை: ஒற்றைப்பதம்: சமூகப் பிரக்ஞை.

    சமூகப் பிரக்ஞையுடன் எழும் தேடல், இறையுணர்வையும் தழுவி எழும் பாங்கை பல அவதாரப் புருஷர்களிடமும் காண்கிறோம், இவ்வகையில் ஸ்டீவ் ஜாப்ஸின் தேடல் நவீன யுகத்தில், ஒரு புரட்சிகரமான நிகழ்வு என்றால் அது மிகையாகாது.

    தொடருவோம்

    Share
  • எழுவகைப்பெண்கள்: 3. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே

    அவ்வை மகள்

    3. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே

    ஆண் -பெண் வேறுபாட்டில் இடுப்பெலும்பைபற்றிக் குறிப்பிட்டாக வேண்டும் என்றேன். உயரத்தில் குறைந்தும், அகலத்தில் மிகுத்து சற்றேறக்குறைய வட்ட வடிவத்தில் இருப்பது பெண்ணின் இடுப்பெலும்பு (காண்க படம் – 1). மேலும், பெண்ணின் இடுப்பெலும்பானது சற்று முன்னோக்கித். தள்ளப்பட்டிருக்கும். சற்றே பின்புறம் சாய்ந்தார்ப் போன்ற நடுமுதுகும் , சிறிதேனுமாவது வயிறு கொஞ்சம் முந்தித் தள்ளப்பட்டிருக்கும் தன்மையும் பெண்ணுக்கு இயல்பாய் அமையும் காரணம் பெண்ணின் இடுப்பெலும்பின் தன்மைதான்.

    இடுப்பெலும்பின் மைய எலும்பு, திருவெலும்பு (sacrum) எனப்படும். திருவெலும்பு இடுப்பெலும்பின் மிகமுக்கியமான பகுதியாகும். இடுப்பெலும்பின் பின் மேற்பகுதியில், முதுகெலும்பின் தொடர்ச்சியாக அமைவதே திருவெலும்பு. ஆணின் திருவெலும்புடன் ஒப்பிடும்போது, பெண்ணின் திருவெலும்பு அகலமாகவும் அரைகுறையாய் முடிந்தாற்போன்றும் இருக்கும்.

    இடுப்பெலும்பின் இருபுறமும் கீழ்ப்பக்கவாட்டில் இருக்கும் கிண்ணக் குழிகள் (acetabula) தொடை இடுப்புடன் சேரும் இணைப்புக்கானவை. இக்குழிகளுக்கு இடையே உள்ள தூரம், ஆணுக்குக் குறைவாகவும், பெண்ணுக்கு அதிகமாகவும் உள்ளது. பொதுவாக, பெண்களின் மறையுறுப்புச் சந்தி ஆணின் மறையுறுப்புச் சந்தியைக் காட்டிலும் அகலமாக இருப்பதன் காரணம் இதுதான் (விவரங்களை, படம்-2 ல் காண்க).

    pasted image 0

    படம் 1 – பெண் மற்றும் ஆணின் இடுப்பெலும்பு; விற்பனையல்லா பொது அறிவுப்பயன்பாட்டுக்காக அனுமதியுடன் வெளியிடப்படுகிறது; படத்தின் மூலம்: https://cnx.org/contents/U6HolX6c@3/The-Pelvic-Girdle-and-Pelvis

    இடுப்பின் அமைப்பு

    920e2cbe-fb3b-49a6-acb3-0dd3505708b9

    படம் 2- பெண்ணுக்கும் ஆணுக்கும் இடுப்பின் அமைப்பில் உள்ள வேறுபாடுகள்

    ஆண் -பெண் வித்தியாசம் இடையோடு நின்று விடுவதில்லை. தொடை- இடையுடன் சேரும் வாகில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உள்ளது என்பதை நாம் உற்று நோக்கலாகிறோம். பெண்ணின் உடலில், இடுப்பெலும்புடன் வந்து சேரும் தொடை எலும்பு (femur) நெட்டுக்குத்திலிருந்து கிடை மடையாய் அகன்று விரிநதவாறு இடையை வந்தடைகின்றது. இதனால், பெண்ணின் இடை -தொடை- சந்திக்கோணம் ஆணுக்கு இருப்பதைக்காட்டிலும் மிகவும் அகன்ற கோணமாக இருக்கிறது (படம் – 2). தொடையின் பிட்ட வெளிவிளிம்புகள் பெண்ணுக்கு விரிந்தவாகில் இருப்பதும் இந்தகாரணத்தால் தான். சொல்லப்போனால் பெண்ணின் தொடை-இடைச்சந்தி, கீல் வைத்த பெட்டகக் கதவுகள் போல் இலகுவாக அகலவாட்டில் விரியும் தன்மையதாய் இருக்கின்றது. முதுகால் மல்லாந்து படுக்கும்போதும், நின்ற நிலையிலிருந்து குனியும்போதும் இந்தக் கீல் அமைப்பின் சௌகரியத்தை அனுபவிக்க முடியும். இவ்வமைப்பு உடலுறவிலும், வளரும் கருவைத் தாங்குவதிலும், குழந்தையைப் பிரசவிப்பதிலும் பெண்ணுக்கு ஒத்தாசை செய்வதற்காக இயற்கை செய்துள்ள ஏற்பாடாகும் .

    ஆனால் இத்தனை சௌகரியமாய் அமைந்ததான அகன்ற இடையும் விரிந்த தொடையும், பெண்ணுக்கு, காலெடுத்து நடக்கும், ஓடும் திறனைக் குறைக்கின்றன. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே.

    சொல்லப்போனால், இயற்கை அமைப்பிலேயே பெண்ணுக்கு நடை என்பது விருப்பமான, எளிதான செயலாக அமைக்கப்படவில்லை. ஏனெனில், நடையை இலகுவாக்கும் தொடையும் இடையும் அவளுக்கு இல்லை. ஆனால் ஆணுக்கு அந்த பாக்கியம் உண்டு. கருத்தரித்து, கருவைத்தாங்கி வளர்த்து, சிசுவைப் பிரசவிக்கும் சிறப்புப் பணிக்காக, உரியமுறையில் வடிவமைக்கப் பட்டிருக்கிற பெண்ணின் சௌகரிய இடுப்பு, அவளது நடைக்கும் ஓட்டத்திற்கும் ஒத்தாசை செய்ய மறுத்து கொஞ்சம் மக்கர் பண்ணுகின்றது. இது இயற்கைப் பிறழ்வு அல்ல, ஒரு அனுசரிப்பு விதி (Law of Compensation). ஒன்று மிகும்போது ஒன்று குறைவுபடுவது இயல்பல்லவா? அது போன்றதே இதுவும். பல பெண் விலங்குகளில் இவ்வாறான அனுசரிப்பு விதியைக் காணமுடியும். மனிதப்பெண் இவ்விதிக்கு விலக்கல்லவே . ஆனால், மனித இனத்திலே தான், ஆணின் நடை அல்லது ஓட்ட வேகத்திற்கும் பெண்ணின் நடை அல்லது ஓட்ட வேகத்திற்கும் மிக அதிக வித்தியாசம் இருக்கிறது. இருகால் உயிரியாக, தரையில் நடக்கவேண்டிய விலங்காக இருப்பதாலும் பன்னெடுங்காலமாக பால்-சார் (gender-specific) பணிகளுக்க்கெனவே மனித உடல் உருவாக்கப் பட்டிருப்பதாலும் நடை மற்றும் ஓட்டத்தில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் அதிக ஆண் -பெண் வித்தியாசத்தைப் பார்க்கலாகிறது. ஆக, பெண் நடக்கச் சிரமப்படுவதன் உண்மைக் காரணம் பெண்ணால் இயற்கையாகவே வேகமாக நடக்க முடியாது என்பது தான் என்பது புரிகின்றது அல்லவா?.

    ஆனானப்பட்ட விளையாட்டுப் போட்டிகளிலே கூட ஆண் -பெண் பாகுபாடு வைத்தே போட்டிகள் நடைபெறும்போது நம் வீட்டுப் பெண்கள் ஓட மறுப்பதும் – நடக்க மறுப்பதும் ஒன்றும் புதிதல்ல. உங்கள் வீட்டுப் பெண்மணி நடக்கப் பால்மாறினால் அதற்காய் நீங்கள் இனியும் கொதிக்க மாட்டீர்கள் அல்லவா?

    இது நிற்க.

    எந்த ஒரு உறுப்பும் இரு இயந்திரம் போன்றது. எனவே பெண்ணின் நடை சிரமத்தைப் பொறியியல் ரீதியாக விளக்குவது சிறப்பு. பெண்ணின் வட்ட இடை வடிவுமும் அகன்ற கோணத்துடன் உள்ள தொடையும், அவளது கால்கள் இலகுவாக இயங்குவதில் இடையூறு செய்கின்றன என்றோம். இவ்வாறு நிகழ்வது ஏனெனில், இடை-தொடையால் அவளது கால் முட்டிக்கு மேலே ஒவ்வா விசை யையும் பாரமும் உண்டாகின்றன. இதனால் முட்டியின் இயக்கத்தை எதிர்க்கும்படியான ஒரு சுழ்ற்சிவிசை பெண்ணின் முட்டிக்கு மேலே உருவாகி நிலைக்கின்றது. ஒவ்வொருமுறை காலை எடுத்துவைக்கும்போதும் – பெண்ணின் விரிந்த தொடையானது அவளது முட்டியை உள்புற மாகத்த்திருப்புகிறது. இயந்திர இயங்கு சக்தியில் இது ஒரு விரயமே, தடையே!

    இருகால் நடைப் பிராணியான மனிதரது உடலில், தசைநார் மற்றும் எலும்பிழைகள் முட்டியில் சங்கமித்திருப்பதைப்போல வேறு எந்த உறுப்பிலும் சங்கமிக்கவில்லை. பெண்ணுக்கு பலவீனமான தசைநார் மற்றும் பலவீனமான எலும்பிழைகள் உள்ளன என ஏற்கனவே கண்டோம். இந்த பலவீனம், இடை-தொடை சுழல் விசையோடு கைகோர்த்துக் கொள்கின்றது – பெண்ணின் கால் முட்டியின் இயக்கத்தை அது வலுவாய் எதிர்க்கிறது. ஒட்டுமொத்தத்தில், ஆற்றலின் பீடமான பெண்ணுக்குப் பீடமே பலவீனம் எனவானது. என்னதான் முட்டினாலும் பெண் முட்டி ஆணின் முட்டியைவிட மட்டம்தான் என்பது இயற்கை விதித்த விதி! பெண்களுக்கு இயற்கையிலேயே உள்ள இந்த முட்டியின் மட்டத்தை நம் முன்னோர்கள் அறியாதவர்கள் இல்லை. எனவே பெண்களுக்கென அன்று அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுக்கள் எல்லாம் பெண்களுக்கு ஏற்ற விளயாட்டுக்களாக மட்டுமே இருந்தன.

    பெண்ணின் இடை -தொடை-முட்டி அமைப்பின் இடைஞ்சலைக் கருத்தில் கொண்டு இந்த உறுப்புக்களில் அல்லது இந்த உறுப்புக்களின் பலவீனத்தால் உடலில் வேறெந்த இடத்திலும் எவ்விதக் காயமும் பெண்களுக்கு ஏற்படாதவாறு அன்றைய விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆண்கள் விளையாடும் எல்லா விளையாட்டுக்களையும் பெண்களால் விளையாடமுடியாது என்கிற தெளிவான விவேகம் அன்றைய மக்கட்பிரதிநிதிகளுக்கு இருந்தது. ஆனால், 1970-71ல் விளையாட்டில் ஆணுக்கு நிகராய்ப் பெண்களை இறக்குவது – உத்வேகிப்பது என்ற புரட்சி உலகெங்கும் பிறந்தது. இதனால் எண்ணிறந்த பெண் விளையாட்டு வீராங்கணைகள் களத்தில் இறங்கினார்கள் – இறக்கப் பட்டார்கள். ஆனால், இவர்களில் விளையாட்டில் தொடர்ந்து தங்கியவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு அல்லது இல்லை என்றே ஆனது. விட்டில் பூச்சியைப்போல பெண்கள் விளையாட்டில் வந்து போயினர். காரணம்? அவர்களுக்கு ஏற்பட்ட (ஏற்பட்டு வரும்) வரும் மிகவும் மோசமான முட்டி மற்றும் கால் தொடர்பான காயங்கள்! இதிலே மிக-மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டைப்பந்து, கூடைப்பந்து, காற்பந்து, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட மாதர் திலகங்கள். விளையாட்டுப்போட்டிகளில் பெண்ணின் இடை-தொடை-முட்டி கட்டமைப்பு மட்டுமல்ல – மாதவிடாய்த் தொடர்பாய் எழும் உடலின் இரசாயன மாற்றங்களும் அவளுக்கு எதிராய் செயல்பட்டு அவளை விளையாட்டுகளில் மிக மோசமாக வீழ்த்துவதையும் விளையாட்டு மருத்துவ உலகம் தொடர்ந்து பதிவு செய்துவருகிறது

    (ஒரு எளிய கட்டுரையை இங்கே காணலாம்:

    http://www.pharmacytimes.com/publications/issue/2014/june2014/sports-injuries-are-women-more-at-risk).

    இவ்வகையில் அன்றைய தமிழ்ச்சமுதாயம் பெண்களின் இடை-தொடை-முட்டி அவதியைப் புரிந்துகொண்து அவர்களை அரவணைத்து அவர்கள் நலனுக்கான ஏற்பாடுகளைச் செய்த பாங்கு நம்மை வியக்கவைக்கிறது.

    தொடருவோம்

    Share
  • இறையியல் சிந்தனைகள்: 1 ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்

    அவ்வைமகள்
    இரேணுகா இராசசேகரன்

     

    அன்று அங்கு விடுபட்டது மதமா? மடைமையா?

    இறையியல் சிந்தனைகள்

    ஸ்டீவ் ஜாப்ஸின் இறையியல் சிந்தனைகள் அவர் மறைவுக்குப் பின்பு நிறையவே பேசப்படுகின்றன. நம்முடன் சமகாலத்தில் வாழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு, 2011ல் இறைசோதியுடன் ஐக்கியமாகி இருக்கிற ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்நாள் பயணம் ஒப்பற்றதொரு சரித்திரமே எனும்படியான புரிந்துகொள்ளல் இவ்வுலகில் உண்டாகியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தைப் பற்றி ஒன்றைச் சொல்வார்கள் – இது நவீனப் பறைசார் ஊடகப் பரவல் காலம். சாதாரண விஷயங்கள் கூட இன்று வெகுப் பிரசித்தி அடைந்துவிடும். சாதாரண மனிதர்களைக் கூட இன்றையகாலம் மகானாக்கி விடும். அதுவும் பெரிய ஆளாக ஒருவர் ஆன பின்பு அவரது சரித்திரத்தை வெகு சாதுரியமாக வடிவமைத்து விடுவது என்பது இங்கே வாடிக்கை. ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை அந்த நிர்பந்தத்திற்கும் நெருக்கடிக்கும் இலக்கானதாகத் தோன்றவில்லை. யதார்த்த உண்மைகள் உண்மையிலேயே அவரது வரலாற்றில் – வாழ்க்கைத் தடயங்களில் – தரவுகளில் நிரம்பிக் கிடக்கின்றன என்பது தனிமனித சரித்திரத்தில் மிகப்பெரிய பலம்.

    வாழ்வின் எந்த காலகட்டத்தில் – எந்த பருவத்தில் எவர் இருந்தாலும் அவருக்கு எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் புதுப்புது உத்வேகத்தை வழங்குகின்ற தன்மையதாய் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. அவரது நடைமுறை வாழ்க்கை எவ்வகையான வாழ்வில் இருப்பவர்க்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைவது என்று சொன்னால் அது பொருத்தமாய் இராது. அவர் வாழ்வில் தன் வாழ்வை ஒரு முழு நிலைக் கண்ணாடியில் பார்ப்பதைப் போன்று பாரத்துக்கொள்ளும் இலகுவை எவருக்கும் கொடுக்கும் திறந்த வாழ்க்கை அவருடையது என்பதே சரியாக இருக்கும்..

    பிறவியால், ஒரு சர்வ சாதாரண மனிதர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ். மனிதனாய்ப் பிறப்பெடுக்கும் மனிதருக்கு என்னென்ன கஷ்டங்கள் வருமோ எத்தனைத் துன்பங்கள் வருமோ அத்தனையும் அவருக்கு வந்தது. சொல்லப்போனால் இந்தத் துன்பங்களும் கஷ்டங்களும் அவருக்கு மற்றவரைக் காட்டிலும் கூடுதலாய் இருந்தனவே தவிரக் குறைவாய் அல்ல. அவருக்கு நேர்ந்த அவமானங்களும் பெருத்தவையே. தவறுகள் என்று நாம் சொல்லக்கூடியவற்றையும் அவர் ஏராளமாய்ச் செய்திருக்கிறார் என்பர். ஆனால் இன்றோ ஆண் -பெண், ஏழை – பணக்காரர், மூத்தவர்-இளையவர் என்ற பாகுபாடின்றி எவரொருவக்கும் ஒரு முன்மாதிரியான பிரஜையாக, எண்ணத்தில் அழைத்தும், மனத்தில் இருத்தியும் பின்பற்றும் செம்மலாக அவர் உயர்ந்திருக்கிறார்.

    இவ்வாறான உயர்நிலையினை அவர் எவ்வாறு அடைந்தார் என்பதை அலசி ஆராய்ந்தவர்களும் இன்னமும் ஆராய்ந்து கொண்டிருப்பவர்களும் பலபேர் உண்டு. அவர்கள் யாவரும் கண்டுள்ள பேருண்மை யாதெனில் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது வாழ்வை யதார்த்தமாய், உள்ளது உள்ளவாறு அணுகி, உறுதியான இலக்குகொண்டு வாழ்ந்து சென்றிருக்கிறார் என்பதே. அலங்காரங்களும் படாடோபமும் இன்றி எதனையும் எதிர்நோக்கும் மனத் திண்மையோடு இயல்பாய், தனது இலக்கை நோக்கித் தன் வாழ்வை நெறிப்படுத்தி இயக்கிச்செல்கிற ஒரு சீர்மையும் எளிமையான வாழ்வணுகுமுறையும் அவரிடத்திலே நித்தமும் காணப்பட்டதாகவே அறிகிறோம். சாதனை என்பதற்கு திடசிந்தனையும், தீர்க்க தரிசனமும், அசைவிலாக் கட்டுப்பாடும் தேவை என்பர். இம்மூன்று சாதகங்களையும் தனது வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு ஒரு கர்மயோகசித்தி மனோன்மணியாக வாழ்ந்து போந்திருக்கிறவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

    இன்று உலகின் ஒட்டுமொத்தப் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அளப்பரிய அவரது சாதனைகள் அவருடைய கடுமையான உழைப்பு, விவேகம், நுண்ணிய திட்டமிடல், தீர்க்கதரிசனம் ஆகிய பண்புகளால் விளைந்தவை என்பதையும் இவ்வுலகம் பறைசாற்றுகிறது. கணினித் தொழுல்நுட்பத் தந்தையெனப் போற்றப்படும் அளவுக்கு அறிவியலை – தொழுல்நுட்பத்தை – உயிர்மூச்சாகக் கொண்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அதுவும் வர்த்தகமே குறி. அவ்வாறான சூழலில் அவர் ஒரு நாத்திகராக விளங்க இயல்பான சாத்தியக் கூறுகள் அவரைச் சுற்றி நிறையவே கிடந்தன. இருப்பினும், அவரது வாழ்வில் ஒரு இன்றியமையாத அங்கமாக அமையப் பெற்றது இறை தேடல். அதுமட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸின் இறையியல் சிந்தனைகளில் மதம் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கிறது என்பது மிகுந்த சிந்தனைக்குரியது.

    மத மாச்சரியங்களில் வெறுமனே குதித்து விடுவதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் அற்ப சொற்ப மனிதர் அல்லர். வாழ்வின் அம்சங்களை ஆழமாக அணுகும் கடுமையான பழக்கம் உள்ளவர் அவர். அவருடைய உள்மனம், சுலபமாக எதிலும் தொலைந்து போகாது – திருப்தி அடையாது. அதுமட்டுமல்ல, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் அறிவியல் தொழில்நுட்பத்தின் அதிநுணுக்கங்களை அறிந்தொழுகியவர் என்ற வகையில் சான்றும் ஆதாரமும் இன்றி எதனையும் ஏற்க ஒண்ணாத முறைமை கொண்ட மனப்பாங்கு அவருக்கு நிச்சயம் உண்டு. அத்தகைய ஒரு நபர் இறையுணர்வு கொண்டொழுகினார் என்பது மட்டுமல்ல – இறையுணர்வின் வழியேகி ஆத்மத் தேடலில் ஈடுபட்டார் என்பதும் உண்மை. இவ்வுண்மை, வாழ்வின் பரிபூரணத்துவத்திற்கு இறையுணர்வு எத்தனை அவசியமாகிறது என்பதனை அவர் உணர்ந்திருந்த பாங்கை உணர்த்துவதோடல்லாமல் – இறையுணர்வு என்பது எவ்வித அச்சமுமின்றி – எவரின் நிர்ப்பந்தமுமின்றி சுய மூளையின் அனுமதியுடன் சுயவேட்கையின் விளைப்பாடாய் தங்குதடையற்ற விசையுடன் அனைத்து வரையறைகளையும் தாண்டிச்செல்வதான அசைவிலா உறுதியுடன் உருவாகி விரிவது எனக் காண்கிறோம்.

    நாம் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸ் தனது இறை தேடலுக்கு மிகச் சரியானதொரு புலனாக, கருவியாக, களமாக, மதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதே. இது ஆழ்ந்து நோக்கத்தக்கது. ஆன்மா என்கிற அழிவில்லா – மரணமிலாக் கூறு ஒன்று உள்ளது என்பதை எல்லா மதங்களுமே மொழிகின்றன. ஆனால், அறிவியலின் வாயிலாக மட்டுமல்ல மதங்களின் வாயிலாகவும் கூட ஆன்மாவின் எடை, பொருண்மை, மற்றும் பரிமாணங்களை எவரே அறிவார்? அது மிருதுவானதா – கடினமானதா – அது எந்த நிறம் – என்ன சுவை என்று எவரால் சொல்லமுடியும்? ஆன்மா என்பதை விளக்குவது புவி ஈர்ப்பு விதியா? இயக்க விதியா? தொக்கல் விதியா? அதன் வடிவென்ன? அது ஒலியா – ஒளியா? திடமா? திரவமா? வாயுவா? பளாஸ்மாவா? அண்டமா? பிண்டமா? வெளியா? பிரபஞ்சமா? வினாக்கள் ஆயிரம் தான் – ஆனால் உண்மையாதெனில் அது என்னவென்று சொல்லவொணாத ஒன்று -ஆதாரமில்லாத ஒன்று – சாட்சியும் சான்றும் காட்டமுடியாத ஒன்று.

    ஆன்மா என்பது இவ்வாறே இருப்பினும் அத்தகைய ஒன்றை நான் அறிய வேண்டும் – அவ்வாறு நான் அதனை அறிய அறிவியலை விட மதமே சிலாக்கியம் என்ற உணர்வும் திறமையும் ஸ்டீவ் ஜாப்ஸிற்கு உண்டாயிற்று என்றே காண்கிறோம்.. இந்த முயற்சியில் மத்தைக்கூட ஒரு அறிவியல் தொழில் நுட்பக் கருவியாக ஒருவேளை ஸ்டீவ் எண்ணியிருக்கலாமோ என்றுகூட நாம் எண்ணக்கூடும்.

    மதம் எனும்போது உலகில், பல்வேறு மத மார்க்கங்கள் இருக்கின்றன என்பது உண்மை. எனினும் ஏற்கனவே கையில் இருப்பதை, தெரிந்ததை அணுகுவது தானே எவருக்கும் இயல்பு? அதைத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் செய்கிறார்.

    கிறித்துவ மதம் பிரசித்தி பெற்றதாகவும் வெகுவானப் புழக்கத்தில் இருப்பதுமாகவும் உள்ள அமெரிக்காவில் பிறந்து ஒரு கிறித்துவக் குடும்பத்தில் வளர்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். எனவே, வெகு இயல்பாக, அவரது சமீபத்தில் உள்ளதான அவரது மதத்தை அவர் தனது ஆன்மத் தேடலுக்காய் முதலில் அணுகுகிறார். இதற்கு ஏதுவாய் சிறுவனாய் இருக்கும்போதே தேவாலயத்திற்குச் செல்லும் பழக்கமும் அவருக்கு இருந்தது. நிலைநிறுத்தப்பட்ட இறைசாத்திரங்களும் வழிபாட்டு முறைமைகளும், சாங்கியங்களும், அவற்றை உடும்புப் பிடியாய்ப் பிடித்துக்கொள்ளும் மனோபாவமும் ஆச்சாரமும் நிறைந்த குடும்பம் மற்றும் சமூக அமைப்பும் உள்ள சூழல் அது.

    மதப்பற்று நிரம்பிய வளர்ப்புப் பெற்றோர்களுடன் அன்று தேவாலயம் வந்தவன் பதிமூன்றே வயதான ஸ்டீவ். பிரார்த்தனைக் கூட்டமது – இறைநம்பிக்கையோடு, இறை பணிவும், இறை அச்சமும் மிகுந்த திருச்சபைக் கூட்டம் – அக்கூட்டத்தில், தேவாலயத் தந்தையைப் பார்த்து அவன் அன்று கேட்ட கேள்வி – கடவுளுக்கு இவை தெரியுமா? என்பது – விஷயங்களை எடுத்துக் காட்டி இவையெல்லாம் கடவுளுக்குத் தெரியுமா எனக் கேட்கிறான் பாலகன் – கூட்டமும் அதிர்ச்சிமீதுறக் காண்கிறது அவனது கேள்வித் துளைப்பை. தனது கேள்விக்கு இறைதந்தை தந்த விடைகளையும் வியாக்கியானத்தையும் அவன் ஏற்றிலன். எதைக் கேட்கக்கூடாதோ அதைக்கேட்கிறான் என்பதாக அவனைக் கண்டனர் இறைமாட்சிமை புரிந்தவர்கள். அவனோ வெளி நடந்தான் தாகம் தணியாது – அன்று அங்கு விடுபட்டது மதமா? மடைமையா?

    தொடருவோம்

    Share
  • எழுவகைப் பெண்கள்: 2. பெண்ணுடலில் பதினோரு வித்தியாசங்கள்

    அவ்வை மகள்

    ஈன்று புறந்தருதல் தாயின் கடனே என்பார் பொன்முடியார். “பெற்றுப் போடுவது” என்று இளக்காரமாய்ப் பேசுவர் இனம்புரியார். ஈன்று புறந்தருதல் என்பது பெற்றுப்போடும் கொச்சை வேலை இல்லை. பெற்று, பேணி வளர்த்து, அவனையோ அவளையோ ஆளாக்கி, நல்ல மனிதராய் உலகிற்கு வழங்குதல் என்பதே ஈன்று புறந்தருதல் – இது சும்மா பொம்மை விளையாட்டல்ல. ஈன்று புறந்தரும் பணிஎன்பது ஒரு அசாதாரணவேலை- படைத்தல் மட்டுமல்ல – காத்தலும் – வளர்ந்தெழுமித்தலும் இதில் அடக்கம். இது பெண்ணுக்காய் இறைவன் அளித்துள்ள மகத்தான கடமை.

    இயற்கையில் ஒரு நியதி உண்டு. எந்த உயிரியும் அதற்கிடப்பட்ட பணியைச் செவ்வனே நிறைவேற்றுமுகமாக அந்த உயிரிக்கு வேண்டிய அனைத்தும் அவ்வுயிரிக்கு உடலமைப்பிலேயே இயற்கையாய் வழங்கப்பட்டிருக்கும் – வெளிப்படையாக மட்டுமன்று உள்ளீடாகவும் தான். எனவே, ஈன்று புறந்தருதல் எனும் பணியை ஒரு பெண் நிறைவேற்றுமாறு இயற்கை அவளை வடிவமைத்து படிப்படியாய் உருமாற்றம் செய்து அவளை வளர்த்தாளாக்குகிறது. இந்த இயற்கை ஏற்பாட்டைப் பார்க்கப் போந்தால் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல விடயங்கள் சரமாரியாகப் புலப்படுகின்றன.

    முதலில், நம் கவனத்தில் படுவது – தாய் என்பவள் குழந்தை ஈன்ற காரணத்தால் உருவாவதில்லை – அவள் தாயாகவே பிறப்பிக்கப்படுகிறாள் என்பதே. பின்னாளில் அவள் தாயாக இயங்க என்னென்ன வேண்டுமோ அத்தனை மூலக்கூறுகளுடனும் ஒரு பெண் குழைந்தை பிறக்கிறது. ஆக, தாயின் சாராம்சங்கள் பெண்ணுக்கு, பின்னால் வருவதில்லை அது பிறப்பிலேயே அவளுடன் பிறக்கிறது என்பது தெளிவு.

    எனவே பிறக்கும் பெண் குழந்தை ஒவ்வொன்றும் தாயின் ரூபமே என்பதை முதலில் நாம் தெற்றெனப் புரிந்து கொள்கிறோம். மேலும், நம் வாழ்நாள் அனுபவத்தில் நாம் காணக்கூடிய மற்றொரு யதேச்சை யாதெனில் – எந்த ஒரு பெண்குழந்தையும் எவரின் நிர்ப்பந்தமும் அல்லாமல், தாய்மைப் பண்புகளை வெகு சிறு குழந்தைப் பருவத்திலேயே வெளிப்படுத்தலாகின்றது என்பதே. தான் விளையாட எடுக்கும் பொம்மை முதல் தான் விளையாடும் பாங்குவரை அவள் ஒரு தாயை நித்தமும் பிரதிபலிப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்த குணாதிசயங்கள் சொல்லித்தந்து வருவதில்லை சுயம்புவாய்ச் சொல்லாமலே இயற்கையாய் வருவன.

    விருட்சம் வித்துக்குள் தானே அடங்கி நிற்கிறது? விறகில் தீயும் – பாலில் நெய்யும் உள்ளுறை மகத்துவங்கள் அல்லவா? கங்கையின் உபநதிகள் கங்கையின் பிறப்பல்லவா? இதுபோன்றே, தாயின் பரிமாணங்களும் குணாதிசயங்களும் ஒவ்வொரு பெண் குழந்தையின் உள்ளேயும் அடக்கம் பெறுவது இயற்கைப் பரிசளிப்பேதான் அல்லவா?.

    ஆக, பெண் என்பவள் ஒரு சிருஷ்டி கர்த்தாவாகவே பிறப்பெடுக்கிறாள் எனக்காண்கிறோம். மேலும், “அவள்” என்றாலே அதன் பொருள் படைப்பாற்றல் என்கிற உண்மையும் நமக்கு புலப்படுகின்றது.

    சொல்லப்போனால், படைப்பாற்றல் என்பதே தான் ஈன்று புறந்தருதல் – இது நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, படைத்தல் – காத்தல் – வளர்த்தெழுமித்தல் எனும் முப்பெரும் இயற்கைக் கட்டளைகள் பின்னிப் பிணைந்த சீரிய பணி. இதனை ஆற்றுமுகமாக அவளுக்குள்ளே இயற்கையாய் ஒரு ஆற்றல் புதையல்!

    தனக்குள்ளே பல தலைமுறைகளை அடுக்கி வைத்திருக்கும் வித்தினைப்போல – பலப்பலக் கிளை நதிகள் உருவாகும் – வற்றாத ஜீவநதியைப்போல் – கடலுக்குள் மடங்கிநிற்கும் எரிமலைகளைப்போல – பூமியின் உள்ளுறை அக்கினியைப்போலே பிரம்மாண்டமான ஆற்றல் பிரவாகம் பெண்ணினுள்ளே அடங்கிக்கிடக்கிறது. கமண்டலத்திலிருந்து புறப்படும் நதி என்பார்களே அதைப்போன்ற அளப்பற்கரியதான ஆற்றல் கொண்டது பெண் எனும் மகா சக்தி. சக்தி இலையேல் சிவம் இல்லை என்பது இதுபற்றியே. ஆண், விந்துவின் சொந்தக்காரன் தான் ஆனால் விந்து வித்தாகாது – சிசுவகாது – விந்துவைப் பிதாவாக்கும் வித்தையும் வல்லமையும் பெண்ணுக்கு மட்டுமே உண்டு. “நீயே வித்தை! நீயே தருமம்! நீயே இதயம், நீயே மருமம்! உடலகத்திருக்கும் உயிருமன் நீயே!” என்று பக்கீம் சந்திரரும் அவர் வழி பாரதியும் பாரத மாதாவைப் பார்த்து நெகிழ்ந்த நெகிழ்வு, பெண்மையின் உச்சஸ்தாயி. இந்த மணிவாசகம் எந்த ஒரு பெண்ணுக்குமே பொருந்தும் என்பதுதான் உண்மை.

    சரி, அப்படி என்னதான் இந்த பெண்ணின் உடலில் இருக்கிறது வித்தியாசமாக? என்ற கேள்வி இப்போது நம்மை உலுக்கியெடுக்கிறது அல்லவா? பெண்ணின் சமதள ஜீவியான ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏராளமான வித்தியாசங்களைக் கூறலாம் என்றாலும், முக்கியமான பதினோரு அடிப்படை உடலியல் வித்தியாசங்களை முதலில் காண்போம்.

    பெண்களுக்கு ஆண்களை விடக் கூடுதலான நாடித்துடிப்பு உள்ளது.

    பெண்களுக்கு ஆண்களை விடக் கூடுதலான இரத்த வெள்ளை அணுக்கள் உள்ளன.

    பெண்களின் உடலில் ஆண்களின் உடலில் நிகழ்வதைக்காட்டிலும் கூடுதலான வேகத்தில் நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகின்றன.

    தொற்று வியாதிகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களைக் குறைவான அளவே தாக்குகின்றன.

    பெண்களுக்கு ஆண்களை விட, உடலில் அதிக விழுக்காடு கொழுப்புச் சத்து உள்ளது.

    பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான அளவு தசை உள்ளது.

    பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான இரத்த அழுத்தம் உள்ளது.

    பெண்களுக்கு ஆண்களை விடவும் குறைவான் அளவு இரத்தச் சிவப்பணுக்கள் உள்ளன.

    பெண்ணின் எலும்புக்கூடு ஆணின் எலும்புக்கூட்டைக்காட்டிலும் எடை குறைவானதாகவும், பலத்தில் குறைந்தும், வெளிப்பரப்பில் சொரசொரப்பு இன்றி மிருதுவானதாகவும் அமைந்திருக்கிறது.

    எலும்பையும் தசையையும் இணைக்கும் தசைநார்கள் (tendons) ஆணைவிடப் பெண்ணுக்கு உறுதி குறைவாக இருக்கின்றன.

    பெண்ணுக்குள், எலும்புகளை இணைக்கும் சவ்விழைகள் (ligaments) ஆணைக்காட்டிலும் பலவீனமானவையாகவே இருக்கின்றன. .

    இந்த வித்தியாசங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்றதான இன்னொரு வேறுபாடுண்டு. அதுதான் இடுப்பு. வடிவத்தில் மட்டுமல்ல கட்டமைப்பிலும் கூட ஆணின் இடுப்பிற்கும் பெண்ணின் இடுப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இடையுடன் தொடையும் பெண்ணின் தனித்திறங்கள்!

    மேலும் பேசுவோம்!

    Share
  • எழுவகைப் பெண்கள்: “பெண்ணின் உடல்” எனும் சித்தாந்தம்

    அவ்வைமகள்

    1600x735_19412_Lea_3d_cartoon_girl_woman_character_picture_image_digital_art

    பெண் எனும் மனித உயிரி அலாதியானவள். மனிதப் பெண், பிற பெண் உயிரிகளிலிருந்து பெரிதும் வேறுபடுபவள் – அதிசயமானவள் – அற்புதமானவள். அவளைப்புதிரென்பர் – வியப்பென்பர் – தீர்வுகாணாக் கணக்கெனக் கொண்டு தீரா முயற்சியுடன் அவளை அறிந்தறிய விழைவர். பாடிப்புகழ்வர் – பரவசப்படுவர் – சாடி இகழ்ந்தும் சளையாமல் நினைந்தலைவர். பாட்டியாய், தாயாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய் என நிதம் அவளுடன் கூட வாழ்ந்தாலும்கூட அவளை அறியாதும் புரியாதுமே நாள் கழியும் உண்மையே நம் நிலையெனில் இந்தப் பெண் எனும் ஜீவி எத்தனை நுணுக்கமானவள் என்பதை நாம் சற்றேனும் உணர முடிகிறது அல்லவா?

    இவ்வாறாக, எவர் நினைவுக்கும் சிந்தனைக்கும் என்றுமே புதுப் புது பொருள் தரும் – சவால் விடும் ஜீவியாக விளங்கும் பெண்ணே, “நீ யார்?” என நம் உள்ளம் கேளாமல் கேட்கும். இக்கேள்வி ஆணுக்குள் மட்டுமல்ல பெண்ணுக்குள்ளும் எழுகிறது என்பது தான் புதிரினும் புதிர்.

    பெண் பற்றிய எந்த ஒன்று நம்மை அவள் பால் ஈடுபட வைக்கின்றது? பெண் பற்றிய எந்த ஒன்று அவள்பால் அவளையே லயிக்க வைக்கிறது? பெண் பற்றிய எந்த ஒன்று கவிகளையும் ஓவியர்களையும், இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்திப் பிரவாகங்களாய் உருமாற்றம் செய்கிறது? என வியந்தவாறு வியந்தவாறு மனிதகுலம் பயணித்துக்கொண்டிருக்கிறது.

    உடல், உள்ளம், ஆன்மா என முத்தளப் பேழையில் உயிரிகள் வாழும் என்பர். இம்மூன்றில் எது உயர்ந்தது என்பது ஒரு பிரம்மாண்ட வினா. இந்த வினாவையும் அதற்கான விடையையம் தமிழிலக்கியம் விரிந்தும் சுருக்கியும் காட்டும் பாங்கு பிரமிக்கத்தக்கது. ஆன்மாவும், உள்ளமும் உடல் எனும் உறையுளின் வாசிகள் எனக்கொண்டு உடலே மூன்றில் முதன்மை என்பதனைப் பகராத சமயங்கள் இல்லை. தமிழ்த் திருப்புலவர் திருமூலர், “உடம்பாரழியின், உயிராலழிவர், திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்!’ என வெகு திறத்துடன் எளிமையாய் மொழிந்திருக்கிறார். திருமூலர் வாக்கில், உடலின் மேன்மையை உணர்ந்தவாறு நாம் நிமிர்கையில், ஒன்று நமக்குத்தெரிகிறது: அது என்னவென்றால் உடலின் மகத்துவம் எத்தகையது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம் என்பதே. . சொல்லப்போனால், உடல் பற்றிய சிந்தனை நம்மை எப்போதுமே வியாபித்திருக்கிறது; அதுமட்டுமல்ல, முன்னேப்போதுமில்லாத வீரியத்தோடு இன்று உடல் பற்றிய வியாக்கியானங்களில், நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுவதும் நமக்குப் புரிகிறது.

    உடல் வனப்பு, உடல், வசீகரம், உடல் நலம், என்கிற விடயங்களினோடு உடல் மொழி (body language) என்கிற ஒரு ஆளுமைக் கூற்றையும் கையாளுங்கின்ற கால கட்டத்தில் வாழும் நாம் நம்மை நல்ல உடல் ஞானிகளே என சொல்லிக்கொள்ளவும் முனையலாம். ஏனெனில், மெய் ஞானம் என்பது, மெய் எனப்படும் உடலினை முற்றும் முழுவதும் அறிந்து கொள்ளும் உண்மை ஞானமாக இருக்கும்படியாக அறிவார்ந்த விவா எழும்பியுள்ள கால நிலையில் நாம் இருக்கிறோம். இந்த விவா இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. இன்று, உடலின் அவஸ்தையும், உடலின் எழிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு புதுக் கவனத்தை, எழுச்சியை அடைந்திருக்கிற வேடிக்கை நிலவுகின்றது. காட்சி, கவர்ச்சி, பாலியல் சுதந்திரம், உடலுறவு மற்றும் வயோதிகம் பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதுவித நோய்கள் எனப் புதியதொரு கால மாறுபாட்டில் நாம் நுழைந்திருக்கிற நெருக்கடியும் கூட நமக்குப் புலப்படுகிறது.

    அதே நேரத்த்தில், யோகமும்,கலைகளும், இறையியலும் ஒன்றை ஒன்று சார்பவையாய், நுண்ணிய உடற்கூற்றுத் தத்துவங்களையும் மருத்துவ சித்தாத்தங்களையும் உள்ளடக்கியவையாக மிளிரும் பாங்கையும் நாம் காண்கிறோம். இக்காட்சி, எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும், நம்மை மெய் சிலிர்க்கவைக்கிறது. மெய் எனும் இவ்வுடல் உண்மையிலேயே எத்தகையது, இது எக்குணம் கொண்டது, இதனைச் செவ்வனே காப்பது எங்ஙனம் என சீரிய சிந்தனயில் நாம் நம்மைத் தொலைத்தவாறு இருக்கிறோம்! இச்சிந்தனையில் இன்று பெண்ணின் உடலின்பால் நமக்கிருக்கும் கவர்ச்சியும் கிளர்ச்சியும் சொற்பதம் கடந்தவை.

    மறைக்கப்படுவதாலும், குறைக்கப்படுவதாலும், இட்டுரைக்கப்படுவதாலும், உண்மைகளின் சாரம் நீர்த்துப்போவது இயல்பே. பெண்களின் உடல் பற்றிய ஞானம் இவ்வாறே அரைகுறையாய் நின்றுவிட்டது. இந்த அரைகுறைத்தன்மை பெண்கள் தம்மைத்தாமே அறிந்துகொண்டுள்ள நிலையிலும் கூடத்தான் என்பதனை மீண்டும் சுட்டிக்காட்டவேண்டும்.

    இந்நிலையில், பெண் என்பவள் புனிதமானவள் – தனித்துவத் தன்மை உடையவள் என்கிற போதனையின் முழுச்சாரம் நம்மைச் சாராத நிலை நம்முள் இருப்பது வியப்பல்ல.

    மனித குலத்தின் வித்தாய், வேராய், விழுதாய் விளங்குபவர் பெண்களே. ஆனால் அவர்களது உடல் இன்று ஒரு காட்சிப்பொருளாய் – கவர்ச்சிப் பொருளாய் – கேலிப் பொருளாய் – வர்த்தகப்பொருளாய் மாறிவிட்ட ஒரு நிலையில், மனித குலத்தில் முக்கியமானவர்களான பெண்களது உடல் போகப்பொருளல்ல, அது ஒரு பொக்கிஷக் கருவூலம், புரிந்து அணுகவேண்டிய நுண்ணியக் களஞ்சியம், தொழுதேத்த வேண்டிய அற்புதப் பெட்டகம் எனும் அறிவார்ந்த நிலை நம்மைச் சேருமெனில் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை நம்மால் தொடர்ந்து நிலை நிறுத்த முடியும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், பண்டைய தமிழ்ச்சமுதாயம், பெண்களின் நலனை மையமாகவே வைத்து மட்டுமே எழுப்பப்பட்டது – இயங்கியது.

    ஆனால், இடைக்காலத்தில் ஏற்பட்ட சிலபல தடைகளால் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பெண்களின் உடல் பற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூடப் பற்றாக்குறையான புரிதல் நிலையே ஏற்பட்டுப் போனது. உடலதனை மதிக்காது – பிறழ்வு பேணும் பேதமையும், உடற்கூறு அறியாது, நவீனம் என்ற பெயரில், பெண்கள் தங்கள் உடலைத் தாமே உதாசீனப்படுத்தும் போக்கும், ஆண்கள் பெண்களை உடல்சார் வகையில் செய்கைகளாலும் மொழிவழக்கிலும் மிக இழிவுடன் நடத்தும் போக்கும் மிகலானது.

    பெண் என்றால் புற அழகு என்பது ஒரு கட்டாய எதிர்ப்பார்ப்பாக மாறிபோனது மட்டுமல்ல, அழகு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையிலான அளவீடு என்பதை அறியாதவர்களாக, மக்கள் தோற்றத்தின் அடிப்படையில் மாதர்களை உயர்த்தியும் தாழ்த்தியும் தாழ்ச்சி செய்யும் இழிநிலையும் தொடர்ந்தவாறுள்ளது. இது சரியான போக்கு அல்ல.

    ஆரோக்கியமான சமூகங்கள் பெண்களின் உடல் மற்றும் மன பலத்தை ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்படுபவை. அழகு அங்கே இன்றியமையாத்தேவையாக எதிர்பார்க்கப்படுவதில்லை. எனவே, பெண்களைப் பற்றிய நம் புரிந்து கொள்ளல் சீர்பட்டாலொழிய, பெண்கள் மதிப்புடன் நடத்தப்பட்டாலொழிய, பலமான சமுதாயம் நிலைபெறவியலாது.

    பெண்ணியமும் பெண் முன்னேற்றமும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக நாம் பிரபலப் படுத்திகொண்டிருக்கிற இன்றைய நாளில் “பெண் உடல்” எனும் விடயம் ஒளிவாகவும் மறைவாகவும், சொல்லாலும், சித்தரிப்பாலும், நடவடிக்கையாலும் ஒழுங்கீனப்படுகிறது; இந்த செய்கைகள், பெண்ணை எவ்வாறு பதம் பார்க்கின்றன என்பதை நாமறிவோம். “பெண் உடல்” எனும் விடயம் அத்தனைக் கூர்மையுடையது என்பதால் பெண் பற்றிய உடல் நலவியல் மற்றும் மருத்துவ இயல் கூறுகளை விரிவாகவும் ஆழமாகவும் பேசும் கடப்பாடு நம்மிடம் உள்ளது. இக்கடப்பாட்டை நிறைவேற்றுமுகமாக, இத்தொடரின் நோக்கமும் நடையும், பெண்ணின் உடலைத் தழுவிச் செல்வதாய் அமையப் பெற்றுள்ளன.

    இவ்வகையில் நம்முள் முதலில் எழும் தலையாய கேள்வி, பெண்ணின் உடல் ஏன் இத்தனைத் தனிக்கவனம் பெறுகிறது என்பதே. சுருங்கச்சொன்னால், பெண் எவளாயினும்அவள் ஒரு தனிப்பிறவியே! உயிரிகள் ஆண் எனவும் பெண் எனவும் பாகுபாடடைந்து இயக்கம் கொள்வது இயற்கையின் ஒப்பற்ற ஏற்பாடு. பரிணாம வளர்ச்சியின் முத்தாய்ப்பான இந்த ஏற்பாட்டினை உற்று நோக்கி, அதனைச் சரியாகப் புரிந்துகொண்டோமென்றால் ஆண் -பெண் பாகுபாட்டின் நோக்கமும் பயனும் ஒழுங்காய்ப் புரியும். உடல் அமைப்பிலும் உடலியக்கத்திலும் பெண் ஆணிலிருந்து மிகவும் வேறுபட்டவள் என்கிற சத்தியத்தைப் புரிந்துகொண்டியங்கும் வாழ் நிலை ஒரு ஒப்பற்ற தெளிவை ஆணிடமும் பெண்ணிடமும் உருவாக்கும், பெண்களின் பால் மதிப்பு மிகும், என்பதில் ஐயமில்லை.

    தொடரும்

    கூகில் படத்திற்கு நன்றி

    Share