-பா. ராஜசேகர்
மூட்டையை
முதுகில் தூக்க,
துயரங்கள்
மனதை தாக்க
உயரத்துச்
சூரியனும்
உதிரத்தைச்
சூடாக்கும்!
எளிதாக்கும்
பசிமயக்கம்
இதயத்தைச்
சோர்வாக்கும்!
உச்சி வெயில்
வேளையிலும்
கும்மிருட்டைக்
கண்பார்க்கும்!
தள்ளாடும்
கால்கள் கூட
வீரத்தை
வேவு பார்க்கும்!
ஆடி ஓடி
உழைத்த காலம்
மேலோங்கிப்
போனதய்யா!
இளமையிலே
சிறுகச் சேர்த்துக்
குஞ்சுகளைப்
பறக்க வைத்து
இறக்கை கட்டும்
காலம் இப்போ
குஞ்சுகளும்
பறந்து போச்சு!
இளமை
மறைஞ்சு போச்சு!
வாழ்க்கையோ
கவலையாச்சு!
சொந்தம்தான்
போனதென்பேன்
நம்பிக்கை
போகவில்லை!
தன்கையே
தனக்குதவி!
தன்னம்பிக்கை
உதவலாச்சு!

Leave a Reply