பெருவை பார்த்தசாரதி
மண்ணில் பிறந்த மனிதர்கள் அனைவரும், குடும்பத்திற்காகவும், தனது சந்ததிகளின் நலனுக்காகவும் உழைப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்கிறோம். தேகத்தில் சக்தி நிலையாக இருக்கும்போது, குடும்பத்தினர் தவிர பிறருக்காகவும் உழைக்க வேண்டியிருக்கிறது. இப்படி உழைத்துக் கொண்டே இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் தேக சக்தி குறைந்து, பெரியோர்கள், வயதானவர்கள், முதியோர்கள் என்ற நிலைக்கு வரும்போது பிறருடைய உதவியுடன் வாழும் நிலை வருகிறது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துத் தரும் வரை மாடாக உழைத்து, மண்வெட்டியாகத் தேகம் தேய்ந்து, வயதான காலத்தில் ஓய்வெடுக்கும் நிலையில், உடல் ரீதியாகப் பலவித சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலை, தவிர்க்க முடியாக துன்பங்களில் ஒன்றாகி விடுகிறது. யாருக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் செலவிட்டோமோ?.. யாருக்காகச் செல்வம் சேர்க்கப் பாடுபட்டோமோ?.. அவர்களால்கூட கடைசி காலக் கட்டத்தில், தங்களுக்கு உதவமுடியாத சூழ்நிலையும் முதுமையோடு ஒட்டிக் கொள்கிறது.
கூட்டுக் குடும்பத்துடன் தொடங்கி குதூகலமாக வாழ்க்கை நடத்தியவர்கள், முடிவில் தங்களால் வளர்த்து ஆளாக்கியவர்களால் கைவிடப்பட்டு முதியோர் இல்லங்களில் வாழும் நிலை இன்று நகர்ப்புறங்களில் பெருகி வருவது எதனால்?. குறுகிய காலத்தில் பெருந்தொகை ஈட்ட வியாபாரக் கூடமாகி விட்ட கல்வி நிலையங்களைப் போல, முதியோர் இல்லம் என்ற வணிகமும் சேர்ந்து பெருகி விட்டது. “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக” இந்தத் தொழில்கள் வளர்ந்து வருவதே இதற்குச் சான்று. ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க பெற்றோர்கள் படும் இன்னல்கள், முதுமை அடைந்த பிறகும் அவர்களைத் தொடர்கிறது. சிறுவயதில் பாடுபட்டு, பின்னால் எல்லா சக்தியையும் இழந்து விட்ட நிலையில், சில சமயம், சந்ததிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் முதுமையுடன் சேர்ந்து வருகிறது.
பிள்ளைகளும் மருமகள்களும் அல்லது மகளும் மாப்பிள்ளையும் இருவருமே அலுவலகம் செல்பவர்கள், சொந்தமாகத் தொழில் என்று வாழ்நாளில் பாதியை வெளியூரிலேயே கழிப்பவர்கள், வசதிகள் இருந்தும் சமூக அந்தஸ்துக்காகப் பெற்றோர்களை விலக்கி வாழ்பவர்கள், குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கின்ற அண்ணன் தம்பிகள், இவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களால் இனி நம் பெற்றோர்களைச் சரிவரக் கவனிக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்படும்போது, இவர்களைப் பராமரிக்கின்ற இல்லங்களின் அவசியத்தை நாட வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.
இந்த நிலையில், இளம் வயதில் சந்ததிகளின் நலனுக்காகப் பாடுபட்டு படிப்படியாக மாறி வயதான நிலைக்கு வரும்போது, குடும்பத்தில் நிலவும் சில அசெளகர்யங்களால் குடும்பம் தவிர்த்து, வெளி இல்லங்களில் வாழும் முறைக்கும் தங்களை மாற்றிக்கொள்வது நல்லது என்று வயதானவர்கள் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் ஆளாகிறார்கள். பண்டைய காலத்தில் வயதானவர்களைப் பராமரிப்பதில் அசெளகர்யம் ஏற்பட்டாலும், சந்ததிகள் அதைப் பொருட்படுத்தாது, முதியோர்களைக் காப்பாற்றினார்கள். இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சந்ததிகள் வெளிநாட்டிலே பணிபுரிகிறார்கள், தொழில் ரீதியாக உலகெங்கும் வலம் வருபவர்கள், தன் மனைவியையும், பிள்ளைகளையுமே சரிவர கவனிக்க முடியாத சூழ்நிலையில் தங்கள் பெற்றோர்களை அன்புடன் கவனிக்க முடியவில்லை என்பது அவர்கள் வைக்கின்ற வாதம்… ஒருபுறம்.
மறுபுறம்!…….
உள்ளூரிலேயே நல்ல வசதியுடன் வாழ்பவர்கள் ஏன் தங்களது பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய்த் தள்ளுகிறார்கள்?… தனக்காக வாழாமல் சந்ததிகளுக்காக வாழ்ந்து, தங்களால் சேர்த்து வைக்கப்பட்ட பெரும் செல்வத்தை அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெற்ற அதே சந்ததிகள், பெற்றோர்களின் அந்திமக் காலத்தில் அவர்களைக் கை கழுவி விட்டு, அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க முயற்சி செய்வதும் கேள்விக்குறிய ஒன்று. வயதானவர்கள் விரும்புவது பணம் அல்ல, மாறாக பந்தம், அரவணைப்பு மற்றும் ஆறுதல் தேடி ஓடுபவர்கள் அனேகம். பல குழந்தைகளுக்குத் தகப்பன் ஆகும் பாக்கியம் பெற்றவர்கள், வாழ்வின் கடைசி காலத்தில், தன்னருகே ஒருவர் கூட இல்லாமல் உயிர் நீத்த துர்பாக்கியத்தையும் அனுபவித்து இருக்கிறார்கள். அதேபோல, உயிரோடு இருக்கும்போது பெற்றோர்களுக்கு உதவாமல், இறந்த பிறகு ஈமக்கடன் செய்வதில் பெருமை அடையும் சந்ததிகளையும் பார்க்கிறோம். இப்படிச் செய்பவர்களுக்கு, இதே அவல நிலை நமக்கும் வராது என்று என்ன நிச்சயம்!…
வயதான காலத்தில் வரும் பிரச்சினைகளை மட்டுமே பெரிது படுத்திப் பார்க்காமல், இதற்குத் தீர்வு காணும் விதத்திலும் அனைவரும் சற்று யோசிக்க வேண்டும்!….நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தும், பிள்ளைகளால் சரிவரக் கவனிக்க முடியாத நிலையில், முதியோர் இல்லத்தில் வாழும் வயதான பெண்மணி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம், முதியோர் இல்லத்தின் சூழ்நிலையைப் பற்றிய ஆய்வையும் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வயதான காலத்தில், தங்களைக் கவனிப்பார் இல்லை என்ற சூழ்நிலையைச் சமாளிக்க முடியவில்லை என்றால், வெளி இல்லங்களில் வாழ்வதற்கும் நம்மை நாமே தயாராக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வருவது இயற்கைதானே!…. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், வேறு வழியில்லாமல், வெளி இல்லங்களில் வாழும் இழிந்த நிலை வரும்போது, இன்று முதியோர்கள் முகம் சுளிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்ற தகவல் சற்று நிம்மதி தருகிறது. சொந்த வீடுகளில் நாம் அனுபவிக்கின்ற அனைத்து வசதிகளும், கட்டணத்தைப் பொருத்துத் தரமான முதியோர் இல்லங்களில் கிடைக்கிறது. உறவினர்களாலும், பிள்ளைகளாலும் சொந்த வீட்டிலே பட்ட அவமானங்களும், அசெளகர்யங்களும், உதாசீனங்களும் இங்கே இல்லை. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்குப் பொதுவான முதியோர் இல்லம் (common old age homes), வசதி உள்ளவர்களுக்கு தனிப்பட்ட முதியோர் காப்பகம் (gated community) என்று வசதி வாய்ப்புகள் இன்று பெருகிவிட்டன. வயதான காலத்தில் நல்ல முறையில் வாழ, ஆயுட் காப்பீடு, ஓய்வூதியப் பென்ஷன் போன்றவற்றில் முதலீடு செய்வது போல், இன்றைக்கு “உங்களுக்கென்று தனியாக ஒரு முதியோர் இல்லம் (Gated community for old age people) கட்டித்தருகிறோம்” என்ற விளம்பரங்களையும் நாம் பத்திரிகைகளில் பார்க்கிறோம். உடல் நலத்தோடு நன்றாகச் சம்பாதிக்கும் போதே இம்மாதிரித் திட்டங்களில் முதலீடு செய்வதும் பிற்காலத்தில் வசதியாக, நிம்மதியாக வாழ உதவும்.
இம்மாதிரிப் பிரச்சினைகளுக்கு, இன்னொரு ஆறுதலான விஷயம், வயதான முதியோர்களைப் பாதுகாக்க தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றைக் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி காவல் துறை மூலம் அறிமுகப் படுத்தியுள்ளது. தனியாக வாழும் முதியோர், பெண்கள், குழந்தைகள் இவர்களைப் பாதுகாக்கவும், இவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர போலீஸ் கமிஷனருக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தந்த இடத்தில் இருக்கும் போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளராகப் பணியாற்றும் பெண் போலீசார் இதற்கு உதவி செய்வார். 60 வயது முதல் 100 வயது வரையிலான ஆண், பெண் முதியவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இவர்கள் உதவி செய்வார்கள். உடனுக்குடன் புகார்களைத் தெரிவிக்க, பிரத்யேகமான தொலைபேசி எண்ணையும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்தப் புதிய பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதியோர்கள், உறவினர் அல்லாதோர், பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரிகின்ற பட்சத்தில், தனியாக வாழும் வயது முதிர்ந்தோர் போன்றவர்கள் அருகிலிருக்கும் காவல் நிலையத்தை அணுகி பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
இந்தக் கட்டுரையின் நோக்கமே, மனிதனாகப் பிறந்து விட்டால், அவன் கடைப்பிடிக்கவேண்டிய அனைத்துக் கடமைகளும் கூடவே வந்து விடுகிறது, அவற்றுள் மிக முக்கியமான கடமையாக, வயதான பின் பெற்றோர்களைக் காப்பது என்பதை வலியுறுத்துவதுதான். எல்லோர் வீட்டிலும், பூஜை அறையில் பல தெய்வங்களின் படங்களுக்கு அருகாமையில், நமது மூதாதையர் படங்களையும் இடம் பெறச்செய்கின்றோமே, அது எதற்காக?…. என்று சிந்தனை செய்ய வேண்டும். அனுதினமும், பூஜை அறையைத் திறக்கும் போது, அவன் செய்ய வேண்டிய கடமைகளை, அந்தப் படங்கள் அறிவுறுத்தும். இன்று வாழ்கின்ற நல்வாழ்க்கைக்கு, நமது மூதாதையர்களே காரணம் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு வருடமும், அக்டோபர் முதல் தேதியை, “உலக முதியோர் தினம்” என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அன்றைய தினம், தவிர்க்க முடியாத சூழ்நிலையால், முதியோர் இல்லங்களில் வாழும் முதியவர்களை உறவினர்களோடு குடும்பத்துடன் இணைத்து, அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அனைவருக்கும் நினைவூட்டுவோம்.

Leave a Reply