Tag: Peer Reviewed

  • (Peer Reviewed) ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் – ஒரு பார்வை

    முனைவர் இரா.வீரபத்திரன்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை,
    கற்பகம் உயர்கல்வி கலைக் கழகம்,
    கோவை.

    ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் – ஒரு பார்வை

    அன்று தொட்டு இன்றுவரை அழியாத நாகரிகத்தையும் பண்பாட்டையும் உடைய நன்மக்கள், நம் தமிழ் மக்களே. இந்தப் பரந்த உலகிற்கே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுத் தந்த பெருமை, நம் முன்னோர்களையே சாரும். தமிழ்ப் பாரம்பரியத்தில் உதித்த மரபு வழிப்பட்ட நெறிமுறைகள், இன்று நமது வாழ்க்கைப் பாடமாகவும் ஒரு படிப்பினையாகவும் விளங்குவதை நாம் அறிய முடிகிறது.  அதில் கலையின் ஒரு கூறாகக் குரவைக் கூத்து இடம் பெறுகிறது. அக்கூத்து ஆயர் குடியில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது என்பதை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    குரவைக் கூத்து

    தமிழ்ப் பாரம்பரியக் கலையாக்கங்களுள் கூத்துக் கலையும் ஒன்று. அத்தகைய கூத்துக் கலைகளுள் குரவைக் கூத்தென்பது முல்லை அல்லது குறிஞ்சி நில மகளிர் தம்முட் கைகோர்த்தாடும் கூத்து என்றும், மகளிர் விழாக் காலங்களில் நாவால் குழறி இடும் மகிழ்ச்சியொலி என்றும் குறிப்பிடப்படுகின்றது.1 குறிஞ்சி நில மக்கள் ஆடும் கூத்து குன்றக் குரவை என்றும் முல்லைநில மக்கள் ஆடும் கூத்து ஆய்ச்சியர்க் குரவை என்றும் சிலப்பதிகாரம் தனித் தனிக் காதைகளில் குறிப்பிடுகின்றது. மேலும் குரவைக் கூத்தென்பது எழுவர் மங்கையர் கைகோர்த்து ஆடும் ஆட்டமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.2

    குரவை என்பது, காமம் அல்லது வெற்றி தொடர்பாக ஆடப் பெற்றது. குரவைக் கூத்தென்பது பண்டைய சமுதாயத்தில் விளங்கிய பொழுதுபோக்கு விளையாட்டுகளுள் ஒன்றாகும். குரவை என்பதற்குத் தெற்றியாடல் என்ற ஒரு பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

    குரவை தழூஉதல்

    குரவையில் பங்கு கொள்வோர் ஒருவரையொருவா் தழுவிக் கொள்ளுதல், குரவைக் கூத்தின் தலையாய நெறிமுறையாகும். இதன் பொருட்டே குரவையாடுதலைக் குறிப்பிடும் பொழுது பெரும்பாலான இலக்கியங்களில் குரவைத்தழூஉதல் என்று குறிக்கப்பட்டுள்ளது. தழுவுதலைப் பற்றியே “தழூஉ” என்றே குரவை குறிக்கப்பட்டது.

    “தாதெரு மன்றத் தயவர் தழூஉ” 3

    என்று முல்லைக்கலி குறிப்பிடுகின்றது.

    தலைக்கை தருதல்

    குரவைக் கூத்துகளில் தலைதருதல் அல்லது தலைக்கை தருதல் என்ற வழக்கம் இருந்தது. முதன்முதலில் ஆண்பாலரோ பெண்பாலரோ தழுவி ஆடும்முறை இருந்திருக்க வேண்டும். இருபாலரும் இணைந்து ஆடும் நிலையில் தலைக்கை தரும் வழக்கம் வழக்கில் வந்திருக்க வேண்டும். ஆடவரும் பெண்டிரும் இணைந்து குரவை நிகழ்த்தும் வேளை, தழுவுதல் வேண்டி இரண்டிரண்டு பேராகத் தழுவி ஆடுவர். ஆடிய வண்ணமே தழுவும் தமது இணையை மாற்றுவர். ஒரே பிணையோடு இறுதிவரை ஆடுவதில்லை. இவ்வாறு பிறரைச் சேர்த்து ஆரத் தழுவி ஆடும் குரவையில், ஒருவர் முதன்முதலில் பிணைவேண்டிய வண்ணம் கையினைத் தருதலே தலைக்கை தருதல் எனப்பட்டிருத்தல் வேண்டும். இத்தழுவுதல் பல பிணையாக முறைப்படி நிகழும் வேளை, குரவை காண்போருக்கு ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும்.

    ‘தலைக்கை தருதல்’ என்னும் கைகோர்த்தலில் கற்கடக்கை (நடுவிரல்) விரலும், அணிவிரலும், முன்னே நின்று மடித்து மற்றை விரல்கள் மண்டலித்து நின்றாட வேண்டும் என்ற நெறி வலியுறுத்தப்படுவதனை,

    “செந்நிலை மண்டிலத்தால் கற்கடகக் கைகோஒத்து

     அந்நிலையே யாடல் ஆராய்ந்துளார்” 4

    என்னும் சிலப்பதிகார அடிகள் சுட்டுகின்றன.

    அரசர்களுள் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மகளிர்க்குத் தலைக்கை தந்து ஆடியதாக,

    “தழூஉப் பணை ஆக

    சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்து”5

    என்று பதிற்றுப்பத்துக் குறிப்பிடுகிறது.

    குரவைக் கூத்தானது கள்ளுண்ட மயக்கத்தில் ஆடப்பட்ட நிலையினை,

    “வாங்கு அமைப் பழனிய தேறல் மாக்கள்

    வேங்கை முன்றில் குரவை அயரும்”6

    “நறவு நாட்செய்த குறவர் தம் பெண்டிரொடு

    …………………. அயரும் குரவை”7

    என்ற சங்கப் பாடல்கள் விளக்குகின்றன.

    குரவைக் கூத்தின் சமுதாயப் பயன்

    சமூக உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவே கூத்து முதலிய கலைகள் உருவாயின. சமூக உறவு என்பது ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் உள்ள உறவு. ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் உள்ள உறவு. ஒரு குடும்பத்திற்கும் இன்னொரு குடும்பத்திற்கும் உள்ள உறவு என்று அத்துணை உறவுகளையும் ஒருங்கிணைக்கும் சொல்லாட்சியாகும். சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்த இத்தகைய நிகழ்த்து கலைகளே ஊடகங்களாகச்  செயல்பட்டன.

    மேலும் ஊசல், அலவனாட்டு, பொய்தலாடல் முதலிய மகளிர் விளையாட்டுகளைப் போலவே குரவைக் கூத்தும் சிறந்த பொழுது போக்காக விளங்கியது என்று பாக்கியமேரி குறிப்பிடுவார்.8

    குரவை, பழந்தமிழர் இசைக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. சிறுபறை, தொண்டகப் பறை, ஆம்பற் குழல், தண்ணுமை என்று பலவித இசைக்கருவிகள் குரவையில் பயன்பட்டன.

    முல்லைக்கலியில் குரவைக் கூத்து

    ஏறு தழுவுதல் நடந்து முடிந்தபின் ஊர்மன்றத்தில் குரவைக் கூத்து நடைபெறும். முல்லைக் கலியில் ஊர் மன்றமாவது சிறுகுடி என்றும் தாதெரு மன்ற என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குரவைக் கூத்தாடும் மகளிர், ஏறுகளைத் தழுவியடக்கிய ஆயர்குல இளைஞர்கள் அணிந்துள்ள மாலை, அவர்களின் தோளாற்றல், ஏறுகளை அடக்கிய அவர்தம் ஆண்மைச் செயல், அவ்வீரர்களுக்கு மனைவியராகப் போகும் மங்கையரின் புன்முறுவல் தவழும் இன்முகங்கள், அவர்தம் மென்மையான தோள்கள் முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடுவர். அதனை,

    “பாடுகம் வம்மின் பொதுவன் கொலையேற்றுக்

    கோடு குறிசெய்த மார்பு”9

    என்றும்,

    “பண்ணமை யின்சீர்க் குரவையுள் தென்கண்ணித்

    திண்டோள்திறலொளி மாயப்போர் மாமேனி

    அந்துவ ராடைப்பொதுவனோ டாய்ந்த

    முறுவலாள் மென்றோன்பா ராட்டிச்சிறுகுடி

    மன்றம் பரந்த துரை”10

    என்றும் முல்லைக் கலிப்பாடல்கள் உணர்த்துகின்றன.

    தம்மை விரும்பும் ஆயர்குல இளைஞர் ஏறுதழுவித் தம்மை மணக்க முயலாது காலம் தாழ்த்துவதை அறிந்த ஆயர்குல மங்கையர், அவர்கள் விரைவில் ஏறுதழுவித் தம்மை மணக்க முன்வர வேண்டும் என்னும் கருத்தமைய பாடிக் குரவையாடுவதும் உண்டு.

    மேலும் குரவைக் கூத்தாடுங்கால் தம் குலக் கடவுளாகிய திருமாலையும் அவர் உறையும் கானகத்தையும், தாம் வாழும் நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை வாழ்த்திப் பாடுவதையும் ஆய மகளிர் தம் குலமரபாகக் கொண்டிருந்தனர்.

    இதனை,

    “குரவை தழீஇயாம் மரபுளி பாடித்

    தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்

    மாசில்வான் முந்நீர் பரந்த தொன்னிலம்

    ஆளும் கிழமையொடு புணர்ந்த

    எங்கோ வாழியரிம் மலர்தலை யுலகே”11        

    என்ற முல்லைக்கலியடிகள் புலப்படுத்துகின்றன.

    சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலை செய்யப்பட்ட பின்னர் ஆயர்சேரியில் நேர்ந்த தீய நிமித்தங்களால் துன்பம்  நேரப் போவதை உணர்ந்து, ஆயர்குல மக்களுக்கும் ஆநிரைகளுக்கும் ஏற்பட்ட துயரத்தை நீக்குவதற்குத் தம் குலதெய்வமான திருமாலை வேண்டி குரவைக் கூத்தாடினா் என்பதை,

    “…….. ….ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்

    தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல்

    நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவை ஆடுதும்

    யாம்என்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே”12

    என்ற பாடலடிகளால் அறிய முடிகின்றது.

    ஏறுதழுவி வென்ற இளைஞர்களும், அவரை மணக்கப் போகும் மங்கையரும் கைகோர்த்துக் குரவைக் கூத்தாடி மகிழ்வதுமுண்டு.

    “பயிலிதழ் மலருண்கண்

    மாதர் மகளிரும் மைந்தரு மைந்துற்றுத்

    தாதெரு மன்றத் தயர்வர் தழூஉ”13 

    திருமணத்திற்குப் பின் மனைவியர் தம் கணவன்மாரின் கையொடு கைகோர்த்து ஆடி மகிழ்வதும் உண்டு.

    “தம்புல ஏறு பரந்தர உய்த்ததம்

    அன்புறு காதலர் கைபிணைந் தாய்ச்சியர்

    இன்புற் றயர்வர் தழூஉ”14

    ஆயமகளிர் ஏறுகளை அடக்கிய தம் கணவன்மாரின் பெருமைகளை ஊரார் புகழ்ந்து பேச, அதைத் தாம் கேட்டு இன்புற வேண்டும் எனவும் பாடிக் குரவைக் கூத்தாடுவர். இதனை,

    “கொல்லேறு கொண்டான் இவள்கேள்வன் என்றூரார்

    சொல்லுஞ்சொற் கேளா அணைமாறியாம் வருஞ்

    செல்வமெங் கேள்வன் தருமோவெங் கேளே”15

    என்ற அடிகளால் உணரலாம்.

    பழந்தமிழர்கள் இறைவனை வழிபடுவதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் கூத்துகளை நிகழ்த்தி வந்தனர். குரவைக் கூத்து, துணங்கைக் கூத்து, பிணைக் கூத்து போன்ற கூத்துகளை நிகழ்த்தினர் என்பதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. குரவைக் கூத்தானது பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்டதாக இருப்பினும், அன்றைய இளைஞர்களின் ஆண்மைச் செயலை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அக்கால மங்கையர்கள், தம்மை விரைவில் மணந்து கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக தூது விடுத்துக் குரவைக் கூத்தாடினர். ஏறு தழுவிய வீரம் நிறைந்த ஆண்களை மணப்பதே பெண்களுக்குப் பெருமையாக இருந்தது. ஊரார் தம் கணவரைப் புகழ்ந்து பேசுவதையே விருப்பமாகக் கொண்டு குரவைக் கூத்தாடினர் என்பது அறியலாகிறது.

    இன்றைய காலக் கட்டத்தில் கூத்தென்பதை அம்மன் கோவில் விழாக்களில் மட்டுமே காண முடிகின்றது. அக்கூத்திலும் பழைய புராணக் கதைகளைக் கதைக் களமாக்கி கூத்தாடி வருகின்றனர். இன்றைய சூழலுக்கு ஏற்ப இயற்கையைப் பாதுகாத்தல், உலக வெப்பமயமாதலைத் தடுத்தல், பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்தல், வனவிலங்குகளைப் பாதுகாத்தல், மனித நேயத்தை வளர்த்தல் போன்ற கருதுகோள்களை மையமாக வைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் கூத்துக் கலையும் அழியாமல் வளரும். நமது சமுதாயமும் மேன்மை அடையும்.

    குறிப்புகள்

    1. தமிழ்ப் பேகராதி தொகுதி -2 ப. 1012.
    2. ஆ.சிங்காரவேலு முதலியார், அபிதான சந்தாமணி, ப. 579.
    3. முல்லைக்கலி 103:03
    4. ஜெ.ஸ்ரீசந்திரன், சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, 65-66.
    5. பதிற்றுப்பத்து, 52:4-5.
    6. புறம். 129:2-3.
    7. மலைபடுகடாம், 320- 323.
    8. காலந்தோரும் தமிழர் கலைகள், முனைவர் பாக்கியமேரி, ப. 69.
    9. முல்லைக்கலி, 104:63-64.
    10. மேலது, 120:35-39.
    11. மேலது, 103:75-79.
    12. ஜெ.ஸ்ரீசந்திரன், சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, 22-25.
    13. மேலது, 103:60-61.
    14. மேலது, 106:32-33.
    15. மேலது, 106: 43-45.

    துணைநூற்பட்டியல்

    1. ஆலிஸ். அ முனைவர் (உரை), பதிற்றுப்பத்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை -98, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007.
    1. கதிர்முருகு டாக்டர்,  பத்துப்பாட்டு, சாரதா பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை -14, முதற் பதிப்பு -ஜுன் 2009.
    1. சிங்காரவேலு முதலியார் ஆ., அபிதான சிந்தாமணி, சாரதா பதிப்பகம்,  திருவல்லிக்கேணி, சென்னை, முதற் பதிப்பு – 2004

          4 . நச்சினார்க்கினியர்  (உரை), கலித்தொகை, கழக வெளியீடு, மூன்றாம் பதிப்பு–1999

    1. பாக்கியமேரி, எஃப். முனைவர்., காலந்தோறும் தமிழர் கலைகள், வேந்தன் பதிப்பகம்,  சென்னை, முதற் பதிப்பு – 2005.
    1. ஸ்ரீசந்திரன் .ஜெ, சிலப்பதிகாரம், வர்த்தமானன் பதிப்பகம், 141, உஸ்மான் சாலை, தி.நகர், ஒன்பதாம் பதிப்பு- ஆகஸ்டு 2001.

    ———————————————————————————————————-

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆயர் குடியில் குரவைக்கூத்து ஆடும் முறை மற்றும் தேவைகள் குறித்துக் கட்டுரையாளர், சங்க இலக்கியப் பாடல்கள் வழி விளக்க முயன்றுள்ளார். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்ற தொன்மையான இலக்கியங்களில் குரவைக் கூத்திற்கான பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழர் பண்பாட்டில் குரவைக் கூத்தின் முக்கியத்துவம் பற்றி ஆய்வில் விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயர்களின் வாழ்வியல் நிகழ்வுகளுடன் குரவைக் கூத்து எங்ஙனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை ஆய்வாளர் நல்ல முறையில் பதிவு செய்துள்ளார். சம காலத்தில் குரவைக் கூத்தை விழிப்புணர்வு சார்ந்து பயன்படுத்தினால் கலையும் வாழும் மக்களுக்கும் பயன் கிடைக்கும் என்ற ஆய்வு முடிவு நன்று. மேலும் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது, கலைக்கும் சமூகத்திற்குமான தொடர்புகள் குறித்து விவாதிப்பது தேவையான ஒன்று. இதையும் ஆய்வாளர்கள் மனத்தில் கொள்ள வேண்டும்.

    ———————————————————————————————————-

    Share
  • (Peer Reviewed) நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

    முனைவா் பு.பிரபுராம்
    முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை,
    காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

               நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

    யசோதர காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சண்டமாரி (நாட்டார் தெய்வம்) வழிபாட்டு மரபுகளையும் சமண தத்துவங்களையும் ஒப்பிட்டு ஆராய்வது, இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். “நிறுவன மயமாக்கப்பட்ட சமயமான சமணம் தன் தத்துவத்தின் துணைகொண்டு நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கீழ்நிலைக்குத் தள்ளி, நாட்டாரைச் சமணச் சார்புடையோராக மாற்றியது” என்ற கருதுகோள் இவ்வாய்வில் கையாளப்பட்டுள்ளது. இக்கட்டுரைக்கான முதன்மைச் சான்றாதாரம், யசோதர காவியம். இக்காவியம், ஐந்து சருக்கங்களில் மொத்தம் 330 பாடல்களைக் கொண்டுள்ளது.


    சண்டமாரி வழிபாடு

    ஓதயநாட்டு இராசபுரத்து அரசனான மாரிதத்தன், அவந்திநாட்டு உஞ்சயினியின் அரசனான யசோதரன், அவன் தாய் சந்திரமதி ஆகிய அரச மரபினரும் பொதுமக்களும் சண்டமாரிக்கு உயிர்ப் பலியிட்டு விழா எடுத்த காட்சிகள் யசோதர காவியத்தில் உள்ளன. அக்காட்சிகளிலுள்ள கதையாடல்கள், சண்டமாரி வழிபாட்டில் நிகழ்த்தப்படும் சடங்குகளையும் அவ்வழிபாடு குறித்த நம்பிக்கைகளையும் அளிக்கின்றன.

    ஆண்டுதோறும் வேனிற்காலத்திலும் ஐப்பசித் திங்களிலும் காளிதேவிக்கு விழா எடுக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. அவ்வாறு விழா நிகழ்த்தப்படாவிடின், தேவியானவள் மனம்திரிந்து வெகுளுவாள், துன்பத்தைச் செய்கின்ற நோய்கள் பலவற்றையும் உண்டுபண்ணுவாள், உயிரைக் கொள்ளுதற்குரிய தீங்குகள் பலவற்றையும் செய்வாள், மேலும் பல தீங்குகளும் வந்தடையும் என்பது போன்ற நம்பிக்கைகளை மக்கள் கொண்டிருந்தனா்.

     

              “என்றும் இப்பரு வத்தினோ டைப்பசிச்

               சென்று தேவி சிறப்பது செய்துமஃ

               தொன்றும் ஓரல மாயினம் ஒன்றலா

               நன்ற லாதன நங்களை வந்துறும்” (யசோ.15)

              “நோவு செய்திடும் நோய்பல ஆக்கிடும்

               ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்

               தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்

               காவன் மன்ன! கடிதெழு கென்றனா்” (யசோ. 16)

    ஐப்பசி மாதத்துப் பூா்ணிமைக்கு முன்னதாகிய அட்டமிக்குப் பின்வரும் நாள்களுள் குற்றமில்லாது நிலவும் செவ்வாய்க்கிழமையில் உயிர்ப்பலியிட்டு காளிதேவியின் வீரகண்டையணிந்த திருவடியில் வீழ்ந்து வணங்கினால், அவள் அப்பலியேற்று, பலியிடுவோர்பால் விருப்பமுற்று அவா்க்குத் தீங்கு வராது காப்பாள் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவி வந்தது.

                          “ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கப் பின்னா்

                        மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற்

                        கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளாய்

                        மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு மென்றாள்”             

                                                                                                                                                                 (யசோ.136)

    மேலும், மக்கள் காளிதேவி கோவிலை வலம்வந்து தங்கள் இடா்களைய வேண்டுமென்று வணங்கும் முறைமையைக் கொண்டிருந்தனா். அத்துடன் மயில், கோழி, பன்றி, ஆடு, எருமை முதலிய விலங்கினங்களில் இரட்டைகளையும்(Animal Sacrifice) மனிதருள் இரட்டையரையும்(Human Sacrifice) பலியிட்டு வணங்கும் சடங்கு சண்டமாரிக்கு உகந்ததாகக் கருதப்பட்டது.

                “மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்

               தேவி யெம்மிடா் சிந்துக என்றரோ” (யசோ.19)

              “மன்னன் ஆணையின் மாமயில் வாரணம்

               துன்னு சூரகம் ஆடெரு மைத்தொகை

               இன்ன சாதி விலங்கி லிரட்டைகள்

               பின்னி வந்து பிறங்கின கண்டனன்” (யசோ. 20)

              “யானிவ் வாளினின் மக்களி ரட்டையை

               ஈன மில்பலி யாக இயற்றினால்

               ஏனை மானுயா் தாமிவ் விலங்கினில்

               ஆன பூசனை யாற்றுதல் ஆறெனா” (யசோ. 21)       

    இவ்வாறு ஆண்டுதோறும் மக்களால் கொண்டாடப்படும் தெய்வம், சண்டமாரி. மனிதப் பலி, விலங்குப் பலி ஆகிய பலிகளை ஏற்று அருள்தரும் நாட்டார் தெய்வமாக அவள் விளங்கினாள். சண்டமாரிக்கு விழா எடுப்பின் தீமையகன்று, நன்மை வந்துசேரும் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டிருந்தனா்.

    சண்டமாரி ஒரு துருத்தேவதை

              நாட்டார் தெய்வமான சண்டமாரியின் உருவச் சிலையைப் பாவத்தின் (தீவினையின்) வடிவம் என்று காவிய ஆசிரியா் கற்பிதம் செய்கிறார்.

                         “பாவ மூா்த்தி படிவ மிருந்தவத்

                        தேவி மாடம்…” (யசோ. 19)

    மேலும் சண்டமாரி மிகுந்த கோபமுடையவள், நடுநிலைமை இல்லாதவள், அவள் மெய்ப்பொருள்களைக் கேட்டறிந்த கேள்வியறிவும் நுண்ணிய நூல்களைக் கற்ற கல்வியறிவும் இல்லாத கீழ்மக்கள் வழிபடும் துருத்தேவதை(கொடிய தெய்வம்) என்றும் பதிவு செய்கிறார்.

                       “சண்டகோபி தகவிலள் தத்துவம்

                        கொண்ட கேள்வியுங் கூரறி வுமிலாத்

                        தொண்டா் கொண்டு தொழுந்துருத் தேவதை

                        சண்ட மாரி தனதிட மெய்தினான்” (யசோ. 18)

    காவிய ஆசிரியா் சண்டமாரியின் பண்பினைக் கொடியதெனக் கூறுவதோடு, அத்தெய்வத்தை வழிபடும் தொண்டா்களை கல்வியறிவும் கேள்வியறிவுமற்றோர் என்றும் கற்பிதம் செய்கிறார்.

    காளி வழிபாடு தீது என்ற சித்திரிப்பு

    ஓதயநாட்டு மக்களின் விழாவயா்வு குறித்த அவாவிற்கிணங்கி மாரிதத்தன் (அரசன்) நகரின் தென்திசைக்கண் உள்ள காளிதேவி கோயிலைச் சென்றடைந்தான். அவன் சென்ற செய்தியைச் சித்திரிக்கும் காவிய ஆசிரியா், “காளிக்கு விழா எடுக்கலாம் என்று நகரமாந்தா் கூறியவுடன் அருளறமாகிய நன்னெறிக்கண் சென்று அறிவு தெளியாதவனாதலால் இச்செயல்(விழா) தீது என்று கூறாமல் இது நல்லதே என்று நகர மாந்தரிடம் மாரிதத்தன் உரைத்தான்” என்கிறார்.

                         “என்று கூறலும் ஏதமி தென்றிலன்

                        சென்று நல்லறத் திற்றெளி வின்மையால்

                        நன்றி தென்றனன் நன்னகரப்புறத்

                        தென்தி சைக்கண் சிறப்பொடு சென்றனன்” (யசோ.17)

    இதன்வழி, காளி வழிபாடு தீது தரும் என்ற சித்திரிப்பினைக் அவா் வழங்குகிறார். மேலும், காளி வழிபாடு செய்வோர் நன்னெறிக்கண் சென்று அறிவு தெளியாதோர் என்றும் உரைக்கிறார்.

    உயிர்ப்பலி வழிபாட்டைக் காட்டிலும் அருக நெறி உயா்ந்தது

    ஓதய நாட்டு மக்கள் கொற்றவைக்கு விலங்குகளுள் இரட்டையைப் பலியிடக் கருதி நிற்க, அரசன் மாரிதத்தன் மக்களுள் உடலியற் குறையற்ற இரட்டையரைப் பலியிடக் கருதினான். அத்தகு இரட்டையரைக் கொணா்க என்று சண்டகருமனுக்கு ஆணையிட, அச்சண்டகருமன் சுதத்த முனிவரின் சங்கத்துள் துறவோராய் இணைந்திருந்து, பிச்சையேற்பதற்காய் நகா்க்குள் நுழைந்த இரட்டையராகிய அபயருசியையும் அபயமதியையும் பலிக்கெனக் கொணா்ந்து பலிபீடத்தின் முன் நிறுத்தினான். பலிக்கு முன் “தங்கட்கு இறைவனாகிய வேந்தன் நிலத்தின்மேல் நீண்டகாலம் வாழ்வானாக என்று வாழ்த்துக” என்று சூழ்ந்திருந்த தளபதி முதலாயினோர் அவ்விரட்டையரைப் பணித்தனா். வறிய புன்முறுவலுடன் பின்வருமாறு மன்னனை அவா்கள் வாழ்த்தத் தொடங்கினா்.

                         “மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா

                        தறவியன் மனத்தை யாகி ஆருயிர்க் கருள்ப ரப்பிச்

                        சிறையென பிறவி போக்குந் திருவறம் மருவிச் சென்று

                        நிறைபுக ழுலகங் காத்து நீடுவாழ் கென்று நின்றார்” (யசோ.60)

    உலகுயிர்களை வருத்தாமல் அருளறம் நிறைந்த மனமுடையனாய் எல்லா உயிர்களுக்கும் அருளைச் செய்து, உயிர்க்குச் சிறைபோல்வதாகிய பிறப்பினைக் கெடுக்கும் சினேந்திரன் கூறிய அறத்தைக் கடைப்பிடித்து ஒழுகி, அழியாப் புகழை நிறுவி, உலகத்தை இனிது காத்தளித்து, நெடிது வாழ்வாயாக என்று அபயருசியும் அபயமதியும் மன்னனை வாழ்த்தினா். பிறவியானது உயிர்க்குச் சிறைபோன்றது. அவ்வாறு மீண்டும் பிறத்தலை ஒழிக்க வேண்டுமாயின் சமண அறங்களைக் கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்றும் பலி வழிபாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும் இப்பகுதி வலியுறுத்துகிறது.

    யசோதரனும் சந்திரமதியும் பலி வழிபாட்டால் விலங்கு கதியடைதல்

    யசோதரன் தனக்குத் தீய நிமித்தங்கள் நிகழ்ந்ததாகத் தன் தாய் சந்திரமதியிடம் கூறுகிறான். உனக்குத் தெய்வமான காளிதேவிக்கு நீ உயிர்ப் பலியிட்டு வழிபடின், அத்தீயநிமித்தம் நீங்கி, நல்லவை நிகழும் என்று சந்திரமதி உபாயம் உரைக்கிறாள். யசோதரன் உயிர்க்கொலை செய்யின், மறுமையில் தேவ கதியடைவதற்கான தகுதி அகலும், இடா்பல விளையும் என்கிறான். ஆகவே காளிக்கான உயிர்ப்பலியிடலை மறுக்கிறான்.

                          “யானுயிர் வாழ்த லெண்ணி யெளியவா் தம்மைக் கொல்லின்

                        வானுய ரின்ப மேலால் வருநெறி திரியும்….” (யசோ.140)

                       “இன்றுயிர் கொன்ற பாவத் திடா்பல விளையு மேலால்” (யசோ. 141)

    உயிரைக் கொல்லாது மாவால் கோழிசெய்து அதனைச் சண்டமாரிக்குப் பலியிடலாம் என்று சந்திரமதி பதில் உரைக்கிறாள். இவ்வுரையாடலில் யசோதரனின் மனவோட்டமாக ஒரு செய்தியைக் காவிய ஆசிரியா் பதிவு செய்கிறார். “உயிருடைய பொருளொன்றின் வடிவினைச் செய்து அதனைப் பலியிடுவதும் உயிர்க்கொலையேயாம் என்னும் ஓா் அருவருப்பினை யசோதரன் தன் மனத்தே கொண்டிருந்தான்” என்கிறார்.

                “உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்கொலை போலு மென்னும்

               பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவில் மன்னன்

               செயிர்த்தவ ளுரைத்த செய்கை செய்தவற் கிசைந்த தென்றான்

               அயிர்ப்பதென் அறத்தின் திண்மை யறிவதற் கமைவி லாதான்” (யசோ.144)

    இவ்வாறு, விலங்குயிர்களைப் பலியிடுவதற்குப் பதிலாக, மக்களால் பதிலீடாகக் கருதப்படும் பொருள்களைப் பலியிடுவதுகூட (Substitute for animal sacrifice) அருவருப்பான செயல் என்ற சித்திரிப்பினைச் சமணம் வழங்குகிறது.

    பின்பு யசோதரன் விலங்குப் பலிக்குப் பதிலீடாகிய பாவனைப் பலிக்கு ஒப்புகிறான். சண்டமாரியை வணங்கிப் படைக்கப்பட்ட மாக்கோழியைத் தலையறிந்து அவன் பலியிட, அது கூவித் துடித்து வீழ்ந்து இறக்கிறது. இதனைக் கண்டு மனம்பொறாத யசோதரன், துறவுபூணும் எண்ணம் கொண்டான். ஆயின் யானைப் பாகனுடன் கள்ளவொழுக்கம் புரியும் யசோதரனின் மனைவி அமிர்தமதி, யசோதரனையும் அவன் தாய் சந்திரமதியையும் உணவில் விடம்கலந்து கொன்றுவிடுகிறாள். அவ்விருவரின் உயிர்களும் விலங்கு கதியை அடைகின்றன. யசோதரனின் மகன் யசோமதி, அவந்திநாட்டு உஞ்சயினிக்கு அரசனாகிறான்.

    யசோதரன், விந்தமலைச் சாரலில் மயிலாகப் பிறக்கிறான். சந்திரமதி, உஞ்சயினி நகா்ப்புறத்துச் சேரியில் நாயாகப் பிறக்கிறாள். அம்மயிலும் நாயும் அரசனாகிய யசோமதியின் அடைக்கலமாக வளா்கின்றன. ஒருநாள் மயில், அட்டபங்கனைக் கண்டு, அவன் கண்களைக் குத்திவிட்டுப் போகிறது. அதனால் அமிர்தமதி அதனைக் கல்லெறிந்து வீழ்த்த, நாய் அம்மயிலை வாயால் கவ்விக் கொன்றுவிடுகிறது. அதுகண்ட அரசன் ஆராயாது, நாயைக் கொல்கிறான். பின் மயில் முள்ளம்பன்றியாகப் பிறந்துழலும்போது, நாய் கருநாகமாய் வரக்கண்டு அதைக் கொல்கிறது. அப்பன்றியைச் சிங்கம் என்று கருதிய கரடி, பாய்ந்து கொன்றுவிடுகிறது. பன்றி மீனாய்ப் பிறக்க, கருநாகம் முதலையாய்ப் பிறக்கிறது. அரண்மனையில் பணியாற்றும் கூனியை முதலை கொல்ல, முதலையை அரசன் கொன்றுவிடுகிறான். வலையிற்பட்டு மீன் மாள்கிறது. முதலை ஒரு பெண்ணாடாய்ப் பிறக்க, மீன் ஆணாடாய்ப் பிறந்து அப்பெண்ணாட்டைக் கூடுகிறது. அதனைக் கண்ட கிடாவொன்று ஆணாட்டை மோதிக் கொல்ல, அது பெண்ணாட்டின் கருவில் தங்கிப் பிறக்கிறது. வேட்டைக்குச் சென்ற யசோமதியால் தாயாடு கொல்லப்படுகிறது. தகா் மட்டும் புலைச்சேரியில் வளா்கிறது. அத்தகா் யசோமதியின் முன்னோர் சிரார்த்தத்திற்காகக் கொல்லப்படுகிறது. யசோதரனாகிய அந்த ஆடு, மீண்டும் ஆடாகப் பிறக்கிறது. சந்திரமதியாகிய ஆடு, எருமையாய்ப் பிறக்கிறது. எருமை அரசனின் மாவை முட்டிக் கொல்ல, அரசன் அவ்வெருமையைக் கொன்றுவிடுகிறான். அமிர்தமதியின் உணவிற்காகத் தகா் கொல்லப்படுகிறது. பின்பு யசோதரனும் சந்திரமதியும் நகா்மருங்கில் உள்ள பறைச்சேரியில் கோழிகளாகப் பிறக்கின்றனா். யசோமதி அக்கோழிகள் இரண்டையும் கண்டு விருப்பமுற்று அரண்மனைக்குக் கொணா்ந்து வளா்க்கிறான். இறுதியில் அக்கோழிகள் இரண்டும் யசோமதி எய்த அம்பினால் இறந்துபட்டு யசோமதியின் மனைவியான புட்பாவலியின் மணிவயிற்றில் அபயமதியாகவும் அபயருசியாகவும் பிறப்பெய்துகின்றன.

    யசோதர மன்னனும் அவன் தாய் சந்திரமதியும் விலங்கு கதியில் பிறந்து அடைந்த இவ்வகைத் துன்பங்களுக்கு, முற்பிறப்பில் அவா்கள் மாவால் செய்யப்பட்ட கோழியொன்றைக் கொன்றதே காரணமாகும் என்று காவியம் கற்பிதம் செய்கிறது.

                “இன்னுமீ தைய கேட்க யசோமதி தந்தை யாய

               மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக்

               கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்பம்

               பின்னவா் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ” (யசோ.250)

    இவ்வாறு பலிவழிபாட்டால் மறுமையில் தேவ கதியடைவதற்கான தகுதி அகன்று, உயிர்க்குத் தீமை விளையும் என்ற தத்துவாத்தச் சிந்தனையைக் காவியம் வழங்குகிறது. விலங்குப் பலிக்குப் பதிலீடான பாவனைப் பலியால் யசோதரனும் சந்திரமதியும் மறுமையில் விலங்குகளாகப் பிறந்து பல்வேறு துன்பங்களை அடைந்தனா் என்றும் உரைக்கிறது. ஆகவே இத்தகு பலி வழிபாட்டுடன் இணைந்த நாட்டார் தெய்வ வழிபாட்டை விட்டகன்று, சமண நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோளைக் காவியம் விடுக்கிறது.

    முடிவுகள்

    • தத்துவார்த்த அடிப்படையில் நாட்டார் தெய்வ வழிபாடு கீழானது என்று யசோதர காவியம் கற்பிதம் செய்கிறது. நாட்டார் தெய்வத்தின் உருவமானது பாவத்தின் வடிவம் என்ற மாயத் தோற்றத்தினை உருவாக்க, அக்காவியம் முயன்றுள்ளது.
    • நாட்டார் தெய்வத்திற்கு உயிர்ப்பலியிட்டு வழிபடல் பாவம் (தீவினை) என்ற கருத்தியலை மக்கள் மனத்தில் விதைப்பதற்காகவே யசோதர காவியம் படைக்கப்பட்டுள்ளது. அப்பாவத்தால் மறுமையில் உயிர்க்குத் தீய பலன் கிட்டும் என்றும் காவிய ஆசிரியா் எச்சரிக்கிறார். இத்தத்துவார்த்த அச்சுறுத்தலுக்கு அஞ்சியோர், நாட்டார் வழிபாட்டை விடுத்து, சமண சமயத்திற்கு மடைமாறிய காட்சிகள் பல, காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சான்றாக மாரிதத்தன், சண்டமாரி வழிபாட்டை விட்டகன்று சமண நெறியேற்றதைக் கூறலாம்.
    • மேலும், நாட்டார் தெய்வத்திற்கு உயிர்ப் பலியிடுதலைப் பாவம் (தீவினை) என்று கருதிய மக்கள், அதற்குப் பதிலீடாக (Substitute for animal sacrifice) உயிரற்ற பொருட்களைப் பாவனைப் பலியாக அளித்தனா். அதன்வழி, தங்கள் தெய்வ வழிபாட்டைத் தொடா்ந்தனா். அவ்வாறு நாட்டார் வழிபாட்டில் நிலைநின்ற மக்களையும் சமணம் தன்வழிக்குத் திருப்ப முயன்றுள்ளது. அதற்கு யசோதரனின் கதையைப் பக்கபலமாக அமைத்துக்கொண்டது.

    முதன்மைச் சான்றாதாரம்

    * யசோதர காவியம் மூலமும் உரையும் – ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (உரையாசிரியா்),  2009, சாரதா பதிப்பகம், சென்னை.

    =======================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    முதற்கண் முனைவர் பு.பிரபுராம் அவர்களை வாழ்த்தி, என் மதிப்பாய்வை வழங்குகிறேன்.

    ஆய்வாளர் தன் ஆய்வுக் கருவாக, “நிறுவன மயமாக்கப்பட்ட சமயமான சமணம் தன் தத்துவத்தின் துணைகொண்டு நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கீழ்நிலைக்குத் தள்ளி, நாட்டாரைச் சமணச் சார்புடையோராக மாற்றியது” என்ற கருதுகோளை முன்வைக்கிறார். இக்கூற்று சற்று அதிகப்படியாகத் தோன்றுகிறது.

    யசோதர காவியத்தின் ஆசிரியர், தான் நூல் ஆக்கியதற்கான காரணத்தைத் தொடக்கத்தில் கூறியதை (நூல் நுவல் பொருள் – பாடல் எண் – 4) இவ்வாய்வாளர் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. யசோதரம் ஆசிரியர் இப்பாட்டில், “வெவுரு செய்யும் வினைப்பய னிற்றேனத் தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே” என்று நூல் யாத்ததற்கான காரணத்தை தெரிவிக்கிறார். உயிர்களுக்கு வினைவரும் வழியை அடைப்பதையும், தீவினை இதுவென்று தெரிவித்து, நல்வினைப் பயனை அடைவிப்பதற்கும் வடநாட்டில் வழங்கிய இக்கதையைத் தமிழில் ஆக்கியிருக்கிறார். இதுவே இந்நூலின் நோக்கமாகவும், அந்நோக்கத்தின் ஊடே பயணிக்கும்போது, தீவினைக்குக் காரணமானவற்றை அகற்ற, கதைக்கு ஏற்றவாறு சில புனைவுகள் மூலம் கொல்லாமை அறம் சூழ மாந்தர்களைப் படைத்து தன் நூலின் நோக்கமான “பாவனையின் மூலம் செய்யும் செயலும் தீவினைக்கு வித்தாகும்” என்பதை அறிவுறுத்துகிறார்.

    அப்படித்தான் மனித, மிருக பலியீடு என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி நாட்டார் மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்காக இந்நூல் எழுதியிருப்பது போன்று தன் ஆய்வைக் குறித்திருப்பது, சமண அறத்தையும், சமண இலக்கியங்களின் நோக்கத்தையும் ஆய்வாளர் எளிதில் உள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.

    இவ்வாய்வாளர் இக்கட்டுரையின் தலைப்பை “ சமணம் மறுக்கும் நாட்டார் வழிபாட்டு மரபு” என்று தலைப்பிட்டிருந்தால் நன்றாக அமையும். என் மதிப்பாய்வு, ஆய்வை குறைகூறும் நோக்கில் அமைந்ததன்று.

    =======================================================

    Share
  • (Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்

    முனைவர் ஆ.ராஜா
    அருங்காட்சியகத் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்-10

    கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்
    (தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகச் சான்றுகளின் அடிப்படையில்)

    கொடுமணல் என்ற ஊர், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் காவிரியாற்றின் கிளை ஆறான நொய்யல் ஆற்றின் வடகரையில் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து, இவ்வூரைக் ‘‘கொடுமணம்’’ என்று குறிப்பிடுகிறது. இத்தகைய சங்க கால இலக்கியங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் கொடுமணலில் 1985-1986ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய அகழாய்வில் கண்டறியப்பட்ட பெருங்கற்காலத்தைச் சார்ந்த  தடயங்கள் பற்றியும், குறிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ள கொடுமணல் அகழாய்வுத் தடயங்கள் குறித்தும்  இக்கட்டுரை விளக்குகிறது.

    சங்க காலத்தில் அரிய கற்களைக் கொண்டு அணிகலன்களை உருவாக்கக்கூடிய தொழிற்கூடமாகக் கொடுமணல் விளங்கியிருந்தமையைக் ‘‘கொடுமணம் பட்ட வினை மான் அருங்கலம்’’ என (பதிற்றுப்பத்து 74) அரிசில்கிழாரும், ‘கொடுமணம் பட்ட நன்கலம்’ (பதிற்றுப்பத்து 64) எனச் சங்கப் புலவர் கபிலரும் குறிப்பிடுவதன் வாயிலாக அறிய முடிகிறது. இவ்வூர், சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூவூரையும், கேரளத்திலுள்ள துறைமுகப் பட்டினமான முசிறிப்பட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது.

    தொல்பொருட்கள்

    கொடுமணலிலுள்ள வாழ்விடப் பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட போது, அகழாய்வுக் குழிகளின் பல நிலைகளில் சுவரின் அடிப் பகுதிகள், வீட்டுத் தரை எச்சங்கள், செங்கற்கள், கூரை ஓடுகள், மரத்தூண் ஊன்றப்பட்ட குழிகள், அடுப்புப் பகுதிகள் ஆகியவற்றோடு கொல்லர் உலைகளும் (இரும்பு உருக்கு உலைகள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகழாய்வில் பல உலைகள், வட்ட வடிவில் அமைந்திருந்ததோடு, உலைகளின் கழிவு அல்லது கசடு அதிகளவில் காணப்பட்டன. இவ்வுலைகளில் சில, செம்பு உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும், கொடுமணல், ரோமானிய நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தமைக்கான பல சான்றுகள் இங்கே கிடைத்துள்ளன. குறிப்பாக, மேற்பரப்பில் கிடைத்த ரோமானியக் காசும், அகழாய்வுக் குழிகளில் கிடைத்த ரோமன் வகை ‘ரூலெடட் மண்கல’ச் (Rouletted Pottery) சில்லுகளைக் குறிப்பிடலாம்.

    படம் : 1 & படம் : 2
    கொடுமணல்: குறியீடுகள் பொறித்த கறுப்பு-சிவப்பு கிண்ணம் மற்றும் சிவப்பு பானை ஓடு
    (நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

    மேலும், இரும்பாலான கூர்முனைகள், கத்திகள், அரிவாள்1, செம்புப் பொருட்கள், கார்னீலியன் மணிகள், பச்சைக்கல் (Beryl), நீலம் (sapphire), வைடூரியம் (lapis lazuli), ஜாஸ்பர் (Jasper), அகேட் (agate), கார்னட் (carnet) ஆகிய அரிய கல்மணிகளும் கிடைத்துள்ளன. சங்கு அறுக்கும் தொழில் நடைபெற்றதற்கான தடயங்களான சங்கு வளையல் துண்டுகளும் (படம்:5) கிடைத்துள்ளன. இவ்வகழாய்வில் ஏராளமான சூதுபவள மணிகள் கிடைத்துள்ளன. அம்மணிகளில் சில, தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரிய வகை சூதுபவள மணிகளைப் பெருங்கற்கால மக்கள் உருவாக்கியதற்கான தொழிற்கூடம் கொடுமணலில் இருந்துள்ளது என்பதை இங்கே கிடைக்கக்கூடிய மிகுதியான மணிகளின் வாயிலாக அறிய முடிகிறது. இத்தொழிற்கூடத்தில் உருவாக்கப்பட்ட மணிகள், முசிறிப் பட்டினத்தின் வழியாக மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாகப் பண்டைய மக்கள் கடல்கடந்த வணிகத்தை அறிந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    படம் : 5
    சங்கு வளையல் துண்டுகள்
    (நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

    கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வாயிலாக இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருவாக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தொழிற்கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் நின்று நிலைத்துள்ளன எனக் கா.ராஜன் கருதுகிறார். கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களை வாங்குவதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வணிகர்கள் வந்துள்ளனர். குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து வணிகர்களும் கைவினைஞர்களும் இங்கு வந்துள்ளதைத் தமிழ் மயமாக்கப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட்பெயர்களும், வணிகர் பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன.

    எல்லாவற்றிற்கும் மேலாகக் கங்கைச் சமவெளிப் பகுதியின் பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள், கங்கைச் சமவெளிப் பகுதியில் கி.மு 6ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம்மட்பாண்டம், கி.மு. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும்2. மேலும், புலிப்பொம்மை சிவப்பு, ஊதாக்கல் பதிக்கப்பட்டு அழகாகச் செய்யப்பட்டுள்ளது. சில விலங்குகளின் எலும்புகளும் பறவைகளின் எலும்புகளும் கிடைத்துள்ளமையால் இம்மக்கள் புலால் உணவை அருந்தியமை தெரிகிறது.3

    மேலும், ஈமக் காட்டில் உள்ள பெருங்கற்படைச் சின்னங்கள், நீத்தோர் நினைவாக உருவாக்கப்பட்ட கல்லறைகளாகும். இவற்றில் ஒரு சிலவே மண்ணால் செய்யப்பட்ட தாழிகளாகும். இப்பெருங்கற்படைச் சின்னங்கள் பெரிய கற்பலகைகளைக் கொண்டு, நீள்சதுரம் அல்லது சதுர வடிவில் நிலத்துக்கடியில் அமைக்கப்பட்டன. இக்கற்பலகைகள் ஒரு டன் முதல் ஆறு டன் வரை எடையுள்ளவையாகக் காணப்பட்டன. தென்னிந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் குறிப்பாகக் கல்லறைகளில் மிகப் பெரியவை கொடுமணலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இக்கல்லறைகளில் இடுதுளைகள் (Porthole) இருந்தன. கல்லறைக்குள்ளும் வெளியிலும் நீத்தோர் நினைவாகப் படைக்கப்பட்ட மட்பாண்டங்கள், இரும்பு, செம்புப் பொருள்கள், மணிகள் (Beads) ஆகியவற்றையும், வெண்மை நிறப் படிகக் கற்கள் (Quartz pieces) ஆகியவை கொண்டும் நிரப்பப்பட்டன. மேலும், கறுப்புநிறத் தாங்கிகள் (Ring stand), மூடிகள் (Lids),  கறுப்பு சிவப்பு நிறக் கிண்ணங்கள் (Bowls), குறியீடுகள் மற்றும் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கறுப்புசிவப்பு, சிவப்பு வகை மண்கலங்கள், நான்கு கால்களுடன்கூடிய சிவப்பு நிறச் சாடிகள் (Jars:படம்.4), தட்டுகள், சிறிய பெரிய இரும்பு வாள்கள் (Small and big swards), கத்திகள், அம்பு நுனிகள், ஈட்டி நுனிகள், கடப்பாரை, உளி, கம்பி, ஆணி, அரிவாள், புலிப் பொம்மை, வாணலி போன்ற வடிகட்டி, கரண்டி, ஊசி, ஊதுகுழாய், கம்பி, மோதிரம், ஒலிமணி, செம்பு மற்றும் வெண்கலப் பொருள்கள் ஆகியவை, அகழாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

    படம் : 4
    நான்கு கால்களுடன் கூடிய சாடிகள்
    (நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

    இங்கு கண்டறியப்பட்ட பொருட்களில் சில, தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பது சிறப்புக்குரியதாகும். இவ்வூரில் மிகப் பரந்த அளவில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள், உலக அளவில் பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    குறியீடுகளும் எழுத்துப் பொறிப்புகளும்

    குறியீடுகள் என்பவை, பானையின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ காணப்படும். இந்தியாவில் பானைகளில் கீறப்பட்டுள்ள குறியீடுகள் பற்றிய ஆய்வினை, 1881இல் பிரான்பில் என்ற அறிஞர் தொடங்கினார். அதன் விளைவாக இ.எச்.ஹண்ட், ஜி.யஜ்தானி, பி.கே.தாபர், பி.பி.லால் போன்ற ஆய்வாளர்கள் தோற்றம், வளர்ச்சி மற்றும் குறியீடுகளுக்கு இடையிலான தொடர்பு ஆகியவற்றை அகழாய்வுகளில் கிடைத்த பானைப் பொறிப்புகள், காசுப் பொறிப்புகள், முத்திரைகள் முதலியவற்றிலிருந்து ஆராய்ந்துள்ளனர்.4

    கொடுமணலில் தமிழ்ப் பல்கலைக்கழகம், புதுச்சேரிப் பல்கலைக்கழகம், மத்திய தொல்பொருள் அளவீட்டுத் துறை ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மட்பாண்ட ஓடுகள் பலவற்றில் கீறல் குறியீடுகளும் எழுத்துப் பொறிப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், கரூர், திருக்காம்புலியூர், உறையூர், அழகன் குளம், வல்லம் போன்ற ஊர்களிலும் குறியீடுகள் கிடைத்துள்ளன. அதே போன்று தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமான குறியீடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குறியீடுகள், பொறிப்பு பெற்ற பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் கொடுமணலில் கிடைத்த குறியீடுகள் 1456இல் 58 குறியீடுகள் தனிக் குறியீடுகளாவும், 24 அடிப்படைக் குறியீடுகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன5.

    இக்குறியீடுகள் ஏதோ ஒருவகையான தகவல்களை வெளிப்படுத்தக் கூடியவையாக இருந்திருக்க வேண்டும். எழுத்துகள் உருவாவதற்கு முன், மக்கள் தங்களின் எண்ணங்களையும் செயல்களையும், அவர்களைப் பற்றிய பதிவுகளையும் குறியீடுகள் வாயிலாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

    தமிழ் – பிராமி எழுத்துகள்

    ஆரம்ப காலத்தில், குறியீடுகள் மற்றும் ஓவியங்கள் வாயிலாக மனிதர்கள், தங்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்தி வந்தனர். அதன் பின் சிந்திக்கத் தொடங்கிய மனிதர்கள் குறியீடுகளிலிருந்து வளர்ச்சி பெற்று எழுத்துகளைக் கண்டறிந்து உருவாக்க முற்பட்டனர். பண்டைத் தமிழர்கள், கி.மு.500 வாக்கில் எழுத்துகளின் பயனை அறிந்தவர்களாக இருந்துள்ளனர். பொதுவாக இக்காலக்கட்டத்திலுள்ள எழுத்துகளைத் தமிழி அல்லது தமிழ்பிராமி என்பர். இவ்வகையான எழுத்துகள், கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வாயிலாக 500க்கும் மிகுதியாகக் கிடைத்துள்ளன6. சங்க இலக்கியங்களில் வருகின்ற பெயர்கள் இங்கு கிடைத்த பானை ஓடுகளில் காணப்படுகின்றன. குறிப்பாகச் சாம்பன் ஸீமநன்(படம்.3), கூல அந்தைய் சாம்பன் அகல், கண்ணன் ஆதன், பண்ணன், குவிரன் அதன், அந்தவன் அதன், விஸாகீ, விஸகன், அதன்7,  போன்ற எழுத்துப் பொறிப்பு பெற்ற பானை ஓடுகளைக் குறிப்பிடலாம்.

    படம் :3, கொடுமணல்: ‘சாம்பன் ஸீமநன்’ எழுத்துப் பொறித்த பானை
    (நன்றி: பேரா.கா.இராஜன்)

    இலங்கையில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் அணைக்கோட்டை என்ற இடத்தில் பெருங்கற்படைச் சின்னம் அகழ்ந்தபோது கிடைத்த முத்திரை ஒன்றில் ‘கோவேதா’ என்ற பிராமி எழுத்து உள்ளது. ஐராவதம் மகாதேவன் அவர்களால் கேரளாவிலுள்ள எடக்கல் என்ற இடத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டின் இறுதியில் ‘கடும்மி புத சேர’ என்ற சொல், தமிழ்-பிராமியில் உள்ளது நோக்கத்தக்கது.8

    இதே போன்று இலங்கையின் மிகத் தொன்மை வாய்ந்த ஊர்களுள் ஒன்றாகக் கருதப்படும் அநுராதபுரம் என்ற இடத்தில் தெரிணியகலா மற்றும் ராபின் கோனிங்காம் தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வில்  பிராகிருதம் தாங்கிய பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்கள் குறிப்பிட்ட மண்ணடுக்குகளில் கிடைத்தன. இம்மண்ணடுக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் காலக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதால் அம்மண்ணடுக்குகளில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்களின் காலமும் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டன.

    ஆயினும், பெளத்த மதம் அசோகரால் இலங்கையில் புகுத்தப்பட்ட போதுதான் பிராமி வடிவமும் அங்குப் புகுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இக்காலத்தை ஏற்றுக்கொள்வதில் அறிஞர்கள் தயக்கம் கொண்டனர். இருப்பினும், இக்கால வரையறை இதுவரை பிராமி எழுத்துகளின் காலம் தொடர்பாகக் கொண்டிருந்த கருத்தை உரசிப் பார்த்தது.

    இந்நிலையில், பொருந்தல் மற்றும் கொடுமணல் அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்களும் தமிழ்-பிராமி எழுத்துகளின் காலம் குறித்து முக்கியச் செய்திகளை நமக்கு வழங்கின. அதன் விளைவாக அறிவியல் முறைப்படி கரிமக் காலக் கணிப்பு முறையில் பொருந்தல், கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காலக் கணிப்பு செய்யப்பட்டன. இதன் வாயிலாக தமிழ்-பிராமியின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்குப் பின் நோக்கித் தள்ளப்பட்டது என்கிறார் கா.இராசன்.9

    காலக் கணிப்பு

    தொடக்க காலத்தில், எழுத்துகளின் வரிவடிவத்தின் அடிப்படையிலும், மண்ணடுக்கில் கிடைக்கின்ற பானை ஓடுகளின் அடிப்படையிலும், குகைத் தலங்களில் கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையிலும் காலக் கணக்கீடு செய்யப்பட்டது. காலப்போக்கில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் தாக்கத்தால் கரிமக் காலக் கணிப்பு முறையின் வாயிலாகக் காலம் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கா.இராசன் அவர்கள் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் காலக் கணிப்புக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிடிக் ஆய்வுக் கூடத்திற்கும், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்திற்கும் அனுப்பப்பட்டன. அவை கி.மு 408 என்ற காலக் கணிப்பை வழங்கின.

    பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துகளின் காலத்திற்கு ஏற்பக் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துகளின் காலமும் கி.மு.5ஆம் நூற்றாண்டுக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டது. இக்காலக் கணிப்பு இங்குக் கிடைத்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளாலும் உறுதிப்படுத்தப்பட்டன. அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தைக் கி.மு. 5 ம் நூற்றாண்டு என கா.இராசன் குறிப்பிடுகிறார்.10

    கொடுமணலில் முதன்முதலில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட  அகழாய்வுகளில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துப் பொறித்த பானை ஓடுகளின் காலத்தை, புதுச்சேரிப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினர் 2012 மற்றும் 2013களில் மேற்கொண்ட அகழாய்வுகளில் அகழப்பட்ட குழிகளின் மண்ணடுக்கில் கிடைத்த தழிழ்-பிராமி எழுத்துகளின் அடிப்படையிலும், மேற்குறிப்பிட்ட கரிமக் கணிப்பின்படியும் கி.மு.500 எனக் கருதலாம். இவ்வகையான அறிவியல் முறைப்படியான ஆய்வுக்கு முன், கொடுமணலின் காலம் எழுத்துகளின் வடிவத்தின் அடிப்படையில் கி.மு.300 எனக் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.

    எனவே, கொடுமணல் பெருங்கற்காலத்தில் பெரும் நகரமாகவும், உள்நாடு மற்றும் மேலை நாடுகளுடன் வணிகத் தொடர்பினைக் கொண்டிருந்த செழித்த ஊராகவும் திகழ்ந்திருக்கிறது என்பதை அகழாய்வுகளில் கிடைத்த பல்வேறு வகையான சான்றுகளின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், கொடுமணலில் கண்டறியப்பட்ட எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளை அறிவியல் முறைப்படி காலக் கணிப்பு செய்ததில் இதன் காலம் கி.மு.500க்கு பின்நோக்கி எடுத்துச் சென்றுள்ளது சிறப்புக்குரியது. இதன் வாயிலாகத் தமிழகத்தில் குறிப்பாகக் கொடுமணலில் பெருங்கற்கால மக்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே செழிப்புற்றிருந்தார்கள் என்பதனை அறிய முடிகிறது.

    சான்றெண் விளக்கம்

    1. Rajan, Archaeological Gazetteer of Tamil Nadu, ManooPathippakam, Thanjavur, 1997, P.89.
    2. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
    3. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி எட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988, பக்.72-74.
    4. கா.இராஜன், குறியீடுகளும் எழுத்துகளும், வரலாற்றுக் கலம்பகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர், 1998, பக்-1-8.
    5. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
    6. மேலது.
    7. எ.சுப்பராயலு, மண்கல தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள், ஆவணம் இதழ்-19, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2008, பக்.189-221.
    8. கா.இராஜன், குறியீடுகளும் எழுத்துகளும், வரலாற்றுக் கலம்பகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர், 1998, பக்-1-8.
    9. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
    10. மேலது.

    துணை நின்ற நூல்கள் மற்றும் இதழ்கள்

    • சு.இராசவேலு மற்றும் கோ.திருமூர்த்தி, தமிழ் நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.
    • Subbarayalu, “Vallam Excavations”, Tamiḻ Civilization, vol.2, no.4, 1985, pp.30-42.
    • Rajan, “Kodumanal Excavations – A Report”, K.V.Ramesh (ed.), Gauravam B.K.Gururajarao Felicitation Volume, Harman Publishing Company, New Delhi, 1996, pp.72-86.
    • Rajan and Osmund Bopearachchi, “Graffiti Marks of Kodumanal (India and Ridiyagama (Sri Lanka)”, Man and Environment, vol. 27, no.2, 2002, pp.97-106

    =====================================================

    ஆய்வறிஞர் கருத்துரை:

    தமிழகத் தொல்லிடங்கள், பொதுவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டு அளவே கால மூதெல்லையாக வைக்கப்பட்டிருந்தன. இதற்கு பிராமி எழுத்தின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்பட்டதே முதன்மைக் காரணம். கரிம ஆய்வின்படி கொடுமணல் பிராமி எழுந்துள்ள பானை ஓடுகள், எழுந்துள்ள பானையில் இருந்த பொருள்கள் கி.மு.5 ஆம் நூற்றாண்டு வரை நீளுவதால் பிராமி எழுத்தின் காலம் மட்டுமல்ல, கொடுமணல் நாகரிகக் காலமும் கி.மு. 5ஆம் நூற்றாண்டினது என நிறுவப்பட்டுள்ளதைக் கட்டுரை தெளிவாக விளக்குகிறது. வைடூரியம் < lapis lazuli என்பது தவறு. அது ஒரு நீல நிறப் பாறைக்கல். மற்றபடி, கட்டுரை நன்று.

    =====================================================

    Share
  • (Peer Reviewed) புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

    முனைவா் பா. உமாராணி
    இணைப் பேராசிரியர்,
    கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்,
    கோயம்புத்தூா்

    புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

    ஒரு படைப்பு தான் தோன்றிய சமூகத்தின் ஆகச் சிறந்த கூறுகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் என்பது இயல்பான ஒன்று. இதுவரை தோன்றிய இலக்கியங்களும், அவை சார்ந்த பின்னூட்டங்களும் நமக்கு இதையே மொழிகின்றன. ஒரு சமூகத்தின்  சிறந்த பண்பாட்டுக் கூறுகளை மட்டும் ஒரு இலக்கியம் தக்கவைத்துக் கொள்வதில்லை. அச்சமூகத்தில் மறைமுகமாகவும் எதிரிடையாகவும் தோன்றிய கருத்துகளையும் செயல்களையும் அவை பதிவு செய்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

    சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இலக்கியங்கள் வரை எல்லா இலக்கிய வகைமைக்குள்ளும் மேற்சொன்ன நிகழ்வுகள் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளன. அங்ஙனம் பொருத்திப் பார்ப்பது படைப்பிலக்கியத்திற்கு மேலும் வளமையைக் கூட்டுகிறது. அத்துடன் இத்தன்மை. இலக்கியத்தை சமுதாயம் நோக்கி நகா்த்துவதற்கும் உதவுகின்றது. இத்தகையதொரு பார்வையில் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ள தோற்ற மன்னா்களின் நிலையை வெளிக்கொணரும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    தோற்ற அரசா்கள் குறித்தான பதிவுகள் அல்லது எதிர்நிலைத் தன்மை குறித்தான பதிவுகள் ஒரு சமூகத்தை அதன் ஆழத்திலிருந்து புரிந்துகொள்ள உதவுவதுடன், அச்சமுதாயம் கொண்டிருக்கும் ஆழ்மட்ட பண்பாட்டுக் கூறுகளையும் கண்டறிய உதவுகின்றது. சங்க இலக்கியத்திலும் இத்தகைய பதிவுக் கூறுகள் ஆங்காங்கே விரிந்த நிலையிலும், சிலபோது குறிப்பாகவும் வெளிப்படக் காண முடிகிறது.

    பாடாண் திணை சுட்டும் தோற்றோர் பின்னணி

    பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண்மகனின் வீரம், கொடை முதலிய சிறப்புகளை எடுத்தோதும் திணையாகும். புறநானூற்றில் பாடாண் திணையில் மொத்தம்  120 பாடல்கள் அமைந்துள்ளன. அதில் செவியறிவுறூஉத் துறையில் 8  பாடல்களும், இயன்மொழித் துறையில் 54 பாடல்களும், வாழ்த்தியல் துறையில் 9 பாடல்களும், பரிசில் கடாத் துறையில் 15 பாடல்களும்,  கடைநிலைத் துறையில் 10  பாடல்களும், பரிசில் துறையில் 8 பாடல்களும்,  பாணாற்றுப்படை துறையில் 6 பாடல்களும், பரிசில் விடைத் துறையில் 6 பாடல்களும், விறலியாற்றுப்படைத் துறையில் 4 பாடல்களும், பூவைநிலைத் துறையில் 3  பாடல்களும், புலவராற்றுப்படைத் துறையில் 2 பாடல்களும், உடனிலைத் துறையில் ஒன்றும், குடைமங்கலம் துறையில் ஒன்றும், வாயில் மங்கலம் துறையில் ஒன்றுமாக மொத்தம் பதினான்கு துறைகளில் பாடாண் திணை பாடப்பட்டுள்ளது.

    செவியறிவுறூஉ

    செவியறிவுறூஉ என்னும் துறை, பாடாண் திணைகளுள் ஒன்றாகும். பகைமையும் கெடுதலுமற்ற வலிய எண்ணங்களை அரசனுக்கு எடுத்துரைத்தல், இத்துறையின் சிறப்பியல்பு. “மறம் திரிவு இல்லா மன்பெரும் சூழ்ச்சி, அறம்தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று” என இத்துறைக்குப் புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம் கூறுகிறது.

    செவியறிவுறூஉ துறையில் அமைந்த பாடலில் பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயா் வழுதியினைப் பகைத்த பகையரசா்களின் நிலையானது,

                “துன்அருந் திறல், கமழ் கடாஅத்து

                எயிறு படையாக எயிற் கதவு இடாஅ

                கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின்

                பெருங்கை யானை இரும்பிடா்த் தலை இருந்து

                மருந்து இல் கூற்றத்து அருந்தொழில் சாயா”     (புறம். 3)

    என்று முற்றும் அழிந்துபட்ட நிலையே என்பதனைச் சுட்டுகிறார் இரும்பிடத்தலையார். பாண்டியனின் பட்டத்து யானை பகைநாட்டின் படைக்கலன்களை அழிக்கும் திறனையும், கொலைத் தொழிலுக்கும் அஞ்சாத பாண்டியனின் தன்மையையும் எடுத்தோதும் நிலையில் பகைநாட்டவா் அடைந்த நிலையைத் தெற்றென விளங்க வைக்கிறார் ஆசிரியா்.

    முதுகுடுமியின் வலிமையைக் கூறும் முகத்தான், ஆசிரியா் பகையரசா்களின் நிலையையும், அவா்கள் நாட்டில் விளையும் தீங்குகளையும் சுட்டிக் காட்டுகின்றார் காரிக்கிழார். குடுமியைப் பகைத்து வாழும் மன்னின் நிலையானது,

                “செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வா் தேஎத்து

                கடல்படை குளிப்ப மண்டி, அடா் புகா்ச்

                சிறுகண் யானை செவ்விதின் ஏவி,

                பாசவல் படப்பை ஆா் எயில் பல தந்து

                அவ்வெயில்  கொண்ட செய்வுறு நன்கலம்

                பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி”         (புறம். 6)

    என்று குறிப்பிடுகிறார். அதாவது, போர்செய்ய எதிர்த்த பகைவருடைய நாடுகளில் கடல்போன்ற படையை உட்புகுந்து அழித்தும், அவா்களின் விளை நிலங்களை யானையை விட்டு அழிக்கச் செய்வதுடன் அவா்களுடைய அரண்களையும் அழிக்கும் முறையை எடுத்தோதுகின்றார். அத்துடன் அப்பகை நாட்டினரின் செல்வங்களைப் பரிசிலருக்கு அளிக்கும் நிலையும் சுட்டப்படுகிறது. மேலும்,

                “வாடுக இறைவ! நின் கண்ணி – ஒன்னார்

                நாடுசுடு கமழ் புகை எறித்தலானே!

                செலியா் அத்தை, நின் வெகுளி”     (மேலது)

    என்று குறிப்பிடுகிறார் ஆசிரியா். குடுமியின் போரின் தன்மையானது பகைவா் நாட்டை எரித்து அழிக்கும்  இயல்பினை உடையது என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன. மேலும் அத்தகைய அழிவினை அவன் மேலும் அந்நாட்டிற்குச் செய்யத் துணியும் கோபத்துடனே இருப்பான் என்றும் குறிப்பிடுகிறார். இரு அரசுகளுக்கு இடையிலான போரில் மக்களின் விளை நிலங்கள் அழிக்கப்படுவதும், அம்மக்களிடம் இருந்து பெற்ற பொருளைப் பரிசிலாகக் கொடுத்து பெருமை கொள்ளும் நிலையும் வருந்தத் தக்கதே. குடுமியின் புகழ் பாடப்பட்டபோதும் மறைமுகமாக அன்றைய அரசுகளின் செயல்பாட்டைச் சுட்டுவதாகவே இப்பாடல் அமைந்துள்ளது.

    புறநானூற்றின் 40ஆவது பாடல்,  பகை மன்னா்களின் நிலையை எடுத்தோதுகின்றது. மதிப்பிற்குரிய பொன்னாலான பகைவரின் மணிமுடியினை அவமதித்தல் போன்றும், அவா்களை அடிமைப்படுத்தல் போன்றும் அதைத் தம் காலில் அணிகின்ற தன்மையினை,

                “நீயே, பிறா்ஓம்புறு மறமன் எயில்

                ஓம்பாது கடந்தட்டு, அவா்

                முடி புனைந்த பசும்பொன் நின்

                அடிபொலியக் கழல் தைஇய வல்லாளனை”        (புறம். 40)

    எனக் காண முடிகிறது. இப்பாடலில் வெற்றி பெற்றோரின் வீரமும், பகையில்லாத அவன் நாட்டின் சிறப்பும் கூறப்பட்டதெனினும் தோற்ற அரசன் அடைந்த இழிநிலையினையும் இப்பாடல் பதிவு செய்துள்ளது. செவியறிவுறூஉ துறையில் அமைந்த எட்டு பாடல்களில் மூன்று பாடல்கள் மட்டுமே தோற்றோரின் நிலையைப் பேசுகின்றது.

    இயன்மொழி

    தலைவனுடைய இயல்பினைக் கூறுதலும், அவன் முன்னோர் செயல்களைப் பாராட்டிக் கூறலும்  இயன்மொழித் துறையின்பாற்படும். தமிழ் மன்னா்களிடம் போர் அறம் இருந்தது. அதன் வழிநின்றே போர் செய்தனா் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடல் வழி அறியலாம். நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழுமிடத்து தமிழா்களின் போர் அறத்தினைத் தெற்றென விளக்கிறார்.

                “ஆவும் ஆன்இயற் பார்ப்பன மாக்களும்”  ( புறம். 9)

    என்ற பாடலானது போருக்கான அறத்தைத் தமிழா் எங்ஙனம் போற்றினா் என்று விரித்துக் கூறுகின்றது. எனினும் போரின் பின் நிகழும் துயா்கள் எண்ணிலடங்காதவை என்பதை இயன்மொழித் துறையில் அமைந்துள்ள பாடல்கள் தெளிவாகச் சுட்டுகின்றன.

    தோற்ற அரசா்களின் காவல் மரத்தை முறித்து பகைவா்களை அவமதிக்கும் செய்தியினை,

                “கடுங் கண்ண கொல் களிற்றால்

                காப்பு உடைய எழு முருக்கிப்

                பொன் இயல் புனை தோட்டியால்”            ( புறம். 14)

    என்று கபிலா் குறிப்பிடுகிறார். செல்வக்கடுங்கோ வாழியாதன் பகை மன்னனின் வலிமையை அழித்தலின் குறியீடாகக் கணையமரத்தை அழித்தான் என்னும் செய்தி இங்குச் சுட்டப்படுவதுடன் பகையரசனின் நிலையும் எடுத்துரைக்கப்படுகிறது.

    முதுகுடுமி பெருவழுதி பகைவா் நாட்டினை அழித்துச் சிதைக்கும் காட்சியினைச் சுட்டவரும் நெட்டிமையார் பகை மன்னனின் நிலம் அடைந்த அவல நிலையை முன்வைக்கிறார். இதில் பகை மன்னா்களின் நிலமானது

                “கடுந்தோ் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

                வெள்வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

                பாழ் செய்தனை, அவா் நனந்தலை நல் எயில்,

                புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,

                வெள் உளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்

                ………………………………..

                நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,

                வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்?”          (புறம்.15)

    என அழிந்துபட்டதைக் கூறுகின்றார். இங்கு வென்ற பகையரசா்களின் நாட்டைக் கழுதைகள் பூட்டி உழுதலும், விளைவயல்களை அழித்தலும், நீர்த்துறைகளைக் கலக்குதலும், மக்கள் வாழும் இடங்களை எரியூட்டலும் செய்து பகையரசா்கள் அவமதிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதை இப்பாடல் புலப்படுத்துகின்றது. இதே கருத்தினைக் கடைநிலைத் துறையில் புறம் 392ஆவது பாடலும் முன்வைத்துள்ளது. பொகுட்டெழினி தான் போர்செய்யும் பகைநிலத்தை கழுதைகள் பூட்டி உழுதும், மதில்களை அழித்தும் போர்செய்தான் என்பதை ஔவையார் சுட்டியுள்ளார்.

    கிள்ளிவளவன் வலிமைமிக்க சேரனை அழித்த செய்தியினை கூறுமிடத்து நப்பசலையார் பகைவனின் பெருமையைத் தெளிவாக விளக்குகிறார். இங்கு பகைவன் மிக வலிமையுடையவன் என்பதை,

                “……………………..ஓங்கிய

                வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங்கோட்டு

                இமயம் சூட்டிய ஏம விற்பொறி

                மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய

                வாடா வஞ்சி வாட்டும் நின்

                பீடுகெழு நோன் தாள் பாடுங்காலே?”       (புறம். 39)

    என்று சேரனின் பெருமையினையும், இமயம் வரை சென்று தன் ஆட்சியை நிலைநிறுத்தியவன் என்றும் அவனைப் புகழ்கின்றார். அவனை வென்றான் வளவன் என்னும் சிறப்புப்பட, இப்பாடல் அமைந்ததாயினும் பகையரசனின் வலிமையும் இங்குச் சுட்டப்பட்டுள்ளது.

    பகைவா் நாட்டில் உள்ள மக்கள் தம் நாட்டைத் துறந்து செல்லும் அவலத்தைப் புறப்பாடல் பதிவு செய்துள்ளது. பொகுட்டெழினியைப் பகைக்கும் பகைவா் நாட்டில் உள்ள மக்கள், இனி இந்நாடு வாழுதற்கு உரிய இடம் அன்று என்று தம் இடத்தைத் துறந்து செல்வதை,

                “விழவின்று ஆயினும், படுபதம் பிழையாது

                மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறைநீா்க்

                கைமான் கொள்ளுமோ என

                உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே”         (புறம். 96)

    என்று குறிப்பிடுகிறது. இப்பாடலுக்கு “அவன் படையெடுத்துச் செல்லும் ஊரில் விழா இல்லையாயினும் உண்டாக்கப்படும் உணவுடன் தவறாது செம்மறியாட்டுத் தசைகளையும் சுற்றத்தார் தின்பா். அந்தச் சுற்றத்தார் யாவருடனும் ஆறு, குளம் முதலிய நீா்த்துறைகளில் படிந்து அவனுடைய யானைகள் நீருண்ணும் எனும் அச்சத்தால் அவ்வவ்வூரில் மக்கள் தங்குதலை வெறுத்தனா். இவ்வெறுப்பினால் ஒரு பகை நோ்ந்தது” என்று விளக்கம் அளித்துள்ளனா் உரைக்காரர்கள்.

    அதியமான் அஞ்சியைப் பகைத்த மன்னா்களின் நாடானது அழிந்துபடும் என்றும், அப்பகைவா்களுடன் போரிட்டதால் அதியனின் படைக்கலக் கருவிகள் தம் இயல்பினை இழந்தன என்றும் கூறுமுகத்தான் பகையரசா்களின் நிலையினைத் (புறம். 97) தெளிவுபடுத்துகிறார் ஔவையார். புறநானூறு 130ஆவது பாடலில் ஆய் அரசன் தம் படைகொண்டு கொங்கரை விரட்டினான் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. இங்கு கொங்கன் புறமுதுகிட்டு ஓடினமையும், அவனை அழிக்க ஆய் செய்த போரின் வலிமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புறமுதுகிட்டு ஓடும் மன்னனைத் தொடர்ந்து செல்லாத தன்மை, தமிழரிடம் இருந்ததைப் புறம் 389ஆவது பாடலும், தோற்ற அரசா்கள் வெற்றிபெற்ற அரசனுக்குத் திறை செலுத்தி வாழவேண்டிய நிலையில் இருப்பதனைப புறம் 156ஆவது பாடலும் விளக்குகின்றன.

    சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, வடுகரை அழித்து விரட்டிய செய்தியைப் புறம் 378ஆவது பாடல் பதிவு செய்துள்ளது. இதில் இளஞ்சேட் சென்னியின் வள்ளன்மையைப் புகழும் பொருட்டே இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இயன்மொழித் துறையில் அமைந்த பாடல்களில் 11 பாடல்களில் மட்டுமே தோற்றோர் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. அவற்றில் அரசனின் வெற்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் மிகுதியும் கூறப்பட்டுள்ளது. தோற்ற மன்னா்களின் நிலையை வெற்றி பெற்ற அரசா்களின் புகழின் பின்னணியிலேயே உணா்ந்துகொள்ள வேண்டிய நிலையும், சில இடங்களில் பகையரசனின் வலிமையும் விதந்தோதப்பட்டுள்ளது.

    விறலியாற்றுப்படை

    அரசனுடைய புகழைப் பாடும் விறலியை வழிப்படுத்துதல் விறலியாற்றுப்படை எனப்படும். தொல்காப்பியம் இதனை,

                கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

                ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

                பெற்ற பெருவளம் பெறாஅா்க்கு அறிவுறீஇச்

                சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”   (தொல். புறம். 88)

    என்று விளக்குகிறது.

    பகைவரின் பெருஞ் செல்வங்களைக் கொணா்தல்  என்பது போரின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது என்பதைச் சுட்டுவது போன்று புறம் 64ஆவது பாடல் அமைந்துள்ளது.  முதுகுடுமி போர்செய்யும் பகை நாடுகளில் வீரா்கள் இறந்து கிடக்கும் காட்சியானது விண்ணைத் தொடுமாறு அமைந்துள்ளது என்பதை,

                ”விசும்பு ஆடு எருவை பசுந்தடி தடுப்ப

                பகைப்புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின்”    (புறம். 64)

    என்ற வரிகள் மூலம் உணா்த்துகின்றார் நெடும்பல்லியத்தனார். இங்கு வீரா்கள் இறந்து கிடந்தமை, கழுகுகள் செல்லும் பாதையை மறைத்தது என்றும், அந்நாட்டு மக்களின் செல்வத்தினைப் பெற்று தங்களுக்குப் பரிசில் வழங்கினான் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதன் வழி, தோற்ற நாட்டினரின் நிலை தெளிவாக உணா்த்தப்படுகிறது. மேலும் தோற்ற நாட்டினை எரியூட்டி அழித்தல் என்பது போர் மரபுகளில் ஒன்றாக இருந்தது என்பதை,

                “முனைசுட எழுந்த மங்குல் மாப் புகை

                மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும்

                பகைப் புலத்தோனே பல்வேல் அஞ்சி”      ( புறம்.103)

    என்ற ஔவையாரின் பாடல், பதிவு செய்துள்ளது. ஒரு நாட்டினை வெற்றி கொள்வது என்பது வெறுமனே மனிதா்களுக்கு இடையேயான நிகழ்வாக அல்லாமல் இயற்கையை அழித்தல் என்னும் நிலையை அடைந்துள்ள அவலத்தை இப்பாடல் பதிவு செய்துள்ளது.

    வாள் மங்கலம்

    மன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுதல், வாள் மங்கலம் எனப்படும். இத்துறையில் புறம் 95ஆவது பாடல் அமைந்துள்ளது. தொண்டைமானிடம் அதியமானின் படைக்கலங்களைக் குறித்து பழித்துக் கூறி அவன் புகழை மறைமுகமாகப் புகழ்கிறார் ஔவையார். போரைத் தவிர்க்கும் முகமாக இப்பாடல் பாடப்பட்டதெனினும் இரு அரசுகளின் போர் உணா்ச்சியை மறைமுகமாக இப்பாடல் முன்வைத்துள்ளது.

    பரிசில் துறை

    அரசன் முன்னே பரிசிலா் தாம் பெறக் கருதிய பொருள் இதுவெனச் சொல்லுதல் பரிசில் துறையாகும். பகையரசனது யானையின் நெற்றிப் பட்டத்தில் இருக்கும் பொன்னைப் பாணா்களுக்கு அளித்தும், அதை அவா்கள் தலையில் பொலியும்படியும் செய்யும் வல்லமை வாய்ந்தவன் என்று பகையரசனின் நாட்டின் வளம் சூறையாடப்பட்டதை,

                “ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு

                பாணா் சென்னி பொலியத் தைஇ”             (புறம்.126)

    என்று புறம் 126ஆவது பாடல் முன்வைக்கிறது.

    பரிசில் விடை

    பரிசில் பெற்று விடை பெறுவான் பாடுவது, பரிசில் விடை எனப்படும். பெருந்தலைச் சாத்தனார், குமணனைக் குறித்துப் பாடிய பாடல், தோற்ற அரசனின் புகழைப் பாடுவதாக அமைந்துள்ளது. குமணன் நாடு இழந்தனன் ஆயினும் ஈகை இழந்தான் இல்லை என்றுபட புறம் 165ஆவது பாடல் இடம்பெற்றுள்ளது.

                ”பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயா்தல் என்

                நாடு இழந்ததனினும் நனி இன்னாது என

                வாள் தந்தனனே தலை எனக்கு ஈய”          (புறம். 165)

    என்று தோற்ற குமணனை இப்பாடல் புகழ்ந்து பாடுகிறது.

    வாழ்த்தியல்

    பாட்டுடைத் தலைவனின் சிறப்பைப் புகழ்ந்து வாழ்த்துரைத்தல், இத்துறையின்பாற்படும். செல்வக்கடுங்கோ வாழியாதனின் பரிசில் வழங்கும் பண்பை வாழ்த்தும் முகமாக அமைந்த புறம் 387ஆவது பாடலில் பகையரசா்களின் வீரம் வெளிப்பட்டு நிற்கின்றது. பகை மன்னா்களின் மதில்களானது யாரும் உடைத்தலைச் செய்ய முடியாத அளவு வலிமையுடையது என்றும், அவ்வேந்தா்களின் காவற்காட்டில் இருக்கும் யானைகள் மிக்க வலிமையுடையவை என்றும் கூறி, அதனை அழித்தவன் வாழியாதன் என்று புகழ்கிறார் குண்டுகட் காலியாதன்.

    தோல்வி குறித்த பதிவுகள்

    சங்க இலக்கியத்தில் அரசா்கள், வேந்தர்கள், குறுநில மன்னா்கள், நிலக்கிழார்கள், வள்ளல்கள் போன்றோரின் தோல்விகள் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பதிவுகளின் வாயிலாகப் பகையரசா்களின் அல்லது தோற்றோரின் வலிமையை, போர்த்திறனை உணா்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் இத்தகைய பதிவுகள் பெரும்பான்மையும் வெற்றி பெற்றோரின் வீரத்தினையும் கொடைச் சிறப்பினையும் வள்ளன்மையினையும் வெளிக்கொணரும் வண்ணமே அமைந்துள்ளன. புறநானூற்றில் பாடாண் திணையில் 120 பாடல்கள் இடம் பெற்றிருப்பினும் தோற்றோர் நிலையை 20 பாடல்கள் மட்டுமே முன்வைத்துள்ளன.

    மிகச் சில அரசா்கள் மற்றும் வள்ளல்கள் போன்றோரின் தோல்வியும் விதந்தோதப்பட்டுள்ளன. அவை அவ்வரசா்களின் கொடைத் திறனைக் கூறும் பொருட்டும், அவா்களின் பண்பினை உயா்த்திக் கூறுதற் பொருட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு, தோல்வியும் வெற்றியின் தன்மையில் வைத்து எண்ணப்படுகின்ற நிலையினைக் காண முடிவதுடன், தோற்றோரின் வீரச் சிறப்பினை விதந்து கூறுகின்ற பண்பையும் கவனத்திற் கொள்ளுதற்கு உரியது. இதன் சமூக, அரசியல் பின்னணியினை ஆழ்ந்து நோக்கும் போதுதான் இத்தகைய பதிவிற்கான தேவையினை உணர முடியும்.

    பார்வை நூல்கள்

    1. புறநானூறு, முதற்பதிப்பு -2004, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
    2. தொல்காப்பியம், பதிப்பு -1984, கழக வெளியீடு, சென்னை.
    3. செ.வை.சண்முகம், தொல்காப்பியத் தொடரியல், முதற்பதிப்பு-2004, உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
    4. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, பதிப்பு-2012, அமுதா நிலையம், சென்னை.

    குறிப்பு

    புறநானூற்றில் பாடாண் திணையில் மொத்தம்  120 பாடல்கள் அமைந்துள்ளன.

    செவியறிவுறூஉத் துறையில்  – 8 (2,3, 5,6,35,40,55,184)

    இயன்மொழித்துறையில் – 54(8,9,10,12,14,15,30,32,34,38,39,50,67,92,96, 97,102, 105,106,107,108,122,123,124,128,129,130,131,132,134,137,142,149,150,151153,157,171,172,173,175,176,177,215, 376, 378, 380, 381,383, 388, 389, 390, 400)

    வாழ்த்தியல் துறையில் – 9 (13,19,158-பரிசில் கடாஅ நிலை, 367,375,377,385,386,387)

    பரிசில் கடாஅத் துறையில் -15(11,101,136,139,159,160,164,169,196,197,198, 199,266)

     கடைநிலைத் துறையில் – 10 (127,382,391,392, 393,394,395,396,397,398)

     பரிசில் துறையில் – 8 (126,135,148,154, 161, 168-அரசவாகை,200,379)

    பாணாற்றுப்படைத் துறையில் – 6 (68,69,70,138,141,158)

     பரிசில் விடைத் துறையில் – 6 (140,152,162,163,165,399)

    விறலியாற்றுப்படைத் துறையில் – 4 (64,103, 105,133)

    பூவைநிலைத் துறையில்  -3 (56,59,374)

    புலவராற்றுப்படைத் துறையில்  – 2 (48,49)

    உடனிலைத் துறையில்  -1 (58),

    குடைமங்கலம் துறையில் – (60),

    வாயில்மங்கலம் துறையில் – (95)

    மொத்தம்  -14 துறைகளில் பாடாண் திணை பாடப்பட்டுள்ளது.

    =======================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சங்க இலக்கியங்களில் புறம் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் புறநானூறு, குறிப்பிடத்தக்க ஒரு நூல். அதில் பெரும்பான்மையும், வெற்றி பெற்ற மன்னர்களின் வீரம், புகழ், கொடை சார்ந்தும் சிறுபான்மை சமூகப் பொது நிலைகள் சார்ந்தும் பாடப்பட்டுள்ளமை நாம் அறிந்த ஒன்றே. அதில் பொதுவாக வெற்றி பெற்ற மன்னர்களின் சிறப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி வரலாற்றுப் பின்புலத்தை அறிதல் என்பது பெரும்பான்மை ஆய்வு நடைமுறையில் இயல்பாக உள்ளது. ஆனால் இக்கட்டுரையை ஆய்வாளர் சற்று மாறுபட்ட கோணத்தில் ஆராய்ந்து தன் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  வெற்றி பெற்ற மன்னர்கள் பற்றிப் பேசும் பாடாண் திணைப் பாடல்களில் தோற்ற அரசர்களின் நிலைகளை உற்றுநோக்கிச் சில அடிப்படையான செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

    குறிப்பாக, போர் இரு மன்னர்களுக்கு இடையே மட்டும் நடைபெறுவதில்லை. இரு நாட்டு மக்கள், இயற்கை ஆகியவற்றோடு நடைபெறுவது. அதனால் இயற்கைச் சீரழிவு, மக்கள் கொல்லப்படுதல் என்ற கோணத்தில் தனது சிந்தனையைச் செலுத்தியுள்ளார். தோற்ற மன்னர்களின் நிலைப்பாடுகள் பற்றியும் பேசியுள்ளார். அதே போல் பாடாண் திணையின் துறைகளின் அடிப்படையில் இச்செய்திகளை விளக்கியமை சிறப்பு. மேலும் தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பா மாலையில் இடம்பெற்றுள்ள பாடாண் திணையின் செய்திகளைக் கட்டுரையில்  பயின்று வந்துள்ள துறைகளில் பதிவு செய்திருப்பின் கட்டுரை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

    =======================================================

    Share
  • (Peer Reviewed) ஐந்திணையில்  பாலை நில உருவாக்கம்

    முதுமுனைவா் இரா. சங்கர்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
    திருப்பத்தூா், வேலூா் மாவட்டம்

    ஐந்திணையில்  பாலை நில உருவாக்கம்

    சங்க இலக்கியம் ஐந்திணையை அடிப்படையாகக் கொண்டு அக்கால மக்களின் வாழ்க்கை முறையினைக் கூறும் வாழ்க்கைக் களஞ்சியமாகும்.  சங்க இலக்கியத்திற்கு முதன்மைப் பொருளாக விளங்குவது நிலமும் பொழுதுமே.  முதன்மைப் பொருளாக விளங்கும் நிலத்தினைச் சான்றோர்கள் நான்கு வகையாகப் பிரித்து ‘நானிலமென’ முறையாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலெனப் பெயா் வைத்திருந்தனா்.  இருப்பினும், சங்க இலக்கியங்களில் ‘பாலை’ என்கின்ற ஒருவகை நில அமைப்பினைச் சங்க இலக்கிய புலவா்கள் தம் பாடல்களில் புனைந்துள்ளதைக் காண்கிறோம். அத்தகைய நிலத்தைப் பற்றியும், அந்நில மக்களின் வாழ்வியல் முறைகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

    நிலப் பாகுபாடு

    இயற்கை சார்ந்த தமிழக நில அமைப்பை மலை, காடு, வயல், கடலென நான்கு கூறுகளாகப் பிரித்திருந்தனா். மலையும் மலை சார்ந்த பகுதியிலும் குறிஞ்சி மலா் சிறப்புற்ற காரணத்தினால் குறிஞ்சி நிலமென்றும்;  காடும் காடு சார்ந்த பகுதியிலும் முல்லை மலரின் அழகுமிக்க காட்சியினைக் கண்டு முல்லை நிலமென்றும்; வயலும் வயல் சார்ந்த பகுதியிலும் மருத மரத்தின் செழிப்பினைக் கண்டு மருத நிலமென்றும்; கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் உப்பங்கழிகளில் பூத்துக் குலுங்கும் நெய்தல் மலரின் அழகினைக் கண்டோர் நெய்தல் நிலம் என்றும் அந்தந்த நிலத்தின் அழகுமிக்க மலரினை நிலத்திற்குரிய பெயராக வைத்திருந்தனா்.

    இதனைத் தொல்காப்பியா் ‘தமிழகத்தின் ஒட்டுமொத்த நில அமைப்பினை இயற்கையின் அடிப்படையில் நான்காகப் பிரித்திருந்தனா்’ என்பதை,

    நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்

    படுதிரை வையம் பாத்திய பண்பே(தொல்.பொருள்: அகம்: 2)

    என்று, நடுவில் இருக்கின்ற பாலையைத் தவிர ஏனையவற்றைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலென நிலத்தினை நான்காகப் பிரித்து, பாலை நிலத்திற்கு நிலவரையறை செய்யாமல் விடுத்திருக்கிறார்.  இந்நூற்பாவிற்கு உரையெழுதிய உரையாசிரியா்கள் பாலை நிலத்தினைப் பற்றிப் பலவாறாகக் கருத்து கூறுகின்றனா்.

    உரையாசிரியா்களின் கருத்து

    தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணனார், “பாலை என்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற்காலம் பற்றி வருதலால், அக்காலத்தில் தளிரும் சினையும் வாடி நிற்பது.  பாலை என்பதோர் மரம் வேனிற் வெப்பத்திலும் காய்ந்து போகாமல் பூத்துக் குலுங்குவதால் அதன் சிறப்பு அந்நிலத்திற்குப் பாலையென்று பெயா் வைத்திருக்கின்றனா்” (தொல்.பொருள் உரை, இளம்பூரணனார்) என்று குறிப்பிடுகின்றார்.

    வித்வான் இரா. மாணிக்கனார் ‘நிலத்தினை வளமுள்ள பகுதியாகப் பிரித்தலே நாட்டிற்கு நிறைவைத் தரும் எனக் கருதி, வளமுள்ள பகுதியாகிய மலை, காடு, வயல், கடல் என்பனவற்றை அடிப்படையாக வைத்தே நிலம் பகுக்கப்பட்டது என்றும்;  வளமில்லாப் பாலையையும் ஒரு பகுதியாகக் கொள்ளின் குறைவைத் தருவதாகும் எனக் கருதியே வளமற்ற பாலையை ஒரு பகுதியாகப் பிரிக்கவில்லை’ என்று கூறுகின்றார் (பாலை, கு. சொ. பொ.  ப. 110).

    வௌ்ளைவாரணனார் பாலை நிலத்தைப் பற்றிக் கூறும் உரையில்  ‘பாலையென்பதற்கு நிலமில்லையாயினும் வேனிலாகிய காலம் பற்றி வருதலின், அக்காலத்துத் தளிரும் சினையும் வாடாமல் நிற்கும் பாலையென்னும் பெயருடைய மரம் உண்டாகலின் அச்சிறப்பு நோக்கிப் பாலையென்று பெயரிட்டனா்.  ஆகவே குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே வேனில் வெப்பத்தால் வளங்குறைந்து நடத்தற்கரியதாய் மாறிய காலத்துப் பாலையென வழங்கப்படும்’ எனக் கூறுகிறார் (தொல்.பொருள் – உரை ப.84).

    இவ்வாறாக உரைகூறும் உரையாசிரியா்களின் கூற்றிற்கு இணங்க,

    “——————- வெங்கதிர் வேந்தன்

    தானலம் திருகத் தன்மையில் குன்றிய

    முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

    நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்

    பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

    (சிலம்பு. காடுகாண் காதை: 62-66)

    என்ற சிலப்பதிகார அடிகளில் ‘வெவ்விய கதிர்களையுடைய அரசனான ஞாயிறு மாறுபட்டு நிலத்தைச் சுட்டெரிக்க, குறிஞ்சியும் முல்லையும் நல்லியல்பு கெட்டுப் பாலையென்ற தன்மையினைப் பெறும்’ என்று கூறுவதிலிருந்து பாலை நிலமென்பது குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த இடமென்பது புலனாகிறது.

    உரிப்பொருள்

    இயற்கையின் அமைவிற்கு ஏற்றாற்போல் நிலத்தினைப் பகுத்த தொல்காப்பியா், ஒழுக்கத்தினையும் திணை அமைப்பிற்கு ஏற்ப,

    புணா்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

     ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை

    தேருங்காலை திணைக்குரிப் பொருளே

    (தொல்.பொருள்.அகம்:16)

    என ஐவகையாகப் பகுத்திருக்கிறார்.

    மலையும் மலைசார்ந்த பகுதியில் புணா்தலுக்குரிய சூழல் மற்ற நிலங்களைக் காட்டிலும் மிகுதியாகக் கொண்டுள்ளமையால் புணா்தலும் புணா்தலுக்குரிய  நிமித்தமும் குறிஞ்சி நிலத்திற்குரிய ஒழுக்கமென்றும்; காடும் காடு சார்ந்த பகுதியில் ஆநிரைகளை மேய்த்தற் பொருட்டாகச் சென்ற ஆடவரை எதிர்பார்த்து மாலைப்பொழுதில் இல்லின்கண் தலைவி ஆற்றியிருப்பதால் ‘இருத்தலும் இருத்தல் நிமித்தமும்’ முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கமென்றும்; வயலும் வயல் சார்ந்த பகுதி நீா்ப் பாசனத்தின் பொருட்டு  செழிப்புற்று விளங்கியமையால் இந்நிலத்தில் வாழும் செல்வந்தா்கள் மனைவியை விட்டுப் பரத்தமை கொள்வதும், அதனை அறிந்த தலைவி தலைவனுடன் ஊடல் கொள்வதுமான நிகழ்வுகள் மிகுதியாகக் கொண்டிருந்தமையால் ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’ மருத நிலத்திற்குரியது என்றும்; கடலும்  கடல்சார்ந்த பகுதியுமான நெய்தல் நிலத்தில் தலைவன் மீன் பிடித்தற்பொருட்டு கடல் பயணம் மேற்கொள்கின்ற பொழுது, அலைகடலின் நிலையை அறிந்து, தலைவன் திரும்புவானா? திரும்பமாட்டானா என்று வருந்திக்கொண்டிருப்பதால் ‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’ நெய்தல் நிலத்திற்குரியது என்று கூறும் தொல்காப்பியா், ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ என்னும் ஒருவகை ஒழுக்கத்தினையும் உணா்த்துகிறார்.  இவ்வாறாக உணா்த்தப்பட்ட ஒழுக்கத்தின் நிலைதான் என்ன என்று எண்ணும்பொழுது, உரையாசிரியா்கள் ‘நான்கு நிலங்களிலும் வினையின் காரணமாகவோ, ஊடலின் காரணமாகவோ, பிரிதல் வேண்டிய சில காரணங்களினால், தலைவனும் தலைவியும் பிரிதலுண்டு; இதனை உணா்த்துவதாகப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் அமைகிறது என்று கூறுகின்றார்.

    எல்லா மக்களிடத்தேயும் இயல்பாக நடைபெறுகின்ற பிரிவைப் பற்றி ஓர் ஒழுக்கமாக உணா்த்திய தொல்காப்பியா், அதனைப் போன்றே அமையும் கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் உரிய ஒழுக்கத்தினைக் கூட்டி, ஒழுக்கத்தினையாவது ஏழாகக் கூறி இருக்கலாம்.  ஆனால் அவா் அவ்வாறாகக் கூறவில்லை. இதிலிருந்து தொல்காப்பியா் ஒழுக்கங்கள் திணையின் அடிப்படையில்தான் புனைந்துள்ளார் என்பது புலனாகிறது.  இதன் அடிப்படையில் பாலையென்கின்ற ஒருவகை நில அமைப்பு தொல்காப்பியா் காலத்தில் மறைமுகமாகப் புனையப் பெற்றிருக்கிறது என்பது உறுதியாகிறது.

    இதனைக் காட்டிலும் இன்னமும் சிறப்பாக உணா்த்த வேண்டுமானால், பாலை நிலமென்பது நிலைத்து நிற்கும் தன்மையற்றது, குறிஞ்சியும் முல்லையும் வேனிற்காலத்தில் திரிந்தால் பாலை, மீண்டும் செழிப்புற்றால் அந்நிலம் முல்லையாகவும், குறிஞ்சியாகவும் மாறிவிடும் என்பதனை,

    வாகைதானே பாலையது புறனே(தொல்.பொருள்.அகம்:73:1)

    என்ற நூற்பாவில் ‘வாகையாகிய வெற்றி ஒரே மன்னனுக்கு நிலைத்திருப்பதில்லை பாலை நிலத்தினைப் போன்று மாறி மாறி வரும் தன்மையது என்பதை உணா்த்துவதாக இந்நூற்பா அமைகிறது.

    கருப்பொருள்

    வேனிற்காலத்து வெம்மையால் திரிந்த நிலமே பாலை என்பதை மறைமுகமாக உணா்த்திய தொல்காப்பியா், நிலங்களுக்குரிய கருப்பொருளை உணா்த்துவதில் பொதுத்தன்மை காட்டியதற்குக் காரணம் திரிந்த நிலத்திற்குப் பொருள் உணா்த்துவதில் உள்ள சிக்கலேயாகும்.  ஆகையால் அந்தந்த நிலத்திற்குரிய கருப்பொருளைத் தனித்தனியே கூறாமல்

    தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

       செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

       அவ்வகை பிறவும் கருஎன மொழிப (தொல்.பொருள்.அகம்:20)

    என்று, நிலம் எத்தனை வகையாக இருப்பினும், அந்தந்த நிலத்தில் உள்ள தெய்வம், உணவுமுறைகள், மரங்கள், பறவைகள், விலங்குகள், நீா்நிலைகள் மற்றும் இசைக்கருவிகள் போன்றவையே அந்நிலத்திற்குரிய கருப்பொருளாக விளங்குமெனக் கூறுகிறார்.

    பொதுத் தன்மையாகக் கூறிச் சென்ற தொல்காப்பியரைத் தொடா்ந்த நாற்கவிராச நம்பி, அவா் விட்டுச் சென்ற குழப்ப நிலைக்குத் தீா்வுகாணும் வண்ணமாக, அந்தந்த நிலத்திற்குரிய கருப்பொருளைப் பற்றித் தெளிவாக விளக்குகிறார்.  அவற்றுள் பாலை நிலத்திற்குரிய கருபொருளாக,

    கன்னி விடலை காளை மீளி

     இன்னகை எயிற்றி எயினா் எயிற்றியா்

     மறவா், மறத்தியா் புறவுபருந்து எருவை

     கழுகு செந்நாய் கல்கெழு குறும்பு

     குழிவறுங் கூவல் குராஅ மராஅ

     வழிஞ்சில் பாலை யோமை யிருப்பை

     வழங்குகதிர் பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சுரம்

     பகற் சூறை யாடல் பாலங் கருப்பொருள்(அ.பொ.வி:21)

    என்று, ‘பாலை நிலத்திற்குரிய தெய்வம் கொற்றவையென்றும்; அந்நிலத்தில் வாழும் தலைமக்கள் விடலை, காளை, மீளியென்றும்; குடிமக்கள் எயினா், எயிற்றியா், மறவா், மறத்தியரென்றும்; வேனிற் வெப்பத்தினால் காய்ந்து போன நீா்நிலையும், மரங்களும், வலிமை இழந்த விலங்குகளும், பறவைகளும் பாலை நிலத்திற்குரிய கருப்பொருளெனக் கூறுகின்றார்.

    இவ்வாறாகத் தொல்காப்பியரும், இளங்கோவடிகளும், நாற்கவிராச நம்பியும், உரையாசிரியா்களும் பாலை நிலத்தினைப் பற்றிக் கூறிய குறிப்புகள் யாவுமே, பாலை என்கின்ற ஒருவகை நிலம் திரிநிலமாக இருந்தது என்பதனை உறுதிப்படுத்துகின்றன. அத்தகைய திரிநிலமான பாலை நிலத்தின் தன்மையைச் சங்க இலக்கியப் பாடல்கள் பலவாறாக விளக்குகின்றன.

    பாலை நிலத்தின் தன்மை

    குறிஞ்சியும் முல்லையுமாய்ப் பூத்துக் குலுங்கும் சோலைவனம், மழை பொய்த்ததால் கதிரவனின் கதிர்வீச்சு பட்டு, பாலையாகக் காட்சி தரும் இந்நிலத்தில் வற்றிய சுனையும், வறண்ட நீா்நிலையும், காய்ந்த மரங்களும் கடத்தற்கரிய வழியுமாய் இருந்திருக்கிறது.

    இந்நிலத்தினைப் பற்றி நச்சினார்க்கினியா், ‘பாலைத் தன்மையாவது காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல்மாறி, நீரும் நிழலும் இன்றி, நிலம் பயன்துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெறுவது’ (தொல். பொருள்.உரை – ப. 84) எனக் கூறுகிறார்.

    நச்சினார்க்கினியாரின் கூற்றின்படி பாலைத் தன்மையினைக் கூறும் சங்கப் பாடல்களில் அந்நிலத்தினை நீரற்றது என்றும், வழிப் போக்கா்க்குத் துன்பம் தருவதென்றும், கொலைத் தொழில் புரியும் ஆறலைக் கள்வா் வாழும் பகுதியென்றும் கூறுகின்றனவேயன்றி அந்நிலத்தினை உயா்வாகக் கூறிய பாடல்கள் இல்லை.

    இவ்வாறாகப் புலவா்களால் கொடிய தன்மையனவாகப் பாடப்பட்டதற்குக் காரணம், அந்நிலத்தின் சூழல், கொடிய தன்மை வாய்ந்ததாக விளங்கியமையே ஆகும்.  இக்கொடிய தன்மைக்குக் காரணம், வேனிற் வெம்மையே.

    வெம்மை

    வேனிற் வெப்பத்தினால் உண்டானதே பாலை நிலமாதலின் இந்நிலத்தில் வெம்மையின் கொடுமை மிகுதியாக இருந்திருக்கும்.  பாலை நிலத்தின் வேனிற் வெப்பத்தினை உணா்த்தும் பாடலாக,

    உலைக்கல் அன்ன பாறை யேறிக்

    கொடுவில் எயினா் பகழி மாய்க்கும் சுரம்(குறுந்:12:2-3)

    என்ற குறுந்தொகை அடிகளில் ‘தலைவன் பொருளீட்டச் சென்ற பாலை வழியானது, கொல்லனது உலைக்களத்துள்ள பட்டடைக் கல்லைப் போன்று வெம்மையையுடைய பாறைகள் நிறைந்த காட்டில், எயினா்கள் தம் அம்பினைத் தீட்டிக் கொண்டிருப்பா்.  அத்தகைய கொடுமை வாய்ந்த பாலை நிலத்தின் வழியில் எம்மைப் பிரிந்து சென்றான் நம் தலைவன்’ எனத் தலைவி கூறுவதாக அமைந்த இப்பாடல், வேனிற் வெப்பத்தினைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

    கொடுமையான வெப்பத்தினால் இந்நிலத்தில் காணப்படும் மரங்கள் யாவும் உலா்ந்த நிலையில், மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பிடித்து காடெங்கும் பற்றி எரிந்து கரிக்காடாய் விளங்கியது என்பதை,

    நிழல் கவின் இழந்த கவா் மரத்த (நற்:256:3)

    என்ற நற்றிணையடி விளக்குகிறது.

    இத்தகைய கொடுமை வாய்ந்த நிலத்தின் வழியாக உமணா்கள் உப்பு விற்கச் செல்கின்ற பொழுது, பாலை நிலம் வந்துவிட்டது என்பதனை அறிந்தவுடன் மனம் வருந்துவா் என்பதனை,

     “வேங்கை கொய்யுநா் பஞ்சுரம் விளிப்பினும்

       ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூவஉங்காடு (ஐங்:311:1-2)

    என்ற ஐங்குறுநூற்று அடிகளில் ‘வேங்கை மலரினைச் சூடுதற்காக மரத்திலேறி மலா் கொய்யும் ஆயர் மகளிர், விளையாட்டின் காரணமாகப் பஞ்சுரம் என்னும் பாலைப் பண்ணைப் பாடுவதைக் கேட்டவுடன், இனி வருவது பாலைநிலமென வழிப்போக்கா் அஞ்சும் கொடிய தன்மை வாய்ந்த நிலமாக இருந்திருக்கிறது.

    மணல்

    தீப்பற்றி எறியாத இடங்களும் வறட்சியுடன் மணல் மிகுந்த பகுதியாகவும் பாலை நிலம் இருந்திருக்கிறது.  மழைக் காலங்களில் குறிஞ்சி நிலத்தில் பெய்த மழை, மருத நிலத்தினை நோக்கி வரும் காட்டாறு, வேனிற்காலத்தில் வற்றிப் போன நிலையில் மணற்பரப்பாக இருந்திருக்கிறது.  பாலை வனத்தினைப் போன்ற காட்டாற்றுப் பாதையில் மணல் காணப்படுவதால் இந்நிலத்திற்குப் பாலை நிலமெனப் பெயா் அமைந்திருக்கலாம்.  இயல்பான நிலங்களில் பாலைவனம் போன்று மிகுதியான மணல் இருந்தமையால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழகத்தில் அதிகமான மழையும் அதற்கு ஏற்றாற் போன்ற வெம்மையும் இருந்திருக்கிறது என்பதனை உணர முடிகிறது.

    நீர்வழியில்லா மேட்டு நிலங்கள், நீரற்ற நிலையில் சூறாவளிக் காற்றுடன் புழுதி பறக்கும் தன்மையனவாக இருந்தது என்பதனை,

    களிறு உதைத்து ஆடிய கவிர் கண் இடுநீறு

     வெளிறு இல் கார் வெலம் நீடிய

     பழங்கண் முது நெறி மறைக்கும்,

     வழங்க அருங் கானம் ——–” (நற்:302:7-9)

    என்ற நற்றிணைப் பாடல் ‘மக்கள் நடந்து செல்லுதற்கு அரிய சுரவழியில், யானை நிலத்தைக் கால்களால் உதைத்து விளையாடியதால் எழும்பிய மிகுதியான புழுதி, வயிரமேறிய வேல மரங்களின் மீது மேலும் கீழுமாகப் படிந்து நிறம்மாறி நெருக்கமாக அமைந்திருக்கும்’ என்று மேட்டுநிலத்தின் தன்மையைக் கூறுகிறது.

    பத்துப் பாட்டில் ஆற்றுப்படுத்துவதாக அமையும் ஆற்றுப்படை நூல்களில் பாலை நிலத்தினைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

    நல்லியங் கோடனிடம் பரிசில் பெறுவதற்காக ஆற்றுப்படுத்தும் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், பாலை நிலத்தினைப் பற்றிக் கூறுவதாக,

    வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப

     வேனில் நின்ற வெம்பத வழிநாள்

     காலை ஞாயிற்றுக் கதிர்கடா வறப்ப

     பாலை நின்ற பாலை நெடுவழிச்

     சுரன்முதன் மரா அத்த வரிநிழல் அசைஇ” (சிறுபாண்.ஆ:8-12)

    என்ற சிறுபாணாற்றுப்படை  அடிகளில் ‘அதிகாலையிலே நண்பகல்போல் வெப்பம் தரும் கதிரவன், அப்பாலை நிலத்திலுள்ள பரற்கற்களைச் சூடேற்றி, அந்நிலத்தின் வழியாக வருகின்றவா்களின் கால்களைக் கிழிக்கச் செய்யும் தன்மை வாய்ந்த பாலை நெடுவழியில், கடம்ப மரத்தினுடைய வரிநிழல் காணப்படும். அந்த நிழலில் சிறிது இளைப்பாறி, பின்னா் அவ்விடத்தினை விட்டுக் கடந்து சென்றால், நல்லியங்கோடனின் நாடு வரும்’ என்று உணா்த்தும் இப்பாடலடியில், பாலை நிலம் வெப்பமிக்கது என்றும், அவ்வழியில் பரற்கற்கள் மிகுதியாகக் காணப்படும் என்றும், இளைப்பாறுவதற்கு நல்ல நிழல் இருக்காது என்றும் பாலை நிலத்தின் தன்மையினைப் படம் பிடிக்கிறது.

    இதனைப் போன்றே பெரும்பாணாற்றுப்படையில் பாலை நிலம் நீரற்ற தன்மையினை,

     “மான்அடி பொறித்த மயங்குஅதா் மருங்கின்,

     ……………………………………

     அருஞ்சுரம் இறந்த அம்பா்(பெரும்பாண்.ஆ:106-117)

    என்ற அடிகளில், ‘மான்களின் அடிச்சுவடு பதிந்து கிடக்கும். மயங்குதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில், மழை வறண்ட காலத்தில் நீா் பெறும்பொருட்டுத் தோண்டப்பட்ட பல குழிகள் காணப்படும்.  அக்குழிகளை ஆழக்  குழிதோண்டி, அதன் அகத்தே மறைந்தொடுங்கி, நடு இரவில், அகத்திப் பூப்போன்ற வளைந்த மருப்பினையுடைய பன்றிகள் நீருண்ண வரும் வருகையைப் பகுதிநேரம் பார்த்து நிற்பா் எயினா்.  அவ்வாறாக எதிர்பார்த்திருக்கும் எயினருக்குப் பன்றி வேட்டை கிடைக்கவில்லையென்றால், எஞ்சிய அரை நாளில் அங்காந்த வாயையுடைய நாய்களுடன், பசிய தூறுகளை அடித்துக் குவித்த இடத்தே வேலியில் தொடா் வலை கட்டி விடுவா். புதா்களினின்றும் வெளிவரும் முயல்களைத் தப்பிப் போக விடாமல் வலையினகத்தே வளைத்துப் பிடிப்பா்.  பின்னா் தறுகண்மையுடைய அக்காட்டில் வாழ்வோர் அவற்றைக் கூடித் தின்கின்ற நீா் வறண்ட, அரிய பாலைக் கடுஞ்சுரம்’ என்று கூறும் இப்பாடலில் பாலை நிலத்தின் நீரற்ற தன்மையினையும், அந்நிலத்தில் வாழும் மக்கள் இடைவிடாமல் வேட்டையாடும் தொழிலைச் செய்கின்றவா் என்பதனையும் விளக்குகிறது.

    இவ்வாறாகப் பாலை நிலத்தின் தன்மையினைக் கூறும் பாலைப் பாடல்கள், புலவா்களோ, அந்நிலத்தின் வழியாகச் சென்று வந்தவா்களோ அந்நிலத்தின் தன்மையைக் கூறுவது போன்ற பாடல்கள் இல்லை.  தலைவன் பொருளீட்டப் பிரிவதும், அவன் பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துவதுமாக அமையும் பாலைப் பாடல்களில், தலைவன் பிரிந்த வழி இவ்வாறெல்லாம் இருக்குமெனத் தலைவி நினைப்பதாகவே பல பாடல்கள் அமைந்திருக்கின்றன.

    இலக்கியங்களில் இன்பியல் நிகழ்வைக் காட்டிலும் துன்பியல் நிகழ்வே முதன்மையிடத்தைப் பெறுகின்ற நிலையில், பிரிவைப் பற்றிப் புனையும் பாடல்கள் அப்பிரிவுத் துன்பத்தை மிகுவிப்பதற்காக வேண்டி மிகுவருணனை கொண்டிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.  குறிப்பாக, இந்நில வருணனை புனையும் பல பாடல்கள், ‘அக்கொடிய நிலத்தின் வழியாகச் செல்வோர் ஆறலைக் கள்வரிடமிருந்து மீள்வது அரிது’ என்ற கருத்தினைப் புனைகின்றன.  இவ்வாறான வருணனை யாவுமே இக்காலச் சிறுகதை, நாவல் போன்று அக்காலத்தில் தோன்றிய உயா் கற்பனையே ஆகும்.  ‘பாலை நிலம் வறண்ட தன்மையால் அமைந்திருக்கலாம்,  அந்நிலத்தின் வழியாகச் செல்வோர்க்குத் தாகம் தீா்க்கத் தண்ணீரற்ற நிலை நிலவி இருக்கலாம், வறட்சியால் நீரற்ற நிலை நிலவியதால் எவ்வகையான விளைச்சலுமின்றித் தங்களின் உணவுத் தேவைக்காக வழிப்பறி செய்திருக்கலாமே தவிர, கொலை செய்தனா் என்பது சிந்திக்க வேண்டிய  கருத்தாக இருக்கிறது.

    நீர் நிலைகள்

    பாலை நிலத்தின் நீா் நிலைகளைக் குறிப்பிடும் பாடல்கள் பொய்த்துப் போன காட்டாற்றையும், வற்றிய சுனையையுமே குறிப்பிடுகின்றன. அந்நிலத்தில்  வாழ்கின்ற மக்களும், விலங்குகளும் தாகம் தீா்க்க மரப்பட்டைகளையும், வேனிற் காலத்தில் விளையும் நெல்லிக் கனியையும் தின்று தாகம் தீா்ப்பதாகப் பாடல்கள் புனையப்பட்டுள்ளன.

    சுனை நீர்

    காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற மக்களுக்குச் சுனை நீரே குடிநீராக இருந்திருக்கிறது. பாறைகளின் நடுவே நீா்த் தங்கும் அளவிற்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையைத் தான் சுனை என்கின்றனா்.  இவ்வாறான சுனைகள் இயற்கையாகவும் நீா்த் தேவைக்காகச் செயற்கையாகவும் அமைக்கப்பட்டிருக்கலாம்.

    பாரியின் பறம்பு மலையிலுள்ள சுனைகள், வானத்திலுள்ள விண்மீன்களையொத்தன என்பதை,

    “———————— வானத்து

    மீன் கண் அற்று, அதன் சுனையே ஆங்கு (புறம்:109:9-10)

    என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது.  வானத்திலுள்ள விண்மீனைப் போல் பாரியின் மலையில் சுனைகள் காணப்படுகின்றன என்பதனால், சுனைகள் எல்லாம் இயற்கையாக அமைந்தனவாக இருக்காது, செயற்கையாகவும் அமையப் பெற்றிருக்கும் என்பதனை உணா்த்துகிறது.

    காடுகளில் வாழ்கின்ற மக்களுக்கு நீர் தரும் சுனை, குளம் போன்றவை அமைந்திருந்தன என்பதை,

    சுனையெல்லாம் நீலம் மலர, சுனை சூழ்

      சினை யெலாம் செயலை மலர, காய்கனி

     உறழ நனை வெங்கை ஒள் இணர் மலர,

     மாயோன் ஒத்த இன் நிலைத்தே (பரி :15 : 30-33)

    என்ற பரிபாடலில் ‘திருமாலிருஞ் சோலை மலையின்கண் சுனையிடமெல்லாம் நீலமலா் மலரவும் சுனையைச் சுற்றி நிற்கும் அசோக மரத்தின் கிளைகளில் மலா்கள் மலரவும், காட்சிக்கினிய தோற்றத்தினை உடையதாயிற்று’ என்று கூறுவதிலிருந்து சுனைகள் குளம் போல இருந்திருக்கின்றன என்பது புலனாகிறது.

    இவ்வாறாக மழைக் காலங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கும் சுனைகள் வேனிற் வெப்பம் தோன்றியவுடன் நீர் வற்றிய சுனையாக மாறி அந்நிலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு நீர் கொடுக்காத நிலையினைப் பெற்றிருக்குமென்பதை,

    சுவைக்காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கா்

     வீழ் கடைத் திரற் காய் ஓங்குடன் தின்று

     வீசுனை சிறுநீா் குடியினா்(நற்:14:5-7)

    என்ற நற்றிணைப் பாடலில் ‘தலைவனுடன் உடன்போக்கு செய்த தலைவி பாலை நிலத்தின் வழியாகச் செல்கின்ற பொழுது, அவ்வேனிற் காலத்தில் விளையும் தன்மையுடைய நெல்லி மரத்தின் நெல்லிக்கனியைத் தின்று, வற்றிய சுனையில் உள்ள குடிநீரைக் குடித்தனா் என்று குறிப்பிடுவதிலிருந்து பாலை நிலத்திலுள்ள சுனை, பெரும்பாலும் வற்றியே காணப்படும் என்பது புலனாகிறது.

    இத்தகைய தன்மை வாய்ந்த பாலை நிலங்களில் உள்ள சுனைகள் முற்றிலுமாகக் காய்ந்து போன நிலையில் காட்டாறு ஓடிய மணற் பாதையை அகழ்ந்து அதில் கிடைக்கும் ஊறல் நீரைக் குடிநீராகப் பயன்படுத்தியிருக்கின்றனா்.

    மரங்கள்

    பாலை நிலங்களில் காணப்படும் மரங்கள் யாவுமே காய்ந்து போனதும், புள்ளிய நிழலைத் தருவதுமான நிலையையே பாடல்களில் புனையப் பெற்றிருக்கின்றன.  இவ்வாறாகப் புனையப்பட்ட வருணனைகள் யாவுமே பாலை நிலத்தின் தன்மையைத் தலைவன் தோழிக்கு உரைப்பதாகவும், அந்நிலத்தின் வழியாகச் செல்கின்ற தலைவனை நினைத்துத் தலைவி வருந்துவதுமாகவே காணப்படுகின்றன.

    உகாய் மரம்

    பாலைப் பாடல்களில் அதிகமாகப் பேசப்படும் இம்மரம், சாம்பல் நிறத்தினைப் போன்ற அடிப்பகுதியையும் வேனிற் காலத்திலும் நிழல் தரும் தன்மை வாய்ந்தது என்பதை, பொருளீட்டி வருவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிய இருக்கும் தலைவனுக்குத் தோழி அறிவுரை கூறுவதாக அமையும்,

    புல்லரை யுகாஅய் வரிநீழல் வதியும்

     இன்னா வடுதிறம் மிறத்தல்

     இனிதோ ———————(குறுந்:363:4-6)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகளில் ‘பொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவனே! நீவிர் செல்லும் வழியில் கொடுமையான பாலை நிலம் உள்ளது.  அந்நிலத்தில் வாழும் எருது, செவ்விய தண்டினையுடைய அறுகினது நீண்ட கொத்தைக் காத்துத் தின்று, உகாய் மரத்தின் புள்ளிய நிழலில் தங்கும் கொடிய நிலமாகும்.  ஆதலால் பொருளீட்டுதலைக் கைவிடுவாயாக’ எனக் கூறுவதாக அமையும் இப்பாடல் வரியில், இயல்பாகவே மழையென்றும், வெயிலென்றும் பாராமல் வாழும் காட்டெருது, மிகுந்த வேனிற் வெப்பத்தினைத் தாங்காமல் மர நிழலில் தங்குகின்றனவென்றும், அரிய அவ்வழியில் மரங்களெல்லாம் உலா்ந்து போன நிலையில் புள்ளி நிழலே காணப்படுமென்றும் பாலை நிலத்தின் தன்மையை விளக்குகிறது.

    கள்ளிமரம்

    இயல்பான காலங்களில் புதா்ச்செடிகள் நிறைந்து காணப்படும் காடுகள், வேனிற் காலத்தில் கள்ளிக் காடாகக் காணப்பட்டன என்பதனை,

    வள்ளிளெயிற்றுச் செந்நாய் வயவறு பிணவிற்

     கள்ளியங் கடத்திடைக் கேழல் பார்க்கும்(ஐங்:323:11-21)

    என்ற ஐங்குறுநூற்று அடிகளில் ‘கூரிய பற்களையுடைய செந்நாய், கருவுற்றிருக்கும் பெண் நாய்க்கு ஊன் வழங்குதற்காகக் கள்ளிக் காட்டினூடே பதுங்கிக் கிடந்து பன்றியின் வரவினை எதிர்பார்க்கும்’ என்று கூறுவதிலிருந்து கள்ளி மரங்கள் நிறைந்த காடாக வேனிற்காலத்துப் பாலை நிலம் விளங்கியது என்பதனை உணர முடிகிறது.

    வெட்பாலை மரம்

    கள்ளிக்காடும், புள்ளி நிழலும், நீரற்ற நிலையுமாய் விளங்கும் பாலை நிலத்தில், மழைக் காலங்களில் பெய்த மழைநீரைத் தண்டுப்பகுதியில் சேகரித்து வைக்கும் தன்மையனவாக விளங்கும் வெட்பாலை மரம், வேனிற் காலத்தில் வெண்மையான பூக்களைப் பூக்கும் தன்மை வாய்ந்ததாகும். வேனிற் காலத்து நீரற்ற நிலையில், அந்நிலத்தில் வாழ்ந்த விலங்குகள், இம்மரத்தின் தண்ணீர் நிறைந்த தண்டுப்பகுதியைத் தின்று தாகம் தணிக்கும் என்பதை,

    “———————- வள் உதிர்ப்

     பிடி பிறந்திட்ட நார்இல் வெண்கொட்டுக்

     கொடிறு போல் காய வால் இணர்ப்பாலை(நற்:107:1-3)

    என்ற நற்றிணை அடிகளில், பெரிய நகத்தினையுடைய பெண்யானை, நீர் வேட்கையின் காரணமாகப் பாலை மரத்தின் பட்டையை உரித்துத் தின்றதால் நாரில்லாத வெண்மையான கிளைகளையுடைய இம்மரம், குரடுபோன்ற காய்களை உடையது என்பதனை விளக்குகிறது.

    குரடு போன்ற, கனியாகும் தன்மை பெறாத இம்மரக்காய்கள் காய்ந்து வெடிக்கும் தன்மையவாகும் என்பதனை,

    “————————– இலை தீர் நெற்றம்

    கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்(நற்:107:4-5)

    என்ற நற்றிணைப் பாடலடிகள் விளக்குகிறது.

     இருப்பை மரம்

    பாலை நிலப் பாடல்களில் குறிப்பிடப்படும் மரங்களில் இவையும் ஒன்று.  இம்மரம் வேனிற்காலத்தில் பூக்கும் என்பதனை,

    கான விருப்பை வெனல் வெண்பூ

    வளிபொரு நெடுஞ்சினை யுகுத்தலின் ஆர்கழல்பு

     களிறுவழங்கு சிறுநெறி புதையும் (குறுந்:329:1-3)

    என்ற குறுந்தொகை அடிகளில் ‘வேனிற் காலத்தில் வௌ்ளிய மலரினைப் பூக்கும் இருப்பை மரம், சூறாவளிக் காற்று வீசுதலால் பூக்களை உதிர்க்கும். அவ்வாறு உதிர்ந்த பூக்கள் யானைகள் செல்லும் சிறுவழியை மறைக்குமென்று

    கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுதின்,

    வில்லோர் தூணி வீங்கப் பெய்த

    அம்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை

    செப்பு அடா; அன்ன தீம் புழல் தய்வாய்

    உழுது காண் துறைய ஆகி, சூர் சுழல்பு

    ஆலி வானின் காலொடு பாறி

    துப்பின் அன்ன செங் கோட்டு இயவின்

    நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பார்க்கும் (அகம்:9:1-9)

    அகநானூற்றுப் பாடலடிகளில் ‘கொல்லும் தொழிலில் சிறந்ததும், கூா்மையானதும், குறும் புழுகு எனப் பெயா் கொண்டதும் வில்வீரா்களின் அம்பறாத் துணிகளில் மிகுதியாக இட்டு வைக்கப்படுவதுமாகிய குப்பியின் நுனிகளைப் போன்ற இருப்பை மரங்களின் மொட்டுகள் அரும்பின் செப்புத் தகடுகள் போன்ற அம்மரங்களின் சிவந்த தளிர்களெல்லாம் நெய்யைப் போன்ற வெண்மையாகக் காணப்படும் மலா்கள், வேனிற் காற்று வீசுவதால் மரக்கிளையிலிருந்து உதிர்ந்து பவளம் போன்ற சிவந்த மேடாகிய வழிகளில் வீழ்ந்து கிடப்பது குருதி மீது கொழுப்பு பரந்து கிடப்பது போல் காணப்படும்’ என்று கூறுவதிலிருந்து இம்மரம் வேனிற் காலத்தில் பூக்கும் தன்மையது என்பது புலனாகிறது.

    மரா மரம்

    குறிஞ்சி திரிந்த பாலை நிலத்தில் காணப்படும் கடம்ப மரமென்று அழைக்கப்படும் மரா மரம் வேனிற் காலத்தில் பூக்கும் தன்மையினைப் பெற்றதாகும்.  இம்மரம் வெண்மை பூவினையும், சிவந்த பூவினையும் பூக்கும் இரு வகை மரமாகும்.  வௌ்ளிய மலரினைப் பூப்பது வெண் கடம்பமென்றும், சிவந்த மலரினைப் பூப்பது செங்கடம்பமென்றும் அழைப்பர். மலையில் வாழ்கின்ற மக்கள் இம்மரத்தில் தெய்வம் இருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தனர்.  இதனை,

    மன்ற மரா அத்த பெஎமுதிர் கடவுள்

     கொடியோர்த் தெறுஉ மென்ப (குறுந்:87:1-2)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகள், ‘பொதுவிடத்திலிருக்கும் மராமரத்தில், கொடியோரைக் கொல்வதற்காக இறைவன் தங்கியிருக்கிறானென்று நம்பிக்கை கொண்டிருந்த குறிஞ்சி நில மக்கள், இம்மரத்தினடியில் மேடையிட்டு மன்றமாகக் கொண்டு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்’ எனக் கூறுகிறது.

    யா மரம்

    வெட்பாலை மரத்தினைப் போன்றே மழைக் காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரைத் தண்டுப்பகுதியில் சேமித்து வைக்கும் இயல்பினைப் பெற்ற இம்மரம், நெடுங்காலம் நிலைத்திருக்கும் வைரம் பாய்ந்த மரமாக விளங்கியது என்பதை,

    பொத்தில் காழ வத்த யா அத்துப்

    பொரியரை முழுமுதல் உருவக் குத்தி(குறுந்:255:1-2)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகள் விளக்குகின்றன.

    இம்மரப்பட்டைகள் வேனிற் காலத்தில் காய்ந்து போகாமல் நீா்த்தன்மைப் பெற்றிருப்பதால், யானைகள் இம்மரப் பட்டையைத் தின்று தாகம் தணிக்கும் என்பதை,

    பிடிபசி அளைஇய பெருங்கை வேழம்

    மென்சினை யாஅம் பொளிக்கும்(குறுந்:37:2-3)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகளில் ‘பெண்யானையினது பசியைப் போக்குவதற்காகப் பெரிய துதிக்கையுடைய ஆண்யானை மெல்லிய கிளைகளையுடைய யாமரத்தின் பட்டையை உரித்து அதன் நீரை அப்பிடிக்குக் கொடுத்து தாகத்தைத் தணிக்குமென விளக்குகிறது.

    குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலம் பாலையாதலால், இவ்விரண்டு நிலங்களில் உள்ள அனைத்து மரங்களுமே பாலை நிலத்திற்குரிய மரங்களாகக் கொள்ளாமல், அவ்வேனில் வெப்பத்தினைத் தாங்காமல் மாய்ந்த மரங்களை விடுத்து, வெம்மையினைத் தாங்கி, புள்ளி நிழலையும் வரி நிழலையும் தரும் ஒருசில மரங்களைப் பற்றியே பாலைத் திணைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.  இவ்வாறாகப் பாலைத் திணைப் பாடல்களில் குறிப்பிடும் மரங்கள் யாவுமே வேனிற் காலத்து மலரும் தன்மை வாய்ந்தவையாகவே இருக்கின்றன.

    பறவைகள்   

    மரங்களின் நிலையைப் போன்றே, பல்வேறு வகையான பறவைகள் குறிஞ்சியிலும், முல்லையிலும் காணப்பட்டாலும், அவ்விரண்டு நிலங்களும் திரிந்த நிலமான பாலை நிலத்திற்குப் பறவைகளாகக் கணந்துள், எழால், பருந்து, வங்கா, புறா போன்றவற்றைக் குறிப்பிடுகின்றனா்.  மற்ற பறவைகளைக் குறிப்பிடாமல் இப்பறவைகளை மட்டும் குறிப்பிட்டமைக்குக் காரணம் வேனிற் வெப்பத்தினைத் தாங்கும் தன்மையைப் பெற்றமையாக இப்பறவைகள் விளங்கியமையே அதற்குக் காரணமாகும்.

    கணந்துள்

    [கணந்துள்–ஆள்காட்டி (Lapwing) – http://www.vallamai.com/?p=81865]

    பாலை நிலத்தில் வாழும் இப்பறவை நீண்ட கால்களையும் ஓங்கிய குரலெழுப்பும் இயல்புடையதாக இருந்தது என்பதை,

    பார்வை வேட்டுவன் படுவலை வொரிஇ

    நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ் விளி

     சுரம் செல் கொடியா் கதுமென இசைக்கும்(நற்:212:1-3)

    என்ற நற்றிணைப் பாடலடிகளில், ‘பாலை நிலத்தில் முயல் வேட்டைக்காகக் கட்டிய வலையைக் கண்டு நெடிய காலையுடைய கணந்துள் பறவை அச்சமுற்று மிகுந்த ஒலியெழுப்பும்.  அவ்வாறு கணந்துள் பறவைகள் கத்தும் ஓசை, பாலை நிலத்தின் வழியாகச் செல்லும் கூத்தா்கள் வழிச் செல்லும் வருத்தம் புலப்படாதவாறு திடீரென இசைக்கும் யாழிசையுடன் சோ்ந்து ஒத்து ஒலிக்கும்’ என்று கூறுவதில் கணத்துள் பறவை நீண்ட காலினையும் ஓங்கிய குரலையும் உடையது என்பது விளங்குகிறது.

    கொடிய தன்மை வாய்ந்த பாலை நிலத்தின் வழியாகச் செல்வோர், இப்பறவைகள் கத்துவதைக் கேட்டவுடன் இப்பகுதியில் ஆறலைக் கள்வா்கள் இருக்கின்றனரென அறிவா் என்பதை,

    நெடுங்காற் கணந்துள் ஆளறி வறீஇ

    ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்(குறுந்:350:5-6)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகள் விளக்குகின்றன.

    பருந்து

    பாலை நிலத்தில் வாழும் பறவைகளுள் ஒன்றான பருந்து, வானளாவி பறக்கும் தன்மை வாய்ந்தது.  நுண்ணிய பார்வையும் கூரிய வாயையுமுடைய இப்பறவை, நிணத்தினையே விரும்பி உண்பது. ‘ஆறலைக் கள்வா்களால் கொலை செய்யப்பட்ட வழிப்போக்கரின் நாறும் புலாலை விரும்பியுண்ணும் சிவந்த காதுகளையுடைய ஆண் பருந்து, நெருங்கிய தன் சுற்றத்தினை அழைத்துண்ணும்’ என்பதனை,

    படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி

     எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்(அகம்:161:5-6)

    என்ற அகநானூற்று பாடல் வரிகள் விளக்குகின்றன.

    பாலை நிலத்து ஆறலைக் கள்வா் போன்ற கொடிய தன்மை வாய்ந்த இப்பறவை உயா்ந்த மரக்கிளையில் கூடுகட்டி, முட்டை ஈன்று அக்கூட்டைச் சுற்றி வரும் பெட்டைப் பறவைக்கு, ஆண்பறவை இரையாகக் குடிகளில் வளா்க்கப்படும் கோழிக் குஞ்சுகளையும், சிறு குருவிகளையும் எலிகளையும் கொண்டு வரும் கொடிய பறவையாக இருக்கிறது.

    வங்கா

    பாலை நிலத்தில் வாழும் இப்பறவை, சிவந்த கால்களையும் புல்லாங்குழலின் ஓசையைப் போன்ற குரலையும் உடைய பறவை என்பதை,

    வங்காக் கடந்த செங்காற் பேடை

      எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது

     குழலிசைக் குரல் குறும்பல அகவும்(குறுந்:153:1-3)

    என்ற குறுந்தொகை அடிகளில் ‘ஆண் வங்காப் பறவை இரை தேடுவதற்காகச் சென்றுவிட்ட பொழுது, தனித்திருக்கும் சிவந்த கால்களையுடைய பெண் வங்கா, புல்லூறு என்னும் பறவை தன்னை இரையாகக் கொள்வதற்கு நெருங்கி வருவதைக் கண்டு தம்முடைய கணவனாகிய ஆண் பறவையை வேய்ங்குழல் போன்ற குரலினால் அழைக்கும்’ என்று கூறுவதிலிருந்து இப்பறவை சிவந்த கால்களையும், வேய்ங்குழல் போன்ற குரலினை உடையதுவென்றும், புல்லூறு என்னும் ஒருவகைப் பறவைக்கு அஞ்சி வாழும் இயல்பினது என்றும் உணர முடிகிறது.

    எழால்

    புல்லூறு என்னும் எழால் பறவையும் பாலை நிலத்தில் வாழ்ந்திருக்கிறது.  இப்பறவையைப் பற்றித் தொல்காப்பியர்,

    மயிலு மெழாஅலும் பயிலத் தோன்றும் (தொல்.பொருள்.மரபு:589)

    என்ற நூற்பாவில் ‘ஆண்மயிலையும், ஆண் எழாலையும் போத்து என்று கூறப்பெறும்’ என்று கூறுவதிலிருந்து இப்பறவை மயிலைப் போன்ற பெரிய பறவையாக இருக்குமென உணர வைக்கிறது.

    புறா

    பாலை நிலப் பாடல்களில் அதிகப் புலவா்களால் பாடப்பெற்ற பறவையான புறா, குறுகிய கால்களையும் சாம்பல் நிறம் போன்ற சிறகுகளையும் உடையது.  வறட்சிக் காலங்களில் புலா்ந்த நிலத்திலுள்ள பொரிந்த தானியங்களைக் கொத்தித் தின்னும் தன்மை வாய்ந்தது.  வேனிற் காலத்திலும் திரண்டிருக்கும் கள்ளிமரத்தில் கூடுகட்டி வெண்மையான முட்டை ஈனுவது என்பதை,

    “—————————– பாம்பின்

      உரிநிமிர்ந் தன்ன வுருப்பவிர் அமையத்து

      இரைவேட்டு எழுந்த சேவல் உள்ளிப்

      பொறிமயிர் எருத்தில் குறுநடைப் பேடை

      பொரிகாற் கள்ளி விரிகா யங்கட்டுத்

      தயங்க விருந்து புலம்பக் கூஉம்(குறுந்:154:1-6)

    என்ற பாடலில் ‘பாம்பானது உரி மேலெழுந்தாற் போன்ற கானல் விளங்குகின்ற நண்பகற்காலத்தில், இரை தேடுவதற்காக மேலெழுந்து பறந்து சென்ற ஆண் புறாவை நினைத்து, முட்டை ஈன்ற புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும், குறுக அடியிடும் நடையினையுடையதுமான பெண் புறா, பொரிந்த அடியையுடைய கள்ளி மரத்தில் வருந்திக் கொண்டிருக்குமென்று கூறுவதிலிருந்து, புறா கள்ளி மரத்தில் கூடுகட்டி வாழும் பறவை என்பது விளங்குகிறது.

    பாலை நிலங்களில் காணப்படும் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும் சங்கப் பாடல்கள் யாவுமே, தலைவியை விட்டுப் பொருளீட்டுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன், அந்நிலத்தில் காணப்படும் பறவைகளின் அன்புப் பிணைப்பினைக் கண்டு வருந்துவதாகவே அமைந்திருக்கின்றன.

    விலங்குகள்

    சங்க இலக்கியப் பாலைப் பாடல்களில் பாலை நிலத்தில் வாழும் விலங்காக, வலிமை இழந்த யானை, வலிமையிழந்த புலி, வலிமையிழந்த செந்நாய், கரடி போன்றவற்றையே குறிப்பிடுகின்றனர்.

    நிலம் திரியாக் காலங்களில் வலிமை வாய்ந்தவையாக இருக்கும் இவ்விலங்குகள், வேனிற் வெப்பத்தினால் காடழிந்த நிலையில் தேவையான இரை கிடைக்காததால் இவ்விலங்குகள் வலிமையிழந்து காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றன.

    யானை

    கரிய நிறத்தினையுடைய யானை, மலையில் வாழும் விலங்கினங்களுள் ஒன்று.  மலைகளில் விளைகின்ற தினையினை உண்ணுதலைக் காட்டிலும் மிதித்தலையே மிகுதியாகக் கொண்டிருக்கும் யானை, வேனிற் காலத்தில் புழுதிக் காடாகக் கிடக்கும் பாலை நிலத்தில் தாகம் தீர்க்கத் தண்ணீரின்றி கலங்கிய நீரை உண்ணுமென்பதை,

    துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

     பிடி ஊட்டி பின் உண்ணும்  களிறு(கலி:11:8-9)

    என்ற கலித்தொகைப் பாடலடிகளில் ‘துடிபோன்ற அடியினையுடைய ஆண்யானை, நீரற்ற பாலை நிலத்திலுள்ள கலங்கிய நீரைத் தான் உண்ணாமல் தன் பிடிக்குக் கொடுக்குமென்று கூறுவதிலிருந்து பாலை நிலத்தில் யானைகள் இருந்தன என்பது விளங்குகிறது.

    செந்நாய்

    பாலை நிலத்தில் வாழும் விலங்குகளை வேட்டையாடும் தன்மை வாய்ந்த செந்நாய், பசிய கண்களையும் நாய் போன்ற உருவமைப்பும் உடையது.  இத்தகைய கொடுமைத் தன்மை வாய்ந்த செந்நாயையும் நன்நாயாகப் புனைந்திருக்கும்,

    ஈா்ம்பிணவு புணா்ந்த செந்நாய் ஏற்றை

     மறியுடைய மான்பினை கொள்ளாது கழிய

     மரிய சுரன் வந்தனரே” (ஐங்:354:1-3)

    என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் ‘அன்புமிக்க நெஞ்சையுடைய பெண் நாயைப் புணா்ந்த செந்நாய், குட்டிகளையுடைய பெண்மானை இரக்கங் காரணமாக இரையாக வேட்டங்கொள்ளாமல் விட்டுச் செல்லும் பாலை நிலம்’ என்று கூறுவதில், பாலை நிலத்தில் செந்நாய் என்கின்ற ஒருவகை விலங்கு, மானைக் கொல்லும் தன்மையினவாக இருந்திருக்கிறது என்பதனை உணர முடிகிறது.

    புலி

    மலைகளில் வாழும் இவ்விலங்கு, யானையைத் தாக்குதலும், யானையால் தாக்கப்பட்டு வலி சோ்தலும் உண்டு.  யானை, செந்நாய், மரையினம் முதலியவற்றைக் கொன்று உண்ணும் கொடிய புலிக்கு உடலில் வளைந்த கோடும், கண்களில் செவ்விய நிறமும் உடையது.  இவ்விலங்கு நின்றபடியே இருபக்க நிகழ்வைப் பார்க்கும் தன்மை வாய்ந்தது.  இத்தகைய கொடுமைத் தன்மை வாய்ந்த இவ்விலங்கு, தான் கொன்ற விலங்குகளை மலைக் குகையிலே இட்டு வைத்திருந்ததென்பதை,

    ஒலிகழை நிவந்த வோங்கமலைச் சாரல்

     புலிபுகா விறுத்த புலவுநாறு கல்லளை

     ஆறுசென் மாக்கள் சேக்கும்

    கோடுயா பிறங்கன் மலை(குறுந்:253:5-8)

    என்ற குறுந்தொகைப் பாடலில், ‘ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளா்ந்த மலைப்பக்கத்தில், புலி தனக்குரிய உணவைச் சேகரித்து வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கற்குகையினிடத்து, வழிப்போக்கா்கள் தங்குவா்’ என்று கூறுவதில் ‘வேட்டையாடுதலில் வீரமிக்க புலி, தான் கொல்லும் விலங்கு இடப்பக்கம் விழுந்தால், அவ்விலங்கின் நிணத்தைத் தின்னுதலைத் துறக்கும்.  அத்தகைய தன்மை வாய்ந்த புலி வேனிற்காலத்தின் வறட்சியினால் கிடைக்கின்ற நிணத்தினைக் கற்குகையில் சேகரித்து வைத்து உண்ணுமெனப் பாலை நிலத்தில் வாழும் புலியின் நிலையினைக் குறிப்பிடுகின்றது.

    இவ்வாறாகக் கூறும் விலங்கின் நிலையாவுமே பாலை நிலத்தின் வறட்சியினை உணா்த்துவதாகவே அமைகிறது.

    மக்கள்

    பாலை நிலத்தில் வாழும் மக்கள் எயினா், எயிற்றியா், மறவா், மறத்தியா் என்று இலக்கண நூலாரும், உரையாசிரியா்களும் கூறுகின்றனா்.  இக்கருத்தினை ஏற்கும் வண்ணமாகப் பல சங்க இலக்கியப் பாடல்களில் எயினா், மறவா் என்னும் பெயா்க் குறிப்பு காணப்படுகிறது.

    கொடுவில் எயினா் குறும்பிற்கு ஊக்கும்

     கடுவினை மறவா் வில்லிடத் தொலைந்தோர்

     படுபிணம் கவரும் பாழ்படு நனந்தலை(அகம்:319:3-5)

    கொடுவில் எயினா் கோட்சுரம் படர(அகம்:79:15)

    என்ற அகநானூற்று அடிகள், ‘பாலை நிலமக்கள் எயினா், மறவா்’ என்பதனை உணர்த்துகின்றன.

    வேனிற் காலத்தில் மட்டும் பாலையாகக் காட்சி தரும் பாலை நிலத்தில், எயினா் எயிற்றியா் என்ற குடி நிலைத்திருந்தது என்பது ஏற்கத்தக்கதாக இல்லை.  இருப்பினும், சங்க இலக்கியங்களில் எயினா் பாலை நிலத்தில் வாழ்ந்தனா் என்ற குறிப்பு கிடைக்கிறது.  இதனடிப்படையில் பாலை நில மக்களாகக் கூறப்படும் எயினா் யார்? என்ற வினா நம்மிடையே தோன்றுகிறது.  அவ்வினாவிற்குப் பதில் கூறும் வண்ணமாகச் ச. கு. கணபதி அவர்கள், “நாட்டிலே அரசரது ஆணையை மதியாமல் கொலை, கொள்ளை, திருட்டு முதலிய குற்றங்களைச் செய்தவா்களை, அரசா் நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். அவ்வாறாக மன்னனால் வெளியேற்றப்பட்ட அம்மக்கள் குடும்பங்களுடன் பாலை நிலத்திலே வாழ்க்கையை நடத்தக் குடிபுகுந்தனா்,  அம்மக்களே எயினராவா்.  குற்றம் புரிந்தவா்களைக் கொலை புரியும் அக்காலத்தில், அம்மக்களை மன்னன் கொலை புரியாமல், காட்டுப் பகுதியில் வாழ வைத்ததற்குக் காரணம் போர்க் காலங்களில் போருக்குப் பயன்படுத்துவதற்காகவே” என்று குறிப்பிடுகிறார். அப்போரிலே அம்மக்கள் மாண்டு போவதாக  நம்பிக்கை.

    எயினர்

    பாலை நிலமக்களைப் பற்றிச் சங்கப் பாடல்களில் எயினரெனப் பல குறிப்பு காணப்படுவதால், காடுகளிலும் மலைகளிலுமென இரண்டு பகுதியிலும் எயினரெனும் ஒருவகை குடி வாழ்ந்திருக்கலாம்.  அக்காடும் மலையும் திரிந்து பாலையாகிய காலத்து, காடுகளில் வாழ்ந்த ஆயரை நில மக்களாகக் கொள்வதா? அல்லது மலைகளில் வாழ்ந்த குறவரை நிலமக்களாகக் கொள்வதா? என்ற குழப்பம் நிலவியிருக்கும்.  இந்நிலையில் இரண்டு குடியிலும் சிறுகுடியாக வாழ்ந்த எயினா் குடி, இரண்டு நிலங்களும் திரிந்து ஒருநிலமாகிய காலத்து அந்நிலத்திற்குரிய பெருங்குடியாகி இருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.

    குறிஞ்சியும் முல்லையுமே பாலையாதலால், குறிஞ்சியிலும், முல்லையிலுமென இரு நிலங்களிலும் வாழ்ந்த எயினரே இந்நிலத்திற்குரிய குடிமக்களாக இருந்தனா் என்பது தெளிவாகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1. அகப்பொருள் விளக்கம், கோவிந்தராச முதலியார் (குறிப்புரை), திருநெல்வெலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை.
    2. ஐங்குறுநூறு, சோமசுந்தரனார், பொ. வே, திருநெல்வெலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை.
    3. கலித்தொகை, விசுவநாதன், அ., நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி) லிட், சென்னை.
    4. குறுந்தொகை, சண்முகம் பிள்ளை,மு., தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    5. குறுந்தொகை, சாமிநாதையர், உ. வே., அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
    6. சிலப்பதிகாரம், ஸ்ரீ சந்திரன், ஜெ., வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
    7. சிறுபாணாற்றுப்படை, சோமசுந்தரனார், பொ. வே., திருநெல்வெலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
    8. தமிழ் இலக்கிய வரலாறு, அடைக்கலசாமி, எம். ஆர்., ராசி பதிப்பகம், சென்னை.
    9. தமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம், வௌ்ளைவாரணனார், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
    10. தெய்வங்களும் சமூக மரபுகளும், பரமசிவன், தொ., நியூ செஞ்சுரி புக் அவுஸ் லிமிடேட், சென்னை.
    11. தொல்காப்பியம் – பொருளதிகாரம், இளம்பூரணனார், சாரதா பதிப்பகம், சென்னை-600014.
    12. நற்றிணை, பாலசுப்பிரமணியன், கு. வே, நியூ செஞ்சுரி புக் அவுஸ்., சென்னை.
    13. வாழ்வியல் களஞ்சியம் (தொகுதி மூன்று), பாலுசாமி, ந. (பதிப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம்

    ================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழ் நில அமைப்பில் பாலை நில உருவாக்கம் பற்றிய தெளிவை முன்வைக்கும் தன்மையில் இக்கட்டுரை அமைந்துள்ளது. பாலை நில உருவாக்கத்தைத் தெளிவுபடுத்த, ஆய்வாளர் தொல்காப்பியம் மற்றும் நம்பியகப்பொருள் கூறும் நிலம் சார்ந்த செய்திகள், தொல்காப்பிய உரையாசிரியர்கள், வெள்ளைவாரணர் மற்றும் இரா.மாணிக்கனார் போன்றோர் கருத்துகள், சிலப்பதிகாரம் கூறும் வரையறை ஆகிய சான்றாதாரங்களைக் கொண்டு பாலை நிலம் உருவான தன்மையை விளக்கியுள்ளார்.

    மேலும் பாலை நிலத்திற்கு வரையறை செய்யப்பட்ட உரிப்பொருள், கருப்பொருள்கள் சார்ந்து, சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பாடல் அடிகளைச் சான்றுகாட்டி  நிறுவியுள்ளார். குறிப்பாக எட்டுத் தொகையில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாலை நிலம் சார்ந்த பதிவுகளையும் பத்துப் பாட்டில் ஆற்றுப்படை நூல்களில் இடம் பெற்றுள்ள பதிவுகளையும் சான்று காட்டியுள்ளார்.

    பாலை நிலம் என்பதும் பாலை நிலமக்கள், பொருள்கள் என்பதும் தற்கால நாவல், சிறுகதைகளில் வரும் கற்பனை போன்றது என்று கூறுமிடத்து ஆய்வாளர் சற்று இன்னும் சிந்தித்துப் பதிவு செய்திருக்கலாம். இருப்பினும் ஆய்வாளர் பாலை நிலம் சார்ந்த ஒரு தெளிவை, இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்களுக்குத் தரும் தன்மையில் அமைத்திருப்பது வரவேற்கத் தக்க ஒன்று. மேலும் இறையனார் அகப்பொருள், மாறன் அகப்பொருள், ஐந்திலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள பாலை நிலம் சார்ந்த பதிவுகளையும் ஆய்வில் சுட்டிக் காட்டி இருப்பின் கட்டுரைக்குச் சிறப்பு சேர்த்திருக்கும். ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

    ================================================

    Share
  • (Peer Reviewed) குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு

    ஸ்ரீ.நடராஜன் , முனைவர் ரெ.சந்திரமோகன்

    முதுஅறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை
    ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை
    மின்னஞ்சல்: natarajangravity@gmail.com, rathinam.chandramohan@gmail.com

    ====================================================

    குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு

    பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும் , பிரபஞ்சத்தின் மூலநிலை மற்றும் அதன் இயக்கத்தைப் பற்றியும், பெருவெடிப்புத் தத்துவத்தில் மாற்றங்களையும் இக்கட்டுரை வாயிலாகக் காணலாம். மேலும் பிரபஞ்சமானது குதித்தெழும் ஒப்புருவாக ஆய்வு செய்யப்படுவதையும் இக்கட்டுரையில் காண்போம். பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பற்றிக் கணித முறையில் விளக்குவதற்குப் பல்வேறு ஒப்புருக்கள் இருந்தாலும், இயற்பியல் ரீதியிலான பெருவெடிப்புத் தத்துவமானது வெற்றிகரமான ஒப்புருவாக உள்ளது. பெருவெடிப்புத் தத்துவமானது, சமீபத்திய ஆய்வு முடிவுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    விரிவடையும் பிரபஞ்ச அமைப்பு, பிரபஞ்சப் பின்புல வெப்பநிலை ஆகியவை பெருவெடிப்புத் தத்துவத்திற்கு ஆதாரமாக அமைகின்றன. இப்பெருவெடிப்பு தத்துவத்தைப் பற்றிச் சற்று சுருக்கமாகக் காண்போம். இதன் வாயிலாகப் பெருவெடிப்புத் தத்துவமானது, எங்ஙனம் சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். பெருவெடிப்புத் தத்துவத்தின் உருவாக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தொடங்குகிறது. காமோவ் மற்றும் அவர்களது குழுவினரால்[1] இத்தத்துவம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.

    பெருவெடிப்புத் தத்துவத்தின்படி பிரபஞ்சமானது, ஒரு சிறு புள்ளியில் இருந்து உருவாக ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது மூலநிலைப்புள்ளி(singularity) என்று அழைக்கப்படுகிறது. இம்மூலநிலைப் புள்ளியானது மிகுந்த அடர்த்தியுடனும், மிகுந்த அழுத்தத்துடனும், அதிக வெப்பத்துடனும் இருக்கும் என வரையறுக்கப்படுகிறது. இப்புள்ளியிலிருந்து பிரபஞ்சமானது விரிவடைந்து, குளிர்ந்து, தற்போது நாம் காணும் பரந்து விரிந்த பிரபஞ்சமாகத் தோற்றம் அளிக்கிறது என்பதைப் பெருவெடிப்புத் தத்துவம் முன்வைக்கிறது[2].

    இவ்வாறாக பிரபஞ்சமானது விரிவடையும் போது, வெப்பநிலை குறைவதால் அடிப்படைத் துகள்கள், அணுக்கள் மற்றும் அணுக் கூட்டங்கள் என்ற தொடர்ச்சியான மாற்றங்கள் உருவாகின்றன[3]. இச்செயல்பாடே தற்போதைய இயற்பியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்புருவுக்குச் சிறந்ததொரு ஆதாரமாக விளங்குகிறது. பிரபஞ்சம் விரிவடைவது மற்றும் அதன் வெப்பநிலை குறைவதுமான இரு பெரும் தத்துவங்கள் தற்போதும் நிரூபிக்கப்பட முடியும். வகை IA சூப்பர் நோவா தரவுகள்[4] மற்றும் பிரபஞ்சத்தின் பின்புல வெப்பநிலைத் தரவுகள்[5] ஆகியவை பெருவெடிப்புத் தத்துவத்திற்கு மாபெரும் வெற்றியைத் தருகின்றன. பிரபஞ்சம் விரிந்து கொண்டே இருப்பதை சூப்பர்நோவா தரவுகள் நிரூபிக்கின்றன. பிரபஞ்சம் குளிர்ந்து கொண்டே வருவதை பின்புல வெப்பநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வகையான பிரபஞ்சம் ஃப்ரீட்மேன் பிரபஞ்சம் என அழைக்கப்படுகிறது.

    இதுபோன்ற ஒரு சமன்பாடு ஐன்ஸ்டைனின் பிரபஞ்ச ஆய்வில் தெரிவிக்கப்பட்டது[6].
    ஐன்ஸ்டைனின் பிரபஞ்ச ஒப்புருவில் பிரபஞ்சம் விரிவடைவதைப் பிரபஞ்ச மாறிலி என்னும் சமன்பாட்டு நேரமைவின் மூலம் அவர் புகுத்தினார். பின்னர் வந்த அமெரிக்க வானியல் ஆய்வாளரான ஹப்பிள், பிரபஞ்சம் விரிவடைவதை நிரூபித்தவுடன்[7] ஐன்ஸ்டைன் தனது ஒப்புருவில் சேர்க்கப்பட்ட மாறிலியானது பிழை என்று அறிவித்தார்.

    இச்சமன்பாடுகள் செயலாக்கப்பட்ட அதே சமயம், இயற்பியலில் மணிமகுடமாகத் திகழும் குவாண்டம் இயற்பியலின் சமன்பாடுகள் வரையறுக்கப்பட்டும் வந்தன. குவாண்டம் இயற்பியலானது நுண்ணிய அளவிலான அடிப்படைத் துகள்கள், அலைகள் மற்றும் புலங்கள் ஆகியவற்றில் இயக்கத்தை வரையறுத்தது. மேலும் தொன்மை அளவில் சாத்தியமில்லாத சில மாறுபட்ட கருத்துகளையும் நிரூபித்தது. எடுத்துக்காட்டாக குவாண்டம் உட்புகுதல், துகள் – அலை இரட்டைக் கோட்பாடு மற்றும் நிலையில்லாக் கோட்பாடு ஆகியவை தொன்மை அளவில் சாத்தியமில்லாத அல்லது நிரூபிக்க முடியாத கோட்பாடுகளாகும். அவை குவாண்டம் அளவில் அதிகாரத்தில் உள்ளன[8].

    குவாண்டம் இயற்பியலின் குவாண்டமாக்கல் செயல்முறை அடிப்படை நிலையில், துகள்கள் மற்றும் அலைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான விளக்கத்தைத் தந்தது. உதாரணமாக மின்காந்த அலைகளைக் குவாண்டமாக்கல் என்னும் பகுப்பாய்வு செய்யும் போது அவை போட்டான்கள் எனும், சிறு சிறு ஆற்றல் சிப்பங்களாக அல்லது குவாண்டம் துகள்களாக இருப்பது தெரியவந்தது. இவ்வகையில் பிரபஞ்சத்தின் மூல நிலையும் குவாண்டமாக்கல் கணக்கீடுகளுக்குள் உட்புகுத்த முடியும் என்பதாக அறிவியல் அறிஞர்கள் ஆராயத் தொடங்கினர்.

    நீண்ட காலமாகப் பிரபஞ்சத்தின் மூல நிலையைப் பற்றிய கருத்துகள் வெளிவந்தாலும் எவற்றாலும் அங்கு உள்ள ஈர்ப்பு விசை பற்றியோ அல்லது காலவெளியின் நிலையைப் பற்றியோ தெளிவாக விளக்க முடியவில்லை. ஈர்ப்புவிசையைக் குவாண்டமாக்கும் பல்வேறு கருதுகோள் முயற்சிகளும்  இறுதியில் மூலப் புள்ளியில் குவாண்ட அமைப்புகளை விளக்க முடியாமல் நின்று விட்டன[9].

    மூலநிலைப் புள்ளியை அவ்வளவு சீக்கிரமாக குவாண்டமாக்கல் செயல்முறைக்கு உட்படுத்த முடியாததற்குக் காரணம், அங்கு அதிகமான கால வெளியின் வளைவுகள் இருப்பதும் மற்றும் பிரபஞ்சத்தின் பருமன் சுழியம் ஆவதும் ஆகும். மேலும் அங்கு குவாண்டம் விளைவுகள், மிக அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகவே மூலநிலையைத் தெளிவுறக் குவாண்டமாக்க முடியாததும் மேலும் ஈர்ப்பு விசையைக் குவாண்டமாக்க முடியாததுமான சிக்கலை இயற்பியலுக்குத் தந்தது. மேலும் ஈர்ப்பு விசையைக் குவாண்டமாக்கும் செயல்முறைகளில் பின்புலக் காலவெளியின் ஆதிக்கத்தைத் தவிர்த்ததான சமன்பாட்டினை உருவாக்குவது என்பது சாத்தியம் இல்லாததாகவே இருந்து வந்தது. மேலும் மூலப் புள்ளியைத் தவிர்த்த பிரபஞ்ச ஒப்புருவை உருவாக்குவதும் சாத்தியமில்லாததாகவே இருந்தது.

    இவ்வாறான சிக்கலைத் தவிர்க்கவே வளையக் குவாண்டம் பிரபஞ்ச ஒப்புரு[10] என்னும் ஒப்புருவானது முன்வைக்கப்படுகிறது. இவ்வொப்புருவில் காலவெளியானது சுழல் வலைப்பின்னல் அமைப்புகளால் கட்டமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு குவாண்டம் பரப்பும் குவாண்டம் அளவில் ஒரே மாதிரியான தொகுப்பைக் கொண்டிருக்கும் எனவும் வரையறுக்கப்படுகிறது. இவ்வாறாக பிரபஞ்சத்தின் காலவெளியானது குவாண்டமாக்கப்படுகிறது. அதாவது குவாண்டம் அளவில் பிரபஞ்சமானது தொடர்ச்சியாக இல்லாமல் சிறு சிறு குவாண்டம் பகுதிகளாக இருப்பதாக அறியமுடிகிறது.

    இத்தகைய கணிதவியல் அளவீடுகள் மூலம், மூலநிலைப் புள்ளியையும் எளிமையாக குவாண்டமாக்க முடியும். அதாவது மூலநிலைப் புள்ளியில் கொள்ளளவு என்பது சுழியமாக அமையாமலும், மேலும் காலவெளியின் வளைவுகள் குறிப்பிட்ட பெரும அளவுகளுக்குள் அமைவதையும் புரிந்துகொள்ள முடியும். ஆகையால் தொன்மை இயற்பியல் அளவில் விவரிக்க இயலாத பிரபஞ்ச மூலநிலைப் புள்ளியை குவாண்டம் அளவில் வளையக் குவாண்டம் பிரபஞ்ச ஒப்புரு மூலம் தெளிவாக விளக்க முடியும். மேலும் மூல நிலைப் புள்ளிக்குச் சற்று முன்னதான மற்றும் சற்றுப் பின்னதான சூழலிலிருந்து பிரபஞ்சம் எவ்வாறு பரிணமித்திருக்கும் என்பதையும் இக்கணித வரையறைகள் மூலம் சொல்ல முடியும்.

    இம்மூலநிலைப் புள்ளியில் பிரபஞ்சமானது வித்தியாசமான இயக்கவியலைப் பெற்றுள்ளது. தொன்மை இயக்கவியலைப் பொறுத்தவரையில் பிரபஞ்சமானது மூலநிலைப் புள்ளியில் இருந்து வெகு வேகமாகப் பரிமாற்றம் அடைந்து தற்போதுள்ள பிரபஞ்சம் வரையில் விரிந்து வந்ததாகச் சொல்லப்பட்டாலும், வளையக் குவாண்டம் பிரபஞ்சவியலைப் பொறுத்தவரை பிரபஞ்சமானது, மூல நிலைப் புள்ளியைப் பொறுத்து, குதித்தெழும் பிரபஞ்சமாக[11] ஒப்புமைப் படுத்தப்படுகிறது.

    அதாவது மூலநிலைப் புள்ளியை நோக்கி வரும் பிரபஞ்சம் மூல நிலைப் புள்ளிக்கு அருகில் மாறுநிலை அடர்த்தியை எய்தும். அப்போது பிரபஞ்சமானது குதித்தெழும் தன்மையுடன் மீண்டும் விரிந்து செல்லும். மேலும் இச்சூழ்நிலையில் ஈர்ப்பு விசையானது தள்ளும் இசையாக அல்லது விலக்கு விசையாகச் செயல்படுவதையும் இக்கருத்துருவாக்கம் முன்வைக்கிறது. ஆகவே பிரபஞ்சமானது குதித்தெழும் பிரபஞ்சமாக, குவாண்டம் இயக்கவியல் மூலம் கணித முறையில் வரையறுக்கப்பட முடியும். இவ்வாறான பிரபஞ்ச ஒப்புரு, பல்வேறு மூலநிலைச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    மேற்கோள்கள்
    1. Gamow, G. (1982). by G. Gamow, Phys. Rev. 70,572 . Unity Of Forces In The Universe (In 2 Volumes), 1, 459,1946.
    2. Linder, E. V. (2003). Exploring the expansion history of the universe. Physical Review Letters, 90(9), 091301.
    3. Wagoner, R. V. (1973). Big-bang nucleosynthesis revisited. The Astrophysical Journal, 179, 343-360.
    4. Riess, A. G., Strolger, L. G., Casertano, S., Ferguson, H. C., Mobasher, B., Gold, B., … & Tonry, J. (2007). New Hubble space telescope discoveries of type Ia supernovae at z≥ 1: narrowing constraints on the early behavior of dark energy. The Astrophysical Journal, 659(1), 98.
    5. Schlegel, D. J., Finkbeiner, D. P., & Davis, M. (1998). Maps of dust infrared emission for use in estimation of reddening and cosmic microwave background radiation foregrounds. The Astrophysical Journal, 500(2), 525.
    6. Winberg, S. (1972). Gravitation and cosmology. ed. John Wiley and Sons, New York.
    7. Hubble, E. (1929). A relation between distance and radial velocity among extra-galactic nebulae. Proceedings of the National Academy of Sciences, 15(3), 168-173.
    8. Sakurai, J. J., & Commins, E. D. (1995). Modern quantum mechanics, revised edition.
    9. DeWitt, B. S. (1967). Quantum theory of gravity. I. The canonical theory. Physical Review, 160(5), 1113.
    10. Bojowald, M. (2008). Loop quantum cosmology. Living Reviews in Relativity, 11(1), 4.
    11. Wilson-Ewing, E. (2013). The matter bounce scenario in loop quantum cosmology. Journal of Cosmology and Astroparticle Physics, 2013(03), 026.

    ===================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும், பிரபஞ்சத்தின் மூலநிலை மற்றும் அதன் இயக்கத்தைப் பற்றியும், பெருவெடிப்புத் தத்துவத்தில் மாற்றங்களையும் இக்கட்டுரை வாயிலாகக் காண முடிகிறது. மேலும் பிரபஞ்சமானது இக்கட்டுரையில் குதித்தெழும் ஒப்புருவாக ஆய்வு செய்யப்படுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பற்றிக் கணித முறையில் விளக்குவதற்குப் பல்வேறு ஒப்புருக்கள் இருந்தாலும், இயற்பியல் ரீதியிலான பெருவெடிப்புத் தத்துவமானது வெற்றிகரமான ஒப்புருவாக உள்ளது. பெருவெடிப்புத் தத்துவமானது, சமீபத்திய ஆய்வு முடிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விரிவடையும் பிரபஞ்ச அமைப்பு, பிரபஞ்சப் பின்புல வெப்பநிலை ஆகியவை பெருவெடிப்புத் தத்துவத்திற்கு ஆதாரமாக அமைகின்றன.

    தொன்மை இயக்கவியலைப் பொறுத்தவரையில் பிரபஞ்சமானது மூலநிலைப் புள்ளியில் இருந்து வெகு வேகமாகப் பரிமாற்றம் அடைந்து, தற்போதுள்ள பிரபஞ்சம் வரையில் விரிந்து வந்ததாகச் சொல்லப்பட்டாலும், வளையக் குவாண்டம் பிரபஞ்சவியலைப் பொறுத்தவரை பிரபஞ்சமானது, மூல நிலைப் புள்ளியைப் பொறுத்துக் குதித்தெழும் பிரபஞ்சமாக ஒப்புமைப்படுத்தப்படுகிறது. அதாவது மூலநிலைப் புள்ளியை நோக்கி வரும் பிரபஞ்சம், மூல நிலைப் புள்ளிக்கு அருகில் மாறுநிலை அடர்த்தியை எய்தும். அப்போது பிரபஞ்சமானது குதித்தெழும் தன்மையுடன் மீண்டும் விரிந்து செல்லும். மேலும் இச்சூழ்நிலையில் ஈர்ப்பு விசையானது தள்ளும் விசையாக அல்லது விலக்கு விசையாக செயல்படுவதையும் இக்கருத்துருவாக்கம் முன்வைக்கிறது. ஆகவே பிரபஞ்சமானது குதித்தெழும் பிரபஞ்சமாக, குவாண்டம் இயக்கவியல் மூலம் கணித முறையில் வரையறுக்கப்பட முடியும். இவ்வாறான பிரபஞ்ச ஒப்புரு, பல்வேறு மூலநிலைச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    பெரும் பாய்ச்சலில் பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என்று குறிப்பிடும் ஆய்வாளர்கள், தமது கோட்பாட்டைப் பெருவெடிப்பு நியதியோடு ஒப்பிட்டு இன்னும் தெளிவாக விளக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு சுருக்கவுரை பிறகு விரிவுரை, இறுதியில் முடிவுரை என்ற அமைப்பில் பிரபஞ்சத் தோற்றக் கோட்பாடுகளைப் படத்துடன் ஆய்வுக் கருத்துரையாக அமைத்துக் காட்ட வேண்டும்.

    ஆய்வாளர்கள், இந்தக் கட்டுரையையும் கவனித்திருக்கலாம்: http://www.vallamai.com/?p=82254

    ===================================================

    Share
  • (Peer Reviewed) தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு

    தி.மோகன்ராஜ்

    (முனைவர்ப் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010)

    (கட்டுரையாளர், தொல்காப்பியத் தொடரியல் நோக்கில் ஐங்குறுநூறு என்ற தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இவரது மின் அஞ்சல் : mohr_d12@yahoo.co.in; கைப்பேசி : +91 99947 81727)

    =================================

    தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு

    பெயர்ச்சொற்கள் தோற்றங்கொள்ளும் முறை

    ஒரு மொழியில் பெயர்ச்சொற்கள் நான்கு வகைகளில் புதியனவாக ஆக்கிக் கொள்ளப்படுகின்றன என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்.  இதனைப் பெயராக்கம் (Derivation of nouns) என்று வழங்குவர்.  அவை

    1. பெயரிலிருந்து பெயராக்கம்
    2. வினையிலிருந்து பெயராக்கம்
    3. பெயரடையிலிருந்து பெயராக்கம்
    4. வினையடையிலிருந்து பெயராக்கம்

    என்பனவாம்.

    முருகன், அழகன், தமிழ்க்கல்வி, நூலகம், முருகக்கடவுள் போன்றன பெயரிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள். இந்த வகையை ‘Derivation of nouns from nouns’ என்று அழைப்பர். வளர்பிறை, பொங்கல், கற்றவன், பாடுநர் போன்றன வினையிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள்.  இந்த வகையை ‘Derivation of nouns from verbs’ என்று அழைப்பர்.  நன்னடை, இன்னிசை, நல்லொழுக்கம் போன்றன பெயரடையிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள்.  இந்த வகையை ‘Derivation of nouns from adjectives’ என்று அழைப்பர். தமிழிலும் வேறுபல மொழிகளிலும் வினையடையிலிருந்து பெயர்ச்சொற்கள் உருவாவதில்லை. ஒருசில மொழிகளில் மட்டுமே இந்த வகையில் பெயர்கள் தோற்றம் கொள்கின்றன. இந்த வகையை ‘Derivation of nouns from adverbs’ என்று அழைப்பர்.  இக்கட்டுரை, வினையிலிருந்து தோற்றங்கொள்ளும் பெயர்ச்சொற்களைப் (Derivation of nouns from verbs) பற்றித் தொடரியல் நோக்கில் ஆய்கிறது.

    வினையிலிருந்து தோன்றும் பெயர்ச்சொற்கள்

    தமிழ்மொழியில் வினையை உறுப்பாகக் கொண்டு தோற்றங்கொள்ளும் பெயர்ச்சொற்களை ஐந்து பெரும் பிரிவுகளுள் அடக்கலாம்.  அவை

    1. வினையடிப் பெயர்
    2. வினைத்தொகை
    3. ஆக்கப்பெயர்
    4. தொழிற்பெயர்
    5. வினையாலணையும் பெயர்

    ஆகியன.  இவை வினைப்பெயர்கள் (Verbal nouns) எனப்படும்.  இந்த ஐந்து வகையான வினைப்பெயர்களின் தொடரிலக்கண இயல்புகள் ஒவ்வொன்றாக இக்கட்டுரையில் விளக்கப்பெறுகின்றன. (வினையடியின் விகுதி திரிந்து சில வினைகள், பெயரோடு இணைந்து பெயர்ச் சொற்களாக வரும். மண்வெட்டி, மரங்கொத்தி, தொலைபேசி, கடனாளி, தொழிலாளி போன்ற சொற்கள், அவ்வாறு உருவானவையே. இவை ஆக்கப்பெயர்களின்கீழ் அடங்குமெனினும் இக்கட்டுரையின் ஏனைய வகைப்பாட்டுச் சொற்களைப் போன்று சொல்லின் முதலில் நிற்காமல் இறுதியில் நிற்பனவாதலான் இக்கட்டுரையில் ஆராயப் பெறவில்லை.  இக்கட்டுரையின் வகைப்பாட்டில் கொள்ளப்பட்டுள்ள வினைகள் அனைத்தும் சொல்லின் முதலில் நிற்பன மட்டுமேயாம்.)

    1. வினையடிப் பெயர்

    பொதுவாகப் பல மொழிகளில் காணப்படுவதைப் போன்று தமிழிலும் ஒருசில வினையடிகள் பெயராகவும் செயல்படுகின்றன.  அடி, அணி, அருள், உரை, அறை, பூ, காய் ஆகியன வினையடியே பெயராக வந்த பெயர்ச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளாகச் ச.அகத்தியலிங்கம் பட்டியலிடுகிறார் (ச.அகத்தியலிங்கம், 2011, ப.75).  இவை போன்று குத்து, கனி, ஆள் ஆகிய வினையடிகளும் பெயர்ச்சொற்களாகச் செயல்படும் தன்மை கொண்டவை.  இவை தமிழ் இலக்கணிகளால் முதனிலைத் தொழிற்பெயர்கள் என்று வழங்கப்படும்.

    அட்டவணை-1: பெயராகவும் வினையாகவும் வரும் வினையடிகளின் எடுத்துக்காட்டுகள்

    வ.எண் பெயராக வினையாக
    1. அடி விழுந்தது நீ அவனை அடி
    2. காதில் உள்ள அணி அழகாக இருக்கிறது இந்த நகையை நீ அணி
    3. அருள்  கிடைத்தது இறைவா! எனக்கு அருள்
    4. ஆற்றிய உரை  சிறப்பாக அமைந்தது நீ பதில் உரை
    5. பூ மணக்கிறது முல்லை மாலையில் பூக்கும்
    6. காய் வாங்கினேன் மாமரம் காய்த்தது
    7. குத்து விட்டான் அவனைக் குத்து
    8. கனி  சுவையாக இருந்தது பழம் நன்றாகக் கனிந்தது
    9. ஓர் ஆள் வருகிறார் நீ இந்த நாட்டை ஆள்

    இவ்வாறு தோன்றும் பெயர்கள், தங்கள் வினைத் தன்மையை இழந்து, முற்றிலும் பெயர்ச்சொல்லின் தன்மையைப் பெறுகின்றன. தொடரமைப்பில் இவை பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர் (Adjective phrase), பெயரெச்சக் கிளவியம் (Adjective clause), வேற்றுமை உருபுகள் ஆகியவற்றை ஏற்று ஒரு பெயர்ச்சொல்லுக்கான அனைத்துப் பண்புகளையும் பெற்று அமைகின்றன.

    நல்ல அடி                               – பெயரடையை ஏற்றது

    விழுந்த அடி                           – பெயரெச்சத்தை ஏற்றது

    நல்ல பலமான அடி               – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    அவன் அடித்த அடி               – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    அவன் அடியைத் தாங்கிக் கொண்டான் – வேற்றுமை உருபை ஏற்றது

    ஓடு, நட, படி, கொடு போன்ற வினையடிகள் பெயர்ச்சொற்களாக அமைவதில்லை.  பூ, உரை, அடி, கனி போன்ற வினையடிகளே பெயர்ச்சொற்கள் ஆகின்றன.  இதன் மூலம் எல்லா வினையடிகளும் பெயராவதில்லை என்பதை அறியலாம் (பொற்கோ, 2011, ப.50).

    1. வினைத் தொகை

    ஒரு வினையடி முதலில் நின்று ஒரு பெயர்ச்சொல்லோடு இணையும்போது வினைத்தொகை அமைப்பில் ஒரு பெயர்ச்சொல் உருவாகிறது. உயர்திணை, வளர்தமிழ், சுடுசோறு, அடுமனை ஆகியன வினைத்தொகைகள்.  வினைத்தொகை மூன்று காலத்தையும் குறிப்பாக உணர்த்தும் என்று இலக்கணவியலார் விளக்குவர்.  ஒரு பொருளின் தன்மையையே வினைத்தொகையின் வினையடி உணர்த்துகிறது என்று மொழியியலார் கருதுகின்றனர் (ச.அகத்தியலிங்கம், 2011, ப.75).  கொல்களிறு என்பது இலக்கணவியலாளர்களால் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு என்று விளக்கப்படும் நிலையில், மொழியியலார் கொல்லும் பண்பினை உடைய களிறு என்றே விளக்குவர் (செ.வை.சண்முகம், 2008, ப.75).  எவ்வாறு இருப்பினும் வினைத்தொகையாக அமையும் பெயர்ச்சொற்கள், வினையடியே பெயராக அமைந்த பெயர்ச்சொற்களைப் போன்று தமது வினைப் பண்பினை இழந்து பெயர்ச்சொல்லின் பண்பினையே கொண்டுள்ளன.

    சுவையான சுடுசோறு                        – பெயரடையை ஏற்றது.

    கொதித்த சுடுசோறு                            – பெயரெச்சத்தை ஏற்றது

    நல்ல சுவையான சுடுசோறு          – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    அவன் வடித்த சுடுசோறு                  – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    அவன் சுடுசோற்றை உண்டான் – வேற்றுமை உருபை ஏற்றது.

     

    1. ஆக்கப்பெயர்

    வினையடிகளுடன் ஒருசில விகுதிகள் சேர்ந்து ஆக்கப்பெயர்கள் உருவாகின்றன.  அம், நர், அல், கை, வி, வை என்பன போன்ற பல விகுதிகளைக் கொண்ட ஆக்கப்பெயர்கள் தமிழில் உள்ளன. உயரம், ஓட்டுநர், வறுவல், அழுகை, கல்வி, பார்வை போன்ற ஆக்கப்பெயர்கள், அவ்வாறு உருவானவையே. இவையும் மேற்கண்ட வினையடிப் பெயர்கள் மற்றும் வினைத்தொகைகளைப் போன்று முழுமையாகப் பெயரின் தன்மையையே பெற்றிருக்கின்றன.

    நல்ல கல்வி                                 – பெயரடையை ஏற்றது

    உயர்ந்த கல்வி                        – பெயரெச்சத்தை ஏற்றது

    நல்ல திறமான கல்வி         – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    நான் கற்ற கல்வி                   – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    கல்வியால் உயர்ந்தான்   – வேற்றுமை உருபை ஏற்றது

     

    1. தொழிற்பெயர்

    தொழிற்பெயரும் ஆக்கப்பெயரைப் போன்றே வினையடிகளுடன் ஒருசில விகுதிகள் சேர்வதன் மூலம் உருவாகிறது. தல், அல் போன்ற பல விகுதிகளைக் கொண்ட தொழிற்பெயர்கள் தமிழில் காணப்படுகின்றன. வாழ்தல், ஓடுதல், ஓடல் ஆகியன தொழிற்பெயர்கள் ஆகும். மேற்கண்ட வினையடிப் பெயர்கள், வினைத் தொகைகள், ஆக்கப்பெயர்கள் போன்றல்லாமல் இவை தமது வினைத்தன்மையை முழுதும் இழக்காமலேயே பெயர்களாக அமைந்துள்ளன. அதாவது வேற்றுமை உருபுகளை ஏற்கும் அதே வேளையில் தொடரமைப்பில் இவை பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்காமல் வினைச்சொற்களைப் போன்று வினையடை, வினையெச்சம், வினையெச்சத் தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றையே ஏற்று வருகின்றன (நுஃமான், 2013, ப.69).

    அவன் ஓடுதலை விரும்பினான்       – வேற்றுமை உருபை ஏற்றது

    நன்றாக ஓடுதல் (நல்லது)                      – வினையடையை ஏற்றது

    எழுந்து ஓடுதல் (நல்லது)                        –  வினையெச்சத்தை ஏற்றது

    மிகவும் நன்றாக ஓடுதல் (நல்லது)  – வினையெச்சத் தொடரை ஏற்றது

    அவன் சொல்லும்போது ஓடுதல் (நல்லது)  –  வினையெச்சக் கிளவியத்தை ஏற்றது

    மேலும், வினைகள் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவி வருவதைப் போன்று தொழிற்பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவி, வாக்கியத்தில் இடம் பெறுகின்றன.

    அவனோடு ஓடுதல் (நல்லது)           – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

    மைதானத்தில் ஓடுதல் (நல்லது)     – ஏழாம் வேற்றுமையோடு வந்தது

    மேற்கண்ட தொடர்களை ‘ஓடுதல் அவனோடு நல்லது’ என்றும் ‘ஓடுதல் மைதானத்தில் நல்லது’ என்றும் வேற்றுமை ஏற்ற பெயரின் இடத்தை மாற்றியமைத்தால் பொருள் முழுவதுமாக மாறிவிடும். வேற்றுமையை ஏற்ற பெயர்கள் வினையைத் தழுவுவன போன்று இங்குத் தொழிற்பெயர்களையே தழுவி வந்துள்ளமை இதனால் பெறப்படும். (விகுதி பெற்ற தொழிற்பெயர்கள், விகுதி பெறாத தொழிற்பெயர்கள் என்று தொழிற்பெயர்கள் இருவகைப்படும். இத்தலைப்பின்கீழ் ஆராயப்பட்டுள்ள தொழிற்பெயர்கள் விகுதிபெற்ற தொழிற்பெயர்கள் ஆகும்.  விகுதிபெறாத தொழிற்பெயர்கள் மேலும் இரண்டு வகையாகப் பகுக்கப்படும். அவை முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.  அவற்றுள் முதனிலைத் தொழிற்பெயர்கள் வினையடி என்ற தலைப்பின் கீழ் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.  முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் முதனிலைத் தொழிற்பெயர்களைப் போன்றே வாக்கியத்தில் செயற்படும் தன்மையன.)

    1. வினையாலணையும் பெயர்

    காலம் (தெரிநிலை, குறிப்பு), திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வினைமுற்றே பெயராக அமையின் அது வினையாலணையும் பெயர் எனப்படும். பெயர்ச்சொற்களில் ஒன்றாக இதனைத் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது (தொல்காப்பியம். நூ.70).  இவை மூவிடங்களிலும் வரும் (நன்னூல், நூ. 286).

    செய்தேன் வந்தேன் – தன்மை இறந்தகால வினையாலணையும் பெயர்

    செய்கிறாய் வா         – முன்னிலை நிகழ்கால வினையாலணையும் பெயர்

    செய்வன வந்தன      – படர்க்கை எதிர்கால வினையாலணையும் பெயர்

    படர்க்கையில் ஐம்பாலுக்கும் உரிமையாக வரும்.

    ஓடுபவன் வந்தான்

    ஓடுபவள் வந்தாள்

    ஓடுபவர் வந்தனர்

    ஓடுவது வந்தது

    ஓடுவன வந்தன

    வினையாலணையும் பெயர்கள் காலம் காட்டும் தெரிநிலை வினையிலும் காலம் காட்டாத குறிப்பு வினையிலும் தோன்றும். வந்தவள், வருகிறவள், வருபவள் என்று முக்காலத்திலும் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள் வரும்.  நல்லவன், நல்லவள், நல்லவர், நல்லது, நல்லன என்று குறிப்பு வினையாலணையும் பெயர்கள் அமையும்.

    தொடரமைப்பில் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள் தொழிற்பெயர்களைப் போன்றே செயற்படுகின்றன. அதாவது, வினையடை, வினையெச்சம், வினையெச்சத்தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றையே ஏற்றுவருகின்றன.

    நன்றாகப்  படிப்பவன் (வருகிறான்) – வினையடையை ஏற்றது
    முனைந்து  படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சத்தை ஏற்றது
    எதையும் நன்றாகப் படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சத் தொடரை ஏற்றது
    நான் சொல்லும்போது படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சக் கிளவியத்தை ஏற்றது

     

    குறிப்பு வினையாலணையும் பெயர்கள், தொடரமைப்பில் வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப்பெயர்களைப் போன்று பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.  தெரிநிலை வினையாலணையும் பெயர்களுக்கும் குறிப்பு வினையாலணையும் பெயர்களுக்கும் இடையில் தொடரியல் நிலையில் இது முக்கியமான ஒரு வேறுபாடாக அமைகிறது.

    சிறந்த நல்லவன் (வந்தான்)                     – பெயரடையை ஏற்றது

    படித்த நல்லவன் (வந்தான்)                     – பெயரெச்சத்தை ஏற்றது

    மிகவும் சிறந்த நல்லவன் (வந்தான்) – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    நான் பார்த்த நல்லவன் (வந்தான்)      – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    தெரிநிலை மற்றும் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் ஆகிய இரண்டும் தொழிற்பெயர்களைப் போன்று வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வருகின்றன.

    தமிழைப் படித்தவன் (வருகிறான்)     – இரண்டாம் வேற்றுமையோடு வந்தது

    தமிழால் உயர்ந்தவன் (வருகிறான்)   – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

    மேற்கண்ட தொடர்களில் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள், வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வந்துள்ளன.

    பண்பால் நல்லவன் (வந்தான்)        – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

    கையில் வாளினன் (வந்தான்)         – ஏழாம் வேற்றுமையோடு வந்தது

    மேற்கண்ட தொடர்களில் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வந்துள்ளன.

    இவ்விருவகைப் பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வருவதோடு மட்டுமன்றி வேற்றுமை உருபுகளையும் ஏற்றுவரும் பெற்றியன.

    படித்தவனைப் பார்த்தேன்  –  தெரிநிலை வினையாலணையும் பெயர்

    வேற்றுமையை ஏற்றது

    நல்லவனைப் பார்த்தேன் –    குறிப்பு வினையாலணையும் பெயர்

    வேற்றுமையை ஏற்றது.

    முடிவுத் தொகுப்பு

    இக்கட்டுரையினால் அறியலாகும் முடிவுகளைக் கீழ்வருமாறு பட்டியலிடலாம்.

    • தமிழில் பெயராக்க வகைகளில் வினையிலிருந்து தோன்றும் பெயர்கள் என்ற வகையும் ஒன்றாகும்.
    • வினையிலிருந்து தோன்றும் பெயர்கள் ஐந்து திறத்தன. அவை வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப்பெயர், தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் என்பனவாகும்.
    • வேற்றுமை உருபுகளை ஏற்றல், இந்த ஐவகைப் பெயர்களுக்கும் பொதுப் பண்பாக உள்ளது.
    • வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப் பெயர், குறிப்பு வினையாலணையும் பெயர் ஆகிய நான்கும் தொடரியல் அமைப்பில் பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.
    • தொழிற்பெயர்களும் தெரிநிலை வினையாலணையும் பெயர்களும் தொடரியல் அமைப்பில் வினையடை, வினையெச்சம், வினையெச்சத் தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.
    • வினையாலணையும் பெயர் மட்டும் காலம் (தெரிநிலை வினை மட்டும்), திணை, பால், எண், இடம் ஆகியவற்றைப் பெற்றுப் பெயராக அமைகின்றது.
    • வினைகள் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவுவது போன்றே தொழிற் பெயர்களும் வினையாலணையும் பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வாக்கியங்களில் அமைகின்றன. இத்தன்மை வினையடிப் பெயர்கள், வினைத்தொகை மற்றும் ஆக்கப்பெயர்களுக்கு இல்லை.

     

    உசாத்துணை

    • அகத்தியலிங்கம், சு., முனைவர், (2011). தமிழ்மொழி அமைப்பியல், சிதம்பரம் : மெய்யப்பன் தமிழாய்வகம்
    • ஆறுமுக நாவலர், (2011). நன்னூல் காண்டிகையுரை, சொல்லதிகாரம், சென்னை : முல்லை நிலையம்
    • நுஃமான், எம். ஏ., (2013). அடிப்படைத் தமிழ் இலக்கணம், கொழும்பு : பூபாலசிங்கம் புத்தகசாலை
    • பொற்கோ, டாக்டர், (2011). இலக்கண உலகில் புதிய பார்வை, தொகுதி 1, சென்னை : நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்
    • சண்முகம், செ.வை., (2011). தொல்காப்பியத் தொடரியல், சென்னை  : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
    • தொல்காப்பியம், சேனாவரையர் உரை, (2012). சென்னை : சாரதா பதிப்பகம்

    ====================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் வினைப்பெயர்கள் ஒரு தொடரியல் ஆய்வு என்னும் தலைப்பில் அமைந்துள்ள இக்கட்டுரை, சொல்லாக்க அடிப்படை மற்றும் தொடர் அமைப்பு நோக்கில் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக வினை வடிவங்கள் பெயர்களாகச் செயல்படும் தன்மையைச் சுட்டிக் காட்டி, அச்சொற்கள் எவ்வாறு தொடர்களில் பயின்று வருகின்றன என்பதைச் சான்றுகளுடன் விளக்கிக் கூறுகிறது. பெயர்ச்சொற்கள் ஆக்கம் பெரும் தன்மையின் நான்கு பகுப்புகள், சொல்லாக்கம் சார்ந்த அடிப்படையில் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றான வினையிலிருந்து பெயராக்கம் என்பதன் அடிப்படையில் வினை வடிவங்களின் வகைகள், அவற்றின் மூலம் ஆக்கம் பெறும் பெயர்கள், அவை எவ்வாறு தொடர்களில் பயின்று வந்துள்ளன என்பது குறித்து மிகவும் தெளிவாகவும் படித்தவுடன் புரிந்துகொள்ளும் தன்மையிலும் மிக எளிய நடையில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்னும் உத்தி முறையில் ஆய்வாளர் தனது கட்டுரையை அமைத்துள்ளார். ஆய்வாளர் மேலும் இதுபோன்ற ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, தமிழ் ஆய்வுலகிற்கு நலம் பயக்கும். ஆய்வாளருக்கு வாழ்த்துகள்.

    ====================================================

    Share
  • (Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

    (Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம்

    (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

    முனைவர். வேல்முருகன்

    தலைவர் & பேராசிரியர், தமிழ்த்துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

    திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166

    இர. ஆனந்தகுமார்

    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: anadhakumar001@gmail.com; கைப்பேசி            : 9488264166

    முன்னுரை

    மூலபாடம் என்பது ஒரு நூலின் மூல நூலாசிரியர் எழுதிய வடிவம் அல்லது அதை ஒத்த பாடம் ஆகும். இதை முன்னோர் சுத்த பாடம் என்று வழங்குவர். ஒரு நூல் சுவடிகளிலிருந்தும் காகிதப் பிரதிகளிலிருந்தும் பதிப்பு நூலாக வெளிவரும் பொழுது பல்வேறு மாற்றங்களைப் பெறுகின்றது. குறிப்பாகச் சுவடிகளிலும் தொடக்க காலக் காகிதப் பிரதிகளிலும் குறில் நெடில், மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவை ஒன்று போலவே தோன்றுகின்றன. அதனால் ஒரு நூல் ஏட்டுப் படிகளாகவோ அச்சுப் படிகளாகவோ வெளிவரும் பொழுது பல திரிபுகளுடன் அமைகின்றது. சுவடிகள், காகிதப் பிரதிகள், அச்சுப் பதிப்புகள் முதலியவற்றில் காணப்படும் பாடங்களையும், பாட வேறுபாடுகளையும் தொகுத்து, உண்மையான பாடத்தைக் கண்டறிய முயல்வது மூலபாடத் திறனாய்வு ஆகும்.

    ஏவா வில்தன் (EVA WILDEN), நற்றிணைக்குரிய சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியவற்றைத் தொகுத்து, ஆராய்ந்து நற்றிணைக்குச் செம்பதிப்பைக் (2008) கொண்டுவந்துள்ளார். இவரது பதிப்பு, நற்றிணைக்கு இதுவரை வெளிவந்த பதிப்புகளில் காணப் பெறாத வகையில், ஏடுகளில் உள்ள பாடங்களைத் தொகுத்து, அறிவியல் அடிப்படையில் மூலபாடத்தைத் தெரிவுசெய்யும் விதமாக அமைகிறது. இச்செம்பதிப்பிலும் சில விடுபாடுகள் உள்ளன. அவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    நற்றிணை 11-ஆவது பாடலில் விடுபட்டுள்ள பாடங்களையும், பாட வேறுபாடுகளையும் இலக்கணம், அகராதிப் பொருள், உரைகள், ஒப்புமைப் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டு மூலபாடத்தை உறுதிப்படுத்துவது இந்த ஆய்வுக் கட்டுரையின் கருதுகோளாக அமைகிறது. இதில் மூலபாட ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.

    நற்றிணைக்குக் கிடைத்துள்ள சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியவை ஆய்வின் கருதுகோளை நிறுவுவதற்கான முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. மேலும்,

    S.M. Katre – Introduction to Indian Textual Criticism, அ.விநாயகமூர்த்தி – மூலபாடஆய்வியல் (1978), த.கோ.பரமசிவம்(ப.ஆ.) – சுவடிப் பதிப்பு நெறிமுறைகள் (1989), வெ.பழனியப்பன் – தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் (1990),மூ. இராமகிருட்டிணன் – பிரதிபேத ஆராய்ச்சி, வெ. பிரகாஷ் – பாட ஆய்வியல்: புறநானூறு பாடம், வடிவம் குறித்த ஆய்வு (ஆய்வேடு, 2012), ம.சா.அறிவுடைநம்பி – சுவடி ஆய்வு நெறிமுறைகள்(2013),Eva Maria Wilden – Studies in manuscript Cultures (2014), வெ. பிரகாஷ் – பாட ஆய்வியல் கையேடு (2014) முதலியோர்களின் நூல்கள், துணைமை ஆதாரங்களாக அமைகின்றன.

    நற்றிணை 11-ஆவது செய்யுள்

    ஏவா வில்தன் பதிப்பு :       

    பெய்யாது வைகிய கோதை போல

    மெய்சாயி னையவர் செய்குறி பிழைப்ப

    வுள்ளி நொதுமலர் நேர்புரை தெள்ளிதின்

    வாரா ரென்னும் புலவி யுட்கொள

    லொழிக மாளநின் னெஞ்சத் தானே

    புணரி பொருத பூமண லடைகரை

    யாழி மருங்கி னலவ னோம்பி

    வலவன் வள்பாய்ந் தூர

    நிலவு விரிந்தன்றாற் கான லானே”.

    மூலபாடத்தைத் தெரிவு செய்வதற்குப் பாடலின் சூழல், பொருண்மை போன்றவை துணை நிற்கும். அவ்வகையில் நற்றிணை 11-ஆவது பாடலுக்கான சூழல், பொருள் விளக்கம்.

    கூற்று                         –           தோழி கூற்று (தோழி, தலைவிக்குச் சொல்லியது)

    துறை                          –

    காப்பு மிகுதிக்கண் இடையீடு பட்டு ஆற்றாளாய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

    துறை விளக்கம் –

    காவல் மிகுதியாலே தலைவனைக் தலைவனைக் கூடப்பெறாமல் ஆற்றாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி நீ வருந்தாதேகொள், நிலவு விரிந்ததனால் அவர் இன்னே வருவரெனக் கூறுவோள் போன்று, காவல் மிகுதியால் இரவுக்குறி பிறழ்ந்ததும், அதனாலே தலைவி படுந்துன்பமும் சிறைப்புறத்திருந்த தலைவன் கேட்டு வரைவொடு புகுமாறு கூறுவது (நாரா.).

    செய்யுள் பொருள் விளக்கம்

    அவர் செய்த குறி இடையீடுபட்டு தவறுபட்டதனால், சூடாது கிடந்த பூமாலையைப் போல உடல் இளைத்தனை. அயலவர் பேசுகின்ற பழிச்சொல்லை நினைத்து, தெளிவாக வராமாட்டார் என்கின்ற ஐயத்தை உன் மனத்தின்கண் நினைக்காது விட்டொழிவாயாக. அலைகள் வந்து மோதியதால் நுண்மணலாக உள்ள கடற்கரையில், நண்டுகளின் மேல் தேர்ச்சக்கரங்கள் படாதவாறு பாதுகாத்து, தேர்ப்பாகன் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்துச் செலுத்த, கடற்கரைச் சோலையிலே நிலவு விரிந்தது. சுருங்கக் கூறின்,

    ‘அலவனுக்குத் (நண்டு) தீங்கு செய்யாது தேர் செலுத்த வேண்டும் என்று உரைக்கும் தலைவன், நீ பழிச்சொல்லால் வருந்தாதபடி வரைந்து இல்லறம் நிகழ்த்துவான்’ என்றவாறு.

    செய்யுளில் உள்ள பாடவேறுபாடுகள்

                                                              (அட்டவணை)

     

    ஏவா வில்தன் கொண்ட பாடம் ஏவா வில்தன் கொண்ட பாடங்களும் அவை இடம்பெற்ற பிரதிகளும் ஏவா வில்தன் கொண்ட பாடங்களிலிருந்து வேறுபடும் பாடங்களும் அவை இடம்பெற்ற பிரதிகளும்
    பெய்யாது பெய்யாது- G3, EN, VP, ER, EV, ET பெய்யாத       – C1, G1, G2

    பொய்யாது    – ETv

    நொதுமலர் நேர்புரை நொதுமலர் நேர்புரை- VP, ER, EV நொதுமல் ஏர்புரை- C1, C2, G1, G2,G3, EN

    நொதுமலர் ஏர்புரை  – ET

    நொதுமல் ஓருரை      – ETv

    யுட்கொளல் யுட்கொளல் –

    C1, C2, G1, G2,G3, EN, VP, ER, EV, ET

    யுட்கொளாஅல்- ETv
    நிலவுவிரிந்தன்றால் நிலவுவிரிந்தன்றால்- G1, ER, EV நிலவுவிரிந்தன்றால் – G2, EN, ET, VP

    நிலவுவிரிந்தன்றே   – ETv

    குறிப்பு

    C1                 உ.வே.சா. நூலகப் பிரதி (ஓலை)

    C2                உ.வே.சா. நூலகப் பிரதி (காகிதம்)

    G1, G2, G3 அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப்பிரதி (காகிதம்)

    VP                எஸ். வையாபுரிப்பிள்ளை

    EVA             ஏவா.    ஏவா வில்தன்

    EN               அ. நாராயணசாமி ஐயர்

    ER                மர்ரே. எஸ்.ராஜம்

    ET                 ஔவை சு. துரைசாமிப் பிள்ளை

    EV                 ஹச். வேங்கடராமன்

    ETv               ஔவை சு. துரைசாமிப் பிள்ளைப் பாடவேறுபாடு

     

    ஏவா வில்தன் பதிப்பில் விடுபட்ட பாடம்:’வளவன்

    ) வலவன்வளவன்

    ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில்  ‘வலவன்வள்பாய்ந்தூர’ (11:8) என்ற அடியில் இடம்பெறும் ‘வலவன்’ என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில்‘வளவன்’ என்ற பாடம் உள்ளது. இப்பிரதிகளில் உள்ள பிற பாடவேறுபாடுகளைச் (காண்க – அட்டவணை) சுட்டிக் காட்டும் ஏவா வில்தன்,C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடவேறுபாட்டினைப் பதிவு செய்யாது விட்டுள்ளார்.

    மேலும் செம்பதிப்பு முன்னுரையில் உச்சரிப்பு வேறுபாடுகள் எனும் தலைப்பில் ‘‘ஒள / அவ், ள்/ல, ர/ற கெளவை / கவ்வை ஆகியவை பொருள் மாறுபாடு செய்யாவிடினும் வட்டார (அல்லது ஏடெழுதும் தனிப்பட்ட ஒருவரின்) வழக்காறுகளைத் தெரிந்துகொள்ள உதவுமாதலால் இவை பதிப்புரையில் குறிப்பிடப்படுகின்றன” (ப.34) என்று பதிவு செய்துள்ளார். ஒலி வேறுபாட்டு அடிப்படையில் பாடல்களில் (36:8., 128:11., 295) உள்ள ஒலி வேறுபாட்டுச் சொற்களைச் (கெளவை / கவ்வை.,ஆகின்றியா / ஆகின்ரியா.,வ்வை / ஒளவை) சுட்டிக் காட்டும் இவர், ‘வலவன்’, ‘வளவன்’ என்ற பாடங்களிலுள்ள லகர ளகர ஒலி வேறுபாட்டினைப் பாடவேறுபாட்டுப் பகுதியில் சுட்டிக்காட்டவில்லை. இவ்வாறான முரண்பாடுகள், நற்றிணைச் செம்பதிப்பு என்ற கருத்தாக்கத்தைக் கேள்விக்குள்ளாகின்றன.

    (குறிப்பு: ஒப்புநோக்கி ஆய, பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம்(EFEO), நற்றிணைக்குச் சுவடி, காகிதப் பிரதிகளைத் தந்துதவியது.)

    நற்றிணைச் செம்பதிப்பு 11-ஆவது பாடலில் உள்ள ‘வலவன்’ என்ற பாடத்திற்கும், C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்திற்கும் பொருள் மாறுபாடுகள் உண்டு.

    வலவன்என்ற சொல் தேர்ப்பாகன்’ என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில் (நற்றிணை, 11:8, 78:10, குறுந்தொகை, 311:2, அகநானூறு, 20:15, 104:3, 190:12, 340:4, 354:8, 400:12, புறநானூறு, 27:8) வந்துள்ளது. வளவன்என்ற சொல் சோழமன்னன் கிள்ளிவளவன் என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில்  (புறநானூறு, 34:16, 60:10-11, 174:14-15, 226:6, 227:9, 393:24, 397:22-23) வந்துள்ளதைக் காண முடிகிறது.

    இருப்பினும் நற்றிணை 11-ஆவது பாடலில் இடம்பெற்ற ‘வலவன் வள்பாய்ந்தூர’ என்ற பாடலடிக்கு உரையாசிரியர்கள் ‘தேர்ப்பாகன் (குதிரையின்) கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்து செலுத்த’ என உரை எழுதியுள்ளனர். ஆனால் ஏவா வில்தனின் செம்பதிப்பில் விடுபட்ட பாடமான ‘வளவன்’ என்ற பாடத்தினை உரையாசிரியர்கள் எவரும் உரையிலும் பாடவேறுபாட்டுப் பகுதியிலும் குறிப்பிடவில்லை.

    காரணம் பாடலின் பொருண்மையை நோக்குகையில் குதிரையின் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்துச் செலுத்துகின்ற தேர்ப்பாகனைக் குறிக்கும் பாடமாக ‘வலவன்’ என்பது பொருத்தமாக உள்ளது. இவ்வாறன்றி C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்தைப் பின்பற்றி ‘வளவன் வள்பாய்ந்தூர’ எனப் பதிப்பித்து உரை எழுதினால்,  ‘சோழ மன்னனான கிள்ளிவளவன் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்து செலுத்த’ என்று உரைகொள்ள நேரிடும். ஆகவே பாடலின் பொருண்மைக்குத் தேர்ப்பாகனைக் குறித்து வரும் ‘வலவன்’ என்ற பாடமே ஏற்புடையதாகும்.

    வன் / வவன் என்ற இருபாடவேறுபாடுகள் பிரதிகளில் காணப்படுகின்றன. அப்பிரதிகளில் ல/ள ஒலி வேறுபாடு பொருள் வேறுபாட்டுத் தன்மையில் அமைந்திருப்பினும் C1, G1, G2 ஆகிய பிரதிகளை எழுதினோர், அவ்வொலி வேறுபாட்டினை உணராது ‘வளவன்’ என்ற பாடத்தைப் பின்பற்றியுள்ளனர். எனவே இலக்கண அடிப்படையில் ஒலி வேறுபாடு உணர்த்தும் பொருண்மையில் ‘வலவன்’ என்ற பாடம் ஏற்புடையது.

    ஏவா வில்தன் பதிப்பில் விடுபட்ட பாடவேறுபாடு

    ) உலோச்சனார்கயமனார்

    பாடலுக்குள் இருக்கின்ற பாடவேறுபாடுகள் மட்டுமின்றி புலவர் பெயர்களில் காணப்படும் பாடவேறுபாடுகளையும் ஏவா வில்தன் தன்னுடைய பதிப்பில் குறிப்பிடுகிறார். சான்றாக

    பாலத்தனார் (G1+2: பாலாத்தனார்) (52),

    பெருங்கவுசிகனார் (EN, ER: கெளசிகனார், ET: கோசிகனார்) (139)

    ஆனால் இவர் ஒரு பாடலுக்குரிய புலவர் பெயர் முழுவதும் மாறுபடும் இடங்களைப் பாடவேறுபாட்டுப் பகுதியில் குறிப்பிடாமல் விட்டுள்ளார். காட்டாக, ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் “இங்கே உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது” (ப.56) என அடிக்குறிப்பில் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

    துரைசாமிப்பிள்ளை (1966) பாடவேறுபாட்டுப் பகுதியில் இடம்பெற்ற செய்தி

    மேலும் சில பாடல்களில் புலவர்களின் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

    நற்றிணைச் சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியனவற்றில் நல்விளக்கனார் (85), சல்லியங்குமரனார் (141), பராயனார் (155) ஆகிய புலவர்களின் பெயர்கள் எவ்வித மாறுபாடுகளுமின்றி காணப்படுகின்றன. ஆனால் துரைசாமிப் பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் அப்புலவர்களின் பெயர்கள் முறையே நல்விளக்குன்றனார் (85), அரிசிலங்குமரனார் (141), பாரதாயனார் (155) என்று முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

    மேலும் நற்றிணை 64-ஆவது பாடலை உலோச்சனார் பாடியுள்ளதாக அனைத்துப் பிரதிகளிலும் காணப்படுகிறது.  ஆனால் துரைசாமிப் பிள்ளை, 64-ஆவது பாடலை உரோடகத்தனார் பாடியதாகவே குறிப்பிட்டு, குறிப்புப் பகுதியில் ‘‘ஏடுகளில் உரோடகத்தனார் பெயரே உள்ளது. முன்பாட்டை எழுதிய நினைவால் இப்பாட்டையும் உலோச்சனார் பாடியதாக ஏடெழுதினோர் தவறியிருக்கலாம்” (ப.254) என்று குறிப்பிடுகிறார். ஆகவே ஏவா வில்தன், புலவர்களின் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுவதை தமது நற்றிணைச் செம்பதிப்பில் குறிப்பிடவில்லை. ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையின் பாடலுக்குள் காணப்படும் பாடவேறுபாடுகள், புலவர் பெயர்களுக்குள் உள்ள பாடவேறுபாடுகள் ஆகியனவற்றைக் குறிப்பிடும் ஏவா வில்தன், இப்புலவர் பெயர் மாறுபாட்டைச் சுட்டிக் காட்டாதது, நற்றிணையின் செம்பதிப்பு முறையியலைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

    நற்றிணை 11- ஆவது பாடலில் மூலபாடத் தெரிவுகள்

    ) பெய்யாதுபெய்யாதபொய்யாது

    ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் ‘பெய்யாது வைகிய கோதை போல’ (11:1) என்ற பாடலடியில் உள்ள ‘பெய்யாது’ என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘பெய்யாத’ என்ற பாடம் உள்ளது. துரைசாமிப்பிள்ளை பதிப்பில் காணப்படும் பாடவேறுபாட்டுப் (ETv) பகுதியில் ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாடு காணப்படுகிறது.

    சங்க இலக்கியத்தில் ‘பெய்யாது’ என்ற பாடம் ‘சூடாது’, ‘பெய்யாது’ ஆகிய பொருள்களில் நான்கு இடங்களில் (நற்றிணை 11:1, 365:6. புறநானூறு.105:4, 266:1) வந்துள்ளது. ‘பெய்யாத’ என்ற பாடம் சங்க இலக்கியத்தில் இல்லை. துரைசாமிப் பிள்ளை பதிப்பு, பாடவேறுபாட்டுப் பகுதியில் காணப்படும் ‘பொய்யாது’ என்பது சங்க இலக்கியத்தில் ‘பொய்த்துப் போதல்’, ‘பொய்’, ‘உண்மைக்குப் புறம்பானது’ என்ற பொருளில் நான்கு (நற்றிணை 38:1, 2. ஐங்குறுநூறு. 66:1, 80:1) இடங்களில் வந்துள்ளது.

    ‘பெய்யாது வைகிய கோதை போல’ (11:1) என்ற பாடலடிக்கு உரையாசிரியர்கள் ‘சூடாது கிடந்த பூமாலையைப் போல’ என்று உரை தருகின்றனர். ஆனால் பெய்யாது என்ற பாடத்திற்கு மாற்றாக C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘பெய்யாத’ என்ற பாடம் உள்ளது. இப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பெய்யாத வைகிய கோதை போல’ என்ற பாடலடிக்கு உரைகொண்டால் ‘சூடாத கிடந்த பூமாலை’ என்று பொருள்படும். ‘பெய்யாத’ என்ற பாடம், சங்க இலக்கியத்தில் இல்லை. இதனடிப்படையில் நோக்கினோமானால் உரையாசிரியர்கள் இதை மூலபாடமாகத் தெரிந்தெடுக்கவில்லை என்பதை உய்த்துணர முடிகிறது.

    துரைசாமிப் பிள்ளை பதிப்பின் பாடவேறுபாட்டுப் பகுதியில் ‘பெய்யாது’ என்ற பாடத்திற்கு ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாடு காணப்படுகிறது. இப்பாடவேறுபாட்டின் அடிப்படையில் ‘பொய்யாது வைகிய கோதை போல’ என்று பதிப்பு அமையும். இவ்விடத்து பொய்யாது என்பதற்கு ‘பொய்’ ‘பொய்த்துப்போதல்’ ஆகிய பொருள்கள் உள்ளன. இப்பொருள்களின் அடிப்படையில் ‘பொய்யாது வைகிய கோதை போல’ என்ற பாடலடிக்கு, ‘பொய்கூறாது கிடந்த பூமாலையைப் போல’ என்று உரைகொள்ள நேரிடும். இவ்வுரை பாடலின் பொருண்மைக்குப் பொருத்தமின்றி அமைவதால் ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாட்டை நீக்கி, G3, EN, VP, ER, EV, ET ஆகிய பிரதிகளில் உள்ள பாடமான ‘பெய்யாது’ என்பது பாடலின் பொருண்மைக்கு (‘சூடாது கிடந்த பூமாலையைப் போல’) ஏற்புடையதாக உள்ளதால் உரையாசிரியர்கள் இதனை மூலபாடமாகத் தெரிவு செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    ) நொதுமல் ஏர்புரைநொதுமலர் ஏர்புரைநொதுமலர் நேர்புரைநொதுமல் ஓருரை

    C1, C2, G1, G2,G3, EN ஆகிய பிரதிகளில் ‘நொதுமல் ஏர்புரை’ என்ற பாடமும் ET பிரதியில் ‘நொதுமலர் ஏர்புரை’ என்ற பாடமும் அதே பிரதியில் ‘நொதுமல் ஓருரை’ (ETv) என்ற பாடவேறுபாடும் இருக்க, ஏவா வில்தன் VP, ER, EV ஆகிய பிரதிகளில் உள்ள ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடத்தையே மூலபாடமாகத் தெரிவு செய்துள்ளார். இருப்பினும் அவர் அப்பாடத்தை உறுதிப்படுத்துவதில் உள்ள சிக்கலைக் குறிப்பிடுகையில் ‘‘here the ER reading looks very much like an conjecture supposed to make sence of a number of unsatisfactory variants. As so Aften, we are not in a position to find out whether there were sources supporting such a reading’’ (ராஜம் பதிப்பில் காணப்படும் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடம்   திருப்தியற்ற பல மாறுபாடுகளைக் (நொதுமல் ஏர்புரை – நொதுமலர் ஏர்புரை – நொதுமலர் நேர்புரை – நொதுமல் ஓருரை) கொண்டுள்ளது.  ராஜம் பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடம் ‘நொதுமலர் நேர்புரை’ என்பது, அனுமானத்தால் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதை   உறுதிப்படுத்த ஆதாரங்கள் உள்ளனவா என்பதை ஆராயும் நிலையில் தான் இல்லை) என்று 11-ஆவது பாடலின் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார் ஏவா வில்தன்.

    இருப்பினும் இப்பாடங்களுக்கு யாப்பு முறைகளின்படியும், உலோச்சனாரின் நற்றிணைப் பாடல்களைத் தவிர ஏனைய பாடல்களை ஆராய்வதன் அடிப்படையிலும், உரையாசிரியர்கள் தரும் பொருண்மைகளின் அடிப்படையிலும் சரியான பாடத்தைத் தேர்வு செய்ய இயலும்.

    யாப்பு அடிப்படையில் -‘நொதுமல் ஏர்புரைநொதுமலர் நேர்புரை

    உரையாசிரியர்கள் ‘நொதுமல் ஏர்புரை’, ‘நொதுமலர் நேர்புரை’ ஆகிய பாடங்களுக்குத் தரும் பொருண்மைகளின் அடிப்படையில் எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் சொல் அடிப்படையிலும் யாப்பு அடிப்படையிலும் வேறுபாடுகள் உள.

    •         நொது / மல்                ஏர் / புரை           மா முன் நேர் = நேரொன்றாசிரியத் தளை

                       நிரை   / நேர்              நேர் / நிரை

    • அ. நொது / மலர்             ஏர் / புரை            விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை

                       நிரை     நிரை           நேர் / நிரை

    • ஆ. நொது / மலர்            நேர் / புரை

                       நிரை   நிரை             நேர் / நிரை         விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை

    யாப்பு முறைப்படி 1)‘நொதுமல் ஏர்புரை’ என்ற பாடத்தைப் பிரித்தால் நேரொன்றாசிரியத் தளை வருகிறது. அதே நேரத்தில் 2) அ.‘நொதுமலர் ஏர்புரை’ மற்றும் ஆ.‘நொதுமலர் நேர்புரை’ ஆகிய பாடங்களைப் பிரித்தால் இயற்சீர் வெண்டளை வருகிறது. ஆகவே ஆசிரியப்பாவில் இயற்சீர் வெண்டளையும் விரவி வரலாம் என்பதால் பாடத்தைத் தெரிவு செய்வதில் மேலும் சிக்கல் ஏற்படுகிறது.

    அகநானூற்று உலோச்சனார் பாடலில் -‘நொதுமலர்

    ஒரு புலவர் பாடிய பாடலில் பாடவேறுபாடுகள் இருப்பின், அப்புலவர் பாடிய ஏனைய பாடல்களை ஆராய்ந்து, அதில் உள்ள பாடங்களைக் கொண்டு மூலபாடத்தை உறுதிப்படுத்தலாம். அவ்வகையில் உலோச்சனாரின் பாடல்கள், நற்றிணையில் மட்டுமின்றி குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றினைக் கொண்டு ஒப்பிடுகையில் அகநானூற்றில் ‘நொதுமலர் போல பிரியின் கதுமென’(300:11) என்ற அடியில் ‘நொதுமலர்’ என்ற பாடம் வந்துள்ளது.

    C2 (சுவடி)

    C3(சுவடி)

    C5(காகிதம்)

    C6(காகிதம்)

     

    C9 (காகிதம்)

    (C2, C3, C5, C6, C9 – உ.வே.சா. நூல் நிலையப் பிரதிகள்)

    ராஜகோபாலார்யன் (1933)

    வையாபுரிப்பிள்ளை (1940)

    பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார் (வெளியீடு, 1946)

    (குறிப்பு: ஒப்பு நோக்கி ஆய, பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம்(EFEO), அகநானூற்றுக்குச் சுவடி, காகிதப் பிரதிகளைத் தந்துதவியது.)

    மேற்குறிப்பிட்ட உலோச்சனார் பாடிய அகநானூற்றுப் பாடலைச் சுவடிகள் (C2,C3), காகிதப் பிரதிகள் (C5, C6, C9) பதிப்பு நூல்கள் (ராஜகோபாலார்யன், பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசி விசுவநாதன் செட்டியார், வையாபுரிப்பிள்ளை) ஆகியனவற்றைக் கொண்டு ஆராய்கையில் ‘நொதுமலர்’ என்ற பாடம் உள்ளதை அறிய முடிகிறது. மேலும் இப்பாடத்திற்கு வேறான பாடவேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதைத் தரவுகளின் வழியாக உறுதியிட முடிகிறது. ஆகவே உலோச்சனார் நற்றிணையிலும் ‘நொதுமலர்’ என்ற பாடத்தைத்தான் கையாண்டிருப்பார் என்பதைத் தரவுகளின் வழியாக ஊகிக்க முடிகிறது.

    உரையாசிரியர்கள் தரும் பொருள் –’ஏர்புரை‘, ‘நேர்புரை

    வையாபுரிப்பிள்ளை (VP) பதிப்பில் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடம் முதன் முதலில் காணப்படுகிறது. அப்பாடமே மர்ரே ராஜத்தின் (ER) சந்தி பிரித்த நற்றிணைப் பதிப்பிலும் உள்ளது. இவ்விரு பதிப்புகளும் உரையில்லாத மூலப் பதிப்புகள். அடுத்தடுத்த பதிப்புகளாக (உரையுடன்) வந்துள்ள வேங்கடராமன் (EV) மற்றும் ஏவா வில்தன் (EVA) ஆகியோர் தமது பதிப்புகளில் மேற்கண்ட பாடத்தையே மூலமாகக் கொண்டு ‘அயலவர் பழிச்சொல்’ என்று உரை கொள்கின்றனர்.

    பொ.வே.சோமசுந்தரனாரின் (நாராயணசாமி ஐயர் உரையுடன், இலக்கணக் குறிப்பும் ஆய்வுரையும் கொண்ட நற்றிணை உரை) இலக்கண ஆய்வுரையில் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடத்தைப் பாடவேறுபாடாகக் கொண்டு ‘அயலோர் வாய் நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்று குறிப்புப் பகுதியில் குறிப்பிடுகிறார். அவற்றைக் கொண்டு நோக்குகையில் ‘நேர்புரை’ என்பதற்கு ‘நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்ற பொருள் கிடைக்கிறது. இப்பொருள் வேங்கடராமன் பதிப்பிலும் ஏவா வில்தனின் பதிப்பிலும் இல்லை. ஆகவே பாடலின் பொருண்மைக்கு ‘நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்ற பொருளைத் தருகின்ற ‘நேர்புரை’ என்ற பாடத்தைக் கொள்ளாமல், ‘எழுதலையுடைய பழிச்சொல்’ (EN), ‘எடுத்துரைக்கும் அலருரை’ (ET) ஆகிய பொருள்களைத் தருகின்ற ‘ஏர்புரை’ என்ற பாடத்தையே ஏற்புடைய பாடமாகக் கொள்ளலாம்.

    முடிவுகள்

    • ஏவா வில்தன், நற்றிணைக்குக் கிடைத்துள்ள சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள், தொல்காப்பிய உரை மேற்கோளில் காணப்படும் நற்றிணைப் பாடல்கள் ஆகியனவற்றைத் தொகுத்து, பாடவேறுபாடுகளைப் பட்டியலிட்டு ஆராய்ந்து, நற்றிணைக்குச் செம்பதிப்பைக் கொண்டுவந்துள்ளார். இதுவரை வந்த நற்றிணைப் பதிப்புகளில் காணப்பெறாத வகையில், மூலபாடத்தை நிறுவும் முயற்சியை இவரது பதிப்பில் காணலாம். மேலும் நற்றிணைக்குக் கிடைத்துள்ள பிரதிகளில் காணப்படும் பாடங்களைத் தொகுத்துப் பட்டியலிடும் அதே நேரத்தில் பாடலுக்குள் காணப்படும் பாடங்களையும் பாடல் எழுதிய புலவர் பெயர்களில் காணப்படும் மாறுபாடுகளையும் குறிப்பிடாமல் விட்டுள்ளார்.
    • ‘வலவன்’ (11:8) என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘வளவன்’ என்ற பாடம் உள்ளது. இப்பிரதிகளில் உள்ள பிற பாடவேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் ஏவா வில்தன், C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்தினைச் சுட்டிக் காட்டவில்லை. அதே போல உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது என்ற துரைசாமிப் பிள்ளையின் அடிகுறிப்புச் செய்தியும் இவரது பதிப்பில் விடுபட்டுள்ளது.
    • நற்றிணை 11- ஆவது பாடலில் ‘பெய்யாது’(11:1) என்ற பாடத்திற்கு  ‘பெய்யாத’ , ‘பொய்யாது’ ஆகிய பாடவேறுபாடுகள் உள்ளன. அப்பாடவேறுபாடுகளுள் பாடலின் பொருண்மைக்கு ‘பெய்யாது’ என்ற பாடமே மிக அணுக்கமாக உள்ளது.
    • உலோச்சனாரின் பாடல்கள், நற்றிணையில் மட்டுமின்றி குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றினைக் கொண்டு ஒப்பிடுகையில் ‘நொதுமலர்’ என்ற பாடம் அகநானூற்றில் மட்டும் வந்துள்ளதால் நற்றிணையிலும் ‘நொதுமலர்’ என்ற பாடத்தைத் தான் உலோச்சனார் கையாண்டிருப்பார் என்பதைத் தரவுகளின் வழியாக அறிய முடிகிறது.
    • ‘நேர்புரை’, ‘ஏர்புரை’ ஆகிய பாடங்களில் உரையாசிரியர்கள் பொருள்கொள்ளும் அடிப்படையில் நோக்கும் பொழுது ‘ஏர்புரை’ என்ற பாடம் பொருத்தமுள்ளதாகத் தோன்றுகிறது.
    • ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் விடுபட்ட பாடங்களும் மூலபாடத் தெரிவில் இடர்ப்பாடுகளும் காணப்படுவதால் அவரது நற்றிணைச் செம்பதிப்பு என்பது கேள்விக்குள்ளதாக அமைகிறது. ஆக, ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் (2008) உள்ள ஏனைய பாடல்களையும் மூலபாடவியல், பதிப்பியல் நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் சில விடுபட்ட பாடங்களும் மூலபாடத் தெரிவில் உள்ள மாறுபாடுகளும் தெரிய வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆகவே ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பினை மீட்டுருவாக்கம் செய்தால், நற்றிணைச் செம்பதிப்பு என்பது சீர்மை பெறும்.

    துணைநூற்பட்டியல்

    • அறிவுடைநம்பி. ம.சா., சுவடி ஆய்வு நெறிமுறைகள், கருமணி பதிப்பகம், 27, சுப்பிரமணியர் கோயில் குறுக்குத்தெரு, இலாசுப்பேட்டை, புதுச்சேரி. சனவரி 2013.
    • இராமகிருட்டிணன். மூ., பிரதிபேத ஆராய்ச்சி, வேங்கடாசலபுரம், (வழி) தேனி, மதுரை. (ஆண்டு குறிப்பிடவில்லை).
    • ஏவா வில்தன் (ப.ஆ.)., நற்றிணை, சங்க இலக்கியங்கள் – செம்பதிப்பு வரிசை – 1.1., பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம் (EFEO) – 2008, தமிழ்மண்பதிப்பகம்.
    • வேங்கடசாமிநாட்டார். திரு. நாவலர் ந.மு. & வேங்கடாசலம் பிள்ளை. கரந்தைக் கவியரசு R. (பதவுரை, விளக்கவுரை), எட்டுத் தொகையுள் ஒன்றான அகநானூறு – மணிமிடை பவளம் (பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன்செட்டியார் அவர்களால் வெளியிடப்பெற்றது) திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், திருநெல்வேலி.ஜனவரி1946.
    • சுப்பிரமணியன். ச.வே., தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108. மார்ச்.2013.
    • சோமசுந்தரனார். பெருமழைப்புலவர் பொ.வே., (இலக்கணக்குறிப்பும் ஆய்வுரையும்) –           எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை நானூறு (பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் எழுதிய உரையும் விளக்கமும்), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், திருநெல்வேலி – 6, நான்காம் பதிப்பு1967.
    • துரைசாமிப்பிள்ளை.சு (உ.ஆ) ., நற்றிணை, அருணா பப்ளிகேஷன்ஸ், உஸ்மான் ரோடு, தியாகராய நகரம், சென்னை – நவம்பர்.1966& 1968.
    • நாராயணசாமி ஐயர். பின்னத்தூர் அ (உரையாசிரியர்)., எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை, சைவ வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னை.1915.
    • பரமசிவம். த.கோ.(பதிப்பாசிரியர்)., சுவடிப்பதிப்பு நெறிமுறைகள் (கருத்தரங்கக்கட்டுரைகள்), தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.மார்ச்1989.
    • பாலசுப்பிரமணியன்.கு.வெ(உரையாசிரியர்)., சங்க இலக்கியம் –நற்றிணை மூலமும் உரையும், நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்(பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600 098. ஐந்தாம் பதிப்பு. அக்டோபர் 2014.
    • பழனியப்பன்.வெ., தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்.1990.
    • பாகனேரி. வெ. பெரி. பழ. மு., திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், (வெளியீடு) லிமிடெட், திருநெல்வேலி.
    • பிரகாஷ். வெ., பாட ஆய்வியல் கையேடு, அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம், திருச்சி. 2014.
    • பிரகாஷ். வெ., பாட ஆய்வியல்: புறநானூறு பாடம், வடிவம் குறித்த ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், 2012,
    • ராஜகோபாலார்யன் (ப.ஆ)., அகநானூறு மூலமும் பழைய உரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாசம், மயிலாப்பூர்.
    • விநாயகமூர்த்தி.அ., மூலபாட ஆய்வியல், பாலமுருகன் பதிப்பகம், 90, பாரதியார் தெரு, சுப்பிரமணியபுரம், மதுரை – 625 011.
    • வெள்ளை வாரணன். க (ப.ஆ) ., தொல்காப்பியம் செய்யுளியல் – உரைவளம், பதிப்புத் துறை, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021. 1989.
    • வேங்கடராமன்.ஹச்(உ.ஆ)., டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல், கடற்கரைச் சாலை, பெசண்ட் நகர், சென்னை – 600 098.
    • வையாபுரிப்பிள்ளை. எஸ்(ப.ஆ.)., சங்க இலக்கியம், எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும், சைவ சித்தாந்தம் மகா சமாஜம், மயிலாப்பூர், சென்னை. 1940.
    • Eva Mariya wilden., Studies in Manuscript Cultures, 204 Walter de Gruyter Gmbh & KG Berlin / Munchen / Bosten in Germany.
    • S.M. Katre., Introduction to Indian Textual Criticism, Karanatak Publishing House.
    • தமிழ் லெக்ஸிகன்., சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
    • நிகண்டுகள்., சாந்தி சாதனா, 125 சேமியர்ஸ் சாலை, சென்னை – 600 028.
    • மணியன்.,சங்க இலக்கிய வினை வடிவங்கள், திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம் – 86.
    • மாதையன்.பெ., சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 310. 2007.
    • பாண்டியராஜா.சு., சங்க இலக்கியத் தொடரடைவு, sangamconcordance.com
    • தமிழிணையக் கல்விக் கழகம்(tamilvu.org)

    ஆய்வுக் கட்டுரையாளர்களின் தன் விவரக் குறிப்பு

    முனைவர். வேல்முருகன்

    தலைவர் & பேராசிரியர், தமிழ்த் துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

    திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166

    இவர் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பி.எட்., பிஎச்.டி. பட்டங்களும் வரலாறு, தகவல் தொடர்பியல், மொழியியல் ஆகிய பாடங்களில் எம்.ஏ. பட்டங்களும் பெற்றுள்ளார். கணினி அறிவியல், ஹிந்தி மொழி, காந்தியச் சிந்தனை ஆகியவற்றில் சான்றிதழ் பயின்றுள்ளார். அடிப்படை மலையாள மொழியறிவு உடையவர்.

    இவர் சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல், தொல்லியல், தகவல் தொடர்பியல், கவிதையியல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இப்பொருண்மைகளில் ஐந்து நூல்களை எழுதிய இவர் `எழுத்திலக்கண மாற்றம்’, `தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள்ஆகிய நூல்களுக்காக, இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் இளம் அறிஞர் விருதும்,  `இலக்கண மரபும் இலக்கியப் பதிவும்என்ற நூலினுக்காகத் தமிழக முதல்வர் வழங்கும் சிறந்த நூலாசிரியர் விருதும் பெற்றுள்ளார். இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அறுபதிற்கும் மேலான எண்ணிக்கையில் வெளிவந்துள்ளன.

    இவர், பதினாறு ஆண்டுகள், ஆசிரியர் பணி அனுபவம் மிக்கவர்; தற்பொழுது திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்  தமிழ்த் துறைத் தலைவராகப் பேராசிரியர் நிலையில் பணி புரிந்து வருகிறார்.

    இர. ஆனந்தகுமார்

    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: anadhakumar001@gmail.com; கைபேசி        : 9488264166

    இவர் ஆசிரியர் பயிற்சியும், தமிழிலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பட்டமும் பெற்றவர். மேலும் தமிழ் மொழியியலில் முதுகலைப் பட்டமும், மலையாள மொழியில் சான்றிதழ்ப் பட்டமும் (Certificate Course) பெற்றுள்ளார். தற்பொழுது திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில், முனைவர் பட்ட ஆய்வாளராக “நற்றிணைப் பாக்கள்: மொழியியல், இலக்கியவியல், கிளை மொழியியல், மூலபாடவியல் ஆய்வு” (உலோச்சனார் முதலியோரின் 133 பாக்கள் – சொல்லடைவுடன்) எனும் தலைப்பில் ஆய்வு செய்து வருகிறார். இவர், பன்னாட்டு ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

    ===========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பழந்தமிழ் இலக்கியங்களின் உண்மைத் தன்மையை அறிய, அவற்றின் மூலம் கண்டடைதல் என்பது, தேவையான ஒன்று. அந்த வகையில் ஏவா வில்தன் முன்னெடுத்த செம்பதிப்புப் பணி பாராட்டத்தக்கது. இவர் பதிப்பில் உள்ள சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் பதிப்புப் பணியில் ஈடுபடும் பதிப்பாசிரியர்கள் நினைவில் கொள்ளக் கூடிய பதிப்பு அடிப்படைகளையும் நற்றிணைப் பதிப்பில் உள்ள பாடவேறுபாடுகள் குறித்தும் விளக்கும் தன்மையில் கட்டுரை அமைந்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் ஆய்வாளர்கள், பதிப்பாசிரியரின் வலவன், பெய்யாது, நொதுமலர் போன்ற மூலபாடத் தெரிவின் முயற்சிகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மேலும் ஏர்புரை என்பது பொருத்தமான பாடமாகத் தோன்றுகிறது என்று யூகத்தின் அடிப்படையில் கூறுதல் பொருத்தமற்றது. ஆய்விற்குப் பொருத்தமான ஆதாரங்களை முன்வைத்து, பதிப்பாசிரியரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுதல் நலம் பயக்கும். மேலும், ஆய்வாளர்கள் பிறர் கருத்தை மறுக்கும் பொழுது, தன்மையான முறையில் மறுக்க வேண்டும். ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள், இத்தகைய செம்பதிப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைய வேண்டும். மாறாக, அவர்களின் பணியைப் புறந்தள்ளும் தொனி வந்துவிடக் கூடாது. எனினும், ஆய்வாளர்கள் இதுபோன்ற ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, தமிழுக்கு ஆக்கம் நல்கும்.

    ===========================================================

    Share
  • (Peer Reviewed) பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உருவானதா? – இயற்பியல் ஆய்வு

    நடராஜன் ஸ்ரீதர், சந்திரமோகன் இரத்தினம்

    முது அறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி , தேவகோட்டை

     natarajangravity@gmail.com, rathinam.chandramohan@gmail.com

    ===========================================

    இயற்பியல் ஆய்வுகள், அவ்வப்போது பல வியத்தகு முடிவுகளை தருகின்றன. இயற்பியல் ஆய்வுகளில் கணித அளவீடுகளின் தாக்கம் பல புதுமையான விளக்கங்களை, தீர்க்கமுடியாத சிக்கல்களுக்கு வழங்குகின்றன. இயற்பியலின் மிகப் பெரிய கேள்வி இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதாகும். பிரபஞ்ச இயக்கவியலுக்குப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு வியத்தகு மாதிரியான, ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து பிரபஞ்சம் எனும் கோட்பாட்டினைப் பற்றி இவ்வாய்வுக் குறிப்பில் காணலாம்.

    பெருவெடிப்புத் தத்துவம்

    பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்று கேள்வியின் பதிலாகப் பல்வேறு அமைப்புகள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றில் முன்னதாக நிற்பது பெருவெடிப்புத் தத்துவமே ஆகும். இயற்பியல் ரீதியிலும், கணிதவியல் ரீதியிலும் பெருவெடிப்புத் தத்துவம், சிறந்த முடிவுகளையே தருகிறது. மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் கூட பெருவெடிப்புத் தத்துவத்தையே முன்மொழிகின்றன. உதாரணமாக பிரபஞ்சத்தில் பின்புல வெப்பநிலைத் தரவு [1] மற்றும் சூப்பர் நோவா தரவு [2]ஆகியவை பிரபஞ்சம் ஒரு சிறு புள்ளியில் இருந்து உருவாகி இருக்கும் என்பதை வலியுறுத்துகின்றன.

    இத்தத்துவத்தின் படி சுமார் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சமானது ஒரு சிறு புள்ளியில் அழுத்தப்பட்டு, அதிக வெப்பநிலையில், மீயழுத்தத்தில், மீயடர்த்தியில் உறங்கிய நிலையில் இருந்தது. பின்னர் சிறு சிறு துணுக்க அதிர்வுகளிற்குப் பிறகு, இந்தப் பிரபஞ்சமானது விரிவடைய ஆரம்பித்தது. இவ்விரிவடைதல் நிகழ்வு, மிக வேகமாக வீங்குதல் [3] நிகழ்வாக நடந்தது. நிகழும்போது வெப்பநிலையும் அழுத்தமும் குறையக் குறைய அடிப்படைத் துகள்கள், அணுக்கள்,  அணுக்கூட்டங்கள், வாயுக்கள், நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் என உருவாக்கின. இவ்வாறு உருவான இந்தப் பெரும் நாடகம் இன்றைய பிரபஞ்சம் என அழைக்கப்படுகிறது. இன்றைய பிரபஞ்சமானது குளிர்ந்த வெப்ப நிலையிலும் மேலும் விரிவடைந்து செல்லக்கூடிய நிலை கொண்டதாகவும் மிகப் பெரிய பரப்பளவில் தட்டையானதாகவும் அனைத்துத் திசைகளிலும் ஒரே மாதிரியான அமைப்புகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

    இத்தத்துவத்தின்படி, விரிவடையும் பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட அடர்த்தி வரும்வரை விரிவடையும். அவ்வாறான மாறுநிலை அடர்த்தி நிலைக்குப் பிரபஞ்சம் வரும்போது இப்பிரபஞ்சமானது, தனது விரிவடைதலை நிறுத்திக்கொள்கிறது. பிறகு  இப்பிரபஞ்சமானது சுருங்க ஆரம்பிக்கிறது. அவ்வாறான சுருங்குதல் மீண்டும் முந்தைய மூல நிலைக்குப் பிரபஞ்சத்தை எடுத்து வருகிறது. இதை பெருஞ்சுருக்கம் என அறிவியலாளர்கள்அழைக்கின்றனர்.

    இந்தப் பெரும் சுருக்கத்தின் இறுதியாகப் பிரபஞ்சம், மூலப் புள்ளியில் வந்து சுருங்குகிறது. மூல நிலையில் இருந்த மீயடர்த்தி , மீயழுத்த, மீவெப்ப நிலைக்குப் பிரபஞ்சம் செல்கிறது. இது பெருவெடிப்புக் கோட்பாடு என அழைக்கப்படுகிறது.

    சுழற்சிப் பிரபஞ்சம்

    பிரபஞ்சமானது ஒரு சிறு புள்ளியில் ஆரம்பித்துப் பெரிதாக விரிந்து மீண்டும் ஒரு புள்ளியில் வந்து முடிவடைகிறது. இந்த நிகழ்வில் பிரபஞ்சத்தில் உருவாகும் தோற்றப் பொருட்கள், இறுதியாக மூல நிலையில் வந்து முடிவடைகிறது. இது ஒரு பிரபஞ்சத்தின் வாழும் காலம் என அழைக்கப்படுகிறது. இத்துடன் பிரபஞ்சமே முடிவடைந்துவிட்டதா என்றால், இல்லை. அதற்கு மாற்றாகச் சில கணித முடிவுகளும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அம்முடிவுகளின்படி மூல நிலையிலிருந்து உருவாகி வளர்ந்து மீண்டும் மூல நிலையை அடையும் பிரபஞ்சம் ஒரு சுழற்சி நிகழ்வு எனப்படுகிறது. இந்நிகழ்ச்சியானது இத்தோடு நிற்பதில்லை. மீண்டும் துவக்க முறைகளுக்கு உட்பட்டு மற்றுமொரு பிரபஞ்ச இயக்கத்தை உருவாக்குகின்றன என்று கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இக்கோட்பாடு, சுழற்சிப் பிரபஞ்சக் கோட்பாடு [4] என அழைக்கப்படுகிறது.

    சுழற்சிப் பிரபஞ்சக் கோட்பாட்டின் படி, பிரபஞ்சமானது தொடர்ச்சியாக உருவாவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும். அதாவது ஒரு சுழற்சியின் முடிவானது மற்றொரு சுழற்சியின் ஆரம்பமாக இருக்கும். மேலும் இக்கோட்பாடு எல்லா இயற்பியல் விதிகளுக்கும் உட்பட்டு பிரபஞ்சத்தின் இயக்கத்தை தெரிவிக்கிறது. நிரூபிக்கப்பட்ட கணிதவியல் முறைகளும் இக்கோட்பாடு எல்லா விதத்திலும் சரியாக இருப்பதையே உறுதிப்படுத்துகிறது.

    துணுக்கப் பிரபஞ்சம்

    இவ்விரண்டு கோட்பாடுகளிலும் பிரபஞ்சத்தின் மூல நிலை அல்லது பிரபஞ்சத்தின் முடிவு நிலையைப் பற்றி ஆய்வு செய்வதற்குத் துணுக்க இயற்பியலானது தேவைப்படுகிறது. ஏனெனில் மிக நுண்ணிய அளவில் பிரபஞ்சம் சுருங்கி விட்ட பிறகு, தொன்மை இயற்பியல் சமன்பாடுகளால் அங்கு எழும் சிக்கல்களைத் தீர்க்க இயலாது. எனவே அங்கு துணுக்க இயற்பியல் இயக்கங்களின் ஆதிக்கம் பேரளவில் இருக்கும். பிரபஞ்சமானது துணுக்க நிலையில் மிகவும் வேறுபாடாக பரிணமிக்கிறது. துணுக்க முறையில் ஆய்வு செய்யும்போது இந்தப் பிரபஞ்சமே ஒரு வலையமைப்பாக ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு ஒன்றிணைக்கப்பட்டு இருப்பதாக அறிய முடியும்[17]

    இப்பிரபஞ்சத்தின் மூல நிலை மற்றும் இறுதி நிலையை நுணுகி ஆராயும் போது, வியத்தகு முடிவுகள் கிடைக்கின்றன. பிரபஞ்சம் முற்றிலுமாகச் சுருங்கி விடும் போது அங்கு வெற்றிடம் மட்டுமே ஏற்படுகிறது. இந்த வெற்றிடம், பகுதி அளவே அல்லது சிறிது நேரத்திற்கே நீடித்துப் பின் இன்னொரு புதுப் பிரபஞ்சத்தின் துவக்கத்தை நோக்கி இப்பிரபஞ்சம் மாற ஆரம்பிக்கிறது. ஒரு பிரபஞ்சத்தில் முடிவில் மற்றும் மற்றொரு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஒரு வெற்றிடமானது காணப்படுகிறது. இந்த வெற்றிடமானது அதீத அதிர்வுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது[5].

    வெற்றிடத்தில் இருந்து பிரபஞ்சம்

    அப்படியாயின் அடுத்த ஒரு கேள்வி வரலாம். எவ்வாறு ஒரு பிரபஞ்சத்தின் முடிவு, இன்னொரு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் தீர்மானிக்கிறது என்று. ஒருவாறாக முடிந்த பிரபஞ்சம் இறுதியாக வெற்றிடத்தைச் சந்திக்கிறது. இந்த வெற்றிடம் அடிப்படையில் வரைகணித அளவில் தட்டையான அமைப்புடையதாக இருக்கிறது. முழுப் பிரபஞ்சமும் துணுக்க அளவிலாக நிலைபெற்று அலைவுற்று நிற்கிறது.  மேலும் புது பிரபஞ்சத்தின் மூல நிலையும் இதே போன்ற துணுக்க வெற்றிட அளவிலேயே தொடங்குகிறது. முடிந்த பிரபஞ்சம் மற்றும் தொடக்க பிரபஞ்சம் எவ்வாறு இணைக்கப்படுகிறது என்பதற்கான நிகழ்தகவைத் துணுக்க உட்குடைதல் தீர்மானிக்கிறது[6]. துணுக்கஉட்குடைதல் என்பது தொன்மை இயற்பியல் அளவில் சாத்தியமில்லாத வழிமுறைகளை உறுதி செய்கிறது.

    இந்நிகழ்வு, தொன்மை இயற்பியல் முறையில் நிச்சயமாக தாவிக் குதித்துச் சென்றிருக்கக்கூடிய பாதைகளை ஊடுருவி உட்புகுந்து கடப்பதன் நிகழ்தகவை வெளிப்படுத்துகிறது. அதாவது தொன்மை முறையில் சாத்தியமே இல்லாத இயக்கத்தின் பாதைகளையும் துணுக்க முறையில் கடக்கும் நிகழ்வானது இயற்கையின் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது[7].

    இவ்வாறான துணுக்கக் குடைதல் பிரபஞ்சமானது, வெற்றிடத்திலிருந்து உருவாவதையும் தெரிவிக்கிறது. ஒரு பிரபஞ்சத்தின் முடிவிலிருந்து வெற்றிடம் வாயிலாக மற்றொரு பிரபஞ்சத்தின் துவக்கம் அமைகிறது. எவ்வாறு ஒரு கதிரியக்கத் தனிமத்திலிருந்து கதிரியக்கம் வெளிப்படுகிறதோ, அதற்கு எந்த ஒரு காரணமும் தேவைப்படுவதில்லையோ அதே போலவே பிரபஞ்சமானது வெற்றிடத்திலிருந்து உருவாவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்[8].

    இவ்வாறு வெற்றிடத்தில் இருந்து உருவாகும் பிரபஞ்சம் மிக அதிகமான விரிவடைந்தது பிற்கால அளவில் பெரியதாக ஒரு மாறுகிறது. இந்தச் சுழற்சி முறை தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பிரபஞ்சமானது வெற்றிடத்தில் இருந்து உருவாகும் என நிறுவப்படுகிறது.

    இவ்வாறான அறிவியல் ஆய்வு முடிவை தமிழ் இலக்கியங்களில் ஒப்பு நோக்கவும் முடியும். பிரபஞ்சத்தின் மூல நிலை வெற்றிடம் என்று தமிழ்க்  குறிப்புகளும் பல்வேறு இடங்களில் காணக் கிடைக்கிறது. திருமூலர்[9], மாணிக்கவாசகர்[10], அருணகிரிநாதர் [11], பாரதியார்[12], வேதாத்திரி மகரிஷி[13], வள்ளலார்[14], அப்பர் [15], மெய்கண்டதேவர் [16] என பலரும் பிரபஞ்சத்தின் மூல நிலை வெற்றிடமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் ஆழ ஆய்வு செய்யும்போது பல்வேறு குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவற்றைக் கணித ரீதியிலோ அல்லது இயற்பியல் விதிகளிலோ ஆய்வு செய்யும்போது வியத்தகு விளக்கங்கள் கிடைக்கின்றன. பிரபஞ்சம் தோன்றிய விதங்களைப் பற்றிய குறிப்புகள், தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கலாம் என்று கூட வரையறுக்கப்பட முடிகிறது. மேலும் பிரபஞ்சமானது வெற்றிடத்தில் இருந்து உருவாக்கியிருக்க முடியும் எனவும் நம்மால் உறுதி செய்துகொள்ள முடிகிறது.

    மேற்கோள்கள்

    1. Schlegel, D. J., Finkbeiner, D. P., & Davis, M. (1998). Maps of dust infrared emission for use in estimation of reddening and cosmic microwave background radiation foregrounds. The Astrophysical Journal, 500(2), 525.
    2. Riess, A. G., Strolger, L. G., Casertano, S., Ferguson, H. C., Mobasher, B., Gold, B., … &Tonry, J. (2007). New Hubble space telescope discoveries of type Ia supernovae at z≥ 1: narrowing constraints on the early behavior of dark energy. The Astrophysical Journal, 659(1), 98.
    3. Guth, A. H. (1981). Inflationary universe: A possible solution to the horizon and flatness problems. Physical Review D, 23(2), 347.
    4. Lehners, J. L. (2008). Ekpyrotic and cyclic cosmology. Physics Reports, 465(6), 223-263.
    5. Tryon, E. P. (1973). Is the universe a vacuum fluctuation?. Nature, 246(5433), 396.
    6. Vilenkin, A. (1984). Quantum creation of universes. Physical Review D, 30(2), 509.
    7. Caldeira, A. O., & Leggett, A. J. (1981). Influence of dissipation on quantum tunneling in macroscopic systems. Physical Review Letters, 46(4), 211.
    8. Vilenkin, A. (1982). Creation of universes from nothing. Physics Letters B, 117(1-2), 25-28.
    9. திருமூலர், திருமந்திரம் ,387,385
    10. மாணிக்க வாசகர். திருவாசகம், சிவபுராணம், திருவண்டப்பகுதி
    11. அருணகிரிநாதர், கந்தரலங்காரம்.
    12. பாரதியார், பரசிவ வெள்ளம்
    13. வேதாத்திரி மகரிஷி, ஞானக்களஞ்சியம் -2, வேதாத்திரிபதிப்பகம்
    14. வள்ளலார், திருவருட்பா
    15. ஜகந்நாதன். கி.வா. அப்பர் தேவார அமுது, பூரவிபதிப்பகம்
    16. மெய்கண்டதேவர் ,சிவஞானபோதம்
    17. நடராஜன்.ஸ்ரீ, சந்திரமோகன். இர.(2017) தீதும்நன்றும்பிறர்தரவாரா – இயற்பியலாளரின் பார்வையில். மின்தமிழ்மேடை (11). 180-186. தமிழ் மரபு அறக்கட்டளை

    கலைச்சொற்கள் மேற்கோள் நூல்

    ஜெ. கோட்டாளம், அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவற்கான ஒரு கையேடு. https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5SzVpQ24tY0NGVXc

    இக்கட்டுரையில் கீழ்க்காணும் கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    துணுக்கம் – Quantum

    துணுக்க உட்குடைதல் – quantum tunneling

    =================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உருவானதா என்ற வினாத் தலைப்பில் இரட்டை ஆய்வாளர்கள், நடராஜன் ஶ்ரீதர் & சந்திரமோகன் இரத்தினம் ஆகியோர், இதுவரை பிரபஞ்சத் தோற்றம் எப்படி உருவானது என்று  விஞ்ஞானிகள் சிலர் யூகித்த ஒரு கோட்பாட்டை உதாரணங்களுடன் விளக்குகின்றனர். இக்கோட்பாடு, இதுவரை [2018]  பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டவையுள் ஒன்றே. வல்லமை வலையிதழில் வெளியிடத் தகுதியுள்ள ஆய்வுக் கட்டுரை. தமது கோட்பாட்டுக்குச் சில தமிழ் இலக்கிய நூல்களையும் சான்றாகக் காட்டியுள்ளனர். அவற்றின் வரிகளையும் ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கலாம்.  இதனுடன் தொடர்புடைய இந்தக் கட்டுரையை ஆய்வாளர்கள் கவனித்திருக்கலாம்: http://www.vallamai.com/?p=83914 

    =================================================================

    Share