காதல் இனிது!

-ஆர். எஸ். கலா

இரு கண் நோக்கியதும் ஒரு ஈர்ப்பு
இரு இதயம் இடம் மாறியதும் ஒருவித வியர்ப்பு
இரு மனமும் இணைந்ததும் ஒருவிதத் தவிப்பு
இரு வீட்டாரும் சம்மதித்ததும் ஒரே குதூகலிப்பு!

இருகரம் இணைந்ததும் இல்லறம்
இரு உடல் இணைந்ததும் இன்பம்
இரு உயிர்களும் ஓர் உயிரானதும்
விருப்பு வெறுப்பு சமபங்கு!

காதல் என்னும் நாடகம் அரங்கேற்றம்
கண்டது கணவன் மனைவியாக மேடையிலே
தனிமையில் நோக்கிய கண்கள் இரண்டும்
கைகோத்தது உறவினர் முன்னிலையிலே!

முக்கனியும் செங்கரும்பும் என்ன இனிமை
இக்குடும்பத்தில்  இனியது இனியது காதல் அல்லோ
இவர்கள் இருக்கும் இடத்தில் பொழிந்து
விடும் காதல் மழை அல்லோ!

கனியான காதல் இனிப்பாகும்
கலையாத கனவாய்  நிலையாகும்
கணவன் கண்ணுக்கு நிலவாக மனைவியும்
மனைவி நெஞ்சத்தில் சிலையாகக் கணவனும்
காதல் காவியம் படிக்கலாம் இல்லறத்தில்
படிப்படியாக!

நம்பிக்கை என்னும் செடியில்
பூக்கும் காதல் மலர் கொடுக்கும்
இனிய காதல் கனியை இறுதி மூச்சை
நிறுத்தி இறைவன் யாராயினும்
இருவரில் ஒருவரை  அழைக்கும் வரை!

 

Share

Comments

One response to “காதல் இனிது!”

  1. கவிதை என்பது கற்பனை கலந்தது 
    என்கிற நினைப்பை மொத்தமாய் தகர்க்கிறார்..
    இயல்பாய் இங்கே நடப்பதை மட்டும் 
    ஏட்டில் பாட்டாய் எழுதிக் குவிக்கிறார்…
    ஒவ்வொரு வரியிலும் வாழ்க்கையின் பக்கம் 
    ஒட்டுமொத்தமாய் காட்டும் சிறப்பு…
    இருவரில் ஒருவரை  அழைக்கும் வரை எனும் 
    அழகிய வரியில் கவிதை நிறைகிறது…
    சாந்தம் கலக்கும் என்கிற பொருளில் 
    சாந்த கலா என்றனர் பெற்றோர்…
    வல்லமை பக்கம் வந்திட்ட கவிஞரை 
    வாழ்த்தியே வரவேற்கிறேன்…

    காவிரிமைந்தன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *