Author: நாகேஸ்வரி அண்ணாமலை

  • கென்யா பயணம் – 5

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நேஷனல் ஜியாகிரபிக் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஆப்பிரிக்க சவானாவைப் (African Savannah) பார்த்திருக்கிறேன்.  இப்போது அதை நைரோபி நேஷனல் பார்க்கில் நேரில் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.  கென்யாவில் நிறைய நேஷனல் பார்க்குகள் இருக்கின்றன.  ஒரு பெரிய நகருக்கு அருகில் ஒரு வனவிலங்குகள் வாழும் காடு இருக்கிறது என்பது இந்தப் பார்க்கின் விஷேசம்.  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்துவிரிந்திருக்கும், நீண்டு வளர்ந்த கோரைப் புல் மட்டுமே வளர்ந்திருக்கும் சவானாவின் ஊடே ஒரு வேனில் கச்சா ரோடுகளின் இடையே சென்றபோது பல வனவிலங்குகளைப் பார்க்க முடிந்தது.  ஆங்காங்கே சவானாவுக்கே உரிய குடை போல் வளர்ந்திருக்கும் அகேசியா (Acacia) என்னும் மரங்களையும் பார்க்க முடிந்தது.

    இந்த பார்க் நைரோபியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.  இதன் ஆரம்பத்தில் அனாதை விலங்குகளின் புகலிடமாக ஒரு மிருகக்காட்சிசாலை அமைந்திருக்கிறது.  பார்க்கிற்குள் நுழைவதற்கு முன்பே இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் உள்ள ஒரு மிகப் பெரிய ஒற்றுமை தெளிவானது!  நாங்கள் வேனில் உள்ளே நுழைவதற்குரிய நுழைவுக் கட்டணம் வாங்கச் சென்றபோது ஏற்கனவே சிலர் அங்கு டிக்கெட் வாங்க முயன்றுகொண்டிருந்தனர்.  எங்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு எங்களை வெளியே போகச் சொல்லிவிட்டு அங்கு இருந்த இன்னொரு பார்ட்டியிடம் ஏதோ பேரம் பேசத் தொடங்கினார் டிக்கெட் கொடுப்பவர்.  உள்ளே செல்வதற்கு பெரிய வேன்களுக்கு ஒரு கட்டணமும் சிறிய கார்களுக்கு குறைந்த கட்டணமும் வசூலிக்கிறார்கள்.  மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு வாகனத்தில் செல்பவர்கள் இருந்தால் கட்டணம் அதிகம்.  கென்யாவில் எல்லா இடங்களிலுமே கென்யா நாட்டுப் பிரஜைகளுக்குக் குறைந்த ரேட்.  குழந்தைகளுக்கு இன்னும் குறைந்த ரேட்.  வெளிநாட்டுப் பயணிகளுக்கு உள்நாட்டுப் பயணிகளை விட கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகம்.  இன்னொரு பார்ட்டி ஆப்பிரிக்காவிலுள்ள  இன்னொரு நாட்டிலிருந்து வந்திருந்தவர்கள்.  இவர்களும் வெளிநாட்டுப் பயணிகள் போல்தான் கட்டணம் செலுத்த வேண்டும்.  ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கென்று தனிச் சலுகை எதுவும் கிடையாது.  ஆனால் வெளியிலிருந்து வந்த அந்தப் பயணிகள் உள்நாட்டுப் பயணிகள் ரேட்டில் டிக்கெட் வாங்குவதற்கு டிக்கெட் வினியோகிப்பவரிடம் லஞ்சம் கொடுத்ததாகப் பின்னால் எங்கள் ஓட்டுநர் எங்களிடம் கூறினார்.  மேலும் பெரிய காரில் வந்துவிட்டு சிறிய காருக்குரிய ரேட்டையும் கொடுத்ததாகச் சொன்னார்.

    வனவிலங்குகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த பார்க்கிற்குள் கட்டனம் செலுத்திச் செல்ல முடியும்.  ஆனால் தாங்கள் வேலைசெய்யும் இடங்களிலிருந்து வீடு திரும்பும்போது பார்க்கைச் சுற்றிக்கொண்டு செல்வதர்குப் பதில் இதன் வழியாகச் சென்றால் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் வெகுவாகக் குறையும் என்பதால் பார்க் காவலர்களிடம் லஞ்சம் கொடுத்து இதனூடே செல்கிறார்களாம்.  வளர்ந்துவரும் நாடுகள் எல்லாவற்றிலும் சட்டத்தை மதிக்காத சாபக்கேடு இருக்கிறது.

    சவானாவின் நுழைவாயிலிலிருந்து கொஞ்சதூரம் சென்றதுமே ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது.  ஒரு முறை யானகளைத் திருட்டுத்தனமாகக் கொன்று பல கோடி ரூபாய் பெறுமான தந்தங்களைக் கடத்திச் சென்ற ஒரு திருட்டுக் கும்பலைப் பிடித்து அவர்கள் திருடிச் சென்ற தந்தங்களை இந்த இடத்தில் வைத்து எரித்தார்களாம். அப்படி எரித்தால் தந்தத்திற்குப் பணம் கிடைக்காது என்று யானைகளைக் கொல்லமாட்டார்கள் என்பது நம்பிக்கை. அதன் நினைவாக மேடை போன்ற ஒரு நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள்.  ஆயினும் தந்தங்கள் திருட்டுப் போவது குறையவில்லையாம்.  அதிலும் வளமடைந்து வரும் சீனாவில் தந்தத்தின் தேவை பெருகி வருவதால் ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளைக் கொன்று தந்தங்களைத் திருடுவதும் கூடிக்கொண்டுதான் போகிறதாம்.

    சவான்னாவின் நடுவே சில இடங்களில் தண்ணீர்க் குட்டைகள் இருக்கின்றன.  அவற்றில் தண்ணீர் குடிக்க மிருகங்கள் வருமாம்.  ஒரு குட்டையருகே ஏழெட்டு ஒட்டகச் சிவிங்கிகளைப் பார்த்தோம்.  Gazelle என்னும் ஒரு வகை மான் கூட்டம் கூட்டமாகத் திரிந்துகொண்டிருந்தது.  கினி கோழிகள், காட்டெருமை, காண்டாமிருகம், தீக்கோழிகள்,  வரிக்குதிரை ஆகியவையும் காணக் கிடைத்தன.  சிறுத்தை, புலி போன்றவை இருட்டிய பிறகுதான் வெளியே வருமாம்.  கென்யாவின் சில பார்க்குகளில் இடம்பெயரும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக மலைச் சரிவிலிருந்து இறங்கியதும் ஓடும் நதிக்குள் புகுந்து கடப்பதையும் நதியில் வாழும் முதலைகளுக்கு ஒரு சில காட்டெருமைகள் இரையாவதையும் பர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிறைய உல்லாசப் பயணிகள் வருவார்களாம்.  அங்கெல்லாம் போவதற்கு எங்களுக்கு விருப்பமில்லை.

    ஒட்டகச் சிவிங்கிக்கென்று பார்க்கின் ஒரு மூலையில் ஒரு சரணாலாயம் இருக்கிறது. இதற்கு சிவிங்கி பார்க் (Giraffe Park) என்று பெயர். ஒட்டகச் சிவிங்கியில் இரண்டு இனங்கள் உண்டு.  ஒரு இனம் மறைந்துவருகிறது. இந்த இனத்தைக் காப்பாறுவதற்காக இந்தச் சரணாலயம் ஆரம்பிக்க்ப்பட்டது. இதை ஆரம்பித்தவரும் ஒரு ஐரோப்பியரே.  இதைப் பார்ப்பதற்கும் கூட்டம் வருகிறது. உள்ளே போகக் க்ட்டணம் உண்டு.  ஒரு சிறிய இடத்திற்குள்தான் நாம் போக முடியும். அதில் உயரமான ஒரு மேடை அமைத்திருக்கிறார்கள். அதில் ஏறி நின்றால் ஒட்டகச் சிவிங்கியின் தலை உயரத்தில் நிற்கலாம். நின்றுகொண்டு பக்கத்தில் வரும் ஒட்ட்கசிவிங்கிக்கு தீனி கொடுக்கலாம். கொடுப்பதற்கென்றே ஸ்பெஷலாகச் செய்யப்பட்ட உணவு உருண்டைகள் கிடைக்கின்றன.  ஒட்டகச்சிவிங்கியின் வாயைத் தொடும் அளவில் பக்கத்தில் நின்றுகொண்டு அதன் நாக்கில் உருண்டையை வைக்கலாம். அது நம் கையை நக்கும்.  ஒட்டகசிவிங்கியைப் பக்கத்தில் பார்க்காதவர்களுக்கு இது ஒரு புது அனுபவம்.

    நைரோபியில் பார்க்க வேண்டிய இடங்களில் யானைக் குட்டிகளின் காப்பகமும் ஒன்று (Elephant Orphange).  தந்தத்திற்காகச் சுட்டுக்கொல்லப்பட்ட தாய் யானையின் இளம் குட்டிகளை ரோந்துபோகும் வனஅதிகாரிகள் காப்பாற்றிக் இந்தக் காப்பகத்திற்குக் கொண்டுவருகிறார்கள். வியாதியால் இறந்துபோன தாயின் இளம் குட்டிகளையும் இப்படிக் காப்பாற்றுகிறார்கள்.  யானைக் கூட்டத்ததிலிருந்து பிரிந்த யானைக் குட்டி வழி தவறி, நீர் குடிக்கச் சென்று கிணற்றில் விழுந்துவிடுவதும் உண்டு. இந்தக் குட்டிகளையும் காப்பாற்றிக் காப்பகத்திற்குக் கொண்டுவருகிறார்கள். இந்தக் காப்பகத்தின் நோக்கம் ஐந்தாறு ஆண்டுகள் குட்டிகளைக் கண்ணும்கருத்துமாக வள்ர்த்துப் பின் காட்டில் விட்டுவிடுவது.  அங்கே அவை ஒரு யானைக் கூட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பிழைத்துக்கொள்ளுமாம்.

    ஒரு ஐரோப்பிய தம்பதிக்ள் முதலில் இந்தக் காப்பகத்தை ஆரம்பித்தார்களாம். யானை குட்டி நான்கு வருடங்கள் வரை தாய்ப்பால் குடிக்குமாம்.  அனாதைக் குட்டிகளுக்க்கு மாட்டுப்பால் ஒத்துக்கொள்ளாதாம்.  அதனால் மனிதக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் புட்டிப்பாலை பெரிய பாட்டில்களில் அடைத்துக் கொடுக்கிறார்கள்.  இது தினமும் பதினொரு மணிக்கு நடக்கும்.  இதற்குக் குட்டிகளைக காட்டுக்குள்ளேயிருந்து கூட்டிவந்து ஒரு வளைவுக்குள் விடுவார்கள்.  இந்தக் காட்சியைப் பொதுமக்கள் சுற்றி நின்று பார்கக்லாம். இதற்குக் கட்டணம் உண்டு.  பல உல்லாசப் பயணிகள் இதைப் பார்க்கக் கூடுகிறார்கள்.  கென்யாவின் பள்ளிக் குழந்தைகளையும் பள்ளி நிர்வாகத்தினர் கூட்டிக்கொண்டு வருகிறார்கள்.

    குட்டி யானைகள் வரிசையாக நடந்துவந்து பால் பாட்டில்களுக்கு முன்னால் வந்து நிற்கும் அழகு ரசிக்கத் தகுந்தது.  பாலைக் குடித்துவிட்டு ஒர் மணி நேரம் மண்ணை வாரி இறைத்தும் தண்ணீரில் இறங்கியும் விளையாடுகின்றன.  ஒவ்வொரு குட்டிக்கும் தனிப் பெயர் உண்டு; தனிக் காவலரும் உண்டு.  ஒரு யானைக் குட்டிக்கு வயது நான்கு மாதமே.  தாயை ஒரு நாளிலேயே பிரிந்துவிட்டது.  அன்றிலிருந்து அது காப்பகத்தில் வள்ர்கிறது.  தாயைப் பிரிந்த சோகம் அதன் முகத்தில் இன்னும் காணப்பட்டது.  இது பிழைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

    நாங்கள் காப்பகத்திற்குப் போன அன்று பல நாட்டுப் பயணிகள் வந்திருந்தனர். கென்யாவைச் சேர்ந்த வசதியான ஒரு ஆரம்பப் பள்ளியின் குழந்தைகளும் பள்ளிச் சீருடை அணிந்து வந்திருந்தார்கள்.  ஒரு காவலர் ஒவ்வொரு குட்டியின் கதையையும் சொனன்னார்.  இந்தக் குட்டிகளின் பராமரிப்புச் செலவுக்கு உதவும் வகையில் யாரும் ஆண்டுக்கு ஐம்பது டாலர் செலுத்தித் தத்துஎடுத்துக்கொள்ளலாம்.  ஒவ்வொரு குட்டிக்கும் தத்துஎடுப்பவர்கள் பலர் இருப்பார்கள்.  இவர்களுக்கு மாதம்தோறும் தத்தெடுத்த குட்டியின் வளர்ச்சியை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.  குட்டியின் படத்தையும் அவ்வப்போது அனுப்புவார்கள்,  பார்க்க வந்த பலர் பணம் கொடுத்தார்கள்.

    இங்கு பல நினவுப் பொருள்கள் விற்கப்படுகின்றன.  யானைப் படம் போட்ட பைகள், T ஷர்ட்டுகள், யானை உருவங்கள் முதலியனவற்றைப் பலரும் வாங்கினார்கள்.  இந்தப் பணமும் காப்பகத்துக்குப் போகும்.

    மிருகங்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.  அவற்றை மிருகக் காட்சிச் சாலையில் பார்ப்பதை  விட அவற்றின் இயற்கைச் சூழலிலேயே பார்ப்பது ஒரு தனி இன்பம்.  அந்த இன்பம் எனக்குக் கென்யாவில் நிறையவே கிடைத்தது.

    சரணாலயத்தின் படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/KenyaWildlife?authkey=Gv1sRgCJ67k97mpOaxQQ

    https://picasaweb.google.com/108173580006522327175/SheldrickElephantOrphanage?authkey=Gv1sRgCJn25YaJsOL3Cw

    படங்கள்: மெல்லியல்

    (தொடரும்)

    Share
  • கென்யா பயணம் – 4

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நைரோபியில் எங்களைப் பயண வழிகாட்டி கூட்டிச் சென்ற இன்னொரு இடம் மாநாட்டு அரங்கம் (Convention Centre).   இது வணிக மையம்.  இது கென்யாவின் வணிக வளத்திற்கு ஒரு அடையாளம்.  நைரோபி நகரில் உள்ள கார்களின் எண்ணிக்கை நைரோபி தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று ஒருவர் ஜோக்கடித்தார்.  கிழக்கு ஆப்பிரிக்காவில் டான்ஸானியா, எத்தியோபியா, உகாண்டா, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளில் அதிகம் வளர்ந்திருப்பது கென்யா; ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக வளம் நிறைந்தது கென்யா.  வளர்ந்து வரும் இந்நாட்டின் வளத்தைப் பறைசாற்றுவது இது போன்ற இடங்கள்.  இது பல மாடிகளைக் கொண்டது.  44-வது மாடிக்குச் சென்று நைரோபியின் முழு தோற்றத்தையும் பார்க்கலாம்.  ஒரு பக்கம் பல மாடிக் கட்டடங்கள்; இன்னொரு பக்கம் நைரோபியின் சேரிப் பகுதி.  கென்யாவின் மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நைரோபியிலேயே காணலாம்.

    அடுத்து நாங்கள் சென்றது Nairobi City Market என்று அழைக்கப்படும் மார்க்கெட்.  சென்னையின் பழைய மூர் மார்க்கெட்போன்றது. இங்கு பல வகையான சாமான்கள் விற்கிறார்கள்.  ஆனால் மலிவான சாமான்கள்.  விலையுயர்ந்த சாமான்கள், அமெரிக்கச் சாமான்கள் எல்லாம் அமெரிக்க மாடல் மால்களுக்குச் சென்றுவிட்டன.  இந்த மார்க்கெட்டிற்குள் சென்றுவிட்டால் ‘எங்களிடம் வாங்குங்கள்’ என்று நம்மை கையைப் பற்றி இழுக்காத குறையாகக் கடைச் சொந்தக்காரர்கள் நம்மைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.  அதை விடச் சிரமமானது அவர்களிடம் பேரம் பேசுவது.  நம் இந்தியாவில் போல்தான் அங்கும் பேரம்பேசத் தெரிந்தவர்கள் பாடு கொண்டாட்டம்தான்.  இந்த சிட்டி மார்க்கெட்டின் ஒரு பக்கம் மீன் மார்க்கெட்டும் இருந்தது.  இங்கும் நம் இந்தியாவில் போலவே மீன் அப்போதுதான் பிடிக்கப்பட்டது, மிகவும் fresh-ஆக் இருக்கிறது என்பதை நிரூபிக்க மீனின் தலையின் பக்கவாட்டில் இருக்கும் அலகுகளைத் திறந்து காட்டுகிறார்கள்.  எனக்கு எங்கள் ஊர் மீன்மார்க்கெட்தான் ஞாபகத்திற்கு வந்தது.  அலகுகளின் அடியில் இருக்கும் மீனின் சுவாச உறுப்புக்களான gills  சிவப்பாக இருந்தால் புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் என்று அர்த்தம்.

    நைரோபியின் இன்னொரு முக்கியமான இடம் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி கென்யாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெடி வைத்து அல்கொய்தாவால் தாக்கப்பட்டதை நினைவுகூறும் நினைவுப் பூங்கா.  இந்தப் பூங்காவில் தாக்குதலில் எரிந்த கட்டடத்தின் சில இரும்புக் கம்பிகளை ஒரு உருவமாக வடித்துவைத்திருக்கிறார்கள்.  சம்பவத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் சிறு கண்காட்சியும் இருக்கிறது.  பூங்காவிற்குள் நுழையக் கட்டணம் உண்டு.  இருபது ஷில்லிங்தான்.  இருப்பினும் இங்கே உஹுரு (சுதந்திர) பூங்காவில் போல ஏழைகளைப் பார்க்க முடியவில்லை.

    தாக்குதல் நடந்த பதினைந்தாவது ஆண்டு தினத்தில் – இந்த ஆகஸ்டு ஏழாம் தேதி – நைரோபி விமானநிலையம் தீப்பற்றி எரிந்திருக்கிறது.  இது அல்கொய்தாவின் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருக்கிறது.  பெரிய தீ விபத்தைச் சமாளிக்கும் அளவிற்கு தீயணைப்புச் சாதனங்கள் இல்லாததால் விமானநிலையத்தின் பெரும்பகுதி சேதமடைந்திருப்பதாகத் தெரிகிறது.

    மசாய் பழங்குடி மக்களின் கைவினைப் பொருள்களை விற்கும் திறந்த வெளிச்சந்தை ஒன்று நைரோபியில் தினம் வேறு வேறு பகுதிகளில் நடக்கிறது.  இங்கு வரிசை வரிசையாகக் கடைகளில் மரத்தால், தோலால், துணியால் செய்த பொருள்கள் விற்கப்படுகின்றன்.  இங்கும் பேரம் உண்டு.  ஆனால் சிட்டி மார்க்கெட் அளவு மோசம் இல்லை.  தங்கள் பொருள்களை விற்கும் பழங்குடி மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.  இது பயணிகள் விரும்பி வரும் இடம்.  இந்தச் சாமான்களை வாஙக கென்ய இந்தியர்களும் வருகிறார்கள்.

    நைரோபியின் சாலைகளை ஒட்டிய நடைபாதைகளில் ஏழை வியாபாரிகள் கடை விரித்திருக்கிறார்கள்.  இந்தக் கடைகளில் நம் நாட்டு நடைபாதைக் கடைகளைப் போல வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்கள், செருப்புகள், தயார் உடைகள் முதலியன கிடைக்கும்.  இங்கு சாமான் வாங்க ஸ்வாஹிலி தெரிந்திருக்க வேண்டும்.  ஒரு சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு சந்தில் நெடுகக் காய்கறிக் கடைகள் இருந்தன.  இந்தக் கடைகளில் தேங்காய், பச்சைமிளகாய், பாகற்காய் போன்ற இந்தியக் காய்கறிக்ளும் இருந்தன.  இங்கும் வியாபார மொழி ஸ்வாஹிலியே.  காய்கறிகள் வாங்கும் கென்ய இந்தியப் பெண்களும் இந்த மொழியிலேயே பேரம் பேசுகிறார்கள்.

    சூப்பர் மார்க்கெட்டிலும் டிபார்மெண்ட் ஸ்டோர்களிலும் இந்தியர்கள் உப்யோகிக்கும் பல பொருள்கள் கிடைக்கின்றன.  குக்கர், சாஸ் பேன் போன்ற எவர்சில்வர் பாத்திரங்கள், மிக்ஸர், முறுக்கு முதலான பலகாரங்கள் எல்லாம் கிடைக்கின்றன . பல இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவை.  பல கடைகள் கென்ய இந்தியர்களுக்குச் சொந்தமானவை.

    அமெரிக்க மாடல் மால்களில் கிட்டத்தட்ட அமெரிக்க பிராண்டு சாமான்கள் எல்லாம் கிடைக்கின்றன.  சாக்கலேட்டுகள், சானிடரி நாப்கின்கள், குழந்தைகளுக்கான டயப்பர்கள் ஆகிய எல்லாம் கிடைக்கின்றன.  அமெரிக்காவைப் பின்பற்ற ஏன் இப்படி எல்லா நாடுகளும் துடிக்கின்றனவோ.  அமெரிக்க மாடலிலேயே கடைகள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.  நைரோபி முழுவதும் இப்படிப்பட்ட மால்கள் ஆங்காங்கே இருக்கின்றன.  பணம் படைத்த பகுதியில் இருந்த மால் மிகவும் பெரியதாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இருந்தது.  அதற்கு அருகே இருந்த வீடுகள் பெரிய மான்ஷன்களாக இருந்தன.  இந்த மான்ஷன்களைச் சுற்றியிருந்த மிக உயரமான சுவர்களில் நவீன பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.  பணக்கார அமெரிக்கா, ஏழை அமெரிக்கா என்ற இரண்டு அமெரிக்காக்கள் உருவாவதைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் அறைகூவுவார்கள்.  கென்யாவிலும் இந்த மாதிரியான அரசியல் பேச்சு இருக்கிறதா என்று தெரியவில்லை.  ஆனால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

    தொடரும்

    நைரோபி நகரின் படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

    படங்கள்: மெல்லியல்

    Share
  • கென்யா பயணம் – 3

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நைரோபியில் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவற்றில் ‘நைரோபி நேஷனல் மியுசியமும்’ ஒன்று.  கிழக்கு ஆப்பிரிக்கா பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோது இயற்கை ஆய்வாளர்கள் தாங்கள் சேகரித்த அரும்பொருள்களை சேகரித்துவைக்க ஒரு இடத்தைத் தேடியபோது மியுசியம் ஒன்று அமைக்க அரசு முடிவு செய்தது.  முதலில் ஒரு சிறிய இடத்தில் அமைக்கப்பட்ட மியுசியம் பின்னால் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களையும் சேமித்துவைக்கப் பெரிய இடத்திற்கு மியுசியத்தை மாற்றியது.  அதுவும் போதாமல் பின் இப்போது மியுசியம் இருக்கும் இடத்தில் பெரிய கட்டடம் ஒன்றைக் கட்டி பல பிரிவுகளாக அதை அமைத்தது.  பிரிட்டிஷ் ஆட்சியில் கென்யாவின் கவர்னராக இருந்த ராபர்ட் கோரிண்டன் என்பவரின் பெயரில் (Robert Coryndon)  கோரிண்டன் மியுசியம் என்று அழைக்கப்பட்ட இது 1963-இல் கென்யா சுதந்திரம் அடைந்தபிறகு நைரோபி நேஷனல் மியுசியம் என்ற பெயர் பெற்றது.

    இது நாங்கள் தங்கியிருந்த் ஓட்டலுக்கு மிக அருகாமையில் இருந்ததால் காலை எட்டரை மணிக்கு மியுசியம் திறப்பதற்கு கொஞ்சம் முன்னாலேயே அங்கு இருந்தோம்.  காலை அதைத் திறப்பதற்கு முன் தினமும் அதைச் சுத்தம் செய்வார்கள் போலும்.  சுத்தம் செய்யும் பெண்கள் கற்களினால் ஆன தரையை வாளியையும் துடைக்கும் துணியையும் கொண்டு துடைத்துக்கொண்டிருந்தார்கள்.  வளர்ந்துவிட்ட நாடுகளில் இப்படி கைகளினால் சுத்தம் செய்ய மாட்டார்கள்.  எல்லாவற்றிற்கும் மெஷின்கள் இருக்கும்.

    மியுசியத்தின் முகப்பில் தாயும் சேயுமான பெரிய கற்களால் ஆன சிலை நம்மை வரவேற்கிறது.  ஒரு பக்கமாக பெரிய டைனஸோர் ஒன்றின் மாதிரி இருக்கிறது.  மியுசியத்தைச் சுற்றி பல வகைத் தாவரங்கள் அடங்கிய தோட்டம் இருக்கிறது.  அதில் பல அரிய மரங்கள், செடிகள் வளர்க்கப்படுகின்றன.

    மியுசியத்திற்குள் முதல் முதலாக டிக்கெட் வாங்கி நுழைந்தது நாங்கள்தான்.  மியுசியத்திற்க்குரிய நுழைவுக் கட்டணம் வெளிநாட்டவர்களுக்கு கென்யா நாட்டவர்களை விட மிகவும் அதிகம்.  எல்லா உல்லாசப் பயண இடங்களிலும் இப்படித்தான்.  அதிக தூரம் நடந்தால் எனக்குக் களைப்பாகிவிடும் என்பதால் இம்மாதிரி அதிகம் நடக்க வேண்டிய இடங்களில் சக்கர நாற்காலி ஒன்றை மியுசியம் அதிகாரிகளிடமிருந்து இலவசமாகவோ வாடகைக்கோ எடுத்துக்கொள்வதுண்டு. இங்கும் அம்மாதிரி கேட்டோம்.  அங்கு இரண்டே நாற்காலிகள்தான் இருந்தன.  இரண்டின் சக்கரங்களிலும் போதிய காற்றழுத்தம் இல்லையென்றும் காற்றை அடைத்துத் தருவதாகவும் கூறினார்கள்.  நம் நாட்டில் சைக்கிளுக்கு காற்றடிப்பது போலவே அந்த சக்கர நாற்காலியின் சக்கரங்களுக்குக் காற்றடித்தார்கள்.  இதுவும் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது.  மேலைநாடுகளில் இப்படிக் கைகளால் காற்றடிப்பதைப் பார்க்க முடியாது.

    இந்த மியுசியம் கென்யாவின் பாரம்பரியத்தையும், சரித்திரத்தையும், கலாசாரத்தையும் கலைகளையும் எடுத்துச் சொல்ல அமைக்கப்பட்டது.  கென்யாவின் காடுகளில் அதிகமாகக் காணப்படும் யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், புலிகள், சிங்கங்கள், காண்டாமிருகங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் நகரின் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.  நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் கூட ஒரு ஒட்டகச்சிவிங்கியின் மாதிரி ஓட்டலின் முன் முகப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது.  கென்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உப்பு, மிளகுத் தூள், சர்க்கரை அடங்கிய பாக்கெட்டுகளில் இந்த மிருகங்களின் படங்களைப் பார்க்கலாம். கென்யர்கள் தங்கள் காடுகளில் இருக்கும் இந்த விலங்கினங்களால் மிகவும் பெருமை கொண்டுள்ளார்கள்.  அதன் அடையாளமாக எல்லா இடங்களிலும் இதன் மாதிரிகளைப் பார்க்கலாம்.

    மியுசியத்திற்குள் நுழைந்தவுடனேயே பெரிய யானையின் மாதிரி ஒன்று இருக்கிறது.  மிக நீண்ட தந்தங்களைக் கொண்ட, பிரபலமான இந்த யானை இறந்த பிறகு அதன் உடலைப் பதப்படுத்தி மியுசியத்தில் வைத்திருக்கிறார்கள். இந்த மியுசியத்தின் ஒரு பகுதியில் இம்மாதிரி பல primates-களின் மாதிரிகளை வைத்திருக்கிறார்கள்.  இன்னொரு பகுதியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் பறவைகளின் மாதிரிகள் இருக்கின்றன.  கென்யாவின் சரித்திரத்தை விளக்கும் காட்சிப் பொருள்கள், படங்கள் இன்னொரு பகுதியில் இருக்கின்றன.  பிரிட்டிஷ் அரசு போட்ட கென்யா-உகாண்டா ரயில்பாதை பற்றிய விபரங்களும் ரயிலின் மாதிரிகளும் அவை சம்பந்தப்பட்ட படங்களும் இன்னொரு பகுதியில் இருக்கின்றன.  இக்காலத்திய கலைப் படைப்புகளும் ஒரு பகுதியை அலங்கரிக்கின்றன.  முதல் மனிதன் கென்யாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.  அதற்கு ஆதாரமாக அகழ்வாராச்சியில் கிடைத்த பல அரிய பொருள்கள் ஒரு பகுதியில் இருக்கின்றன.  தனியாக ஒரு பகுதியில் பாம்பு, ஆமை போன்ற ஊரும் மிருகங்களும் வளர்க்கப்படுகின்றன.

    பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து கென்யாவை விடுவித்து கென்யா சுதந்திரம் கிடைக்கக் காரணமாகயிருந்த் முதல் ஜனாதிபதி ஜேமோ கென்யாட்டாவின் வாழ்க்கை வரலாறு, அவர் பிரிட்டிஷை எதிர்த்துச் செய்த சாகசச் செயல்கள் ஆகியவற்றை விளக்கும் கண்காட்சியை இன்னும் சில மாதங்களில் இந்த மியுசியத்தில் திறக்கப் போகிறார்களாம்.  அது சில மாதங்கள் இங்கு இயங்கிவிட்டுப் பின் மற்ற மியுசியங்களுக்கு கொண்டுபோகப்படும்.  (இந்த கென்யாட்டாவின் மகன்தான் இப்போது ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்திவருகிறார்.  இவர் மேல் இனப்படுகொலை வழக்கு ஹேகில் உள்ள அகில உலக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  நாட்டின் நலனுக்காகப் பல தியாகங்கள் புரிந்த ஜேமோ கென்யாட்டாவின் மகன் ஊழல் வழக்கில் ஈடுபட்டிருக்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  ஊழல் புரிந்தவர்களையும் எல்லா நாடுகளிலும் தங்களை ஆட்சி செய்ய மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் போலும்.)

    கென்யாவில் பல இடங்களில் இருக்கும் மியுசியங்கள் எல்லாம் National Museums of Kenya  என்ற அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றன.  எல்லா மியுசியங்களிலும் சிறந்ததாகக் கருதப்படும் நைரோபி நேஷனல் மியுசியம் 1930-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

    மியுசியத்தில் உள்ள கழிப்பறைகள் வளர்ந்துவிட்ட நாடுகளில் காணப்படும் கழிப்பறைகளுக்கு ஒப்பாக மிகவும் சுத்தமாக இருக்கின்றன.  கென்யாவில் எல்லாப் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளும் நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றன.  அநேகமாக எல்லா இடங்களிலும் ஐரோப்பிய மாடல் டாய்லெட்டுகளும் சில இடங்களில் அவற்றோடு இந்திய மாடல் டாய்லெட்டுகளும் இருக்கின்றன.  இந்தியாவில் பொதுக் கழிப்பறைகளை உப்யோகிப்பதை நினைத்தாலே தலை சுற்றும்.  ஏன் நம்மால் அப்படிக் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியவில்லை?

    நைரோபியில் பார்க்க வேண்டிய இன்னொரு இடம் உகுரு (Uhuru) பார்க் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய பார்க்.  உகுரு என்றால் சுவாஹிலி மொழியில் சுதந்திரம் என்று அர்த்தமாம்.  கென்யா சுதந்திரம்அடைந்த பிறகு இப்பார்க்கிற்கு இந்தப் பெயர் வந்ததாம்.  இதில் 80,000 பேர் வரை கூடலாம்.  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியேற்ற பின் இந்தப் பார்க்கிலிருந்து மக்களுக்குத் தன் கொள்கைகளை அறிவிப்பாராம்.

    இந்தப் பார்க்கிற்குள்ளேயே ஒரு சிறிய ஏரி இருக்கிறது.  அதில் பார்க்கிற்கு வரும் உல்லாசப் பயணிகள் படகு விட்டு மகிழலாம்.  சிறு குழந்தைகளை சிறுவருக்கான சிறிய கார்களில் உட்காரவைத்து இதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் பூங்காவிற்குள் உளள வீதியில் தள்ளிக்கொண்டே ஓடுகிறார்கள்.  இதற்குக் கட்டணம் உண்டு.  இப்படித் தள்ளிக்கொண்டே போவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.  சிறு குழந்தைகளுடைய முகங்களில் பலவகையான வர்ணம் கொண்டு சித்திரம் தீட்டுகிறார்கள்.  இதற்கும் கட்டணம் உண்டு.  சிறு குழந்தைகள் பலர் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.  குழந்தைகளை மட்டக் குதிரையில் உட்காரவைத்து குதிரைகளை நடத்திக்கொண்டு போகும் பொழுதுபோக்கும் உண்டு.  குழந்தைகள் அதை வெகுவாக ரசிக்கிறார்கள்.  இதற்கும் கட்டணம் உண்டு.

    இந்தப் பார்க்குக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.  இது ஏழைகள் பலருக்குப் பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது.  நாங்கள் சென்றது ஒரு ஞாயிற்றுக்கிழமை.  அன்று பார்க்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அங்கு வந்திருந்தவர்களில் பலர் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் என்று அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது.  அங்கு விற்கும் தின்பண்டங்களும் நம் நாட்டு எள்ளுருண்டை, குச்சி ஐஸ் போன்றவை.  சிறு குழதைகளுக்கான பலூனும் விற்கப்பட்டன.  கொக்கோ கோலா மாத்திரம் இதற்கு விதிவிலக்கு.  எங்கும் வியாபித்திருக்கும் இறைவன்போல் இந்த கொக்கோ கோலா மாத்திரம் உலகின் எல்லா இடங்களுக்குள்ளும் எப்படியோ புகுந்துவிடுகிறது.

    கென்யாவில் நாங்கள் ஒன்றைக் கவனித்தோம்.  இம்மாதிரி எளியவர்கள் வரும் இடங்களில் கென்ய நாட்டு இந்தியர்களைப் பார்க்கவில்லை.  இந்தியர்கள் பலர் ரயில்பாதை போடும்போது அதில் வேலைபார்க்க இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அரசால் தொழிலாளர்களாக முதல்ல் கொண்டுவரப்பட்டார்கள்.  வேலை முடிந்ததும் பிரிட்டிஷ் அரசு கென்யாவிலேயே தங்க விரும்பியவர்களை தங்க அனுமதித்ததாம்.  அவர்களில் பலர் வாணிபம் செய்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். பின்னர் வணிகம் செய்வதற்கென்றே இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்தவர்களும் உண்டு. இவர்கள் கென்ய நாட்டு மக்களோடு ஒன்றிப் பழகுவதில்லை.  கல்யாண சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை.  அவர்களுடைய குடியிருப்புகள் தனியாக இருக்கின்றன.  கென்யாவின் பொருளாதாரத்தில் அவர்கள் பங்கு முக்கியமாதலால் கென்ய மக்களும் அவர்கள் மீது வன்மம் பாராட்டுவது மாதிரித் தெரியவில்லை.  ‘கென்யமக்கள் நவீனத்தொழில் பற்றித் தெரிந்துகொள்ளுவதற்கு முன்பாகவே அவர்கள் தொழில் நடத்தி வசதியான நிலைக்கு வந்துவிட்டார்கள்’ என்று ஒரு டாக்சி ஓட்டுனர் கூறினார்.

    (தொடரும்).

    நைரோபி பற்றியும் மியுசியம் பற்றியும் சில படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்.

    Nairobi

    https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

    Museum

    https://picasaweb.google.com/108173580006522327175/NairobiNationalMuseum?authkey=Gv1sRgCMbKkI7C59_n9wE

     

    படங்கள்: மெல்லியல்

    Share
  • கென்யா பயணம் 2

    நாகேஸ்வரி அண்ணாமலை

    kenewzz

    நாங்கள் கென்யா ஏர்வேஸில் பம்பாய் வழியாக கென்யாவின் தலைநகரான நைரோபிக்குச் செல்வதென்று முடிவு செய்தோம். கென்யா ஏர்வேஸ் விமானம் எல்லா விமானங்களையும் போல் இருந்தாலும் விமானப் பணியாளர்கள் எனக்கு ஏற்கனவே பரிச்சயமாகியிருந்த விமானப் பணியாளர்கள் போல் இல்லை. அவர்களைப் போல் இவர்கள் நளினமாக நடந்துகொள்ளவில்லை. கடனே என்று இல்லாவிட்டாலும் ஒரு இயந்திர கதியில் உணவைப் பயணிகளுக்குக் கொடுப்பது, வேறு ஏதாவது தேவையா என்று கேட்பது ஆகிய காரியங்களைச் செய்தார்கள். விமானத்தில் நிறைய இடங்கள் காலியாக இருந்தன. பணியாளர்கள் நடந்துகொண்டதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் இன்னும் கொஞ்சம் சேவையின் தரத்தை உயர்த்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.

    நைரோபி விமான நிலையத்தில் போய் இறங்கி விமானத்தை விட்டு வெளியேறியதும் அதை அடுத்து இருந்த பகுதி எல்லா விமான நிலையங்களையும் போல் விஸ்தாரமாகவே இருந்தது. ஆனால் அதன் பிறகு உள்ள பகுதிகள் மிகச் சாதாரணமாக இருந்தன. அமெரிக்காவில் குடியேறல் பகுதி மிக பிரமாண்டமாக இருக்கும். அமெரிக்காவிற்குப் பல நாடுகளிலிருந்தும் விமானங்கள் வந்தவண்ணமாக இருக்கும். குடியேறல் பகுதியில் ஒரு அதிகாரி வரும் பயணிகளைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் இங்கே போங்கள், மற்றவர்கள் அந்தப் பக்க்ம் போங்கள் என்று அரட்டிக்கொண்டிருப்பான். அங்கு இருக்கும் அதிகாரிகள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டிருப்பார்கள். நைரோபி விமானநிலயத்தின் குடியேறல் பகுதி மிகவும் சிறியதாக இருந்தது. இரண்டே அதிகாரிகள் இருந்தனர். கென்யாவிற்கு வரும் பயணிகளுக்கு விசா விமானநிலயத்திலேயே வழங்க வசதி இருந்ததால் அதற்கு இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவ்வளவே.

    சில நாட்கள் தங்குவதற்குரிய விசாவைப் பெற்றுக்கொண்டு விமானநிலையத்தை விட்டுவெளியே வந்தோம். சில்லென்று குளிர்ந்த காற்று வீசியது. அப்படிக் குளிர் அடித்ததே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சாதாரணமாக நாங்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும்போது விமானநிலையத்தை விட்டு வெளியே வந்தால் ஒரே வெக்கையாக இருக்கும். அது மாதிரி அமெரிக்கா சென்றடையும் போதும் கோடை காலமாக இருக்குமாதலால் குளிராக இருக்காது. மேலும் ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் வெக்கையாக இருக்கும் என்று நான் தவறாக எண்ணியிருந்தேன். எங்கள் மாணவ நண்பர்கள் நைரோபி காலநிலை மைசூர் காலநிலை மாதிரி இருக்கும் என்று சொல்லியிருந்தாலும் அவர்கள் சொன்னது மனதில் பதிவாகியிருக்கவில்லை. நல்ல வேளை ஆளுக்கு ஒரு ஸ்வெட்டர் கொண்டுபோயிருந்தோம். வேக வேகமாக அதை எடுத்துப் போட்டுக்கொண்டோம்.

    பூமியில் பூமத்தியரேகைக்கு வடக்கில் இருக்கும் நாடுகள் வடமண்டலம் என்றும் தெற்கே இருக்கும் நாடுகள் தென்மண்டலம் என்றும் அழைக்கப்படுகின்றன. கென்யா நாட்டின் நடுவே பூமத்தியரேகை ஓடுகிறது. அதனால் பூமத்தியரேகைக்கு வடக்கே இருக்கும் பகுதிகள் வடமண்டலத்தைச் சேர்ந்தவை. தெற்கே இருக்கும் பகுதிகள் தென் மண்டலத்தைச் சேர்ந்தவை. கென்யாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் நாட்டின் தலைநகரான நைரோபி தென் மண்டலத்தைச் சேர்ந்ததால் இப்போது, அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், அங்கு குளிர்காலம். குளிர்காலம் என்றாலும் பூமத்தியரேகைக்குப் பக்கத்தில் அவ்வளவு குளிர் இருப்பதில்லை. கடல் மட்டத்திற்கு மேலே 3000 அடி உயரத்தில் நைரோபி இருப்பதால் கொஞ்சம் குளிர்கிறது. சிங்கப்பூர் பூமத்தியரேகைக்கு வடக்கே 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நைரோபி பூமத்தியரேகைக்குத் தெற்கே 100 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இரண்டும் பூமத்தியரேகையிலிருந்து சம தூரத்தில் இருந்தாலும் சிங்கப்பூர் கடல் மட்டத்தில் இருப்பதால் எப்போதும் சென்னையைப் போல வெக்கையாக இருக்கும். நைரோபி கடல்மட்டத்திற்கு மேலே இருப்பதால் எப்போதுமே மைசூரைப் போல கொஞ்சம் குளிராக இருக்கிறது.

    நைரோபி என்ற பெயர் அங்கு வாழ்ந்துவந்த மசாய் பழங்குடி மக்கள் அங்கு ஒடும் நதிக்கு இட்ட பெயர். அதன் மூலப் பெயர் நைலோபி மருவிப். பின்னால் நைரோபி ஆயிற்றாம். மசாய் மக்கள் நாடோடி மக்கள்; ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு இடம்விட்டு இடம் போய்க்கொண்டிருப்பர்கள். இப்போது இம்மக்கள் இந்த நகரத்திலும் அதன் பக்கத்திலும் இல்லை.
    ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கென்யாவின் தலைநகரான நைரோபி ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள மற்ற நகரங்களை விட பின்தோன்றியது; வேகமாக வளர்ந்துவரும் இது அதி நவீனமானது; கிழக்கு ஆப்பிரிகாவில் அதிக உயரத்தில் இருப்பது; மற்ற நகரங்களை விடப் பெரியதும் கூட்.

    ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் ஆதிவாசிகள் வசித்துவந்தனர். ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தியபோது அவைக்ளுக்கிடையே அடிக்கடி போர் நடந்தது. அதனால் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பெர்லினில் ஒரு மாநாட்டைக் கூட்டி தங்களுக்குள் ஒரு ச்மரச உடன்படிக்கை செய்துகொண்டனர். அவரவர் பிடித்துக்கொண்ட இடஙகளை அவரவர் அதிகாரத்தில் வைத்துக்கொள்வதென்றும் பிடித்துக்கொண்ட ஒவ்வொரு இடத்திலும் அந்த இடங்களின் பாதுகாப்பிற்காக துருப்புக்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த மக்களிடம் நாகரீகத்தைப் பரப்ப கிறிஸ்துவ மதத்தை அந்த மக்களிடம் பரப்ப வேண்டும் என்றும் தங்களுக்குள் விதிகளை வகுத்துக்கொண்டனர். இப்படி அந்த நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள இடங்களை ஆக்கிரமித்துக்கொண்ட முறையிலேயே பல நாடுகளின் எல்லைகள் வகுக்கப்பட்டன. உலகில் உள்ள வெள்ளை இனத்தவர்கள்தான் நாகரீகம் அடைந்தவர்கள், மற்ற கருப்பு இனத்தவர்களை நாகரீகப்படுத்தும் ‘பொறுப்பு, சுமை’ வெள்ளை இனத்தவர்களைச் சேர்ந்தது என்று வெள்ளை இனத்தவர்கள் தாங்களாக நினைத்துக்கொண்ட காலம் அது. மற்ற நாடுகளைக் கைப்பற்றி தங்கள் ஆளுகைக்குள் வைத்துக்கொண்டதற்கு அவர்கள் கற்பித்துக்கொண்ட நியாயம் என்றும் சொல்லலாம். இப்படி மனிதனை மனிதன் அடிமை செய்து அரசாட்சி செய்தவர்கள் இப்போது மனித உரிமை பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள்.

    இப்படி ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பிரித்துக்கொண்டபோது ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள இப்போதைய கென்யா, டான்சினியா, எத்தியோப்பியா, உகாண்டா, போன்ற நாடுகளின் பல பகுதிகள் பிரிட்டனின் அதிகாரத்திற்குள் வந்தது. ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து கென்யா வழியாக உகாண்டா வரை பிரிட்டிஷ் அரசு தன் வணிகத்தை வளர்க்க ரயில்பாதை அமைக்க முடிவுசெய்தபோது பல இந்தியர்களை – அப்போது இந்தியாவும் பிரிட்டிஷாரால் ஆளப்பட்டு வந்தது – ரயில்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட அழைத்து வந்தது. ரயில்பாதை அமைக்கப்படும்போது பல இடங்களிலிருந்து வந்தவர்கள் தங்கும் இடமாக அமைந்த நைரோபி ஒரு நகரமாக 1899-இல் உருப்பெறத் தொடங்கியது. தற்காலிக நகரமாகத் தோன்றிய நைரோபி இன்று வெகு வேகமாக வள்ர்ந்துகொண்டிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளிலேயே கென்யாதான் தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்தபடி அதிக வளர்ச்சி பெற்ற நாடு என்று கூறுகிறார்கள்.

    நைரோபியை உலகின் சஃபாரி தலைநகர் என்று குறிப்பிடுகிறார்கள். நாட்டின் மக்க்ள்தொகையில் பத்து சதவிகிதத்தினர் இந்த நகரில் வசிக்கிறார்கள். சுமார் 32 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் நேஷனல் மியூசியம் ஆஃப் கென்யா, சுமார் எண்பதாயிரம் பேர் கூடக்கூடிய கென்யாவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் மக்களுக்கு உரையாற்றும் பெரிய நேஷனல் பார்க், கன்வென்ஷன் சென்ட்ர், நைரோபி சிட்டி மார்க்கெட், விலங்குகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் ஆகியவை இருக்கின்றன. சிறிய வேன்கள் அளவில் நிறைய டொயோட்டக்களும் ஹுயுண்டாக்களும் பவனி வரும் இந்நகரின் பெரிய தெருக்களில் கைவண்டிகளில் சாமான்களை ஏற்றிக்கொண்டு மனிதர்கள் தள்ளிக்கொண்டு வருவதைப் பார்க்கும்போது கென்யாவின் வறுமையும் ஏற்றத்தாழ்வும் மனதை நோகச் செய்கின்றன.

    (தொடரும்)

    Share
  • கென்யா பயணம் 1

    நாகேஸ்வரி அண்ணாமலை

    kenewzz
    எனக்கு வெகு நாட்களாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாட்டைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. பல வருடங்களுக்கு முன் எகிப்துக்குப் போயிருக்கிறேன். அந்த நாட்டை ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரு மாதிரி என்று சொல்ல முடியாது. அமெரிக்க, ரஷ்ய, பிரிட்டிஷ் நாடுகளின் தாக்கம் அங்கு அதிகம். (இப்போது அங்கு பல மாற்றங்கள் நடந்து கொண்டி- ருக்கின்றன.) அதனால் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தேன். வட, தென் அமெரிக்கக் கண்டங்கள், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில் ஒன்றையாவது பார்த்திருப்பதால் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஒரு நாட்டைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை பல நாட்களாக எனக்குள் இருந்து வந்தது.

    நான் பார்த்திருப்பதாகக் கூறியிருக்கும் நாடுகளுக்கு என் கணவருடன் அவருடைய வேலை நிமித்தமாக அவர் போகும்போது போயிருக்கிறேன். சில நாடுகளில் ஆராய்ச்சிக்காக அந்த நாடுகளின் பல்கலைக்கழகங்களில் கணவர் சில மாதங்கள் தங்கியிருந்தபோது அவருடன் நானும் தங்கியிருந்திருக்கிறேன். வேறு சில நாடுகளில் மாநாடுகளில் கலந்துகொள்ளப் போனபோது சில தினங்களே என்றாலும் உடன் போயிருக்கிறேன். ஒரு நாட்டை, ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ளப் பல காலம் எடுக்கும் என்றாலும் அதைப் பற்றிய ஒரு பார்வை (glimpse) குறுகிய காலத்தில் கிடைக்கும். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவுக்குச் செல்ல ஒரு முறை கணவருக்கு வாய்ப்புக் கிடைத்தபோது என்னால் அவரோடு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் பற்றிப் பல முறை ஏங்கியிருக்கிறேன்.

    இப்படிப் பல நாடகளாகக் காத்திருந்த வாய்ப்பு இன்னொரு விதத்தில் கிடைத்தது. நாங்கள் அமெரிக்காவில் வருடத்தில் பல மாதங்கள் தங்கியிருக்க ஆரம்பித்ததும் மைசூர் வீட்டிற்குக் கொஞ்சமாவது பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி மைசூரில் எங்கள் வீட்டு கார் ஷெட்டிற்கு மேல் ஒரு ஃப்ளாட் கட்டி அதை வாடகைக்கு விட்டால் வீட்டின் அருகில் நடமாட்டம் இருந்துகொண்டிருக்கும் என்று நினைத்தோம். ஃபிளாட் என்றால் ஒரு பெரிய அறையில் சிறிய சமையலறை, குளியலறை, ஹால் ஆகியவை எல்லாம் அடங்கிய ஒரு குடியிருக்கும் வச்தி ஃபிளாட்டைக் கட்டி முடித்ததும் யாருக்கு வாடகைக்கு விடுவது என்ற கேள்வி எழுந்தது. எங்களுக்குத் தேவைப்பட்டால் காலிசெய்து கொடுப்பவர்களாகப் பார்ப்பது என்று முடிவு செய்தோம். அந்தச் சமயத்தில் கென்யாவிலிருந்து எங்கள் வீட்டிற்கு மிக அருகில் உள்ள சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இருவர் வாடகைக்கு இடம் இருப்பதாக அறிந்து எங்களிடம் அது பற்றி விசாரிக்க எங்களை அணுகினர். படிப்பு முடிந்ததும் இடத்தைக் காலிபண்ணிவிடுவார்கள் என்பது எங்களுக்குப் பிடித்த அம்சமாக இருந்தாலும் ஒழுங்காக வாடகை கொடுப்பார்களா, வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வார்களா என்ற கேள்விகள் தோன்றத் தொடங்கின. அவர்கள் படிக்கும் கல்லூரியின் முதல்வரைச் சந்தித்து எங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டோம். அவர் ‘அந்தக் கவலையை விடுங்கள். அவர்கள் நல்ல மாணவர்கள். அப்படியே ஏதேனும் தொந்தரவு கொடுத்தால் என்னிடன் வாருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். அவர் இப்படிக் கூறியது எங்களுக்கு மிகுந்த தெம்பை அளித்தது. உடனேயே அந்த மாணவிகளைத் தொடர்பு கொண்டு எங்கள் ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும்படி கூறினோம்.
    அவர்கள் குடிவந்த நாளன்று ஒரு சிறிய லாரியில் தங்கள் சாமான்களைக் கொண்டுவந்தனர். அவற்றைப் பார்த்துவிட்டு , இத்தனை சாமான்களையும் எங்கள் ஃபிளாட்டிற்குள் அடக்கிவிடுவார்களா என்று நான் மலைத்தேன். எல்லா சாமான்களையும் இறக்கிவிட்டுவிட்டு ஒரு மாணவி வெளியே வந்துகொண்டிருந்தார். எல்லாச் சாமான்களையும் வைப்பதற்கு இடம் இருந்ததா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டேன். ‘தேவையான இடம் இருக்கிறது. அதில் ஒரு கஷ்டமும் இல்லை’ என்று அந்தப் பெண் கூறியதும்தான் எனக்கு நிம்மதியாயிற்று.
    அந்த மாணவிகள் இருவரும் நான்கு வருடங்களில் சட்டம் படித்து முடித்த பிறகு இடத்தைக் காலிசெய்யும் நேரம் வந்தது. ‘இனி இவர்களைப் போல் நல்ல வாடகைதாரர்கள் கிடைப்பார்களா? மறுபடி வாடகைதாரர் தேடும் வேலை இருக்கிறதே’ என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது இந்த மாணவிகளே தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவரைக் கூட்டிவந்து எங்களுடைய அடுத்த வாடகைதாரராக அவரை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டபோது எங்களுக்கு மிகவும் நிம்மதியாகப் போயிற்று. இவரும் அதே சட்டக் கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்ததால் அவரைப் பற்றியும் முதல்வரிடம் விசாரித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அவரை அழைத்துவருமாறு கூறினோம். அவர் குடியேறி இரண்டு வருடங்களில் காலி செய்யத் தயாரானபோது இன்னொரு மாணவரைக் கூட்டிவந்தார். இவரும் கென்யா நாட்டைச் சேர்ந்தவரே. இப்படியாகக் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக ஒவ்வொரு வாடகைதாரரும் காலிசெய்யும்போது இன்னொருவரை அறிமுகம் செய்துவிட்டுச் சென்றார். எல்லோரும் கென்யா நாட்டைச் சேர்ந்தவர்கள். இதுவரை அவர்களால் எங்களுக்கு எந்த விதத் தொந்தரவும் இல்லை. இந்தியாவுக்கு வெளியே நாங்கள் இருப்பதால் அவர்களுக்கும் எங்களால் எந்த விதத் தொந்தரவும் இல்லை. ஒரு வாடகைதாரர் காலிசெய்யும்போது இடத்தை நாங்கள் பார்ப்பது கூட இல்லை. புதிதாக வருபவரிடம் எல்லாவற்றையும் நன்றாகப் பார்த்துக்கொண்டீர்கள் அல்லவா என்று கேட்போம். அவர்களும் ஆம் என்பார்கள். நாங்கள் வெளியே இருக்கும்போது ஏதாவது ரிப்பேர் என்றால் அதை எங்கள் பக்கத்து வீட்டு நண்பர் மூலம் செய்து கொடுப்போம். இப்படியாக எங்கள் உறவு சுமுகமாகப் போய்க்கொண்டிருந்ததோடு அவர்களோடு எங்களுக்கு நட்பும் ஏற்பட்டு, அவர்கள் மேல் மட்டுமின்றி கென்யா நாட்டின் மேலும் ஒரு பற்று ஏற்படத் தொடங்கியது. ஆப்பிரிக்க நாடு ஒன்றைப் பார்க்க வேண்டும் என்ற என் ஆவலும் பூர்த்தியாகும் தருணம் வந்தது.

    கென்யாவிற்கு வந்தால் எங்களுக்கு எல்லா உதவிகளும் செய்து தருவதாக அவர்கள் கூறியதும் கென்யாவிற்குப் போகும் ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம். இதுவரை எங்களுக்கு வாடகைதாரர்களாக இருந்த எல்லா மாணவ, மாணவிகளோடும் மின்னஞ்சல் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததால், எங்கள் வீட்டில் இருந்துவிட்டு கென்யாவிற்குத் திரும்பிப் போயிருந்த எல்லோரிடமும் தொடர்புகொள்வது எளிதாக இருந்தது. கென்யாவிற்குப் போன பிறகுதான் தெரிந்தது அந்த நாட்டைச் சேர்ந்தவரின் உதவி எவ்வளவு உபயோகமானது என்பது. முதலில் வாடகைக்கு இருந்த பெண்களில் ஒருத்தி லண்டனில் வேலை பார்க்கிறாள். கென்யாவின் வெளியுறவுத் துறையில் வேலை பார்க்கிறாள். பழைய வாடகைதாரரில் இருவர் பக்கத்து நாடான ரவாண்டாவில் ஒரு கல்லூரியில் வேலைபார்த்துக் கொண்டிருகின்றனர். அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நைரோபியில் இருந்தனர். எங்களை வந்து பார்த்தனர். முடிந்த அளவு உதவிகள் செய்தனர். ஒரு பெண் கென்யாவில் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி நிலையத்தில் வேலைபார்க்கிறாள். இன்னொரு மாணவன் செஞ்சிலுவைச் சஙக்த்தில் வேலை பார்க்கிறான். சாகசச் செயல்களில் ஆர்வம் உடையவன் வன்முறை மலிந்த சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளுக்குப் போகும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறான். எங்கள் வீட்டில் தங்கிப் படித்த எல்லா மாணவர்களும் இப்போது நல்ல நிலையில் இருப்பதாக ஒரு பெண் குறிப்பிட்டாள். அதைக் கேட்க மனதிற்கு இதமாக இருந்தது.

    அமெரிக்காவில் படித்த இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் நல்ல வேலை கிடைப்பதைப் போல இந்தியாவில் பட்டம் பெறும் கென்யா மாணவர்களுக்கு அவர்கள் நாட்டில் நல்ல வேலை கிடைக்கிறது போலும்.

    தொடரும்

    படத்திற்கு நன்றி:

    http://www.worldatlas.com/webimage/countrys/africa/ke.htm#.UeXq1o3I2gQ

    Share
  • மனிதனுக்குள் இப்படி ஒரு மிருகமா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    உலகம் முழுவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. சரி, இனி பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடராது என்று நினைத்து முடித்தால் இன்னொரு கொடுமை பற்றிய செய்தி வருகிறது. டில்லியில் 2012 டிசம்பரில் ஓடும் வேனில் மருத்துவ மாணவிக்கு நடந்த கொடுமை பற்றிப் பத்திரிக்கையில் படித்து அதிர்ந்து போனதோடு இனி கண்டிப்பாக அரசும் காவல்துறையும் ஏதாவது செய்து பெண்களைக் காப்பாற்றுவார்கள் என்று நிம்மதி அடைய முடியவில்லை. இந்தியா முழுவதும் கொதித்து எழுந்து அரசியல்வாதிகள் விழித்தெழுந்து இம்மாதிரிக் கொடுமைகள் நிகழாமல் தடுக்க சட்டம் இயற்றினர். அதன் பிறகும் தொடர்ந்து அப்படிப்பட்ட செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இனி இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்காது என்று நினைத்ததிற்கு மாறாக செய்திகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. பத்திரிக்கைகள்தான் இந்தச் சம்பவங்களை மிகைப்படுத்துகின்றனவா அல்லது இத்தனை குற்றங்கள் நடைபெறுகின்றனவா என்று அனுமானிக்க முடியவில்லை.

    இம்மாதம் அமெரிக்காவில் ஓஹையோ மாநிலத்தில் உள்ள க்ளீவ்லேண்ட் ஊரில் இன்னொரு கொடுஞ்சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது. அதுவும் தொழில்நுட்பத்திலும் வளத்திலும் சிறந்து விளங்கும் அமெரிக்காவில் இப்படி நடக்க எப்படி அனுமதித்தார்கள் என்று நினைத்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

    2002-லிருந்து 2004 வரை ஒரு கொடியவன் மூன்று பெண்களைக் கடத்திக்கொண்டுபோய் ஒரு பாழடைந்த வீட்டில் பதுக்கிவைத்து அவர்களுக்குப் பல கொடுமைகள் புரிந்திருக்கிறான். அந்தப் பெண்களில் ஒருத்தி இவனுடைய மகளின் நெருங்கிய தோழி. மனைவியை பல முறை அடித்து அவளுடைய உடம்பில் பல வகையான காயங்கள் ஏற்படுத்திக் கடைசியில் அவள் இவனிடமிருந்து விவாகரத்து பெற்றிருக்கிறாள். இந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய நீதிமன்றம் அவனுடைய குழந்தைகளைப் பார்க்கக் கூட இவனுக்கு அனுமதி வழங்கவில்லை. அப்படியும் குழந்தைகளை அவ்வப்போது மனைவியிடமிருந்து கடத்திக்கொண்டு வந்திருக்கிறான். இவனுடைய மகளின் தோழியைக் கடத்திவந்த பிறகு இவனுடைய மகளே அது பற்றி ஒரு உரையில் குறிப்பிட்டிருக்கிறாள். அவனுடைய மகன் அது பற்றிப் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறான். இவர்கள் இருவருக்கும் இந்தக் கொடுமையைச் செய்தவன் தங்கள் தந்தைதான் என்று தெரியாது.

    பத்து வருடங்களுக்கும் மேலாக இந்தப் பெண்களை இந்தக் கொடியவன் அடைத்துவைத்திருந்தது அவனுடைய சகோதரர்களுக்குக் கூடத் தெரியாதாம். அடைத்துவைக்கப்பட்ட வீட்டின் அருகில் வசித்துவந்தவர்களுக்கும் தெரியாதாம். அவர்களிடம் அந்தப் பக்கம் போகும்போதும் வரும்போதும் ‘ஹலோ’ சொல்லிவிட்டு சுமுகமாகப் பேசிவிட்டுப் போவானாம். ஆனாலும் அவர்களுக்கு இவன் மூன்று பெண்களைப் பத்து வருடங்களாக அடைத்துவைத்திருக்கும் விஷயம் தெரியாதாம். பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற விஷயங்கள் எப்படித் தெரியாமல் போகும், அதுவும் பத்து வருடங்களுக்கு. மூன்று பெண்களில் ஒரு பெண்ணோடு பெற்றுக்கொண்ட ஒரு பெண் குழந்தையைத் தன்னோடு தன் உறவினர் வீடுகளுக்குக் கூட்டிச் சென்று தன் பேத்தி என்று உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பானாம். அவன் எப்போது அந்தப் பெண்ணைப் பெற்றெடுத்தான் என்று எப்படி அந்த உறவினர்களுக்கு தெரியாமல் போயிற்று? அவன் அப்படி ஒன்றும் பல ஏக்கராக் கணக்கில் விஸ்தீரணமுள்ள வீட்டில், பல காத தூரத்திற்கு அக்கம்பக்கம் யாரும் இல்லையென்ற இடத்தில் வசிக்கவில்லை. எப்படி இவனுடைய தினசரி நடவடிக்கைகளை அதுவும் பத்து வருடங்களுக்குக் கவனிக்காமல் விட்டார்கள்? ஒருவர் அந்தரங்கத்தில் (privacy) இன்னொருவர் தலையிடக் கூடாது என்ற கொள்கையை இத்தனை தூரம் கொண்டுபோக வேண்டுமா?

    இந்தக் கொடூரச் செய்தியை ஜீரணித்துக்கொள்வதற்குள், அமெரிக்காவில் பெண்களின் நலனுக்காகப் பாடுபட்டுவரும் ஒரு பெண் பிரேசில் போன்ற நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில்லை என்று சொல்லி வாய் மூடும் முன் அந்த நாட்டிலேயே இந்தியாவில் நடந்தது போன்ற ஒரு கொடூரச் செயல் நடந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. உலகில் என்ன நடக்கிறது? திடீரென்று மனிதர்களில் சிலர் மிருகங்களாக மாறிக்கொண்டிருக்கிறார்களா? இந்தக் கொடூரங்கள் இனியும் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று நெஞ்சு குமுறுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கையாலாகாத்தனம் ஏற்கனவே இருக்கும் சோகத்தை இன்னும் அதிகரிக்கிறது.

    எழுதுவதற்கே கை கூசும் இன்னும் பல சம்பவங்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

    கடைசியாக இறைவனைத்தான் நாடுகிறேன். நான் தினசரி இறைவனிடம் எனக்காகக் கேட்கும் வரங்களில் இன்னொன்றாக ‘இறைவா, உலகில் இனி ஒரு போதும் எந்தப் பெண்ணிற்கும் இத்தகைய கொடுமைகள் நடக்கக் கூடாது’ என்ற வரத்தையும் சேர்த்துக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை.

    Share
  • ஒபாமாவிற்கு என்ன ஆயிற்று?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இரணடாவது முறையாகப்  பதவியேற்ற ஒபாமாவிற்கு  என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.  முதல் நான்கு ஆண்டுகள் பதவி வகித்தபோது இல்லாத சில குணங்களை இப்போது இவரிடம் காண முடிகிறது.  அவரைத் தேர்ந்தெடுத்த என்னைப் போன்ற பலருக்கு அவர் நடந்துகொள்ளும் விதம் அதிருப்தியைத் தருகிறது.  இஸ்ரேல் நாட்டை எதிர்க்கும் எந்த அமெரிக்க ஜனாதிபதிக்கும் அமெரிக்காவில் வசிக்கும் யூதர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காது என்பது உண்மைதான்.  ஆனால் அதற்காக சென்ற மார்ச் மாதம் இஸ்ரேலுக்குச் சென்றபோது ஒபாமா இஸ்ரேல் அரசு செய்யும் எந்தக் காரியத்தையும் கண்டிக்காமல் இருந்தது சரியா?

    2009-லேயே – அதாவது பதவிக்கு வந்த வருடமே – இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட பகுதியான வெஸ்ட் பேங்கில் தொடர்ந்து குடியிருப்புகளை அமைத்துக்கொண்டே போனதை ஒபாமா கடுமையாகக் கண்டித்தார்.  ஆனால் 2013 மார்ச்சில் இஸ்ரேலுக்குச் சென்றபோது குடியிருப்புகள் பற்றி எந்தப் பேச்சும் எடுக்கவில்லை.  இஸ்ரேல் அரசு செய்யும் எல்லாவற்றையும் ஆதரிப்பதுபோல் இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹுவுடன் மிகவும் குழைந்தார்.  நேத்தன்யாஹுவை அவருடைய செல்லப் பெயரை வைத்துப் பத்து முறை அழைத்தாராம்.  பாலஸ்தீன அத்தாரிட்டி தலைவர் முக்கம்மது அப்பாஸுடன் அப்படி எதுவும் பேசவில்லை.  அதோடு எந்த வித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்குத் தயாராகும்படி அவரை வற்புறுத்தியிருக்கிறார்.  குடியிருப்புகளை நிறுத்தும்படி நேத்தன்யாஹுவிடம் கூறுவதற்குப் பதில் பாலஸ்தீனர்களை இன்னும் பணிந்து போகச் சொல்கிறார்.  இது என்ன நியாயம்?  சென்ற மாதம் வெளிவந்த Brokers of Deceit என்னும் புத்தகத்தில் அதன் ஆசிரியர் ரஷீத் கலிடி (Rashid Khalidi) கூறியுள்ளபடி அமெரிக்கா மத்திய கிழக்கில் அமைதி நிலவ எடுக்கும் முயற்சிகளில் நடுவர் மாதிரி நடந்துகொள்ளவில்லை; இஸ்ரேலுக்காக வாதாடும் வழக்கறிஞர் போல்தான் நடந்துகொள்கிறது.  இப்போது உலகிலேயே பலம் வாய்ந்த அமெரிக்கா மத்திய கிழக்கில் அமைதி நிலவவும் தன்னால்தான் முடியும் என்று நினைப்பதால் எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அத்தாரிட்டிக்கும் இடையில் சமாதானம் செய்யப் பார்க்கிறார்கள்.  மேலும் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டிய அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரைச் சரித்திரத்தில் எடுக்கவும் விரும்புகிறார்கள்.  ஒபாமாவும் இந்த விதிக்கு விலக்கல்ல.  அதற்காக இப்படியா நடந்துகொள்வது?

    ஏப்ரல் 25-ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி புஷ் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதிகளுக்கான நூலகம் மற்றும் மியுசியத்தின் (Presidential Library and Museum) திறப்பு விழாவில் ஒபாமா புஷ்ஷை ஒரேயடியாகப் புகழ்ந்திருக்கிறார்.  இப்போது அமெரிக்காவில் இருக்கும் இம்மாதிரியான நூலகங்கள் நாற்பத்தி மூன்று இருக்கின்றனவாம்.  இதில் பதிமூன்று நூலகங்களை தேசிய ஆவணச்சாலை மற்றும் ஆவண நிர்வாகத் துறை(National Archives and Records Administration) நிர்வகித்து வருகிறது.  மற்றவை தனியார் பராமரிப்பில் இருக்கின்றனவாம்.  முதல் முதலாக 1939-இல் அப்போது ஜனாதிபதியாக இருந்த ஃப்ராங்ளின் ரூஸ்வெல்ட் தன்னுடைய பதவிக் காலத்தில் ஏற்படுத்திய ஜனாதிபதி ஆவணங்களை நூலகம் ஒன்றில் சேர்த்துவைக்க ஜனாதிபதிகளுக்கான நூலகத்தை ஆரம்பித்து வைத்தாராம்.  அதன் பிறகு பதவி வகித்த எல்லா ஜனாதிபதிகளுக்கும் இப்படிப்பட்ட நூலகங்கள் இருக்கின்றன.  லிங்கன் உட்பட பழைய ஜனாதிபதிகளுக்கும் இப்படி நூலகம் திறக்கும் வழக்கம் ஏற்பட்டது.  இப்போது இந்த நூலகங்களை ஜனாதிபதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் செய்த தவறுகளை திரித்துக் கூற அல்லது அந்தக் காரியங்கள் சரியென்று வாதிட பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள்.

    இப்போது இது முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் முறை.  அவருடைய மாநிலமான டெக்ஸாஸில் அவர் பெயரில் ஒரு நூலகத்தைத் திறந்திருக்கிறார்கள்.  இந்த நூலகத்தை நிர்மாணிக்க 250 மில்லியன் டாலர் நன்கொடை பெறப்பட்டிருக்கிறது.  புஷ்ஷிடமிருந்து நன்மை பெற்றவர்கள் கொடுத்தது.

    இந்த நூலகத் திறப்பு விழாவிற்கு புஷ்ஷின் தந்தை உட்பட முன்னாள் ஜனாதிபதிகள் மூவரும் இப்போதைய ஜனாதிபதி ஒபாமாவும் அவர்களுடைய மனைவிமார்களும் வந்திருந்தனர்.  அப்போதுதான் ஒபாமா புஷ்ஷை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளினார்.  இம்மாதிரி சந்தர்ப்பங்களில் நூலக நாயகரைக் கடுமையாக விமர்சித்திருக்க முடியாதுதான்.  ஆனால் அதற்காக இப்படிப் புகழ்ந்து தள்ள வேண்டுமா?  ‘ஜனாதிபதி புஷ்ஷை (அமெரிக்காவில் எந்தப் பதவி வகித்தவரையும் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகிய பிறகும் அந்தப் பதவியின் பேரில்தான் அழைக்கிறார்கள்.  உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதிகள் எல்லோரையும் ஜனாதிபதி என்றே அழைக்கிறார்கள்.  ஒபாமாவோடு தேர்தலில் போட்டியிட்ட ராம்னி பல வருடங்களுக்கு முன் கவர்னர் பதவி வகித்ததால் அவரை எப்போதும் கவர்னர் என்றே அழைத்தார்கள்.  இவர்கள் ’முன்னாள்’ ஆவதில்லை!) தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்.  ஏனெனில் அவர் தன்னுடைய கொள்கைகளில் பிடியாக இருப்பவர்.  அவருக்குப் போலியாக நடிக்கத் தெரியாது.  அவர் செய்யும் எதையும் சீரியஸாக எடுத்துச் செய்வார்.  தன்னைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்” என்று புகழ்ந்துவிட்டு,  அவர் ஒரு நல்ல மனிதர்’ என்று முத்தாய்ப்பும் வைத்திருக்கிறார்.

    புஷ்ஷின் கொள்கைகளால்  அமெரிக்கா போகும் திசை சரியில்லை  என்று தான் நினைத்ததாலும் புஷ் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான், ஈராக் சண்டைகளினால் உலக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட படிம வீழ்ச்சியிலிருந்து அமெரிக்காவை மீட்கப் பாடுபடப் போவதாகவும் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய ஒபாமா, இந்த நிகழ்ச்சியில் அந்த யுத்தங்களைப்பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் புஷ்ஷின் கொள்கைப் பிடிப்பு பற்றி ஏதேதோ கூறியிருக்கிறார்.  ஜனாதிபதியாக இருந்தவர்கள் ‘இம்மாதிரி நூலகங்களைத் திறந்து சரித்திரத்தையே திருத்தி எழுதப் பார்க்கிறோம்’ என்று கிளிண்டன் சொல்லியது மாதிரி ஏதாவது ஜோக் மாதிரிச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

    புஷ்ஷை இப்போது  குஷிப்படுத்தும் தேவை ஒபாமாவுக்கு  ஏன் ஏற்பட்டிருக்கிறது  என்று தெரியவில்லை.  இரு  கட்சிக்காரர்களையும் அணைத்துப் போவதாக அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒபாமா புஷ்ஷை இப்படிப் புகழ்ந்தால்தான் குடியரசுக்கட்சி அங்கத்தினர்களை தனக்குச் சாதகமாகக் காரியங்கள் செய்யவைக்கலாம் என்று நினைக்கிறாரா?  இவருக்கு எந்த நல்ல பேரும் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் குடியரசுக் கட்சிக்காரர்களைப் பற்றி இவருக்குத் தெரியவில்லையா, என்ன?

    தியாகம் செய்வதற்கு இனி அவர்களிடம் எதுவும்  இல்லை என்று ஏழைகளின் சார்பில் அன்று வாதிட்ட ஒபாமாவின் சுருதி இன்று இறங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையைச் சரிக்கட்ட காங்கிரஸ் மானாவாரியாக அரசின் பல திட்டங்களில் செலவைக் குறைக்கச் சொல்லியது. அதில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் ஒன்று. விமான நிலையங்களின் செலவைக் குறைப்பதும் ஒன்று. இதனால் விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்படுகிறது. விமானத்தில் பயணம் செய்பவர்கள் வசதியானவர்கள். அவர்கள் குரல் எழுப்பினார்கள். இதனால், காங்கிரஸ் விமான நிலையங்களின் செலவிற்கு பட்ஜெட் குறைப்பிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. ஆனால், ஏழைகளின் கல்விக்கு அரசு செய்யும் செலவுக்கு விலக்கு அளிக்கவில்லை. முதல் விலக்கை ஒப்புக்கொண்ட ஒபாமா இரண்டாவது விலக்கிற்குப் போராடவில்லை.கைவைத்திருக்கிறார்.  ஆனால் அதே சமயம் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தும் விமானநிலையங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களைக் குறைத்து செலவைக் குறைக்க முற்பட்டதை இப்போது வாபஸ் வாங்கியிருக்கிறார்.

    வெளிநாட்டு விவகாரங்களிலும்  மாறிவிடுவாரோ என்று பயமாக  இருக்கிறது.  இஸ்ரேல் பிரதம  மந்திரி நேத்தன்யாஹுவின் வற்புறுத்தலால் ஈரானின் மீது படையெடுத்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.  சிரியாவின் உள்நாட்டுப் போரில் அமெரிக்காவை ஈடுபடுத்திவிடுவாரோ என்றும் பயமாக இருக்கிறது.  ஆளில்லா ட்ரோன் தாக்குதலைச் (drone attack) செய்வதைப் பார்த்தால் இவர் ஒரு சமாதான விரும்பியா மனித உரிமைகளில் நாட்டமில்லாதவரோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

    சமீபத்தில் அடையாளம் பதிப்பகத்தார் வெளியிட்ட ‘அமெரிக்க அனுபவங்கள்’ என்ற என் புத்தகத்தின் முன்னுரையில் கடைசியில் ‘ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது.  அவருடைய பதவிக் காலத்தில் உலகில் நன்மை மட்டுமே விளையும் என்று மகிழலாம் என்று எழுதியிருந்தேன்.  நண்பர்கள் சிலர் ‘நன்மை மட்டுமே விளையும் என்று மகிழலாம்’ என்பதற்குப் பதில் ‘மகிழலாமா?  பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று மாற்றலாமே என்றார்கள். ஆனால் நான் மாற்றவில்லை. இப்போது நான் ஒபாமாவைப் பற்றிச் சொன்னது பொய்த்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

    Share
  • அமெரிக்கப் பெண்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கப் பெண்கள்  எல்லாவற்றிலும் ஆண்களுக்குச் சமமாகத் தாங்களும் செயல்பட  வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  இப்போது ராணுவத்திலும் ஆண்களோடு சமஉரிமை வேண்டும் என்று கேட்கிறார்கள்.  ஆண்களுக்குத் தரப்படும் எல்லாப் பதவிகளும் இவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமாம்.  ஆண்கள் செய்யும் எல்லா முரட்டு வேலைகளையும் (பெரிய பளுக்களைத் தூக்குவது இதில் ஒன்று), செய்வது, ஈவு இரக்கமற்று எதிரிகளைக் கொல்வது, சண்டையில் சகாக்கள் அடிபட்டு வேதனையால் துடிப்பதையும் உயிருக்குப் போராடுவதையும் பார்த்து மனதைக் கல்லாக்குவது என்று ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் இவர்களும் செய்ய வேண்டுமாம்.  இதற்காக இராணுவத்தில் எல்லா வேலைகளையும் பெண்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற விதியை ராணுவ அமைச்சர் அமுகலுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.  சம உரிமைகளுக்காகப் போராடுவதற்கு ஒரு எல்லையே இல்லையா?  நான் எப்போதும் கூறுவதுபோல் இயற்கை  பெண்களையும் ஆண்களையும் ஒன்றாகப் படைக்கவில்லை.  ஆணின் உடம்பிற்குள்ள பலம் பெண்ணின் உடம்பிற்கு இல்லை.  பெண்ணால்தான் பிள்ளை பெற முடியும்.  சம உரிமை வேண்டும் என்பதால் ஆண்களையும் பிள்ளை பெறும்படி இவர்களால் பணிக்க முடியுமா?

    மேலும் இராணுவத்தில் பணிபுரியும்  பல பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுகிறார்கள்.  ஆண்களுக்கும் இந்தக் கொடுமை நடக்கிறதாம்.  இருந்தாலும் இப்படிப் பெண்கள்  தேவையில்லாமல் ஆபத்திற்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள  வேண்டுமா?

    எனக்குத் தெரிந்த ஒரு  பெண் ஒரு டிபார்ட்மெண்ட் கடையில் மெத்தைகள் விற்கும் பகுதியில் மேனேஜராக வேலைபார்க்கிறாள்.  இவள் மேனேஜர் என்பதால் மெத்தைகளை  இவளே தூக்க வேண்டியதோ நகர்த்த  வேண்டியதோ இல்லை.  ஆனாலும்  குழந்தை பெற்றுக்கொண்ட  ஒன்றரை மாதங்களிலேயே வேலைக்குச் சேர்ந்து (அதற்கு மேல் விடுமுறை இல்லை) கனமான மெத்தைகளைத்  தூக்குகிறாள்.  தன்னால்  இனியும் இந்த மாதிரி வேலைகளைச்  செய்ய முடியும் என்பதைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது போல் இருக்கும் இவள் செய்யும் வேலை

    குழந்தை பெறுவது மட்டுமில்லை, அதன் பிறகு கொஞ்ச காலத்திற்காவது பாலூட்டி வளர்க்க வேண்டியது பெண்ணின் கடமை ஆகிறது.  இந்தக் கடமையையும் ஆண் சேர்ந்து சுமக்க வேண்டும் என்கிறார்களா?  பாலுறவுச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்டதால் இன்று சமூகத்தின் தூண்களில் ஒன்றான குடும்பம் என்ற அமைப்பு வலுவிழந்து போயிருக்கிறது.  இப்போது இராணுவத்தில் பணிபுரிய விரும்புவதால் இந்த அமைப்பு இன்னும் வலுவிழக்கும் என்று ஏன் இவர்கள் உணரவில்லை?  மேலும் பல ஆண் போர்வீரர்களே இராணுவத்தில் பணிபுரியும்போது அங்குள்ள கோரங்களைப் பார்த்துவிட்டு மனவியதியால் (Post traumatic disorder) பாதிக்கப்படுகிறார்கள்.  சிலர் இந்த வியாதியின் காரணமாக கொலைகாரர்களாகவும் மாறுகிறார்கள்.  ஆண்களே இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டால் பெண்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவார்கள்?  பெண்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகித்துச் செய்யக் கூடிய வேலைகள் எத்தனையோ இருக்கின்றன.  இராணுவத்தில் சில வேலைகள் பெண்களுக்கு மறுக்கப்படுவதால் பெண்களுக்கு ஆண்களோடு சம வேலைவாய்ப்புகள் இல்லையாம்.  அதனால் போராடித் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டார்களாம்!  அமெரிக்கா செல்லும் திசை சரியில்லை என்று நான் நினைப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.  இராணுவத்தில் எந்த வேலைக்கும் பெண்களும் நியமிக்கப்படலாம் என்ற விதியும் அந்தக் காரணங்களில் ஒன்று.

    சில தினங்களுக்கு முன் வந்த ஒரு செய்தி பெண்கள் குற்றம் புரிவதிலும் ஆண்களோடு தங்களுக்குச் சமஉரிமை வேண்டும் என்று கேட்பது போல் இருக்கிறது.

    டெலவேர் என்னும் மாநிலத்திலுள்ள லிங்கன் என்னும் ஊரைச்  சேர்ந்த மார்கரெட் ஸ்மித் என்னும் 89 வயதான மூதாட்டி வரப் போகும் ஈஸ்டர் பண்டிகைக்காக தன் வீட்டிற்கு வரப் போகும் உறவினர்களுக்குப் பரிசுகள் வாங்கக் கடைக்கு தன் பியூக் காரில் சென்றார்.  இவர் உயரம் 4’ 11” தான்.  தாட்டியான உடம்பில்லை.  காரின் ஸ்டியரிங்கைப் பிடித்து ஓட்டுவதற்கு டிரைவர் இருக்கையின் மீது ஒரு தலையணைய உயரத்திற்காக வைத்திருந்தார். வழியில் ஒரு இடத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று எண்ணி அந்தக் கடையின் முன் உள்ள கார்கள் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தினார்.

    இவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்ப்போம். லிங்கன்  ஊரின் ஸ்லாட்டர் நெக் என்னும்  தெருவில் பெற்றோரின் பன்னிரெண்டு குழந்தைகளில் ஒருவராக மார்ச் 1924-இல் பிறந்தார்.  தந்தை தொழிற்சாலையில் வேலைபார்த்ததோடு விவசாயமும் செய்துவந்தார். பெரும்பான்மையாக கருப்பு அமெரிக்கர்கள் வாழும் இடம் ஸ்லாட்டர் நெக்.  அவர்கள் வீடு, நிலம், பள்ளி எல்லாம் அங்குதான்.  அவர்கள் இறைவனை வழிபடும் சர்ச் கூட அங்குதான் இருக்கிறது. அங்குள்ள பள்ளியிலேயே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பிலடெல்பியாவிற்குப் போய் முடி அலங்காரம் செய்யும் படிப்பை முடித்துவிட்டு மறுபடி ஸ்லாட்டர் நெக்கிற்கே திரும்பி அங்கு ஒரு அழகு நிலையத்தைத் துவங்குகிறார்.  முதல் திருமணம் விவாகரத்தில்முடிந்தது; இரண்டாவது கணவர் இளவயதிலேயே இறந்துவிட்டார்.  மூன்றாவது கணவரோடு 42 வருடங்கள் வாழ்ந்தார்.  2010-இல் அவர் இறந்துவிட்டார்.

    எல்லோரிடமும் மார்கரெட் அன்பாகப் பழகுவார்.  சர்ச்சில் பாட்டுப் பாடுவார். தன்னார்வத் தொண்டு செய்வார்.  இவருடைய அழகு நிலையத்திற்கு பல மைல் தொலைவிலிருந்து வருபவர்களும் உண்டு.  உள்ளூரில் இவருக்கு நல்ல பெயர்.  பத்து வருடங்களுக்கு முன் தொழிலிருந்து ஓய்வு பெற்றார். பக்கத்து வீட்டுக்காரர் இறந்து போனதும் அவருடைய பூனையை மிகவும் அன்போடு வளர்த்து வந்தார்.

    கார் நிறுத்துமிடத்தில்  காரை நிறுத்தியிருந்த இவரை இரண்டு இளம் பெண்கள் – வயது 15,14 – அணுகி நகரின் அடுத்த கோடிக்குப் போக வேண்டும் என்றும் தங்களை அவர் அவருடைய காரில் கூட்டிச் சென்றால் பனம் கொடுத்துவிடுவதாகவும் கூறினர்.  முதலில் தயங்கிய மூதாட்டி பின் அவருக்கே உரிய இரக்க சுபாவத்தினால் அவர்களைத் தன் காரில் கொண்டுவிடுவதாகவும் ஆனால் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் கூறி அவர்களைத் தன் காரில் ஏற்றிக்கொண்டார்.  அந்தப் பெண்கள் மீது இரக்கம் காட்டியதுதான் அவர் செய்த பெரிய தவறாகப் போய்விட்டது.

    காருக்குள் ஏறியவுடனேயே  கார்ச் சாவியை மூதாட்டியிடமிருந்து  பறித்துக்கொண்ட அந்த இரு  பெண்களும் மூதாட்டியை கார் டிக்கிக்குள் தள்ளிப் பூட்டிவிட்டு காரை ஓட்டத் தொடங்கினர். இடையில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி டிக்கியைத் திறந்து மூதாட்டியிடமிருந்த 500 டாலர் பணத்தைப் பறித்துக்கொண்டு மறுபடி டிக்கியிலேயே வைத்துப் பூட்டினர்.  அவரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்டனர்.  இரண்டு நாட்கள் நாற்பது டிகிரி குளிரில் ஆகாரமும் இருதய வியாதிக்கும் இரத்த அழுத்தத்திற்கும் தேவையான மருந்துகளும் இல்லாமல் அந்த டிக்கியில் காலம்கழித்த அவரை மறுநாளைக்கு மறுநாள் டிக்கியிலிருந்து விடுவித்து ஒரு கல்லறைத் தோட்டத்தில் விட்டுவிட்டு அந்தப் பெண்கள் ஓடிவிட்டனர்.

    எங்கிருக்கிறோம் என்பதே தெரியாமல்  மூதாட்டி வெறும் கால்களோடு அந்த மண் ரோட்டில் தவழ்ந்து வந்துகொண்டிருந்ததை நல்ல வேளையாக ஒரு பெண் பார்த்து அவரை அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்.

    ஒரு மூதாட்டியை இப்படி வஞ்சித்து  அவரிடமிருந்து பணத்தைத் திருடி,  அவரை டிக்கியில் இரண்டு நாட்கள் இருக்கும்படி செய்து, பட்டினி போட்டு அரக்கத்தனமாக ஆள் நடமாட்டமில்லாத ஒரு கல்லறைத் தோட்டத்தின் அருகில் அம்போ என்று விட்டுவந்த இந்த அரக்க அமெரிக்கப் பெண்களை எதில் சேர்ப்பது?  இவர்கள் ஆண்களுக்கு நிகராகக் குற்றம் புரிகிறார்களா?

    இந்தியாவில் இப்படிப்பட்ட வக்கிர நடத்தை கொண்ட பதின்ம வயதுப் பெண்களை சமூகம் உருவாக்காது  என்று நினைக்கிறேன்.

    அமெரிக்கப் பெண்கள் தங்கள் உடல் அமைப்பை மீறி இயற்கை எல்லையைத் தாண்டினால் அது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று நினைக்கிறேன்.

    Share
  • இந்தியக் கணவன்மார்களும் அமெரிக்க மனைவிமார்களும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்தியக் கணவன்மார்கள் மீதும் அமெரிக்க மனைவிமார்கள் மீதும் எனக்கு மிகுந்த கோபம் உண்டு.  இந்த இரண்டு வகையினரும் தங்கள் வாழ்க்கைத்துணையை சரியாக நடத்துவதில்லை என்பது என் கணிப்பு.  இந்த விதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்னை மன்னிப்பார்களாக.  இந்த இரண்டு வகையினரையும் தலைப்பில் ஒன்று சேர்த்திருப்பதால் இவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமைகளையோ அல்லது வேற்றுமைகளையோ கூறப் போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.  இரண்டு வகையினரையும் பிடிக்காது என்ற ஒரே காரணத்தால்தான் இவர்களைத் தலைப்பில் ஒன்றாகச் சேர்த்திருக்கிறேன்

    முதலாவது இந்தியக் கணவன்மார்களைப் பற்றிப் பார்ப்போம்.  ஏழைக் குடும்பங்களில் தவிர போன தலைமுறை வரை இவர்கள்தான் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வெளியில் போய் பணம் சம்பாதித்துக்கொண்டு வந்தார்கள்.  வெளியில் போய் பலரோடு பழகி அல்லது போட்டிபோட்டு பணம் சம்பாதிப்பது அப்படியொன்றும் எளிதான காரியம் இல்லைதான்.  மனிதன் மிருகங்களை வேட்டையாடிக்கொண்டு ஒரு இடத்தில் நிலைபெறாமல் நகர்ந்துகொண்டேயிருந்த காலத்திலிருந்து கணவன்மார்கள்தான் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்து வந்தார்கள்.  அதனால் எப்போதுமே கணவன் கை ஓங்கியிருந்திருக்கிறது.  மனைவி மட்டும் சும்மா இருந்தாளா என்ன?  அவளும் மற்ற குடும்ப வேலைகளைக் கவனித்து வந்தாள்.  இதோடு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதுவும் இவள் வேலையாயிற்று.  ஆனால் அன்று முதல் இன்று வரை பெண்ணிற்கு அவள் செய்த வேலைகளுக்கு எந்த வித அங்கீகாரமும் இல்லை; எந்த சம்பளமும் இல்லை.  (Working women என்கிறார்களே அது வெளியில் போய் வேலைபார்க்கும் பெண்களை மட்டும்தான் குறிக்கும்.  வீட்டில் இருந்துகொண்டு காலை முதல் இரவு வரை மாடாக உழைக்கும் பெண்களை இதில் சேர்ப்பதில்லை.  அவர்கள் ஒரு சம்பளச் செக்கைக் கொண்டுவரவில்லை என்பதாலா?)  அது மட்டுமல்ல, அவளுடைய வாழ்வாதாரத்திற்கே தான்தான் மூல காரணம் என்பது போல் கணவன் நடந்துகொள்கிறான்.  இது காலம் காலமாக கிட்டத்தட்ட இந்திய சமூகங்கள் எல்லாவற்றிலும் நடந்து வந்திருக்கிறது.  வட இந்தியாவில் மிகச் சமீப காலம் வரை திருமணம் செய்துகொண்டு கணவன் வீடு சென்ற பெண்கள் பிறந்த வீட்டிற்குத் திரும்ப வருவதேயில்லை.  இப்போது அதெல்லாம் மாறியிருக்கும்  என்று நினைக்கிறேன்.

    கணவன் தன்னை ஏன் இப்படி அடக்கி ஆள வேண்டும் என்று இந்த மனைவிமார்களும் எண்ணிப் பார்ப்பதில்லை.  கணவன் சம்பாதித்துக்கொண்டு வருவதால் குடும்பத்தை நிர்வகிக்கும் எல்லா உரிமைகளும் கணவனுக்குத்தான் உண்டு என்று மனமார ஏற்றுக்கொள்கிறார்கள்.  இப்படி எல்லா மனைவிமார்களும் நடந்துகொள்வதால் சம்பாதிக்காத கணவன்மார்களின் மனைவிமார்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள்.  இதற்கு முக்கிய காரணம் சமீபகாலம் வரை மனைவி இறந்துவிட்டால் கணவன் மறுமணம் செய்துகொள்ளலாம்;  ஆனால் கணவன் இறந்துவிட்டால் இவளுடைய வாழ்க்கையே அதோடு நின்றுவிடும்.  கணவன் இறந்துவிட்டால் அவனோடு மனைவியும் அவனுடைய சிதையில் எரிந்து சாம்பலாவதுதான் தலையாய கற்பு என்று வரையறுத்த சமூகமல்லவா நம் சமூகம்.  அப்படி இருக்கும்போது மனைவி கணவனுக்காக எதுவும் செய்யத் தயாராகிறாள்.  கணவன் நலம்தான் தன் நலம் என்று எண்ணத் தொடங்குகிறாள்.  இதனால்தான் வீட்டிற்கு வந்த மருமகளைக் கணவனும் அவனுடைய பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் சேர்ந்து அதிக வரதட்சிணை கேட்டு தீ வைத்துக் கொளுத்துகிறார்கள்.  ஆனால் அதே சமயம் மகளுடைய கணவனை அவளுடைய பெற்றோர் தீ வைத்துக் கொளுத்தியதாக சரித்திரமே இல்லை.

    இந்தியக் கணவன்மார்கள் எப்படியிருந்தாலும் சரி – படித்தவன், படிக்காதவன், பணக்காரன், பணமில்லாதவன், அழகானவன், அழகில்லாதவன் – தாங்கள் தங்கள் மனைவியை விட மேலானவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.  கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று போதித்த சமூகமல்லவா.  கணவன்மார்களும் தங்கள் மனைவிமார்களை எப்படியும் நடத்தலாம் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.  மனைவி தன்னைத் தவிர வேறு யாரையும் மனதில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் இந்தக் கணவன்மார்கள் திருமணத்திற்கு வெளியே வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்துக்கொள்வது அப்படியொன்றும் பெரிய தவறு என்று நினைப்பதில்லை.  ஏனெனில் சமூகமும் அப்படித்தான் நினைக்கிறது.  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் பெண்களுக்கே உரியவை.  கணவன்மார்களுக்கு இவற்றில் எந்த விதப் பங்கும் இல்லை.

    இதற்கு மேல் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் பெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியம் என்று வலியுறுத்தி வந்தார்கள்.  பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் எடுத்த ஒரு படத்தில் கதாநாயகன் கதாநாயகியை திருமணத்திற்கு முன் கெடுத்துவிடுகிறான்.  தவறு செய்துவிட்டதாக நினைத்து நினைத்து மனம் புழுங்குகிறாள் கதாநாயகி.  பின்னால் தன்னைக் கெடுத்தவனையே தன் கணவனாக அடைந்து நிம்மதி அடைகிறாள்.  ஆனால் கதாநாயகனுக்கு அந்த மாதிரிக் கவலை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

    சமீப காலம் வரை பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்ததால் வெளி உலகம் பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது.  அவள் அவனை விட புத்திசாலி என்றாலும் வெளி உலகம் பற்றித் தெரியாதலால் கணவன் தன்னை விட அதிகம் தெரிந்தவன் என்று வைத்துக்கொள்கிறாள்.  கணவனும் அதை தனக்குச் சாதகமாக வைத்துக்கொண்டு எல்லாம் தெரிந்தவன் போல் நடந்துகொள்கிறான்.  வீட்டில் எல்லாம் அவன் வைத்ததுதான் சட்டம்.  வெளி உலகம் பற்றி நிறையத் தெரியாவிட்டாலும் சில விஷயங்களிலாவது இவளுடைய யோசனைகள் அவனுடையதை விட உருப்படியானதாக இருக்கலாம்.  ஆனால் அவளுடைய யோசனைகள் எடுபடுவதே இல்லை.

    காலம் மாறிக்கொண்டு வருகிறது.  இப்போது பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்.  மனைவிமார்களும் சம்பாதிக்கிறார்கள்.  சில குடும்பங்களில் மனைவி கணவனை விட அதிகம் சம்பாதிக்கிறாள்.  ஆனால் இப்படிப்பட்ட குடும்பங்களிலும் மனைவிக்கு இரண்டாம் பட்ச இடம்தான்.

    ஒரு குடும்பத்தில் மனைவி சீதனமாக பெற்றோருடைய முழுச் சொத்தையும் கொண்டுவருகிறாள்.  அவளுக்கும் இதே கதிதான்.  என் பாட்டி, தாத்தா காலத்தில் கணவன்மார்கள் எப்படி நடந்துகொண்டார்களோ அப்படித்தான் இப்போதும் நடந்துகொள்கிறார்கள்.  தாய் வீட்டிலிருந்து மனைவி கொண்டுவந்திருந்த சொத்தில் 90 சதவிகிதத்தை கணவன் தொலைத்துவிட்டான்.  ஆயினும் மனைவியின் சொத்தை இப்படித் தொலைத்துவிட்டோமே என்று அவனுக்கு எந்த வித மனஉளைச்சலும் இருப்பதாகத் தெரியவில்லை.  இன்னும் தான்தான் வீட்டின் எசமானன் என்பது போல் நடந்துகொள்கிறான்.  மனைவியும் கணவன் மேல் எந்த குற்றமும் கண்டுபிடிப்பதாகத் தெரியவில்லை.

    என் கணவர் என் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுப்பது என் நெருங்கிய உறவுப் பெண்ணிற்குப் பிடிக்கவில்லை.  பெண்ணுரிமை பற்றி நான் பேசுவதெல்லாம் அவளுக்குப் பிடிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என் கணவரிடம் ‘உங்கள் மனைவியை நீங்கள் கடிவாளம் போட்டு அடக்க வேண்டும்’ என்கிறாள்.  இப்படித்தான் பல இந்தியப் பெண்கள் இன்னும் நினைக்கிறார்கள்.  மனைவிமார்களே இப்படி நினைத்தால் கணவன்மார்கள் வேறு எப்படி நடந்துகொள்வார்கள்?  மனைவியை தனக்குச் சமமாக நடத்துவார்கள் என்று எப்படி நினைக்க முடியும்?   எல்லாக் காலங்களுக்கும் எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்தும் திருக்குறளை எழுதிய தெய்வப் புலவர் திருவள்ளுவரே ‘பெண் வழிச் சேறல்’ என்னும் அத்தியாயத்தில் மனைவி சொல்லைக் கேட்காதீர்கள் என்று கணவன்மார்களுக்கு அறிவுரை கூறுகிறார்.  தவறான அறிவுரை யாரிடமிருந்து வந்தாலும் – கணவனானாலும் சரி, மனைவியானாலும்சரி – அதைக் கேட்கக் கூடாது என்று பொதுப்படையாகக் கூறியிருக்கலாம்.  திருவள்ளுவரே அப்படிச் சொல்லியிருக்கும்போது யாரிடம் போய் நியாயம் கேட்பது?

    இனி அமெரிக்க மனைவிமார்களைப் பற்றிப் பார்ப்போம்.  மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் வரை அமெரிக்க மனைவிமார்களுக்கும் எந்த விதச் சுதந்திரமும் இல்லை என்கிறார்கள்.  ஆனாலும் இந்தியப் பெண்கள் போல நடத்தப்பட்டார்களா என்று தெரியவில்லை.  1963-இல் பெட்டி ஃப்ரீடன் (Betty Friedan)  எழுதிய  ஃபெமினைன் மிஸ்டிக் (Feminine Mystique) என்ற நூல் வெளிவந்தது.  இந்த நூல் வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன.  இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு அமெரிக்காவின் வளம் உயர்ந்துகொண்டே போனதால் அவர்களுடைய தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டதால் பெண்களும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். ஓரளவிற்கு பொருளாதரச் சுதந்திரம் கிடைத்ததும் அமெரிக்க மனைவிமார்களுக்குக் கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லலாம்.  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சிகரெட் விற்பனையாளர்கள் ‘பெண்களே உங்களுக்கும் புகைபிடிக்கும் சுதந்திரம் உண்டு’ என்று விளம்பரப்படுத்தினர்.  இந்தக் காரணங்களினால் பெண்களும் தங்களுக்கு ஆண்களோடு சம உரிமை வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தனர்.  ஃபெமினைன் மிஸ்டிக் இவர்களுடைய எண்ணங்களை இன்னும் கொஞ்சம் உசுப்பிவிட்டது.   அறுபதுகளில் கருத்தடைச் சாதனங்கள் கிடைக்கப் போக ஆண்கள் போல் தங்களுக்கும் பாலுறவுச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர்.  இதனால் திருமணம் செய்துகொள்ளாமலே திருமணம் ஆன தம்பதிகள் போல் குடும்பம் நடத்தும் நிலை உருவானது.  திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் நிலையும் உருவாகத் தொடங்கியது.  திருமணம் செய்துகொண்டோ அல்லது செய்துகொள்ளாமலோ குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு துணை விட்டுப் போகும் பழக்கமும் தோன்றத் தொடங்கியது.  இதனால் தனித் தாய்மார்கள் (single mothers) என்ற ஒரு பிரிவு பெண்களிடையே தோன்றியது.

    பெண்களும் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டதால் வீட்டில் சமைப்பதற்கு இருவருக்கும் நேரம் இல்லாமல் போய்விட்டது.  வீட்டில் சமைப்பது என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.  இதைச் சாதகமாக்கிக் கொண்டு உணவு தயாரிப்பவர்களும் நிறைய ‘ரெடிமேட்’ உணவுகளைச் சந்தையில் புகுத்தத் தொடங்கினர்.  ஏன் பெண்கள் சமைக்கவேண்டும் என்ற நிலை போய் ஏன் யாரும் சமைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  இரவு உணவையாவது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதையும் விட்டுவிட்டார்கள்.  இப்போது மனைவிதான் சமைப்பது என்ற நிலை மாறி கணவன் மனைவி இருவரில் யாருக்கு சமையலில் ஆர்வம் இருக்கிறதோ அவர் சமைக்கலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.  எங்கள் வீட்டில் சமைப்பது என் கணவர்தான் (My husband is the chef at our place) என்று ஒரு மனைவி சொல்லும் அளவிற்கு அமெரிக்க மனைவிமார்கள் உயர்ந்திருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் சமையல் என்பது பெரிய வேலையாகி விட்டது.  ஒரு முறை ஒரு அமெரிக்கப் பெண்ணை எங்கள் வீட்டிற்கு இரவு உணவிற்கு அழைத்திருந்தோம்.  அவர் ‘தினமும் இவ்வளவு சமைக்கிறீர்களா?’ என்றார்.  ‘ஆம், கிட்டத்தட்ட’ என்றேன்.  அந்தப் பெண்ணிடம் ‘நான் இப்போது வேலைக்குச் செல்லவில்லையாதலால் எழுதுவதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது’ என்று சொன்னேன்.  ‘அவ்வளவு சமைத்துக்கொண்டு உங்களால் எழுதவும் முடிகிறதா?’ என்றார்.  இந்தியாவிலாவது உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ளாமல் நாமே சமைத்தால் வேலை நிறைய இருக்கும்.  அரைப்பது, வறுப்பது, பொரிப்பது என்று எந்நேரமும் வேலை இருந்துகொண்டே இருக்கும்.  அமெரிக்காவில் அப்படியில்லை.  சமையலறையில் காஸ் அல்லது மின்சார அடுப்புகள் நான்கு, குளிர்சாதனப் பெட்டி, வழக்கமான அவன் (traditional oven), மைக்ரோவேவ் அவன் (microwave oven), டோஸ்டர் (toaster) என்று பல உபகரணங்கள் இருக்கின்றன.  இதற்கு மேல் எப்போதும் குளிர்ந்த நீரும் சுடுநீரும் வந்துகொண்டிருக்கும்.  பாத்திரங்களைக் கழுவிக்கொள்ள ஒரு தொட்டி (sink) இருக்கும்.  இதுவரை குறிப்பிட்ட எல்லா வசதிகளும் எல்லா சமையலறைகளிலும் இருக்கும்.  வீட்டின் அளவைப் பொறுத்து சமையலறை பெரியதாகவோ சிறிதாகவோ இருக்கும்.  அவ்வளவே.  வசதியான வீடு என்றால் பாத்திரம் கழுவும் மெஷினும் இருக்கும்.  இத்தனை வசதிகள் இருந்தும் கோடையில் சமைப்பது எவ்வளவு கஷ்டம் என்கிறார் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட வீட்டில் வசிக்கும் ஒரு பெண்.  இவர் நர்ஸாக வேலை பார்க்கும்பெண்.  இவரே இப்படிச் சொன்னால் பேராசிரியையாக வேலைபார்க்கும் ஒரு பெண் ‘நேரம் கிடைத்தால் சமைப்பதைவிட ஒரு புத்தகம் படிப்பதையே நான் விரும்புகிறேன்’ என்று ஏன் சொல்ல மாட்டார்.

    சமையலை விட்டுவிட்ட மனைவிமார்கள் வேறு ஏதாவது வீட்டு வேலைகள் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.  கணவனுக்குப் பிடித்த உணவு அயிட்டம் எதையும் சமைத்துக் கொடுக்கும் எந்த அமெரிக்க மனைவியையும் நான் இதுவரை சந்திக்கவில்லை.  கணவனுக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுக்கும் இந்திய மனைவிமார்களைச் சந்தித்திருந்த எனக்கு இது எப்போதும் ஆச்சரியத்தைக் கொடுக்கும்.  ஏன் இந்தப் பெண்கள் கணவனுக்குப் பிடித்ததைச் சமைப்பதே இல்லை என்று சிலரைக் கேட்டால் சமைப்பது பெண்களின் வேலை என்பது இப்போது முழுவதுமாகப் போய்விட்டது என்ற பதில் கிடைக்கிறது.

    சமையல் மனைவிமார்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலை என்ற எண்ணம் சமூகத்தில் இல்லை என்றே வைத்துக்கொள்வோம்.  பொதுவாக அமெரிக்க சமூகத்தில் பிறருக்காக தன்னலத்தை விட்டுக்கொடுப்பது, அவர்களுக்காக தன் நேரத்தைச் செலவழிப்பது, பிறர் நன்மைக்காக உழைப்பது போன்றவை எல்லாம் மறைந்துகொண்டு வருகின்றன.  அதனால் கணவனுக்காக மனைவி எதுவும் செய்யத் தேவையில்லை என்ற எண்ணமும் வலுப்பெற்று வருகிறது.  அடிக்கடி ‘I love you’ என்று கூறிக்கொள்வது அதிகரித்து வருகிறது;  ஆனால் கணவன் மனைவிக்கிடையேயான பிடிப்பு குறைந்துகொண்டு வருகிறது என்றே நான் நினைக்கிறேன்.  தான், தனது என்ற உணர்வை அமெரிக்க சமூகம் அளவுக்கதிகமாகவே மனிதர்கள் மத்தியில் வளர்த்துவிட்டிருக்கிறது.

    எனக்குத் தெரிந்த ஒரு கணவன், மனைவி இருவருக்கும் இடையில் பிடிப்பே இல்லை என்று நினைக்கிறேன்.  இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.  இவளுக்கு முதல் கணவன் இறந்த பிறகு துணை தேவைப்பட்டதால் எங்கள் நண்பரை மணந்துகொண்டாள்.  எங்கள் நண்பரின் முதல் மனைவி இவர் நிறையச் சம்பாதிக்கவில்லை என்பதால் இவரை விட்டுவிட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டாள்.  எங்கள் நண்பரும் வசதிக்காகத்தான் இவளை மணந்துகொண்டார்.  இவள் அவரை விட அதிகம் சம்பாதிக்கிறாள்.  இவருக்காக எதுவும் செய்வதில்லை.  வீட்டில் சமையல் எல்லாம் கணவைனின் பொறுப்புத்தான்.  அவருக்கு உடல்நலம் சரியில்லை.  இருந்தாலும் அவர்தான் சமையல் செய்ய வேண்டும்.  இந்தக் கணவனே இந்தியாவில் பிறந்திருந்தால் முதல் மனைவியும் இவரை விட்டுப் போயிருக்க மாட்டாள்; இரண்டாவது மனைவியும் இவர் மட்டுமே சமைக்க வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டாள்.  இந்தியக் கணவன்மார்களைக் கண்டால் எனக்கு எவ்வளவு கோபம் வருகிறதோ அந்த அளவு கோபம் இந்த மாதிரி அமெரிக்க மனைவிமார்களைப் பார்த்தால் ஏற்படுகிறது.

    Share
  • இஸ்ரேல் பயணம் (12)

    நாகேஸ்வரி அண்ணாமலை

    செய்தி வாசிப்பவர்கள்  செய்திகளின் முடிவில் ‘செய்திகளின் சுருக்கம்’ என்று அதுவரை கொடுத்த செய்திகளின் சாராம்சத்தைக் கூறுவார்கள்.  அது போல் நானும் இங்கு இஸ்ரேல்-பாலஸ்தீன சரித்திரத்தின் (அல்லது போராட்டத்தின்) சுருக்கத்தைக் கூறுகிறேன்..

    மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில், அதாவது இப்போதைய இஸ்ரேலிலும் தனி நாடாக உருவாகப் போகும் பாலஸ்தீனத்திலும் 3000 ஆண்டுகளுக்கு முன் பல யூத இனங்கள் வாழ்ந்து வந்தன.  இவர்கள் ஆபிரஹாம், அவர் மகன் ஐஸக், அவருடைய மகன் ஜேக்கப் ஆகியோரின் வழித்தோன்றல்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர்.  பழைய ஏற்பாடு பைபிளில் கூறப்பட்டிருக்கும் புராணக் கதைகள் தவிர இதற்கு சரித்திர பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை.  ரோமானிய, கிரேக்க சமூகங்கள் பல கடவுள்களையுடைய மதங்களைப் பின்பற்றி வந்தபோது இவர்கள் ஒரே கடவுளைக் கொண்ட மதத்தைப் பின்பற்றி வந்தனர்.  என்றாவது ஒரு நாள் தங்கள் கடவுளின் தூதர் ஒருவர் வந்து தங்களை கடவுளிடம் அழைத்துச் செல்வார் என்று எண்ணிக்கொண்டிருந்தனர்.  டேவிட், சாலமன் என்ற இரு புகழ்பெற்ற அரசர்கள் இவர்கள் வழியில் வந்தவர்கள்.

    இவர்கள் அடிக்கடி பக்கத்து நாடுகளில் ஆண்டுவந்த அரசர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.  கி.மு.750-இல் அசீரியர்களாலும், கி.மு.612-இல் பாபிலோனியர்களாலும், கி.மு.538-இல் பெர்ஷியர்களாலும், கி.மு.333-இல் கிரேக்கர்களாலும் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர்.  அதற்குப் பிறகு வந்த ரோமானியர்கள் ஆட்சியில் கி.பி. 66-இல் இவர்கள் ரோமானிய அரசரை எதிர்த்ததால் ஜெருசலேமை விட்டு வெளியேறும் நிர்பந்தத்திற்கு உள்ளாயினர்.  இதற்கிடையில் கி.பி. 0-இல் இவர்களில் ஒருவராக இயேசு கிறிஸ்து பிறந்து அப்போதைய சமூகத்தில் – குறிப்பாக ஜெருசலேமில் உள்ள யூதக் கோயிலில் – நடந்து வந்த அநீதிகளையும் ஊழல்களையும் ஒழிக்கப் பாடுபட்டார்.  யூதர்களில் ஒரு சாரார் இயேசுவைக் கடவுளின் தூதர் என்று ஏற்றுக்கொண்டு அவருடைய கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கினர்.  அவர்கள் கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.  ஆனால் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருந்த யூதர்கள், இயேசுவின் கொள்கைகளால் தங்கள் நலன்களுக்குப் பங்கம் விளையும் என்று பயந்து அவரை ஒழித்துவிடத் தீர்மானித்து ரோமானிய அரசனின் உதவியோடு அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர்.  குற்றம் புரியும் சமூக விரோதிகளைச் சிலுவையில் அறைந்து அப்படியே அவர்களை இறக்கவிடுவதுதான் அப்போதைய பழக்கம்.  இப்படித்தான் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கினார்கள்.  சமூக சீர்திருத்தவாதியான இயேசு தன் சொந்த சமூகத்தாலேயே சமூக விரோதியாகக் கருதப்பட்டு மரண தண்டனைக்குள்ளானார்.  கிறிஸ்துவின் சீடர்களும் தண்டிக்கப்பட்டனர்.  அப்போதைக்கு அவர்களால் வெளிப்படையாகக் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்ற முடியவில்லை.

    கி.பி. 66-இல் ரோமானிய அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த யூதர்கள் பலர் உயிர் இழந்தனர்;  பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர்;  பலர் ஜெருசலேமிலிருந்து வெளியேறினர்; வெளியேற்றப்பட்டனர்.  மறுபடியும் இஸ்ரேலில் இருந்த யூதர்கள் கி.பி. 132-இல் ரோமானிய அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர்.  இதிலும் யூதர்கள் பலர் உயிரிழந்தனர்.  அதன் பிறகு யூதர்கள் முழுவதுமாக ஜெருசலேமை விட்டு வெளியேறினர்.  மத்திய தரைக்கடலைச் சுற்றியிருந்த நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.  கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டின் என்னும் ரோமானிய அரசன் கிறிஸ்துவனான பிறகு ஜெருசலேம் நகரம் மறு வாழ்வு பெற்று கிறிஸ்தவ நகரமாக விளங்கத் தொடங்கியது.  யூதர்கள் ஜெருசலேமில் குடியேற அனுமதிக்கப்படவில்லை யென்றாலும், இடிக்கப்படாமல் மிஞ்சியிருந்த யூதர்களின் இரண்டாவது கோயிலின் வெளிச் சுவரை – இது யூதர்களின் மிகச் சிறந்த புண்ணியதலமாகக் கருதப்பட்டது – சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

    ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்தார்.  இந்த மதத்தைப் பின்பற்றிய அரசர்கள் ரோமானியர்களை வென்று பாலஸ்தீனத்தில் ஆட்சி நடத்தத் தொடங்கினர்.  இந்த இஸ்லாமிய மன்னர்கள் காலத்தில் யூதர்கள் ஜெருசலேமிற்குள் வருவதற்கு இருந்த தடை நீங்கி அவர்கள் ஜெருசலேமில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.  பதினோராம் நூற்றாண்டில் போப்பாக இருந்த போப் அர்பன் (Pope Urban II) கிறிஸ்தவர்கள் ஜெருசலேமிற்குச் சென்று தங்கள் மத சம்பந்தப்பட்ட இடங்களை வழிபட ஏதுவாக அங்கு ஆண்டுகொண்டிருந்த அரசர்களோடு சண்டை புரிந்து ஜெருசலேமைக் கைப்பற்ற சிலுவைப் போராளிகளை அனுப்பினார்.  அவர்கள் முஸ்லீம் அரசர்களை வென்ற பிறகு சுமார் இருநூறு வருடங்கள் கிறிஸ்தவர்களின் கையில் ஜெருசலேம் இருந்தது.  அப்போது யூதர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்;  பல யூதர்கள் கொல்லப்பட்டனர்; பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர்.  அதன் பிறகு இரு நூற்றாண்டுகள் இப்பகுதி எகிப்தை ஆண்ட மாம்லக் அரச பரம்பரை வசம் இருந்தது.  1517-இல் துருக்கியை ஆண்ட ஆட்டோமான் அரசர்கள் பாலஸ்தீனத்தைப் பிடித்துக்கொண்டனர்.  முதல் உலகப் போரில் ஆட்டோமான் அரசு வீழ்ச்சி அடையும் வரை பாலஸ்தீனம் அவர்கள் ஆளுகையில் இருந்தது.  அப்போதும் யூதர்கள் அங்கு வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    யூதர்கள் குடியேறிய  இடங்களில் தாங்கள் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் ஆங்காங்கே இருந்த மக்களோடு சேராமல் தனித்தே வாழ்ந்திருக்கிறார்கள்.  மேலும் இவர்கள் செய்துவந்த வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலாலும் இவர்கள் மீது மற்றவர்களுக்கு நட்புரிமை ஏற்படவில்லை.   அந்தந்த நாடுகளில் இருந்த கிறிஸ்துவர்கள், தங்கள் கடவுளின் தூதரை – அதாவது இயேசுவை – வஞ்சித்துக் கொன்றவர்கள் யூதர்கள் என்று எண்ணி இவர்களின் மீது மிகுந்த வன்மம் பாராட்டினர்.  ஸ்பெயின் முஸ்லீம் மன்னர்களின் கீழ் இருந்தபோது யூதர்கள் எந்த விதப் பாதிப்புக்கும் ஆளாகவில்லை.  ஆனால் சிலுவைப் போராளிகள் ஸ்பெயினில் நுழைந்ததும் யூதர்களைப் பலவாறாகத் துன்புறுத்தினர்.  அவர்கள் குடியேறியிருந்த நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவர்கள் இவர்களிடம் பகைமை பாராட்டியதால், தங்களுக்கென்று ஒரு நாடு இருந்தால் அங்கு சுதந்திரமாக எந்த விதப் பிரச்சினையுமின்றி இருக்கலாம் என்ற எண்ணம் பல நாடுகளிலும் இருந்த யூதர்களிடம் உண்டானது.  தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று நினைத்தோடல்லாமல் அந்த நாடு ஒரு காலத்தில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்துவந்த, தங்கள் புண்ணிய பூமி என்று அவர்கள் கருதிய, பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தனர்.  இந்த எண்ணம் ஒரு இயக்கமாக மாறியது.  இதற்குப் பெயர் ஸயானிஸம் (Zionism). இந்த இயக்கம் தோன்றியதிலிருந்தே பல நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடியேற ஆரம்பித்தனர்.  அது மட்டுமல்ல, தாங்கள் கொண்டுவந்த தொழில்நுட்பம், செல்வம் ஆகியவற்றின் பலத்தால் பாலஸ்தீனத்தில் பல நிலங்களை வாங்கிப்போட்டு நவீன முறையில் விவசாயம் செய்தனர்; தொழிற்சாலைகள் ஆரம்பித்தனர்.  பாலஸ்தீனம் வளமடையத் தொடங்கியதால் அங்கு குடியேறிய யூதர்களோடு பாலஸ்தீன அரேபியர்களும் நன்மை அடைந்தாலும், யூதர்கள் அதிக அளவில் பாலஸ்தீனத்தில் குடியேறியதும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனதும் அரேபியர்களின் கோபத்தையும் பயத்தையும் அதிகரித்தது.  முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஆட்டோமான் பேரரசு அழிந்து, அது பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டு பாலஸ்தீனம் பிரிட்டனின் மேற்பார்வையில் வந்ததும் யூதர்கள் பிரிட்டனிடம் பாலஸ்தீனத்தில் தங்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்று கேட்கத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றனர்.  இரண்டாவது உலக யுத்தத்தில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஹிட்லர் ஜெர்மனியில் இருந்த அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்ததும் யூதர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைய வழிகோலியது.  யூதர்களின் மேல் ஏன் இந்த அளவிற்கு ஹிட்லருக்குக் கோபம் இருந்தது என்பதற்குப் பல காரணங்கள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.  இவர் சிறு வயதினராக இருந்தபோது இவர் தாய்க்கு சிகிச்சை அளித்தவர் ஒரு யூத மருத்துவராம்.  சிகிச்சை பலனின்றி அவர் தாய் இறந்துவிட்டாராம்.  அவருடைய தாயின் இறப்பிற்கு அந்த யூத மருத்துவர் காரணம் என்று நினைத்திருக்கலாம் என்பது ஒரு ஊகம்.  இன்னொரு கோட்பாட்டின்படி அப்போது ஜெர்மனியில் பாதிக்கு மேற்பட்ட வங்கிகள் யூதர்களின் கைகளில் இருந்தனவாம்.  ஜெர்மனியில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதற்கு யூதர்கள்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்ததாகச் சொல்கிறார்கள்.  எந்த ஆராய்ச்சியிலும் உண்மையான காரணம் எது என்று வெளிவரவில்லை.  ஜெர்மனியிலும் யூதர்களுக்கு எதிராக இருந்தவர்கள் கிறிஸ்தவர்கள்தான்.  அப்போதிருந்த கிறிஸ்தவ போப்பும் ஹிட்லர் செய்த அட்டூழியங்களைக் கண்டிக்கவில்லை.

    யூதர்கள் வெளியிலிருந்து வந்து பாலஸ்தீனத்தில் குடியேறக் குடியேற யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் நிறையப் பூசல்கள் ஏற்பட ஆரம்பித்தன.  இந்தப் பூசல்களைக் கையாளுவதில் உள்ள சிரமத்தை எண்ணியும், இனி பாலஸ்தீனம் தன் மேற்பார்வையில் இருப்பதால் தனக்கு நன்மை எதுவும் இல்லை என்பதையும் உணர்ந்த பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டுத் தான் வெளியேறுவதாக ஐ.நா.விடம் தெரிவித்தது.  ஐ.நா. பல முறை தன் பிரதிநிதிகளை அனுப்பி அங்குள்ள நிலையை அறிந்துவரச் செய்தது.  1947-இல் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை யூதர்களுக்கும் இன்னொரு பகுதியை அரேபியர்களுக்கும் (இவர்களில் அரேபிய கிறிஸ்தவர்களும் உண்டு) கொடுப்பது என்று ஐ.நா. முடிவுசெய்தது.

    பாலஸ்தீனம் முழுவதும் தங்களுக்கு மட்டுமே உரியது என்று நினைத்துக்கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் இந்தப் பாகப்பிரிவினையை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்துப் போராடுவது என்று முடிவுசெய்தனர்.  அதனால் இன்று வரை பாலஸ்தீனம் என்ற நாடு உருவாகாமலேயே இருக்கிறது.  ஆனால் யூதர்களோ தாங்கள் கேட்டதற்கு மேலேயே அதிக அளவுள்ள நாடு கிடைத்துவிட்டதால் உடனேயே தங்கள் நாடான இஸ்ரேலைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டனர்.  இதற்கு மறு நாளே பாலஸ்தீனத்தைச் சுற்றியிருந்த ஜோர்டன், சிரியா, லெபனான், எகிப்து ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலின் மீது படையெடுத்ததில் அரபு நாடுகள் தோற்றுப் போயின.  மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட இடங்களில் சிலவற்றையும் பிடித்துக்கொண்டது.  இப்படி அரேபிய இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டதோடு அந்த இடங்களில் யூதர்களைக் குடியேற்றவும் செய்தது.  இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே இருக்கும் அரேபியர்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துகிறது.  பாலஸ்தீனத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த அரேபியர்களை அங்கு தொடர்ந்து இருக்கவிடுவதே தன்னுடைய தாராள மனப்பான்மையினால்தான் என்பது போல் இஸ்ரேல் நடந்துகொள்ள ஆரம்பித்தது.  பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்குத் தனி நாடு உருவாக்கிக் கொடுப்பதாக பிரிட்டன் ஒப்புக்கொண்டபோது அங்கு ஏற்கனவே வசித்துவரும் அரேபியர்களுக்கு எந்த விதக் கஷ்டமும் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனையைப் போட்டிருந்தது.  அதையெல்லாம் இஸ்ரேல் நினைப்பதாகத் தெரியவில்லை.

    இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து  பூசல்கள் ஏற்பட்டன.  1967-இல் நடந்த யுத்தத்தில் ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் இஸ்ரேல் பெரும்பகுதியைப் பிடித்துக்கொண்டது.  இஸ்ரேல் அங்கும் யூதர்களைக் குடியேற்றுவதைத் தொடர்ந்தது.  இப்படிக் குடியேற்றப்பட்டவர்கள் அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நிறையத் தொந்தரவுகள் கொடுத்து வந்தார்கள்; வருகிறார்கள்.  இவர்கள் ஒரு முறை பெடுயின் இனத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் இனத்தவரின் ஆடுகளுக்கு விஷம் வைத்து அவற்றைக் கொன்றனர்.  இஸ்ரேல் அரசும் இஸ்ரேல் ஆக்கிரமித்த இடங்களில் குடியேற்றப்பட்ட யூதர்களும் (இப்படிக் குடியேற்றப்பட்ட யூதர்களில் பலர் 1960-க்குப் பிறகு அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலிருந்து இஸ்ரேலில் குடியேறியவர்கள்) அங்கேயே காலம் காலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீனியர்களைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கினர்.

    1964-இல் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.  1969-இல் யாசர் அராபத் அதன் தலைவரானார்.  பாலஸ்தீனம் முழுவதையும் ஒரே நாடாக உருவாக்கியே தீருவது என்பது இந்த இயக்கத்தின் குறிக்கோள்.  ஆக்கிரமித்துக்கொண்ட பகுதிகளில் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அவர் தட்டிக் கேட்டபோது அவரைத் தீவிரவாதி என்று இஸ்ரேல் கூற ஆரம்பித்தது.  1992-இல் பிரதமர் பதவியேற்ற யிட்சக் ராபின் பாலஸ்தீனர்களோடு சமரசம் பேச முன்வந்தார்.  அதுவரை இஸ்ரேல் நாடு இருப்பதையே ஒப்புக்கொள்ளாத பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த யாசர் அராபத், யிட்சக் ராபினின் சமரச ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.  இவர்களுக்கிடையே 1993-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் யூதர்களுக்கென்று இஸ்ரேல் என்ற தனி நாடு இருப்பதை பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒப்புக்கொள்வதென்றும் 1947-இல் ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் ஐந்து வருடங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.  அது வரை இந்த இடங்கள் பாலஸ்தீன அத்தாரிட்டி என்னும் அமைப்பின் கீழ் செயல்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  இதற்கு ஆஸ்லோ ஒப்பந்தம் என்று பெயர்.  1995-இல் ராபின், இதை எதிர்த்த ஒரு யூத வெறியனால் கொலைசெய்யப்பட்ட பிறகு அதற்குப் பின் பதவிக்கு வந்த நேத்தன்யாஹூ (சென்ற ஜனவரியில் நடந்த தேர்தலில் இவருடைய கட்சி 120 இடங்கள் உள்ள இஸ்ரேலிய பார்லிமெண்டில் 31 இடங்களைப் பிடித்தது; மற்ற சில கட்சிகளோடு சேர்ந்து இப்போது இவர் மந்திரிசபை அமைத்திருக்கிறார்.  இவர்தான் பிரதம மந்திரி.) ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை.

    இஸ்ரேல் அரசோடு சமாதானமாகப்  பேச்சுவார்த்தை நடத்திப் பயனில்லை என்று நினைத்த  பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச்  சேர்ந்த சிலர் யாசர்  அராபத்தின் ஃபாட்டா (Fatah) கட்சியிலிருந்து பிரிந்து தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர்.  ஹமாஸ் (Hamas) என்னும் கட்சியைச் சேர்ந்தவர்கள் 1967-இல் இஸ்ரேல் எகிப்திடமிருந்து பிடித்திருந்த காஸா பகுதியை இஸ்ரேல் 2005-இல் திருப்பிக் கொடுத்த பிறகு அங்கு ஆட்சி செய்யத் தொடங்கினர்.  லெபனானில் இஸ்ரேல் பிடித்திருந்த இடத்தை ஹெஸ்புல்லா (Hezbollah) என்ற கட்சி பிடித்து அங்கு ஆட்சி நடத்தத் தொடங்கியது.  இவை இரண்டும் தீவிரவாதக் கட்சிகள்.  அடிக்கடி இக்கட்சிகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் பூசல்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இஸ்ரேலின் கொள்கைகளால்  அதிருப்தி அடைந்த பாலஸ்தீன இளைஞர்கள் தற்கொலைப் படையினராக இஸ்ரேலுக்குள் சென்று யூதர்களைக் கொன்றனர்.  யாசர் அராபத் பாலஸ்தீன இளைஞர்களை இந்த வன்முறையிலிருந்து தடுக்கவில்லை என்று கூறி 2002-இல் அப்போது பிரதமராகயிருந்த எரியல் ஷேரன் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேல் பகுதிக்குள் வருவதைத் தடுக்கப் பெரிய தடுப்புச் சுவரை எழுப்ப ஆரம்பித்தார்.  இந்தச் சுவர் வெஸ்ட் பேங்கில் (1947-இல் பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா. கொடுத்த இடத்தில் இதுவும் சேர்த்தி) இஸ்ரேல் ஆக்கிரமித்த இடங்களையும் உள்ளடக்கி எழுப்பப்பட்டது.  (சுவர் இன்னும் முற்றுப் பெறாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.)  இந்தச் சுவர் எழுப்பியதின் மூலம் பாலஸ்தீனியர்கள் மிகுந்த துன்பத்துக்குள்ளாகின்றனர்.  பலருடைய விளைநிலங்கள் சுவருக்கு இந்தப் பக்கம் இருப்பதால் அவர்கள் சுவரைச் சுற்றிக்கொண்டு இஸ்ரேலின் சோதனைச் சாவடிகள் வழியாகத்தான் தங்கள் விளைநிலங்களுக்கோ அல்லது வேலைபார்ப்பதற்கோ வர வேண்டியதிருக்கிறது.  மேலும் இப்படி வருவதற்கு இஸ்ரேல் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் அடையாள அட்டையை சோதனைச் சாவடியில் காட்ட வேண்டும்.  ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவந்திருக்கும் தங்கள் சொந்த இடத்திலேயே பாலஸ்தீன அரேபியர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.

    2004-இல் யாசர் அராபத் பாரீஸில் உடல்நலத்திற்காக சிகிச்சை பெற்று வரும்போது இறந்துவிட்டார்.  இப்போது அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாமோ என்று அவர் மனைவி சந்தேகப்பட்டதால் ராமல்லா என்ற ஊரில் (இதுதான் பாலஸ்தீன அத்தாரிட்டியின் தலைமையகம்) இருந்த அவருடைய கல்லறையைத் தோண்டி அவர் உடலை மீட்டுப் பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறார்கள்.

    இவருக்குப் பிறகு  ஃபாட்டாவின் பொறுப்பை அகம்மது  அப்பாஸ் என்பவர் ஏற்றார்.  இவரும் சமாதான விரும்பி.  எப்படியாவது பாலஸ்தீன நாட்டை உருவாக்கிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

    ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு வெஸ்ட் பேங்கில் கொடுக்கப்பட்ட இடங்களில் நிறைய இடங்களைப் பிடித்துக்கொண்டு சில இடங்களை மட்டும் பாலஸ்தீன அத்தாரிட்டி நிர்வகிக்கும்படி விட்டிருக்கிறது.  (ஆஸ்லோ ஒப்பந்தத்திற்குப் பிறகு பாலஸ்தீன அத்தாரிட்டி உருவாக்கப்பட்டு பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களை நிர்வகித்து வருகிறது.)  சில இடங்கள் இருவரின் கீழேயும் இருக்கின்றன.  சில இடங்கள் இஸ்ரேலின் கீழ் இருக்கின்றன.  வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனர்களுக்குச் சேர வேண்டிய நூறு மில்லியன் டாலர் சுங்கவரிப் பணத்தை பாலஸ்தீன அத்தாரிட்டியிடம் கொடுக்காமல் இழுத்தடித்தனர்.  சில நாட்களுக்கு முன்தான் அந்த வரிப் பணம் பாலஸ்தீன அத்தாரிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.  இஸ்ரேலுக்கு அமெரிக்காவில் வாழ்ந்துவரும் யூதர்களிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் நிறையப் பணம் வந்துகொண்டிருக்கிறது.  ஆனால் பாலஸ்தீனர்களுக்கு அப்படியில்லை.  1945-இல் அரபு நாடுகள் பல ஒன்று சேர்ந்து (முதலில் இதில் ஜோர்டன், சவூதி அரேபியா, சிரியா, லெபனான், ஈராக், எகிப்து ஆகிய நாடுகள் இருந்தன.  பின்னால் பல நாடுகள் சேர்ந்துகொண்டன.  இப்போது அதில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 21) அராப் லீக் (Arab league) என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டன.  இந்த அமைப்பிலிருந்து பாலஸ்தீனத்திற்கு பணம் வந்துகொண்டிருந்தது.  இப்போது அது வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார்கள்.  இதனால் பாலஸ்தீன அத்தாரிட்டியின் கீழ் இருக்கும் இடங்களில் வறுமை இருக்கிறது.

    அமெரிக்காவிலுள்ள பல பணபலமுள்ள யூதர்களின் வற்புறுத்தலாலும் செல்வாக்காலும் அமெரிக்கா இஸ்ரேலின் முழு நண்பனாகவும் ஆதரவாளனாகவும் விளங்குகிறது.  அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேலுக்கு தினமும் பத்து லட்சம் டாலர் உதவிப்பணம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.  2011-இல் ஐ.நா.வின் யுனெஸ்கோ ஸ்தாபனத்தில் பாலஸ்தீன் ஒரு அங்கத்தினர் ஆனது.  இதை இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் எதிர்த்தது.  அதோடு மட்டுமல்ல அமெரிக்கா யுனெஸ்கோவுக்குக் கொடுக்கும் தன் பங்கிற்கான பணத்தையும் கொடுக்க மறுத்தது.  (ஐ.நா.வின் பல ஸ்தாபனங்களுக்கு உலகிலேயே பணக்கார நாடு என்பதால் அமெரிக்காதான் நிறையப் பணம் வழங்கி வருகிறது.  அதனால் அவற்றில் அதிகாரமும் செலுத்திவருகிறது.)

    மேலும் தனி நாடாகி ஐ.நா.வில் நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கு முன் இப்போதே ஜெனரல் அசெம்பிளியில் 2012 நவம்பர் மாதம் non-member observer entity என்ற அந்தஸ்தை பாலஸ்தீனத்திற்கு முகம்மது அப்பாஸ் பெற்றிருக்கிறார்.  இது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லை.  கோபத்தில் அமெரிக்கா பாலஸ்தீன அத்தாரிட்டிக்குக் கொடுத்துவந்த உதவித்தொகையை நிறுத்திவிட்டது.  அதனால் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்யவே பாலஸ்தீன அத்தாரிட்டி திணறுகிறது.  பாலஸ்தீனத்திற்கு இந்த அந்தஸ்தைக் கொடுப்பதற்குரிய ஓட்டெடுப்பில் ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் உட்பட 138 நாடுகள் அந்தஸ்து கொடுக்கலாம் என்று ஓட்டளித்தன.  அமெரிக்கா இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் கூடாது என்று ஓட்டளித்தன.  ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்றுக்கொள்ளவில்லை.

    இப்படி ஐ.நா.வின் ஜெனரல் அசெம்பிளியில் பாலஸ்தீன அத்தாரிட்டிக்கு, ‘ஓட்டெடுப்பில் பங்கெற்றுக்கொள்ள முடியாத அங்கத்தினர்’ பதவி (non-member observer status) கிடைத்திருப்பதால் இஸ்ரேலுக்குச் சில பின்விளைவுகள் ஏற்படலாம்.  பாலஸ்தீன அத்தாரிட்டி அகில உலக கிரிமினல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது ஐ.நா.வால் பாலஸ்தீனத்திற்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் குடியிருப்புகளை அமைப்பதை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பது அவற்றில் ஒன்று

    இப்படிப்பட்ட பின்விளைவுகளுக்குப் பயந்து அமெரிக்காவின் ஐ.நா. பிரதிநிதி ‘நாளை எழுந்ததும் பாலஸ்தீனர்களின் வாழ்க்கையில் எந்த வித முன்னேற்றமும் இருக்கப் போவதில்லை.  அமைத்திக்கான பேச்சு வார்த்தைகளில்தான் இன்னும் தாமதம் ஏற்படப் போகிறது’ என்று ஏளனமாகக் கூறியிருக்கிறார்.  அமெரிக்காவின் இரு அரசியல் கட்சிகளும் கூட்டாக பாலஸ்தீனத்தின் புதிய அந்தஸ்தை எதிர்க்கின்றன.  பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு எதிராக அகில உலக கிரிமினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் பாலஸ்தீன அத்தாரிட்டிக்குக் கொடுக்கும் நிதியை நிறுத்திவிடுவதாகவும் இஸ்ரேலுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாவிட்டால் பாலஸ்தீன அத்தாரிட்டியின் வாஷிங்டன் அலுவலகத்தை மூடிவிடப் போவதாகவும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. 

    2013 மார்ச் மாதம் அமெரிக்கா கௌரவிக்கவிருந்த பெண்கள் பட்டியலிலிருந்து எகிப்து நாட்டைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவரின் பெயரை நீக்கியிருக்கிறது.  அவருடைய ட்விட்டர் கணக்கில் சமீபத்தில் பல்கேரியாவில் இஸ்ரேலிய யூதர்கள் பயணித்த ஒரு பேருந்து தாக்கப்பட்டதைப் புகழ்ந்து எழுதியிருந்தாராம்; மேலும் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகக் கூறிய ஒரு மேற்கோளும் எடுத்தாளப்பட்டிருக்கிறதாம்.  ஆனால் அந்தப் பெண் தான் அப்படி எழுதவில்லை என்றும் தன்னுடைய கடவுச் சொல்லை (password) யாரோ திருடி தன் கணக்கில் யாரோ அப்படி எழுதியிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.  இது பற்றி தீர விசாரித்த பிறகே முடிவெடுக்கப்படும் என்று அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை அறிவித்திருக்கிறது. அமெரிக்காதான் இப்போதைய இஸ்ரேலின் முழு நண்பன்.  இஸ்ரேலைத் தாக்கும் யாரும் அமெரிக்காவில் ஜனாதிபதியாக வர முடியாது.

    சென்ற ஜனவரி 22-ஆம்  தேதி இஸ்ரேலில் பார்லிமெண்ட் தேர்தல் நடந்தது.  எட்டு  மில்லியன் ஜனத்தொகை கொண்ட  இஸ்ரேலில் 20 சதவிகிதம்பேர்  (1.5 மில்லியன்) அரேபியர்கள். இவர்களில் பலர் தேர்தலில் வாக்களிப்பதில்லை.  இதற்குப் பல காரணங்கள் உள்ளன.  2008-இல் நடந்த தேர்தலில் 53% வாக்களித்தனர்.  இந்தத் தேர்தலில் இன்னும் இது குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.  ஆனால் 56% வாக்களித்திருக்கிறார்கள்.  ‘யூதர்கள் (64%) அளவு அரேபியர்கள் ஓட்டளித்தால் இருபதுக்கும் மேலான இடங்களைப் பெறலாம்.  இப்போது வாக்களிப்பவர்களில் இன்னும் 50% அதிகரித்தால் நேத்தன் யாஹூ அரசில் (government) இருக்க முடியாது’ என்று முன்னாள் பார்லிமெண்ட் உறுப்பினரும் மந்திரியுமான கேலப் மஜாட்லே (Ghaleb Majadleh) கூறியிருக்கிறார்.  நிறைய அரேபியர்கள் ஓட்டளித்தால் நாடு (இஸ்ரேல்) ஜனநாயகத்தையும், எல்லோருக்கும் சமஉரிமை கொடுப்பதையும் மதிக்கிறது என்பது புலனாகும் என்கிறார்கள் இஸ்ரேல் தலைவர்கள்.    அரேபிய அரசியல்வாதிகள் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சமமான வேலைவாய்ப்புகள், கல்வி வசதிகள், முனிசிபல் வசதிகள் இல்லை என்கிறார்கள்.  அரேபிய கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமை இல்லை என்கிறார்கள்.  சில அரேபியர்களுக்கு தேர்தலில் அக்கறையில்லை.  ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற மனப்போக்கு.  இரண்டாவது வகையினருக்கு தேர்தலில் நம்பிக்கை இல்லை.  வாக்களிப்பதால் தங்கள் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை, ஏனெனில் இஸ்ரேல் தங்களுடைய நாடு இல்லை என்று நினைக்கிறார்கள்.  ஒரு குடியரசு என்று இஸ்ரேல் தன்னைக் கூறிக்கொண்டாலும் அரேபியர்களை சரியாக நடத்துவதில்லையாதலால் வாக்களித்துப் பிரயோஜனம் இல்லை என்று நினைக்கிறார்கள்.  என்னதான் தாங்கள் சரியாக நடத்தப்படாவிட்டாலும் – வேலைவாய்ப்பு, கல்வி வசதி, முனிசிபல் வசதிகள் இல்லையென்றாலும் – யூதர்களைப் போல் தங்களுக்கும் ஓட்டுரிமை இருப்பதால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.  மூன்று அரேபியர்கள் கட்சி – ஒன்று மத அடிப்படையில், இன்னொன்று கம்யூனிஸ்ட், இன்னொன்று தேசியக்கட்சி – இருக்கின்றன.  புதிதாக இன்னொன்று இந்தத் தேர்தலில் சேர்ந்திருக்கிறது.  இஸ்ரேலின் பாகுபாட்டுக் கொள்கைகளைத் தட்டிக்கேட்க யாராவது வேண்டுமல்லவா;  அதனால் நான் வாக்களிக்கப்போகிறேன் என்கிறார் இன்னொரு அரேபியர்.

    2013 மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் விஜயம் செய்தார்.  அரசியல் தலைவர்களோடு பேசுவதை விட இளம் தலைமுறையினரோடு பேசி அவர்கள் மனதை மாற்ற முயற்சி மேற்கொண்டார்.  இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பேசுவதற்குப் பதிலாக ஜெருசலேமில் உள்ள மாநாட்டு அரங்கம் ஒன்றில் 2000 பேர் அடங்கிய கூட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு அறைகூவல் விடுத்தார்.  ‘பாலஸ்தீனர்களின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள்.  அவர்கள் கண்கள் மூலம் உலகைப் பாருங்கள்.  பாலஸ்தீனக் குழந்தைகளுக்கும் உங்களைப் போல் சொந்த நாட்டில் சுதந்திரமாக வளரும் உரிமை இருக்கிறதல்லவா?’ என்று பேசினார்.  ஆனால் இஸ்ரேல் அமைத்துவரும் குடியிருப்புகளைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை.  முகம்மது அப்பாஸை ராமல்லாவில் சந்தித்தபோது மறுபடி சமாதான உடன்பாட்டிற்குரிய பேச்சுவார்த்தைகளில் எந்த வித நிபந்தனையுமின்றி கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    அமெரிக்க ஜனாதிபதி இப்படிப் பேசி இஸ்ரேல் தலைவர்களை  நியாயமாக நடந்துகொள்ள வைக்க  முடியுமா என்று தெரியவில்லை.  பாலஸ்தீனியர்களின் இடங்களில்  இஸ்ரேலியர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும்  குடியிருப்புகளில் வசித்துவரும் இஸ்ரேலியர்களை எப்படி அங்கிருந்து  வெளியேற்றுவது?  இதற்கெல்லாம் தீர்வு ஏற்பட்டாலும் தீர்வு காண முடியாத இன்னொரு பிரச்சினை இருக்கிறது.  இஸ்ரேல் அரசு நிர்மாணித்து வரும் பெரிய மதில் சுவரால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் இப்போது தொடர்ச்சியாக இல்லை.  இப்படித் தொடர்ச்சியாக இல்லாத இடங்களை வைத்துக்கொண்டு அவர்கள் எப்படி பாலஸ்தீன நாட்டை உருவாக்குவது?

    இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளாக இல்லாமல் பாலஸ்தீனம் முழுவதும் ஒரே நாடாக உருவானாலும் யூதர்கள் அதை விரும்பவில்லை.  அவர்களுடைய நாடு ஒரு யூத நாடாகத்தான் இருக்க வேண்டுமாம்.  மேலும் அப்படி ஒரே நாடு உருவாகும் பட்சத்தில் பாலஸ்தீனர்கள் மெஜாரிட்டி ஆகிவிடுவார்கள்.  தங்களுக்கே தங்களுக்கென்று ஒரு யூத நாடு வேண்டும் என்று கேட்பவர்கள் இதை எப்படி ஏற்பார்கள்?  இத்தகைய காரணங்களினால் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

    கடையாக ஒன்றைக் குறிப்பிட  வேண்டும்.  மேலே குறிப்பிட்டுள்ள சரித்திர நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் கிறிஸ்துவர்கள்தான் யூதர்களைப் பல இன்னல்களுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதும் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பிறகுதான் முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்கும் பகைமை ஏற்பட்டிருக்கிறது என்பதும் நன்றாகப் புலனாகும்.  இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைப் பற்றி இப்போது பேசுபவர்கள் இந்த உண்மையை மறந்துவிடுகிறார்கள்.  அது மட்டுமல்ல, முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் போலவும் அவர்களால்தான் யூதர்களுக்குத் தீங்கு விளைவது போலவும் கூறுகிறார்கள்.

    முற்றும்

    கீழே இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துக்கொண்ட வரைபடத்தைப் பார்க்கலாம்.

    palestine-FourMaps

    Share
  • இஸ்ரேல் பயணம் – 11

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இப்போது இஸ்ரேலுக்கு உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் யூதர்கள் குடிவரலாம்.  அவர்களை இஸ்ரேல் அரசு இரு கரம் நீட்டி வரவேற்கிறது.  அவர்களுக்குக் குடியுரிமை உடனேயே வழங்கப்படுகிறது.  எடுத்த எடுப்பிலேயே அவர்கள் இஸ்ரேலின் இரகசிய உளவுப் படையான மோசாடில் (Mossad) கூட சேர்ந்து பணிபுரியலாம்.  வளம் நிறைந்த அமெரிக்காவிலிருந்து கூட பல யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்திருக்கின்றனர்.  1948-இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதும் 3000 ஆண்டுகளுக்கு முன் தங்கள் மூதாதையர் வாழ்ந்த புண்ணிய பூமியில் தங்கள் இனத்திற்கென்று ஒரு நாடு உருவாகியிருக்கிறது, அங்கு சென்று வாழ்க்கையைக் கழித்தால்தான் சொர்க்கத்தை அடையலாம் என்று எண்ணிப் பல யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்திருக்கின்றனர்.  இப்போதும் இங்கேயே முழுவதுமாகக் குடிபெயரவில்லை என்றாலும் வருடத்தில் சில நாட்களாவது இங்கு வந்து தங்கிச் செல்ல வேண்டும் என்று பல அமெரிக்க யூதர்கள் நினைக்கிறார்கள். 

    ஆனால் அதே சமயம் பாலஸ்தீன அரேபியர்கள் ஏழாம் நூற்றாண்டிலிருந்து இஸ்லாம் மதத்தைத் தழுவி பதின்மூன்று நூற்றாண்டுகளாக இங்கேயே வசித்துவருகிறார்கள்.  இதற்கு முன்னால் இவர்கள் பழங்குடி மக்களாக இங்கு வாழ்ந்திருக்க வேண்டும்.  இந்த பாலஸ்தீன அரேபியர்களுக்கு தங்கள் சொந்த மண்ணில் வசிக்க எல்லாத் தொல்லைகளையும் இஸ்ரேல் அரசு கொடுத்து வருகிறது.  இப்படித் தொந்தரவுகள் கொடுப்பதால் அவர்களாக வெளியேறினால் நல்லது.  இல்லயென்றால் அவர்களை எப்படியாவது வெளியேற்றிவிடவும் பல திட்டங்களை வைத்திருக்கிறது.

    எங்களை புராதன நகருக்குள் அழைத்துச் சென்ற பயண வழிகாட்டி இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்.  இவர் மூன்று வருடங்கள் படிப்பதற்காக பெல்ஜியத்திற்குச் சென்றிருந்தாராம்.  திரும்பி வந்தபோது இஸ்ரேல் அரசு இவர் நாட்டிற்குள் வருவதற்குப் பல தடைகள் விதித்ததாம்.  சில ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே இருந்தால் பாலஸ்தீன அரேபியர்கள் இஸ்ரேலியக் குடியுரிமையை இழந்துவிடுவார்களாம்.  தன்னுடைய குடியுரிமையைப் பெறுவதற்காக இவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறாராம்.  (இவருக்கு யூத இனத்தைச் சேர்ந்த காதல் தோழி இருக்கிறாள்.  ஆனால் சாதாரணமாக இப்படி இருப்பதைப் பார்க்க முடியாது.)

    எங்களை பெத்லஹேமுக்கும் ராமல்லாவுக்கும் அழைத்துச் சென்ற பயண வழிகாட்டியின் மனைவியும் குழந்தைகளும் கனடாவில் இருக்கிறார்கள்.  வருடம் ஒரு முறை அவர்கள் இங்கு வருகிறார்கள்.  அவர் இருப்பது வெஸ்ட் பேங்கில்.  அங்கிருப்பவர்கள் இஸ்ரேலுக்கு வருவதற்கு இஸ்ரேல் அரசு வழங்கியிருக்கும் அடையாள அட்டை வேண்டும்.  எந்த இடத்திலும் வெஸ்ட் பேங்கிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முடியாதபடி இஸ்ரேல் அரசு மிகப் பிரமாண்டமான மதில் சுவரை எழுப்பியிருக்கிறது.  சில இடங்களில் இதைச் சுற்றிக்கொண்டு இஸ்ரேல் அரசு அமைத்துள்ள சோதனைச் சாவடிகளின் மூலம்தான் வர வேண்டும்.  இப்படி இவர்களுக்குத் தடைகள் இருப்பதால் இவர் குடும்பம் கனடாவிலேயே இருக்க முடிவு செய்திருக்கிறது.

    நாங்கள் இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டெல் அவிவிற்கும் ஜெருசலேமிற்கும் இடையில் இருக்கும் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து (இஸ்ரேல் உருவாவதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர்.  இவரின் பெயரை இந்த விமான நிலையத்திற்கு வைத்திருக்கிறார்கள்.) ஜோர்டன் தலைநகரான அம்மான் வந்துசேர்ந்தோம்.  ஜெருசலேமிற்கும் அம்மானுக்கும் இடையே உள்ள தூரம் நாற்பத்தைந்து மைல்கள்தான்.  ஆனால் அந்த தூரத்தைக் கடக்க ஜெருசலேமில் சர்வதேச விமானப் போக்குவரத்து இல்லை.  பேருந்துகளில்தான் பயணம் செய்ய வேண்டும்.  பேருந்தில் பயணம் செய்தால் இஸ்ரேலிய-ஜோர்டன் எல்லையில் இஸ்ரேலிய அரசு நடத்தும் சோதனை மிகவும் கெடுபிடியாக இருக்கும் என்றார்கள்.  பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.  அதனால் டெல் அவிவிலிருந்து விமானம் மூலமே இஸ்ரேலை விட்டுக் கிளம்பவேண்டும் என்று முடிவு செய்தோம்.  விமானப் பயணம் ஒன்றரை மணி நேரம்தான்.  ஆனால் கட்டணம் எவ்வளவு தெரியுமா?  அறுநூறு அமெரிக்க டாலர்கள்.  அடிக்கடி ஒரே கம்பெனியில் விமானப் பயணம் செய்பவர்களுக்கு சில சலுகைகள் உண்டு.  என் மகளுக்கிருந்த அந்தச் சலுகையைப் பயன்படுத்தி எங்களுக்கு அந்தப் பயணத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தாள்.

    எங்களை அன்று ஜெருசலேமிலிருந்து டெல் அவிவ் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற டாக்சி ஓட்டுநர் ஒரு அரேபியர்.  இளவயதினர்.  சொந்தமாக டாக்சி வைத்திருக்கிறார்.  அவர் எங்களைக் கூட்டிக்கொண்டு டெல் அவிவ் விமான நிலையத்திற்குள் நுழைந்ததும் இஸ்ரேல் போலீஸ் துறையைச் சேர்ந்த ஒருவர் எங்கள் டாக்சியை நிறுத்தினார்.  எல்லா போலீஸார் கையிலும் நீண்ட துப்பாக்கி.  இவர் கையிலும் ஒன்று இருந்தது.  எங்கள் டாக்சி அருகே வந்து உள்ளே யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தார்.  எங்கள் சூட்கேசுகளைத் திறக்கச் சொன்னார்.  எங்கிருந்து வருகிறோம், எங்கே போகிறோம் போன்ற பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, டிரைவரை மட்டும் தன்னோடு அழைத்துச் சென்றார்.  அதற்கு முன்பே அவருக்கு அடையாள அட்டை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார்.  அவரைத் தனியாக அங்கு பக்கத்தில் இருந்த அவர்களுடைய அலுவலகத்திற்குள் கூட்டிச் சென்று பல கேள்விகள் கேட்டுவிட்டுப் பின் அனுப்பிவைத்தனர்.  அந்த டிரைவருக்கு இப்படி அவர்கள் தன்னை நடத்தியதைக் கண்டு அப்படி ஒரு எரிச்சல்.  ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  ‘உனக்கு நான் அடிமை இல்லை’ என்ற பாவத்தில் முகத்தை வைத்துக்கொண்டார்.  அதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.  இவர் பல தலைமுறைகளாக ஜெருசலேமில் வாழ்ந்து வருகிறாராம்.  இவரைப் போன்றவர்கள் இஸ்ரேல் நாடு உருவானதிலிருந்து இரண்டாம் பட்ச குடிமக்களாகி இருக்கின்றனர்.

    இஸ்ரேலில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் ஒரே வேலைக்கு ஒரே மாதிரியான சம்பளம் இல்லையாம்.  யூதர்களுக்கு அதிகமாகவும் அரேபியர்களுக்குக் குறைவாகவும் கொடுக்கப்படுகிறதாம்.  பயண வழிகாட்டி எங்களை ராமல்லாவுக்கு அழைத்துச் சென்றபோது இஸ்ரேல் அரசால் குடியமர்த்தப்பட்டவர்களின் வீடுகளையும் அரேபியர்களின் வீடுகளையும் காட்டினார்.  அரேபியர்களுக்குத் தண்ணீர் சில நாட்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுவதால் அவர்களின் வீடுகளின் கூரைகளில் தண்ணீரைச் சேமித்துவைத்துக்கொள்ள பெரிய தொட்டிகளைப் பொருத்தியிருந்தார்கள்.  ஆனால் குடியமர்த்தப்பட்டவர்களின் வீடுகளில் அப்படி தொட்டிகள் எதுவும் இல்லை.  அவர்களுக்குத் தினமும் தண்ணீர் சப்ளை இருக்கிறதாம்.  அதனால் இவர்கள் வீடுகளுக்கு முன்னால் செழிப்பான புல்வெளிகள் இருக்கின்றன.

    பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான – ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட – இடங்களைப் பிடித்துக்கொண்டு அங்கு யூதர்களை இஸ்ரேலிய அரசு குடியேற்றியிருக்கிறது.  இது 1967–லிருந்து –  அதாவது இஸ்ரேல் போரில் பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களைப் பிடித்துக்கொண்டதிலிருந்து – தொடர்ந்து வருகிறது.  இப்படிக் குடியமர்த்தப்பட்டவர்கள் அவர்களுக்கு அருகில் வசிக்கும் அரேபியர்களுக்குப் பல தொல்லைகள் கொடுக்கிறார்கள்.  ஒரு முறை பெடுயின் (Bedouin) என்னும் இனத்தைச் சேர்ந்தவர்களின் ஆடுகளுக்கு விஷம் வைத்துவிட்டார்களாம்.

    நாங்கள் இஸ்ரேலுக்குப் போவதற்குக் காரணமாகயிருந்த யூத நண்பரும் இன்னொரு யூத நண்பரும் தீவிர இடதுசாரிகள்.  இவர்கள் பல முறை இஸ்ரேல் அரசு அரேபியர்களுக்கும் பெடுயின் இனத்தவர்களுக்கும் இழைத்த கொடுமைகளைத் தட்டிக் கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்.  ஒருவர் ‘முதல் யூதக் கோவில் இடிக்கப்பட்டதுதான் யூத இன சரித்திரத்திலேயே நடந்த சிறந்த சம்பவம்’ என்று நக்கலாகச் சொல்கிறார்.  இவர்தான் நாங்கள் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளக் காரணமாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.  இஸ்ரேலைச் சேர்ந்த இவர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஆறு வருடங்கள் வேலைபார்த்துவிட்டு மறுபடி இஸ்ரேலுக்கே திரும்பச் சென்றுவிட்டார்.  இவர் இப்படித் திரும்பக் காரணமாக இருந்தவர் இவர் மனைவி என்கிறார்.  ஒரு முறை  இவர் ரேடியோவில் பேட்டி கொடுத்தபோது இந்தியாவில் பாபர் மசூதியை இடித்ததைப் பற்றிக் கேள்வி கேட்டார்களாம்.  இஸ்ரேலில் போல் அங்கும் பழைய சரித்திரத்தைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றதும் அப்படியே பேட்டியை முடித்துவிட்டார்களாம்.  இன்னொருவர் அமெரிக்காவில் பிறந்து தனது பதினெட்டாவது வயதில் ஹீப்ரு மொழியால் ஈர்க்கப்பட்டு இஸ்ரேலுக்கு வந்தவர்.  இருவரும் அரசின் கொள்கைகளை வெகுவாகக் கண்டிப்பவர்கள்.  இருவரும் ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் வேலைபார்க்கிறார்கள்.  இஸ்ரேலில் யூதர்களுக்கிடையே திருமணங்கள் நிச்சயிக்கப்பட்ட பிறகு யூத மத குருமார்கள் அடங்கிய ஒரு குழு அதை அங்கீகரிக்க வேண்டுமாம்.  இவர் விவாகரத்து செய்துகொண்ட ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது குருமார்கள் குழு எளிதில் அதை அங்கீகரிக்கவில்லையாம்.

    எல்லாச் சமூகங்களிலும் இருப்பது போல் யூத சமூகத்திலும்பல விதக் கொள்கைகள் உடையவர்கள் இருக்கிறார்கள்.  பழமை பேணும் யூதர்களிலிருந்து (conservative) பரந்த மனப்பான்மை கொண்ட முற்போக்காளர்கள் (liberal) வரை இருக்கிறார்கள்.  அமெரிக்காவில் இருக்கும் எங்கள் யூத நண்பர் வருடத்திற்கு ஒரு முறை இஸ்ரேலுக்குப் போக வேண்டியது தன் கடமை என்று நினைக்கிறார்.  பலர் சேர்ந்து வாங்கும் ஒரு அப்பார்ட்மெண்டை ஜெருசலேமில் வாங்கியிருக்கிறார்.  ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் திவருடைய முறை.  அந்தச் சமயத்தில் இவர் அங்கு சென்று தங்கிக்கொள்ளலாம்.  அமெரிக்காவில் வாழும் இன்னொரு யூத நண்பர் ஓரிரு முறை யூதச் சட்டங்களைப் (Jewish Law) படிக்க ஜெருசலேம் சென்றுவருகிறார்.  இவரைப் பொறுத்தவரை யூத மதம் என்பது ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை, அதற்கென்று சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன.  அவற்றைப் பின்பற்றுவது ஒவ்வொரு யூதனுடைய கடமை.  யூதர்கள் தங்கள் புண்ணிய தலம் என்று கருதும் பாலஸ்தீனத்திற்குப் போக வேண்டும், அங்கேயே தங்கி உயிரை விட வேண்டும் என்பதெல்லாம் இவருடைய கொள்கையல்ல.  ஆனால் யூத மதக் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.  யூதர்களுடைய ஓய்வு தினமான (Sabbath Day) சனியன்று – அதாவது வெள்ளிக்கிழமை சூரியன் அஸ்தமித்ததிலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை – இவர் யாரிடமும் பேசுவதில்லை; தொலைபேசியை அன்று தொடவே மாட்டார்.  அன்று யார் தொலைபேசியில் கூப்பிட்டாலும் அவர் மனைவிதான் பேசுவார்.  பெரிய வேலை எதுவும் அன்று செய்வதில்லை.   இவர் அமெரிக்காவில் வாழ்ந்துவருவதால் அமெரிக்கப் பழக்க வழக்கங்களைக் கையாண்டாலும் இப்படிச் சில யூதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார்.  யூதர்கள் தங்களுக்குள்ளேயேதான் திருமணம் செய்துகொள்ளுகிறார்கள்.  இவருடைய பிள்ளைகளும் யூதர்களுக்குள்ளேயே திருமணம் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

    இவருடைய நண்பர்களான ஒரு தம்பதி இப்போது இஸ்ரேலில் வாழ்ந்துவருகிறார்கள்.  இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்துவந்தவர்கள்.  இஸ்ரேலில்தான் யூதப் பழக்க வழக்கங்களை நன்றாகப் பின்பற்ற முடியும் என்று எண்ணி அங்கு குடியேறியவர்கள்.  மேலே குறிப்பிட்டவர்களை விட இவர்கள் இன்னும் கொஞ்சம் பழமைவாதிகள் எனலாம்.  இருந்தாலும் இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களுக்கு எதிராகச் செய்யும் செயல்கள் இவர்களுக்கு உடன்பாடில்லை.  இவர்களும் அரசுக்கு எதிரான சில போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

    மேலே குறிப்பிட்ட சிகாகோ பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரின் மனைவிதான் அவர்கள் குடும்பம் இஸ்ரேலுக்குத் திரும்பிச் செல்லக் காரணமாக இருந்தவர் என்று மேலே சொன்னேன்.  இவருக்கு யூத மத நம்பிக்கை உண்டு போலும்.  திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு மத குருமார்கள் பெண்ணை ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி சில சோதனைகள் செய்வார்களாம்.  இது யூதப் பழக்கம் போலும்   இதை இவர் எதிர்க்கவில்லையாம்.  மேலும் அமெரிக்காவிலேயே தொடர்ந்து இருந்திருந்தால் இவர்களுடைய பிள்ளைகளுக்கு – இவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன் – கட்டாய ராணுவ சேவை இருந்திருக்காது.  இஸ்ரேலில் மூன்று பிள்ளைகளுக்கும் அது உண்டு.  அப்படியும் இஸ்ரேலுக்கு வர வேண்டுமென்று இவர் நினைத்திருக்கிறார்.  இவர்கள் வீட்டில் ஒரு நாள் எங்களுக்கு விருந்து கொடுத்தார்கள்.  மத்திய கிழக்கில் தயாரிக்கப்படும் சிறந்த உணவு வகைகள் இருந்தன.  அதை சமைத்தது அல்லது இவருக்குச் சமைக்க உதவியது யார் தெரியுமா?  இவருக்கு வீட்டு வேலைகளில் அவ்வப்போது உதவும் ஒரு இஸ்ரேலிய அரேபியப் பெண்.

    இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூற வேண்டும்.  அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்குக் குடியேறியிருக்கும் எல்லா யூதர்களுக்கும் அவர்கள் விரும்பினால் திரும்ப அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.  இவர்கள் இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர்கள்.  இஸ்ரேலும் இவர்களை அங்கேயே வைத்துக்கொண்டு நன்றாக நடத்தத் தயாராக இருக்கிறது; அமெரிக்காவும் திரும்ப அழைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது.

    யூதர்களுக்காக இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முற்றிலும் சரி என்று நினைக்கும் யூதர்களிலும் சிலர் பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்றும் அந்த முயற்சிகளை முறியடிக்க இஸ்ரேல் அரசு செய்து வருவது சரியில்லை என்றும் நினைக்கிறார்கள்.  பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு செய்யும் எல்லாக் காரியங்களையும் கண்டுகொள்ளாத யூதர்களும் உண்டு.  இப்படிப் பல தரப்பட்ட கொள்கைகளையுடைய யூதர்களின் விருப்பம் எப்படி 2013 ஜனவரியில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதிபலித்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

     (தொடரும்)

    Share
  • இஸ்ரேல் பயணம் – 10…….

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நாங்கள் கடைசியாக இஸ்ரேலில் பார்த்த இடம் மசாடா (Masada).  இங்கு போவதற்குச் சொந்தமாக டாக்சி வைத்திருக்கும் ஒரு பயண வழிகாட்டி கிடைத்தார்.  பிழைப்புக்காக இவர் இந்தத் தொழிலைச் செய்யவில்லை.  கொஞ்சம் வருமானம் வருகிறது என்பதோடு ஏதாவது செய்துகொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும் இதைச் செய்து வருகிறார்.  அமெரிக்காவில் எங்கள் யூத நண்பர் ஒருவரின் நண்பர் மூலம் இவருடைய முகவரி கிடைத்தது.  இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டதும் உலகின் பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தனர்.  எங்கள் நண்பரின் நண்பரும் அவர் மனைவியும் இப்படி இஸ்ரேலுக்கு அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள்.  இவர் மனைவி ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் வேலைபார்க்கிறார்.  இவர்களிடமிருந்து பயண வழிகாட்டியின் முகவரியைப் பெற்றுக்கொண்டதும் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.  மிகவும் வெக்கையான இடம், நிறையத் தண்ணீர் கொண்டுவாருங்கள், உடன் தலையை நன்றாக மூடிக்கொள்ள ஒரு தொப்பியையும் கொண்டுவாருங்கள் என்று முதலிலேயே எங்களை எச்சரித்தார்.  சென்னை வெயிலுக்குப் பழகிப் போயிருந்த எங்களுக்கு அப்படி என்ன வெயில் இருந்துவிடப் போகிறது என்று நினைத்தோம்.  அங்கு காரில் போகும்போதும் அந்த இடத்தை அடைந்த பிறகும் இருந்த வெக்கையைப் பார்த்த பிறகுதான் அவர் சொன்னது எவ்வளவு சரி என்று தோன்றியது.  வழி நெடுக பாலைவனப் பிரதேச மணல் குன்றுகளும் ஆங்காங்கே பேரீச்சம்பழத் தோட்டங்களும் இருக்கின்றன.  ஜெருசலேம் நகரிலிருந்து 30 மைல் தொலைவில் இருக்கும் மசாடாவிற்குச் செல்லும் சாலை நேர்த்தியாக இருக்கிறது.  வழியில் எந்த விதமான கட்டடங்களும் இல்லை.  ஒரே மணல் காடாகக் காட்சியளிக்கிறது.

    பாலஸ்தீனம் முழுவதும் சிறிய குன்றுகளும் சமவெளிகளும் நிறைந்து காணப்படுகிறது.  அதற்கு மேல் பாலைவனப் பிரதேசம் மிகுதியாக இருக்கிறது.  மத்திய தரைக் கடலை நோக்கிச் செல்லும்போதுதான் சமவெளிப் பிரதேசம் இருக்கிறது.  மசாடா, இஸ்ரேலின் தென்கிழக்குக் கோடியில் உள்ள ஜுடாயா (Judean) பாலைவனப் பகுதியில் இருக்கிறது.  இதற்குப் பக்கத்தில் இருக்கும் உயிரற்ற கடலின் (Dead Sea, இதற்கு ‘சாக்கடல்’ என்றும் பெயர்) மட்டத்திலிருந்து மசாடா 1,300 அடி உயரத்தில் இருக்கிறது.  இதை ஊர் என்பதை விட பெரிய குன்றின் மேல் உள்ள சமதளப் பகுதியில் கட்டப்பட்ட, மதில் சுவரால் சூழப்பட்ட அரண் என்று கூறலாம்.  இதற்குள் மூன்று அரண்மனைகள், யூதர்களின் கோயிலான சினகாக் ஒன்று, பல வீடுகள், சிப்பாய்களின் குடியிருப்புகள், தானியக் கிடங்குகள், தண்ணீரைச் சேமித்து வைக்கப் பெரிய தொட்டிகள், பொது மற்றும் தனிப்பட்டவர்களின் குளியல் அறைகள் என்று அக்காலத்திய பொறியியல் விநோதங்கள் பல இருக்கின்றன.

    மசாடா 2001-இல் ஐ.நா.வின் உலகப் பாரம்பரிய இடங்களில் (UN World Heritage Sites) ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. மசாடா என்றால் ஹீப்ரு மொழியில் கோட்டை என்று அர்த்தமாம்.  இது கி.மு. இரண்டாம், முதலாம் நூற்றாண்டுகளிலேயே கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.  கி.மு. 42 – 4 வரை யூத மன்னனாக விளங்கிய ஹெராட் (Herod) (இவன் ரோமானிய அரசர்களின் ஆளுகைக்குக் கீழ் இருந்தவன்) ஒரு வேளை தன் பதவிக்குப் பங்கம் வந்தால் தான் அதில்  தங்கிக்கொண்டு மறுபடி ஆட்சியைப் பிடிக்க ஏதுவாக இதை விரிவுபடுத்திக் கட்டினானாம்.  ஆனால் அதை உபயோகிக்கும் தேவை ஹெராட் மன்னனுக்கு ஏற்படவில்லை.

    ஹெராட் இறந்ததும் மசாடா ரோமானியர்களின் வசம் சிக்கியது.  கி.பி. 66-இல் யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்துப் போராடி மறுபடி இதைத் தங்கள் வசமாக்கிக்கொண்டனர்.  ஆனால் கி.பி. 70-இல் தங்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த யூதர்களை ரோமானிய அரசன் நசுக்கி ஜெருசலேமில் இருந்த அவர்களின் இரண்டாவது கோவிலையும் இடித்துத் தரைமட்டமாக்கினான்.  (அதன் வெளிச் சுவர் ஒன்று மட்டும் இப்போது இருக்கிறது.  இது இஸ்ரேலியர்களின் புனித இடங்களில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது.)  ஜெருசலேமை இழந்த பிறகு பல யூதர்களுக்கு பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  ஆனால் ரோமானியர்களை எதிர்த்தே தீருவது என்று முடிவுசெய்து 960 யூதர்கள் மட்டும் – இவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களும் சேர்ந்து – ரோமானியர்களிடமிருந்து தப்பிக்கத் தங்கள் வசமிருந்த மசாடாவிற்குப் போய்த் தங்கினர்.  அங்கு இரண்டு வருடங்கள் தங்கி ரோமானியர்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொண்டனர்.  கி.பி. 73-இல் ஃப்ளேவியஸ் சில்வா (Flavius Silva) என்னும் ரோமானிய படைத் தளபதி மசாடாவை முற்றுகையிட்டான்.  மலையின் அடிவாரத்தில் 10,000 ஆட்களைக் கொண்ட படையைத் தங்கச் செய்து மலைக்கு மேல் செல்வதற்கு படிகளைக் கொண்ட சாய்தளத்தைக் (ramp) கட்டினான்.  இந்தப் படை கோட்டையைச் சூழ்ந்துகொண்டு கோட்டைக்குள் இருப்பவர்கள் தப்பிக்க முடியாமல் செய்தது.  கடைசியாகச் சுவர்களைத் தகர்க்கும் இயந்திரங்களை இந்தச் சாய்தளம் மூலம் மேலே கொண்டுசென்று கோட்டையை ரோமானியப் படை தகர்த்தது.  இனி மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை அறிந்த யூதர்கள் ரோமானியர்களிடம் சிக்குவதற்குப் பதிலாக உயிரை இழப்பதே மேல் என்று முடிவுசெய்து எல்லோரும் இறந்துவிடுவது என்று முடிவுசெய்தார்களாம்.  யார் யாரைக் கொல்ல வேண்டும் என்று சீட்டுப்போட்டு எடுத்தார்களாம்.  முதலில் பத்துப் பேர் மற்றவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் பின் அந்தப் பத்துப் பேரை யார் கொல்ல வேண்டும் என்றும் முடிவுசெய்தார்களாம்.  இதற்குரிய சான்றுகளை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இரண்டு பெண்களும் மூன்று குழந்தைகளும் எப்படியோ தப்பித்தார்களாம்.  மசாடா கோட்டைதான் பாலஸ்தீனத்தில் யூதர்களின் கடைசி இடமாக விளங்கியது.

    மசாடா ஒரு செங்குத்தான குன்று.  இதன் மேல்தளம் சமதளமாக இருக்கிறது.  அதன் விஸ்தீரணம் இருபது ஏக்கர்.  இந்தக் கோட்டைக்கு இரண்டு சுற்றுச் சுவர்கள் உண்டு.  வெளிச்சுவரின் நீளம் 1,400 மீட்டர்.  இதற்கு இணையாக இதற்கு உள்புறம் இன்னொரு சுவர் இருக்கிறது.  இவை இரண்டும் எளிதில் தகர்க்க முடியாதவை.  வெளிச் சுவரின் அகலம் 1.5 மீட்டர்; உயரம் நான்கு முதல் ஐந்து மீட்டர்.  உள்சுவரின் அகலம் ஒரு மீட்டர்.  இரண்டு சுவர்களுக்கும் இடையேயுள்ள நான்கு மீட்டர் இடம் 110 அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.   இந்த அறைகளுக்குள்ளே நுழைய வடக்குப் புறமாக வாசல் அமைக்கப்ப்பட்டிருக்கிறது.  மசாடா முழுவதும் கற்களால் கட்டப்பட்டிருப்பதாலும் இங்குள்ள சீதோஷ்ணநிலை மிகவும் ஈரச்சத்தில்லாமல் வெப்பமாக இருப்பதாலும் பல நூற்றாண்டுகளாக இவை அப்படியே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.  வெளிச்சுவரில் 37 கோபுரங்கள் இருக்கின்றன.  இவை ஒவ்வொன்றுக்கும் இடையே 35-90 மீட்டர் இடைவெளி இருக்கிறது.  இந்தக் கோபுரங்களில் ஏறுவதற்கு உள்ளேயே படிகள் கொண்ட சாய்தளம் இருக்கிறது.  இரண்டு சுவர்களுக்கும் இடையே உள்ள அறைகளின் மேலே கூரை வேயப்பட்டிருக்கிறது.  இந்தக் கூரைகள் மரக்கட்டைகளாலும் அவற்றிற்கு குறுக்கே செங்கோணத்தில் (right angle) அமைக்கப்பட்டிருக்கும் நாணல்களாலும் கட்டப்பட்டிருக்கின்றன.  இதற்கு மேலே பின்னப்பட்ட பாய்களை வைத்துக் கூரையை மூடியிருக்கிறார்கள்.  இந்தக் கூரைகள் மிகவும் பலமாக இருந்ததால் வீரர்கள் இதன் மீது நடக்கவும் கனமான பொருட்களை வைத்துக்கொள்ளவும் வசதியாக இருந்திருக்க வேண்டும்.  மலை மீது ஏறிவந்த எதிரிகளின் மீது வீரர்கள் எறிந்த கற்கள் இடிபாடுகளுக்கிடையே கிடைத்திருக்கின்றன.  சுவர்களுக்கு இடையே இருந்த அறைகள் வீரர்கள் தங்கிகொள்வதற்காகக் கட்டப்பட்டவை.  ஆனால் ஹெராட் காலத்தில் இந்த அறைகளில் யாரும் தங்கியிருக்கவில்லை.  ரோமானியரை எதிர்த்துப் போராடிய யூதர்கள் காலத்தில் அவர்கள் இந்த அறைகளில் தங்கியிருந்திருக்க வேண்டும்.  அவர்கள் உபயோகித்த அடுப்புகள், பாத்திரங்கள் இன்னும் இருக்கின்றன.

    அரணிற்கு உள்ளே மூன்று அரண்மனைகள் இருக்கின்றன.  அரண்மனைகளுக்கு அருகே உள்ள வீடுகள் எல்லாவற்றிலும் கிட்டத்தட்ட ஒரே அமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றன.  முதலில் ஒரு அறை,  பின் முற்றம், அதற்குப் பின் அறைகள் இருக்கின்றன.  இவற்றின் சுவர்களில் சுவர்ச் சித்திரங்கள் காணப்படுகின்றன.  தொல்பொருள் ஆராய்ச்சிக்குப் பிறகு அவற்றை மூடியிருந்த மண் அகற்றப்பட்டதால் சில சித்திரங்கள் மங்க ஆரம்பித்தனவாம்.  அவற்றை ஜெருசலேமிற்கு எடுத்துச் சென்று புதுப்பித்து மறுபடி அதே இடங்களிலேயே பொருத்தினார்களாம்.  மசாடாவில் உள்ள கட்டடங்கள் யாவும் அந்தக் கால கட்டடக்கலையின் நேர்த்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

    பல காலம் தங்குவதற்குத் தேவையான வசதிகள் கோட்டைக்குள் இருந்தனவாம்.  மழைத் தண்ணீர் ஒரு இடத்தில் சேர்ந்து பின் தொட்டிகளில் சேர்வதற்குரிய வகையில் அமைத்திருக்கிறார்கள்.  அங்கு வருஷம் முழுவதும் பெய்த மழையின் அளவு 22 செண்டி மீட்டர்கள்தான்.  வடக்குப் பகுதியில் இருக்கு அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள இடம் மிகவும் செழிப்பானதாம்.  இந்த இடத்தை மற்ற எந்தக் காரியத்திற்காகவும் உபயோகித்ததாகத் தெரியவில்லை.  இரண்டு வருடங்களுக்கு மேலேயே அவர்கள் அங்கு தங்க நேர்ந்திருந்தாலும் இந்த இடத்தில் விளைந்ததை வைத்து சமாளித்திருப்பார்களாம்.  மூன்று அரண்மனைகள் இருக்கின்றன.  ஹெராட் தங்குவதற்கான அரண்மனை, விருந்தினர்களை வரவேற்கும் இடம், சிப்பாய்கள் தங்கும் விடுதிகள், விசாலமான குளியல் அறைகள், பொழுதுபோக்கிற்கான இடம் என்று இன்று இடிபாடுகளாகக் காணப்படும் இடங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

    மலைக்கு மேல் செல்வதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன.  முதலாவது முதல் முதலாக யூதர்கள் கட்டிய ‘பாம்புப் பாதை’.  இது மிகவும் செங்குத்தாக இருக்கிறது.  இதை யாரும் இப்போது உபயோகிப்பதில்லை.  இரண்டாவதாக ரோமானியர்கள் கட்டிய படிகளைக் கொண்ட சாய்தளப் பாதை.  மலைக்கு மேல் போவதற்கு இந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் இருக்கிறார்கள்.  படிகளில் ஏறிச் செல்வதற்கு மலைக்காதவர்கள் இதில் செல்லலாம்.  அதிக தூரம் ஏற முடியாதவர்களுக்கு ‘கேபிள் கார்’ வசதி இருக்கிறது.  மலையடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த சேவை மூலம் நேரே மலை உச்சிக்குப் போய்விடலாம்.  மலைக்கு மேலே இருக்கும் இந்த அரண் முழுவதும் சமதளத்தில் இருக்கிறது.  கேபிள் காரிலிருந்து இறங்கியவுடன் நேரே அரணின் எல்லா இடங்களுக்கும் நடந்து செல்லலாம்.

    மசாடா பாலஸ்தீனத்தின் ஒரு கோடியில் இருப்பதாலும் இங்கு யாரும் வரவில்லையாதலாலும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக பாழடைந்து போயிருந்த கோட்டையை இஸ்ரேலிய அரசு தேவையான இடங்களில் புதுப்பித்திருக்கிறது.  1965-இல் இந்த அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது.  இப்போது முன்னால் எப்படி இருந்தது என்று கற்பனை செய்து புதுப்பித்திருகிறார்கள்.

    ஜோஸபஸ் ஃப்ளேவியஸ் (Josephus Flavius) என்னும் வரலாற்று ஆசிரியர் யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்து மசாடாவில் தங்கிப் போர்புரிந்ததை யூதர்களின் யுத்தம் (The Jewish war) என்ற தன் நூலில் எழுதியிருக்கிறார்.  இவர் யூதராகப் பிறந்தவர்.  யூதர்கள் ரோமானியரை எதிர்த்ததைத் தடுத்து நிறுத்த முயன்றார்; ஆனால் முடியவில்லை.  பின்னர் யூதர்களின் சார்பில் சண்டையிட்டு ரோமானியர்களால் சிறைபிடிக்கப்பட்டுப் பின்னால விடுவிக்கப்பட்டார்.  யூதர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே தூது போய்க்கொண்டும் இருந்திருக்கிறார்.  கடைசியாக ரோமானியர் பக்கம் சேர்ந்து ரோமானியக் குடிமகன் ஆனார்.  ரோமானிய அரசன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த யுத்தத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

    பயணிகளுக்கு வசதியாக மலைக்கு மேலேயே இப்போது குடிதண்ணீர் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள்.  களைப்படையும் பயணிகள் ஓய்வு எடுக்க நிழல் தரும் இடமும் கல்லினால் செய்யப்பட்ட பெஞ்சுகளும் இருக்கின்றன.  இத்தனை வசதிகள் இருந்தும் அங்கு அடிக்கும் வெயில் யாரையும் அசத்திவிடும்.  தண்ணீரைக் குடித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.  வெயிலிலிருந்து காத்துக்கொள்ள தலையில் தொப்பியையும் எப்போதும் அணிந்துகொள்ள வேண்டும்.

    மசாடா யூதர்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் சின்னமாக இப்போது விளங்குகிறது.  இஸ்ரேலியப் பள்ளிக் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்து நின்ற வீரத்திற்குச் சான்றாக  இந்தக் கோட்டையைக் காட்டுவார்களாம்.  இஸ்ரேலியப் படைகள் தங்கள் பயிற்சிகளை முடித்த பிறகு இங்கு வந்து ‘மசாடா இனி ஒரு போதும் வீழ்ச்சி அடையாது’ (‘Masada shall not fall again’) என்று சூளுரைப்பார்களாம்.

    மசாடாவிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் உயிரற்ற கடலைப் பார்க்கச் சென்றோம்.  இதன் நீர் மிகவும் உப்பாக இருப்பதால் இதில் உயிரினங்கள் எதுவும் இல்லை.  இந்தக் கடல் நீருக்கும் மண்ணிற்கும் நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.  இதனால் இதன் அருகில் உடல் பயிற்சிக்குத் தேவையான வசதிகள் கொண்ட ஓட்டல்கள் இருக்கின்றன.  இது ஒரு சிறிய ஏரியின் அளவுதான் இருக்கும்.  ஆனாலும் நீர் உவர்ப்பாக இருப்பதால் கடல் என்று அழைக்கிறார்கள்.  இதன் ஒரு பகுதி ஜோர்டான் நாட்டிலும் ஒரு பகுதி இஸ்ரேலிலும் இருக்கிறது.  இதன் நீளம் தெற்கு வடக்காக 47 மைல்கள்தான்; அகலம் 10 மைல்கள்.  இது கடல் மட்டத்திற்குக் கீழே 1300 அடியில் இருக்கிறது.  இதுதான் உலகிலேயே தாழ்ந்த இடம் என்கிறார்கள்.  ஜோர்டன் நதிதான் இதில் கலக்கிறது.  இப்போது ஜோர்டன் நதியின் நீரின் பெரும் பகுதியை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதால் இந்தக் கடலின் நீர் மட்டம் குறைந்துகொண்டே போகிறதாம்.

    இந்தக் கடல் பற்றிய விளம்பரங்களில் ‘இதில் மூழ்கவே முடியாது.  அப்படியே மிதந்துகொண்டே இருக்கலாம்.  இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு’ என்று போட்டிருக்கிறார்கள்.  அந்த இடம் மிகவும் வெக்கையாக இருப்பதால் கடல் நீர் மிகவும் சூடாக இருக்கிறது.  கரையில் உள்ள மணலில் கால் வைக்கவே முடியவில்லை.  அப்படி ஒரு சூடு.  சிலர் தண்ணீரின் மேலே மிதந்துகொண்டிருந்தார்கள்.  கடலின் கரைக்கு அருகிலேயே உப்பற்ற குளிர்ந்த நீர், குழாய்கள் மூலம் வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  கடலில் மிதந்துவிட்டு இவற்றில் நீராடிவிட்டு வரலாம்.  கடலுக்குப் பக்கத்திலேயே உல்லாசப் பயணிகளுக்கு வசதியாக உணவகங்கள் இருக்கின்றன.

    இதையடுத்து நாங்கள் பார்க்கச் சென்றது உயிரற்ற கடல் சுவடிகள் (Dead Sea Scrolls) கண்டுபிடிக்கப்பட்ட கும்ரான் (Qumran) என்னும் குகைகள் அடங்கிய இடம்.  கி.மு. 150-க்கும் கி.பி. 68-க்கும் இடையில் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் தங்களுடைய கடவுளின் தூதர் வருவார் என்று எதிர்பார்த்து மற்றவர்களிடமிருந்து தனித்து எளிய வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தூதரை வரவேற்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.  இவர்கள் இந்தச் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  1948-இல் பெடுயின் (Bedouin) என்னும் ஆடு மேய்க்கும் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் தற்செயலாக இந்தக் குகைகளுக்குள் ஒன்றில் காணாமல் போய்விட்ட தன் ஆட்டுக்குட்டி ஒன்றைத் தேடிச் சென்றிருக்கிறான்.  அங்கு தாழிகளுக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த சுவடிகளைக் கண்டிருக்கிறான்.  இந்தச் சுவடிகள் கிறிஸ்துவுக்கு முன் எழுதப்பட்ட யூதர்களின் வேத புத்தகமான தோராக்களின் (Torah) விளக்கங்கள்.  இவை கண்டுபிடிக்கப்பட்டதும் முதலில் இவை கிறிஸ்துவ சமயத்தின் வரலாற்றையே மாற்றிவிடலாம் என்று கிறிஸ்துவர்கள் பயந்தார்களாம்.  ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. முன்பே கூறியபடி, இந்தச் சுவடிகள் இப்போது மிகவும் பத்திரமாக இஸ்ரேல் மியுசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    (தொடரும்)

    மசாடாவின் படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/MasadaQumranAndDeadSea?authkey=Gv1sRgCJL_nIiBia7v1AE

     

     

     

     

     

     

     

     

    Share
  • இஸ்ரேல் பயணம் – 9

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஜோர்டனைச் சேர்ந்த வெஸ்ட் பேங்கின் (ஜோர்டன் நதியின் மேற்குப் பகுதி) பெரும்பகுதியை இஸ்ரேல் 1967 போரில் பிடித்துக்கொண்டது.  இந்தப் பகுதி தற்போது A, B, C  என்னும் மூன்று நிர்வாகப் பிரிவுகளாக இருக்கிறது.  ஒரு பிரிவு முழுவதும் இஸ்ரேலின் நிர்வாகத்திலும் மற்றொரு பிரிவு பாலஸ்தீன நிர்வாகத்திலும் மூன்றாவது இரண்டின் நிர்வாகத்திலும் இருக்கின்றன.  ஒரு நாள் பாலஸ்தீன நிர்வாகத்தில் இருக்கும் பெத்லஹேம் (Bethlehem ),   ராமல்லா (Ramallah) போன்ற இடங்களைப் பார்க்க சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யும் கம்பெனிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தேதியையும் குறித்துக்கொண்டோம்.  இந்த ஏற்பாடுகளைச் செய்த போதே ‘நாங்கள் உங்களை அங்கு கொண்டுபோய்விட்டுவிட்டு எல்லா இடங்களையும் காட்டிவிடுவோம்.  அதன் பிறகு நீங்களாகத்தான் திரும்பி வரவேண்டும்.  அப்படி நீங்களாக வந்தால்தான் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்குள் வரும்போது எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று உங்களுக்குப் புரியும்’ என்று சொல்லியிருந்தார்கள்.  நாங்களும் அந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டோம்.

    அன்று காலை ஒன்பது மணிக்குப் பிரயாணத்தை ஆரம்பித்தோம்.  எங்களை அழைத்துச் செல்ல வந்த டாக்ஸி எங்களை ஏற்றிக்கொண்டு சென்றது.  சுமார் பத்து மைல் தூரம் சென்றதும் ஒரு சோதனைச் சாவடி அருகில் எங்களை இறக்கிவிட்டுவிட்டு அந்த ஓட்டுநர் சென்றுவிட்டார்.  அவரால் வெஸ்ட் பேங்கிற்குச் செல்ல முடியாது.  இஸ்ரேலிய குடியுரிமை பெற்றவர்கள் யாரும் வெஸ்ட் பேங்கிற்குச் செல்ல அனுமதி இல்லை.  சோதனைச் சாவடியைத் தாண்டியதும் அந்தப் பக்கம் இன்னொரு ஓட்டுநர் எங்களை அவருடைய டாக்ஸியில் அழைத்துச் செல்வார் என்றார்கள்.

    இரு பக்கமும் கம்பிகளால் அடைக்கப்பட்ட நீண்ட சோதனைச் சாவடிப் பாதையைக் கடந்து சென்ற பிறகு அந்தப் பக்கம் எங்களுக்காகக் காத்திருந்த ஓட்டுநரைச் சந்தித்தோம்.  அவரால் இஸ்ரேலுக்குள் வர முடியாது.  சோதனைச் சாவடியைத் தாண்டி வெளியே வந்தவுடன் பெத்லஹேம் ஊர் துவங்குகிறது.  இங்கேயும் வளைந்து நெளிந்து செல்லும் பிரமாண்ட தடுப்புச் சுவரைப் பார்த்தோம்.  பாலஸ்தீனர்களுக்காக ஐ.நா. 1947-இல் ஒதுக்கிய இடங்களில் 1967 போரில் இஸ்ரேல் பிடித்துக்கொண்ட இடங்களைச் சுற்றிக்கொண்டு இந்தச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது.  இந்தப் பகுதியின் சுவரில் பாலஸ்தீனியர்கள் தங்கள் கோரிக்கைகளையும், கனவுகளையும் ஸ்பிரே பெயிண்டில் (spray paint) எழுதியிருந்தார்கள்.  ஊரைப் பார்க்கவரும் பயணிகளும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுதியிருந்தார்கள்.  என் கணவரும் அவர் பங்கிற்கு ‘விடுதலை’ என்று தமிழில் எழுதி வைத்தார்.

     

    1948-லிருந்து யூதர்களின் வன்முறையாலும் பல முறை நடந்த போர்களாலும் பல பாலஸ்தீனியக் குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறின.  இவர்கள் பக்கத்திலுள்ள லெபனான், ஜோர்டன் ஆகிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தார்கள்.  இப்போதைய பாலஸ்தீனத்திலும் அகதிகள் முகாம் இருக்கிறது.  அதில் ஒன்று ஐ.நா. மேற்பார்வையில் பெத்லஹேம் நகரில் இருக்கிறது.  அதற்கு நடந்து போனோம்.  இங்கே நெருக்கமான வீடுகள், குறுகிய சந்துகள் இருக்கின்றன.  ஜனநெருக்கமும் அதிகமாக இருக்கிறது.  தண்ணீர் சில நாட்களுக்கு ஒரு முறைதான் வருமாம்.  ஐ.நா. ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறது.  பல வீடுகளில் குண்டடி பட்ட துவாரங்கள் இருந்தன.  அகதிகளின் இரண்டாம் தலைமுறையினர் வேறு நாடுகளுக்குப் போய் சம்பாதித்துப் பணம் அனுப்புவதால் மோசமான வறுமை இல்லை.  இந்த முகாமில் வேலைவாய்ப்பே கிடையாது.   இதில் தொண்டு நிறுவனம் ஒன்று சிறுவர்களுக்கு வேலைப் பயிற்சி அளிப்பது போன்ற காரியங்களைச் செய்து வருகிறது.  அகதிகள் செய்யும் கைவினைப் பொருள்களை விற்கிறது.  இதன் அலுவலகத்தில் ஒரு சிறு கண்காட்சியும் இருந்தது.  பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையையும் கஷ்டங்களையும் பற்றிய புத்தகங்களையும் விற்கிறார்கள்.  அதில் மனதை நெகிழ வைத்தது பெரிய சாவிகள்.  1948-இல் இஸ்ரேல் உருவானதாக அறிவிக்கப்பட்டதும் அங்கிருந்து அவர்களாக ஓடிவந்த அகதிகளும் இஸ்ரேலால் விரட்டியடிக்கப்பட்டவர்களும் வெஸ்ட் பேங்கிலும் ஜோர்டனிலும் சிரியாவிலும் லெபனானிலும் தஞ்சம் அடைந்தனர்.  இவர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கு என்றாவது திரும்புவோம் என்ற நம்பிக்கையில் சாவிகளைப் பத்திரமாக வைத்திருக்கிறர்களாம்.  அதைக் காட்டும் அடையாளம்தான் கண்காட்சியிலுள்ள சாவி.  இவர்கள் தங்களுடைய பழைய இடங்களுக்கு எப்போது திரும்பிச் செல்வார்கள் என்பது இன்னும் கேள்விக் குறியாக இருக்கிறது.

    இந்த அகதிகள் இருக்கும் இடம் ஒரு மேட்டுப் பிரதேசத்தில் இருக்கிறது.  அங்கு செல்வதற்கு முன் எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது.  என்னைப் பயண வழிகாட்டியின் தந்தை நடத்தும் ஒரு கடையில் அரை மணி நேரம் உட்கார வைத்துவிட்டு என் குடும்பத்தினர் பக்கத்து இடங்களுக்குச் சென்று வந்தனர்.  அது ஒரு சிறிய கடை.  நான் அங்கு இருந்தபோது வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை.  முக்கியமாக பாலஸ்தீனியர்கள் உடை, அவர்களின் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் பொருள்கள் ஆகிய நினைவுப் பொருள்கள்தான் (souvenir) இருந்தன.  ஜூன் மாதமாதலால் வெயில் கடுமையாக அடித்துக்கொண்டிருந்தது.  குளிர்சாதன அமைப்பு எதுவும் இல்லை.  அந்த வெக்கையால் அசதி ஏற்பட்டு நான் சில நிமிடங்கள் கண்ணயர்ந்துவிட்டேன்.  கண்களைத் திறந்து பார்த்தால் கடைக்காரரைக் காணோம்.  நான் எழுந்திருந்து பார்த்தபோது அவர் கடைக்கு வெளியில் நின்றிருந்தார்.  நான் கண்ணயர்ந்து இருக்கும்போது, தான் கடையில் இருப்பது நாகரிகமல்ல என்று நினைத்துவிட்டார் போலும்.  நான் விழித்துவிட்டது தெரிந்ததும் உள்ளே வந்தார்.  முஸ்லீம்கள் எல்லாம் முரடர்கள் என்று நினைப்பவர்கள் இந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கட்டும்.

     

    அகதிகள் முகாமை முடித்துக்கொண்டு பெத்லஹேமில் உள்ள பெரிய தேவாலயத்தைக் காணச் சென்றோம்.  இயேசுவின் பெற்றோர்கள் நாசரேத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இயேசு பிறந்தது பெத்லஹேம் நகரில்.  அங்கு அவர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்வார்கள்.  அவர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு வெள்ளி நட்சத்திரம் நட்டுவைக்கப்பட்டிருக்கிறது.  இது ஒரு குகை போன்ற பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது.  கி.பி. 160-இல் இந்த இடம் இயேசு பிறந்த இடமாக அடையாளம் பெற்றது.  ஆனால் 326-இல் தான் ரோமானிய அரசன் கான்ஸ்ட்டாண்டின் இங்கு ஒரு கோயில் கட்டும்படி ஆணையிட்டான்.  கி.பி.530-இல் இது மறுபடி புதுப்பிக்கப்பட்டது.  பின்னால் 10-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சிலுவைப் போராளிகள் (Crusaders) அதை மேலும்  அழகுபடுத்தினார்கள்.  அதன் பிறகு இது பல முறை அழகுபடுத்தப்பட்டது.  இப்போது பெரிய தேவாலயமாகக் காட்சியளிக்கிறது.  பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட பிரமாண்டமான தூண்களோடும் சாண்டிலியர் விளக்குகள் பொருத்தப்பட்ட கூரைகளோடும் மிக அழகாக காட்சியளிக்கிறது.  பெத்லஹேம் ஊரின் மையப் பகுதியில் மேஞ்சர் ஸ்கொயர் (Manger Square) என்னும் இடத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.

    பெத்லஹேம் நகரம் ஜெருசலேம் போன்று பலர் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.  இது கிறிஸ்தவர்களுக்குரிய புண்ணிய ஸ்தலம் என்பதால் இதில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள்.  இப்போது இஸ்ரேலிலிருந்து பல பாலஸ்தீன அகதிகள் வந்திருப்பதால் முஸ்லீம்களின் எண்ணிக்கை கிறிஸ்தவர்களை விட அதிகமாக இருக்கிறது.

    பெத்லஹேமில் மதிய உணவை முடித்துக்கொண்டு ராமல்லா என்ற ஊருக்கு எங்களை அழைத்துச் சென்றனர்.  இது இப்போது பாலஸ்தீன அத்தாரிட்டியின் (Palestinian Authority) தலைமைச் செயலகமாக விளங்குகிறது.  ராமல்லா என்ற பெயரிலிருக்கும் ‘ராம்’ என்றால் உயரம் என்று அர்த்தமாம்;  அல்லா இஸ்லாமியரின் கடவுள்..  இந்த இரண்டும் சேர்ந்து உயரத்தில் இருக்கும் கடவுளின் இருப்பிடம் என்ற பெயர் இதற்கு வந்ததாம்.

    ஜெருசலேம், பெத்லஹேம் போன்ற மற்ற தொன்மையான நகரங்களைப் போன்று ராமல்லாவும் தொன்மை வாய்ந்த நகரம்.  இது பல ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.  பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் இருந்தபோது பெரிய நிலச்சுவான்தார்கள் நிறைய கட்டடங்கள் கட்டினர்; 1936-இல் இந்த ஊருக்கு மின்சாரம் வந்தது.  மொத்தத்தில் இந்த ஊர் வளமடைந்தது.  பி.பி.சி. ஒரு வானொலி நிலையத்தைத் துவக்கியது.  1947-இல் ஐ.நா. பாலஸ்தீனத்தைப் பிரித்தபோது வெஸ்ட் பேங்கில் இருக்கும் இது பாலஸ்தீனர்களுக்காக ஒதுக்கப்பட்டது.  1948 போருக்குப் பிறகு இது ஜோர்டனுக்குக் கீழ் வந்தது.  ஜோர்டன் அரசு சிரியா, லெபனான், ஜோர்டன் போன்ற நாடுகளுக்கு இங்கு வசித்த பாலஸ்தீனர்கள் போய்வர சுதந்திரம் அளித்தது.

    1967-இல் நடந்த போருக்குப் பிறகு இது இஸ்ரேலின் கீழ் வந்தது.  இஸ்ரேல் வெஸ்ட் பேங்கில் பிடித்துக்கொண்ட இடங்களில் இதுவும் ஒன்று.  போர் முடிந்ததும் இஸ்ரேல் இங்கு வசித்த மக்கள் பற்றிய ஒரு கணக்கெடுப்பு எடுத்தது.  அங்கு வசிக்கும் எல்லோருக்கும் இஸ்ரேலுக்குள் வருவதற்கும் அங்கு வேலைபார்ப்பதற்கும் ஒரு அனுமதி அட்டை வழங்கியது.  அப்போது வெளிநாட்டில் இருந்தவர்கள் அந்த அட்டையைப் பெற முடியாமல் போனது.  அவர்கள் ராமல்லாவில் வசிக்கும் உரிமையை இழந்தனர்.   இஸ்ரேல் ராமல்லா உட்பட தான் பிடித்துக்கொண்ட வெஸ்ட் பேங்க் இடங்களில் பல கெடுபிடிகளைக் கையாண்டது.  ராமல்லாவைச் சுற்றிப் பாதுகாப்புக்காக என்ற பெயரில் இஸ்ரேலியர்கள் மட்டுமே உபயோகிக்கக் கூடிய சாலைகளை அமைத்தது.  இதனால் ராமல்லா ஜெருசலேமிலிருந்து துண்டிக்கப்பட்டது.  ராமல்லாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் ஜெருசலேமிற்குப் போவதற்கு இஸ்ரேல் அமைத்திருக்கும் சோதனைச் சாவடிகளைத் தாண்டித்தான் போக வேண்டும்.  இந்தச் சோதனைச் சாவடிகளில் இருக்கும் (stationed) இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் ராமல்லாவாசிகளுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.

    1964-இல் பாலஸ்தீனத்தை விடுவிக்கப் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (Palestinian Liberation Organization) தோன்றியது.  1969-இல் இதன் தலைவராக யாசர் அராபத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இஸ்ரேலியர்களுக்கு எதிராக வெஸ்ட் பேங்கில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் செய்த வன்முறைச் செயல்களை இவர் தடுக்கவில்லை என்பதால் இவரைத் தீவிரவாதி என்று இஸ்ரேலும் இஸ்ரேலை ஆதரித்துவந்த அமெரிக்காவும் என்று அழைத்தன.  பாலஸ்தீன நாடு உருவாக வேண்டும் என்ற கோரிக்கையோடு  இஸ்ரேல் என்ற நாடு இருக்கக் கூடாது என்று அராபத் கூறிவந்தார்.  ஆனால் இந்தக் கொள்கையிலிருந்து மாறி 1992-இல் நார்வே அதிகாரிகள் செய்த முதற்சிகளின் மூலம் இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டார்.  இஸ்ரேலும் பாலஸ்தீன நாடு உருவாவதை ஒப்புக்கொண்டது.  1993-இல் ஆஸ்லோ ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பிரதிநிதிகளுக்கும் இடையே கையெழுத்தானது.  ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாலஸ்தீனம் தனி நாடாக இயங்கும் என்றும் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் வெஸ்ட் பேங்கில் தான் பிடித்துக்கொண்ட இடங்களிலிருந்து வெளியேறும் என்றும் அறிவிக்கப்பட்டது.  ஜெருசலேமின் எதிர்காலம், இஸ்ரேலிலிருந்து வெஸ்ட் பேங்கிற்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் குடிபெயர்ந்த அகதிகள், வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் அமைத்த குடியிருப்புகள் ஆகியவை பற்றிய விபரங்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை.  பாலஸ்தீன தேசிய அத்தாரிட்டி (Palestinian National Authority) உருவாக்கப்பட்டு ராமல்லா வளர்ச்சி அடையத் தொடங்கியது.

    ஆஸ்லோ ஒப்பந்தத்தின் காரணகர்த்தாக்களுள் ஒருவரான இஸ்ரேல் பிரதம மந்திரி யிட்சக் ராபின் (Yitzhak Robin) தீவிரவாத யூதன் ஒருவனால் கொலைசெய்யப்பட்டர்.  அதன் பிறகு 1996–இல் பதவிக்கு வந்த நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை.  2001-இல் பதவிக்கு வந்த ஏரியல் ஷேரன் காலத்தில் தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் வருவதைத் தடுக்க இஸ்ரேலையும் பாலஸ்தீனப் பகுதிகளையும் பிரிக்க பிரமாண்டமான சுவரை 2002-இல் கட்ட ஆரம்பித்தார்.   ராமல்லா இருக்கும் பகுதியிலும் இந்தச் சுவர் செல்கிறது.

    இந்த ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக எங்களை ஏற்றிச் சென்ற வேன் சென்றது.  பல இடங்களையும் காட்டிவிட்டுக் கடைசியாக பேருந்து நிலையத்தில் எங்களை விட்டுச் சென்றனர்.  வழியில் யாசர் அராபத்தின் (இவர் 2004-இல் பாரீஸில் இறந்தார்) கல்லறை இருந்தது.  அது பல இடிபாடுகளுடன் காணப்பட்டது.  பயண வழிகாட்டி ‘அராபத் இறந்த பிறகும் ஏமாற்றப்பட்டர்’ என்று கல்லறை சரியாகக் கட்டப்படாததைச் சுட்டி காட்டினார்.  (பாரீஸில் அவரை விஷம் கொடுத்துக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு சமீபத்தில் அவர் கல்லறையிலிருந்து அவர் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.)

    முதலில் கூறியபடியே எங்களை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டுப் பயண வழிகாட்டி சென்றுவிட்டார்.  நம் நாட்டு பேருந்துகள் போல்தான் கூட்டம் அங்கு வழிந்துகொண்டிருந்தது.  108-ஆம் எண் பேருந்துகள் எல்லாவற்றிலும் எங்களைக் கட்டணம் எதுவும் இல்லாமல் ஏற்றிக்கொள்வார்கள் என்றும் நேரே ஜெருசலேமிற்கு வந்துவிடலாம் என்றும் பயண வழிகாட்டி கூறியிருந்தார்.  ஜெருசலேமிற்கும் ராமல்லாவிற்கும் இடையே உள்ள தூரம் பத்து மைல்களுக்கும் குறைவு.  தடுப்புச் சுவர் இருப்பதால் அதைச் சுற்றிக்கொண்டு போக வேண்டியிருப்பதால் இருபது மைல்களுக்கு மேல் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது.

    108-ஆம் எண் பேருந்துகள் வந்த வண்ணமாக இருந்தன.  அதில் ஒன்றில் ஏறி நாங்கள் ஜெருசலேமை நோக்கிப் பயணம் செய்தோம்.  வழியில் இஸ்ரேலின் சோதனைச் சாவடி ஒன்று இருந்தது.  அங்கு பேருந்தை நிறுத்தச் சொன்னார்கள்.  திடீரென்று இஸ்ரேலியப் படைவீரர்கள் இருவர் – ஒரு ஆணும் பெண்ணும் – பேருந்திற்குள் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு ஏறினர்.  (இஸ்ரேலில் இளவயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாய ராணுவ சேவை உண்டு.  யூதர்களுடைய வேத புத்தகமான தோராவை (Torah) ஓதும் சநாதன யூதர்களுக்கும் (Orthodox Jews) இஸ்ரேலில் வாழும் அரபு இஸ்ரேலியர்களுக்கும் இதிலிருந்து விலக்கு உண்டு.  அரேபியர்களை இஸ்ரேல் அரசு நம்புவதில்லை.  அதனால் அவர்களை ராணுவத்தில் சேர்த்துக்கொள்வதில்லை. வேதம் ஓதுவதால் சநாதன யூதர்களுக்கு விலக்கு உண்டு.  ஆனால் இப்போது அதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.)

    எல்லோருடைய பாஸ்போர்ட்டுகளையும் பரிசோதித்துவிட்டு இளைஞர்கள் அனைவரையும் தங்களோடு அழைத்துச் சென்றனர்.  அப்படி அழைத்துச் சென்றவர்களில் எங்கள் மகள்கள் இருவரும் சேர்த்தி.  இதை எதிர்பார்க்காத நான் கொஞ்சம் வெலவெலத்துப் போய் படைவீரர்களிடம் ஏதோ கேட்கப் போனேன்.  ஆனால் அவர்கள் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் எல்லோரையும் பேருந்தை விட்டுக் கீழே இறங்கச் சொல்லி சாலையின் ஓரத்திலிருந்த சோதனைச் சாவடிக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றனர்.  அதன் பிறகு இருபது நிமிடங்கள் கடந்தன.  உள்ளே சென்ற சிலர் சிறிது நேரத்தில் வெளியே வந்தனர்.  ஆனால் எங்கள் மகள்கள் வரவில்லை.  அதுவரை பேருந்தை நிறுத்தியிருந்த ஓட்டுநர் பேருந்தை மறுபடி ஓட்டத் தொடங்கினான்.  எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  மகள்கள் வராமல் போக வேண்டாம் என்று முடிவுசெய்து நாங்களும் பேருந்தை விட்டு இறங்கினோம்.  சோதனைச் சாவடிக் கட்டடத்திற்கு முன்னால் நின்றுகொண்டு எங்கள் மகள்கள் வருகிறார்களா என்று வாயிலைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.  சிறிது நேரத்தில் இன்னொரு 108-எண் பேருந்து வந்தது.  அதிலிருந்தவர்களில் சிலரையும் படைவீரர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர்.  அவ்வப்போது சிலர் வெளியே வந்த வண்ணம் இருந்தனர்.  இதுவரை எங்கள் மகள்கள் வெளியே வராததால் எங்களுக்கு மிகவும் பயமாகிவிட்டது.  இரண்டாவதாக வந்த பேருந்து ஓட்டுநரை அணுகி அவர் பேருந்திலிருந்து உள்ளே அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா என்று கேட்டோம்.  அவர் தன் பேருந்தில் வந்தவர்கள் சிலர் இன்னும் உள்ளே இருப்பதாகவும் முதல் பேருந்தில் (அதாவது நாங்கள் வந்த பேருந்து) இருந்தவர்கள் எல்லோரும் வெளியே வந்துவிட்டதாகவும் கூறினார்.  எங்களுக்கு ஒரே அதிர்ச்சி ஆகிவிட்டது.  என்ன செய்வது என்று தெரியாமல் கட்டடத்திற்கு வெளியே நின்றிருந்த படைவீரர்களை அணுகினோம்.  (இவர்கள் கைகளிலும் துப்பாக்கி.)  அவர்கள் உள்ளே சென்று விபரம் அறிந்து வருவதாகக் கூறினர்.  உள்ளே சென்ற பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தவர்கள் எங்கள் மகள்கள் இன்னும் உள்ளே இருக்கிறார்கள் என்றும் சிறிது நேரத்தில் வெளியே வருவார்கள் என்றும் கூறினர்.  மிகவும் கலவரப்பட்டுப் போயிருந்த எங்கள் முகங்களைப் பார்த்ததனாலோ என்னவோ இரண்டு சிறிய நாற்காலிகளைக் கொண்டுவந்து எங்களை அவற்றில் அமரச் சொன்னார்கள்.  கட்டடங்களுக்கு வெளியே – சாலையின் ஓரத்தில் – பதைபதைத்துக்கொண்டு – குறிப்பாக நான் – உட்கார்ந்திருந்தோம்.  அதன்பிறகும் மகள்கள் வெளியே வர கால் மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.  அதிலும் பெரிய மகள் வந்து பத்து நிமிஷங்களுக்குப் பிறகுதான் சிறிய மகள் வெளியே வந்தாள்.  சில நிமிஷங்கள் கழித்து வந்த ஒரு 108-எண் பேருந்தில் ஜெருசலேம் நோக்கிப் பயணித்தோம்.  இந்தச் சோதனையும் அவதியும் பாலஸ்தீனர்களுக்கு தினசரி அனுபவம்.  ஏன் நாங்களாகத் திரும்பி வர வேண்டும் என்று சொன்னார்கள் என்பது புரிந்தது.

    பெத்லஹேம், ராமல்லா படங்களைக் கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.

     படங்களைக் காண கீழே சொடுக்குங்கள்

    https://picasaweb.google.com/108173580006522327175/BethlehemAndRamallah?authkey=Gv1sRgCLjJ_cGU3dmz9gE

    (தொடரும்)

    Share
  • இஸ்ரேல் பயணம் 8

    நாகேஸ்வரி அண்ணாமலை

    புராதன ஜெருசலேம் நகரம் ஒரு மலையின் மேல் அமைக்கப்பட்டிருப்பதால், அதற்குள் உள்ள சாலைகள், கடைகள், கட்டடங்கள் பல மட்டங்களில் இருக்கின்றன.  சாலைகளின் நடுவில் படிகள் இருக்கின்றன.  அவற்றின் இரு பக்கமும் சரிவுப் பாதைகள் இருக்கின்றன.  அவற்றில்தான் கடைகளுக்குச் சரக்குக் கொண்டு செல்பவர்கள் நம் கைவண்டி போன்ற வண்டிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்படியே சருக்கிக்கொண்டு போகிறார்கள்.  ஆங்காங்கே மார்க்கெட்டுகள் இருக்கின்றன.  காய்கறிகள், பழங்கள் விற்கும் கடைகளும் ஆரஞ்சுப் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்து கொடுக்கும் கடைகளும் நினைவுப் பொருள்கள் விற்கும் கடைகளும் சிற்றுண்டி விற்கும் கடைகளும் இங்கு இருக்கின்றன.  இந்த நகரத்திற்குள் புதிதாக வருபவர்கள் எளிதாகத் தொலைந்துவிடலாம்.  ஏனெனில் அத்தனை சிறிய தெருக்கள், சந்துகள் இருக்கின்றன.  பட்டை, பெருஞ்சீரகம் உள்ளிட்ட, உணவுக்குச் சுவை கூட்டும் பல பொருள்கள் (spices) விற்கும் கடைகளும் இந்த மார்க்கெட்டிற்குள் இருக்கின்றன.  புராதன நகரத்திற்குள் எந்தக் கடையிலும் அரிசியைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை.  ஆனால் டமாஸ்கஸ் வாயிலுக்கு (Damascus Gate-ஏழு வாயில்களில் இதுவும் ஒன்று) வெளியே நம் நாட்டில் இருப்பது போன்ற சிறிய பலசரக்குக் கடைகள் நிறைய இருக்கின்றன.  அங்கு மிக உயர்ந்த தரமுடைய நம் நாட்டு பஸ்மதி அரிசி கிடைத்தது.  அமெரிக்காவிலும் பல வகையான பஸ்மதி அரிசிகள் கிடைக்கின்றன.  இது அப்போதுதான் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் போலும்.  புதுக்கருக்கு மாறாமல் இருந்தது.  அமெரிக்காவிலிருந்து ஒரு மாதம் இஸ்ரேலில் தங்கியிருக்க வந்திருந்த யூத நண்பருக்கு என் சமையல் என்றால் பிடிக்கும்.  அவருக்குச் சமைப்பதற்காக அரிசியைத் தேடிக்கொண்டிருந்த போது இது கிடைத்தது.

    புராதன நகருக்குள் தனியாகச் சென்றால் எல்லா  இடங்களையும் அவற்றின் தொன்மையையும் சிறப்புக்களையும் நம்மால்  புரிந்துகொள்ள முடியாது என்பதால் ஒரு பயண வழிகாட்டியை (guide) ஏற்பாடு செய்துகொண்டோம்.  அவர் ஒரு அரேபிய முஸ்லீம்.  முந்திய தினமே தொலைபேசியில் அவரிடம் தொடர்பு கொண்டு மறு நாளைக்கு எங்கு, எத்தனை மணிக்குச் சந்திப்பது என்று முடிவுசெய்துகொண்டோம்.  காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை அவர் எங்களைப் புராதன நகருக்கும் அதற்கு வெளியேயுள்ள ஜெருசலேமின் மற்ற இடங்களுக்கும் கூட்டிப் போவதாக ஏற்பாடு.  அரேபியர்கள் முதலில் இருந்த இடங்களைச் சுற்றி இஸ்ரேல் அரசு ஏற்படுத்தியிருக்கும் புதிய குடியிருப்புகளும் இதில் சேர்த்தி.

    நாங்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் புராதன நகருக்கு மிகவும் அருகில்  இருந்தது.  மொத்த தூரம்  அரை மைல்தான் என்றாலும், ஏற்ற இறக்கங்களையுடைய அந்தத் தெருக்களைக் கடப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.  சில சமயங்களில் அப்பார்ட்மெண்ட் சொந்தக்காரர் யோசியின் (Yosi) உதவி கிடைத்தால் டாக்ஸி கிடைத்துவிடும்.  பக்கத்து இடங்களுக்குச் செல்ல ஜெருசலேமிலும் டாக்ஸிக்காரகள் வர விரும்புவதில்லை.  அந்த மாதிரி நேரங்களில் நடந்துதான் சென்றோம்.  இந்த நடையோடு புராதன நகருக்குள் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் செல்லவேண்டும்.  மதிய உணவைப் பயண வழிகாட்டியே எங்களுக்கு, அவருக்குத் தெரிந்தவர் கடையில் வாங்கிக் கொடுத்தார்.  நம் நாட்டு இட்லி, தோசை போன்றது ஃபலாஃபல் (Falafel) என்னும் பலகாரம்.  இது எல்லாத் தெருக் கடைகளிலும் கிடைக்கும்.  இது காபூல் சன்னா என்று அழைக்கப்படும் பெரிய வெள்ளைக் கொண்டைக்கடலையை நனையவைத்து, வெங்காயம், வெள்ளப்பூடு, சீரகம், கொத்தமல்லித்தழை, பார்ஸ்லி கீரை (Parsley) ஆகிய சாமான்களைச் சேர்த்து ஒரு விதப் பக்குவத்தில் அரைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுவது. இன்னொரு பலகாரம் நம் சப்பாத்தி போன்றது. அது பீட்டா ரொட்டிக்குள் தக்காளி, வெங்காயம், லெட்டஸ் என்னும் கீரை, மற்றும் ஃபலாஃபல் ஆகியவற்றை உள்ளே வைத்துத் தயாரிப்பது.  சில இடங்களில் பயண வழிகாட்டிகள் இதையும் மதிய உணவாகக் கொடுத்தார்கள். ஃபலாஃபல்லோடு ஆரஞ்சுப் பழச்சாறும் எல்லா இடங்களிலும் உணவோடு பரிமாறப்படுகிறது.  ஜெருசலேமை ஒட்டியுள்ள இடங்களில் நிறைய ஆரஞ்சு விளைகிறது.  பயண வழிகாட்டி புராதன நகரில் ஒரு கடையில் ஆரஞ்சுப் பழச்சாறு வாங்கிக் கொடுத்தார்.  ஒரு பெரிய தம்ளர் சாற்றின் விலை பத்து ஷெக்கல் (shekel).  ஷெக்கல் இஸ்ரேலின் நாணய முறை.  நான்கு ஷெக்கல் ஒரு அமெரிக்க டாலருக்குச் சமம். அதாவது ஒரு ஷெக்கல் 13 ரூபாய்க்குச் சமம்.

    மதியம் ஒரு மணிக்கு புராதன நகரப் பயணத்தை முடித்துக்கொண்டு (புராதன நகரைப் பார்ப்பதற்கு அரை நாள் போதாது.  மறுபடி நாங்களாக ஒரு முழு நாள் முழுவதும் அதற்குள் சுற்றினோம்.  ஆனால் அங்கு நடப்பதற்கு நிறையத் தெம்பு வேண்டும்.)  பயண வழிகாட்டி வாங்கிக் கொடுத்த உணவை உண்டுவிட்டு, சிறிது இளைப்பாறிவிட்டு மறுபடி புராதன நகருக்கு வெளியேயுள்ள இடங்களைப் பார்க்கச் சென்றோம்.

    ஜெருசலேம் நகரம் இப்போது  மிகவும் விரிந்திருக்கிறது.  1948-இல் ஐ.நா. செய்த பிரிவினையின் போது ஜெருசலேமை இஸ்ரேலுக்கும் கொடுக்கவில்லை; பாலஸ்தீனத்திற்கும் கொடுக்கவில்லை.  அது ஐ.நா.வின் கீழ் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  ஆனால் 1967 சண்டையில் இஸ்ரேல் ஜெருசலேமைப் பிடித்துக்கொண்டதால், அதைத் தன் தலைநகரம் என்று கூறிக்கொண்டு அங்குதான் தன்னுடைய நெஸ்ஸெட் (Knesset) என்று அழைக்கப்படும் பார்லிமெண்டைக் கட்டியிருக்கிறது.  ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோரின் அதிகாரபூர்வ இருப்பிடங்கள் அங்குதான் இருக்கின்றன.  இஸ்ரேலின் பழைய, பெயர்பெற்ற ஹீப்ரு பல்கலைக்கழகமும் இஸ்ரேலில்தான் இருக்கிறது. ஆயினும், தென் அமெரிக்காவில் இருக்கும் கௌதமாலா, எல் சல்வடார் என்ற இரண்டு நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் – அமெரிக்கா உட்பட – டெல்விவ்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்பது போல் அங்கு தங்கள் தூதரகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றன.

    1948-இல் பாலஸ்தீனத்தில் ஐ.நா. தனக்குப் பிரித்துக் கொடுத்த இடங்கள் இஸ்ரேல் எதிர்பார்த்ததற்கு மேலேயே இருந்ததால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாளே – 1948 மே மாதம் பதினாலாம் தேதியே – வேக வேகமாக பென் குரியன் போன்ற, இஸ்ரேலை உருவாக்கியே தீருவது என்பதில் தீவிரமாக இருந்த யூதத் தலைவர்கள் இஸ்ரேல் நாடு உருவாகிவிட்டது என்று பிரகடனப்படுத்திவிட்டனர்.  ஐ.நா.வின் இந்தப் பிரிவினையை ஒத்துக்கொள்ளாத பாலஸ்தீன அரேபியர்கள் சிரியாவில் கூட்டம் போட்டு ஐ.நா.வின் இந்தத் தீர்மானத்தைக் கண்டித்தனர்.  பாலஸ்தீனம் தங்களுக்கு மட்டுமே என்று நினைத்திருந்தவர்களுக்கு அதை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கு அதில் ஒரு பகுதியைக் கொடுத்து யூத நாடு உருவாக ஆதாரமாக இருந்த ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இஸ்ரேல் உருவான மறு நாளே எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலின் மீது படையெடுத்தன. முதலில் அரபு நாடுகள் யுத்தத்தில் ஜெயிப்பது போல் தோன்றினாலும் இஸ்ரேல் சண்டையில் வெற்றிபெற்றதோடு 1949 ஜனவரி ஏழாம் தேதி சண்டையின் முடிவில் ஏற்பட்ட தற்காலிக யுத்த நிறுத்தத்திற்குப் (cease fire) பிறகு இஸ்ரேல், ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட பகுதியில் பாதியளவு இன்னும் சில இடங்களைப் புதிதாகப் பிடித்துக்கொண்டது.  இப்படிப் பிடித்துக்கொண்ட இடங்களில் ஜெருசலேமின் ஒரு பகுதியும் அடங்கும்.  1956-இல் நடந்த சண்டையில் ஐ.நா.வும் அமெரிக்காவும் வற்புறுத்தியதால் இஸ்ரேல் யுத்தத்தில் பின்வாங்கியது.  1967-இல் மீண்டும் அரபு நாடுகளோடு நடந்த ஆறு நாள் யுத்தத்தில் சிரியா, ஜோர்டன், எகிப்து ஆகிய நாடுகளைத் தோற்கடித்து, ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட இடங்களைப் போல் இரண்டு மடங்கு இடங்களைப் பிடித்துக்கொண்டது.  சிரியாவின் கோலன் ஹைட்ஸ் (Golan Heights), எகிப்தின் சினாய் தீபகற்பம் (Sinai Peninsula), ஜோர்டானின் வெஸ்ட் பேங்க் (West Bank), ஜெருசலேமின் புராதன நகரம் என்று பல இடங்களைப் பிடித்துக்கொண்டது.  1977-இல் எகிப்தில் அன்வர் சதாத் ஜனாதிபதியாக இருந்தபோது இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் போடத் தயாராக இருப்பதாக அவர் கூறியதால், அமெரிக்காவின் உதவியோடு இஸ்ரேலும் எகிப்தும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டன.  ஆனால் அதுவும் நிலைக்கவில்லை.  பாலஸ்தீன விடுதலை இயக்கம் (Palestinian Liberation Organization) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் லெபனானில் செயல்பட்டு வந்தபோது இஸ்ரேல் லெபனானைத் தாக்கியது. அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் சமாதான ஒப்பந்தம் செய்தும் இஸ்ரேல் அங்கு பிடித்த எல்லா இடங்களையும் விட்டு வரவில்லை.  சிரியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில் அந்த ஒப்பந்தத்தை லெபனானும் ரத்துசெய்தது.

    இஸ்ரேல் உருவானதும் அங்கிருந்த பல பாலஸ்தீனிய அரேபியர்கள் பக்கத்து அரபு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுவிட்டிருந்தனர்.  மிஞ்சியவர்கள் இப்போதைய இஸ்ரேலின் ஜனத்தொகையில் இருபது சதவிகிதம்.  இப்படி இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களைப் பிடித்துக்கொண்டே போனதால், இஸ்ரேலிலும் இஸ்ரேல் பிடித்துக்கொண்ட இடங்களிலும் வாழ்ந்த அரேபியர்களுக்கும் இஸ்ரேலிய யூதர்களுக்கும் இடையே அடிக்கடி பூசல்கள் ஏற்பட்டன.  இஸ்ரேல் தான் பிடித்துக்கொண்ட இடங்களில் யூதக்குடியிருப்புகளை அமைத்துக்கொண்டே போனது.  இதுவும் அரேபியர்களின் கோபத்தைக் அதிகப்படுத்தியது.

    இது வரை இஸ்ரேல்  என்ற நாடு இருப்பதையே பாலஸ்தீனத் தலைவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தனர்.  ஆனால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் (Yasser Arafat) இந்த நிலையை மாற்றி முதல் முதலாக இஸ்ரேலுக்குத் தனி நாடாக இயங்கும் உரிமை இருக்கிறது என்றும் பாலஸ்தீனமும் இஸ்ரேலும் பக்கத்து பக்கத்து நாடுகளாக இருக்கலாம் என்றும் கூறினார்.  இதற்கிடையில் 1992-இல் இஸ்ரேலின் பிரதம மந்திரியான யிட்சக் ராபின் (Yitzhak Rabin) இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பகுதிகளில் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்தினார்.

    இதையடுத்து 1993-இல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதற்கு ஆஸ்லோ ஒப்பந்தம் (Oslo Accord) என்றுபெயர்.  இதன்படி வெஸ்ட் பேங்கும் காஸாவும் (Gaza) (காஸா எகிப்து-இஸ்ரேல் எல்லையில் இருக்கிறது.) சுயாட்சி அமைத்துக்கொள்வதென்றும் ஐந்து வருஷங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  (இந்த ஒப்பந்தத்தினால் அராபத்துக்கும் ராபினுக்கும் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.)  1994-இல் யாசர் அராபத் Palestine Authority-யின் தலைவரனார்.

    1995-இல் ராபின் ஒரு யூத தீவிரவாதியால் கொலைசெய்யப்பட்டார்.  1996-இல் பிரதமர் பதவிக்கு வந்த பெஞ்சமின் நேத்தன்யாஹு (Benjamin Netanyahu) என்பவர் ஒரு வலதுசாரி.  (இவருடைய லிக்விட் (Likud party) கட்சிதான் 2013 ஜனவரியில் இஸ்ரேலில் நடந்த பொதுத் தேர்தலில் பார்லிமெண்ட்டின் 120 இடங்களில் 31-ஐப் பிடித்திருக்கிறது.  இன்னும் இரண்டு கட்சிகளோடு சேர்ந்து இவர் அரசு அமைப்பார்.  மூன்றாவது முறையாகப் பிரதம மந்திரி பதவியை வகிப்பார்.)  ஆஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீனர்களுக்கு அதிகச் சலுகை கொடுத்துவிட்டதாகவும் அதைப் பின்பற்றினால் இஸ்ரேலியர்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளையலாம் என்றும் கூறி ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை.  காஸாவில் ஹமாஸ் (Hamas) என்னும் தீவிரவாத பாலஸ்தீனியக் கட்சி தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

    1997-இல் ஹமாஸ் கட்சியைச் சேர்ந்த தீவிரவாத தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து இருபது இஸ்ரேலியர்கள் உயிர் இழக்கக் காரணமாயினர்.  இதைத் தொடர்ந்து நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்திற்கு மாறாகப் பல காரியங்கள் செய்தார்.  இஸ்ரேலில் வேலைபார்க்கும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் பல நிபந்தனைகள் கொண்டுவந்தார்.  பாலஸ்தீனிய அத்தாரிட்டிக்குச் சேர வேண்டிய வரிப் பணத்தை அதற்குக் கொடுக்காமல் நிறுத்தி வைத்தார்.  இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களில் குடியிருப்புகளை அரசு தொடர்ந்து கட்டியதோடு பல வலதுசாரி இஸ்ரேலியர்கள் அமைத்துக்கொள்ள ஆதரவு கொடுத்தார்.  இப்படியாக இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே சண்டை வலுத்துக்கொண்டே போனது.

    யூதர்கள் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேறிக்கொண்டே போனபோது ஜெருசலேமிலும்  பலர் குடியேறினர்.  ஜெருசலேமைச்  சுற்றிலும் நிறைய யூதக் குடியிருப்புகள் இருக்கின்றன.  1967 சண்டைக்குப் பிறகு  இஸ்ரேல் அரசு நிறையக் குடியிருப்புகளைக் கட்டியது.  இவற்றில் சில அமெரிக்காவில் வாழும் பணம் படைத்த யூதர்கள் அரேபியர்களுக்குச் சொந்தமான இடங்களை / வீடுகளை அவர்களிடமிருந்து நிறையப் பணம் கொடுத்தோ அல்லது கட்டாயப்படுத்தியோ வாங்கிக் கட்டப்பட்டவை.  1967-இல் நடந்த சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் பலவற்றைப் பிடித்துக்கொண்டது.  இஸ்ரேலைத் தாக்க பாலஸ்தீன இளைஞர்கள் தற்கொலைப் படையினராக இஸ்ரேல் பகுதிக்குள் வந்தபோது 2001-இல் பிரதம மந்திரியாக இருந்த ஏரியல் ஷேரன் (Ariel Sharon) பாலஸ்தீன இளைஞர்களை வரவிடாமல் தடுக்க உயர்ந்த மதில்களை அரேபியர்கள் வசிக்கும் பகுதிக்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிக்கும் இடையே கட்டத் தொடங்கினார்.  2002-ஆம் ஆண்டில் ஆரம்பித்த சுவர் கட்டும் வேலை இன்னும் நடக்கிறது.

    ஷேரனால் ஆரம்பிக்கப்பட்ட  இந்தச் சுவர் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காகக் கட்டப்படுவதாக இஸ்ரேல் கூறினாலும் இதனுடைய உள்நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனியர்களை வெஸ்ட்பேங்கிலிருந்து வெளியேற்றி அந்த இடங்களையும் இஸ்ரேலுடன் இணைத்து பாலஸ்தீனத்தில் யூதர்கள் மட்டுமே வாழும் நாடாக இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று ஐ.நா.வைச் சேர்ந்த மனித உரிமைக் கழகத்தின் அதிகாரி ஒருவர் 2003-லேயே கூறியிருக்கிறார்.

    ஜெருசலேமின் பல இடங்களில்  இந்தச் சுவரைக் காண முடிந்தது.  இந்தச் சுவர் வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனியர்கள் வாழும் இடங்களுக்கு இடையே ஓடுகிறது.  பாலஸ்தீனியர்கள் வாழும் வீடுகள் சுவருக்கு ஒரு புறமும் அவர்களுடைய ஆலிவ் மரங்கள் அடங்கிய தோப்புகள், விவசாயப் பண்ணைகள் மறுபுறமும் இருக்கின்றன.  இந்தச் சுவர்களைத் தாண்டிப் போவதற்கு சுவரில் ஆங்காங்கே வாயில்களும் சோதனைச் சாவடிகளும் இருக்கின்றன.  இவற்றைத் தாண்டுவதற்கு இஸ்ரேல் அரசிடம் அனுமதி அட்டை பெற வேண்டும்.  அவற்றை இஸ்ரேல் அரசு எளிதாகக் கொடுப்பதில்லையாம்.  மேலும் அவை குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்லுபடியாகுமாம்.  சுவரின் இஸ்ரேல் பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் வசிப்பதற்கே அரசிடம் அனுமதி பெற வேண்டுமாம்.

    இந்தச் சுவர் நகர்ப் புறப் பகுதிகளில் கான்கிரீட்டால் கட்டப்பட்டிருக்கிறது.  சில இடங்களில் 26 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது.  கட்டி முடிக்கப்பட்டதும் 440 மைல் நீளம் கொண்டதாக இருக்குமாம்.  பெர்லின் சுவரை விட இரண்டு மடங்கு உயரமாம்.  கிராமப் புறப் பகுதிகளில் மின்சாரம் பாயும் இரும்புக் கம்பிகளால் ஆன வேலி காணப்படுகிறது.  வேலிக்கு இரு புறமும் ஆழமான அகழிகள் இருக்கின்றன.  சண்டையில் பிடித்துக்கொண்ட இடங்களில் ஏற்படுத்திய குடியிருப்புகளையும் இன்னும் எதிர்காலத்தில் அமைக்கக் கூடிய குடியிருப்புகளுக்கான இடங்களையும் உள்ளடக்கி இந்தச் சுவர் கட்டப்பட்டிருப்பதால் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதி தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது.  சுயேச்சையான பாலஸ்தீன நாடு உருவானாலும் அது பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட நாடாக இருப்பதற்குரிய அபாயம் இருக்கிறது.  வெஸ்ட் பேங்கின் செழுமை வாய்ந்த பகுதியின் பெரும் பகுதி இந்தச் சுவரின் இஸ்ரேல் பகுதியில் இருக்கிறது.  இஸ்ரேலில் வேலை பார்க்கும், சுவரின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் வேலைக்கு வருவதற்கு இந்தச் சுவரின் சோதனைச் சாவடிகள் மூலமாகத்தான் வர வேண்டும்.  நாங்கள் வெஸ்ட் பேங்கில் இருக்கும் பெத்லஹேம், ராமல்லா ஆகிய நகரங்களுக்குச் சென்றபோது இந்தச் சுவரின் வழியாக அதிலுள்ள சோதனைச்சாவடி மூலமாகத்தான் சென்றோம்.

    பயண வழிகாட்டி எங்களை யூதக்குடியிருப்புகளுக்கு நடுவே வசிக்கும் பாலஸ்தீனர்களின்  வீடுகளுக்குக் கூட்டிச் சென்றார்.  அவர்கள் தங்கள் சோகக் கதைகளை எங்களிடம்  கூறினர்.  பாலஸ்தீனர்களுக்குரிய வீடுகளை ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி இஸ்ரேலிய அரசு எடுத்துக்கொள்வதால் சிலர் தங்கள் வீடுகளை விட்டுப் போகவே பயப்படுகிறார்களாம்.  அப்படிப் போகும் பட்சத்தில் அரசு அவற்றை கையகப்படுத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறதாம்.  நான் ஒரு எழுத்தாளர் என்றதும் ‘எங்களைப் பற்றி ஒரு முறையல்ல, பல முறை எழுதுங்கள்.  நிறைய எழுதுங்கள்’ என்றார்கள்.

    சுவர் பற்றிய படங்களை  இந்த ஆல்பத்தில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/TheWall?authkey=Gv1sRgCL_Pu8mm_obUPg

    Share
  • அமெரிக்க முடிசூட்டு விழா

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    அமெரிக்கா உலகிலேயே பணக்கார நாடு; ஜனநாயக நாடு.  பிரிட்டன் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் தன்னுடைய அரச பரம்பரையை இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறது.  டயானா-சார்லஸ் திருமணம் தோல்வியில் முடிந்தது, டயானா தன்னுடைய காதலனோடு காரில் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு சதியால் கார் விபத்தில் மடிந்தது, இளவரசர் சார்லஸ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவரைத் திருமணம் செய்துகொண்டது ஆகிய எல்லாம் ஒரு அரச பரம்பரைக்குரிய செயல்களாக நான் நினைக்கவில்லை.  நான் நினைப்பது இருக்கட்டும்.  பிரிட்டன் தன் அரச பரம்பரையை வெகுவாகக் கொண்டாடுகிறது.  அது தன் நாட்டின் பெருமைக்குரிய சின்னமாகக் கருதுகிறது.  அரசராகப் போகும் இளவரசர் ஹேரியின் மனைவி கருவுற்றது இங்கிலாந்தைப் பொறுத்த வரை பெரிய செய்தி.

    அமெரிக்காவிற்கு என்று  ஒரு அரச பரம்பரை இல்லாவிட்டாலும்  தங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது  அந்த நிகழ்ச்சி அரசரின்  முடிசூட்டு விழாவைப் போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்  போலும்.  ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முன் அந்தப் பதவிக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்வதாக சத்தியம் செய்வதுதான் இந்தத் தொடக்க விழாவின் முக்கிய, அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற, முக்கிய நிகழ்ச்சி.  ஆனால் நாளடைவில் இது பெரிய விழாவாக உருவாகியிருக்கிறது.  பொதுமக்களும் இதை ஒரு பெரிய திருவிழா போல் கொண்டாட நினைக்கிறார்கள்.

    இந்தத் துவக்கவிழா ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற வேண்டும் என்று திருத்தப்பட்ட அமெரிக்க அரசியல் சாசனம் கூறுகிறது.  அன்றிலிருந்துதான் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பதவிக் காலம் ஆரம்பமாகிறது.  முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் 1789-இல் ஏப்ரல் 30-ஆம் தேதி நியுயார்க்கில் பதவியேற்றாராம்.  அப்போது அதுதான் அமெரிக்காவின் தலைநகரம்.  1801-இல் மூன்றாவது ஜனாதிபதியான தாமஸ் ஜெபர்ஸன் பதவியேற்ற போது வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவின் தலைநகரமாகியிருந்தது.

    அதன் பிறகு மார்ச் மாதம் நாலாம் தேதியை ஜனாதிபதியின் துவக்க விழா நாளாக மாற்றினார்களாம்.  தொலைபேசி, இண்டெர்னெட் ஆகிய வசதிகள் இல்லாத காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்தல் முடிவுகள் குதிரை வீரர்கள் மூலமாக தலைநகருக்கு வந்துசேர வேண்டுமாதலால் நவம்பர் முதல் செவ்வாய்க் கிழமையன்று (அமெரிக்கா உருவான நாளிலிருந்து நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க் கிழமைதான் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் நாள்; இது வியப்பிற்குரிய விஷயம்தான்) தேர்தல் நடந்தாலும், வாக்குகளைக் கையால் எண்ணி, முடிவை அறிவித்து, தேர்தல் குழுவின் (Electoral College) முடிவுகளையும் தெரிந்துகொண்டு ஜனாதிபதி பதவி ஏற்பதற்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன.  1937-இல் ரூஸ்வெட்டின் இரண்டாவது பதவியேற்பின் போது பதவியேற்பு விழா அரசியல் சாசனம் இருபதாவது திருத்தத்தின்படி ஜனவரி 20-க்கு மாற்றி அமைக்கப்பட்டது.  இந்த இரண்டரை மாதங்கள் புதிதாகப் பதவியேற்பவர் தன்னுடைய மந்திரி சபையையும் மற்ற அதிகாரிகளையும் தேர்ந்தெடுப்பதற்கு அவகாசம் அளிக்கிறது.

    துவக்க விழா அமெரிக்க பார்லிமெண்டான கேபிடல்  ஹில்லின் (Capitol Hill) படிகளில் நடக்கும். அமெரிக்க தலைமை நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.  அதன் பிறகு ஜனாதிபதி பொறுப்பை ஏற்றவர் தன் அதிகார பூர்வமான வீட்டிற்குச் செல்வார்.  ஜெபர்ஸன் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின் குதிரை மீது வாத்தியக் குழுக்கள் புடைசூழ தன் இருப்பிடத்திற்குச் சென்றாராம்.  அதுதான் இப்போது பெரிய துவக்க விழா அணிவகுப்பாக (Inaugural Parade) உருவாகியிருக்கிறது.  ஜெபர்சனை அடுத்து வந்த ஜேம்ஸ் மேடிசன் காலத்தில் அணிவகுப்பிற்குப் பிறகு துவக்க விழா நடனம் (Inaugural Ball) ஆரம்பித்தது.  இதில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் $4 கொடுத்து டிக்கெட் வாங்கினார்களாம்.  இன்று டிக்கெட்டின் விலை $60. ஆனால், நன்கொடை விலையாக முதலில் $1000-உம், பின், $500-உம் பெறப்பட்டது.  1913-இல் பதவியேற்ற உட்ரோ வில்ஸன் இது அதிகப் பணம் செலவாகும் நிகழ்ச்சி என்று கருதி ரத்துசெய்துவிட்டாராம்.  அவரை அடுத்து வந்த வாரன் ஹார்டிங்கும் அதைத் தொடர்ந்தாராம்.  1949-இல் ஹேரி ட்ரூமன் இதை மறுபடியும் கொண்டுவந்தாராம்.  ஜனாதிபதி கிளிண்டன் காலத்தில் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் பதினான்காக உயர்ந்தனவாம்.

    பதவிப் பிரமாண விழாவிற்கு ஆகும் செலவுகளை மட்டும்தான்  அரசு செலவழிக்கிறதாம்.  மற்ற எல்லா நிகழ்ச்சிகளுக்காகும் செலவுகளை துவக்கவிழா கமிட்டி  தனிப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்கிறதாம்.  இந்த முறை ஒபாமாவே 50 மில்லியன் டாலர்கள் வசூலிக்கும்படி கமிட்டி அங்கத்தினர்களிடம் கூறினாராம்.

    பல நாட்களாக பதவியேற்பிற்கான  ஏற்பாடுகள் நடந்தன.  மிஷல் ஒபாமாவின் உடைகளுக்காக பல ஆயிரம் டாலர்கள் செலவழிக்கப்பட்டன.  (ஆனால் அன்று ஒரு நாள் அதை அணிந்த பிறகு அவருடைய அந்த உடை ஜனாதிபதி ஆவணக் காப்பகத்திற்குச் (presidential archives) சென்றுவிடுமாம்.)  பெரிய ஆடை வல்லுநர்கள் அதைத் தயாரித்தார்களாம். அதன் விலை ரகசியம். ஃபாஷன் பற்றித் தெரிந்தவர்கள் $10,000 இருக்கலாம் என்று மதிக்கிறார்கள். முப்பது வருஷங்களுக்கு முன் ஜனாதிபதியாக இருந்த ரீகனின் மனைவி ஆடைகளில் அதிகப் பணம் செலவழிக்கிறார் என்று மக்களிடையே அதிருப்தி இருந்ததாம்.  இப்போது மிஷல் ஒபாமாவின் உடைகளைப் பற்றி யாரும் குறை சொல்வதாகத் தெரியவில்லை.  இந்த முப்பது ஆண்டுகளில் எத்தனை மாற்றம்!

    துவக்க விழாவிற்குப் பிறகு அணிவகுப்பு, நடனம் என்று பல நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.  சுமார் பத்து லட்சம் பேர் வாஷிங்டனின் குளிரையும் பொருட்படுத்தாமல் துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.  இது ஒபாமாவின் முதல் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கிஅயில் பாதி.

    ஒபாமா தன்னுடைய துவக்க உரையில் (Inaugural Speech) தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் கூறிய வாக்குறுதிகளை மறுபடி கூறினார்.  பலர் அன்றாடத் தேவைகளுக்கே போராடிக்கொண்டிருக்கும்போது சிலர் கையில் மட்டும் பணம் சேருவது நாட்டிற்கே நல்லதல்ல என்றும் ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர்களை மற்றவர்கள் வெறுக்கும் வரையில் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதாகாது என்றும் அட்சய பாதிரமான அமெரிக்காவிற்கு வர விரும்புபவர்களில் தகுதி இருப்பவர்களை வரவேற்பதே மனிதநேயம் என்றும் அவர் கூறியது அவர் எப்படிப்பட்ட மனித நேயர் என்பதைக் காட்டியது.   சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது பற்றியும் விரிவாகப் பேசினார்.

    அவருடைய துவக்க விழாவில் கடவுள் வணக்கம் பாடியவர் ஒரு கருப்புப் பெண்.  கவிதை வாசித்தவர் ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர்.  துணைஜனாதிபதிக்குப் பதவிப் பிரமாணம் செய்வித்த உச்சநீதிமன்ற நீதிபதி போர்ட்டரீகோவிலிருந்து சிறு வயதில் அமெரிக்காவிற்குத் தன் பெற்றோர்களுடன் குடியேறி நியுயார்க்கில் வறியவர்கள் பகுதியில் வளர்ந்து படித்து முன்னேறியவர்.  இவர்களைத் தன் துவக்க விழாவிற்குத் தேர்தெடுத்ததின் மூலம் தான் இவர்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதை உலகிற்கு அறிவித்தார். அமெரிக்கா பல வித மக்களையும் அரவணைக்கும் நாடு; அவர்கள் மேலே வர வாய்ப்புகள் அளிக்கும் நாடு என்று காட்டவும் அப்படிச் செய்தார் என்று நினைக்கிறேன்.  White Anglo-Saxon Protestant-களுக்குத் துவக்க விழாவில் முக்கிய இடம் இல்லை (இவர்களை WASP என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்).  இவர்கள் அமெரிக்காவிற்கு வந்த முதல் குடியேறிகளின் வழி வந்தவர்கள்.  இவர்கள் அமெரிக்கா தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்கள்.  இந்த இனத்தைச் சேர்ந்த யாருக்கும் இறை வணக்கம் பாடவோ கவிதை வாசிக்கவோ ஒபாமா இடம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனாலும் எனக்குள்ளே ஒரு நெருடல்.  இந்தத் துவக்க விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் வேண்டுமா?  சிகாகோ நகரின் முக்கிய வீதி ஒன்றில வயதான கருப்பர் ஒருவர் கடுங்குளிரில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது இத்தனை பணம் இதற்காகச் செலவிட வேண்டுமா?  காந்திஜி பற்றி அதிகம் தெரிந்திராத ஒரு அமெரிக்கப் பெண் என்னிடம் ஒரு முறை ‘டயப்பர் (diaper-சிறு குழந்தைகளுக்கு அவர்களுக்கு விபரம் தெரியும் வரை இடையில் கட்டும் துண்டு) கட்டிக்கொண்டு இருப்பாரே அவர்தானே நீங்கள் குறிப்பிடும் காந்திஜி’ என்று கேட்டார்.  தமிழ்நாட்டிற்கு வந்தபோது இடையில் வேட்டி மட்டும் உடுத்தியிருந்த தமிழ்நாட்டு விவசாயிகளைப் பார்த்த காந்திஜி அன்றிலிருந்து தானும் வேட்டி மட்டும் உடுத்தத் தீர்மானித்தார் என்று அந்தப் பெண்ணிற்கு விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.  ஆனால் ஒபாமா காந்திஜியைப் பற்றி முழுவதும் அறிந்தவர்.  அவருடைய எளிமையை வெகுவாகப் போற்றியவர்.  ‘யாரோடு – அவர்கள் உயிரோடு இருப்பவர்களானாலும் சரி அல்லது இறந்துபோய்விட்டவர்களானாலும் சரி – நீங்கள் உணவு உண்ண விரும்புகிறீர்கள்?’ என்று ஒபாமாவிடம் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு மாணவன் கேட்டபோது எந்த விதத் தாமதமும் இன்றி அவர் உடனடியாகக் கொடுத்த பதில் ‘நான் காந்திஜியோடுதான் உணவு உண்ண விரும்புகிறேன். அவர் உண்ணும் உணவு மிகவும் எளிமையானதாக, அளவில் குறைவாக இருக்கும் என்றாலும்’ என்றார்.  அவர் காந்திஜியைப் போற்றுபவர் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?  அவராலேயே ஜனாதிபதி பதயேற்பு விழாவை எளிமையாக நடத்த முடியவில்லை என்றால் அமெரிக்காவின் பகட்டிற்கு அவர் பணிய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்பதைத் தவிர என்ன காரணம் இருக்க முடியும்?

    பொதுவாக இந்தியாவில்  அரசியல்வாதிகள் தாங்கள்  எளிய வாழ்க்கை வாழுவதாக – அப்படி வாழுகிறார்களோ இல்லையோ – காட்டிக்கொள்வார்கள்.  ஆனால் அமெரிக்காவில் அப்படியில்லை.  எல்லா அரசியல்வாதிகளும் ‘டிப்டாப்பாக’ உடை அணிந்து வருகிறார்கள்.  நூற்றுக் கணக்கில் பணம் செலவழித்து தலை அலங்காரம் செய்துகொள்கிறார்கள்.  (2008 ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட ஜான் எட்வர்ட்ஸ் 8000 டாலர் செலவழித்துத் தலை அலங்காரம் செய்துகொண்டதாகக் கூறினார்கள்.)  அமெரிக்காவில் எல்லோரும் – முதியவர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் உட்பட – தலை அலங்காரம் செய்துகொள்ளுகிறார்கள் என்பது இன்னொரு விஷயம்.  உடம்பை ஊளைச்சதை எதுவுமில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அமெரிக்க இலக்கணங்களில் ஒன்று.  அதுவும் பொதுவாழ்வில் ஈடுப்பட்டிருப்பவர்கள் உடலை நேர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டும்.  இல்லையென்றால் அவர்களுக்கு நாகரிகம் தெரியவில்லை என்று பொதுமக்கள் நினைத்துவிடலாம்.  அதிலும் கருப்பு இனத்தைச் சேர்ந்த ஒபாமாவுக்கும் அவரது மனைவிக்கும் மற்ற வெள்ளையர்கள் போல் நாகரிகமாக இருக்கத் தெரியாது என்று பொதுமக்கள் நினைக்க வாய்ப்பு உண்டு.  மிஷல் ஒபாமா அவர் ஜனாதிபதி மனைவியாக ஆவதற்கு முன்பிருந்ததை விட இப்போது தன்னுடைய உடல் அமைப்பில் அக்கறை செலுத்துகிறார் என்று நான் என்று நினைக்கிறேன்.  தாங்கள் எந்த விதத்திலும் வெள்ளை அமெரிக்கர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிக்கொள்வதற்காகவும் பதவியில் இருப்பவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள்.

    அமெரிக்காவின் படிமத்தை உலகில் தூக்கிப் பிடிக்க  வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒபாமாவிற்கு இருப்பதும் அமெரிக்கா தன் பலத்தையும் பணத்தையும் உலகிற்குக் காட்ட விரும்பியதும்தான் துவக்க விழா இவ்வளவு ஆடம்பரமாக அமைந்தது என்று நினைத்துக்கொண்டால் ஓரளவு சமாதானம் கிடைக்கிறது.

    http://www.huffingtonpost.com/2013/01/21/inauguration-pictures-2013_n_2492001.html#slide=2008722

    http://www.huffingtonpost.com/2013/01/21/inauguration-pictures-2013_n_2492001.html#slide=2009212

    Share