Month: June 2018

  • நலம் .. நலமறிய ஆவல் – 111

    நிர்மலா ராகவன்

    மகிழ்ச்சி எங்கே?

    உங்களுக்கு எப்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது?

    மாணவர்: பரீட்சையில் நிறைய மதிப்பெண்கள் பெறும்போது.

    கலைஞர்: எனது நிகழ்ச்சி பெரிதும் பாராட்டப்படும்போது.

    எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்: நான் எதிர்பார்த்ததிற்கு மேலேயே என் படைப்பு வெற்றி பெற்றால்.

    இவர்கள் எல்லோருடைய பதில்களிலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அனைவருமே கடுமையாக உழைத்துப் பெற்ற வெற்றியால்தான் மகிழ்வடைகிறார்கள்.

    மாணவரை எடுத்துக்கொண்டால், குருட்டாம்போக்கில் எவரும் பரீட்சைகளில் சிறப்பான தேர்ச்சி பெற முடியாது. எத்தனை நேரம் படித்திருக்க வேண்டும்!

    இரண்டு அல்லது மூன்று மணிநேர கலைநிகழ்ச்சிக்காக ஒருவர் வருடக்கணக்கில் பயிற்சி பெறவேண்டுமே!

    வாசகர் பத்தே நிமிடங்களில் படித்து முடிக்கும் கதையை எழுத ஒரு எழுத்தாளர் ஆராய்ச்சி செய்திருப்பார், நிறைய சிந்தித்திருப்பார். அத்துடன், அதை எழுத நேரத்தையும் சக்தியையும் செலவழித்திருப்பார்!

    ஆனால், வெற்றி பெறுகையில், பட்ட கஷ்டங்களும் செலவிட்ட நேரமும் பெரிதாகப்படுவதில்லை. பொறுக்க முடியாதவைகளையும் அனுசரித்துப்போனால்தான் நன்மையோ, வெற்றியோ கிடைக்கும்போது திருப்தியுடன் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

    வாழ்வில் பிரச்னைகளே இல்லாமல், மகிழ்ச்சி மட்டுமே தொடர்ந்து வரவேண்டும் என்றால் நடக்கிற காரியமா? பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதில்தான் முதிர்ச்சி இருக்கிறது.

    சிந்திப்பதும் பேசுவதும்

    பெண்கள் தமக்குப் பிடித்ததைப்பற்றியே பேசுவார்கள், ஆண்கள் தமக்குத் தெரிந்ததைப்பற்றிப் பேசவே பிரியப்படுகிறார்கள் என்று கூறுவதுண்டு.

    `பிடித்தது’ என்றால் அதில் வேண்டாத விஷயமும் இருக்கும். ஓயாமல் தொல்லை கொடுக்கும் மாமியார், எல்லாவற்றிலும் தப்பு கண்டுபிடிக்கும் மேலதிகாரி அல்லது கணவன் – இப்படி யார் தலையையாவது உருட்டிக்கொண்டிருப்பார்கள்.

    நமக்குப் பிடிக்காத உத்தியோகமோ, வாழ்க்கைத்துணையோ அமைந்துவிட்டால், அதையே எண்ணிக் குமைவதால் என்ன பலன்? `அப்படிச்செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கக்கூடாது’ என்றெல்லாம் காலங்கடந்து யோசிப்பதால் நடந்ததை மாற்ற முடியுமா, என்ன!

    நான் விளையாட்டுப் பொம்மையா?

    யாரோ நம்மை இழிவாகப் பேசினால்கூட ஆத்திரம் எழுகிறது. ஒரு நிமிடம் ஆத்திரப்பட்டால், அறுபது வினாடிகள் நம் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறோம். இதைத்தானே அவரும் எதிர்பார்க்கிறார்! பொம்மைக்குச் சாவி கொடுப்பதுபோல் பிறர் நம்மை ஆட்டுவிக்க நாமே ஏன் அனுமதி கொடுக்கவேண்டும்? ஒருவரது மகிழ்ச்சியைப் பறிக்க நினைப்பவர் தம்மால் அப்படி மகிழ முடியவில்லையே என்று ஏங்குபவராக இருக்கலாம் என்று புரிந்து, அதைப்பற்றி அதிகம் சிந்திக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

    நமக்குத் தொந்தரவு கொடுப்பவர்களைப்பற்றிச் சிந்திக்கும்போதும், பேசும்போதும் நம் முகம் எப்படி இருக்கும்? அவர்கள் எதிரில் இருப்பதாகப் பாவித்துக்கொண்டு சிடுசிடுக்கிறோம். முகத்தில் மலர்ச்சி எப்படி வரும்?

    கதை

    இரண்டு வயதுக் குழந்தை கௌதம் கீழே விழ, நெற்றியில் காயம் பட்டு, வீங்கிவிட்டது. நான் பரிவுடன் அவன் கன்னத்தைத் தடவினேன். அப்போதுதான் வலி அவனுக்கு உறைக்க, “இந்தப் பாட்டிதான் அடிச்சா!” என்று என்மேல் குற்றம் சாட்டிவிட்டு அழுதான். சிறிது பொறுத்து, “பாட்டி அடி, அடின்னு அடிச்சா! வலி!” என்றான். பிறகு அதுவே மூன்று முறை நான் அடித்ததாக ஆக, அழுகை பலத்தது.

    ஒரு பிரச்னையைப்பற்றி இடைவிடாமல் பேசினால், இப்படித்தான் பூதாகாரமாக உருவெடுத்துவிடும். `எனக்குச் சந்தோஷமே இல்லை!’ என்பது இதனால்தான். மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்பி, வேண்டாத எண்ணங்களையும் நடைமுறையையும் பிறருடன் பகிர்ந்துகொள்வது வீண்.

    நல்லது செய்தால் மகிழ்ச்சி

    ஒரு முறை, நான் இரண்டு வெள்ளி டிக்கட்டுக்கு பத்து வெள்ளியை அளிக்க, பேருந்து ஓட்டுநர் பாக்கிப் பணத்தைக் கூடுதலாக கொடுத்துவிட்டு, முன்னால் போய்விட்டார். சிறிது பொறுத்துத்தான் கவனித்தேன். நான் பின்னால் உட்கார்ந்திருந்தேன். நின்றுகொண்டிருந்த என் மகளிடம், அவரிடமிருந்து தவறாகப் பெற்றுக்கொண்ட பணத்தைத் திருப்பி அளிக்குமாறு கூறினேன். பலரையும் தள்ளிக்கொண்டு போக அவள் தயங்கினாள். “அம்மா கொடுக்கச் சொன்னதாகச் சொல்லு,” என்று அனுப்பினேன். நான் கடைசியாக இறங்கும்போது, அந்த மனிதர் என்னைப் பார்த்து நன்றியுடன், மகிழ்ந்து சிரித்தார். நான் கொடுத்திருக்காவிட்டால், அவர் கைப்பணத்தைப்போட்டு ஈடுகட்டி இருக்க நேரிட்டிருக்கும்.

    சிறு சமாசாரம்தான். ஆனாலும், ஒருவரை மகிழ்வித்த மகிழ்ச்சி என் மனதில் நிலைத்திருக்கிறது.

    மனமுவந்து பாராட்டுங்கள்!

    ஒரு மருத்துவசாலையில் வேலைபார்த்த இளம்பெண், `குறைந்த சம்பளத்தில் ஓயாத வேலை!’ என்று சிடுசிடுப்பாக இருப்பாள்.

    `சரியான சிடுமூஞ்சி!’ என்று எவர்மீதாவது குற்றம் கண்டுபிடிப்பதால் நாம் உயர்ந்துவிடுவதில்லை. தகுதியான பாராட்டுக்குத்தான் ஒருவரை மகிழ்விக்கும் சக்தி உண்டு.

    ஒரு முறை, தான் கொடுக்கவேண்டிய மாத்திரைகளை எண்ணும்போது, அவள் கை இயந்திரகதியில் வேலை செய்ததைப் பார்த்து நான், “ஐ..யோ! என்ன வேகம்!” என்று வியந்தேன்.

    சட்டென தலை நிமிர்ந்து, “பழகிப்போச்சு!” என்றாள். முகம் புன்னகையில் மலர்ந்தது. (`ஏன் இந்த சிடுசிடுப்பு? கொஞ்சம் சிரியேன்!’ என்றால் அவள் முகம் மலர்ந்திருக்குமா?)

    முக மலர்ச்சியும் அழகும்

    ஒருவரது கண், மூக்கு, வாய் போன்ற அவயவங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றனவோ, இல்லையோ, முகத்தில் மலர்ச்சி இருந்தால், முகம் அழகாகத் தென்படும். எவ்வளவுதான் அலங்காரம் செய்துகொண்டாலும், சுயநலம் கொண்டவர்களாக இருப்பவர்கள், அல்லது தெரிந்தே பிறருக்கு இன்னல் விளைவிப்பவர்கள் போன்றவர்கள் பிறர் கண்களுக்கு அழகாகத் தென்படமாட்டார்கள்.

    நல்லதை மட்டும் எடுத்துக்கொள்!

    வெளிநாட்டுப் பூங்கா ஒன்றில் மரத்தின்கீழ் ஒரே குப்பையாக இருந்தது. உடன் வந்திருந்த என் மகள் முகத்தைச் சுளிக்க, “கீழே பார்க்காதே, மேலே பார்!” என்றேன்.

    மரக்கிளைகளில் கண்கவரும் மலர்கள்!

    குப்பையா, மலர்களா? எதைக் கவனித்தால் மனம் மகிழும்?

    மரம் மட்டுமல்ல, மனிதர்களும் அப்படித்தான். நம்மை வாட்டும் ஒருவரது குறையையே எண்ணி மனம் நோகாமல், அவரிடம் ஏதாவது நல்ல குணம் இருந்தால் அதைக் கவனிக்கலாமே!

    அப்படி எதுவும் தென்படவில்லையா? விட்டுத்தள்ளுங்கள்! பிறரைப்பற்றிய வேண்டாத யோசனையில் நம் அமைதியை, மகிழ்ச்சியை, பறிகொடுப்பானேன்!

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 24

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களைக் கண்டு ஏன் பயப்படவேண்டும் ?

    கற்காலம் தொட்டே  மனிதனின் ஆர்வமும் தேடல்களும் அவனுடைய துணிவுக்கு வித்தாக அமைந்திருந்தன. கற்களைத் தட்டி நெருப்புப்பொறியைக் கண்ட மனிதன் நெருப்பின் உபயோகத்தை சிந்தனையின் மூலமாகவும் அனுபவத்தின் மூலமாகவும் உணர்ந்தான். உணவுகளைப் பக்குவப்படுத்தவும் குளிரிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் நெருப்பை உபயோகித்தான். அவன் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டது. கற்களை செதுக்கி ஆயுதங்களைப் படைத்தான். அவன் வேட்டையாடும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன.. தொடர்ந்து உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தான். கூட்டாக வாழ ஆரம்பித்தன. விவசாய முறைகளைத் தேர்ந்தெடுத்து உண்பதற்கு பல தானிய வகைகளை வளர்க்க ஆரம்பித்த்தான். மாற்றங்கள் தொடர்ந்தன. பல ஆயிரம் ஆண்டுகள் விவசாயம் சார்ந்த சமூகத்தில் தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தான். உடுக்கும் முறைகள் வாழும் முறைகள், தொழில் முறைகள், உறவு முறைகள், சிந்தனை முறைகள் மற்றும் திறன்கள் ஆகியவற்றில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வந்தன. இந்த மாற்றங்களின் பின்னால் என்ன நடந்து கொண்டிருந்தது ?

    மாற்றங்களைக் கண்டு வியந்து மனமுவந்து அவற்றை ஏற்றுக்கொண்டது ஒரு சார்பு. மாற்றங்களைக் கண்டு பயந்து அவைகளால் தங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுமோ என்று அவற்றை மறுத்தது மட்டுமின்றி அவற்றிற்குத் துணையாக இருந்தவர்களை தாக்கவும் அழிக்கவும் முற்பட்டது மற்றொரு சார்பு. மாற்றங்களுக்கு எதிரான போராட்டங்கள் சரித்திரத்தின் போக்கையும் சமுதாயங்களின் முற்போக்கு வளர்ச்சியையும் நிர்ணயித்தன. அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மாற்றங்களின் வேகத்தையும் திறன்களையும் தேவைகளையும் ஊக்குவித்தது மட்டுமின்றி அவற்றிற்குத் துணையாகவும் இருந்து வந்தன.

    மாற்றங்களை எதிர்த்தவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் உள்ள சில காரணங்கள்:

    1. மாற்றத்தினால் தற்போது இருக்கின்ற பாதுக்காகாப்பான நிலைக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்ற பய உணர்ச்சி.
    2. மாற்றங்கள் நம்மிடம் புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்துமே. அவைகளை நாம் எப்படி சமாளிப்பது என்ற தயக்க உணர்ச்சி.
    3. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் படச்சத்தில் புதிய கற்றலும் புதிய திறன்களும் நமக்குத் தேவைப் படுமே. அவைகளை நம்மால் கற்றுக்கொள்ளவோ சாதிக்கவோ முடியுமா என்ற இயலாமை உணர்ச்சி
    4. இருப்பது நன்றாகத்தானே இருக்கின்றது. இருந்துவிட்டுப் போகட்டுமே. மாற்றம் இப்பொழுது எதற்கு என்ற முயற்சியைத் தடுக்கும் துணிவின்மை.
    5. மாற்றங்கள் வரும்பொழுது அவைகளில் திறனுள்ளவர்களால் நாம் பின்தள்ளப்படுவோமே? அது ஏற்புடையதா ? அதை எப்படி சமாளிப்பது என்ற தாழ்வு மனப்பன்மை
    6. எனக்கு வயதாகி விட்டதே. இதற்கு மேல் இவைகளை எல்லாம் என்னால் எப்படிக் கற்க முடியும் ? எனவே மாற்றங்கள் எல்லாம் இளைய சமுதாயத்திற்குத் தான் நமக்குத் தேவையில்லை என்ற வளர்ச்சியை விட்டு விலகி நிற்கும் தட்டிக்கழிக்கும் மனப்பான்மை.

    இன்னும் இது போல பல காரணங்கள் நமது மாற்றங்களைக் கண்டு அஞ்சி நிற்பதற்கும் அதில் பங்குதாரர்களாக இல்லாததற்கு காரணமாக இருந்துள்ளது; இருக்கின்றது.

    மாற்றங்கள் – இயற்கையின் வரப்பிரசாதம்

    மாற்றங்கள் – வாழ்க்கைக்குப் பொருள் கொடுக்கும் விளக்கங்கள்

    மாற்றங்கள் – புதுமையின் சுயசரிதைக்கு முன்னுரை

    மாற்றங்கள் – மற்ற உயிருள்ள உயிரில்லாத வாழ்வினங்களின் கருத்துக்களையும் தேவைகளையும் சாராமல் இயற்கை எழுதும் புதுக்கவிதை.

    விரும்பியோ விரும்பாமலோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். மாற்றங்களைத் தவிர வேறு எதுவும் மாறுவதில்லை !

    மாற்றங்கள் இயற்கையின் இயல்பென்றால் அவைகளை நாம் எப்படித் தடுக்க முடியும்? எனவே துணிவுடன் வாழ்வில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் அவைகளின் உதவியுடன் வாழ்வில் முன்னேற்றப்பாதையை வழிவகுத்துக்கொள்ளவும் அவைகளைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

    “நாம் எப்படி இருக்கவேண்டும் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நாம் இருக்கும் இடத்திலிருந்தே முடிவு செய்ய முடியாது. நம்முடைய மாற்றங்களே அவைகளுக்கு வழிவகுக்கும்” என்று பல தத்துவ மேதைகள் கூறியிருக்கின்றனர்.

    மாற்றங்கள் நமக்குத் தயக்கத்தை உருவாக்கலாம். மாற்றங்கள் நமக்கு பய உணர்ச்சியை உருவாக்கலாம். மாற்றங்கள் நமக்கு எதிர்ப்புகளை உருவாக்கலாம். மாற்றங்கள் நம்முடைய தற்போதைய நிகழ்வுகளின் அழிவுக்கு அடிக்கல்லாக அமையலாம். ஆனால் மாற்றங்களை நாம் ஏற்கப் பழகிக் கொள்ளவேண்டும். மாற்றங்களையும் அவற்றின் தேவைகளையும் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

    மாற்றங்களை ஏற்க மறுக்கின்றவர்கள் இருக்கும் இடத்திலேயே நிலைத்துவிடுகின்றனர். மாற்றங்கள் உயிர்ப்பிற்கும் துடிப்பிற்கும் ஒரு சாட்சி. மாற்றங்களை மறுத்து ஒதுங்குபவர்கள் தங்கள் தேக்கத்திற்கும் வளர்ச்சியின் முடிவிற்கும் ஒப்புதலை அளித்து விடுகின்றனர்.

    நான் படித்த ஒரு புத்தகத்தின் கதை நினைவுக்கு வருகின்றது. (The iceberg is melting  by John Kotter). இது அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளில் நடக்கும் ஒரு நிகழ்வு. அந்தப் பனிப்பாறையில் பென்குவின் பறவையினத்தைச் சார்ந்த பல பறவைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு பறவையும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டு வருகின்றது. ஆனால் ஒரே ஒரு பறவை மட்டும் அந்தப் பனிப்பாறையின் முகப்பில் அமர்ந்து அடுத்த பனிப்பாறையில் என்ன நடக்கின்றது என்பதை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கின்றது. அது இரண்டு முக்கியமான நிகழ்வுகளைப் பார்க்கின்றது.

    ஒன்று;  எதிரே உள்ள பனிப்பாறையின் உயரம் குறைந்துகொண்டே வருகின்றது.

    இரண்டு: பனிப்பாறையிலிருந்து உருகும் நீரின் வேகத்தின் சத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்குகின்றது.

    இந்தப் பார்வை அதனுடைய சிந்தனையைத் தூண்ட அதற்குப் புரிகின்றது – ” எதிரே உள்ள அந்த பனிப்பாறை உருகுகின்றது. அதனால் தான் நீரின் வேகமும் அதிகமாகின்றது. அந்தப் பனிப்பாறையின் உயரமும் குறைகின்றது.

    இந்தக் கருத்து மீண்டும் அதனுடைய சிந்தனையைத் தூண்ட எழுகின்ற சில கேள்விகள் :

    1. அந்த பனிப்பாறை உருகினால் அதில் உள்ள பறவைகளின் கதி என்ன? அவைகள் தங்களைக் காத்துக்கொள்ள வேறு ஏதாவது பனிப்பார்வைக்கு மாறிச் செல்ல வேண்டுமா ?
    2. அவை வேறொரு பனிப்பாறைக்கு மாறினாலும் அந்தப் பனிப்பாறை உருகாது என்பது என்ன நிச்சயம்? அவ்வாறென்றால் அதுவும் உருகினால் அவைகள் அங்கிருந்து இன்னொரு பனிப்பாறைக்கு மாறவேண்டிய நிலை ஏற்படுமா ?
    3. அந்த பனிப்பாறை உருகும்பொழுது நான் இருக்கின்ற பனிப்பாறை உருகாமல் இருக்குமா? நானும் எனது குடும்பமும் இன்னொரு பனிப்பாறைக்குச் செல்ல தயார் நிலையில் இருக்க வேண்டுமா ?
    4. இவ்வாறு பனிப்பாறைகள் உருகிக்கொண்டிருந்தால் நாம் மாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கவேண்டுமே! மாற்றங்களே வாழ்க்கையின் உண்மை நிலையென்றால் மாற்றங்களுக்கு நாம் எவ்வாறு நம்மைத் தயார் செய்துகொள்வது?

    இந்தக் கதை விடுக்கும் செய்தி: பனிப்பாறைகள் உருகிக்கொண்டுதான் இருக்கும். நாம் மாற்றங்களுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    நமது அறிவு, திறன்கள், வாழ்வு முறைகள், அறிவியல் கருத்துக்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் பனிப்பாறைகளே ! அவைகள் உருகிக் கொண்ட இருக்கும். நாம் மாற்றங்களுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டே இருத்தல் அவசியம்.

    மாற்றங்கள் புதுமைகளாக இருக்கலாம்; புதிர்களாக இருக்கலாம் ! ஆனால் மாற்றங்கள் இயற்கை அயராது நமது வாழ்விற்கும் சிந்தனைக்கும் கொடுத்துக்கொண்டிருக்கும் சவால்கள் .. அவைகளை நாம் ஏற்றுக்கொள்ளலாமே !

    மாற்றங்களுக்கு ஏற்றபடி வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடரும்..

    Share
  • சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக்கலைகள்

    -கி. ரேவதி

    தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை கிராமியக் கலைகள். கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் இருக்கும் இன்ப துன்பங்களில் முதன்மையானவையாக இருப்பது கிராமியக் கலைகள். இதனை நாட்டுப்புறக்கலைகள் என்றும் அழைக்கின்றோம். வழிபாட்டுச் சடங்குகளின் ஒரு பகுதியாகவோ, பொழுதுபோக்கிற்காகவோ மக்களால் உருவாக்கப்படும் அல்லது நிகழ்த்தப்படும் மரபுவழிக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் எனலாம்.

    நாட்டுப்புற கலைகள்

    பழந்தமிழகத்தில் கிராமங்களே மிகுதியாக இருந்தன. கிராம மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஓங்கி வளர்ந்தவை கிராமியக் கலைகளாகும். நாட்டுப்புறக்கலை என்பது வளர்ந்து கொண்டேயிருப்பது. மனித உள்ளத்தில் சிந்தனை வளம் இருக்கும் வரை கலைகள் இருந்துக்கொண்டேயிருக்கும். நாட்டுப்புறக்கலைகள் தொடந்து வளர்ந்து கொண்டே போவதற்கு அடிப்படைக்காரணம் அக்கலைகளுடன் பழகும் மனிதனது உணர்ச்சியே ஆகும்.

    கூத்துக்கலை

    தமிழர் போற்றி வளர்த்த கலைகளில் கூத்தும் ஒன்றாகும். இசைக் கலையோடு இணைந்து வளர்ந்த கலை இதுவாகும். விழாக்களின்போது மக்களைத் தம் ஆடல்பாடல்களால் மகிழ்வித்தனர். பண்டையக் காலத்தில் கூத்து நடத்தியவர்கள், கூத்தர், பொருநர், விறலியர், கோடியர் எனப்பெயர் பெற்றனர்.

    வள்ளிக்கூத்து

    பண்டைய மக்கள் ஆடிய ஆடல்களில் வள்ளிக்கூத்து என்பதும் ஒன்று. நாட்டுக்கு வளமும், வெற்றியும் பெற்றுத்தந்த வள்ளிக்கொடியின் பெருமையைப்பாடி ஆடுவது ஆகும்.

    “வாடா வள்ளியின் வளம்பல தருஉம்
      நாடுபல கழிந்த பின்றை”     (பெரும்.பாண்.370- 371)

    என்ற பாடல்வரிகள் இக்கூத்துப் பற்றி விளக்குகின்றன. இக்கூத்தினை ஆடவரும், பெண்டிரும் ஆடுவர்.

    குரவைக்கூத்து

    பண்டைய கலைகளின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகக் குரவைக்கூத்து விளங்குகின்றது. சிறுபறையைக் கொண்டு மகிழ்வோடு ஆடியது இக்கூத்தாகும்.

    ”பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப    (மதுரைக்காஞ்சி 96-97) என்னும் அடியின் மூலம் குரவை ஆடினர் என்ற செய்தியை அறிய முடிகின்றது.

    துணங்கை ஆட்டம்

    துணங்கை என்பது மற்றொரு வகைக் கூத்தாகும். பண்டைய மக்கள் விழாக்களின் போது துணங்கை ஆடினர். இதனை,

    ”விழவு நின்ற வியன் மறுகில்
    துணங்கை
             (மதுரைக்காஞ்சி 327 – 329) என்ற பாடல் அடிகள் உறுதிப்படுத்துகின்றன. துணங்கைக் கூத்தில் ஆண்கள், பெண்கள் எனக் குடிமக்களும் அரசரும் கலந்து கொண்டனர்.

    துடிக்கூத்து

    வெட்சித்திணையில் இடம்பெறும் கூத்துகளில் துடிநிலையும் ஒன்றாகும்.

    ”மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த
    கொற்றவை
    நிலையும் அகத்திணைப்புறனே  (தொல்.பொருள்.புறத்.நு.4)

    தங்களின் விருப்ப தெய்வமாகிய குலதெய்வத்தை வணங்கித் தாங்கள் நிகழ்த்தவிருக்கும் போரினை வெற்றிமுகமாகச் செய்யுமாறு வேண்டுதல்  நிகழ்த்துவர். போர் மறவர்கள் துடி என்னும் இரு முகப்பறையை முழக்கிக் கொற்றவையை வணங்குதலே துடிநிலை எனப்படும்.

    போர்க்காலங்களில் போருக்கு முன் வெற்றி பெறவேண்டும் என்று கொற்றவையை வணங்கித் துடியை இயக்கிக்கொண்டு ஆடியதால் இக்கூத்து எனப்பெயர் பெற்றது. மிகுந்த வெறியுடன் ஆடப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். துடிக்கூத்து போர் மறவர்களால் மட்டுமின்றி முருகனாலும் ஆடப்பட்டுள்ளதாகப் பத்துப்பாட்டு பதிவு செய்துள்ளது.

    முருகன் திருச்சீரலைவாய்க் கடலில் சூரபதுமனை அழித்ததான். அவனது ஆறு முகங்களில் ஐந்தாவது முகம் இச்செயலைச் செய்துள்ளது என்பதைச்,

    ”செறுநர்த் தேயத்துச் செல்லும் முருக்கி
    கறுவுகொள்
    நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒருமுகம்”  (திரு.99-100)

    என்னும் திருமுருகாற்றுப்படை அடிகள் கூறுகின்றன. கடலில் மரமாக நின்ற சூரபதுமனை அழிக்க அன்னை பார்வதியிடம் வேல் வாங்கிச் சென்றவன். கெட்டவனை அழிக்கக் கொற்றவையிடம் வேலை வாங்கிச் சென்றான். போரில் எதிர்க்கும் எதிரிகளை வேலால் குத்தி வீசித் துடியடித்து அவன் அன்னை கொற்றவையைப் பரவினான். திருப்பரங்குன்றத்து இயல்புகளைப் பேசும் பரிபாடலில்,

    ”துடியின் அடி பெயர்த்து தோளசைத்து தூக்கி
    அடுநறா மகிழ்தடப ஆடுவான் தகைமையின்” (பரி.21)

    என்னும் அடிகள் முருகன் ஆடிய துடிக் கூத்தையே குறிப்பதாகப் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்னும் நூலில் காணலாம்.

    துடியின் ஓசை

    துடியின் ஓசை மிகக் கடுமையுடையதாக இருக்கும் என்பதைப் பல சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்
    கடுங்குரற்
    குடிஞையநெடும் பெருங்குன்றம்” (அகம்.19)

    என்றும்,
    இழிபிறப் பாளன் கருங்கை வன்கண் கடுந்துடி
    புலிதுஞ்சு
    நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்” (புறம்.170)

    என்றும்,
    கடுந்தடித் தூங்கும் கணைக் காற் பந்தர்”              (பெரு.124)
    என்றும்,
    கோள் தெங்கின் குலை வாழை
    கொழுங்காந்தள்
    மலர் நாகத்து
    துடிக்
    குடிஞைக் குடிப் பாக்கத்து”                    (பொரு.208)

    என்றும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

    துடியன்

    துடியை இயக்குபவர் துடியன் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

    உவலைக் கண்ணித் துடியன் வந்தென” (புறம்.269-6)
    துடியன் கையறு வேலே அடிபுணர்” (புறம்.285-2)

    துடியர்கள் போர்க்காலங்களில் மட்டும் துடியை இசைக்கும் கலைஞர்களாகப் பதிவு பெற்றுள்ளனர்.

    துடியன் எனப்படுபவன் பலப்பல மலர்களால் ஆன மாலைகளைச் சூடிக்கொண்டு போரைத் தொடங்குவதற்கான துடியை முழங்குவான். துடியின் கடுமையான ஒலியால் எதிரிகள் மிரண்டு செல்வர். அவ்வாறு மிரண்டு ஓடும்போது கடுமையான ஒலியை எழுப்பி வீரர்கள் துடியை இசைத்துள்ளனர். இதனை,

    அருமுனை அலைந்த பெரும்புகல் வலத்தார்
    கனைகுரற்
    கடுந்துடிப் பாணி தூங்கி” (அகம்.159-8-9)

    என்றும்,

    வில்லோர் குறும்பில் ததும்பும்
    வல்வாய்க்
    கடுந்துடிப் பாணியும் கேட்டே” ( அகம்.261 14-15)

    என்றும் அகப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.

    தொகுப்புரை

    நாட்டுப்புற ஆடல்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் மரபு சார்ந்த கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    அடிக்குறிப்பு:

    1.வையாபுரிப்பிள்ளை, சங்க இலக்கியம், பாரிநிலையம், சென்னை,2004.

    2.நாகராசன். வி, குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    3.நாகராசன். வி, புறநானூறு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக்கழகம், சென்னை, 2002.

    4.நாகராசன். வி, அகநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    5.நாகராசன். வி, பத்துப்பாட்டு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    தெய்வானை  அம்மாள்  மகளிர்க்  கல்லூரி, (தன்னாட்சி), விழுப்புரம்.

     

    Share
  • பாணப்பாட்டும் பண்பாட்டு மரபுகளும்

    -முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ

    ’பாணப்பாட்டு’ என்பது பாணர் இன மக்கள் பாடும் பாட்டாகும். இதனைத் துயிலுணர்த்துப்பாட்டு, பாணர்பாட்டு என்றெல்லாம் அழைப்பர்.  பாணரினமக்கள் பல தலைமுறைகளாக இப்பாடலைப் பாடிவருகின்றனர்.  கால மாற்றத்திற்கேற்ப இப்பாடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இக்கட்டுரை மலையாளத்திலுள்ள பாணப்பாட்டை அறிமுகம் செய்து அதன்வாயிலாக அறியலாகும் தமிழர் பண்பாட்டு மரபுகளை எடுத்துரைக்க முயல்கிறது.

    பாணர்களின் தோற்றம்

    பாணர்களின் தோற்றம் பற்றிய பலகதைகள் மலையாள நாட்டுப்புறப் பாடல்கள்களில் நிலவுகின்றன. கணிதசாஸ்திரத்தில் பண்டிதனாக விளங்கியவர் வரருசி. இவர் பறையர் இனத்தைச் சார்ந்த பெண்மணியைக் காதலித்துத்  திருமணம் செய்தார்.  இவர்கள் ஜோதிடத்தையும் கணிதத்தையும்  நாடெங்கும் சுற்றித்திரிந்து பரப்பினர்.  பிராயாணம் செய்யும்போது பல இடங்களில் வைத்தும் பதினோரு பிள்ளைகளைப் பெற்றார்.  ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போதும் ‘வாய் இருக்கிறதா’ என்று கேட்பார். இருக்கிறது என்று சொன்னால் அக்குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். பன்னிரெண்டாவது குழந்தை பிறந்ததும் அதன் தாய் அக்குழந்தைக்கு வாய் இல்லை என்று கூறினார். எனினும் பலன் இல்லை. அதனையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.  வரருசி விட்டுச் சென்ற பன்னிரெண்டு பிள்ளைகள் யாரெல்லாம் என்று கேரள இலக்கிய வரலாற்றில் உள்ளூர் குறிப்பிடுகிறார்.

    மேழத்தோளக்னி கோத்திரி ரஜகனுளியனூர்த்தச்சனும் பின்னே வள்ளோன்
    வாயில்லாகுந் நிலப்பன் வடுதலமருவும் நாயர் காரய்க்கல் மாதா
    செம்மே கேளூப்புகுற்றன், செறிய திருவரங்கத்தெழும் பாணனாரும்
    நேரே நாராயண பத்திரனு முடநகவூர் சாத்தனும் பாக்குனாரும்
    இதில் வரும் திருவரங்கத்தெழும் பாணனார் என்பது சுருங்கி காலப்போக்கில் திருவரங்கன் என்றானது.  இக்கதைப் பாணர்களின் தோற்றத்தைக் குறிப்பிடுகிறது.  இக்கதையினையே பாணர்கள் துயிலெழுத்துப்பாடலில் பாடி வருகின்றனர்.

    தொல்காப்பியத்தில் பாணர்

    தொல்காப்பியத்தில் பாணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், நிலம்பெயர்ந்து உரைத்தலும் அவள் நிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய தொல். பொரு:167. தலைவியைவிட்டுத் தலைவர் பிரிந்துசென்ற இடத்தில் சென்று தலைவியின் நிலையைக் கூறும் மரபு கூத்தருக்கும் பாணர்க்கும் உரிய மரபாகும்.  தலைவன் தலைவியரின் அந்தரங்க இரகசியங்களையும் பாணர்கள் அறிந்திருந்தனர் என்பதை இச்சூத்திரம் தெளிவுபடுத்துகிறது.  மேலும்

    ”தோழி தாயே பார்ப்பான் பாகன்
    பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
    கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
    யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” – (தொல் பொரு.194)

    என்று தொல்காப்பியம், பொருளதிகாரம் கூறுகிறது.  இச்சூத்திரத்தில் மிக முக்கியமான செய்திப் பரிமாற்றத்திற்குரிய வாயில்களுள் பாணரும் பாட்டியும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  இங்கு பாணன் என்ற சொல் ஆடவரையும் பாட்டி என்ற சொல் பாணர்குலப் பெண்களையும் குறிக்கிறது.  தொல்காப்பியர் கூறும் பாட்டி என்ற சொல் சங்ககாலத்தில் பாடினி என்று வழங்கப்பட்டது.  ’பாட்டி’ என்ற சொல்லுக்குத் திவாகர நிகண்டு பாணர் இனப் பெண்டிரைக் குறிப்பதாகக் கூறுகிறது.  சங்ககாலத்தில் இப்பாணர்கள் யாழ் இசைத்துப் பாடினர். அவ்யாழ் சீறியாழ், பேரியாழ் என இரண்டுவகைப்பட்டதென்று ஆற்றுப்படை நூல்கள் வாயிலாக அறியலாம்.  மேலும் பெரும்பாணாற்றுப்படையும் சிறுபாணாற்றுப்படையும் பாணர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.  யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்ற மூன்று வகைப்பட்ட பாணர்களைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.  இவர்களுள் இசைப்பாணர்களை உயர்ந்தவர்களாகக் கருதுகின்றனர். இவர்கள் போர்க்களத்திற்குச் சென்று பெரும் வீரர்கள் போர்செய்யும் முறையைக் கண்டு அவர்களைப் பற்றிப்பாடும் உரிமையைப் பெற்றிருந்தனர்.  மண்டைப்பாணர்கள் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். காரணம் இவர்களுக்குக் குறிப்பிடத்தக்க தொழில்கள் இல்லாமல் ஊர் ஊராக அலைந்து திரிந்து மன்னர்களையும் நிலக்கிழார்களையும் புகழ்ந்து பாடல்கள்பாடிப் பரிசில்பெற்று வாழ்க்கை நடத்தினர். இவர்கள் பழுமரம் தேரும் பறவை போலத் தங்கள் உணவிற்காகப் பல்வேறு இடங்களிலுள்ள மன்னர்களை நாடிச்சென்றனர் என்பதை,

    பழுமரம் தேரும் பறவை போல
    கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
    புல்லென யாக்கைப் புலவுவாய் பாண
    (பெரும்பாணாற்றுப்படை)

    என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல்களால் அறிகிறோம். இவர்கள் மன்னர்களை நாடிச்சென்றதற்குக் கேரள நாட்டுப்புறக் கதைப்பாடல்களில்  பல  கதைகள் வழங்குவதைக் காணலாம்.

    கைலாயமலையில் சிவனும் பார்வதியும் சூதாடினர். அப்பொழுது சிவபெருமான் தோற்கவே அதைக் கண்டுகொண்டிருந்த பாணன் மாதரிடம் தோற்றுவிட்டாய் என்று சிவபெருமானைக் கேலி செய்கிறான். கோபம் கொண்ட சிவபெருமான் சூதை எடுத்து தரையில் வீசினார்.  பூமியில் வந்த பாணன் சிவபெருமானைச் சபித்தான். உடனே சிவபெருமானும்   நோய்வாய்ப்பட்டார். அவருடைய நோயைப் போக்குவதற்கு ஆயிரம் கன்னிகைகள் குரவையிட்டனர், ஆயிரம் பேர் பள்ளிச் சங்கு ஊதினர். அப்படி இருந்தும் சிவபெருமான் எழவில்லை. இறுதியில் வேலனிடம் சிவபெருமானின் நோய்க்கான காரணத்தை வினவ பாணன் இட்ட சாபமே அதனைப் பாணன்தான் போக்கவேண்டும் என்றான். பாணன் சிவபெருமானின் திருச்சன்னிதியில் நின்று அவரைப் புகழ்ந்து பாடவே சிவபெருமான் சாபம் நீங்கித் துயிலுணர்ந்தார். உடனே சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கவே ஏதாவது ஒருவரம் தந்தால் போதும் என்று பாணனும் கூறுகிறான் அதற்குச் சிவபெருமான்,

    ஏதும் ஒந்நுமே இல்லாத்தானு
    ஏழு வீடே துயிலுணரு ஞான் தோற்றிட்டுண்டிதேடா
    மலநாட்டிலே மகாஜனங்ஙளே என்னயெந்நே நினப்பவரு
    விளக்குடனே கொளுத்துமடா
    அறியாத்த பாபிகளு படியடச்சு விலக்குமெடா
    விலக்கும் வீட்டில் மறந்நிட்டுமே என்றே நாமமே ஸ்துதிக்கருது
    ஈ வரமே தன்னிதேடா நினக்கும் நின்றே சந்ததிக்கும். –  (பாணன்மார் பாட்டு – 53-59) என்று வரம் கொடுக்கிறார்.

    சிவபெருமான் கொடுத்த வரங்கள் பற்றி மேலும் பல கதைகள் வழங்குவதைக் காணலாம்.  என்ன வரம் என்று கேட்டதற்கு ஒரு யானையைக் கொடுத்தார்.  யானையை வளர்க்கத்தெரியாத பாணன் சிவபெருமானிடம் அதனைத் திரும்பக் கொடுக்கவே அவர் அவன் உழுது பிழைப்பதற்காக இரண்டு எருமைகளைக் கொடுக்கிறான். அவ்வெருமைகளைக் கலப்பையின் இரு துருவங்களிலும் கட்டிஉழத் துவங்குகிறான். இரண்டும் எதிர்திசையைப் பார்த்து செல்லவே அவ்வெருமைகளையும் சிவபெருமானிடம் திரும்பக் கொடுக்கிறான். உடனே சிவபெருமான்’ ’ஒந்நுமில்லாத்தான் ஏழு வீட்டில் போய் பாடி வாழ்க’ என்று வரம் கொடுப்பதாகக் கூறுகின்றனர்.

    இன்றும் கேரளத்தில் வாழும் பாணர்களின் தொழில் வீடுவீடாகச் சென்று பாடிப் பொருள்கள் பெறுவதாகும்.  இவர்கள் பாடும் பாட்டினைத் துயிலுணர்த்துப்பாட்டு என்று அழைப்பர்.  பாணனும் பாட்டியும் அதிகாலைப் பொழுதில் துடி, கிண்ணம், கைமணி முதலிய இசைக்கருவிகளை இசைத்த வண்ணம் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டின் வெளியில் நின்று முதலில் துடி முழக்கி கனைத்துக் காட்டுவர்.  வீட்டார் பாணன் வரவை அறிந்து முற்றத்தில் விளக்கேற்றி அலங்கரித்துப் பாணரை அழைப்பர்.  பாணன் முற்றத்தில் அமர்ந்து சிவபெருமான் தங்களை இத்தொழில் செய்வதற்கு வரம் கொடுத்த கதையான திருவரங்கன் கதையைப் பாடுவர்.  பின்னர் வீட்டாரின் விருப்பத்திற்கேற்ப ஹரிச்சந்திர சரிதம், கிருஷ்ண லீலை முதலிய சில கதைப் பாடல்களையும் பாடும் மரபு உண்டு.  பொதுவாக இவர்கள் கர்க்கடக மாதம் அதாவது ஆடி மாதத்தில்தான் பாடச் செல்வர்.  பாணர்கள் பாடியதற்காக அரிசி, தேங்காய், எண்ணெய் முதலிய பொருட்களை வழங்குவர். வடக்கன் பாட்டிலும் பாணர்கள் பல பகுதிகளில் அலைந்து திரிந்து பாடிப் பரிசில் பெறுகின்ற தன்மையைக் காணமுடிகிறது.

    பாணப்பாட்டில் பண்பாட்டு மரபுகள்

    சமூக அமைப்பு ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு மாறிவரும் தன்மையுடையது.  பண்பாட்டு வரலாற்றில் ஓர் இனத்தாருடைய பழக்கவழக்கங்களும் எண்ணங்களும் மாறிவருவதைக் காணலாம்.  ஒரு சமூகத்தின் பழமையான பழக்கவழக்கங்களை நாம் நாட்டுப்புறவியல் வழியாக அறிந்துகொள்ள முடியும்.  ஒவ்வொரு பிரிவினரிடையேயும் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் நிலவி வந்துள்ளன. இப்பாணப்பாட்டு வழியாகப் பாணர் சமூகத்தின் பண்பாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.

    பாணர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் அறியாதவர்கள் என்றும் இவர்கள் வீடுவீடாகச் சென்று சிவபெருமானின்  பெருமைகளைப் பாடிக் கிடைக்கும் பரிசில்களை வைத்தே வாழ்ந்தனர் என்பதையும் பாணப்பாட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் பாடிப் பொருள் பெறுதல் மட்டுமன்றி இவர்களுள் சிலர் யானைக்கு நெற்றிப்பட்டம் கட்டுதல், முத்துக்குடை தைத்தல், கோவிலுக்குத் தேவையான ஓலையாலாகிய பொருட்களைப் பின்னுதல் முதலிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஊர் ஊராகச் சுற்றித்திரிந்து வருகின்ற காட்சியை,

    ’நந்நு நந்நே திருவரங்கா
    இத்தற நாளுமே போகருதே’ (பா.பா 106-107)

    என்று கூறுவதில் இருந்து ஒரு இடத்தில் தரித்து நிற்காமல் சுற்றித்திரியும் தன்மையுடையவன் என்றும் அவனைப் போகாமல் இருப்பதற்காக வேண்டுவதாகவும் இவ்வரிகள் அமைகின்றன.

    ஒருவர் நோய்வாய்பட்டால் முதலில் இறைவனுக்கு வழிபாடு செய்தனர். என்பதைப் இப்பாணப்பாட்டு வாயிலாக அறிகிறோம். சிவபெருமான் நோய்வாய்பட்டபோது ஆயிரம் கன்னிகைகள் தாலப்பொலி எடுத்தனர், ஆயிரம் பேர் சங்கு ஊதினர், வேலனை அழைத்து இதற்கான காரணத்தை அறிந்தனர். இதனை,

    ஆயிரமே பிராமணரு ஆனவர்ஷமே நமஸ்காரம்
    ஆயிரமே கன்னிகளு கைவிளக்கே தாலப்பொலி
    ஆயிரமே மங்கமாரு மாடித்தற்றோ வாய்க்கரவ
    ஆயிரமே சங்குகாரு பள்ளிசங்குணர்த்து ந்நவரு – (பா.பா 28-31)

    என்ற வரிகள் உணர்த்துகின்றன. இது சங்ககாலம் முதல் தமிழகத்தில் நிலவிய பாணர் பண்பாட்டினை விவரிக்கிறது.  பாணர்கள் துயிலுணர்த்தி  இறைவன் புகழ் பாடியதற்கு,

    ஒரு நெல்லுமே அன்னம் வேண்டா
    ஒருழக்குப் பாலும் வேண்டா’   ( பா.பா 75.76) என்ற வரிகளில் இருந்து அன்னமும் பாலும் பரிசிலாக வழங்கினர் என்பதையும் பாலை உழக்கால் அளந்தனர் என்பதையும் அறிகிறோம். மட்டுமல்லாமல் ஆணும் பெண்ணும் சூதாடும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததை’ பொன்னினெந்த சூதெடுத்து பகவானும் திரிச்சு வச்சு’ என்ற வரிகள் வாயிலாக உணர்கிறோம்.

    மாலைப் பொழுதில் கிருட்டினனின் பெருமைகளைப் பஜனையாகப் பாடும் வழக்கம் இருந்தது. இன்றும் கேரளப் பாணரிடையே இம்மரபு நின்று நிலைக்கின்றன.

    வச்சுண்ணான் கொச்சுருளி
    இட்டுண்ணான் இலத்தளிக
    கண்கான்மானணி விளக்கு
    நீர்குடிப்பான் வெள்ளிக்கிண்டி
    வெயில் தாங்கும் குடையெடுத்து ( பா.பா 220 -223) என்ற வரியில் இருந்து பாணர்கள் உருளியில் உணவெடுத்து, தளிர் இலையில் உணவுண்டு, வெள்ளிக்கிண்டியில் நீர்பருகி, வெயிலிற்கும் குடைபிடித்து வந்தனர் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. இறைவனுக்குக் கிழக்குப் பார்த்தே விளக்கு ஏற்றினர். இது இன்றும் தமிழரிடையே காணப்படும் ஒரு பண்பாடாகும்.

    ஹரிச்சந்திரபுராணத்தில் இறப்புச்சடங்கு நிகழ்த்தும் முறை காணப்படுகிறது.  பாலுள்ள விறகை அருகில் அடுக்கி நெய்யுள்ள விறகை நெஞ்சில் அடுக்கியே ஈமக்கடனைச் செய்தனர்.

    பாணப்பாட்டைப் பார்க்கும்போது பண்டைய சங்ககாலத்திய தமிழர் மரபுகள் இவர்களது பாடலில்  இலைமறை காயாகப் பதிவாகியுள்ளதைக் காணலாம். பாணர் மரபையும் அவர்களது வாழ்வியலையும் இப்பாணப்பாட்டு எடுத்துரைக்கிறது.  காலமாற்றத்திற்கேற்ப நிகழ்ந்த பண்பாட்டு மாற்றத்தையும் இது எடுத்துரைக்கத் தவறவில்லை. கேரளீயருக்கே ஆன சில பண்பாடுகளும் பாணப்பாட்டில் பதிவாகியுள்ளன.

    *****

    துணை நூல் பட்டியல்

    1. ஆனந்தகுமார் .பா இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்,  நியூ        செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2005.
    2. இராமநாதன். ஆறு நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2002.
    3. குளோரி. தா நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், காவ்யா, சென்னை, 2008
    4. பார்கவன் பிள்ளை. ஜி கேரளத்திலே பாணன்மார் பாட்டுகள்,   நேஷணல் புக் ஹவுஸ், கோட்டயம்,2009.
    5. பார்கவன் பிள்ளை. ஜி கேரளத்திலே நாடோடிப் பாட்டுகள், சாகித்திய வேதி, திருவல்லா.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,
    கேரளப் பல்கலைக்கழகம்.

     

    Share
  • மில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமியின் சுழற்சி நாட்பொழுது கூடுகிறது

     
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
    ++++++++++++++
     
     
     
    ++++++++++++++++
     
     
    நீர்க்கோளின் மகத்தான நிலவுக் காட்சி
     
    ++++++++++++++++++
     
    நிலவு பூமியை விட்டு அப்பால் நகரும்போது,  பனித்தள வழுக்கி காலணியில்  சுற்றும் மாது, மெதுவாகும் சமயம்  கைகளை நீட்டுவதுபோல், பூமியின் சுழற்சியும் தளர்ந்து குன்றுகிறது.
     
    எங்களது குறிக்கோளில் ஒன்று :  வானியல் காலநோக்கு  [Astro-Chronology] முறையில் பூர்வீக நிகழ்ச்சியின் தோற்ற காலத்தை அறிய முற்படுவது.  பில்லியன் ஆண்டுகட்கு முற்பட்ட  பாறை மாதிரிகளைத் துருவி உளவி, பூர்வீகப் புவித்தளவியல் காலப் பரிணாமத்தை கதிர் ஏகமூல நேர்ச்சி முறையில்  [Radioisotope Dating] அளப்பது.
     
    டாக்டர் ஸ்டீஃபன் மேயர்ஸ்  [பேராசிரியர் புவித்தளவியல் விஞ்ஞானம், விஸ்கான்சின் – மாடிஸன் பல்கலைக் கழகம்.]  துணை ஆசிரியர், அறிக்கைத் தாள் வெளியீடு, தேசீய விஞ்ஞானக் கழகம்]  [ஜூன் 4, 2018]  
     
     
     
    ++++++++++++++++
     
     
    பொங்கிவரும் பெருநிலவு
    இங்கில்லை என்றால்
    பரிதிக் கப்பால் வெகு தொலைவில்
    தங்கி விடும் பூமி !
    தட்ப, வெப்பம் மாறிவிடும் !
    உயிரின மெல்லாம்
    வெய்யிலில் எரிந்து  விடும் !
    நிலவில்லை யென்றால்
    கடல் வீக்கம் ஏது ?
    முடங்கிய
    கடல் வெள்ளத்தைக்
    கடைந்து கலக்க  அலை
    ஏற்ற மில்லை ! இறக்க மில்லை !
    காற்றின் சிறகுகள்
    முறிந்து விடும் !
    கடல் நீர் சுற்றியக்கம்
    முடங்கும், தடைப்படும் !
    கடல் நீட்சியும் மீட்சியும்
    நடைபெறா !
    கடல் வெப்பம் சீர்ப்படாது
    முடங்கும் ஓரிடம் !
    காலநிலை மாறுபடும் !
    சூழ்வெளி வாயு வேறுபடும் !
    பயிரினம் பரிதவிக்கும் !
    உயிரினம் பாதிக்கப் படும் !
    பூமியின் சுயச்சுற்று தடைப்பட்டு
    நாள் மணிக் கணக்கு
    நீளமாகும் !
    கருநிலவு பூமியை விட்டு
    வருடந் தோறும்
    ஒன்றை அங்குல தூரம் 
    அப்பால் நகரும் !
     
    +++++++++++
     
     
     
     
    பூமியின் நாட்பொழுது நீட்சிக்கு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு 
     
    2018 ஜூன் 4 ஆம் தேதி நமது பூமிக்கும், நமது நிலவுக்கும் உள்ள உறவைப் புதிய கண்ணோட்டத்தில் மீளமைப்பு முறையில் ஆழ்ந்து வரலாற்றை விஞ்ஞானிகள் திருப்பி ஆராய்ந்த போது, 1.4  பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் டைனோசார்ஸ் வாழ்ந்த கடும் வெப்ப பூமியின் நாட்பொழுது 18 மணி நேரங்களே நீடித்தது !  அப்போது நமது நிலவு பூமியை மிகவும் நெருங்கி இருந்துள்ள தாகவும், அது பூமியின் சுய சுழற்சியைக் கட்டுப்படுத்தி மாற்றி வந்ததாகவும் விஞ்ஞானிகள் புதிய ஆய்வுகள் மூலம் கூறுகிறார்.
     
    இப்போதுள்ள நிலவின் நகர்ச்சிச் சுற்றில், பூமியின் சுழற்சி நாள் 24 மணி நேரமாக உள்ளது.  ஒரு பில்லியன் ஆண்டுக்குப் பிறகு, நிலவு நகரும் எதிர்காலச் சுற்றில், பூமியின் சுழற்சி நாட்பொழுது 30 மணி [?] நேரமாக மாறிவிடலாம் !
     
     
     
     
     
    நிலவு பூமிக்கு அப்பால் நகரும் போது, பூமியின் தன்னச்சு சுயச் சுழற்சி  தளர்ச்சி அடைந்து, மெதுவாகச் சுற்றுகிறது.  அப்போது நாட்பொழுது நீள்கிறது.  நிலவானது ஆண்டுக்கு 1.5 அங்குலம் [3.82 செ.மீ.] தூரம் புவிக்கு அப்பால் நகர்கிறது.  இந்த புதிய ஆய்வுக் கருத்து 2018 ஜூன் 4 ஆம் தேதி “தேசீய விஞ்ஞானக் கழக இதழில்  [National Academy of Sciences]  வெளியாகி உள்ளது.  வெளியிட்ட பூதளவியல் விஞ்ஞானி, விஸ்கான்சின் – மாடிஸன் பல்கழைக் கழகப் பேராசிரியர் ஸ்டீஃபன் மேயர்ஸ்.
    விண்வெளியில் பூமியின் சுயசுழற்சி, நிலவு போன்று பல்வேறு அண்டக் கோள்களால் பாதிக்கப் படுகிறது.  அதுபோல் பூமி சூரியனைச் சுற்றும் பாதையும் பல்வேறு கோள்களால் பாதிக்கப் படுகிறது.  இந்த மாறுதல்கள் யாவும் “மிலன்கோவிச் சுற்றுகள்” [Milankovitch Cycles] என்று அழைக்கப் படுகின்றன.
     
     
     

    “காலநிலை, காற்று, காரிகை, எதிர்பாரா செல்வீகம் (Fortune) – இவை யாவும் நிலவைப் போல் மாறிப் போய் விடுபவை !

    பிரெஞ்ச் பழமொழி.

    நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.

    டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)

    fig-1-relative-sizes-of-earth-moon

    பூகோளம் முதன்முதலில் தோன்றிய போது !

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய போது பூர்வ பூமியானது எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வது கடினம் !  திரண்டு உருவான பூமியின் கனல்கட்டி எந்த வடிவத்தில் காணப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது !  கண்டங்கள் குளிர்ந்து எப்போது உண்டாயின, கடல் வெள்ளம் எப்போது குழியில் நிரம்பியது என்று எவரும்  அறியமாட்டார் !  படிப்படியாகப் படிந்த வாயு மண்டலம் எப்போது பூமிக்குக் குடை பிடிக்கத் தொடங்கியது என்பதை யார் கணிக்க முடியும் ?  புத்தம் புதியக் குழந்தை பூமியை செவ்வாய்க் கோள் அளவுள்ள ஓரண்டம் தாக்கிச் சிதைத்து முதன்முதல் 6 மணி அளவு நாளாய்த் (6 Hour Day) தன்னச்சில் வெகு வேகமாய்ச் சுற்ற வைத்தது !  சிதைந்த சதைப் பிண்டம் உருகிப் போய் ஒன்றாய்த் திரண்டு துணைக்கோள் நிலவு ஆனது.  சக்தி குன்றிய, நிறை குன்றிய, ஈர்ப்பாற்றல் குறைந்த நிலவு தன்னச்சில் சுழாது ஒருமுகம் காட்டிப் பூமியை வலம்வர ஆரம்பித்தது !  ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்து பூமி குளிர்ந்து உருகிய தளத்துடன், ஆவி பறக்கும் சூழ்வெளியில் உருண்டு திரண்டு ஒரு கோளானது.  700 மில்லியன் ஆண்டுகள் கழிந்து அதாவது சுமார் 3.8 பில்லியன் வருடத்துக்கு முன்பு முதன்முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது.

    fig-2-life-without-the-moon2

    4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய முதலே நீர்மயம் பூமியில் உண்டாகி விட்டது என்று ஒரு சில விஞ்ஞானிகள் கருதுகிறார்.  நிலவானது பூமியிலிருந்து சிதைக்கப்பட்டு அப்பால் தனியே சுற்ற ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட பெருங்குழியில் நீர் நிரம்பி கடல் உண்டாக ஏதுவானது.  ஆயினும் அப்போது பூமி வெட்ட வெளியாகத்தான் கிடந்தது.  நிலவு முதலில் 7300 மைல் தூரத்தில் சுற்ற ஆரம்பித்தது.  பிறகு நகர்ந்து இப்போதுள்ள தூரத்தில் பாதி அளவு (120,000 மைல்) தொலைவில் இருந்தது.  பூமியில் கடல் அலைகள் அதனால் பேரளவு உயரத்திலும், கொந்தளிப்பிலும் அடித்து வந்திருக்கின்றன.  கடல் நீட்சியால் (Tidal Bulge) பூமியின் “கோண முடுக்கம்” (Angular Momentum) தொடர்ந்து நிலவை ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலம் (3.8 செ.மீ) அப்பால் நகர்த்தி வருகிறது !  பூமியின் நாட் கணக்கு நூறாண்டுக்குச் சுமார் 0.002 செகண்ட் நீள்கிறது !  தற்போதைய நிலவின் சராசரித் தூரம் பூமியிலிருந்து 235,000 மைல் (380,000 கி.மீ.).  பூமியின் வேகம் படிப்படியாகக் குறைந்து 6 மணி நாள் நீண்டு 24 மணி நாளாக மாறியது !

    fig-5-sea-tides-in-12-hours1

    பூமி இழக்கிறது ! நிலவு பெறுகிறது ! பூமி மெதுவாகிறது ! நிலவு விரைகிறது !

    பூமியின் ஈர்ப்பியல் வல்லமை நிலவின் ஈர்ப்பியல் வலுவை விட 3000 மடங்கு மிகையானது.  மேலும் பூமியின் திணிவு நிறை நிலவைப் போல் 80 மடங்கு பெரியது.  பூமி சக்தியை இழக்கிறது. நிலவு சக்தியைப் பெறுகிறது !  பூமி கடல் நீட்சியோடு (Tidal Bulge) சுற்றும் போது அந்த வெள்ளம் கண்டங்களின் கரைத் தளம், நதிச் சங்கமம், வளை குடாக்கள் ஆகியவற்றைச் சூடாக்கும் .  எதிர்ப்படும் இடையூறுகளை தகர்க்கும் !  அத்தகைய கடல் நீட்சியும், மீட்சியும் (Tidal Swelling & Ebbing) சக்தியை இழக்கும் போது பூமியில் “கடல் நீர் உராய்வு” (Tidal Friction) உண்டாகிறது.  அந்தப் பேரளவு நீர் மண்டலம் நீட்சி உண்டாக்கும் போது பூமியின் சுழற்சி சக்திக்குத் தடையாக முட்டுக் கட்டை (Applies Brake to Earth’s Rotational Energy) போடுகிறது !  அதாவது பூமியின் வேகத்தைத் தணிக்கிறது !  அதாவது பூமி ஒரு முறை தன்னச்சில் சுழல அதிக நேரத்தை எடுக்கிறது !  4 பில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமி தோன்றிய காலத்தில் அதன் நாள் மணிக் கணக்கு 6 மணி நேரமாக இருந்தி ருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணிக்கி றார்கள் !  அப்போது நிலவு பூமிக்கு மிக அருகில் சுமார் 7300 மைல் தூரத்தில் இருந்ததாகவும் அறியப் படுகிறது !  இந்தக் குன்றிய தூரத்துக்கும் குறைவாக நிலவு பூமியை நெருங்கி இருக்க முடியாது.  அவ்விதம் தூரம் குன்றினால் பூமி நிலவைத் தன்வசம் இழுத்துத் தகர்த்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் !

    fig-1a-earth-tides

    படிப்படியாக பூமியின் ஈர்ப்புச் சக்தி குறைந்து தன்னச்சில் சுற்றும் அதன் வேகம் தணிகிறது.  பூமியின் ஆறு மணி நேர நாள் 4 பில்லியன் ஆண்டுகளில் நீண்டு இப்போது 24 மணி நேரமாக நீடித்துள்ளது !  இரண்டு பில்லியன் ஆண்டு களுக்கு முன்பு ஒரு பரிதி ஆண்டுக்கு 800 நாட்கள் என்று இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் !  பூமி தன்னைத் தானே சுற்று வீதம் ஒரு நிலை இலக்கமில்லை !  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சூரிய கிரகணங்களை வானியல் நிபுணர்கள் துல்லிய மாகச் சொல்லி இருப்பது வியப்பான கணிப்பே !  2.5 பில்லியன் ஆண்டுகட்கும் 650 மில்லியன் ஆண்டுகட்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின் நகர்ச்சி ஆண்டுக்கு அரை அங்குலம் (1.27 செ.மீ.) வீதம் இருந்ததாகக் கணிக்கிடப் படுகிறது.  அந்த யுகங்களில் பூமிக்கு மிக அருகில் இருந்த நிலவு படிப்படியாகத் தள்ளப்பட்டு இதுவரை 235,000 மைல் தூரத்தில் நகர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது.  1970 ஆண்டு களில் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் நிலவிலே விட்டு வைத்த “மூன்று கோண மூலைக் கண்ணாடிகள்” மீது (Three-Cornered Mirrors Left on the Moon By the Apollo Astronauts) இப்போது லேஸர் ஒளிக்கதிரை அனுப்பித் துல்லியமாகச் சந்திரனின் நகர்ச்சியை [1.5 Inch per Year (3.8 cm per Year)] அளந்து வருகிறார் !

    fig-1b-tidal-movements-on-earth

    நிலவின் ஈர்ப்புக் கவர்ச்சி பூமியில் என்ன செய்கிறது ?

    நிலவால் கடலில் ஏற்படும் நீர் மட்ட உயர்ச்சி தாழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் அனுதினமும் இயற்கையாக நேரும் கடல் வெள்ளத்தின் நீட்சி மீட்சி இயக்கங்கள் ஆகும் !  கடலின் நீட்சி பூமியின் ஒருபுறமும் கடலின் மீட்சி அல்லது தாழ்ச்சி பூமியின் எதிர்ப்புறமும் நிகழ்பவை.  அவை ரப்பர் பந்து போல் இழுப்புத் தன்மை உடையவை.  சந்திரனின் ஈர்ப்பு விசை இல்லை யென்றால் பூமியின் கடல் வெள்ளம் சுழற்சி அடையாமல் முடமாகி வெறும் பூமியோடு சுற்றி வரும்.  ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை கடலின் நீர் மண்டலத்தைத் தன்வசம் கவர்ந்துப் பிடித்து வைக்கிறது !  அவ்விதக் கடல் வெள்ள நீட்சி அடையும் போது ஒருவித “முறிப்பு நெம்புதலை” (Torque or Twisting Force) பூமி நிலவின் மீது உண்டாக்குகிறது !

    பரிதி, நிலவு, பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் உள்ள போது அவை நேர்முக நோக்கு ஈர்ப்பு விசையை மிகை யாக்குகின்றன.  வசந்த காலத்தில் வரும் கடல் நீட்சி (Spring Tides) எல்லாப் பருவக் காலத்தையும் விட மிகையாக இருந்து வருகிறது !  நீள்வட்டத்தில் சுற்றும் நிலவு சிற்றாரத்தில் (Perigee) பூமிக்கு அருகில் உள்ள போது கடல் நீட்சி அதிகம்.  பிறகு பூமிக்கு அப்பால் நீளாரத்தில் (Apogee) நிலவு உள்ள போது கடல் நீட்சி குறைவு.

    fig-1c-spring-tides

    மேலும் சந்திரனின் ஈர்ப்பு விசை பூகோளத்தின் வாயுச் சூழ்வெளியைப் பாதிக்கிறது.  அது பூமியின் அடித்தட்டு நகற்சி (Plate Tectonics) இணைந்த மேற்தளக் கோளத்தையும் (Lithosphere – Topmost Layer of Earth along with the Crust) மாற்றுகிறது.  நமது பூகோளத்தின் அடித்தட்டு (crust) நிலவை நோக்கி அதன் ஈர்ப்பு விசையால் 12 அங்குலம் (30 செ.மீ) நீட்சி அடைகிறது

    துணைக்கோள் நிலவால் பூமிக்கு ஏற்படும் பலாபலன்கள்

    நிலவில்லாது போனால் கடலில் நீரோட்டம் முடக்கமாகி கடலியக்கம் தடைப்படும்.  அப்போது பேரளவு ஆக்ஸிஜன் வெளியாக்கும் ஆல்கே (Algae – Seaweeds) போன்ற கடற்களைகள் அழிந்து போகும்.  அதாவது சந்திரன் இல்லாவிட்டால் நாம் உண்ணும் உணவு சங்கிலி (Food Chain) பாதிக்கப்படும்.  நிலவின் அமைப்பு மனிதரைப் போன்ற பூமியின் உயிரினச் செம்மை விருத்திக்குப் பல்வேறு செழிப்பு முறைகளில் பாதிப்பு செய்தற்கே.  அவற்றில் முக்கியமானவை :

    fig-1f-the-structure-of-earth

    1.  4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் அதிர்ஷ்ட வசமாக செவ்வாய்க் கோள் அளவில் பூமியைத் தாக்கிய ஓரண்டம் சிதைத்து 99% திணிவு மிக்க இயற்கையான உயிரினத் தடை உண்டாக்கும் சூழ்வெளியை (Natural Primordial Life-Prohibiting Dense Atmosphere) அகற்றியது !  அதன் பின்னர் மிக மெல்லிய தெளிவான உயிரின வளர்ச்சிச் சூழ்வெளி (Relatively Thin Translucent-Clear Life-Permitting Atmosphere) தோன்றியது.  அதே சமயத்தில்தான் முதன்முதல் சந்திரன் துணைக்கோளும் பூமிக்கு உண்டானதாகக் கருதப்படுகிறது !

    2.  அதே கொந்தளிப்புக் காலத்தில்தான் மிகையான மேற்பட்ட கதிர் வெப்பம் வீசும் யுரேனியம், தோரியம் மூலகங்கள் தோன்றி பூகோள உட்கரு செழிப்பாகத் துவங்கியது !  கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றியக்கத்தால் (Recycling of Continents due to Plate Tectonics) பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது !  அதாவது அடித்தட்டு நகர்ச்சியில் ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறிக் கரி கலந்த பொருட்கள் (Subduction of Carbonacious Materials) வெளியாகிக் காலம் செல்லச் செல்ல “சுக்கிரன் விளைவு” மாதிரி (Venus Effect of Global Warming over Time) பூகோளச் சூடேற்றத்தைப் படிப்படியாகத் தவிர்ப்பது.

    fig-1e-earths-lithosphere1

    3.  கடல் நீர்மட்டம் ஏறி இறங்கி கடல் வெள்ளத்தின் சுற்றோட்டத்தை அனுதினமும் நிகழ்த்தி கடல்நீர் முடமாவதைத் தடுப்பது.  அதன் விளைவு : மேலான மனித உயிர் வளர்ச்சிக்குத் தடையானவற்றை நீக்குவது.

    4.  நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கடல் நீட்சி தடை செய்வதால் (Tidal Braking) பூமியின் சுயச் சுழற்சி வேகம் தணிகிறது !  அதனால் பூகோளத்தில் உயிரினம் செம்மையாக விருத்தியாகச் சூழ்வெளி மிதமாகிறது. பூமியின் சுழற்சி வேகம் மிகையானால் உயிரினம் பாதிக்கப்படும் பயங்கரச் சூழ்வெளி உருவாக வழி ஏற்படும்.

    5.  மேலும் பூமியின் சுற்றச்சு 23.4 டிகிரி பரிதிக்கு ஒப்பாகச் சரிந்திருக்க நிலவே நிலைப்பாடு செய்ய உதவுகிறது.  அதே சமயத்தில் யுரேனஸ் கோளின் அச்சு கட்டுப்பாடு இல்லாமல் சுற்றச்சு சுமார் 98 டிகிரி சாய்ந்து போய் உள்ளது.  அதாவது மிதமான பருவ நிலைக் காலம் பூமத்திய ரேகைப் பகுதிக்கு மேலும் கீழும் சுற்றியக்கம் பெற உயிரினங்களுக்கு வசதி உண்டாக்குகிறது.

    fig-4-spring-tide-neap-tide

    6.  உலகம் முழுவதிலும் நிலவின் அமைப்பே கடல் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.  நிலவு இல்லாவிட்டால் அலை ஏற்ற இறக்கங்கள் பேரளவில் மெலிந்து போய்விடும் !  நிலவில்லா விட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும் !  அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த கால நிலை மாறுதல்களையும் உண்டாக்கும் !  பூமியில் சுமுகமாக வசித்த மனித இனங்கள் வசதியற்ற தட்ப வெப்பச் சூழ்வெளியில் தவிக்க நேரிடும் !

    சூரிய மண்டலத்தில் நூதனப் படைப்புக் கோள் நமது பூகோளம்

    பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது.  அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது !  அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது !  பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது !  ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது !  பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.

    first-man-on-the-our-moon1

    fig-6-solar-eclipse-on-the-moon

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 On the Moon By : Patrick Moore (January 2001)
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802271&format=html(நிலவு எப்படித் தோன்றியது ?)
    13 Wikipedia – Inner Structure of the Moon [January 31, 2008]
    14 Astronomical Society of the Pacific – Whait if the Moon Did not Exist ? By : Neil F. Comins, University of Maine (1996)
    15 AstronomyCafe.net What Would Have Happened if the Earth Did not Have the Moon ?
    16 Home Page. Natural World . Com – Formation of the Earth & The Moon, Tides & Gravity
    17 Earth-Moon Dynamics Page – Would We have Had Evolution Without the Moon ? By : Dan Green B.Sc. (Hons).
    18 Tides on Earth – The Recession of the Moon By : Tim Thompson (Matt Rosenberg http://geography.about.com/ )
    19 Scientific American – Without the Moon, Would There Be Life on Earth ? By : Bruce Dorminey (April 21, 2009)

    20. https://youtu.be/j91XTV_p9pc

    20 (a)  https://youtu.be/0tqgWuSIZUg

    21. https://newslikethis.com/2018/06/04/thank-moon-earth-s-lengthening-day [June 4, 2018]

    22.  https://news.wisc.edu/thank-the-moon-for-earths-lengthening-day/  [June 4, 2018]

    23.  https://phys.org/news/2018-06-moon-earth-lengthening-day.html  [June 4, 2018]

    24.  https://www.sciencedaily.com/releases/2018/06/180604151200.htm [June 4, 2018]

    25.  http://mentalfloss.com/article/546952/moon-making-days-earth-longer  [June 6, 2018]

    26. https://en.wikipedia.org/wiki/Milankovitch_cycles  [ June 8, 2018]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] [June 9, 2018] [R-1]

    Attachments area

    Preview YouTube video Earth’s Moon: Why One Side Always Faces Us

    Preview YouTube video Study: Moon is Causing Earth Days to Lengthen Each Year

    Preview YouTube video Earth’s Days Are Getting Longer—Thanks to the Moon

    Preview YouTube video Naked Science – Moon Mysteries

    Preview YouTube video Milankovitch Cycles

    Preview YouTube video 7 Milankovitch and Climate

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    KRISHNA FOR TODAY….
    ———————————————

    கண்ணன் உள்ளம் கவர் கள்வன் Thief Of HEARTS ….

    180609 Makhan chor A4 watercolour sketch 180403/coloured on 180609 wm

    “மத்யானம் ஆய்ச்சியர் மல்லாந்த வேளையில்
    தத்யோனம் வெண்ணை திருடுமிவன் -உத்தியோகம்,
    இன்னாரென்(று) இல்லாது இல்லம் புகுந்தெடுப்பான்;
    மன்னார்AND COCHOR மனது”….
    மன்னாரண்ட் கோசோர் மனது”….

    ”மாடுமேல ஏறிநின்று கோடிவீட்டு கோபாலர்
    பாடுபட்ட கொள்ளையில் பங்குபெற -கோடுவம்ஸ(கோடு -சந்திரன் -சந்திரவம்ஸ)
    மன்னனர் மணிவண்ணர் மாட்டிடம் ’’ஆகாட்டு’’
    வெண்ணையந்த வள்ளலின் வாய்க்கு’’….

    கிரேசி கிரியேஷன்ஸ் ”சாக்லேட் கிருஷ்ணா” 777வது ஷோ போட்ட போது எழுதியது….!(1000த்துக்கு இன்னும் கிட்டத்தட்ட 25 ஷோக்களே பாக்கி)….!
    ————————————————————————————————————————————————————

    “எம்பியுறி வெண்ணை எடுப்பார்கைப் பிள்ளையவன் –
    தம்பி பலராம தேவர்க்கு -நம்பீசன் –
    எட்டான் புலனுக்கு ,எட்டுவான் பக்த்திக்கு –
    எட்டினான் ஏழேழு ஏழு (777 )….கிரேசி மோகன் ….நன்றி கிரேசி கிரியேஷன்ஸ் AND கேசவ் ….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”முதலாதி என்று முதலைவாய் சிக்கி
    கதறும் கஜேந்திரனைக் காக்க -முதலாக
    புள்ளாண்டான் மாலர் பதறினார், வாகனப்
    புள்ளூர்ந்து வந்தனர் பார்’’….கிரேசி மோகன்….!

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 5

    -மேகலா இராமமூர்த்தி

    சினத்தை கைவிடுதலும் மனத்தை அடக்கிப் பொறுமையைக் கைக்கொள்வதும் மனித வாழ்வைச் செம்மையாக்கும். ”பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பது முன்னோரின் பொன்மொழி அன்றோ?

    அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
    உறுவ துலகுவப்பச் செய்து – பெறுவதனால்
    இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
    துன்புற்று வாழ்தல் அரிது.
    (நாலடி – 74)
     

    அறிந்துகொள்ள வேண்டியவற்றை அறிந்து, அடக்கமுடையவராய், அஞ்சத் தக்கவற்றிற்கு அஞ்சி, தமக்குத் தகுதியான செயல்களை உலகம் மகிழும் வண்ணஞ்செய்து, இன்பத்தோடு வாழும் இயல்பினர், என்றும் வாழ்வில் துன்புறுதல் இல்லை.

    அடக்கமும், பொறுமையும், கிடைக்கும் வருவாயில் மனநிறைவோடு வாழும் பெற்றியும் மட்டும் ஒருவனுக்கு வாய்த்துவிடுமேயானால், அவன் வாழ்க்கை வெற்றிதான்!  ”பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி ஓம்பாது உண்டு கூம்பாது வீசி” வாழும் தமிழ்ப் புலவோரின் பொருள்பொதிந்த வாழ்வு குறித்துக் கோவூர்கிழார் கூறுவதை இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

    மனிதரில் இருவகையினர் உளர். சிலர் உள்ளத்தே நஞ்சைவைத்துச் சொல்லில் தேனைக் குழைத்துப் பேசுவார்கள்; வேறுசிலர் உள்ளத்து அன்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடுமொழிகளால் அறிவுறுத்துவார்கள். இவ்விருவரில் யார் சொல்லை நாம் மனங்கொள்ளவேண்டும் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது நாலடியார்.

    ”பேரரும்புகளிலெல்லாம் விருப்பத்தையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும் வளம்நிறைந்த கடலையுடைய குளிர்ச்சிபொருந்திய கடற்கரைத் தலைவ! தமக்கு முன்னேற்றம் தருவதை அறிந்து செய்வாரைப் பெற்றால், அவர்கள் உள்ளன்பினால் நன்மை கருதிச் சொல்லும் கடுஞ்சொல், மனமகிழ்ந்து கூறும் அயலவர் இன்சொல்லினுந் தீதாகுமா? ஆகாது!” என்கிறது நாலடியார்.

    காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
    ஏதிலார் இன்சொலின் தீதாமோ – போதெலாம்
    மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப !
    ஆவ தறிவார்ப் பெறின். 
    (நாலடி – 73)

    இனிக்க இனிக்கப் பேசினாலும் பகைவரின் சொற்கள் தள்ளத்தக்கன. கடுமையாய் மொழிந்தாலும் நட்டாரின் சொற்கள் தள்ளாது கொள்ளத்தக்கன. இனிப்புப் பண்டங்கள் வாய்க்குச் சுவை தந்தாலும் உடலுக்குத் தீங்கையும், கசப்புப் பண்டங்கள் வாய்க்குக் கைத்தாலும் உடலுக்கு நன்மையையும் தருவனவன்றோ? எனவே சொற்களின் சுவையில் மயங்குவதைக் காட்டிலும் அவை நமக்கு நல்கும் பயனறிந்து தெளிதலே நல்லது.

    பொறையுடைமையைப் பல்வேறு தருணங்களில் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தவேண்டிய கடப்பாடு சான்றோர்க்கு உண்டு. காட்டாக,  அறிவுடையோர் பேதையர்க்கு நல்லறிவு கொளுத்த எத்துணை முயன்றாலும் அதனை விளங்கிக்கொள்ளும் அறிவும் திறனும் பேதையர்க்கின்மையால் அவர்கள் அறிவுடையோர் கருத்துக்கு முரண்பட்டு ஏறுமாறாக ஏதேனும் பிதற்றிக்கொண்டுதான் இருப்பர். எனவே ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பேதையரோடு உரையாடுவதைத் தவிர்த்து அவ்விடத்தைவிட்டு வழுக்கிக் கழிதலே நல்லது என்கிறது நாலடியார்.

    கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
    பேதையோ டியாதும் உரையற்க – பேதை
    உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
    வழுக்கிக் கழிதலே நன்று.
    (நாலடி – 71)

    ”பழமொழி நானூறும் இதே பொருள்பட,

    ”கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
    பொல்லாத(து) இல்லை ஒருவற்கு…” என்று சொல்லிச் சென்றிருப்பதை இங்கே நாம் எண்ணிப் பார்க்கலாம்.

    மானுட வாழ்வில் ஒழுக்கம் மிகவும் இன்றியமையாதது. ’ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை’ என்பது ஆன்றோர் வாக்கு. மனிதரை விலங்கினின்றும் வேறுபடுத்திக்காட்டும் அவ்வுயர் பண்பை மானுடர் உயிரினும் மேலாய் ஓம்பவேண்டும்.

    ’அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று வள்ளுவரால் விதந்தோதப்படும் இல்லறமாம் நல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் ஆடவன் ஒருவன், தன் மனைவியைத் தவிர பிற பெண்டிரை நயப்பதும், அவர்கள்மாட்டுக் காமம்துய்க்க நினைப்பதும் மிகவும் தீது. அந்த இழிசெயலை – பழிசெயலைச் சான்றோர் என்றுமே விரும்பமாட்டார்கள்; ஏன்? புண்ணியம், புகழ், தக்கார் நேயம், பெருமிதம் தரும் ஆண்மை என்ற இந்நான்கும் பிறன்மனை விரும்புவாரிடத்திற் சேரமாட்டா; பகை, பழி, பாவம், அச்சம் எனும் நான்குமே அவர்களிடம் சேரும் என்பதால்.

    அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
    பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா – பிறன்தாரம்
    நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
    அச்சத்தோ டிந்நாற் பொருள். 
    (நாலடி – 82)
     

    இதையே குறளாசான்,

    பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்.
     (பிறனில் விழையாமை – 146) என்றறைந்தார்.

    திருமணம் ஆகா இளைஞன் ஒருவன் பிறன்மனை நயப்பதே கண்டிக்கத்தக்க தீயொழுக்கமாகும். அவ்வாறிருக்க, நல்லநாள் கேட்டறிந்து, அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டித் திருமணம்செய்து தன் காவலிற் புகுந்த மெல்லியளான அன்புடை மனையாட்டியும் அகத்திருக்க, ஒருவன் அயலான் மனைவியை அடையக் கருதுவது ஏன்? என்று வியந்து வினாவெழுப்புகிறது நாலடி.

    பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
    கல்யாணஞ் செய்து கடிப்புக்க – மெல்லியற்
    காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
    ஏதின் மனையாளை நோக்கு. 
    (நாலடி – 86)

    ஆகவே இல்லறத்தானாயினும் சரி, மணமாகா இளைஞனாயினும் சரி இன்னொருவனின் இல்லக்கிழத்திபால் காமம்கொள்வது அவன் குடிக்குப் பெருங்கேடாய் முடியும். அதனால்தான் கீழான நெறியில் ஒழுகுகின்றவன் அனைவரினும் கடையன் – அறிவிலி, பிறனில் விழைந்து அவள் வீட்டு வாயிலில் காத்துக் கிடப்போன் என்று வெகுண்டுரைத்தார் தெய்வப் புலவர்.

    அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரின் பேதையார் இல்.  (பிறனில் விழையாமை – 142)

    முறையற்ற பெண்ணாசையை ஒழித்தலே பேராண்மை என்பதே மேலோர் கருத்து.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
    3. பழமொழி நானூறு – ம. இராசமாணிக்கம் பிள்ளை

     

     

    Share
  • கருவாகி உருவாகி கவினுலகைக் காணும் வரை…

    ஆ. செந்தில் குமார்.

    தந்தையின் உயிரணு ஆற்றலைப் பெற்று…
    தாயின் கருமுட்டை சுவற்றைத் துளைத்து…
    உட்புகுந் ததனுள் ஒன்று கலந்து…
    உயிரின் கருவாய் மாற்றம் பெற்றது…!

    மாற்றம் பெற்ற அச்சிறு கருவும்…
    மெல்ல நகர்ந்து கருப்பையை அடைந்து…
    கருப்பை சுவற்றில் ஒட்டிக்கொண்டு…
    குழந்தை உருவாய் மாறத் துடித்தது…!

    செல்களின் பகுப்பு வேகமாய் நடந்து…
    செல்களின் வளர்ச்சி துரிதமாய் நடந்து…
    செல்களின் பகுப்பும் துரித வளர்ச்சியும்…
    சேர்ந்தொரு சதையின் பிண்டமாய் ஆனது…!

    நஞ்சுக்கொடி யொன்று வளரப் பெற்று…
    பிஞ்சுக் குழந்தைக்குத் தேவையான…
    சுவாசக் காற்று சத்துப் பொருட்கள்…
    சடுதியில் தாயிடம் பெற்றுக் கொடுக்கும்…!

    மூன்றாம் நான்காம் வாரத்திற் குள்ளே…
    முதுகுத் தண்டு மூளை தோன்றி…
    இரத்த அணுக்கள் நாளங்கள் தோன்றி…
    இதயம் தோன்றி துடித்திடத் துவங்கும்…!

    உள்ளுறுப் பனைத்தும் மெல்லத் தோன்றி…
    உடலில் கைகால் குருத்துகள் தோன்றி…
    காது மடல்கள் எலும்புகள் நரம்புகள்…
    கருக் குழந்தைக்கு வளர்ந்திட லாச்சு…!

    எட்டாம் வார இறுதிக்குள் எல்லாம்…
    எலும்புகள் தசைகள் நரம்புகள் கொண்ட…
    ஒற்றை அங்குல நீளக் கருவில்…
    உறுப்புகள் மொத்தமும் தோன்றி யிருக்கும்…!

    குரல் தசைநார்கள் வளரத் துவங்கும் …
    புறப் பாலுறுப்பு தோன்றத் துவங்கும்…
    கைகால் நகங்கள் வளரத் துவங்கும்…
    கைரேகை எல்லாம் தோன்றத் துவங்கும்…!

    பன்னிறு வாரங்கள் கடந்த பிறகு…
    பல மடங்காக எடையும் கூடும்…
    சிசுவின் வாயுள் இருக்கும் நாவில்…
    சுவையை உணரும் அமைப்புகள் தோன்றும்…!

    தோல் அடுக்கெல்லாம் முதிரத் துவங்கும்…
    தலைமுடி யனைத்தும் வளரத் துவங்கும்…
    காற்றை சுவாசிக்கும் திறமை தோன்றும்…
    கேட்கும் திறமை எல்லாம் தோன்றும்…!

    கருப்பை திரவத்தில் மிதக்கும் கருவில்…
    கழுத்தைத் திருப்பும் தலையை அசைக்கும்…
    திடுக்கிடும் கைகால் அசைவுகள் பலவும்…
    துடிப்புள்ளதாக உணர்ந்திட முடியும்…!

    இருபத்து நான்கு வாரங்கள் கழித்து…
    இமைக ளிரண்டும் மெல்லத் திறக்கும்…
    சிசுவின் தோலில் சுருக்கங்கள் குறையும்…
    சிசுவின் மூளை துரிதமாய் வளரும்…!

    சுவாச மண்டலம் எலும்பு மண்டலம்…
    செரிமான மண்டலம் தசை மண்டலம்…
    நரம்பு மண்டலம் குருதியோட்ட மண்டலம்…
    நிணநீர் மண்டலம் அனைத்தும் வளரும்…!

    முப்பத்தாறு வாரம் கழிந்தப்பின்…
    முழுதாய் வளர்ந்த அக்கருக் குழந்தை…
    நாற்பதாம் வார இறுதிக்குள் பிறந்து…
    நம்மைத் தாங்கும் உலகைக் கண்டது…!

    குறிப்பு :-
    நிணநீர் மண்டலம்
    நிணநீர் என்பது என்ன? சிவப்பணு நீங்கிய குருதி. வெளிர்ப் பாய்மம். கொழுப்பு முண்டுகளால் உண்டாக்கப்படுவது. உடல் பாதுகாப்பிற்குப் பயன்படுவது. நிணநீர் மண்டலத்திலுள்ள உறுப்புகள் யாவை? நுண்ணிகள், குழாய்கள், முண்டுகள், நிணநீர்ச் சுரப்பிகள் ஆகியவை.
    நிணநீர் ஒட்டம் எவ்வாறு ஏற்படுகிறது, தசை அசைவுகளாலும் மூச்சு அசைவுகளாலும் நிணநீர் ஒட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலத்தின் வேலைகள் யாவை? 1. ஊட்டப்பொருள்களையும் உயிர்வளியையும் திசுக்களுக் களித்தல். 2. திசுக்கள் உண்டாகும் கழிவுகளை மீண்டும் குருதி யோடு சேர்த்தல். 3. உயிரணுக்களுக்கிடையே நிரம்பி அவற்றை உயிர் வாழச் செய்தல். 4. குடற் பால் குழலில் தங்கிக் கொழுப்பை உறிஞ்சுதல். 5. இதிலுள்ள வெள்ளணுக்கள் நோய் நுண்ணங்களைக் கொல்லுதல்.

    Share
  • கவர்ச்சி ஊர்வசி

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++++++

    கவர்ச்சி மேனகா !

    என்ன காரியம் செய்தாய் ?

    முட்டாள் ஆக்கினாய் ஒவ்வோர் ஆணையும் !

    முட்டாள் ஆக்கினாய் !

    கவர்ச்சி ஊர்வசி !

    என்ன காரிய செய்தாய் ?

    எல்லா விதிகளை மீறினாய் !

    விதிகளை மிதிப்பதை

    அனைவ ருக்கும் காட்டினாய் !

    கவர்ச்சி மேனகா !

    என்ன காரியம் செய்தாய் ?

    எல்லா விதிகளை முறித்தாய் !

    பொழுது வெளுத்த ஓர்நாள்

    உலகு காத்தி ருந்தது,

    ஓர் கவர்ச்சிக் கன்னி வருகைக்கு

    ஓவ்வோர் ஆணையும் மயக்கி

    அடிமைப் படுத்தி

    மூடனாய் ஆக்கிட !

    உலகு அனைத்திலும் உன்னதக்

    கவர்ச்சிப் பாவை நீதான் !

    எப்படித் தெரியும் உரைப்பாய்

    இப்புவி காத்துள துனக்காய் ?

    இப்புவி காத்துள துனக்காய் ?

    கவர்ச்சி மாதே !

    எப்படி அறிவாய் நீயும்

    தப்பா தெல்லாம் வீழும் என்று ?

    கவர்ச்சிக் கன்னி

    உன்பீடச் சிகரம் எட்டா உயரம் !

    உன்காலில் வீழும் உலகு !

    பொன் பொருள் யாவும் ஈந்தோம்

    உன்னருகே அமர,

    உன் புன்னகை காண,

    உன்னிழலில் குளிர !

    கவர்ச்சி அணங்கே !

    புவிப் பேரழகி !

    புதுப் பேரழகி !

    உன்னழ குக்கு ஈடில்லை

    உலகில் !

    ஒவ்வோர் ஆணையும்

    உலகில்

    முட்டாள் ஆக்கினாய் நீ !

    முடவன் ஆக்கினாய் நீ !

    முதிர்ச்சி

    அறிவில் லாத நீ !

    +++++++++++++

    Share
  •  கருவூரார் திருவுள்ளம்

    முனைவர் இரா. மதன் குமார்

    முன்னுரை

    ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவராகிய கருவூரார் அருளிச்செய்த திருப்பதிகங்கள், பத்து. ‘கருவூர் சித்தர்’ என்ற பெயரால், மக்களால் நன்கறியப்படுகின்ற அவர்தம் திருப்பதிகங்கள், மெய்யியல் அனுபவப் பதிவுகளாகவும், இறைவனால் அவர் ஆட்கொள்ளப்பெற்ற அருளியல் பதிவுகளாகவும் விளங்குகின்றன. சீரிய உவமைநயங்களால் பாடுபொருளை எடுத்துரைக்கின்ற பாங்கினையும், சைவநெறிகளைத் தத்துவநோக்கில் எடுத்தாளுகின்ற போக்கினையும் அவர்தம் திருப்பாடல்களில் காணலாம். தமது திருப்பதிகங்கள் வழியே,  அவர் பக்திநெறி காட்டுகின்ற திறமானது இக்கட்டுரையில் ஆய்ந்துரைக்கப்பெறுகிறது.

    கருவூரார் திருப்பதிகப் பொருள்நிலை

    தில்லைத் திருத்தலத்தில், இறைவன் கோயில் கொண்டுள்ள நிலையினை, அதன் இயற்கைச் சூழலுடன் கோயில் திருப்பதிகமாகப் பாடியுள்ளார். இறைவனின் திருஅழகினை உருக்காட்சியாகக் காட்டுவதாக, திருக்களந்தை ஆதிச்சேச்சரத்துத் திருப்பதிகம் விளங்குகிறது.  இறைவனார், தமக்கு அருளியவகையினை திருமுகத்தலைத் திருப்பதிகத்திலும், கங்கைகொண்ட சோளேச்சரத்துத் திருப்பதிகத்திலும் குறித்தருளியுள்ளார். திருப்பூவணத் திருப்பதிகம், பல்பொருள் பதிகமாகவும், திருச்சாட்டியக்குடித் திருப்பதிகம், இறைவரது பெருமையையும், அத்தல அந்தணர்க்குப் பெருமான் அருளுதலையும் விளக்குகின்றன. திருஇடைமருதூர் திருப்பதிகத்தில், தமக்கு ஞானக்கண் விழிப்பருளி, உயிர்களை வாழ்விக்கப் பாமாலை பாடுதற்கு வரமருளிய சிறப்பினைக் குறித்துள்ளார். அத்துடன், ‘அகத்துறை வழியே, அருள்துறையைப் பாடுதல்’ என்னும் நோக்கில்,  திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்,  திரைலோக்கிய சுந்தரம் மற்றும் தஞ்சை இராசராசேச்சரம் ஆகிய திருப்பதிகங்களையும் அருளியுள்ளார்.  இவற்றுள் மண்ணாசை, பெண்ணாசை மற்றும் பொன்னாசை ஆகியன, அரனை அடைதற்குரிய வகையில் அமையக் கருவூரடிகள் அறிவுறுத்துகின்றார்.

    கருவூரார் திருவுள்ளம்

    முக்கண் பரமனார், பிச்சை உகக்கின்ற பெருமானாக வந்து, அடியார்தம் வினைகளைத் தமது கையோட்டில் ஏற்றருள்கின்றார் என்பது தத்துவநோக்கு. ‘வானவர் அனைவரும், பெருமானின் ஆணையின்வண்ணம் சேவை செய்யக் காத்திருக்கின்ற வேளையில், பெருமானோ, மண்ணுலகில் உயிர்கள் உய்யும்பொருட்டு, அவற்றின் தீவினைகளைப் பிச்சையேற்று அவற்றை உய்விக்க இரங்கியருள்கின்றான்’ என்கின்றார் கருவூரடிகள்.

    ‘இந்திர லோக முழுவதும் பணிகேட்டு

                                  இணையடி தொழுதெழத் தாம்போய்

                          ஐந்தலை நாக மேகலை யரையா

                                  அகந்தொறும் பலிதிரி யடிகள்’                            (9ஆம் திருமுறை:17: 2)

    பெருமானது மெய்யடியாராகிய கருவூரரும் உயிர்கள்தம் வினைகளைப் பிச்சையாக ஏற்று,  அவை பிறவிப்பிணி நீங்கி உய்ய, தமது அருஞ்சொல் மாலைகளைத் தந்தருளியுள்ளார். ‘அங்கை ஓடு ஏந்தி பலிதிரி கருவூர்’ என்பது, திருப்பதிகத்தின்வழி, கருவூரடிகள் தம்மைச் சுட்டியுள்ள அகச்சான்றாகும். பக்திநெறியினை வாழ்வியலாக அல்லாமல், வெற்றுச் சடங்குகளாகவும், வீண் பயிற்சிகளாகவும் மேற்கொள்கின்ற பொய்யர்தம் அறிவு, சிற்றறிவாகவே விளங்கும்.       அருள்கடலாக விளங்கவல்ல இறைவனைச் சிற்றறிவுடைய உயிர்களால் நிறைவாக ஆய்ந்தும், அறிந்தும், இன்புற இயல்வதில்லை. அதனால்,  ‘நாடகத்தால் உன் அடியார் போல நடிக்கின்றேன்’ என்று கலங்கி பல்லுயிர்களும், பிறவியென்னும் பெருஞ்சுழியில் பட்டு மாய்கின்றன.  உயிர்கள், அறியாமை என்னும் பெருஞ்சுழியிலிருந்து விடுபட்டு, பிறவி என்னும் பெருங்கடல் நீந்திக் கரையேறுதற்குக் கருவூரர்தம் திருப்பதிகங்கள் சிறந்த வழித்துணையாகின்றன.

     ‘அங்கையோடேந்திப் பலிதிரி கருவூர்

                                          அறைந்த சொன்மாலையால், ஆழிச்

                                  செங்கையோ டுலகில் அரசுவீற்றிருந்து

                                         திளைப்பதுஞ் சிவனருட் கடலே’                     (9ஆம் திருமுறை:8: 2)

    என்று கருவூரடிகள், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து, பேரின்பமாகிய அருள்கடலில் திளைக்க வழிகாட்டுகின்றார்.

    உடல் என்னும் உத்தமனார் விமானம்

    ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி’ என்றமைந்த கடுவெளிச் சித்தர்தம் பாடல், உடலிடத்தே இடம்கொண்ட உத்தமனை மறந்து, நிலையில்லாச் சிற்றின்பச் சேற்றில் உழல்கின்ற உயிர்களின் அவலத்தைச் சுட்டியுரைப்பதாகும். அத்தகைய அவலம் தமக்குத் திருவருள் துணையால் நேரிடாத வகையினைக் கருவூரடிகள் விளக்கியுரைக்கின்றார்.

    ‘மனித வாழ்க்கையோ, சிற்றின்பச் சேறு; அதற்கென அமைந்த உடம்போ, பச்சை மண்ணாக, வாழ்நாள் என்னும் பெருமழை வெள்ளத்தில் கரைந்து அழியக்கூடியது. இதுவே சிற்றறிவுடைய மனிதர் வாழ்க்கை. ஆனால், தமது வாழ்க்கையால், மண்ணுலகு முழுமையும் பயன்பெறும்படி முகத்தலைப் பெருமான், முப்புராதியர்க்கும் அருளிய பாங்கினோடு, தனக்கும் அருள்செய்தார்’ என்று கருவூரார் அருளியுள்ளார். ‘முப்புரமாவது, மும்மல காரியம்’ என்பது திருமூலரின் திருநோக்கு. அவ்வகையில், அளவுகடவாத மண்ணாசை, பெண்ணாசை மற்றும் பொன்னாசை எனப் பண்பட்டால், உயிர்கள் இறைவனை உணர்ந்துய்யலாம். அதற்கு, ‘ஐம்புலன்களால் ஆன உடம்பே கருவி’ என்கின்றார்.

    திருவருள் துணையால், தமது ஐம்புலநாட்டம் அளவுகடக்கவில்லை. அதனால்,  ‘இறைவனைச் சார்தல்’ என்னும் அகத்தீ தம்முள் மேலெழுந்தது; அத்தீயானது மெல்லப் பெருகி, உடலைச் சுட்டு, உத்தமனுக்குரிய விமானமாக்கியது’ என்கின்றார்.

     ‘புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்

                                  பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்

                         வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்

                                  மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே

                         முனைபடு மதில்மூன் றெரித்த நாயகனே

                                  முகத்தலை யகத்தமர்ந் தடியேன்

                         வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்

                                  விழுமிய விமானமா யினதே’                                                (9:11:6)

    திருவருள் துணையால் உயிர்கள் இத்தகைய அரும்பேற்றுக்கு ஆட்படுதற்கு, தம்மியல்பினை உணர்தலாகிய மெய்யுணர்வுக்கு நாளும் தலைப்படவேண்டும்’ அதனைக் கருவூரார், ’திருந்துயர் பருவத்து அறிவுறுதல்’ என்று குறித்தருள்கின்றார்.

    திருந்துயர் பருவத்து அறிவுறுதல்

    இறைவன், இன்பமே  வடிவானவன். அனைத்துயிர்க்கும் இன்பம் அருள்கின்ற அவனது அளப்பருந்தன்மையால் அவன், ‘சங்கரன்’ எனப்பெறுகின்றான். அவனால் பிறப்பூட்டப்பெறுகின்ற உயிர்கள், இன்பநுகர்ச்சியே தமது இயல்பாக விளங்கவல்லவை. கருவெனத் தோன்றுகின்ற நொடி முதலாகவே அனைத்துயிரினுள்ளும் இறைவன் நிறைந்திருந்து அவற்றை, தனது நிலையாகிய பேரின்பத்துக்கு ஆற்றுப்படுத்த வல்லவன். பெற்றதாயினும் இனிய பெருமானின் கருணையாகி பெருந்திறத்தைக் கருவூரடிகள், ‘தாயின் நேர் இரங்குபவன்’ (9:8:3), ‘அன்னை ஒக்க அமுதூட்டுவான்’ (9:8:8), ‘தாயினும் நல்ல முக்கணான்’ (9:9:1) என்று போற்றியுள்ளார். பெருமானின் இத்தகைய பெருந்திறத்துக்கு ஆட்படுதற்கு, உயிர்க்கு மெய்யறிவு வாய்த்தல் வேண்டப்படும். அறிவாய், அறிதத்துவமாய், அறிபொருளாய், அதன்வழியான இன்பம் என அனைத்துமாக விளங்கவல்ல பெருமான், தன்னை அறிவித்து, தன்னிலையாகிய இன்பத்தை அனைத்துயிர்க்கும்  அருளவேண்டி,  அணுப்பொழுதும் உயிருக்குள் உயிராக இருந்து அவற்றை இயக்குகிறான். ஆனால், உயிர்களின் அறியாமையால், அவை மலச்சார்பில் கட்டுண்டு, இறைவனை உணர இயலாதவகையில், கீழ்நிலையில் செல்கின்றன. ஆணவம் முதலான மும்மலங்களின் உருவாகி, அவமே புரிந்து திரிந்த முப்புராதிகளின் அறியாமையைப் பெருமான் பொறுத்தருளி, அவர்களைத் தமது அடியவர்களாகவும் ஏற்றருளிய பெருந்திறத்தைக் கருவூரார்,

     ‘நிசிசரர் இருவரோ டொருவர்

    காதலிற் பட்ட கருணையாய்’                                     (9:13:7)

    என்று குறித்தருளியுள்ளார். வினைவயத்தால் தம்மை மறந்த திரிபுராதியரிடத்திலும் காதல் கொண்டு கருணைசெய்த பெருமான், உயிர்க்குயிராக, உயிரில் கலந்திருத்தலை உயிர்கள் கணப்பொழுதும் கருதுவதில்லை. மாறாக, உடன்தோன்றி, அறியாமைக்கு வாயிலாகி, உயிரறிவைக் கீழ்நிலைக்குத் தள்ளுகின்ற ஐம்புலன்களையே, நாளும்நாளும் உறுதியாக நம்பி, வாழ்வைக் கீழ்நிலையில் செலுத்துகின்ற சிற்றின்பத்தில் ஆழ்கின்றன. பெறுவதற்கு அரிய மனிதப் பிறப்பினைப் பெற்றிருந்தும்கூட, அறியாமையால் உயிர்கள், சிற்றின்பச் சார்பே தமது நிலையென விளங்குகின்றன. அதனால், ஐம்புல இன்பத்தில், சிந்தை மயங்குகின்றன. ஐம்புலப் பகைமை அகற்றி, அகவொளி ஏற்றுகின்ற பாங்கில்,

    ‘இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்

                                 ஏழையேற் கென்னுடன் பிறந்த

                         ஐவரும் பகையே’                                                                     (9:8:2)

    எனக் கருவூரார் நன்னெறி உரைக்கின்றார். இவ்வாறு,  உயிர்களுக்கு ஐம்புலச் சேட்டைகளால் விளைகின்ற பெருந்துன்பங்களைத் தாமுற்ற துன்பமாகக் கருதிப் பாடுகின்றார்.

    வினைகளாம், பாசப் பெருங்கடல்

    பொருளல்லாதவற்றைப் பொருளென மயங்கி, நிலையில்லாத சிற்றின்பச்சேற்றில் உழல்கின்ற உயிர்கள்,  திருவருளால் மீட்சி பெறுகின்ற நன்னிலையினைச் சிவஞானபோதம், நயம்மிக்க உவமையால் விளக்கியுரைக்கிறது. ‘அரசன் மகனொருவன், தனது அறியாத பருவத்தில் கானகத்தில் தனது தந்தையைப் பிரிந்தான். கானகத்தில் இருந்த வேடுவர் கூட்டத்தால் அவன் கண்டெடுக்கப்பட்டு, அன்று முதலாக வேடர் குலப் பிள்ளையாகவே வளர்ந்தான். ஆயினும், திருவருளால் உரியகாலம் வாய்க்கப்பெற்று, கானகத்தில் தன் மகனைக் கண்ட அரசன், அவனது உயர்ப்பிறப்பு முதலானவற்றை உணர்த்தி, அவனைத் தன்பால் மீளக்கொண்டு இளவரசன் என்ற உண்மைநிலையாகிய உயர்வளித்தான்’ எனச் சிவஞானபோதம் விளக்குகிறது.

    ‘அரசன், கானகத்தில் பிரிந்த தன் மகனை உடனே கண்டு பிடித்திருக்கலாமே?; அவனது செல்வாகினால் ஆகாத ஒன்றில்லை என்னும்நிலையில், பல காலம் கழிந்து அவன், தன்மகனைக் காணநேரிட்டது ஏன்?’ என்னும் வினா எழுகிறது. ‘அவன் அரசனே என்றாலும், அவன் பிள்ளையைப் பிரிந்து வாடவேண்டும்’ என்பதும், அப்பிள்ளையும், ‘தனது பெற்றோரைச் சில காலங்கள் பிரிந்து, தனது செல்வாக்கினை மறந்து, வேடனென வாழவேண்டும்’  என்பதும் அவர்களது வினைப்பயனாக அமைந்தது எனலாம். இராமாவதாரத்தில், தசரதன் பிள்ளைக்காக ஏங்கியமையும், பெருவரமாகப் பரம்பொருளையே பிள்ளையாகப் பெற்றும்கூட, கண்பார்வைத் திறனற்ற பிள்ளை மீது அறியாமல் அம்பெய்திய தீவினைப்பயனால் அவன், இராமனைப் பிரிந்து, அவன் பொருட்டு உயிர்த் துறக்கவும் நேரிட்டதை இவ்விடத்தில் நினையலாம்.

    பல பிள்ளைகளுக்கும் தாயொருத்தியே என்றாலும், அவற்றின் குணமும் அறிவும் நடத்தையும் வேறுபடக் காண்கிறோம். அந்நிலையில், ஒவ்வொரு குழந்தைக்குமான வளர்ப்பும், அணுகுமுறையும் அவளிடத்தில் வேறுபடுகின்றன. ஆயினும், குழந்தைகளிடத்தில் அவள் கொள்கின்ற தாயன்பு ஒரு நாளும் மாறுபடுவதில்லை. காட்டாக, சமயக்குரவர் நால்வர்க்கும் இறைவனார்,  தாயாக நின்றருளினார். திருஞானசம்பந்தப்பெருமானுக்கு, அறக்கருணையாகப் பாலைத் தந்து ஆட்கொண்ட பெருமான், திருநாவுக்கரசுப் பெருமானுக்கு, மறக்கருணையாகச் சூலையைத் தந்து ஆட்கொண்டார். அதுபோன்றே சுந்தரர்பெருமானுக்கு, இருவகைக் கருணையாலும் ஓலை தந்து அருள்செய்தார். மணிவாசகர் பொருட்டு, தாமே ஞான குருவாகிவந்து ஆட்கொண்டார். ‘தமதுரை, சிவனுரைத்தவையாக, பாடிப் பாடி, தேடித் தேடி உருகுதற்குப் பேறுபெற அவர்களது முந்தை வினைப்பயனே காரணம் எனலாம்.  ‘ஏடுடைய மலரால், அரனைப் பூசித்ததன் பெரும் பயனே, திருஞானசம்பந்தர்தம் மறுபிறப்பில், அம்மையால் ஞானப்பாலமுதூட்டும் வகையில் ஆட்கொள்ளப்பெற்றார். இவ்வாறே பிற குரவர் பெருமக்கள்தம் மண்ணுலகவாழ்வும், உலகம் உய்ய அமைந்த சைவப் பெருவாழ்வாக அமைந்திலங்க அவர்கள்தம் மெய்யறிவே வகைசெய்தது எனலாம். அவர்கள் பாடிப்பரப்பிய பெருநெறியே, அறுபத்துமூவர் முதலானோரின் மண்ணுலக வாழ்வும் அருளுடைய திருவாழ்வாக மலரத் துணைசெய்தது. அம்மேன்மக்கள் இறைவனை உணரத் துணைநின்ற வாழ்க்கைச்சூழலையே  கருவூரடிகள்,  ‘திருந்துயர் பருவம்’ என்று அறிவுறுத்துகின்றார்.

    அறிவுற்றோர் திருவாழ்க்கை

    மனிதராகப் பிறந்த அனைவருக்கும் அத்தகைய வாய்ப்பினைப் பெருமான் அருளவல்லவன்; ஆயினும், அதனை உணர்கின்ற அறிவுநிலையிலான பக்குவத்தை நாம் அனைவரும் பெற விழைவதில்லை. ‘தமது மனைவியார், திருநீலகண்டத்தின் மீது உரைத்த ஆணையின் வண்ணம், அவரைத் தீண்டாத திருநெறியினராக வாழ்ந்திட்ட திருநீலகண்டரைப் போன்றோ, செல்வம் அனைத்தாலும் அடியார்க்கு அன்றாடம் அன்னமிடுகின்ற திருத்தொண்டு புரிந்துயர்ந்த இளையான்குடிச் செல்வரைப் போன்றோ, திருநாவுக்கரசரது தொண்டின் உரைப்பினைக் கேட்டு அவர்க்கே அடிமையாகி, தொண்டு செய்ய விழைந்து, வாசிப்பதும், நேசிப்பதும், சுவாசிப்பதும், ‘திருநாவுக்கரசு’ என்னும் திருநாமமென்று விளங்கி உயர்ந்த அப்பூதி அடிகள் போன்றோ, ‘யான் பெற்ற இன்பம்; பெறுக இவ்வையகம்’ என்று வாழ்ந்த திருமூலரைப் போன்றோ, அனைத்தையும் நாம் துறந்து, துறவுநிலை வாழ்க்கையினை மேற்கொள்ள வேண்டும்’ என்று கருவூரடிகள் வலியுறுத்தவில்லை. மாறாக, ‘பெருங்கடலிற் காயம் கலந்த செய்கை’ யெனப் பயனற்றுச் செயல்புரியாது, கொண்ட மனிதப்பிறப்பினைப் பெரும்பயன் உள்ளதாகப் பண்படுத்திக் கொள்வதற்கு அறிவுறுத்துகின்றார்.

    இறைவனைச் சார்தலாகிய மெய்யுணர்வும், மெய்யுணர்வின் நிலைப்பினால் பெறப்படுவதாகிய மெய்யறிவும் வாய்ப்பதற்கு, ‘தன்னை உணர்ந்து, தன்னுள் தெளிதல்’ என்னும் பக்குவநிலையினைக் கருவூரடிகள் வலியுறுத்துகின்றார். ‘சிவத்தைச் சார்தலே தனது உண்மை நிலை’ என்று தெளிந்து, தன்னுள் சிவத்தின் இருப்பினை உணர இயலாத உயிர்களின் அவலம் சொல்ல ஒண்ணாதது. ‘ஓடி ஓடிச் சேர்க்கின்ற செல்வம், கனவு போல உடனே மறையக் கூடியது; அச்செல்வத்தைக் கருவியாக்கி, சிவத்தைச் சார்ந்து அறம் புரிவதில்லை. அச்செல்வத்தின் பயன் பெண்ணின்பம் துய்த்தலே’ என்றவாறு, பயனற்று வாழ்கின்றீர்கள்’ என உயிர்களின் அறியாமைக்காக இரங்குகின்ற அடிகள், ‘நிலையில்லாத செல்வத்தைச் சேர்ப்பதிலும், பெண்ணின்பத்தைப் பேணுவதிலும் கொள்கின்ற ஆர்வத்தில், இலட்சத்தில் ஒரு பங்கைச் சிவத்தைச் சார்வதற்குக் கொண்டால், அமரருலகப் பேற்றுக்குஉயரலாம்’ என்றுரைக்கின்றார்.

     ‘அக்கனா அனைய செல்வமே சிந்தித்

                                 தைவரோ டென்னொடும் விளைந்த

                         இக்கலாம் முழுதும் ஒழிய’                                       (9 :11: 5) என்றும்,

                         ‘தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த

                                 தயாவைநூ றாயிரங் கூறிட்டு

                          அத்திலங் கொருகூ றுன்கண்வைத் தவருக்

                                 அமருல களிக்கும்நின் பெருமை’                 (9 :11: 5) என்றும்

    அமைந்த நன்னெறிகளை ஏற்காத உள்ளத்தை, ‘கருங்கல்லும் பார்த்து நகைக்கின்ற இழிவுடையது’ என்கின்றார்.

    ‘கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண்

                       கசிவிலேன் கண்ணின்நீர் சொரியேன்

                முன்னகா வொழியேன்’                                         (9:11:3)

    என்றமைந்த தொடர்கள், ‘பெருமானை நினைந்துருகாத உள்ளம் கொண்ட உடலும் பயனற்றதே’ என்றுணர்த்துவன.

    காலம் இதுவே; விரையுங்கள்

    ‘பிறப்பானது, இலை தளிர்ப்பது போன்றது; இறப்பு, தளிர் இலை, பழுத்து உதிர்வது போன்றது. இடைப்பட்ட சிறிது காலமே வாழ்க்கை. அச்சிறு நாளில், உடல்கொண்டு உத்தமனைச் சாராது, ஐம்புலச் சார்பின் அறியாமையால், காலத்தை அவமே போக்குகின்றீர்கள்; பின், இறப்பு நேரிடுங்கால் பெருமானை நினைந்து எவ்விதப் பயனும் இல்லை’ என்பதனை,

     ‘தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்

                                          தளிர்இறப் பிலையுதிர் வென்றால்

                                   நினைப்பருந் தம்பாற் சேறலின் றேனும்

                                          நெஞ்சிடிந் துருகுவத தென்னோ’               (9:16:7)

    என்று அறிவுறுத்தியுள்ளார். ‘பிண்டமே, அண்டத்தின் விரிவு’. அதை உணராத சிற்றறிவினால், உடல் வீணே மண்ணுக்கு இரையாவதைத் தவிர்க்க இயலாது. உயிர்களின் இவ்வறியாமை நிலையினை, தலைவியின் நிலையாகப் பதிவுசெய்கின்றார்.

    ‘முழுவதும்நீ யாயினும்இம்

                                          மொய்குழலாள் மெய்ம்முழுதும்

                                   பழுதெனவே நினைந்தோராள்’                      (9:12:6)

     

     

     

    பேரறிவால்  சிவத்தையே சார்கின்ற பெற்றி

    ’வாய்த்தது நந்தமக்கு ஈதோர் மனித்தப் பிறவி மதித்திடுமின்’ என்பது, திருநாவுக்கரசுப் பெருமானின் அறிவுரை. முந்தைய நல்வினைப் பயனே நமக்குப் பெற்றகரிய மனிதப்பிறப்பைப் பெற்றுத்தருகிறது. அப்பிறப்பினைக் கருவியாகக் கொண்டு, நாம் பிறவாமை என்னும் பெருநிலையினைப் பெற்றுய்யவேண்டும். காரணம், ஈ, எறும்பு முதலான குறையறிவுடைய உயிர்களும்கூட இறைவனைப் பணிந்து, பெறற்கரும் பேறுபெற்றுச் சிறந்தமைக்கு முறையே திருஈங்கோய்மலையும், திருஎறும்பியூரும் சான்றாக உள்ளன. ஆனால், ஆறறிவால் பண்பட வேண்டிய நாமோ, உண்டு, உடுத்து, உயிர் வளர்க்கின்ற சிற்றின்பமே பெரிதெனக் கருதி, மனிதப் பிறப்பினைப் பயனின்றிக் கழிக்கின்றோம். உயிர்களை, தொடர்ந்த பல்பிறப்புகள் என்னும்  பிறவிச்சுழலுக்கு ஆட்படுத்துகின்ற வினையின் அவலத்தைக் கருவூரார்,

    ‘கடுவினைப் பாசக் கடல்’                              (9: 14: 5)

    என்று உருவகிக்கின்றார். இவ்வாறு, அறிவு மயங்கிய வாழ்க்கையினைக் கருவூரடிகள், ‘மைக்கடா அனைய கிடக்கின்றோம்’ என்று இடித்துரைக்கின்றார்.

    உணர்வற்று, தன்னை மறந்து, அறியாமைச் சேற்றில் உழல்கின்ற எருமைக்கடாவைப் போன்று வாழ்கின்ற நமது அறியாமையாகிய அவலத்தை அடிகள் தம்பால் ஏறிட்டுக்கொள்வது, அவர்தம் கருணையுள்ளத்தின் வெளிப்பாடு. அந்நிலை அகன்று, மண்ணில் நல்ல வண்ணம் வாழ, பக்திநெறி துணையாக வேண்டும். ‘காய்ச்சப்படுகின்ற பாலிலிருந்து நீர் முதலில் அகன்று, தூயபால் மட்டும் எஞ்சிநின்று  பயன்தரும். அதுபோன்றே,  பல பிறப்புகளிலும் உயிரின் தீவினைப் பயன்கள் துய்த்தொழிக்கப்படுகின்ற நிலையில், எஞ்சிய நல்வினைப் பயனால் உயிர்க்கு,  பெறுதற்கு அரிய மனிதப்பிறப்பும் வாய்க்கும். அப்பிறப்பில் மனம், வாக்கு, காயம் ஆகிய முக்கரணங்களாலும் புரிகின்ற சிவபுண்ணியங்களாகிய நல்வினைகள், திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதத்தையும், மலபரிபாகத்தையும் உயிரறிவில் விளங்கச்செய்து,  சரியை முதலான தவங்களுக்கு ஆட்படுத்தும்’ . இத்திருநெறியினைக் கருவூரடிகள்,

    ‘பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற்

                                          பாவமுன் பறைந்துபா லனைய

                                  புண்ணியம் பின்சென் றறிவினுக் கறியப்

                                          புகுந்ததோர் யோகினிற் பொலிந்து’                (9:13:9)

    என்று அறிவுறுத்துகிறார்.  அன்றாட வாழ்வின் அனைத்துச் செயல்களும் சிவபுண்ணியங்களாக விளைவதற்கு, உண்பதும், உடுப்பதும், கேட்பதும், பார்ப்பதும், நுகர்வதும், திருவருளாணையால் நிகழ்வனவே என்றுணர்கின்ற மெய்யுணர்வில் நிலைக்கவேண்டும். செய்கின்ற செயலிலும், அதன் பயனிலும், பற்றொழிக்க வேண்டும். காரணம், செயலின்பால் கொள்கின்ற ஈர்ப்பு, தன்முனைப்பையும், ‘யான்’,‘எனது’ என்னும் ஆணவப்பற்றையும், ‘யான் மட்டுமே வெற்றிகொண்டு அனைத்தையும் ஆளவேண்டும்’ என்றவழி, தீராத வினைத்தொடர்பையும், அதைத் துய்த்துத் தீர்க்கின்ற துன்பப்பிறவிகளையும் அடுக்கடுக்காகத் தரும். எனவே, பற்றொழித்த உள்ளத்தால் பரமனுக்குப் பணிசெய்க’ என்பவராக,

    ’உண்ட ஊண் உனக்காம் வகை’                        (9:13:6)

    எனப் பாடுகின்றார். ‘அன்றாடம் உண்ணுகின்ற உணவானது, வீணே உடலை வளர்ப்பதற்கு என்றில்லாமல், சிவப்பணியாகிய அறப்பணிக்காக அமைதற்குத் திருவருள் கூட்டவேண்டும்’ என்று பணிகின்றார்.

    பணி செய்வார்க்கு இரங்கும் பசுபதி

    அரும்பொருளான இறைவனைப் பெறுவதற்கு இயைந்த நன்னெறியாகிய சரியை முதலானவற்றுக்குத் தலைப்பட, அடியார் இணக்கமே கருவியாகும்.  அவ்வடியார்கள், தொண்டில் நிலைப்புடையவர்கள். அவர்களே உண்மையடியார்கள். அவர்கள், வாழினும், தாழினும், தொண்டிலிருந்து ஒருபொழுதும் நிலைப்பெயராதவர்கள். அவர்கள், ‘அவமே புரியார்’ என்பது கருவூரடிகள்தம் திருவாக்கு. அவர்களைச் ‘செம்மனக் கிழவோர்’ என்று கருவூரடிகள் போற்றுகின்றார். ‘அவர்களுடன் கூடி பணிசெய்வதே பெருமானைப் பெற்றுத்தரும்’ என்று சாற்றுகின்றார். ‘பணி செய்வார்க்கு இரங்கும் பசுபதி’  என்பது, கருவூரடிகளின் உறுதித்திருவாக்கு. பெருமான்,  தம்மையும் செம்மனக் கிழவோராகிய அடியார்களுடன் கூட்டுவித்தருளிய அருள்சிறப்பினைக் கருவூரடிகள்,

     ‘கண்பனி  அரும்பக் கைகள் மொட்டித்தென்

                                 களைகணே ஓலமென் றோலிட்

                        டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்

                                 தென்னையும் புணர்ப்பவன்’                                               (9:8:5)

    எனப் போற்றியமைகின்றார்.

     

    முடிவுரை

    அளவு கடவாத ஐம்புல நாட்டமும், அடியவர்களை என்றும் இணைபிரியாதத் தொண்டுள்ளமே,  நம்மை அன்புநெறிக்கு ஆட்படுத்தும். அன்புநெறி, அனைவரையும் உறவாகக் கருதுகின்ற இன்பத்தைத் தந்தருளும். அனைவரும் உறவாக விளங்குகின்ற சுற்றுப்புறமே, சிவனிருப்பாக நம்மால் உணரப்படும். அந்நிலையில், உயிருள் பொருளும், உயிரில் பொருளும் சிவனிருப்பாக விளங்குதலை உணரலாம். அவ்வாறு பண்பட்ட கருவூரடிகளது கருணைத் திருநோக்கமே, போகத்துயில் கொண்ட புன்மக்களாகிய நமது அறியாமைக்கு மருந்தாகிய திருப்பதிகங்களைத் தந்துள்ளது.

     ‘ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள்

                                            உறங்கிருள் நடுநல்யா மத்தோர்

                                   கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்

                                            கனந்தெனக் கலந்துணர் கருவூர்’                    (9: 17: 10)

    என்று பாடி கருவூரார், தமது பதிகச் சொல்மாலைகளின் திருநோக்கத்தைத் தலைக்கட்டியுள்ளார். அவர்தம் திருப்பதிக  நெறிவழியே,   அனைத்துயிரும் பிறவாமைக்குத் தலைப்படுவதே, அடிகளின் திருவுள்ளம்.

     

    ஆய்வுத் துணைநூல்கள்:

    1. ஒன்பதாம் திருமுறை, வசந்தகுமார்.இரா.,டாக்டர்., (ப.ஆ).,

    பன்னிரு திருமுறை ஆய்வுமைய வெளியீடு,

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

    1. சிவஞானபோதம், திருநெறி வரிசை, www.thevaaram.org

    கட்டுரையாளர்

    முனைவர் இரா. மதன் குமார்., இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • அகநானூறும் பாலையின் முப்பொருளும்

    முனைவர் ம. தமிழ்வாணன்

    உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் முதன்மையானது தமிழ். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற பிற செம்மொழிகளும் போற்றத்தக்கன. இருப்பினும் தமிழ்மொழியே தனித்துவம் மிக்கது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே தரப்படுத்தப்பட்டது. எந்தமொழியிலிருந்தும் கடன் வாங்காத வேர்ச்சொற்களின் வளமுடையது. எக்காலத்தும் உயிர்த்துடிப்புடைய இளமைக்குன்றாத இலக்கிய வளம் கொண்டது. தமிழ்மொழி உலகிற்கு அளித்தக் கொடைகள் ஏராளம் எனலாம். அந்த வகையில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பேறுபெற்றுத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் வாழ்க்கையை திணையின் அடிப்படையில் பிரித்துக் கொண்டனர். இவர்களிம் வாழ்வு அகம், புறம் சார்ந்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதால் இவற்றைச் சார்ந்தே சங்க இலக்கியங்கள் தோன்றின. இத்தகைய சூழலில் அகத்தைப் பற்றிக் கூறும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் பற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

    அகநானூறு

    சங்க இலக்கியத்தில் பதினெண் மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பொருள் வகையால் அகம், புறம், அகப்புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூலே அகநானூறாகும். இதற்கு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு போன்ற வேறுபெயர்களும் உண்டு. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில் பாடப்பட்டுள்ளன. அகநானூற்றில் சரிபாதிப் பாடல்கள், அதாவது இருநூறு பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள் ஆகும். இந்நூல் முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டிருக்கிறது. அவை:

    1. களிற்றியானை நிரை (1 – 20)
    2. மணிமிடை பவளம் (121 – 300)
    3. நித்திலக்கோவை (301 – 400)

    என்பனவாகும். இப்பகுப்பினை,

    களித்த மும்மதக் களிற்றியானை நிரை

              மணியொடு மிடைந்த அணிகினர் பவளம்

              மேவிய நித்திலக் கோவை என்றாங்கு

              அத்தகு பண்பின் முத்திறமாக

              முன்னினர்த் தொடுத்த நன்னெடுந் தொகை

    என்று சிறப்புப் பாயிரம் சுட்டிக்காட்டுகிறது. இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன பாடல்களை உடையது. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப் பாக்களுடன் 401 பாடல்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 145 புலவர்கள் பாடிய பாடல்கள் 13 அடி முதல் 31 அடிவரையுள்ள நெடிய பாடல்களாகும்.

    திணையும் பாடலும்

    அகநானூற்றைப் பொறுத்தவரை பாடலின் எண்ணைக் கொண்டு இன்ன திணைப்பாடல் எனச் சுட்டிக்காட்ட முடியும். அந்த வகையில் புலவரின் தொகுப்புத்திறனும் பகுப்புத்திறனும் பாராட்டிற்குரியன. இதனை,

    ஒன்றுமூன்று ஐந்து என்பதன் பாலை; ஓதாது

              நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே

              ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு

              கூறாதவை குறிஞ்சிக் கூற்று

    என்னும் வெண்பாப் பாடல் எடுத்துக்காட்டுகிறது. அதன் திணைப் பகுப்பு விவரம் வருமாறு,

    1. 1, 3, 5… 399 – பாலைத்திணைக்கு உரியவை
    2. 4, 14, 24… 394 – முல்லைத்திணைக்கு உரியவை
    3. 6, 16, 26 …. 396 – மருதத் திணைக்கு உரியவை
    4. 10, 20, 30…. 400 – நெய்தல் திணைக்கு உரியவை
    5. 2, 8…. 392, 398 – குறிஞ்சித் திணைக்கு உரியவை

    எண் அடிப்படையில் அகநானூற்றில் குறிப்பிட்டுள்ள திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை வருமாறு,

    பாலைத்திணைப் பாடல்கள் – 200

    முல்லைத்திணைப் பாடல்கள் – 40

    மருதத்திணைப் பாடல்கள் – 40

    நெய்தல் திணைப்பாடல்கள் – 40

    குறிஞ்சித்திணைப் பாடல்கள் – 80

    தொகுத்தவர் – உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்

    தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

    பாயிரம் இயற்றியவர் – இடையல நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்ல தரையனார்.

    கடவுள் வாழ்த்து – பாரதம் பாடிய பெருந்தேவனார்.

    பாலைப் பாடிய புலவர்கள்

    அகநானூற்றில் இடம்பெற்றுள்ள 200 பாலைத்திணைப் பாடல்களில் இரண்டினைப் பாடியோர் பெயர் தெரியவில்லை. எஞ்சியுள்ள 198 பாடல்களைப் பாடிய புலவர்களின் வரிசையைக் காண்போம். ஒரு புலவரால் பாடப்பட்ட 62 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மூன்று பாடல்களைப் பாடியோர் மூவரும் இரண்டிரண்டு பாடல்களைப் பாடியோர் எண்மரும் நான்கு பாடல்களைப் பாடியோர் நால்வரும் இடம் பெற்றுள்ளனர்.    குடவாயிற் கீர்த்தனாரும் நக்கீரரும் தலா ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளனர். கல்லாடனார் எழு பாடல்களைப் பாடியுள்ளார். எயினந்தை மகனார் இளஞ்கீரனார் அவர்கள் ஒன்பது பாடல்களைப் பாடியிருக்கிறார். பாலை பாடிய பெருங்கடுங்கோ, கயமனார், மருத இளநாகன் போன்ற மூவரும் தலா 12 பாடல்களைப் பாடியுள்ளனர். சிறப்பிற்குரிய மாமூலனார் 27 பாடல்களைப் பாடியுள்ளார். இதில் பாலை பாடுவதில் வல்லவரான பெருங்கடுங்கோவை விட மாமூலனார் அகநானூற்றில் மிகுதியான பாடல்களைப் பாடியமை அறியத் தகுந்த செய்தியாகும்.

    பாலைத் திணை

    தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்தில் திணைகள் ஐந்தெனச் சுட்டப்பட்டுள்ளது. அகத்திணைகள் ஏழு என்று பகுத்துச் சொல்லும் தொல்காப்பியர் இடைநிற்கும் ஐந்து திணைகளை அன்பின் ஐந்திணை என்று கூறுகிறார்.

    நடுவண் ஐந்திணை நடுவணது வொழிய

              படுதிரை வையம் பாத்திய பண்பே” (அகத்.2)

    இதில் பாலைத்திணை நீங்கலாக நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலம் உண்டு.

    பாலைத்திணை என்பது சுரமும் சுரஞ் சார்ந்த நிலமும் ஆகும். இதன் உரிப்பொருளாகப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் திகழ்கிறது (அகத்.14). இத்தகைய பாலைத்திணைக்குரிய சிறுபொழுது, பெரும்பொழுது பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர்,

    நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு

              முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே” (அகத்.9)

    பின்பனி தானும் உரித்தென மொழிப” (அகத்.10)

    என்று சுட்டுவதைக் காணலாம். இதனால் வேனிற் காலத்துப் பெரும்பொழுதும் நண்பகளாகிய சிறுபொழுதொடு பின்பனிக்காலமும் பாலைக்குரிய பொழுதுகளாகும் என்பது பெறப்பட்டது. பாலை நிலம் என்பது நிலையானதல்ல என்பதை அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். இக்கருத்தினைப் பற்றி இளங்கோவடிகள் ‘

    முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

    நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்

    பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (சிலம்பு.64-66)

    என்று சுட்டுவதைக் காணலாம்.

    முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே

    நுவலுங்காலை முறைசிறந்தனவே

    பாடலுள் பயின்றவை நாடும் காலை” (அகத்.3)

    தொல்காப்பியத்தில் ஒவ்வொரு திணைக்கும் மூவகைப் பொருள்கள் இருப்பதை எடுத்துக் கூறுகிறார். அவை,

    1. முதற்பொருள் – நிலமும் பொழுதும்
    2. கருப்பொருள் – கருவாய் அமைந்தவை (தெய்வம், உணவு, விலங்கு…)
    3. உரிப்பொருள் – தனிச்சிறப்பு, ஒழுக்கம்

    என்னும் பொருள்களாகும்.

    பாலையின் முதற்பொருள்

    பாலைத்திணையின் மணலாகிய (சுரவழி) முதற்பொருளை அகநானூற்றுப் பாடல்கள் வறண்ட நிலமாகவே காட்டுகின்றன. இந்நிலத்தை அடைசேர்த்தும் சேர்க்காமலும் அருஞ்சுரம் (பா.17,203,275) கோட்சுரம் (பா.27), சுரம் (பா.721,353), வியன்சுரம் (பா.361), வெஞ்சுரம் (பா.327,385) போன்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர்.

    சூரிய கதிர்களால் நிலப்பகுதி வெப்பத்தைப் பெற்றுப் பாலை நிலமானதைக் “கோடை நீடிய அகன்பெருங் குன்றம்” (அகம்.45) என்னும் பாடலடி விளக்குகிறது. மேலும் நிழற்கவின் இழந்த நீர்இல் நீளிடை அழல்அவிர் அருஞ்சுரம் (அகம்.213). கவின் அழிந்த கனைகடற்று அருஞ்சுரம் (அகம்.325). ஓங்கல் வெற்பின் சுரம்பல இறந்தோர் (அகம்.267) என்னும் அடிகள் பாலைநிலம் பற்றி எடுத்துரைக்கின்றன.

    கருவூர் நன்மார்பன், மலையும் மலைசார்ந்த இடமும் மிகுந்த வெப்பத்தின் தாக்குதலால் ஈரமற்றுச் சுரமாவதை “ஈரமில் வெஞ்சுரம்” (அகம்.277) என்கிறார். மாமூலனார் பாடிய,

    எரிகவர் உண்ட கரிபுறப் பெருநிலம்

              பீடுகெழு மருங்கின் ஒடுமழை துறந்தென

              ஊன்இல் யானை உயங்கும் வேனில்” (அகம்.233:3-5)

    என்ற பாட்டினால், ‘குறிஞ்சி நிலத்தைத் தமக்குரிய வாழிடமாகக் கொண்டது யானை. அது நெருப்பினால் எரிந்து நாசமாகியதால் கரிந்த பெரிய நிலத்தில் வாழ்ந்தது. இங்குள்ள வெப்பத்திற்கு அஞ்சிய மேகங்கள் வேறிடத்திற்குச் சென்றமையால் அங்கு மழையில்லை. அதனால் அங்கு வாழ்ந்த யானை உணவின்றி மேலிந்து காணப்பட்டது’ என்னும் செய்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    பாலைத்திணைக்குரிய பெரும்பொழுதுகள் இரண்டு அவை இளவேனில், முதுவேனில் காலங்களாகும். பின்பனி காலமும் உரியது என்பதால் முக்காலங்கள் உரியன.

    இளவேனிற்காலம் – சித்திரை, வைகாசி

    முதுவேனிற்காலம் – ஆனி, ஆடி

    பின்பனிக்காலம் – மாசி, பங்குனி

    பண்டைக் காலத்தில் கோடை காலத்தை என்றூழ் என்றும் அழைப்பர். இதனை,

    என்றூழ் நின்ற புன்தலை வைப்பு” (அகம்.21:14)

    ஈந்து குருகு உருகும் என்றூழ் நீளிடை” (அகம்.55:2)

    எறிபருந்து உயவும் என்றூழ்” (அகம்.81:9)

    என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. மேலும் வேனிற்காலத்தை யானர் வேனில் (அகம்.317) காமர் வேனில் (அகம்.341) என்றும் குறிப்பிடுவதைக் காணலாம்.

    சேரமான் இளங்குட்டுவன், வேனிற் காலத்தில் இலைகள் உதிர்ந்து பின்னர்த் தடுத்துப் பூவோடு பொலிவாய் விளங்கும் இக்காலத்தில் கதிரவனின் வெப்பத்தால் காடு காய்ந்து கிடக்கும் அங்குப் பெருங்காற்று வீசி மூங்கிலைத் தாக்கும். அதனால் சிதறி விழுந்த தீப்பொறியின் நெருப்பால் பசுமை இழந்த மலை உச்சிகள் உடைய பயனற்ற சுரவழிகள் காணப்படுவதைச் சுட்டிச் செல்கிறார். பாலைத்திணைக்குரிய பின்பனிக் காலத்தை அற்சிரம் என்று குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. இதனை,

    அற்சிரம் நீங்கிய அழும்பத வேனில்” (அகம்.97:17)

    மழைகால் அற்சிரம் (அகம்.205:15)

    புகைநிற உருவின் அற்சிரம்” (அகம்.317:3)

    என்னும் சொற்றொடரால் அறியலாம். வாடைக்காற்று கூதிர் காலத்திற்கும் முன்பனிக் காலத்திற்கும் உரியது. அந்தக் காற்று பிடாவினது இனிய மணத்தை எங்கும் பரவச் செய்யும். இக்காலத்தில் தோன்றுகின்ற பனியானது நம்மை வருத்துகிறது. இதனைக் கண்டு வருந்தாமல் இருக்க முடியுமா? எனத் தோழியிடம் தலைவி கூறினாள். இச்செய்தியைக் கருவூர்க் கலிங்கத்தார் பாடுகின்றார்.

    வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம்

              கூதிர்அற் சிரத்து ஊதை தூற்ற

              பனிஅலைக் கலங்கிய நெஞ்சம்” (அகம்.183:12-15)

    கருப்பொருள்

    கருப்பொருள் என்பது அந்தந்த நிலத்திற்குக் கருவால் அமைந்த பொருட்களைக் குறிக்கும். இக்கருப்பொருட்களாகத் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் என்பனவும் பிறவும் ஆகும். பிறவும் என்பதற்கு இளம்பூரணர் தனது உரையில் (அகத்.20 உரை) யாழின் பகுதிகளாகிய பண், நீர் போன்றவற்றையும் எடுத்துரைக்கிறார்.

    பாலைத்திணைக்குரிய கருப்பொருள்களாகத் தெய்வம் – கொற்றவை. உணவு – ஆறலைத்தலான் வரும் பொருள். மா – வலியழிந்தயானையும், வலியழிந்த புலியும், வலி அழிந்த செந்நாயும். மரம் – பாலை, இருப்பை, கள்ளி, சூறை கொண்ட பாறையும். செய்தி – ஆறலைத்தல். பண் – பாலை பிறவும் என்றதனால் பூ – மராம்பூ. நீர் – அறுநீர்க் கூவலும் அறுநீர்ச் சுனையும் (அகம்.20 உரை) என இளம்பூரணர் குறிப்பிடுகிறார். இந்நிலத்திற்குரிய தெய்வமான கொற்றவையைக் குடவாயிற் கீரத்தனார் “கானமர் செல்வி” (அகம்.345) என்று கூறுவதைக் காணமுடிகிறது. நிலத் தலைவனை மீளி, விடலை, காளை, எனக் குறிப்பிடுவதை,

    மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி” (அகம்.93:18)

    மீளி உள்ளம் செலவு வலி உறுப்ப” (அகம்.373:7)

    வெள்வேல் விடலை” (அகம்.7:12)

    கூர்வேல் விடலை” (அகம்.315:14)

    திருந்துவேல் விடலை” (அகம்.195:2)

    வன்கண் காளை” (அகம்.263:9)

    வயக்களிற்று அன்ன காளை” (அகம்.55:5)

    கடுங்கண் காளை” (அகம்.321:12)

    என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. பாலை நிலத்தினுடைய மக்கள் நீருக்காகக் கிணற்றை நம்பி இருந்தனர். அக்கிணறுகள் நீரற்றுக் காணப்பட்ட நிலையை, ஓலைக் கூவல் (அகம்.21) அகலிடம் குழித்த அகல்வாய்க் கூவல் (அகம்.295) என்னும் பாடலடிகள் விளக்குகின்றன.

    மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனின் பாட்டில், ‘யானை நீர்வேண்டித் துழாவித் பார்த்த கிணற்றினைத் தலைவன் ஆழமாகத் தோண்டினான். அதிலிருந்து குறைகுடமாக வெளிப்பட்ட உப்பிநீரைத் தலைவி குடித்தாள்’ (அகம்.207) என்று சொல்லப்பட்டுள்ளது.

    பறை, மா

    பாலை நில எயினர் அச்சத்தைப் பிறருக்கு மிகுதியாகத் தரும் துடி என்னும் தோற்கருவியைப் பயன்படுத்தினர். இதனை, உருள்துடி (அகம்.19) கடுந்துடி (அகம்.79) என்னும் சொற்கள் எடுத்துரைக்கின்றன. மதுரைக் காஞ்சியில் மறவர்கள் துடிகளை முழங்கியபடி வணிகக் கூட்டத்தோடு போரிட்டு வென்று பெறுதற்குரிய அணிகலன்களைப் பெற்றனர் (அகம்.89) என்று கூறப்பட்டுள்ளது. இம்மக்கள் பாலை யாழையும் பாலைப் பண்ணையும் பயன்படுத்தியதைத் தங்கால் பொற்கொல்லனார் (அகம்.335) பாடலின் மூலம் அறியலாம்.

    விலங்குகளில் யானை, புலி, மான், புறா, பருந்து, எருவை, கழுகு போன்றவையும் தாவரங்களில் ஓமை, இரும்பை, குராம்பூ, மராம்பூ போன்றவையும் அகநானூற்றில் மிகுதியான இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. பாலைநில விலங்காக அறியப்படுவது செந்நாயாகும். இந்நாய் வன்மையான பற்களைக் கொண்டது. இதனை,

    வல்லையிற்றுச் செந்நாய்” (அகம்.53:6)

    திண்நிலை எயிற்ற செந்நாய்” (அகம்.199:9)

    என்னும் அடிகளால் அறியலாம்.

    உரிப்பொருள்

    அந்தந்த திணைகளுக்கு உரிமையுள்ள தனிச்சிறப்பு, ஒழுக்கம் பற்றி எடுத்துரைப்பது. அதாவது பாலைக்குப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உரிப்பொருளாகும். இத்தகைய உரிப்பொருளை உணர்த்துவனவாகப் பாலைத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளன. அகநானூற்றில் இளங்கீரனார், ‘தலைவன் நாடிடையிட்டும் காடிடையிட்டும் நெடுந்தூரம் பிரிந்து செல்கிறான். அவனுடைய நெஞ்சமோ தலைவியைச் சூழ்ந்து கொண்டே இருக்கிறது’ என்கிறார். இச்செய்தியை,

    கடுங்குரல் குடிஞைய நெடும்பெரும் குன்றம்

              எம்மொடு இறத்தலும் செல்லாய் பின்நின்று

              ஒழியச் சூழ்ந்தனை ஆயின் தவிராது

              செல்இனிச் சிறக்க நின்உள்ளம்” (அகம்.19:5-8)

    என்னும் பாடல் வெளிப்படுத்துகிறது. மாமூலனார், ‘தலைவன் பொருளுக்காகக் கொடிய தன்மையுள்ள பாலை நிலத்தையும் வேற்றுமொழி பேசுகின்றோர் நாட்டையும் கடந்து சென்றுள்ள நிலையை,

    “…………. நோன்சிலைத்

              தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்

              பிழியார் மகிழர் கழிசிறந்து ஆர்க்கும்

              மொழிபெயர் தோம் இறந்தனர்” (அகம்.295:14-17)

    என்னும் பாட்டினால் உணர்த்துகிறார். தலைவன் தலைவியை விட்டுப் பொருளுக்காக நெடுந்தூரம் பிரிந்து செல்வதை,

    “………….. சேய் நாட்டுப்

              பொலங்கல வெறுக்கை தருமார்” (அகம்.1:8-9)

              வெம்முனை அருஞ்சுரம் நீந்தித் தம்வயின்

              ஈண்டுவினை மருங்கின் மீண்டோர் மன்” (அகம்.103:10-11)

    என்னும் பாடல்களும் உணர்த்தி நிற்கின்றன.

    அகநானூற்றில் அதிகப் பாடல்களைக் கொண்ட திணை பாலைத்திணை என்பது அறியத்தகுந்தது. இந்நூலில் அமைந்துள்ள பாலைத்திணைப் பாடல்களில் முதற்பொருள். கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றும் ஒருங்கே பயின்று வருவதை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம். மேலும் அகநானூற்றுப் பாலைத்திணைப் பாடல்களை மிகுதியாகப் பாடியவர் மாமுலனாரே என்பதும் பொருள்வயின் பிரிந்து பொருளீட்டும் கடமை தலைவனுக்கே இருந்தது என்பதும் பாலைநில தமிழ் மக்களின் வாழ்வியல் நிலைகள் எவ்வாறு இருந்தன என்பதும் நன்கு வெளிப்பட்டு நிற்கின்றன.

    துணைநூற்கள்

    1. தாமோதரம்பிள்ளை சி.வை.(ப.ஆ),1885, தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சர் காட்டிஸ் பிரஸ் சென்னை.
    2. சாமிநாதையர்.உ.வே.(ப.ஆ) 1920, சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரை.
    3. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்)1940, சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு
    4. இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு, 2ஆம் பதிப்பு 1958, வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,.
    5. சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), 2008, சங்க இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை.  கட்டுரையாளர், முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்தரமணி, சென்னை – 600113
    Share
  • கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் நிழ்த்தப்படும் புனித அலேசியார் நாடகம்

    முனைவர் பா. உமாராணி

    சமூக வாழ்வியலையும், இனம் சார்ந்த வழக்காறுகளையும், அதனோடு தொடா்புடைய பண்பாட்டுக் கூறுகளையும் படம்பிடித்துக் காண்பிப்பன நாட்டுப்புற கலைகள் ஆகும். நாட்டுப்புறக் கலைகள் என்பது பொழுதைக் கழிக்கும் ஒரு செயலாக அல்லாமல் அது அம்மக்களுடைய உணா்வுகளோடு தொடா்புடைய ஒரு கூறாகவுமே இயங்கி வருகின்றது. அப்பொழுதுதான் காலம் கடந்தும் அக்கலைகளை மக்கள் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இல்லையெனில் அக்கலைகள் தோன்றிய சமூகச் சூழல் மாற்றம் அடைந்ததும் அழிந்தொழிந்துவிடும். எனின் அக்கலைகள் நிலைத்தத் தன்மையுடையதாய் அமைய வேண்டுமெனில் அது அப்பாண்பாட்டோடு நெருங்கிய தொடா்புடையதாயும், அம்மக்களின் நம்பிக்கைகளோடு ஒன்றிணைந்து செல்வதாயும் அமைந்திருக்க வேண்டும்.

    நாட்டுப்புறக் கலைகளில் பெரும்பான்மையும் நம்பிக்கையோடு தொடா்புடையதெனினும் மதம் சார்ந்து நிகழ்த்தப்படும் சில நிகழ்த்துக் கலைகள் அவற்றிலிருந்து வேறானதொரு பரிமாணத்தை அடைந்திருக்கிறது என்பதற்குச் சான்றாக புனித அலேசியார் நாடகம் அமைந்துள்ளது.

    அந்நிய ஆதிகத்தின் தாக்கம் காரணமாகவும், மதத்தை வளா்க்கும் நோக்கத்துடன் செயல்படும் மிஷனரிகளின் பாதிப்பும் இன்னும் குறிப்பிட்ட சில பகுதி மக்களிடையே காணப்படுகிறது. மிஷனரிகளின் வளா்ச்சி, அதிகம் கல்வியறிவில்லாத மக்களிடையே எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும், அவா்கள் பிற சமூகத்தினரின் பழக்கவழக்கங்களோடு ஒன்றிணைந்து தங்களுடைய மத நம்பிக்கைகளையும் ஒன்றிணைத்துச் செல்வதையும் கேரள எல்லையோரத்தில் வாழ்கின்ற கொழிஞ்சாம்பாறை வட்டார மக்களிடையே காணமுடிகிறது. கொழிஞ்சாம்பாறை வட்டாரம் குறித்த செய்திகள் முன்னைய மூவரசா் நாடகம் என்ற கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

    இந்துக்களின் பண்பாட்டை தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டிருகின்ற தமிழ் இலத்தின் கிறித்துவா் தம்முடைய இறைவழிபாட்டு முறைகளிலும் அத்தகையதொரு நம்பிக்கை சார்ந்த வாழிபாட்டு முறைகளைக் கையாளுவதைக் காணமுடிகிறது. இக்கட்டுரை சுருக்கமாக புனித அலேசியார் நாடகம் குறித்த செய்தியைப் பதிவு செய்துள்ளது.

    புனித அலேசியார் நாடக வரலாறு

    பாலக்காடு பகுதியில் வாழ்கின்ற தமிழ் இலத்தின் கிறித்துவா் வாழும் பங்குத் தளங்களில் நடிக்கப்பட்டு வரும் நாடகங்களில் மிகப் பழமையானதாக புனித அலேசியார் மற்றும் புனித எஸ்தாக்கியார் நாடகங்கள் அமைந்துள்ளன. “Flos Sanctorum” என்ற போர்த்துகீசிய நூலினை 1586-ஆம் ஆண்டு ஆண்டிறிக் என்னும் அடிகளார் தமிழ்மொழியில் மொழிபெயா்ப்புச் செய்தார். புனிதா்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளையும், விவிலியம் சார்ந்த விழாக்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்நூலில் உள்ள 25-வது தலைப்பில் “க. அலேசு நடந்த நடபடிகள் வருமாறு“ என்று புனித அலேசியாரை பற்றிய செய்தியை அடிப்படையாகக் கொண்டே இந்நாடகம் நடிக்கப்பட்டு வருகின்றது.

    புனித அலேசியார் நாடகம்

    புனித அலேசியார் நாடகம் 18- கூறுகளாக அமைந்து புனித அலேசியாரின் கதையை மொழிகின்றது. சிலுவை விருத்தம் தொடங்கி மாதா கொச்சகம் வரையிலான இப்பதினெட்டு பகுதிகளில் கவிநயமும், இலக்கிய நயமும் இணைந்து சிறந்தொரு நாடகமாக இது அமைந்துள்ளது. 15-ஆம் நூற்றாண்டின் நாடக அமைப்புகளை உள்ளடக்கியதாக அமைந்திருப்பதோடு அன்றைய மக்களின் வழிபாட்டு முறைகளை, வாழ்வியல் சார்ந்த பழக்கவழக்கங்களையும் இந்நாடகம்  எடுத்தோதியுள்ளது. நாடக அமைப்பின் கூறுகளை (கட்டியங்காரன் தொடக்கம், குருவணக்கம் போன்றவை) உள்ளடக்கியுள்ளதோடு பல இனிய காட்சி அமைப்புகளையும் கொண்டுள்ளது இந்நாடகம்.

    1. சிலுவை விருத்தம்

    பாலக்காட்டுப் பகுதியில் நிகழ்த்தப்படும் பல நாடங்களின் தொடக்கப் பாடல் சிலுவை விருத்தப்பாடலாகவே அமைந்துள்ளது.

    ”அா்ச்சிய சிலுவை வைத்தேன் அதினுட அடையாளத்தால்

    கா்ச்சி சத்துருவிலின்று கனிவதாய் ரெட்சிவென்று

    உச்சித சருவேயேகன் யுகந்திடும் பிதாச்சுதன்பால்

    நற்புமிஸ்ப் பிரிந்து சாந்துனாமத்தாலாமென் சேசு”

    என்ற சிலுவை விருத்தப்பாடல் புனித கனுகொந்தம்மாள் கீா்த்தனை நாடகம் என்ற பகுதியில் வரும் சிலுவை விருத்தமாக அமைந்துள்ளதோடு, அப்பாடல் புனித அலேசியார் நாடகத்தின் சிலுவை விருத்தப் பாடல் போலவே அமைந்துள்ளது வியப்பிற்குரியது.

    1. சேசு வணக்கம்

    சிலுவை விருத்தத்தை அடுத்து வரும் பகுதி சேசு வணக்கமாகும். இதில் கல்வாரி இறைவனை தன் பாடலுக்குத் துணையாக அழைக்கும் செய்தி இடம்பெற்றுள்ளது.

    1. தேவதாய் வணக்கம்

    கன்னி மரியாளிடம் தம்முடைய பண்ணோடு கூடிய தம் சொற்களுக்கு கண்ணேரு வராமல் காக்கவேண்டும் என்ற காப்புப் பாடலாக அமைத்துள்ளது. இதுவும் ஒரு வெண்பா அமைப்பில் இடம்பெறும் பாடலே.

    1. நூலின் பெருமை

    புனித அலேசியார் நாடக நூல் தோற்றம் பற்றிய செய்தியினை விளக்குவதாக அடுத்த பகுதி அமைந்துள்ளது. இதில் பாயிரம் முதலாக நூல் தோன்றிய செய்தியினை, ”கற்கடக மாதம் என்பது மளையாள மாதம். இதற்கு நிகரான தமிழ் மாதம் ஆடிமாதம். 1806-ஆம் ஆண்டு ஜூலை, மாதத்தில் புனித அலேசியார் கதையை நாடகமாக்கப் பேசினார்கள். அடுத்து வரும் பாடல், தூயதா்மநாதபுரம் தன்னில் மேவுஞ் சூசை பிரான்சீஸ்கு வெனும் குருசுவாமி, துலா மாசத்தில் பாயிரத்தை முதல் துவக்கி ஆறாம் தேதி நாடகமாய் செய்துமுடித்தார் என்ற செய்தியினை கூறுகிறது. இதிலும், துலாம் மாதம் மலையாள மாதம். இதற்கு நிகரான தமிழ்மாதம் ஐப்பசி. 1806-ஆம் ஆண்டு அக்டோபா் 22-ஆம் தேதி நாடகத்தை முதலாகத் தொடங்கி பாடி முடித்தார்.” (டாக்டர் A. சோசப் பெஸ்கி, புனித அலேசியார் நாடகம், ப.44) என்ற காணமுடிகிறது. இதனை,

    ”ஆயிரத்தியெண்ணூற்றி ஆறாமாண்டில்

    அன்பொடு பாடிவைத்தலேசு காதை

    தூயதர்மநாதபுரம் தன்னில் மேவுஞ்

    சூசை பிரான்சீஸ்கு வெனும் குருசுவாமிதான்

    நேயமுடன் யேற்படுத்த வுரைத்த தாலே”

    என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

    1. குருவணக்கம்

    கொழிஞ்சாம்பாறையை அடுத்துள்ள அத்திகோடு என்ற பகுதியில் வாழும் அப்பாவு அந்தோணிமுத்து என்ற பண்டிதகார் குடும்பத்தவரான இவரைப் பற்றி பெருமையாக குருவணக்கப் பாடல் அமைந்துள்ளது. மேலும்,

    ”தார்பொருஞ் சங்கீத சுருதிக்கேற்ற

    தாளமொடு நவரசங்கள் குறைவில்லாமல்

    ஏர்பொருத்த யெனுக்குரைத்த குருசு சின்னப்பன்

    இருபதத்தை யான் வணங்கி யிரைஞ்சுனேனே”

    என்று நாடகத்தின் சிறப்பினையும் அதனை இயற்றியவரின் சிறப்பினையும் எடுத்துமொழிவதாக குருவணக்கப்பாடல் அமைந்துள்ளது.

    1. அந்தோணியார் வணக்கம்

    நாடகத்தை சிறப்புற எடுத்துப்பாடிய அந்தோணியாரின் துணை வேண்டுவதாக அமையும் பகுதி அந்தோணியார் வணக்கப் பகுதி.

    இதுவரையுமான ஆறு கூறுகளும் நாடகத்திற்கான தொடக்கக் கூறுகளாக அமைந்துள்ளது. அதனை அடுத்துவரும் பகுதிகள் அலேசியார் நாடகக் கதை தொடங்கும் பகுதியாக அமைகிறது.

    1. புனித அலேசியார் நாடகம்

    நாடகத்தின் தொடக்கம் வாழ்த்துப்பாடலாக அமைந்துள்ளது. இதனை ஆரம்பனே தொடங்கி வைக்கிறான். இதில் இறைவனையும், மற்றுள்ளோரையும் வாழ்த்திப்பாடுகின்றனா். நாடகத்தின் தொடக்கக் காட்சியில் கட்டியங்காரன் தோன்றி உரோமை நாட்டரசனின் வருகையை அறிவிக்கின்றான்.

    ”இராசாதிராசன் வந்தார் எம்பரதோர்

    ராசன் கொலுவில் வந்தார்

    …………………………….

    மிக்கசபை மகிழ வேந்தர் புடை சூழ

    பக்கமிருந்து மதிபகரும் அமைச்சருடன்”

    என்று அரசன் வரவை கட்டியங்காரன் உரைக்கிறான். இதில் “எம்பரதோர்“ என்ற சொல்லாட்சியானது ரோமப் பேரரசா்களைக் குறிக்க வழங்கும் போர்த்துக்கீசிய சொல்லாகும்.

    கட்டியங்காரன் வரவு கூறி முடிந்ததும் அரசன் அரங்கில் தோன்றுகிறான். தன் மந்திரியான பெமியானை அழைக்க கட்டளையிடுகிறான். இதில் வரும் மந்திரியான பெமியான் பெயரினை, ”நாடகத்தின் மந்திரி பெயர் பெமியான். ஆனால் க.அலேசு வரலாற்றில் பெமியோன் என்ற பெயா், எபேமியானு (Euphemian) என்னும் பட்டணசுமாமி என்பதாகும். பட்டணசுமாமி என்பது உரோமை நகா் மேயர் பதவியைக் குறிக்கும் சொல்” (மேலது, ப.46) குறித்த கருத்தை பதிவு செய்துள்ளார் சோசப் பெஸ்கி அவா்கள்.

    மந்திரியின் வரவினை அடுத்து அரசன் மந்திரிக்குப் பணிக்கும் பணிகளைக் குறிப்பிடுகிறான். அதனை அடுத்து அரசன் அவையை விட்டு வெளியேற பெமியான் தன் மனைவி அகிலமாதுவை அழைக்க உத்தரவிடுகிறான். அகிலமாது வந்தவுடன் தங்களுக்கு குழந்தையில்லாத நிலையினைக் கூறி வருந்தும் காட்சி இடம்பெறுகிறது. தங்களுக்குப் புத்திர பாக்கியம் வேண்டி பல ஊர்களிலுமுள்ள கோயில்களில் வழிபட செல்கிறார்கள்.

    1. வரங்கேட்கும் தரு

    வரங்கேட்கும் தருவில் பத்து வரிகளை உடைய பாடல் உள்ளது. ஆனால் சாத்தன் குளம் அலேசு நாடகச்சுவடியில் இப்பாடல் இல்லை. அழகிய நடையோட்டத்துடன் இப்பாடல் அமைந்துள்ளது. ”தரு” என்பது ஓா் இசைப்பாட்டு.

    1. திருச்சிலுவைக் கோவில்

    புனித அலேசியார் நாடகத்தில் வரும் ”திருச்சிலுவை கோயில்” என்பது கொழிஞ்சாம்பாறையை அடுத்துள்ள மேனோன்பாறை பங்கு தளத்திற்கு உட்பட்ட திருச்சிலுவைக் கோயிலையே குறிக்கின்றது. இக்கோவிலில் அகிலமாது இறைவனை வேண்டி பிள்ளைவரம் பெற்றதாக நம்பப்படுகிறது.

    1. புத்திர பாக்கியம்

    திருச்சிலுவைக் கோயில் இறைவனால் சில காலத்தில் அகிலமாது பிள்ளை வரம் பெறுகிறாள். அதனை மருத்துவச்சி பெமியானிடம் தெரிக்கிறாள். பெமியான் மிக்க மகிழ்ச்சியடைந்து,

    ”எத்திசைப் புகழும் கீர்த்தி இறைவனார் கொலு முன்பாக

    நித்தமும் கார்த்து நிற்கும் நெறியு்ள சேவுகோனே

    அத்தனருளினாலே அகிலெனும் மாதுக்கு இப்போ

    உத்தமன் பிறந்தானென்று ஊரெங்கும் அறிவிப்பீரே”

    என்ற பகுதி அமைந்துள்ளது. இதில் பெமினான் தொழும்பர்களை (பணியாட்கள்) அழைத்து மகன் பிறந்த செய்தியினை அறிவிக்கச் செய்கிறான். அரசனும் மற்றுள்ள அனைவரும் வந்து கண்டு காணிக்கைகள் செலுத்திச் செல்கின்றனா்.

    ஞானஸ்தானம் மற்றும் கல்வி முதல் அர்ச் பாப்பு தேவாலாயம் வருதல் ஈறாக

    ஞானஸ்தானம் மற்றும் கல்வி, உறவுமுறை விருத்தம், திருமணம், கந்தார்த்தம் (கந்தார்த்தம் என்பது ஓா் இசைப்பாட்டு. நாடக அரங்கில் கந்தார்த்தப் பாடலுக்கு ஆடவேண்டும்.)  தேவதாய் அழைப்பு, திராசுப் பயணம் மற்றும் அர்ச் பாப்பு தேவாலாயம் வருதல் ஈறாக உள்ள பகுதிகளில் அலேசியாரின் வாழ்க்கை  படிப்படியாக எடுத்தோதப்படுகின்றது. அலேசுவுக்கு மோட்சவழிகளைக் குறித்தும், சிலுவை மந்திரங்களைக் குறித்தும், இன்னும் பிற இறைவழிபாட்டுடன் தொடா்புடைய கல்வியினை குறித்தும் குருக்கள் கற்பிக்கின்றார். காலங்கள் செல்ல அலேசு 16 வயது அகவையினை அடைகிறான். அவனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்ப அலேசுவும் சம்மதிக்கிறான். பெரியோர்கள் அனைவரும் சேர்ந்து பரினாள் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்து அலேசுவுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனா். (அகிலமாது மற்றும் பரினாள் குறித்த செய்திகள் மூலச் சுவடி நூலில் இல்லை)

    திருமணம் முடிந்து அலேசுவும் பரினாளும் இல்லற வாழ்வினைத் தொடங்க முனைகின்றனா். இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. சிற்றின்ப ஆசையை துறந்து இறைவனை அடைதலே சிறந்த இன்பம் என்று கூறுகின்றான் அலேசு. அதற்கு,

    ”மன்னா் மதிக்க வந்த றோமை நகா்

    மந்திரிதன் சுதனே

    சொர்ணமுடிபுனை மன்னாதி மன்னவா

    துறையே சிகாமணியே

    என்னமொழி யுரைத்தீா் மன்னா் திரு

    வாக்காலெதிர்மொழி தானுண்டோ

    வர்ணமலா் சூட்டும் மங்கையைத் தங்கையென்று

    வாக்காலுமுரைப்பார்க்களோ”

    என்று உரைக்கின்றாள் பரினாள். ஆனால் அலேசுவோ,

    ”வாக்கல்லவோ தங்கையே மதுரமே

    வாழ்மலரென்யங்கமே மோட்ச

    பாக்கிய யோக்கியம் சேர வழியிது

    பந்தையந் தான் தங்கையே”

    என்று மனைவியைத் தங்கையே என்று அழைத்து வீட்டைவிட்டு வெளியேறுகிறான். வீட்டிலிருந்து புறப்பட்ட அலேசு தரைவழியாக நடந்து சென்றபோது பூவில்லா வனங்கள் திடீரென்று பூத்துக் குலுங்கின. அன்னம், மயில் போன்ற உயிரிகளெல்லாம் இவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாக இந்நாடகப் பாடல் அமைந்துள்ளது.

    கடற்கரையை அடைந்த அலேசு மரக்காயரைக் கண்டு தன்னையும் யாத்திரை அழைத்துப்போகச் சொல்லுகிறான். அங்ஙனம் கடல் பயணத்தை மேற்கொண்ட அலேசு சென்ற கப்பல் பெரும்புயலில் அகப்பட்டு தீசு என்ற பட்டணத்திலே கரையொதுங்குகின்றது அங்கு தாம் கொண்டுவந்த விலையுயா்ந்த பொருட்களை தானமாக அளித்து மகிழ்கிறான். இதற்கிடையில் அகிலமாது பரினாளிடம் அலேசுவைப் பற்றி விசாரிக்க அவள் நடந்தவற்றைக் கூறுகின்றாள். தாங்கொண்ணாத் துயர் அடைந்த அகிலமாதுவும், பெமியானும் அலேசுவைத் தேட ஆட்களை அனுப்புகின்றனா்.

    தீசு நகரில் 17 ஆண்டுகள் வாழும் அலேசு பரதேசி போல இரந்துண்டு வாழ்கிறார். அவா்மேல் கருணை கொண்ட தேவதாய் கோவில் பணிவிடைக்காரரிடம் கூற கோவில் பணியாட்கள் அலேசு அவா்களுக்கு பணிவிடை புரியத்தொடங்குகின்றனா். இதனை ஏற்காத அலேசு இன்னும் இங்கே தங்கியிருந்தால் மக்கள் தன்னைப் புகழத்தொடங்க விடுவா் என்று எண்ணி அங்கிருந்து மேலும் கடற்பயணத்தை மேற்கொள்கின்றார்.

    அலேசு தீசு நகரை விட்டு திராசு பட்டணத்தை அடைய கப்பல் மரக்காயரை அணுகிறார். அவரிடம் பொருளின்மையைக் கூற, அவா் நீண்ட கடல்பயணத்தில் ஆபத்து வராமலிருக்கு நீா் செபம் செய்ய வேண்டும் என்று கேட்கின்றார். அதனை ஏற்றுக் கொண்டு செபம் செய்ய கடற்பயணம் தொடங்குகிறது. ஆனால் இடையில் ஏற்பட்ட புயலின் காரணமாக திராசு பட்டணத்தை அடையமுடியாமல் உரோமை நகரில் இறங்குகின்றார். அங்கு தன்னுடைய தாய், தந்தை, மனைவி போன்றோர் தன்னை அடையாளம் கண்டுவிடாமல் இருக்க இறைவனை வேண்டுகிறார். அதனை ஏற்றுக் கொண்ட இறைவன் அவரை உருமாற்றுகிறார். தன்னுடைய வீட்டிலேயே பரதேசியாக தங்க வைக்கப்படுகிறார். பெற்றோருக்கு இவா் யாரென்று தெரியவில்லை. எனினும் அத்தவசிக்கு வேண்டுவனவற்றை அளிக்குமாறு ஏவலா்களிடம் கூறுகிறான் பெமியான். ஆனால் வேலையாட்கள் அவரை அவமானப்படுத்துகின்றனா். அவா்களுக்காவும் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கின்றார் அலேசு. இந்நிலையில் அகிலமாதுவும், அவன் மனைவியும் புலம்புவதைக் கேட்க,

    ”இந்தவுலகாசை போதும் யான் பொறுத்திட்டேன்

    இனியேகரிடம் சேர யான்மனம் குறித்திட்டேன்”

    என்று இறைவனிடம் வேண்டுகிறார்.

    உரோமை நகருக்கு அப்போது வருகைதந்த “அா்ச்சிஷ்ட விநோசி பாப்பும்“ தேவாலயத்திற்கு எழுந்தருளுகின்றார். வேதமொழி உபதேசத்தினிடையே வேத வாக்கியம் சித்திக்கப்படுகிறது. அலேசு இறக்கப்போகும் செய்தியை “ஒரு திவ்ய பலி நிகழும் இன்றிலிருந்து  ஆறு நாட்களுக்கு பின்னா்“ என்று குறிக்கின்றார் பாப்பு. அதனைச் செவியுற்ற அரசன் அப்புண்ணியவாளன் மரணமடைந்த செய்தியை அறிய வேண்டி அவ்வேதவாக்கியச் செய்தியை பட்டிணத்தில் அறிக்கை விடுக்கிறான்.

    புனிதர் அலேசுவும் தன் மரணநாள் இன்று எனத் தெரிந்து வேலையாட்களிடம் ஒரு கடுதாசியும் மைகுடுவையும் பெற்று தன் வரலாற்றை எழுதி முடித்துவிட்டு இறந்துவிடுகிறார். பின் எங்கு தேடியும் புண்ணியாளனைக் காணமுடியாமல் இருக்க அரசன் இறைவனை வழிகாட்டும்படி இறைஞ்ச, இறைவன் அலேசியார் இறந்துகிடக்கும் இடத்தை காண்பிக்கிறார். கையில் கடிதத்துடன் மண்டியிட்ட நிலையில் இறந்து இருப்பதைக் கண்ணுற்று அவரைச் சிவிகை ஏற்றி, பொற்சரிகைச் சேலை போர்த்தி, மலா்சூட்டி கானங்கங்கள் முழங்கிட கல்லறை தன்னில் வைத்து அடக்கம் செய்தனா் என்று அலேசியார் நாடகம் முற்றுப்பெறுகிறது.

    அலேசியார் நாடகத்தில் குறிக்கப்பெரும் கற்பனைகள், வாழ்வியல் உண்மைகள் போன்றவை இலக்கியத்தரம் மிகுந்தவையாக உள்ளன. பிற மதத்தினரின் வாழ்வியல் நம்பிக்கைகளோடு அக்காலச் சூழலுக்கு ஏற்ப இந்நாடகம் புனையப்பட்டுள்ளது என்பது உண்மை. முழுமையும் மதம் தொடா்பான நாடகம் என்பதால் விவிலியக் கருத்துக்கள் மிகுதியும் காணப்படுகின்றன. நீண்ட வசனங்கள் இல்லாமல் குறுகிய வடிவத்தில் வேதக்கருத்துகளை இந்நாடகம் முன்மொழிகிறது. மதம் பரப்புதலை நோக்கமாகக் கொண்ட மிஷனரிகள் அம்மதக்கருத்துக்களை பரப்புரை செய்ய தேர்ந்தெடுத்த நாடக இலக்கிய வகைமையில் ஒன்றாகவே இது அமைந்துள்ளது. அன்றைய மக்களின் மொழிநடையில், அவா்களின் வாழ்வியல் பின்புலத்தோடு இக்கதை மொழியப்பட்டுள்ளது.

    பயன்பட்ட நூற்கள்

    1. புனித அலேசியார் நாடகம், Dr.A. Joseph Besky, Center  For Chiristian Research (CCR), St. Jesoph’s College (Autonomous), Trichy, First Edition-2013.
    2. புதிய சுல்தான்பேட்டை மறைமாவட்ட வரலாறு, Dr. A.Joseph Besky, LIVIA ARAN ANBHAGAM, Athicode, Chittur, Palakkad, kerala. First Edition-2014.
    3. இந்திய மொழிகள் ஓர் அறிமுகம், பூரணச்சந்திரன்.
    4. பாலக்காடு -சித்தூர் தமிழா் வாழ்வியல், மா. பேச்சிமுத்து.

    கட்டுரையாளர்

    முனைவர் பா. உமாராணி, உதவிப்பேராசிரியா், கற்பகம் உயா்கல்விக் கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

     

     

     

     

     

     

    Share
  • அணைக்கட்டும் ஆத்தங்கரை ஓர மக்கள் வாழ்வும்

    முனைவர் வீ. மீனாட்சி  

    வளரும் நாடுகளில் நாட்டின் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தால் பல ஐந்தாண்டு திட்டங்கள் பிற வளர்ச்சி திட்டங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அதனடிப்படையில் பல அணைகள், தொழிற்சாலைகள் கட்டும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டும் வருகின்றன. இத்தகைய வகையில் அணைகள்,          தொழிற்சாலைகள் அமைக்கும் பகுதியானது கிராமப்பகுதியாக இருப்பதால் அப்பகுதியில் வாழும் பாமரமக்களை அரசாங்கம் இழப்பீட்டுத் தொகையும், மாற்று இடமும் கொடுத்து வேறு பகுதிகளுக்கு குடிபெயர்த்துகிறது. இத்தகைய குடியமர்வுகள் இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத நிகழ்வாக உள்ளது. இதனடிப்படையில் வெ.இறையன்புவின் ஆத்தங்கரை ஓரம் புதினத்தில் அரசின் வளர்ச்சி திட்டமான அணைக்கட்டுவதால் ஏற்படும் மக்கள் குடிபெயர்ப்பு நிகழ்வால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

    சிந்தூர் என்ற கிராமப்பகுதியில் அரசாங்கம் அணைகட்டத் திட்டம் இடுவதால் அப்பகுதி மக்களை குடிபெயர்த்த ஆணை பிறப்பிக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பகுதியினை அழித்து அணை கட்டுவதை எதிர்த்து மக்கள் போராடுவதையும், இயற்கை அழிவால் ஏற்படும் பாதிப்புகளையும் கதைக்கருவாகக் கொண்டு இப்புதினம் அமைக்கப்பட்டுள்ளது.

    கிராமப்பகுதிகளில் கூட்டுச் சமுதாயமாக வாழும் பழங்குடி மக்கள் பல்வேறு இடங்களில் இடம்பெயர்த்தப்படும்பொழுது உளவியல் பாதிப்பு, உறவுகள் சிதைவு, வாழ்க்கைச் சிதைவு, கிராமிய பண்பாடு அழிவு, கிராமியத் தொழில் அழிவு, கிராமியக் கலைகள் அழிவு போன்ற பலவிதமான வாழ்வியல் சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ளுகின்றனர். இதனை பின்வரும் பகுதி எடுத்துரைக்கிறது.

    உளவியல் பாதிப்பு

    அணைகட்டுவது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் வரும்போது அவர்களை அன்பாக உபசரிக்கும் சிந்தூர் பகுதி மக்கள் அரசாங்கம் தங்களை வேறு இடத்திற்குக் குடியமர்த்தப்போகிறது என்று கேட்டவுடன் அதிர்ச்சியடைகின்றனர் என்பதை ‘வாசித்தறிந்தவர்களுடைய எதிர்ப்பு எப்பொழுதும் கணக்கிடப்பட்டதாய் இருக்கும், ஆனால் பாசாங்குகளை அறிந்திராத அவர்கள் இந்த தகவல் தெரிந்ததும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டார்கள். புலம்பித் தீர்த்தார்கள் சில பெண்கள் மாரில் அடித்துக் கொண்டார்கள். எங்கே போகப் போகிறோம் எப்படிப் போகப் போகிறோம்’ எல்லோரும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அவரவர்களுக்கு ஒதுக்கின இடத்தில்தான் தங்க முடியும், முழு கிராமத்துக்கும் ஒரே இடத்தில் ஒதுக்கமாட்டார்கள் இப்படியாய் அவர்கள் தயக்கங்கள் தாரை தாரையாய் வழிந்து நின்றன’ என்று பழங்குடிமக்கள் அடையும் பாதிப்பு பற்றி ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மேலும் அரசாங்கத்தால் குடிபெயர்த்தப்பட்டவர்களின் மனநிலையை ‘சில குடிசைகள் காலி செய்யப்பட்டிருந்தன. அவர்கள் எங்க சென்றார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. பலர் அந்தப் புதிய வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாமல் எப்பொழுது வேண்டுமானாலும் நெருங்கவிருக்கின்ற மரணத்திற்காகக் காத்திருந்தனர்’ என்றும் பாதிப்படையும் மக்களிடம் சுதிர் என்ற கதைமாந்தர் பேசும்பொழுது

    ‘நிறைய பேரோடு சுதீர் பேசினார். அவர்கள் யாரும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவில்லை. எங்கள் சந்தோஷத்தையெல்லாம் நீங்கள் திருடி விட்டீர்கள் என்று சொல்லுவதைப் போல் அவர்கள் மனநிலை இருந்தது’ என்று இறையன்பு காட்சிப்படுத்துவதன் வழி பழங்குடி மக்கள் உளவியல் அடிப்படையில் பாதிப்படைவதை உணர முடிகிறது. இப்புதினத்தின் முன்னுரையில் ‘நாகரிகம் நடந்து வந்த பாதை எங்கணும் இவ்விதம் நொறுங்கிப் போன மனித இதயங்கள், வராலறு நெடுகிலும் எவ்வளவு எவ்வளவோ?’ எனும் ஜெயகாந்தன் கூறியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

    மனித உறவுகள் சிதைவு

    பழங்குடியினர் கூட்டம் கூட்டமாக வாழ்பவர்கள். அவர்கள் குடியமர்த்தப்படும் போது ஒரே இடத்தில் முழு கிராமத்துக்கும் இடம் ஒதுக்கப்படுவதில்லை. இதனை, ‘அந்த நாநூறு குடும்பங்களும் இருபது கிராமங்களில் தங்கியிருக்கிற மாதிரி நிலத்தை ஒதுக்கீடு செஞ்சிருக்கோம் சார்’ என்று கதைமாந்தர் படேலின் கூற்றாக நில ஒதுக்கீட்டு முறைபற்றிக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். இதன் மூலம்  ஒரு கூட்டுச் சமுதாயமாக வாழும் மக்கள் வௌ;வேறு இடங்களுக்குக் குடிபெயர்த்தப்படும் போது அவர்களது உறவுமுறை சிதைவடைவதை அறிய இயலுகிறது.

    வாழ்க்கை முறை சிதைதல்

    விவசாய தொழில் மட்டுமே தெரிந்த பழங்குடிமக்கள் வேறு இடங்களுக்குப் போகும் போது அவர்களது வாழ்க்கை முறை சிதைவு அடைகிறது. அதைப்பற்றி ஆசிரியர் குறிப்பிடும்போது

    ‘இந்தப் பகுதியை விட்டுக் காலடி வெளியே எடுத்து வச்ச நொடியிலேயே நம்ப சந்தோஷம் மறைஞ்சி போயிடும். நம்ப ஒண்ணுமேயில்லாம ஆயிடுவோம். நகரத்துல இருக்கிறவங்க கிட்ட நம் மக்கள் ஏமாந்து எல்லாத்தையும் இழந்திருவாங்க கடைசியில கையில் ஒண்ணுமில்லாம கூலிக்காரங்களாக் குறைஞ்சிடுவோம்’ என கதைமாந்தர் சிமனின் கூற்றாக எடுத்துரைத்துள்ளார். இதன்வழி சொந்த கிராமங்களில் சிறிதளவு நிலங்களில் சுயமாக தொழில் செய்து வாழ்ந்த மக்கள் அணைகட்டுவதின் காரணமாக நகரங்களை நோக்கி செல்லும்போது கூலியாட்களாக நிலைதாழ்வடையும் சூழலை ஆசிரியர் இனம் காட்டுகிறார்.

    கிராமியத் தொழில்கள் அழிதல்

    பழங்குடி மக்களை அரசு இழப்பீட்டுத் தொகை கொடுத்து குடிபெயர்த்தாலும் அவர்களுக்காக ஒதுக்கப்படும் பகுதி விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக அமைவது இல்லை. எதற்கும் பயன்படாத தரிசு நிலங்களையே அரசாங்கம் ஒதுக்குகிறது. இதனால் கிராமிய தொழிலான விவசாயத் தொழில் அழிகிறது. இதனை,

    ‘அந்தப் பகுதியில் கண்டங்கத்திரி என்ற களை மட்டும்தான் அபரிமிதமாக வளர்ந்திருந்தது. வெட்டி எடுத்தாலும் எஞ்சியிருக்கிற வேர் துளிர்த்துப் படரும் பயங்கரமான விஷக்களையாய் விரிந்திருந்த அதனுடன் போராடி அரசு தங்களுக்கு அளித்திருந்த பணத்தை இழந்திருந்தனர். பாசன வசதி எதுவுமில்லை. அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தபடி பள்ளிக் கட்டிடமோ, குடிநீர் குழாய்களோ தரப்படவில்லை. குடிபெயர்ந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே நிர்கதியாய் அவர்களை நிறுத்தியிருந்த நிலைமை கொடூரமானதாய் இருந்தது’ என்று சுதிர் எனும் கதைமாந்தரின் மனவோட்டமாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

    கிராமிய பண்பாடு அழிவு

    நகர்மயமாதலால் கிராம மக்கள் குடிபெயர்த்தப்படும்போது அவர்களுக்கு வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்துவதாக சொல்லி அரசாங்கம் அதனை ஏற்படுத்தி தராத நிலையில் அவர்களது பண்பாட்டுக் கூறுகள் அழியும் நிலையினை

    ‘இங்கு மட்டுமல்ல, அணை கட்டுகிறபொழுது, தொழிற்சாலைகள் உருவாகிற பொழுது, எண்ணை கிணறுகள் தோண்டப்படுகிற பொழுது என எந்த முன்னேற்றம் (உங்கள் பாஷையில்) நிகழ்ந்தாலும் பாதிக்கப்படுகிறவர்கள் எல்லோரும் பழங்குடியினராகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவுமே இருக்கிறார்கள். பழங்குடியினர்களுக்கு அளிக்கப்படுகிற நிவாரணங்கள் எதுவுமே சரியாக நிர்வகிக்கப்படுவதுமில்லை. பழங்குடியினரது பண்பாட்டை ஒட்டுமொத்தமாகச் சிதைப்பது தவிர வேறெந்தப் பெரிய மாற்றமும் அவர்களது வாழ்வில் நிகழ்வது இல்லை’ என்று சுதிரின் கூற்றாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் அவர்களது பாரம்பரிய விளையாட்டு, சடங்கு முறைகள், பழக்க வழக்கங்கள் அனைத்தும் அழிவுறுகின்றன என்பதை கதைப்போக்கில் பல்வேறு இடங்களில் இனம் காட்டப்பட்டுள்ளது.

    இயற்கை பாதிப்பு

    சிந்தூர் பகுதியினை அழித்து அணைகட்டுவதால் ஏற்படும் இயற்கை சீரழிவு குறித்து ஆழ்ந்த நோக்குடன் ராதாபடங்கர் எனும் கதைமாந்தரின் கூற்றாக      ‘இந்த நாட்டின் சுற்றுப்புறச் சூழல் மொத்தமாகப் பாதிக்கப்படக்கூடாது என்பதும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய பாரம்பரிய சொத்துக்களையும் பண்பாட்டையும் தாரை வார்த்து விடக்கூடாது’ என்று இயற்கை நிலப்பரப்பை அழிப்பதால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைவது பற்றிக் குறிப்பிடுகிறார்.

    முன்னேற்றம் என்ற பெயரில் நாம் இயற்கையை அழிப்பது பற்றி கூறுகையில், வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் சுற்றுப்புற சூழலை சீரழித்து அவற்றை வளர்ந்த நாடாகவே மாற முடியாத நிலைக்கு தள்ளி விடுகின்றன என்கிறார். மேற்கத்திய நாடுகளுக்கு கட்டில்களும் மரச்சாமான்களும் செய்வதற்கு நம் நாட்டின் தேக்கு மரங்கள் தேவைப்படுவதால் உலக வங்கிகள் நாம் இயற்கையை அழித்து அணை கட்ட எவ்வளவு கடன் வேண்டமானாலும் தர தயாராக இருக்கின்றன எனக் குறிப்பிடுகிறார். இது ஆசிரியரின் சமூக நல அக்கறை நோக்கினையும் நுண் அறிவையும் புலப்படுத்துவதாக அமைகிறது.

    இதனை ‘இதெல்லாம் வளர்ச்சி என்கிற பெயரில் நாம் காவு கொடுக்கிற சீதனங்கள்’ என்று குறிப்பிடுகிறார். அணைகட்டுகிற பொழுது இழப்பு ஏற்படுகிற வனத்துக்கு பதிலா புதிய வனத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் அறிவிப்பது செயற்கை தனம் அது இயற்கை தருகிற வனத்திற்கு ஒப்பாகாது என்கிறார்.

    ‘இந்தியாவில் இருக்கிற வனம் கொறச்சல். கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு மண்டலத்துல அதிகரிச்சா Green house effect நடக்கும் பல கடலோரக் கிராமங்கள் தண்ணில ழூழ்க வேண்டியதாயிருக்கும்’             என்று குறிப்பிடும் இடத்தில் ஆசிரியர் விஞ்ஞான பூர்வமான பாதிப்பினை எடுத்துக்காட்டுகிறார்.

    ‘மூழ்கப்போற பரப்பளவுக்கு ஏத்த மாதிரி 1 லட்சம் ஹெக்டேர் வனம் அமைப்பதற்கு நிலமே கிடையாதுன்னு சொல்லறாங்க. மஹாராஷ்டிராவில் அழிஞ்சி போற காட்டுக்கு மாற்றா ராஜஸ்தானில் காடுகளை உண்டாக்கறது முட்டாள் தனம். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆந்தைகளோட எண்ணிக்கை குறைஞ்சதனால தான் எலிகளோட எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியல. இயற்கையை அழிச்சா யாராலேயும் சமத்தன்மையைச் சமன் செய்ய முடியாது புரிஞ்சிக்க’ என்ற இயற்கையை மனித முயற்சியால் சமன் செய்ய முடியாது என்பதை சுதரின் கூற்றின் மூலம் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

    சிந்தூர் பகுதியில் அணை கட்டப்படுவதால் மூழ்கவிருக்கிற கிராமங்கள், அழிக்கப்பட விருக்கிற வனங்கள், உயிரினங்கள், தாவர இனங்கள், தண்ணீர் தேங்கி உலர் நிலமாகப் போக இருக்கிற விவசாய நிலப் பரப்பு பற்றிய குறிப்புகளை ஆசிரியர் திறம்பட குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வாறு கிராமங்களை அழித்து அணைக்கட்டுதல் என்பது அப்பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தினாலும் ‘அணை என்பது தேசீய கொள்கைகளின் அடிப்படையில் கட்டப்படுவது. இதைக் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது’ என்று நீதிமன்றம் தீர்ப்பினைக் கூறுவதாக பதிவு செய்யும் ஆசிரியர் ‘அணை கட்டுவது என்பது உற்பத்தியைப் பெருக்கக் கூடியது என்பதில் நாங்கள் முரண்படவில்லை. ஒரு அணை எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதும், பெரிய அணைகள் நம் நாட்டு நலனுக்கு எந்த அளவிற்கு உகந்தன என்பதும் தான் என்னுடைய கேள்விகளாக இருக்கின்றன. நம் நாட்டில் கட்டப்பட்ட பல பெரிய அணைகள் முக்கால்வாசிக்கு தூர்ந்துபோய் இருக்கின்றன. சீனத்தில் சின்ன சின்ன அணைகளாக கட்டப்பட்டு நீர்த்தேக்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அப்படி சின்ன அணைகளாகக் கட்டப்படும்பொழுது நீர்த்தேங்குதல்   உலர்நிலமாதல்   போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. ஒவ்வொரு அணை கட்டப்படும்போது எத்தனை ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களில் உள்ள இயற்கை வனங்கள் அழிக்கப்படுகின்றன? நம் அறிவிற்கே அகப்படாத எத்தனையோ தாவரங்களும், உயிரினங்களும் தண்ணீரில் மூழ்கி மறைந்துபோகின்றன தெரியுமா? ஒரு அணை பெரிய அளவிலே கட்டப்படும்பொழுது எந்த அளவிற்கு சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது தெரியுமா? நம் நாட்டில் ஏற்கனவே போதிய அளவில் வனங்கள் இல்லை. நம்மால் செயற்கையாக இந்த இயற்கைச் செல்வங்களையெல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும்?’ என்று ராதா படங்கரின் கூற்றாக இறையன்பு நம்முன் வைக்கும் கேள்விகள் சிந்தனைக்குரியதாக உள்ளது.

    நாட்டின் வளர்ச்சி இலக்கினை நோக்கி உருவாக்கப்படும் இதுபோன்ற அணைக்கட்டும் திட்டத்தினால் வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்படும் மக்களுக்கும் தகுந்த இழப்பீட்டுத் தொகையினையும், அவர்கள் சுயமாக தொழில்செய்து பிழைக்கும் வகையில் நல்ல நிலங்களையும் அமைத்துக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என்பதையும் இப்புதினம் அறிவுறுத்துகிறது.

    மேலும் ஒருபுறம் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப அரசாங்கத்தால் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் மறுபுறம் இயற்கை வளங்களை பாதுகாப்பதும் இன்றியமையாதது என்பதையும் இப்புதினத்தின் வழி ஆசிரியர் வலுவாக எடுத்துரைப்பதை உணர முடிகிறது.

    துணைநூற்பட்டியல்

    1.ஆத்தங்கரை ஓரம் – வெ.இறையன்பு – தாகம் சென்னை – 1997

    2.தமிழில் வட்டார நாவல்கள் – சு.சண்முகசுந்தரம் – காவ்யா பெங்களுர் 1991

    3.நாவலும் வாழ்க்கையும் – க.சிவதம்பி – தமிழ் புத்தகாலயம் – சென்னை 1978

    கட்டுரையாளர்
    முனைவர் வீ. மீனாட்சி,  உதவிப் பேராசிரியர், முதுகலைத் தமிழாய்வுத்துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 017.

     

    Share
  • சிறுவர் பாடல்களில் மருத்துவச் செய்திகள்

    ஜே.அனிற்றா ஜெபராணி

    ஸ்காட் கிறித்தவக் கல்லூரி ,

    மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

     

    நாட்டுப்புற மருத்துவம்:- 

     

    இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இம்மருத்துவ முறையில் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ அதேபோல அவைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.

    நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால், நினைவாற்றல் அபாரமாக இருக்கும். சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை வரலாறு மூலம் அறிய இயலும். பழங்கள் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. இதில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய்கள் வராமல் தடுக்க முடியும். மேலும் புற்றுநோய், இருதய நோய், மறதி, மாரடைப்பு போன்றவை வராமலும் தடுக்கலாம். அத்தோடு மன அழுத்தம் நீங்கும்.

    ஆரோக்கியமான உணவிற்குக் காய்கறிகள் சேர்க்கப்படுதல் நல்லது. அப்படிச் செய்வதால் இதய நோய்கள் வராது. இதில் இலை வகை, பூக்கள் வகை, வேர்வகை எனப் பலவகைகள் உண்டு. மனிதனின் உண்மைச் செல்வம் உடலும் உயிருமே ஆகும். நாம்வாழும் இந்த அற்புதமான வாழ்க்கையினை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மிகமிக இன்றியமையாதது உடல்நலம் ஆகும். உண்ணும் உணவில் எடுத்துக் கொள்ளும் அக்கறைதான் நோய் நொடியில்லாமல் வாழ வழிவகுக்கும்.

    மூலிகைச் செடி 

    உலக அளவில் இந்தியாவில்தான் அதிக மூலிகைகள் உள்ளன. மேலும் பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகள் மனிதனுக்கு பயனளிக்கிறது. மேலும் அனைத்துத் தாவரங்களிலும் ஏதாவது ஒரு வகை மருத்துவ குணம் உள்ளது என்பதை,

    ”மருத்துவப் பயன்கள் இல்லாத
    மரம் செடி இல்லையே
    உயிர்களுக்காய் வளர்ந்தே” என்ற பாடல் வரிகளால் அறியலாம்.

    கீரை

    உடலுக்குக் குளிர்ச்சியையும், சத்துக்களையும் அளிக்கும் கீரையினைப் பற்றிப் பின்வரும் பாடல் உள்ளது. மேலும் கீரைகள் சிறந்த மூலிகைகளாகவும் உள்ளன.

    கீரை நல்ல கீரை
    கிடைக்கும் எங்கும் கீரை
    பேரைச் சொன்னால் போதும்
    பெருமை தெரியும் கீரை

    முருங்கைக்கீரை

    முருங்கைக்கீரை மருத்துவப் பொக்கிஷம் என்றழைக்கப்படும்; எண்ணற்ற வியாதிகளுக்கு இது மருந்து. வாரம் இருமுறை இதனைச் சாப்பிட்டால் உடல்சூடு தணியும். முடி உதிர்வதை தடுக்கும். தோல் நோயினை தடுக்கும். முடி நீண்டு வளரும். இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து கணிசமாக உயரும். அதோடு உடலுக்கு நல்ல வலிமையினைக் கொடுக்கும். மேலும் சிறுநீரகம் பலப்படும் கோழை அகற்றும். பல் வலிமை அடையும். வயிற்றுப்புண், வாய்ப்புண்ணுக்கு உகந்த மருந்து. காய்ச்சல் மூட்டுவலியினையும் போக்கவல்லது. இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். இரத்த விருத்திக்கும் நல்ல உணவு.

    கீரை கீரை கீரை
    முருங்கை இலை கீரை
    முடி வளர உதவும்
    மருத்துவ குணம் கீரை
    உணவில் சேர்த்து உண்பீர்
    நோயின்றி வாழ்வீர்

    பழங்கள்: 

    நாம் சாப்பிடும் உணவே நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிடுவதால் புற்றுநோய், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், இதய நோய்கள் போன்றவை நெருங்காது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    சிவப்பு வண்ண தக்காளி/சிரிக்கும் நல்ல பப்பாளி
    தினமும் தின்ன ஆப்பிள்/இரவில் உண்ண வாழை
    திராட்சை முந்திரி மா பலா/மாதுளை கொய்யா சப்போட்டா
    நாள்தோறும் இவற்றைச் சாப்பிட்டா/எல்லா நோய்க்கும் டாட்டா

    நோயின்றி வாழ பழங்களை தினமும் உணவில் சேர்க்க வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகிறது.

    பப்பாளி 

    இயற்கையின் கொடை பப்பாளி. வீட்டின் பக்கம் தோட்டம் போன்ற சாதாரண இடங்களிலும் வளரக்கூடியது. இதில் பல நன்மைகள் உள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்த பழம். இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ளன. இது நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். மிகுந்த செரிமானத்துக்கு ஏற்றது. தோலில் ஏற்படும் குறைபாடுகளைக் களையவல்லது. கண் குறைபாடுகளை நீக்கும். கேன்சர் வராமல் தடுக்கும். எல்லாப் பழங்களை விட விலையும் குறைவு. எளிதாக கிடைக்கக் கூடியது.

    ”பப்பாளி பப்பாளி
    தங்க நிறப் பப்பாளி
    பார்வை அளிக்கும் பப்பாளி
    பார்க்கக் கிடைக்கும் பப்பாளி
    பொலிவைத் தரும் பப்பாளி
    ஜொலிக்கச் செய்யும் பப்பாளி” என்ற பாடல் பப்பாளியையும் அதன் சிறப்பையும் விவரிக்கிறது.

    மாதுளம் பழம்: 

    மாதுளம்பழம் இதயத்திற்கும் மூளைக்கும் சக்தியைக் கொடுக்கும். நினைவாற்றலை வளர்க்கும். அறிவுத்திறனை அதிகரிக்கும். மாரடைப்பு, நெஞ்சு எரிச்சல், இரத்தக் கொதிப்பு, அல்சர், முடக்குவாதம், அஜீரணம், இவைகளைக் குணப்படுத்தும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு. மலச்சிக்கல் நீக்கும். தோலை அம்மியில் அரைத்து உண்பதால் சீதபேதி நிற்கும். மாதுளம் பழம்பற்றிய,

    மாதுளம் பழமாம் மாதுளை
    மகிமை கூறும் மாதுளை
    வரிசையான முத்துடன்
    வளங்கள் தரும் மாதுளை
    ரத்த சுத்தம் செய்ய
    சித்த மருந்தாகும்
    வயிறு வலி நீக்கும்
    மலத்தை வசமாக்கும்…

    இந்தப் பாடல் மாதுளையையும் அதன் மருத்துவ குணத்தையும் அறிமுகம் செய்கிறது.

    திராட்சைப்பழம் 

    திராட்சைப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் வறட்சி நீங்கி தோல் மென்மையாகி, உடல் அழகாகும். குரல் இனிமையாகும். மலச்சிக்கலை நீக்கி, வீரியத்தை விருத்தி செய்யும். நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படும் உடல் நடுக்கத்தைச் சீர் செய்யும். மெலிந்தவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பு பருமனாகும். இருதய நோய்களைக் குணப்படுத்தும். குடல் கோளாறு, வாய்ப்புண், தொண்டைப்புண் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

    ”திராட்சைப்பழம் நல்ல திராட்சைப்பழம்
    தின்ன தின்ன இனிக்கும்
    கொத்துக் கொத்தாய் இருக்குமாம்
    கொடியின் மேல் தொங்குமாம்
    பார்க்க பார்க்க எட்டியே/பறித்து தின்னத் தூண்டுமாம்” என்ற பாடல் இதனைத் தெளிவு படுத்தும்.

    கொய்யா: 

    கொய்யாப்பழத்தில் வேறு எந்த பழத்திலுமில்லாத அளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. கொய்யாப்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு இரத்த உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. இரத்தச்சோகை நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதால் குணம்பெற முடியும். தொண்டையில் உண்டாகும் புண்களை ஆற்றும். ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும். சொறி சிரங்கு குணப்படுத்தும். விஷக் கிருமிகளைக் கொல்லும் சக்தி இதற்கு உண்டு. இது ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படுகிறது.

    ”அய்யா வீட்டு கொய்யாப்பழம்
    ஆசையாக தந்த பழம்
    கையில் வைத்து வாயில் வைத்து
    திங்க திங்க அவை தரும்
    மருத்துவ குணமும் இதிலுண்டு
    இரத்தத்தினையும் சுத்தப்படுத்தும்
    சொறி சிரங்கினையும் தடுத்து நிறுத்தும்” என்ற பாடல் கொய்யாவின் மருத்துவ குணங்களை விவரிக்கிறது.

    மாம்பழம் 

    மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படும். இதனை உட்கொள்வதால் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலுக்குப் பலம் கிடைக்கும். மேலும் உடலுக்கு நோய்எதிர்ப்புச் சக்தி அளிக்கிறது. இதயத் தசைக்குப் பலம் தருகிறது. இனிய மாம்பழத்தினைப் பற்றின பாடல்,

    மாம்பழமாம் மாம்பழம்
    அழகான மாம்பழம்
    தித்திக்கும் மாம்பழம்
    அல்வா போன்ற மாம்பழம்…

    வாழைப்பழம்

    முக்கனிகளில் ஒன்று வாழை; வாழைப்பழம் சாப்பிடுவதால் மூல நோயிலிருந்து விடுபடலாம். நல்ல ஜீரண சக்தி உண்டாகும். வாழை வாழ வைக்கும்; இரத்த சோகை நீங்கி, இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழைப்பழத்திலுள்ள புருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. மலச்சிக்கலை நீக்கும்.

    ”வாழைப்பழத்தை நாள்தோறும்
    வகையாய் உண்ண வேண்டுமே
    ஏழை கூட வாங்கியதை
    எளிதில் உண்ணலாகுமே” புகைப்பிடித்தலால் ஏற்படும் நிக்கோட்டினை வெளியேற்ற உதவும்.”

    அவரைக்காய் 

    புரதம், நார்ச்சத்து இதில் அதிகம் காணப்படுகிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தைப் பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

    ”கொடியில் தொங்கும் அவரைக்காய்
    காய்க்கக் காய்க்கக் கொத்துக்காய்
    புரதம், நார்ச்சத்து நிறைந்தது
    சாப்பிட்டால் நன்மை பயக்குமே” இப்பாடலில் அவரைக்காயின் தன்மை பற்றி கூறப்பட்டுள்ளது.

    சூரியகாந்தி 

    ஒரே செடியில் ஒரு பூ அது சூரியகாந்திப் பூ ஆகும். இதன் விதைகள் எண்ணெய் கொடுக்கும். புகைப்பழக்கம் உள்ளவர்கள் தினமும் ஒரு விதை உட்கொண்டால் அப்பழக்கம் மறந்துவிடும். இதில் வைட்டமின் ஏ, டி, பி அதிகம் காணப்படுகிறது. இதயத்திற்கு ஆரோக்கியத்தினைக் கொடுக்கும். விதையில் காணப்படும் மெக்னீசியம் நரம்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். பக்கவாதம், சிறுநீரக நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

    ”வண்ணப் பூவும் நீதானே
    வட்டப்பூவும் நீதானே
    சூரியப் பெயரைக் கொண்டாலும்
    சூடாத பூவும் நீதானே
    சூரியகாந்திப் பூ மட்டுமே
    எண்ணெயாய் மாறி உணவாவாய்
    மருத்துவப் பயனும் கொண்டு நீ
    நிறைவாய் வருமானம் தந்திடுவாய்” மேல் தரப்பட்ட பாடல் சூரியகாந்தியின் மருத்துவ குணத்தை விளக்குகிறது.

    தாமரை

    தாமரை மலர் இனிப்பு, துவர்ப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வெப்பத்தைக் குறைக்கும். விதை, உடலைப் பலமாக்கும். தாமரைக் கிழங்கு உள்ளுறுப்புகளின் புண்களைக் குணமாக்கும். விதையைத் தேனுடன் அரைத்து நாக்கில் தடவினால் வாந்தி விக்கல் குணமாகும். விதையை அரைத்துச் சாப்பிட்டால் பார்வை மங்கல் குணமாகும்.

    செண்பகப்பூ 

    கண்ணைக் காக்கும் செண்பகம். உடல் வலுவடையவும் உடல்பலம் பெறவும் உதவும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். கஷாயம் செய்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். பித்தம், வாதம், கபம் நீங்கும். ஆண்மை குறைவைப் போக்கும்; பொடிசெய்து உண்டால் வெள்ளைப் படுதல், நீர்சுருக்கு, சிறுநீர் வெற்று எரிச்சலுடன் வெளிப்படுதல் குணமாகும். வயிறு வலி மாறும். பாலியல் நோய்களை குணப்படுத்தும். பொடுகு தொல்லை நீங்கும்.

    ”செண்பகப்பூ/சிறப்பான பூ
    மரத்தில் பூக்கும்/மணத்தால் கவரும்
    இலைகளின் ஊடே/இரவில் மலரும்
    இனிய மணம் வீசும்
    மலரின் மணத்தால் மாசு நீக்கி காக்கும்
    தெய்வங்கட்கும் கட்டுவர்/செண்டாகவும் மாற்றுவர்.”

    ரோஜா 

    ரோஜா மலர்கள் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றைக் குணமாக்கும். ரோஜாப் பூக்களிலிருந்து அத்தர் எனப்படும் நறுமணம் பொருந்திய எண்ணெய் பெறப்படுகிறது. ரோஜா இதழினை நீரில்போட்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும். நீரினைக் புண்ணில் கழுவினால் புண் குணமாகும். ரோஜா இதழினைக் காயவைத்து எடுப்பதற்குப் பெயர் குல்கந்து. இதனைச் சாப்பிட்டால், இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை உறுதி அடையும். ரோஜாப்பூவினைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள புண்கள் ஆறிவிடும் ரோஜாவிலுள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏறப்படும் முகப்பருக்களைக் குறைக்கு உதவும். ரோஜா இதழினைத் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவினால் முகம் பொலிவடைந்து பிரகாசிக்கும்.

    ”ரோசப் பூவாம் ரோஜாப்பூ
    வாசமுள்ள ரோசாப்பூ
    கொத்து கொத்தாய் ரோசாப்பூ
    நறுமணமுள்ள ரோசாப்பூ
    இதழ்கள் தின்று மென்றாலே
    மருத்துவ குணமும் கொண்டது” இப்பாடலில் ரோஜாவின் சிறப்பினை கூறுகின்றன.”

    மல்லிகை

    மல்லிகைப் பூவும் மருத்துவ குணம் கொண்டது. நான்கு பூக்களை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து அருந்தினால் வயிற்றிலுள்ள கொக்கிப்புழு, நாடாப்புழு போன்றவை அழியும். பூச்சிவெளியேற மருந்து இதுவே. பூவினைக் காயவைத்து பொடியாக்கி தண்ணீரிலே கலந்து உண்டால் சிறுநீரக கற்கள் தானாகவே கரையும். நோய் எதிர்ப்புச்சக்தி கூட்டும்.

    ”வெள்ளை நிற பூவிது/எல்லோரும் விரும்பும் பூவிது
    மகிழ்வு தரும் பூவிது/மலிவான பூவிது
    நறுமணம் வீசும் பூவிது/மருந்துக்கு ஏற்ற பூவிது”

    வேப்பமரம்: 

    வேம்பு மருத்துவக்குணமுடையது. வேப்பிலைச்சாறு குடித்தால் குடல் பூச்சிகள் நீங்கும். மலேரியா காய்ச்சல் குணமாக தோல்நோய் நீங்கப் பயன்படுகிறது. வேப்ப மரத்தின் காற்றே மருத்துவ குணம் உடையது. இது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் சக்தி கொண்டது. உடல் உபாதைகள் குறையும். சஞ்சீவி என்றழைக்கப்படுகிறது. வேர், பட்டை, மரக்கட்டை, வேப்பங் கொட்டையின் மேல் ஓடு உள்ளிருக்கும் பருப்பு, பால், பிசின், காய், பழம், பூ, இலை, ஈர்க்கு, வேப்பங்கொழுந்து போன்றன சித்தா, ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருத்துவப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது. நுண்ணிய விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. நீரழிவு, சர்க்கரை நோயினைக் கட்டுப்படுத்தும். பாம்புகடி, விக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

    ”கண்ணா வேப்பமரத்தை நீ/எண்ணிப் பார்த்து நடப்பாய்
    பயன்தரும் என்றிதனைப்/பகவான் வள்ளுவர் கூறினார்
    திருவள்ளுவர் சொன்ன நீதி/திருவாக்கே ஆகும் என்றும்
    எத்தனை பெரிய மரத்தில்/இத்தனை சிறிய காய்கள்
    அத்தனையும் மருந்தாம்/பித்தனுக்கும் உகந்ததாம்
    முடக்கு வாதம் கூட/படக்கென நடக்க வைக்கும்
    மக்கள் மாக்கள் மரமென/மருந்தாகும் மரமிது.”

    வேப்பம் பூ ஆனது நிம்பஸ்டி ரோல் என்ற பொருளைக் கொண்டது. இலை, தோல் நோய் மருந்து, நாள்பட்ட புண், கட்டி மீது பூசினால் குணமாகும். வேப்பம்பூ, வாயுத்தொல்லை ஏப்பம் அதிகமாக வருவதால் பசியின்மை போன்றவற்றினை குணப்படுத்தும். காய் -வைரஸ் காய்ச்சல், தொழுநோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். பழச்சாற்றினைச் சொறி, சிரங்கு, புண்களில் பூசக் குணமாகும்.

    முடிவுரை 

    மூலிகைகள், காய்கனிகள், கீரைகள், அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற்போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்கே இடமில்லை. உடலுக்கு ஊட்டத்தை தருவதில் காய்கறிகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. காய்கறிகளை அதன் மருத்துவ குணம் அறிந்து தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயற்ற வாழ்வு சாத்தியமாகும். கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல், வண்டிக்கு அச்சாணி போல், மனிதனுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவப் பெரிதும் உதவுவது உடல்நலமே. இயற்கை உணவுகளை உண்டு தீராத நோய்களையும் தீர்த்துக் கொள்ள இயலும்.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வு மாணவி,
    ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி,
    நாகர்கோவில்.

     

     

    Share