Month: February 2017

  • இதுவும் காதல் தானோ!

    இன்னம்பூரான்
    28 06 2014/07 02 2017

    innam

    வனமாலி மஹாபாத்ரா பூரி ஜகந்நாத் கோயில் பண்டா (பூசாரி) ஒருவரின் மூத்தமகன். படிப்பெல்லாம் சொற்பம் தான். கோயில் மணி அடிக்க படிப்பு எதற்கு என்று அவருடைய தந்தை ஜகந்நாத் பண்டா, வனமாலியின் படிப்பை எட்டாங்கிளாசுடன் நிறுத்தி விட்டார். அது வரை விட்டுப்பிடித்ததே பெரிது. ஆனால், அவர் இவனை படிக்கவே விடமாட்டார். அதிகாலையில் தொடங்கும் பகவத் கைங்கர்யம் நடு நிசி வரை நீடிக்கும், பகவத் கைங்கர்யம் ‘கல கல’ என்று கனகதாரை பொழியும் என்பதால். எல்லா கோயில்களிலும் நாம் சம்பிரதாயமான பூஜை புனஸ்காரம் காண்கிறோம். சாமரம் வீசுவதிலிருந்து சடாரி சாதிக்கும் வரை, அபிஷேகம் செய்வதிலிருந்து ஆராதனை செய்யும் வரை, எல்லாமே சாஸ்திரோக்தமாக. இம்மி பிசகக்கூடாது. பிசகினால், பக்தியை மறந்த ஆயிரம் பிராமணோத்தமர்கள் ‘பிலு பிலு’ வென்று சண்டைக்கு வருவார்கள். பகவானை திரஸ்கரித்து கோயிலிலிருந்து வெளி நடப்பு செய்வார்கள். பரங்கி துரைத்தனத்தாருக்கு அநாமதேய புகார் மனு அனுப்புவார்கள். சார்! இது பழங்கதை. நூறாண்டுகள் ஆகப்போகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதான் பரங்கி துரைத்தனத்தார். இத்தனைக்கும், அவன் மிலேச்சன்; கிருஸ்துவன்; குடிகாரன்.

    திருப்பதி ‘மிராசு’ போல இங்கும் உரிமை பாராட்டும் பண்டா பிரமுகர்கள் உண்டு. பல ஆண்டுகளாக, பக்தகோடிகளின் அனுக்ரஹத்தால், இவர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. மயிலிறகு வைக்காமலே இவர்களது வங்கி சேமிப்பு புத்தகம் குட்டி போடுகிறது. அபரிமிதமான பொன்மாரி பெய்வதால், இவர்களது லேவாதேவி வியாபாரம் கந்து வட்டி அசுரகுட்டிகளை ஈன்றெடுக்கிறது. பகவான் ஜெகந்நாத் இந்த ஈனச்செயல்களை கண்டிக்கிறான். அவனை யார் கேட்டது? விவாஹ சுபமுஹூர்த்தில், அந்த பிள்ளையாண்டான் பெண்ணுக்கு மாங்கல்ய தாரணம் செய்யும்போது கெட்டி மேளம் கொட்டச்சொல்வதே, அமங்கல சொற்கள் காதில் விழாக்கூடது என்பதற்கு. இங்கே பகவானின் சொற்களை கேட்கக்கூடாது என்று தான் பயங்கர ஒலி தரும் கண்டாமணிகளை அடிக்கிறார்கள் போலும்!

    இந்த சம்பிரதாயமான பூஜை புனஸ்காரம்,சாஸ்திரோக்தம் மட்டும் தான் பூரி ஜகந்நாத் கோயிலில் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். சொல்லப்போனால், அந்த பிராந்தியத்துக்கே எஜமானன் ஜகன்னாதர் தான். எல்லார் வீட்டிலும் தவழும் குழந்தையும் அவரே. ஊழியம் நிமித்தமாக, நான் பூரி செல்ல நேரிடும் என்றாலும், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு ஜகன்னாதன் தரிசனத்துக்கு செல்வது உண்டு. இரவு கொடுக்கும் மஹா பிரசாதம் ஒரு படி சாதம். அங்கு விளையும் நெல்லை போரடிக்க யானை வேண்டும். அத்தனை அபரிமிதமான விளைச்சல் பூமி. அந்த பிரசாதத்தை இரண்டு நாள் சாப்பிடலாம். ஊரே சில நாட்கள் பொலிவு இழந்து கிடக்கும். கேட்டால், வருத்தத்துடன் அவனுக்கு ஜலதோஷம் என்பார்கள். காலையில் பல் தேய்த்து விட்டு, முகம் அலம்பின பின் கஷாயம் கொடுப்பார்கள். குழந்தை ஜகன்னாதன் குடிப்பதாக பாவனை செய்வதால், பண்டா மனது வைத்தால், நமக்கு அருமருந்து பிரசாதமாகவும் கிடைக்கும். கறாராக தக்ஷிணையும் வாங்கி விடுவான். கோயிலுக்கு எதிரே மிகவும் அகலமான கிராண்ட் ரோடு. திருவிழா அன்று லக்ஷோபலக்ஷம் மக்கள் வடம் பிடிக்க, அண்ணன் பலபத்ரன், ஜகன்னாதன், தங்கை சுபத்ரா மூவருக்கும் தனித்தனி தேர். சாலையின் அடுத்த முனையில் இருக்கும் அத்தை வீட்டுக்கு போகும் காட்சி அபாரமாக இருக்கும். கண்டாமணி சத்தம் வானை பிளக்கும். பூரி மாஜி மகராஜா தங்க விளக்குமாறால், தேரின் தளத்தை சுத்தம் செய்த பின், கலெக்டர், மந்திரிமார், முதல்வர் எல்லாரும் கும்பிட்ட பின். ஆடி , அசைந்து, அந்த மூன்று தேர்களும் செல்வது கண்கொள்ளா காட்சி. அத்தை வீட்டில் கொம்மாளம் அடிக்கப் போராங்களாம்!
    தொடரப்போவது: நான் பகவானை தரிசிக்க போன படலம்.

    சித்திரத்துக்கு நன்றி:
    http://suriyantv.com/wp-content/uploads/2012/06/1-1024×788.gif

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • கிடந்தாய் வாழி காவேரி !

    கவிஞர் ஜவஹர்லால்

     

    பிணைந்தார் நெஞ்சம் பிரிக்கவென்றே
    பிறந்த கானல் வரிகேட்டும்
    இணைந்தா ருள்ளம் நெருப்பாகி
    இரண்டாய்ப் போன நிலைகண்டும்
    இணைந்தார் வாழ்வில் திருப்புமுனை
    இயக்கும் விதியின் செயல்கண்டும்
    கனத்த இதயத் துடன்தானா
    கிடந்தாய் வாழி காவேரி!

    மனத்தில் இன்பப் பூப்பூக்க
    மணக்கும் தமிழின் இசைப்பாட்டே
    நினைக்கா வகையில் பிரிவினையை
    நிகழ்த்தி வைத்த நிலைகண்டே
    இனிக்கும் இசையே இவர்வாழ்வில்
    இசையா இசையாய்ப் போனதென்ற
    நினைப்பில் தானா முடங்கிப்போய்க்
    கிடந்தாய் வாழி காவேரி!

    தவித்த வாய்க்குத் தண்ணீரைத்
    தரவே மறுக்கும் பிறந்தஇடம்
    தவித்து நொந்து தாகத்தில்
    தினமும் அலறும் புகுந்தஇடம்
    புவிக்குள் இதுபோல் பெண்ணுக்குப்
    போராட் டம்தான் வரலாமா?
    கவிழ்ந்த நெஞ்சத் துடன்தானா
    கிடந்தாய் வாழி காவேரி!

    நதிநீர் அளிக்க மனமில்லை;
    நடப்பில் ஒருமைப் பாடென்பார்.
    நதியின் வறட்சி தானிந்த
    நாட்டின் வறட்சி அறியாரா?
    நதியின் நீரில் அரசியலை
    நடத்தும் கொடுமை தனைக்கண்டோ
    கதிவே றின்றி உளங்காய்ந்து
    கிடந்தாய் வாழி காவேரி!

    சைத்தான் வேதம் முழங்கிநிற்கச்
    சரித்தான் என்றே பண்டிதர்கள்
    கைத்தா ளத்தைப் போட்டுநிற்கக்
    கண்முன் காட்சி பொய்யென்றே
    சைத்தான் கூத்தும் ஆடிநிற்கச்
    சகித்து நாடு பொறுத்திருக்கச்
    செத்தாற் போதும் என்றாநீ
    கிடந்தாய் வாழி காவேரி!

    காக்கை கோட்டான் இசைபாடக்
    கழுகும் பேயும் நடமாடக்
    கூக்கூ என்றே குரலெழுப்பிக்
    கூட்டாய்ச் சிலவே ஓலமிடச்
    சேர்க்கை ஒவ்வாக் கூட்டணிகள்
    சிரிப்பாய்ச் சிரிக்க இங்காரும்
    கேட்கா இசையைக் கேட்டாநீ
    கிடந்தாய் வாழி காவேரி!

    Share
  • தைப்பூசம் காணுங்கள்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்,  அவுஸ்திரேலியா

         கலியுகத்தில்  கண்கண்ட தெய்வமாக கந்தப்பெருமான் விளங்குகின்றார். அவரது அருங்கருணையால் அனைவருக்கும்  அல்லல் அகன்று அகமகிழ்வு ஏற்பட வழி பிறக்கிறது. அடியார் ஓரடி நடந்தால் ஆண்டவன் நூறடிவருவான். அடியார் நூறடி நடந்தால் ஆண்டவன் ஆயிரமடி வருவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். முருகா என்று ஒருமுறை அழைத்தால் – இம்மைக்கும் மறுமைக்கும் என்றுமை நல்லதையே முருகப்பெருமான் நல்குவான். அந்த அளவுக்கு அளப்பரும் ஆற்றல் கொண்டவன் முருகப்பெருமான்.

        கலியுகத்தில் எவர் வாயிலும் முதலில் வருகின்ற வார்த்தை ” முருகா ” என்பதே யாகும். ஓம்முருகா – ஓம்முருகா – என்று அழைக்கும் பொழுது , உள்ளமெலாம் பூரிக்கின்றது! உடலிலே ஒருவிதப் பரவசம் உருவாகிறது! உணர்வுகள் தூய்மை அடைகின்றன.

       அழகு, ஆற்றல், கருணை நிரம்பிய முருகப்பெருமானுக்குப் பல விசேட தினங்கள் இருந்தாலும் ” தைப்பூசம் ” மிகவும் சிறப்பானதாக அடியவர்களால் முருகனுக்குரிய சிறப்புத் தினமாக கொண்டாடாப் பட்டுவருகிறது.

        தைமாதத்தில் பெளர்ணமியில் வருகின்ற பூச நட்சத்திரத்தன்று முருகனுக்கு உகந்த தினமாக நீண்ட காலமாகத்  தைப்பூசப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது எனலாம்.

        இந்த விழா இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தேவாரம் பாடிய செல்வக் குழந்தை திருஞான சம்பந்தர் காலம் முதல் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. பழைய இலக்கியங்களிலும் இவ்விழா பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

        முருக வழிபாடு பழைமை வாய்ந்தது. தைப்பூசத்தோடு முருகப் பெருமான் பல நிலைகளில் இணைக்கப்படுகிறார். முருகனது அவதாரமே மிகவும் அற்புதமானது.

        முருகன் என்னும் நாமம்கூட மிகவும் அர்த்தம் பொதிந்தாகக் கருதப்படுகிறது.

    முருகு – என்றால் இளமை.முருகன்  – என்றால் அழகன் என்றும் இளமையானவன் என்றும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. முருகன் என்னும் பெயரில் தமிழின்
    வல்லின , மெல்லின, இடையின எழுத்துக்கள் இடம்பெறுகின்றன. இதனால்   முருகப்பெருமானை தமிழுடன் இணைத்துப் பேசுவார்கள். அதுமட்டுமல்ல முருகன் என்றாலே தமிழே வடிவானவன் என்னும் ஓர் எண்ணமும் மேலோங்கி நின்று முருகப்பெருமான் தமிழ் மயமாகவே விளங்குகிறார் என்று சொல்லிப் பெருமைப்படும்  நிலையும் இருப்பதையும் கண்டுகொள்ளலாம்.

         ஆண்டவனிடம் வரம்பெற்று அந்தவரத்தை  நல்வழியில் பயன்பபடுத்தாது – ஆணவத் தால் அறவழியை மறந்து –  தேவர்களுக்கே துன்பம் செய்யத் துணிந்துவிட்டான் சூரபதுமன் எனும் அரக்கன். ஆணவம் எங்கு மேலோங்குகிறதோ அங்கு ஆண்டவனின் சக்தி தோன்றி அதனை
    அழித்துவிடும். அந்த பெரும் சக்தியாக உருவெடுத்த நிலைதான் முருகன் அவதார மாக அமைகிறது.

       “அருவமும் உருவமாகி
          அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
          பிரமாய் நின்றஜோதி
          பிழம்பதோர் மேனியாகி
          கருணைகூர் முகங்களாறும்
          கரங்கள் பனிரண்டும் கொண்டு
          ஒருதிரு முருகன் வந்தாங்கு
          உதித்தனன் உலகம் உய்ய”

      முருகனது பிறப்பைப் பற்றிக் கந்தபுராணம் இவ்வாறு காட்டுகிறது. அரக்கரை அழித்து ஆணவத்தை அகற்றி அறம்தழைக்கச் செய்ய முருகன் வந்துதித்த தினமே தைப்பூசத்திருநாளாகப் முருகப்பெருமானது ஆலயங்கள் தோறும் கொண்டாடப் பட்டு வருகிறது என ஒரு வரலாற்றுக் கதையும் நிலவுகிறது.

         உமையம்மன் கொடுத்த வேல் என்னும் ஆயுதத்தால் அட்டூழியம் புரிந்த அரக்கனை வதம்செய்து வெற்றிகொண்ட  தினமாகவும் தைப்பூச விழா அமைகிறது என்று ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

        இவற்றைவிட மேலும் ஒரு கதையும் தைப்பூசத்துடன் தொடர்பு படுத்திச் சொல்லப் படுகிறது. சிவனால் பார்வதிக்கு மந்திரம் ஒன்று உபதேசிக்கப்படுகிறது. அவ்வேளை முருகன் அதை மறைந்திருந்து கேட்கவே – பார்வதி கோபங்கொண்டு சபித்திட முருகன் கோபித்து திருப்பரங்குன்றம் சென்று இருந்திட – சிவனும் பார்வதியும்  சென்று சாபத்தை மீளப்பெற்று முருகனை அரவணைத்த தினமே தைப்பூசம் என்றும் சொல்லப்படுகிறது.

        இக்கதைகளை வைத்துப் பார்க்கின்றபொழுது – தைப்பூசம் என்னும் தினமானது முருகப்பெருமானுடன் நெருங்கிய தொடர்புடைய தினமாகவே இருக்கிறது என்பதே இங்கு முக்கிய அம்சமெனலாம்.

          முருகன் தோற்றத்துடன் பிரகாசம் சம்பந்தப் பட்டிருக்கிறது.சிவனின் நெற்றிக்
    கண்ணிலிருந்து வெளிப்பட்ட அக்கினிப் பொறி சரவணப் பொய்கையில் விழுந்து ஆறுமுகன் அவதரிக்கிறார் என்பதைக் கந்தபுராணம் வாயிலாக அறிகின்றோம். ஒளிப் பிழம்பான முருகன் – ஒளிநிறைந்த பெளர்ணமி தினத்துடன் இணைக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது என்றே எண்ணமுடிகிறதல்லாவா ?

           தைபிறந்தால் வழிபிறக்கும். தைப்பொங்கல் சூரியனுக்குரியது. சூரியன் வெப்ப மயமானவன். சூரியனுக்குரிய பொங்கலையடுத்து வருகின்ற பெளர்ணமி சிறப்புடை யது. அந்தத்தினத்தில் வருகின்ற பூசமும் சிறப்புடையது. இத்தகைய காரணங்கள் தைப்பூசத்துடன் முருகப் பெருமான் இணைக்கப்பட்டது பொருத்தமாய் இருப்பதாகத் தெரிகிறதல்லவா ?

           தைப்பூசம் மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதற்கு – சம்பந்தப்பெருமானே தனது தேவாரத்தில் குறிப்பிட்டிருப்பதும் நோக்கத்தக்கது.

       “மைப்பூசும் ஒண்கண் மடநல்லூர் மாமயிலை
        தைப்பூசும் நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
        நெய்ப்பூசும் ஒண்புகழ் நேரிழையார் கொண்டாடும்
        தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய் ”    

         சைவத்தமிழ் மக்கள் செறிந்துவாழும் தென் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்,  மலேசியா, தென்னாபிரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளிலும் – தமிழரல்லாத மக்கள் வாழுகின்ற கேரளப்பகுதிகளிலும்கூட தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

         வித்தியாரம்பம், காதுகுத்தல், புதுக்கணக்கு ஆரம்பித்தல், புதிய முயற்சிகள்
    தொடங்குதல் எனப் பல சுபநிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் நாளாகவும் தைப்பூசம். முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

        பலவிதமான காவடிகள் எடுத்துத் தங்கள் குறைகளைப் போக்கும் தினமாக அடியார் கள் தைப்பூசத்தினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். காவடிகளிலே  பல வகையுண்டு.

    பாற்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக்காவடி, பறவைக்காவடி , இவற்றோடு – தமது உடலை வருத்தக்கூடிய பலவித நிலைகளையும் இணைத்து  அடியார்கள் முருகனை வழிபடும் தினமாகவும் தைப்பூசம் விளங்குகிறது.

     ” தீபமங்கள ஜோதி நமோநமோ” – ” ஒளிவளர் விளக்கே ”

    ” ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ்சோதி ” –

          ” சோதியே சுடரே சூழொளி விளக்கே ”  – இவையனைத்தும் இறைவன் ஒளி
    வடிவானவன், பிரகாசமானவன் என்பதையே காட்டுகின்றன எனலாம்.முருகனே ஒளிவடிவானவன்.ஜோதிப்பிழம்பாயிருந்து வந்தவனே முருகன்.

          உலக இயக்கத்துக்கு ஒளியும் வெப்பமும் இன்றியமையாத சக்திகளாகும். உயிர்வாழ்வதற்கும் உற்பத்திக்கும் இவையிரண்டுமே அவசியமானதேயாகும். அந்தச் சக்தியாக முருகப்பெருமானே விளங்குகின்றான் என்பதுதான் எங்கள் சமயநம்பிக்கை ஆகும். அதனையே புராணங்களும் காட்டி நிற்கின்றன. இவையாவும் இணையும் விதத்தில் தைப்பூசம் அமைவதால்  தைப்பூசம் முக்கியச் சமயக் கொண்டாட்டமாகவும் முருகப்பெருமானுடன் தொடர்புபட்டதாகவும் இருந்து வருகிறது. எதையும் இறை உணர்வுடன் செய்கின்றபொழுது அது உன்னதத்தையே தொட்டுநிற்கும் என்பதை மனமிருத்தினால் தைப்பூசம் காண்பது யாவருக்கும்  நல்லுணர்வையே நல்கி நிற்கும்.

     

    Share
  • சித்தர் பாடல்கள் வெளிப்படுத்தும் கல்வியியல் சிந்தனைகள்

    -ச. பிரியா

            கல்வி மனித வாழ்விற்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒன்றாகும். கல்வி அறிவில்லாத சமுதாயம் என்றும் முன்னேறுவதில்லை இது வரலாறு. கல்வி என்பது வாழ்க்கையில் தோன்றும் அறியாமையை நீக்கி, அறிவைக் கொடுப்பதாகும். அனைவருக்கும் கல்வி என்பது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி அடிப்படைத்தேவைகளில் ஒன்றாகும். இதன்படி கல்வி குறித்து சித்தர்கள் அவர்கள் காலத்திலேயே சிந்தித்து, பல கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர் அதனை விளக்குவதாகவே இக்கட்டுரை அமைகிறது.

    கல்வியின் சிறப்புகள்

    கற்கை நன்றே கற்கை நன்றே
        பிச்சைபுகினும் கற்கை நன்றே”     (நறுந்தொகை – 35)

    என்று அதிவீரராம பாண்டியனும்,

    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
          பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”      (புறம் – 183)    என்று பாண்டியன் நெடுஞ்செழியனும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கூறியுள்ளனர். எனவே கல்வி என்பது எல்லாருக்கும் பொதுவானது. எந்தத் தனிப்பட்டவருக்கும் சொந்தமானது அன்று. அதனால்தான் எல்லாரும் கற்க வேண்டும். பிச்சைப்பெரினும் கற்றல் நன்று என்று கூறியுள்ளனர் நம்முன்னோர்கள்.

    கல்வி – உயர்ந்தோர்

         கல்வி அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். முன்னைப் பழங்காலத்தில் எந்தத்தொழில் செய்து வந்தாலும் எக்குடியில் பிறந்திருந்தாலும் எந்தவித தடையும் இன்றி கல்விகற்று வந்தனர். ஆரியரின் வருகைக்குப் பிறகே நிலைமை தலைகீழாக மாறியது எனலாம். நால்வகை வருணப்பாகுபாடுகள் தோன்றியதன் அடிப்படையில் கல்வி என்பது ஒரு சாராருக்கு உரியதாக மாறிப்போனது. இதனை,

         “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன”      (தொல்.அகத்.26) என்ற தொல்காப்பிய அடிகளின்வழி அறியலாம். இதற்கு உரைகூறும் நச்சினார்க்கினியர்,

      “…அம்மூன்றனுள் ஒதற்பிரிவும் தூதிற் பிரிவும் அந்தணர் முதலிய முவரிடத்தன என்றவாறு. எனவே ஒழிந்த பகைவயின் பிரிவு அரசர்க்கே உரித்தென மேலே கூறுப. உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை ஒழித்தாரென்றுணர்க.” (ப-54)

    எனக் கூறியுள்ளார். இதன்படி நச்சினார்கினியர் உயர்ந்தோர் எனக் கருதுவது அந்தணர், அரசர், வணிகரையே. இம்மூவர் மட்டுமே உயர்கல்வி கற்கவும் வெளிநாடு செல்லவும் தகுதி படைத்தவர்கள். நான்காம் சாதியினருக்கு அவ்வுரிமை கொஞ்சமும் இல்லை எனத்தெரிகிறது.

        நாலாம் சாதியாம் சூத்திரர்கள், உழைக்கும் வர்க்கமாகிய பெரும்பான்மை மக்கள் படிக்கவே கூடாது எனத் தடைபோடப்பட்டது. அப்படி மீறிப் படித்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதாக மனுதர்ம விதி கூறுகிறது. என்பதை,

         “ சூத்திரன் படித்தால் நாவை அறுக்க வேண்டும். படிக்கக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்”. (ப.49)

    என்ற வரிகளின்வழி அறியலாம். ஒருவன் படிக்கக் கூடாது என அறிவுக்கு தடைபோடும் மனுநீதிக்கு எதிராக முழக்கம் இட்டவர்கள் சித்தர்கள் ஆவர்.

    இவர்கள் கூறும் கல்விமுறை ஒழுக்கத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் குறிக்கிறது. ஆனால் சித்தர்களின் காலக்கட்டதில் குருகுலக் கல்விமுறை பயிலப்பட்டதை,

    “மூங்கிலை வெட்டி நார் உரித்துப் பதப்படுத்தி நூல்களைத் தயாரித்தனர். அவை புத்தகம் என்றழைக்கப்பட்டன. அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அந்தணர்களும் மற்றும் வசதி மிகுந்தவர்களுமே கல்வி கற்றனர். கல்வியும் வேதங்கள் ,சாத்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் முதலானவற்றைக் கற்பிப்பதாகவே அமைந்திருந்தது. நாட்டில் வேத பாடசாலைகள் இருந்தன. குருகுலமுறையில் கல்வி கற்பிக்கப்பட்டது” என்ற இளமதி சானகிராமன் கருத்தால் குருகுலக்கல்வியும் வேதசாத்திரங்கள் பயிலப்பட்டதையும் அறியமுடிகிறது. (ப-211)

           சித்தர்கள் கல்விமுறையானது மக்களின் அறிவை வளர்க்காமல் அறியாமை நிலைக்கு இட்டுச்செல்வதால் அர்த்தமற்றது, பொய்யானது என்று சாடினர். மேலும் பிராமணர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நியதியைக் கண்டு சீற்றம் கொண்டனர். சித்தர்களின் காலம் 15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இக்காலக்கட்டத்தில் நாயக்கர்கள் முதலான வேற்று மன்னர்களின் ஆட்சியில் தமிழகம் சிக்கியது. இக்காலநிலையில் கல்விநிலை குறித்து

          “திருமலைநாயக்கர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றார். இதில் 3000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாகச் செய்து தரப்பட்டுள்ளன. இதில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பிராமணர்களே. அவர்களைத் தவிர வேறு எவருமே இல்லை” என்று இராபர்ட் டி நொபிலி குறிப்பிடுகிறார். (ப.54). இவர் கருத்திலிருந்து பிராமணர்கள் தவிர மற்றவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதை அறியமுடிகிறது.

          சித்தர்கள் பிராமணர்கள் தவிர மற்றவர்கள் கல்விபயில மறுக்கப்பட்டதையும் கல்வியாகக் கற்பிக்கப்பட்ட வேதபுராண சாத்திரங்களையும் கடுமையாக விமர்சித்தனர். ஏட்டுக்கல்வியானது பொய்க்கல்வி என்பதை,

          “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது” (பாம்.சித்.பா.129)

    என்ற வரியில் ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்பதை உணர்த்துகிறது. இதனை நாம் நடைமுறையில் நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது. இன்றைய இளைஞர்களில் பலர் பார்க்கும் பணிக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியலாம். மேலும்,

      “பொய்யான கல்விகற்றுப் பொருண் மயக்கம் கொள்ளாமல்
        மெய்ஞானக் கல்வி விரும்புவாய் கன்மனமே ”    (இடை.சித்.பா.249)

    என்ற வரிகளில் பகுத்தறிவு கொண்டு எதனையும் ஆராய்ந்து கூறும் மெய்க்கல்வியை கற்றால் மட்டுமே வாழ்வி ஈடேற்றம் கிடைக்கும் என்று இடைக்காடர் அறிவுறுத்துகின்றார்.

            “ சதுர்வேதம் அறுவகைச் சாத்திரம் பல
             தந்திரம் புராணங்களைச் சாற்று மாகமம்
            விதம்வித மானவான வேறு நூல்களும்
       வீணாண நூல்களே யென்றாடு பாம்பே”   (பாம்.சித்.பா.54)

     என்ற பாடலில் பாம்பாட்டிச்சித்தர் நால்வகை வேதங்கள் ஆறுவகைச் சாத்திரங்கள், புராணங்கள், தந்திரம் ஆகமம் ஆகிய அனைத்தும் வீணாண நூல்கள் என்று குறிப்பிடுகின்றார். இவையாவும் பிதற்றல்களே என்று சிவவாக்கியரும் குறிப்பிடுகிறார், இதனை,

           “ நட்டதாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
                 இட்டமான ஒமகுண்ட மிசைந்த நாலுவேதமும்
              கட்டி வைத்த புத்தகம் கடும் பிதற்றி தற்கெலாம்
              பெட்டதாய் முடிந்தே பிராணயான றியயோ”   (சிவ.பா.184)

    என்ற பாடலின்வழி மெய்ஞானமாம் இறைவனின் அருளை அடைந்தவர்களுக்கு மற்ற அனைத்தும் பிதற்றல்கள் என்று சாடுகின்றார்.

           சித்தர்கள் மெய்ஞானமான இறைஞானம் பெற்றால் மற்றவை எல்லாம் தேவையில்லாதது என்கின்றனர். இதனை சுவாமி விவேகானந்தரும்,

         “கல்வி என்பது இயற்கையாக மனிதனுள்ளே புதைந்துள்ள தெய்வீகமான பூரணத்தை வெளிக் கொணர்வதாகும்.” (ப-1).

           எனவே ,பொய்யான புராண சாத்திரங்கள் தேவையில்லாதது. இயற்கையில் உள்ள தெய்வீகத்தை வெளிக்கொணர்வதே அடிப்படைத்தேவை என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

            தமிழகத்தில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். உலக வாழ்வு பற்றியும் உலகப்பொருள்கள் பற்றியும் மிகுதியாகச் சிந்தித்தவர்கள். இறுதியில் அனைத்துமே மாயை என்ற முடிவிற்கு வந்தவர்கள். நாம் சித்தர்கள் வரிசையில் முதலில் சொல்லக்கூடியவர் திருமூலர்தான். திருமந்திரத்தில் கல்வி, கேள்வி, கல்லாமை என்னும் முத்தலைப்பில் முப்பது பாடல்களில் கல்விகுறித்துக் குறிப்பிடுகிறார்.,

       தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் கல்வி, கேள்வி, கல்லாமைக்கும் திருமூலர் சொல்வதற்கும் வேறுபாடுகள் சற்று மிகுதி. அவர்கள் எல்லாம் லோகாயதத்தை (பொருள் முதல்வாதம்) சொன்னார்கள் என்றால், திருமூலர் மெய்ஞ்ஞானத்தைச் (கருத்தியல் வாதம்) சொல்கிறார்.” என்று மு.அண்ணாமலை குறிப்பிடுகிறார். (தமிழ் நாட்டில் கல்வி அன்றும் இன்றும் ப.130)

    கல்வியே தக்கதுணை

    மனிதனுக்குக் கடைசிவரை தக்க துணையாக இருப்பது கல்வி மட்டுமே, மற்ற பொன், பொருள், உறவுகள் அனைத்தும் துணையாவதில்லை. என்பதை,

        “துணையது வாய்வருந் தூயநற் சோதி
            துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
            துணையது வாய்வருந் தூயநற் சந்தம்
            துணையது வாய்வருந் தூயநற் கல்வியே”      (திருமந். 294)

    என்ற பாடலில் திருமூலர் மனிதனுக்கு கடைசியில் துணையாக வருவது தேடிய புகழ், சொன்னசொல், கற்றகல்வி ஆகியவை மட்டுமே என்கிறார்.

      “ கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்று அவ்வையாரும்,

      “யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
       சாந்துணையும் கல்லாத வாறு”   (குறள்- 394)

     என்று கற்றவர்களுக்கு எல்லா இடங்களிலும் கல்வியே துணையாக வரும் என்ற கருத்தும் இவண் ஒப்புநோக்கத் தக்கதாகும்.

    அனுபவஅறிவு – பட்டறிவு

         கல்வியில் ஒன்று அனுபவக்கல்வி ஆகும். வாழ்க்கையில் உணர்ந்த பட்டறிவே அனுபவ அறிவாகும். இந்த அறிவு ஒருவனை எந்தச் சூழலிலும் கைவிடாதது என்கிறார்.

             “ பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
              முற்றது எல்லா முதல்வன் அருள்பெறின்
              கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
              கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே ” (திரு- 298)

    என்ற திருமந்திரவரிகள் பட்டறிவு பெற்றவர்கள் பேரின்பம் பெற்றவர்கள் என்கிறது. மேலும்,

            “ கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொ ண்ணாது
             கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடாக் காட்சி
            கணக்கறிந் துண்மையைக் கண்ட நிற்கும்
            கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே”           (திரு.316)

    என்ற பாடலில் அனுபவக்கல்வியாம் மெய்ஞ்ஞானக் கல்வியே இறைவனை அடைய உதவும். மெய்ஞ்ஞானமே உண்மையான கல்வி என்று கூறுகிறார் திருமூலர்.

        எனவே சித்தர்கள் கூறும் கல்வி அனுபவக்கல்வி ஆகும். இது உண்மைப் பொருளை உணர்ந்தறியும் மெய்ஞ்ஞானக் கல்வியை குறிக்கிறது. உலகியல் அறிவைத் தரும் பள்ளிக்கல்வியையும் வேத புராண, சாத்திரக் கல்வியையும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

         சித்தர்களின் கல்வி குறித்த சாடல்களும் ஏசல்களும் நவீன உலகிற்கும் பொருந்தும். இன்றைய கவிஞர்கள் கல்விமுறை குறித்து,

            “ புத்தகங்களே
             சமர்த்தாய் இருங்கள்
             குழந்தைகளைக்
             கிழித்து விடாதீர்கள்”                  (பித்தன் ப.80)

    என்றும்

      “ குழந்தைகளே பாடப்புத்தகங்களாக
                இருக்கிறார்கள்
               அவர்கள் கையில் ஏன்
               காகிதக்குப்பைகளைத் தருகிறார்கள்” (பித்தன் ப-80)

     என்ற கவிதையில் அப்துல் ரகுமான் புத்தகங்களைக் காகிதக்குப்பைகள் என்று கூறுகின்றார். எதிர்கால வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள ஏட்டுக்கல்வி வழிகாட்டவில்லை என்பதை கூறுவதில் சித்தர்களின் சாடல்முறையை நவீன கவிஞர்களும் பின்பற்றுகின்றனர்.

    முடிவுரை

    • கல்வியில் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் மெய்மையை விளக்கும் கல்வியே மெய்ஞ்ஞானமாகும்.
    • சித்தர்கள் மெய்ம்மையியல் விஞ்ஞானிகளாகவும் அறிவுத்துறை விஞ்ஞானிகளாகவும் செயல்பட்டிருந்தார்கள் என்பதை அறியமுடிகின்றது.
    • திருமூலர் அனுபவக்கல்வியாம் மெய்மைக்கல்வியை வலியுறுத்துகிறார். மற்ற சித்தர்கள் வேதபுராணக் கல்வியாம் ஏட்டுக்கல்வியைக் கடுமையாகச் சாடியுள்ளனர். ஏனெனில் புராணக்கல்வி என்பது ஒருசாராருக்கு மட்டுமே உரிய கல்வியாகவும் கற்பனைக்கல்வியாகவும் அமைகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1. சி.எஸ்.முருகேசன், சித்தர் பாடல்கள், (பெரியஞானக்கோவை) சங்கர் பதிப்பகம், சென்னை-49, 2012.
    2. பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை-14, 2004.
    3. தொல்காப்பியம், பொருளதிகாரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001.
    4. அப்துல் ரகுமான், பித்தன், நேசனல் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2003.
    5. மு.அண்ணாமலை, தமிழ்நாட்டில் கல்வி அன்றும் இன்றும் ,அம்மன் புத்தகக் குழுமம், சென்னை- 5, 2005.
    6. இளமதி சானகிராமன், சித்தர் இலக்கியம், கோகுலம், புதுச்சேரி- 8.2007.
    7. அவ்வை.சு.துரைசாமிப்பிள்ளை(உ.ஆ), புறநானூறு, கழகவெளியிடு, சென்னை-18,ம.ப.2007.
    8. கி.நாகராசன், மலரும் இந்தியச்சமுதாயத்தில் கல்வி, இராம் பதிப்பகம், சென்னை-93,2009.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    பரட்டைத் தலையொடு, பக்கத்தில் ’’ஆ’’வந்(து)
    அரட்டை அடிவருடி ‘’அம்மா’’(மாட்டு சத்தம்) : -குறட்டைக்
    கடலூரில், போரூரில் கீதை , புவியின்
    இடையூறு போக்கும் இடை’’….
    அட்டைக் கரியாக, ஆடை கலைந்திட,
    வெட்ட வெளிதனில் வீற்றிருந்து -கொட்டிலில்
    தன்நினைவு இன்றித்’’ஆ’’ தாலாட்டில் தூங்கிடும்
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    ”Be still HE COMES
    STILL IS THE MOUNTAIN
    Still is the deep Sea
    Still is the windless woods
    Still is the contemplating mind
    In the womb of stillness is born
    The dark beauty,the ethereal joy!
    HE the dark one is effulgent !
    Yes, have you heard dear
    Dark and yet effulgent !
    HE is dark and radiant !
    HE is still and dynamic
    HE is manifold and one
    HE is bewitching yet formless
    Be still within and behold
    In thae stillness of the mind HE comes !….Poem by Nochur Venkataraman

    Share
  • படக்கவிதைப் போட்டி – (98)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    16651916_1229546853766178_570270536_n

    71516183@N03_rவெண்ணிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.02.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     
    COMPANION….!
    ——————————

    kesav

    ”COMPANION கண்ணனின் காப்புண்டு, வேய்ங்குழல்
    சிம்பெனி கீதை செவிக்குணவு: -நம்பணி
    எண்ணியதை நல்கும் யசோதை இளஞ்சிங்கம்
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!

    Share
  • எங்கே போகிறோம் ?

    கவிஞர் ஜவஹர்லால்

    சாதிக்குச் சங்கங்கள் உண்டே யன்றிச்
    சாதிக்கச் சங்கங்கள் இல்லை; வீணே
    மோதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றி
    முனைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; உள்ளம்
    பேதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றிப்
    பிணைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; இங்கே
    ஏதுக்குச் சங்கங்கள் ? ஆய்ந்து பார்த்தால்
    எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

    மனிதாபி மானத்தைக் காண வில்லை;
    மனத்தினிலே நல்லெண்ணம் பூப்ப தில்லை;
    இனிதான சொற்களிங்கு வீழ்வ தில்லை;
    இடர்துடைக்கக் கைகளிங்கு நீள்வ தில்லை;
    கனிவான நெஞ்சங்கள் தோண வில்லை;
    கண்களிலே தூயசுடர் ஒளிர்வ தில்லை;
    இனியஉள்ளம் நல்லசெயல் எங்கு மில்லை;
    எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

    பள்ளங்கள் மேடாக வில்லை; இங்கே
    பாவங்கள் குறைவாக வில்லை; நல்ல
    உள்ளங்கள் உயர்வாக வில்லை; நாட்டின்
    ஊனங்கள் சீராக வில்லை; நெஞ்சக்
    கள்ளங்கள் அழிவாக வில்லை; செய்யும்
    கபடங்கள் மறைவாக வில்லை; எங்கும்
    இல்லங்கள் வளமாக வில்லை; நாட்டில்
    எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

    நதிநீரைப் பங்குதர மனமே இல்லை;
    நாட்டினிலே ஒருமைப்பாட் டுணர்வே இல்லை;
    விதியைத்தான் நம்புவதைத் தவிர வேறு
    வினைவலியை நம்புகின்ற நெஞ்சே இல்லை;
    கதிமாற்றும் தேர்தலிலே செம்மை யாகக்
    கடமையாற்றி நிலைமாற்றும் துணிவே இல்லை;
    நிதிசேர்க்கும் தவறுகளோ குறைய வில்லை;
    நாமெங்கே போகின்றோம் ? தெரிய வில்லை.
    மதுரை வானொலி—18-02-96

    Share
  • எழிலரசி கிளியோபாத்ரா

    aj

    எழிலரசி கிளியோபாத்ரா
    [பேரங்க நாடகம்]
    மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா

    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++

    வயது ஏறினும் வதங்காது அவள் மேனி !
    வழக்க மரபுகளால் குலையாதவள் வாலிபம் !
    வரையிலா விதவித வனப்பு மாறுபாடு ……!
    படகில் அவள் அமர்ந்துள்ளது பொன்மய ஆசனம்!
    கடல்நீரும் பொன் மயமாகும் அதன் ஒளியால்.
    படகின் மேற்தளப்பரப்பு தங்கத் தளமேடை
    மிதப்பிகள் நிறம் பழுப்பு! பரவும் நறுமணத் தெளிப்பு
    காற்றுக்கும் அதனால் காதல் நோய் பீடிக்கும்!
    படகுத் துடுப்புகள் யாவினும் வெள்ளி மினுக்கும்.
    ஊது குழல் முரசு தாளத்துக் கேற்ப உந்தி,
    வேகமாய்த் தள்ளும் காதல் துடிப்பு போல் !
    அவளது மேனி வனப்பை விளக்கப் போனால்,
    எவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது !

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

    முன்னுரை: கிளியோபாத்ராவின் வரலாறு பேராசை, வஞ்சகம், ஏமாற்றம், மோகம், போகம், சோகம், கொலை, மரணம் ஆகிய அனைத்தும் பின்னிய ஒரு காதல் நாடகம்! கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் பிறந்த எகிப்தின் எழிலரசி அவள்! அவளது வாழ்க்கையில் குறுக்கிட்டு அவள் காதலித்து மணந்த ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர், பிறகு அவரது சீடர் மார்க் அண்டனி ஆகியோரது கோர மரணத்துக்கு ஓரளவு அவளது தொடர்பே காரணமானது!

    ஃபெரோவின் பரம்பரைகளில் வந்த எகிப்திய ராணிகளில் மிக்கப் புகழ் பெற்றவள் கிளியோபாத்ரா. எடுப்பான தோற்றமும், வசீகரக் கவர்ச்சியும், கூரிய ஞானமும், தேசப் பற்றும், போர் வல்லமையும், பேச்சுத் திறமையும் கொண்டவள். ஆனால் அவள் எகிப்திய மாதில்லை! மாஸபடோமியா மன்னர் வழிமுறையில் டாலமியின் வம்சத்தில் ஏழாம் டாலமியின் புதல்வியாக உதித்தவள். கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ரா பிறந்தாள். அப்போது எகிப்தின் தலைநகராக அலெக்ஸாண்டிரியா நிலவியது. கிளியோபாத்ரா என்று பலர் அவள் வம்சத்தில் பெயரைக் கொண்டிருந்தாலும், கடைசியாகப் பட்டத்தரசியாக வாழ்ந்த ஏழாவது கிளியோபாத்ராவே ஜூலியஸ் சீஸரின் காதலியாகவும், மார்க் அண்டனியைக் காதலித்த மாதாகவும் எகிப்த், ரோமானிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுபவள்.

    aj3

    தந்தை ஏழாம் டாலமி நாடு கடத்தப் பட்ட சமயத்தில் கிளியோபாத்ராவின் மூத்த தமக்கை எகிப்தின் ராணியாகப் பட்டம் சூடினாள். பிறகு அவள் எப்படியோ கொலை செய்யப் பட்டாள். மீட்சியாகி வந்த தந்தை நான்கு ஆண்டுகள் ஆண்டபின் மரணம் எய்தினார். அதன் பிறகு ஏழாம் கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஆண்டார்கள். அப்போது கிளியோபாத்ராவுக்கு 17 வயது. பண்டைக் கால எகிப்திய வழக்கப்படிக் கிளியோபாத்ரா சட்ட விதிகள் ஏற்காதவாறு 12 வயது தம்பியைத் திருமணம் புரிந்து, அவளே தன் விருப்பப்படி நாட்டை ஆண்டு வந்தாள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும் தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்தித் தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, அங்கிருந்து கொண்டு தமையனைப் பலிவாங்கும் சதிகளில் ஈடுபட்டாள். அப்போது ரோமானியத் தளபதி பாம்ப்பியைத் தாக்க அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ஜூலியஸ் சீஸரைக் காணும் வாய்ப்பை எதிர்பார்த்தாள், கிளியோபாத்ரா.

    ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸருக்கும், அவரது ரோமானியப் பழைய நண்பன் பாம்ப்பேயிக்கும் நடந்த போரில், டாலமி சீஸரின் பக்கமிருந்து பாம்ப்பேயின் படுகொலைக்குக் காரணமானான். பாம்ப்பே டாலமி உதவியால் கொல்லப் பட்டதை விரும்பாத சீஸர் கோபப்பட்டு முடிவில் டாலமியைத் தண்டிக்க முற்படுகிறார்! கிளியோபாத்ராவும், டாலமியும் தன் முன் வரவேண்டும் என்று சீஸர் ஆணையிட்டார். சிரியாவிலிருந்து வெளியேறி மறைமுகமாகச் சீஸரைத் தனியாகச் சந்தித்தாள் கிளியோபாத்ரா. சீஸரைத் தன் மேனி அழகால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்திப் பலிவாங்கும் திட்டத்தில் வெற்றியும் பெறுகிறாள். சீஸர் டாலமி செய்த சில தீவிரக் குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை விதிக்கிறார். முடிவில் கிளியோபத்ரா சீஸரின் உதவியால் எகிப்தின் பட்டத்து ராணியாக மகுடம் சூடுகிறாள்.

    மூன்று ஆண்டுகள் சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. குழந்தைக்கு டாலமி சீஸர் என்று பெயரிடுகிறாள். ரோமாபுரியில் கல்பூர்ணியாவை ஏற்கனவே திருமணம் செய்த சீஸருக்குப் பிள்ளை யில்லாத ஒரு குறையைக் கிளியோபாத்ரா தீர்த்தாலும், அவரது கள்ளத் தனமான தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் பலர் ஏற்று கொள்ள வில்லை! அன்னிய மாதுடன் உறவு கொண்ட சீஸர் மீது ரோமாபுரிச் செனட்டர் பலருக்கு வெறுப்பும், கசப்பும், கோபமும் உண்டானது! முடிசூடிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டார். கிளியோபாத்ரா குழந்தையுடன் கோலகலமாக ரோமுக்குச் சென்று சீஸருடன் தங்கிய சில தினங்களில், செனட்டர்கள் சிலர் மறைமுகமாகச் செய்த சதியில் சீஸர் கொல்லப் பட்டார். உயிருக்குப் பயந்த கிளியோபாத்ரா உடனே சிறுவனுடன் எகிப்துக்குத் திரும்பினாள்.

    சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகிச் சதிகாரர் அனைவரும் மார்க் அண்டனியால் ஒழிக்கப் படுகிறார். மார்க் அண்டனி, அக்டேவியன், லிபிடஸ் ஆகிய மூவரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவுகிறது. கிளியோபாத்ரா ரோமாபுரி விசாரணைக்கு மீள வேண்டும் என்ற மார்க் அண்டனியின் உத்தரவை மீறுகிறாள். பிறகு நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வரும் அண்டனியைத் தன் கவர்ச்சியால் மயக்கித் திறமையுடன் அவனையும் தன் காதல் அடிமையாய் ஆக்குகிறாள் கிளியோபாத்ரா. ஏற்கனவே அக்டேவியான் தமக்கையை மணந்த அண்டனி, எகிப்தில் கிளியோபாத்ராவை மணந்து கொள்கிறான். அண்டனியின் காதல் தேனிலவு நீடித்து கிளியோபாத்ரா இரண்டு குழந்தைகளைப் பெறுகிறாள்.

    சீஸருக்கு ஏற்பட்ட கதி அண்டனிக்கும் உண்டாகுகிறது. ரோமானிய செனட்டர்களின் சினத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனியுடன் போர் தொடுக்கிறது! போரிட்டு வெற்றியும் அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனி தற்கொலை செய்து கொள்கிறான். அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ரா மகனைத் தப்ப வைத்து, நாகத்தைத் தனது மார்பின் மீது தீண்ட விட்டு முடிவில் தானும் சாகிறாள்.

    aj1

    சீஸர், கிளியோபாத்ரா, ஆண்டனி

    கிளியோபாத்ரா நாடகப் படைப்பு:

    ஆங்கில நாடக மேதைகள் பெர்னார்ட்ஷா எழுதிய “சீஸர் & கிளியோபாத்ரா”, ஷேக்ஸ்பியர் எழுதிய, “ஜூலியஸ் சீஸர்”, “அண்டனி & கிளியோபாத்ரா” ஆகிய முப்பெரும் நாடகங்களை ஓரளவுச் சுருக்கித் தமிழில் கிளியோபாத்ரா என்னும் ஒற்றை நாடகமாக எழுத விரும்புகிறேன். நான் மதுரைக் கல்லூரியில் படித்த (1950-1952) ஆண்டுகளில் எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகம், “ஜூலியஸ் சீஸர்” ஆங்கிலப் பாட நூலாக அமைந்தது. அப்போது அந்த நாடகத்தின் உன்னதப் படைப்பான “அண்டனியின் அரிய சொற்பொழிவைத்” [Antony’s Oration] தமிழாக்கம் செய்தேன். அந்த வேட்கை மிகுதியால் இப்போது கிளியோபாத்ராவின் முழு வரலாற்றை நாடகமாகத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்க முற்படுகிறேன்.

    பெர்னார்ட்ஷா தனது நாடகம் “சீஸர் & கிளியோபாத்ரா” ஆரம்பத்தில் அவரிருவரும் முதன்முதல் சந்திக்கும் தளத்தையும், நிகழ்ச்சியையும் மாற்றி யிருக்கிறார். மனிதத் தலைச் சிங்கத்தின் [Sphinx] அருகில் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாத போது முதன்முதல் சந்திப்பதாகவும், அப்போது சீஸர் தன்னை யாரென்று சொல்லாமல் நழுவுவதாகவும் காட்டியுள்ளார். மெய்யாக வரலாற்றில் நடந்தது முற்றிலும் வேறானது. மேலும் பெர்னாட்ஷா தன் நாடகத்தில் சீஸரைச் சந்திக்கும் போது, கிளியோபாத்ராவின் வயதை 17 என்று காட்டுகிறார். ஆனால் உண்மையில் அப்போது அவளது வயது 20 அல்லது 21 என்பது தெரிய வருகிறது! மேலும் கிளியோபாத்ராவை வெறும் கவர்ச்சியை மட்டும் பயன்படுத்தித் தானும் காதலில் மயங்கி ஆடவரை வசப்படுத்தும் மங்கை யாகவும், கூரிய மதியில்லாத பெண்ணாகவும், சிறு வயதிலே கெட்ட பழக்கங்களில் ஊறிப் போன மாதாகவும் காட்டுகிறார். ஆனால் மெய்யான கிளியோபாத்ரா மிகவும் கல்வி ஞானம் உள்ளவள்; வனப்பு மிகுந்த வனிதையாக இல்லாவிட்டாலும், அவள் வசீகரம் மிக்கவள். இனிய குரலில் சுவையாகப் பேசிப் பகைவரையும் நண்பராக்கும் வல்லமை கொண்டவள். போர் ஞானம் உள்ளவள். ஏழு மொழிகள் பேசும் திறமை பெற்றவள். நான் எழுதும் நாடகத்தில் கூடியவரை மெய்யாக நிலவி வந்த கிளியோபாத்ரா, ஜூலிய சீஸர், மார்க் அண்டனி, அக்டேவியன் ஆகியோரைத்தான் காட்ட விரும்புகிறேன்.

    image

    ஆண்டனி & கிளியோபாத்ரா

    [தொடரும்]

    +++++++++++++++++++++++++++++

    Based on The Plays:

    1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

    2. William Shakespeare’s Juliua Caesar [Play-2]

    3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

    4. Britannica Concise Encyclopedia [2003]

    5. Encyclopedia Britannica [1978 & 1968]

    +++++++++++++++++

    Share
  • படக்கவிதைப் போட்டி 97-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. விஷ்ணுராம் எடுத்திருக்கும் இந்த வித்தியாசமான புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் நம் நன்றி உரித்தாகுக.

    mirage

    கானல்நீர் போன்ற வாழ்க்கையில் காணும் யாவுமே கனவாய், கதையாய் மாறிப்போகின்றன காலவோட்டத்தில்!

    நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மையை விட்டொழித்தால்தான் வாழ்வின் மெய்ப்பொருள் விளங்கும்.

    பல்வேறு சிந்தனைகளுக்குக் களமமைக்கும் இப்படத்திற்கு நம் கவிஞர்கள் தம் பாக்களில் என்ன விளக்கம் தந்திருக்கிறார்கள் என்று அறிந்துவர ஆவல்!

    ***

    புகைப்படமெடுத்த நண்பரைப் பாராட்டும் கவிஞர் திரு. இப்னு ஹம்துன், ”தலைகீழான இப்படமே என் நேர்ப்படம் என்று நவின்றுவிடாதே!” என்று அவரைப் பகடிசெய்யவும் தவறவில்லை.

    அதில் நாங்கள் தெளிவாக இல்லை
    மேலும்
    முழுவதும் தலைகீழாயிருக்கிறது.
    படம் பிடிக்கும் உன் திறமையைப்
    பெரிதும் விதந்தோதுபவனே நான்
    இன்னும் பல கலைப்படங்கள்
    உன்பெயர் சொல்ல வாழ்த்துவேன்
    என்றாலும் என் நண்ப
    தலைகீழான
    இப்படமே
    என் நேர்ப்படம் என்று
    சொல்லிவிடாதே யாரிடமும்.

    ***

    இயற்கையின் ஊழித் தாண்டவத்தால் பாழான ஊர்கண்டு மக்கள் சிந்திய கண்ணீரே சந்துகளில் வெள்ளமெனத் தேங்கியிருக்கிறது என்று தன் கவிதையில் அவலச்சுவையைப் பொதிந்து தந்திருக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    ஊழித் தாண்டவம்!

    ஆழிப்பேரலை அழித்தது ஓராண்டு !
    வெள்ளம் வந்து அழித்தது ஓராண்டு!
    புயல் வந்து அழித்தது ஓராண்டு!
    உயிர்த்தெழுந்து வந்தோம் ஒன்றினைந்து!
    வந்தாரை வாழ வைப்பது தமிழர் பண்பாடு!
    இயற்கை தந்த இன்னலைக் கூட
    தாங்கிக் கொண்டோம் !
    பொறுமையோடு!
    இடரில் தெரிந்தது எங்களின்
    ஒருமைப்பாடு!
    ஒற்றுமை உணர்வு கலந்தது
    எங்கள் மூச்சோடு !
    இருந்தாலும் தாங்க இயலவில்லை
    இயற்கை படுத்தும் பாடு!
    பட்ட காலிலே படும் என்பது
    போகட்டும் நேற்றோடு !
    ஊழித் தாண்டவம் ஆடிய புயலே !
    உன் செயலின் விளைவைப் பார்!
    நாங்கள் அழுத கண்ணீர்
    தேங்கிக் கிடக்கும் சாலையைப் பார்!
    பூமித் தாயின் வெடித்துச்சிதறிய வேதனை பார்!
    வண்ணக் கனவோடு வாழ்ந்த
    வாழ்க்கை , இன்று கறுமையாய்
    போன துயரைப் பார்!

    ***

    தலைகீழ்ப் பாடங்கள் வாழ்க்கைக்கு உதவாது. தன்னைத் திருத்த முயலாத மனிதன் பிறரைத் திருத்துவதென்பதும் இயலாது என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அசலா…

    நிழல்
    நிஜமாவதில்லை என்றும்..

    தலைகீழ் பாடங்கள்
    தருவதில்லை கல்வித் தரத்தை..

    கானல்நீரைக்
    கண்ட கண்களால்
    கொஞ்சமும் தீராது தாகம்..

    தண்ணிபோட்டுவிட்டு
    தலைகீழாய் நிற்பவனுக்குத்
    தெரியாது உலகம் நேராய்..

    இப்படித்தான்
    இப்போது மனிதன்-
    தன்னிடம் குறையுடன்
    திருத்தப்போகிறானாம் உலகை,
    திருந்துவானா…!

    ***

    இது ஆழிப்பேரலையின் கோரதாண்டவமோ? அல்லது…வாகனங்கள் கக்கிய கரும்புகைப் படலமோ? அல்லது…வயல்வெளிகள் வறண்ட சாலையான மாயமோ? அல்லது கொழுத்த உடலிளைக்க இருவர் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியோ? என்று வெவ்வேறு கோணங்களில் இந்தப் புகைப்படத்தை மாற்றியோசித்துக் கவி புனைந்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    அலைதானென நினைத்தேன்.. ஐயோகொடூரமாகக் தாக்கவந்த..
    ஆழிப்பேரலை மீண்டும்வந்து நம்நெஞ்சையாட்டி வைக்குமே?..

    ஆழியுன் பேரலையால் நீஇட்ட பேரிடரால்..
    பாவியென் நினைவுக்கு புதைந்து மண்ணாகிவிட்ட
    பிணங்களல்லவா ஞாபகம்வருகிறது!..

    மனித வாழ்வு முடியும்வரை இனிமுற்றிலுமாகயுனை
    மறக்க முயற்சி செய்வோம்..நிச்சயமாக நீயில்லையென.

    மாற்றியோசிப்போம்…

    மனமூன்றிப் படத்தைப் பலமுறை பார்க்கும்போது
    மனத்தினுள் ஒளிந்திருக்கும் மாயம்விலக வழியுண்டு!

    உற்றுப்பார்த்தால் சாலைமுழுதும் கரும்புகைபோலவும் தெரிகிறதே!..
    ஊர்ந்து செல்லும் வேகவாகனங்களின் வயிற்றெரிச்சல் புகையாக வெளியேறியதா?..

    இல்லை! இல்லை! அதுவுமில்லை..

    தயிர்போல் நிலத்தை யுழுதுபயிர்செய்த இடம்தானின்று..
    தார்ச்சாலையானதோ!, மழை பொய்த்தவாய்ப்பால்?

    வறண்ட சாலையிலோடும் வற்றியநீரை
    வருத்தமுடன் பார்ப்பதுயார் கார்மேகம்தானே!

    இல்லை! இல்லை!

    இன்னுமொருமுறை மாற்றியோசி..

    நீலத்தண்ணீருக்குள் முகமுற்றுப் பார்க்கையில்..
    நிஜபிம்பம் நிழலாய்த் தெரியுது!

    தலைவணங்கித் தரைவழியே பார்த்தால்தான்…
    தலையிரண்டு கொழுத்தகாலுடன் நடப்பது தெரியும்…

    அதிகஎடை ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல…
    அனுதினமும் மருத்துவர் சொல்லும் அறிவுரையேற்று..

    பெருத்த உடல்மெலிதாக இளைப்பதற்கு..உடல்..
    பெருத்த இருநபர் இறுமாப்பாய் நடப்பதுபோலும் தெரிகிறது!

    ஊளைச்சதையொழிய ஒருமணிநேரம்..தொடர்ந்த
    காலை(ளை)நடை சிறந்ததென உரைக்கிறார்போலும்.

    பலநாள் நடைபயிலுதல் யுடல்நலத்துக் குகந்ததெனத்தெரிந்தும்.
    ஒருநாள் நடைபயின்ற தைமறுநாள் மறக்கும் நபராகயிருக்கலாமோ?..

    கூட்டத்தைக் கண்டால் ஓட்டமெடுக்கும் எண்ணத்தில்..
    கூட்டுப்பயிற்சியில் இருவருக்கும் நம்பிக்கையில்லையோ?.இது

    நடைப்பயிற்சியா? அல்லது பேச்சுப்பயிற்சியா?..விடைகாணஅந்த
    நண்பர்களோடு நடந்தால் தானுண்மை தெரியும்?

    நடைபயில உகந்தநேரம் பசுமையான காலைதானென..
    நயமாகப் பலர் சொல்லிக் கேட்டிருக்கோம்!

    காலையெழும் பொழுதின்முன்னே துயிலெழுந்துநாம்..
    காலாற நடந்தாலே நோயின்றி வாழலாம் வாழ்நாளெலாம்!

    குருதியில் தீயகொழுப்பு திட்டமாகக் கரைய..
    உறுதியுடன் நடக்கவேண்டுமொரு மணிநேரமாவது!

    கால்கை விரித்து வேகமாக நடந்தால்நம்
    இதயமும் விசாலமாக வியங்கும்!

    நலமுடன்வாழ அன்றாடம் நடைபயிலவேணும்!
    உயர்வுடன்வாழ உற்றாரை மதித்து நடத்தல்வேணும்!

    பூங்காவில் நடப்பதிலேயொரு மனமகிழ்ச்சி!
    புல்வெளியில் நடப்பதிலேயொரு சுகம்!

    கால்கொதிக்க கடும்வெயிலில் நடப்பதைவிட..
    உள்ளங்கால் குளிரஈரஇதமான நடையில் தானதிகயின்பம்.

    ***

    சிந்தனைகளைச் சிறகடித்துப் பறக்கவிட்டிருக்கும் கவி வலவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையென நான் தேர்ந்தெடுத்திருப்பது அடுத்து வருகிறது!

    நேரே நிமிர்த்திப் பார்!

    நிழற் படத்தில் தெரிவது
    நெஞ்சை அறுப்பது!
    இருட்டடித்த பாலைவனம்!
    நீரோட்டம் போல்
    கானல் நீர்!
    ஏமாற்றும் தரை வெளிச்சம்!
    தூரத்துக் கரும்புகை
    காளான் முகில்,
    அணுவெடிப்புச் சோதனை
    புரியும்
    அரங்கேற்றம்! அனைத்தும்
    மாயத் தோற்றம்!
    நிழற்படத்தை நேராக்கிப் பார்!
    நிழல் நிஜமாகிறது!
    தெருவில் இருநபர் நடக்கிறார்!
    பெருமழை பெய்து
    நிழல் தெரிகிறது!
    இதுதான் மெய்யான
    நடப்பு.
    தலை கீழாய்ப் பார்த்தால்
    உலகக் கேடுகள்
    கலக்கிடும் உன் நெஞ்சை!
    நிழலாகும்
    நிஜம்!

    நிழலின் மாயத்தோற்றம் நிஜத்தையே பொய்யாக்கிக் காட்டவல்லது. அதனை அப்படியே நம்பாமலிருப்பதே நல்லது. ’கண்ணால் காண்பதும் பொய்’ என்பது ஆன்றோரின் அனுபவ மொழியன்றோ?

    ”நெஞ்சைப் பதைக்கவைக்கும் நிழலுருவை நம்பாதே! அஞ்சச் செய்யும் அது! நிழற்படத்தை நேராக்கு; புத்தியைக் கூராக்கு! உண்மை ஒளி(ர்)விடும்!” என்று நன்மொழி நவின்றிருக்கும் திரு. சி. ஜெயபாரதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    தொடர்ந்து ஆர்வமுடன் படக்கவிதைப் போட்டியில் பங்கேற்றுவரும் கவிஞர்களுக்கும் என் பாராட்டு உரியது!

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (42)

    நிர்மலா ராகவன்

    நிகழ்காலத்தில் வாழ்வது

    நலம்-2

    எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுபவர்கள் முன்னுக்கு வரத் துடிக்கும் நடிகைகளும், அரசியல்வாதிகளும் மட்டுமில்லை. `வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பது நம் கையில்தான் இருக்கிறது’ என்பதைப் புரிந்துகொண்டவர்களும்தான்.

    இவர்களிடம் அப்படி என்ன சிறப்பு என்றால், இவர்கள் கடந்த காலத்தைப் பெரிது பண்ணுவதில்லை.
    நான் கானடா நாட்டிலுள்ள விக்டோரியா தீவிற்குச் சென்று மூன்று வாரங்கள் தங்கியிருந்தபோது, குறிப்பாக விவாகரத்து செய்த பெண்களுடன் கலந்து பேசவேண்டும் என்று கேட்டதற்கு இணங்கி வந்திருந்தார்கள் சிலர்.

    `நீங்கள் உங்கள் அப்பா மடியில் உட்கார மாட்டீர்களா? அவரைக் கட்டி அணைப்பதோ, முத்தமிடுவதோ கிடையாதா?’ என்று என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, `இவளிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்’ என்று நெருங்கிப்போனார்கள்.

    கதை

    “என் குழந்தை உருவான தேதி..,” என்று குறிப்பிட்டுப் பேசினாள் காதரின். முப்பது வயதுக்குள் இருக்கும்.

    “பிறந்த தேதி என்று சொல்லுங்கள்,” என்று திருத்த முயன்றேன்.

    “சரியாகத்தான் சொல்கிறேன். நான் உறங்கும்போது, என் அனுமதி இல்லாமல் என் கணவர் செய்த செயலால் அன்று உருவான குழந்தை!” என்றாள் கசப்புடன். “அவர் செய்தது கற்பழிப்புக்குச் சமானம்! அதனால் விவாகரத்து செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!”

    சிறிது பொறுத்து, “எங்கள் வாழ்க்கையில் சில மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தன,” என்றவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். கடந்துபோன வாழ்க்கையில் ஓரளவு இன்பமும் இருந்தது என்று பலர் ஒத்துக்கொள்வதில்லை.

    இவளைப்போன்ற பெண்கள் கடந்த காலத்திலேயே உழன்று, தம் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் குலைத்துக்கொள்ளாது இருக்கிறார்கள்.

    விவாகரத்து செய்த பல பெண்கள் தாம் விட்டு விலகியவரைப்பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இல்லையேல், தம் துரதிர்ஷ்டத்தை ஓயாது நொந்துகொள்வார்கள். மேரியைப்போல.

    கதை

    மேரி அழகிய, பணக்கார வீட்டுப் பெண். மணமானபின் அமெரிக்காவிலிருந்து வந்தவள். ஐம்பது வயதிலும் மிக இளமையாக இருந்தாள்.

    “நானும் என் கணவரும் ஓயாது சண்டை போடுவோம். எப்படி தெரியுமா? அவர் தொலைகாட்சிப் பெட்டியை தூக்கி எறிவார். நான் மட்டும் என்ன சளைத்தவளா? நானும்..,” என்று சொல்லிக்கொண்டே போனவளை அதிர்ச்சியுடன் பார்த்தேன்.

    விவாகரத்துக்குப்பின் ஆளுக்கொரு மகன் என்று தீர்ப்பாயிற்று. இவளுடைய பொறுப்பில் வந்த மூத்த மகனுக்குக் கல்யாணம் ஆனதும் இவள் பாடு திண்டாட்டமாகப் போயிற்று. மருமகள் இவளைப் படாதபாடு படுத்த, விலகினாள் — ஓர் அட்டைப்பெட்டியில் தன் உடமைகளை அடைத்துக்கொண்டு.

    “என் மகனுக்கு நிறையப் பணம் வருகிறது. ஆனால், எனக்கு இந்தக் கதி!” என்று என்னிடம் புலம்பினாள், என் தோழி இல்லாத சமயத்தில் அவள் வீட்டையும் செல்லப்பிராணிகளையும் பார்த்துக்கொண்ட இந்த house sitter.

    உற்றவர் யாருமே இல்லாத நிலையில் மேரி தன்னைக் கவனித்துக்கொள்ளத் தவறிவிட்டாள் என்று நினைக்கவைத்தது அவளுடைய பரிதாபகரமான தோற்றம்.

    “முதலில் நீ கடைக்குப் போய், உன் தலைமயிரைச் சீர்படுத்திக்கொண்டு வா. பிறகு உன் மகன் வீட்டுக்குப் போ. அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்!” என்றேன்.

    சில நாட்கள் கழித்து, பெரிதாகச் சிரித்தபடி வந்து கூறினாள்: “நான் நாகரிகமாக என்னை மாற்றிக்கொண்டு போனேனா! மருமகள் ஒரேயடியாக உபசாரம் செய்தாள், போங்கள், `என்ன குடிக்கிறீர்கள்? சில நாட்கள் தங்கிவிட்டுப் போங்களேன்,’ என்று!”

    அவளுடைய சிரிப்பில் நானும் கலந்துகொண்டேன். “நான்தான் சொன்னேனே! வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் உலகம் இது!”

    ஒரு மருந்துக்கடையில் ஆள் எடுக்கிறார்கள் என்ற அறிவிப்பைப் பார்த்து, என்ன பேசவேண்டும், எப்படி அவர்களைக் கவர்வது என்று படித்துப் படித்துச் சொல்லிக்கொடுத்தேன். “உன் கஷ்டங்களை எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்காதே!”

    ஓரிரு தினங்களுக்குப்பின், “எனக்கு வேலை கிடைத்துவிட்டது!” என்றாள் மகிழ்ச்சியாக.

    பிறகு, ஒரு பொது இடத்தில் என்னைப் பார்த்துவிட்டு, ஓடிவந்து அணைத்தாள் மேரி. உள்நாட்டவர்கள் ஆச்சரியத்துடன் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தனர். வெள்ளைக்காரிக்கும், புடவை அணிந்த இந்த ஆசியப் பெண்மணிக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்க முடியும் என்று யோசித்திருப்பார்கள்.

    சிலருக்கு, `கடந்த காலத்திலேயே வாழ்ந்து, உன் நிகழ்காலத்தைப் பாழடித்துகொள்ளாதே!’ என்று சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது.

    வேறு சிலருக்கு எவ்வளவு வயதானாலும், நிகழ்காலத்தில் பிரச்னை எதுவும் இல்லையென்றாலும், சில கசப்பான நிகழ்வுகள் மனதில் அலைமோதிக்கொண்டுதான் இருக்கும்.

    `உன்னிடம் மட்டும் என் கதையைச் சொல்கிறேன்,’ என்று ஆரம்பித்திருந்தாள் ஏஞ்சல்.

    கதை

    “என் வாழ்க்கையே ஒரு பொய் என்று தோன்றியது. கணவரோ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். வெளி உலகத்திற்கு நாங்கள் ஆதர்ச தம்பதிகளாகத் தோற்றம் அளித்தோம்,” என்று தன் அந்தரங்கத்தை என்னிடம் கொட்டினாள்.

    “`எதற்காக இப்படி ஒரு அவமதிப்பைத் தாங்கிக்கொள்கிறாய்?’ என்று என் மகளே இடித்துக் கேட்டபின்தான் விவாகரத்துக்கு மனு செய்தேன்”.

    “ஜீவனாம்சம் கிடைத்ததா?” என்று விசாரித்தேன், கரிசனத்துடன்.

    “விருப்பமில்லாமல் கொடுப்பார். அதனால் வேண்டாம் என்றுவிட்டேன்”. இதைத் திரும்பத் திரும்பச் சொன்னாள்.

    ஏஞ்சலும் அவள் கணவரும் ஒரே துறையில் இருந்தவர்கள். அவள் சாதித்ததைத் தான் செய்ததாகச் சொல்லிக்கொள்வாராம். அவளுக்குக் கூடுதலான திறமை. அதுதான் தன்னைவிட மிகக் கீழான நிலைமையிலிருந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டார்போலும்!

    “அறுபத்தோறு வயதிலா விவாகரத்து செய்தாய்?” என்று நான் ஆச்சரியப்பட்டபோது, “வயது ஒரு பொருட்டாகவே படவில்லை. நிம்மதியை இழந்து என்ன வாழ்க்கை!” என்றவள் உலகெங்கும் சுற்றியவள்.

    இன்னொரு பெண்ணைப்பற்றிக் கூறியபோது, “இவளிடம் என்ன குறை கண்டு, இவளை விவாகரத்து செய்தான் இவளுடைய கணவன்? தான் எந்த விதத்திலோ தாழ்மையானவள் என்ற வருத்தம் இவளுக்கு இருக்குமல்லவா?” என்று மெல்லக் கேட்டாள்.

    எதற்குக் கேட்கிறாள் என்று புரிந்துகொள்ளாமல், “இவளுடைய அருமை அவனுக்குப் புரியவில்லை என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும்!” என்றேன் உடனே.

    மேரியின் முகம் மலர்ந்ததைப் பார்த்து, `இவள் தன்னை அந்தப் பெண்ணின் நிலையில் இருத்திக்கொண்டுதான் அப்படிக் கேட்டாளா! என்று ஆச்சரியப்பட்டேன்.

    கதை

    எங்கள் வீட்டில் வேலை செய்த இந்தோனீசிய பணிப்பெண், ஈடா (Ida) உதட்டுப்பூச்சுடன் அழகாக அலங்கரித்துக்கொள்வாள். `கருமமே கண்ணாயினார்’ என்பதைப்போல, சிரித்த முகத்துடன், உழைத்து வேலை செய்வாள். அவளைப் பார்ப்பவர்களுக்கு இன்பமான வாழ்க்கை இவளுக்கு வாய்த்திருக்கிறது என்றுதான் தோன்றும்.

    சாதாரணமாக, அவர்கள் இன ஆண்கள் செய்வதைப்போல, இவளையும் கணவன் விவாகரத்து செய்துவிட்டான் என்றறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

    பிறவி எடுத்ததே திருமணம் செய்துகொள்வதற்குத்தான் என்று வளர்க்கப்படுகிறார்கள் இந்த ஏழைப்பெண்கள். (என் மகளுக்கு பதின்மூன்று வயதானபோது, ஒருத்தி, `ஏன் இன்னும் நீங்கள் மகளுக்குக் கல்யாணம் செய்துவைக்கவில்லை?’ என்று கேட்டாள் என்னிடம்!)

    அதன்பின், விவாகரத்து செய்யப்பட்ட இன்னொரு பெண், டியானா, உலகமே தலையில் இடிந்து விழுந்து விட்டதைப்போல் நடக்க, “ஈடாவைப் பார்த்துக் கற்றுக்கொள்,” என்றேன் கண்டிப்பாக. “நிமிர்ந்து நட. நன்றாக அலங்கரித்துக்கொள். நீ சோர்ந்துபோனால், உன் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்?”

    டியானா விரைவிலேயே தேறினாள். கடுமையான உழைப்பால் உடல் உறுதியாகியது.

    ஒரு பெண் அழகாக இருந்தால், யார் சும்மா விடுவார்கள்?

    வேறோரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கிறோமே என்ற சிந்தனை சிறிதுமின்றி, ஒரு நாள் யாரோ ஒருவனுடன் ஓடிப்போனாள் டியானா!

    அவள் வாழ்நாள் பூராவும் அழுதே கழிக்கவில்லையே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

    தொடரும்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -64

    க. பாலசுப்பிரமணியன்

    மழலையர்களும் கற்றலும்

    education

    மழலையர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பது பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் உலகின் பல நாடுகளில் செய்யப்பட்டுள்ளன. இதைப் பற்றிய ஆராய்ச்சிகளின் ஒட்டுமொத்தமான கருத்து என்னவெனில் –

    1.மழலையர்களின் கற்றல் ஒருமுகமானதாகவோ அல்லது ஒருமுனைப்பட்டதாகவோ இருப்பதில்லை.

    1. மழலையர்களின் கவனயீர்ப்புக்களின் நேரம் மிகக்குறைவு.
    2. மழலையர்களின் அறிவுத்தேடல் அபரிமிதமானது.
    3. சுற்றுச்சூழலின் பல்முனை ஈர்ப்புக்கள் தேடலையும் கற்றலையும் அதிகமாக பாதிக்கின்றது.
    4. வண்ணங்கள், ஒலிகள், ஒளிப்பரிமாணங்கள், அளவுப்பரிமாணங்கள் ஆகியவை கவனத்தையும் தேடலையும் அதிகப்படுத்துவது மட்டுமின்றி ஆர்வப்படுத்துகின்றன.
    5. தேடலிலும், கற்றலிலும் உணர்வுபூர்வமான, செயல்சார்ந்த கற்றல் வகைகள் அதிகம் ஈர்க்கப்படுகின்றன.
    6. மாறும் வெப்பச்சூழ்நிலைகள், பசி, தாகம், தூக்கம், உறவுகளின் தாக்கங்கள் ஆகியவை கற்றலின் நேரத்தையும், தாக்கத்தையும் பாதிக்கின்றன.
    7. பயமான, மனஅழுத்தங்களை உடைய சூழ்நிலைகளில் கற்றல் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமல் போகவோ வாய்ப்புக்கள் அதிகம்.
    8. விளையாட்டான போக்கில் கற்றலின் ஆர்வமும் தாக்கமும் அதிகமாக இருப்பது மட்டுமின்றி, வளர்கின்றது.
    9. கற்றலின் பரிமாணங்கள் சிறிய அளவிலும் கால அவகாசங்களுக்கு இடையிலும் மாறவும் மற்றும் தொடரவும் வாய்ப்புக்கள் உள்ளன.

    இந்த கருத்துக்களை வலுப்படுத்தும் வகையிலும் அதனை முன்னிறுத்தியும் கல்வி முறைகள் வழிவகுக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் பல சிறிய வியாபார நோக்கத்தில் நடத்தப்படும் பள்ளிகளில் மேற்கொண்ட எந்தக்கருத்தும் முன்னிலை படுத்தப்படுவதில்லை. அவை குழந்தைகளின் காப்பகங்களாக மட்டும் இருப்பது மட்டுமின்றி, உடல்- மன நலன்களை பேணும் கல்வியாக இருப்பதில்லை. பல இடங்களில் வேலைகளில் அமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு இதை பற்றிய போதுமான அறிவோ அல்லது இதனைச் சார்ந்த கற்பித்தல் திறனோ இருப்பதில்லை.

    பொதுவாக மழலைகளின் கற்றலில் ஒளி. ஒலி மற்றும் செயல்களின் தாக்கங்கள் அதிகமாக இருப்பதால் – பார்வைகள், கேட்டல் மற்றும் உணர்வு சார்ந்த செயல்களால் கற்றல் அதிகமாக நிகழ்வது மட்டுமின்றி உணர்வு சார்ந்த கற்றலாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

    வண்ணங்கள், பெரியது- சிறியது போன்ற மாற்றத் தோற்றங்கள், நீண்டது – குறுகியது போன்ற அமைப்புக்கள், வளைவுகள், வட்டம்-சதுரம் போன்ற பரிமாண மாற்றங்கள் பார்வைகளால் ஈர்க்கப்பட்டு தேடலை ஊக்குவிக்கின்றது.

    அதேபோல் இசை, அதிர்வுகள், ஒலிகளின் மாறும் போக்குகள், ஒலிப்படுத்தும் பொருள்கள், இசைக்கருவிகள், பேசும் முறைகள் ஆகியவை கற்றலை வளர்ப்பதுமட்டுமின்றி அதன் பரிமாணங்களை பாதிக்கின்றன.

    அதேபோல் விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டு முறைகள், ஆட்டங்கள், உடலின் செயல் சார்ந்த ஈடுப்பாடுகள் ஆகியவை கற்றலை பாதிக்கின்றன.

    ஒரு தவழும் குழந்தை விளையாடும் போக்கை சற்றே உன்னிப்பாகவும கவனமாகவும் பார்த்தால் முதலில் குழந்தை அருகிலுள்ள ஒரு விளையாட்டு பொருளைத்  தேடும் பொழுது வண்ணங்கள் மிக்க பொருளைத் தேடுவதோ அல்லது, பெரிய பொருட்களால் ஈர்க்கப்படுவதோ சாதாரண நிகழ்வு. அந்தப்பொருளை நோக்கி நகரும் அந்தக் குழந்தை அடுத்து அதனை நகர்த்தியோ அல்லது அசைத்தோ வரும் ஒலிகளில் கவனம் செலுத்துகின்றது. சிறிது நேரத்தில் அந்தப்பொருளை வாயினில் வைத்து விளையாடுகின்றது. இத்தனை போக்குகளும் அதன் மூளையினாலும் உள்மனதினாலும் உந்தப்பட்டு நடக்கும் செயல்களே.

    ஆகவேதான்,மழலையர் பள்ளிகளில் இந்த மூன்றையும் இணைப்படுத்தியோ தேவைக்கும் நேரத்திற்கும் உகந்தாற்போல் முன்னிலைப்படுத்தியோ கற்றல்களுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தல் அவசியமாகின்றது.

    கற்றலின் முக்கியமான அம்சம் – புரிதல். கற்றுக்கொள்கின்ற மாணவனுக்கு சொல்லப்படுகின்ற, பார்க்கப்படுகின்ற அல்லது செயல்படுத்தப்படுகின்ற கற்றலின் பொருள் புரியாதவரை கற்றல் நிறைவுபடுவதில்லை. இது சிறப்பாவதற்கு மொழி மிகத்தேவையானது. இதனால்தான் கற்றலின் முதல் தேடல்கள் தாய்மொழியில் மட்டும் இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. பொதுவாக, ஆராய்ச்சியின்படி மனித மூளையின் வளர்ச்சியின் முதல் சில ஆண்டுகளில் மூன்று அல்லது நான்கு மொழிகள் கற்றுக்கொள்வதற்கான வாப்புக்கள் அதிகம் இருந்தாலும், தாய்மொழியில் கற்றல் ஏற்படும்பொழுது அதன் தரமும் வலுவும் சிறப்பாக உள்ளதாக ஆரய்ச்சிகள் கூறுகின்றன. மற்றும் கற்றலின் பொது மூளையுடன் உடலின் பல உறுப்புக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்த ஒருங்கிணைப்பின் தாக்கத்தினால் கற்றலின் பரிமாணங்களும், திசைகளும் வழிகளும் அவ்வப்போது மாறுபடுகின்றன. பொதுவாக மழலைப் பருவத்தில் இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பை கீழ்கண்டவாறு வகைப்படுத்துவர்:

    1. கண் – மனம் ஒருங்கிணைப்பு (eye-mind coordination)
    2. செவி- மனம் ஒருங்கிணைப்பு (Ear-mind coordination)
    3. செயல்(கை) -மனம் ஒருங்கிணைப்பு (Hand- mind coordination)
    4. கண்-செவி ஒருங்கிணைப்பு’ (Eye-Ear coordination)
    5. கண் -செயல் (கை) ஒருங்கிணைப்பு (Eye-hand coordination)
    6. செவி-செயல் ஒருங்கிணைப்பு (Ear-hand coordination)
    7. கண்-கண் ஒருங்கிணைப்பு (Eye-Eye coordination)

    இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த கற்றலினால் வாழ்க்கைமுறையில் செயல்களும் திறன்களும் ஒருங்கிணைந்ததாகவும், திறன்படைத்ததாகவும் நேர-கால பரிமாணங்களை மேன்மைப்படுத்துவதாகவும் அமைகின்றன..

    (தொடரும் )

    Share
  • குறளின் கதிர்களாய்…(154)

    செண்பக ஜெகதீசன்

    அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
     பிற்பயக்கும் நற்பா லவை. (திருக்குறள் -659:வினைத் தூய்மை) 

    புதுக் கவிதையில்

    அடுத்தவரை ஒருவன்
    அழவைத்து
    சேர்த்த செல்வமெல்லாம்,
    அழிந்திடும்
    அவனை அழவிட்டே… 

    நற்செயலால் பெற்ற
    பொருளை இழப்பினும்,
    பின்னர்
    நற்பயனே கிட்டும்…! 

    குறும்பாவில்

    பிறரைத் துன்புறுத்தி பெற்றசெல்வம்
    போய்விடும் அவனை அழவிட்டு,
    இழப்பிலும் நல்வழிச்செல்வம் நன்மையே தரும்…! 

    மரபுக் கவிதையில்

    பிறரை ஒருவன் அழவைத்துப்
      பொருளைச் சேர்த்தால் போகுமது
    துறந்தே யவனை அழவிட்டே
      துயரில் அவனை விழவிட்டே,
    சிறந்த வழியில் வந்தபொருள்
      சென்றா லதுவும் இழப்பில்லை,
    அறத்தால் வந்திடும் நற்பயனை
      அதுவே கொண்டு சேர்த்திடுமே…! 

    லிமரைக்கூ…

    பிறரழச் செல்வமதைச் சேர்க்காதே,
    போய்விடுமுனை அழவிட்டே, நல்வழிச் செல்வந்தரும்
    நற்பலனே, போனதெனப் பார்க்காதே…! 

    கிராமிய பாணியில்

    சேக்காத சேக்காத
    செல்வத்தத்தான் சேக்காத,
    அடுத்தவன அழவுட்டு
    ஆசப்பட்டு சேக்காத… 

    அது ஒன்ன அழவுட்டு
    அத்தினயும் போயிடுமே
    அழிஞ்சிதான் போயிடுமே…
    நல்லவழியில சேத்தபணம்
    நம்மவுட்டுப் போனாலும்
    நட்டமில்ல நட்டமில்ல
    நல்லபலனக் கொண்டுவரும்… 

    அதால,
    சேக்காத சேக்காத
    செல்வத்தத்தான் சேக்காத,
    அடுத்தவன அழவுட்டு
    ஆசப்பட்டு சேக்காத…!

     

     

     

    Share
  • சிலப்பதிகாரத்தில் சமூக அவலம்

    -முனைவர் சு.இரமேஷ்

    அறிமுகம்

    பன்முகத்தன்மை கொண்ட நவீனத்துவத்துடன் விளங்கும் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். பல்வேறுபட்ட குடிமாந்தர்களின் வாழ்க்கை முறைமைகளைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாது பண்பாட்டுக்கூறுகளின் வடிவங்களையும் தன்னகத்தே பொதித்துள்ள கருவூலமாகத் திகழ்கிறது. அத்தகைய காப்பியத்தை எழுதிய இளங்கோ அரச மரபில் வந்தவர் என்பதோடு துறவு மேற்கொண்டவர் என்பதால் குறிப்பிடத்தக்க அம்சத்தை இக்காப்பியம் பெற்றிருக்கிறது. அன்றைய நிலையிலான அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் நிலையிலிருந்து உணர்த்தி நீதி, அறம், ஊழ்வினை, துறவு போன்றவற்றை போதிக்கின்ற அதேநேரத்தில்  சமூக அநீதி, கொடுமைகளும் நிகழ்ந்தேறியிருப்பது பதிவாகியிருப்பதை  இக்கட்டுரை ஆராய்கிறது. 

    பொன்தொழிலாளர்கள் படுகொலை

    கோவலன் கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து பாண்டிய நாட்டில் மழை வளம்குன்றி பூமி வறண்டு பஞ்சம் பசி தலைதூக்கியது. வெக்கை நோய்களும் பரவின. இவற்றைக் கண்ட கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் பாண்டிய மன்னனானதும் நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபம்தான் எனக்கருதி ஆயிரம் பொற்கொல்லர்களை பலியிட்டுப் பூசை செய்தான். அதன்பிறகு நல்லமழை பெய்து நோய்களும் நீங்கின. மக்கள் நலம் பெற்றனர் என்பதை, இளங்கோ,

    ”அன்று தொட்டு பாண்டிய நாடு மழைவறம்
    கூர்ந்து வறுமை எய்தி, வெப்பு நோயும்|குருவும் தொடர, கொற்கையில் இருந்த
    வெற்றி வேற் செழியன், நங்கைக்கு
    பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று,
    நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும்
    நீங்கியது”             (உரைபெறு கட்டுரை)

    என்று குறிப்பிடுகின்றார். எவ்வித விசாரணையும் இல்லாமல் கோவலன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து பாண்டிய நாடு வளம் பெறாமைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபமேயாகும் என்று இதற்குப் பரிகாரமாக பொன்வேலை செய்யும் ஆயிரம் தொழிலாளர்களை (பொற்கொல்லர்களை) பலி என்ற பெயரில் படுகொலை செய்தது இதயத்தை உலுக்குகின்ற கொடுமையாக இருக்கிறது. ஒரு மன்னனுக்கு இருக்கக்கூடாத பெரும் மூடநம்பிக்கையுடன் தான் தோன்றித்தனமாக செயல்படும் ஹிட்லரிசத்தின் முன்மாதிரியாகவும் பார்க்கமுடிகிறது. இத்தகைய கொடுமை இவனோடு முடியாமல் பரவலாக்கல் என்னும் நோக்கத்தில் கொங்குநாட்டின் இளவரசர் இளங்கோசர் என்பானும் இலங்கைத் தீவின் கயவாகு மன்னனும் பலியிட்டு பூசைகள் செய்திருக்கின்றனர் என்பதை உரைபெறு கட்டுரையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. நீதிகேட்டுப் போராடிய கண்ணகி, தெய்வமாகிப் உயிர்பலி கேட்பதாகக் கருதி  பலியிட்டிருப்பது வேத ஆகம விதிப்படி பார்ப்பனிய முறையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது திண்ணமாகிறது. மனித பலியிடுதலை ‘நரபலி’ என்பர். இவ்வழக்கமானது தொன்மைக்காலத்திலிருந்தே வருகிறது. பலியிடுதல் பற்றிய சடங்கு முறையை யசூர் வேதத்தில் (பலிச்சடங்கு வேதம்) கூறப்படுகிறது. “யசூர் வேதத்தில் புனித அதிகாரத்தின் (பிராமணர்கள்) ஆயுதம் பலிகள் ஆகும்” என்பதை எடுத்துரைக்கிறார் எஸ்.ஜி.சர்தேசாய் (2012:184).   “கடவுளின் அருளைப்பெருவதுதான் சடங்குகளின் நோக்கம்” என்பதை எடுத்துரைக்கிறார் வி.புரோதோவ் (1988:60). பலி அக்னியில் பிறந்தது தெய்வ சோதியில் ஒன்றான அக்னி பலியிடுகிறவனின் பாவத்தை பட்சித்துப் போகும் அக்னியின் புண்ணியத்தால் பரலோகத்தில் சுடராவான்” என்று சதபத பிராமணம் குறிப்பிடுவதாக எடுத்துரைக்கிறார் தே.ஞானசேகரன்(2000:93). ஆகவே பலியிடுதல் தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாகக் கருதமுடியாது. 

    மாதவிக்குக் கோவலன் இழைத்த கொடுமை

    மாதவி, முறைப்படியான ஆடல்கலையை நிகழ்த்தியமைக்குச் சோழ மன்னன் பச்சை மாலையையும் தலைக்கோல் பட்டமும் அதனோடு ஆயிரத்தெட்டு பொன் கழஞ்சுமாலையும் பரிசாகத் தந்தான். அம்மாலையை விலைகொடுத்து வாங்குபவர் மாதவிக்கு ஏற்ற கணவனாகலாம் என நகரின் இளைஞர்கள் கூடுமிடத்தில் ஒரு கூனிப்பெண் கூறியதைக்கேட்ட கோவலன் அதற்குண்டான விலையைக் கொடுத்து கூனியின் பின்னால் மாதவியுடன் சென்றுவிட்டான் என்பதை, 

    மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
    கோவலன் வாங்கிக் கூனி தன்னோடு
    மணமனை புக்கு மாதவி தன்னோடு   (அரங்கேற்று காதை 170-172) 

    என்று இளங்கோ குறிப்பிடுகிறார். ஆயிரத்தெட்டு பொன்கழஞ்சு மாலையை விலை கொடுத்து வாங்கும் பணபலமும் மனவலிமையும் பெற்றிருந்த கோவலன், அன்பு மிக்க குற்றமற்ற கண்ணகியை மணந்து சிலகாலம் மட்டுமே ஆகியிருந்தது. சந்தையில் ஒருபொருளை ஏலம் எடுப்பதுபோல் ஏதுமறியாத ஆடல் நங்கையாகிய மாதவியை போகப்பொருளாக எண்ணித் தேவைக்கேற்பப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்துவிடலாம் என்ற யதேச்சதிகார எண்ணத்திலேயே கோவலன் மாதவியை விலை கொடுத்து வாங்கியிருக்கலாமென்று கருதமுடிகிறது. மேலும், மாதவி கணிகையர் குலம் என்பதை அறிந்து கோவலன் விலைமாதர் நோக்கில் இதை செய்திருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

    மாதவி ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தப் பிறகு தாயையும் பிள்ளையையும் பரிதவிக்க விட்டுவிட்டு கண்ணகியிடம், “வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு உறவாடி நற்குடியில் பிறந்த பெரியோர்கள் உருவாக்கி வைத்த செல்வத்தைத் தொலைத்து விட்டு நிற்கிறேன்” என்பதை

    சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி
    குலம் தருவான் பொருள் குன்றம் தொலைந்த
    இலம்பாடு நாணுத் தரும் எனக்கு என்ன…  (கனாத்திறம் உரைத்த காதை- 69-71)

    என்று கோவலன் கூறுகிறான். இது தன் தவற்றை, தனது ஒழுக்கமின்மையை,  தன்னால் உண்டான குடும்பச்சிதைவை, மாதவியை விலைகொடுத்தேனும் வாங்கி நுகர்ந்து மீண்டும் கண்ணகியிடம் வந்துவிடலாம் என்ற இழிவான போக்கை மறைப்பதற்கான முயற்சியில் கண்ணகியைச் சாந்தப்படுத்திட ‘வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு’ என்று மாதவியைப் பழித்துரைக்கும் அவனின் கூற்று  மாதவிக்கு இழைத்த அநீதியைக்காட்டுகிறது.

    பிறன்மனை நோக்குகின்றவனைக் கொல்லும் சதுக்கப்பூதம் தன்மனைக்கு துரோகம் இழைக்கும் நயவஞ்சகரைத் தண்டிக்காமல் விட்டிருப்பது அரசர், அந்தணர், அடுத்து வணிகரையும் பூதம் தண்டிக்காமல் இருந்திருப்பதை இது காட்டுகிறது. மாதவியை தவறானவள் என்று கூறிய கோவலனின் நாக்கு மாதவியின் கடிதத்தைக் கோசிகமாணியிடம் வாங்கிப் படித்த பின்பு,

    தன்தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி
    என்தீது என்றே எய்தியது உணர்ந்து ஆங்கு (புறஞ்சேரியிருத்த காதை 94-95)

    என்ற பாடல் வரிகள் மூலம் ‘மாதவி குற்றமற்றவள் எல்லாம் என் தவறே’ என்று கோவலன் மனம் பிறழ்ந்து பேசியது மாதவிக்கு இழைத்த கொடுமை மட்டுமல்லாமல் இழந்த செல்வத்தைக் கண்ணகியின் வாயிலாகப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் தன்வழிக்கு நடத்த முற்பட்டிருக்கிறான் என்பது தெளிவாகிறது. 

    ஊழ் எனும் பெயரில் கொடுமை    

    கண்ணகியின் கதை முழுதும் சாத்தனார் கூறக் கேட்ட இளங்கோவடிகள், ஊழ்வினையை முன்வைத்தே எழுதப்படுவதை,

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்
    உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
    ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதுஉம்
    சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
    சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
    நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் (பதிகம் 55-60)  

    எனக் குறிப்பிடுகிறார். சாத்தனார் கூறிய கதையை வைத்துக்கொண்டு மனித எதார்த்த அல்லது திட்டமிட்டு நடத்திய தவறுகளுக்கெல்லாம் ஊழ்தான் என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறார். புகார் நகரத்தின் வணிகனான கோவலன் கண்ணகியைப் பிரிந்து நாட்டிய நங்கை மாதவியுடன் சில காலம் வாழ்ந்து துன்பப்பட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்று கொலையுண்டதும் அதனால் கண்ணகி மதுரையை அழித்தது மட்டுமல்லாமல் பாண்டிய மன்னனும் கோப்பெருந்தேவியும் உயிர்நீத்தனர். இவை அனைத்திற்கும் அவரவர் செய்த ‘ஊழ்வினையைக்’ காரணம் காட்டுகிறார். 

    கனாத்திறம் உரைத்த காதையில், தேவந்தி தன் கணவன் பாசண்டச்சாத்தனால்  கைவிடப்பட்ட நிலையில் கணவனிடம் மீண்டும்  சேர்வதற்குக் கோயில் கோயிலாக வேண்டி அலைகிறாள். அந்த வேளையில் கண்ணகியைச் சந்தித்து “நீ உன் கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டவள் அல்ல, பின் ஏன் பிரிய நேரிட்டது என்றால், முற்பிறப்பில் உன் கணவனுக்காக செய்ய வேண்டிய நோன்பினை செய்யத் தவறிவிட்டாய். அது நீங்கிடவேண்டுமானால் பூம்புகார் நகரிலே இருக்கும் சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கையில் மூழ்கிப் பின்பு மன்மதக்கடவுளை வணங்கினால் இம்மையிலும் மறுமையிலும் உன் கணவனைப் பிரியாமல் வாழலாம்” என்று கூறினாள் என்பதைக் கூறுகிறார். முற்பிறப்பில் கண்ணகி நோன்பு மேற்கொள்ளவில்லை என்பதால் இப்பிறவியில் கணவனைப் பிரிய நேர்ந்தது என்னும் கருத்தானது நோன்பு என்னும் பெயரில் குடும்பம், வீடு என்ற நிலையில் பெண்களை மரபு மீறாமல் புற உலகைப்பற்றி அறியச்செய்யாமல் அடக்குமுறை ஏவப்பட்டிருக்கிறது என்பது புலனாகிறது. 

    மதிமயக்கத்தில் கோப்பெருந்தேவியின் பின்னால் ஓடிய மன்னன் பொற்கொல்லனின் பொய்க்குற்றத்தை ஆராயாமல் போகிற போக்கில்  ‘கொன்று வருக’ என்று கூறியது முன்செய்த தீவினை பயன்முற்றி மூளப்போகிற நேரம் வந்தது என்பதை, 

    வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
    சினை அலர் வேம்பன் தேரான் ஆகி
    ஊர் காப்பாளரைக் கூவி ஈங்குஎன
    தாழ் பூங்கோதை தன்கால் சிலம்பு
    கன்றிய கள்வன் கையது ஆகின்
    கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்குஎன (கொலைக்களக் காதை 148-151)

    இளங்கோ கூறுகிறார்.

    கோவலன் வெட்டுண்டு கிடக்கும் பொழுது அநாதையாகிய கண்ணகி அழுது புரண்டு இத்தகைய பெரும் துன்பத்தை உண்டாக்கிய அரசன் இவ்வாறு செய்திட காரணம் தெரியாமல் தவிக்கும் எனக்கு நான் செய்த தீவினைதான் என்ன? என்பதை யாராவது சொல்ல மாட்டார்களா? என்று அழுது புலம்புவதை,

    மன்னுறு துயர்செய்த மறவினை அறியாதேற்கு
    என்னுறு வினைகாண் ஆ! இதுஎன உரையாரோ
    பார்மிகு பழிதூற்ற பாண்டியன் தவறிழைப்ப
    ஈர்வது ஓர்வினை காண் ஆ! இதுயென உரையாரோ
    கண்பொழி புனல்சோரும் கடுவினை உடையேன்முன் (ஊர்சூழ்வரி 41-47)

    எனக் குறிப்பிடுகிறார்.

    கட்டுரைக்காதையில் (155-170) கண்ணகி முன்பாக தோன்றிய மதுராபதித் தெய்வம் பாண்டியனும் கோவலனும் தவறு செய்யாதவர்கள். ஆனாலும், முன்செய்த தீவினை காரணமாக பழி ஒன்று உண்டு கேள் என்று கூறலானது. “சங்கமன் என்னும் வணிகன் சிங்கபுரத்துக் கடை வீதியில் தான் கொண்டு வந்திருந்த அணிமணிகளை விற்றுக்கொண்டிருந்த போது அப்பிறப்பில் பரதன் என்னும் பெயருடன் இருந்த உன் கணவன் கோவலன் அவனை அரசனிடம் கொண்டு சென்று இவன் பகை நாட்டு ஒற்றன் எனக் கூறி கொலை செய்தான். கணவனை கொன்ற செய்தியைக் கேள்வியுற்ற நீலி பதறித்துடித்து வீதியில் அழுதுபுரண்டு இது அரச நீதியோ எனக்கேட்டு வேதனையுடன் ஒரு மலை மீது ஏறி நின்று உயிர் துறக்கும்முன் எனக்கு இத்தகைய நிலைமையைச் செய்தவர்கள் யாரானாலும் நான் அடைந்த இத்துன்பத்தை அடைந்து மடிவார்கள்” எனக்கூறி உயிரை மாய்த்துக்கொண்டாள். இதுவரைப் பட்ட துன்பத்திற்கெல்லாம் காரணம் இதுவே. நான் சொல்ல வந்த உண்மைப்பொருளும் இதுவே  என்று கூறியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

    இவ்வாறு நடப்பதற்கெல்லாம் காரணம் கோவலன் மற்றும் பாண்டியமன்னன்  செய்த தீவினைதான் எனக்கூறும் இளங்கோ, பாண்டிமா தேவியின் இறப்பு, கோவலனின் தந்தை, கண்ணகியின் தந்தை ஆகிய இருவரும் துறவு கொண்டது, கோவலன் தாயும் கண்ணகியின் தாயும் இறந்து போனது, மாதரி தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டது, வழித்துணையாக வந்த கவுந்தியடிகள் நோன்பிருந்து இறந்தது, மாதவியும் மணிமேகலையும் துறவு கொண்டது, கோயிலில் ஆயிரம் பொற்கொல்லத் தொழிலாளிகள்  பலியானது இவைகளுக்கெல்லாம் என்ன முன்வினை காரணமாக இருக்கிறது என்று கூறவில்லை என்பது நோக்கத்தக்கது. 

    திருட்டு வழக்கில் மன்னன் இழைத்த அநீதி 

    நாடக நங்கையர் ஆடிய ஆட்டத்திலும் பாடிய பாட்டினிலும் தன்னை மறந்து லயித்திருந்த பாண்டிய மன்னனைக் கண்ட கோப்பெருந்தேவி காணப்பொறுக்காதவளாகி மன்னனுடன் ஊடல் கொண்டு அதை வெளிக்காட்டாமல் தனக்குத் தலைவலி வந்ததென்று பொய் சொல்லி அரங்கை விட்டு வெளியேறி அந்தப்புரம் நோக்கி சென்றாள். இதையறிந்த மன்னனும் சமாதானம் செய்ய அந்தப்புரம் நோக்கி விரைந்தான். அந்த நேரத்தில் மன்னரின் காலைப்பிடித்து வணங்கி அரசியின் காற்சிலம்பைத் திருடிய கள்வன் என்னுடைய வீட்டருகில் இருக்கிறான் என்று பொற்கொல்லன் கூறியதைக்கேட்ட மன்னன்,

    தாழ் பூங்கோதை தன்கால் சிலம்பு
    கன்றிய கள்வன் கையது ஆகின்
    கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு (கொலைக்களக் காதை 151-153) 

    ‘கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவா’ என்று உத்தரவிட்டான். ஆனால், இவ்வாறு கூறும் பொற்கொல்லனின் பேச்சைக்கேட்ட மன்னன் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராயாமலும்  குற்றவாளியிடம் விசாரணை நடத்தாமலும்  கொலை செய்ய ஆணையிட்டது அரசனென்ற முறையில் நீதி தவறியிருப்பதைக் காட்டுகிறது. திருவள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில்,

    ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்.541)

    என்றவழி, தன் குடிமக்கள் ஏதேனும் குற்றம் இழைத்தால் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து ஒரு பக்கம் சாராது நடுவுநிலைமையுடன் உரிய தண்டனை வழங்குவதே முறையாகும் என்று கூறுகிறார்.

    கட்டுரைக்காதையில் கணவனை இழந்த நிலையில் கோபமும் ஆவேசமும் கொண்டிருந்த கண்ணகியின் முன்பாக மதுராபதித் தெய்வம் தோன்றி பாண்டிய மன்னன் குற்றமற்றவன் என்பதற்குச் சான்றாக ஒரு கதை கூறியது. “வார்த்திகன் மகன் தட்சிணாமூர்த்தி என்னும் அந்தணச்சிறுவன் பராசரனிடம் அணிமணிகளைப் பரிசாகப் பெற்று வருகிறான். அணிமணிகளோடு அவன் இருப்பதைக் கண்ட காவலர்கள், பாண்டிய மன்னனின் ஆபரணங்களை வார்த்திகன் திருடிவிட்டதாகக்கூறி அவனைக் கொடுஞ்சிறையில் அடைத்தனர். இதைக்கேள்வியுற்ற அவனது மனைவி கார்த்திகை அழுதுபுரண்டு வீதியில் புலம்பி அழுதாள். இந்தக்கொடுமையை தாங்காமல் துர்க்கை, ஐயைக்கோயில்களின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. இதைக்கேள்வியுற்ற பாண்டிய மன்னன் தீர விசாரித்ததில் வார்த்திகன் மீது தவறு இல்லாததை உணர்ந்து, 

    நீர்த்தன்று இது என நெடுமொழி கூறி
    அறியா மாக்களின் முறை நிலைத் திரிந்தவென்
    இறைமுறை பிழைத்தது  பொறுத்தல் நும்கடன் என  (115-117) 

    என்று கூறினான். ஆராயும் அறிவற்ற காவல் மக்களால் என்னுடைய அரச நீதி கெட்டுவிட்டது. என் தவறு பொறுத்தருள வேண்டும் தாயே! என்று கூறி நீர்வளம் மிக்க திருத்தங்கால் என்னும் ஊரையும் செல்வம் கொழிக்கும் வயலூரையும் பரிசாகத் தந்ததோடு வேந்தனானவன் நிலத்தில் விழுந்து வணங்குதல் என்ற மரபு இல்லை என்றாலும் வார்த்திகன் முன்பாக வீழ்ந்து வணங்கினான் என்ற கதையை கண்ணகியிடம் சொன்னது. ஆனாலும், திருட்டு வழக்கில் கோவலனுக்கு அநீதியும் வார்த்திகனுக்கு சன்மானமும் கொடுக்கப்பட்டிருப்பது அரச அநீதியாகும். கோவலன் வணிகன் என்பதாலும் வார்த்திகன் அந்தணன் என்பதாலும் அரச நீதி மாறுபடுவதைச் சிலம்பில் காணமுடிகிறது. 

    பூதங்கள் இழைத்த அநீதி 

    இந்திரவிழவூரெடுத்த காதையில் பூம்புகார் நகரின் சிறப்பைப்பற்றிக் குறிப்பிடுகையில் பொதுமக்கள் தவறு செய்கின்றபோது குறிப்பாகத் தவநெறியிலிருந்து தவறு செய்கின்றவர்களையும் மறைவாகத் தவறுசெய்கின்ற இழிந்த குணமுடைய பெண்களும் மன்னருக்கு துரோகம் இழைக்கும் அமைச்சர்களும் பொய்சாட்சி சொல்பவர்களும் புறங்கூறுபவர்களும், பிறன்மனை நோக்குபவர்களும் என் பாசக்கயிறுக்கு பலியாவார்கள் என்று நான்கு காத தூரம் கேட்கும்படி கொடிய குரலெழுப்பி கூவும். தவறு செய்பவர்களை அடித்துக்கொன்று தின்னும் சதுக்கப்பூதம் பூம்புகார் நகரில் இருந்தது. ஆனால், அரசன் செங்கோல் தவறினாலும் வழக்குரை மன்றத்தில் தீர்ப்புரைக்கும் நீதிபதி நடுவுநிலை மாறி ஒருபக்கமாக தீர்ப்புக்கூறினாலும் ஆங்கே தவறு நடந்ததை வாய்பேசாமல் அழுது வடிக்கும், கண்ணீர்க்குறிப்பால் உணர்த்தும் பாவைபூதம் மன்றமும் இருந்தது. பொதுமக்கள் தவறு இழைத்தால் சதுக்கப்பூதம் கொன்று தின்னும். ஆனால், மன்னனோ நீதிபதிகளோ தவறு செய்தால் பாவை பூதம் எதிர்த்துப்பேசாமல் தண்டிக்காமல் அழுதுபுலம்புவது என்பது பொதுமக்களுக்கு ஒரு நீதியும், அரசர், அந்தணர் போன்றோருக்கு மற்றொரு நீதியும் பூதங்களின் வடிவில்  வழங்கப்பட்டிருப்பது சிலம்பில் பதிவாகியிருக்கிறது. 

    முடிவு 

    *     பொய் சொன்ன குற்றத்திற்கு பொற்கொல்லர்களுக்கு மரண தண்டனை ஆனால் கொலை நிகழ்த்திய காவலர்கள் தண்டிக்கப்படவில்லை ஏனெனில் அதிகார  வர்க்கத்தின் சமூக விரோதப்போக்கை நிறைவேற்றித் தருவதால் காலங்காலமாக இன்றளவும் காக்கப்பட்டு வருகிறார்கள்.

    *     பூதமாகினும் சட்டமாகினும் அரசனையும் அந்தணனையும் தண்டிக்க வலிமை கிடையாது. இவர்களுக்கு உட்பட்டே இயங்கும் என்பது புலனாகிறது. இன்றளவும் இம்முறை நீடிக்கிறது.

    *     மாதவியைப் போகப்பொருளாகவும் கண்ணகியை வணிக நோக்குடனும் நடத்திய கோவலன் இருவருக்கும் அநீதி இழைத்திருப்பது  நடைமுறை மனித வாழ்வுக்கு உகந்ததில்லை.

    *     மனிதனின் தவற்றுக்கெல்லாம் முற்பிறவி, தீவினை, ஊழ்வினை என்று காரணம் கற்பிப்பது,  குறிப்பாக அரசர், அந்தணர், வணிகர் தவற்றை மறைப்பதற்கான ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.

    *     அரசருக்கும் வணிகருக்கும் நடக்கும் வர்க்க முரண்பாடாகச் சங்கமன் கொலையும், கோவலன் கொலையும் அமைந்திருக்கிறது.

    *     கோவலன் ஆடல் கலையிலும் ஆடலழகியிடமும் லயித்துப்போனதால் பொருளோடு வாழ்வையும் உயிரையும் இழந்தான். கண்ணகியைப் பரிதவிக்கவும் விட்டான். பாண்டிய மன்னனும் ஆடல் கலையிலும் ஆடலழகியிடமும்  லயித்து போனதால்தான் பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் இழக்க நேரிட்டது. இது மன்னர்களுக்கும் வணிகர்களுக்கும் பொறுப்பில் இருக்கும் எவரும் நெறிதவறி நடந்தால் நாட்டில் குற்றங்கள் மட்டுமே நடக்கும். இவர்களுக்கு ஏற்படும் இச்சையை அதிகாரத் தவறென்று சொல்லலாமேயொழிய ஊழ் என்று கருதமுடியாது.

    *** 

    பார்வை நூல்கள்:

    1.ஞா.மாணிக்கவாசகன் (உ.ஆ), சிலப்பதிகாரம் தெளிவுரை, உமா  பதிப்பகம்1995.

    2.ந.மு.வேங்கடசாமி நாட்டார்(உ.ஆ.) கழகவெளியீடு,1942.

    3.க.ப.அறவாணன் (உ.ஆ.), திருக்குறள் தெளிவும் உரையும்,  தமிழ்க்கோட்டம்,2007.

    4.வி.புரோத்தோவ், இக்கால இந்திய மெய்ப்பொருளியல், நியூசெஞ்சுரி புக்  ஹவுஸ்,1998.

    5.எஸ்.ஜி.சர்தேசாய், பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும்,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,2012.

    6.தே.ஞானசேகரன், மந்திரம் சடங்குகள் சமயம்,பார்த்திபன் பதிப்பகம்,2000.

    7.வெ.பெருமாள்சாமி, சிலப்பதிகாரம் மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட  உண்மையும்,பாரதி புத்தகாலயம், 2008.

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    161130 -Navneet Krishna - KFT -watermark -acrylic/oil on canvas -lores

    ”நவனீதக் காரர், நதியமுனா தீரர்,
    அவனியதன் பாரம் அகற்ற , -கவனமாய்
    வெண்ணை கடைந்தான் விஜயர்க்கு கீதைஅக்
    கண்ணனை நெஞ்சே கருது’’….

    கலிமுடிவில் ஓரடியை ஆலிலையில் உண்டாய்
    பலிமுடியில் வேறடியை வைத்தாய் -தெளிவடைய
    நூற்றிடுவேன் வெண்பா நவனீதா ஏற்றிடுவீர்
    ஈற்றடி யாக இருந்து….கிரேசி மோகன்….!

    Share