மேகலா இராமமூர்த்தி
அறத்தைப் பாடிய அறிஞனின் இளவலாய்
அற்புதப் பாக்களைப் படைத்தவன் – அவன்
திறங்கண்டு வியந்திட்ட தமிழுமே தன்
கரம்கட்டிச் சேவகம் செய்தது!
சிறுவர் மணம்கண்டு சீற்றம டைந்தேஅக்
கொடுமையை எதிர்த்திட்ட கோமகன்!
மறுமணம் புரிதலும் தவறில்லை என்றேநல்
கருத்துரை வழங்கிய பாமகன்!
பாடாத தேனீக்கள் ஏதிங்கே? என்றானே
கைம்மைத் துயர்தனைக் களைந்திட
வாடாத பூப்போன்ற மங்கை தன்னை
வீட்டினிலே வதைத்திடுதல் தவறென்றான்!
சீர்தி ருத்தமே சிந்தையில் நிறைந்தால்
பாக்களில் கனன்றது புரட்சித்தீ!
பார்சி றந்திட பகுத்தறி வேதுணை
என்றே முழங்கிட்ட கவிச்சிங்கம்!
தமிழேதன் மூச்சென்று எண்ணியே வாழ்ந்திட்ட
தமிழ்க்கவிஞன் சுப்புரத் தினமன்றோ!
அமிழ்தென்று புதுப்பெயர் தனைத்தமிழ் பெற்றதே
பிள்ளையாய் இவனையே பெற்றதால்!
தேமதுரத் தமிழ்ப்பாவால் உலகையே வென்றுதன்
நாமமென்றும் நிலைத்திடவே வாழ்கின்றான்!
பாமாலை சூட்டியே மகிழ்கின்றேன் நானுமப்
பாவேந்தன் மேல்கொண்ட பக்தியால்!

Leave a Reply