ஆசைகளை மலரவிட அமைந்திடட்டும் தீபாவளி!

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஆஸ்திரேலியா

இருளகன்று ஒளிபரவ இறைவனிடம் வேண்டிடுவோம்
இடரகன்று இனிமைவர இறைவனிடம் வேண்டிடுவோம்
புவிமலர்ந்து வாசம்வர புனிதனிடம் வேண்டிடுவோம்
புத்துணர்வு நிறைந்துவர நித்தமுமே வேண்டிடுவோம்

மத்தாப்பு பட்டாசு மனமதிலே வருகிறது
தித்திக்கும் பட்சணமோ தினமுமே தெரிகிறது
மொத்தமுள்ள உறவுகளில் முகமலர்ச்சி வருவதற்கு
தித்திக்கத் தீபாவளி வரவெண்ணி வேண்டிடுவோம்

முடங்கியே இருந்திட்டோம் முகம்பாராது இருந்திட்டோம்
பயணவழி அத்தனையும் பார்க்காமல் இருந்திட்டோம்
விருந்துண்ணல் தவிர்த்திட்டோம் விமானத்தை மறந்திட்டோம்
மனந்திரும்ப தீபாவளி மலர்ந்திடவே வேண்டிடுவோம்

முகமூடி வாழ்க்கையினை முழுவுலகும் பார்த்ததுவே
அகம்முழுக்க ஆசைகளை அடக்கியே வைத்தோமே
ஆரவாரம் அத்தனையும் அடங்கியே நின்றதுவே
ஆசைகளை மலரவிட அமைந்திடட்டும் தீபாவளி

அருகிருந்தும் ஆலயத்தை அணுகவே முடியவில்லை
ஆறுதலாய் வெளிசென்று அளவளாவ முடியவில்லை
கலைநிகழ்ச்சி களியாட்டம் காணாமல் ஓடியதே
களிப்புதனைக் கையேந்தி வந்திடட்டும் தீபாவளி

பழையபடி கடைத்தெருவில் பட்டுக்கள் வாங்கவேண்டும்
பலவகையில் பட்சணங்கள் வாங்கியே உண்ணவேண்டும்
பக்குவமாய் கையணைத்து பலருமே மகிழவேண்டும்
பார்சிறக்க மனம்சிரிக்க மலரட்டும் தீபாவளி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *