மனிதனுக்குள் இப்படி ஒரு மிருகமா?
நாகேஸ்வரி அண்ணாமலை
உலகம் முழுவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. சரி, இனி பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடராது என்று நினைத்து முடித்தால் இன்னொரு கொடுமை பற்றிய செய்தி வருகிறது. டில்லியில் 2012 டிசம்பரில் ஓடும் வேனில் மருத்துவ மாணவிக்கு நடந்த கொடுமை பற்றிப் பத்திரிக்கையில் படித்து அதிர்ந்து போனதோடு இனி கண்டிப்பாக அரசும் காவல்துறையும் ஏதாவது செய்து பெண்களைக் காப்பாற்றுவார்கள் என்று நிம்மதி அடைய முடியவில்லை. இந்தியா முழுவதும் கொதித்து எழுந்து அரசியல்வாதிகள் விழித்தெழுந்து இம்மாதிரிக் கொடுமைகள் நிகழாமல் தடுக்க சட்டம் இயற்றினர். அதன் பிறகும் தொடர்ந்து அப்படிப்பட்ட செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இனி இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்காது என்று நினைத்ததிற்கு மாறாக செய்திகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. பத்திரிக்கைகள்தான் இந்தச் சம்பவங்களை மிகைப்படுத்துகின்றனவா அல்லது இத்தனை குற்றங்கள் நடைபெறுகின்றனவா என்று அனுமானிக்க முடியவில்லை.
இம்மாதம் அமெரிக்காவில் ஓஹையோ மாநிலத்தில் உள்ள க்ளீவ்லேண்ட் ஊரில் இன்னொரு கொடுஞ்சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது. அதுவும் தொழில்நுட்பத்திலும் வளத்திலும் சிறந்து விளங்கும் அமெரிக்காவில் இப்படி நடக்க எப்படி அனுமதித்தார்கள் என்று நினைத்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.
2002-லிருந்து 2004 வரை ஒரு கொடியவன் மூன்று பெண்களைக் கடத்திக்கொண்டுபோய் ஒரு பாழடைந்த வீட்டில் பதுக்கிவைத்து அவர்களுக்குப் பல கொடுமைகள் புரிந்திருக்கிறான். அந்தப் பெண்களில் ஒருத்தி இவனுடைய மகளின் நெருங்கிய தோழி. மனைவியை பல முறை அடித்து அவளுடைய உடம்பில் பல வகையான காயங்கள் ஏற்படுத்திக் கடைசியில் அவள் இவனிடமிருந்து விவாகரத்து பெற்றிருக்கிறாள். இந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய நீதிமன்றம் அவனுடைய குழந்தைகளைப் பார்க்கக் கூட இவனுக்கு அனுமதி வழங்கவில்லை. அப்படியும் குழந்தைகளை அவ்வப்போது மனைவியிடமிருந்து கடத்திக்கொண்டு வந்திருக்கிறான். இவனுடைய மகளின் தோழியைக் கடத்திவந்த பிறகு இவனுடைய மகளே அது பற்றி ஒரு உரையில் குறிப்பிட்டிருக்கிறாள். அவனுடைய மகன் அது பற்றிப் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறான். இவர்கள் இருவருக்கும் இந்தக் கொடுமையைச் செய்தவன் தங்கள் தந்தைதான் என்று தெரியாது.
பத்து வருடங்களுக்கும் மேலாக இந்தப் பெண்களை இந்தக் கொடியவன் அடைத்துவைத்திருந்தது அவனுடைய சகோதரர்களுக்குக் கூடத் தெரியாதாம். அடைத்துவைக்கப்பட்ட வீட்டின் அருகில் வசித்துவந்தவர்களுக்கும் தெரியாதாம். அவர்களிடம் அந்தப் பக்கம் போகும்போதும் வரும்போதும் ‘ஹலோ’ சொல்லிவிட்டு சுமுகமாகப் பேசிவிட்டுப் போவானாம். ஆனாலும் அவர்களுக்கு இவன் மூன்று பெண்களைப் பத்து வருடங்களாக அடைத்துவைத்திருக்கும் விஷயம் தெரியாதாம். பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற விஷயங்கள் எப்படித் தெரியாமல் போகும், அதுவும் பத்து வருடங்களுக்கு. மூன்று பெண்களில் ஒரு பெண்ணோடு பெற்றுக்கொண்ட ஒரு பெண் குழந்தையைத் தன்னோடு தன் உறவினர் வீடுகளுக்குக் கூட்டிச் சென்று தன் பேத்தி என்று உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பானாம். அவன் எப்போது அந்தப் பெண்ணைப் பெற்றெடுத்தான் என்று எப்படி அந்த உறவினர்களுக்கு தெரியாமல் போயிற்று? அவன் அப்படி ஒன்றும் பல ஏக்கராக் கணக்கில் விஸ்தீரணமுள்ள வீட்டில், பல காத தூரத்திற்கு அக்கம்பக்கம் யாரும் இல்லையென்ற இடத்தில் வசிக்கவில்லை. எப்படி இவனுடைய தினசரி நடவடிக்கைகளை அதுவும் பத்து வருடங்களுக்குக் கவனிக்காமல் விட்டார்கள்? ஒருவர் அந்தரங்கத்தில் (privacy) இன்னொருவர் தலையிடக் கூடாது என்ற கொள்கையை இத்தனை தூரம் கொண்டுபோக வேண்டுமா?
இந்தக் கொடூரச் செய்தியை ஜீரணித்துக்கொள்வதற்குள், அமெரிக்காவில் பெண்களின் நலனுக்காகப் பாடுபட்டுவரும் ஒரு பெண் பிரேசில் போன்ற நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில்லை என்று சொல்லி வாய் மூடும் முன் அந்த நாட்டிலேயே இந்தியாவில் நடந்தது போன்ற ஒரு கொடூரச் செயல் நடந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. உலகில் என்ன நடக்கிறது? திடீரென்று மனிதர்களில் சிலர் மிருகங்களாக மாறிக்கொண்டிருக்கிறார்களா? இந்தக் கொடூரங்கள் இனியும் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று நெஞ்சு குமுறுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கையாலாகாத்தனம் ஏற்கனவே இருக்கும் சோகத்தை இன்னும் அதிகரிக்கிறது.
எழுதுவதற்கே கை கூசும் இன்னும் பல சம்பவங்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
கடைசியாக இறைவனைத்தான் நாடுகிறேன். நான் தினசரி இறைவனிடம் எனக்காகக் கேட்கும் வரங்களில் இன்னொன்றாக ‘இறைவா, உலகில் இனி ஒரு போதும் எந்தப் பெண்ணிற்கும் இத்தகைய கொடுமைகள் நடக்கக் கூடாது’ என்ற வரத்தையும் சேர்த்துக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை.
//இந்தக் கொடூரங்கள் இனியும் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று நெஞ்சு குமுறுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கையாலாகாத்தனம் ஏற்கனவே இருக்கும் சோகத்தை இன்னும் அதிகரிக்கிறது.//
இதற்குதான் செகன்ட் அமெண்ட்மெண்ட் பெண்களுக்கு துப்பாக்கி வைத்துகொள்ளும் உரிமையை வழங்குகிறது. பெண்களிடம் துப்பாக்கி இருந்தால் 90% பாலியல் குற்றங்கள் ஒழிந்துவிடும்.
http://abcnews.go.com/US/okla-woman-shoots-kills-intruder911-operators-shoot/story?id=15285605#.Ua504Mr4Igo
Okla. Woman Shoots, Kills Intruder: 911 Operators Say It’s OK to Shoot