குறளின் கதிர்களாய்…(154)
–செண்பக ஜெகதீசன்
அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (திருக்குறள் -659:வினைத் தூய்மை)
புதுக் கவிதையில்…
அடுத்தவரை ஒருவன்
அழவைத்து
சேர்த்த செல்வமெல்லாம்,
அழிந்திடும்
அவனை அழவிட்டே…
நற்செயலால் பெற்ற
பொருளை இழப்பினும்,
பின்னர்
நற்பயனே கிட்டும்…!
குறும்பாவில்…
பிறரைத் துன்புறுத்தி பெற்றசெல்வம்
போய்விடும் அவனை அழவிட்டு,
இழப்பிலும் நல்வழிச்செல்வம் நன்மையே தரும்…!
மரபுக் கவிதையில்…
பிறரை ஒருவன் அழவைத்துப்
பொருளைச் சேர்த்தால் போகுமது
துறந்தே யவனை அழவிட்டே
துயரில் அவனை விழவிட்டே,
சிறந்த வழியில் வந்தபொருள்
சென்றா லதுவும் இழப்பில்லை,
அறத்தால் வந்திடும் நற்பயனை
அதுவே கொண்டு சேர்த்திடுமே…!
லிமரைக்கூ…
பிறரழச் செல்வமதைச் சேர்க்காதே,
போய்விடுமுனை அழவிட்டே, நல்வழிச் செல்வந்தரும்
நற்பலனே, போனதெனப் பார்க்காதே…!
கிராமிய பாணியில்…
சேக்காத சேக்காத
செல்வத்தத்தான் சேக்காத,
அடுத்தவன அழவுட்டு
ஆசப்பட்டு சேக்காத…
அது ஒன்ன அழவுட்டு
அத்தினயும் போயிடுமே
அழிஞ்சிதான் போயிடுமே…
நல்லவழியில சேத்தபணம்
நம்மவுட்டுப் போனாலும்
நட்டமில்ல நட்டமில்ல
நல்லபலனக் கொண்டுவரும்…
அதால,
சேக்காத சேக்காத
செல்வத்தத்தான் சேக்காத,
அடுத்தவன அழவுட்டு
ஆசப்பட்டு சேக்காத…!