திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு

மானக்கஞ்சாறர் அளித்த கூந்தலை  வாங்குவர் போல நின்ற அடியார் அங்கேயே மறைந்து, ஆகாயத்தில்  மலைமகள் உமையம்மையுடன் இடப வாகனத்தின் மேல் இறைவனாக எழுந்தருளினார். விண்ணிலிருந்து மலர்மாரி பொழிய  இவரும் வீழ்ந்து வணங்கினார்.

அவ்வாறு வணங்கிய அன்பரிடம், நிலவைத் தாங்கிய சடையுடைய  இறைவன் ‘’ நம்பால்  உனக்கிருந்த பேரன்பை உலகறியச் செய்தேன்!’’ என்று அருளினார். இடப வாகனத்தின் மேல் எழுந்தருளிய இறைவரின் கணங்களின் நாதர் போற்ற, வானவர் வந்து சேர, அவர்கள் முன்னே உச்சியில் குவித்த கரங்களுடன் நேராகவே இறைவனருளைப் பெற்றார்.

உடனே வானவர் வணங்க கொன்றைமலரணிந்த சடையுடைய இறைவன் கைலை சென்றார். அப்போது வண்டுகள் மொய்க்கும் மலர்க்கூந்தலை உடைய மணமகள் கரம்பற்ற, கலிக்காமனார் வந்தார். அங்கே நிகழ்ந்த இறைவனருட் செயலைக் கேள்வியுற்று, மனம் மகிழ்ந்தார், தாம் அப்பேறு பெற வில்லையே என்ற மனத்தளர்வு  நீங்க, இறைவன் அருளால் மீண்டும் கூந்தலைப் பெற்ற மணமகளைத் திருமணம் புரிந்து கொண்டு அந்தணர்க்குப்  பொருள்  தானம் செய்து திருமணத்தை ஊரினர் அனைவரும் சிறப்படைய தம் இனம் வளர , தம்முடைய நகர் நோக்கிச் சென்றார்.

மனம் தளரும் இடர் நீங்கி, வானவர் நாயகர் அருளால்
புனைந்த மலர்க் குழல் பெற்ற பூங்கொடியை மணம் புணர்ந்து,
தனம் பொழிந்து பெரு வதுவை உலகெலாம் தலை சிறப்ப
இனம் பெருகத் தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார்.

இவ்வாறு  தம் ஒரே மகளின் கூந்தலைத் திருமண நாளன்றே இறைவனுக்கு அளித்த  அடியாரின் பெருமையைப் போற்றுதல் தம்மளவில் இயலாது என்றார் சேக்கிழார்.

பொருள்

மனம் தளரும் இடர் நீங்கி என்ற தொடர், மனந்தளர்ந்ததனால் உண்டாகிய துன்பம் நீங்கியவராய், தேவதேவருடைய திருவருளினால் முன் புனைந்திருந்த வண்ணமே மலர்களணிந்த கூந்தலினை வளரப்பெற்ற பூங்கொடி போன்ற மணமகளாரை மணஞ்செய்து;  நிதிகளையாவர்க்கும் மிகக் கொடுத்துப் பெருங்கல்யாண மகிழ்ச்சி உலகெங்கும் ஒங்கிச் சிறக்கச் செய்து;சுற்றத்தார்கூடிப் பெருக நிறையத் தமது மதில் சூழ்ந்த பழவூரினைச் சென்று சேர்ந்தனர்.

விளக்கம்

தேவ தேவராதலின் ஆக்குதல், அழித்தல் முதலிய எல்லாம் வல்லவர்; அவரது அருள், களையப்பட்ட கூந்தலை முன் இருந்தவாறே மீள வளரச் செய்தது புனைந்தமலர்க்குழல் – மணக்கோலம் புனைந்திருந்த தேனக்க மலர்க்கூந்தல் என முன் அரிந்தெடுக்கப் பட்டவாறே மீளவும் உளதாயினமை குறித்தார். சிறுத்தொண்டநாயனார் சரிதத்தில் சமைத்து இலையிற் படைத்த கறி,மீளப் பாலகனாக வரத் திருவருள் செய்ததென்றால், வளருந் தன்மைத்தாய குழல் விரைவில் வளர்ந்த இது ஓர் அற்புதமன்றே! மலர்க்குழல் பெற்ற என்ற இக்குறிப்பினைக் கொண்டு, கலிக்காமனார் குழல் களையப்பட்ட பெண்ணை எவ்வாறு மணப்பதென்று மனந்தளர்ந்தனர் என்பார் சிலர். அருணிகழ்ச்சி காணும்பேறு பெறவில்லை எனச் சிந்தை தளர்ந்தனராதலின் கலிக்காமனார் காணும்படி புனைந்த மலர்க்குழல் பெறத் தரும் இவ்வருள் வெளிப்பாட்டினை இறைவர் செய்தருளினர் என்க.

புனைந்தமலர்க்குழல் – அரியும்முன், தேனக்க மலர்க்கூந்தல், மலர்க்கூந்தல் என்றும், மீளக்குழல் வளர்ந்தபின், இங்குப் புனைந்தமலர்க்குழல் என்றும் கூறிய ஆசிரியர் இடையில், அடியில் அரிந்தெடுக்கப்பட்ட நிலையில், வண்டுவார்குழல் என்று வாளா கூறிய நயம் சிந்திக்க.

தனம் பொழிந்து – கல்யாணத்தில் மணமகன் வீட்டார் தமது இயல்புக்கேற்றபடி இரவலர் முதலியோர்க்கு ஈகையிற் சிறத்தல் இயல்பு. அரசர் சேனாபதி குடியில் வந்த ஏயர்கோனார் தம் நிலைமைக்கேற்றவாறும், அவ்வாறே அரசர் சேனாபதிக்குடியில் வந்தவராய்த் திருவருள் பெற்றுப் போந்த மானக்கஞ்சாறனாரது பெருமைக்கும் புனைந்த மலர்க்குழல் மீளப்பெற்ற மகளாரது பெருமைக்கும் ஏற்றவாறும், இருவர்க்கும் இடையாடிச் செய்த சிவபெருமானது திருவருட் சிறப்பினுக்கேற்றவாறும் தனம் பொழிந்தனர் என்க. இதனால் அது பெருவதுவையாகி உலகெலாம் தலைசிறக்க ஓங்கி விளங்கிற்று என்பதாம். தலைசிறத்தலாவது – புகழ் மேம்படப் பாராட்டப்பெறுதல்.

இனம்பெருக – மணத்தின் பின்னர் இருபாலின் இனத்தவர்களும் ஒருங்கு கூடிச் செய்தலாலும், கலிக்காமனாருடன் தம் சால்புநிறை சுற்றம் தலைநிறையக்  கூடி வர, அவர்களோடு மானக்கஞ்சாறனாரது நீள்சுற்ற மெலாம் ஒப்பரிய இப்பெருவதுவையினாற் பிணைக்கப்பட்டு ஒன்று கூடுதலாலும், முன் வந்ததனைவிட மிகப் பெருங்கூட்டமாதலின் இனம்பெருக என்று தேற்றம் பெற எடுத்துக் கூறினார்.இனிச் சிவனடியார் இனம் வளர என்றும் நுட்பப்பொருள் காணலாம்.

தம்முடைய எயில்மூதூர் – இது திருப்பெருமங்கலம்என்பதாம்.  இவ்வூர் ஏயர்கோன்  கலிக்காம நாயனார் புராணத்தில் விளக்கப் பெறும்.   இவ்வூர் திருப்புன்கூருக்கு வடக்கில் ஒரு நாழிகையளவில் மட்சாலையில்,உள்ளது. திருக்கோயிலும் அதில் ஏயர்கோனாரது திருவுருவமும் உண்டு. சைவர் பூசை. நாயனாரது உற்சவம் கொண்டாடுகின்றனர். பன்னிருவேலி என்ற கிராமமும் உண்டு. தலச்சிறப்பும் பிறவும் விரிவாய் ஏயர்கோனார் புராணத்திற் கண்டு கொள்க.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.