நவம்பர் 1ஆம் தேதியே தமிழ்நாடு நாள் – வானதி சீனிவாசன்

மாநிலம் பிறந்த நாளை விட்டுவிட்டு. பெயர் சூட்டப்பட்ட நாளைக் கொண்டாடுவது பொருத்தமற்றது
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள், சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டன. “இந்நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி, ‘தமிழ்நாடு நாள்’ என்று சிறப்பாகக் கொண்டாடப்படும்” என்று கடந்த 2019 ஜூலை 20ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அன்றைய முதல்வர் திரு. கே.பழனிசாமி அறிவித்தார்.
இந்த அறிவிப்பை வரவேற்ற அன்றைய திமுக தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நாளுக்குக் கடந்த இரு ஆண்டுகளாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 1 தமிழ்நாடு நாளுக்குத் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1ஆம் நாளில், நாம் தமிழ்மொழி, இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டெடுப்போம்” என்று கூறியுள்ளார்.
ஆனால், அக்டோபர் 30ஆம் தேதி முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மாநிலம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1967 நவம்பர் 18ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.
1956 நவம்பர் 1ஆம் தேதி, தமிழ் மொழி பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் உருவாக்கப்பட்ட நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும். 1967 நவம்பர் 18ஆம் தேதி சென்னை மாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1969 ஜூலை 18ஆம் தேதி தான் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளை அல்ல. இதனைத் தலைவர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே, முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்களுக்கு இடமளிக்காமல் நவம்பர் 1ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும்.
குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே அறிக்கைகள் வெளியிடும் சிலரின் வேண்டுகோளை ஏற்று, வரலாற்றை மாற்ற முயல வேண்டாம் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். இன்று (நவம்பர் 1) தமிழ்நாடு நாள். தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான தமிழகத்தின் வளர்ச்சிக்கு உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.