படக்கவிதைப் போட்டி .. (75)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

13867107_1059936447393887_1383995798_n

138821911@N05_rமுபாரக் அலி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.08.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

Share

Comments

6 responses to “படக்கவிதைப் போட்டி .. (75)”

  1. ANANTH

    கவிதையை எவ்வாறு உள்ளீடு செய்வது ?

  2. மனம் தளராதே அன்பே

    அன்பே……
    வருந்தாதே
    வருவதை எதிர்கொள்

    உனக்கு மட்டுமில்லை இந்த வலி
    இழந்தது நாமிருவரும்தான்
    ஆசையாக கூடுகட்டி
    அதில் வைத்தோம் நமது
    அன்பின் அடையாளங்களை

    மரத்தை வெட்டினார்கள்
    சாலைகளை அகலப்படுத்த‌
    சவாலாகி விட்டது நம் வாழ்க்கை

    கூடு கட்ட மரமில்லை-நீர்
    குடிக்க குளம் குட்டை இல்லை
    வானம் தொடும் கட்டிடம் பெருகினாலும்
    மனத்தை திறக்க மறுக்கிறார்கள்
    உணர்ச்சி நமக்கும் உண்டென்பதை
    உணர மறந்து விட்டனர்

    இனம் நமது அழிவதைக் க்ண்டு
    சினம் வந்து பயனில்லை
    அன்று….
    கவிஞருக்கும் ஓவியருக்கும்
    உவமையாக இருந்தோம்

    காலில் கடிதம் கட்டி அனுப்ப‌
    காலம் தவறாது பதிலை கொண்டு வந்தோம்
    இன்றோ
    காத்தாடி கயிறு நம்மை பதம் பார்க்க‌
    கழுத்தனில் காயம் நம்மவருக்கு

    கண்ணுக்கு எட்டியவரை
    காடுமில்லை சோலையுமில்லை
    கட்டிடம் கட்டிடம் எங்கும்,,,,,
    சேர்ந்து இருக்கும் நேரத்தில்
    சோர்ந்து போகாதே

    அன்பே……..
    மரங்கள் மண்ணில் மீண்டும் வளர புரட்ச்சி எழும்
    அது வரை மனதை இழக்காதே

    அனுப்புனர்
    ராதா விஸ்வநாதன்

  3. அனந்த், இந்த (http://www.vallamai.com/?page_id=9009) பக்கத்தில் தட்டி, இங்கே ஒட்டலாம். அல்லது, வேறு எந்த இணையவழி, கணிவழி, செல்பேசிவழித் தட்டெழுத்து மென்பொருளையும் பயன்படுத்தி, தமிழில் எழுதலாம். மறுமொழிப் பெட்டியிலேயே இந்த வசதியை விரைவில் அறிமுகப்படுத்துவோம்.

  4. வேடிக்கையை வாடிக்கையாய் கொண்டோனுக்கு…….
    பிறப்பில் இல்லை உயா்திணை அஃறிணை
    வாழ்ந்து காட்டும்
    வாழ்க்கையில் தானிருக்கிறது
    தவமேன்மை என்பதை
    எடுத்துக்காட்டும்
    மணிப்புறாவே, மாடப்புறாவே
    அன்பால் உன்னதப்பட்ட
    ஐந்தறிவுக்குட்பட்ட நண்பா்களே…
    சிற்றறிவால் மனிதா்களை ஆட்கொள்ளும்
    பேரறிவாளா்களே…
    பகையை மறந்த
    பாசத்தால் கலந்த
    உங்கள் உலகமோ
    புதுவித வாழ்க்கையைப்
    பூப்போட்டு அலங்காரிக்கிறது
    எலியும் பூனையும் புன்னகை புரிந்து
    பாம்பும் கீரியும் பாசத்தால் பிணைப்புற்று
    ஆடும் மாடும் அன்பு கொண்டு
    சேவலும் கோழியும் கொஞ்சித் திரிந்து
    கூத்தாடிக் குதூகலிக்க…
    வேடிக்கை பார்ப்பதையே
    வாடிக்கையாய் கொண்டோனுக்கு
    வாழ்க்கைப் பாடம் கற்பிக்கவா
    இவ்வளவு களேபரங்களும்
    அன்பெனும் உணா்வை
    அவனுக்கு ஊட்ட
    இன்பமாய்ப் போராடும் போராளிகளே..
    உரு சிதைந்து கரு அழிந்து
    கண் இழந்து கதறினாலும்
    கண்ணுற்று நோக்கா
    பரபரத்து ஓடும் பண்பாளன் அவன்
    இயந்திரங்களுக்கேது இதயம்
    நன்முயற்சியால்
    உந்தப்பட்ட நல்லவா்களே
    இதோ உங்களுக்கோர் அன்பான
    அறிவுரை
    உங்கள் முயற்சி
    திருவினையாகவில்லையென
    வருத்தப்படாதீா்….
    மனிதா்களின் தகைசார்பற்ற
    தன்மை
    உங்களைச் சார்ந்து
    விடாது
    சந்தோஷமாக
    இருங்கள்
    உங்கள்
    சந்ததியரோடு…
    வீ.முத்துலட்சுமி,
    தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா்,
    எஸ்.எஃப்.ஆா் மகளிரிர் கல்லூரி ,
    சிவகாசி.

  5. shenbaga jagatheesan

    சாபக்கேடு…

    சோடிப் புறாவின் துணையுடனே
    சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தோம்
    கூடு கட்டி மரத்தினிலே,
    கெடுத்தான் மனிதன் மரமழித்தே,
    தேடிச் செல்ல வேறிடத்தை
    துணையாய் இறக்கை எமக்குண்டு,
    கேடுதான் மனிதா மரமழித்தால்
    கூண்டோ டழியும் உம்மினமே…!

    -செண்பக ஜெகதீசன்…

  6. ஆதலால் காதல் செய்வோம்
    கரும்புறா எனை
    வெண்இறகுள் பொத்தி வைத்த பிரியசகியே!
    கலப்பினக் காதலை
    இணைந்தே இசைப்போம்
    இல்லற மேன்மையை
    மானிடருக்கு உரைப்போம்
    மரங்கொத்தி வகையினோம்
    மனங்கொத்தியது இல்லை
    மனங்கொத்தி வகையினரோ
    பணங்கொத்திகளாய்
    ஆதாளும் ஏவாளும்
    ஆரமித்த காதல் கதை
    ஆதாரமில்லாமல் அலைபாயும் காலமிது
    “ஆதலால் காதல் செய்வீர்”
    பாவலன் மொழி பாழடைந்து நிற்கிறது
    காதல் விற்பனை
    கல்லூரி சாலைகளில்
    கடைவிரித்து சிரிக்கின்றது,
    காதல்விளையாட்டு
    கடற்கரை ஓரங்களில்
    கரைமீறத் துடிக்கின்றது
    காதல் வன்முறை
    ஒருதலைக் கொள்ளியாய்
    ஆயுதம் ஏந்தி
    ஆயுள் முடிக்கின்றது
    காதல் பரத்தை
    வேசி மகளாய்
    வீதி வழி அலைகிறது,
    காதல் கொசு
    காதுக்குள் இரைச்சலாய்
    ஓங்கியே ஒலித்தலும்
    அடித்தவுடன் விழுந்துவிடும்
    பரிதாபம் அந்தோ!
    காதல் கன்னி
    உண்மைக்காதல் தேடி
    முதிர்கன்னியாய்
    காதல் தொடரோட்டம்
    ஆள்மாறி ஆள்மாறி
    போலிமுகமாய்
    புறாத்தூதுக் காலத்தில்
    புத்துயிர்த்த காதல்
    வாட்ஸ்அப் பேஸ்புக்கால்
    வைரஸ் தொற்றில்
    ஆயுள் முடிக்கின்றது
    களவுகால காதல் சின்னம்
    கற்பறன் பேணிய திறன்
    வருங்கால தலைமுறைக்கு
    சொல்லத் தவறினோமே
    காதல் மெய்
    காதலர்கள் பொய்
    உண்மை மறந்தோமே
    மனந்தொட்டு
    உடல் தொடும் கலாச்சாரத்தினை
    மறந்திட்டு
    மாயும் இனத்திற்கு
    மீண்டும் புரியவைப்போம்
    ஆதலால் காதல் செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *