Tag: அண்ணாகண்ணன்

  • அத்தி வரதரை எளிதில் தரிசிக்க…!

    (அண்ணாகண்ணன் யோசனைகள் 34)

    காஞ்சி அத்தி வரதரைத் தரிசிக்க நாள்தோறும் இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்று, பல மணி நேரங்கள் வரிசையில் நின்று, வழிபடுகின்றனர். அண்மையில் பக்தர்கள் நால்வர் இறந்தனர் என்ற செய்தி, பெரிதும் வருத்தியது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வெளியே வருவதால், எப்படியாவது அவரைச் சந்தித்துவிட வேண்டும் எனப் பலரும் விரும்புவது இயல்பே. ஆனால், இப்போது உள்ள ஏற்பாட்டில் இது மேலும் மேலும் சிக்கலாகி வருகிறது. இதற்கு எனக்குத் தோன்றும் ஒரு தீர்வை இங்கே முன்வைக்கிறேன்.

    அத்தி வரதரைத் திருக்குளத்திலிருந்து எழுந்தருளச் செய்து, ஏன் வரதராஜப் பெருமாள் கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் வீற்றிருக்கச் செய்ய வேண்டும்? முந்தைய காலங்களில் இவ்வாறு வைத்ததால், இதுவே மரபு எனக் கருதலாம். ஆனால், இன்றைய மக்கள் தொகை, வரக்கூடிய பக்தகோடிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வரதரை விசாலமான இடத்தில் நிலைகொள்ள வைப்பதே இதற்குத் தக்க தீர்வு.

    அத்தி வரதரைப் பெரிய மைதானம் அல்லது திறந்த வெளியின் மையத்தில் வைத்து, சிறிய கோவில் போன்ற அமைப்பைத் தற்காலிகமாக உருவாக்கலாம். அவரைச் சென்றடைய ஒரு வழி என வைக்காது, சுற்றிலும் 8 வழிகளை உருவாக்க வேண்டும். இவற்றுள் 4 வழிகளின் வழியாகப் பக்தர்கள் உள்வருமாறும் எஞ்சிய 4 வழிகளின் வாயிலாக அவர்கள் வெளியேறவும் பாதை அமைக்கலாம். இதைச் செய்தாலே ஒரே நேரத்தில் இப்போது உள்ளது போல், 4 மடங்கு அதிகமான பக்தர்கள் வரதரைத் தரிசிக்கலாம்.

    இதையே முன்னதாகத் திட்டமிட்டு, இரண்டு அடுக்குகளில் செய்திருந்தால், வரதரை நோக்கி மொத்தம் 16 பாதைகள் அமைந்திருக்கும். கீழே நான்கு வரிசை, மேலே நான்கு வரிசை என எட்டு வரிசைகளில் மக்கள் உள்வந்து தரிசிக்கலாம். எஞ்சிய எட்டு வழிகளின் ஊடே அவர்கள் வெளியேறலாம்.

    இப்போதும் தாமதம் ஆகிவிடவில்லை. தரைவழியே மட்டும் இந்த ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்தால், 4 + 4 என 8 வழிகளைக் கொண்டே கூட்டத்தைச் சிறப்பாக நிர்வகிக்கலாம். இவற்றில் பெண்களுக்கு ஒரு வழியையும் முதியோர் மற்றும் குழந்தைகளுக்காக ஒரு வழியையும் ஒதுக்கினால், சிக்கல்கள் பலவற்றைத் தீர்த்துவிடலாம்.

    ஒரு வரிசையில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் நிற்பதாகக் கொண்டால், ஒவ்வோர் ஆயிரம் பேருக்கும் நடுவில் குடிநீர், மோர், இயற்கை அழைப்புகளுக்காக ஓர் ஏற்பாட்டைச் செய்யலாம். இது, பக்தர்களின் சிரமத்தைத் தணிக்கும். இன்னும் ஒரு படி மேலே சென்று, முழுக்க நாற்காலிகளை அமைத்து, அந்த நாற்காலிகளையும் கன்வேயர் பெல்டில் இணைத்துவிடலாம். இப்போது பக்தர்கள் உட்கார்ந்தபடியே வந்து, பெருமாளைச் சேவித்து, மீண்டும் உட்கார்ந்தபடியே திரும்பச் சென்றுவிடலாம். 40 நாள்கள் முடிந்த பிறகு, அத்தி வரதரை வழக்கம்போல், குளத்திற்கே கொண்டு செல்லலாம்.

    கட்சி மாநாடுகளுக்காக ஊரையே வளைத்து, ஏக்கர் கணக்கில் பந்தல் அமைக்க முடிகிறபோது, அத்தி வரதருக்காக இவ்வாறு செய்வது இயலாத காரியம் இல்லை. வரதரை வைக்கும் இடத்திற்கு அத்தி வரதர் பீடம் என்றே பெயர் வைத்து, எப்போதும் பாதுகாத்து வைத்தால், எதிர்காலத்திலும் இந்த இடத்தைப் பயன்படுத்தலாம். சிக்கல்கள் இல்லாமல் பக்தர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கலாம்.

    Share
  • ஜெயமோகன் மீது தாக்குதல்

    ஜெயமோகன் மீது தாக்குதல்

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளர் ஜெயமோகன், நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் வசிக்கிறார். அங்கே ஒரு கடையில் புளித்த தோசை மாவை விற்ற கடைக்காரரிடம் திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, நேற்று தாக்கப்பட்டுள்ளார். மேலும், ஜெயமோகன் வீட்டுக்குச் சென்ற கடைக்காரர் செல்வம், அங்குநின்று மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதுகுறித்து ஜெயமோகன், நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தனது வலைத்தளத்திலும் எழுதியுள்ளார்.

    ஜெயமோகன் தாக்கப்பட்டதை வல்லமை, வன்மையாகக் கண்டிக்கிறது.

    தரம் குறைந்த பொருளை விற்பனை செய்ததற்காகவும் வாடிக்கையாளருக்கு உரிய மாற்றுப் பொருள் வழங்காததற்கும் தாக்கியதற்கும் வீட்டிற்கு வந்து மிரட்டியதற்கும் ஜெயமோகனுக்கு இழப்பீடு அளிக்கவேண்டும். நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜெயமோகன் இதற்காக வழக்குத் தொடுக்க வேண்டும். காவல் துறையினர், குற்றவியல் நடவடிக்கை எடுத்துக் கடைக்காரரைக் கைது செய்ய வேண்டும். உணவு வழங்கல் துறை, அந்தக் கடையில் உள்ள பொருள்களின் தரத்தினைப் பரிசோதிக்க வேண்டும். தொழில், வணிகத் துறையினர், அந்தக் கடையின் கணக்கு வழக்குகளை ஆராய வேண்டும்.

    தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி, மதுரை சு.வெங்கடேசன், கரூர் ஜோதிமணி, விழுப்புரம் ரவிக்குமார் ஆகியோர், ஜெயமோகனை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கலாம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரள முதல்வர் பிணராயி விஜயன் உள்ளிட்டோர், தொலைபேசியில் நலம் விசாரிக்கலாம்.

    நீ கதை எழுதுறவன்தானே எனக் கடைக்காரர் கேட்டாராம். ஜெயமோகன், நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

    படத்துக்கு நன்றி: விக்கிப்பீடியா

    Share
  • அகவழி 31

    அகவழி 31

    அண்ணாகண்ணன்

    அகமொழிகளைத் தொடர்ந்து, என் யோசனைகள், தீர்வுகள், புத்தாக்கச் சிந்தனைகள் சிலவற்றை அகவழி என்ற பெயரில் எழுதி வந்தேன். இவற்றை முறையாகத் தொகுக்கவில்லை. எனினும் இப்படியான யோசனைகள் இதுவரை முப்பதாவது வந்திருக்கும் என்ற நிலையில் இனி எழுதும் யோசனைகளை அகவழி 31 என்ற எண்ணிலிருந்து தொடங்குகிறேன். நீங்கள் தீர்வு காண விரும்பும் சிக்கல்களை எனக்குத் தனி மடலாக (annakannan@gmail.com) அனுப்புங்கள். தனிப்பட்ட யோசனை தேவை எனில், பொதுவில் பகிர வேண்டாம் என்ற குறிப்புடன் உங்கள் சிக்கலை அனுப்புங்கள். அதைத் தீர்க்க, எனக்கு ஏதும் யோசனை தோன்றினால் சொல்வேன்.

    ========================

    அகவழி 31

    பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுடன் பேசி, சமரசம் கண்டு, எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி கூறியுள்ளார். இவர்களைச் சமாதானப்படுத்த, ஒரு யோசனை.

    எடுக்கப்படும் நிலத்தின் சந்தை மதிப்புக்கு ஈடாகத் தொகை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அங்குள்ள தென்னை, மாட்டுக் கொட்டகை உள்பட ஒவ்வொன்றும் மதிப்பினைக் கணக்கிட்டு இந்தத் தொகை கணக்கிடப்படும் என்றும் அறிவித்துள்ளது. தொகை வேண்டாம் என்பவர்களுக்கு, அவர்களின் நிலத்துக்கான சந்தை மதிப்புக்கு ஈடாக, வேறு இடத்தில் மாற்று இடம் வழங்கலாம். தமிழகம் முழுவதும் அரசு வசம் உள்ள நிலங்களை ஓர் இணையத்தளத்தில் பட்டியலிட்டு, இவற்றிலிருந்து தேர்ந்தெடுங்கள் என்று கூறலாம். விவசாயி தேர்ந்தெடுக்கும் நிலத்துக்கான பத்திரப் பதிவு இலவசம் என்று கூறலாம். அங்கே விவசாயம் செய்ய விரும்பினால், முதல் ஓராண்டுக்கு அதற்கான விதைகள், நாற்றுகள், மரக் கன்றுகள் இலவசம் என்று அறிவிக்கலாம். மேலும், விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து, சிறப்பு வசதிகளை ஏற்படுத்தலாம். இதன் மூலம், பாதிக்கப்படும் விவசாயிகள் உரிய மாற்று இடத்தைப் பெற்று, தம் தொழிலைத் தொடரலாம். மக்கள் நலத் திட்டங்களையும் தடையின்றி நிறைவேற்றலாம். (அகவழி 31)

    Share
  • நாளங்காடி – அல்லங்காடி – முழுநாள் அங்காடி

    நாளங்காடி – அல்லங்காடி – முழுநாள் அங்காடி

    அண்ணாகண்ணன்

    இரவில் கடைகளைத் திறந்து வைத்தால் என்ன என்று சில மாதங்களுக்கு முன்புகூட யோசித்திருக்கிறேன்.

    இரவு சாப்பிடத் தாமதமாகி, சில நேரங்களில் 11, 12 மணிக்கு உணவகங்களைத் தேடிய அனுபவம், எனக்கு உண்டு. பலருக்கும் இருக்கலாம்.

    இரவில் வெகு சில மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும். அவசரத்திற்கு ஒரு மருந்து தேவை எனக் கிளம்பி, எந்தக் கடை திறந்திருக்கிறது என்று வண்டி எடுத்துக்கொண்டு வீதி வீதியாகச் சுற்றியது உண்டு.

    பின்னிரவுகளில் வண்டிச் சக்கரத்தில் பொத்தல் விழுந்துவிட்டால், பஞ்சர் ஒட்ட வழியின்றி, அங்கேயே வண்டியைப் போட்டுவிட்டு, பேருந்தில் வீடு திரும்பியது உண்டு.

    பெட்ரோல் நிரப்பும் நிலையங்களை இரவு 11 மணிக்கு மூடிவிடுவதால், பலருக்கு இடர்ப்பாடுகள் உண்டு.

    பேருந்து, ரெயில், ஆட்டோ, டாக்சி போன்றவை இரவில் சட்டென்று கிடைக்காது. கிடைத்தாலும் கட்டணம் அதிகம் கேட்பார்கள். தூக்கம், ஆளை அழுத்தும். அந்த நேரத்தில் நாம் சூழ்நிலைக் கைதியாய் இருப்போம். என்ன கேட்டாலும் கொடுத்தாக வேண்டிய நிலைமை.

    இது போன்ற பல சிக்கல்களுக்கு இனி, தகுந்த தீர்வு கிடைக்கலாம். கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணிநேரமும் திறந்து வைக்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவு, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியது.

    நாளங்காடி, அல்லங்காடி ஆகியவை, தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளவை. சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சியில் இவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நாளங்காடி என்பவை, பகல் நேரக் கடைகள். அல்லங்காடி, இரவு நேரக் கடைகள். அல் என்றால் இரவு. அல்லும் பகலும் என்ற இரட்டைச் சொற்களை நினைத்துப் பாருங்கள். எந்நேரமும் கடைகள் திறந்திருப்பதால், மக்கள் இயக்கம் தொடர்ந்து இருப்பதால், மதுரையைத் தூங்கா நகரம் என்றும் அழைப்பது உண்டு.

    அடையா நெடுங்கதவம் எனச் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பு உண்டு. பரிசிலர் பரிசு பெறுவதற்கு எவ்விதத் தடங்கலும் இல்லாமல் அரண்மனை வாயில் கதவு மூடப்படாமல் எப்பொழுதும் திறந்தே இருப்பதை அடையா நெடுங்கதவம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதுபோல், கடைகளின் கதவுகளும் அடைபடாமல் இனித் திறந்தே இருக்கும்.

    தமிழக அரசின் இந்த முடிவால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். விற்பனை அதிகரிக்கும். மக்களுக்குக் கூடுதல் சேவைகள் கிடைக்கும். நள்ளிரவிலும் பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். கடிதங்களும் பொதிகளும் கூட இப்படி வரலாம். நள்ளிரவிலும் வணிக அழைப்புகள் வரலாம்.

    அதே நேரம், மின்சாரச் செலவு, மிகுதியாகும். பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த வேண்டியிருக்கும். கூடுதல் இடங்களில், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். ஊழியர்களுக்கு உரிய போக்குவரத்து, உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். இவற்றை முறையாகத் திட்டமிட்டுச் செய்தால், இரவிலும் சேவைகளை வழங்கலாம். இரவு என்பதால் மக்கள், வீட்டில் முடங்க வேண்டியதில்லை.

    இந்த முடிவைக் கடைகள், வர்த்தக நிறுவனங்களுடன் நிறுத்தாமல், அஞ்சல் நிலையம், நூலகம், பூங்கா போன்றவற்றை எந்த நேரத்திலும் திறந்து வைக்கலாம். கடற்கரைக்கு எந்த நேரத்திலும் செல்ல, அனுமதிக்கலாம். திறந்த வாகனத்தில் இரவு நேரச் சுற்றுலாக்களை அமைத்து, ஊர் சுற்றலாம். ஆங்காங்கே கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கலாம்.

    அரசு அலுவலகங்களையும் நீதிமன்றங்களையும் கூட, 24 மணி நேரமும் திறந்து வைத்து, தேங்கிக் கிடக்கும் பணிகளை முடுக்கி விடலாம். பணியாளர்களை 8 மணி நேரத்திற்கு ஒருவர் வீதம் சுழற்சி முறையில் பணியாற்ற வைக்கலாம். சில கடைகளையும் அலுவலகங்களையும் பகலில் ஒருவரும் இரவில் ஒருவரும் பயன்படுத்தலாம். தமிழகத்திற்கு இது புதிது என்பதால், முதலில் சிற்சில சங்கடங்கள் இருக்கலாம். ஆனால், தொலைநோக்குடன் செயல்பட்டால், இந்த முடிவினால் பயன்கள் மிகுதி. ஆக்கப்பூர்வமான இந்த முடிவிற்காகத் தமிழக அரசுக்குப் பாராட்டுகள்.

    பழைய முறைப்படி, பகலில் மட்டும் திறந்திருக்கும் கடைகளை நாளங்காடி எனலாம். இரவில் மட்டும் திறந்திருக்கும் கடைகளை அல்லங்காடி எனலாம். 24 மணிநேரமும் திறந்திருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்களை, எந்நேர அங்காடி அல்லது முழுநேர அங்காடி எனலாம்.

    ஆனால், அண்மையில் ஒரு பலகையைப் பார்த்தேன். அதில் முழு நேரக் கிளை நூலகம் என இருந்தது. இங்கே இவர்கள் குறிப்பது, பகுதி நேரம் (4 மணி நேரம்) கிடையாது, முழு நேரம் (8 மணி நேரம் அல்லது 12 மணி நேரம்) என்பதே. ஊழியர்களுக்கு முழு நேரப் பணி என்றால், 8 மணி நேரப் பணி என்றே பொருள். எனவே முழு நேர அங்காடி என்றால், மக்களுக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க, முழுநாள் அங்காடி எனலாம்.

    Share
  • எண்வழி ஆத்திசூடி

    எண்வழி ஆத்திசூடி

    அண்ணாகண்ணன்
    ஒன்றுபடு
    இருளிலும் பார்
    மூச்சைச் சீராக்கு
    நான் தவிர்
    ஐயம் தெளி
    அறு சோம்பல்
    எழு துணிந்து
    எட்டு இலக்கை
    நவமெனச் சுடர்
    பத்தியம் இரு
    Share
  • பத்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    உங்கள் நல்லாதரவோடு வல்லமை மின்னிதழ், 2019 மே 16 அன்று பத்தாம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்த ஒன்பது ஆண்டுகளில் வல்லமை, 15,650 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,178 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 1,400 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம். வல்லமையின் முதுகெலும்பாக நின்று துணை புரியும் ஆமாச்சு, ஸ்ரீநிவாசன் ஆகியோருக்கு நன்றிகள்.

    தமிழில் ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் முதல் இதழ் (First Peer Reviewed Research Journal in Tamil) என்ற பெருமையை வல்லமை பெற்றுள்ளது. ஆய்வறிஞர் கருத்துரையுடன் கூடிய முதல் ஆய்வுக் கட்டுரையை 2019 ஜனவரி 4ஆம் தேதி வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து இந்தப் பிரிவில் இது வரை 31 கட்டுரைகள் உள்பட, 254 ஆய்வுக் கட்டுரைகளைக் கடந்த ஓராண்டில் வல்லமை வெளியிட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேலான கட்டுரைகளிலிருந்து இவற்றைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

    ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள் (Guidelines), பின்பற்ற வேண்டிய ஆய்வு அறங்கள் (Ethics Policy), மதிப்பாய்வு நெறிகள் (Peer Review Policy), பதிப்பு நெறிகள் (Publication Policy) ஆகியவற்றை அமைத்துள்ளோம். இவை, ஆய்வாளர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்டும்.

    வல்லமையின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்துள்ளோம். தகுதியும் தரமும் வாய்ந்த மதிப்பாய்வுக் குழுவினை அமைத்துள்ளோம். ஆற்றல் வாய்ந்த இந்தப் பன்னாட்டுக் குழுவினர், தமிழ் ஆய்வின் மதிப்பினைப் பன்மடங்கு உயர்த்துவார்கள் என நம்புகிறோம்.

    இந்த ஆண்டில் வல்லமை மின்னிதழ், பல முறைகள் ஸ்பாம் தாக்குதலுக்கு உள்ளானது. ஓரிரு முறைகள் ஹேக் செய்யப்பட்டது. சில தினங்கள் இதனால் தளத்தை அணுக முடியாத நிலை ஏற்பட்டது. நம் தொழில்நுட்ப நண்பர்களின் உதவியைத் தளத்தை மீட்டெடுத்துள்ளோம். எனினும் வல்லமைக்கு வலுவான சர்வர், தொடர்ச்சியான கண்காணிப்பு, பராமரிப்பு தேவையாக உள்ளது. தமிழ், புத்தாக்கம், கல்வி, ஆராய்ச்சியை வளர்த்தெடுக்க, மேலும் பல திட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு உங்கள் நிதியாதரவை எதிர்நோக்கியுள்ளோம்.

    வல்லமை, இலவச மின்னிதழ். படிப்பதற்குக் கட்டணமில்லை. ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கு, ஆய்வாளர்களிடமும் நாம் கட்டணம் பெறுவதில்லை. எனவே இதழைத் தொடர்ந்து நடத்திட, உங்கள் நன்கொடைகளை வரவேற்கிறோம்.

    வல்லமை குறித்த உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். வல்லமையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

    தகுதிக்கும் திறமைக்கும் மதிப்பு உண்டு என்பதை வல்லமை உறுதி செய்கிறது. பணம் கொடுத்துக் கட்டுரைகளை வெளியிடும் போக்கினை மாற்றும் வகையில், புதுப் பாதை அமைக்கிறது. இந்தப் பயணத்தில் நீங்களும் இணையுங்கள். புதியதோர் உலகம் செய்வோம்.

    Share
  • வல்லமையின் ஆய்வு அறங்கள் (Ethics Policy)

    முனைவர் அண்ணாகண்ணன்

    வல்லமை பின்பற்றும் ஆய்வு அறங்களை இங்கு வகுத்தளித்துள்ளோம். ஆய்வாளர்கள் இவற்றை மனத்தில் இருத்தித் தம் கட்டுரைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    சொந்த ஆக்கம்

    ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வாளர்களின் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும்.

    பிறருடைய கருத்தினைத் தன் கருத்தாக எடுத்தாளும் போக்கினை ஆய்வாளா்கள்
    முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிறருடைய கருத்துகளையும் ஆய்வு முடிவுகளையும்
    மேற்கோளாக எடுத்தாள மட்டுமே ஆய்வாளருக்கு உரிமை உண்டு.

    இதர தளங்களிலிருந்து, ஏடுகளிலிருந்து, நூல்களிலிருந்து முழுப் படைப்பையோ அல்லது ஒரு பகுதியையோ எடுத்துத் தம் கட்டுரையை உருவாக்குவது தவறு. ஒரே கட்டுரையிலிருந்து எடுக்காமல், பல்வேறு கட்டுரைகளிலிருந்து இங்கொன்று அங்கொன்றாக எடுத்துத் திரட்டிக் கட்டுரையாக்குவதும் கூடாது. ஆய்வுக் கட்டுரையும் அதில் இடம்பெறும் அனைத்து வளங்களும் ஆய்வாளரின் சொந்த ஆக்கங்களாக இருத்தல் வேண்டும்.

    புதிய கட்டுரையா?

    வேறு எங்கும் பதிப்பிக்கப்படாத கட்டுரையாக இருத்தல் வேண்டும். வேறு தளங்களில், இதழ்களில், நூல்களில் வெளிவந்திருந்தாலோ, கருத்தரங்கு, மாநாடு, பயிலரங்கு போன்றவற்றில் படைக்கப்பட்டிருந்தாலோ அவசியம் குறிப்பிட வேண்டும். வல்லமைக்கு அனுப்பிய பிறகு வேறு இதழ்களுக்கு அனுப்பியிருந்தால், அதை உடனே வல்லமைக்குத் தெரிவிக்க வேண்டும்.

    மேற்கோள்கள்

    இதர கட்டுரைகளிலிருந்து மேற்கோள் காட்டுகையில், மேற்கோள் எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும். மேலும், அது தொடர்பான அடிக்குறிப்புகள், துணைநூல் பட்டியல் ஆகியவற்றை அவசியம் தர வேண்டும்.

    நம்பகத்தன்மை வாய்ந்த சான்றுகள்

    ஆய்வுக் கட்டுரையில் எடுத்துக் காட்டும் சான்றுகள், மிகுந்த நம்பகத்தன்மையுடன் இருத்தல் வேண்டும். அச்சில் வந்ததாலோ, இணையத்தில் இடம் பெற்றதாலோ மட்டுமே ஒரு தரவு, சான்று ஆகிவிடாது. அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அதன் பிறகே ஆய்வாளர் அதை ஒரு சான்றாக ஏற்கலாம். இவ்வாறு ஆராய வேண்டியது, ஆய்வாளரின் கடமையாகும்.

    அவசரம் கூடாது

    தலைப்பினைத் தேர்ந்தெடுப்பதிலோ, கட்டுரையை எழுதுவதிலோ, அல்லது ஆய்வு முடிவுகளை இறுதி செய்வதிலோ அவசரம் கூடாது.

    ஆய்வில் நடுநிலை பேணல்

    காய்தல், உவத்தல் இல்லாத நடுநிலையான ஆய்வே வரலாற்றில் நின்று நிலைக்கும்.
    மிகைப்படுத்துதல், தற்சார்புத்தன்மை, இட்டுக்கட்டி இழிவுகூறல் போன்ற பண்புகள்
    ஆய்வாளா்களுக்குச் சற்றும் பொருந்தாதவை. சாதி, இனம், மொழி, சமயம், தேசியம், சா்வதேசியம் ஆகிய எல்லைகளைக் கடந்த பரந்துபட்ட பார்வை ஆய்வாளருக்குத் தேவை. இவ்வாறான எல்லைகளுக்குள் அடைபட்டுக்கொண்டு ஆய்வு முடிவுகளைத் திரித்தும் வருவித்தும் நிறுவும் போக்கு சரியானதில்லை. எனவே, நடுநிலையைப் பேணுவது இன்றியமையாதது.

    Share
  • வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2019

    நிறுவனர் & முதன்மை ஆசிரியர்:

    முனைவர் அண்ணாகண்ணன்

    நிர்வாக ஆசிரியர்:

    பவளசங்கரி திருநாவுக்கரசு

    ஆசிரியர் குழு:

    மேகலா இராமமூர்த்தி, அமெரிக்கா

    அமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்), மும்பை

    ராமலட்சுமி, பெங்களூரு

    துணை ஆசிரியர்கள்:

    முனைவர் சுரேஷ் ரங்கநாதன்

    முனைவர் சொ. அருணன்

    மதிப்பாய்வுக் குழு

    மேகலா இராமமூர்த்தி, அமெரிக்கா

    சி. ஜெயபாரதன், கனடா

    மலர் சபா, ரியாத், சவுதி அரேபியா

    ஹரிகிருஷ்ணன், பெங்களுரு

    வித்வான், முனைவர் ச.சுப்பிரமணியன்

    இரா.பானுகுமார்

    முனைவர் இரா.சீனிவாசன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை

    முனைவர் பா. ஜெய்கணேஷ், தமிழ்த் துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை

    முனைவர் ப.திருஞானசம்பந்தம், உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை-625004

    முனைவா் பு.பிரபுராம் முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

    முனைவர் ம.இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, ஸ்ரீ வித்யா மந்திர் கலை & அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி

    முனைவர் தி.அ. இரமேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை,  தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்

    முனைவர் தி.தெய்வசாந்தி, சர்வதேச ஆராய்ச்சி மையம், கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோயில்

    முனைவர் கல்பனா சேக்கிழார், உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை,  அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்

    முனைவர் தீபா சரவணன், உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை

    ஆலோசகர் குழு:

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    விஜய திருவேங்கடம்

    விசாகப்பட்டினம் வெ. திவாகர்

    வழங்கி நிர்வாகி & தள மேலாளர்:

    கார்த்திக் இலட்சுமி நரசிம்மன் (எல்.கே.)

    தொழில்நுட்ப ஆலோசகர்கள்:

    காமேஷ்

    செல்வ முரளி

    ஆமாச்சு (எ) ஶ்ரீராமதாஸ்

    சட்ட ஆலோசகர்

    வழக்கறிஞர் கார்த்திகேயன், சென்னை

    =========================

    இதழின் நோக்கமும் செல்நெறிகளும்

    உலகளாவிய தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, ஒவ்வொருவர் ஆற்றலையும் பன்மடங்கு உயர்த்துவது, துடிப்புடன் செயலாற்றத் தூண்டுவது, கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றின் வழியே சமூக முன்னேற்றத்துக்கு வித்திடுவது, சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, இளைய சமுதாயத்தைப் பயிற்றுவித்து, வழிகாட்டி, தோழமையுடன் துணை நிற்பது ஆகியவை, வல்லமையின் முதன்மை நோக்கங்கள். நடுநிலை ஆய்வு, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நுட்பியல் பயன்பாடு, இயன்ற வரை கலப்பில்லாத் தமிழ், புதிய முயற்சிகளுக்கு ஊக்கம், பரிசோதனை முயற்சிகளுக்குத் தூண்டுதல், அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் அக்கறை… உள்ளிட்டவை இவ்விதழின் செல்நெறிகள்.

    படைப்பாளர்கள் கவனத்திற்கு

    படைப்புகள், செய்திகள், கடிதங்கள், கேள்விகள், ஓவியங்கள், நிழற்படங்கள்…. உள்ளிட்ட அனைத்து வகைப் பங்களிப்புகளையும் வரவேற்கிறோம். ஆக்கங்களை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வேறு எங்கும் வெளிவராத, புதிய படைப்பாக இருத்தல் வேண்டும். ஒருங்குறியில் (யுனிகோடு) அமைந்திருத்தல் வேண்டும். காப்புரிமையை மீறாத வகையில், படைப்புக்கு ஏற்ற படங்களை இணைத்து அனுப்பலாம்.

    தொடர்பிற்கு

    முனைவர் அண்ணாகண்ணன்
    மனை எண் 5, மெடோ வில்லாஸ், ஹரிதா என்கிளேவ்,
    சி.டி.ஓ. காலனி, 3ஆவது தெரு,
    மேற்குத் தாம்பரம், சென்னை – 600045

    Share
  • படக்கவிதைப் போட்டி – 197

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அண்ணாகண்ணன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.01.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • இனிக்கும் பொங்கல்

    இதங்கள் ஆயிரம், விதங்கள் ஆயிரம், பதங்கள் ஆயிரம் உண்டு!
    உதிக்கும் ஞாயிறு, தழைக்கும் தாவரம், செழிக்கும் பூதலம் இன்று!
    துதிக்கும் கோகுலம், அனைத்தும் ஓர்குலம், உயிர்க்கும் மானுடம் இன்று!

    புதுக்கும் திங்களே, வெளுக்கும் கங்குலே, இனிக்கும் பொங்கலே இன்று!அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    Share
  • வல்லமை ஆசிரியர் குழுவில் இணைய ஒரு வாய்ப்பு

    பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற வல்லமை மின்னிதழ், ஒன்பதாம் ஆண்டில் நடை போடுகிறது. 2019 மே மாதத்தில் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. தரமான ஆய்வுக் கட்டுரைகளை அவற்றின் தகுதியை மட்டுமே பரிசீலித்து வெளியிட்டு வருகிறோம். இந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இவை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன.

    அருஞ்செயல் புரிந்த ஒருவருக்கு வாரந்தோறும் வல்லமையாளர் விருதினை வழங்கி வருகிறோம். வாரந்தோறும் படக்கவிதைப் போட்டியும் நடத்தி வருகிறோம். இதுவரை சிறுகதை, கட்டுரை, கவிதை, கடித இலக்கியம், நூல் விமர்சனம்… எனப் பல திறன்களை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகளை நடத்தியுள்ளோம்.

    வல்லமை, கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையில் கூகுள், ஃபேஸ்புக், ஃபிளிக்கர், வாட்ஸப் ஆகியவற்றில் குழுமங்களை நடத்தி வருகிறது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பல்வேறு பயிலரங்குகளை நடத்தி வருகிறது.

    வல்லமையை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் மேலும் பல திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் ஆசிரியர் குழுவினை விரிவுபடுத்த உள்ளோம்.

    *தமிழ் மொழியறிவும் கூர்மையான ஆய்வுக் கண்ணோட்டமும் இதழியல் ஆர்வமும் கொண்டவர்கள், உதவி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    *கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பயிற்சி இதழாளர்களாகப் பணியாற்றலாம்.

    *ஆய்வுக் கட்டுரைகளை நடுநிலையுடன் மதிப்பாய்வு செய்வதில் திறம் வாய்ந்த பேராசிரியர்களும் அறிஞர்களும் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

    *இணையத்தள வடிவமைப்பிலும் வேர்ட்பிரஸ் தொழில்நுட்பத்திலும் ஆண்டிராய்டு செயலி உருவாக்கத்திலும் அனுபவம் வாய்ந்தவர்கள், வல்லமைக்குத் தொழில்நுட்ப ரீதியில் உதவலாம்.

    • விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழில் பிழையின்றி எழுதவும் கணினியில் தட்டச்சு செய்யவும் கற்றவர்களாக இருக்க வேண்டும்.
    • படைப்புகளில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்தும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
    • சொந்தமாகக் கணிப்பொறியும் இணைய இணைப்பும் கொண்டிருக்க வேண்டும்.
    • நாள்தோறும் ஓரிரு மணி நேரம், வல்லமைக்காகச் செலவிடக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
    • வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிய வேண்டும்.
    • வல்லமை, இலாப நோக்கில்லாத அமைப்பு என்பதால், எம்மால் ஊதியம் வழங்க இயலாது. ஆயினும், வல்லமை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
    • தமிழ்த் துறை மட்டுமின்றி, எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இல்லத்தரசிகளும் மாணவர்களும் கூட, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.
    • விருப்பம் உள்ளோர், உங்கள் சுயவிவரக் குறிப்புடன் கூடிய விண்ணப்பத்தை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    சிந்தனை, செயல், முன்னேற்றம் என்பது நம் இலக்கு. வாருங்கள் இணைந்து சிந்திப்போம், செயல்படுவோம், முன்னேறுவோம்.

    Share
  • ஒன்பதாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு, 2010 மே 16 அன்று செல்வ முரளி உதவியுடன்  வல்லமையைத் தொடங்கினோம். பேரா.இ.அண்ணாமலை உடனான இ-நேர்காணலே முதல் இடுகை. அந்தப் புள்ளியிலிருந்து சிற்றடிகளை எடுத்து வைத்து, இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இப்போது 2018 மே 16 அன்று ஒன்பதாம் ஆண்டில் வல்லமை நுழைந்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில் வல்லமை, 14,276 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 12,551 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.

    Vallamai in 9th Year

    வல்லமை, 2017 மே மாதம், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் [University Grants Commission (UGC) (யுஜிசி)] அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழாக அறிவிக்கப்பெற்றது. 2018 மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதுப்பிக்கப்பெற்ற பட்டியலிலும் வல்லமை தொடர்ந்து இடம் பெற்றுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், 4305 ஆய்விதழ்களைப் பட்டியலிலிருந்து யுஜிசி நீக்கியுள்ளது. ஆயினும் தமிழ்ப் பிரிவில் வல்லமை நீடிக்கிறது.

    இந்தக் காலக் கட்டத்தில் சுமார் 200 ஆய்வுக் கட்டுரைகளை வல்லமை பதிப்பித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, இதர மாநிலங்களிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆய்வாளர்களின் ஆக்கங்களை வல்லமை வெளியிட்டுள்ளது. தமிழ் இலக்கியம், இலக்கணம், சமூகவியல், பக்தி, வரலாறு, உளவியல், அறிவியல், இணையம், மொழிபெயர்ப்பு, ஒப்பீடு, பறவையியல், இன வரைவியல், நாட்டுப்புறவியல், கல்வி, இசை… எனப் பற்பல துறைகள் சார்ந்த கூர்நோக்கும் புதிய பார்வையும் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

    இவை மட்டுமின்றி, கனடாவிலிருந்து ஜெயபாரதன், அறிவியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 700க்கும் மேலான படைப்புகளை நல்கியுள்ளார். கேசவ் அவர்களின் கிருஷ்ணர் ஓவியங்களுக்குக் கிரேசி மோகன், நாள்தோறும் நவரசங்களில் வெண்பா விருந்து படைத்து வருகிறார். தொடர்கள் எழுதி வரும் இன்னம்பூரான் (இந்தியா), நிர்மலா ராகவன் (மலேசியா), அவ்வை மகள் (அமெரிக்கா), நாகேஸ்வரி அண்ணாமலை (அமெரிக்கா), மேகலா இராமமூர்த்தி (அமெரிக்கா), சக்தி சக்திதாசன் (இங்கிலாந்து), ஜெயராம சர்மா (ஆஸ்திரேலியா), முனைவர் சுபாஷிணி (ஜெர்மனி), கல்வியியல், வாழ்வியல் தொடர்களைச் செம்மையாக வழங்கி வரும் க.பாலசுப்பிரமணியன், செண்பக ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் வல்லமையின் படைப்புச் செழுமைக்குப் பங்களித்து வருகிறார்கள். ஆசிரியர் பவளசங்கரியின் தலையங்கங்கள், நம் கவனத்தை ஈர்ப்பவை. பெரும்பாலான தமிழ் மின்னிதழ்களில் தலையங்கம் என்ற பகுதி இல்லை என்பதையும் இணைத்துப் பார்க்கலாம்.

    மேலும், படக்கவிதைப் போட்டி 161 வாரங்களைக் கடந்து வெற்றி நடை போடுகிறது. உலகம் முழுவதுமிருந்து கவிஞர்கள் பங்கேற்க, மேகலா இராமமூர்த்தி நடுவர் பொறுப்பில் திறம்படச் செயலாற்றி வருகிறார். இந்த வார வல்லமையாளர் விருதினை 270 வாரங்களாக வழங்கி வருகிறோம். கடந்த 50 வாரங்களாகச் சிறப்புறத் தேர்ந்தெடுத்த பேராசிரியர் செல்வன் விடைபெற, அந்தப் பொறுப்பினை இளைஞர் கௌதம் ராஜ் ஏற்றுள்ளார். அத்துடன் வல்லமை ஆசிரியர் குழுவில் முனைவர் விஜய ராஜேஸ்வரி, கவிஞர் ராமலட்சுமி ஆகியோர் இணைந்துள்ளனர். புதியவர்களை வரவேற்கிறோம்.

    வல்லமை வாசகர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் இ.அண்ணாமலை அளித்த பதில்களின் தொகுப்பினைத் தமிழ் இன்று – கேள்வியும் பதிலும் என்ற தலைப்பில் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தேமொழி தேர்ந்தெடுத்த வல்லமையாளர்கள் 100 பேர்களின் தொகுப்பும் மின்னூலாக வெளிவந்துள்ளது. இந்த ஆண்டில் வல்லமையாளர்கள் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பெஞ்சமின் லெபோ, முனைவர் சுபாஷிணி, ஜெயராம சர்மா, சுப்ரபாரதி மணியன் உள்ளிட்டோர், தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வென்றதில் உள்ளம் உவக்கின்றோம்.

    ஆண்டிராய்டு திறன்பேசி வைத்திருப்போர், தங்கள் செல்பேசியிலேயே வல்லமையைப் படித்து மகிழலாம். வல்லமையின் ஆண்டிராய்டு செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள் – https://play.google.com/store/apps/details?id=com.vallamai.android விரைவில் வல்லமை மின்னிதழின் வடிவமைப்பினை மாற்ற உள்ளோம். வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதியும் திட்டம் உள்ளது. மேலும் பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளோம். இவை அனைத்திற்கும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

    இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, முனைவர் காயத்ரி பூபதி, முனைவர் விஜய ராஜேஸ்வரி, சாந்தி மாரியப்பன், ராமலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள நிர்வாகி சீனிவாசன், ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறோம்.

    உங்கள் அனைவரின் ஆதரவுடன் இன்னும் பல முத்திரைகளைப் பதிப்போம். முயற்சி திருவினையாக்கும்.

    Share
  • ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்!

    Research Articles

    வல்லமை மின்னிதழ், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) அங்கீகாரத்தை அண்மையில் பெற்றது நீங்கள் அறிந்ததே. வல்லமை, ஆய்வுக் கட்டுரைகளுக்காகவே தனிப் பகுதியைக் கொண்டிருக்கிறது. தரமான ஆய்வுக் கட்டுரைகளையும் இதர ஆக்கங்கள் பலவற்றையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

    ஆய்வாளர்கள் பலரும் தத்தம் கட்டுரைகளை நமக்கு விரும்பி அனுப்பி வருகின்றனர். மேலும் புதிய ஆய்வாளர்கள் பலர், ஆய்வுக் கட்டுரைகள் எப்படி அமைய வேண்டும்? என்னென்ன நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? எந்தெந்தக் கருப்பொருள்களில் இருக்கலாம்? என்றும் பலவுமாய் வினவி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு, சில குறிப்புகளை இங்கே வழங்குகிறோம்.

    ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்:

    புதிய கோணத்தில், ஆய்வுச் சிக்கல் ஒன்றுக்குத் தீர்வு காணும் வகையில் கட்டுரை அமைதல் நலம்.

    ஆய்வுக் கட்டுரையானது, ஆய்வாளரின் சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு, தழுவல், போலச் செய்தல் போன்றவை கூடாது.

    ஆய்வுக் கட்டுரை, புதிய ஆக்கமாக இருக்க வேண்டும். வேறு எங்கும் வாசிக்கப்பட்டது, வேறு இதழ்களில் வெளிவந்தது எனில் அதனை முதலிலேயே குறிப்பிட வேண்டும். வல்லமை ஆசிரியர் குழுவினர் விரும்பினால், அவற்றை மறுபகிர்வு என்ற பிரிவில் வெளியிடப் பரிசீலிப்போம்.

    ஆய்வுக் கட்டுரை, எந்தக் கருப்பொருளிலும், எந்தத் தலைப்பிலும் இருக்கலாம். இந்தத் தலைப்பினைத் தேர்ந்ததற்கான காரணத்தையும் முன்னுரையில் குறிப்பிட்டால், வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ஆய்வுகள் நன்னோக்கத்துடன், ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும். அதன் மூலமாகச் சமுதாயம், நன்மை அடைய வேண்டும். அந்தக் கண்ணோட்டத்துடன் ஆய்வுகள் அமைந்தால், பெரிதும் மகிழ்வோம்.

    ஏற்கனவே வெளியான தலைப்புகளைத் தவிர்க்கலாம். அதே கருப்பொருள், தலைப்பினைத் தேர்ந்தெடுத்தால், அதனைப் புதிய கோணத்தில், புதிய உண்மைகள் வெளிப்படுமாறு கட்டுரைகளைப் படைக்க வேண்டும்.

    வழக்கமான ஆய்வியல் நெறிகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். உரிய சான்றுகள், தரவுகளுக்கான மூலங்கள், அடிக்குறிப்புகள், உசாத் துணைகள், ஆய்வுக்கு உதவிய நூல்கள், இணையச் சுட்டிகள் உள்ளிட்டவற்றைத் தவறாது குறிப்பிட வேண்டும்.

    அடிப்படைச் சான்றுகள் இல்லாத, கற்பனைக் கதைகளைச் சான்றாகக் கொண்ட கட்டுரைகளை அனுப்ப வேண்டாம். பத்திரிகைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டவை எனில், அச்செய்தி உண்மையா என ஆராய்ந்து தெளிந்து அனுப்ப வேண்டுகிறோம். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    கட்டுரைகள், சந்திப் பிழை உள்ளிட்ட இலக்கணப் பிழைகள், தட்டுப் பிழைகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றனவா எனச் சரிபார்த்து அனுப்ப வேண்டும். அளிக்கும் தரவுகளிலும் மேற்கோள்களிலும் பிழையில்லாமல் இருக்க வேண்டும்.

    கட்டுரைக்குத் தேவையான படங்கள், பட்டியல்கள் உள்ளிட்டவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
    கட்டுரை, தமிழிலோ, ஆங்கிலத்திலோ இருக்கலாம்.

    ஒருங்குறியில் இருக்க வேண்டும். இதர எழுத்துருக்களிலோ, பிடிஎஃப் வடிவிலோ அனுப்ப வேண்டாம்.

    முறையாக வாக்கியங்கள், பத்திகள், சொற்கள் பிரிக்கப்பட்டு, நிறுத்தற்குறிகள் இடப்பட்டு இருக்க வேண்டும்.

    ஆய்வாளரின் படத்துடன் அவரைப் பற்றிய சிறுகுறிப்பைக் கட்டுரையின் இறுதியில் அளிக்கலாம். ஆய்வாளரின் தொடர்பு விவரங்களைக் கட்டுரையில் அல்லாமல், மடலின் ஒரு பகுதியாகவே வல்லமைக்குத் தெரிவிக்கலாம்.

    தகுதி வாய்ந்த, தரமான ஆய்வுக் கட்டுரைகளை வல்லமை உளமார வரவேற்கிறது. இதன் வழியே அறிவுலகம் செழித்து, அனைத்துலகும் பயன்பெற விழைகிறோம். ஆய்வாளர்களின் ஒத்துழைப்பினைத் தொடர்ந்து வேண்டுகிறோம். உங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – vallamaieditor@gmail.com

    ===================================

    அன்புடன் என்றும்,
    அண்ணாகண்ணன்

    Share
  • எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    வல்லமை மின்னிதழ், 7 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, சாந்தி மாரியப்பன், முனைவர் காயத்ரி பூபதி, முனைவர் செல்வன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள நிர்வாகி சீனிவாசன், ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

    vallamai_8th_year

    8ஆம் ஆண்டில் நுழைந்துள்ளதை முன்னிட்டு, வாசகர்களுக்கு ஓர் இனிய பரிசாக, வல்லமையின் ஆண்டிராய்டு செயலியை வெளியிட்டுள்ளோம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள் – https://play.google.com/store/apps/details?id=com.vallamai.android இனி, ஆண்டிராய்டு திறன்பேசி வைத்திருப்போர், தங்கள் செல்பேசியிலேயே வல்லமையைப் படித்து மகிழலாம். இதனைக் குறுகிய காலத்தில் உருவாக்கிய கலீல் ஜாகீருக்கு நன்றி.

    சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வாரந்தோறும் வல்லமையாளர் விருதுகளை வழங்கி வருகிறோம். முனைவர் செ.இரா.செல்வக்குமாரைத் தொடர்ந்து, முனைவர் செல்வனின் ஒத்துழைப்புடன் 222ஆவது வாரமாக வல்லமையாளர் விருதினை வழங்கியுள்ளோம். வாசகர்களின் பேராதரவுடன் படக் கவிதைப் போட்டி, 112ஆவது வாரத்தை எட்டியுள்ளது. கடினமான இப்பணியை மேகலா இராமமூர்த்தி செம்மையாக ஆற்றி வருகிறார்.

    கிரேசி மோகனின் புதுமையான கோணத்தில் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் இரட்டை விருந்தாக, ஓவியமும் கவிதையுமாகத் தினந்தோறும் வெளியாகி வருகிறது. முனைவர் சுபாஷிணியின் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம், 87 வாரங்களை எட்டியுள்ளது. இன்னம்பூரானின் நாளொரு பக்கம், இசைக்கவி ரமணனின் சித்தத்தில் சில சித்திரக் குமிழிகள், அண்ணாமலை சுகுமாரனின் வரலாறுகளின் வேர், க. பாலசுப்பிரமணியனின் கற்றல் ஒரு ஆற்றல், திருமந்திரத்தில் தேன் துளிகள், நிர்மலா ராகவனின் நலம் .. நமறிய ஆவல், மீனாட்சி பாலகணேஷின் இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் என ரங்கோலிக் கோலமாகப் படைப்புகள் அணி வகுக்கின்றன.

    சி. ஜெயபாரதனின் அறிவியல் கட்டுரைகள், எழிலரசி கிளியோபாத்ரா , உமர் கயாம் ஈரடிப் பாக்கள் என ஒவ்வொன்றும் தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்ந்தவை. எளிய தமிழில் இவ்வளவு விரிவான விண்ணியல் / அறிவியல் ஆக்கங்கள், அச்சிதழ்களில் வெளிவருவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மலர்சபாவின் நான் அறிந்த சிலம்பு, சக்தி சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், செண்பக ஜெகதீசனின் குறளின் கதிர்களாய்… என அடுக்கடுக்கான படைப்புகள், வாசகர் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    தொடர்கள் மட்டுமல்லாது தனிப் படைப்புகளும் தங்கள் தனி முத்திரையைப் பதித்து வருகின்றன. இவ்வகையில் வையவன், விப்ரநாராயணன், பழமைபேசி, ஒரு அரிசோனன், எஸ்.வி.வேணுகோபாலன், மீ.விசுவநாதன், மு. இளங்கோவன், எம். ரிஷான் ஷெரீப், தமிழ்த்தேனீ, கவிஞர் ஜவஹர்லால், ஜெயராமசர்மா, முல்லை அமுதன், மணிமுத்து, வேதா. இலங்காதிலகம், ராஜகவி ராகில், நா. பார்த்தசாரதி, கருமலைத்தமிழாழன், பெருவை பார்த்தசாரதி, கவியோகி வேதம், சுபாஷிணி திருமலை, சரஸ்வதி ராஜேந்திரன், உமாஸ்ரீ, பொன்.ராம், நாகினி, பா.ராஜசேகர் உள்ளிட்ட பலரின் பங்களிப்புகளும் வல்லமைக்கு வலிவும் பொலிவும் சேர்த்து வருகின்றன.

    வல்லமை வாசகர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் இ.அண்ணாமலை அளித்த பதில்களின் தொகுப்பு, அடையாளம் பதிப்பகத்தின் சார்பில் விரைவில் நூல்வடிவம் பெறுகிறது. வல்லமையாளர்களின் தொகுப்பும் விரைவில் மின்னூலாக வெளிவர உள்ளது.

    வல்லமையில் இன்று வரை 12,363 இடுகைகளை வெளியிட்டுள்ளோம். 12 ஆயிரம் பின்னூட்டங்களைப் பெற்றுள்ளோம். பல்லாயிரம் வாசகர்கள், உலகெங்கும் இருந்து வல்லமையைத் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள். வல்லமையின் கூகுள், பிளிக்கர், பேஸ்புக், வாட்சாப் குழுமங்கள், தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களுக்குக் களம் அமைத்துள்ளன. சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற இலக்குடன் திடமாக, ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றி வரும் வல்லமையை வாழ்த்துங்கள். தொடர்ந்து வாசியுங்கள். படைப்புகளை அனுப்புங்கள். ஆர்வமுள்ளோர், ஆசிரியர் குழுவுடன் இணைந்து செயல்படலாம். உங்கள் ஆலோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

    இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அவற்றைச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இணைந்திருங்கள், இன்னும் சாதிப்போம்.

    Share
  • விடலைப் பாட்டு

    -அண்ணாகண்ணன்

    விடலை அவன் விட்டு விடலை – விளையாடலை
    விடலை அவன் விட்டு விடலை

    கடலை போடுவான் ஒரு கடலை போட்டபடி மனக்
    கடலைத் தேடுவான் பாற் கடலை

    படலை ஏதும் அகப் படலை – இன்னும் புறப் 
    படலை உள்ளம் சுகப் படலை

    சுடலை துன்பம் அது சுடலை – தோல்வி அது
    சுடலை வாழ்வில் இலை சுடலை

    திடலை ஓய்ந்து விழுந் திடலை – எங்கும் ஒளிந்
    திடலை ஆட்டம் முடிந் திடலை

    சகலை நாளும் இனி ரகளை – ஊதி விடு 
    துகளை உதிக்க விடு பகலை.

     

     

    Share