Month: November 2021

  • பூகோளம் முன்னிலைக்கு மீளாது!

    பூகோளம் முன்னிலைக்கு மீளாது!

    சி. ஜெயபாரதன், கனடா

    காலவெளி ஒருபோக்கில்
    மாறிப் போச்சு !
    வாலிப வனப்பு அதற்கினி
    மீளாது !
    நூறாண்டு போராடி நாம்
    காரணங்கள்
    களை எடுத்தாலும்,
    முன்னிலைக்கு
    மீளாது ! மீளாது! மீளாது !

    சூடேறிப் போச்சு
    பூகோளம் !
    வீடேறி வந்திருச்சு
    சீர்கேடு !
    நாடெல்லாம் முடமாகி
    நாச மாகப் போச்சு !
    நாமென்ன செய்யலாம்
    நாட்டுக்கு ?

    நூறாண் டுக்கு
    முன்னிருந்த நிலைக்கு பூமி
    மாறாது !
    போன வாலிபம் பூமிக்கு
    மீளாது !

    பூமி சுற்றச்சு பூகம்பத்தால்
    சாய்ந்து போச்சு !
    நிமிர்த்த முடியாது ஆயிரம்
    கோடரியால் !
    எரிமலை பொங்கி எழுந்து
    கனல் குழம்பு
    கொட்டி ஆறு, ஆறாய் ஓடுது !
    விஷ வாயுக்கள்
    சூழ்வெளியை நிரப்புது !
    பூகோளம் முன்னிலைக்கு
    மீளாது
    ஒருபோதும் !

    Share
  • குறளின் கதிர்களாய்…(375)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(375)

    ஒன்றாமை யொன்றியார் கண்படி னெஞ்ஞான்றும்
    பொன்றாமை யொன்ற லரிது.

    – திருக்குறள் – 886 (உட்பகை)

    புதுக் கவிதையில்

    நெருங்கி நன்றாய்ப்
    பழகுவோரிடத்துப்
    பகை தோன்றுமாயின்,
    அந்த உட்பகையால்
    அரசனுக்கு
    அழிவு வருவதைத் தடுக்க
    எப்போதும் இயலாது…!

    குறும்பாவில்

    அடுத்து வந்து பழகுவோரிடத்து
    உட்பகை தோன்றிடில் அதனால் அரசனுக்கு
    வருமழிவைத் தடுக்க முடியாது…!

    மரபுக் கவிதையில்

    அருகில் நெருங்கியே நன்றாக
    அன்புடன் பழகுவோர் தம்மிடத்தும்
    வருந்த வைத்திடும் பிணியாக
    வதைத்திடும் உட்பகை தோன்றிவிடில்,
    மருந்தா யதனையே போக்கிடவே
    மன்னவன் தனக்குமெவ் வழியுமிலை,
    வருமே அழிவது நிச்சயமாய்
    வழியிலை யதனையும் தடுத்திடவே…!

    லிமரைக்கூ

    அரசனும் அழிவான் ஆங்கு,
    நெருங்கிப் பழகுவோர் தம்மிடத்தும் தோன்றிடில்
    உட்பகை யென்னும் தீங்கு…!

    கிராமிய பாணியில்

    கொடியது கொடியது
    உட்பக கொடியது,
    கொலத்தயே அழிக்கும்
    உட்பக கொடியது..

    நெருங்கி நல்லாப்
    பழகுறவங்கக் கிட்டயும்
    கேடுகெட்ட உடபக
    வந்திட்டுண்ணா,
    நாட்ட ஆளுற ராசாவுக்கும்
    அழிவு வாறத
    ஆராலும் தடுக்கமுடியாதே..

    தெரிஞ்சிக்கோ
    கொடியது கொடியது
    உட்பக கொடியது,
    கொலத்தயே அழிக்கும்
    உட்பக கொடியது…!

    Share
  • திருப்புகழ் | பாதி மதிநதி

    திருப்புகழ் | பாதி மதிநதி

    அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழிலிருந்து ‘பாதி மதிநதி’ எனத் தொடங்கும் பாடலை, திருமதி விஜயலட்சுமியின் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த இனிய பாடலுடன் கந்தசஷ்டி திருவிழாவைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பயிரில் ரசாயனம்! பாலில் அமோனியா!

    பயிரில் ரசாயனம்! பாலில் அமோனியா!

    வேளாண் விளைபொருட்களில் ரசாயனக் கலப்பு எந்தெந்த வகைகளில், அளவுகளில் உள்ளது? அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது? வேளாண் தொழில்நுட்ப ஆலோசகர் வெங்கி என்கிற வெங்கட்ராமன் ராமச்சந்திரன் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சரவெடி 2021

    சரவெடி 2021

    சரவெடிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. எனினும் இந்தத் தீபாவளி அன்று சரவெடி பரவலாக வெடிக்கப்பட்டது. சென்னையில் நேற்று இரவு வெடிக்கப்பட்ட சரவெடி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீபாவளி 21

    நேர்மறை எழுக எதிர்மறை விழுக
    பார்மறை ஒதும் படி………………………………………………..1

    புகையும் பகையும் அகலும் அகலால்
    குகையும் ஒளியாகவே………………………………………….2

    ஒளியும் ஒலியும் வழியும் அறியும்
    விழியும் மனதும் களி……………………………………………..3

    சக்கரம் சுற்றிட சங்கடம் கலைய
    இக்கணம் இறையைப் பிடி……………………………..4

    புத்தாடை அணியும் இந்நாளில்
    பக்தியும் வளர்க்கப் பார்…………………………………….5

    கசப்பினை மறந்து இனிப்புச் சுவைத்தாலும்
    கசப்பிலே அகலும் பிணி……………………………………6

    நடிப்பும் நாடகம் (தீப)ஒளியில் தெரிந்தபின்
    படிப்பினை பயனாக முயல்……………………………7


    தெரியாதென நினைத்துப் பிழைகள் செய்தாரை
    சரியாகக் காட்டும் நாள்…………………………………….8


    குருவிடமே திருடும் மாணவர் பலருக்கும்
    குருடுமே அளிக்கும் விதி…………………………………..9


    தீயால் வண்ணம் தீட்டிடும் வளியதை
    தூய்மை ஆக்க முனை……………………………………….10

    இல்லோர் அகமகிழ இருப்பதைப் பகிரவே
    இருப்போர் பெற்ற பயன்…………………………………….11

    வாழ்த்தோடு மட்டும் பயனிலை வையத்தில்
    வீழ்ந்தோரை எழுப்பி விடல்……………………………….12

    முறுக்கோடு காரம் சுவைக்கும் போதிலே
    பொறுப்போடு பற்கள் துணை………………………..13

    கங்கை நீராடின் கசடுபோம் வினையகல
    அங்கை யால்தானம் செய்………………………………….14

    ஊசியின் பட்டாசு வெடிப்பது அன்றி
    ஓசியில் மனதும் கெடும்……………………………………15

    தலையாய் தீபாவளி பலருக்கு சிலருக்கு
    தலையில் தீராத வலி…………………………………………….16

    இருட்டில் ஒளியான பின்னரும் சிலருக்கு
    இருட்டில் தான்வயிர் வளர்ப்பது…………………17

    கெடுவது இனுமென்ன இருக்கிறது ஆட்சியில்
    சுடுவதே கொள்கை யானபின்……………………18

    கற்றவர்க்குச் சிறப்பிலை தேர்வில் தோற்று
    உற்றவர்க்கு ஊடகம் இனி………………………………..19

    எரிவாயு கடனேற சம்மதம் ஊடகமே
    கரிவாயு வந்தால் பிணி…………………………………….20

    வாழ்த்தினை வழங்கினால் கீர்த்தி வெறுத்து
    காழ்ப்பினை அளித்தே அழி………………………….21




    Share
  • பழகத் தெரிய வேணும் – 90

    பழகத் தெரிய வேணும் – 90

    நிர்மலா ராகவன்

    படைத்தலும் ரகசியமும்

    `நான் பல புத்தகங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறேன். அதனால் மகா புத்திசாலி!’

    இப்படி எண்ணிப் பெருமைப்படுகிறவர்கள் முக்கியமான ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை. நிறைய புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் அறிவு வளர்ந்துவிடாது. கற்பனைத்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஓயாமல் தன்னைப்பற்றியோ, பிறரைப்பற்றியோ யோசிப்பதால் நேரம்தான் விரயமாகும்.

    ஒருவர் தனக்குப் பிடித்த ஆக்ககரமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டால், அவரால் பிறருக்கும் உபயோகமானதாக எதையாவது செய்ய இயலும்.

    அவசியம் இருந்தால்தான் புதியதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் நிலை வரும் என்பதல்ல.

    `இப்படிச் செய்தால் என்ன? ஏன், இம்மாதிரியும் இருக்கலாமே!’ என்று, நடைமுறையில் பின்பற்றப்படுவதை வேறுவகையில் மாற்றுகிறார்கள் படைப்பாளிகள். அது கண்களால் பார்க்கும் தொலைவில் இல்லாவிட்டாலும், கற்பனையால் அவர்கள் எதிரில் இருப்பதைப்போல் காண்கிறார்கள்.

    கற்பனையில் கண்டதைக் கனவாகக்கொண்டு, அதிலேயே நிறைவு கண்டுவிடாது, அவற்றை நனவாக்கவும் முயற்சித்து வெற்றி பெறுகிறார்கள்.

    எந்தக் கண்டுபிடிப்பையும், `இது பாதுகாப்பானதுதான்!’ என்று முதலில் உறுதி கூறவும்முடியாது. இருப்பினும், அதன் உபயோகம் நேரத்தையும், சக்தியையும் மிச்சமாக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன், துணிச்சலுடன் செய்கிறார்கள்.

    ஒருவர் புதியதாக எதையாவது செய்ய முயன்றால், `புரட்சி’ என்பார்கள். அதனால் விளையும் நன்மைகள் அதை முயல்கிறவருக்குத்தான் புலப்படும்.

    புதியதாக எந்தக் காரியத்தைத்தான் உடனுக்குடன் செய்ய முடியும்! பொறுமையும் விடாமுயற்சியும் அதிக அளவில் இருக்கவேண்டும். அதற்காக நிறைய உழைக்கவேண்டும். பல பிழைகளும் சறுக்கல்களும் எதிர்ப்படும்.

    இவற்றால் உற்சாகத்தை இழக்காது, எடுத்த காரியத்தை முடிக்கும் உறுதியுடன் ஈடுபட்டால்தான் முயற்சி திருவினையாகிறது.

    தற்காலத்தில், எல்லோராலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ப்ரெஷர் குக்கர் டெனிஸ் பாபின் என்ற பிரெஞ்சு நாட்டுக்காரரால், 350 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

    `நீராவியாலும், அழுத்தத்தாலும் பருப்பு, அரிசிபோன்ற எல்லாவற்றையும் வெகு விரைவாக வேகவைக்க முடியுமோ?’ என்ற யோசனை அவருக்கு முதலில் எழுந்திருக்கவேண்டும்.

    ஆரம்பத்தில், `இது நம்மால் முடியுமா?’ என்ற சந்தேகம் இருந்திருந்தால், அதை அவரே வென்றிருக்கக்கூடும். எதையும் சாதிக்க தன்னம்பிக்கை அவசியமாயிற்றே!

    (இந்தியாவில் அறிமுகமானபோது, அதை உபயோகிக்க பலரும் பயந்தார்கள். அழுத்தம் அதிகமாக இருந்தபோதே, விவரம் புரியாது, மூடியைத் திறக்கமுயன்ற சிலர் முகத்தில் ஆவி அடித்தது காரணமாக இருக்கலாம்).

    ஆரம்ப சூரத்தனம்

    எந்தத் துறையாகிலும், நாம் செய்ய ஆரம்பித்த ஒரு காரியத்தை ரகசியமாக வைக்கவேண்டுவது அவசியம். சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிட்டு, முடிப்பதற்குள் அதைப் பற்றிப் பிறருடன் பெருமையாக பேச நினைப்பது அபாயம்.

    யாரோ ஒருவர், அதைக் கவனமாகக் கேட்டுவிட்டு, `நீ சொல்வது நடக்காது!’ என்று சந்தேகம் ஏற்படச் செய்வார் முதலில்.

    அவரது போலி சந்தேகத்தைச் சவால் என்றெடுத்துக்கொண்டு, விரிவாக விளக்குவோம்.

    இதைத்தானே அவரும் எதிர்பார்த்தார்!

    நம்மை முந்திக்கொண்டு, தானே முயன்று கண்டுபிடித்ததைப்போல், தக்க இடத்தில் விரிவாகக் கூறி, லாபம் சம்பாதிப்பார்.

    இக்காலத்தில் இம்மாதிரியான நம்பிக்கைத் துரோகிகள் மலிந்துவிட்டார்கள்.

    கதை

    ஒரு இசைக்கலைஞர் தான் இயற்றிய பாடல்களை தன் குருவிடம் காட்டினார், அவர் மகிழ்ந்து பாராட்டுவார் என்று எதிர்பார்த்து.

    அப்பாடல்களை நோட்டமிட்ட குரு ஒன்றும் சொல்லாதது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. அதன் காரணம் பிறகுதான் புரிந்தது.

    தான் இயற்றியவை அவை என்று குரு அவற்றைப் பிரகடனப்படுத்தினார்!

    `உங்களை எவ்வளவு நம்பினேன்! நீங்கள் என்னை இப்படி ஏமாற்றலாமா?’ என்று சீடரால் குருவைத் தட்டிக்கேட்க முடியவில்லை. குருபக்தியும், அவர்மேல் கொண்டிருந்த மரியாதையும் தடுத்தன.

    ஆனால், ஆயுள் முழுவதும் குருவின் நேர்மையற்ற செயல் அவரை உறுத்திக்கொண்டே இருந்தது. வருத்தம் மறையவே இல்லை.

    ஏன் காப்பி அடிக்கிறார்கள்?

    பிறரைக் காப்பி அடிப்பது எளிதாக இருக்க, `நமக்கு இருக்கிற கொஞ்சம் மூளையைக் கசக்கி, எதையாவது கண்டுபிடிப்பது முடிகிற காரியமா!’ என்ற கொள்கை உடையவர்கள் இப்படிப்பட்டவர்கள்.

    இவர்களுடைய சாமர்த்தியம் வேறுவிதமாக வெளிப்படும்.

    ஒரு ராகத்தில் அமைந்த பல பாடல்களைக் கேட்டால், இசை நன்கு பயின்றவர்களுக்குக் கற்பனை ஓடும். அவற்றை எப்படியெல்லாம் மாற்றலாம் என்ற யோசனை எழும்.

    `அவ்வளவு கஷ்டப்படுவானேன்!’ என்றுதான் காப்பி அடிக்கிறார்கள்!

    கதை

    கர்னாடக இசையில் தேர்ந்த ஒருவர் வேறு ஒருவரது பாடலுக்குத் தானே மெட்டமைத்து, ஒரு கச்சேரியில் பாடியிருந்தார். பக்கவாத்தியம் வாசித்தவர்களிடம் அடக்கமாக, தன் பங்களிப்பைத் தெரிவித்துக்கொண்டார்.

    அவர் மறைந்ததும், திரைப்பட இசை அமைப்பாளர் ஒருவர் அந்த மெட்டைத் தன்னுடையதாக ஆக்கிக்கொண்டார். அதனுடன் வேறு வாத்தியங்களையும் இணைத்தது மட்டும்தான் அவருடைய கைங்கரியம்.

    அவருக்குப் பெரும்புகழ் கிடைத்தது. `Genius’ என்றுகூட ஒரு ரசிகர் பாராட்டியிருந்தார்!

    குழுவில் படைப்பு

    இருவரோ, மூவரோ இணைந்து ஒரு படைப்பைப் படைத்தால் எளிதாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும். இதில் ஒருவர் நடைமுறையில் இருப்பதைப் புரிந்து வைத்திருப்பார். இன்னொருவர், `இப்படிச் செய்தால் என்ன?’ என்று புதிய கற்பனையைக் கொண்டுவருவார். மற்ற இரண்டையும் இணைப்பார் மூன்றாமவர்.

    அறிவிலும், திறமையிலும் ஒத்திருப்பதுடன், அவர்களுக்குள் போட்டி, பொறாமை இருக்கக்கூடாதென்பதும் அவசியம். விவாதம் வரலாம். ஆனால், சண்டையில் முடியக்கூடாது.

    `நான்தான் செய்தேன்!’ என்று கூறி, தானே முழு பாராட்டையும் பெற எண்ணுகிறவர் சுயநலவாதி. அடுத்த முறை, யார் அவருடன் இணைவார்கள்!

    கதை

    “நான்குபேர் இணைந்து, ஒரு கதையை எழுதுகிறோம். நான் இரண்டாவது, நீங்கள் மூன்றாவதாக எழுதுங்கள்,” என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் பணிக்க, நான் ஒப்புக்கொண்டேன்.

    எழுதி அனுப்பிவிட்டு, அதைப்பற்றி மறந்தேபோனேன்.

    வெளியானதும், `இரண்டாவது பகுதி சுமாராக இருக்கிறது. கடைசி ஒரு பக்கம்தான் சுவாரசியமாக இருக்கிறது,’ என்று தோன்றியது.

    அடுத்த மாதம் நான் எழுதியது வெளியாக, அதிர்ச்சி உண்டாயிற்று.

    அப்போதுதான் புரிந்தது, என் பகுதியின் முதல் பாகத்தை அவர் தனதாக ஆக்கிக்கொண்டார் என்பது.

    `இப்படிச் செய்துவிட்டீர்களே!’ என்று நான் கேட்கவில்லை. நான் அவரைவிடத் திறமைசாலி என்று சமாதானம் செய்துகொண்டேன்.

    அடுத்த பல மாதங்கள் அப்பத்திரிகைக்கு எதுவும் எழுதவில்லை. அப்போது அவருக்குப் புரிந்திருக்கும் என் மனவருத்தம்.

    மனச்சாட்சியே இல்லாது, இன்னொருவரின் ஆக்கபூர்வமான வேலையைத் `திருடினால்’ உண்மையான நிறைவு கிடைக்குமா?

    ஆசை இருக்கு கதையெழுத, ஆனால்…

    ஒரு படைப்பை ஆரம்பிப்பதற்குமுன், அதற்கான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மொழி வளமும் அவசியம்.

    `எனக்குக் கதையெழுத, பாடல்கள் புனைய ஆசை. ஆனால், படிக்கப் பிடிக்காது!’ என்றால் எப்படி?

    முன்னூறு வருடங்களுக்குமுன் இருந்த தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர் போன்ற வாக்கேயக்காரர்களைப் பார்ப்போமா?

    சிறுவயதிலேயே அவர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற குருமார்களிடம் அனுப்பினார்களாம் அவர்களது பெற்றோர். அதைத் தவிர, மதத்தைப்பற்றியும் கற்றார்கள்.

    பக்தி மிகுந்து, தென்னாட்டில் கோயில் கோயிலாகப் போக, அங்கிருந்த தெய்வங்களின்மேல் பாடல்களைப் புனையும் திறன் வந்தது. தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில், கர்னாடக இசைப்பாணியில் இயற்றினார்கள்.

    அவர்களுடைய கற்பனைத்திறன் இன்றளவும் பாராட்டப்படுவது எப்படியென்றால், ஆர்வத்துடன், படைப்புக்கு வேண்டிய ஆதாரமான அறிவு, மொழித்திறன் இரண்டையும் பெற்றிருந்ததுதான்.

    எந்தத் துறையானாலும், கற்பனைவளம் மிக்கவர்களே முன்னுக்கு வருகிறார்கள்.

    தமிழ்த் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்தில், செந்தமிழில் உரையாடினார்கள்.

    ஐம்பதுகளில், `நாம் அன்றாடம் அப்படிப் பேசுவது கிடையாதே! எல்லாருக்கும் இந்தத் தமிழ் புரியுமா?’ என்ற சந்தேகம் எழ, சற்றே மாற்றினார்கள். இருந்தாலும், உணர்ச்சிமயமான இறுதிக்கட்டத்தில் செந்தமிழ் துள்ளி விளையாடும்.

    காலப்போக்கில், அதுவும் மாற, வெவ்வேறு உச்சரிப்புகளுடன்கொண்ட தமிழ் பயன்படுத்தப்பட்டது.

    தெய்வங்கள் எப்படிக் காட்சி அளிப்பார்கள்?

    பரம பக்தர்களுக்குத்தான் இக்கேள்விக்குப் பதில் புலனாகும்.

    நம்மைப்போன்ற பாமரர்களுக்காக, தெய்வீகமான படங்களின் இயக்குனரின் கற்பனையால், உடை, ஆபரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டன. தெய்வங்கள் செந்தமிழில் உரையாட, நகைச்சுவைப் பாத்திரங்கள் தற்காலத்தமிழில் கொச்சையாகப் பேசுவார்கள்!

    ரசிகர்களும் இயக்குனர்கள் மற்றும் கதாசிரியர்களின் கற்பனையை ஏற்றுக்கொண்டனர். அவ்வப்போது, விமரிசகர்கள் குறிப்பிட்ட குறைகளையும் நிவர்த்தி செய்தனர்.

    கதை

    நான் மேற்பயிற்சிக்காகப் போயிருந்தேன். நான்குவிதமான தலைப்புகள் முதலிலேயே கொடுக்கப்பட்டிருந்தன. விரிவுரையாளர்கள் அவற்றை ஒட்டிப் பாடம் நிகழ்த்தினார்கள்.

    அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பயிற்சி முடியும் தறுவாயில், நீண்ட கட்டுரை ஒன்று எழுதவேண்டும் – மலாய் மொழியில்.

    எங்கள் குழுவில் சீன ஆசிரியைகள் சிலர் இருந்தார்கள். அவர்கள் கற்றது, கற்பித்தது எல்லாமே சீன மொழியில்தான். ஓரளவு ஆங்கிலம் மட்டும் பேசுவார்கள்.

    மலாய் அறவே தெரியாது என்ற நிலையில், அவர்களுக்கெல்லாம் கட்டுரை எழுதித் தந்து சம்பாதித்தார் ஒருவர்! அவர்களது நிலை புரிந்து, எந்தப் புகாரும் எழுப்பப்படவில்லை.

    கற்பனை இருந்திருக்கலாம். ஆனாலும், இவர்களால் படைக்க முடியவில்லை. ஏனெனில், மொழி தெரியாமல் போயிற்று.

    Share
  • கண்ணன் தீபாவளி – இசைச் சொற்பொழிவு

    கண்ணன் தீபாவளி – இசைச் சொற்பொழிவு

    நரகாசுரனைக் கண்ணன் வதம் செய்த நாளையே தீபாவளி எனக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், கண்ணனின் அருமை, பெருமைகளை இசைச் சொற்பொழிவாக வழங்கியுள்ளார், நாகி நாராயணன். இந்த அமர கீதங்களைக் கேட்டு, தீபத் திருநாளைக் கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 39

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 39

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பேசாத வாய் பேசிய உவமங்கள்!

    முன்னுரை

    பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் உவமம் பற்றிய ஆய்வு உவம இயல், அகத்திணை இயல், பொருளியல் முதலியவற்றில் நிகழ்ந்திருப்பதால் உவமம் பொருட்பகுதியாகவே கருதப்படும் என்பது அறிஞர் கருத்து. அகத்திணைக் கூறுகளான உள்ளுறை, இறைச்சி ஆகியன உவமத்தின் நுண்ணியச் செறிவுகள் ஆதலின் உவமம் பெரும்பாலும் அகத்திணைப் பாடல்களிலேயே பயன்பட்டு வந்திருக்கக்கூடும் என்பது ஒரு வலுவான அனுமானம். தொடர்ந்து உவமங்கள் புறச்செய்திகளைக் கூறவும் பயன்படத் தொடங்கின என்பது இலக்கிய வரலாறு காட்டும் உண்மை. இதனையும் தொடர்ந்து பக்தியுணர்ச்சியை வெளிப்படுத்தவும் அது பயன்பட்டு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து நீதிநெறிகளை விளக்கவும் பயன்பட்டு வந்திருக்கிறது என்பது திருக்குறள் தொடங்கிய நீதி நூல்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும். அந்த வகையில் சைவப்பெருந்தகை குமரகுருபரர் அவர்கள் பாடிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலில் பயின்றுள்ள சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    விறகுக்கும் ஆகாத நெடுமரம்

    ஒரு நூலை மங்கலத்தில் தொடங்கி மங்கலத்தில் நிறைவு செய்வது என்பது தமிழிலக்கிய நெடிய மரபின் ஒரு பகுதி. ‘உலகம்’ என்ற சொல் எந்தெந்த இலக்கியங்களில் தொடக்கமாக அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் அறிஞர்கள ஆய்ந்திருக்கிறார்கள். அதுபோலவே உவமத்திலேயே தொடங்கிய இலக்கியங்களையும் அடையாளம் காணமுடியும். ‘அகர முதல’ என உவமத்திலேயே இறைவனுக்கு உண்மை கூறினார் திருவள்ளுவர். ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு” என்பது திருமுருகாற்றுப்படையின் தொடக்கம்.  இன்னும் பல., உரைப்பின் பெருகும். இந்த மரபைக் குமரகுருபரரும்  இறைவணக்கத்திலேயே பின்பற்றுகிறார்.

    “நீரில் குமிழி இளமை., நிறைசெல்வம்
    நீரில் சுருட்டும் நெடுந்திரை – நீரில்
    எழுத்தாகும் யாக்கை நமரங்காள்! என்னே
    வழுத்தாத எம்பிரான் மன்று? “ (நீ.நெ.வி.4)

    நில்லாத இளமை நீர்க்குமிழிக்கு ஒப்பாகும். முக்காலத்தும் நிறைந்தாலும் செல்வம் காற்றால் மொத்துப்பட்டலையும் அலைகளுக்கு ஒப்பாகும். ஒப்பனையால் பொலிவு பெறும் உடம்பு நீர் மேல் எழுதப்படும் எழுத்துக்கு ஒப்பாகும். இவ்வளவு உண்மைகளை அறிந்திருந்தும் நிலையான இறைவனை அவன் நிற்கும் திருக்கோயில் சென்று வணங்காதது ஏன்? என்பதுதான் குமரகுருபரரின் வினா. இளமைக்கு நீர்க்குமிழியையும் செல்வத்திற்குத் திரைகளையும் அழியும் உடம்பிற்கு நீர் மேல் எழுத்தையும் கடவுள் வாழ்த்திலேயே கூறும் குமரகுருபரர், நூல் தொடக்கத்தில் உவமப் பயன்பாட்டிலும் உவமங்களிலும் மரபினையே பின்பற்றுகிறார் என்பது கூடுதல் தகவல்.

    மலர் பொன்னானால் மணம் என்னாகும்?

    சில நூல்களில் பயின்றுள்ள சொற்களும் தொடர்களும்  உவமங்களும் உத்திகளும் நம்மையுமறியாமல் நம் ஆழ் மனத்துள் சென்று தங்கிவிடும். அவ்வாறு தங்கிவிடுவதுதான் அதன் சாயல், பின்னாலே வரும் படைப்புக்களில் வெளிப்படுத்தித் தலைக்காட்டுவதற்குக் காரணமாகும். இது நகலெடுப்பதன்று. தாயின் சாயல் பிள்ளைக்கு வருவது போன்றது. திருவள்ளுவர் சொல்லாற்றலைப் பற்றிச் சுருக்கமாகத் தெளிவாகச் சிந்தித்திருக்கிறார்.

    “இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
    உணர விரித்துரை யாதார்” (கு.எண்.650)

    இந்தக் குறள் சொல்வன்மையின் சிறப்பினை எதிர்மறையால் கூறுகிறது. ‘பூங்கொத்தின் பயன் அதன் மணம்’ என வரையறுக்கிறது. மணம் இல்லாவிடின் பூங்கொத்துக்களினால் பயனில்லை என்பதைக் குறிப்பாகச் சொல்கிறது. இந்தச் சிந்தனையின் நீட்சியாக நீதிநெறி விளக்கத்தில் பின்வரும் பாடல் அமைந்திருப்பதாகக் கருதலாம்.

    “எத்தணைய ஆயினும் கல்வி இடனறிந்து
    உய்த்துணர்வு இல்லெனின் இல்லாகும் – உய்த்துண்ர்ந்தும்
    சொல்வன்மை இன்றெனின் என்னாம்? அஃதுண்டேல்
    பொன்மலர் நாற்றமுடைத்து” (நீ.நெ.வி. 5)

    திருவள்ளுவர் உவமத்தை எதிர்மறையாகக் கூறிப் பொருட்சிறப்பையும் அவ்வாறே பெறவைத்தார். குமரகுருபரர் பொருட்சிறப்பை எதிர்மறையாகக் கூறி உவமத்தின் சிறப்பை உடன்பாட்டில் பெற வைக்கும் நுண்ணியம் உணர்க. ‘மணக்காத பூவால் பயனில்லை’ என்பது வள்ளுவர் விளக்கம். உயர்த்துணர்வதும் உய்த்துணர வைப்பதும் இல்லாயின் கல்வியினால் பெருமையில்லை என்பது நீதிநெறி விளக்கம். ஆயினும் திருவள்ளுவர் உணர வைப்பதையே பொருளாகக் கொள்ள, குமரகுருபரர் உணர்வதையும் உணர வைப்பதையும் பொருளாகக் கொள்கிறார். கொண்டு உணரும் திறனை அதாவது ‘எண்பொருளவாகப்’ பிறர் சொல்லும் நுண்ணியங்களை உணரும் கற்றவனைப் பொன்மலரோடு ஒப்பிடுகிறார். இந்த ஒப்பீடு திருக்குறளில் இல்லை. நாறா மலரைத்தான் திருக்குறள் காட்டுகிறது. பொன்மலரை நீதிநெறி விளக்கம் காட்டுகிறது. பூ மணம் பூமணமாகவே இருக்கும். ஆனால் பூ பொன்னாலானால் மணம் எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் உணர முடியாது. காரணம் உவமம் இல்பொருள். இவ்வாறு இல்பொருளைக் குமரகுருபரர் உவமமாகக் சொன்னதற்குக் காரணம் அரியது நோக்கி. அதாவது உணர்வதும் அவ்வாறு உணர்ந்ததைப் பிறர்க்கு உணர்த்துவதும் அரிய செயல். எனவே அத்தகையோர் அரியர். எனவே இல்பொருள் உவமமாக்கப்பட்டுள்ளது.  மேலும் திருக்குறள் ஒரு பொருள் பற்றி ஆராய, நீதிநெறி விளக்கம் இருபொருள் பற்றி ஆராய்வது சிந்திக்கத்தக்கது.

    பிணம் விட்ட பெருமூச்சு!

    பிணம் பெருமூச்சு விடுமா? விடாது. கருத்து என்னவென்றால் பெருமூச்சு விடுவதனாலேயே அது உயிர்பெற்ற மனிதனாகிவிட முடியாது என்பதுதான். பெருமூச்சுவிடுவது அதன் இருப்புக்கு அடையாளம். அவ்வளவுதான். ஆற்றல் மிகு உரையாசிரியர் பரிமேலழகர் ஒரு சில குறட்பாக்களுக்குச் சொல்லுக்குச் சொல் விளக்கவுரை எழுதியிருப்பார். அவற்றுள் ஒன்று,

    “ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவும்ஓர் நோய்” (கு.எண். 848)

    என்னும் குறட்பாவாகும். இதற்குப் “புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்;  அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம்” எனப் பதசாரம் எழுதி,

    “உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருடல் தன்மைத்தாய் வேறுபடுதலின், ‘அவ்வுயிர்’ என்றும், அதனின் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் ‘போமளவும்’ என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் ‘ஓர் நோய்’ என்றும் கூறினார்”

    என்று விளக்கவுரை தருகிறார் பரிமேலழகர். ‘அவ்வுயிர்’ என்னும் சேய்மைச்சுட்டால் சுட்டியதும் ‘அவன் இருக்கும் வரை’ என்னாது ‘அது போகிறவரை’ என உயிரை அஃறிணையாக்கி உரைத்ததும் ‘போஒம்’ எனச் செய்யுளிசை அளபெடையை ஒரு நோக்கத்துடன் பயன்படுத்திக் கொண்டதுமான திருவள்ளுவரின் சதுரப்பாடு மிகவும் உயர்ந்ததாம். இந்தக் கருத்தினை உள்வாங்கிய அல்லது இதனால் ஈர்க்கப்பட்ட குமரகுருபர சுவாமிகள்,

    “முடிப்ப முடித்துப் பின் பூசுவ பூசி
    உடுப்ப உடுத்து உண்ப உண்ணா – இடித்திடித்துக்
    கட்டுரை கூறின் செவிகொளா! கண்விழியா!
    நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம்” (நீ.நெ.வி.31)

    என்னும் ஒரு வெண்பாவை எழுதியிருக்கிறார். ‘நினைத்தவாறே ஒழுகித், தான் நினைக்கின்ற செயல்களையே செய்து முடித்துப், பூசுவன பூசி, உடுப்பன உடுத்து, உண்பனவற்றை உண்டு என்று தன்னிச்சையாகவே செயல்படும் ஒருவனுக்கு அவனிழைக்கும் தவறைப் பிறனொருவன் சுட்டிக்காட்டினால் செவி கேளாது. கண்ணும் குருடாகும். ஆதலின் அவன் பெருமூச்சுவிடும் பிணத்திற்கு ஒப்பாவான்” மேலே சுட்டிய திருக்குறள் மற்றும் நீதி நெறி வெண்பாக்களின் கருத்தொற்றுமையைக் கற்பார் எளிதில் புரிந்து கொள்ளலாம் எனினும் நடைப்பிணம் கிடைப்பிணமாகும் நாளை திருவள்ளுவர் எதிர்நோக்க, ‘பெருமூச்சும் நிற்காதா?’ என்று குமரகுருபரர் பெருமூச்சு இடுவதை உணரமுடிகிறது. தானாகவும் தெரியாது பிறர் சொல்வதைக் கேட்கவும் மறுதலித்துத் தனக்கும் உலகத்துக்கும் துன்பமாகித் திரிபவர்களுக்கான உவமம் இருபெரும் சான்றோர்களுக்குப் பெரும்பாலும் ஒத்திருப்பது வியப்பானதன்று!

    உடையார் முன் இல்லார்

    தமிழகத்தில் கல்வி பெறுவதில் இருவகை முறைகள் இருந்திருக்கலாம். குருவிற்குக் கொடுத்துப் பெறுவது. பிச்சையெடுத்தாகினும் கல்வி பெறுவது. இரண்டினையும் உறழ்ந்து நோக்கினால் குருவிற்குக் கொடுப்பதற்காகப் பிச்சையெடுப்பது நிகழ்ந்திருக்கக்கூடும். இரந்தும் உயிர் வாழ்தற்கு இது மாறானது. உயிர்வாழ்தற்குப் பிச்சையெடுப்பது இழுக்கு. கல்வி பெறுவதற்குப் பிச்சையெடுப்பது ஏற்புடையது என்பது பழந்தமிழ்ச் சான்றோர் கொள்கை.

    “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே”

    என்னும் புறநானூறும்,

    “கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே”

    எனக் கற்றலை அடுக்கில் கூறிப் பின்னரும் அனுவதித்த வெற்றி வேற்கையும் இத்தகைய எண்ணங்களையே ஏற்படுத்துகின்றன. ‘சிற்றுயிர்க்கு உற்ற துணையாதலின்’ கல்வியின் பெருமை இம்மை மட்டும் சார்ந்தது அன்று உயிரோடு சார்ந்தது’ என்பது பெறப்படும். படவே அது ‘எழுமையும் ஏமாப்புடைத்து’ என்பதும் புலப்படும். படுதலின் கல்லாமையின் இழிவையும் கல்வியின் பெருமையையும் பன்முக உத்திகளில் பாடும் நிலை சான்றோர்க்கு வந்திருக்கிறது என்றே எண்ண வேண்டியதிருக்கிறது. ‘கல்வியழகே அழியா அழகாதலின்’ அதன் சிறப்பு நோக்கி வலியுறுத்தும் போக்கினையே காண முடிகிறது. ‘உடைமை செல்வம்’ என்றால் ‘இன்மை வறுமை தானே! கல்வியைப் பெற்றவர்கள் கல்விச் செல்வத்தில் உயர்ந்தோர். கல்வியைப் பெறாதார் அது இல்லாமையின் வறியர். வறியர் செல்வரிடத்தில் இரப்பது இயல்பு. இதனைத்தான் திருவள்ளுவர்,

    “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
    கடையரே கல்லா தவர்.” (கு.எண்.395)

    என உவமமாக்கியுரைக்கிறார். இந்த உவமத்தால் கவரப்பட்ட குமரகுருபரர் திருவள்ளுவரின் பொருள் செயல்வகை என்னும் அதிகாரக்கருத்தினையும் ஒருசேரத் தழுவி எழுதுகிறார் இப்படி!

    “கல்வி யுடைமை பொருளுடைமை என்றிரண்டு
    செல்வமும் செல்வம் எனப்படும் – இல்லார்
    குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும்
    தலைவணங்கித் தாழப் பெறின்” (நீ.நெ.வி. 16)

    இந்த வெண்பாவில் கல்வியையும் செல்வத்தையும் செல்வம் என அடையாளப்படுத்தியதில் அவ்வளவாகச் சிறப்பில்லையெனினும் இரண்டு குறட்பாக்களை நினைவுபடுத்துகிறார் குமரகுருபர். திருவள்ளுவர் கல்வியைப் பெறுதற்குக்  காட்டிய உவமத்தைப் பொருளுக்கும் காட்டுவது புதிய உத்தி எனலாம். ‘குறையிரந்து தம் முன்னர் நிற்பபோல்’ என்பது திருவள்ளுவர் கல்வியிலார் அதனைப் பெறுதற்குச் செல்வர்க்கு முன்னால் நிற்கும் நிலையைக் காட்டிய உவமம். திருவள்ளுவர் மிக நுட்பமாக அந்தக் குறட்பாவில் செய்திருக்கும் பதிவு நேர்த்தியை ஒரு துறைக்குச் சொல்லப்பட்டது போல் காட்டப்பட்ட அந்த உவமத்தை இரு துறைக்கும் தெளிவாகக் காட்டிய குமரகுருபரர்,

    “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வந் தகைத்து” (கு.எண். 125)

    என்னும் குறட்பாவின் கருத்தையும் உள்வாங்கியிருப்பதோடு பொருத்தமாக இருக்குமானால் ஒரு பொருளை விளக்குதற்கான  உவமத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்னும் உவமக் கோட்பாட்டையும் அறிமுகம் செய்திருக்கிறார் என்பதற்கும் சான்றாகத் திகழ்கிறது.

    சிந்திய பருக்கையால் செழித்திடும் உயிரினம்

    குருடர்கள் தடவிய யானையைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால்  முழுயானையைப் பாடிய கவிஞர்கள் கூட ஒரே மாதிரி நோக்கவில்லை என்பதையும் ஒரே புலவர் கூட யானையைப் பலவகையாக நோக்கியிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது, திருக்குறளில் யானை பற்றிய குறட்பாக்கள் யானை, களிறு என்ற பெயர்களில் எட்டு இடங்களில் (24, 597, 678, 599, 758, 772, 774, 1087) கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த எட்டு இடங்களிலும் திருவள்ளுவரின் பார்வை மிக நுண்ணிய வேறுபாடுகளை உடையதாக அமைந்திருக்கிறது. விரிப்பின் பெருகும். எனினும் 597, 678, 599 ஆகிய மூன்று குறட்பாக்களிலும் அது உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்விடங்களிலெல்லாம் யானையின் பெருமிதத்தையும் வீரத்தையும் சுட்டுகின்றனவாகவே உள்ளன. ஆனால் புறநானூற்றுப் பாடல் ஒன்று யானைக்கு முறையாக இடப்படும் உணவுக் கவளத்தைக் காட்டி அதன் உண்ணும் முறையை உவமமாக்கியிருக்கிறது.

    “காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
    மாநிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்;
    நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
    வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
    அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
    கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும்;
    மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
    வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
    பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
    யானை புக்க புலம்போலத்
    தானும் உண்ணான் உலகமும் கெடுமே!” (புறம். 184)

    இந்தப் பாட்டில் யானை நேரடியாக உவமமாகக் கூறப்படவில்லை.   யானையை எப்படிக் கையாள வேண்டும் என்பதையே உவமமாக்கி அதனால் அரசன் செய்ய வேண்டிய ஆட்சிமுறைமையை விளக்குகிறார் புலவர் பிசிராந்தையார். முறையாக அளிக்கப்படுமாயின் யானை ஒழுங்காக உண்ணும். கட்டவிழ்த்துவிட்டால் கழனியும் பாழாகும். ஒட்டுமொத்த உலகமும் அழியும் என்பது கருத்து. இந்தப் பாட்டில் முறையாகக் கொடுக்கப்படும் கவளத்தை அது உண்கையில் சிதறும் பருக்கைகளைப் பற்றிய சிந்தனை குமரகுருபரருக்கு வந்திருக்கிறது. அவர் எழுதுகிறார்,

    “வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய்தப்பின்
    தூங்கும் களிறோ துயர் உறா – ஆங்கதுகொண்டு
    ஊரும் எறும்பிங்கு ஒரு கோடி உய்யுமால்
    ஆரும் கிளையோடு அயின்று” (நீ.நெ.வி. 38)

    யானையின் ஒரு சிறு செயலைச் சித்திரிக்கும் இப்பாடல் முழுவதையும் ‘பிறிது மொழிதல்’ என்னும் அணி உத்தியால் அலங்கரித்த குமரகுருபரர், ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதைக் குறிப்பாகப் பெறவைக்கிறார். விலங்குகளின் உறவுகளுக்குக் ‘கிளை’ என்பது தொல்காப்பியச் சுட்டெனினும் இலக்கியங்களில் அவ்வளவாகப் பயின்று வருவதில்லை. ‘கல்லென் சுற்றம்’ என்பதுதான் புறநானூற்றின் பொருண்மைத் தொடர்.  ஆனால் ‘யானையின் கிளையும் அயிறும்’ என்ற தொடராட்சியால்  செல்வர்களின் சிறு செல்வம் அதனைப் பெறுவாருக்கும் பெறுவார்தம் சுற்றத்தார்க்கும் (கிளைக்கும்) பயனாகும் (சுற்றத்தோர்க்கும் தொடர்புறு கிளைஞர்க்கும்’ — சிலப்பதிகாரம்) என்பதைக் குறிப்பாகப் பெற வைக்கும் சுவாமிகளின் சதுரப்பாடு பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்துள்ளது. உவமம் ஒன்றானாலும் அதன் பன்முகப் பரிமாணத்தை உற்று நோக்கிப் பல பொருண்மைகளை விளக்கலாம் என்பதும் தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடாக அமைந்துள்ளது என்பதை இதனால் புரிந்து கொள்ள இயலும்.

    நிறைவுரை

    மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தரவுகளால் சில ஆழமான உவமக் கோட்பாடுகளை வரையறுக்க முடியும். முன்னோர்கள் சொன்னதெல்லாம் பழைமை என்பதற்காகத் தள்ளிவிட வேண்டியதில்லை. குறிப்பிட்ட பொருண்மைக்குச் சொல்லப்பட்ட உவமமே  மிகப் பொருத்தமானது என்று கருதினால் பின்வருவோர் அதனையே உவமமாகக் கொள்வதில் தயக்கம்  காட்டுவதில்லை. அதே நேரத்தில் ஒரு வழியாக நோக்கப்பட்ட அந்த உவமத்தைத் தம் நுழைபுலம் காரணமாகப் பன்முகமாக நோக்கிப் புதிய பொருண்மைகளை விளக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘பரியது கூர்ங்கோட்டது’ என யானையைச் சிறப்பித்தாலும் புலிக்கு அஞ்சும் அதனை எதிர்மறையாகத் திருவள்ளுவர் நோக்கியிருப்பதும் பல இடங்களில் அதன் பெருமிதத்தைப் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருப்பதும் ஒரே உவமத்தின் பன்முகப் பரிமாணமும் உவமமாகலாம் என்பதைக் காட்டுகிறது. செய்யுளுக்குப் புறம்பாக நிற்கும் அணியிலக்கணத்தைச் செய்யுளுக்கு அகமாகவும் ஆக்க முடியும் என்பதற்குக் குமரகுருபரின் உவமங்கள் சான்றாகி நிற்கின்றன.

    (தொடரும்…)

    Share
  • ஆசைகளை மலரவிட அமைந்திடட்டும் தீபாவளி!

    ஆசைகளை மலரவிட அமைந்திடட்டும் தீபாவளி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    இருளகன்று ஒளிபரவ இறைவனிடம் வேண்டிடுவோம்
    இடரகன்று இனிமைவர இறைவனிடம் வேண்டிடுவோம்
    புவிமலர்ந்து வாசம்வர புனிதனிடம் வேண்டிடுவோம்
    புத்துணர்வு நிறைந்துவர நித்தமுமே வேண்டிடுவோம்

    மத்தாப்பு பட்டாசு மனமதிலே வருகிறது
    தித்திக்கும் பட்சணமோ தினமுமே தெரிகிறது
    மொத்தமுள்ள உறவுகளில் முகமலர்ச்சி வருவதற்கு
    தித்திக்கத் தீபாவளி வரவெண்ணி வேண்டிடுவோம்

    முடங்கியே இருந்திட்டோம் முகம்பாராது இருந்திட்டோம்
    பயணவழி அத்தனையும் பார்க்காமல் இருந்திட்டோம்
    விருந்துண்ணல் தவிர்த்திட்டோம் விமானத்தை மறந்திட்டோம்
    மனந்திரும்ப தீபாவளி மலர்ந்திடவே வேண்டிடுவோம்

    முகமூடி வாழ்க்கையினை முழுவுலகும் பார்த்ததுவே
    அகம்முழுக்க ஆசைகளை அடக்கியே வைத்தோமே
    ஆரவாரம் அத்தனையும் அடங்கியே நின்றதுவே
    ஆசைகளை மலரவிட அமைந்திடட்டும் தீபாவளி

    அருகிருந்தும் ஆலயத்தை அணுகவே முடியவில்லை
    ஆறுதலாய் வெளிசென்று அளவளாவ முடியவில்லை
    கலைநிகழ்ச்சி களியாட்டம் காணாமல் ஓடியதே
    களிப்புதனைக் கையேந்தி வந்திடட்டும் தீபாவளி

    பழையபடி கடைத்தெருவில் பட்டுக்கள் வாங்கவேண்டும்
    பலவகையில் பட்சணங்கள் வாங்கியே உண்ணவேண்டும்
    பக்குவமாய் கையணைத்து பலருமே மகிழவேண்டும்
    பார்சிறக்க மனம்சிரிக்க மலரட்டும் தீபாவளி

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 148 (மனம் தளரும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 148 (மனம் தளரும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    மானக்கஞ்சாறர் அளித்த கூந்தலை  வாங்குவர் போல நின்ற அடியார் அங்கேயே மறைந்து, ஆகாயத்தில்  மலைமகள் உமையம்மையுடன் இடப வாகனத்தின் மேல் இறைவனாக எழுந்தருளினார். விண்ணிலிருந்து மலர்மாரி பொழிய  இவரும் வீழ்ந்து வணங்கினார்.

    அவ்வாறு வணங்கிய அன்பரிடம், நிலவைத் தாங்கிய சடையுடைய  இறைவன் ‘’ நம்பால்  உனக்கிருந்த பேரன்பை உலகறியச் செய்தேன்!’’ என்று அருளினார். இடப வாகனத்தின் மேல் எழுந்தருளிய இறைவரின் கணங்களின் நாதர் போற்ற, வானவர் வந்து சேர, அவர்கள் முன்னே உச்சியில் குவித்த கரங்களுடன் நேராகவே இறைவனருளைப் பெற்றார்.

    உடனே வானவர் வணங்க கொன்றைமலரணிந்த சடையுடைய இறைவன் கைலை சென்றார். அப்போது வண்டுகள் மொய்க்கும் மலர்க்கூந்தலை உடைய மணமகள் கரம்பற்ற, கலிக்காமனார் வந்தார். அங்கே நிகழ்ந்த இறைவனருட் செயலைக் கேள்வியுற்று, மனம் மகிழ்ந்தார், தாம் அப்பேறு பெற வில்லையே என்ற மனத்தளர்வு  நீங்க, இறைவன் அருளால் மீண்டும் கூந்தலைப் பெற்ற மணமகளைத் திருமணம் புரிந்து கொண்டு அந்தணர்க்குப்  பொருள்  தானம் செய்து திருமணத்தை ஊரினர் அனைவரும் சிறப்படைய தம் இனம் வளர , தம்முடைய நகர் நோக்கிச் சென்றார்.

    மனம் தளரும் இடர் நீங்கி, வானவர் நாயகர் அருளால்
    புனைந்த மலர்க் குழல் பெற்ற பூங்கொடியை மணம் புணர்ந்து,
    தனம் பொழிந்து பெரு வதுவை உலகெலாம் தலை சிறப்ப
    இனம் பெருகத் தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார்.

    இவ்வாறு  தம் ஒரே மகளின் கூந்தலைத் திருமண நாளன்றே இறைவனுக்கு அளித்த  அடியாரின் பெருமையைப் போற்றுதல் தம்மளவில் இயலாது என்றார் சேக்கிழார்.

    பொருள்

    மனம் தளரும் இடர் நீங்கி என்ற தொடர், மனந்தளர்ந்ததனால் உண்டாகிய துன்பம் நீங்கியவராய், தேவதேவருடைய திருவருளினால் முன் புனைந்திருந்த வண்ணமே மலர்களணிந்த கூந்தலினை வளரப்பெற்ற பூங்கொடி போன்ற மணமகளாரை மணஞ்செய்து;  நிதிகளையாவர்க்கும் மிகக் கொடுத்துப் பெருங்கல்யாண மகிழ்ச்சி உலகெங்கும் ஒங்கிச் சிறக்கச் செய்து;சுற்றத்தார்கூடிப் பெருக நிறையத் தமது மதில் சூழ்ந்த பழவூரினைச் சென்று சேர்ந்தனர்.

    விளக்கம்

    தேவ தேவராதலின் ஆக்குதல், அழித்தல் முதலிய எல்லாம் வல்லவர்; அவரது அருள், களையப்பட்ட கூந்தலை முன் இருந்தவாறே மீள வளரச் செய்தது புனைந்தமலர்க்குழல் – மணக்கோலம் புனைந்திருந்த தேனக்க மலர்க்கூந்தல் என முன் அரிந்தெடுக்கப் பட்டவாறே மீளவும் உளதாயினமை குறித்தார். சிறுத்தொண்டநாயனார் சரிதத்தில் சமைத்து இலையிற் படைத்த கறி,மீளப் பாலகனாக வரத் திருவருள் செய்ததென்றால், வளருந் தன்மைத்தாய குழல் விரைவில் வளர்ந்த இது ஓர் அற்புதமன்றே! மலர்க்குழல் பெற்ற என்ற இக்குறிப்பினைக் கொண்டு, கலிக்காமனார் குழல் களையப்பட்ட பெண்ணை எவ்வாறு மணப்பதென்று மனந்தளர்ந்தனர் என்பார் சிலர். அருணிகழ்ச்சி காணும்பேறு பெறவில்லை எனச் சிந்தை தளர்ந்தனராதலின் கலிக்காமனார் காணும்படி புனைந்த மலர்க்குழல் பெறத் தரும் இவ்வருள் வெளிப்பாட்டினை இறைவர் செய்தருளினர் என்க.

    புனைந்தமலர்க்குழல் – அரியும்முன், தேனக்க மலர்க்கூந்தல், மலர்க்கூந்தல் என்றும், மீளக்குழல் வளர்ந்தபின், இங்குப் புனைந்தமலர்க்குழல் என்றும் கூறிய ஆசிரியர் இடையில், அடியில் அரிந்தெடுக்கப்பட்ட நிலையில், வண்டுவார்குழல் என்று வாளா கூறிய நயம் சிந்திக்க.

    தனம் பொழிந்து – கல்யாணத்தில் மணமகன் வீட்டார் தமது இயல்புக்கேற்றபடி இரவலர் முதலியோர்க்கு ஈகையிற் சிறத்தல் இயல்பு. அரசர் சேனாபதி குடியில் வந்த ஏயர்கோனார் தம் நிலைமைக்கேற்றவாறும், அவ்வாறே அரசர் சேனாபதிக்குடியில் வந்தவராய்த் திருவருள் பெற்றுப் போந்த மானக்கஞ்சாறனாரது பெருமைக்கும் புனைந்த மலர்க்குழல் மீளப்பெற்ற மகளாரது பெருமைக்கும் ஏற்றவாறும், இருவர்க்கும் இடையாடிச் செய்த சிவபெருமானது திருவருட் சிறப்பினுக்கேற்றவாறும் தனம் பொழிந்தனர் என்க. இதனால் அது பெருவதுவையாகி உலகெலாம் தலைசிறக்க ஓங்கி விளங்கிற்று என்பதாம். தலைசிறத்தலாவது – புகழ் மேம்படப் பாராட்டப்பெறுதல்.

    இனம்பெருக – மணத்தின் பின்னர் இருபாலின் இனத்தவர்களும் ஒருங்கு கூடிச் செய்தலாலும், கலிக்காமனாருடன் தம் சால்புநிறை சுற்றம் தலைநிறையக்  கூடி வர, அவர்களோடு மானக்கஞ்சாறனாரது நீள்சுற்ற மெலாம் ஒப்பரிய இப்பெருவதுவையினாற் பிணைக்கப்பட்டு ஒன்று கூடுதலாலும், முன் வந்ததனைவிட மிகப் பெருங்கூட்டமாதலின் இனம்பெருக என்று தேற்றம் பெற எடுத்துக் கூறினார்.இனிச் சிவனடியார் இனம் வளர என்றும் நுட்பப்பொருள் காணலாம்.

    தம்முடைய எயில்மூதூர் – இது திருப்பெருமங்கலம்என்பதாம்.  இவ்வூர் ஏயர்கோன்  கலிக்காம நாயனார் புராணத்தில் விளக்கப் பெறும்.   இவ்வூர் திருப்புன்கூருக்கு வடக்கில் ஒரு நாழிகையளவில் மட்சாலையில்,உள்ளது. திருக்கோயிலும் அதில் ஏயர்கோனாரது திருவுருவமும் உண்டு. சைவர் பூசை. நாயனாரது உற்சவம் கொண்டாடுகின்றனர். பன்னிருவேலி என்ற கிராமமும் உண்டு. தலச்சிறப்பும் பிறவும் விரிவாய் ஏயர்கோனார் புராணத்திற் கண்டு கொள்க.

    Share
  • சிட்டுக் குருவி – ஷைலஜா கவிதை

    ஷைலஜா எழுதிய ‘சிட்டுக் குருவி’ கவிதையை அவரது குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ்நாடு பெயர் மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை

    தமிழ்நாடு பெயர் மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை

    சென்னை மாகாணம் என இருந்ததைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, 1.12.1968 அன்று நடந்த விழாவில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நவம்பர் 1ஆம் தேதியே தமிழ்நாடு நாள் – வானதி சீனிவாசன்

    நவம்பர் 1ஆம் தேதியே தமிழ்நாடு நாள் – வானதி சீனிவாசன்

    மாநிலம் பிறந்த நாளை விட்டுவிட்டு. பெயர் சூட்டப்பட்ட நாளைக் கொண்டாடுவது பொருத்தமற்றது

    கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை.

    மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள், சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டன. “இந்நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி, ‘தமிழ்நாடு நாள்’ என்று சிறப்பாகக் கொண்டாடப்படும்” என்று கடந்த 2019 ஜூலை 20ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அன்றைய முதல்வர் திரு. கே.பழனிசாமி அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை வரவேற்ற அன்றைய திமுக தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நாளுக்குக் கடந்த இரு ஆண்டுகளாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 1 தமிழ்நாடு நாளுக்குத் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1ஆம் நாளில், நாம் தமிழ்மொழி, இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டெடுப்போம்” என்று கூறியுள்ளார்.

    ஆனால், அக்டோபர் 30ஆம் தேதி முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மாநிலம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1967 நவம்பர் 18ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

    1956 நவம்பர் 1ஆம் தேதி, தமிழ் மொழி பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் உருவாக்கப்பட்ட நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும். 1967 நவம்பர் 18ஆம் தேதி சென்னை மாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1969 ஜூலை 18ஆம் தேதி தான் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளை அல்ல. இதனைத் தலைவர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே, முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்களுக்கு இடமளிக்காமல் நவம்பர் 1ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும்.

    குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே அறிக்கைகள் வெளியிடும் சிலரின் வேண்டுகோளை ஏற்று, வரலாற்றை மாற்ற முயல வேண்டாம் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். இன்று (நவம்பர் 1) தமிழ்நாடு நாள். தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான தமிழகத்தின் வளர்ச்சிக்கு உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    Share
  • இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி

    இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி

    India Has Successfully Tested Its First 3,000-Mile Ballistic Missile

    இந்தியாவின் தூர நீட்சி கட்டளை வெடிகணை முதற் சோதனை வெற்றி

    2021 அக்டோபர் 28 இல் இந்தியா முதன்முதல் செய்த 3000 மைல் தூர நீட்சி அக்கினி -5 வெடிகணைச் சோதனை வெற்றி, ஆசியாவில் இந்தியா சைனா போன்ற நாட்டின் எந்த நகரையும் துல்லியமாகத் தாக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டியது ஆனால் இந்தியா முதன்முதல் அக்கினி-5 வெடிகணையை பகை நாட்டின் [NO FIRST USE] மீது ஏவாது. மேஜர் கௌரவ், அக்கினி-5 மிக்க ஆற்றல் கொண்ட வெடி ஆயுதம். அணு குண்டையும் ஏந்திச் செல்லும் தகுதி உடையது. தணிந்த ஆற்றல் [620-1242 miles] [1000-2000 km] கொண்ட வெடி கணை அக்கினி-பிரைம் சோதனை செய்யப் பட்டது. சைனா 2021 ஆகஸ்டு மாதம் தனது ஹைபர்சானிக் ஆயுதத்தைச் சோதனை செய்து பூமியை ஒருமுறை சுற்றி, குறிக்கோளை 24 மைல் தூரத் துல்லிமத்தில் தாக்கியது.

    India’s long-range ballistic missile adds a strategic piece amid growing US-China tensions.

    India successfully test-launched on October 28, 2021 its first ballistic missile, the Agni-5, at roughly 10:20 AM EDT, using a three-stage solid-fueled engine that can fire nuclear payloads up to 3,000 miles with an extremely high level of accuracy, according to an initial report from  Republic World, an India-based news service.

    On the world stage, this weapon isn’t new, but it represents a major advancement for India, and fundamentally alters the balance of power in the region amid mounting tensions between major worldwide powers.

    The test of Agni-5 is part of India’s central defense policy to have “credible minimum deterrence” to maintain its commitment to “No First Use”, according to the report. The country’s first long-range intercontinental ballistic missile was developed by the Defense Research and Development Organization (DRDO), and can target any location in China, and even reach as far as Europe. Major Gaurav Arya of India’s military forces said Agni-5 can actively deter China’s strategic plans. “This missile has nothing to do with Pakistan, it does not even consider Pakistan as a possible landing target,” he said. “This is an aim at China, which is very important.”

    Arya also said that once Agni-5 is inducted for real-world service, it will serve as a powerful symbolic piece on the board against China’s government, according to the report. “We can hit you whenever we want, wherever we want inside Mainland China,” he said. This comes on the heels of another recent success of the DRDO’s Indigenous Technology Cruise Missile (ITCM), fired off the Odisha coast. Earlier, in July, India also test-fired its New Generation Akash Missile (Akash-NG), which is a surface-to-air missile system that can reach 37 miles (60 km). Other recently developed weapons from the DRDO include the Man-Portable Anti Tank Guided Missile, and another new missile of the Agni series called the Agni-Prime, with a range of 621 to 1,242 miles (1,000 to 2,000 km).

    Ballistic missiles are far easier to shoot down than hypersonic weapons

    This comes amid rising tensions between the U.S. and China, the former of which has good relations with India. But while India’s expanding ballistic missile capabilities add to the hypothetical chessboard should conflict happen, it’s still one step behind its northern rival. Earlier this month, it was revealed that China had tested a hypersonic missile in August that launched atop a Long March rocket, and then circled the Earth in low orbit before descending to its final target, which it only missed by 24 miles. For reference, the Earth is 7,917.5 miles in diameter, which means, as far as public knowledge goes, China is an entire step ahead of India’s ally, the United States, in the most advanced missile technology.

    Last week, the Pentagon confirmed that a test launch of a hypersonic missile had failed, implying that the United States’ hypersonic weapons technologies have yet to reach the level of maturity of its China-built counterparts. While the U.S. has famously closed the technological gap with rival countries at blinding speeds, and India’s newest ballistic missile is another strategic asset in the defense against possible conflict with China, India’s ballistic technology could be vulnerable to strategic air defense capabilities of its northern neighbor, since ballistic missiles’ parabolic trajectory makes them a far easier target than hypersonic weapons

    இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++

    அக்கினி இடித் தாக்கம்!
    அசுர வல்லமை ஊக்கம்!
    பொறுமை யற்ற புயலிலே
    புதுநெறி படைக்க
    புறப்படும் எமது கனவுகள்!

    டாக்டர் அப்துல் கலாம்
    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h15J9jF7cEk

    “இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை!  இந்த உலகிலே அச்சத்துக்கு இடமில்லை!  வல்லமைதான் வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை.”

    டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி

    இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதை

    டாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த முதல் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ஃபான் பிரௌன் [Wernher Von Braun].  அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் அவர் முழுமையாக ஈடுபட்டார்.  பாரத நாட்டில் டாக்டர் ஃபான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்.  அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார்.  இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம்.  அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது!  1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார்.  உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில்  பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.

    1931 அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராம பூமியான இராமேஷ்வரத்தில் பிறந்தார்.  அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்.  திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர்.  தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார்.  பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார்.  அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்.

    1958 இல் ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பட்டம் வாங்கிய பிறகு, தன் நெடுநாட் கனவான விமானப் பறப்பியலில் ஈடுபட நினைத்தார்.  அவருக்கு இரண்டு வித வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி பிறந்தன.  முதலாவது வேலை இராணுவ அமைச்சகத்தின் தொழில் நுணுக்க விருத்தி & உற்பத்தித் துறைக் கூடத்தில் {Directorate of Technical Development & Production, (DTD&P) Ministry of Defence].  அடுத்தது இந்திய விமானப் படையில் ஊழியம் [Indian Air Force].  இரண்டுக்கும் விண்ணப் பித்து அவருக்கு நேர்காணல் தேர்வும் கிடைத்தது.  முதலில் கூறிய இராணுவப் பணி அவரது திறமைக்குச் சவாலாக இருக்க வில்லை.  அடுத்து தேரா தூன் விமானப் படைத் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை.

    தோல்வி மனதுடன் திரும்பி வரும் வழியில் ரிஷிகேஷில் தங்கிப் புனித கங்கா நதியில் நீராடிய போதுதான், அவருக்குப் புத்தரைப் போல் தோன்றிய சுவாமி சிவானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது!  தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர் இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை!  கவலைப் படுவது ஏனென்று சிவானந்தா கேட்டபோது, அப்துல் கலாம் தனது பறக்கும் கனவுகளை இந்திய விமானப் படை நேர்காணல் ஏமாற்றி விட்டெதெனக் கூறி வருந்தினார்.  அப்போது சிவானந்தா கூறினார், ” உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

    டெல்லிக்கு மீண்டதும் DTD&P இல் சீனியர் சையன்டிஃபிக் அஸ்ஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது.  அப்போது அவர் தன்னோடு பணி செய்த குழுவுடன் முன்னோடி ஹோவர்கிராஃப்டு [Prototype Hovercraft] ஒன்றைத் தயாரித்தார்.  அவர் முதன்முதல் அமர்ந்து இயக்கிய இந்திய ஹோவர்கிராஃப்டில் முன்னாள் இராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் பயணம் செய்தார்.  அதற்குப் பிறகு 1962 இல் டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித் திட்டத்தில் வேலை கிடைத்துச் சேர்ந்தார்.  சுமார் இருபதாண்டுகள் (1963-1982) அவர் இந்திய வெண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் [Indian Space Research Organization (ISRO)] பல பதவிகளில் பணியாற்றினார்.  பிறகு அவர் தும்பாவில் [திருவனந்தபுரம், கேரளா] துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் [Satellite Launch Vehicle Team (SLV)] சேர்ந்து, SLV-3 ராக்கெட் படைப்புத் திட்டத்தின் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டார்..  SLV-3 ராக்கெட்டின் 44 துணைச் சாதனங்களை டிசைன் செய்து, பயிற்சி செய்து, மேன்மையாய் விருத்தி செய்து வெற்றிகரமாக ஏவிடப் பணிபுரிந்தார்.  1980 ஜூலையில் இல் ரோகினி என்னும் முதல் விஞ்ஞானத் துணைக்கோளைத் தூக்கிக் கொண்டு SLV-3 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு, ரோகினி பூமியைச் சுற்றிவரும் சுழல்வீதியில் இடப் பட்டது.  அவ்வரிய பணிக்குப் பாரத அரசாங்கம் 1981 இல் டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரதத்தின் மாபெரும் “பத்ம பூஷண்” பாராட்டு மதிப்பை அளித்தது.

    ICBM

    ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும் இருமுறை இறைவனைத் துதிக்கிறார்.  அவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர்.  வீணை வாசிக்கிறார்.  ஸ்ரீராகத்தை ரசிக்கிறார்.  தமிழில் கவிதை புனைகிறார்.  தானோர் இந்தியன்ரென்று பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார். விடுதலை பெற்ற பிறகு இதுவரைச் சாதித்த விஞ்ஞானப் பொறியியற் துறைகளை எடுத்துக் காட்டி முன்னேறும் நாடாகக் கருதப்படும் பாரதம் விருத்தி அடைந்து 2020 ஆண்டுக்குள் முன்னேறிய நாடாக மாறப் போகிறது என்றோர் எதிர்காலவாதியாக [Forecasting Futurist] ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.  டாக்டர் அப்துல் கலாம் மெய்யாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேச நேசர்.  அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.

    Fig 1G Indian Rockets

    இந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்

    1974 மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும் இராணுவ முற்பாடுகளில் முனைந்தது.  கடந்த மத்திய ஆசிய கல்ஃப் நாட்டுப் போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன.  எதிர்காலத்தில் எழும் போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப் போகின்றன.  சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத் தயாரிப்பில் ஆழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித் தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.  சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்தது.

    டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்

    1982 ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defense Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது.  அத்திட்டமே இந்திய இராணு வத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது.  அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின.  அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ஆரம்பமாயின.  அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

    1. நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG – An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது.  உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.

    2. பிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம்.  வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின.  அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்).  சோவியத் யூனியன் ராக்கெட் பொறி நுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.  பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ரம்பமாயின.  பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம்.  அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும்.  அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.

    3. ஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile).  எல்லா வற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது.  அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது.  நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்த டிக்கப் பயனாகிறது.  ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.

    4. திரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) – A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை.  அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)

    5. அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest),  அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்].  உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப் படுகிறது.  1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது.  2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..

    பாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா

    இந்தியாவின் முதல் “அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை” சூரியா [Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள் ரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது.  தனிப் பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப் பட்டுள்ளது.  2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு 20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்).  சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம் [130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும் மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது.  முதல் அடுக்கு ராக்கெட் திரவ எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும் பயன்படுத்தும்.   ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2,  துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.

    தகவல்:

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
    3. Indian Space Program By: Subhajit Ghosh
    4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
    9. Indian Space Program By: Wikipedia
    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
    11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
    12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
    13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html
    14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive]
    15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
    16 Missile Test By India [February 5, 2007]
    17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
    18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
    19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
    20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]

    21 A Perennial Dream By: Dr. Abdul Kalam [http://sindhu.nomadlikfe.org/]
    22 AllIndidianSite.com – Dr. Abdul Kalam-It’s All About People.
    23 History of Indian Space Program -1 [www.bharat-rakshak.com/SPACE/space-history1.html]
    24 History The Tiger of Mysore & His Rocket Barrages By: Rajivlochan, Dept of History, Punjab University.
    25 India Successfully Tests Trisul Missile [www.spacewar.com/reports/India_Successfully_Tests_Trisul_Missile.html]
    26 India’s Missile Program By: John Cherian [www.hinduonnet.com/fline/]
    27 Indian ICBM Surya Missiles – India Defence Weapon Systems.
    28. Missiles in Indian History. (Agni, Prithvi, Akash, Trishul, Nag, Astra, Surya,
    29.  https://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam
    30.  http://www.abdulkalam.nic.in/profile.html
    31. /india-has-successfully-tested-its-first-3000-mile-ballistic-missile?utm_source=newsletter&utm_medium=mailing&utm_campaign=Newsletter-28-10-2021

    Share