இன்னம்பூரான்
26 02 2018
நாத்திகமும், அதுவும் அற்ற வாழ்வியலும் மதாபிமானங்கள் தான் என்பதைத் திட்டவட்டமாக அறிக. மனிதன் தோன்றியபோதே, இயற்கையின் கூற்றுகள் அவனுடைய சிந்தனையை பாதித்தன; தூண்டுவித்தன; அலைபாய விட்டன; அச்சமூட்டின; கற்பனைக்கு வித்திட்டன; படைப்பாற்றலுக்கு உரமிட்டன. மின்னலடித்த மானம் அவனை, அவளை பயமுறுத்தியது; உடனுறைந்த இடி பீதியடையவைத்தது; அடுத்து வந்த மழை வியப்பைக் கூட்டியது. ஆண்-பெண் உறவு மனிதன் தோன்றுவது பலகோடி வருடங்களுக்கு முன்பே இயற்கை அன்னையின் வரமாக அமைந்தது. கானகத்தே வாழ்ந்த பழங்குடிகள் சிங்கம், புலிகளின் இனப்பெருக்கத்தைக் கண்டார்கள். தாங்கள் வளர்த்த கால்நடைகளின் வாழ்வியலை பாடமாக கற்றார்கள்; ஆதாம்-ஈவாள்-ஆப்பிள்-அரவம்-சாத்தான் கதை பிறப்புதற்கு முன், தொல்காப்பியர் பிற்காலம் பாராட்டிய கலவி பேரின்பத்தை சுவைத்தார்கள். அது ஒரு தொடர்கதை. தொன்மை இலக்கியம். அது செவி வாழ் இலக்கியமாகவும், பின்னர் எழுத்து இலக்கியமாகவும் பிறந்தது. சில வகையில் அது மதாபிமானத்துக்கு வித்திட்டது என்றாலும், தொன்மம் என்ற வாழ்வியல் இலக்கியம், மதாபிமானங்கள் போல் (நாத்திகம் உள்பட) மூளைச்சலவையில் ஈடுபடவில்லை. மதாபிமானங்கள் எல்லாம் தாழ்ந்தவை அல்ல. அவற்றில் வைணவம், பெளதம் போன்றவை, ஏன் எல்லா மதாபிமானங்களும் (நாத்திகம் உள்பட) வாழ்வியலின் உன்னதமான நிலைப்பாடுகளை போதித்திருப்பதை தற்கால விஞ்ஞானம் வெளிப்படுத்துவதை காண்கிறோம்.
எனக்கு வயது 85. மூன்று வாரங்களுக்கு முன் காலை உடற்பயிற்சிக்கு சென்றபோது கவனக்குறைவால் (?) ஒரு கான்கிரீட் பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தேன். எனவே, சில சொற்களுக்கு மேல் எழுதமுடியவில்லை. சிறிய பகுதிகளை பதிவு செய்வதை வாசகர்கள் பொறுத்தாளவேண்டும். வழக்கம் போல் சித்திரம் போடவில்லை. காட்டாறு போல் சிந்தனையாறு பெருக்கெடுக்கும்போது, சித்திரம் ஏதுக்கடி குதம்பாய்!
ஒரு இறுதி வரி. திறந்த மனம் வேண்டும். போலி பகுத்தறிவு போறாது.
-#-
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

Leave a Reply