-ராதா மரியரத்தினம்
கருவறைத் தெய்வம் இவள்
காலடி ஓசையிலே
காலமெல்லாம் நான்
திருநிறை அழகுத் தெய்வம்
திகட்டாத தேன் அடை
தேனில் குழைத்த தினை மா இவள்
மதுரை மீனாளிவள்
மாசற்ற பொன்னிவள்
மலடி என்ற சொல்லை
வேரோடறுக்க வந்தவள்!
வேனில் காற்றவள்
வேய்ங்குழல் கானமவள்
தூளிக்குள் உறங்க வந்த
வானத்து நிலவவள்
கானகத்து மயிலிவள்!
கன்னத்தில் வைத்த
திருஷ்டிப் பொட்டிலெனைக்
கட்டிப்போட்டவள் இவள்
காதல் கணவன் தந்த
ஒப்பிலாப் பொக்கிஷமிவள்
என் தாயே திரும்ப வந்து
என்னைத் தாயாக்கிய தெய்வமிவள்!
என்ன சொல்லி நான் பாட…
என் தங்கமிவள் பெருமை
வார்த்தைகளைத் தேடுகிறேன்
வாசமுள்ள முல்லை கொண்டு
வார்த்தைகளைப் பாசமாய்க் கோக்கிறேன்!

Leave a Reply