எகிப்திய நீதிமன்றங்களும் இந்திய நீதிமன்றங்களும்

0

நாகேஸ்வரி அண்ணாமலை

எகிப்தில் 1952 வரை மன்னராட்சி இருந்தது.  மன்னராட்சி என்றால் ஒரு மன்னர் இருந்தாலும் அவர் பிரிட்டனின் மேற்பார்வையில்தான் நாட்டை ஆண்டுவந்தார்.  பிரிட்டனை எதிர்த்துப் போராடி 1952-இல் எகிப்து சுதந்திரம் அடைந்தது.  இராணுவ ஜெனரல்களான முகம்மது நயிப், நாசர், சதாத், முபாரக் என்று பலர் ஜனாதிபதியாக எகிப்தை ஆண்டனர்.  1978-இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற முபாரக் 29 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதி பதவியில் அமர்ந்து பல விதமாகச் சொத்து சேர்த்துப் பின் தன் மூத்த மகனையே தனக்குப் பிறகு பதவியில் அமர்த்த முடிவுசெய்தார்.  அதுவரை அவரது ஆட்சியைச் சகித்துக்கொண்டிருந்த எகிப்து மக்கள் அவரை எதிர்த்துப் புரட்சி செய்தனர்.  2011 ஜனவரியில் ஆரம்பித்த இந்தப் புரட்சி மூலம் முபாரக் பதவியிலிருந்து இறக்கப்பட்டு ஒரு வழியாக எகிப்து மக்களுக்கு அவருடைய பிடியிலிருந்து விடுதலை கிடைத்தது.  இந்த மக்கள் புரட்சிக்கு இராணுவம் மிகவும் துணைபுரிந்தது.  மக்களை முபாரக்கின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதை விட முபாரக் தங்களுக்கு இசைவாக நடந்துகொள்ளவில்லை என்பதுதான் ராணுவம் மக்களின் இந்தப் புரட்சிக்கு உதவியதற்கு முக்கிய காரணம்.  ஆறு மாதங்கள் இராணுவம் முபாரக்கின் உதவி ஜனாதிபதியை பதவியில் அமர்த்திக்கொண்டு ஆட்சி நடத்தியது.  உலகத்தின் கண்களுக்கு எகிப்தில் ஜனநாயக அரசு நடக்கிறது என்று காட்டுவதற்காகத் தேர்தலை நடத்தினர் ராணுவ அதிகாரிகள்.  முஸ்லீம் பிரதர்ஹுடைச் சேர்ந்த மோர்ஸிக்கு நல்ல மெஜாரிட்டி கிடைத்து அவர் பதவிக்கு வருவார் என்று ராணுவம் நினைக்கவில்லை.  மேலும் மோர்ஸி ராணுவத்தின் அரசியல் தலையீட்டை ஒத்துக்கொள்ளவில்லை.  அதனால் அவரை ராணுவம் பதவியிலிருந்து இறக்கியதோடு அவர் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவருக்கு இப்போது மரண தண்டனையும் கொடுத்திருக்கிறது.

எகிப்து நீதிமன்றங்கள் யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தகுந்த மாதிரியான தீர்ப்புகள் வழங்கி வருகின்றன.  முபாரக் பதவியில் இருந்தபோது அவர் சொல்வதைத்தான் கேட்டன.  அப்போது முபாரக்கால் மோர்ஸி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  முபாரக்கைப் பதவியிலிருந்து இறக்கி மோர்ஸி ஜனாதிபதி பதவி ஏற்றவுடன் மோர்ஸி அரசு அவரைக் குற்றவாளி என்று தீர்மானித்து நீதிமன்றத்தில் கூண்டுக்குள் வைத்து அவர் மீதுள்ள வழக்குகளை விசாரித்து அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.  அவர் பதவியில் இருந்தபோது அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அதே நீதிமன்றம் அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டதும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது.

இப்போது மோர்ஸியை ராணுவம் பதவியிலிருந்து இறக்கி அவர் மீது பல குற்றங்களைச் சுமத்தி அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது.  எகிப்தில் யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்கள் சொல்படிதான் நீதிமன்றம் நடப்பதாகத் தெரிகிறது.  மோர்ஸி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை எகிப்து உண்மையான ஜனநாயக நாடு அல்ல.  முபாரக் தேர்தல் நடத்தினாலும் அவர்தான் 90 சதவிகிதத்திற்கு மேல் ஓட்டுக்கள் வாங்கி ஜெயித்துக்கொண்டிருந்தார்.  மோர்ஸிதான் முதல் முதலாக உருப்படியான தேர்தல் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவரை ராணுவம் தன் இழுப்புக்கு வளைக்க முயன்றது.  அதற்கு அவர் ஒத்துழைக்காததால் அவரைப் பதவியிலிருந்து இறக்கியதும் அல்லாமல் குற்றவாளியாக்கி தூக்குத் தனடனையும் கொடுத்திருக்கிறது.  எகிப்தாவது ராணுவத்தின் கீழ் செயல்படுகிறது.  இந்தியாவிலும் அல்லவா பதவியில் இருப்பவர்கள் சொல்வதன்படி நீதிமன்றம் நடக்கிறது.

ஜெயலலிதா வழக்கில் சிறப்பு நீதிமன்றம் எல்லா ஆதாரங்களையும் சிறப்பாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியது.  உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது அரசியல் தலைவர்கள் தலையீட்டால் அந்தத் தீர்ப்பிற்கு நேர் எதிர்மாறான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது.  அரசு வழக்கறிஞருக்கு அவர் கருத்தை வெளியிட ஒரே நாள் ஒரு நாள் அவகாசம்தான் கொடுக்கப்பட்டது.  அதையும் எழுத்து மூலமாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் வழங்கப்பட்டது.  அப்படியும் அவருடைய எந்த வாதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.  இதில் வருமானம் பற்றிய கூட்டலில் தவறு வேறு.  இந்த அடிப்படையில் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உயர் நீதிமன்றம்.  அரசியல் தலையீடு இல்லாமல் யாரும் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்க முடியாது.  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும் மோதிதான் பதவியில் இருந்தார்.  ஆனால் இரண்டாவது தீர்ப்பு வந்தபோது தலைமை மாறவில்லை என்றாலும் நிலைமை மாறிவிட்டது.  இப்போது நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்ற, எதிர்க் கட்சிகளின் ஆதரவில்லாத சட்டங்களை, நிறைவேற்றுவதற்கு மோதிக்கு ஜெயலலிதாவின் உதவி தேவைப்படுகிறது.  மோதி பதவிக்கு வந்து சில மாதங்களிலேயே ‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘மோதி ஒரு சிறந்த அரசியல்வாதி;  நீதித்துறையில் தலையிடுவதே இல்லை’ என்று கூறினார்.  ஊழலை ஒழிப்பதாகக் கூறிப் பதவிக்கு வருபவர்கள் பின்னால் அரசியல் ஆதாயத்திற்காக  மகாஊழல் புரிந்தவர்களுக்குத் துணை போகிறார்கள்.  வருமானம் பற்றிய கூட்டலில் தவறு இருப்பதை வெகு எளிதாகக் காட்டி மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்டலாம்.  ஏனோ கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதில் தயக்கம் காட்டுகிறது.  இதிலும் அரசியல் .விளையாடுகிறது போலும்.

எகிப்து போன்ற சர்வாதிகார அல்லது ராணுவ ஆட்சி நடக்கும் நாடுகளில் நீதிமன்றங்கள் தன்னிச்சையாகச் செயல்படாமல் அரசியல்வாதிகளின் ஆணையை ஏற்று நடக்கலாம்.  ஆனால் ஜனநாயக நாடாகத் தன்னைப் பறைசாற்றிக்கொள்ளும் இந்தியாவிலுமா நீதித்துறை இப்படி நடக்க வேண்டும்?

இறைவனே!  இந்தியாவிற்கு விமோசனமே இல்லையா?  இருக்கிறது என்றால் எப்போது?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *